Monday 17 June 2013

இசை விரும்பிகள் VIII - மீண்ட இசை.


                 ஒரு நட்சத்திர உணவகத்தின் அனுபவத்தை சில சமயங்களில் சாலையோர கடைகளில் கிடைக்கப் பெறுவது உண்மையில் ஓர் ஆச்சர்யமான நிகழ்வுதான்.ஹிந்தி இசையின் நவீனத்தை கொண்டாடிக்கொண்டிருந்த கொண்டிருந்த தமிழர்கள் 70 களின் மத்தியில் திடீரென நமது மண் வாசனையை நுகரத் துவங்கியது ஒரு மிகப் பெரிய இசை மாற்றத்திற்கான முதல் சுவடு.இவ்வாறு நம் இசை நம்மிடமே திரும்பிவந்ததைப் பற்றி விரிவாக பார்க்கும் முன் நாம் அந்த மிகப் பெரிய மாற்றத்திற்கான காரணிகளை ஆராய்வது அவசியம் என்று தோன்றுகிறது.

           70 களில் எம் எஸ் வி ஏறக்குறைய ஒரு தனிக்காட்டு ராஜாவாகவே வலம் வந்தார். அவருக்கு ஈடாக தடயத்தில் ஓட  அவரின் சமகாலத்து இசைஞர்களால் அவ்வளவாக முடியவில்லை என்பதை நாம் அறிவோம்.இது ஒரு அபூர்வமான சாதனைதான். இருபது ஆண்டுகள் கழித்தும் எம் எஸ் வி யின் இசை வெள்ளம் தடைகளற்று ஓடிக்கொண்டிருந்தது. சங்கர் கணேஷ்,வி குமார்,ஜி கே வெங்கடேஷ்,வேதா,தட்சிணாமூர்த்தி,கோவர்த்தன், ஷியாம்,விஜய பாஸ்கர்  போன்ற இசைஞர்கள் ஆடுகளத்தில் இருந்தாலும் எம் எஸ் வி மட்டுமே துவம்சம் செய்துகொண்டிருந்தார்.அவரின் பாடல்கள் சற்று வீரியம் குறைந்து, இனிமை சற்றே மெலிந்து ஒலித்தாலும் தரத்தில் சுவை குன்றவில்லை.சொல்லப்போனால் எழுபதுகளின் முக்கால்வாசி பிரபலமான பாடல்கள் எம் எஸ் வி யாலே இயற்றப்பெற்றவை.ஆனால் இருபது வருடங்களாக ஆட்சி செய்து வந்த எம் எஸ் வியால் கூட ஹிந்தி இசை என்ற அந்நிய ஊடுருவலை தடுக்க முடியவில்லை.இதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்று உளவியல் ரீதியாக பார்த்தோமானால் எம் எஸ் வி "every hero becomes a bore in the end" என்கிற கூற்றின் அடிப்படையில் வந்துவிட்டதைக் காணலாம்.காலத்தைத் தாண்டி நிற்கும் பல பாடல்களை just like that கொடுத்த அவரால் 70களின் மத்தியில் மாறிப்போய்விட்ட இசை ரசனையின் துடிப்பை துல்லியமாக கணிக்க முடியவில்லை என்பது ஒரு முரண். ஆனால் இது நிகழக்கூடியதே.

           இவ்வாறு தடம் மாறிய நாடித்துடிப்பை அறியாத எம் எஸ் வி எந்த விதத்திலும் தன்னை மாற்றிக்கொள்ளாமல் தன் வழக்கமான பாதையிலேயே பயணம் செய்ய அவரின் தாளத்திற்கு தலையாட்டாத ஒரு தலைமுறை தோன்றி  அவரின் இசையினால் ஈர்க்கப்படாமல் சலிப்புற்றிருந்தது .70 களின்   எம் எஸ்வி யின் பாடல்களில் தென்படும் போக்கை ரசிகர்கள் நன்றாகவே   அடையாளம் கண்டு கொண்டிருந்தனர். பல்லவியில் வித்தியாசத்தை காட்டிய எம் எஸ் வி சரணத்தில் தனக்கு வசதிப்படும் தாளத்திலேயே பாடல்களை அமைக்க மூன்றுக்குப் பின் நான்கு  என்ற தீர்மானித்தல் தரும் அலுப்பு ரசிகர்களுக்கு வந்ததில் வியப்பில்லை.(நான் கூட அந்த சமயத்தில்  எம் எஸ் வி யை தவிர்த்ததின் காரணம் இந்த வழக்கமான இசை அமைப்புதான்).

                ஹிந்தி இசை தோய்ந்து போக, மெல்லிசையும் மெலிந்து போக தமிழ் ரசிகன் ஒரு இடைச்சாலையில் (crossroads)திசை தெரியாமல் நின்றுகொண்டிருந்த சமயத்தில் அன்னக்கிளி என்ற படம் வந்தது . 76 இல் வந்த இந்தப் படம் இப்போது  நினைவு கொள்ளப்படுவதின் ஒரே காரணம் அதன்  இயக்குனரோ நடிகர்களோ இன்ன  பிற உதவியாளர்களோ அல்ல. இந்தப்  படத்தின் இசை அமைப்பாளராலேயே  இந்தப் படம் இன்று வரை குறிப்பிட்டுச் சொல்லப்படுகிறது. Infact,  "Annakkili" is a metaphor for its music. இதன் இசை அமைப்பாளர்  ஒரு மிகப் புதியவர். இளையவர். ஞானதேசிகன் என்ற இயற்பெயர் கொண்டு , ராசையா   என்று அழைக்கப்பட்டு, ராஜாவாக மாற்றப்பட்டு திரையில் இளையராஜா என்று தோன்றியவர். எம் எஸ் வி,  கே.வி மகாதேவன், ஜி கே வெங்கடேஷ், தட்சிணாமூர்த்தி, சங்கர் கணேஷ் போன்ற இசை அமைப்பாளர்களிடம் பெற்ற இசைப் பயிற்சி  மற்றும் தன்னிடத்திலேயே  இருந்த இசைதாகம் இரண்டும் இவரை இசையின் புதிய பரிமாணங்களை நோக்கி நகர்த்தியது.

               அன்னக்கிளி ஒரு புதிய அத்தியாயத்தை தமிழ்த்திரையிசையில் ஆரம்பித்துவைத்தது என்பது மிகைப்படுத்தப்படாத உண்மை.படத்தின் பாடல்கள் அனைத்தும் அதுவரை கேட்டிராத வகையில், நேராக சென்று கொண்டிருக்கும் கார் ஒன்று சட்டென்று யு டர்ன் அடிக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தின. "அன்னக்கிளி உன்ன தேடுதே"என்கிற பாடலே முதலில் பதிவு செய்யப்பட்ட பாடல். இந்தப் பாடல் பதிவின் போது மின்சாரம் தடைபட்டுப் போக "நல்ல சகுனம்"என்று ஸ்டூடியோவிலேயே  இகழ்ச்சி செய்யப்பட்ட இளையராஜா அந்தப் படத்தில் அமைத்தது தமிழிசையின் போக்கையே மாற்றிய பாடல்கள். குறிப்பாக அன்னக்கிளியின் உயிர்நாடியான "மச்சானப் பாத்தீங்களா?"பாடல் தமிழகத்தில்  ஏற்படுத்திய அலை இன்றளவும் மறக்கமுடியாதது. அது ஒரு கொண்டாட்டமான பாடல். ஒரு சாதாரண ஹம்மிங் குடன் துவங்கி ஜானகியின் குரலோடு  பின்புலத்தில் ஒற்றை புல்லாங்குழல் ஒலிக்க,இரண்டு வினாடிகளுக்குப் பின் உயிர்ப்பாக உருமாறி, "மச்சான பாத்தீங்களா" என்று பாடல் ஆரம்பிக்கும்போது யாருமே எதிர்பார்க்காத ஒரு கணத்தில்  ஒரு தடாலடியான தாளத்தோடு கேட்பவரை அதிரச் செய்யும் ஒரு அனாசயமான பாடல். எதிர்பாராத  ஒரு சந்தர்ப்பத்தில் நம் தலை மீது திடீரென கொட்டும் ஜில்லென்ற தண்ணீரின் சிலிர்ப்பை இந்தப் பாடல் கொடுத்தது. தமிழகம் நிமிர்ந்து உட்கார்ந்தது."அட யாருடா இந்த ஆளு?"என்று எல்லோரையும் கேட்க வைத்தது இந்தப் பாடல். இந்தப் படத்தின் அனைத்து பாடல்களுமே தமிழகம் முழுவதும் எதிரொலித்தன. மச்சான பாத்தீங்களா,அன்னக்கிளி உன்ன தேடுதே, சொந்தம் இல்லை, முத்து முத்தா பச்சரிசி, அடி ராக்காயி என்று எல்லா பாடல்களும் கிராமத்து வாசனை வீசின. பொதுவாக கூறப்படுவது போல பட்டி தொட்டி எங்கும் அன்னக்கிளியின் பாடல்கள் படபடத்தன. படத்தின் வெற்றிக்கு இளையராஜாவின் இசையும்  ஒரு காரணம் என்று அப்போது சொல்லப்பட்டது.ஆனால் இன்றோ அந்த இசை மட்டுமே அந்தப் படத்தின் அடையாளமாக நிலைத்திருக்கிறது.

            அன்னக்கிளியின் வெற்றி நமக்கு ஒரு புதிய இசை ஆளுமையை அறிமுகம் செய்தது. அன்றைய  புதிய தலைமுறையின் இசை  அரங்கேற, இளையராஜா இளைஞர்களின் ஆதர்ச இசைஞரானார். அபூர்வமாக இது ஒரே படத்தில் நடந்தது. இது எப்படி நிகழ்ந்தது என்று ஆராய்ந்தோமானால் சில கூறுகளை நாம் புரிந்துகொள்ளமுடியும். 76 இல் வந்த மற்ற படங்களை விட அன்னக்கிளியின் இசை பெருமளவில் வேறுபட்டிருந்தது.(76 இல் வந்த மற்ற சில படங்கள்-சித்ரா பவுர்ணமி,மன்மதலீலை, தசாவதாரம்,குமார விஜயம்,மூன்று முடிச்சு, நீ ஒரு மகாராணி(இதில்தான் அவளொரு பச்சைக் குழந்தை என்றொரு அருமையான பாடல் உள்ளது), ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது,ரோஜாவின் ராஜா, உணர்சிகள்,உழைக்கும் கரங்கள்). இளையராஜாவின் தாளம், இசை கோர்ப்பு இரண்டுமே அதுவரை இல்லாத பாணியில் அமைக்கப்பட்டிருந்தது .நாட்டுப்புற தாளம், கிராமிய வாசம்,சற்றே தென்படும் மேற்கத்திய இசையின் சாயல் என்று இளையராஜாவின் இசையில்  எளிமையான அதே சமயம் மிக நவீனமான ஒரு புதிய வெளிச்சம் ஒளிர்ந்தது.இதுவே அவரை அப்போது வேறுபடுத்திக் காட்டியது. இந்தப் புதிய இசையின் வேகத்தில் எம் எஸ் வி தவிர மற்றவர்கள் தங்கள் அடையாளங்களை துறந்து இளையராஜாவை பின்பற்ற, இசையின் போக்கு மாறத் துவங்கியது.

             அதே ஆண்டில் வந்த இளையராஜாவின் மற்ற படங்கள் இவை; பாலூட்டி வளர்த்த கிளி ,  உறவாடும் நெஞ்சம், பத்ரகாளி. இதில்  பத்ரகாளி தவிர மற்ற இரண்டு படங்களும் தோல்விப்படங்கள். ஆனால் இன்றைக்கு அந்தப் படங்கள் அதன் இசையினால் மட்டுமே  அடையாளப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக நான் பேச வந்தேன் (பாலூட்டி வளர்த்த கிளி),ஒரு நாள் உன்னோடு ஒருநாள் (உறவாடும் நெஞ்சம்) என்ற பாடல்கள் இளையராஜாவின் மென்மையான சிறகைக் கொண்டு  உள்ளத்தை வருடிச் செல்லும் இசை அமைக்கும் திறமைக்கு சான்றாக இருக்கின்றன. இளையராஜாவின் துவக்ககாலப்  பாடல்களில் கொஞ்சம் ஜி கே வெங்கடேஷ், கொஞ்சம் வி குமார் போன்றவர்களின் சாயலை தீவிர இசை விரும்பிகள் அடையாளம் காண முடியும் முடியும். மிகை இல்லாமல் சொல்லவேண்டுமென்றால் இளையராஜா தன் ஆரம்பகால படங்களில்(முதல் ஆறு வருடங்கள்) மிகச் சிறப்பான இசையை அளித்துவிட்டார் என்பதே உண்மை. படங்களின் வெற்றி தோல்வி பற்றி வணிக ரீதியிலான சிந்தனை கொள்ளாமல் அப்போது தான் இசை அமைத்த  எல்லா படங்களிலும் இளையராஜா அருமையான பாடல்களையும், நவீன  இசை அனுபவத்தையும் வஞ்சகமில்லாமல்  கொடுத்திருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது.தன்னை நிரூபிக்க இளையராஜா இவ்விதமான நிர்ப்பந்தங்களுக்கு உடன்பட்டார் என்பதை விட அவரின் இசைதாகமே இதன் பின்புலத்தில் இருந்ததாக எண்ணுகிறேன்.

            பத்ரகாளி படத்தின்  வெற்றியே இவரின் இடத்தை  இங்கே  உறுதி செய்தது என்பதை  விவரம் தெரிந்தவர்கள் அறிவார்கள். தெருவெங்கும் "அட வாங்கோன்னா "பாடல் கும்மாளம் போட்டது.அதே படத்தில் வரும் மிக நளினமான "கண்ணன் ஒரு கைக்குழந்தை" ஒரு அழகான தாலாட்டு. இளையராஜாவின் இசைக்கு மயங்கும் ஒரு  ரசிகர்களின் எண்ணிக்கை திரளாக பெருக ஆரம்பித்தது.  சில இசை விமர்சகர்கள் வாங்கோன்னா பாடலை தீவிரமாக  எதிர்த்ததும் தடை செய்யவேண்டும் என்று கோரியதும் கூட இந்தப் பாடலுக்கு சாதகமாகவே அமைந்ததை இங்கே குறிப்பிடவேண்டும்.

         77 ஆம் ஆண்டு இளையராஜா மட்டுமல்லாது தமிழ் சினிமாவுக்கே ஒரு மாபெரும் மாற்றத்தைக் கொடுத்தது. அந்த ஆண்டில் வந்த படங்களில் ஒரே ஒரு படத்தைப் பற்றியே இப்போது பார்க்கப்போகிறோம்.  . பராசக்தி வந்து இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து வெளிவந்த இந்தப் படம் தமிழகத்தையே உலுக்கியது என்று சொல்வது மிகப்பொருத்தமான வாக்கியமாகத்தான் இருக்க முடியும்.. உண்மையான மண்ணின் மைந்தர்களையும் அவர்களின் தாகத்தையும் கோபத்தையும், ஒப்பனை இல்லாத  கிராமத்தையும் திரையில் பிரதி எடுத்து தமிழ்த்திரைக்கு  ஒரு புதிய சகாப்தத்தை  அறிமுகம் செய்த "பதினாறு வயதினிலே" 77 இல் வெளிவந்தது.  தமிழ் சினிமா பராசக்திக்குப் பிறகு  மற்றொரு முறை புரண்டு படுத்தது.

          16 வயதினிலே தமிழ்சினிமாவின் ஒரு மாபெரும் மைல்கல் என்பது ஜோடிக்கப்படாத நிதர்சனம். முதல் முறையாக தமிழ் ரசிகர்கள் ஒரு படத்தின்  கதாபாத்திரங்களின் பெயர்களை வைத்தே படத்தின் நடிகர்களை  அடையாளம் கண்டுகொண்ட புதுமையை இந்தப் படம் தொடங்கி  வைத்தது.மயிலு,சப்பாணி,பரட்டை,டாக்டர் என்று ரசிகர்கள் இதன் நடிகர்களை மிக நெருக்கமாக அழைத்தார்கள். Flashback யுக்தியை மிகச் சிறப்பாக கையாண்ட இரண்டாவது படம் இது.(மற்றொரு  படம் 1954 இல் வந்த அந்த நாள்). 16 வயதினிலே வின் வெற்றியை ஒரு முழுமையானது என்று தாராளமாகக் கூறலாம். ஏனென்றால் இந்தப் படம் அதற்காக உழைத்த எல்லாமனிதர்களையும்இனம்காட்டியது.இயக்குனர்,நடிகர்கள்,இசைஅமைப்பாளர்,வசனகர்த்தா,ஒளிப்பதிவாளர்,தயாரிப்பாளர் என்று  பொதுவாக மக்கள் அவ்வளவாக அங்கீகாரம் அளிக்க மறுக்கும் எல்லோருக்கும்  இந்தப் படம் மரியாதை செய்தது.

         தன் முதல் படத்திலேயே இளையராஜா கிராமத்து இசையின் நாயகனாகிவிட்டார் என்று பலர் சொல்வதுண்டு. உண்மை என்னவெனில்  16 வயதினிலே படமே இவரை நாட்டுப்புற இசையின் பிரதான முகமாக மாற்றியது. ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாடலை கேட்டவர்கள் எந்தவித தயக்கமுமின்றி இளையராஜாவை கொண்டாட ஆரம்பித்தார்கள். கதையின் கருவுக்கேற்ற கிராமத்து இசையை இளையராஜா  மிகவும் நவீனமாக அதுவரை யாரும் திரை இசையில் கேட்காத பாணியில்  உருவாக்கி, தன் பெயரை தமிழகத்தின்  எல்லா வீடுகளிலும் உச்சரிக்க வைத்தார். "சோளம் வெதைக்கயிலே"என்று தலைப்புப் பாடல் ஒலிக்கும்போதே  அந்த இசையின் புதிய பரிமாணம் கேட்பவர்களுக்கு சட்டென  பிடிபட்டது."செவ்வந்தி பூ முடிச்ச","மஞ்ச குளிச்சு" என்று வரிசையாக நம் மண்ணின் இசை இயல்பான வாத்தியங்களோடு முழங்கியது..குறிப்பாக "செந்தூரப்பூவே","ஆட்டுக்குட்டி முட்டையிட்டு" பாடல்கள் அமோகமாக பாராட்டப்பட்டன. ஹிந்திப் பாடல்களின் காலம் முடிந்து நம் தமிழ் இசை நம்மிடம் திரும்பியது.  இத்துடன்  தமிழ் இசை பழைய இசை(எம் எஸ் வி), புதிய இசை (இளையராஜா) என்று இரண்டாகப் பிரிய, அப்போதைய இளைய தலைமுறையின்  துல்லிய இசை வடிவமாக இளையராஜா  கொண்டாடப்பட்டார்..  டி எம் எஸ், சுசீலா எல் ஆர் ஈஸ்வரி என்ற கட்டமைப்பு எஸ் பி பி, ஜானகி,சசிரேகா, ஜென்சி,மலேசியா வாசுதேவன் என்று மாறியது.  எம் எஸ் வி பழைய தலைமுறையையும்  இளையராஜா இளைய தலைமுறையையும் பிரதிபலிப்பதாக ஒரு தோற்றம் உருவானது.தமிழ்த் திரையிசையின் கடிவாளம் எம் எஸ் வி யின் கைகளிலிருந்து   இளையராஜாவின் கைகளை நோக்கி திசை மாறத் துவங்கியது.

    பாக் (Bach)என்ற   மேற்கத்திய செவ்வியல் இசை மேதையின்  மீது  இளையராஜா அதீத காதல் கொண்டிருந்ததும் அதன் பாதிப்பை  தவிர்க்க முடியாமல் தன் இசையில் அந்தச்  செவ்வியல் இசையை நிழல் படியச்  செய்ததும் உண்மையே. இந்த மேற்கத்திய நாட்டுபுற கலப்பிசையை  இளையராஜாதான் கொண்டு வந்தார் என்று விபரம் தெரியாத பல இசை விமர்சகர்கள்  சொல்வது அபத்தமானது. காரணம் சுதர்சனம், ஜி ராமநாதன், எஸ் பாலச்சந்தர், எ எம் ராஜா போன்ற பலர்  இப்படிப்பட்ட கலப்பிசையில் கைதேர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.  விஸ்வநாதன் ராமமூர்த்தி  இருவரும் இவ்வகையான இசை அமைப்பில் செய்த சாதனைப் பாடல்கள் வெகு அதிகம். இருந்தும் இளையராஜாவின் கலப்பிசை  இவர்களிடமிருந்து வேறுபட்டதாக இருக்கிறது. சில சமயங்களில் இவர்  செய்து பார்த்த இசை பரிசோதனைகள் வேறுபல வடிவங்களையும் வண்ணத்தையும் நம் தமிழ் இசைக்கு  கொண்டுவந்து சேர்த்தன என்பதையும் இங்கே பதிவு செய்ய வேண்டும். இளையராஜா நம் தமிழிசைக்கு கிடைத்த மிகச் சிறப்பான இசைஞர் என்பது நிரூபணமான உண்மை. மேலும் இளையராஜாவை ஒதுக்கி விட்டு தமிழ்த் திரையிசைப் பற்றி பேசுவது இயலாத காரியம்.

          77இல் வந்த இளையராஜாவின் சிறப்பான பாடல்களைக் கொண்ட மற்ற சில படங்கள் இவை:
  அவர் எனக்கே சொந்தம்- இதில்தான் "தேவன் திருச்சபை மலர்களே"என்கிற மிக அருமையான பாடல் இருக்கிறது.ராஜாவின் ரசிகர்களுக்கே இப்படிப்பட்ட ஒரு பாடல் இருப்பது தெரியுமா என்பது சந்தேகம்தான் .தேனில் ஆடும் ரோஜா மற்றொரு இனிமையான   மெலடி. குறிப்பாக சுராங்கனி  பாடல் எல்லோரையும் முணுமுணுக்க வைத்தது. (உண்மையில் இது சிலோன் மனோகர்  என்பவரின் புகழ் பெற்ற சிங்களப்  பாடல். அதை இந்தப் படத்தில் பயன்படுத்திகொண்டதாகத் தெரிகிறது.)
  புவனா ஒரு கேள்விக்குறி-"ராஜா என்பார்,விழியிலே மலர்ந்தது" இரண்டுமே இளையராஜாவின் இனிமையான முத்திரைப் பாடல்கள்.
  தீபம்-சிவாஜிக்காக இளையராஜா இசை அமைத்த முதல் படம். பூவிழி வாசலில் யாரடி, அந்தப்புரத்தில் ஒரு மகாராணி, பேசாதே போன்ற பாடல்கள் சிறப்பானவை.
  காயத்ரி-காலைப் பனியில்,வாழ்வே மாயமா(இந்தப் பாடல் யார்  நீ படத்தில் வரும் நானே வருவேன் பாடல் சாயலில் இருப்பதை ஒரு இலங்கை வானொலி அறிவிப்பாளர்  குறிப்பிட்டபோது அந்தப் பாடலை நான் கேட்டதேயில்லை என்று பதில் வந்தது இளையராஜாவிடமிருந்து .)
  கவிக்குயில்-பாலமுரளிகிருஷ்ணா பாடிய "சின்னக் கண்ணன் அழைக்கிறான் சற்றும் சந்தேகமில்லாத ஒரு அபாரமான பாடல்.பாலமுரளி கிருஷ்ணாவே இந்தப் பாடல் அமைக்கப்பட்ட ராகத்தைக்கேட்டு ஒரு கணம் அதிசயித்ததாக கருத்து உண்டு.  புல்லாங்குழல் இசை பாடல் முழுதையும் நளினமாக அரவணைத்துச் சென்று அதன் கருத்தோடு இணையும் அழகான தாலாட்டு இது.

            78 இல் இளையராஜாவின் இசைப் பயணம் புதிய இலக்குகளை எட்டியது என்பது ஒப்பனைக்காக சொல்லப்படும் வாக்கியம் அல்ல. இந்த ஆண்டில்தான் தமிழிசையில் முதல் முறையாக ப்ரியா என்ற படத்தில் ஸ்டீரியோ இசை அமைப்பு பயன்படுத்தப்பட்டது. இந்தப் படத்தின் பாடல்கள் வெகுவாக பிரசித்தி பெற இந்த அறிவியல் தொழில் நுட்பமும் ஒரு காரணம் என்பதை மறுக்கமுடியாது.கீழே உள்ளவை அந்த ஆண்டில் வந்த  இளையராஜாவின் பிரபலமான மற்ற சில படங்கள்:
   அச்சாணி-மாதா உன் கோவிலில்,தாலாட்டு
  இளமை ஊஞ்சலாடுகிறது-ஒரே நாள் உன்னை நான்(மென்மையான பாடல்)
என்னடி மீனாட்சி(இளைஞர்களின் விருப்பமான பாடல்) ) ,தண்ணி கருத்திருச்சு(ஆபாசமான பாடல் என்று பெயர் பெற்றது)நீ கேட்டால், கிண்ணத்தில் தேன்  வடித்து
  சிட்டுக்குருவி-என் கண்மணி(கவுண்டர் பாய்ன்ட் என்ற ஒரு மேற்கத்திய பாணியில் அமைக்கப்பட்டு பெருத்த வரவேற்பை பெற்ற பாடல்) அடடட மாமர கிளியே, ஒன்ன நம்பி நெத்தியிலே(ஒரு கிராமத்து பெண்ணின் காதலை நம் மண்ணின் இசையோடு சொன்ன பாடல்).
  காற்றினிலே வரும் கீதம்-சித்திரை செவ்வானம்,ஒரு வானவில் போலே,கண்டேன் எங்கும்(இந்தப் பாடலுக்கு இளையராஜா அதிகமான இசைக்கருவிகளை கொண்டு இசை அமைத்ததாக பேச்சு உண்டு.)
  கிழக்கே போகும் ரயில்-கோவில் மணி ஓசை, பூவரசம்பூ பூத்தாச்சு, மாஞ்சோலை கிளி,
  முள்ளும் மலரும்-ராமன் ஆண்டாலும்,அடி பெண்ணே,நித்தம் நித்தம் நெல்லுச்சோறு,செந்தாழம் பூவில்(பெருமான்மையானவர்கள் அதிகம் விரும்பும் இளையராஜாவின் பாடல் இது).
  தியாகம்-நல்லவெர்க்கெல்லாம்(ஒரு சிறப்பான பாடல்),வசந்த கால கோலங்கள், தேன்மல்லிப் பூவே.
  வட்டத்துக்குள் சதுரம் -இதோ இதோ என் நெஞ்சிலே.
  கண்ணன் ஒரு கைக்குழந்தை-மேகமே தூதாகவா
  ப்ரியா-ஏ  பாடல் ஒன்று,அக்கரைச் சீமை(சைமன் டூப்ரி என்ற மேற்கத்திய இசை குழுவினரின் கைட்ஸ் என்ற பாடலின் நகல்),டார்லிங் டார்லிங்( மிக பிரபலமான போனி எம் என்னும் இசையினரின் சன்னி என்ற பாடலின் பிரதி),என்னுயிர் நீதானே, ஸ்ரீ ராமனின் ஸ்ரீ தேவியே. சந்தேகமில்லாமல் இந்தப் படத்தின் பாடல்கள் மிகுந்த வெற்றியைப் பெற்றன.பலபேர் ப்ரியா படத்திற்குப் பிறகே இந்தி இசை கேட்பதை நிறுத்திவிட்டதாக சொல்லக்கேள்விப்பட்டிருக்கிறேன்.இருந்தும் சிங்கப்பூர் என்ற அயல் நாட்டில்   நடக்கும்  படத்தின் கதையோட்டத்திற்கு பொருத்தமில்லாத இசையை அமைத்திருந்தார் இளையராஜா. உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் பாடல்களில்  எம் எஸ் வி காட்டிய  அந்த நேர்த்தியை இளையராஜா கொண்டு வரவில்லை என்பது கண்கூடு.

    இதே ஆண்டில் வந்த மேலும் இரண்டு மிக முக்கியமான படங்களைப் பற்றி இங்கே குறிப்பிடுவது அவசியமாகிறது.முதலாவது இவர் இப்படித்தான் என்று பாரதிராஜாவை ஒரு கிராமத்து  ஆசாமியாக முத்திரை குத்திய தமிழ் ரசிகர்களை கலங்கடித்த ஒரு அதி வேக திரில்லரான சிகப்பு ரோஜாக்கள். இரண்டாவது தமிழ் சினிமாவில் அபூர்வமாக வரும் மிகச்  சிறந்த படங்களில் ஒன்றான  அவள் அப்படித்தான்.(இயக்கம்-ருத்தையா).இந்த இரண்டு படங்களுக்கும் இளையராஜாவின் இசை மிக நேர்த்தியாக இருந்தது.அதன் பாடல்கள்  இன்றளவும் இளையராஜாவின் இனிமையான  இசைக்கு  முகவரிகளாக இருக்கின்றன.இளையராஜா தான் உச்சத்தில் இருந்த  எண்பதுகளில் கூட இது போன்ற அற்புதமான  பாடல்களை கொடுக்கவில்லை என்பதை நல்லிசையை நாடுவோர்  அறிவார்கள்.

        ஒரு மின்மினிக்கு கண்ணில், நினைவோ ஒரு பறவை( பாடலைக் கேட்கும் போதே பறக்கின்ற உணர்வு ஏற்படுவது ஒரு சிறப்பு)என்ற இரண்டு பாடல்களும் சிகப்பு ரோஜாக்கள் என்ற படத்தின் மறக்ககமுடியாத பகுதியாகிவிட்ட  அற்புதங்கள்.அவள் அப்படித்தான் படத்தில்  கமலஹாசனின் குரலில் ஒலித்த  பன்னீர் புஷ்பங்களே(இன்னொரு சிறப்பான  பாடல் நாயகனின் தென் பாண்டிச் சீமையிலே ), மற்றும் ஜெயச்சந்திரனின் என்றும் இனிமையான  உறவுகள் தொடர்கதை என்ற பாடல்கள் இளையராஜாவின் இசைச் சிற்பங்கள்.  (உறவுகள் தொடர்கதை  என்னுடைய தனிப்பட்ட விருப்பமாக  இருந்தாலும் இளையராஜாவின்  பெஸ்ட் என்ற பட்டியலில் கண்டிப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்).

         79 இல் தமிழ்த் திரையின் தவிர்க்க  முடியாத இசை அமைப்பாளராக மாறியிருந்தார் இளையராஜா.அவரது இசையின் பரிமாணம் விரிவடைந்துகொண்டே சென்றது.
கண்மணியே காதல் என்பது (ஆறிலிருந்து 60 வரை)
எதோ நினைவுகள்-(அகல் விளக்கு)
கீதா சங்கீதா, சின்னப் புறா ஒன்று -இளையராஜாவை பிடிக்காதவர்கள் கூட விரும்பும் ஒரு நல்லிசை இது.(அன்பே சங்கீதா),
நதியோரம்,அப்பனே அப்பனே(அன்னை ஓர் ஆலயம்),
ஆகாய கங்கை(தர்மயுத்தம்),
பூப்போலே(கவரிமான்),
ஆஹா வந்துருச்சு, காதல் தீபம் ஒன்று-ஒரே மெட்டில்  இருந்தாலும் இந்தப் பாடலே என்னுடைய தேர்வு, இளமை நாட்டிய சாலை (கல்யாணமாம் கல்யாணம் 1974) என்ற பாடலை நினைவு படுத்தும்  மலர்களில் ஆடும் இளமை(கல்யாணராமன்),
மஞ்சள் நிலாவுக்கு-ரயில் ஓசையுடன் ஒலிக்கும் நெஞ்சத்தை கொள்ளைகொள்ளும் பாடல் இது. (முதலிரவு),
எந்தன் பொன் வண்ணமே(நான் வாழ வைப்பேன்),
சிந்து நதிக்கரை, செவ்வானமே செவ்வானமே(நல்லதொரு குடும்பம்),
ஆயிரம் மலர்களே, முதல் முதலாக காதல் டூயட் (நிறம் மாறாத பூக்கள்),
தேவதை, எங்கெங்கோ செல்லும்- நிறைய பேருக்கு தெரியாத மிக அருமையான இளையராஜாவின் பாடல் இது. பாடலுக்கு பொருத்தமில்லாத சிவாஜி, வெற்றி பெறாத படம் என்பதால் மக்களின் பொது எண்ணத்திலிருந்து காணாமல் போய்விட்ட மற்றொரு அபாரமான பாடல்  இது என்பதில் சந்தேகமேயில்லை. (பட்டாக்கத்தி பைரவன்),
ஓரம்போ- பெண்களை கலாட்டா செய்ய வசதியான பாடல் இது. (பொண்ணு ஊருக்கு புதுசு),
தம்தன தம்தன, வான் மேகங்களே (புதிய வார்ப்புகள்),
உச்சி வகுடெடுத்து, என்னுளில் ஏதோ(ரோசாப்பு ரவிக்கைக்காரி),
அழகிய கண்ணே(உதிரிப்பூக்கள்),
அபிஷேக நேரத்தில்,குறிஞ்சி மலரில்,நானே நானா-ஆர்ப்பாட்டம் இல்லாத மேற்கத்திய இசை கலந்து ஓடும் மிக ரம்மியமான மெல்லிசை(அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்).
பொன்னாரம் பூவாரம்,தோட்டம் கொண்ட ராசாவே(வித்தியாசமான டப்பாங்குத்து பாடல்),இளமை என்னும் பூங்காற்று (இளையராஜாவின் மிக அற்புதமான பாடல் இது என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது).-பகலில் ஒரு இரவு.
 
          போன்ற பாடல்களில் இளையராஜா தன் ஆளுமையை நிரூபித்து தமிழிசையின் அடுத்த சாரதி தான்தான் என்பதை எந்தவிதமான நெருடல்கள் இல்லாது உறுதி செய்தார்.தமிழ்த் திரையிசை இப்போது வெகுவாக மாறிவிட்டிருந்தது.இளையராஜா தமிழிசையை வேறு பாதையில் நடத்தி சென்று கொண்டிருந்தார். இசைப் புரட்சி, புதுமைகள் என்று பல விஷயங்கள் இதில் இருந்தாலும் தமிழிசை "பாட்டு பாடவா , நீரோடும் வைகையிலே,அனுபவம் புதுமை" காலத்திலிருந்து அதன் எதிர் திசையில் பயணம் செய்துகொண்டிருந்தது.தமிழிசையின் முகமும் மாறிக்கொண்டிருந்தது.

      80 இளையாராஜாவின் மறுபிறப்பு என்று சொல்லலாம். இந்த ஆண்டில்தான் சற்று தோய்ந்து போயிருந்த இளையராஜாவின் இசை மறுபடி ஒரு அசாத்திய உச்சத்தை எட்டியது.சிலர் தமிழ்த் திரையின் பொற்காலம் என்று தவறாக சொல்லக்கூடிய ஆனால் நிஜத்தில் இளையராஜாவின் பொற்காலம் என்று அழைக்கப்படவேண்டிய இளையராஜா-வைரமுத்து-பாரதிராஜா கூட்டணி பிறந்தது இந்த 1980 இல்தான். வைரமுத்துவின் வரவுக்கு  முன்பேயே இளையராஜா பல படங்களில் தன் திறமையை  மறுக்க முடியாத அளவுக்கு நங்கூரம் போட்டு நிலைநிறுத்தி இருந்தாலும், வைரமுத்துவின் கவிதை பின்புலத்திலேயே அவரின் இசைக்கு ஒரு மிகப் பெரிய மரியாதையும்,அங்கீகாரமும் கிடைத்தது என்பது உண்மை. இதை பல ராஜா அபிமானிகள் இன்றுவரை ஒத்துக்கொள்ளவதில்லை.ஆனால் இளையராஜாவின் வைரங்கள்   என்று அவர்கள் சொல்லும் பல பாடல்கள் 80களை பின்னணியாக கொண்டவையே.கண்ணதாசன், வாலி,பஞ்சு அருணாசலம்,முத்துலிங்கம்,கங்கை அமரன் மற்றும் இன்ன பிற கவிஞர்களின்    கவிதைகளை பாடல்களாக இசைத்த இளையராஜா 80 இல் வந்த பாரதிராஜாவின் முதல் தோல்விப் படமான "நிழல்கள்" மூலம் வைரமுத்து என்னும் அக்னிக் கவிஞரோடு கைகோர்த்தார். நிழல்கள் படத்தின் பாடல்கள் இளையராஜாவின் இசை அத்தியாயத்தில் அழிக்க முடியாத கோலங்கள்.


        வைரமுத்துவுடனான இளையராஜாவின் இசைப் பயணம் அவரின்  அடுத்த பரிமாணம் என்பதை  இளையராஜாவின் இசையை நுணுக்கமாகக் கேட்பவர்கள் உணர்வார்கள். எனவே இந்தப் பதிவை நான் இங்கே நிறுத்திக்கொள்வதே நியாயம் என்றுணர்கிறேன்.


அடுத்து: இசை விரும்பிகள்  IX - நிறம் மாறிய பூக்கள் 


       

33 comments:

  1. இளையராஜாவைப் புகழ்ந்து ஒரு கட்டுரை.அதுவும் காரிகனிடமிருந்தா? ஆச்சர்யம்தான்.நம்பவே முடியவில்லை.
    குரு

    ReplyDelete
  2. திருவாளர் குரு,
    வருகைக்கு நன்றி. உங்கள் கருத்து எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை. எதிர்பார்த்ததே.அவரவர்களின் சிறப்பை அவர்களிடமே விட்டு விடுவது மேல்.இளையராஜாவுக்கென சில சிறப்புகள் இருக்கின்றன. அதை குறைத்து சொல்வதோ அல்லது மறுப்பதோ உண்மைக்குப் புறம்பானது என்பது என் கருத்து. ஆனால் இந்தப் பதிவு இன்னும் முடிவடையவில்லை.இன்னும் நிறைய பாக்கி இருக்கிறது.

    ReplyDelete
  3. இன்றைய மனநிலையில் இல்லாமல் அந்தக் காலத்திலேயே பயணித்து மிகச்சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். உண்மையில் ராஜா ராஜாதான் என்றெல்லாம் கூப்பாடு போடும் பல இளையராஜாவின் ரசிகர்களுக்குத் தெரியாத பாடல்களையும், தெரியாத விவரங்களையும் சொல்லியிருக்கிறீர்கள் என்றுதான் சொல்லவேண்டும். எழுபதுகளின் ஆரம்பத்திலிருந்தே மாறத்தொடங்கியிருந்த டிரெண்டுக்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொள்ளாமல் விசுவநாதன் இருந்தார் என்பதும் முக்காலும் உண்மை.

    'காய்ந்துபோய்க் கிடந்த ஆற்றுப் பாதைகளிலும் வற்றிப்போய்க் கிடந்த வாய்க்கால்களிலும், வறண்டு கிடந்த குளம் குட்டைகளிலும் திடீரென்று வந்த புதுவெள்ளம்போல் பாய்ந்து வந்தவர் இளையராஜா. ஆனாலும்....' என்று அன்று இளையராஜாவைப் பற்றி எழுதியிருந்தேன்.

    இந்த 'ஆனாலும்' என்று ஆரம்பித்து நான் சொல்லியிருந்த விஷயங்கள் ஏற்படுத்திய தாக்கமும், அதிர்வுகளும் இருக்கிறதே, அது மிக அதிகம்.

    அதுவும் அந்தத் தாக்கம் யாரிடம் ஏற்பட்டது என்கிறீர்கள், 'சம்பந்தப் பட்டவரிடமே' என்றால் எப்படி இருக்கும்?

    அது ஒரு முக்கியமான கதை. நேரம் வரும்போது சொல்லவேண்டிய இடத்தில் சொல்கிறேன்.

    இப்போதைக்கு, உங்களுடையது மிக அருமையான படப்பிடிப்பு.

    அதுவும் இணையத்தில் உங்களையெல்லாம் வெறும் 'இளையராஜா எதிர்ப்பாளர்கள்' என்று மட்டுமே முத்திரைக்குத்தி காமாலைக் கண்களோடு பார்த்துக்கொண்டிருக்கிற நேரத்தில் இப்படியொரு பதிவு. இந்தப் பதிவைப் படித்தபிறகாவது இசையைப் பற்றி 'நாலும் தெரிந்த ஒருவர்' போன்றிருக்கும் ஒருசிலரின் கருத்துக்கள் என்ன என்றாவது கருதுகிறவர்கள் இருக்கிறார்களா பார்ப்போம்.
    இதோ பார்....மற்றவர்களின் நிலை இது. இளையராஜா ஒன்றும் குறைந்தவர் இல்லை. அவருடைய நிலை இது. இதையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்துத்தான் பேசுகிறோம். என்ற சிந்தனை ஒருசிலருக்காவது வருகிறதா பார்க்கலாம்.
    நேர்மையும் நியாயமுமாகப் பயணிக்கும் உங்கள் பதிவுகள் தொடரட்டும். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. அமுதவன் தலயில் வைத்து கூத்தாடுவது போல இளையராஜாவின் இசையை முழுமனதோடு காரிகன் எழுதவில்லை.பின் தொடர இருக்கும் வசைகளுக்கு முன்னரே ராஜாவை புகழ்ந்தும் புகழாமலும் "விகடன் " வகையறாக்களின் பாணியில் முன்னுரை என்ற அளவில் ஒரு வித பயத்துடன் எழுதப்பட்டுள்ள பதிவு.அவ்வளவே.ராஜாவின் ரசிகர்களுக்கு எதிராக எழுதுகிறோம் என்று ராஜாவையே இகழும் இழுக்கு தமிழ் நாட்டில தான் நடக்கும்.

    ராஜா தமிழனாக இல்லாவிட்டால் எங்கோ போயிருப்பார்.இது தான் தமிழனின் சாபக்கேடு.

    என்ன செய்வது ஒரு இசைமேதையை " விமர்சனம் " என்ற பெயரில் இழுத்து விழுத்த முயற்ச்சிப்பது பரிதாபமாக வெளிப்பட்டு நிற்கிறது.

    இதெல்லாம் காலக் கொடுமை.

    இங்ஙனம்

    "இளையராஜா எதிர்ப்பாளன்"

    ReplyDelete
  5. வருக வருக அமுதவன் அவர்களே,

    மிக்க நன்றி உங்களின் பாராட்டுக்களுக்கு. நான் கூட சற்று வேறு விதமான பின்னூட்டத்தை எதிர்பார்த்தேன். நீங்கள் உண்மையிலேயே பல விஷயங்கள் தெரிந்தவர் என்பது நிரூபணம் ஆகிவிட்டது. இளையராஜாவைப் பற்றி "நாலும் தெரிந்த" சிலரே வழக்கமான குளத்தில் நீராடிக்கொண்டிருகையில், நீங்களோ நானோ அவரைப் பற்றி நல்லவிதமாகச் சொல்வது உண்மையில் கவனிக்கப்படக்கூடியது. இதையும் ஒரு நடிப்பு என்று சிலர் (மேலே உள்ளவர் போல) கூறுவது நியாயங்களுக்கு இங்கே அனுமதி இல்லை என்பதையே காட்டுகிறது. உங்கள் பின்னூட்டதிற்கு நன்றி.
    "'காய்ந்துபோய்க் கிடந்த ஆற்றுப் பாதைகளிலும் வற்றிப்போய்க் கிடந்த வாய்க்கால்களிலும், வறண்டு கிடந்த குளம் குட்டைகளிலும் திடீரென்று வந்த புதுவெள்ளம்போல் பாய்ந்து வந்தவர் இளையராஜா. ஆனாலும்....' "
    ஆல்பர்ட் ஹிட்ச்காக் படம் பார்ப்பது போல இருக்கிறது உங்கள் எழுத்து. இதையே தான் நானும் எழுத நினைத்தேன் என்று நான் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? தயவு செய்து அப்போது நீங்கள் எழுதியகட்டுரையை மீள் பதிவு செய்யவும்.






















    '

    ReplyDelete
  6. வாருங்கள் அனானிமஸ்,
    நீங்கள் திருவாளர் தாஸ் என்பவராக இருக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. இருப்பினும் நீங்கள் யாரோ எவரோ உங்கள் கருத்து என்னைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் prejudice அடிப்படையில் உருவானது. நான் இளையராஜாவின் ஆரம்பகால இசையை நேசிப்பவன் என்பதை எல்லா இடத்திலும் சொல்லிவருபவன். அதை நீங்கள் நம்பவில்லை என்றால் அது என் தவறு கிடையாது. நான் பயப்பட்டு எழுதி இருப்பதாக நீங்கள் சொல்வது மகா அபத்தம்.இளையராஜாவிடம் நிறைய கேள்விகள் எனக்கு இருக்கின்றன. இருந்தும் அவர் செய்த அபாரமான சாதனைகளை மறுப்பவன் நான் இல்லை.

    ராஜா தமிழனாக இல்லாவிட்டால் எங்கோ போயிருப்பார்.இது தான் தமிழனின் சாபக்கேடு.

    இது எ ஆர் ரகுமான் ,எம் எஸ் வி, கே வி எம், போன்றவர்களுக்கும் பொருந்தும். இளையராஜா மட்டுமே தமிழர் என்று நீங்கள் நினைப்பது எவ்வளவு மடத்தனம்? இனிமேலாவது கொஞ்சம் நியாயம் பேசுங்கள். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என்னுடைய ஆழமான நன்றிகள்.

    ReplyDelete
  7. அது ஒரு கட்டுரைக்கூட அல்ல; கேள்வி-பதில்தான். அதற்கே 'சம்பந்தப்பட்டவர்' ரியாக்ட் செய்த விதம் இன்னமும் நம்ப முடியாததாகவே இருந்தது. அதனை முழுமையாகச் சொல்ல நினைத்திருப்பதால் இப்போதைக்கு இது போதும். சமயம் வரும்போது முதலில் பத்திரிகையில் அல்லது இணையத்தில் எழுதுகிறேன்.

    மேலே உள்ளவரின் கோபம் அல்லது புலம்பலைப் பார்த்தீர்களா? ஊர் உலகில் நீங்கள் யாரைப்பற்றி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். திட்டலாம்.குதறலாம். ஆனால் இளையராஜா என்று வரும்போது 'மட்டும்' அவருக்கு இங்கே மட்டுமல்ல ஈரேழு உலகத்திலும் யாரும் இல்லை என்று சொல்லிவிட்டுப் போய்விட வேண்டும். ஏனெனில்............இது ஒரு பெரிய 'ஏனெனில்'......இதற்கான விடை யாருக்கும் தெரியாது.

    ReplyDelete
  8. \\வாருங்கள் அனானிமஸ்,
    நீங்கள் திருவாளர் தாஸ் என்பவராக இருக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.\\
    சரியாகச் சொன்னீர்கள். அவரேதான். ஆஹ்ஹஹா....இந்தமாதிரியான விவாதங்கள் எல்லாம் அவர்மட்டும்தான் செய்துகொண்டிருக்கிறார். என்னுடைய முந்தைய பதிவுக்கும் மறுபடியும் வந்து அதே விவாதத்தை ஆரம்பித்துவிட்டார். என்ன செய்வது அவரால் 'வேறுமாதிரியான புலம்பலைக்கூட' முன்வைக்கமுடிவதில்லை.ஒரே மாதிரியான புலம்பல்தான். 'ராஜாவுக்கு ஈடு இங்கே யாருமில்லை. அவருக்கு முன்னும் யாருமில்லை. பின்னும் யாருமில்லை.'ராஜாதி ராஜன் எங்கள் ராஜாதான்' என்று கோஷங்கள் போன்ற விவாதங்கள்.இவரிடம் சரியாக மாட்டிக்கொண்டீர்கள்.அவஸ்தைதான்.

    ஒன்று கவனித்தீர்களா? ராஜாவுக்கு ஆதரவாக வரும் யாரும் சொந்தப்பேருடனும் ஐடியுடனும் வரமாட்டேனென்கிறார்கள். எல்லாரும் 'அனானிமஸ்தான்'. பாவம் இளையராஜா. அவருக்கு இதுபோன்ற நிலைமைகளெல்லாமா இணையத்தில் வரவேண்டும்?

    ReplyDelete
  9. Anonymous
    \\என்ன செய்வது ஒரு இசைமேதையை " விமர்சனம் " என்ற பெயரில் இழுத்து விழுத்த முயற்ச்சிப்பது பரிதாபமாக வெளிப்பட்டு நிற்கிறது.

    இதெல்லாம் காலக் கொடுமை.\\
    முக்கியமாய் 'அவருக்கு' பதில் சொல்லவேண்டுமென்று நினைத்ததே இந்த வரிகளுக்குத்தான். விடுபட்டுப்போய்விட்டது. அதனால் இப்போது மறுபடியும்.....
    இந்தக் 'காலக்கொடுமைக்காகத்தானே' அனானிமஸ் நானும் காரிகன் போன்ற ஒருசிலரும் மாரடித்துக்கொண்டிருக்கிறோம். விமரிசனம் என்ற பெயரிலும், எங்களுக்குப் பிடித்த இசையமைப்பாளரைப் புகழ்கிறோம் என்ற பெயரிலும் ஒரு குட்டி இசைமேதையைப் புகழ்வதற்காக, மாபெரும் இசைமேதைகள் ஏழெட்டுப்பேரை இழுத்து வீழ்த்த உங்களைப் போன்ற பலர் இணையத்தில் புறப்படிருக்கிறீர்களே..இதெல்லாம் காலக்கொடுமை இல்லாமல் வேறென்ன?

    ReplyDelete
  10. அமுதவன் அவர்களே,
    திருவாளர் அனானிமஸ் நான் இளையராஜாவை விமர்சித்தாலும் தப்பு என்கிறார்.புகழ்ந்தாலும் தப்பு என்கிறார். இன்னும் கொஞ்சம் ஆதாரங்களுடன் அவர் பேசி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.உடைந்து போன எல் பி ரெகார்ட் போல ஒரே பல்லவியையே திரும்பத் திரும்பச் சொல்வதில் இவர்களுக்கு சலிப்பே வராதா என்று நமக்கு வியப்பு வருகிறது.எம் எஸ் வி க்கு ஒன்றும் தெரியாது என்பார்கள். ரகுமான் குப்பை என்பார்கள்.(இளையராஜாவின் புதல்வர் யுவன் ஷங்கர் பற்றி மட்டும் வாய் திறக்க மாட்டார்கள்).ஹாரிசை காப்பி என்பார்கள். இதெல்லாம் நிறைய பார்த்தாயிற்று. ஏன் "சிலரோடு"சூடான விவாதங்களே நடத்தியாகி விட்டது. ஒன்றை கவனிக்கிறேன்.தற்போது ராஜா பதிவர்கள் சிலரின் எழுத்துக்களில் மாற்றம் தென்படுகிறது. "இந்தாளை ரொம்பத்தான் புகழ்ந்துட்டோமோ"என்று அவர்கள் எண்ணுவது போல இருக்கிறது. நல்ல மாற்றம்தான். மேலும் அனானிமஸ் போற்றிப்பாடும் இளையராஜாவின் இடையிசையைப் பற்றி அடுத்த பதிவில் எழுத இருக்கிறேன்.

    ReplyDelete
  11. காரிகன்...
    \\ஒன்றை கவனிக்கிறேன்.தற்போது ராஜா பதிவர்கள் சிலரின் எழுத்துக்களில் மாற்றம் தென்படுகிறது\\
    ஆமாம். நானும் இதனை உன்னிப்பாக கவனித்து வருகிறேன்.'எம்எஸ்வி, கேவிஎம், சுப்பையா நாயுடு இளையராஜா போன்ற இசைமேதைகளிடம்....' என்றெல்லாம் எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனாலும் நிறையப்பேருக்கு இன்னமும் நிறைய விஷயங்கள் தெரியாமல் பிடித்த முயலுக்கு இரண்டே இரண்டு கால்கள்தாம் என்ற வாதத்திலேயே இருக்கிறார்கள்.

    'தாலாட்டுப் பாட்டு என்றால் ராஜா ஒருவர்தானே' என்று ஒருவர் அநியாய ஃபீலிங் காட்டியிருந்ததைப் பத்து நாட்களுக்கு முன்னால்கூடப் படித்தேன்.

    இன்னும் ஒருவர் 'ராஜா இருக்கும் திசை நோக்கித் தொழுதுவிட்டுத்தான்' ஏதோ ஒரு காரியத்தை ஆரம்பிக்கப்போகிறாராம். என்ன காரியம் என்றுகூடத் தெரியவில்லை.

    இந்த இடையிசையைப் பற்றி என்னுடைய முந்தைய பதிவிலும் இதே அனானி குழப்பம் செய்திருக்கிறார். அவருக்கு பதிலளிக்கும் முகமாக நானே ஒரு பதிவு எழுதுவதாகக் கூறியிருக்கிறேன். அதுபற்றிய ஒரு வரி விமரிசனமும் இருக்கிறது. நீங்கள் பதிவு எழுதுவதற்கு முன்னால் அதையும் பார்த்துவிடுங்கள்.

    ReplyDelete
  12. அமுதவன் அவர்களே,
    உங்களின் பின்னூட்டத்தை படித்தேன்.பி ஜி எம் இல் ராஜாவை விட்டால் உலகத்திலேயே வேற ஆளே கிடையாது போன்ற பலப் பல கருத்துக்களை கண்டாயிற்று.ராஜாவின் இசைப் பரிசோதனைகள் பற்றி நிறையவே எழுதிவிட்டார்கள் அவரின் விசிறிகள். ஆனால் நீங்கள் சொல்லி இருப்பது ஒரு புதிய விஷயமாகவே எனக்குப் படுகிறது.விரைவில் எழுதுங்கள்.

    ReplyDelete
  13. இக்கட்டுரையாளர் "தம்தன தம்தன" என எழுதிவிட்டு அடுத்த பாடலை எழுதப் புறப்படும்போதே தெரிகிறது எதையெல்லாம் எழுதாமல் விடப்படுகிறது என்பதை. "தம்தன தம்தன" போன்ற ஒரு பாடல் அதுவரையிலான எந்த இசையமைப்பாளார்களாலும் கொணர முடியாத ஒரு அதிசயம். இந்திய இசையில் கூட்டிசை என்பதற்கே புதிய பரிமாணத்தை வழங்கியப் பாடலாக்கம் அது. இன்னொரு இடத்தில் "சின்னப் புறா ஒன்று -இளையராஜாவை பிடிக்காதவர்கள் கூட விரும்பும் ஒரு நல்லிசை இது." இப்படிக் குறிப்பிடுகிறார் கட்டுரையாளர். ராஜாவை பிடிக்காதவர்கள் நல்லிசையை கேட்போர் எனக் கூறிக்கொள்ள தகுதியுடையவர்கள் அல்ல என்பது என் பார்வை. நல்லிசையை விரும்புவர்கள் நிச்சயமாக ராஜாவின் இசையையும் விரும்புவர்கள்களாகவே இருப்பர். தமிழ்த் திரையிசையில் ராஜாவின் மிகப்பெரிய பங்களிப்பாக கருத்துப்பட வேண்டியது தெம்மாங்குப் பாடல்களை எளிய பாடல் வரிகளில் மேற்கத்திய, சாஸ்திரிய இசை வடிவங்களோடு கலந்து ரத்தமும் சதையுமாக கொடுத்தது. அக்கரைச் சீமை, டார்லிங் டார்லிங் போன்ற பாடல்களை நகல், பிரதி என எழுதி மொழுகிவிட்டு நகரமுடியாது. அவருக்குப் பிடித்த மேற்கத்திய இசைகளை உள்வாங்கி அந்த இசையமைப்பாளர்களை ராஜா பாராட்டும் விதமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கே இப்படி நீங்கள் பொங்க ஆரம்பித்தால், எம்.எஸ்.வி உள்வாங்கிய இந்தி, பாடல்களை எழுத ஆரம்பித்தால் ஒரு நீண்டக் கட்டுரை எழுதவேண்டியிருக்கும். ஆனால் இதுபோன்ற உள்வாங்கலை விட எது ஒருவரை தனித்து அடையாளம் காட்டுகிறது என்பதையே பிரதானப் படுத்தி எழுதணும்.

    ReplyDelete
  14. வெங்கிராம்
    \\"தம்தன தம்தன" போன்ற ஒரு பாடல் அதுவரையிலான எந்த இசையமைப்பாளார்களாலும் கொணர முடியாத ஒரு அதிசயம்.\\

    \\தமிழ்த் திரையிசையில் ராஜாவின் மிகப்பெரிய பங்களிப்பாக கருத்துப்பட வேண்டியது தெம்மாங்குப் பாடல்களை எளிய பாடல் வரிகளில் மேற்கத்திய, சாஸ்திரிய இசை வடிவங்களோடு கலந்து ரத்தமும் சதையுமாக கொடுத்தது. அக்கரைச் சீமை, டார்லிங் டார்லிங் போன்ற பாடல்களை நகல், பிரதி என எழுதி மொழுகிவிட்டு நகரமுடியாது. அவருக்குப் பிடித்த மேற்கத்திய இசைகளை உள்வாங்கி அந்த இசையமைப்பாளர்களை ராஜா பாராட்டும் விதமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.\\

    இந்த இரண்டு கருத்துக்களை மட்டுமே பிரதியெடுத்து இளையராஜா இசையமைத்த எட்டாயிரத்து எண்ணூற்று முந்நூற்று சொச்ச பாடல்களுக்கும் முன்னேயும் பின்னேயும் போட்டுக்கொண்டாலேயே போதும். விவகாரம் ஒரு முடிவுக்கு வந்துவிடும்.
    நாட்டில், உலகில், மிச்சம் மீதி ஒலிக்கும் எல்லா இசையையுமே நிறுத்திவிடலாம்.

    ReplyDelete
  15. வெங்கி ராம் அவர்களுக்கு,
    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நான் இசை விரும்பிகள் என்ற இந்தப் பதிவுகளை தொடர் பதிவுகளாக எழுதிவருகிறேன்.இதில் யாரையும் முன் நிறுத்துவது என் நோக்கம் அல்ல. 1930 களில் இருந்து தற்போது வரை நம் திரை இசை எப்படி உருமாறி இருக்கிறது என்பதை பதிவு செய்வதே என் எண்ணம்.நீங்கள் இந்த எட்டாவது பதிவை மட்டும் படித்து விட்டு உங்கள் கருத்தை சொல்கிறீர்கள் என்று தோன்றுகிறது.இனி உங்களின் குற்றச் சாட்டுகளுக்கு வருவோம்.
    நீங்கள் சொல்வது : " "தம்தன தம்தன" போன்ற ஒரு பாடல் அதுவரையிலான எந்த இசையமைப்பாளார்களாலும் கொணர முடியாத ஒரு அதிசயம். இந்திய இசையில் கூட்டிசை என்பதற்கே புதிய பரிமாணத்தை வழங்கியப் பாடலாக்கம் அது."
    தம்தன பாடல் ஒரு சிறப்பான பாடல் என்பதில் உடன்படுகிறேன். இளையராஜா செய்த இசைப் புரட்சிகளை அங்குலம் அங்குலமாக மற்றவர்கள் விவரிக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பது ஒரு சர்வாதிகார சிந்தனை. உங்களைப் போல் நான் எழுத வேண்டும் என்றால் அதற்கு நான் எதற்கு? ஒ ரசிக்கும் சீமானே என்று ஒரு பாடல் 52 இல் வந்தது. அந்தப் பாடலில் இல்லாத புதுமைகளை நீங்கள் பட்டியல் போடுங்கள். இன்றைக்கும் மிகவும் நவீனமாக ஒலிக்கக்கூடிய ஒரு அசாத்தியமான பாடல் அது. இருந்தும் அதைப் பற்றி அலட்டிக்கொள்ளாத ராஜா விசிறிகள் அதெல்லாம் ஒன்றுமே இல்லை என்று சொல்வது அபத்தம் இல்லையா? நீங்கள் பழைய பாடல்கள் கேட்பதில்லை என்று உணர்கிறேன். இளையராஜாவை மட்டும் கேட்டு விட்டு கருத்து சொல்வது எப்படி நியாயமாக இருக்கும்?
    நீங்கள் சொல்வது : "ராஜாவை பிடிக்காதவர்கள் நல்லிசையை கேட்போர் எனக் கூறிக்கொள்ள தகுதியுடையவர்கள் அல்ல என்பது என் பார்வை."
    ஒரு விதத்தில் இது சரியே. இருந்தும் ராஜாவின் எல்லா பாடல்களையும் நாம் நல்லிசை என்று சொல்லி விட முடியுமா? அவர் எத்தனை தரமில்லாத பாடல்களை கொடுத்திருக்கிறார் என்று தெரியுமா?பட்டியல் போட்டால் அவரின் நல்லிசையை அது சமன் செய்து விடும் அபாயம் இருக்கிறது. மேலும் யார் அந்த நிலவு என்ற பாடலைக் கேட்காதவர்களை நான் இசை ரசிகர்களாகவே ஏற்றுக்கொள்வது கிடையாது. எனவே எனது பார்வையில் பல ராஜா பதிவர்கள் இசையைப் பற்றி பேசக்கூட தகுதி இல்லாதவர்கள் என்பது என் எண்ணம்.

    நீங்கள் சொல்வது :" அக்கரைச் சீமை, டார்லிங் டார்லிங் போன்ற பாடல்களை நகல், பிரதி என எழுதி மொழுகிவிட்டு நகரமுடியாது. அவருக்குப் பிடித்த மேற்கத்திய இசைகளை உள்வாங்கி அந்த இசையமைப்பாளர்களை ராஜா பாராட்டும் விதமாக எடுத்துக் கொள்ள வேண்டும்."
    இளையராஜா மேற்கத்திய செவ்வியல் தாண்டி காண்டம்ப்ரரி இசையை கேட்டு ரசிப்பவர் கிடையாது.அவருக்கு சைமன் டூப்ப்ரி யார் என்று தெரிய வாய்ப்பில்லை. பாடலை மட்டும் கேட்டு விட்டு அதை நகல் எடுத்திருக்கலாம் என்று எண்ணுகிறேன். இதைப் பற்றி நிறைய என் பதிவுகளில் எழுத இருக்கிறேன். மேலும் இப்படிப்பட்ட சமாதானங்களை நாம் ஏன் எ ஆர் ரஹ்மானுக்கும் ஹரிஸ் ஜெயராஜ்ஜுக்கும் சொல்லக்கூடாது?
    நான் இந்தப் பதிவில் சொல்லி இருப்பது: " மிகை இல்லாமல் சொல்லவேண்டுமென்றால் இளையராஜா தன் ஆரம்பகால படங்களில்(முதல் ஆறு வருடங்கள்) மிகச் சிறப்பான இசையை அளித்துவிட்டார் என்பதே உண்மை. படங்களின் வெற்றி தோல்வி பற்றி வணிக ரீதியிலான சிந்தனை கொள்ளாமல் அப்போது தான் இசை அமைத்த எல்லா படங்களிலும் இளையராஜா அருமையான பாடல்களையும், நவீன இசை அனுபவத்தையும் வஞ்சகமில்லாமல் கொடுத்திருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது. இளையராஜா நம் தமிழிசைக்கு கிடைத்த மிகச் சிறப்பான இசைஞர் என்பது நிரூபணமான உண்மை. மேலும் இளையராஜாவை ஒதுக்கி விட்டு தமிழ்த் திரையிசைப் பற்றி பேசுவது இயலாத காரியம்."
    நான் இளையராஜாவை மட்டம் தட்டுகிறேன் என்று சிலர் கூப்பாடு போடுவது முரணாக இருக்கிறது.

    ReplyDelete
  16. நேற்று அகஸ்மாத்தாகத்தான் டிவியில் பார்த்தேன். கலங்கரை விளக்கம் படத்தின் ஒரு பாடல் 'பல்லவன் பல்லவி பாடட்டுமே' ஓடிக்கொண்டிருந்தது. அந்தப் பாடலும் அதற்கான இசையும் தொடர்ந்துவரும் பிஜிஎம்மும் டிஎம்எஸ்ஸின் குரலும் என்ன ஒரு கொண்டாட்டமான குதூகலமான சூழலைக் கொண்டுவருகிறது என்று பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. அதுவும் டிஎம்எஸ் அந்தப் பாடலில் கொண்டுவரவேண்டிய அந்தக் குதூகல மாயச் சூழலைத் தமது அற்புதக் குரல் மூலமும் அனாயாசமாய்ப் பாடும் உத்தி மூலமும் கொண்டுவருகிறார்.
    அந்த Presentationஐக் கொண்டுவருவதற்கு எம்எஸ்வி என்ன பாடுபட்டிருக்க வேண்டும்? அந்தக் குரல் சில இடங்களில் மெட்டுடன் சேர்ந்து அப்படியே உருள்கிறது-குதூகலம் பிரவாகமாய்ப் பொங்கி வருகிறது.
    அந்தப் பாடல் முடியும்போது ஆரிரோ ம்க்கும் ஹ்க்கும் என்ற ஒலிகளும் சரி; அதனை டிஎம்எஸ் பாடும் பாணியும் சரி எந்த இசையமைப்பாளரும், ஆமாம் தமிழின் எந்த இசையமைப்பாளரும் செய்யமுடியாத ஒரு சாதனை என்றுதான் சொல்லவேண்டும். அதுவும் இனிமையோ கேட்கவே வேண்டாம்.அப்படி ஒரு பாடலை அதற்குப்பின் இதுவரை அத்தனைக் குதூகலமாய் யாரும் போட்டதில்லை. டிஎம்எஸ்ஸுக்கு இணையாகப் பாட ஆட்களும் இங்கே இல்லை.
    (கலங்கரை விளக்கம் இருவரும் சேர்ந்திருந்தபோது இசையமைத்த பாடல்கள்தாம். எம்எஸ்வி பெயரில் வந்தது என்பதாக ஒரு செய்தியும் இருக்கிறது. அது உண்மையாகவே இருந்தாலும் நாம் பேசும் விவரங்களுக்கு இது ஒன்றும் பாதகமாக இருக்கப்போவதில்லை)

    ReplyDelete
    Replies
    1. கலங்கரை விளக்கம் இருவரும் சேர்ந்திருந்தபோது இசையமைத்த பாடல்கள்தாம். எம்எஸ்வி பெயரில் வந்தது என்பதாக ஒரு செய்தியும் இருக்கிறது.

      அமுதவன் அவர்களே, அந்தப் படத்தில் வரும் காற்று வாங்கப் போனேன் பாடலைக் கேட்கும் போதே இது உண்மைதான் என்று தெரிந்து விடுகிறது. நீங்கள் சொல்லி இருக்கும் குதூகலம் உற்சாகம் எல்லாமே எம் எஸ் வி-டி எம் எஸ் கூட்டணியில் நிறையவே இருக்கிறது.

      Delete
  17. நண்பர் காரிகனுக்கு, ஒரு தொடர் கதையை போல இந்தப் பதிவுகளை எழுதி வருகிறீர்கள். அருமையான் அலசல். இளையராஜாவைப் பற்றி பலர் எழுதி இருந்தாலும் உங்களின் எழுத்து வேறுபட்டு இருக்கிறது.வாழ்த்துக்கள். மற்றவர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் இதுவரை என் கண்ணில் படவில்லை.நெஞ்சத்தை கிள்ளாதே, ஜானி படங்களை விட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.ராஜா அடித்து துவம்சம் செய்த படங்கள் அவை.மேலும் ராஜாவின் interlude இசையைப் பற்றி குறிப்பிடவில்லையே.
    ஜகன்

    ReplyDelete
  18. திருவாளர் ஜகன்,
    எனது வலைப்பக்கம் முதல் முறையாக வந்திருப்பதாக அறிகிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இளையராஜா வின் அடுத்த பரிமாணத்தில் இன்னும் பல படங்களைப் பற்றிப் பார்க்கலாம் என்பதால் 79ஆம் வருடத்துடன் நிறுத்தி இருக்கிறேன்.நீங்கள் குறிப்பிட்டுள்ள படங்கள் 80ஆம் ஆண்டு வந்தவை. மேலும் இளையராஜாவின் இண்டர்லூட் பற்றி எழுதாமல் இளையராஜா பதிவுகள் நிறைவு பெறுமா?கண்டிப்பாக உண்டு.

    ReplyDelete
  19. காரிகன்,

    மிக அருமையாக ,பல படங்களை அவதானித்து தெளிவாக கட்டுரை வடித்துள்ளீர்கள், இதற்கு எவ்வளவு உழைப்பு தேவைப்படும் என்பதை உணர முடிகிறது,பாராட்டுக்கள்.

    நீங்கள் குறிப்பிட்ட பல படங்களை நான் பார்த்ததே இல்லை,ஆனால் ஒரு சில படங்களீன் பாடல்கள் மட்டும் ஒலி வடிவில் கேட்டுள்லேன், அன்பே சங்கீதாவில் சின்னப்புறா ஒன்று செல்லக்கனாவில் பாடலுக்கு தேங்காய் சீனிவாசன் நடித்திருப்பதை பார்த்து "ஷாக்காகியும் இருக்கிறேன் :-))

    # சுராங்கனி பாடல் பாப்பிசை வகை என்றாலும் "பைலா" சாங்க் தானே, சிலோன் மனொகர் பாடிய தனிப்பாடல் தான் ஆனால் படத்தில் மலேசியா வாசு தான் பாடி இருக்கிறார், இசைக்கச்சேரி நடப்பது போல வரும் காட்சியில் மலேசியா வாசுவும் நடித்திருப்பார்.

    # ராஜா தான் இன்டர்லூட் கண்டுப்பிடிச்சார் என்பது போல அவர் தன் "போஸ்ட்லூட்"(பாடல் முடியும் போது தனி இசைக்குறிப்பை வாசித்தாராம், மேகம் கொட்டட்டும் பாடல்,எனக்குள் ஒருவன் படம்) இசையும் போட்டார்னு சிலர் சொல்லக்கேட்டுள்ளேன், இன்னும் என்னன்ன சொல்வாங்களோ :-))

    பிரியாவில் ஸ்டீரியோ ரெக்கார்டிங் போல,புன்னகை மன்னன் படத்தில் தான் முதல் டிஜிட்டல் சிந்தசைசர் இசை ராஜா பயன்ப்படுத்தினார்,ஆனால் அதை செய்தது ரெஹ்மான் என தகவல்.

    சிறப்பான பணியை செய்கிறீர்கள்,தொடர்ந்து எழுதுங்கள்,ஆயிரம் கரங்கள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை, ராஜா ரசிக சிகாமணீகள் எதிர்த்தாலும் உங்கள் கட்டுரைகளுக்கு தனி இடம் உண்டு.
    ------------

    //அது ஒரு கட்டுரைக்கூட அல்ல; கேள்வி-பதில்தான். அதற்கே 'சம்பந்தப்பட்டவர்' ரியாக்ட் செய்த விதம் இன்னமும் நம்ப முடியாததாகவே இருந்தது. அதனை முழுமையாகச் சொல்ல நினைத்திருப்பதால் இப்போதைக்கு இது போதும். சமயம் வரும்போது முதலில் பத்திரிகையில் அல்லது இணையத்தில் எழுதுகிறேன்.//

    ஆஹா அமுதவன் சார் வேற ஒரு குண்டு தயார் செய்கிறாரே , இது வரை அதிகம் ஊடகங்களில் வெளிவராத தகவல்களுக்கு சொந்தக்காரர் அமுதவன் அவர்கள்,இப்படி ஆர்வத்தை தூண்டி விட்டு வேடிக்கைபார்க்கிறாரே , இதெல்லாம் ரொம்ப அநியாயம் சொல்லிட்டேன்,சீக்கிரமா எழுதிடுங்க!

    ReplyDelete
  20. வவ்வால்,
    பாராட்டுக்கு நன்றி. சிரமான பணிதான். படங்கள் வெளிவந்த வருடங்களில் சில சந்தேகங்கள் வருவதுண்டு. முக்கால்வாசி தெரிந்தவைகள், கேள்விப்பட்டவைகள்,அறிந்தவைகள் என்பதால் சற்று வேகமாக பதிவை எழுத முடிகிறது. மேலும் இசை எனது அபிமான விஷயமாக இருப்பதால் சிரமம் தெரியவில்லை.
    ஆரம்பகால இளையராஜா படங்களில் பல வெகுவாக பிரபலமாகவில்லை.இருந்தும் அதன் இசை அபாரமாக இருக்கும். சின்னப்புறா ஒன்று பாடலுக்கு தேங்காய் சீனிவாசன் சிவாஜி பாணியில் வாயசைத்து அந்தப் பாடலின் மெலடியை காமடி ஆக்கி இருப்பார். சினிமாவில் இது போன்ற அபத்தங்கள் அதிகம் உண்டு.(உன்னை அறிந்தால் என்ற அருமையான தத்துவப் பாடல் எம் ஜி ஆர் சாவித்திரியை கிண்டல் செய்து பாடும் ஈவ் டீசிங் பாடல் என்பது ஒரு கிளாசிக் அபத்தம்)
    சுராங்கனி சிங்கள பைலா வகையைச் சேர்ந்த ஒப்பன் சோர்ஸ் சாங். அது இந்திய மொழிகளில் பலவற்றில் உருமாறி இருக்கிறது. இதில்தான் சிலோன் மனோகர் பிரபலம் ஆனார்.(அவருடைய குருவிக்கூடு தலைமுடியும் அவர் பிரபலமடைய மற்றொரு "தலை"யான காரணம்.)
    ராஜாதான் இண்டர்லூட்,பிரிலூட்,போஸ்ட்லூட் எல்லாவற்றையும் கண்டுபிடித்தார், பின்னணி இசையை உண்டாக்கினார் போன்ற சகலவிதமான கோமாளிக்கூச்சல்களை நிறையவே கேட்டாயிற்று.எனக்குள் ஒருவன் படத்தில் அந்தக் காட்சிக்கு அவசியப்பட்ட இசை அது. அதை சிறப்பாகவே செய்திருந்தார். சொல்லப்போனால் கர்ஸ் என்ற ஹிந்திப் படத்தின் தமிழ் பிரதி எனக்குள் ஒருவன்.(கர்ஸ் கூட ரீஇன்கார்னெஷன் ஆப் பீட்டர் ப்ரவுட் என்ற படத்தின் காப்பி.) இதில்தான் ஓம் ஷாந்தி ஓம் என்ற மிகப் பிரபலமான பாடல் உள்ளது. இளையராஜா அந்த பாணியைத்தான் தமிழில் செய்தார்.
    பிரியா படத்தின் வெற்றிக்கு இன்னொரு காரணம் அதன் ஸ்டீரியோ தரம். புன்னகை மன்னன் டிஜிடல் இசை அரைவேக்காட்டுதனமானது.அது தமிழிசையும் இல்லாமல் மேற்கத்திய இசையிலும் ஒட்டாமல் இரண்டுக்கும் இடையில் சிக்கிக்கொண்டது..(ரகுமான் பெயரைச் சொல்லி ராஜா ரசிக சிகாமணிகள் தப்பித்துக்கொள்ளலாம்)
    இன்னும் நிறையவே இருக்கிறது. என் பதிவுகளை தொடர்ந்து படித்து வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து கருத்து சொல்லுங்கள்.

    "ஆஹா அமுதவன் சார் வேற ஒரு குண்டு தயார் செய்கிறாரே , இது வரை அதிகம் ஊடகங்களில் வெளிவராத தகவல்களுக்கு சொந்தக்காரர் அமுதவன் அவர்கள்"
    அமுதவன் அவர்களிடம் இது போன்ற பல சஸ்பென்ஸ் தகவல்கள் அதிகம் உண்டு. கூடிய விரைவில் எழுதுவார் என்று நம்புவோம்.

    ReplyDelete
  21. காரிகன்

    வணக்கம் .தங்கள் கட்டுரையை வாசித்தேன்.இளையராஜாவின் ஆரம்ப காலப் பாடல்களை வரிசைப்படுத்தியுள்ளீர்கள்.அவை இன்று கேட்டாலும் இனிக்கின்ற பாடல்களே.
    எம்.எஸ்.வீ பற்றிய கருத்தும் சரியானதே.ஒவ்வொரு கலைஞர்களுக்கும் கால எல்லை உண்டு அல்லாவா ..!
    அவற்றை அழகாக சொல்லியிருக்கின்றீர்கள்.

    1970 களில் எம்.எஸ்.வீ இசையமைத்த பல பாடல்கள் சிறப்பாகத்தான் இருந்தன என்பது அவற்றை இப்போது கேட்கும் போது தெரிகிறது.அவை பெரும்பாலும் நமது மரபிசை சார்ந்த ராகங்களின் அழகிய வார்ப்பில் மலர்ந்தத்தால் இன்றும் நம்மால் ரசிக்கப்படுகின்றன.

    அதே பாதையில் வந்தவர் தான் இளையராஜா. இருந்தாலும் நீங்கள் .." நவீன இசை அனுபவத்தையும் வஞ்சகமில்லாமல் கொடுத்திருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது." - காரிகன் என ஒரு சந்தேக கண்னுடன் பார்க்கிறீர்கள்.

    நவீன இசையை அந்த மரபின் தொடர்ச்சியுடன் இணைத்ததை தான் இளையராஜாவின் சாதனை என்பேன்.அது எல்லோருக்கும் வாய்க்காததாகும்.அதை எல்லா இசைக் கலைஞர்களும் ஏற்ற்றுக் கொண்டும் இருக்கின்றார்கள்.இவை பற்றி பலரும் வியந்து பேசியிருப்பதும் உங்களுக்த் தெரியும்.

    பழைய இசையமைப்பளர்கள் பெரும் பாலும் பாடல்களுக்கு மெட்டுகளை மட்டும் அமைத்து விட்டு மற்றவற்றை உதவியாளர்களிடம் விட்டு விடுவதாக அறிந்தேன்.சமீபத்தில் எஸ்.பி.பி ஒரு பேட்டியிலும் இதை பற்றி பேசியிருக்கின்றார்.அப்படிப்பட்ட ஒரு உதவியாளராக இருந்தவர் தான் ஏ.ஆர்.ரகுமானின் தந்தை ஆர்.கே.சேகர்.அவர் சிறந்த இசையமைப்பாளர் ஆக இருந்தும் வெளிவர முடியவில்லை.

    இளையராஜா பற்றி நன்றாக எழுதியிருக்கின்றீர்கள்.அந்த பாடலகளிலும் தோய்ந்திருப்பது தெரிகிறது. முன்னைய பதிவு இது போல அமையவில்லை என்பதன் காரணம் இதுவே.
    சொல்ல வேண்டியதை நடுநிலையில் சொல்லியிருக்கின்றீர்கள்.
    அதைப் போல 80 ,90 களிலும் வந்த பாடல்களைக் கேட்டால் , நீங்கள் மேல் சொன்ன பாடல்களை போன்றே மிக அருமையான ராஜாவின் பாடல்கள் இருப்பதை காணலாம்.

    உங்கள் ஆக்கத்தை இசையில் ஆர்வமிக்க நண்பர் ஒருவர் "காரிகனா இப்படி எழுதியுள்ளார் " என்றார்.
    முன்னர் உங்கள் பின்னூட்டங்களைப் பார்த்த நான் யாரோ ஒருவர் லண்டலிலிருந்து புனைபெயரில் எழுதுவதாகவே நினைத்தேன்.அந்த நண்பர் தான் உங்களைப் பற்றிய விபரங்களை எனக்கு சொன்னார்.

    இளையராஜா அறுபடாத நமது மரபின் தொடர்ச்சி.அவரது இசையில் புதுமை என்றென்றும் இருக்கும்.அதை கேட்கக் கேட்க ஆச்சரியமாகவும் இருக்கும்.
    நிறையப் பாடல்களை கேளுங்கள்.
    தனிப்பட்ட ரசனைகளை வைத்துக் கொண்டு விவாதிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.அதில் அர்த்தமுமில்லை.முடிவும் வராது.

    நேரம் கிடைக்காததால் இணைய முடிவதில்லை.

    இளையராஜா பற்றிய நல்ல பதிவு.தொடருங்கள்.நல்ல ஆக்கங்களை எதிர்பார்க்கின்றேன்.
    வாழ்த்துக்கள்.


    அன்புடன்
    T .சௌந்தர்

    ReplyDelete
  22. திரு சவுந்தர் அவர்களுக்கு,
    உங்கள் வருகைக்கும் தரமான கருத்துக்கும் மிக்க நன்றி.உங்கள் நண்பர் ஒருவர் காரிகனா இப்படி எழுதியிருக்கிறார் என்று ஆச்சர்யப்பட்டதாக சொல்லியிருக்கிறீர்கள். இதே போன்று பலர் நினைக்கக்கூடும் என்பது எனக்குத் தெரிந்ததே. ஆனால் இனிமையான இசை எந்த இடத்திலும் எந்த காலத்திலும் உருவாகக்கூடியது என்பதை நான் அறிவேன். அதனால் நல்லிசையை அடையாளம் காணக்கூடிய மனப்பக்குவத்தை வளர்த்துக்கொண்டேன். என்னை என் நண்பர்கள் ஒரு மியுசிக் ஸ்நாப் (music snob) என்று குற்றம் சொல்வதுண்டு.
    70களில் எம் எஸ் வி அமைத்த பல பாடல்கள் நீங்கள் சொன்னபடி நமது மரபில் வார்க்கப்பட்ட மிக அருமையான பாடல்கள் என்பதை தாமதமாகவே உணர்ந்தேன். இளையராஜா இந்த மரபின் இறுதி இழையாக இருப்பதை நான் மறுக்கப்போவதில்லை.அவரின் துவக்கக்கால இசையில் இருக்கும் இனிமைக்காகவே அவர் மீது எனக்கு மதிப்பு உண்டு. இதில் எனக்கு சந்தேகமே இல்லை. சில தீவிர ரகுமான் அபிமானிகள் இளையராஜாவுக்கு ஒன்றுமே தெரியாது என்ற ரீதியில் பேசும்போது அவர்களுடன் வாக்குவாதமும் செய்திருக்கிறேன். 70 இல் ஆரம்பித்து 80களின் மத்தியில் வரை இளையராஜா மிக சிறப்பாகவே பாடல்கள் கொடுத்தார்.
    "இளையராஜா பற்றி நன்றாக எழுதியிருக்கின்றீர்கள்.அந்த பாடலகளிலும் தோய்ந்திருப்பது தெரிகிறது. முன்னைய பதிவு இது போல அமையவில்லை என்பதன் காரணம் இதுவே.
    சொல்ல வேண்டியதை நடுநிலையில் சொல்லியிருக்கின்றீர்கள்."

    நன்றாக கணித்துள்ளீர்கள். இதே நடுநிலையோடுதான் அவரை நான் விமர்சிக்கவும் செய்கிறேன். உங்களின் பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  23. T .சௌந்தர்
    \\பழைய இசையமைப்பளர்கள் பெரும் பாலும் பாடல்களுக்கு மெட்டுகளை மட்டும் அமைத்து விட்டு மற்றவற்றை உதவியாளர்களிடம் விட்டு விடுவதாக அறிந்தேன்.\\

    இம்மாதிரியான நிலைப்பாடுகளை சில பெரிய இசையமைப்பாளர்கள் எடுத்ததாகத்தான் தகவல்கள் சொல்கின்றன. அதுதான் யதார்த்தமும் கூட. பலபேர் இப்படிச் சொல்வதன்மூலம் சொல்ல வருவது என்னவென்றால் 'இளையராஜா அப்படியல்ல என்று முடிவு கட்டி, அதனால் இந்த அவனியின் மீதில் இ. ராஜாவுக்கு இணையாக.........' என்று இவர்கள் பாட்டுக்கு எங்கோ போய்விடுகிறார்கள்.

    அப்படியெல்லாம் இல்லை. இளையராஜாவும் சில 'விஷயங்களை'- 'மற்றவர்களிடம்' விட்டவர்தான்.

    வருடத்தில் நாற்பது படங்கள், ஐம்பது படங்கள், அறுபது படங்கள் என்றெல்லாம் ஒப்புக்கொண்டு இசையமைத்தவர் இளையராஜா. ஒரு மனிதர் 'இந்த வருடங்களில் எல்லாம்' எப்படிச் செயல்பட்டிருக்க முடியும் என்பதை சாதாரணமாக யோசித்துப் பார்த்தாலே நடைமுறை எப்படி இருந்திருக்கமுடியும் என்பதை யாராலுமே சுலபமாக ஊகிக்க முடியும்.
    பிரபல இசையமைப்பாளர் திரு கோவர்தனம் இளையராஜாவின் இசை அமைப்புக்கு 'கண்டக்டராக' இருந்தவர். (இப்போதும் அவர்தான் 'கண்டக்ட்' செய்கிறாரா என்பது தெரியவில்லை) பிரபல இசையமைப்பாளர் சுதர்சனத்தின் சகோதரர் இவர். பட்டணத்தில் பூதம் படத்தின் இசையமைப்பாளர். காலச்சூழல் இளையராஜாவிடம் பணியாற்றும் நிலைமையை இவருக்கு ஏற்படுத்திற்று. ஆக இளையராஜாவின் இசையை கோவர்தன் வெறும் 'கண்டக்ட் மட்டுமே' செய்தார் என்று நம்புவது என்னைப்போன்றவர்களுக்குக் கொஞ்சம் கஷ்டமான விஷயமே.
    எல்லா இசையமைப்பாளர்களும் எப்படிச் செயல்பட்டார்களோ அப்படிச் செயல்பட்டவர்தான் இளையராஜாவும் என்ற நோக்கில் பார்வையைச் செலுத்துவதுதான் சரியான கணிப்புகளைக் கொண்டுவர ஏதுவாக இருக்கும்.

    ReplyDelete
  24. திரு அமுதவன்

    வணக்கம் .
    எல்லா இசையமைப்பாளர்களும் உதவியாளர்களை வைத்திருப்பது உண்மை தான்.கோவர்த்தனம் என்ற இசை மேதை தான் இசையமைத்த ஒரு சில படங்களைத் தவிர ,மற்ற வேளைகளில் ஏனைய இசையமைப்பாளர்ளுக்கு உதவியாளராகவே தன காலத்தை கழித்தார்.

    மெல்லிசை மன்னர்கள் இசையமைத்த புதிய பறவை படத்தில் கப்பலில் வரும் ஆங்கிலப்பாடலை இசையமைத்தவர் ஹென்றி டானியல் என்பவர்.

    நீர்க்குமிழி படத்தில் இசையமைத்தவர் வீ.குமார் , ஆனால் அந்த படத்தில் வரும் "ஆடி அடங்கும் வாழ்க்கையடா " பாடலை இசையமைத்தவர் உதவியாளர் ஆர்.கே.சேகர் [ரகுமானின் தந்தை ].இதை போல பல இசையமைப்பாளர்ளுக்கு உதவியாளர்களுக்கு அவர் என்னென்ன பாடல்களை இசையமைத்தாரோ...!!

    குலேபகாவலி [ இசை : மெல்லிசைமன்னர்கள் ] ஆனால் அந்த படத்தில் வந்த " மயக்கும் மாலை பொழுதே நீ போ போ " பாடலை இசையமைத்தவர் கே.வீ .மகாதேவன் [ கூண்டுக்கிளிக்காக ]ஒரே தயாரிப்பாளர் [ ராமண்ணா ] என்பதால் மற்ற படத்திற்கு பயன் பட்டது.
    அதே போலவே லிங்கப்பா போட்ட " குங்குமப் பூவே "மெட்டை சந்திரபாபு [ ஏதோ தகராறில் கோவித்து கொண்டு ] எஸ்.எம்.சுப்பையா நாய்டுவுக்கு சொல்ல அவரும் "வைபவம் " தெரிந்தோ ,தெரியாமலோ பயன்படுத்தி விட்டார்."அவன் தான் சொல்கிறான் என்றால் நீயுமா அண்ணே " என்று தான் எஸ் எம் எஸ் இடம் கேட்டதாக லிங்கப்பா பெட்டி ஒன்றில் கூறினார்.
    அபிமன்யு படத்தில் [ இசை எஸ்.எம்.சுப்பையா நாய்டு ] " புது வசந்தமாமே வாழ்வில் " என்ற பாடலை இசையமைத்தவர் Tea boy ஆக இருந்த பிற்கால மெல்லிசைமன்னர் விஸ்வநாதன்.
    பொண்ணுக்கு தங்க மனசு [ இசை:ஜி.கே. வெங்கடேஷ் ] படத்தில் வரும் நாடுப்புற பாடலை இசையமைத்தவர் அவரின் உதவியாளர் இளையராஜா.இதை சொன்னவர் கவிஞர் முத்துலிங்கம்.அவர் எழுதிய பாடல் அது.

    அதே போலவே உத்தமபுத்திரன் படத்தில் யாரடி நீ மோகினி பாடலுக்கு rock and roll பகுதிக்கு இசை வழங்கியவர் ஹென்றி டானியல் என்பது நான் அறிந்த செய்தி தான்.இது போல எத்தனையோ சொல்லலாம்.இதை சொல்வதால் ஜி.ராமநாதன், மெல்லிசைமன்னர்கள் ,கே.வீ.மஹாதேவன் போன்ற வர்கள் இசைமேதைகள் அல்ல என்றாகிவிடப் போவதில்லை.

    அன்றைய காலத்தில் நிலைமைகள் அப்படி இருந்திருக்கலாம்.அது போகட்டும்.

    ராஜாவுக்கு மட்டுமல்ல தேவாவுக்கும் கண்டக்டர் பணி செய்திருக்கின்றார்.இபோது அவர் இளைய ராஜாவுக்கு பணியாற்றுவதில்லை.அதனை அவர் முழு மனதுடன் சந்தோசமாகவே செய்தேன் என்று அவர் பேட்டியில் சொல்லியுள்ளார்.நீங்கள் வருத்தப்படுவது போல் அல்ல.

    உதவியாளர்கள் என்பதும் கண்டக்டர் என்பதும் வெவேறு பணிகள்.

    இளையராஜாவை பொறுத்தவரை மெட்டுப்போடுவது , பின்னணி இசை போன்ற எல்லாவற்றையும் நோட்ஸ் ஆக எழுதி விடுவார்.வாத்தியக்கலைஞர்கள் தங்களுக்கு தேவையான பகுதிகளை வாங்கி இசைப்பார்கள்.
    இந்த விதமான நோட்ஸ் எழுதுவது இந்தியாவிலேயே அவர் ஒருவர் தான் என்பதை அவரது ரசிகர்கள் மட்டும் சொல்லவில்லை.சமீபத்தில் நடந்த விழாவில் ஜேசுதாஸ் கூட சொல்லி பெருமைப்பட்டார்.அவர்மட்டுமலல பலரும் கண்டு ஆச்சரியப்பட்ட விடயம் தான்.
    இளையராஜா பற்றி 1990களில் frontline என்ற இதழில் பன்னீர்செல்வம் என்பவர் ஒலிப்பதிவில் தான் நேரில் பார்த்த விசயங்களை [ அவரது பன்முக ஆற்றலை ]எழுதியது என் ஞாபகத்திற்கு வருகிறது.அவர் மட்டுமல்ல பல நூறு பேர் பேசிய விசயமும் கூட.

    நோட்ஸ எழுதுவதை நாம் போகிற போக்கில தட்டி கழிக்க முடியாது.அதற்க்கு நீண்ட பயிற்ச்சியும் ,ஆற்றலும் வேண்டும்.அது அவருக்கு வாய்த்திருக்கிறது.

    உண்மைகள் இப்படி இருக்க, நாம் ஏன் அவற்றை வலிந்து வேறு அர்த்தம்
    கொள்ள வேண்டும் என்பது எனக்கு புரியவில்லை.

    நான் சொல்வது உண்மை இல்லை என்றால் வேறு எந்த இசையமைப்பாளர் எந்த ஒரு வாத்திய கருவி இல்லாமலும் நோட்ஸ் ஆக எழுதுகிறார் என நீங்கள் கூறினால் , தங்கள் கருத்தை நான் ஏற்பது தான் நியாயம்.
    தேவை இல்லாத அர்த்தமற்ற விவாதங்களில் கலந்து கொள்ள விரும்புவதில்லை.
    ராகங்கள் பற்றி ஒரு பதிவை " இனிஒரு " இணையத்தில் எழுதுகிறேன்.நேரம் கிடைத்தால் வாருங்கள்.

    T.சௌந்தர்

    ReplyDelete

  25. T.சௌந்தர்............

    வணக்கம் சௌந்தர். ஏற்கெனவே உங்களுடைய சில பதிவுகளைப் படித்திருக்கிறேன். நல்ல முயற்சியெடுத்து பல விஷயங்களைத் திரட்டி எழுதுகிறீர்கள். அவற்றில் இருக்கும் உங்கள் கருத்துக்கள் அவ்வளவையும் ஒப்புக்கொள்கிறோமா இல்லையா என்பது வேறுவிஷயம். (இது எல்லாருக்குமே பொருந்தும். அத்தனைப்பேரும் எழுதும் அத்தனைக் கருத்துக்களையும் எல்லாருமே ஒப்புக்கொள்வது முடிகிற காரியமா என்ன?) நல்லமுறையிலும் சிறப்பான வகையிலும் இசை பற்றி எழுதும் சிலரில் நீங்களும் ஒருவர் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. அந்த வகையில்தான் நீங்கள் எழுதியதையும் பார்க்கிறேன்.
    மேலே நீங்கள் சொல்லியுள்ள பாடல்களின் டியூன்கள் வேறு யார் யாரால் போடப்பட்டன என்கின்ற செய்திகளெல்லாம் உண்மைதான். பலரும் பல்வேறு சம்பவங்களில் சொல்லியிருக்கும் விஷயங்களே அவை.
    நீங்கள் குறிப்பிட்டிருக்கும் 'உதவியாளர்கள்' பற்றியும் 'கண்டக்டர்' பற்றியும் நானும் ஓரளவு அறிவேன். உதவியாளர்களின் பணி என்ன என்பதும், கண்டக்டர்களின் பணி என்ன என்பதும் எனக்கும் ஓரளவு தெரியும். அதே சமயம் கண்டக்டர் என்பவர் பாடல் ஒலிப்பதிவு சமயத்தில் வெறும் வாத்தியக்காரர்களை மட்டும் சரிபார்த்துக்கொள்ளும் மேஸ்திரி வேலை மட்டுமே செய்பவர் என்றும் நான் நினைப்பதற்கு வழியில்லை. அதுவும் அனுபவம் வாய்ந்த கற்பனா சக்தியுள்ள சிலர் அந்தப் பணியில் ஈடுபடும்பொழுதுகூட அவர்களுக்கும் சம்பந்தப்பட்ட இசையமைப்பாளர்களுக்கும் எந்தவிதமான இன்டராக்ஷனும் கிடையாது. அவர்கள் வேலை வெறும் வாத்தியக்கோஷ்டியை, நீட்டப்பட்ட தாள்களில் எழுதியுள்ள நோட்ஸ்கள்படி வாசிக்கிறார்களா என்பதை சரிபார்ப்பது மட்டுமே என்று தீர்மானித்துக்கொள்ளவேண்டும் என்று நீங்கள் சொல்ல வருகிறீர்கள்.

    பல விஷயங்கள் இதற்கு அப்பாற்பட்டும் இருக்கிறது சௌந்தர்.

    இளையராஜாவின் ஒலிப்பதிவை நேரில் பார்த்த பன்னீர் செல்வம் எழுதியிருக்கும் கட்டுரைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். பன்னீர் செல்வம் மட்டுமல்ல,

    இளையராஜாவின் ஒலிப்பதிவுகளை நானும் நேரில் பார்த்திருக்கிறேன்.

    இவர் மெட்டுப்போட, மற்றவர்கள் பாடல் எழுதும் நேரத்திலும் உடனிருந்திருக்கிறேன்.

    அதனால் மொத்த முழு மௌடீகமாக எதுவும் தெரியாமல் பேசிக்கொண்டிருப்பதாகவும், எழுதிக்கொண்டிருப்பதாகவும் என்னைப்பற்றி நீங்கள் நினைக்கத்தேவையில்லை.

    \\நோட்ஸ எழுதுவதை நாம் போகிற போக்கில தட்டி கழிக்க முடியாது.அதற்க்கு நீண்ட பயிற்ச்சியும் ,ஆற்றலும் வேண்டும்.அது அவருக்கு வாய்த்திருக்கிறது.

    உண்மைகள் இப்படி இருக்க, நாம் ஏன் அவற்றை வலிந்து வேறு அர்த்தம்
    கொள்ள வேண்டும் என்பது எனக்கு புரியவில்லை.\\

    இந்த 'நோட்ஸ்' எழுதுவது பற்றி கொஞ்சம் நிறையவே பேச வேண்டும். அதுபற்றிய விளக்கங்களை இங்கே எழுதினால் மிகவும் நீண்டுவிடும் என்பதனால் என்னுடைய தளத்தில் இதுபற்றிய தனிப்பதிவு ஒன்றை இன்னும் இரண்டொரு நாட்களில் எழுதுகிறேன் என்பதை மட்டும் இங்கே சொல்லிக்கொள்கிறேன்.

    \\தேவை இல்லாத அர்த்தமற்ற விவாதங்களில் கலந்து கொள்ள விரும்புவதில்லை.\\

    என்ன செய்வது? இங்கே தார்மீக நியாயங்களும், அறங்களும், கொள்கை கோட்பாடுகளும் சிலருடைய விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே நிர்ணயிக்கப்பட்டு கூறுகட்டி வைக்கப்பட்டுள்ளன.

    இளையராஜாவையே எடுத்துக்கொள்ளுங்களேன். அவரைப்போல உலகிலேயே இசையமைப்பாளர், ராகதேவன், இசைமேதை, இசைக்கடவுள்..... யாருமே இல்லை என்பதுபோல் நீங்கள் ஆயிரக்கணக்கான பக்கங்களும் பதிவுகளும் எழுதினாலும் 'இப்படியெல்லாம் எழுதுகிறாயே உனக்கு இசையைப்பற்றித் தெரியுமா? ராகங்கள் பற்றி அறிவாயா?' என்பதுபோன்ற கேள்விகளையெல்லாம் எந்த மகானுபாவர்களும் கேட்பதில்லை.
    ஆனால் விமர்சித்து ஒரேயொரு கட்டுரை எழுதுங்கள்........'உனக்கு இசையைப்பற்றி என்ன தெரியும்? இதெல்லாம் இசை ஆய்வாளர்கள் சொல்ல வேண்டிய கருத்துக்கள். இசை நிபுணர்கள் சொல்லவேண்டிய கருத்துக்கள்' என்று சம்மட்டியைத் தூக்கிக்கொண்டு வந்துவிடுகிறார்கள் இந்த இசை விற்பன்னர்கள்.
    இவர்களிடமும் வாதம் பண்ணக்கூடாது. உங்களைப்போல் இசையைப்பற்றி நிறைய தெரிந்தவர்களும் 'அர்த்தமற்ற விவாதங்களிலெல்லாம்' கலந்துகொள்ள மறுத்துவிடுகிறீர்கள்.
    ராஜாபற்றி விமர்சித்து எழுதுகிறவர்கள் பாடு கஷ்டம்தான்.

    ReplyDelete
  26. என்னுடைய முந்தைய பதிவான 'சாருநிவேதிதாவும் இளையராஜாவும்' பதிவிலெல்லாம் வந்து உங்களைக் கேள்வி மேல் கேள்விகளாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார் சுரேஷ் என்ற நண்பர். கொஞ்சம் அவருக்கு பதிலளித்துவிடுங்களேன்.

    ReplyDelete
  27. திரு காரிகன்,
    நல்ல ஆழமான கட்டுரை. இளையராஜாவைப் பற்றிய சொற்பமானவர்களே சிறிதும் அத்துமீறல் இல்லாமல் உண்மை எழுதுகிறார்கள் இணையத்தில்.நான் இசையில் பயிற்சி பெற்றவன் என்பதால் சில விஷயங்களை பேசலாம் என்று நினைக்கிறேன். பின்னூட்டத்தில் அமுதவன் மற்றும் டி சவுந்தர் என்கிற இருவர் நோட்ஸ் பற்றி சொல்லி இருப்பது குறித்து எனக்கு இருக்கும் கருத்தை பதிவு செய்கிறேன். மியுசிகல் நோட்ஸ் எழுதவதற்கு பயிற்சி அவசியம். ஒரு பாடலையோ அல்லது காட்சியையோ முழுவதும் மனதில் வைத்துகொண்டு முழு இசையையும் ஒரு காகிதத்தில் எழுதுவது சற்று சிரமானது என்றாலும்நோட்ஸ் எழுத தெரியாவிட்டால் அவர் சிறந்த இசை அமைப்பாளர் இல்லை என்று சொல்லிவிடமுடியாது.ஒரு வருட இசை பயிற்சியிலேயே ஒருவருக்கு நோட்ஸ் எழுதும் திறமை கொஞ்சமாவது கிடைத்துவிடும். மனதில் இருக்கும் இசையை staff எனப்படும் 5 வரி பாரில் clef,stem,flag,போன்ற அடிப்படையான குறியீடுகளுடன் எழுதிவிடலாம். மாற்றங்களும் செய்துகொள்ளலாம். சிலர் நினைப்பதைபோல ஒவ்வொரு இசைக் கருவிக்கும் நோட்ஸ் என்றில்லாமல் ஒரே இசைக் குறியீடை பொதுவாக எல்லா இசை கருவிகளை கொண்டும் வாசித்துவிடலாம். என்னைப் பொருத்தவரை நோட்ஸ் எழுதுவது மலையைப் புரட்டும் வேலை இல்லை என்றே சொல்வேன். மிக சிக்கலான இசைக் குறியீடுகளைக் கூட வெகு எளிதாக ஒரு கைதேர்ந்த இசை அமைப்பாளர் எழுதி விட முடியும். ராஜாவும் மேற்கத்திய இசை பாதிப்பினால்தான் இந்த பழக்கத்தை கையாண்டார்.நோட்ஸ் எழுதுவதன் மூலமே ஒரு நல்ல இசையை உருவாக முடியும் என்று அவர் கருதியிருக்கலாம். எம் எஸ் விஸ்வநாதன் நோட்ஸ் எழுதுவது கிடையாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் சொல்லும் இசை துணுக்குகளை நோட்ஸ் எழுதுவது அவரது உதவியாளர்கள். எம் எஸ் விஸ்வநாதனுக்கும் இளையராஜாவுக்கும் இந்த விஷயத்தில் வேறுபாடுகள் இருந்தாலும் இருவருமே மனதில் ஒரு முழு பாடலையும் கற்பனை செய்திருந்தது ஒரு ஒற்றுமை.

    ReplyDelete
  28. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு ஜோயல் ராபர்ட்,
    நோட்ஸ் பற்றி ஆரம்பமான சில விஷயங்களை எழுதி சில சந்தேகங்களை தீர்த்து வைத்துள்ளீர்கள். நோட்ஸ் எழுதுவது ஒரு இசை அமைப்பாளரின் சாதனை என்று இங்கே கணிக்கப்படுகிறது. நீங்கள் இல்லை என்று சொன்னாலும் யார் அதை கேட்கப்போகிறார்கள்? கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  29. எம் .எஸ். வி அவர்கள் எழுபதுகளின் கடைசியில் போட்ட பாடல்களின் மெட்டுகள் எல்லாம் மிகவும் பரிதாபத்துக்குரியவை . சிவாஜி படம் என்று நினைக்கிறேன் . " புஷ்பங்கள் பால் பழங்கள் " என்று ஆரம்பிக்கும் பாடல் . பாடியவர், எழுதியவர், இசை அமைத்தவர் எல்லோரிடத்திலும் வறண்டு போன ரசனையும் ஒரு கிழட்டுத் தனமும் இருப்பதை பார்க்கலாம் . கேட்கும்போதே பேதி வருவதை போல உணர்வு ஏற்படும் . இந்த கால கட்டத்தில் புது புனலாய் புறப்பட்டவர் இளையராஜா. ஒரு இசை ராஜாங்கத்தையே நடத்த ஆரம்பித்தார் . இசை அறிவு இல்லாதவனை கூட தலை ஆட்ட வைத்தார் . பாகவதர் பாட்டுக்களை மட்டும் கேட்டுக் கொண்டிருந்த தாத்தாக்கள் கூட மச்சானை பாத்தீங்களா என்ற பாடலை முனு முணுத்தனர் . அன்னக்கிளி உன்னை தேடுதே என்ற பாடலில் மதி மயங்கினர் .

    இது எல்லாம் ஒரு கிராமத்தில் பாலகனாய் வாழ்ந்த போது நான் கண்ட எனது சொந்த அனுபவம்தான் . இட்டுக் கட்டவில்லை . அப்படி இருக்க காரிகனும், ஜால்ரா போடும் அமுதவனும் ஏதோ பேருக்கு இளையராஜாவை புகழ்ந்து வைப்போம் என்பதை போலவும், நடு நிலை பதிவர்கள் போலவும், இளையராஜா பாடல்களில் நிறைவு இல்லாதது போலவும் , அவர் தகுதியுள்ள இசைஞர் இல்லாதது போலவும் எழுதி உள்ள பாங்கினை பார்க்கும்போது (அவர்களின் பதிவை கூர்ந்து ஆராய்ந்தால் இசை ஞானியை மட்டம் தட்டும் குதர்க்கப் புத்தி நன்றாகவே தெரியும் ) இது இசை அலசலுக்கான சரியான பதிவு என்று சொல்ல முடியாது.

    பெரிய பெரிய இசை கலைஞர்கள் தொட முடியாத ராகக் கலவைகளையும் இசை விற்பன்னர்கள் கூட பாராட்டும் இனிமை மாறா இசை மீறல்களையும் இசை அறிஞர்கள் ஏற்றுக் கொண்ட புதியதொரு ராகத்தையும் படைத்தவர் இந்த இசை ஞானி என்பது அறியாத இசை அறிவில் வயதான காரிகனும், அமுதவனும் சும்மா கூவுவதில் ஒரு பலனும் இருக்கப் போவதில்லை . இளையராஜாவை புரியாதவர் இசை என்பதே புரியாதவர்தான்!

    ReplyDelete
  30. வாருங்கள் வாருங்கள் திரு சார்லஸ்,
    இசைக்கு ஒரு புதிய விளக்கமே கொடுத்துவிட்டீர்கள்.பலே பலே.நான் இளையராஜாவை விமர்சிப்பதால் எனக்கு இசை அறிவு இல்லை. சரி. இளையராஜாவை நீங்கள் எப்படி இசைஞானம் வைத்துக்கொண்டா ரசிக்கிறீர்கள்? உங்களுக்கு இசையில் என்னவிதமான அரிச்சுவடி தெரியுமோ அது எனக்கும் தெரியும். இ. ராஜாவை ரசிப்பதற்கும், வரம்பு மீறி புகழ்வதற்கும், இசை ஞானம் தேவையில்லை, ஆனால் அவரை ஒரு வரி விமர்சிப்பதற்கு அந்த தகுதி வேண்டுமாம். என்ன லாஜிக் என்று புரியவில்லை.

    ReplyDelete
  31. ***** இளமை என்னும் பூங்காற்று (இளையராஜாவின் மிக அற்புதமான பாடல் இது என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது).-பகலில் ஒரு இரவு. ****

    உண்மைதான். ஆனால் இளமை வேகம் சூறாவளியாக, காட்டாற்று வெள்ளமாகக் கரைபுரண்டு ஓடும் காட்சிக்கு, 'பூங்காற்று' என்பது சற்றும் பொருத்தமற்ற உவமையாக அமைந்துவிட்டது!

    ReplyDelete
  32. கட்டுரையாளரின் கூற்று இன்று இளையராவிற்கும் நிகழ்ந்ததை ஏற்கவேண்டும்! Every hero becomes ... ராஜாவின் பாடலை ரஹ்மானின் " சின்ன சின்ன ஆசை" இரசிகர்களின் மாறுபட்ட இரசனையின் வெளிப்பாடாய்,இளையராஜாவின் "கலப்பிசையை" காலாவதியாக்கி புதிய தேடலுக்குப் புறப்படவைத்தது! சிம்பொனியின் தொடரிசையை பாடலின் பின்னணி முழுதும் பயன்படுத்தி தன்பாணியாக காட்டிக்கொண்ட ராஜாவின் பாணி புதியதல்ல... "கண்போன போக்கிலே கால்போகலாமா" விலேயே பின்பற்றிய ஒன்றுதான்! இந்தி இசைக்கு 1950 களிலேயே தமிழ் பாடல் மெட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது! மும்பையின் திரைத்துறை வளர்ச்சி வெகுவாக பிரதிபலித்தது! ஆரம்பக்காலத்தில் 'ஆகாஷவாணி' எங்கே திரையிசைக்கு வலுசேர்த்தது!திரையிசையை இருட்டடிப்பு செய்த்தால்தான் இலங்கை வானொலியில் திரையிசை விரும்பிக்கேட்டனர்!எம்எஸ்வி காலகட்டத்தில் தயாரிப்பாளர்,கம்பெனி,இயக்குநர் தலையீடு அதிகம்! அதற்குமேல் திலகங்களின் விருப்பத்திற்கு ஏற்பவே இசையமைக்க முடியும்! இளையராஜா எம்எஸ்வியிடம் பணியாற்றிய ஜிகே.வெங்கடேஷிடம் கற்றவர்!காலத்திற்கேற்ற மாற்றம் மக்கள் திலகம் அரசியலுக்கும் நடிகர் திலகம் அரசியல்,கதாநாயகனிலிருந்து குணசித்திர வேடம் என மாறுய காலத்தில் தமிழ் திரையுலகில் ஒரு ஆளுமை வெற்றிடம் ஏற்பட, அன்றைய
    சூழல் பாரதிராஜா,மகேந்திரன் போன்ற புதியவர்களின் வரவு,ஏற்கனவே ஒன்றாக சென்னையில் தங்கி,திரைத்துறையில் கால்பதிக்க முயன்றவர்கள் என்ற நட்பு கைகொடுத்தது!வளர வளர இசையமைப்பில் தயாரிப்பாளரோ,இயக்குநரோ,நடிகரோ யாரும் குறுக்கிட முடியாதபடி ஒரு வேலியை வைத்துக்கொண்டு பயணித்தார்! அதில்,பல பாடல்கள் பிறபாடல்களின் சாயலில் ... முழுப்பாடலோ பாடலின் தொடக்கத்திலோ எடுத்தாளாமல் இடையிலிருந்து மெட்டு ஒத்ததறியாது இசைக்கப்பட்டிருக்கும்!கமல்,ரஜினி என ஒரு புதிய உச்சம் பெற்றவர்கள் திலகங்களைப்போல ஆரம்பம் முதல் நடிப்பைத் தவிர எதிலும் தலையிடவில்லை! மேலும்,அவர்களே சிஷ்யகோடிகளாய் பாலசந்தரின் சொல்லை மீறாமல் பயணித்தவர்கள்! உச்சம் பெற்றபோதும் திரையிசையில் கமலைவிட ரஜினி சற்று ஒதுங்கியே இருந்த்தால் இளையராஜா தன் ராஜாதி ராஜ ராஜ கம்பீரம் காட்டினார்! "காலம் எந்த கதாநாயகனையும் முன்னுக்கிருத்தி பின்பொருநாள் பின்தள்ளும்" என்பதில் ராஜாவிற்கு விலக்களிக்கவில்லை! புதியவர்களின் வருகைக்கு தலையாட்டும் சிறார்,இளைஞர் கூட்டம் இன்று ராஜாவின் பாடலை இரசிப்பதில்
    சலிப்பு காட்டுகிறது! தலைமுறை இடைவெளி இளையராஜா தன்னை வெளிப்படுத்திக்கொள்ள "மெல்லிசைக் கச்சேரி" நடத்தவேண்டியுள்ளது! இளையராஜாவின் பாடல்கள் இன்றளவும் அவரது இரசிகர்களாலும் இசைவிரும்பிகளாலும் இரசிக்கப்பட்டாலும் பத்துப் பதினைந்து ஆண்டுகளாய் பின்தங்கியுள்ளார் அவருக்கிணையான போட்டியாளர்களின்றியே!வாழ்க்கை ஒரு வட்டம் ... அது தொடக்கத்தை தொடும்போது தொடருமா!? முடியுமா!? தெரிவதில்லை!

    ReplyDelete