Tuesday 15 March 2016

LET IT ALL BE MUSIC

    நண்பர் மது எஸ் (கஸ்தூரி alias அர்ஜுன் .. எத்தனை பேர்?) சில காரணங்களால் தான் இசை கேட்பதை தற்போது நிறுத்திவிட்டதாக எழுதியிருந்ததை வாசித்து, திடுக்கிட்டு, இசையை மட்டும் விட்டுவிடவேண்டாம் என்று நான் ஒரு கோரிக்கை வைக்க, நண்பரோ சில மாதங்கள் கழித்து மற்றொரு பதிவில் தான் நேசித்த ஆங்கிலப் பாடல் ஒன்றை மொழிபெயர்த்து, விவரித்து  தான் மீண்டும் இசையின் பால் திரும்பியதன் காரணமாக என் பெயரைக் குறிப்பிட, விளைவு  நீங்கள் காணும்  இந்தப் பதிவு.  இதை எழுதத் தூண்டிய ஒரு பொறி நண்பர் மது. அவருக்கு  எனது நன்றி.


                         LET IT ALL BE MUSIC



      நீண்ட காலமாக ஒலி  பற்றி ஒரு கருத்து தத்துவ உலகில் விவாதிக்கப்பட்டுக்கொண்டு வருகிறது. கொஞ்சம் உங்கள் காதுகளை தீட்டிக்கொள்ளுங்கள். அது என்னவென்று சொல்கிறேன்.  உங்கள் கற்பனைக் கண்கள் வழியே நான் சொல்வதை காணுங்கள். மனித நடமாட்டமே இல்லாத ஒரு மிகப் பெரிய காடு. காடு என்றதுமே அங்கே  இருக்கும் பலவிதமான மரங்கள்  நான் சொல்லாமலே உங்கள் கற்பனைக்குள் வந்திருக்கும். நல்லது. அதுதான் வேண்டும்.

  இப்போது ஒரு திடீர் சம்பவம் நடைபெறுகிறது. அத்தகைய பலவிதமான மரங்களில் ஒன்று  ஒரு எதிர்பாரா கணத்தில்  திடீரென்று சரிந்து விழுகிறது. அருகிலோ மனித நடமாட்டம் அல்லது மனித வாசனையே கொஞ்சமும் கிடையாது என்பதை ஏற்கனவே பார்த்துவிட்டோம்.  மரம் விழுகிறது.  சரி. அப்போது அங்கே அந்த  மரம் சரிந்து விழுந்த ஒலி அல்லது ஓசை உண்டாகுமா? இதுதான் கேள்வி.  யாருமே இல்லாத ஒரு வனாந்திரத்தில் ஒரு மரம் விழும்பொழுது அது ஒரு ஓசையை ஏற்படுத்துமா? உடனே பதில் சொல்லவேண்டாம்.  கொஞ்சம் யோசித்துவிட்டு பிறகு தீர்மானியுங்கள்.

   யோசித்தால், இல்லை என்றுதான் தோன்றுகிறது. ஏனென்றால் ஆம் என்றால் கேட்கக்கூடிய  யாருமே இல்லாதபோது ஒரு ஓசை  எப்படி சாத்தியமாகும்? ஓசையோ ஒலியோ  ஒருவரின் செவிகளை அடையும்போதுதான் ஒரு புலனாகிறது. யாருடைய செவியையும் அடையாத ஒன்று  எப்படி ஒரு ஒலியாக   இருக்கமுடியும்?

   இது மாறாநிலைவாதம் (metaphysics) கேட்கும் கேள்வி. மனதின் ஆழத்தை நோக்கிச்  செல்லும் பார்வை. குழப்பத்தையும் கூடவே கூட்டிக்கொண்டு வரும் கேள்வி. ஆனால் இதற்கான பதிலை விஞ்ஞானம் சொல்லிவிட்டது. அதை இறுதியில் பார்க்கலாம்.

  வலைப்பூவில் எழுதத் துவங்கிய போது எழுதுகிறேன். அதனால் நான் இருக்கிறேன்  என்பதை  என் ப்ரோஃபைல் செய்தியாக வைத்திருந்தேன். காரணம்  "I think, therefore I am" என்று சொன்ன  René Descartes  என்ற பிரெஞ்ச் தத்துவ அறிஞரின் விலைமதிப்பற்ற கருத்து என்னை ஆட்கொண்டிருந்தது. ஆனால் ரஷ்யப் புதினங்கள் குறித்து சிறிய அளவில் மூன்றோ நான்கோ பதிவுகள் எழுதிய பின்  என் மனதில் ஆழ்ந்திருந்த இசை பற்றிய சிந்தனைகளுக்கு எழுத்து வடிவம் கொடுக்க முனைந்தபொழுது நான் இருக்கிறேன் என்ற இந்தக் கருத்து என் மீது அடிக்கடி போர் தொடுக்க ஆரம்பித்தது. நான் இருப்பது இருக்கட்டும். நான் இந்த பூமியின் எண்ணிலடங்கா உயிரலைகளில்  ஒரு சிறிய துளி மட்டுமே. நாளை நான் இங்கே இருக்கப் போவதில்லை. ஆனால் நான் காதலிக்கும்  இசை என்றுமே இங்கே வாழ்ந்துகொண்டிருக்கும் என்ற உண்மை ஒரு தீயின் துணுக்கு போல என்னைத் தீண்டிக்கொண்டே இருந்தது. மேலும் நம் வாழ்வின் ஏறக்குறைய அனைத்து கணங்களிலும் இயக்கங்களிலும் ஒரு இசை அல்லது இசையின் நிழல்  நம்மைச் செலுத்தியபடி, வழி நடத்தியபடி, அரவணைத்தபடி இருப்பதை யாரால் மறுக்கமுடியும்?  எனவேதான் 


              எல்லாமே இசையாக இருக்கட்டும்.


    தென்றல்  தீட்டும் மென்மையான தாள ஓசைகளிலும், சுழன்றடிக்கும் சூறாவளிக் காற்றின் ஆவேசத்திலும், காற்றின் தாலாட்டில் நடனமாடும் மர இலைகளின் ரகசியங்களிலும், ஆர்ப்பரிக்கும் கடலலை ஓசைகளிலும், மண்ணில் விழுந்து தெறிக்கும் மழைத் துளிகளிலும், இயற்கையின் பல்வேறு பரிமாணங்களிலும், மனிதன் படைத்த எந்திரங்களின்  அசைவுகளிலும், அவனது  மொழிகளிலும், அவன் உருவாக்கிய அனைத்து   வாத்தியக் கருவிகளிலும் இறுதியாக  மனித வாழ்வின் புரிதலைத் தாண்டிய மர்மமான மவுனங்களிலும் இசை பதிந்திருக்கிறது கடவுளின் கைரேகை போன்று.

     ஆறு ஐவரி பொத்தான்கள் கொண்ட ஒரு பழங்காலத்து வானொலி  எங்கள் வீட்டின் இன்றியமையாத இசைத் தொழிற்சாலையாக இருந்தது.  அது எனது பொற்காலம். முதல் பொத்தானை அழுத்தினால் அதன் வலப்புற ஓரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஒளிரும் ஒரு பச்சை வெளிச்சம் முழுதும் உயிர் பெற்றதும் அந்த வானொலியிலிருந்து வழிந்த  இசையே எனது முதல் செவிச் சுவை. வானொலி இசை  வான் தந்த கொடை.  கண்கள் அறியாத  வானொலி அலைகளின்  மீது மிதக்கும் இசையை சில  விஞ்ஞான விதிகள் மூலம் கவர்ந்து  நமது வரவேற்பறையில் அந்த இசையை அறிமுகம் செய்யும்   அறிவியல் அதிசயம். வானொலி இசை செவிக்கான உணவு. இருந்தும் அதைக் கேட்கும் பொழுது  வித விதமான கற்பனைகளும்,  பார்த்தேயிராத வனாந்திரங்களும், பெயரில்லாத வண்ணங்களும், வினோத வடிவங்களும் இந்த இசைக்குள்ளிருந்து உயிர் பெற்று எழும்   மந்திரம் அதில் இருந்தது.  நமது கற்பனைக்கான சாவி அந்த இசையினுள்ளே பொதிந்திருந்தது. ஒரு சிறிய இசைத் துணுக்கு அந்த மாயச் சாவியை அடையாளம் காட்டிவிடும் சில நேரங்களில்.

  எண்பதுகளில் திருச்சி, மெட்ராஸ், கோயம்புத்தூர், சிலோன் போன்ற அலைவரிசைகளைத் தாண்டி என் விரல்கள் அந்த வானொலியின் குமிழியை வேறு பக்கம் திருப்பின. லண்டன், மாஸ்கோ, ஆஸ்லோ, நியூயார்க், இஸ்தான்புல், சிட்னி  என்று  பல மொழிக்  கலாச்சார ஓசைகள் எங்களின் அந்த சிறிய வானொலி அறையை நிரப்பத் துவங்கின. ஒவ்வொரு இசையும் வாழ்கையின் விதவிதமான பக்கங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டது. மேகங்கள் உருமாறுவதுபோல ஒரு நிதானமான நவீனம் தனது அனுபவத்தின் ஒரு முத்திரையை எனக்குள் பதித்தது.  வானொலியிலிருந்து    கசிந்த, வழிந்த இசை எனக்குக் கற்றுக் கொடுத்த பாடங்கள் என் நெஞ்சத்தில் ஆழமான இன்ப ஊசிகளை குத்திச் சென்றன.  பெயர் தெரியாத அரேபிய இசையும், மொழியறியாத பிரெஞ்ச் இசையும், நியூசிலாந்து நாட்டின் நாடோடி இசையும், சிம்ப்ளி ரெட், ஆஹா, வேம், ஸ்டார்ஷிப், ஆலன் பார்சன்ஸ் ப்ராஜெக்ட்  போன்ற மேற்கத்திய மெலடிகளும்  மின்சாரம் போல  எனக்குள் ஊடுருவியது அந்த வானொலி வழியாகத்தான்.

      கரகரப்பான, விட்டு விட்டுக்  கேட்கும், உள்ளே சென்று வெளியே வரும் அந்தத் தெளிவில்லாத இசை கூட  எனது கற்பனைகளுக்கு  சிறகுகள் கொடுக்கத் தவறவில்லை.  பிசிறடிக்கும் அலைவரிசையிலும் மிதந்து வந்த மேற்கத்திய இசை ஒரு கருமேகம் போல என் மனதில்   மகத்தான மகரந்த மழை பொழிந்தது. அந்த வானொலியில் இருந்தது ஒரே ஒரு மோனோ ஸ்பீக்கர். மிகுந்த சிரத்தையுடன் கவனித்துக் கேட்டால் மட்டுமே சில சமயங்களில் பாடல் செவிக்குள் இறங்கும். ஆனால் உள்ள செல்லும் இசை உண்டாக்கும் கற்பனை அலைகள் மனதை அதிரச் செய்யும்.  இனம் தெரியா கற்பனைகள் உயர எழும்பி காட்சிகள் தோன்றச் செய்யும்.

  அதே பாடல்களை பின்னர் ஆடியோ கசெட் வழியாகக் கேட்டபொழுது ஏற்பட்ட மொழிகள் மீறிய அந்த உணர்ச்சி ஒரு பரலோகத்துப் பரவசம். உதாரணமாக தெளிவில்லாமல் வானொலியில் கேட்ட ஆஹாவின் The blood that moves the body பாடலை முதன் முதலாக மேக்னா சவுண்ட் ஆடியோ கசெட்டில் கேட்டபோது என் உடலுக்குள் இடம் வலம், மேல் கீழ் என பல மின்னல்கள் தாவிச் சென்றன. என் ரத்தத்துக்குள் துடிக்கும் மின்சாரம் பாய்ந்தது.

   வானொலியில் கேட்ட ஐ இன் த ஸ்கை, டூ இட் எகைன், ஜஸ்ட் வாட் ஐ நீடட், கேர்லஸ் விஸ்பர், நத்திங் கோன்னா ஸ்டாப் அஸ் நவ் போன்ற இசைப் படிவங்கள் புதிய கதவுகளை எனக்கென திறந்தன. இசையின் வாசல்கள் மிக விசாலமானவை என்ற உண்மையை எனக்குத் தெரிவித்தவை இந்த வானொலி அலைவரிசைகளே.   வானொலி ஒரு வரம். இசையின் ஒரே தூதுவன்.

     இசைக்கான வலையை விரித்துக்கொண்டே போனால் அதில் பலவிதமான பிரமிப்பு கலந்த பிம்பங்கள் விழுவதை நீங்கள் காணலாம். ஒரு நல்ல இசை மனதின் பிழைகளையும், பதற்றங்களையும் நீக்குகிறது என்பதை  அறிவியல் உறுதி செய்யும்போது  அந்த நல்ல இசைக்கான தேடல் விரிவடைவதில் வியப்பு இல்லை.

      நான் எட்டாவது படித்துக்கொண்டிருந்த போது பள்ளியில் புதிய கட்டிடம் கட்டத் துவங்கியதால் ஷிப்ட் முறையில் ஒரு மாதம் காலை மறுமாதம் மதியம் என்று பள்ளி செல்வது வழக்கம். அப்படியான காலை நேர ஓய்வில் நான் பலசமயங்களில் உணர்ந்த ஒரு அனுபவம் ஒருவேளை உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம்.

         காலை நேரத்திற்க்கேயான சம்பிரதாயங்கள் முடிந்து, பள்ளி, அலுவலகம் செல்லவேண்டியவர்கள் சென்றபின்பு, வானொலியில் பத்து மணியுடன் அனைத்து நிகழ்சிகளும் முடிவவடைந்த பிறகு, ஒரு நீண்ட மௌனம் வீடுகளின் தாழ்வாரங்களில் தலைதூக்கும். அம்மாதிரியான நேரங்களில்  தனியே படுத்திருக்கும்போது, ஒலிக்கும் வாழ்வின் இயல்பான ஓசைகள் நம்மை மெய்மறக்கச் செய்யும்.

    வீதியின் ஏதோ ஒரு வீட்டிலிருந்து கேட்கும் மதிய உணவுக்கான தயாரிப்பு சப்தங்கள், மிக்சி, கிரைண்டர் போன்ற எந்திர படையெடுப்புக்கு முன் நமது பாரம்பரிய அம்மிக்கல்லில் உணவின் உபதேவைகள் அரைபடும் மண் சார்ந்த ஒலிகள், சாலையில் பாத்திரங்கள் விற்றுக்கொண்டு செல்லும் நடை வியாபாரியின் ஏற்றம் இறக்கும் கொண்ட அழைப்பு, மணி அடித்து ஐஸ் விற்கும் சைக்கிள் ஓசை, தூளியில் உறங்கும் குழந்தை திடீரெனெ வீறிட்டு அலறும் வாழ்க்கை யதார்த்தம், குழாயடியில் தண்ணீர் குடத்துக்குள் இறங்கும் அத்தியாவசிய ஓசை, கடந்து செல்லும் பெட்ரோல் கக்கும் வாகனங்களின் இரைச்சல், சத்தமாகப் பேசிக்கொள்ளும் பெண்களின் அரட்டை அல்லது ரகசியம், முழுவதும் சினிமா போஸ்டர்கள் போர்த்திக்கொண்டு அலையும் வண்டிகளின் திரையரங்கு திரைப்பட அறிவிப்பு, எங்கோ தாவிக் குதித்து ஓடும் பூனையின் சன்னமான மியாவ், திடீரெனெ காற்றில் மிதந்து வரும் ஏதோ ஒரு பாடலோசை,....

   நான் பலமுறை இந்த எளிமையான, ஆர்ப்பாட்டமில்லாத, அலங்காரங்களற்ற, ரம்மியமான ஒலிகளைக் கேட்டு என்னையே மறந்திருக்கிறேன்.  விலைமதிப்பற்ற இந்த இலவச இன்பங்கள் ஒருவகையில் தன்னையே தாலாட்டிக்கொள்ளும் அற்புதம். அம்மாதிரியான மௌனமான  கணங்கள் இன்று ஏறக்குறைய உயிருடனில்லை. எப்போதும் எதோ ஒரு டிவி சப்தம் இத்தனை அழகான ஓசைகளை விழுங்கிவிட்டு, நமக்குத் தேவையான இந்த மோக மௌனத்தின் மீது கலாச்சாரப் போர் செய்கிறது.  இரைச்சல் யுத்தம் நடத்துகிறது.

    சில வகை ஓசைகள் நம்மை காலயந்திரத்தில் உட்காரவைத்து பனிபடர்ந்த நினைவடுக்குகள் உள்ளே ஒரே கணத்தில் பின்னே இழுத்துச் சென்று விடும். அவை பாடல்களாக இருக்கவேண்டிய தேவையில்லை. உதாரணமாக  கீழ் கண்ட ஓசைகள் உங்களை என்ன செய்கிறது என்று நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

    புல்லட் வாகனத்தின் தடதடக்கும் மகா சத்தம், ஆகாஷ் வாணி என்று ஆரம்பிக்கும் சரோஜ் நாராயணஸ்வாமியின் iconic குரல், தூர்தர்ஷனின் துவக்ககால துயர இசை, காலை ஒன்பது மணிக்கு நிறைவு பெறும் மெட்ராஸ் வானொலியின் நேயர் விருப்பம் நிகழ்ச்சியின் nostalgic signature tune, ஏறக்குறைய எங்குமே தற்போது கேட்கமுடியாத  ஒரு தபால்காரரின் "ஸார், போஸ்ட்" . 

   இந்த உலகம் சப்தங்களால் சூழப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஒலியும் நமது நினைவுகளின் கோடுகளை நிரப்புகிறது.
 
   Now let's go back to that  proverbial falling tree in the forest.  மனித சுவாசமே இல்லாத அந்த கானகத்தில் விழுந்த அந்த மரம் உண்மையிலேயே ஒரு சப்தம் எழுப்பியிருக்குமா என்றால் ஆம் என்பதே உண்மை. ஒலி என்பது தன்னை நிரூபிக்க ஒருவரின் செவியை அடையவேண்டியதில்லை. எவருடையை சான்றிதழும் தேவையில்லாத புலன்களில் ஒலியும் ஒன்று.  நீங்கள் கேட்கவில்லை என்பதால் ஒலியே கிடையாது என்பதெல்லாம் மாறாநிலைவாதம் குறிப்பிடும் மூளையை உடைக்கும் வெற்றுக் கருத்து. பார்ப்பதினால்தான் ஒரு காட்சியும், கேட்பதினால்தான் ஒரு ஒலியும் உண்மையாக இருக்கிறது என்ற கருத்தாக்கம் மிக மிகப் பிழையானது.

   பார்வையற்ற ஒருவருக்கு ஒரு காட்சி தோன்றாது என்பது அந்தக் காட்சியின் உண்மைத்தன்மையை எந்தவிதத்திலும் பொய்யாக்கப்போவதில்லை. அதேபோல்தான் ஒலியும். யாருமே கேட்காவிட்டாலும் அந்த மரம் விழுந்த போது அதன் விளைவாக உண்டான  அதிர்வினால்  காற்றில் ஏற்படும் ஒரு அலை மாற்றம் ஒரு விஞ்ஞான உண்மை. இந்த அதிர்வு ஒரு ஓசை. அது காற்றில் எல்லா திசைகளிலும் ஒரு அலை போல பரவிச் செல்கிறது. கேட்கக்கூடிய செவிகளை அடைந்தால் ஒரு சப்தமாக மாறுகிறது இல்லாவிட்டால் அதிர்வாக நீடிக்கிறது.

    விஞ்ஞானம் இதை இன்றைக்கு உறுதி செய்திருக்கிறது. பிரபஞ்சம் உருவான காலத்தில் பூமி என்றொரு இந்த நமது பிரபஞ்ச வீடு உருவாகும் வெகு காலம் முன்பு  இந்த முடிவில்லா அண்டவெளியின்  எங்கே ஓரிடத்தில் இரண்டு கருந்துளைகள் கொஞ்சம் கொஞ்சமாக தவிர்க்க முடியாத ஈர்ப்பினால் அருகே நெருங்கி, நெருங்கி  பின் ஒன்றாக மோதிக் கலந்தபோது அங்கே ஒரு மாபெரும் ஓசை உண்டானது. அந்த ஒலி  நம்மால் கற்பனையே செய்யமுடியாத அளவுக்கு மிக மிக மிக ராட்சத ஓசை கொண்டது. ஆனால் அதைக் கேட்கவேண்டிய செவிகள் அப்போது கடவுளின் கற்பனையில் மட்டுமே சாத்தியப்பட்டிருந்தன.  பல கோடி ஒளியாண்டுகள் கழிந்து அந்த மாபெரும் ஓசை வலுவிழந்து பிரபஞ்சத்தின் வளைவுகள் வழியே அலையலையாக பயணித்து 13 பில்லியன் வருடங்கள் கழித்து ஒரு மிகச் சாதாரண தினத்தில் (செப்டெம்பர் 14, 2015 ஆம் ஆண்டு) நம் பூமியை ஒரு அதிர்வலையாக கடந்து சென்றது. மனித நாகரீகம் இந்த பிரபஞ்ச ஓசையை கிரகிக்க வேண்டிய அறிவியல் அறிவை பெறத் தேவையான ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்த பிறகு உருவாக்கப்பட்ட LIGO என்ற மனித உழைப்பின் படைப்பான ஒரு அறிவியல் சாதனம் இந்த அதிர்வை துல்லியமாகப் பிடித்து பதிமூன்று பில்லியன் வருடங்கள் முன் நிகழ்ந்த ஒரு பிரமாண்டமான பிரபஞ்ச பூகம்பத்தை மிகச் சரியாக பதிவு செய்துவிட்டது. இதை விஞ்ஞானிகள் இன்றைய தினத்தின் மிகப் பெரிய கண்டுபிடிப்பாக கொண்டாடுகிறார்கள்.  பிரபஞ்சத்தின் ஒரு மகாப் புதிருக்கான விடை கிடைத்துவிட்டதென்று அவர்கள் குதூகலிக்கும் களிப்பிற்குள்ளே இருப்பது ஒரு மில்லியன் வருட மகிழ்ச்சி.

   அப்படி என்ன சாதித்தது இந்த LIGO? வேறொன்றுமில்லை. இந்த எல்லையில்லா அண்டவெளியின் பிறப்பையும் அது வளர்ந்து வந்த நொடிகளையும் இனி நாம் முன்பை விட துல்லியமாக அறிந்துகொள்ளக்கூடிய அறிவியல் ஆனந்தம் இது. மேலும் பிரபஞ்சத்தை இனி கண்டு கொண்டு அறிந்து கொள்ளவேண்டிய அவசியமில்லாமல், அதைக் கேட்டு உணர்ந்துகொள்ளும் மற்றொரு புதிய பரிமாணம் இப்போது நம் வசப்பட்டிருக்கிறது.  ஏனென்றால்  நமது பிரபஞ்சம் ஒலிகளால் நிரம்பியுள்ளது. பிரபஞ்சத்தின் ஒலியை கேட்பதின் மூலம் நம்மால் பல ஆச்சர்யமூட்டும் அறிவியல் உண்மைகளை அடைய முடியும் என்கிறார்கள் அண்டவெளி ஆராய்ச்சியாளர்கள்.

   நவீன விஞ்ஞானம் பிக் பேங் எனப்படும் மாபெரும் வெடிப்பினால் இந்த பிரபஞ்சம் உண்டானது என்று தெரிவிக்கிறது. இது ஒரு தியரி என்றாலுமே இன்றைய கணத்தில் இந்த பிக் பேங் தியரியை சமன் செய்யும் மற்றொரு விஞ்ஞான விளக்கம் இதுவரை தோன்றவில்லை. அதன் படி ஒரு பெரு வெடிப்பின் மூலம் நமது பிரபஞ்சம் உண்டானது என்பதே தற்போதைய அறிவியல் தற்காப்பு.

     இந்த மகா மகா பெரிய பிரபஞ்சம் ஒரு பெரு வெடிப்பின் எச்சம் என்ற விஞ்ஞான விளக்கத்தை பரவலாக பலர் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். அந்த பிரமாண்ட வெடிப்பில் உண்டான ஒளியே நாம் தற்போது காணும் அனைத்து அண்டவெளி  ஆச்சர்யங்கள். அந்த ஆச்சர்யங்களில் ஒன்று  ஒரு மின்னும் நட்சத்திரமாகவோ, ஒரு சுழலும் கிரகமாகவோ, அல்லது ஒரு பிரபஞ்ச தூசியகவோ இருக்கலாம்.

     விஞ்ஞானம் இங்கே நின்றுவிடுகிறது. அல்லது இங்கிருந்து ஆரம்பிக்கிறது. இப்போது ஒரு கேள்வி எழுகிறது. இத்தனை பிரமாண்டமான அண்டவெளியை தோற்றுவித்த அந்த மகத்துவமான ஒளி எங்கிருந்து உண்டானது?

   கிறிஸ்துவர்களின் வேதநூலான விவிலியத்தில் கடவுள் பேசியதாக குறிப்பிடப்பட்டிருக்கும் பல வார்த்தைகளில் ஒன்று மிகவும் புகழ் பெற்றது. அது கடவுள் பேசிய முதல் வார்த்தை.  அது "ஒளி உண்டாகக்கடவது". (Let there be light.) கடவுளின் வார்த்தை ஒளியை தோற்றுவித்தது.  வார்த்தை என்பது ஒலி. எனவே என் பார்வையின் படி

      ஒலி ஒளியை உண்டாக்கியது.

    ஒரு ஓசை. ஒரு சப்தம். ஒரு வார்த்தை. அவ்வளவே. நாம் காணும் எல்லாமே ஒரு ஒலியின் காட்சிகளே. கடவுளுக்கு இந்த பிரபஞ்சத்தை தோற்றுவிக்க வேறு எதுவும் தேவை இருக்கவில்லை.....

       .........ஒரு ஒலியைத் தவிர. 

   
      கடவுள் பேசியதாக சொல்லப்படும் வார்த்தைகள் மனித மொழிகளாக இருக்கமுடியாது என்பது மட்டும் திண்ணம். அந்த படைப்பின் சப்தம் அல்லது ஓசை கண்டிப்பாக ஏதோ சில மர்ம விதிகளைச் சார்ந்து, இரைச்சலற்ற, மிகத் தெளிவான, அமைதியான, ரம்மியமான சப்தங்களாக இருக்கலாம். I would rather call it a music than a sound. ஒரு அழகான ஓசை என்னைப் பொறுத்தவரை இசையே. எனவேதான் இசையின்றி அமையாது உலகு என்று சொல்லத் தோன்றுகிறது.

   இந்தப் பிரபஞ்சம் நம்மால் கேட்கக்கூடிய மேலும் கேட்கமுடியாத ஒலிகளால் நிரம்பியது என்று  அறிவியல் இன்று தீர்மானித்துள்ளது.  SETI என்று அழைக்கப்படும் வேற்றுலகவாசிகளின் இருப்பை உறுதி செய்யத் தேவையான ஒலிவடிவ சமிஞ்கைகளை  வானொலி தொலைநோக்கிகள் வழியே தடவிப் பார்க்கும் அண்டவெளி அறிவியல் ஆராய்ச்சிக்கான மிகப் பெரிய வானொலி தொலைநோக்கி Puerto Rico விலுள்ள Arecibo observatory யில் நிறுவப்பட்டுள்ளது. ஆனால் நாம் மிகப் பெரிய ரேடியோ டெலஸ்கோப் நமது வீட்டு மாடிகளில் நிறுவியோ, தோட்டங்களில் அமைத்தோ இந்த அண்டவெளியின் ஒலியை கேட்கவேண்டும் என்பதில்லை. நமது வீட்டின் வானொலி அறையிலிருந்தே நம்மால் அண்டவெளியின் ஓசையை துல்லியமாகக் கேட்கமுடியும்.

      நமக்குத் தேவைப்படும் வானொலி அலைவரிசையை வானொலி குமிழ் கொண்டு திருகிப் பிடிக்கும் வெகு எளிமையான செயலில் பல சமயங்களில் நாம் ஒரு உஷ்.. என்ற காற்று பொங்கும் ஓசையை கேட்கிறோம். பொதுவாக இரண்டு வானொலி அலைவரிசைகளுக்கு இடையே நாம் கேட்கும் இந்த ஓசை எங்கிருந்து வருகிறது என்று நினைக்கிறீர்கள்? அதுதான் நமது அண்டவெளியின் ஓசை. சிறுவயதில் பலமுறை நான் இந்த உஷ் என்ற இசைக்காகவே வானொலியை நாடியிருக்கிறேன். ஒரு இசையைவிட இந்த குழுக் முழுக் ஓசையே என்னை அதிகம் ஈர்த்தது. அதில் ஒரு மெஸ்மரிசம் இருக்கிறது. ரேடியோவை மணிக்கணக்காக வேறு வேலைகளின்றி இப்படித் திருக்கிக்கொண்டே இருந்தால் நாம் கூட SETI ஆராய்சியாளர்கள் போல ஒரு திடீர் உற்சாகத்தில் ஒருநாள் துள்ளிக் குதிக்கலாம்.

   இசை என்பது மனித சிந்தனையில் மட்டுமே உழலும் ஒரு கற்பனையல்ல.  சிறைப்பட்டுப் போய், வெளிப்பட தவமிருந்து சிலரது கையசைவுகளினால் விடுதலை பெறும் தனிமனித சொத்தும் கிடையாது. எனக்கு மட்டுமே தோன்றியது என்று மார்தட்டிக்கொள்ளும் திமிரான கர்வமும் அல்ல.

   இங்கே இசை என்பது நீங்கள் இன்று காலை கேட்ட பெண்களை வக்கிரமாகக்  கிண்டல் செய்யும் மற்றொரு இளையராஜா பாணியின் நீட்சியாக வந்த ஹேரிஸ் ஜெயராஜ், அனிரூத், இமான், சந்தோஷ் நாராயணன்  வகையறாக்களின் கேவலமான இன்றைய தமிழ்  இசை வசையோ, உடல் இச்சையை தீர்த்துக்கொள்ளும் பிட்புல், ரிஹானா, பியான்சே போன்ற மேற்கத்திய கறுப்பின ஹிப்பாப் ஆபாசமோ, வெறும் வன்முறையை பாடலாக பாடும் மெடாலிக்கா, கிரீன் டே, பனீற்றா போன்ற வெள்ளைத் தோல் இசைஞர்களின் கடல் கடந்த கலாச்சாரக் கலவரமோ, இசையை  ஒரு காசும் பெறாத இனக் கவர்ச்சிக்கான சுலப சங்கதியாக மாற்றிவரும் மேடோனா, ஜஸ்டின் பீபர், மைலி சைரஸ், ஜெனிபர் லோபஸ் போன்ற கருமாந்திரங்களின் அடையாளமோ, கிரேடில் ஆப் பில்த், மரிலின் மேன்சன் போன்று  பேய்களை வணங்கத் தூண்டும்  வக்கிரப்  புரட்சியோ கிடையாது. இசை என்ற பெயரில் இத்தனை அடாவடிகள் செய்யும் இந்தச்  சத்தங்கள் காலக் காற்றில் கரைந்துபோய் விடக்கூடிய ஆபாசத்  தூசிகள். பயங்கரத்தின் படிவங்கள்.

    இசை ஒரு ஆச்சர்யம். ஒரு ஆனந்தம். ஒரு குழந்தையின் சிரிப்பு. ஒரு ஞானியின் புன்னகை. ஒரு காதலின் தழுவல். முதல் முத்தத்தின் சிலிர்ப்பு. நமது உலகைத் தாண்டியும், நமது பால் வெளிகளைத் தாண்டியும், இந்த அண்ட சராசரங்கள் முழுவதும் வியாபித்திருக்கும் ஒரு மகாப் புதிர். இசை இரண்டே எழுத்துதான். ஆனால் என்னைப் பொறுத்தவரை இது ஒரு மிக மிகப் பெரிய வார்த்தை.

       இசை ஒரு மொழி.

       நமது மொழி.

       நமது  பிரபஞ்சத்தின் மொழி.