Thursday 11 July 2013

இசை விரும்பிகள் IX- நிறம் மாறிய பூக்கள்

இசை விரும்பிகள் IX- நிறம் மாறிய பூக்கள்



          

               எண்பதுகளின் துவக்கத்தில் இளையராஜாவின் இசை தட தடவென்று அதிரடியாக விரையும் ஒரு எக்ஸ்பிரஸ்  ரயில் வேகத்தில்   உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. 76ஆறில் துவங்கிய இளையராஜாவின் இசை வேகம் சட்டென நூறு என்ற எண்ணிக்கையைத்  தொட்டது இந்த எண்பதில்தான். ஐந்தே வருடங்களில் ஒரு இசைஞர் நூறு படங்களுக்கு இசை அமைப்பதென்பது  ஒரு சாதனைதான். இதற்கு இளையராஜாவின் வெற்றியைத்தாண்டி அவர் தனது  இசையின் வண்ணங்களை தொடர்ந்து மெருகேற்றிக்கொண்டே இருந்தது ஒரு மிக முக்கியமான காரணம். சற்று உன்னிப்பாக கவனித்தோமானால் இளையராஜாவின் இசை  ஒரு  சிறிய கால இடைவெளியில் அடுத்த பரிமாணத்திற்கு மாறுவதை  உணரலாம்.பொதுவாக எல்லா இசை அமைப்பாளர்களின் இசையிலும் இப்படிப்பட்ட அடுத்த நிலை இயல்பாக நடக்கக்கூடியதே என்றாலும் இளையராஜாவின் இசையில் இந்த மாற்றம் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் எழுதப்படாத விதி போன்று தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருந்தது. இது அவரின் பலம் என்று நாம் தீர்மானித்தாலும் இவ்வாறான இசைப் பரிசோதனைகளே அவரின் வளர்ச்சிக்கும் பின்னர் வீழ்ச்சிக்கும் காரணமாயின.ஏனென்றால் இவ்வாறாக மாறிக்கொண்டே வந்த அவரது இசை ஒரு கட்டத்தில் நின்றுபோய் விட்டதால் அது அவரின் வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய  காரணமானது . இளையராஜாவின் வீழ்ச்சி என்ற சொற்றொடரையே பல ராஜா அபிமானிகள் ஏற்றுக்கொள்ளதில்லை.இருப்பினும் அது உண்மையே. இதுபற்றி பின்னர் விரிவாக பார்க்க இருப்பதால் தற்போது இளையராஜாவின் பொற்காலமான 80 களின் இசையை விவாதிப்போம்.(இந்தப் பதிவில் இடம்பெற்றுள்ள சில பாடல்கள் வணிக ரீதியில் வெற்றி பெற்று பிரபலமான  பாடல்களே தவிர கிளாசிக் என்ற அர்த்தத்தில் இங்கே குறிப்பிடப்படவில்லை. மேலும் அவை என் விருப்பப் பாடல்களும் அல்ல என்பதை இங்கே நான் பதிவு செய்கிறேன். சற்று அடர்த்தியான தடித்த எழுத்தில் இருப்பவையே  என்னுடைய தனிப்பட்ட விருப்பப் பாடல்கள்).
    
       படத்துக்கு படம் தன் இசையில் புதிய இழை ஒன்றை உருவாக்கி தனது இசையின் தரத்தை பலபடிகள் உயர்த்திச்  சென்றுகொண்டிருந்தார் இளையராஜா.அவரது இசையில் தென்பட்ட அந்த புதிய இனிமை பழமையையும் நவீனத்தையும் ஒருங்கே கோர்த்திருந்தது.80களை இளையராஜாவின் அதீதப்  பாய்ச்சல் என்று தாராளமாகச் சொல்லலாம்.(என் தனிப்பட்ட கருத்தாக 83வரை என்று வைத்துக்கொள்ளலாம். இந்த ஏழு வருடங்களில் அவர் அமைத்தவைகள் அவர் இசையில் வந்த மிகச் சிறப்பான பாடல்கள்.)  உதாரணமாக நெஞ்சத்தைக் கிள்ளாதே என்ற மகேந்திரனின் படத்தை எடுத்துக்கொள்வோம். (இந்தப் படமே பின்னர் மணிரத்தினத்தின் கைகளில் மவுன  ராகம் என்று உருமாறி வெளிவந்தது). நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தின் நான்கு பாடல்களில் மூன்று வெகு அற்புதமானவை.இந்த ஒரே காரணத்திற்காகவே அந்த நாலாவது தரமில்லாத பாடலை (மம்மி பேரு மாரி)கொஞ்சம் மன்னித்துவிடலாம்.சுசீலாவின் ஏ தென்றலே  மிக ரம்மியமான  பாடல். எஸ் பி பி யின் ஹான்டிங்கான ஹம்மிங்கில் துவங்கும் உறவென்னும் புதிய வானில் பாடல் மறுபேச்சில்லாத மகத்தான பாடல். கேட்கும் போதே  பறக்கும் மனநிலையை நமக்கு கொடுக்கும் விதமாக மெதுவாகவும் மென்மையாகவும்  அமைக்கப்பட்டு நம்மை காற்றைப் போல உரசிச் செல்லும் பாடல் இது. "பருவமே புதிய பாடல் பாடு" என்ற பாடல் படத்தின் முத்திரைப் பாடலாக மட்டுமல்லாது அதன் முகவரியாகவே ஒலித்தது. உறவுகள் தொடர்கதை, இளமை என்னும் பூங்காற்று போன்ற சிறப்பான பாடல்களின் வரிசையில் மறுகருத்தின்றி இணைக்கப் படவேண்டிய அற்புதமான பாடல் இது. ஒரு காலடி ஓசை பாடல் முழுவதும் அரவணைத்து செல்ல, அதற்கேற்றார்போல நளினமான இடையிசை பாலம் அமைக்க இளையராஜாவின் நல்லிசையாக இந்தப் பாடல் ஒலித்தது  என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.
   
      80இல் வந்த இளையராஜாவின்  சிறப்பான பாடல்களைக் கொண்ட  மற்ற சில படங்கள் இவை:
உல்லாசப் பறவைகள்,--ஜெர்மனியின் செந்தேன் மலரே,தெய்வீக ராகம்,(மீண்டும் மீண்டும் நினைவுகளில் தோன்றும் அருமையான பாடல்.ஆனால் ஜென்சியின் nasal tone வழக்கம் போலவே பாடலின் அழகை குலைத்துவிடுகிறது)அழகு ஆயிரம்(பலருக்குத் தெரியாத மிக உற்சாகமான பாடல் ) 
தைப் பொங்கல்,-கண் மலர்களின் அழைப்பிதழ்(இளையராஜாவின் அபூர்வமான மெல்லிசை ததும்பும் இனிமையான பாடல்.இதை வெகு சிலரே கேட்டிருக்கக்கூடும் என்று தோன்றுகிறது)       
                                                                               ரிஷிமூலம்,நேரமிது,--ஐம்பதிலும் ஆசை வரும்,(இரண்டுமே டி எம் எஸ்-இளையராஜா கூட்டணியில் வந்த சிறப்பான பாடல்கள்-நல்லவெர்க்கெல்லாம் என்ற தியாகம் படப் பாடல் போன்று)
பூட்டாத பூட்டுக்கள்,--ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது(மகேந்திரனின் மற்றொரு அருமையான ஆனால் தோல்விப் படம்.இந்தப் பாடலை நிறைய பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை)
நதியை தேடி வந்த கடல்,--எங்கேயோ எதோ ,தவிக்குது தயங்குது ஒரு மனது.(ஜெயலலிதா நடித்த கடைசிப் படம் இது)
நான் போட்ட சவால்,--சுகம் சுகமே 
முரட்டுக்காளை,--எந்தப் பூவிலும் வாசம்,புது வண்ணங்கள்(இந்தப் படத்தின் ஒரே நல்ல பாடல் இது),பொதுவாக எம்மனசு(இளையராஜாவின் அதிரடி டப்பாகுத்து முத்திரைப் பாடல்.இதே பாணியில் பல பாடல்களை பின்னர் அவர் கொடுத்தார்.  தெம்மாங்குப் பாடல்களை  டப்பாங்குத்து என்ற தரத்திற்கு கொண்டுவந்த பாடல்.)
மூடுபனி,--(இளையராஜாவின் நூறாவது படம்.)என் இனிய பொன் நிலாவே( பலரின் காதல் கீதமாக கொண்டாடப்படும் ஒரு செம்மையான பாடல்.பாடலின் இடையிசை இதை ஒரு இசை அனுபவமாக மாற்றிவிடுகிறது.)பருவ காலங்களின் கனவு, ஸ்விங் (டாக்டர் கல்யாண் என்பவர் இளையராஜாவின் இசையில் ஆங்கிலப் பாடல்களை பாடியது உண்டு. காளி படத்தில் இவர் ஒரு பாடல் பாடி இருக்கிறார்.)
கரும்பு வில்,--மீன்கொடித் தேரில் மன்மதராஜன் (நவீனமான தாளம் பாடல் முழுவதும் பனித்திரை போல கூடவே வருவது இந்தப் பாடலின் சிறப்பு)
கண்ணில் தெரியும் கதைகள்,--நான் ஒரு பொன்னோவியம் கண்டேன்,(முதல் முறையாக தமிழ்த் திரையில் ஒரு படத்திற்கு ஐந்து இசை அமைப்பாளர்கள் பணியாற்றிய படம். இதில் வரும் சிறப்பான நான் உன்ன நெனச்சேன் என்ற சங்கர் கணேஷின் பாடல் மிகப் புகழ்பெற்றது.)
கல்லுக்குள் ஈரம்-சிறு பொன்மணி 
காளி--அடி ஆடு பூங்கொடியே,வாழ்வு மட்டும் 
ஜானி--சீனொரீடா,காற்றில் எந்தன் கீதம்(மழையின் ஓசையும் ஜானகியின் சோகம் வழியும் குரலும் இந்தப் பாடலை மனதில் தங்கிவிடச் செய்துவிடுகின்றன.),என் வானிலே,ஒரு இனிய மனது(இரண்டுமே நேர்த்தியான இசையுடன் கூடிய  நல்ல பாடல்களே. ஜென்சி பாடி இருக்காவிட்டால் கண்டிப்பாக மிகவும் சிறப்பானதாக  இருந்திருக்கும் என்பது என் எண்ணம். என் வானிலே என்று ஆரம்பித்து ஊர்வலம் என்று பாடகி  மூக்கால் பாடும் போது பாடலே பொலிவை இழந்துவிடுகிறது.) ஆசய காத்தில தூதுவிட்டு(வித்தியாசமான தாளக்கட்டுடன் கூடிய பாடல்.இதே பாணியில் பாலுமகேந்திராவின் மறுபடியும் படத்தில் வந்த பாடல்"ஆச அதிகம் வச்சு")
இளமைக் கோலம்,--வச்சப் பார்வை தீராதடி (சிறுவர்கள் இளைஞர்களிடம் பிரபலமான பாடல்.ஆனால் சிறப்பானது என்று கூற இயலாது)
அன்புக்கு நான் அடிமை,--காத்தோடு பூவுரச(இந்தப் பாடல் வந்த புதிதில் இதைக்  கேட்ட யாருக்குமே பாடகி என்ன சொல்கிறார் என்பது புரியாமலே  இருந்தது.)
ஆயிரம் வாசல் இதயம்,--மகாராணி உனை தேடி,
எங்க ஊர் ராசாத்தி,--பொன்மான தேடி,(நாட்டுப்புற மெல்லிசை.)
கிராமத்து அத்தியாயம்,--ஆத்துமேட்டுல,(இதில் வரும் தாளம் அப்போது புதுமையாக இருப்பதாக சொல்லப்பட்டது.) வாடாத ரோசாப்பூ(சந்தேகமில்லாமல் மிகச் சிறப்பான பாடல். எஸ் பி பி யின் நளினமான குரலும் மனதை பிசையும் இசையும் இந்தப் பாடலை மேலும் அழகூட்டுகின்றன.)
பொன்னகரம்,--முத்துரதமோமுல்லைச்சரமோ,வாழுகின்றமக்களுக்கு 
சாமந்திப்பூ,--கனவுகளே ஊர்கோலம் இங்கே,ஆகாயம் பூமி என்றும் ஒன்றா(நல்ல பாடல்)மாலை வேளை.
குரு,--எந்தன் கண்ணில் ஏழுலகங்கள், பறந்தாலும் விடமாட்டேன், (எஸ் பி பியின் துடிப்பான குரலில் கேட்கும் போதே ஹம் செய்ய வைக்கும் துள்ளலான பாடல்.)பேரைச் சொல்லவா( மிகவும் அருமையான பாடல்.  மூன்றுவிதமான இடையிசையோடு ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் மனதை தாலாட்டும் அற்புதப்  பாடல். இது என் தனிப்பட்ட விருப்பப் பாடல்  என்பதை இங்கே சொல்ல வேண்டும்)ஆடுங்கள் பாடுங்கள்(அதிரடி இல்லாத மென்மையான  ஒரு குழந்தைப் பாடல். இளையராஜாவை சிலாக்கிக்கும் பலர்  இந்தப் பாடலைப் பற்றி வாய் திறப்பதில்லை. இளையராஜாவின் அபூர்வமான நல்லிசை).
       
  இறுதியாக இளையராஜா வைரமுத்துவுடன் கை கோர்த்த நிழல்கள் படத்தைப் பற்றி சில விஷயங்களைப் பேச வேண்டிய இடத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். இந்தப் பதிவின் துவக்கத்தில் குறிப்பிட்டது போல இந்த நிழல்கள் படத்தில்தான் இளையராஜாவின் இசை  அடுத்த பரிமாணம் அடைந்தது. எண்பதுகளின் மத்தியில் வந்த இந்தப் படம் பாரதிராஜாவின் முதல் தோல்விப்படம் என்று முத்திரை குத்தப்பட்டது.(இந்தத் தோல்வி குறித்து என் ரசனைக்கேற்றபடி தமிழ் ரசிகர்கள் வளரவில்லை என்று பாரதிராஜா சொன்னதாக படித்திருக்கிறேன்).இதே சமயத்தில்தான் பாலச்சந்தரின் வறுமையின் நிறம் சிகப்பு படம் வெளிவந்தது. இரண்டுமே வேலையில்லா இளைஞர்களைப் பற்றி சொல்லிய படங்கள். நிழல்கள் ஒரு தோல்விப் படமாக இருந்தாலும் தமிழ்த் திரைஇசைக்கு அது ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுவதன் காரணம் வைரமுத்து என்ற ஒரு  இளைய கவிஞர்.இவரின்  கவிதையான  இது ஒரு பொன் மாலைப் பொழுது இளையராஜாவின் இசையில் சிகரம் தொட்ட பாடலாக பிராகாசித்தது. இந்தப் பாடலின் இரண்டாவது சரணத்தில் வரும்
     "வானம் எனக்கொரு போதி  மரம்
       நாளும் எனக்கொரு சேதி தரும் "
 என்ற இலக்கியத் தரமான  வரிகள் அப்போது பலரை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாடலின் இசைக்கோர்ப்பு, இடையிசை,மெலடி,மெட்டு அனைத்துமே ஐந்து வருடங்களாகக் கேட்டுக்கொண்டிருந்த வழக்கமான இளையராஜாவின் இன்னிசையிலிருந்து விலகிச் சென்று  வேறு விதமான வண்ணத்தை தீட்டியது. பாடலின் ஆரம்பத்தில் வரும் ஹம்மிங், இனிமையான நல்லிசை, தாலாட்டும் எஸ் பி பியின் குரல்,அற்புதமான இடையிசை,மேலும்  அருமையான கவிதை கலந்த வரிகள்  எல்லாம் இந்தப் பாடலை இளையராஜாவின் மாறிவரும் இசையின் முகவரிப் பாடலாக்கியது என்று சொல்வது பொருத்தம்.இந்தப் பாடல் முதன் முதலில் சிலோன் ரேடியோவில் டாப் டென் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டபோதே பலத்த வரவேற்பை பெற்றது. 23 வாரங்கள் தொடர்ந்து முதல் இடத்தில்  இருந்த இந்தப் பாடல் அதன் பின் வறுமையின் நிறம் சிகப்பு படத்தின் சிப்பி இருக்குது பாடல்  முதலிடத்திற்கு வந்தும் இரண்டாம்  இடத்திற்கு தள்ளப்பட்டது. இதன் காரணமாகவே நான்  சிப்பி இருக்குது பாடலை அப்போது வெகுவாக வெறுத்தேன். எம் எஸ் வி போன்றவர்களின் பழைய இசையில் இளையராஜாவின்  அருமையான பாடல் புறந்தள்ளப்படுவதா என்று கோபம் கூட வந்தது. அது ஒரு சிறுவனின் மனநிலை. நான் இப்போது அந்த விருப்பங்களை விட்டு வெகு தூரம் வந்து விட்டாலும் இன்னும் பலர்  இன்றைக்கும் தங்கள் ரசனையில் வளராமல் இருப்பது குறித்து வேதனையே ஏற்படுகிறது.

    துள்ளலான மடை திறந்து மற்றும் மலைச்சாரல் தீண்டுவது போன்ற பூங்கதவே தாழ் திறவாய் என்ற இரண்டு பாடல்களும் நிழல்கள் படத்தின் இசைச் சுவடுகளாகவே மாறிவிட்டன. குறிப்பாக பூங்கதவே பாடல் மிக அபாரமான முறையில் இசைக்கப்பட்டு  இன்னிசையின் சுவை திகட்டாமல் கேட்கும்போதே கண்கள் மூடி ரசிக்கத்தூண்டும் கீதம்.  இளையராஜா வயலின்  இசையை நவீனமாக கையாண்டதும் அதிகமாக பயன்படுத்தியதும் இந்தப் படத்திலிருந்துதான் ஆரம்பித்தது. அவர்  பாக் (Bach) என்ற மேற்கத்திய செவ்வியல் மேதையின் இசையை  தமிழுக்கு தரவிறக்கம் செய்தது  இங்கேதான் துவங்கியது. இதற்கு முன்பே இதை அவர் செய்திருந்தாலும் நிழல்கள் படத்தில்தான் மேற்கத்திய செவ்வியல் இசையை  நம் இசையோடு பிணைத்து தன்புதிய  இசை பாணியை இதுவரை அவர் பயணம் செய்யாத  சாலையில் வெள்ளோட்டம் விட்டார். 

       இந்த இடத்தில்  நாம் இளையராஜாவின் முத்திரை இசையாக கருதப்படும் இடையிசை (interlude) பற்றி பேச வேண்டியது அவசியமாகிறது. சரணங்களுக்கு  இடையில் வந்து, அவைகளை இணைக்கும் ஒரு தொடர்பு  இசையாக (link music ) மட்டும் இல்லாமல்   பாடலின் அகற்றமுடியாத இசைப் பதிப்பாக உறைந்தது இளையராஜாவின் இடையிசை. இங்கேதான் அவர் தன் பாக் (Bach)  பாதிப்பை வெற்றிகரமாக பதிவு செய்கிறார் . என் நண்பர்களில் சிலர் இளையராஜாவை  king of the  interlude என்று அழைப்பதுண்டு. . இப்போது எண்ணிப்பார்க்கையில் இளையராஜாவின் பாடல்கள்  மீது நான் கடுமையான  விமர்சனங்களை  வைத்தாலும், அவரின் இடையிசையைப் பற்றி அதே கடுமையான வார்த்தைகளை சுமத்த முடியுமா என்பது கேள்விக்குரியதே.  ஏனென்றால் interlude என்பதை ஒரு கவனிக்கத் தக்க இசைத் துணுக்காக  மாற்றி அமைத்தார் இளையராஜா. இவருக்கு முன் இருந்த இசை மேதைகள் இதே இடையிசையை வெற்றிகரமாக கையாண்டிருந்தாலும் இளையராஜாவின் இடையிசை தனித்தன்மை வாய்ந்தது. இளையராஜாவின் பல தரமில்லாத பாடல்களை அதன் இடையிசைக்காகவே நான் சகித்துக்கொள்வதுண்டு. என்னைப் பொறுத்தவரை இளையராஜா  தன் இடையிசையை ஒரு தனிப்பட்ட இசையாகவே கருதினார் என்று எண்ணத் தோன்றுகிறது. பல சமயங்களில் பாடலுக்கு தொடர்பில்லாத இசையை அமைத்து நம்மை பாடலில் ஒன்றிணையாது  செய்யவும் செய்திருக்கிறார். இளையராஜாவின் பல பாடல்கள் இந்த தொடர்பில்லாத இடையிசைக் கொண்டு அமைக்கப்பட்டவைதான். உதாரணமாக ஆகாய கங்கை (தர்மயுத்தம்)என்ற பாடலின் இரண்டு  interlude இசையும்   சோகம் நிறைந்தது. இந்தப் பாடலைக் கேட்டபோதெல்லாம் நான் இதை ஒரு  சோகப் பாடலாகவே நினைத்ததுண்டு. மேலும் இளையராஜாவின் interlude அது இயங்கும் பாடல்களின் களத்தை விட்டு சட்டென்று  வேறு உயர்ந்த நிலைக்கு  கேட்கும் நம்மை இழுத்துச் சென்று விட்டு பின்னர் சரணம் துவங்கும் போது சடாரென  கீழே தள்ளிவிடும் வகையைச் சார்ந்தது.சரணத்தோடு முட்டி மோதிக்கொண்டு நிற்கும்  இசையாகவே இவரின் பெருமான்மையான இடையிசை இருக்கிறது.  இளையராஜாவின் பல  பாடல்கள் இந்த வகையை சார்ந்தவையே.  இடையிசையின் நாயகனாக இளையராஜா அடையாளம் காணப்பட்டாலும் பல சமயங்களில் இடையிசையில் அவர் செய்த மேற்கத்திய செவ்வியல் பரிசோதனைகள் பாடலோடு ஒன்றினையாமல் தனிப் பாதையில் பயணம் செய்வதை நாம் உணரலாம். பாடல் சொல்லும் கருத்துக்கும்,பாவத்துக்கும் (tone),அந்த சூழலுக்கும் இணையாமல் அவரின்  இடையிசை சற்றும் தொடர்பில்லாமல் அன்னியமாக ஒலிக்கும். எ எம் ராஜா, கே வீ மகாதேவன், எம் எஸ்  வி-டி கே ஆர் போன்றவர்களின் இடையிசையில் இவ்வாறான அந்நியத் தோற்றம் எப்போதும் வருவதில்லை. அவர்களின் இடையிசை கடலோடு இணையும் நதியைப் போன்று இருந்தது. இளையராஜாவின் முத்திரை இடையிசை ஒரு காட்டாற்று வெள்ளம் போல கரைக்கு அடங்காமல் பீறிட்டுக்கொண்டு பாய்ந்தது. பல சமயங்களில் இந்த இசை பாடலோடு தொடர்பின்றி பாடலை விட இந்த இசையை  மட்டுமே ரசிக்கச் செய்துவிடுகிறது.(இது எனக்குத் தென்பட்ட ஒரு வேறுபாடே தவிர குறை சொல்லும் நோக்கம் அல்ல).  இருந்தும் interlude இசையில் ஒரு முத்திரை பதித்து அதையே தன் முகவரியாக  அமைத்துக் கொண்டவர் இளையராஜா. இவரின் இடையிசை ஒரு தனிப் பகுதியாக வெளியிடப்படக்கூடிய  சிறப்பு பெற்றது.

      
     இளையராஜா-வைரமுத்து இணைப்பு தமிழ்த் திரையிசையில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கிவைத்தது. இது இதற்கு முன் தமிழ்த் திரையில் ஆட்சி செய்த எம் எஸ்   வி -டீ கே ஆர்- கண்ணதாசன் கூட்டணி போல சிறப்பானதா அல்லது தரமானதா என்ற கேள்விக்கு நாம் இல்லை என்றே பதில் சொல்லவேண்டியிருக்கிறது. இருந்தும் இளையராஜா-வைரமுத்து கூட்டணி அப்போதைய இசையின் களத்தை வெற்றிகரமாக வழிநடத்திச் சென்றது என்பதில் சந்தேகம் இல்லை. இவர்களின் இணைப்பில் வந்த பல பாடல்கள் மிகச் சிறப்பானவை.மேலும் இன்றுவரை  இளையராஜாவின் வைரங்கள் என்று பலர் சிலாகிக்கும் பாடல்கள் இந்த காலகட்டத்தில் வந்தவைகளே.

      ஆயிரம் தாமரை மொட்டுக்களே (அற்புதமான பாடல்.),காதல் ஓவியம் (இனிமையான பாடல் ஆனால் பாடலுடன்  முழுமையாக ஒன்றிக்க முடியாதபடி  நாசிக்குரல் பாடகி ஜென்சி  இங்கேயும் வந்துவிடுகிறார்).இந்தப் பாடலின் துவக்கத்தில்  வரும் கிருஸ்துவ-பிராமண இசையை இளையராஜாதான் முதன் முதலாக செய்தார் என்று சிலர் பதிவுகளில் எழுதுகிறார்கள்.ஆனால் இவ்வாறான கிருஸ்துவ-பிராமண இசையை ராஜநாகம் என்ற 1974 இல் வந்த படத்திலேயே வி குமார் "தேவன் வேதமும் கண்ணன் கீதையும்"பாடலின் ஆரம்பத்தில் செய்துவிட்டதை பலர் அறியாமல் இருக்கிறார்கள். விழியில் விழுந்து (இளையராஜா பாடி இருக்காவிட்டால் பாடல் இன்னும் சிறப்பாக வந்திருக்கலாம்.)பின்னர் வழக்கம்போல இளையராஜாவின் அதிரடியான வாடி எ கப்பக்கிழங்கே. இந்தப் பாடலுக்காகவே  நான் இளையராஜாவை அப்போதே கடுமையாக விமர்சித்தேன்.வீட்டில் எல்லோரும் ஒன்றாக கேட்க முடியாத பாடல்களை நான் எனது சிறு வயது முதலே விரும்பியதில்லை. இளையராஜாவிடம் இதுபோன்ற ஆபாசமான  பாடல்கள்    (கடுமையான வார்த்தையாக இருந்தாலும் இது உண்மையே) கணக்கில் அடங்காமல் நிறையவே உண்டு. இதைப் பற்றி அடுத்த பதிவில் விவரமாக எழுத இருப்பதால் இப்போதைக்கு  இந்த விஷயத்தை தாண்டிச் செல்லலாம்.இறுதியாக இந்தப் படத்தில்இடம் பெறாத   புத்தம் புது காலை என்கிற பாடல்  ஒரு அற்புதமான கானம். என் விருப்பம்  இந்தப் பாடலே.மிக இனிமையாக இசைக்கப்பட்டு நம்மை தாலாட்டும் தரமான பாடல் இது.
      
        பெரிய வெற்றியைப்  பெற்ற      அந்திமழை (ராஜபார்வை), தாலாட்டுதே வானம் (கடல் மீன்கள்), நேற்று இந்த நேரம் ,இது ஒரு நிலா காலம்(டிக் டிக் டிக்),   ஆனந்த ராகம் கேட்கும் காலம், கோடை கால காற்றே,பூந்தளிர் ஆட (பன்னீர் புஷ்பங்கள்)சிலருக்கு மட்டுமே தெரிந்த ஹேய் ஓராயிரம் (மீண்டும் கோகிலா),அள்ளித் தந்த பூமி (நண்டு), பலருக்கு பரிச்சயமே இல்லாத மிக அருமையான ஒரு குங்கும செங்கமலம் (ஆராதனை),ஒ நெஞ்சமே, பனிமழை விழும் (எனக்காக காத்திரு) போன்ற இளையராஜாவின் துடிப்பான  இன்னிசை இந்த ஆண்டில்தான் வெளிப்பட்டது. அந்திமழை பாடலின் ஆரம்ப இசை , இடையிசை மற்றும்  பாடல் வரிகள்(நெஞ்சத்தில்  முள்ளை  வைத்து மோகம் என்பாய், தண்ணீரில் மூழ்கிக்கொண்டே தாகம் என்பாய்) எல்லாமே  இந்தப் பாடலை ஒரு உடனடி வெற்றிக்கு இட்டுச் சென்றன.

     82இல் இளையராஜா தமிழ்த் திரையின் இசை சிம்மாசனத்தில் உண்மையில் ஒரு ராஜா போன்றே அமர்ந்திருந்தார். அவர் பங்களிப்பு இலாத படங்கள்  இளைஞர்களின் மத்தியில் வரவேற்ப்பை பெறவில்லை.இளையராஜாவின் பாடல்களை தாகத்தோடு எதிர்பார்க்கும் ஒரு மிகப் பெரிய கூட்டமே இருந்தது.    இந்த  ஆண்டு இளையராஜாவின் இசையில் அடுத்த மாற்றம் வந்தது. இப்போது அவரிடம் 76-80 களின் சாயல் முற்றிலும் காணப்படவில்லை. மிகவும்மாறிவிட்ட  வேறுவிதமான இசை அமைப்புகளை அவர் செய்தார். உதாரணமாக இந்த ஆண்டில் வந்த கோழி கூவுது படத்தின் மிகப் பிரபலமான எதோ மோகம் பாடலை எடுத்துக்கொள்ளலாம்.இந்தப் பாடலின் ஆரம்ப இசை, தண்ணீரின் சலசலப்பு, மெட்டு, மேற்கத்திய செவ்வியல் மற்றும் நாட்டுப்புற இணைப்பின்  இடையிசை போன்ற இசை பரிசோதனைகள் அபாரமாக இருந்தன. (பாடல் வரிகள் சற்றே கொச்சையாக இருப்பது ஒரு முரண்).அண்ணே அண்ணே,பூவே இளையபூவே போன்ற பாடல்கள் அவரின் துவக்ககால இசையை விட்டு வெகு தூரம் வந்து விட்டதை உணர்த்தின.

    இந்த  ஆண்டில் இளையராஜா   ஏறக்குறைய 25 படங்களுக்கு (அதற்கு மேலும் இருக்கலாம்) இசை அமைத்திருந்தார். அவற்றில் சிலவற்றை பற்றி விவாதிக்கலாம்.
ஆனந்த ராகம்-மேகம் கருக்குது,
ஆட்டோ ராஜா-கன்னி வண்ணம் ரோஜாப்பூ, சங்கத்தில் பாடாத கவிதை, மலரே என்னென்ன கோலம் (இளையராஜாவின் மிக அற்புதமான இசை சிற்பம் இது. இன்றுவரை இது இளையராஜாவின் பாடல்தானா என்று எனக்கு சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது. இந்தப் பாடலில் நீங்கள் கொஞ்சம்கூட அவரின் சாயலை காண முடியாது. மிகவும் ரம்மியமான பாடல்.இந்தப் படத்திற்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத சிறப்பான பாடல்.)
ஈர விழி காவியங்கள்-காதல் பண்பாடு(இந்தப் பாடல் அவ்வளவாக பிரபலமாகாதது ஆனால் மிக சிறப்பானது)
எச்சில் இரவுகள்- பூமேலே வீசும் பூங்காத்தே,
கோபுரங்கள் சாய்வதில்லை-பூ வாடைக் காற்று(நல்ல பாடல்) என் புருஷன்தான்,
கண்ணே ராதா- மாலை சூட கண்ணே ராதா(இதை நான் சங்கர் கணேஷ் இசை என்று நினைத்திருந்தேன்)
மஞ்சள்நிலா-பூந்தென்றல் காற்றே வா(இந்தப் பாடல் பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. ராஜாவின் ரசிகர்களுக்கே இது தெரியாமல் இருக்கலாம். ஆனால் சந்தேகம் இல்லாமல் இது ஒரு அபாரமான பாடல்.) இள மனதில்,காற்றே யாழ் மீட்டு
மெட்டி-மெட்டி ஒலி காற்றோடு,
மூன்றாம்பிறை-பூங்காற்று புதிதானது, கண்ணே கலைமானே, நரி கதை, பின்னர் வழக்கம் போல இளையராஜாவின் விரக இசையில் வந்த பொன்மேனி உருகுதே.
தாய் மூகாம்பிகை- ஜனனி ஜனனி
சகலகலா வல்லவன்-இளமை இதோ இதோ, (மற்ற பாடல்கள் அனைத்தும் படு மட்டமான ஆபாச குப்பைகள்.இளையராஜாவை நான் விமர்சிக்க காரணமான படம் இது)
தனிக்காட்டு ராஜா-சந்தனக் காற்றே, ராசாவே உன்ன நா எண்ணித்தான்,நாந்தாண்ட இப்போ தேவதாஸ்,கூவுங்கள் சேவல்களே
தூறல் நின்னு போச்சு-தங்கச் சங்கிலி, ஏரிக்கரைப் பூங்காற்றே,பூபாளம்

       இன்னும் மூன்று சிறப்பான படங்களைப் பற்றி விவாதிப்பது அவசியம் என்று தோன்றுகிறது. அந்தப் படங்களின் சிறப்பே அதன் பாடல்கள் என்பது என் கருத்து.
  காதல்ஓவியம்- சங்கராபரணத்துக்குப் போட்டியாக தமிழில் வந்த முதல் முயற்சி இது. படம் விழுந்தது.ஆனால் பாடல்கள் உயர்ந்து நிற்கின்றன.என் கருத்தின்படி சிந்து பைரவியின் பாடல்களை விட இதில்  இளையராஜா நேர்த்தியாக இசை அமைத்திருந்தார். அம்மா அழகே,குயிலே குயிலே,நாதம் என் ஜீவனே,நதியில் ஆடும்,பூவில் வந்து கூடும்,சங்கீத ஜாதி முல்லை ,வெள்ளிச் சலங்கைகள் என அத்தனை பாடல்களும் கர்நாடக ராக வார்ப்பில் கோர்க்கப்பட்ட முத்துகள் போல ஜொலித்தன.

   நினைவெல்லாம் நித்யா- இயக்குனர் ஸ்ரீதர் தன் படங்களில் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர். அவரின் படத்தின் பாடல்கள் என்றைக்கும் தனது பொலிவை இழந்தது கிடையாது. எ எம் ராஜா, எம் எஸ் வி- டி கே ஆர், இளையராஜா என்று பலரின் இசையில் அவரின் படப் பாடல்கள் தனித்தன்மையாகயும்,மிக சிறப்பாகவும் இருந்தன என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.(இளமை ஊஞ்சலாடுகிறது படத்திற்காக ஸ்ரீதர் முதல் முறையாக இளையராஜாவிடம் வந்தபோது அவர் தான் குருவாக மதிக்கும் எம் எஸ் வி யை விட்டு தன்னிடம் வந்ததற்காக முதலில் தன்னால் முடியாது என்று ஸ்ரீதரை திருப்பி அனுப்பி விட்டதாக படித்திருக்கிறேன்) நினைவெல்லாம் நித்யா படம் படு தோல்வியைத் தழுவியது.ஆனால் இதில் இளையராஜாவின் இசை அபாரமாக இருந்தது. எல்லா பாடல்களும் தேன் போல இனித்தன என்பது ஒரு சாதாரண உவமை. இன்றைக்கும் நவீனமாக ஒலிக்கும் ரோஜாவைத் தாலாட்டும் தென்றல், இனிமையான இசைவார்ப்பில் வந்த நீதானே எந்தன் பொன்வசந்தம், ஆப்ரிக்க ஒசிபிசா குழுவினரின் பாதிப்பில் அமைந்த தோளின்  மேலே பாரம் இல்லே,நேர்த்தியான மேற்கத்திய கலப்பில் இளையராஜாவின்   வழக்கமான ஆர்ப்பாட்டங்கள் அதிரடிகள் இல்லாமல்   மென்மையான ஒலிக்கும் பனி விழும் மலர் வனம் போன்ற பாடல்கள் இன்றளவும் கேட்க அலுக்காதவை.

   பயணங்கள் முடிவதில்லை- இளையராஜாவின் இன்னிசை மழை என்றே இந்தப் படத்திற்கு விளம்பரம் செய்தார்கள்.அது  உண்மையே என்பதை படத்தின் பாடல்கள்  உரத்து சொல்லிவிடுகின்றன. வாழ்வேமாயம் படத்தின் கதையை ஒட்டியே இந்தப் படமும் இருந்ததால் ஆரம்பத்தில் பெரிதாக போகாமல் பின்னர் மக்களின் வாய்வழி விளம்பரத்தால் அதிரடி வெற்றி பெற்றது. படத்தின்  வெற்றிக்கு சந்தேகமில்லாமல் இளையராஜாவின் இசை ஒரு முக்கியமான காரணம். ராக தீபம் ஏற்றும் நேரம்( இந்தப் பாடலின் இரண்டாவது சரணத்தின் முடிவில் மோகன் மகிழ்ச்சியோடு கைகளை அசைக்கும் பாவனைக்கு  அப்போது எல்லா தியேட்டர்களிலும் விசில் பறந்தது),தோகை இள மயில்(எப்போதும் கேட்கத் தூண்டும் தரமான பாடல்.)சாலையோரம் சோலை ஒன்று( இனிமையான காதல் கானம்)ஏய் ஆத்தா ஆத்தோரமா,மணியோசை கேட்டு எழுந்து,வைகரையில் போன்ற பாடல்கள் வானொலியிலும் வீதியோர டீக்கடைகளிலும் வெடித்துக்கொண்டு  ஒலித்தன. இளையராஜாவின் இசை சிகரமாகவும் இந்தப் படத்தின் விலாசமாகாவும்  வந்த பாடல்:"இளைய நிலா பொழிகிறதே". தனிப்பட்ட விதத்தில் என்னுடைய நெஞ்சத்தில் அமிழ்ந்து விட்ட பாடல் இது. இளையராஜாவின் இன்னிசைக்கு உதாரணமாக ஒரே ஒரு பாடலை மட்டுமே தேர்வு வேண்டிய நிர்பந்தம் ஏறபட்டால் கண்டிப்பாக என் தேர்வு இந்தப் பாடலே. உள்ளதை கொள்ளை கொள்ளும்  இசை,எஸ் பி பியின் நளினமான தாலாட்டுக் குரல்,பாடலோடு பயணம் செய்யும் அழகான நதியைப் போன்ற இடையிசை, திரும்ப திரும்ப நினைவுகளில் சுழலும் ஹான்டிங் டியூன் மற்றும் மிக இலக்கியத் தரமான கவிதை வரிகள் என இந்தப் பாடல் எல்லா விதத்திலும் மிகவும் சிறப்பாக  அமைந்துவிட்டது. பாடல் முழுதுமே கவிதைச் சிதறல்கள்தான்.குறிப்பாக
  "முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தவறியதோ,
   முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ?"
என்ற கவிதை வரிகள் நமக்கு சிலிர்ப்பை உண்டாக்கி விடுகின்றன.வணிக ரீதியாகவும், மக்களின் ரசனை என்ற விதத்திலும் இந்தப் பாடலே இளையராஜாவின் சாதனைப் பாடலாக நான் கருதுகிறேன்.

      இப்போது இளையராஜாவை துதி பாடும் பலர் குறிப்பிடும் பாடல்கள்    இளையராஜா-வைரமுத்து இணைப்பில் வந்தவைகள்.(இதில் தவறுகள் இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே உணர்கிறேன். தெரிந்தவர்கள்  திருத்தலாம்) உதாரணமாக பொத்தி  வச்ச மல்லிக மொட்டு,அரிசி குத்தும்  -மண்வாசனை
கண்ணில் என்ன கார்காலம் -உன் கண்ணில் நீர் வழிந்தால்,
பூங்காத்து திரும்புமா,ஏ குருவி, அந்த நிலாவத்தான்-முதல் மரியாதை,
பேசக்கூடாது,காவிரியே-அடுத்த வாரிசு
சங்கீத மேகம்( இளையராஜா ஒரு ஆர்கெஸ்ட்ரா குழுவினரின் இசையைப் போலவே இந்தப் பாடலை அமைத்திருப்பார்.) உதயகீதம் பாடுவேன், மானே தேனே கட்டிபுடி,எல்லோரும் பாட்டு பாடுங்கள்,தேனே தென் பாண்டி மீனே -உதயகீதம்,
தேவன் தந்த வீணை-உன்னை நான் சந்தித்தேன்,
விக்ரம், வனிதாமணி-விக்ரம்,
அடி ஆத்தாடி, போகுதே-கடலோரக் கவிதைகள்,
எல்லாருமே திருடங்கதான்,வெண் மேகம்,பெண் மானே, காந்தி தேசமே-நான் சிகப்பு மனிதன்,
ஒ வெண்ணிலாவே, ஒரு கிளி உருகுது-ஆனந்தக் கும்மி,
தேவதை இளம், எப்படி எப்படி-ஆயிரம் நிலவே வா,
ஈரமான ரோஜாவே,இசை மேடையில்,பாட வந்ததோ கானம்-இளமைக் காலங்கள்,
காங்கேயம் காளைகளே,மொட்டு விட்ட முல்ல கொடி,பொன் வானம் பன்னீர்-இன்று நீ நாளை நான்,
கீதம் சங்கீதம்-கொக்கரக்கோ,
தென்றல் என்னை முத்தமிட்டது, தலையை குனியும் தாமரையே-ஒரு ஓடை நதியாகிறது,
வான் போல வண்ணம்,மவ்னமான நேரம்,நாத வினோதங்கள்,தகிட திமி-சலங்கை ஒலி,
மேகம் கொட்டட்டும்(வித்யாசமான இசைப் பின்னணியில் வந்த அருமையான பாடல்)-எனக்குள் ஒருவன்,
நானாக நானில்லை தாயே-தூங்காதே தம்பி தூங்காதே,
சோலைப் பூவில் ,ஒ மானே -வெள்ளை ரோஜா,
விழியிலே மணி விழியில் (மெதுவாக உரசும் காற்றின் சுகம் கொண்ட பாடல்), உலகம் முழுதும் -நூறாவது நாள்,
பாடிவா தென்றலே-முடிவல்ல ஆரம்பம்,
நிலவொன்று கண்டேன்-கைராசிக்காரன்,
ரோஜா ஒன்று முத்தம் -கொம்பேறி மூக்கன்,
பாடும் வானம்பாடி,தேவன் கோவில் தீபம்,சீர் கொண்டுவா,பாடவா உன் பாடலை-நான் பாடும் பாடல்,
ஒ  ராஜா, பிள்ளை நிலா, அடியே மனம்,நானே ராஜா, கனவு காணும்-நீங்கள் கேட்டவை,
அலை மீது தடுமாறுதே-அன்புள்ள மலரே
நான் பாடும் மௌன ராகம் , கூட்டத்திலே கோயில்புறா,பாட்டுத்தலைவன்-இதய கோவில்,
ஒரு ஜீவன், துள்ளி எழுந்தது-கீதாஞ்சலி,
பட்டுக்கன்னம்,கண்மணியே பேசு,வானிலே தேனிலா-காக்கிச் சட்டை,
கூட்சு வண்டியிலே,நிலவு தூங்கும் நேரம்-குங்குமச் சிமிழ்,
மயங்கினேன் சொல்ல தயங்கினேன்-நானே ராஜா நானே மந்திரி,
பூமாலையே -பகல் நிலவு,
கண்மணி நீ வர காத்திருந்தேன்,தென்றல் வந்து என்னை,கவிதை பாடு குயிலே,புதிய பூவிது-தென்றலே என்னை தொடு, (இந்தப் படத்தின் பாடல்கள் மிகவும் நவீனமாக இருப்பது ஏன் என்று புரியாமலே இருக்கிறது.இதே சாயலில் இளையராஜா இன்னும் பல பாடல்கள் அமைதிருக்கலாமோ என்று தோன்றுகிறது. குறிப்பாக புதிய பூவிது பாடல் முழுதும் ஒரே தாளக்கட்டு விலகிச் செல்லாமல் கைகோர்த்துக்கொண்டு செல்வது ஒரு புதிய முயற்சி. This song is much ahead of its time like காக்கை சிறகினிலே (ஏழாவது மனிதன்).)
பாடறியேன்,நானொரு சிந்து,மரி மரி நின்னே,பூமாலை வாங்கி-சிந்து பைரவி,
முத்தாடுதே, சிட்டுக்கு, எங்க மொதலாளி - நல்லவனுக்கு நல்லவன்.
காலம் மாறலாம்,மெல்ல மெல்ல-வாழ்க்கை.
கால காலமாக, கவிதை கேளுங்கள்,சிங்களத்து சின்னக் குயிலே,ஏதேதோ எண்ணம், என்ன சத்தம் (இந்தப் படத்தின்  ஒரே சிறந்த பாடல் இதுவே. மனதை அள்ளும்  இசை ஆர்ப்பாட்டம் இல்லாத இனிமையான குரல்,வைர வரிகள் என்று நேர்த்தியாக வந்த பாடல் )-புன்னகை மன்னன்,
இளஞ்சோலை பூத்ததா(அபாரமான மிருதங்க இசையின் தாளத்தில் பின்னிப்பிணைந்த இளமையான இன்னிசை),கண்ணா உன்னை தேடுகிறேன்-உனக்காகவே வாழ்கிறேன்.
எங்கே என் ஜீவனே,காலைத் தென்றல்-உயர்ந்த உள்ளம்,
ஊரத் தெரிஞ்சுகிட்டேன்,-படிக்காதவன்,
அழகு மலராட,இன்றைக்கு ஏனிந்த,காத்திருந்து காத்திருந்து,ராசாத்தி உன்ன -வைதேகி காத்திருந்தாள்,
ஜோடி நதிகள்(துயரத்தின் இன்னிசை) அழகான பூக்கள் -அன்பே ஓடி வா,(இந்தப் பாடல்களை அதிகமானவர்கள் கேட்டதில்லை என தோன்றுகிறது.)
கேளாதோ, செவ்வந்திப் பூக்களில்-மெல்லப் பேசுங்கள்
 யார் தூரிகை தந்த ஓவியம்-பாரு பாரு பட்டணம் பாரு

    வைரமுத்து-இளையராஜா நட்பு 86 இல் வந்த புன்னகை மன்னன் படத்தோடு முறிந்தது.இதில்தான் இளையராஜா முதன் முதலாக டிஜிடல் இசையை அறிமுகம் செய்தார்.அப்போது இது பெரியதாக பேசப்பட்டது.(இதில் ரகுமானின் பங்கும் இருந்ததாக இப்போது சொல்கிறார்கள்). படத்தின் தீம் மியுசிக், காலம் காலமாக போன்ற பாடல்களில் இந்த டிஜிடல் இசை தெளிவாகவே தெரிந்தது.  70  களின் ஆரம்பத்திலேயே மேற்கத்திய இசையில் இப்படிப்பட்ட  கம்ப்யூட்டர் இசை அமைக்கப்பட்டு பிரபலம் ஆகிவிட்டது. Pink Floyd(mettle,The dark side of the moon, Wish You were here, animals),Kraftwerk(man machine) Giorgio Moroder (E=Mc2, From Here to eternity) Depeche Mode (some great reward, construction time again, violator) போன்ற இசை குழுக்கள் இவ்வாறான இசையில் அதகளம் செய்துகொண்டிருந்தன. இவர்களோடு இளையராஜாவை ஒப்பீடு செய்வது அபத்தமானது என்றாலுமே 70 களிலேயே மேற்கில் வந்துவிட்ட ஒரு புதிய இசையை 16 வருடங்கள் கழித்து தமிழுக்கு அறிமுகம் செய்த இளையராஜா அதை 86 க்கு இசைவாக நேர்த்தியாக கொடுக்காமல் ஏனோ தானோ என்று அரைவேக்காட்டுத்தனமாக அமைத்துவிட்டார். His digital music was half-baked and very elementary.  இதை விட சிறப்பாக அவரால் செய்திருக்க முடியுமா என்பதே ஒரு கேள்விக்குறி. ஆங்கில காண்டம்ப்ரரி இசையை அவர் சரியாக தெரிந்திருக்கவில்லையாதலால் (அதை அவர்  விரும்பவில்லை என்பது வேறு) அவரின் டிஜிடல் இசை எந்த புது வித இசை அனுபவத்தையும் அளிக்கவில்லை.அதைவிட இந்த கம்ப்யூட்டர்  தடவல் இல்லாமல் அவர் கொடுத்த என்ன சத்தம் இந்த நேரம் மிக அருமையாக வார்க்கப்பட்ட இசைப்பொன்னொவியம்.
   
         விக்ரம், காக்கிச்சட்டை, படிக்காதவன், புன்னகை மன்னன்,சிந்து பைரவி போன்ற படப் பாடல்களை கேட்கையில் 80க்கு முன் இருந்த இளையராஜாவின் தடம் இப்போது கணிசமாக மாறிப்போயிருப்பதை நாம் உணரலாம்.உதாரணமாக விழியிலே மலர்ந்தது (புவனா ஒரு கேள்விக்குறி-1977) பாடலையும்  விழியிலே மணி விழியில் (நூறாவது நாள்-85) பாடலையும் ஒரே கோட்டில் வைத்தால் இந்த மாற்றத்தை நன்றாகவே காணலாம். இந்த மாற்றம் இயல்பாகவே நிகழ்ந்தது என்றாலும் இளையராஜா இத்தனை வேகமாக தன் இன்னிசையை வேறு திசைக்கு நகர்த்திச் சென்றிருக்க வேண்டாம் என்றே எண்ணுகிறேன்.  மேலே குறிப்பிடப்பட்டுள்ள பாடல்கள் சிறந்தவை என்றாலும் இளையராஜா  தமிழ்த்திரையிசையின் போக்கையே வெகுவாக மாற்றிவிட்டார் என்பதே உண்மை. ஒரு மிகப் பெரிய இசைப் பாரம்பரியத்தை எம் எஸ் வி க்குப் பிறகு  தொடர்ந்து நடத்தி சென்றவர் நல்ல கவிதைகளைப் புறக்கணித்தது,கொச்சையான வரிகளை பாடல்களாக மாற்றியது என்று தடம் மாறிப் போனது உண்மையில் வேதனையான நிகழ்வு. அவர் நினைத்திருந்தால் வணிக நோக்கங்களைத் தாண்டி தமிழ் இசையை இன்னும் நேர்த்தியான பாதையில் வழிநடத்திச் சென்றிருக்கலாம். ஏனென்றால் 80 களின் மத்தியில் அவர் ராஜாங்கமே இங்கே நடந்து கொண்டிருந்தது.  மேலும் இளையராஜாவை வீழ்த்தக்கூடிய எந்த ஒரு இசைஞரும் கண்ணில் தென்பட்ட தூரம் வரை காணப்படாத நிலையில்  இளையராஜா  தனக்கு முன்னே இருந்த இசை மேதைகளின் இசைப் பாரம்பரியத்தை இன்னும் செம்மையாகி இருக்கலாம்.அதற்கு அவருக்கு கண்டிப்பாக எல்லா வாய்ப்புக்களும், திறமைகளும்,தகுதிகளும்   இருந்தன.  இருந்தும் 80 களின் மத்தியிலிருந்து அவரது இசையின் தரம் சரியத் துவங்கியது. How to name it? Nothing but wind போன்ற திரையிசை சாராத இசை முயற்சிகளை முயன்றவரால் ஏன் தரமில்லாத இசையை தடுத்து நிறுத்த முடியவில்லை என்பது ஒரு புதிராகவே இருக்கிறது. வைரமுத்துவைப் பிரிந்ததும் அவர் பாடல்களில் ஒரு கவிதை வெற்றிடம் உருவானது இதற்கு காரணமாக இருக்கலாம். அல்லது என் பாடல்களுக்கு கவிதையே தேவை இல்லை என்று அவர் நினைத்ததும் காரணமாக இருக்கலாம். இதைப் பற்றி அடுத்த பதிவில் எழுதப் போவதால் இங்கே நான் நிறுத்துகிறேன். அதற்கு முன் இளையராஜாவின் இன்னிசையின் பரிமாணம் நிறம் மாறியதை குறிப்பதற்காக மட்டும்   நான்  இந்தப் பதிவுக்கு இந்தத் தலைப்பை சூட்டவில்லை என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

அடுத்து: இசை விரும்பிகள் X - வீழ்ந்த இசை.
      

104 comments:

  1. இளையராஜாவைப் பற்றிய அசத்தலான பதிவு. இத்தனை விரிவாக ராஜா வைப் பற்றி நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்.பாராட்டுக்கள்.ராஜா இசையின் தரத்தை கெடுத்ததாக சொல்லி இருக்கிறீர்கள்.அதற்கு வைரமுத்துவை வீட்டுக்கு அனுப்பியதை காரணமாக எழுதி உள்ளீர்கள். என்னைப் பொருத்தவரை வைரமுத்துவின் பிரிவுக்கு பின்னும் ராஜா நல்ல பாடல்கள் கொடுத்திருக்கிறார்.உதாரணம் கரகாட்டகாரன்,நாயகன்,அஞ்சலி,அக்னி நட்சத்திரம்,அரங்கேற்ற வேளை,காதலுக்கு மரியாதை, நாடோடித் தென்றல் என்று நிறைய படங்கள்.

    ReplyDelete

  2. திரு அனானிக்கு,
    வருகைக்கு நன்றி.உங்கள் பெயரை சொல்லாமல் விட்டுவிட்டீர்களே. இளையராஜாவின் கடைசி பத்து வருட பாடல்கள் (86 இல் இருந்து) அவரின் வழக்கமான இசையை விட்டு வேறு பாதையில் பயணிப்பதை நீங்கள் உணரவில்லை போலும்.சில பாடல்கள் நன்றாக இருந்தது உண்மையே.ஆனால் அவரின் இன்னிசை அத்தியாயம் அப்போது ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாகவே நான் கருதுகிறேன்.அடுத்த பதிவில் உங்களின் ஆதங்கதிற்கு ஒரு வேளை விடை கிடைக்கலாம்.தொடர்ந்து படியுங்கள். நன்றி.

    ReplyDelete
  3. திரு காரிகன்,
    நீங்கள் இளையராஜாவை புகழ்கிறீர்களா அல்லது இகழ்கிறீர்களா என்று புரியவில்லை. நம்ப முடியாத அளவில் ராஜாவின் பாடல்களை அசத்தலாக பாராட்டிவிட்டு இறுதி பாராவில் வழக்கம் போல காரிகனாவது இளையராஜாவை உயர்த்திப் பேசுவதாவது என்று அவர் காலை வாரி விட்டீர்களே. எனக்கு குழப்பம் வந்துவிட்டது. ராஜா ரோஜா என்று படு மொக்கையான வரிகளை வைத்து பல பாடல்கள் போட்டவர் இளையராஜா. எனவே உங்கள் கூற்றில் சற்று நியாயம் இருப்பதுபோல இருக்கிறது. நல்ல பதிவு.
    குரு

    ReplyDelete
    Replies
    1. திருவாளர் குரு,
      நான் யாரையும் குழப்பவில்லை. தினமும் தொடர்ந்து உப்புமா சாப்பிட்டால் வரும் அலுப்பு போலத்தான் இது.

      Delete
  4. "His digital music was half-baked and very elementary"

    இளையராஜாவை திட்ட ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்க்காக அரைவேக்காட்டுதனமாக ஏதாவது சொல்ல வேண்டியது. இரண்டு உருப்படியான ஆல்பம் கொடுத்த depachemode போன்றவர்கள் எங்கே இளையராஜா எங்கே. ராஜா electronic music இல்
    செய்த அற்புதங்கள் எவ்வளவு. அவரை western ஆட்கள் பாராட்டுவதை பாருங்கள். தமிழனுக்கு தமிழன் தான் ஏதிரி

    http://www.redbullmusicacademy.com/magazine/ten-electronic-extroverts-from-the-middle-east-and-south-asia-02

    his one-man wide-winged pop-culture vulture has been indiscriminately ravaging and regurgitating global pop for over 40 years, and made some of the most joyous, existential and euphoric electronic South Asian pop music to ever grace the dancefloors, picture houses, wedding parties, concert halls and discotheques of Tamil and Malay-speaking countries and beyond.

    With a portfolio of 4,500 recorded songs under his belt, it might seem humanly impossible by the standards of today’s Western pop perfectionists and procrastinators to achieve what this mutable multi-instruMENTALIST has already done. Perhaps it actually IS “humanly impossible.” He’s a deeply religious man, without vices or venom, and has a strong preservationist tendency towards traditional Indian music. But Ilaiyaraaja is no enemy of technology. He is friends with the robots.

    I won't even start to explain his direct-to-disc independent record label or the fact that he has never been to a nightclub. But while your average “experimental” electronic musician in the West is still explaining to a dance music journalist how they “used to be into hip-hop but now they make witch-house,” Ilaiyaraaja has just done a four minute track that combines a Miami bass breakdown, Carnatic scales, a phased trumpet solo, a Ghazal middle-eight, a fight scene, a love-rap serenade and a singalong dance routine finale. Then, before you've had time to criticise, he's moved on.

    ReplyDelete
  5. திரு அனானிக்கு,
    உங்கள் வரவுக்கு நன்றி. ஒருவேளை நான் கடைசி பத்தியை எழுதியிருக்காவிட்டால் என்னைப் பற்றி நீங்கள் இப்படி நினைத்திருக்க மாட்டீர்கள் போலும். என்ன செய்வது உண்மையை யாராவது சொல்லத்தானே வேண்டும்?
    தமிழனுக்கு தமிழனே எதிரி போன்ற டெம்ப்ளேட் வாக்கியங்களை தவிர்ப்பது நலம். தமிழன் இளையராஜாவை மட்டும் குறிக்கும் சொல் அல்ல.
    யாரோ ஒரு ஆங்கிலேயன் இளையராஜாவைப் பற்றி சொல்லி இருப்பதை இங்கே கொடுப்பதால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை. மேஸ்ட்ரோ ரவி ஷங்கர் அல்லது ரகுமானைப் பற்றி இதே ஆங்கிலேயர்கள் என்ன சொன்னார்கள் என்று என்னாலும் இதை விட பெரிய பத்தியை கொடுக்க முடியும். அது முக்கியமல்ல. நீங்கள் சொல்ல வந்த கருத்தை சொல்லாமல் ஏன் மிஸ்டர் எக்ஸ் இளையராஜாவைப் பற்றி என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா என்று பேசுவது defending tactics. இதையெல்லாம் விட ரகுமான் ஆஸ்காரே வாங்கிவிட்டார். (அதையும் பணம் கொடுத்து வாங்கியதாக ஒரு கூட்டம் சொல்லி வருகிறது.)
    நீங்கள் ஆங்கில இசை கேட்பவராக இருக்க வாய்ப்புகள் குறைவு. Depeche Mode என்பதிலேயே எழுத்துப்பிழை. Depeche Mode மேற்கத்திய இசையில் செய்தது அசுர புரட்சி. கிடார் இல்லாமல் வெறும் எலெக்ட்ரானிக் கருவிகளைக் கொண்டே அவர்கள் கொடுத்த பாடல்கள் மிக மகத்தானவை. எதோ இரண்டு ஆல்பம் என்று சொல்லி எனக்கும் தெரியும் என்பது போல பேசுகிறீர்கள்.அந்த இரண்டு என்னென்ன என்பதையும் சொல்லி இருக்கலாம். அவர்களின் It's no good, Get the balance right, people are people, Black celebration,Landscape is changing, Clean, Policy of truth போன்ற பல பாடல்கள் அற்புதமானவை. இவர்களோடு இளையராஜாவை ஒரே கோட்டில் வைப்பதே மிக அபத்தம். இன்னும் சொல்லப் போனால் இளையராஜா நம் தமிழிலேயே ஜி. ராமநாதன்,சுதர்சனம்,சுப்பையா நாயிடு, போன்ற இசை மேதைகளின் பின்னே தான் வருகிறார். அவர்களின் சாதனைகளையே இவர் இன்னும் தொடவில்லை. அவர்களின் தரமும் இவரிடம் இல்லை.4500 பாடல்கள் இருக்கட்டும் அதில் எத்தனை உருப்படி என்று பார்த்தோமானால் ஒரு முன்னூறு கூட தேறாது. உண்மை இப்படி இருக்க இவரை ஆங்கில இசை குழுக்களுடன் இணைத்துப் பேசுவது மஹா மட்டித்தனம்.

    ReplyDelete
    Replies
    1. "யாரோ ஒரு ஆங்கிலேயன் இளையராஜாவை"

      மறுபடியும் ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள எந்த முயற்சியும் மேலோட்டமாக அடித்து விடும் அதே பழக்கம்.

      நீங்கள் ராஜாவின் electronic இசையை பற்றி பேசியதால் electronic musician மற்றும் உலகில் உள்ள வெவ்வேறு electronic musicஐ promote செய்யும் reissue label founder andy votel சொன்னதை சொல்கிறேன். அவரை விட நீங்கள் அதிகமாக electronic music தெரிந்தவர் போலும்.

      தமிழனுக்கு தமிழனே எதிரி என்று சொன்னது ராஜாவுக்காக என்று யார் சொன்னது. Rahman, Ravishankar (tamilana..theriyathee) இவர்களும் சேர்த்து தான். என்னை பொருத்த வரையில் ராஜாவை விடுங்கள். நீங்கள் சொல்லும் deepche mode rahmanன் electronic music பககத்தில் கூட வர முடியாது.

      சரி நீங்கள் எப்படி deepche mode தான் பெஸ்ட் என்று சொல்கிறீர்கள். உடனே யாரவது சொன்னதை quote செய்யதீர்கள். Defending tacts.நான் சில வருடங்களுக்கு முன் கேட்ட நினைவில் இருந்து இருந்து சொல்கிறேன். Violator albumல் வரும் personal jesus மற்றும் Halo மட்டுமே என் நினைவில் இருக்கின்றது. ஆனால்
      ஆனால் அவர்களை greatest electronic band என்று புகழ்ந்தார்கள். அது மேற்கு உலகில் உள்ள வழக்கம். மொத்ததமாக 10 ஆல்பம் தான் செய்வார்கள். ஆனால் greatest அது இது என்பார்கள். நம்மவர்கள் ஆயிரக்கணக்காக அள்ளி வீசுவார்கள். ஆனாலும் அருமை புரிவதில்லை.

      உலகின் greatest band ஆக கருதப்படும் beatles, ravishankarன் காலடியில் கிடந்தது. ஆனாலும் நம்மவர்கள் எப்பவுமே மேற்கத்திய மதிப்பீடுகளின் அடிப்படியிலேயே செயல் படும் வழக்கம் தான்.

      இன்று radiohead, animal collective, archade fire என்று கொண்டாடப்படும் அத்தனை experimental bandsம் உற்று பார்த்தால் நம்மவர்கள் இந்த விசயங்களை வேறு வடிவங்களில் நிறைய செய்திருகிறார்கள். நம்மவர்கள் என்று சொல்லுவது எல்லாரையும் சேர்த்து தான்.

      ராஜாவின் அசுர உழைப்பை 300 தான் தேறும் என்று தட்டும் அசட்டுத்தனம். இதற்கு என்ன செய்வது உணமையை சொல்ல வேண்டிஇருக்கிறது என்று mega சீரியல் வசனம் வேறு.

      ராஜாவின் அற்புதமே உலகின் பல்வேறு இசை வடிவங்களுக்கு இந்திய வடிவம் கொடுத்தது தான். இவை எல்லாமே ஒன்று தான் என்று சொல்லாமல் சொல்லுவது தான். அன்னகிளியில் ஆரம்பித்து நீதானே வரை எத்தனை முயற்சிகள். இப்போது adele போன்றவர்கள் பயன்படுத்தும் chamber pop இசையை ராஜா முதல் முறை பாடலில் எவ்வளவு அருமையாக கையாள்கிறார். இப்படி பட்ட கலைஞனை மிகையகாக புகழ்வதையாவது தாங்கலாம். ஆனால் முட்டாள் தனமாக இப்படி உளறுவதை.

      Delete
  6. மீண்டும் வருக திரு அனானி அவர்களே,
    ஆண்ட்ரு ஷல்க்ராஸ் எனக்கு கொஞ்சம் பரிச்சயமான பெயர்தான்.அவர் இளையராஜாவை மட்டுமல்ல உலகின் பல்வேறு இசைஞர்களைப் பற்றியும் சொல்லி இருக்கிறார்.அவரை விட உங்களுக்கு அதிகம் தெரியுமா என்று கேட்பது சிறுபிள்ளைத்தனமானது.ரகுமான் ஆஸ்கார் வாங்கியபோது வெள்ளைக்காரனுக்கு இது புதுசாக இருப்பதால் தூக்கி கொடுத்துவிட்டான் என்று சிலர் நக்கல் அடித்ததும் என் நினைவில் இருக்கிறது.நான் சொல்ல வந்தது ஒருவரைப் பற்றி மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை வைத்து ஒருவரின் மேதமையை தீர்மானிப்பது சரியல்ல என்பதே. இளையராஜாவின் டிஜிடல் இசை ஒரு வெற்று முயற்சி என்பதில் சந்தேகமே இல்லை. நீங்கள் கொஞ்சம் Giorgio Moroder ஆல்பத்தை கேட்டுவிட்டு பின்னர் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.இளையராஜாவை விட ரகுமான் மிக சிறந்த டிஜிடல் இசையை தமிழில் கொடுத்திருக்கிறார்.
    நான் எங்கேயும் இவர்தான் உலகிலேயே சிறந்தவர் என்று யாரையும் குறிப்பிடுவதில்லை. Depeche Mode குழுவினரும் அப்படியே. They are one of the best, but not the only one. Depeche Mode இசையையும் ரகுமானின் இசையையும் ஒன்றாக பேசுவது அடுத்த கோமாளித்தனம். என்னைப் பொறுத்தவரை ரகுமானை விட நல்ல ஆங்கில கலப்பிசையை ரசிக்கக்கூடிய வகையில் ஹாரிஸ் ஜெயராஜ் செய்துவருகிறார். ரகுமானின் பாடல்களில் இருக்கும் ஆங்கில வாடை சற்று தூக்கலாக துருத்திக்கொண்டு தெரியும். இந்த அந்நியச் சாயல் ஹாரிஸிடம் கிடையாது.(மேஸ்ட்ரோ ரவிசங்கர் தமிழர் கிடையாது அவர் வங்காளத்தைச் சேர்ந்தவர்)
    நீங்கள் குறிப்பிட்டுள்ள Personal Jesus, Halo இரண்டும் நல்ல பாடல்களே.அதே ஆல்பத்தில் வரும் Policy Of Truth பாடல் மிக அருமையானது. நம் இசைஞர்கள் அப்படிப்பட்ட டிஜிடல் தரத்திற்கு வர இன்னும் பல காலம் ஆகலாம்.Violator Depeche Mode டின் புகழ்பெற்ற ஆல்பம். மேலும் Construction Time Again, Some Great Reward, Black Celebration,Ultra ஆல்பங்களில் சிறந்த பாடல்கள் உள்ளன. உங்கள் ஞாபகத்திலிருக்கும் இரண்டு பாடல்களை கொண்டு உலகின் ஒரு மிக சிறந்த synth-pop band டை மதிப்பிடுவது அறிவுடைய செயல் அல்ல என்பது என் கருத்து.
    "ஆனால் அவர்களை greatest electronic band என்று புகழ்ந்தார்கள். அது மேற்கு உலகில் உள்ள வழக்கம். மொத்ததமாக 10 ஆல்பம் தான் செய்வார்கள். ஆனால் greatest அது இது என்பார்கள். நம்மவர்கள் ஆயிரக்கணக்காக அள்ளி வீசுவார்கள். ஆனாலும் அருமை புரிவதில்லை."
    உங்களுக்கு ஒன்று புரியவில்லை.இசையை மேற்கத்தியர்கள் அணுகும் விதமே வேறு. அவர்களைப் போன்று இசையை ரசிக்கும் மனோபாவம் நம்மிடமில்லை.அவர்கள் பீட்டில்ஸ் குழுவினரையும் கேட்பார்கள்.ரெட் ஹாட் சில்லி பெப்பெர்ஸ் இசையையும் ரசிப்பார்கள். இரண்டில் எது பெரியது என்று முட்டாள்தனமான விவாதங்களுக்குள் போக மாட்டார்கள். ஜஸ்டின் பீபர் என்னும் ஒரு சிறுவன் இப்போது தலைப்புச் செய்தியாக இருப்பதால் உடனே பாப்பிசை இவரிடமிருந்துதான் தொடங்கியது என்று வரலாறு தெரியாமல் கதைகள் புனைய மாட்டார்கள். நாம் அப்படியல்ல. இரண்டாவது பாடல்களின் எண்ணிக்கையைப் பற்றி சொல்லி இருக்கிறீர்கள். Quality is always preferred to quantity. Rolling Stones, Status Quo போன்ற இசைக்குழுக்கள் வருடாவருடம் வதவதவென்று ஆல்பங்களாக வெளியிட்டாலும் இரண்டே ஆல்பங்களுடன் Television என்ற ஒரு அமெரிக்க இசைக்குழு அசைக்க முடியாத இடத்தில இருக்கிறது. தமிழில் கூட எ எம் ராஜா என்கிற இசை மேதை குறைந்த அளவிலேயே படங்களுக்கு இசை அமைத்தார். அனால் அவரின் இடத்தை 800 படங்களுக்கு மேல் இசை அமைத்த இளையராஜாவினால் அடைய முடியவில்லை.(எ எம் ராஜா வினால்தான் ராசையா என்ற ஞான தேசிகன் இளையராஜா என்று மாறினார்)To be continued...

    ReplyDelete
  7. "உலகின் greatest band ஆக கருதப்படும் beatles, ravishankarன் காலடியில் கிடந்தது."
    இரண்டு தவறுகள். முதலாவாத் அது ரவி ஷங்கர் இல்லை ஸ்ரீ மகரிஷி என்னும் ஒரு சந்நியாசி. அதுவம் ஒரு குறுகிய கால அளவிலேயே அவர்கள் இதை செய்தார்கள். மகரிஷியின் பிரதாபங்கள் தெரிந்ததும் யு டர்ன் அடித்து சென்று விட்டார்கள். இரண்டாவது பீட்டில்ஸ் உலகிலேயே தலை சிறந்த இசைக்குழு என்பது உண்மை அல்ல. அது ஒரு மீடியா மாயை.பீடில்சை விட Pink Floyd ,The Turtles, Classics IV, Television போன்ற இசைக்குழுக்கள் சிறந்தவை.பீட்டில்ஸ் வெறும் காதல் பாடல்களாக பாடியவர்கள்.(அவர்களை விட ஆஸ்திரேலிய இசைகுழுவான midnight oil காதலைத் தாண்டி பல விஷயங்களை பாடி இருக்கிறார்கள்.Pink Floyd போன்று)
    ஆனாலும் நம்மவர்கள் எப்பவுமே மேற்கத்திய மதிப்பீடுகளின் அடிப்படியிலேயே செயல் படும் வழக்கம் தான்."
    இளையராஜாவைப் பற்றி ஆண்ட்ரு ஷல்கிராஸ் என்கிற Andy Votel கூறிய கருத்தை பிரதி எடுத்து பின்னூட்டமிட்டது நீங்கள்தானே. நீங்களே இப்படி பேசினால் எப்படி?
    " இன்று radiohead, animal collective, archade fire என்று கொண்டாடப்படும் அத்தனை experimental bandsம் உற்று பார்த்தால் நம்மவர்கள் இந்த விசயங்களை வேறு வடிவங்களில் நிறைய செய்திருகிறார்கள்.
    ரேடியோ ஹெட் alnternative rock இசையின் மிக முக்கியமான மையப்புள்ளி. animal collective, archade fire (நீங்கள் சொல்ல வந்தது Arcade Fire என்று நினைக்கிறேன்.) போன்றவை ரேடியோ ஹெட் அளவுக்கு பேசவேண்டிய குழுக்கள் இல்லை என்பது எனது அபிப்ராயம்.
    "நம்மவர்கள் என்று சொல்லுவது எல்லாரையும் சேர்த்து தான்."
    இது பரவாயில்லை.ராஜாமட்டும்தான் என்று நீங்கள் சொல்வீர்கள் என்று நினைத்திருந்தேன். மற்ற இசை மேதைகளையும் இப்போது சேர்த்துக்கொள்வது ஏனோ ?
    "ராஜாவின் அசுர உழைப்பை 300 தான் தேறும் என்று தட்டும் அசட்டுத்தனம்."
    ராஜாவின் இந்த 20 வருட ராஜாங்கத்தில் 300 ராவது தேறியதே என்று எடுத்துக்கொள்ளலாமா?
    "ராஜாவின் அற்புதமே உலகின் பல்வேறு இசை வடிவங்களுக்கு இந்திய வடிவம் கொடுத்தது தான்."
    ராஜாவின் ரசிகர்கள் இப்படி பேசாமல் போனால் எப்படி. இதைத்தானே நான் எதிர்பார்த்தேன். இறுதியில் நீங்கள் ராஜாவைப் பற்றி புதிதாக எதுவும் சொல்லவில்லை வழக்கமான ஆலாபனைதான். நிறையவே கேட்டாயிற்று.

    ReplyDelete

  8. "(மேஸ்ட்ரோ ரவிசங்கர் தமிழர் கிடையாது அவர் வங்காளத்தைச் சேர்ந்தவர்)"
    ஐயோ சார் அது காமெடி

    பிறகு இந்த காமெடி வேறு
    "முதலாவாத் அது ரவி ஷங்கர் இல்லை ஸ்ரீ மகரிஷி என்னும் ஒரு சந்நியாசி. அதுவம் ஒரு குறுகிய கால அளவிலேயே அவர்கள் இதை செய்தார்கள். மகரிஷியின் பிரதாபங்கள் தெரிந்ததும் யு டர்ன் அடித்து சென்று விட்டார்கள்".

    நான் சொன்னது சிதார் மேதை ரவிசங்கர். இதில் இருந்தே உங்கள் இசை புலமை வெளிச்சமாகிறது. அவரும் beatlesம் சேர்ந்து பணியாற்றியது கூட தெரியாது போலிருக்கிறது . போங்கள் போய் wiki search செய்யுங்கள் வழக்கம் போல

    அடுத்த காமெடி

    "பீட்டில்ஸ் வெறும் காதல் பாடல்களாக பாடியவர்கள்"

    இன்னும் கொஞ்சம் பேசினால் உங்கள் வண்டவாளம் வந்து விடும். eleanor rigby பாடலின் மூலமாக ஒரு தேசத்தையே சோகத்தில்/ ஆற்றாமையில் கொண்டு வந்த beatles பற்றி இப்படி ஒரு அடுத்த பொத்தம் பொதுவான பதில்.

    நான் andy votel பற்றி எழுதியதன் காரணம் உங்களுக்கு வெள்ளைக்காரன் பாட்டும் அவன் சொன்னால் தானே உரைக்கும் என்பதால். அதெல்லாம் உரைக்கத்தான் செய்யும். என்ன செய்ய நம்முடைய ego இடம் கொடுக்குமா. ராஜாவை கீழே இறக்குவதற்கு தானே நாம் எழுதுவதே.

    என்னடா andy votel பற்றி எழுதினால் எதோ பேரை எழுதுகிறாரே என்று wiki போனால் புரிகிறது. இதுதானே சாரு ஷாஜி உங்களை போன்ற ஆட்கள் காலா காலாமாக செய்வது. சும்ம்மா name throwing பம்மாத்து. இதை நிறைய பார்த்தாகி விட்டது. deepche mode பற்றி நான் நினைத்தாலும் search அடித்து பக்கம் பக்கமாக எழுதலாம். கொஞ்சம் உண்மையாக நீங்கள் கேட்டதை வைத்து எழுதுங்கள்.

    "அவர்களைப் போன்று இசையை ரசிக்கும் மனோபாவம் நம்மிடமில்லை.அவர்கள் பீட்டில்ஸ் குழுவினரையும் கேட்பார்கள்.ரெட் ஹாட் சில்லி பெப்பெர்ஸ் இசையையும் ரசிப்பார்கள். இரண்டில் எது பெரியது என்று முட்டாள்தனமான விவாதங்களுக்குள் போக மாட்டார்கள். "

    மறுபடியும் மேலை நாடு ஜால்ரா
    இப்போது கூட beethoven vs mozart, beatles vs led zepplin என அங்கேயும் சண்டை ஓயாதது. pls go and search


    "இரண்டில் எது பெரியது என்று முட்டாள்தனமான விவாதங்களுக்குள் போக மாட்டார்கள்."

    இதை சொல்லும் அதே ஆள் தான் இவ்வளவு மட்டமான comparison செய்வது

    எ எம் ராஜா என்கிற இசை மேதை குறைந்த அளவிலேயே படங்களுக்கு இசை அமைத்தார். அனால் அவரின் இடத்தை 800 படங்களுக்கு மேல் இசை அமைத்த இளையராஜாவினால் அடைய முடியவில்லை..super joke sir

    பீட்டில்ஸ் வெறும் காதல் பாடல்களாக பாடியவர்கள்.(அவர்களை விட ஆஸ்திரேலிய இசைகுழுவான midnight oil காதலைத் தாண்டி பல விஷயங்களை பாடி இருக்கிறார்கள்.Pink Floyd போன்று)

    appo ippadi muttalthanmaaga vivadhikkum நீங்க முட்டாள் தானே சார்.


    ReplyDelete
  9. Amudhavan said;இவ்வளவு அருமையான கட்டுரைகள் சேரவேண்டியவர்களை இன்னமும் சென்று சேராமல் இருக்கிறதே என்று நினைத்தேன். மேலே கண்ட விவாதங்கள் அவர்களிடம் இவை சென்று சேர்ந்துவிட்டன என்பதைக் காட்டுகிறது. அந்த வகையில் மகிழ்ச்சி.

    விவாதங்கள் விவாதங்களாகவே தொடர்வதை நிறைய சரக்குள்ளவர்கள் செய்யமுடியும். அப்படியில்லாதவர்கள் தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபட்டுவிடுவார்கள். அப்படிச் செய்தால்தானே பேசுகின்ற மையக்கருத்தை விட்டு விவகாரத்தை மடைமாற்றம் செய்யமுடியும்?

    மொத்தமே மூன்று தான்.

    இளையராஜா இண்டர்லூடைக் கொண்டுவந்தவர்.
    இளையராஜா உலகின் பல்வேறு இசைவடிவங்களுக்கு இந்திய வடிவம்( இந்திய வடிவமா, தமிழ்வடிவமா?) கொடுத்தவர்.
    இளையராஜா நோட்ஸ் எழுதத்தெரிந்தவர்........ஆகவே உலகின் சிறந்த மற்றும் ஒரே இசையமைப்பாளர் - மன்னிக்கவும் - இசைக்கடவுள் இளையராஜா ஒருவர்தான். எப்படி சௌகரியம்?
    ஆமாம் மற்ற பின்னூட்டங்களையெல்லாம் ஏற்றுக்கொள்ளும் உங்கள் தளத்தில் மேற்கண்ட கட்டுரையைப் படித்துவிட்டு நான் போட்ட பின்னூட்டம் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படவே இல்லை. நிறைய முயன்றுவிட்டு விட்டுவிட்டேன். பார்த்தால் பப்ளிஷ் ஆகாமல் பரலோகம் போய்விட்டிருக்கிறது. என்ன சிக்கல் என்று தெரியவில்லை. மீண்டும் அதனை எழுதமுடியுமா என்று பார்க்கிறேன்.

    ReplyDelete

  10. இவ்வளவு அருமையான கட்டுரைகள் சேரவேண்டியவர்களை இன்னமும் சென்று சேராமல் இருக்கிறதே என்று நினைத்தேன். மேலே கண்ட விவாதங்கள் அவர்களிடம் இவை சென்று சேர்ந்துவிட்டன என்பதைக் காட்டுகிறது. அந்த வகையில் மகிழ்ச்சி

    நான் அவ்ளோ பெரிய ஆளா. அப்போ நீங்கள் கட்டுரை எழுதுவதே இதற்கு தான் போல. பரிதாபம் சார். ஆனால் இவை மீண்டும் மீண்டும் ராஜாவின் மேல் எதோ agenda அல்லது hatred கொண்ட கும்பலின் கோமாளித்தனமாக தான் தெரிகிறது.

    " தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபட்டுவிடுவார்கள்"
    ராஜாவையே ஆணவக்காரன் என்று தனி மனித தாக்குதல் செய்ய வேண்டியது. இதெயெல்லாம் நீங்கள் சொல்கிறீர்கள் .
    நான் எங்கே தனிப்பட்ட தாக்குதல் செய்தேன். அவர் தனக்கு தான் ஏலேக்ட்ரோனிக் music theriyum. மற்றவருக்கு english music theriyathu..(ஏனென்றால் ஸ்பெல்லிங் mistake என்கிறார்.). என்று தனிபட்ட தாக்குதல் செய்தார்.
    நான் ஒன்றும் எல்லா இசையும் தெர்யும் என்று சொல்லவில்லை. ஆனால் நீங்கள் சொல்வது போல் நான் கேட்ட இவர்களின் இசைக்கு ராஜவின் இசை கொஞ்சமும் குறைவில்லை என்கிறேன்.
    என்னை விடுங்கள் ஏலேக்ட்ரோனிக் music label நடத்தும் ஒருவர் சொன்னால், செல்லாது எல்லோரும் இப்படி சொல்வார்கள் என்கிறார்.அய்யா அவர் என்ன இளையராஜா இசை வெளியீடு விழாவில் பேசினாரா. இளையராஜாவை நேரில் கூட பார்த்திருக்க மாட்டார். வெறும் இசையின் அடிப்படையில் அவர் சொல்வதை எடுத்துகொள்வதா. அல்லது தப்பும் தவறுமாக எனக்கு எல்லாம் தெரியும் என்றும் ராஜாவை எதாவது குறை சொல்ல வீண்டும் என்று சொல்லும் இவர் சொல்வதையா.

    இதில் அவர் ஹாரிசை வேறு புகழ்கிறார். மொத்தத்தில் battery போட்டு வாசித்தால் அது electronic music போல.

    என்னமோ ராஜாவை ரசிபவர்கள் வேறு எதையும் கேட்கமாட்டார்கள் என்பது மாதிரி, நாலு வெஸ்டேர்ன் bands பற்றி படம் காட்டுவது அல்லது MSV, AM Raja என்று tution எடுப்பது.

    "இளையராஜா இண்டர்லூடைக் கொண்டுவந்தவர்.
    இளையராஜா உலகின் பல்வேறு இசைவடிவங்களுக்கு இந்திய வடிவம்( இந்திய வடிவமா, தமிழ்வடிவமா?) கொடுத்தவர்.
    இளையராஜா நோட்ஸ் எழுதத்தெரிந்தவர்........ஆகவே உலகின் சிறந்த மற்றும் ஒரே இசையமைப்பாளர் - மன்னிக்கவும் - இசைக்கடவுள் இளையராஜா ஒருவர்தான். எப்படி சௌகரியம்?"

    உங்களுக்கு ராஜாவையும் அவர் ரசிகர்களையும் சுத்தமாக புரியவில்லை வழக்கம் போல உங்கள் மேம்போக்கான புரிதல் வைத்து ஏதாவது உளறுவது.

    ராஜா என்ன சொல்கிறார். தான் எதாவது கண்டுபிடதேன் என்றாரா. music is just fooling வித் 7 notes எனகிறார். எல்லாரும் நீங்கள் தான் கிராமிய இசையை தமிழில் கொண்டு வந்தீரகள் என்பதற்கு அவர்..அதெல்லம் ஏற்கனவே திரையிசையில் செய்யத் பட்டதுதான் என்கிறார்.
    எந்த ராஜா ரசிகனும் interlude கண்டுபிட்தது ராஜா என்று சொல்ல வில்லை. இந்திய தமிழ் வடிவம் கொடுத்தது அவர் மட்டும் தான் என்றும் சொல்ல வில்லை. இவை அனைத்தையும் மிக மிக சிறப்பாக செய்தார் என்பதே சந்தேகமில்லாத(நீங்கள் மட்டும் தான் சொல்வீர்களா ) உண்மை ( உங்கள் நண்பரே மேலே interlude பற்றி சொல்லி இருக்கிறார்). பல ராஜாவின் பாடல்களில் interlude என்பது வெறும் பல்லவி to சரணம் என்ற ஒற்றை முறை இல்லாமல், அந்த இடத்தில திரைபடத்தில் ஒரு முக்கியமான sceneன் bgm ஆக இருக்கும், ஒரு genre டு genre shift ஆக இருக்கும், அந்த மொத்த பாடலின் pillar notes ஆகா இருக்கும். இப்படி பல.

    நோட்ஸ் எழுதுவது எனபது ஒரு composerன் தெளிவை காட்டுகிறது. இந்த இடத்தில் அந்த instrumentalist வைத்து எதாவது பார்த்து கொள்ளலாம் என்றோ. patch வைத்து fill செய்யலாம் என்றோ முடியாது. பல்லவி மட்டும் catchy என்ற formula musicல் இது தேவை இல்லை. ஒரு பாடலின் ஒவ்வொரு அசைவும் compostion தான் என்ற நினைப்பே உன்மையான கம்போசிங். நோட்ஸ் எழுதுவது அல்ல பெருமை. அதற்கு இருக்கும் காரனகளும் அதனால் விளையும் அற்புதங்களுமே. எல்லாரும் நோட்ஸ் எழுத முடியும். ஆனால் மிக மிக கடினமான பாடல்களுக்கு கூட ராஜா விரைவாக நோட்ஸ் எழுதுவது (அதாவது அந்த பாடல் முழுவதயும் உடனே conceptualize செய்வது) ரசிகர்கள் மட்டும் அல்ல. பல்வேறு இசை கலைஞர்களும் அதிசயப்படுவது)

    பாருங்கள் ஒரு கருத்து சொல்ல ..அது வளர்கிறது. இப்படிபட்ட கலைஞர்களை பாராட்டவே நம்மக்கு நேரம் பத்தாது. இதில் நீங்கள் குற்றச்சாட்டு வேறு. வையுங்கள் ஆனால் அதில் ஒரு கண்ணியம் வேண்டும். சும்மா half baked electronic music என்று பினாத்த கூடாது.

    ReplyDelete
  11. வருக திரு அனானி அவர்களே,
    நீங்கள் ஒரு நோக்கத்தோடுதான் இங்கே வந்திருக்கிறீர்கள் போலும்.நல்லது. பீட்டில்ஸ் பற்றி உங்களுக்கு தெரிந்ததை சொல்லி இருக்கிறீர்கள். ஜார்ஜ் ஹாரிசன் பண்டிட் ரவிசங்கரோடு இணைந்து பணியாற்றியது உண்டு.அவர் பீட்டில்ஸ் குழுவில் இருந்தவர் என்பதை ஆங்கில இசையில் பரிச்சயம் உள்ளவர்கள் அறிவார்கள். நான் இந்த ரவிஷங்கரைத்தான் வங்காளத்தை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டிருந்தேன். பீட்டில்ஸ் குழுவினர் மகரிஷி என்ற சந்நியாசியிடம் சில காலங்கள் பக்தர்களாக இருந்ததையும் சொல்லி இருந்தேன்.உங்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தை சொன்னதற்கு இத்தனை கோபமா? விக்கிபீடியா வரும் முன்னே நான் ஆங்கில இசையை ரசித்தவன். எனவேதான் என்னால் என் ஞாபக அடுக்குகளிலிருந்து பல தகவல்களை சிரமமின்றி சொல்ல முடிகிறது.உங்களுக்கு அப்படி இல்லை என்பதால்தான் விக்கிபீடியா என்று ஆரம்பிக்கிறீர்கள்.பீட்டில்ஸ் இன்றுவரை அவர்களின் பல காதல் பாடல்களாலே நினைவு கொள்ளப்படுகிறார்கள் . அவர்கள் மிக புகழ் பெற்றிருந்தாலும் சில இசை விமர்சகர்களால் Baby Band என்று முத்திரை குத்தப்படுவதுண்டு. நான் குறிப்பிட்டுள்ள மற்ற சில ஆங்கில இசைக் குழுக்களை கேட்டுவிட்டு அதன் பின் கருத்திட வாருங்கள்.ஆங்கில இசை நம் தமிழிசை போன்று வெறும் சினிமா பாடல்களோடு முடிந்துவிடுவது இல்லை என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.
    நான் ஆண்டி வோடேல் பற்றி முதலில் எதுவுமே சொல்லவில்லை. என்னைப்பொருத்தவரை அவர் ஒரு nonexistent. அவர் இளையராஜாவைப் பற்றி சொன்னது பெரிய விஷயமேயில்லை. நீங்கள்தான் வெள்ளைக்காரன் என்றதும் அதை எனக்கு அனுப்பி இதோ பார் ஒரு வெள்ளைக்காரன் இளையராஜாவை எப்படி புகழ்ந்து சொல்லி இருக்கிறான் என்று மார் தட்டினீர்கள். எனக்கு வெள்ளை கருப்பு என்ற வேறுபாடு இசையில் கிடையாது. உங்களுக்கு ஆங்கில இசையில் கொஞ்சம் கூட நாட்டமோ பரிச்சயமோ இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.என்னை முட்டாள் என்று சொல்வதில் உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் தாராளமாக சொல்லி விட்டு போங்கள். ஆனால் இளையராஜாவை ஒரு கோட்டிற்கு மேல் என்னால் உயர்த்திப் பேசவே முடியாது.அதுவே உங்களை கோபப்படுத்துகிறது. நல்லது. தனி மனித தாக்குதலில் ஈடுபடும் உங்களைப் போன்ற விஷயமில்லாதவர்கள் நான் என்ன சொன்னாலும் அதை ஏற்கப்போவதில்லை. நீங்கள் இன்னும் ஒரு சிறு குட்டையிலே குதித்துக்கொண்டிருக்கிறீர்கள்.நீங்கள் என் தரத்திற்கு வளர்ந்தபின் நாம் பேசலாம்.உங்களை மதித்து இவ்வளவு தூரம் பேசியதே போதும் என்று தோன்றுகிறது.

    ReplyDelete

  12. திரு அமுதவன் அவர்களே,
    உங்களைத்தான் எதிர்பார்த்திருந்தேன்.இன்னும் காணவில்லையே என்று நினைத்திருந்த வேளையில் உங்கள் பின்னூட்டம் வந்தது. என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.எனக்காக மறுபடியும் அந்த பழைய பின்னூட்டத்தை மறுபதிப்பு செய்யுங்கள்.நீங்கள் சொன்னபடியே இளையராஜா என்று வந்ததும் பல அனானிகள் களத்தில் குதிக்கிறார்கள். சொன்னதையே சொல்லிக்கொண்டு கருத்துக்களைப் பற்றி விவாதிக்காமல் ஆட்களை விமர்சனம் செய்கிறார்கள். என்ன செய்வது அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவே. ஆடுகளால் குதிரைகள் போன்று ஓட முடியுமா என்ன?

    ReplyDelete
  13. திரு அமுதவன் அவர்களே,
    spam mails சரி பார்த்துக்கொண்டிருந்தபோது உங்களின் மற்றும் திரு அனானியின் கருத்துக்கள் தவறுதலாக அழிக்கப்பட்டுவிட்டன. நான் அவற்றை என் g mail உதவியுடன் மறுபடியும் paste செய்துள்ளேன்.எனவேதான் உங்கள் கருத்து என் பெயரின் கீழ் வந்திருக்கிறது.வேறொன்றுமில்லை.உங்களின் பழைய காமெண்ட் spam mail லிலும் இல்லை. அதை மீண்டும் பதிவு செய்யவும்.

    ReplyDelete
  14. திரு காரிகன்,
    தற்போதுதான் என் நண்பர் ஒருவர் உங்களைப் பற்றி சொல்லி உங்கள் வலைபூவுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.நீண்ட பதிவை எழுதி இருக்கிறீர்கள்.படிக்க நன்றாக இருந்தது.நான் இளையராஜாவின் கோல்டன் ஹிட்ஸ் ரசிகன். உங்கள் எழுத்தில் மிகை இன்றி நடுநிலமையான பாராட்டுகள் இருக்கின்றன.ஆனாலும் எங்கோ ஓரிடத்தில் ஊசி வைத்து தைப்பது போல ராஜாவை குத்துவது தெரிகிறது.இப்போதுதான் முதல் முறையாக உங்கள் எழுத்தைப் படிக்கிறேன். இங்கே வந்த சில பின்னூட்டங்களை படித்தபோது நீங்கள் ராஜாவை விமர்சிப்பவர் என்று அறிந்துகொண்டேன்.ஆனால் பிறகு எப்படி அவரை பாராட்டி எழுத முடிகிறது? இதுவே ராஜாவின் சிறப்பு என்று எடுத்துக்கொள்ளலாமா?

    இப்படிக்கு
    அமலன் ராஜ்.

    ReplyDelete
  15. திரு அமலன் ராஜ்,
    வருகைக்கு நன்றி நிறைய அனானிகள் வருகிறார்களே என்று பார்த்தேன் .பரவாயில்லை. பெயரை தெரிவித்திருக்கிறீர்கள். உங்களைப் போன்ற சில (சிலரே) ராஜா அபிமானிகள் எதிர்வாதம் புரியாமல் அநாகரீக வார்த்தைச் சாடலில் ஈடுபடாது கருத்து கூறுவது ஆரோக்கியமான விஷயம்.நான் ஊசி கொண்டு இளையராஜாவை தைப்பது ஏன் என்று கேட்டிருக்கிறீர்கள். அது அப்படியல்ல. இளையராஜாவின் தரமான நல்லிசையை பாராட்டாமல் இருக்க முடியாது. அதேவேளையில் அவரிடமிருந்து புறப்பட்ட குப்பையான பாடல்களை தங்கம் வைரம் என்று மனசாட்சி இன்றி புகழவும் முடியாது. எல்லோருமே விமர்சனதிற்கு உட்பட்டவர்கள்தான்.அதில் இளையராஜாவும் அடக்கம். நான் இளையராஜாவை விமர்சித்தாலும் பாராட்டுவதே அவரின் சிறப்பு என்று நீங்கள் எண்ணுவது உங்கள் விருப்பம். இது என் நடுநிலையை காட்டுவதாக இருப்பதாக நீங்கள் எடுத்துக்கொள்ளலாம் . கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  16. சந்துரு19 July 2013 at 03:31

    காரிகன் அய்யா.

    இதைப் போல கோமாளி பதிவை நான் எங்கும் பார்த்ததில்லை.நுனிப்புல் மேய்தல் எனபது இது தானோ.ஏன் அய்யா உமக்கு இந்த கொலை வெறி.
    உங்கள் ஒஸ்கார் கனவு ரகுமானே சொல்லிட்டாரே இந்த ஒஸ்கார் எல்லாம் அவருக்கு கீழ் என்று.நீர் சும்மா பினாத்த வேண்டாம்.போதை தெளிந்ததும் ஒருமுறை படித்து பார்க்கவும்.வளர வேண்டிய தூரம் நிறையவே உள்ளது.

    ReplyDelete
  17. திரு சந்துரு அய்யாவுக்கு,
    முதல் முறையாக என் பதிவுக்கு வந்து நல்ல முத்துக்களாக உதிர்த்துவிட்டுச் சென்றிருக்கிறீர்கள். என்ன செய்வது?சட்டியில் இருப்பதுதானே கரண்டியில் வரும். நான் நுனிப்புல் மேய்ந்திருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள்.நல்லது.இப்படி நுனிப்புல் மேய்ந்ததற்கே சிலருக்கு உச்சந்தலை வரை சூடு ஏறுகிறது.இன்னும் வேர்கள் வரை ஆராய்ந்து "விரிவாக"எழுதி இருந்தால் உங்களுக்கெல்லாம் என்ன ஆகும் என்று கற்பனை செய்யவே படு திகிலாக இருக்கிறது. சரி அதை விடுங்கள். அது என்ன ஒஸ்கார் கனவு ரகுமான்? ஒருவேளை இந்த பதம் இளையராஜாவுக்கோ அல்லது கமலஹாசனுக்கோ பொருத்தமாக இருக்கும்.ரகுமான் இரண்டு ஆஸ்கார் வாங்கிய போது நீங்கள் கோமாவில் இருந்தீர்களோ?ரகுமான் ஆஸ்கார் விருதை இளையராஜாவின் காலுக்கு கீழ் என்று சொல்லிவிட்டார். சரி. இளையராஜா எம் எஸ் வி துப்பிய எச்சில்தான் தன் இசை என்று சொல்லி இருக்கிறாரே?அதை பற்றி கருத்து சொல்லவில்லையா?
    " போதை தெளிந்ததும் ஒருமுறை படித்து பார்க்கவும்." என்று "தெளிவாக"சொல்லி இருக்கிறீர்கள்.உங்கள் பின்னூட்டத்தை படிக்கும்போது இது உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொண்டது போல இருக்கிறது.

    ReplyDelete
  18. கொஞ்சம் வேறு வேலைகளில் பிசியாக இருப்பதால் இணையத்தில் சில நாட்களாக அதிகமாக ஈடுபட முடியவில்லை. கிடைத்த சிறிது நேரத்தில் உங்கள் பதிவைப் படித்து நீண்ட விமரிசனம் எழுதினேன். அது இடம்பெற முடியாமல் போய்விட்டது. என்னுடைய பதிவிற்கான பின்னூட்டங்களுக்கும் நிறைய பதில்கள் எழுதவேண்டும். ஆனால் நேரமில்லை. இதில் கவிஞர் வாலியின் மரணம் வேறு.
    உங்கள் பதிவைப் பொறுத்தவரை அற்புதமான நடுநிலையான பதிவு. மிக விரிவாக அலசி ராஜாவின் குறிப்பிடத்தகுந்த பாடல்கள் அத்தனையையும் கொண்டுவந்திருக்கிறீர்கள். இந்த அளவுக்கு ராஜாவின் அத்யந்த ரசிகர்களுக்கே இவ்வளவு விவரங்கள் புரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.ராஜாவைப் பற்றிய கண்ணியமான, தீர்க்கமான, ஆழமான மிகச்சிறந்த துலாக்கோல் உங்களிடம் இருக்கிறது.
    வைரமுத்துவுக்கும் ராஜாவுக்கும் உரசல் ஏற்பட்டு இருவரும் பிரிந்தது நிச்சயம் இருவருக்குமே நஷ்டம்தான். வைரமுத்து பிரிவுக்குப் பின்னரும், இளையராஜா வெற்றிகள் பெற்றார் என்பது உண்மைதான் என்றாலும் இருவருக்குமான ஒரு காம்பினேஷனுக்கு தனித்த அடையாளம் கிடைத்திருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. அந்த 'தனித்த அடையாளம்' இருவருக்குமே பறிபோய்விட்டது.
    அன்றைய நிலையில் ராஜாவைச் சார்ந்தே இருந்திருக்கவேண்டிய வைரமுத்து தன்னுடைய ஒரு ஏழெட்டுப் பாடல்கள் ஹிட்டானதும் தான் கண்ணதாசனை மிகச்சுலபமாகத் தாண்டிவிட்டோம் என்று மனதளவில் நினைத்தது அவரது ஈகோ வளர்வதற்கான காரணமாக இருக்கலாம்.
    இளையராஜாவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். ஆகவே இருவருக்குமான பிரிவு சடுதியில் ஏற்பட்டுவிட்டது.
    அந்த நாட்கள் ஏ.ஆர்.ரகுமான் வரவுக்கான அற்புதக்கதவுகள் திறக்கப்பட்ட நாட்கள் என்பதால் வைரமுத்து அங்கே சென்று சேர்ந்துகொள்ள மேலும் அதிகப் பாடல்கள் எழுத வாய்ப்புகளுக்குக் குறைவில்லையே தவிர வைரமுத்துவுக்கான 'தனித்த அடையாளங்களை' ரகுமான் இசையில் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை.

    'உன்னைநான் சந்தித்தேன்' படத்தில்வரும் 'தேவன் தந்த வீணை' பாடல் வைரமுத்து எழுதியதல்ல என்று நினைக்கிறேன். அது கண்ணதாசன் எழுதியது. கவிஞர் எழுதி இளையராஜாவால் வேறொரு படத்துக்குப் போடப்பட்ட பாடல் அது. அந்தப் படத்தில் அப்பாடல் இடம்பெறவில்லை. 'உன்னைநான் சந்தித்தேன்' படத்திற்கு படப்பிடிப்பு நடத்த படப்பிடிப்புக்குழு பாடலுக்காகக் கொடைக்கானலில் காத்திருக்க, "புதிய பாடல் இசையமைத்துப் பதிவு செய்ய நேரமில்லை. இந்தப் பாடல் இருக்கிறது. கவிஞர் எழுதியது. கதைக்கு சரியாக இருந்தால் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அந்தத் தயாரிப்பாளரிடம் நான் அனுமதி வாங்கிக்கொள்கிறேன்" என்று சொல்லி இளையராஜா அந்தப் பாடலை அனுப்பிவைத்திருந்தார் என்று நினைவு. அந்தப் படப்பிடிப்பு சமயத்தில் நானும் கொடைக்கானலில் அங்கே இருந்தேன். (ஒருவேளை இது அந்தப் பாடலாக இல்லாவிட்டால் அதே படத்தில் வேறொரு பாடல் இருக்கக்கூடும்)

    வெற்றுப் பாராட்டுக்கள் வரவில்லையே என்பதுபற்றி யோசிக்காதீர்கள். அவை நீண்ட நாட்களுக்கு நிற்காது. அவையெல்லாம் விசில்கள் போல. ஆரவாரமாகக் கேட்கும். ஆனால் ஆயுள் குறைவு. இதுபோன்ற செம்மையான பதிவுகள் நிற்கும் நிலைக்கும். ஆகவே இதே நடுநிலையுடன் தொடருங்கள்.

    ReplyDelete
  19. அமுதவன் அவர்களே,
    உங்கள் பாராட்டுக்கு நன்றி. இருந்தும் உங்களின் முதல் பின்னூட்டத்தில் என்னவிதமாக எழுதி இருப்பீர்கள் என்று நினைத்துப் பார்கிறேன். உங்களின் பல வேலைகளின் மத்தியில் இங்கே வருவது சற்று சிரமான காரியம்தான்.புரிகிறது. பல அனானிகள் வந்து சத்தம் போட்டுவிட்டு செல்கிறார்கள்.சிலருக்கு புரியவில்லை போலிருக்கிறது.நிறம் மாறிய பூக்களுக்கே இப்படி என்றால் அடுத்த வீழ்ந்த இசைக்கு எப்படியெல்லாம் கூச்சல் போடுவார்கள் என்று தெரியவில்லை. கவிஞர் வாலியின் மரணத்திற்கு அஞ்சலியாக உங்களிடமிருந்து ஒரு நீண்ட பதிவு வெகு விரைவில் வரும் என்று நினைக்கிறேன்.
    இளையராஜா-வைரமுத்து பிரிவே இளையராஜாவின் வீழ்ச்சிக்கு கதவுகளை திறந்து விட்டது என்பது என் எண்ணம்.நீங்கள் தேவன் தந்த வீணை பாடலைப் பற்றி சொல்லி இருக்கிறீர்கள். எனக்கு சரியாக நினைவில்லை. வைரமுத்துவின் பாடல் அது என்று நினைத்திருந்தேன்.
    நான் நியாயமாகவே எழுதிக்கொண்டு வருகிறேன் என்றே இதுவரை உணர்கிறேன்.அனானிகள் புலம்புவது குறித்து எனக்கு கவலை கிடையாது . அவர்களின் தாகத்தை தீர்க்கும் திரவம் என்னிடம் இல்லை. உங்கள் பாராட்டுக்கும் ஆதரவுக்கும் நன்றி. மீண்டும் சந்திப்போம்.

    ReplyDelete
  20. நச்சென்ற கட்டுரை காரிகன் சார்.உங்களின் பழைய கட்டுரைகளையும் படித்துவருகிறேன். குறிப்பாக வென்ற இசை நிற்காத மழை போன்றவை. இது யாருடா இப்படி இசையைப் பற்றி எழுதுவது என்று முதலில் கொஞ்சம் திகைப்பாக இருந்தது. பல பழைய பாடல்களை நிறைய கேட்டிருந்தாலும் எனக்கு எம் எஸ் வி கே வீ மகாதேவன் இருவரைத்தாண்டி பழைய இசை அமைப்பாளர்களை அவ்வளவாகத் தெரியாது. இளையராஜா என்றதும் இந்த கட்டுரையை வாசித்தேன்.மிக அருமையான எழுத்து.சில இடங்களில் ராஜாவை சீண்டிப் பார்க்கும் மீறல், கண்மூடித்தனமில்லாத நியாயமான பாராட்டு,நாகாரீகமான விமர்சனம் என்று ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது உங்கள் நடை.படித்து முடிக்கும் வரை நிறுத்த முடியாமல் வாசித்தேன். ராஜா எதிர்ப்பு போல தெரியாவிட்டாலும் சில நண்பர்களின் பதிலைப் பார்க்கும் போது ஒரு subtle ஆக உங்கள் எழுத்தில் கொஞ்சம் அது இருப்பதாகவே நினைக்கிறேன். மற்றபடி ராஜாவை இப்படி வேறுவிதமான கோணத்தில் கொண்டாடிய மற்ற கட்டுரையை நான் இணையத்தில் படிக்கவில்லை. உங்களின் ரஷ்ய இலக்கிய கட்டுரைகளும் நன்றாக இருக்கின்றன.(நானும் சில ரஷ்ய கதைகள் படித்ததுண்டு) அசத்தலாக எழுதி வருகிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. Karigan,

    Once
    again a welll written article ,keep writing!

    Commenting from mob .will come again .

    ReplyDelete
  22. வவ்வால்,
    உங்களிடமிருந்து வவ்வாலின் வழக்கமான கலக்கலான நீண்ட பின்னூட்டத்தை எதிர்பார்கிறேன். கூடிய விரைவில்?

    ReplyDelete
  23. திரு ராஜேஷ் கண்ணன் ,
    வருகைக்கு நன்றி. தெளிவாகவே உங்கள் கருத்தை பதிவு செய்திருக்கிறீர்கள்.உங்களின் பாராட்டுக்கும் எனது நன்றி. சிலர் நான் இளையராஜாவை காட்டமாக விமர்சித்து எழுதுவதாக கோபப்படுகிறார்கள்.நீங்களோ நான் இளையராஜாவை கொண்டாடுவதாக சொல்கிறீர்கள். இரண்டுமே தவறு. பாராட்டுவது வேறு.அர்த்தமில்லாமல் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடுவது வேறு.subtle லாக நான் இளையராஜாவை எதிர் விமர்சனம் செய்வதாக உங்களுக்குத் தோன்றுவது உங்களின் கோணத்தில் உண்மையாக இருக்கலாம். என் பழைய பதிவுகளைப் படித்து வருவது குறித்து மிக்க மகிழ்ச்சியே.ரஷ்ய புதினங்களைப் பற்றி நான் இன்னும் விரிவாக எந்த பதிவையும் எழுதவில்லை. இறுதியாக எம் எஸ் வி, கே வீ மகாதேவன் இருவரைத் தாண்டி வேறு எந்த பழைய இசை அமைப்பாளர்களைப் பற்றியும் தெரியாது என்ற உங்களின் confession பொதுவாக எல்லோரிடமும் இருக்கும் இசை பற்றிய விசாலமில்லாத அணுகுமுறையே. மன்னித்துவிடலாம். கொஞ்சம் 60, 70 களின் இசையை கேட்டீர்களானால் உங்கள் எண்ணம் வெகுவாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது. மீண்டும் வாருங்கள் திரு ராஜேஷ் கண்ணன் அவர்களே. உங்கள் பெயர் எனக்கு மறந்துவிட்ட சில ஞாபகங்களை உயிர்ப்பூட்டியுள்ளது.

    ReplyDelete
  24. Mr.Kaarigan,
    Great article on Ilayaraja. Enjoyed reading it thoroughly.By the way you've mentioned certain western rock bands in your essay, which quite surprised me. Coz not much of people in our country know about the bands you refer to like The Turtles, Classics IV, Depeche Mode except for Pink Floyd and the Beatles. Thing is you have listened to America's one of the weirdest , most underrated yet iconic bands called Television. Tom Verlaine is quite a genius in the right sense of the word. I love listening to his Marquee Moon (What a glorious guitar riff!). Felt so delighted to know there's someone who floats in the same frequency as mine. Some kiddish comments I read at the bottom of your article. Ignore them at one go.Frankly speaking I love old Tamil songs of the 60s no matter what my friends and family say. Keep up the good work. I prefer you to come up with an article on your taste on western rock bands. Looking forward to reading them soon...
    From
    G. Oliver

    ReplyDelete
  25. Mr.G.Oliver,
    It's a pleasure reading your comments. Thanks.
    இளையராஜாதான் மேற்கத்திய இசையை நம் இசையோடு இணைத்தார் என்று சிலர் பொத்தாம்பொதுவாக கூறுவதுண்டு. அவருக்கு முன்பே இந்த மேற்கத்திய கலப்பு மிக அருமையான ரசிக்கத்தக்க வகையினில் நம் தமிழ்த்திரையிசையில் செய்யப்பட்டுவிட்டது.ஓ ரசிக்கும் சீமானே (பராசக்தி) இந்த genre வை இங்கே வெற்றிகரமாக துவக்கிவைத்தது என்று கூட தாராளமாகச் சொல்லலாம்.இளையராஜாவும் தன் பங்குக்கு பல நல்ல fusion வகைப் பாடல்களைக் கொடுத்திருக்கிறார். ஆனால் எலெக்ட்ரானிக் இசையில் அவர் செய்த பரிசோதனைகள் உண்மையிலேயே கேட்பவருக்கு சோதனையாகவே இருந்தது.அவரால் சமகாலத்து மேற்கத்திய இசையை ஒழுங்காக பிரதிபலிக்கமுடியவில்லை. வெறும் ஒரே மாதிரியான கிடார் தீற்றலும், தலைக்குள் சுத்தியல் அடிக்கும் டிரம்ஸ் இசையும் அவரின் மேற்கத்திய இசைக் கலப்பு என்றானது 80களின் பிற்பகுதியில்.
    சில இசைரசனை அற்ற மனங்கள் நான் குறிப்பிடும் இசைக்குழுக்கள் பற்றி எந்தவிதமான பரிச்சயமும் இல்லாமல் கூச்சல் போடுவது நகைப்பிற்குரியது.எதை எழுதினாலும் இது விக்கிபீடியா என்று கோடு போடுவது,ராஜாவைப் பற்றி இந்த வெள்ளைக்காரன் என்ன சொல்லி இருக்கிறான் பார் என்று உதார் விடுவது போன்ற டெம்ப்ளேட் சமாச்சாரங்கள் இவர்களுக்கு அத்துப்படி.
    நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி television ஒரு அற்புதமான இசைக்குழு.Television,Talking Heads,The Only Ones,Dire Straits,Pink Floyd, Depeche Mode போன்ற குழுவினரின் இசையை ரசிப்பதெற்கே ஒரு தரமான இசை அறிவும், இசை ரசனையும் வேண்டும்.சும்மாவேணும் எனக்கும் இதெல்லாம் தெரியும் என்று பீட்டில்ஸ் என்று பூச்சாண்டி காட்டும் வேலையெல்லாம் ஆகாது என்பது இவர்களுக்கு தெரியவில்லை.
    உங்கள் கருத்துக்கள் சிறப்பாக இருந்தன திரு ஆலிவர் அவர்களே. நன்றி. வெகு விரைவில் என்னைப் பாதித்த சில ஆங்கில இசைக் குழுக்கள் பற்றிய பதிவு ஒன்று எழுத நினைத்துள்ளேன்.

    ReplyDelete
  26. நீங்களும் அமுதவனும் ராஜாவைப் பற்றி ஆயிரம் குற்றம் சொன்னாலும் ம்ஹூம் ஒன்னும் ஆகப்போவதில்லை. ராஜா ராஜாதான். அவரைப் போன்ற ஒருத்தர் இந்த உலகத்திலேயே ஏன் பிரபஞ்சத்திலேயே கிடையாது. இசைக்கெனவே அவதாரம் எடுத்த இசை மகான் எங்கள் ராஜா.
    ராஜகுருபரன்

    ReplyDelete
  27. ராஜகுருபரன், விமல் என்பவர் என்னுடைய தளத்தில் கேள்வி மேல் கேள்வி கேட்டு அடம் பிடிப்பதற்கு நீங்கள் சொல்லியிருக்கும் பதில் இது. அப்படித்தானே? அப்படியெனில் ரொம்பவும் நன்றி.

    ReplyDelete
  28. அமுதவன் அவர்களே,
    திருவாளர் ராஜகுருபரன் போன்ற பலர் எழுதும் பாமரத்தனமான கருத்துக்களை வைத்தே ராஜாவின் அபிமானிகள் மற்ற இசை மேதைகளை எவ்வாறு மதிக்கிறார்கள் என்பதை இனம் காணமுடிகிறது. இதை நிரூபிக்கவேறு வேண்டுமாம். வேடிக்கைதான். உங்கள் தளத்திற்கு வந்து உங்களை கேள்விகள் கேட்டு சிறு பையன் போல அடம் செய்யும் ஆட்கள் உண்மையில் உங்கள் கருத்துக்களை விட உங்களை தாக்குவதையே நோக்கமாகக் கொண்டிருப்பதாக எனக்கு தோன்றுகிறது.அவர்களுக்கு பதில்சொல்லி உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.அவர்களை அலட்சியம் செய்து உங்கள் பாதையில் தொடருங்கள்.

    ReplyDelete
  29. திரு ராஜகுருபரன் அவர்களே
    உங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி. இ.ராஜாவின் ரசிகர்கள் எப்படி பேசுவார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. திரு அமுதவன் எழுதிய இசைபற்றிய பல பதிவுகளுக்கு வந்த பின்னூட்டத்தில் இதைப் போன்ற கருத்துக்கள் நிறையவே உண்டு. ராஜாவை போல இன்னொருவர் இங்கே கிடையாது என்று சொல்லிய பலர் இப்போது எம் எஸ் வி கே வி மகாதேவன் போன்ற பழைய இசைமேதைகளைப் பற்றி பேச ஆரம்பித்திருப்பதே ஒரு நல்ல துவக்கம் அல்லது மாற்றம் என்று நான் நினைக்கிறேன்.தற்போது ஓரளவுக்கு ராஜா ரசிக சிகாமணிகள் கொஞ்சம் அடக்கி வாசிப்பதும்,நாங்கள் என்றைக்கு பழைய இசை அமைப்பாளர்கள் இசையில் எதையுமே சாதித்தது இல்லை என்று சொன்னோம் என்று பல்டி அடிப்பதும் வேடிக்கையாக இருக்கிறது. அமுதவனைப் பின்பற்றி நான் பழைய இசைமேதைகளைப் பற்றி எழுதுவதும் இந்த மாற்றத்தை இணையத்தில் ஏற்படுத்தவே. அவற்றை நீங்கள் படித்தால் ஒருவேளை உங்களுக்கும் இசையைப் பற்றிய விசாலமான சிந்தனை வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. நீங்களும் இ.ராஜாவைத் தாண்டி இசையை அணுகினால் நலமாக இருக்கும்.

    ReplyDelete
  30. விமல்25 July 2013 at 07:26

    அமுதவன் சார்
    உங்களுக்கு ஒன்றும் தெரியாது தானே.ஒப்புகொள்ளுங்கள். அதுதான் காரிகன் முதுகில் சவாரி செய்கிறீர்கள்.
    நான் உங்களிடம் கேட்ட கேள்விக்கு ஏன் இரண்டு //இசைமேதாவிகளும்// தப்பி ஓடுகிறீர்கள்.

    ReplyDelete
  31. "அமுதவன் சார்
    உங்களுக்கு ஒன்றும் தெரியாது தானே.ஒப்புகொள்ளுங்கள். அதுதான் காரிகன் முதுகில் சவாரி செய்கிறீர்கள்."

    விமல் அவர்களே,
    "பத்த வெச்சுட்டியே பரட்ட" என்ற கவுண்டமணியின் டயலாக்தான் ஞாபகம் வருகிறது. நன்றாக பத்த வைக்கிறீர்கள். ஆனால் வேலைக்காகாது. உருப்படியாக ஏதாவது செய்யுங்கள்.

    ReplyDelete
  32. வேட்டைக்காரன்25 July 2013 at 11:48

    //இன்னும் சொல்லப் போனால் இளையராஜா நம் தமிழிலேயே ஜி. ராமநாதன்,சுதர்சனம்,சுப்பையா நாயிடு, போன்ற இசை மேதைகளின் பின்னே தான் வருகிறார். அவர்களின் சாதனைகளையே இவர் இன்னும் தொடவில்லை.//

    காரிகன் ஐயா,

    அ. அப்படி மேலே சொல்லப்பட்ட இசையமைப்பாளர்கள் என்ன செய்தார்கள் என்று சொல்ல முடியுமா? ஏற்கனவே சொல்லியிருந்தால் சுட்டி தரவும்.
    ஆ. அவர்களின் சாதனைகள் என்னவென்று பட்டியலிட முடியுமா?

    மிக்க நன்றி!

    ReplyDelete
  33. கார்த்திக்25 July 2013 at 13:23

    இணையத்தில் மிக சமீபமாக தமிழ் திரைப்பட இசை குறித்த அருமையான பதிவுகளை பார்க்க நேர்ந்தது.அசத்தலாக ஏராளமான விசயதானங்களை அழகாக எழுதி வருகிறார்.வியப்பான தகவல்கள்.அன்றிலிருந்து இன்று வரை என்று சொல்லலாம்.
    "இனிஒரு " [ www.inioru.com ]என்ற தளத்தில் T.சௌந்தர் என்பவர் எழுதும் தொடர்கள் அவை.அங்கு திரு.காரிகன் பின்னூட்டங்கள் எழுதுகிறார்.

    தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 7 ] : T.சௌந்தர்

    ReplyDelete
  34. திரு வேட்டைக்காரன் அவர்களுக்கு,
    விமல் என்பவர் வந்தவுடன் நீங்களும் ஆஜராகிவிடுகிரீர்கள். உங்களுக்கு பழைய இசை மேதைகளைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை என்பது புலனாகிறது.இப்படி ஒரு இசைவெற்றிடத்தை வைத்துக்கொண்டு நீங்கள் எப்படி நியாயமாக என் கருத்துக்களை புரிந்துகொள்ள முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. வீண் வாதத்துக்கோ, அல்லது தனி மனித தாக்குதலுக்கோ நீங்கள் ஆயத்தமானாலோ மன்னிக்கவும் நான் இது போன்ற அடிப்படை இல்லாத விவாதங்களை விரும்புவதில்லை. என்னைப் பொறுத்தவரை என் பதிவுகளில் நான் இளையராஜாவுக்கு கொடுக்க வேண்டிய சிறப்புகளை மறுக்கவில்லை.இதுவே என் நிலைப்பாடு. நான் கூறும் கருத்துக்களை புரிந்துகொள்ளாமல் வார்த்தையை மட்டும் பிடித்துக்கொண்டு அழிச்சாட்டியம் செய்வது சிறுபிள்ளைத்தனம். நான் அதற்கு தயாரில்லை.எனக்கு வேறு வேலைகள் இருக்கின்றன. என்னை விடவும் மிக அழகாகவும் விவரமாகவும் திரு டி சவுந்தர் என்பவர் இளையராஜாவுக்கு முன் இருந்த இசை மேதைகளைப் பற்றி துல்லியமாக இனிஒரு டாட் காம் என்ற வலைப்பூவில் எழுதி வருகிறார். அதில் அவர் அவர்கள் செய்த இசை சாதனைகளை பட்டியல் போட்டிருக்கிறார். உங்களுக்கு உண்மையிலேயே இசை தாகம் இருக்கும் பட்சத்தில் அவரின் பதிவுகளை பொறுமையாக படித்துப்பார்க்கவும்.(உங்களுக்கு அது புரியுமா என்பது தெரியவில்லை. ஏனென்றால் நீங்கள் சுப்பையா நாயுடு, சுதர்சனம், எ எம் ராஜா, ஜி ராமநாதன் போன்ற பெயர்களையே கேள்விப்படவில்லை என்று தோன்றுகிறது) ஆரோக்கியமான விவாதங்கள், கருத்து பரிமாற்றங்கள் என்றால் அதில் நான் பங்கேற்க தயங்க மாட்டேன். உங்களின் தரமான கருத்துக்களை முன் வையுங்கள். நாம் பேசலாம்.

    ReplyDelete
    Replies
    1. /// சுப்பையா நாயுடு, சுதர்சனம், எ எம் ராஜா, ஜி ராமநாதன் போன்ற பெயர்களையே கேள்விப்படவில்லை என்று தோன்றுகிறது ///

      ஆனால் இளையராஜா பெயரைக் கேள்விப்படாமல் ஒரு குழந்தைகூட இருக்காது! இதுவே அவரது சிறப்பு தானே?!

      சுப்பையா நாயுடு, சுதர்சனம், எ எம் ராஜா, ஜி ராமநாதன், ஏன் எம்.எஸ்வி. கூட, என்ன செய்தார்கள் என்று சௌந்தர் போன்ற விஷயமறிந்தவர்கள் பக்கம் பக்கமாக எழுதி விளக்கினால்தான்தான் தெரிகிறது. இதுவே இளையராஜா என்ன செய்யவில்லை என்றுதான் விளக்கி எழுத வேண்டியிருக்கிறது. சரியா?

      பி.கு. நான் ராஜா வெறியன் அல்ல. ஆனால் இதுவரையிலான தமிழ் இசையமைப்பாளர்களில் அவர் மற்றவர்களைவிட ஒரு படி மேல்தான் என்பது என் கருத்து. இதைப் புறவயமாக நிறுவுவதற்கு இசை பற்றிய நுணுக்கங்கள் எதுவும் தெரியாது. 'பாட்டு சூப்பர்' அல்லது 'பாட்டு வேஸ்ட்' என்பதுதான் என் விமர்சனத்தின் எல்லை.

      Delete
  35. திரு கார்த்திக் அவர்களே,
    வருகைக்கு நன்றி. திரு டி சவுந்தர் என் அபிமானத்திற்குரிய இசைபதிவர்.அவர் எழுத்துக்கள் மிக அழகாக வார்க்கப்பட்டவை. இளையராஜா என்றால் மட்டும் சற்று அதிகமாக (சில சமயங்களில் நியாயமில்லாமலும் ) ஆராதனை செய்வார். அவரின் பதிவுகளை நான் தொடர்ந்து படித்து வருபவன். சில அபிப்ராய பேதங்கள் இருந்தாலும் என்னைப் பொருத்தவரை இணையத்தில் பழைய இசை மேதைகளைப் பற்றி சிறப்பாகவும் சரியாகவும் பாராட்டுக்குரிய வகையிலும் எழுதிவரும் மிக முக்கியமான தவிர்க்க முடியாத பதிவர்களில் ஒருவர். அவரின் எல்லா பதிவுகளையும் படியுங்கள். கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  36. ஆமாம், ஜி.ராமனாதன், சுதர்சனம், சுப்பையா நாயுடு என்பவர்களின் பெயர்களெல்லாம் மேலே பின்னூட்டங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அவர்கள் எல்லாம் யார்? தமிழ்நாட்டு அணியின் கால்பந்தாட்ட வீரர்களா?

    ReplyDelete

  37. Mr Amudhavan

    தெரியாத விஷயத்தைப்பற்றி பேசாமல் இருப்பதே உத்தமம் என்பதை தமிழ் எழுத்தாளர்கள் [?!! ] உணர்வது நல்லது.
    இது தான் உங்க கட்டுரை சொல்லும் பாடம் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  38. Anonymous
    Mr Amudhavan

    \\தெரியாத விஷயத்தைப்பற்றி பேசாமல் இருப்பதே உத்தமம் என்பதை தமிழ் எழுத்தாளர்கள் [?!! ] உணர்வது நல்லது.
    இது தான் உங்க கட்டுரை சொல்லும் பாடம் என்று நினைக்கிறேன்.\\

    என்னுடைய 'பாடமென்ன' என்பதை மிகச்சரியாகப் புரிந்துகொண்டவர் நீங்கள் ஒருவர்தான் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  39. வேட்டைக்காரன்28 July 2013 at 01:12

    திரு காரிகன்,

    முதலில் ஒன்றைத் தெளிவு படுத்தி விடுகிறேன்.

    நான் விமல் **அல்ல**. இணையத்தில் பன்னெடுங் காலமாகப் புழங்கி வரும் வாசகன்.

    அதேபோல நீங்களும் அமுதவனின் ஆல்டர் ஈகோ அல்ல என்றே நம்புகிறேன்.

    ஆகவே தயவு செய்து காரெக்டர் படுகொலையில் ஈடுபட வேண்டாம் என வேண்டுகிறேன்.

    // உங்களுக்கு பழைய இசை மேதைகளைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை என்பது புலனாகிறது.இப்படி ஒரு இசைவெற்றிடத்தை வைத்துக்கொண்டு நீங்கள் எப்படி நியாயமாக என் கருத்துக்களை புரிந்துகொள்ள முடியும் என்று எனக்கு தோன்றவில்லை.//

    தவறு. என் தந்தையின் மூலம் பெரும்பாலான *பழைய* இசையமைப்பாளர்களைப் பற்றிய பரிச்சயமும், அவர்களின் பாடல்களைக் கேட்டதும் உண்டு. அவர் MKT, PUC தலைமுறைக்குப் பிந்தியவர்.

    உங்கள் முன்முடிவுகளை என் வாயில் திணிக்காதீர்கள்.

    // வீண் வாதத்துக்கோ, அல்லது தனி மனித தாக்குதலுக்கோ நீங்கள் ஆயத்தமானாலோ மன்னிக்கவும் நான் இது போன்ற அடிப்படை இல்லாத விவாதங்களை விரும்புவதில்லை.//

    இல்லை.

    // என்னைப் பொறுத்தவரை என் பதிவுகளில் நான் இளையராஜாவுக்கு கொடுக்க வேண்டிய சிறப்புகளை மறுக்கவில்லை.இதுவே என் நிலைப்பாடு. நான் கூறும் கருத்துக்களை புரிந்துகொள்ளாமல் வார்த்தையை மட்டும் பிடித்துக்கொண்டு அழிச்சாட்டியம் செய்வது சிறுபிள்ளைத்தனம். நான் அதற்கு தயாரில்லை.//

    நீங்கள் இளையராஜாவின் பலப்பல சிறப்புப் பாடல்களைத் தொகுத்திருக்கிறீர்கள். இவ்விடுகையை என்றைக்கும் உசாத்துணையாகப் பயன்படுத்துவேன். உங்கள் முயற்சிக்கு எம் வந்தனம்.

    கூடவே, ராஜாவின் மீதான உள்குத்தும் நிறைய உண்டு. <== This is just FYI. Strictly no response expected. Let us agree to disagree!

    //நான் கூறும் கருத்துக்களை புரிந்துகொள்ளாமல் வார்த்தையை மட்டும் பிடித்துக்கொண்டு அழிச்சாட்டியம் செய்வது சிறுபிள்ளைத்தனம். நான் அதற்கு தயாரில்லை. நான் அதற்கு தயாரில்லை.எனக்கு வேறு வேலைகள் இருக்கின்றன. என்னை விடவும் மிக அழகாகவும் விவரமாகவும் திரு டி சவுந்தர் என்பவர் இளையராஜாவுக்கு முன் இருந்த இசை மேதைகளைப் பற்றி துல்லியமாக இனிஒரு டாட் காம் என்ற வலைப்பூவில் எழுதி வருகிறார். அதில் அவர் அவர்கள் செய்த இசை சாதனைகளை பட்டியல் போட்டிருக்கிறார். உங்களுக்கு உண்மையிலேயே இசை தாகம் இருக்கும் பட்சத்தில் அவரின் பதிவுகளை பொறுமையாக படித்துப்பார்க்கவும்.(உங்களுக்கு அது புரியுமா என்பது தெரியவில்லை. ஏனென்றால் நீங்கள் சுப்பையா நாயுடு, சுதர்சனம், எ எம் ராஜா, ஜி ராமநாதன் போன்ற பெயர்களையே கேள்விப்படவில்லை என்று தோன்றுகிறது) ஆரோக்கியமான விவாதங்கள், கருத்து பரிமாற்றங்கள் என்றால் அதில் நான் பங்கேற்க தயங்க மாட்டேன். உங்களின் தரமான கருத்துக்களை முன் வையுங்கள். நாம் பேசலாம்.//

    அய்யா, சமீபத்திய சர்ச்சைகள் தொடர்பான அவ்விடுகைகளையும் படித்தோம்.

    இளையராஜாவின் பாடல்களை அக்குவேறாகப் பிரித்து அவைகளின் சிறப்புகளை பல்வேறு வலைத்தளங்களில் (இனியொரு கட்டுரைகள் அல்ல, பல பிற இடுகைகள் பாடல் எடுத்துக்காட்டுடன்) விவரித்திருக்கிறார்கள்.

    அதே போல் அவருக்கு முந்தைய தலைமுறையினரின் பாடல்களை யாரும் ஆராய்ந்து விவரித்திருந்தால் அதையே அறிய விழைகிறோம். அதைத்தொட்டே கேள்வி எழுப்பினேன். தெரியாது என்றாலும் குற்றம் (அமுதவன் பார்வையில்) தெரியாததைத் தெரிந்து கொள்ளக் கேள்வி எழுப்பினாலும் குற்றம் (உங்கள் பார்வையில்).

    இளையராஜாவைப் பிரித்து மேய்வது போல் ஏன் மற்றையவரின் பாடல்களை யாரும் இணையத்தில் விளக்குவதில்லை? எனக்குத் தெரியாது. உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டால் உங்களுக்குக் கோபம். என்ன செய்வது? உங்களைப் போன்ற பெரியோர்களுக்கு இருக்கும் ஞானதிருஷ்டி எம்மிடம் இல்லையே?

    ReplyDelete
  40. வேட்டைக்காரன்28 July 2013 at 01:54

    //(பலருக்குத் தெரியாத மிக உற்சாகமான பாடல் )

    இதை வெகு சிலரே கேட்டிருக்கக்கூடும் என்று தோன்றுகிறது)

    .இந்தப் பாடலை நிறைய பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை)

    இளையராஜாவை சிலாக்கிக்கும் பலர் இந்தப் பாடலைப் பற்றி வாய் திறப்பதில்லை.

    வி குமார் "தேவன் வேதமும் கண்ணன் கீதையும்"பாடலின் ஆரம்பத்தில் செய்துவிட்டதை பலர் அறியாமல் இருக்கிறார்கள்.

    இந்தப் பாடல் பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. ராஜாவின் ரசிகர்களுக்கே இது தெரியாமல் இருக்கலாம்.

    (இந்தப் பாடல்களை அதிகமானவர்கள் கேட்டதில்லை என தோன்றுகிறது.//

    .... :)

    ReplyDelete
  41. வேட்டைக்காரன்28 July 2013 01:54
    //(பலருக்குத் தெரியாத மிக உற்சாகமான பாடல் )

    இதை வெகு சிலரே கேட்டிருக்கக்கூடும் என்று தோன்றுகிறது)

    .இந்தப் பாடலை நிறைய பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை)

    இளையராஜாவை சிலாக்கிக்கும் பலர் இந்தப் பாடலைப் பற்றி வாய் திறப்பதில்லை.

    வி குமார் "தேவன் வேதமும் கண்ணன் கீதையும்"பாடலின் ஆரம்பத்தில் செய்துவிட்டதை பலர் அறியாமல் இருக்கிறார்கள்.

    இந்தப் பாடல் பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. ராஜாவின் ரசிகர்களுக்கே இது தெரியாமல் இருக்கலாம்.

    (இந்தப் பாடல்களை அதிகமானவர்கள் கேட்டதில்லை என தோன்றுகிறது.//

    .... :)

    திரு வேட்டைக்காரன்,

    என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை.சற்று தெளிவாக சொல்லி இருக்கலாம். நல்லது. நான் உங்களை விமல் என்பவர் வந்ததும் வந்து விடுகிறீர்கள் என்றுதான் சொன்னேன். நீங்கள் இருவரும் ஒரே ஆள் என்று சொல்லவில்லை. ஆனால் நீங்களாகவே நான் அவனில்லை என்று சுய அடையாள மறுப்பு கொடுக்கிறீர்கள். ஏனென்று தெரியவில்லை. சரி அது போகட்டும்.உங்களை எனக்கு யாரென்றே தெரியாத போது நான் ஏன் உங்கள்மீது கோபம் கொள்ள வேண்டும்?

    உங்கள் தந்தை மூலம் உங்களுக்கு பழைய இசை அமைப்பாளர்கள் பற்றிய பரிச்சயம் இருப்பதாக நீங்கள் குறிப்பிடுவது இயல்பானதே. உங்கள் தந்தை மட்டுமல்ல இன்றைக்கு நாற்பது வயதை தாண்டியயவர்களின் தந்தைகள் எல்லாருமே அந்த காலத்தை சேர்ந்தவர்கள்தான். உங்களுக்கு அவர்களின் பரிச்சயம் மட்டுமே இருப்பதாக நினைக்கிறேன்.உங்கள் தந்தையின் இசை ரசனை இன்னும் உங்களிடம் வந்து சேரவில்லை என்றுணர்கிறேன். இல்லாவிட்டால் அவர்கள் எல்லாம் என்ன சாதித்தார்கள் என்று வெளிப்படையாக உங்கள் இசை குறையை வெளிச்சம் போட்டு காண்பித்திருக்க மாட்டீர்கள். இளையராஜாவின் மீதான உள்குத்து பற்றி ஆமாம் என்பதைத் தவிர வேறு பதில் என்னிடம் இல்லை. Ilayaraajaa is one of the best and the greatest music composers of Tamil film music industry. But... என்பதே என் கருத்து எப்போதுமே.இதை நான் மூடி மறைத்து backstabbing விளையாட்டில் ஈடுபடுவதில்லை.என்னுடைய பழைய பதிவுகளை படித்தால் ஒருவேளை நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்."நீங்கள் மற்றவர்களைப் பற்றி என்ன எழுதினாலும் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள் ஆனால் இளையராஜா என்று வைத்துவிட்டால் பலர் களத்தில் குதிப்பார்கள்"என்று ஒருமுறை அமுதவன் எனக்கு பின்னூட்டம் எழுதியிருந்தார். அது உண்மைதான். To be continued..

    ReplyDelete
  42. இளையராஜாவின் பாடல்களை பல பதிவர்கள் பிரித்து மேய்ந்திருப்பது உண்மைதான். காரணம் என்னவென்று பார்த்தால் இ.ராஜாவின் முன் தலைமுறையினர் கம்ப்யூட்டர் இன்டர்நெட் ப்ளாக் போன்ற தொழில்நுட்ப வசதிகளை மற்றவர்கள் போல பயன்படுத்த முடியாதவர்கள் அல்லது தெரியாதவர்கள். அவர்கள் படிப்பார்கள். என்ன இது இப்படி எழுதி இருக்கிறானே என்று நினைப்பார்கள்.உடனே எழுந்து வந்து தங்களுக்கு தெரிந்த உண்மைகளை டைப் செய்து பின்னூட்டம் செய்ய மாட்டார்கள். இது ராஜா பதிவர்களுக்கும், ராஜா ரசிகர்களுக்கும் பெரிய வசதியாக இருக்கிறது. இருந்தும் எல்லோரும் அப்படி அல்ல. ஆர் வி என்பவர் ஒரு forum நடத்துகிறார் அதில் பழைய படங்கள் பாடல்கள்தான் விவாதிக்கப்படுகின்றன. சாராதா என்பவர் சிவாஜி ஜெய் ஷங்கர் ரவிச் சந்திரன் என்று 50,60,70 களை பெரும் காதலோடு அணுகி பல பதிவுகள் எழுதி இருக்கிறார். எம் எஸ் வி- டி கே ஆர், எ எம் ராஜா, கே வி மகாதேவன், என்று பழைய இசை ஜாம்பவான்கள் பற்றி ராகவேந்திரா என்பவர் அற்புதமாக forum ஏற்படுத்தி இருக்கிறார். இதெல்லாம் உங்கள் கண்களுக்கு பிடிபடாவிட்டால் அதற்கு மற்றவர்களை ஏன் குதர்க்கமாக விமர்சனம் செய்கிறீர்கள்? நீங்கள் இளையராஜாவை மட்டுமே தேடுகிறீர்கள்.உங்கள் கண்களுக்கு அது மட்டுமே தென்படுவது இயற்கை. இணையம் மிகப் பெரியது என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. இங்கே எல்லா சங்கதிகளும் உண்டு.நான் இசை பற்றிய எந்த விதமான பதிவுகளையும் விடுவதில்லை. நீங்கள் சொல்வது போல இளையராஜா மட்டுமல்ல எ ஆர் ரகுமான் பற்றியும் நிறைய பதிவுகள் இருக்கின்றன. ஆட்கள் ஆவேசமாக விவாதிக்கிறார்கள். ஆனால் என்ன ரகுமான் பற்றி பேசுபவர்கள் பொதுவாக ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள். இளையராஜா பதிவர்கள் பெரும்பாலும் தமிழில் எழுதுவதால் இப்படிப்பட்ட ஒரு தோற்றம் உண்டாவது இயற்கையே. app-engine தளத்தில் இந்த கருத்தை மாற்றி அமைக்கும் முயற்சியில் ராஜா விசிறிகள்(அவர்களுக்குத் தெரிந்த) ஆங்கிலத்தில் தங்கள் பங்குக்கு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். எதோ international மியூசிக் பேண்ட் பற்றி பேசுகிறார்களோ என்று நினைக்கும் அளவுக்கு அதகளம் செய்து வருகிறார்கள். Tragedy is they are seriously joking.

    முடிந்தால் பழைய இசை மேதைகள் என்ன சாதித்தார்கள் என்று நீங்கள் எழுதுங்களேன் என்று (நீங்கள்தான் என்று நினைக்கிறேன்.அப்படி இல்லாத பட்சத்தில் அதற்கும் ஒரு விளக்கம் கொடுக்க வேண்டாம்) சொல்லியிருந்தாக ஞாபகம். நான் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறேன். நான் எழுத வரும் முன் படித்த பல ராஜா பதிவுகள் என்னை வெகுவாக கவலை கொள்ளச்செய்தன. இங்கே தமிழ்த் திரையில் பல சாதனைகள் புரிந்து பெரும்பான்மையான மக்களின் மனதில் உயிர்ப்போடு இருக்கும் கணக்கில் அடங்காத பாடல்களைக் கொடுத்தவர்கள் பற்றி எதோ பத்தோடு பதினொன்று என்று அவர்களை புறம்தள்ளி விட்டு 80 களை ஆட்சி செய்தவரின் பாடல்களை தூக்கிப் பிடிக்கும் இந்த நேர்மையற்ற அணுகுமுறையே என்னை எழுதத் தூண்டியது.என்னை பெரியவன் என்று சொல்லி ஒரு முத்திரை குத்த வேண்டாம்.நானும் இளையராஜா பாடல்கள் வானொலிகளில் ஒலித்துக்கொண்டிருந்த போது பள்ளிக்கூடத்தில் படித்தவன்தான். எனக்கு ஞான திருஷ்டி இருப்பதாக நான் எண்ணவில்லை. ஆனால் ராஜா பதிவர்கள் போன்ற ஒரு சார்பான இசை ரசனையோ அல்லது பொய்களை தங்கத் தட்டில் வைத்து அதற்க்கு சென்ட் அடித்து விற்கும் மோசடித்தனமோ என்னிடம் இல்லை. நான் வெறும் இளையராஜாவை மட்டும் கேட்டுகொண்டிருப்பவன் கிடையாது. எனவே அவரின் சிறப்புகள் என்னவென்று எனக்கு மிக நன்றாகவே தெரியும். நான் எனது கருத்தை தெரிவிக்கிறேன். இதில் உங்களுக்கு உடன்பாடு இருக்கவேண்டிய அவசியம் இல்லை.

    ReplyDelete
  43. வேட்டைக்காரன்28 July 2013 at 10:48

    //இல்லாவிட்டால் அவர்கள் எல்லாம் என்ன சாதித்தார்கள் என்று வெளிப்படையாக உங்கள் இசை குறையை வெளிச்சம் போட்டு காண்பித்திருக்க மாட்டீர்கள். //

    அதில் அவமானம் ஒன்றும் இல்லை bro. பிறக்கும்போதே யாரும் நிறைகுடமாகப் பிறப்பதில்லையே. தெரியாததைத் தெரிந்து கொள்ளத்தானே இந்தப் பாடு.

    //இளையராஜாவின் மீதான உள்குத்து பற்றி ஆமாம் என்பதைத் தவிர வேறு பதில் என்னிடம் இல்லை.//

    நன்றி.

    //ஆர் வி என்பவர் ஒரு forum நடத்துகிறார் அதில் பழைய படங்கள் பாடல்கள்தான் விவாதிக்கப்படுகின்றன. சாராதா என்பவர் சிவாஜி ஜெய் ஷங்கர் ரவிச் சந்திரன் என்று 50,60,70 களை பெரும் காதலோடு அணுகி பல பதிவுகள் எழுதி இருக்கிறார். எம் எஸ் வி- டி கே ஆர், எ எம் ராஜா, கே வி மகாதேவன், என்று பழைய இசை ஜாம்பவான்கள் பற்றி ராகவேந்திரா என்பவர் அற்புதமாக forum ஏற்படுத்தி இருக்கிறார்.//

    சுட்டி ப்ளீஸ்.

    //இதெல்லாம் உங்கள் கண்களுக்கு பிடிபடாவிட்டால் அதற்கு மற்றவர்களை ஏன் குதர்க்கமாக விமர்சனம் செய்கிறீர்கள்? //

    திரும்பவும் உங்கள் முன்முடிவுகளை என் வாயில் திணிக்காதீர்கள்.

    //நான் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறேன். //
    அது விதந்தோதுதல். விளக்கமாகாது.

    ReplyDelete
  44. விமல்29 July 2013 at 06:00

    காரிகன்
    வார்த்தை சிலம்பு ஆடாதீர்கள்.சும்மா பழசு பழு என்று ஊரை கூப்பிடுகிறீர்கள்.பழையவர்கள் எல்லாம் ஒரே மாதிரி தானே இசையமைத்தார்கள்.அந்த நிலையில் தானே ராஜா மிகவும் வித்தியாசமான இசையை தந்தார்.

    அவர் புதிதாக அல்லது புதுமையாக இசையமைத்த போது ராகம் சுத்தமாக இருக்கவில்லையா?, தாளம் சரியாக விழ வில்லையா ? ஆங்கில இசை அளவோடு தந்த விதம் ரசிப்பாய் இல்லையா ? அதனை ராஜா ரசிகர்கள் கொண்டாடினால் உங்களுக்கு ஏன் கடுப்பெடுக்கிறது?
    ரவி ஆதித்யாவின் சுட்டியை காட்டி " ராஜா ரசிகர்களுக்கு ஒன்றும் தெரியாது " எனபது போல எழுதுகிறீர்கள்.
    தாங்கள் எழுதிய தவறுகளை சுட்டிக் காட்டி பாடம் புகட்ட நான் இங்கு வரவில்லை.மற்றவர்களை குற்றம் சொல்லும் நீங்கள் சரியாகவா எழுதுகிறீர்கள் என்பதை சுட்டி காட்டுவது அவசியமாகிறது.
    இசைவிரும்பிகள் iv கட்டுரையில்
    கே.வீ. மஹாதேவன் அவன் அமரன் படத்தில் தான் முதல் இசையமைத்தார் என்கிறீர்கள்.இலகுவாக google லில் தேடினாலே விடை கிடைக்கிறது.
    அமுதை பொழியும் நிலவே இசையமைததவ்ர் ஜி.ராமநாதன் என்றீர்கள்.
    LR ஈஸ்வரி ராஜா இசையில் பாடவில்லை என்றீர்கள் அதற்காக நாம் உங்களை மற்றும் அமுதவன் போல " உங்களுக்கு எங்கே இதெல்லாம் புரியப் போகிறது " என்ற தொனியில் சொல்லப் போவதில்லை.

    //இல்லாவிட்டால் அவர்கள் எல்லாம் என்ன சாதித்தார்கள் என்று வெளிப்படையாக உங்கள் இசை குறையை வெளிச்சம் போட்டு காண்பித்திருக்க மாட்டீர்கள். //- காரிகன்
    //..இந்தப் பாடல் பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. ராஜாவின் ரசிகர்களுக்கே இது தெரியாமல் இருக்கலாம்.//-காரிகன்

    //..இந்த அளவுக்கு ராஜாவின் அத்யந்த ரசிகர்களுக்கே இவ்வளவு விவரங்கள் புரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான்// -அமுதவன்


    இந்த மாதிரியான சுய இன்பம் எல்லாம் இசை விமர்சனமா?உங்களுக்கு இசையும் தெரியவில்லை இசை வரலாறும் தெரியவில்லை என்று நாம் சொல்லலாமா ?


    இப்படி சொல்லலாமா ..
    பழமை பழமை என்று பாவனை பேசலன்றிப் பழமை இருந்த நிலை பாமரர் ஏதறிவார் - சுப்பிரமணிய பாரதியார். இன்னுமொரு கதை அளக்கிறீர்கள்.

    //" நாட்டுப்புற இசையை பலமாக திரையில் ஒலிக்கச் செய்தவர் இவர். உண்மை இப்படி இருக்க இசை ஞானமில்லாத சில உள்ளங்கள் எண்பதுகளில் வந்த பாடல்களை (அவை பெரும்பாலும் டப்பாங்குத்து வகையைச் சேர்ந்தவை ) பெரிய எழுத்தில் எழுதி யும்,பெருங்குரலெடுத்து கத்தியும் அவற்றை நாட்டுப்புறப் பாடல்களின் உச்சம் என்று முழங்குவது நகைப்புக்குரியது. நாட்டுப்புற இசையைப் பொருத்தவரை ஜி ராமநாதன், கே வி மகாதேவன் இவர்களுக்கு அடுத்தே மற்ற யார் பெயரையும் நாம் இங்கே சொல்லமுடியும். இதை விஷயம் அறிந்தவர்கள் ஒத்துக்கொள்வார்கள் .."..//-காரிகன் - இசை விரும்பிகள் IV

    அதென்ன டப்பாங்குத்து ?அவர்கள் இசையமைத்தால் கர்நாடக சங்கீதமோ? நாட்டுபுற இசையின் உண்மையான அழகு ராஜாவின் இசையில் வெளிப்படவில்லையா ?
    ஸ்டுடியோ கிராமத்திற்கும் பாரதிராஜா காட்டிய கிராமத்திர்க்கும் உள்ள வித்த்யாசம் உங்களுக்கு தெரியாதா?

    ReplyDelete
  45. வேட்டைக்காரன் அல்லது விமல் அல்லது இருவருக்குமே இருக்கட்டும்.
    .".சும்மா பழசு பழு என்று ஊரை கூப்பிடுகிறீர்கள்.பழையவர்கள் எல்லாம் ஒரே மாதிரி தானே இசையமைத்தார்கள்."
    உங்களுக்கு இருக்கும் அகண்ட இசைஞானத்தைக் கண்டு வியப்புறுகிறேன். நீங்கள் சொல்வது தவறு என்று உங்கள் இளையராஜாவே வந்து சொன்னாலும் நீங்கள் மாறப்போவதில்லை.
    "அந்த நிலையில் தானே ராஜா மிகவும் வித்தியாசமான இசையை தந்தார்."
    ஆமாம் மிகவும் வித்தியாசமான இசையை கொடுத்தார். அதனால்தான் அவர் பெயர் இன்றுவரை பேசப்படுகிறது. நான் எங்குமே இளையராஜா சிறந்த பாடல்களே கொடுக்கவில்லை என்றும் அவருக்கு மக்கள் கொடுக்கும் பாராட்டுகள் அர்த்தமற்றது என்றும் சொல்லவில்லையே.நீங்கள்தான் அப்படி நான் சொல்வதாக கூப்பாடு போடுகிறீர்கள். இணையத்தில் ராஜா பதிவர்கள் சிலாகித்து எழுதும் பல பாடல்கள் இருந்தும் நான் இங்கே குறிப்பிட்டுள்ள பாடல்களை ஒரு சிலர் தவிர மற்றவர்கள் குறிப்பிடுவது கிடையாது.
    இளையராஜாவை பாராட்டி எழுதினாலும் அது என் சுய புகழ்ச்சி என்று தடை போடுகிறீர்கள். பிறகு என் பதிவுகளில் நான் செய்துள்ள சில பிழைகளை சுட்டிக்காட்டி இசை பற்றி எனக்கு என்ன தெரியு தெரியும் என்று கேட்க முயல்வது இருக்கட்டும். நானாவது ஒரு சிறிய பெயர் பிழை செய்திருக்கிறேன்.தவறு என்று தெரிந்தால் திருத்திக்கொள்ள நான் தயங்குவதில்லை.
    நான் செய்த தவறை பூதாகரமாக காட்ட முயலும் விமல் அவர்களே இதோ உங்கள் இசைஞானி என்ன சொல்லி இருக்கிறார் என்று பாருங்கள்
    ஷாஜி
    இசைப் பயிற்சி அல்ல இசை உணர்ச்சி

    20100120
    இளையராஜா: நேற்றும் இன்றும்
    மிகப்பெரிய புத்திசாலித்தனமோ உயர்ந்த கற்பனை வளமோ
    மேதைகளை உருவாக்குவதில்லை.
    மாறாத அன்பு, அன்பு, அன்பு மட்டுமே
    ஓர் உண்மையான மேதையின் ஆன்மாவாக இருக்கிறது
    - மொஸார்ட்

    சென்னை திரை இசைக்கலைஞர்கள் சங்கம் ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானைப் பாராட்டி நடத்திய விழாவில் இளையராஜா உரை நிகழ்த்தினார். அதில் அவர் பழம்பெரும் இந்தி இசையமைப்பாளர்களான ரோஷன் மற்றும் மதன் மோகனைப் பற்றி ஒரு கதை சொன்னார். "ரோஷனும் மதன் மோகனும் தம் வாழ்நாளில் சந்தித்துக் கொண்டதே இல்லை, ரோஷன் மறைந்தபோது அவருடைய உடலைப்பார்த்து கண்ணீர்விட்டபடி மதன் மோகன் சொன்னது 'இனி யாரோடு நான் போட்டியிடுவேன்?' என்று. அவர்கள் இருவரும் நேரில் சந்தித்ததே இல்லை. ஆனால் தங்களது இசையால் ஒருவக்கொருவர் உரையாடிக்கொண்டிருந்தார்கள்". எதை குறிப்பிடுவதற்க்காக இளையராஜா அம்மேடையில் இதை சொன்னார் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் ஒன்று உறுதியாகத் தெரியும், இந்தச் சம்பவம் உண்மையல்ல!

    இப்படி நான் உண்மைக்கு புறம்பாக உளறி இருந்தால் குறிப்பிடவும். திருத்திகொள்கிறேன்.

    ReplyDelete
  46. ரவி ஆதித்யா செய்தது சிறு பிழை என்று சொல்லி ராஜா பதிவர்களின் மோசடியை மூடிமறைக்க முயல்வது ஏன்? கவுண்டர் பாய்ன்ட் என்ற இசை புரட்சியை ஆரம்பித்து அதில் கரை கண்ட மேற்கத்திய Bach என்பவற்றின் படத்தில் கீழே "தல, உங்க சிஷ்யன் உங்களையே மிஞ்சிட்டாரு" என்று பாமரத்தனமாக எழுதுவது உங்களுக்கு சிறிய பிழையா?அப்படியானால் இளையராஜா உலகின் தலை சிறந்த மேற்கத்திய இசை சகாப்தங்களை படைத்தவர்களை விட உயர்வானவரா?எ ஆர் ரகுமானை Mozart of Madras என்றழைப்பதை காரமாக விமர்சிக்கும் உங்கள் கூட்டத்தினர் இளையராஜா பாக் கை விட பெரியவர் என்பது ஏன்? ரவி ஆதித்யா இதற்க்கு மேலும் நிறைய எழுதி இருக்கிறார். எல்லாவற்றையும் படியுங்கள்.
    நாட்டுபுற இசையை தமிழ்த் திரையில் ஆரம்பித்தது ஜி ராமநாதன் மற்றும் கே வி என்பது உண்மை. இவர்களுக்கு அடுத்தே இளையராஜா வருகிறார்.அவர்களுக்கும் இவருக்கும் உள்ள இடைவெளி சுமார் இருபத்தைந்து ஆண்டுகள். இதையே நான் குறிப்பிட்டுள்ளேன்.
    கடைசியாக டப்பாங்குத்து க்கு வருவோம். இளையராஜாவுக்கு முன்னும் அவர் காலத்திலும் தெம்மாங்கு இசை என்று பொதுவாக நாட்டுப்புற அதிரடி பாடல்களை அழைப்பதுண்டு. இளையராஜா முரட்டுக்காளை படத்தில் அமைத்த பொதுவாக எம்மனசு என்ற பாடல் தெம்மாங்கு என்று அழைக்கப்படாமல் டப்பாங்குத்து என்றானது. ஆரம்பத்தில் இளையராஜாவை விமர்சித்த பலர் அவரை டப்பா இசை அமைப்பாளர் என்று கூறுவதுண்டு. இப்போது பாடல்கள் இளையராஜா இல்லாததால் டப்பா இல்லாமல் குத்து என்றாகிவிட்டன.

    ReplyDelete
  47. // ஆரம்பத்தில் இளையராஜாவை விமர்சித்த பலர் அவரை டப்பா இசை அமைப்பாளர் என்று கூறுவதுண்டு. //

    யார் அவர்கள்? மயிலாப்பூர் அக்ரஹாரத்து அம்பிகளாக இருக்குமோ? அமுதவனைக் கேட்டால் கரெக்டா சொல்வார்.

    ReplyDelete
  48. தமிழ் சினிமா துவக்கத்தில் கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்றவர்கள் சினிமா இசை அமைப்பாளர்களை டப்பா இசை அமைப்பவர்கள் என்று கேலியாக மட்டம் தட்டி பேசினார்கள் என்ற விவரத்தை திரு இளையராஜாவே சொல்லி இருக்கிறார். எங்கள் பக்கம் ஆரம்பத்தில் இளையராஜாவை சாவு கொட்டு இசை அமைப்பாளர் என்று கிண்டலாக சொல்வார்கள். இதுபோன்ற எதிர்ப்புகள் ஒருவருக்கு ஏற்படுவது ஒன்றும் புதிதல்ல. (டப்பாங்குத்து வுக்கும் குத்து வுக்கும் விளக்கம் சொல்லி என்னை நீண்ட நாட்களாக வாட்டிக்கொண்டிருந்த சந்தேகத்திற்கு முடிவு கட்டிவிட்டீர்கள்.)
    இப்படிக்கு
    மகேஷ்வரன், மதுரை.

    ReplyDelete
    Replies
    1. விமல்30 July 2013 at 00:35

      காரிகன்

      // ஜி ராமநாதன் மற்றும் கே வி இவர்களுக்கு அடுத்தே இளையராஜா வருகிறார் என்பது உண்மை.அவர்களுக்கும் இவருக்கும் உள்ள இடைவெளி சுமார் இருபத்தைந்து ஆண்டுகள். இதையே நான் குறிப்பிட்டுள்ளேன்..// காரிகன்

      இது என்ன குத்துக் கரணம்..இதே வார்த்தைகளை இரட்டை அர்த்தத்தில் சொல்ல நீங்க என்ன கவுண்ட மணியா ?

      ஜி.ராமநாதனுக்கு ,கேவி.மகாதேவனு க்கு பின்னே பின்னே தான் ராஜா வந்தார். அமுதவனுக்கு பின் தான் நீங்கள் வந்தீர்கள் அல்லவா ? அதற்கு என்ன செய்ய முடியும்.

      ஷாஜி என்பவருக்கு இசை தெரியாது என்பதை சேதுபதி அருணாசலம் [?] என்பவர் விலாவாரியாக எழுதியிருக்கின்றார்.ஷாஜி என்பவருக்கு கலைஞர்கள் துயரப்பட வேண்டும்.அவரின் இசை புலமையை பார்த்து ஜெயமோகனே மௌனமாகி விட்டார்.அவரை பற்றி வேறு ஒரு நேரம் விவாதிக்கலாம்.

      இளையராஜா மேடையில் பேசியதைப் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள்.அதற்கும் நீங்கள் எழுதிய பிழையான "வரலாறுகளுக்கும் " என்ன சம்பந்தம்.?
      அதெல்லாம் பெரிய விசயமே அல்ல.
      எம்.எஸ்.வி, ஒரு மேடையில் வாலி எழுதிய பாடலை அவர் இருக்கவே கண்ணதாசன் என்று சொன்னவர்.அதெல்லாம் பெரிய குறையா ..?

      அவர்கள் உங்களைப் போல் வரலாற்று ஆசிரியர்கள் அல்லவே.அவர்கள் இசையமைப்பாளர்கள் மட்டுமே.

      மீண்டும் இசை வரலாறு சமூக வரலாறு தெரியாமல் "டப்பாங்கூத்து " பற்றி புலம்பி உங்கள் மேதமையை இயம்பி இருக்கின்றீர்கள்.

      பொதுவாக தமிழக நாடுப்புற இசையை அம்பிகள் தான் காலம் காலமாக "டப்பாங்கூத்து " என்று இழிவுபடுத்தி வந்தார்கள்.அதற்கும் நீண்ட கால வரலாறு உண்டு.


      அதுவும் இளையராஜா வந்ததும் " இதை "வைத்தே அவரை அவமானப் படுத்தினார்கள்.
      தவில் கோஸ்டி , தகரடப்பா நீண்ட நாளைக்கு நின்று பிடிக்காது என்று ஆருடம் எல்லாம் சொன்னார்கள்.ராஜாவை தகரடப்பா என தாங்களும் எங்கோ திருவாய் மலர்ந்தருளி இருக்கிறீர்கள்.
      இன்னுமொரு புளுகை அமுதவன் எடுத்துவிட்டிருக்கின்றார்.பத்மா சுப்பிரமணியம் தான் அன்னக்கிளி பாட்டுக்கு சொந்தகாரர் போல!!!

      சினிமாவுக்கு வருவதற்கு முன்பே இளைராஜா தான் அந்த பாடலை மலேசியா வாசுதேவனை வைத்து பாடித்தார். அதை வெளியிட்டவர் தான் பதமா.

      அவாளுக்கும் நாட்டுப்புற இசைக்கும் என்ன சம்பந்தம்?

      உழுதார்களா? நாத்து நட்டார்களா ?களை எடுத்தார்களா? அறுவடை செய்தார்களா?

      அம்பிகளுக்கும் நாட்டுப்புற இசைக்கும் என்ன சம்பந்தம் ஐய்யா ?

      நாட்டுப்புற இசை என்ன திண்டது செரிக்க அக்ரஹாரத்து ஊஞ்சல் ஆடுவதா?

      ராஜா கொண்டுவந்த பறையால தான் ஹிந்தி பாடல் மோகம் குறைந்தது.தமிழ் மக்கள் இசை அவரால் தான் தலை நிமிர்நதது.

      தொடர்ச்சி next...

      Delete
  49. விமல்30 July 2013 at 00:38


    //..இந்த அளவுக்கு ராஜாவின் அத்யந்த ரசிகர்களுக்கே இவ்வளவு விவரங்கள் புரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான்// -அமுதவன்
    இப்படிதான் வதந்தி நாயகன் சொல்வார்.

    //இப்படி நான் உண்மைக்கு புறம்பாக உளறி இருந்தால் குறிப்பிடவும். திருத்திகொள்கிறேன்.// - காரிகன்.

    கே.வீ. மஹாதேவன் அவன் அமரன் படத்தில் தான் முதல் இசையமைத்தார் என்கிறீர்கள்.
    அமுதை பொழியும் நிலவே இசையமைததவ்ர் ஜி.ராமநாதன் என்றீர்கள்.இல்லை என்பது இந்த நாடே அறிந்த செய்தி.
    LR ஈஸ்வரி ராஜா இசையில் பாடவில்லை என்றீர்கள்

    கே.வீ. மஹாதேவன்முதன் முதல் இசையமைத்த படம் "ஆனந்தன்."அந்த படம் 1942 இல் வந்தது.

    இதெல்லாம் உளறல் இல்லாமல் வேறென்னவாம்.உங்கள் சங்கை கொஞ்சம் அடக்கி ஊதுங்கள்.

    வதந்தி எழுத்தர் அமுதவன் கடையை மூடி விட்டார்.நீங்களும் ஆமோதித்திருக்கிறீர்கள் !

    ஜெயம் உண்டு பயமில்லை மனமே.- சுப்பிரமணிய பாரதியார்
    பழமை பழமை என்று பாவனை பேசலன்றிப் பழமை இருந்த நிலை பாமரர் ஏதறிவார் - சுப்பிரமணிய பாரதியார்


    ReplyDelete
  50. "நாட்டுபுற இசையை தமிழ்த் திரையில் ஆரம்பித்தது ஜி ராமநாதன் மற்றும் கே வி என்பது உண்மை."
    திரு விமல்,
    நான் எழுதியிருந்த இந்த வார்த்தைகளை சாமர்த்தியமாக தவிர்த்தால் நீங்கள் விரும்பும் அர்த்தம் குதர்க்கம் எல்லாமே தெரியும்தான். ஏனிந்த மோசடி? இதன் பிறகே
    "இவர்களுக்கு அடுத்தே இளையராஜா வருகிறார்.அவர்களுக்கும் இவருக்கும் உள்ள இடைவெளி சுமார் இருபத்தைந்து ஆண்டுகள். ." என்று நான் எழுதியிருக்கிறேன். ஒருவர் முன்னாள் வருவதும் பின்னால் வருவதும் கொண்டு யார் சிறப்பையும் நான் தீர்மானிக்கவில்லை. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே நாட்டுப்புற இசை தமிழில் அறிமுகம் செய்யப்பட்டு வெற்றிகரமாக கையாளப்பட்டுவிட்டது என்பதே என் எழுத்தின் சாராம்சம். புரியாததுபோல நடிப்பதால் எனக்கு இழப்பு இல்லை. உங்களுக்கு பலனும் இல்லை.இதில் அமுதவன் எங்கே இங்கே வந்தார் என்று எனக்கு பொறி தட்டவில்லை.
    ஷாஜி இன்றைக்கு இருக்கும் இசை விமர்சகர்களில் மிக முக்கியமானவர். நீங்களோ பிறரோ அப்படியில்லை என்பதன் காரணம் அவர் இளையராஜாவை நேர்மையாக விமர்சனம் செய்து பதிவு எழுதியதே.ஒருவேளை அவரும் ராஜா ராஜாதான் என்று நுனிப்புல் மேய்ந்திருந்தால் உங்கள் சான்றிதழ் வேறு விதமாக இருந்திருக்கும் என்று எனக்குத் தெரியும்.
    ஒரு மிகப் பெரிய கூட்டத்தில் ஒரு மிகப் புகழ் பெற்றவர் தான் சார்ந்திருக்கும் (அதில் அரிய பல சாதனைகள் வேறு!) இசைத் துறையில் இருப்பவர்களைப் பற்றி உண்மைக்குப் புறம்பான கருத்துகளை முன்வைப்பது உங்களுக்கு சர்வ சாதாரணம். ஒரு பத்து சதவிகிதம் பேர் படிக்கும் என் எழுத்தில் இருக்கும் பிழைகளை 70எம் எம் மில் ஒளிபரப்ப முயல்கிறீர்கள். நான் என் தவறை திருத்திக்கொள்ள தயாராக இருப்பதாக சொல்லி இருக்கிறேன். இது நிகழக்கூடிய விபத்தே.
    டப்பாங்குத்து பற்றி நான் சொன்னதயே நீங்கள் கொஞ்சம் ஜாதி வாசத்தோடு சொல்லியிருக்கிறீர்கள். மன்னிக்கவும்.ஜாதிகளைப் பற்றி இங்கே விவாதிக்கவேண்டாம்.அது இந்தப் பதிவுகளின் பாதையை திசை திருப்பும் மூன்றாந்தர முயற்சி. தவிர்க்க முயலுங்கள்.
    "ராஜா கொண்டுவந்த பறையால தான் ஹிந்தி பாடல் மோகம் குறைந்தது.தமிழ் மக்கள் இசை அவரால் தான் தலை நிமிர்நதது."
    இந்த வீர வாக்கியம் எதற்கு?நான் என்னுடைய முந்தைய பதிவுக்கு சூட்டிய இரண்டெழுத்து தலைப்பே இந்தக் கருத்தை சொல்லிவிட்டதே. " மீண்ட இசை". ராஜா ரசிகர்களால் புதிதாக எதையுமே சிந்திக்க முடியாது என்பதற்கு இதை உதாரணமாக வைத்துக்கொள்ளலாமா?
    "கே.வீ. மஹாதேவன்முதன் முதல் இசையமைத்த படம் "ஆனந்தன்."அந்த படம் 1942 இல் வந்தது."
    சரியான தகவலுக்கு மிக்க நன்றி. (இதில் கவுண்டமணி பாணி குத்து எதுவும் இல்லை என்று சொல்லிவிடுகிறேன்)
    "வதந்தி எழுத்தர் அமுதவன் கடையை மூடி விட்டார்.நீங்களும் ஆமோதித்திருக்கிறீர்கள் !"
    அமுதவனின் அடுத்த பதிவு வந்ததும் உங்களின் இந்த வாக்கியம் எத்தனை அபத்தமாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். கொஞ்சம் நாகரீகமாக எழுத கற்றுக்கொண்டால் நாம் ஆரோக்கியமாக விவாதிக்கலாம். நாம் இருவருக்கும் மற்றவரின் முகம் கூட தெரியாது. இதில் எதற்காக இதனை கோபம்?வெறுப்பு ? உங்களுக்கு இளையராஜாவை பிடிக்கும். அவர் என்ன செய்தாலும் பிடிக்கும். எனக்கு அப்படியல்ல. நான் உங்கள் விருப்பங்களை மாற்றியமைக்க முயலும் பட்சத்தில் நீங்கள் இவ்வாறு வெகுண்டு எழுவது நியாயமாக இருக்கும். அதுவரை சற்று முகம் தெரியாத நண்பர்களாக இருந்துவிட்டுப் போகலாமே?

    ReplyDelete
  51. விமல்30 July 2013 at 06:29

    காரிகன்,

    ///டப்பாங்குத்து பற்றி நான் சொன்னதயே நீங்கள் கொஞ்சம் ஜாதி வாசத்தோடு சொல்லியிருக்கிறீர்கள். மன்னிக்கவும்.ஜாதிகளைப் பற்றி இங்கே விவாதிக்கவேண்டாம்.///- காரிகன்

    அக்கிரகாரத்துப் புனிதர்கள் தான் காலா காலமாக நாட்டுப்புற இசையை " டப்பாங்கூத்து " என்று இழிவுபடுத்தியதை உங்களுக்கு விளக்கினேன்.அது புரியாததால் தான் நீங்களும் அந்த சொல்லை பாவித்தீர்கள். முந்தைய இசையமைப்பளர்களையும் அவர்கள் எப்போதும் மதித்ததும் இல்லை.நான் இங்கே சாதி பேச வரவில்லை.

    இளையராஜா முன்னைய இசை அமைப்பாளர்கள் பற்றி , ஆன்மிகம் பற்றி எல்லாம் பேசுவர்தர்க்கு இசை ரசிகர்களா பொறுப்பு? அவர் இசையில் தான் ஞானி !
    அவரது இசை தான் நமது விருப்பம்.அவரது உளறல்கள அல்ல. நீங்கள் அதை அவரிடம் தான் கேட்க வேண்டும்.

    /// நான் என் தவறை திருத்திக்கொள்ள தயாராக இருப்பதாக சொல்லி இருக்கிறேன்.///- காரிகன்
    இது உங்களின் சிறப்பு.

    ReplyDelete
  52. விமல்30 July 2013 at 06:47

    //..அமுதவனின் அடுத்த பதிவு வந்ததும் உங்களின் இந்த வாக்கியம் எத்தனை அபத்தமாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்...///- காரிகன்

    அமுதவன் எழுதி வெளி வந்ததைப் பற்றியே பேசினோம்.இனிவருவது என்ன உங்களுக்குத் தான் தெரியும்.!!!!

    ஷாஜி என்ன இசை விமர்சகரா ..? நல்ல காமடி !!
    அவருக்குக்கு எந்த இசையுமே தெரியாது என்று சேதுபதி அருணாசலம் எழுதினார்.கர்னாடக இசை ராகங்கள் கூட அவருக்கு பரீட்சயமில்லை அவரே ஒத்துக் கொண்டிருக்கின்றார்.இந்திய சினிமா இசை விமர்சகருக்கு சாதாரண இசை ரசிகர்கள் கூட தெரிந்த ராகங்கள் தெரியவில்லை அவரை ஒரு விமர்சகர் என்று எந்த கத்துக் குட்டியும் ஒத்துக் கொள்ள மாட்டான். ஜெயமோகன் போன்ற "பெரிய" எழுத்தாளர்கள் பில்டப் கொடுத்துத் தூக்கித் திரிந்தது நமக்கு தெரியாததல்ல.இப்போது அவ்விதம் இல்லை என்பதும் தெரியும்.

    ஷாஜியை பொறுத்தவரை மலேசியாவாசுதேவன் தான் சிறந்த பாடகர்.!!!

    அவர் பற்றி சரியாக சொல்வதானால் பாடகர் வரலாற்று குறிப்பாளர் என்பது தான் பொருத்தம்.
    ஷாஜியின் கட்டுரைக்கு சந்தனார் என்பவர் எதிர் வினை ஆற்றினார்.ஷாஜி அமுதவன் போலாவது பதில் சொல்லவில்லை.மூச் இல்லை.

    ..// நாம் ஆரோக்கியமாக விவாதிக்கலாம்.//- காரிகன்
    நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தட்டி கழிக்கும் நீங்களா இப்படி எழுதுவது?

    நாங்க பட்டுகோட்டைக்கு வழி கேட்க நீங்கள் கொட்டை பாக்குக்கு விலை சொல்லவா ?
    ஆளை விடுங்க சாமி !!!
    அமுதவன் உடன் பட்டதே போதும் !!

    ReplyDelete
  53. நீங்கள் விருப்பப்பட்டால் தங்களின் ஈமெயில் விலாசம் தெரிவிப்பீர்களா? அது பிரசுரிக்கப்படமாட்டாது.

    ReplyDelete
  54. Amudhavan
    நீங்கள் விருப்பப்பட்டால் தங்களின் ஈமெயில் விலாசம் தெரிவிப்பீர்களா? அது பிரசுரிக்கப்படமாட்டாது.
    Right now I am back from the app-engine site.Still I've got that hangover. Hence, English. Forgive me. Did you mean me? or Mr. vimal?

    ReplyDelete
  55. விமல்30 July 2013 at 12:59

    Mr.அமுதவன்

    ரொம்ப அவசரமோ ?

    விமல்

    vimal.krishna1362@gmail.com

    ReplyDelete
  56. வேட்டைக்காரன்30 July 2013 at 19:53

    //திரு வேட்டைக்காரன்,

    என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை.சற்று தெளிவாக சொல்லி இருக்கலாம். நல்லது. //

    தமிழ்த் திரையிசைப் பாடல்கள் அனைத்தையும் நான் மட்டுமே அறிந்தவன் என்ற தொனி அவ்வரிகளில் இருந்தது. அதற்காகவே சிரிப்பான் இட்டேன். தவறாக நினைக்க வேண்டாம்.

    ReplyDelete
  57. வேட்டைக்காரன்30 July 2013 at 19:58

    //
    இசைப் பயிற்சி அல்ல இசை உணர்ச்சி

    20100120
    இளையராஜா: நேற்றும் இன்றும்
    மிகப்பெரிய புத்திசாலித்தனமோ உயர்ந்த கற்பனை வளமோ
    மேதைகளை உருவாக்குவதில்லை.
    மாறாத அன்பு, அன்பு, அன்பு மட்டுமே
    ஓர் உண்மையான மேதையின் ஆன்மாவாக இருக்கிறது
    - மொஸார்ட்

    சென்னை திரை இசைக்கலைஞர்கள் சங்கம் ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானைப் பாராட்டி நடத்திய விழாவில் இளையராஜா உரை நிகழ்த்தினார். அதில் அவர் பழம்பெரும் இந்தி இசையமைப்பாளர்களான ரோஷன் மற்றும் மதன் மோகனைப் பற்றி ஒரு கதை சொன்னார். "ரோஷனும் மதன் மோகனும் தம் வாழ்நாளில் சந்தித்துக் கொண்டதே இல்லை, ரோஷன் மறைந்தபோது அவருடைய உடலைப்பார்த்து கண்ணீர்விட்டபடி மதன் மோகன் சொன்னது 'இனி யாரோடு நான் போட்டியிடுவேன்?' என்று. அவர்கள் இருவரும் நேரில் சந்தித்ததே இல்லை. ஆனால் தங்களது இசையால் ஒருவக்கொருவர் உரையாடிக்கொண்டிருந்தார்கள்". எதை குறிப்பிடுவதற்க்காக இளையராஜா அம்மேடையில் இதை சொன்னார் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் ஒன்று உறுதியாகத் தெரியும், இந்தச் சம்பவம் உண்மையல்ல!

    இப்படி நான் உண்மைக்கு புறம்பாக உளறி இருந்தால் குறிப்பிடவும். திருத்திகொள்கிறேன்.
    //

    நாம் படைப்புகளை மட்டும் பேசுவோம், படைப்பாளிகளின் குணம், வாழ்க்கையைப் பற்றிப் பேசுவதைத் தவிர்ப்போம். தனிப்பட்ட வாழ்க்கையில் யாரும் புத்தனில்லை.

    ReplyDelete
  58. வேட்டைக்காரன் மற்றும் விமல்,
    தங்களின் புரிதலுக்கு நன்றி.நான் வெறும் சொந்த விருப்பங்களுக்காக யாரையும் விமர்சிப்பவன் இல்லை என்பதை கொஞ்சமேனும் தெரிந்துகொண்டால் நலம்.

    "நாம் படைப்புகளை மட்டும் பேசுவோம், படைப்பாளிகளின் குணம், வாழ்க்கையைப் பற்றிப் பேசுவதைத் தவிர்ப்போம். தனிப்பட்ட வாழ்க்கையில் யாரும் புத்தனில்லை."
    ஏற்புடைய கருத்து. வரவேற்கிறேன்.

    தமிழ்த் திரையிசைப் பாடல்கள் அனைத்தையும் நான் மட்டுமே அறிந்தவன் என்ற தொனி அவ்வரிகளில் இருந்தது. அதற்காகவே சிரிப்பான் இட்டேன். தவறாக நினைக்க வேண்டாம்.
    தமிழ்த் திரையிசையின் அத்தனை பாடல்களையும் அறிந்து கொள்ள ஆசைதான். சுலபத்தில் நடக்கிற காரியமா? மற்றபடி சிரிப்பான் எதையும் நான் காணவில்லை. அப்படி இருந்தாலுமே அதில்தவறாக நினைக்க ஒன்றுமில்லை.

    ReplyDelete
  59. மேடையில் ராஜா நிகழ்த்திய உரைக்கும் இந்த கட்டுரைக்கும் என்ன சம்பந்தம்?
    ராஜாவை ஏதாவது சொல்லி வம்பு எழுதுவதில் அமுதவனுக்கும் காரிகனுக்கும் ஓஸ்கார் கொடுக்கலாம் போல.ராஜாவை தவிர மற்ற எல்லா இசையமைப்பலர்களியும் பற்றி ரகுமான் போற்றி குமுதத்தில் பேசியது ஞாபகம் உள்ளது.ராஜாவின் இசைக்குழுவில் வாத்தியம் வாசித்துக் கொண்டே இப்படி பேசியது என்ன அன்பின் வெளிப்பாடா..?
    காரிகன் சார்
    நீங்கள் எழுதும் பிழையான தகவல்களை சுட்டி காட்டும் போது மட்டும் பணிவு காட்டுகிறீர்கள்.
    இதனை வைத்தே நாம் உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லலாமா.?
    மற்ற நேரங்க்ளில் நீங்கள் மற்றவர்களுக்கு என்ன தெரியும் என்ற தொனியிலேயே எழுதுகிறீர்கள்.இது அரைவேக்காடு தனம்.

    ReplyDelete
  60. அனானி அவர்களே,
    மறுபடியும் ஆரம்பிக்கிறீர்கள். சரி போகட்டும். என் எழுத்தில் பிழை இருப்பதை நான் நிகழக்கூடிய விபத்து என்று சொல்லிஇருக்கிறேன்.இது எல்லோருக்கும் நிகழ்வதே.இதை உரத்துச் சொல்வதற்கே இளையராஜா மேடையில் பேசியதை குறிப்பிடவேண்டி வந்தது. பதிவுகள் எழுதுவதற்காக ஆஸ்கார் தரும் விஷயம் எனக்கு இதுவரை தெரியாமல் போய்விட்டதற்காக வருந்துகிறேன்.நன்றி.
    "நீங்கள் எழுதும் பிழையான தகவல்களை சுட்டி காட்டும் போது மட்டும் பணிவு காட்டுகிறீர்கள்.
    இதனை வைத்தே நாம் உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லலாமா.?
    மற்ற நேரங்க்ளில் நீங்கள் மற்றவர்களுக்கு என்ன தெரியும் என்ற தொனியிலேயே எழுதுகிறீர்கள்.இது அரைவேக்காடு தனம்."
    Half -baked என்ற வார்த்தைப் பதத்தை பிரபலமாக்கிவிட்டேன் என்று தோன்றுகிறது. எனக்கே ஷட்டரா ?

    ReplyDelete
  61. காரிகன் அவர்களே உங்களைத்தான் நான் மெயில் விலாசம் கேட்டேன். உடனடியாக தம்முடைய விலாசத்தையும் அனுப்பிவைத்த விமலுக்கு நன்றி. என்னுடைய தளத்திலேயே தெரிவிக்கலாம். பிரசுரிக்கப்படமாட்டாது.

    ReplyDelete
  62. வேட்டைக்காரன்31 July 2013 at 10:25

    // app-engine தளத்தில் இந்த கருத்தை மாற்றி அமைக்கும் முயற்சியில் ராஜா விசிறிகள்(அவர்களுக்குத் தெரிந்த) ஆங்கிலத்தில் தங்கள் பங்குக்கு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். எதோ international மியூசிக் பேண்ட் பற்றி பேசுகிறார்களோ என்று நினைக்கும் அளவுக்கு அதகளம் செய்து வருகிறார்கள். Tragedy is they are seriously joking.//

    காரிகன் ஐயா,
    app-engine தளத்தின் சுட்டி கொடுக்க முடியுமா?

    ReplyDelete
  63. அனானிக்கு,
    இங்கே ஒன்று தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ பதில் சொல்லலாம்.இரண்டும் கலந்த தமிலிஷ் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. எனவே உங்கள் கருத்தை நிராகரிக்கவேண்டிய நிலை. முடிந்தால் தமிழில் இதே போல "தரமாக"கருத்து எழுதுங்கள். ராஜா ரசிகர்கள் செருப்பு என்று நாகரீகமாக பேசுவது அவர்களின் "உயர்ந்த" ரசனையை காட்டுகிறது.என்ன செய்வது? இளையராஜா என்று வந்துவிட்டாலே இப்படிப்பட்ட கலைரசம் சொட்டும் வார்த்தைகள் தாரளமாக கொட்டுமே.

    ReplyDelete
  64. வேட்டைக்காரன்1 August 2013 at 07:56

    காரிகன் ஐயா,

    இது தானே அந்தத் தளம்?

    ReplyDelete
  65. I think what you are writing is creating a revolutionary thought process in the internet and its causing all sorts of problems for raja and his fans like me. Pls spare us with your anger. We are trembling with the thought of such a person of immense knowledge has shown his wrath upon us. God save us and Raja

    It beggars belief that in such a age all that you are doing is going around the internet and reading about raja in a negative way and portray him in a negative way. Dont you have anything else worthy to do.

    When people argue with you you have a very blunt retort saying that you dont have a musical knowledge like me and the proof of your knowledge is the greatest witness for musical knowledge which is only you. And then you have the audacity about writing on Ilaiyaraaja. What credential do you have to write about him in any case. If you say its not my skill and my right then anybody can do the same with you. (obviosuly you may also claim you have a better musical knowledge than Raaja which is not a joke at all when it comes from you). Pointless logic which even school kids wont latch on to.

    But why do i come here. That is because it is pure entertainment to see this vengeance and hatred against IR and all that you can do is this. You can do all your crying and shouting because that is the fun. You are watching him claim all the glory and it should hurt you more and more.

    Did you see his latest birthday celebrations in all FMs. There was one FM that was playing his songs whole day. Then there was fans interactions session with people from different states participating in his presence. The whole day was Raja everywhere. Why doesnt it happen for MSV. Why does it happen if Raja is out of the field by 1992 itself. (and dont start your all FMS play only old songs joke..can we start a timeline watch as to how many hours of what songs each FM plays?)

    Did you see the news last month when an entire batch of Appollo Engineering college students went to meet ilaiyaraaja and wanted their placement orders presented by him. These are 20-21 age group which should be listening to anirudh forget Rahman. If raja is no more relevant why does this happen. why should the next gen of next gen meet Raja?

    Start music.. (will visit often for the fun)

    Kailash

    ReplyDelete
  66. I think you are the one who came before. I still don't have a clue what you are struggling to say. You sound too much of a kid who is yet to learn to speak. All that you mumble about your fav. music director, can never change a pixel of him in my mind. So, Why try in vain? I have a reason to think talking about your Ilayaraajaa is just a fun. Rightly said. And you said it. Try to send some serious thought-provoking(?) post, which I can seriously consider valid.

    ReplyDelete
  67. வேட்டைக்காரன்1 August 2013 at 09:23

    **// app-engine தளத்தில் இந்த கருத்தை மாற்றி அமைக்கும் முயற்சியில் ராஜா விசிறிகள்(அவர்களுக்குத் தெரிந்த) ஆங்கிலத்தில் தங்கள் பங்குக்கு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். எதோ international மியூசிக் பேண்ட் பற்றி பேசுகிறார்களோ என்று நினைக்கும் அளவுக்கு அதகளம் செய்து வருகிறார்கள். Tragedy is they are seriously joking.//**

    ஐயா, இது தானே அந்த இழை?

    எனக்கு என்ன தோணுதுன்னா.... சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்களே? :)

    இப்போ ஆகஸ்டு 9-ஆம் தேதி விஜயோட 'தலைவா' படம் வெளியாகுது. அன்னைக்கு விடியக்காலைல 5 மணி ரசிகர் ஷோவுக்குப் போயி, விஜய் அறிமுக சீன் வந்ததும் நீங்க எழுந்து 'ஏன் தல சிங்கம்டா' அப்படின்னு சத்தமா கூவறீங்கன்னு வையுங்க. அங்கே என்ன நடக்கும்?

    இது வேணாம்னா..., அஜீத் படம் 'ஆரம்பம்' வெளியாகிற அன்னைக்கு தியேட்டருக்குப் போயி 'ஏன் தளபதி கில்லிடா' ன்னு சொல்லிப் பாருங்க. அங்கே என்ன நடக்கும்?

    ReplyDelete
  68. haha as expected..
    You can sense that perfectly and cannot answer to what i have posted above.

    "sound too much of a kid" "who is yet to learn to speak"

    Wow an infant yet to learn to speak being an ilaiyaraaja fan . thats great aintit. Talk about raaja transcending generations.

    From no music sense to no ability to speak. What next?

    Why cant you answer to the two incidents that happened in last month itself. Why are these things happening for Raaja if he is out of the field like you claim and why is he being celebrated if everything was over by 1992. Why do people two decades later find him if he was lost then and that too young engineering grads..young FM listeners. Why is it not happening for others?

    Why do you always think that people try to convince you of Raaja. What is going to do for us. Nothing. rather you remain like this and thats all the fun that we need. Pls dont change a pixel and spend your full energy in this. Thats all i need.

    ReplyDelete
  69. திரு வேட்டைக்காரன் அவர்களே
    அவர் அங்கே போய் இளையராஜா மோசம் என்றால் கூட பரவாயில்லை.
    ஆனால் அவர் அங்கே போய் இளையராஜா porn music டைரக்டர் என்கிறார்.
    அதன் பின்னரும் அவர்கள் எவ்வளவு பொறுமையாக பதில் சொல்லி இருக்கிறாகள் பாருங்கள்.

    இவரை விட இளையவர்கள் காட்டும் பண்பு எங்க. இந்த வயசுல இந்த மாதிரி பேசி திரியும் இவர் எங்க,

    அப்போ இவர் porn musicல் நடித்த ரஜினி, கமல் உள்ளிட்ட actors porn actors போல.
    எங்க ரஜினி fans கிட்ட இந்த வாய கட்ட சொல்லுங்க.

    ReplyDelete
  70. வேட்டைக்காரன்1 August 2013 at 11:25

    காரிகன் ஐயா, அமுதவன் ஐயா, வவ்வால் ஐயா மூவரும் தங்களின் பேராற்றலை திரு. MSV அவர்களுக்கு பத்ம பூஷணோ இல்ல தாதா சாகேப் விருதோ கிடைக்க இணையத்தில் முனைப்புடன் ஆதரவு திரட்டச் செலவளிக்கலாம். அனைவரும் முழுமனதுடன் ஆதரிப்பர்.

    என்னோட 2 அணாக்கள்.

    ReplyDelete
  71. வேட்டைக்காரன் அனானி கைலாஷ் விமல் என்று எந்தப் பெயரில் நீங்கள் வந்தாலும் உங்களின் சத்தம் ஒரேமாதிரியாகவே இருக்கிறது. உங்கள் கூச்சலை எதோடு ஒப்பிடுவது என்று தெரியவில்லை. ஒவ்வொருவருக்கும் தனியாக பதில் சொல்ல அவசியமில்லாமல் செய்துவிட்டீர்கள்.
    ஆப் எஞ்சின் என்று ஒரு வசதிக்காக குறிப்பிட்டேன். அதையும் தவறு என்று ஒரு அனானி குதிக்கிறார்.
    "இப்போ ஆகஸ்டு 9-ஆம் தேதி விஜயோட 'தலைவா' படம் வெளியாகுது. அன்னைக்கு விடியக்காலைல 5 மணி ரசிகர் ஷோவுக்குப் போயி, விஜய் அறிமுக சீன் வந்ததும் நீங்க எழுந்து 'ஏன் தல சிங்கம்டா' அப்படின்னு சத்தமா கூவறீங்கன்னு வையுங்க. அங்கே என்ன நடக்கும்? இது வேணாம்னா..., அஜீத் படம் 'ஆரம்பம்' வெளியாகிற அன்னைக்கு தியேட்டருக்குப் போயி 'ஏன் தளபதி கில்லிடா' ன்னு சொல்லிப் பாருங்க. அங்கே என்ன நடக்கும்? "
    சரியான ஒப்பீடுதான்.இப்படிச் செய்தால் என்ன நடக்கும் என்று நீங்கள் நகைச்சுவையாக குறிப்பிட்டாலும் ஒரு உண்மையை மறந்துவிட்டீர்களே. அப்படிச் செய்பவனுக்கு எத்தனை துணிச்சல் வேண்டும்? நான் அங்கு போனதன் காரணம் இதுவே.

    நான் வெறுமனே காபி ஷாப்பில் உட்கார்ந்து இளையராஜாவைப் பற்றி வெட்டி அரட்டை அடித்துக்கொண்டிருக்கும் நான்கைந்து ராஜா ரசிகசிகாமணிகளிடம் திடீரென புகவில்லை. என் முந்தைய பதிவை மேற்கோள் காட்டி சில அநாகரீக கருத்தக்களை அவர்கள் கேலியாக எழுதி இருந்தார்கள். அதற்கு முதலில் நான் ஒரு கேள்வி கேட்டேன். பதில் வராததால் இன்னொரு முறை கேள்வி கேட்டேன். வழக்கம் போலவே அமைதி. எதோ ஒரு பிளாக்கில் எழுதுபவனைப் பற்றி புறம் பேசத்தெரிந்த உங்கள் பண்பாடு மிக்க ராஜா நண்பர்கள் அதே ஆள் அவர்களிடம் குதித்ததும் மவுனி ஆனது ஏன்? இதற்கு பெயர்தான் பண்போ? அதனால் நானே ஒரு திரெட் ஆரம்பித்தேன். அது கூட ராஜா பற்றி அல்ல " கொஞ்சம் மற்றவர்களையும் அறிவோம் " என்றே அதற்கு தலைப்பிட்டேன். ஒரு போஸ்ட் அனுப்பியதும் சில மணிகளிலேயே ஆப் எஞ்சின் "இது தேவையில்லை.இதை பூட்டுகிறேன்" என்று அதை தடுத்துவிட்டார். விவாதிக்க விரும்பாதவர்கள் பின் ஏன் இதுபோன்ற கீழ்த்தரமான gossip group ஆரம்பிக்கவேண்டும்? நான் நியாயமாக கேட்ட கேள்விக்கும் பதிலில்லை. நான் ஆரம்பித்த இழையையும் பூட்டிவிட்டு வசதியாக சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டு வீக் எண்ட் பார்ட்டி போல சலசலத்தால் அதன் பெயர் நாகரீகமோ?
    இதற்கு பிறகே இசை ஞானியா ... என்ற மற்றொரு திரெட் துவங்கினேன். வந்த யாரும் இதுவரை நான் கேட்ட கேள்விக்கு உருப்படியான பதிலை சொல்லவில்லை. என்னை மிரட்டுவதும், அவர்களுக்கே தெரிந்த நாகரீக சொற்களால் விமர்சிப்பதுமாக "நீ என்ன பெரிய இவனா?" என்கிற ரேஞ்சிலேயே விவாதம் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் பொறுமை காக்கிறார்களாம்.வேறுவழி. அவர்களின் பண்பு, பொறுமை, அடக்கம் இன்னபிற சங்கதிகள் எல்லாமே ஒரு நிர்பந்தத்தினால்தான். நான் என்ன எழுதினாலும் உனக்கு இன்னும் நான்கு மூன்று சந்தர்ப்பங்கள்தான் என்று கெடு விதித்திருக்கிறார்கள். அதனால் நான் கொஞ்சம் நிதானமாகவும் இன்னும் விரிவாகவும் எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன். அதுவரை தாங்காது என்று தோன்றுகிறது.
    இளையராஜாவை porn மியூசிக் டைரக்டர் என்று சொன்னதும் அதையும் ஆமாம் இந்தப் பாடலை மறந்துவிட்டீர்களே என்று அவரின் இன்னொரு மகா மட்டமான பாடலை எடுத்துக்கொடுக்கிறார்கள். என்ன ஒரு புரிதல்? ஒருவர் இளையராஜாவை எதோ ராஜரிஷி என்று கற்பனை செய்து கொண்டு தத்துவங்களாக அள்ளிவிடுகிறார். இன்னொருவர் இவரைப் போல எங்குமேகிடையாது என்ற வழக்கமான புளித்துப்போன உணவை பரிமாறுகிறார். மற்றொருவர் நீ எதுக்கு இங்கே வந்த என்று தமிலிஷில் தட்டச்சு செய்கிறார்.
    to be continued..

    ReplyDelete
  72. நான் ரஜினியையும் கமலையும் விமர்சித்தவன்தான். ஆனால் இப்போது இசைபற்றியே எழுதுகிறேன். நான் எதற்காக தேவை இல்லாமல் அவர்களை விமர்சிக்க வேண்டும்?நீங்கள் சொல்வதாலா?
    "Wow an infant yet to learn to speak being an ilaiyaraaja fan . thats great aintit. Talk about raaja transcending generations."

    நான் சொன்னதை கூட ஒழுங்காக விளங்கிக்கொள்ள முடியாத அனானி அவர்களே, நீங்கள் ஒரு குழந்தையை போல "பேசுகிறீர்கள்" என்பதற்கு இப்படிகூட ஒரு விளக்கம் கொடுக்க முடியுமா என்று வியப்பாக இருக்கிறது.
    And as for your two questions above, here I come.
    Ilayraajaa is gone. That's for sure. Now he's been called to preside over certain functions and inauguration events. I don't deny that. But this no way proves that he is still the king of Tamil music industry. FM radios play all kinds of songs. It's a simple case of target audience and their preferences. I don't see anything beyond that. And as for the Engineering college students, this clearly shows that Ilayraajaa has reached a point where he can now bless the other music directors as a front man of the industry.
    "Why do you always think that people try to convince you of Raaja. What is going to do for us. Nothing. rather you remain like this and thats all the fun that we need. Pls dont change a pixel and spend your full energy in this. Thats all i need." I seriously doubt if you yourself could make out what you have said here. But on the whole I understand that you take Raja for fun. That makes you come out with this funny stuff.

    ReplyDelete
  73. வேட்டைக்காரன்2 August 2013 at 07:56

    //வேட்டைக்காரன் அனானி கைலாஷ் விமல் என்று எந்தப் பெயரில் நீங்கள் வந்தாலும் உங்களின் சத்தம் ஒரேமாதிரியாகவே இருக்கிறது.
    //

    இப்படிப் பொங்குவதற்கு பதிலாக எளிதில் IP address பரிசோதனை செய்து பாத்துக்கலாம்.

    //ஆப் எஞ்சின் என்று ஒரு வசதிக்காக குறிப்பிட்டேன். அதையும் தவறு என்று ஒரு அனானி குதிக்கிறார். //

    ம்... சரி வேணாம் விடுங்க.

    // அப்படிச் செய்பவனுக்கு எத்தனை துணிச்சல் வேண்டும்? நான் அங்கு போனதன் காரணம் இதுவே.//

    அய்யா உங்களுக்குத் பயங்கரத் துணிச்சல்தான். ஒத்துக்கிடுதேன். உங்களப் பத்தின காரெக்டர் ஸ்கெட்ச்சு ஒன்னு மெல்ல உருவாகுது.

    // " கொஞ்சம் மற்றவர்களையும் அறிவோம் " என்றே அதற்கு தலைப்பிட்டேன். ஒரு போஸ்ட் அனுப்பியதும் சில மணிகளிலேயே ஆப் எஞ்சின் "இது தேவையில்லை.இதை பூட்டுகிறேன்" என்று அதை தடுத்துவிட்டார். விவாதிக்க விரும்பாதவர்கள் பின் ஏன் இதுபோன்ற கீழ்த்தரமான gossip group ஆரம்பிக்கவேண்டும்? நான் நியாயமாக கேட்ட கேள்விக்கும் பதிலில்லை. நான் ஆரம்பித்த இழையையும் பூட்டிவிட்டு வசதியாக சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டு வீக் எண்ட் பார்ட்டி போல சலசலத்தால் அதன் பெயர் நாகரீகமோ? //

    அய்யா, அவுங்க அதுக்குன்னு இருக்கற இடத்திலதானே உங்க கருத்த போடச் சொன்னாங்க? அப்புறம் என்ன? ஒரு எடத்துக்கு விருந்தாளியாப் போனா அந்த இடத்துக்குரிய ஒழுக்கத்தைப் பேணுவது தானே பண்பாடு? இல்ல நடுக்கூடத்துல காரித் துப்புவேண்ணா என்ன அர்த்தம்?

    //இதற்கு பிறகே இசை ஞானியா ... என்ற மற்றொரு திரெட் துவங்கினேன். வந்த யாரும் இதுவரை நான் கேட்ட கேள்விக்கு உருப்படியான பதிலை சொல்லவில்லை. என்னை மிரட்டுவதும், அவர்களுக்கே தெரிந்த நாகரீக சொற்களால் விமர்சிப்பதுமாக "நீ என்ன பெரிய இவனா?" என்கிற ரேஞ்சிலேயே விவாதம் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் பொறுமை காக்கிறார்களாம்.வேறுவழி. அவர்களின் பண்பு, பொறுமை, அடக்கம் இன்னபிற சங்கதிகள் எல்லாமே ஒரு நிர்பந்தத்தினால்தான். நான் என்ன எழுதினாலும் உனக்கு இன்னும் நான்கு மூன்று சந்தர்ப்பங்கள்தான் என்று கெடு விதித்திருக்கிறார்கள். அதனால் நான் கொஞ்சம் நிதானமாகவும் இன்னும் விரிவாகவும் எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன். அதுவரை தாங்காது என்று தோன்றுகிறது.//

    சரிங்க, இப்பத்தான் உங்களுக்கு ஒருத்தரு வீட்டுப்பாடம் கொடுத்திருக்காரே. அத முதல்ல முடிக்கலாமே? நீங்கதான் பனங்காட்டு நரியாச்சே, சலசலப்புக்கெல்லாம் அஞ்சலாமா?

    ReplyDelete
  74. "காரிகன் ஐயா, அமுதவன் ஐயா, வவ்வால் ஐயா மூவரும் தங்களின் பேராற்றலை திரு. MSV அவர்களுக்கு பத்ம பூஷணோ இல்ல தாதா சாகேப் விருதோ கிடைக்க இணையத்தில் முனைப்புடன் ஆதரவு திரட்டச் செலவளிக்கலாம். அனைவரும் முழுமனதுடன் ஆதரிப்பர்.
    என்னோட 2 அணாக்கள்."
    வேட்டைக்காரன் அவர்களே,
    உங்கள் பெயருக்கேற்றார்போலவே கருத்து சொல்லி இருக்கிறீர்கள். நீங்கள் அடர்ந்த காடுகளில் காய்,கனிகள்,இலை தலை உடை,இளையராஜா இசை என்றே இன்னும் வசிப்பதால் நகர வாழ்க்கை பற்றி தெரியவில்லை போலிருக்கிறது. அணாக்கள் வழக்கொழிந்து போய் எத்தனையோ காலங்கள் ஆகிவிட்டன. உங்கள் இரண்டணாவை வைத்து கொண்டு ஒரு பழைய இளையராஜா பாட்டு புத்தகம் கூட வாங்க முடியாது இப்போது. அடுத்த பதிவில்இளையராஜாவைப் பற்றி இன்னும் நிறைய தகவல்கள் வருகின்றன நீங்கள் கண்மண் தெரியாமல் கோபப்படுவதற்கு. அதற்குள் உங்கள் சக்தியை எல்லாம் வீணடித்துவிடாதீர்கள். கொஞ்சம் பொறுமை காக்கவும்.

    ReplyDelete
  75. Mr. kaarigan,
    It's high time you stopped entertaining these juvenile howlers. It's getting too personal and they don't discuss the post you have written. Anyone who follow these comments of late, clearly see their intention of visiting your blog. I wonder what forbids you from denying them entry.

    ReplyDelete
  76. வேட்டைக்காரன்2 August 2013 at 09:04

    // அணாக்கள் வழக்கொழிந்து போய் எத்தனையோ காலங்கள் ஆகிவிட்டன.//

    My 2 cents அப்படின்னா பின்னூட்டத்த தூக்கிருவீங்களோன்னுதான்....

    //நீங்கள் கண்மண் தெரியாமல் கோபப்படுவதற்கு. அதற்குள் உங்கள் சக்தியை எல்லாம் வீணடித்துவிடாதீர்கள். கொஞ்சம் பொறுமை காக்கவும்.
    //

    நான் எப்ப கண்மண் தெரியாமல் கோவப்பட்டேன்? ஙே...!

    ReplyDelete
  77. வேட்டைக்காரன்2 August 2013 at 09:14

    காரிகன் ஐயா,

    உங்க புண்ணியத்துல இனியொரு, http://ilayaraja.forumms.net/ பத்தியெல்லாம் தெரிஞ்சுகிட்டேன். மிக்க நன்றி. என்ன தடை செய்வதற்கு முன்னால் அந்த ** ஆர் வி என்பவர் ஒரு forum நடத்துகிறார்.** சுட்டி கொடுத்தீங்கன்னா இன்னும் புண்ணியமாப் போகும்.

    ReplyDelete
  78. Sir I dont take raaja for fun at all. He is God. Clean and straight. The fun part is you.

    "And as for the Engineering college students, this clearly shows that Ilayraajaa has reached a point where he can now bless the other music directors as a front man of the industry. "

    What a ROFL logic. what is the link.Whats the link between engineering college students and music directors. The question is plain and simple.

    Why dont the same engineering college students invite MSV as he is the older than ilaiyaraaja,
    and can bless them.

    Why if Ilaiyaraaja is finished (lol the mighty Kaarigan has sent poor ilaiyaraaja to retirement)
    and not relevant,Neethane En pon vasantham became a chart busterlast year.

    Pls continue to think that Raja is finished. He is again on the verge of giving another 10+ movies for the year, a count more than any other music director for this year.

    Again I am not trying to prove anything but just poking you for fun.

    ReplyDelete
  79. ஒன்று தெரிகிறது . இந்த காரிகன் சிறு வயதில் இருந்தே புரிந்தோ புரியாமலோ ஆங்கில இசையில் (அந்நிய இசை) அதிக நாட்டம் உள்ளவர் போல தெரிகிறது . தமிழ் பாடல்களையே சரியாக கேட்டிருக்க மாட்டார் போலவும் படுகிறது . அப்படி இருக்க இசை ஞானியின் இசையை பற்றிய இவருடைய அலசல் நுட்பமானது அல்ல . அனுபவித்து அறிந்தது அல்ல என்பது புலனாகிறது . ஆக இந்த பதிவு half backed என்று நன்றாகவே புரிகிறது . அதற்கு சிஞ்சா போட அமுதவன் கூடவே சேர்ந்து கொண்டு நாயனமும் வாசிக்கிறார் . சிரிப்பு போலீஸ் மாதிரி சிரிப்பு பதிவர்கள் . ஐயோ பாவம் !

    ReplyDelete
  80. திரு சார்லஸ்,
    நீங்களும் நன்றாக எழுதுவீர்கள் என்று தோன்றுகிறது. இ.ராஜாவைப் புகழ்ந்து ஒரு பதிவு எழுதுங்களேன்.உங்கள் நுட்பமான இசை அலசலை நான் கண்டுகொள்கிறேன்.

    ReplyDelete
  81. பொன்னகரம் இளையராஜாவே அல்ல. சங்கர் கணேஷ் படம். ஒரிஜினல் முகப்பு ஓவியம். சங்கர் கணேஷ் பெயருடன் காண சுட்டி இதோ-

    http://www.inbaminge.com/t/p/Ponnagaram/Muththuratho%20Mullai%20Saramo.vid.html

    ReplyDelete
  82. ஜென்சி பாடல்களை நாசல் டோனில் பாடி கெடுத்துவிட்டதாகச் சொல்கிறீர்கள். எனக்கு என்னவோ அவர் இன்னும் நிறையப் பாடவில்லையே என்றுதான் தோன்றுகிறது.

    ReplyDelete
  83. சரவணன் அவர்களே,
    பொன்னகரம் படத்தின் இசை ஷங்கர் கணேஷ் என்பதை சுட்டிக்காட்டிய உங்களுக்கு எனது நன்றி. மேலும் ஆட்டோ ராஜா படத்தின் மலரே என்னென்ன கோலம் பாடல் இளையராஜாவின் இசையில் அமைக்கப்படவில்லை என்பதையும் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.சில பிழைகள் ஏற்படுவதை தவிர்க்கமுயன்றாலும் அது ஒரு விபத்து போல நடந்துவிடுகிறது. ஜென்சி பற்றி உங்கள் கருத்து எனக்கு ஏற்புடையது அல்ல. அது ஒரு கொடுமையான காலகட்டம் நம் தமிழ் சினிமாவுக்கு என்பது என் எண்ணம்.
    உங்களின் தளம் சென்றேன்.ரஷ்ய கதைகள் மேல் உங்களுக்கு இருக்கும் மோகத்தை அறிந்ததும் இதோ பார் என்னைப் போல் ஒருவன் என்ற எண்ணம் உண்டானது. பாராட்டுக்கள், நிகொலாவ் நோசவ் என்ற எழுத்தாளரின் கதைகள் இருந்தால் பதிப்பிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி காரிகன் அவர்களே. நோசவ்வின் 'விளையாட்டுப் பிள்ளைகள்' புத்தகத்தை என்.சி.பி.எச். சொந்தப் பதிப்பாக வெளியிட்டுள்ளது. மேலும் நான் தளம் தொடங்கிய பிறகு அவர்கள் 'குறும்பன்', 'நீச்சல் பயிற்சி' உள்ளிட்ட பல சோவியத் புத்தகங்களை சொந்தப் பதிப்பு செய்திருக்கிறார்கள்.

      இன்று அதிகாலை (அதாவது நேற்று நள்ளிரவு) 1 மணிக்கு ஜெயா மூவிஸ் சேனலில் 'ஈரவிழிக் காவியங்கள்' நீண்ட நாளுக்குப் பிறகு பார்த்தேன். படத்தைப் பார்க்க விரும்புபவர்கள் ஜெயா மூவிஸ் ஷெட்யூலைக் கவனித்து வரவும்!

      Delete
  84. வாவ், சரவணன் அவர்களே,
    நோசவின் விளையாட்டுப் பிள்ளைகள் அற்புதமான கதைகள் கொண்ட தொகுப்பு. அதில்தான் என் பேவரைட் மீஷா கதாபாத்திரம் உண்டு. நீங்கள் படித்திருக்கலாம். இல்லாவிட்டால் கண்டிப்பாக படியுங்கள். ரொம்ப நாட்களுக்குப் பிறகு ரஷ்ய கதைகளோடு பரிச்சயம் உள்ள ஒருவரோடு உரையாடிய திகட்டாத மகிழ்ச்சி உண்டாகிறது. சில பொன்னான நினைவுகளை மீண்டும் வரவழைத்தற்காக உங்களுக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  85. மகிழ்ச்சி! 'மீஷா சமைத்த பொங்கல்' என் தளத்தில் இருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. சரவணன்,
      உங்கள் தளத்தில் ஏழு நிறப்பூ கதையை படித்தேன். அடடா என்ன ஒரு தென்றல் போன்ற சுகமான அனுபவம்.ருஷ்ய கதைகளுக்கு ஈடே கிடையாது என்ற கருத்தை மீண்டும் ஒரு முறை ஆணித்தரமாக நிரூபிக்கும் கதை. மீஷா கதைகள் வேறு எதுவும் இருப்பின் எனக்கு pdf படிவத்தில் அனுப்பமுடியுமா?

      Delete
  86. இசை என்பது எல்லோருக்கும் பொதுவானதுதான் . இசை ரசனை ஆளுக்கு ஆள் மாறத்தான் செய்யும் . அதற்காக இளையராஜாவை ரசிப்பவர்கள் குறை உள்ளவர் போல காரிகன் சித்தரிக்க முயல்கிறாரோ என எனக்குப் படுகிறது . வெறும் 300 பாடல்கள்தான் ஹிட் கொடுத்திருக்கிறார் என ஏதோ உளறி இருக்கிறார் . 1000 பாடல்களைச் சொல்ல முடியும் . இளையராஜா ரசிகர்கள் நினைத்தால் அதையும் எழுதி காட்டி விடுவார்கள் . அதற்கு தனி பதிவு தேவை . பின்னூட்டத்தில் எல்லாம் கொடுத்து விட முடியாது . காரிகனை அந்த 300 பாடல்களை எழுதச் சொல்லுங்கள் . மீதியை நாங்கள் சொல்கிறோம் .

    நான்கு படங்கள் இசை அமைத்து விட்டு ஒதுங்கிக் கொண்ட ஏ .எம் . ராஜா அவர்களுக்கு 900 படங்கள் இசை அமைத்த இசை ஞானி ஈடு கிடையாது என்று உலக மஹா காமெடி செய்திருக்கிறார் இந்த காரிகன் . 1500 படங்களுக்கு மேல் இசை அமைத்த எம் .எஸ். வி கூட ஈடாக மாட்டார் என்று அவரைப் போல நாங்கள் சொல்ல மாட்டோம் . ஏனென்றால் இந்த இளையராஜா ரசிகர்கள் எல்லோரும் ஒரு காலத்தில் எம். எஸ். வி யின் ரசிகர்களாகத்தான் இருந்திருப்பார்கள் . அவர் இசையில் காணாத சில அதிசயங்களை இசை ஞானியிடம் கண்டதால்தான் அவர் ரசிகர்களாக மாறி இருக்கிறோம் . அந்த இசை உலகம் புதுமையானது ,புரட்சிகரமானது , பித்து பிடிக்க வைப்பது .! வித்தியாசமான அனுபவத்தை தரக்கூடிய இனிய பிரளயம் . சுவைத்து பார்க்காத வரை புரியாத பண்டம் போல சிலருக்கு அது புரிவதில்லை . இசை ஞானியின் உலகத்திற்குள் நுழைந்து பார்த்து அனுபவம் பெறத் தெரியாத காரிகனும் அமுதவனும் காதல் பட 'கடைசி பரத் ' போல இப்படிதான் பிதற்றுவார்கள். இளையராஜா ரசிகர்களே! பொறுமை . பொறுத்திருந்து புரிய வைப்போம்.

    காரிகன் மற்றும் அமுதவன் ஆகிய இருவரின் பதிவுகளில் நடு நிலைத் தன்மை இருப்பதாக அவர்களே ஒருவரை ஒருவர் கொண்டாடிக் கொள்கிறார்கள். கூர்ந்து பார்த்தால் நாத கலா ஜோதி இசை ஞானியை குறைத்து மதிப்பிடுவதில் அக்கறை காட்டி இருப்பார்கள். நன்றாக ஆராய்ந்து பார்த்தால் அவர்கள்தான் இசை ஞானியை குறைத்து மதிப்பிடுகிறார்கள் . ஆனால் எந்த இளைய ராஜா ரசிகரும் எம். எஸ். வி யை குறைத்து எழுதி இருக்கவே மாட்டார்கள் . இந்த உண்மையை ஏற்றுக் கொள்வார்களா?

    ReplyDelete
  87. Mr.Charles,
    Why should you start all over again? It seems that you have no idea of what is going on here.

    ReplyDelete
  88. ஜே.ஆனந்தகுமார் அவர்களே,
    உங்களுக்கு முன்பே பதில் எழுத நினைத்திருந்தேன். நன்றி.நீங்கள் முன்பு குறிப்பிட்டதைப் போல சில அநாகரீக ஆசாமிகளுக்கு அவர்கள் தகுதிக்கு மீறிய சுதந்திரத்தை கொடுத்து விட்டேன் என்று தெரிகிறது.உதாரணம் திரு வேட்டைக்காரன். அவர் என் தளத்தில் அளவு மீறிய சுதந்திரத்தை அனுபவித்துவிட்டார். இனி அவர் ஏதாவது கருத்து அதுவும் நாகரீகமாக சொல்வதாக இருந்தால் அனுமதிக்கப்படும்.வீண் குழாயடி சண்டைகளுக்கு இங்கே கண்டிப்பாக no-no.

    ReplyDelete
  89. வெறும் 300 பாடல்கள்தான் ஹிட் கொடுத்திருக்கிறார் என ஏதோ உளறி இருக்கிறார் . 1000 பாடல்களைச் சொல்ல முடியும் . இளையராஜா ரசிகர்கள் நினைத்தால் அதையும் எழுதி காட்டி விடுவார்கள் . அதற்கு தனி பதிவு தேவை . பின்னூட்டத்தில் எல்லாம் கொடுத்து விட முடியாது . காரிகனை அந்த 300 பாடல்களை எழுதச் சொல்லுங்கள் . மீதியை நாங்கள் சொல்கிறோம் .-சார்லஸ்.

    வாருங்கள் புதிய காற்றே, அல்லது பின்னூட்டப் புலி என்று அழைக்கட்டுமா?
    நான் குத்து மதிப்பாக ஒரு 300 என்று சொன்னேன்.நீங்கள் பட்டியல் போடுங்கள் என்கிறீர்கள்.அப்படி செய்தால் 300 கூட தேறாது என்று தோன்றுகிறது.எனவே இந்த எண் கணித விளையாட்டை அப்பறம் வைத்துக்கொள்ளலாம்.1000 என்ன, கூட இன்னொரு முட்டையையும் சேர்த்துக் கொண்டிருக்கலாமே?காசா பணமா?
    வெறும் நான்கு படங்கள் என்று எ எம் ராஜா வைப்பற்றி இகழ்வாகச் சொல்லி உங்கள் இசை ரசனையை வெகுவாக உயர்த்தி காட்டிவிட்டீர்கள்.அப்படியானால் எண்ணிக்கையைக் கொண்டு ஒருவரின் மேதமையை தீர்மானிப்பதுதான் நியாயமோ?(தேவை இல்லாமல் சிங்கம் சிங்கிள் எதோ ஒன்றுதான் கூட்டம் என்று ஏதேதோ ஞாபகத்துக்கு வருகிறது). ஒன்று பெற்றாலும் பத்து பெற்றாலும் ஒருவள் தாய்தான். எத்தனை குழந்தைகள் உருப்படி என்பதே இங்கு நம் விவாதப் பொருள். உங்களுக்குப் புரியவில்லை என்று தோன்றுகிறது. ஆமாம் நான்தான் இன்னமும் இளையராஜாவை விமர்சிக்கவே ஆரம்பிக்கவில்லையே.அதற்குள் ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்?

    ReplyDelete
  90. நீங்க சொல்கிறபடி பார்த்தால் எம் .எஸ். வி கூடத்தான் வத வதன்னு 1500 படங்கள் கொடுத்தார் . அதற்காக நீங்க சொன்ன மாதிரி "சிங்கம் சிங்கிளா வரும் ஏதோ ஒண்ணுதான் கூட்டமாய் " என்று எடுத்துக் கொண்டால் அந்த மெல்லிசை மன்னரை குறைவாக மதிப்பிடுமாறு ஆகிவிடும் . அதற்கு நீங்களே வழி காட்டுகிறீகள் . ஏ . எம். ராஜா நான்கு படத்துக்கு மேல் கொடுக்க முடியவில்லை என்றால் அவரிடம் சரக்கு தீர்ந்து போயிருக்கும் . சான்சே கிடைத்திருக்காது . அவர் நல்ல பாடகர் . பெரிய இசை அமைப்பாளர் அல்ல . நாலு படம் இசை கொடுத்தவர் சூப்பர் இசை அமைப்பாளர் என்றால் அனிருத் கூட எம். எஸ். வி யை விட சிறந்தவர் என்று சொல்லலாமா? அது முட்டாள்தனம். ஏ. எம். ராஜாவை விட இளையராஜா குறைவானவர் என்றால் அனிருத்தை விட எம்.எஸ். வி குறைவானவர் என்ற அபத்தத்தை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா !?

    ReplyDelete
  91. வாருங்கள் சால்ஸ்,
    இந்த கணித விளையாட்டை நான் ஆரம்பிக்கவில்லை.எனவே உங்கள் கேள்வி உங்களுக்கே போய் சேர்க்கிறது.

    " ஏ . எம். ராஜா நான்கு படத்துக்கு மேல் கொடுக்க முடியவில்லை என்றால் அவரிடம் சரக்கு தீர்ந்து போயிருக்கும் . சான்சே கிடைத்திருக்காது . அவர் நல்ல பாடகர் . பெரிய இசை அமைப்பாளர் அல்ல "

    ஆஹா என்ன ஒரு வியாக்கியானம். எ எம் ராஜா பிரபலமான இசை அமைப்பாளராக இருந்ததில்னால்தான் டானியேல் ராசையா ராஜாவாகி பின்னர் இளையராஜா ஆனார் என்பது உங்களுக்குத் தெரியவில்லை போலும்.மேலும் எ எம் ராஜா வர்த்தக நிர்பந்தங்களுக்கு அடிபணியாத காரணத்தினாலேயே புறக்கணிக்கப்பட்டார். அவர் பாடிய பாடல்களும் இசை அமைத்த பாடல்களும் காலத்தை வென்றுவிட்ட அற்புதங்கள்.இளையராஜாவின் பாடல்களை விட அவை நேர்த்தியானவை.அழகாக வடிவமைக்கப்பட்டவை. இனிமையானவை.

    "ஏ. எம். ராஜாவை விட இளையராஜா குறைவானவர் என்றால் அனிருத்தை விட எம்.எஸ். வி குறைவானவர் என்ற அபத்தத்தை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா !?"

    நீங்களே அபத்தம் என்று சொல்லிவிட்டபின் நான் சொல்ல என்ன இருக்கிறது? அதுவே.

    ReplyDelete
  92. அது அபத்தம் என்றால் ஏ. எம் .ராஜாவை விட இளையராஜா குறைவானவர் என்பதும் அபத்தமே! கொடுமை ..ஏ. எம். ராஜாவோடு ஒப்பிட்டுப் பேச வேண்டிய கேவலமான இசை ரசனை உள்ள மனிதரோடு விவாதம் செய்ய வேண்டிதிருக்கிறது .

    உங்கள் எல்லா பதிவுகளையும் மறுபடி அலசிப் பார்த்ததில் பழைய இசை அமைப்பாளர்களைப் பற்றி எந்த குறையும் சொல்லவில்லை . ஆனால் இளையராஜா பற்றிய பதிவில் மட்டும் கொஞ்சம் பாராட்டுவது போல் நடித்து விட்டு குறைகள் அதிகம் காட்டுவது தென்படுகிறது . ஏன்?

    ReplyDelete
  93. ஏஎம்.ராஜா நல்ல இசையமைப்பாளர் என்பதை யாரிங்கே மறுத்த்தார்கள்? ஏஎம்.ராஜா பற்றி கார்கன் ஐய்யாவுக்கு என்ன தெரியும்?

    இனி ஒரு வெப் சைட் இல் பம்முகிறார்.இளயராஜாவை தாழ்ததவே பழைய இசையமைப்பாளர்கள் பற்றி புலம்புகிறார்.அதுவும் அறைகுறை செய்திகளோடு ...!அமுதவனிடம் கேட்ட கேள்வியை தான் மீண்டும் கேட்கும் நிலையில் நாம் உள்ளோம்.

    ReplyDelete
  94. திரு விமல்,
    சவுந்தர் அவர்கள் எழுதும் பதிவுகள் அனைத்தையும் நான் தொடர்ந்து படித்து வருபவன்.நீங்கள் இப்போதுதான் அங்கே வருகிறீர்கள்.முடிந்தால் அவரின் பழைய பதிவுகளையும் அதில் நான் எழுதியிருக்கும் கருத்துக்களையும் படித்துவிட்டு அதன் பின் நான் "பம்முவதைப்"பற்றி விமர்சனம் செய்யுங்கள்.இளையராஜாவைப் பற்றிய அவரின் அதீத ஆராதனை எனக்கு அவ்வளவாக உடன்பாடில்லாத அம்சம் என்பதைத் தவிர அவரிடம் நான் வேறு எதையும் குறையாக காணவில்லை.அவர் மிக அழகாக எழுதுகிறார். ராகங்களைப் பற்றி விலாவாரியாக தெளிவாக எழுதி வருகிறார்.அவரின் இசை ரசனைக்கும் அறிவுக்கும் அவரை நான் பெரிதும் மதிக்கிறேன். அவரோடு உடன்பாடு இல்லாத சங்கதிகளை ஓரம் கட்டிவிட்டு அவரின் எழுத்துக்களை நான் விரும்பி படிக்கிறேன்.அவ்வளவே. சில சமயங்களில் அவரின் சில கருத்துக்களோடு விவாதம் கூட செய்திருக்கிறேன். நீங்கள்தான் அங்கே சென்று தரமில்லாமல் என்னைப்பற்றி கருத்து சொல்லியிருக்கிறீர்கள். அது உங்களுக்கு தெரிந்த நாகரீகம். திருவாளர் சால்ஸ் கூட கண்ணா பின்னா வென்று எதையோ உளறியிருக்கிறார் பாருங்கள். எ எம் ராஜாவைப் பற்றி அவருக்கு தெரிந்தது அவ்வளவுதான் என்று கடந்து போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான். என் கருத்துக்களை தாராளமாக விமர்சனம் செய்யுங்கள்.அதுவே நான் உங்களைப் போன்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பது.

    ReplyDelete
  95. தாமதமாக வந்திருக்கிறேன். மிக உண்மையான பதிவு இது. எனக்குமே ராஜாவின் டிஜிட்டல் இசையில் எதோ குறைந்திருப்பதுபோல தோன்றுவது உண்டு. இதை விட விக்ரம் படத்தில் அவர் திறமையாக இசை அமைத்திருந்தார் என்று ஞாபகம். அடுத்த பதிவு எப்போது?

    ஷியாம்

    ReplyDelete
  96. திரு ஷியாம் அவர்களே,
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.இளையராஜாவின் டிஜிடல் இசை அவ்வளவாக பிரபலம் அடையாத ஒரு பரிசோதனை முயற்சியே.அவரால் வெற்றிகரமான அதை தொடரவும் முடியவில்லை என்பதை புன்னகை மன்னனுக்குப் பின் வந்த படங்கள் தெளிவாகவே உணர்த்திவிட்டன. உண்மையில் விக்ரம் படத்தில் வரும் டைட்டில் பாடல் சிறப்பாக இசைக்கப்பட்டது. மீண்டும் வருக.

    ReplyDelete
  97. Great work. You have hit the nail on the head. Keep going.

    ReplyDelete
  98. வணக்கம், காரிகன் அவர்களுக்கு,
    தங்கள் பதிப்பையும் அது பற்றிய அனைத்து பின்னூட்ட உரையாடல்களையும் படித்தேன். ராஜாவின் பல முத்து முத்தானப் பாடல்களை அவற்றின் சிறப்புகளைச் சொல்லி, அனுபவித்த அந்த பொற்கால எண்பதுகளை நினைவுகளில் நிறுத்தி ஆக்கப்பட்ட இது ஒரு நல்ல படைப்பு. எனினும் எதிர்மறையான விஷயங்களை சொல்வதில் இருந்த கடினத்தன்மையை என்னால் ஏற்க இயலவில்லை. தங்கள் பதிவில் பல Silly mistakes பதிவின் மேலிருக்கும் நம்பகத்தன்மையை குறைத்துவிட்டதாக உணர்கிறேன். எது ராஜாவின் பாடல் என்றே தெரியாத நிலையில் தாங்கள் நடுநிலைப் பேர்வழி என்கின்ற பெயரில் செய்த குறையாடல்கள்தான் பதிவின் குறைகள். திரைப்பட கதை/காட்சி சார்ந்த தேவைக்கும் இயக்குனர்/தயாரிப்பாளர்/கதாநாயகர் ரசனைகளுக்கும் மக்களின் காலம் சார்ந்த ஏற்புத்தன்மைக்கும் ஈடுகொடுத்தபடி இத்துனை ஆயிரம் பாடல்களை செய்து நமக்கெல்லாம் பெரும் சொத்தை அல்லவா ஏற்படுத்தி வைத்திருக்கிறார்.. அவரை ஏ.எம். ராஜாவோடு ஒப்பிட்டு கேவலப்படுத்துவது என்பது அய்யோ.. ஆண்டவா! என்னவென்று சொல்வது? வாழை இலையில் பரிமாறப்பட்ட அறுசுவை உணவின்மீது காக்கை வந்து எச்சமிட்டதுபோல் ஆகிவிட்டது.

    - ஓம்குமார் சிவசாமி

    ReplyDelete