Monday 11 March 2013

                    தூரத்து இலக்கியங்கள் 
     
     காமிக்ஸ் கதைகளோடு நெருக்கமாக இருந்த என் பள்ளி  நாட்களில் எங்கள் வீட்டில் என் சகோதரிகள் இடை விடாது எனக்கு புரியாத பெயர்களை குறித்து விவாதித்துக்கொண்டிருப்பார்கள். "பசாரவ் கடைசியில் செத்து விடுவானா?, டிராவ்கின் யாரை கல்யாணம் செய்து கொள்வான்?"போன்ற விவாதங்களில் நான் ஆரம்பத்தில் அவ்வளவாக அக்கறை காட்டாவிட்டாலும், போகப்போக இவர்கள் யார் என்று கேள்வி முளைத்தது. பிறகே தெரிந்தது அவர்கள் ரஷ்ய புதினங்களை பற்றித்தான் இவ்வாறு அதீத ஆனந்தத்துடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது. ஜானி  நீரோ, ரிப் கெர்பி, லாரன்ஸ் டேவிட், இரும்புக்கை மாயாவி, காரிகன், என்று காமிக்ஸ் குளத்தில் கும்மாளம் அடித்துக்கொண்டிருத எனக்கு ருஷ்ய கதைகள்  என் தலையை தாண்டிய ஒரு சங்கதியாகவே இருந்தது.

     ஆர்வமிகுதியால் கதையை கேட்டால் "நீயே படித்துக்கொள் அப்போதுதான் புரியும்"என்று பதில் கிடைக்கும். எனவே ஒரு நாள் அந்த புத்தகத்தை எடுத்தேன்.தலைப்பு "தந்தையும் தனையர்களும்".(இவான் துர்கனேவ் எழுதியது என்று ஞாபகம்) நாலு பக்கம் படித்திருப்பேன். அவ்வளவே. அப்போது நான் படித்த தமிழ் கதைகளின் பாணிக்கும் இந்த ருஷ்ய கதையின் தமிழ் நடைக்கும்  மிகப்பெரிய இடைவெளியை கண்டேன்.  புத்தகத்தின் எடையையும் பருமனையும் கண்டு மிரண்டு போய் ஒரே தாவலில் கடைசி பக்கம்வந்து பசாரவ் என்ன ஆனான் என்பது தெரியாமலேயே என் முதல் ருஷ்ய நாவல் வாசிப்பு இனிதே முடிவு பெற்றது. அந்த வர்ணனைகளும் தமிழ் சொற்களும் என்னை தெறித்து ஓடச் செய்தன. பின் வழக்கம் போலவே ஜானி ஸ்டெல்லாவுடன் போடும் விவாதங்களுக்குள்ளும் லாரன்ஸ் டேவிட்டின் அநாசய சாகசங்களிலும் காரிகனின் மிரட்டல் அதிரடிகளிலும் என் கவனம் சென்றது. இருந்தும் என்னால் ஏன் ஒரு ருஷ்ய புதினத்தை படிக்க முடியவில்லை என்ற எண்ணம் ஒரு live wire போல துடித்துக்கொண்டிருந்தது.

     "இப்படிப்பட்ட கதைகளை படிக்காமல் சுலபமான கதைகளிலிருந்து தொடங்கு "  என்ற அறிவுரைகேற்ப ஒரு  முதல் ருஷ்ய கதையை முழுதும் படித்தேன். காணாமல் போன தந்தி என்கிற கதை அது. போர்முனையில் பணி புரியும் ஒரு தந்தை தன்  குடும்பத்தை காண வரும் முன் சில அலுவலக காரணங்களினால் ஏற்கனவே முடிவு செய்த படி வர முடியாது என்று தன் மனைவிக்கு அனுப்பும் தந்தி  அவளின் இரண்டு குறும்புக்கார பையன்களால் பனியில் தூக்கி வீசப்படுகிறது ஒரு சிறுபிள்ளை சண்டையின் போது. தந்தி தொலைந்து போனது கண்டு அச்சம் கொள்ளும் இருவரும் அம்மாவிடமிருந்து இதை மறைக்க, அம்மாவோ இரண்டு மகன்களையும்  அழைத்துக்கொண்டு நீண்ட  தூர ரயிலில் தன்னுடைய கணவனை காண பிரயாணம் செய்கிறாள். அப்பா வராததைகண்டு சிறுவர்களுக்கோ குற்றம் கலந்த துக்கம். மனைவியோ உண்மை தெரியாமல் பலவித இன்னல்களை சிரமத்துடன் கடந்து கடைசியில் தன் கணவனை காண்கிறாள். தந்தியை தொலைத்த இரண்டு சிறுவர்களும் இறுதியில் தந்தையுடன் ஒன்று சேர்வதுடன் கதை முடிவு பெறும். கதையின் இடையில் இருக்கும் படங்கள் நம்மை அந்த ரஷ்ய கிராமத்துக்கே கை பிடித்து கொண்டுசென்று விடும். அந்த சிறுவர்களின் வேடிக்கை பேச்சும் இயல்பான சண்டைபோடும் குணமும் வெகு நேர்த்தியாக தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கும்.  சிறுவர்கள் கதை என்று படிப்பவர்களால் ஒருவித அலட்சிய சிரிப்புடன் ஒதுக்கித்தள்ள முடியாதபடிக்கு இறுதிவரை படிக்க வைக்கும் மந்திர வாசனை கொண்டது இந்த கதை. படித்து முடித்த பின்னும் நீங்கள் சற்றேனும் "நான் ஒரு சிறுவர்களின் கதையை  படித்து விட்டேனே?"என்று உணராத வகையில் எழுதப்பட்ட சிறப்பான கதை இது.

     ஒரு விஷயம்: இது போன்ற கதைகளை படிப்பது என்பது முதலில் அங்கே வரையப்பட்டிருக்கும் ஓவியங்களை நம் கண் வழியே இதயத்துக்குள் இழுத்துச்செல்வதுதான். கவலை வேண்டாம் அதை நீங்கள் செய்யத்  தேவையில்லை  .அந்த ஓவியங்களே அதை செய்துவிடும்.

     பள்ளிப்பருவத்தில் படித்த இந்த கதையை பின்னாளில் கல்லூரி நாட்களில் மீண்டும் படித்த போது அதே சுகம்,அதே களிப்பு என்னிடம் திரும்பி வந்தது. இதையே நான் விரும்பினேன் என்றும்  தோன்றுகிறது. நான் ரசித்து படித்த பல கதைகள் என் ஞாபக அடுக்குகளிலிருந்து காணாமல் போய்விட ருஷ்ய கதைகள் மட்டும் என்னுள்ளே உயிரோடு நெருப்பு கங்குகள் போல அணையாமல் இருப்பது ஒரு வியப்பான உண்மை. இது உங்களில் பலருக்கும் நேர்ந்திருக்கலாம். நாம் எதை விரும்புகிறோமோ அது நம்மிடமிருந்து  விலகிச் செல்லாது. இரும்பு பெட்டிக்குள் கீழே பத்திரமாக வைத்திருக்கும் ஒரு பழைய புகைப்படம் போல, இப்போது இல்லாத நண்பன் எழுதிய ஒரு கடிதம் நம்மிடம் இருப்பது போல, ஒரு இனிமையான மணம் போல, ஒரு ஆனந்த ஞாபகமாக அது நம்மை விட்டு அகலுவதில்லை  என்றைக்கும்.
   
     இங்கிருந்தே என் தூரத்து இலக்கிய தேடல் துவங்கியது. கதையை மட்டுமே என்னால் சொல்ல முடியும் அந்த கதை படிப்பவர்களிடம் கொடுக்கும் குழந்தைத்தனமான உவகையை என்னால் கண்டிப்பாக உங்களிடம் செலுத்த முடியாது. அதை நீங்கள்தான் அனுபவிக்க வேண்டும். அதுவே நீங்கள் இது போன்ற இலக்கியங்களுக்கு செய்யும்  முறையான மரியாதை.

 என்னுடைய அடுத்த பதிவு; யுவதிகள் என்னும் மகா ருஷ்ய புதினம். ஒரு அறிமுகம்.

   

4 comments:

  1. //நாம் எதை விரும்புகிறோமோ அது நம்மிடமிருந்து விலகிச் செல்லாது. இரும்பு பெட்டிக்குள் கீழே பத்திரமாக வைத்திருக்கும் ஒரு பழைய புகைப்படம் போல, இப்போது இல்லாத நண்பன் எழுதிய ஒரு கடிதம் நம்மிடம் இருப்பது போல, ஒரு இனிமையான மணம் போல, ஒரு ஆனந்த ஞாபகமாக அது நம்மை விட்டு அகலுவதில்லை என்றைக்கும்.// நிதர்சனமான உண்மை .

    ReplyDelete
  2. திரு ஜீவன் சுப்பு அவர்களுக்கு , யாரும் என் பக்கத்திற்கு வரமாட்டார்கள் என்று எண்ணி இருந்தேன். உங்கள் வருகைகைக்கு என் நன்றி.

    ReplyDelete
  3. தந்தையும் தனையர்களும் புத்தகம் கிடைக்குமா

    ReplyDelete
  4. 9488829595 என் தொலைபேசி எண் அண்ணா

    ReplyDelete