Friday 27 September 2013

இசை விரும்பிகள் XI -புயலிசை

       புயலிசை 


  எவ்வாறு ஒரு கலைஞன் தன் மனதில் தோன்றும் எண்ணங்களையும்,வடிவங்களையும்  எழுத்தாக, கவிதையாக, சிலையாக, ஓவியமாக, இசையாக உருமாற்றுகிறான் என்பது உண்மையில் வியப்பானது.ஒரு தனித்த சிந்தனை கலையாக உயிர் பெறும்போது அதன் செழுமையும் அழகும் மிக உன்னதமாக வெளிப்பட்டு அதை உள்வாங்குவோரின் மனதை ஆனந்தமாக ஆக்கிரமிக்கின்றது. ஒரு தனி மனிதனின் கையசைவில் ஓவியம்,சிலை,கவிதை உருவாவதைப்   போலவே இசை காகிதங்களில் குறியீடாக எழுதப்பட்டாலும் அதை உயிர் பெறச் செய்ய மகத்தான இசைஞர்கள் தேவைப்படுகிறார்கள். மேலும் இசை  பாடல் என்று உருமாறும் போது அது  மூடுபனி போல கவிதை என்னும் இயற்கைக் காட்சியைப்  போர்த்தி அந்த ரம்மியமான தோற்றத்திற்கு இன்னும் அழகூட்டுகிறது. ஒரு நேர்த்தியான பாடல் என்பது என்னைப் பொருத்தவரை ஒரு வானவில் போன்றது. அது உருவாக மழைத் துளிகளுக்குள்ளே ஊடுருவிச் செல்லும் வெளிச்சம் தேவைப்படுகிறது. ஈரமும்(இசையும்) வெப்பமும் (கவிதையும்) ஒருங்கே இரண்டற கலப்பதினால் பிறக்கும் வண்ணமயமான அனுபவமே பாடல்.

    தமிழ்த் திரைஇசையின் பிதாமகன் என்று சொல்லப்படும் பாபநாசம் சிவன்,

   தமிழ்த் திரையை தங்களது மந்திரக் குரல்களால் கட்டிப்போட்டுவைத்திருந்த தியாகராஜ பாகவதர், கிட்டப்பா, பி யு சின்னப்பா, டி ஆர் மகாலிங்கம், கண்டசாலா,
  இசைச் சக்கரவர்த்தி  என்று அழைக்கப்படும் பல இசைப் புரட்சிகளை தொழில் நுட்பம் பெரிதாக இல்லாத காலத்திலேயே அறிமுகம் செய்து மேலும் தமிழ் திரையில் நாட்டுப்புற இசையை வெற்றிகரமாக அரங்கேற்றிய ஜி ராமநாதன்,
  பல இசை மேதைகளுக்கு தன் கூட்டின் கீழ் இடமளித்து அவர்களின் வளர்ச்சிக்கு பாதை அமைத்துக்கொடுத்த சி ஆர் சுப்பராமன்,
   பலருக்கு நினைவில் இல்லாத நாம் மறந்துவிட்ட எஸ் வி வெங்கடராமன்,
  தமிழ்த் திரையில் இசையின் பலவித பரிமாணங்களை 50 களிலேயே அசாத்தியமாக வார்த்தெடுத்து நம்மை இசையின் அழகை ஆராதிக்க வைத்த சுதர்சனம்,
  மேற்கத்திய இசையை நம் ராகங்களோடு திகட்டாமல் கலந்து கொடுத்து சிகரம் தொட்ட பல பாடல்களை உருவாக்கிய எ எம் ராஜா,
  இசையின் மேன்மையை அற்புதமான கானங்களால் நம்மால் மறக்க முடியாத வண்ணம் சிற்பம் போல வடித்த சுப்பையா நாயுடு,
   கர்நாடக ராகங்களில் கரை கண்ட திரைஇசை திலகம் என்று போற்றப்பட்ட தமிழ்த் திரையின் பொற்காலத்தில் இசைபவனி கண்ட கே வி மகாதேவன்,
   திகட்டக்கூடிய சாஸ்திரிய ராகங்களை எல்லோரும் எளிதில் சுவைக்ககூடிய வகையில் கவனமாக படிப்படியாக உருமாற்றி, தேனில் கரைந்த பழத்தைப் போல பல காவியப் பாடல்களை ஜனனித்து தமிழ்த் திரையிசையின் உச்சத்தை அடைந்த எம் எஸ் விஸ்வநாதன் -டி கே ராமமூர்த்தி

   போன்ற இணையற்ற இசை ஜாம்பவான்கள் ஆட்சி செய்த தமிழ்த் திரையிசையின் செங்கோல்  தன்னிடம் வந்து சேரும்  என்பதை இளையராஜாவே கூட  கற்பனை செய்திருக்க  மாட்டார். ஆனால் அதுவே நடந்தது.



     தமிழ்த்திரையிசையின் ஆரம்பகாலங்கள் இரும்புத்திரை உடுத்தப்பட்ட கடுமையான சாஸ்திரிய ராகங்களின் காலமாக இருந்தது. அப்போது இசை அமைத்தவர்கள் அவ்வாறான ராகங்களில் ஊறித்திளைத்தவர்களாக இருந்தார்கள் அவர்களின் இசை ஞானம் பலப்பல இசை அனுபவங்களை நமக்கு வாரிவழங்கி இருந்தாலும்  அப்போதைய காலகட்டதில் இசை அமைத்தவர்கள் எல்லோருமே பெரும்பாலும்  ஒரு சமூகத்தை சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள். இந்த இரும்புச் சூழ்நிலையில் இசை என்பது   ஒரு குறிப்பிட்ட  இனத்தின் அடையாளமாக முன்னிருத்தப் பட்டபோது பண்ணைபுரத்திலிருந்து புறப்பட்ட ஒரு  கிராமத்து இசை அவர்களின் மேதமையை  புரட்டிப்போட்டது. பாரம்பரிய இசை குடும்பத்தின் வேர்கள் இல்லாத அதேசமயம் மக்களின் இசையோடு அதிக உறவு கொண்டிருந்த ஒரு நவீனமான அதிசயம் 76 இல் தமிழ்த் திரையில் தோன்றியது. உண்மையில் இளையராஜாவின் சாதனை என்னவென்றால்  தமிழ்த்திரையை ஆட்சி செய்துகொண்டிருந்த ஒரு சமூகத்துப் பெருமையை உடைத்து அங்கே ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒரு இசைஞன் தன் கொடியை  ஒய்யாரமாக நாட்டினான் என்பதே. இதனாலேயே துவக்கத்தில் அவரின் இசை பலவிதமான விமர்சனங்களுக்கு  ஆளானது. பறையிசை எனப்படும் மண்ணின் இசையை அவர் திரையில் பதிவு செய்ததை பலர் குற்றம் சொன்னார்கள்.அப்போதே அவரின் "வாத்தியங்கள் வார்த்தைகளை  திருடியதாக"  குற்றச்சாட்டு எழுந்தது.   ஆனால் இளையராஜா தான்  அதிர்ஷ்டக் காற்றின் வலிமையால் விழுந்த கனி இல்லை என்பதையும், கோடைமழை போல கொட்டிவிட்டு ஓய்ந்துவிடும்  சாதாரணமானவன் இல்லை என்பதையும் அழுத்தமாக  நிலைநாட்டினார். 76 இல் துவங்கிய அவரின் இசை  80களில் அருவி போல நிற்காமல்  கொட்டியது. நம் மண்ணின் இசையை புதுவிதத்தில் வெளிக்கொணர்ந்தார் இளையராஜா. புதிய  பரிமாணங்களை இசையில் அடையாளம் காட்டினார்.இதுவரை எல்லாமே சிறப்பாகவே இருந்தது. இதையே நான் மிகப் பெரிய இசை பாரம்பரியத்தை எம் எஸ் விக்குப் பிறகு  வழிநடத்திச் செல்லும் சக்தி படைத்தவர் அதை இன்னும் சிறப்பானதாக ஆக்கியிருக்கலாம் என்று முன்பு ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். ஏழு வருடங்கள் இளையராஜாவின் இன்னிசை மழை மண்வாசனையோடு ரசிகர்களின் உள்ளதை நனைத்தது. பின்னர் அந்த   மழை ஓய்ந்தது. தூறல்கள் மட்டுமே தொடர்ந்தன. அதன்பின் ஒவ்வொரு பசுமையான இலைகளும் அவருடைய இசை என்னும் மரத்திலிருந்து உதிர ஆரம்பித்தன.



    இன்னிசையும் நல்லிசையும் மெலிந்தாலும் வணிக ரீதியாக அவர் வெற்றிகளையே சுவைத்தார். 90களின் ஆரம்பம் வரை அவர்  வெற்றிகள் மீது பயணம் செய்தாலும், அவரின் இத்தனை வெற்றிகளுக்கு அவருடைய இசையைத் தாண்டி பல காரணிகள் உள்ளன. அவரவர்கள் தங்கள் காலத்திற்கு உட்பட அறிவியல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பாடல்களை பதிவு செய்தார்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.அப்படியெல்லாம் இல்லை என்று கண்மூடித்தனமாக நம்புவர்கள் உண்மைக்கு எதிர் திசையில் பயணிக்கிறார்கள். 70 கள் வரை  மோனோ ரெக்கார்டிங் முறையே இருந்தது. தொழில் நுட்பம் அத்தனை சௌகரியப்படாத காலத்திலும் நம் இசையில் புதுமைகள் வரத்தவறவில்லை. 80களில் இளையராஜா ஸ்டீரியோ ஒலிப்பதிவு முறையில் பிரியா பாடல்களை அமைத்து ஒரு நவீன இசை அனுபவத்தை ஆரம்பித்து வைத்தார். இத்தொழில் நுட்பம் அவர் பாடல்களில் மறைந்திருந்த பலவிதமான இசை  இழைகளையும், நேர்த்தியான  இசைக் கோர்ப்பையும்      சிறப்பாக வெளிப்படுத்தியது. அதே காலகட்டத்தில் சாலையோர டீக்கடைகள் தெரு வானொலிகளாக உருமாறத் துவங்கி இருந்தன. அங்கே இளைஞர்களை இழுக்கும் இசை இளையராஜாவின் பாடல்களாகவும்  வீதிகளல்லாம்  இளையராஜாவின் இசையாகவும் இருந்தது.

    இந்த காலகட்டத்தில் இளையராஜாவின் இசைப் பரிசோதனைகள் வீரியம் பெறத்துவங்கின. புதிதாக சமையல் கற்றுக்கொள்ளும் ஒரு பெண் எவ்வாறு வித்யாசமான ஒழுங்கில்லாத வரைமுறைகளை மீறிய பரிசோதனைகள் செய்யத் தலைப்படுவாளோ அதே போன்று இளையராஜா சம்பிரதாயங்களை உடைக்கும் iconoclast பாணியில் தமிழிசையில் சோதனைகள் செய்தார். சில சமயங்களில் ஓவியத்தின் வண்ணங்கள் ஓவியத்தை மீறி பளபளப்பாக அமைந்துவிடும் அபாயத்தைப் போல அவருடைய இசையின் வீச்சு பெருமளவில் பாடல்கள் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. வாத்தியங்கள் வார்த்தைகளை விழுங்கின. ரசிகர்கள் அந்த இசையில் தன்னிலை மறந்தார்கள்.இதன் விளைவாக  பாடல் வரிகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு இசை முன்னிலைப் படுத்தப்பட்டது.  இந்தப் புதிய மாற்றம்  இளையராஜாவுக்கு புகழ் சேர்த்தாலும் இது ஒரு மெதுவான விஷம் போல திரையிசைக்கு பெரும் பின்னடைவை கொடுத்தது என்பது கண்கூடு. பாடலின் ஒரு மிக முக்கிய ஆளுமையான கவிதை குழிக்குள் புதையுண்டு போக அதன் மீது இசை நாட்டப்பட்டது. ஒப்புக்கென வந்து விழுந்த  சராசரியான  கவிதையிழந்த  வார்த்தைகள் இசையின் அழகியலை அழித்து துவம்சம் செய்தன. ராகங்களில் பின்னப்பட்ட பல்லவிகள் மட்டும் பாடலை முன் நடத்திச் செல்ல,  அலுப்பான,தொடர்பில்லாத இணையிசையும்,ஆயிரம் முறை கேட்டு சலித்துப்போன வறட்டுச்  சரணங்களும் dejavu  எண்ணங்களை ஏற்படுத்தத் தவறவில்லை. 90 களில் வந்த பெரும்பான்மையான இளையராஜாவின் பாடல்களை அவரின் ரசிகர்கள் மட்டுமே ரசித்துக்கேட்டர்கள்  என்பதே உண்மை. மற்றவர்கள் சகித்துக்கொண்டார்கள். ஏனென்றால் அப்போது தமிழ் ரசிகர்களுக்கு இசையை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு காணப்படவில்லை.எது கிடைத்ததோ அதை அவர்கள் எடுத்தார்கள். It was a matter of choice compelled to make.

     இப்போது 91ஆம் ஆண்டில்   இளையராஜாவின் இசையமைப்பில் வந்த சில படங்களைப் பார்க்கலாம். சாமி போட்ட முடிச்சு,ஈரமான ரோஜாவே, உருவம், கும்பக்கரை தங்கையா,தர்ம துரை,சார் ஐ லவ் யு,புது நெல்லு புது நாத்து, வெற்றி படைகள், வெற்றி கரங்கள், கோபுர வாசலிலே,தங்க தாமரைகள், சின்ன தம்பி,என் ராசாவின் மனசிலே,கேப்டன் பிரபாகரன்,கற்பூர முல்லை,மில் தொழிலாளி,புதிய ராகம், மனித ஜாதி,வசந்தகாலப் பறவை, குணா,பிரம்மா,தளபதி,தாலாட்டு கேட்குதம்மா,தாயம்மா, பாதை மாறிய பயணம். இவற்றில் சுமார் முந்நூறு பாடல்கள் இருக்கலாம். சில  பாடல்கள் வெற்றிபெறத் தவறவில்லை. ஆனால் அவரின் அந்த  மந்திரத் தொடுகை இப்போது வற்றிப் போயிருந்தது.ஏற்கனவே அவர் கிராமத்து நாயகனாக அறியப்பட்டிருந்தாலும் கரகாட்டக்காரன் படத்திற்குப் பிறகு அவரைச் சுற்றி இந்த கிராமத்து இசை என்னும் ஒளிவட்டம் இன்னும் அதிகமாக பிரகாசித்தது.90 களில் வந்த பெருமான்மையான படங்கள் அவரின்  இந்த முகத்தையே வெளிக்காட்டின.


   தமிழ்த்திரையின் துவக்கம் இசையாலே சூழப்பட்டிருந்தது. பாடல்களே  படங்களின் வெற்றியை தீர்மானித்தன. பாடத்தெரியாதவர்கள் கதாநாயகனாக நடிக்க முடியாத காலகட்டம் என்று ஒன்று இருந்தது.(இந்தச் சூழல் மாறிய பின்னரே சாகாப்தம் படைத்த  எம் ஜி ஆர் கதாநாயனாக வெற்றி உலா வரமுடிந்தது). எனவே இசை அமைப்பாளர்கள் சாஸ்திரிய சங்கீதத்தில் கரைகண்டவர்களாக இருந்தார்கள். இந்த இசையறிவு இசைஞர்களுக்கு மட்டுமல்லாது இயக்குனர்களுக்கும் இருந்த காரணத்தினால் பல  சமயங்களில் படத்தின் இயக்குனரே  தனக்கு வேண்டிய ராகத்தில் பாடல்களை கேட்டுப் பெற்ற கதைகளும் உண்டு. இந்த பாரம்பரியமான இசையின் தொடர்ச்சி ஒரு நூலிழை போல காலம்காலமாக இங்கே நீண்டு வந்தாலும், ஒரு காலகட்டத்தில் -அதாவது பாரதிராஜாவின் வருகையோடு- இந்த இசையறிவு கொஞ்சம் கொஞ்சமாக குன்றத் துவங்கியது. இதை நான்  பாரதிராஜாவை அல்லது அவர் கண்ட புதிய கதைகளத்தை குற்றம் சொல்லும் பாங்கில் எழுதவில்லை.  பாரதிராஜாவின் வெற்றி தமிழ்த்திரைக்கு பல  புதியவர்களை இழுத்து வந்தது. இவ்வாறான இயக்குனர்கள் இசையின் ஆழத்தையும் விசாலத்தையும் கணக்கில் கொள்ளாது வெற்றி அடைந்த பாடல்களைப் போலவே தங்களுக்கும் பாடல் அமைய விரும்பியதால் சாஸ்திரிய ராகங்கள் இசைஞர்களின் கூண்டுக்குள்ளே அடைபட்டுப்போயின. அவற்றை விவாதிக்க கூட இயலாத பல புதிய இயக்குனர்கள் இசையின் கூறுகளையும்  அதன் விழுமியங்களையும்   விட்டு வெகு தூரம் நிற்க, இசையை நேர்த்தியாக கொடுக்க வேண்டிய கடமை இசை அமைப்பாளர் என்கிற  ஒருவரை மட்டுமே சார்ந்திருந்தது. கேட்டு பாடல்கள் வாங்கிய காலம் கனவாகிவிட  கொடுக்கும் பாடல்களை  வாங்கும் காலம் நிஜமானது. இதையே நான் நிறம் மாறிய பூக்கள் பதிவில்

      "அவர் நினைத்திருந்தால் வணிக நோக்கங்களைத் தாண்டி தமிழ் இசையை இன்னும் நேர்த்தியான பாதையில் வழிநடத்திச் சென்றிருக்கலாம். ஏனென்றால் 80 களின் மத்தியில் அவர் ராஜாங்கமே இங்கே நடந்து கொண்டிருந்தது.  மேலும் இளையராஜாவை வீழ்த்தக்கூடிய எந்த ஒரு இசைஞரும் கண்ணில் தென்பட்ட தூரம் வரை காணப்படாத நிலையில்  இளையராஜா  தனக்கு முன்னே இருந்த இசை மேதைகளின் இசைப் பாரம்பரியத்தை இன்னும் செம்மையாகி இருக்கலாம்.அதற்கு அவருக்கு கண்டிப்பாக எல்லா வாய்ப்புக்களும், திறமைகளும்,தகுதிகளும்   இருந்தன.  இருந்தும் 80 களின் மத்தியிலிருந்து அவரது இசையின் தரம் சரியத் துவங்கியது. How to name it? Nothing but wind போன்ற திரையிசை சாராத இசை முயற்சிகளை முயன்றவரால் ஏன் தரமில்லாத இசையை தடுத்து நிறுத்த முடியவில்லை என்பது ஒரு புதிராகவே இருக்கிறது."  என்று குறிப்பிட்டிருந்தேன்.


      92 இல் இளையராஜா அதிகபட்சமாக 52 படங்களுக்கு இசைஅமைத்தார். இந்த வேகம் ஆச்சர்யமானது. தேவர் மகன், மீரா, சின்ன கவுண்டர்,நாடோடித் தென்றல், சின்னவர்,செந்தமிழ்ப் பாட்டு போன்ற படங்களில்  வர்த்தக அளவில் சிகரம் தொட்ட பாடல்களை அவர் வழங்கினார். o butterfly(மீரா), முத்துமணி மாலை (சின்ன கவுண்டர்), சின்னச் சின்ன தூறல் என்ன(செந்தமிழ்ப் பாட்டு-எம் எஸ் வி யுடன் இணை சேர்ந்த மற்றொரு படம்)  போன்ற  பாடல்கள் சிறப்பாக இருந்ததை குறிப்பிட்டாக வேண்டும். இது அவருக்கு ஒரு மிக முக்கியமான வருடமாக இருந்தது. 92 இல்  அவர் தன் இசை வாழ்க்கையிலேயே அதிகமான படங்களுக்கு இசை அமைத்திருந்தாலும்  அவருடைய ராஜ்ஜியத்தின் மீது இருள் படர்ந்ததும் இதே ஆண்டில்தான் என்பது ஒரு irony. போர் மேகங்களோ, படையெடுப்போ எதுவுமின்றி சத்தமில்லாத யுத்தம் போல் ஒரு மலரின் இசையில் தமிழ்த் திரையின் மிகப் பெரிய கோட்டை தகர்ந்தது. கோபுரங்கள் சரிந்தன.அதுவரை தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்டிருந்த (காயப்போட்டிருந்த) இளையராஜாவின் இசை முடிச்சு அவிழ்ந்தது. நடக்கவே நடக்காது என்று ஆரூடம் சொல்லப்பட்ட அந்த இசை அற்புதம்  92 ஆகஸ்ட் 15 ஆம் தேதியில் அரங்கேறியது. எ ஆர் ரஹ்மான் என்ற ஒரு இளைஞனின் இசையில் "ரோஜா" மலர்ந்தது. தமிழ்த் திரையிசையில்  வரலாறு திரும்பியது. ஒரு நவீன இசை  யுகத்தின் புது வெளிச்சம் இங்கே படர்ந்தது.



    ரோஜா பாடல்கள் பயணம் செய்த பாதை 76 இல் அன்னக்கிளி பாடல்கள் பயணித்த அதே சாலைதான். இரண்டுக்குமே ஒற்றுமைகள் நிறையவே உள்ளன. எப்படி இளையராஜா 76 இல் அப்போது ஒலித்த இசையை விட்டு ஒரு நவீன இசையை அமைத்தாரோ அதையே 92 இல் ரஹ்மான் செய்தார் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது. இதை மறுப்பவர்கள் ஒன்று இளையராஜாவின் தீவிர ரசிகர்களாகவோ அல்லது தமிழ் இசையின் வரலாறு தெரியாதவர்களாகவோ மட்டுமே இருக்க முடியும். அன்னக்கிளியின் இசைக்கும் ரோஜாவின் இசைக்கும் நாட்டுப்புற மேற்கத்திய இரு துருவ வேறுபாடுகள் இருந்தாலும், இரண்டுமே ஒரு நவீன யுகத்தின் signature tune போன்று ஒலித்தன. இளையராஜாவின் வருகை தமிழகத்தையே உலுக்கியது என்றால் ரஹ்மானின்  வருகையில் இந்தியாவே அதிர்ந்தது.

   சிகரங்களைத் தொட்ட ரோஜாவின்  பாடல்கள் ஒரு புதிய சகாப்தத்தை படைத்தது நம் கண்ணெதிரே நடந்த ஒரு  சமீபத்திய சரித்திரம். ஒரு குதூகலமான அதே சமயம் தமிழ்த்திரையில் பல வருடங்களாக காணாமல் போயிருந்த அழகான  இலக்கியத் தமிழில், நல்  கவிதை பாடும் வரிகளோடும், ஆப்ரிக்க ரெகே இசையின் தாளத்தில் வெடித்துக்கிளம்பிய "சின்ன சின்ன ஆசை" கேட்டவர்களை எல்லாம் ஒரு கணம் திடுக்கிட வைத்தது. கேட்பவர்களின் உதட்டிலும் மனதிலும்  ஒரு சேர அந்தப்பாடல் ஒரு குளிர் காலப் பனி போல உறைந்தது. இசையின் பரிமாணங்கள் இப்படியும் வேறுவிதமாக இருக்க முடியுமா என்ற ஆச்சர்யத்தை அளித்தது அப்பாடல். ரெகே இசையின் தீற்றுகள் நம் தமிழிசையில் ரஹ்மானுக்கு முன்பே இருந்தாலும் (பச்சை மரம் ஒன்று- ராமு, எம் எஸ் வி, நான் நன்றி சொல்வேன்- குழந்தையும் தெய்வமும்,எம் எஸ்  வி, பாட வந்ததோ கானம்- இளமைக் காலங்கள், இளையராஜா, வனக்குயிலே-பிரியங்கா,இளையராஜா ) சின்ன சின்ன ஆசை பாடலின் அடிநாதமாக பாடல் முழுதும் பயணித்த ரெகே தாளம் அதுவரை தமிழ் திரையிசையில் கேட்கப்படாத ஒரு நளினமான நவீனம். இது ஒரு பொன் மாலைப் பொழுதுக்குப்பிறகு வைரமுத்து மறுபடி பிறந்தார்.அவர்  தன்னை இன்னொரு முறை   புதுப்பித்துகொண்டு இரண்டாவது ஜனனம் எடுக்க, பாடலின் சிறகடிக்கும் புதுவித  இசை, கவிதை போர்த்திய  தரமான வரிகள், உருக்கும் குரல் என சின்ன சின்ன ஆசை ஒரு சூறாவளி போல் இந்தியாவை வாரிச் சுருட்டியது. தமிழகத்தில்  இந்தப் பாடல் ஒரு பேரலையாக வந்து அதுவரை கேட்டுகொண்டிருந்த உளுத்துப்போன வறட்டு இசையை கவிழ்த்துப் போட்டது. இளையராஜாவுக்கு மாற்று யார் என்ற நீண்ட நாள்  கேள்விக்கு விடையாக வந்திறங்கியது சின்ன சின்ன ஆசை.

   "புது வெள்ளை மழை" தமிழில் நீண்ட காலம் உறக்கம் கொண்டுவிட்ட வார்த்தைகளை வாத்தியங்களுக்கு முன்னே உலவ விடும் வடிவத்தை மறுபடி பிரசவித்தது. குரல்களை நெறிக்காமல், கவிதையை இடைஞ்சல் செய்யாத தாளம் இசையின் வண்ணத்தை பளீரென வெளிக்காட்டியது. சந்தேகமில்லாமல் இது அற்புதமாக உருவாக்கப்பட்ட  கானம்.

    ருக்குமணி பாடல்  ஒரு பின்னடைவு. ரஹ்மானின் மிக மோசமான பாடல்களில் இதுவும் ஒன்று. ஆபசாமான பாடல் என்பதில் மாற்றுகருத்தே இல்லை. இப்படியான பாடல்கள் வருவது ஒரு சம்பிரதாயமாகவே ஆகிவிட்டதின் எச்சமே இப்பாடல் என்று நினைக்கத்  தோன்றுகிறது. இப்போது ரஹ்மானே கூட  இந்தப் பாடலை விரும்ப மாட்டார் என்று நினைக்கிறேன்.(இதை முதல் முறை கேட்ட போதே எனக்குப் பிடிக்காமல்போனது).

     தமிழா தமிழா இதுவரை நம் இசை காணாத வேறு தளத்தில் இயங்கியது. மடைதிறந்து கொட்டப்போகும் கன மழை ஒரு சிறிய தூற்றலோடு துவங்குவதைப்போன்று ஹரிஹரனின் ஆர்ப்பாட்டமில்லாத குரலோடு துவங்கி, பாடல் செல்லச் செல்ல அங்கங்கே வந்து இணையும் வாத்தியங்கள் பாடலை வேகமாக நகர்த்த, குரல், இசை,தாளம் எல்லாம் இறுதியில் explosion mode அடைந்து வெடிக்க இநதப் பாடல் கேட்பவர்களுக்கு adrenaline rush அனுபவத்தைக்  கொடுத்தது.  மேற்கத்திய இசையில் பிரசித்தி பெற்ற crescendo இசை பாணியில் ஒரு சிறியவன் தன் முதல் படத்திலேயே ஒரு பாடலை அமைப்பது சவாலானது.(தமிழில் பொதுவாக சினிமாவில் வரும் சில  ஆன்மீகப் பாடல்கள் இவ்விதமான உயரும் இசை பாணியில் அமைக்கப்பட்டிருக்கும்)  ரஹ்மான் இதை   செய்தார் என்பதை விட மிக சிறப்பாகச் செய்தார் என்பதே அவரின் இசை எல்லைகளுக்கு உதாரணம் காட்டுகிறது.

    ரோஜா படத்தின் முகவரியாக சின்ன சின்ன ஆசை ஒலித்தாலும் கேட்டவர்களை சிலிர்க்க வைத்த கானம் காதல் ரோஜாவே. நேர்த்தியாக பின்னப்பட்ட ஆடைபோல, தத்ரூபமாக வரையப்பட்ட  ஓவியம் போல, சிறப்பாக செதுக்கப்பட்ட சிற்பம் போல இது ஒரு இசை அற்புதம். ஒரு சாதாரண  ஹம்மிங்குடன் துவங்கி, பின்னணியில் கொப்பளிக்கும்  bass இசை இணைய  யாரும் கணிக்காத கணத்தில்  துடிப்பான slow rock ட்ரம் துவங்க எஸ் பி பி யின் வழுக்கும் குரலில் காதல் ரோஜாவே ஆரம்பிக்கும்போதே அது கேட்பவர்களின் உள்ளதை உருக்கிவிடுகிறது. பிரிவின் துயரத்தை நெஞ்சைத் தொடும்    வரிகள்   உணர்த்த       ("முள்ளோடுதான் முத்தங்களா சொல் ") எந்த இடத்திலும் இசை தன் எல்லைகளை  மீறாமல் பாடலின் உன்னதத்தை குலைக்காமல் நம் காதுகள் வழியே உள்ளத்துக்குள் நுழைந்துவிடுகிறது. உண்மையில்      இந்தப் பாடல் ஒரு புது யுகத்தின் அவதாரமாக அவதரித்தது என்பது மிகை இல்லாத வர்ணனை.

    ரோஜாவின் பாடல்கள் அனைத்துமே தமிழ் ரசிகர்களுக்கு இன்னிசை விருந்தை சுவைபட வழங்கியது.  புதிய வாசம் நறுமணம்  வீச, தன் முதல் படத்திலே இந்தியா முழுவதுக்கும் அறிமுகமானார்  ரஹ்மான். அவரின் இசையிலிருந்து புறப்பட்ட பலவித ஓசைகளும் வசீகரப் படுத்தும்  இசை கோர்ப்புகளும் ரசிகர்களுக்கு புது யுகத்தின் நம்பிக்கையையூட்டின.இப்படிக் கூட இசை இருக்க முடியுமா என்று ஒரு பாமரன் ஆச்சர்யப்பட்டான். காலி பெருங்காய டப்பா என்று வர்ணிக்கப்பட்ட முந்தைய தலைமுறையினரின் இசைக்கு முடிவு கட்டியது ரஹ்மானின் துள்ளல் இசை. அதுவரை உலக இசையின் இன்பத்தை மறுத்து கதவுகளை மூடியிருந்த இளையராஜாவின் இசைக்கு முற்றுப்புள்ளி வைத்தது  ரஹ்மானின் துடிக்கும் இசை. நடக்காத சாத்தியம் நிகழ்ந்தது. புயலிசை என்று பாராட்டப்பட்ட ரஹ்மானின் வரவுடன்  நம் இசையின் அடுத்த சகாப்தம் துவங்க  இளைய தலைமுறையினர் ஏக்கத்துடன் காத்திருந்த நவீன இசை வடிவம் இறுதியில் தமிழ்த்திரைக்கு  வந்து சேர்ந்தது.

     Missed at first என்பதுபோல் நான் நழுவவிட்ட ஒரு தருணதில் தமிழகத்தில் ரோஜா பாடல்கள் அதகளம் செய்துகொண்டிருந்த போது, நான் பல ஆயிரம் மைல்கள் தாண்டி இந்தியாவின் இன்னொரு எல்லையில் இருந்தேன். என் தமிழ் நண்பர் சென்னையிலிருந்து அப்போதுதான் அங்கு திரும்பியிருந்தார். வந்தவர் என்னிடம் ஒரு ஆடியோ கசெட்டை கொடுத்து," கேளுங்கள் இதை. இளையராஜாவுக்கு  மூட்டை கட்டியாகிவிட்டது." என்றார். "என்ன?" என்றேன் புரியாமல்." ரஹ்மான் என்று ஒரு சின்னப் பையன் வந்திருக்கிறான் ரோஜா என்ற படத்தில். பாடல்கள் அனைத்தும் அதிரடியாக இருகின்றன ."என்று படபடத்தார். எனக்கோ  இது ஒரு வழக்கமான பல்லவிதான் என்று தோன்றியது. அவ்வப்போது இப்படி சில புதிய இசைஞர்கள் வந்ததும்  அவ்வளவுதான் இளையராஜா காலி என்று சொல்வது வாடிக்கைதான். எனவே கொஞ்சமும் ஆர்வமில்லாமல் ரோஜா பாடல்களை கேட்க ஆரம்பித்தேன்.ஆனால் முப்பது நிமிடங்களுக்குப் பிறகு என் எண்ணங்கள் எதிர் திசையில் சென்றுகொண்டிருந்தன. இருந்தும் அப்போதுகூட என்னால் இளையராஜா என்னும் இருபது வருட இசை மாளிகையை இந்த ரஹ்மான் என்ற சிறிய சுத்தியல் உடைத்துவிடும் என்று   நம்ப முடியவில்லை.

     ரோஜாவின் அமானுஷ்ய வெற்றிக்குப்பிறகு புதிய முகம் (பொருத்தமான பெயர்) என்ற தன் அடுத்த தமிழ்ப்  படத்தில் (yodha என்ற மலையாளப் படமே இரண்டாவது) ரஹ்மான் மீண்டும் தன்னை நிரூபித்தாலும் பாடல்கள் ஏற்கனவே கேட்டது போல இருப்பதாக ஒரு  பொதுவான விமர்சனம் எழுந்தது. ஆனால் உண்மையில் அவர் புதிய முகத்தில் நல்லிசையை தொடர்ந்து செய்திருந்தார். நேற்று இல்லாத மாற்றம் பாடல் அருமையாக வார்க்கப்பட்ட சிறப்பான கவிதை கொண்ட ஒரு மென்மையான நல்லிசை. பி சுசீலாவின் குயிலோசையில் வந்த கண்ணுக்கு மை அழகு ஒரு அபாரமான அழகியல் சுவை கொண்ட இசை விருந்து. இப்படியான நல்  கவிதை ரஹ்மானின் வரவுக்குப் பிறகேதான் புத்துயிர் பெற்றது என்பதை யாரும் மறுக்க முடியாது.ரஹ்மான் முடிந்தவரை மோசமான கவிதைகளை பாடலாக்க மறுப்பவர் என்று அறியப்படுகிறார்.இது அவர் தரமான கவிதைகளை நேசிப்பதாலேயே  சாத்தியப்படுகிறது.புதிய முகம் படப்பாடல்கள் சிறப்பாக இருந்தாலும் ரோஜாவின் வெற்றிக்கு முன் அவை நிற்கவில்லை. இதனால் பலர் அவரை ஒரு பட வியப்பு என்று முத்திரை குத்தி "சின்னப்பையன் தேறமாட்டான்" என்று கணித்தார்கள்.



    93 இல் ரஹ்மானின் இசையில் வெளிவந்த ஜென்டில்மேன் படத்தின் பாடல்கள் வெடித்துக் கிளம்ப, தமிழகம் இந்த ஆளிடம் எதோ மாயம் இருக்கிறது என்று உணர்ந்துகொண்டது.என் வீட்டுத் தோட்டத்தில், பாக்காதே பாக்காதே (இது ஒசிபிசா குழுவினரின் கிலேலே கிலேலே என்ற பாடலின் நகல்),உசிலம்பட்டி பெண்குட்டி போன்ற பாடல்கள் காற்றில் கலகலத்தன. ஒட்டகத கட்டிக்க பாடல் போகும் வழியெல்லாம் அதிர்ந்தது. அந்தப் பாடலின் ராட்சத தாளம் கேட்டவர்களை மனம் லயிக்கச் செய்தது.அப்படியான ஒரு துள்ளல் இசை திடும் திடும் என துடிக்கும் இளம் இசை அதுவரை நம் தமிழ் திரை அறியாதது. அதே படத்தின் பெரிய வெற்றி பெற்ற சிக்கு புக்கு ரயிலு அடுத்த அதிரடியாக வந்து ரசிகர்களை கிறங்க அடித்தது. மேற்கத்திய பாப் பாணியில் கொஞ்சம் மைக்கல் ஜாக்சன் குரலில் பாடப்பட்ட   இந்தப் பாடல் சந்தேகமில்லாமல் அதற்கு முன் இருந்த இசைச் சுவட்டை  துடைத்துபோட்டது. இதுவே 90 களைச் சேர்ந்த இளைஞர்கள் விரும்பிய இசை.இவ்வாறான வேறுபட்ட இசையின் வெளிப்பாட்டையே மக்கள் வரவேற்றனர். It was understood that  Rahman is here to stay.



 
      அதே ஆண்டில் ரஹ்மானும் பாரதிராஜாவும்  கை கோர்த்தது பலருக்கு வியப்பை அளித்தது. ரஹ்மான் ஒரு நவீன யுகத்தின் இசைக் குறியீடாக பார்க்கப்பட்டவர். அவர் மீது நகர் புறத்து சாயல் அதிகமாக இருப்பதாக எல்லோரும் எண்ணினார்கள். இதனாலேயே பாரதிராஜா தன் கிழக்குச் சீமையிலே படத்தில் ரஹ்மானுடன் இணைந்த போது அப்போது அது மேற்கும் கிழக்கும் சந்திக்காது என்ற ரீதியில் இகழப்பட்டது. பாரதிராஜா கம்ப்யூட்டர் குயில் என்று ரஹ்மானை அழைக்க படத்தின் பாடல்கள் வெளிவந்தபோது பலர் ரஹ்மானிடம் இப்படிப்பட்ட கிராமத்து இசை இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த சமயத்தில் சில உளவியல் காரணங்களை நாம் ஆராயவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். 80,90 களில் கிராமத்து இசை என்றாலே அது இளையராஜாதான் என்ற பொதுக் கருத்து தமிழகத்தில் இருந்தது. இளையராஜாவின் கிராமத்து இசை நம் மண்ணின் இசையாக உள்வாங்கப்பட்டிருந்தது.இதனால்தான்தேவேந்திரன்,தேவா,ஹம்சலேகா,சந்திரபோஸ்,ராஜ்குமார், போன்ற பலரை ரசிகர்கள் புறக்கணித்தார்கள். ஏனென்றால் அவர்களின் இசையில் இளையராஜாவின் பாதிப்பு அதிகம் தென்பட்டு அவர்களின் தனித்தன்மை மாயமாகி இருந்தது. இதன் பின்னணியில் ரஹ்மான் பாரதிராஜாவுடன் கூட்டு சேர்ந்தபோது அது ரஹ்மானுக்கு ஒரு அமிலத் தேர்வாக அமைந்தது. Rahman had to do the tight rope walking. கிராமத்து இசையை கொடுக்கவேண்டிய கட்டாயமும் அதேசமயத்தில் அந்த இசையில்  எந்த விதத்திலும் இளையராஜாவின் சாயல் இல்லாமலிருக்கவேண்டிய மிக சிரமமான ஏறக்குறைய சாத்தியமில்லாத நிர்பந்தமும் ரஹ்மானின் மீது அழுத்தமாக இருந்தது. எனவே கிழக்குச் சீமையிலே பாடல்களை ரஹ்மான் வெகு சிரத்தையுடன் கவனமாக  கிராமத்து இசையின் அழகை சிதறடிக்காமல், தனது பாணியில் கொடுத்தார். இது அந்தப் படப்பாடல்களை வேறு பரிமாணத்திற்கு இட்டுச் சென்றது. உதாரணமாக மானுத்து மந்தையிலே பாடலில் இளையராஜாவின் சாயல் சற்றுமில்லாத ஒரு நவீன நாட்டுபுற இசையை நாம்  கேட்கமுடியும்.ஆத்தங்கர மரமே மேற்கத்திய மெல்லிசையுடன் கூடிய ரசிக்கத் தக்க வகையில்  அமைக்கப்பட்ட சிறப்பான பாடல்.எதுக்கு பொண்டாட்டி என்னைப் பொறுத்தவரை  ஒரு கீழ்த்தரமான பாடல். காத்தாழ காட்டு வழி, தென் கிழக்கு சீமையிலே இரண்டும் நேர்த்தியானவை. இருந்தும் பலரால்(அவர்கள் யார் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை)  இவை புறக்கணிப்படுவது ஒரு தீவிர வெறுப்பின் வெளிப்பாடேயன்றி வேறொன்றுமில்லை.

     இதே ஆண்டில் ரஹ்மான் தன் அடுத்த கிராமத்து இசையை உழவன் படத்தில் மிக அழகாகக் கொடுத்திருந்தார். பெண்ணெல்ல பெண்ணெல்ல ஊதாப்பூ என்ற பாடல் கேட்கும் முதல் கணத்திலேயே நம் உள்ளத்துக்குள் ஊடுருவி விடுகிறது. வார்த்தைகள் இசைக்குள் காணாமல் போகாமல் எஸ் பி பியின் குழையும் குரலில் ரம்மியமான ராக வளைவுகளோடு அபாரமாக இசைக்கப்பட்ட கானம். கண்களில் என்ன ஈரமா  அடுத்த நல்லிசை. ரஹ்மான் இவ்வாறு நாட்டுபுற இசையில் தன்னை நிரூபித்தாலும் அவர் அதை வெகு சிரத்தையுடனே செய்யவேண்டியிருப்பது அவருக்கு ஒரு பின்னடைவே.

     மணிரத்னத்தின் திருடா திருடா படப் பாடல்கள் மீண்டும் ரஹ்மானின் களத்தை இனம் காட்டின. ரஹ்மானின் பொற்காலப் பாடல்களில் கண்டிப்பாக இடம்பெறக்கூடிய இசையாக இது இருந்தது.புத்தம் புது பூமி வேண்டும் அபாரமான புதுக் கவிதையுடன் இன்னிசை சேர்ந்த அற்புதமான கானம். பாடல் பயணிக்கும் விதம் கேட்பவரை அதற்குள் இழுத்துச் சென்று விடுகிறது.வழக்கமான துள்ளலான ரஹ்மானின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பாடல் அதிவேக ராக் இசையின் கூறுகளை தமிழில் அழகாக வெளிகொணர்ந்தது. இவ்வாறான மேற்கத்திய இசையின் விழுமியங்களை தமிழுக்கு கொண்டுவருவதில் இளையராஜா அதிக அக்கறை காட்டாததினால் ரஹ்மானின் இசையில் அவை சிறப்பு பெறுகின்றன. தீ தீ பாடலில் ரஹ்மான் சைனீஸ் பாடகியான கரோலினை பாட வைத்திருந்தது புதுமை.ராசாத்தி பாடல்  வெறும் மனித குரல் மட்டுமே பிரதானமாக ஒலிக்கும் Acappella வகையைச் சார்ந்தது. இவ்விதமான புதிய முயற்சியை ரஹ்மான் தமிழுக்கு அறிமுகம் செய்தது நம் இசையை பல அடுக்குகளுக்கு உயர்த்திச் சென்றது. மிகப் பிரபலமான வீரபாண்டிக் கோட்டையிலே தளபதி படத்தின் ராக்கம்மா கையத் தட்டு பாடலின் ரஹ்மான் வடிவம் போலவே ஒலித்தது. இரண்டிற்கும் ஒரு வினோத ஒற்றுமையை நாம் காணலாம். இறுதியாக இசைஅருவியாக கொட்டிய சந்திரலேகா பாடல் ஒரு அழகான அற்புதம். தமிழில் இதுபோன்ற குரல் கொண்டு யாரும் இதன் முன் பாடியதில்லை என்று தாராளமாகச் சொல்லலாம். அனுபமாவின் ஆச்சர்யப்படுத்தும் மிரட்டும் கவர்ச்சிக் குரலில்  கொஞ்சம் நிலவு பாப் இசையின் தாளத்தில் நம்மை இன்பமாக துன்புறுத்திய  கானம்.எம் எஸ் வி காலத்தோடு காணமல் போயிருந்த ரம்மியமான கோரஸ் பாணியை ரஹ்மான் மீட்டெடுத்தார்.

    ரஹ்மான் விரைவாக படங்களுக்கு இசை அமைப்பதில்லை.அவரிடம் இளையராஜாவின் வேகம் கண்டிப்பாக இல்லை என்பது உண்மையாக  இருந்தாலும்  94 ஆம் ஆண்டு ரஹ்மானின் இசை இன்னும் பலவிதமான திகைப்பூட்டும் திசையை நோக்கி நகர்ந்தது.மொத்தமே பத்து படங்களுக்கு மட்டுமே அவர் இசையமைத்தார். அவற்றில் ஏழு தமிழ்ப் படங்கள்.
   வண்டிச்சோலை சின்னராசு- செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே, சித்திரை நிலவு, இது சுகம்
   மே மாதம்-மார்கழிப் பூவே,என் மேல் விழுந்த மழைத் துளியே,மெட்ராச சுத்திப் பாக்க, மின்னலே
    பவித்ரா-செவ்வானம் சின்னப் பெண்,மொட்டு விடாத,
   கருத்தம்மா- போறாளே பொன்னுத்தாயி,பச்ச கிளி பாடும், தென் மேற்கு பருவக்காற்று
   புதிய மன்னர்கள்-எடுடா அந்த சூரிய மேளம்,நீ கட்டும் சேலை,வானில் ஏணி,ஒன்னு ரெண்டு மூணுடா

    மேலுள்ள எல்லா பாடல்களும் என் விருப்பத்திற்குரியவை அல்ல என்றாலும் மின்னலே,இது சுகம் செவ்வானம்,வானில் ஏணி  போன்ற பாடல்கள் அருமையானவை.பொதுவாக ரஹ்மான் Acappella பாணியில் அவ்வப்போது சில பாடல்களை அமைப்பது வழக்கம். சித்திரை நிலவு,என் மேல் விழுந்த மழைத் துளி போன்ற பாடல்கள் அந்த வார்ப்பில்  வந்த சிறப்பான பாடல்கள். இசையின்றி மனித குரலை மட்டுமே வைத்து  பாடல் படைப்பது தமிழுக்கு ஒரு புதிய பாணி.



    இன்னும் இரண்டு படங்களைப் பற்றி இங்கே சொல்லவேண்டியது அவசியப்படுகிறது. ஒன்று புயலைக் கிளப்பிய காதலன். அப்படத்தின் பாடல்கள் ரஹ்மானின் ஆளுமையை நங்கூரம் போட்டு நிறுத்தின.  இராணி குரதானி என்ற பாடலைத் தவிர மற்ற அனைத்துப் பாடல்களும் நேர்த்தியானவை. ரோஜாவுக்குப் பிறகு ரஹ்மான் இந்திய அளவில் மீண்டும் பேசப்பட்டார்.என்னவளே பாடல் கர்நாடக ராகக் கலப்பில் வந்த சிறப்பான மெல்லிசை. ரஹ்மானை விமர்சிக்கும் பலர் அவரிடமிருந்து வந்த நல்லிசையையும் சேர்த்தே சாடுவது ஒரு விதத்தில் ரஹ்மானின் மீது அவர்கள் கொண்டுள்ள வன்மத்தையே வெளிப்படுத்துகிறது. என்னவளே மிக மென்மையாக காற்றைப் போல உரசிச் செல்ல,காதலிக்கும் பெண்ணின் பாடலோ நவீன தாள ஓசையுடன் நம்மை தொட்டுச் சென்றது.பாடல் முழுவதும் ஒரே தாளக்கட்டு சேர்ந்தே செல்ல இப்பாடல் புதிய இலக்கை அடைந்தது. பேட்ட ராப் தரமான பாடலாக இல்லாவிட்டாலும் தமிழில் அது ஒரு மிகப் புதிய முயற்சி என்பதில் சந்தேகமே இல்லை. இதற்கு முன்பே ராப் பாணி தமிழில் அறிமுகப்பட்டிருந்தாலும் பேட்ட ராப் அடிதடியாக அதிர்ந்தது. ஊர்வசியோ  துள்ளல் இசையாக ஒலித்தது. அதன் டெக்னோ பீட் தமிழிசையில் ரசிகர்கள் கேட்காத இசை அனுபவத்தை அளித்தது. ஆனால் இதை இன்னொரு ரஹ்மான் துள்ளல் இசை என்று வசதியாக புறந்தள்ளக்கூடிய சாத்தியம் பலருக்கு இருக்கிறது. தெருவெங்கும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் உதடுகளில் ஊர்வசி உலா வந்தாள். இறுதியாக காதலன் படத்தின் முகவரியான அகில இந்தியாவையும் அதிர வைத்த முக்காப்லா பாடல் ஒரு ஆர்ப்பாட்டமான    அற்புதம். பாடலின் இறுதியில் ரஹ்மானின் பின்னிசை  தாறுமாறாக துடிக்க,அட இது என்ன புதுவிதமான இசை என்று கேட்டவர்கள் வியந்தார்கள். இளையராஜாவின் அலுப்பூடக்கூடிய மேற்கத்திய இசை பரிசோதனைகள் நமக்கு கொடுத்த துன்பங்கள் காலைப் பனி போல ரஹ்மான் இசை  வெளிச்சத்தில் காணாமல் போயின. (உதாரணமாக அக்னி நட்சத்திரம், அஞ்சலி, வெற்றி விழா, என்ற அவரின் பிற்கால மேற்கத்திய மார்க்கப் பாடல்கள் நம் இசைக்கும் மேற்கத்திய இசைக்கும் இடையே மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி நின்றன.) ரஹ்மான் வியப்பான வகையில்  தமிழ்த் திரையிசையின் போக்கை வேறு பாதையில் கொண்டு சென்று கொண்டிருந்தார்.



      காதலன் படத்தில்  புயலாக அதிரடி செய்த அதே ரஹ்மான் டூயட் படத்தில் யூ டர்ன் அடித்து ஆச்சர்யப்படுத்தும் விதத்தில் தென்றலாக வீசினார். அவரால் இந்த முரண்பாட்டை  சிறப்பாக சமன் செய்ய முடிந்தது.  தான் ஒரு துள்ளல் இசைஞர் மட்டுமே இல்லை என்பதை ரஹ்மான் இசையின் அழகியல் கூறுகளை சிதைக்காமல் வெகு நளினமாக  டூயட் படத்தின் பாடல்கள் மூலம் வெளிப்படுத்தினார்.கத்திரிக்கா, குளிச்சா குத்தாலம் தமிழில் பகடிப்பாடல் வகையில் வருபவை. அதையும் வழக்கமான நக்கலாக இல்லாமல் வேறு வண்ணம் கொண்டு வரைந்திருந்தார் ரஹ்மான்.வெண்ணிலவின் தேரில் ஏறி,நான் பாடும் சந்தம் இரண்டும் ஒரு ஓடை சல சலக்கும் ரம்மியமான உணர்வை உள்ளடக்கி கேட்டவர்களை தாலாட்டின. படத்தின் பிரதானமாக இசைக்கப்பட்ட அஞ்சலி  என்ற பாடல் ஒரு திகட்டாத தேன்சுவை கொண்ட மனதை மென்மையாக ஆக்ரமிக்கும் கானம். பத்ரி கோபால்நாத்தின் சாக்ஸ் ரஹ்மானின் இசையை வேறு பரிமாணத்துக்கு இட்டுச் சென்றது. எஸ் பி பி யின் உருக்கும் குரலில் அழகிய இலக்கிய வரிகள் மெருகூட்ட என் காதலே சந்தேகமில்லாமல் மிக மிக அருமையான பாடல். அதிரும், நெரிக்கும்,இடைஞ்சல் செய்யும் இசை எதுவுமின்றி பாடகனின் குரல் மட்டுமே பாடலை நடத்திச் செல்கிறது. இடையிடையே இணையும் சாக்ஸ் இசை பாடலை கூறு போடாமல் இன்னும் அழகேற்றுகிறது. இவ்விதமான புதுமையான இசை அனுபவம் தமிழ் ரசிகர்களுக்கு அதுவரை எட்டாக்கனியாக இருந்துவந்தது. மேலும் பாடல் என்றாலே அதில் வாத்தியங்கள் விளையாட வேண்டும் என்ற வினோத விதி இவ்வகையான முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்தது. ஆனால் ரஹ்மான் மிகத் துணிச்சலாக புதிய நீர்களில்  கால் வைத்தார்.(எழுத்தாளர் ஜெயகாந்தனின் இயக்கத்தில் புது செருப்பு கடிக்கும் என்ற படத்தின் சித்திரப்பூ சேலை என்கிற பாடலும் இதே போல மிகக் குறைந்த வாத்திய ஒலிகளோடு எஸ் பி பி யின் குரலில் வந்த சிறப்பான பாடல். ஆனால் படம் வெளி வரவில்லை.பாடல் இன்றுவரை சிலரை மட்டுமே அடைந்திருக்கிறது ). டூயட் படத்தின் ஒரே துடிப்பான இசை கொண்ட பாடல் மெட்டுப்போடு. மிருதங்கமும் ட்ரம்ஸும் ஆங்காரமாக தாளம் போட எளிமையான வரிகள் தெளிவாக ஒலிக்க இந்தப் பாடல் ரஹ்மானின் இசை அடையாளத்தின் மீது வேறு ஒளியைப் பாய்சுகிறது.இன்று பல இசை ரசிகர்கள் டூயட் படப்பாடல்களை ரஹ்மானின் பொற்காலப் பாடல்களாக கருதுவதில் வியப்பேதுமில்லை.

        நம்மிசைகும் சமகாலத்து மேற்கத்திய இசைக்கும் இடையே இருந்த சுவர்களை ரஹ்மானின் துடிப்பான இசை உடைத்தது. ரஹ்மானை விமர்சனம் செய்யும் பலரும் சொல்லும் காரணம் இதுவே. அவர்கள் ரஹ்மான் ஆங்கில இசையை நகல் எடுப்பவர் என்று ஒரே  குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். இது ஒரு விதத்தில் உண்மையாக இருந்தாலும் இவ்வாறான நகல் எடுக்கும் பாணி இல்லாத இசை அமைப்பாளரை நாம் தமிழ்த்திரையில் காண முடியாது.மேலும் ரஹ்மானை அவர்கள் ஒரு சி ஐ ஏ ஏஜென்ட் ரீதியில் குற்றம் சுமத்துகிறார்கள். உலகமயமாக்கலால் இந்தியாவில் ஏற்பட்ட பல மாற்றங்களில் ஒன்று ரஹ்மானின் இசை என்பது அதில் ஒன்று. சில சினிமா பட முதலாளிகளால் செயற்கையாக உருவாக்கப்பட்டவர் ரஹ்மான் என்றும், பெப்சி,கோக்,பீட்சா போல அவர் ஒரு அந்நிய சக்திகளின் கைப்பாவையாக தமிழ்த் திரையில் முன்னிறுத்தப்பட்டதாகவும் ஒரு புதிய கான்ஸ்பிரசி தியரியை முன்வைக்கிறார்கள். இவ்வாறான மிகவும் சிக்கலான சிண்டிகேட் அமைப்பை போல இந்தியாவின் இசை வணிகத்தை தன் வசம் வைத்திருக்க சில முகம் தெரியாத பண முதலைகள் ரஹ்மானை குத்தகைக்கு எடுத்திருப்பதாக பழி சொல்வது எல்லாமே அபத்தத்தின் வெளிப்பாடேயன்றி வேறொன்றுமில்லை. எப்படி இளையராஜாவின் காலத்தில் தொழில் நுட்பம் மோனோவிலிருந்து ஸ்டீரியோவுக்கு மாறியதோ, எப்படி மக்கள் கைக்கு இலகுவாக அகப்படும் பொருளாக டேப் ரெகார்டர் வந்ததோ அதே போல ரஹ்மான் காலத்தில் தொழில் நுட்பம் அடுத்த கட்டத்திற்கு சென்றது.சி டி க்கள் மிகத் தெளிவான இசையை அளித்தன. இசையின் பன்முகத்தன்மை இன்னும் வீரியமாக வெளிப்பட்டது. (இன்டர்நெட் அனிரூத் இசையை உலகம் முழுவதும் எடுத்துச் சென்றதைப் போல).


     அடுத்து ரஹ்மான் வெறும் சவுண்ட் எஞ்சினீயர் அவருக்கு இசை அறிவு கிடையாது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. இது  இளையராஜாவைவும் ரஹ்மானையும் ஒப்பிடுவதால் உண்டாகக்கூடிய ஒரு தோற்றம்.உண்மையில் ரஹ்மான் இளையராஜாவைப் போன்று இசை மேதமை உள்ளவரா என்பது கேள்விக்குரியதே. இளையராஜா போன்று காலத்தை தாண்டிய  பல  பாடல்களை ரஹ்மான் அமைக்கவில்லை என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். அப்படியானால் இதே அளவுகோல் கொண்டு நாம் எம் எஸ் வி யையும் இளையராஜாவையும் ஒப்பீடு செய்தால் பின்னவர் கண்டிப்பாக பல படிகள் கீழேதான் இருப்பார். இவ்வாறான அபத்தமான ஒப்பீடுகளை விட அவரவர்கள் அவர்கள் காலத்தில் எவ்வாறு இசை பங்களிப்பு செய்தார்கள் என்று அவற்றை மட்டும் விமர்சனம் செய்வதே உகந்தது என்று தோன்றுகிறது. பழைய இசை ஜாம்பவான்களை இளையராஜா மிஞ்சிவிட்டார், அவர் குருக்களை மிஞ்சிய சிஷ்யன் போன்ற குதர்க்கமான புகழாரங்கள் இளையராஜாவுக்கு எதிராக ரஹ்மானை நிறுத்துகின்றன. ஏனென்றால் வணிக ரீதியாக ரஹ்மான் தொட்ட உயரங்கள் இளையராஜாவை விட அதிகம் என்பதாலும் ரஹ்மான் இளையராஜாவுக்கு சரியான மாற்றாக வந்தார் என்பதாலும் இந்த நிலைப்பாடு உருவாகிறது.


   ரஹ்மானின் இசையில் ஓசைகளே அதிகம் அவை வார்த்தைகளை கேட்கவிடுவதில்லை என்பது ஓரளவுக்கு நியாயமானதே. காதல் தேசம் படத்தின் கல்லூரிச் சாலை, டாக்டர் போன்ற பாடல்கள் அப்படியானவைதான். ஆனால் இதே குற்றச்சாட்டு இளையராஜாவின் மீதும் துவக்கத்தில் சுமத்தப்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். உண்மையில் ரஹ்மான் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் அதிக சிரத்தை எடுத்துக்கொள்வது அவரின் பல பாடல்களை கேட்கும் போது நமக்குப் புரிகிறது. சிலர் ரஹ்மானை கம்ப்யூட்டர் கொண்டு எம் எஸ் வி பாணி பாடல்களை தருபவர் என்று விமர்சிக்கிறார்கள். இளையராஜாவின் காலத்தில் வார்த்தைகள் பின்னடைவை அடைந்தன. இசை பிரதானமானது. ரஹ்மான் இந்த எதிர் சுழற்சியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவந்தார். இதனாலேயே ரஹ்மானின் இசையில் இணைப்பிசை (interlude) சாதாரணமாக இருந்தது. இணைப்பிசையின் பங்கை ரஹ்மான் வெகுவாகக் குறைத்தார்.இல்லாவிட்டால் அவரின் பாடல்கள் இளையராஜா இசையின் தொடர்ச்சியாக அமைந்துவிடக்கூடிய சாத்தியங்கள் இருந்ததால் அவர் இதை வேண்டுமென்றே செய்தார் என்று நாம் கணிக்கலாம். கவிதைக்கு முக்கியத்துவம் அளித்து இணைப்பிசையை பின்னுக்குத் தள்ளி உலக இசையின் பலவித கூறுகளை  பயன்படுத்தி  இசையை மறுபடி வழக்கமான சுழற்சிக்கு அவர் கொண்டுவந்ததினால்  அவர் பாடல்கள் இளையராஜாவின் பாடல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இசை அனுபவத்தை கொடுத்தன.

    மேலும் ரஹ்மான் வரவிற்கு பின்னரே தமிழ்த் திரையில் பலவிதமான பாடகர்கள் தோன்ற ஆரம்பித்தார்கள். (தமிழை சரியாக உச்சரிக்காதவர்களும் இதில் அடக்கம். ஜென்சி, எஸ் பி ஷைலஜா வகையறாக்களை இளையராஜா அறிமுகம் செய்ததைப்போல). எஸ் பி பி,ஜானகி, சித்ரா, மனோ என்ற ஆயத்த வரைமுறை வேறுவடிவம் கண்டது. ஹரிஹரன், ஹரிணி, ஸ்ரீநிவாஸ், சுரேஷ் பீட்டர்ஸ்,உன்னி மேனன், உன்னி கிருஷ்ணன்,அனுபமா,நித்யஸ்ரீ, மின்மினி,ஷங்கர் மகாதேவன் போன்ற  பல குரல்கள் ஒலிக்கத் துவங்கின. தன் சி டிக்களில் அவருடன் பணியாற்றிய அணைத்து இசை உதவியாளர்களையும் பெயர்களையும் வெளியிட்டு அவர்களை அங்கீகரித்தது பொதுவாக நம் திரையுலகம் அறியாத ஒரு பண்பு. தன்னை மட்டுமே இசையின் முகமாக முன்னிறுத்தும் அகங்காரப் போக்கு ஒரு முடிவுக்கு வந்தது.

   ரஹ்மான் இளையராஜாவை விட சிறந்தவரா என்ற கேள்வி இளையராஜாவின் ரசிகர்களால் எழுப்பப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை இந்தக் கேள்வியே  அவசியமில்லை என்று   தோன்றுகிறது. ஏனென்றால் இளையராஜா நம் தமிழிசையின் வேர்களோடு உறவு கொண்ட ஒரு இசைஞர். நம் மரபிசையின் தொடர்ச்சியாகவும் அதன் இறுதி இழையாகவும் இளையராஜாவின் இசை இருந்தது. அவருடன் ஒரு மிகப் பெரிய இசை சகாப்தம்  முடிவு பெறுகிறது. எம் எஸ் வி, இளையராஜா, ரஹ்மான் என்று பொதுவாக நாம் பேசினாலும் ரஹ்மானின் இசை முற்றிலும் வேறுபட்ட களத்தில் பயணம் செய்வதால் அவரை நவீன யுகத்தின் முதல் முகமாகவே நாம் பார்க்க வேண்டும்.



    ரஹ்மானின் வரவு ஒரு மகத்தான மாற்றத்தை தமிழ்த் திரையில் கொண்டுவந்தது என்பதை மறுப்பது கடினம். ஒரு மிகப் பெரிய கோட்டையின் மூடிய கதவுகளை அவர் உடைத்துத் திறந்து புதிய காற்றுகளுக்கு அனுமதி கொடுத்தார். Like a catalyst, he has made changes possible. ரஹ்மானின் ரசிகர்கள் அவர் பல சாதனைகளை நிகழ்த்தியிருப்பதாகச் சொல்கிறார்கள்.இருக்கலாம் ஆனால் இதுதான் ரஹ்மானின் மிகப் பெரிய சாதனை என்று நான் கருதுகிறேன்.

   
   அடுத்து: இசை விரும்பிகள் XII - எழுந்த இசை 
 


211 comments:

  1. இசை பற்றி பெரிதாக எந்த கருத்துல் இல்லாத சரசரி ரசிகனாக இருந்த நான் 1992 முதல் 1995 வரை ரஹ்மானின் அதி தீவிர ரசிகனாக இருந்த காலம். 95க்கு பிறகு இசை பற்றிய அறிவு வளர ஆரம்பித்து நல் இசையை ரசிக்க ஆரம்பித்தேன், அந்த வகையில் ரஹ்மானுக்கு நான் நன்றி கடன் பட்டவன். காற்றினிலே வரும் கீதத்தை இசைத்த எஸ்.வி.வெங்கடராமன் அவர்களை நல் இசை ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். உங்கள் தொடர் மேலும் மெருகேர வாழ்துகள்.

    ReplyDelete
  2. காரிகன் சார்,
    அசத்தலான பதிவு. பாராட்டுக்கள்.ரகுமானின் பாடல்கள் வித்தியாசமாக இருப்பதை உங்கள் கோணத்திலிருந்து யாரும் அணுகவில்லை என்று நினைக்கிறேன்.ஆனால் அதுகூட சரியாகத்தான் இருக்கிறது. உங்கள் பதிவுகள் தொடர வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. காரிகன் அவர்களே உண்மையில் மிகவும் அருமையான அலசல். அதுவும் இளையராஜாவைப் பற்றிய உங்களின் கீழ்க்கண்ட அலசலும் விமரிசனமும் இருக்கிறது பாருங்கள் அப்பழுக்கற்ற நேர்மையான வர்ணனை. இங்கிருந்து நூல் பிடித்துப் போகும்போது நிச்சயம் சரியான முடிவுக்கு வருவது சாத்தியமே. இந்தக் கணிப்புகளைக் கொண்டு ரகுமானை அலச ஆரம்பித்திருக்கிறீர்கள். கொஞ்சம் விரிவாக எழுத வேண்டும் என்பதால் தற்போதைக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துவிட்டுப் பிறகு மீண்டும் வருகிறேன்.
    \\உண்மையில் இளையராஜாவின் சாதனை என்னவென்றால் தமிழ்த்திரையை ஆட்சி செய்துகொண்டிருந்த ஒரு சமூகத்துப் பெருமையை உடைத்து அங்கே ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒரு இசைஞன் தன் கொடியை ஒய்யாரமாக நாட்டினான் என்பதே.\\

    \\அவரவர்கள் தங்கள் காலத்திற்கு உட்பட அறிவியல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பாடல்களை பதிவு செய்தார்கள்\\
    \\அவருடைய இசையின் வீச்சு பெருமளவில் பாடல்கள் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. வாத்தியங்கள் வார்த்தைகளை விழுங்கின. ரசிகர்கள் அந்த \\இசையில் தன்னிலை மறந்தார்கள்.இதன் விளைவாக பாடல் வரிகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு இசை முன்னிலைப் படுத்தப்பட்டது. இந்தப் புதிய மாற்றம் இளையராஜாவுக்கு புகழ் சேர்த்தாலும் இது ஒரு மெதுவான விஷம் போல திரையிசைக்கு பெரும் பின்னடைவை கொடுத்தது என்பது கண்கூடு.\\
    .\\ 76 இல் துவங்கிய அவரின் இசை 80களில் அருவி போல நிற்காமல் கொட்டியது. நம் மண்ணின் இசையை புதுவிதத்தில் வெளிக்கொணர்ந்தார் இளையராஜா. புதிய பரிமாணங்களை இசையில் அடையாளம் காட்டினார்.இதுவரை எல்லாமே சிறப்பாகவே இருந்தது\\
    \\ஏழு வருடங்கள் இளையராஜாவின் இன்னிசை மழை மண்வாசனையோடு ரசிகர்களின் உள்ளதை நனைத்தது.\\
    \\ஆனால் இளையராஜா தான் அதிர்ஷ்டக் காற்றின் வலிமையால் விழுந்த கனி இல்லை என்பதையும், கோடைமழை போல கொட்டிவிட்டு ஓய்ந்துவிடும் சாதாரணமானவன் இல்லை என்பதையும் அழுத்தமாக நிலைநாட்டினார்.\\

    \\92 இல் இளையராஜா அதிகபட்சமாக 52 படங்களுக்கு இசைஅமைத்தார்.\\

    ReplyDelete

  4. 01.
    //இப்படிக் கூட இசை இருக்க முடியுமா என்று ஒரு பாமரன் ஆச்சர்யப்பட்டான். // - காரிகன்
    அந்த பாமரன் நீங்கள் தானே காரிகன்.?

    02.

    //ஏனென்றால் இளையராஜா நம் தமிழிசையின் வேர்களோடு உறவு கொண்ட ஒரு இசைஞர். நம் மரபிசையின் தொடர்ச்சியாகவும் அதன் இறுதி இழையாகவும் இளையராஜாவின் இசை இருந்தது. அவருடன் ஒரு மிகப் பெரிய இசை சகாப்தம் முடிவு பெறுகிறது.// - - காரிகன்

    இதனை நீங்கள் சுய அறிவுடன் தானா எழுதினீர்கள்.இதனை உங்கள் ஞானத்தந்தை அமுதவன் ஏற்றுக்கொள்வாரா ?

    நம் மரபிசையின் தொடர்ச்சியாகவும் அதன் இறுதி இழையாகவும் இளையராஜாவின் இசை உங்களுக்கு " பெரும்காயடப்பா "வாக தெரிகிறது.?
    அப்போ ரகுமான் அதை அழிக்க வந்த பிசாசு தானே .

    // காலி பெருங்காய டப்பா என்று வர்ணிக்கப்பட்ட முந்தைய தலைமுறையினரின் இசைக்கு முடிவு கட்டியது ரஹ்மானின் துள்ளல் இசை. அதுவரை உலக இசையின் இன்பத்தை மறுத்து கதவுகளை மூடியிருந்த இளையராஜாவின் இசைக்கு முற்றுப்புள்ளி வைத்தது - - - காரிகன்

    நம் தமிழிசையின் வேர்களோடு உறவு கொண்ட ஒரு இசைஞர். - ..காலி பெருங்காய டப்பா என்று வர்ணிக்கப்பட்ட முந்தைய தலைமுறையினரின் இசைக்கு // - காரிகன்

    ஒரே குழப்பமாக் இருக்கிறது.இதில் எது உண்மை.

    03.
    // ரஹ்மானின் வரவு ஒரு மகத்தான மாற்றத்தை தமிழ்த் திரையில் கொண்டுவந்தது என்பதை மறுப்பது கடினம்.//- காரிகன்

    ஏன் எதற்கோ பயப்படுவது போல உள்ளதே ?அது ஒன்றும் " மகத்தான" மாற்றம் கிடையாது.சீரழிவுப்பாதை.


    04.
    //இதனாலேயே ரஹ்மானின் இசையில் இணைப்பிசை (interlude) சாதாரணமாக இருந்தது. இணைப்பிசையின் பங்கை ரஹ்மான் வெகுவாகக் குறைத்தார்.இல்லாவிட்டால் அவரின் பாடல்கள் இளையராஜா இசையின் தொடர்ச்சியாக அமைந்துவிடக்கூடிய சாத்தியங்கள் இருந்ததால் அவர் இதை வேண்டுமென்றே செய்தார் என்று நாம் கணிக்கலாம்.// - காரிகன்

    நீங்கள் கற்ப்பிதம் செய்யும் எந்த ஒரு காரணமும் அல்ல.இசை வறுமை தான் அதன் காரணம்.இடையிசையில் அவர் ஞானசூனியம்.

    05.

    // அடுத்து ரஹ்மான் வெறும் சவுண்ட் எஞ்சினீயர் அவருக்கு இசை அறிவு கிடையாது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. இது இளையராஜாவைவும் ரஹ்மானையும் ஒப்பிடுவதால் உண்டாகக்கூடிய ஒரு தோற்றம்.உண்மையில் ரஹ்மான் இளையராஜாவைப் போன்று இசை மேதமை உள்ளவரா என்பது கேள்விக்குரியதே. இளையராஜா போன்று காலத்தை தாண்டிய பல பாடல்களை ரஹ்மான் அமைக்கவில்லை என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். அப்படியானால் இதே அளவுகோல் கொண்டு நாம் எம் எஸ் வி யையும் இளையராஜாவையும் ஒப்பீடு செய்தால் பின்னவர் கண்டிப்பாக பல படிகள் கீழேதான் இருப்பார். இவ்வாறான அபத்தமான ஒப்பீடுகளை விட அவரவர்கள் அவர்கள் காலத்தில் எவ்வாறு இசை பங்களிப்பு செய்தார்கள் என்று அவற்றை மட்டும் விமர்சனம் செய்வதே உகந்தது என்று தோன்றுகிறது. பழைய இசை ஜாம்பவான்களை இளையராஜா மிஞ்சிவிட்டார், அவர் குருக்களை மிஞ்சிய சிஷ்யன் போன்ற குதர்க்கமான புகழாரங்கள் இளையராஜாவுக்கு எதிராக ரஹ்மானை நிறுத்துகின்றன. ஏனென்றால் வணிக ரீதியாக ரஹ்மான் தொட்ட உயரங்கள் இளையராஜாவை விட அதிகம் என்பதாலும் ரஹ்மான் இளையராஜாவுக்கு சரியான மாற்றாக வந்தார் என்பதாலும் இந்த நிலைப்பாடு உருவாகிறது.// - காரிகன்

    நீங்கள் குறிப்பிடும் இந்த " வணிக ரீதியாக " என்ற அளவு கோலை சிவாஜிக்கு ரஜனியை வைத்து அளவிட்டால் பெரியவர் அமுதவன் ஒத்துக்கொள்வாரா ?

    உங்கள் ஆக்கத்திலிருந்த தவறான பிதற்றலக்ளிளிருந்து எடுத்தவையே .இது ஒரு ஆரம்பம் மட்டுமே.

    ரகுமான் ,யுவன் ,அனிருத், ஹரிஸ் , ஜி.வீ.பிரகாஸ் போன்ற குறைமாதக் குழந்தைகளின் பாடல்களைக் கேட்பதை விட ஒழுங்காக ஆங்கிலப் பாடல்களையே நாம் கேட்டுத் தொலைக்கலாம்.


    காரிகன் அவர்களே
    இந்தமுறை உங்கள் நோக்கம் [ இளையராஜாவை வசை பாடுவது ] சரியாக நிறைவேறவில்லை என நினைக்கின்றேன்.

    உங்களை அறியாமல் சில உண்மைகளையும் எழுதியுள்ளீர்கள்.

    இங்கே நான் உங்களுடன் "சண்டை" பிடிப்பதால் என்னையும் ஒரு விமர்சகன் என்று எண்ணி விடாதீர்கள்.எல்லாம் கூகிள் ஐயாவின் கருணைதான்.

    எல்லாம். அங்கங்கே சுடுபவை தான்.ரகுமானே சுடும் போது நான் எம்மாத்திரம்.

    http://inioru.com/?p=30361

    ReplyDelete
  5. இன்னும் ஒரு 30 ஆண்டுகள் கழித்து நேற்றைய இன்றைய எந்த பாடல்கள் நினைவு கொள்ளபட்டு பாரட்டபடுகின்றனவோ அவையே சிறந்த பாடல்கள். நாம் எந்த பாடலை/ இசைஞரை போற்றினாலும் தூற்றினாலும். ரகுமான் ,யுவன் ,அனிருத், ஹரிஸ் , ஜி.வீ.பிரகாஷ் பாடல்களிலும் நல்ல பாடல்கள் உள்ளன. ஆரிரோ-தெய்வதிருமகள்(ஜி.வீ.ப்ரகாஷ்), ஒரு உதாரனம். ஒரே ஒரு உதாரனம் சொல்வதால் பாசாங்கு என சொல்லாதீர்கள், பட்டியல் தேவை என்றால் தரவும் தயார், பாபநாசம் சிவனில் இருந்து நடராஜன் சங்கரன்(மூடர் கூடம்) வரை.

    ReplyDelete
  6. திரு கிருபாகரன்,
    வருகைக்கு நன்றி. இசையை ரசிப்பதே ஒரு மேலான அனுபவம்.அதிலும் நல்ல இசையை தேடிச் சென்று ருசிப்பது சுகமானது. சிலர் ஒரே வரியில் விமர்சிப்பதைப் போல ரஹ்மான் ஒரேடியாக ஒதுக்கிவிடக்கூடியவர் இல்லை. இன்று பல இள தலைமுறையினர் அவர் பாடல்களைக் கேட்டுத்தான் இசையின் பக்கம் வருகிறார்கள். நீங்களே அதற்கு ஒரு உதாரணமாக இருக்கிறீர்கள். உங்கள் கருத்துக்கு நன்றி. ரஹ்மானைப் பற்றி இன்னொரு பதிவவும் வர இருக்கிறது.

    ReplyDelete
  7. திரு பரத்,
    கருத்துக்கு நன்றி. தேவா, தேவேந்திரன், சந்திரபோஸ், மரகதமணி போன்றவர்கள் interlude அமைப்பதில் இளையராஜாவின் பாணியை அப்படியே பின் பற்றும் போது அதை ரஹ்மானால் செய்ய முடியாதா என்ன? ஏன் அவர் அப்படிச் செய்யவில்லை என்பதே கேள்வி. சிலர் புரிந்து கொள்கிறார்கள்.வறட்டுப் பிடிவாதம் செய்பவர்கள் முரண்படுகிறார்கள்.

    ReplyDelete
  8. அமுதவன் அவர்களே,
    வருகைக்கு நன்றி. இங்கே விமல் உங்களைப் பற்றி அதிகம் விசாரித்துக்கொண்டிருக்கிறார். உங்களிடமிருந்து விரிவான பதிலை எதிர்பார்க்கிறேன். வவ்வால் இன்னும் வரவில்லை.வந்தால் இது வேறுவிதமாக களைகட்டும் என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  9. திரு விமல்,
    உங்களுக்கு என் பதிவை புரிந்துகொள்வதில் சில ஆதாரமான பிரச்சினைகள் இருப்பதாக அறிகிறேன். இல்லாவிட்டால் இது போல உங்களுக்கு தோன்றும் சில கற்பனைக் கருத்துக்களை என் மீது திணிக்க மாட்டீர்கள். ரஹ்மானின் இசை அதுவரை இல்லாத பல புதிய ஓசைகளை நமக்கு அளித்தது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதுதான் அவரை இளையராஜாவிடமிருந்து வேறுபடுத்திக்காட்டியது. இதை நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். உங்களின் கோட்டை விட்டு நீங்கள் வெளியே வரப்போவதில்லை.

    நான் இளையராஜாவை நமது மரபிசையின் தொடர்ச்சியாக வந்தவர் என்று உண்மையே எழுதினேன்.அது மட்டுமல்ல அவரைப் பற்றி நியாயமாகவே விமர்சித்தும் வருகிறேன்.அவரை பாராட்டுவதில் எனக்கு எந்தவிதமான தயக்கங்களும் கிடையாது. உங்களுக்குத்தான் என்னை சரியாக புரிந்து கொள்வதில் முரண்பாடுகள் உள்ளன. அதற்கு காரணம் உங்களின் முன் தீர்மானித்தல்.

    இளையராஜாவை காலி பெருங்காய டப்பா என்று 90 களில் பொதுவாக சொல்வது வழக்கம். அது ஒருவிதத்தில் உண்மையும் கூட. அவர் இசை தன் பொலிவை அப்போது இழந்திருந்தது. அதனால் அவர் நம் மரபிசையின் தொடர்ச்சி இல்லை என்றாகிவிடுமா? அவரை புகழ்ந்துகொண்டே இருக்கவேண்டும் என்று ராஜா ரசிகர்கள் விரும்புவது இயற்கையே. நான் என்ன நடந்தது என்பதையே இங்கே பதிவு செய்கிறேன். இதில் குழப்பம் ஏற்பட அவசியமில்லை.

    ரஹ்மான் கொண்டுவந்த மாற்றம் என்ன என்பதை நான் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளேன். அவர் வந்த பிறகே நம் இசைக்கு புதிய வெளிச்சம் கிடைத்தது. பல புதிய இசைஞர்கள் வர முடிந்தது. புது ரத்தம் பாய்ந்தது. நீங்கள் உங்கள் ராஜா அபிமானத்தால் ரஹ்மானை சீரழிவு என்று சொல்வது அபத்தமானது. இளையராஜாவின் காலத்திலேயே இந்த சீரழிவு தொடங்கிவிட்டது என்பதுதான் என் வீழ்ந்த இசையின் மையப்புள்ளி.

    இளையராஜாவை மட்டம் தட்ட வேண்டும் என்பதே என் நோக்கம் என்று எனக்கே உதிக்காத எண்ணத்தை பொய்யாக புனைகிறீர்கள். நான் எதை எழுதினாலும் அது இளையராஜாவை வைத்தே இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்று தோன்றுகிறது. இசை இளையராஜாவை தாண்டி வந்து விட்டதை உணர்ந்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.

    இன்னொன்று எதற்காக தேவை இல்லாமல் அமுதவன் பற்றி இங்கே பத்த வைக்கிறீர்கள் என்று புரியவில்லை. தவிர்க்கவும். கடைசியாக எனக்கே இனிஒரு டாட் காம் லிங்க் கொடுப்பது நல்ல நகைச்சுவை. முடிந்தால் பதிவுகள் எழுதுங்கள். நாம் விவாதிக்கலாம்.

    ReplyDelete
  10. திரு விமல்,

    கீழே உள்ளது நான் டி சவுந்தர் அவர்களின் பதிவில் நீங்கள் அதுபற்றி அறிவதற்கு முன்னே எழுதிய பின்னூட்டம்.

    Posted on 09/23/2012 at 16:28
    அபாரமான கட்டுரைகள்..ஆறு பகுதியையும் படித்து முடித்ததும் ஒரு பிரமிப்பு உண்டாகிறது.உங்களின் இசை தேடல்கள்,இசை புரிதல்கள் ,ஆதங்கங்கள் பாராட்டுகள், விமர்சனங்கள் எல்லாமே வெகு நேர்த்தியாக செதுக்கப்பட்ட ஒரு அழகான சிலை போல இருப்பது குறித்து மகிழ்ச்சியே..ஒரு நீண்ட ரயில் பயணத்தை முடித்தது போலிருந்தது எனக்கு.தமிழ் திரை இசை பற்றி இந்த அளவுக்கு நுட்பமாக சிரத்தையுடன் பதிவுகள் இருப்பது வெகு குறைவு.உங்களோடு எனக்கு சில இடங்களில் உடன்பட முடியாவிட்டாலும் உங்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.நல்லது.
    எப்படி இன்றைய இசை ஒரு மாபியா கும்பலிடம் மாட்டிகொண்டது, அதற்க்கு பின் இருக்கும் அரசியல், ஊடக திணிப்பு, போன்ற பல விஷயங்களை அலசி இருக்கும் நீங்கள் இதே அளவுகோல் கொண்டு இளையராஜாவின் காலத்தையும் அந்த கால இசையையும் மதிப்பீடு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இந்த கடைசி பகுதி முழுவதும் எ ஆர் ரகுமான் என்னும் ஒரு இசை அமைப்பாளரை பற்றிய பிம்பத்தை தலை கீழாக புரட்டிப்போட்டும் , அவரை அங்கீகரிக்காத போக்கும் என இசை தொண்ணூறுகளுக்கு பின் மரித்துவிட்டது என்கிற பாணியில் இருப்பது உங்களுக்கும் இசையை தாண்டிய தனி மனித ஆராதனை இருப்பதையே காட்டுகிறது. ரகுமானை பற்றி பொதுவாக இளையராஜா அபிமானிகள் சொல்லும் வழக்கமான குற்றச்சாட்டுகளையே நீங்களும் சொல்லி இருப்பது எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.தன் சொந்த முயற்சியால் வராமல், திறமை ஏதுமின்றி இருந்த ஒரு டீன் ஏஜ் பையனை ஒரு முதலாளி வர்க்கம் இசை உலகில் முன்னிறுத்தி அதுவரை ஆட்சி செய்து வந்த ஒரு தமிழ் வேர்களோடு தொடர்புள்ள இசை அமைப்பாளரை வீழ்த்தி விட்டது என்று எதோ பேண்டசி கதை போல நீங்கள் ஆதாரம் காட்டுவது ஏனோ புரியவில்லை.அப்படி இருந்தாலுமே திறமை இல்லாத ஒரு காப்பிகேட் இந்த அளவுக்கு வர முடிந்தால் அது எல்லோருக்குமே சாத்தியம்தானே.
    to be continued..

    ReplyDelete
  11. .போட்டியும் , பொறாமையும் , காழ்ப்புணர்வும் நிறைந்த சினிமா உலகில் பொதுவாக ஏற்ப்படக்கூடிய மன்க்கசப்புக்களால் சில ” பெரிய இயக்குனர்கள்” இளையராஜாவுடன் ” நானா நீயா ” போட்டியில் இறங்கினர்.இந்த மனவேறுபாடுகளால் அவர்கள புதிய இசையமைப்பாளர்களை தேடி ஓட ஆரம்பித்தனர். அதன் நிகழ்வாக பல இசையமைப்பாளர்கள் “சிகர ” , ” இமய ” இயக்குனர்களால் கொண்டுவரப்பட்டனர். அவர்களில் மிக முக்கியமான்வர்களாக மரகதமணி , அம்சலேகா, தேவேந்திரன் .
    நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்.. எல்லா இயக்குனர்களும் இளையராஜாவிடமே வரிசை கட்டி நிற்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ?பலவிதமான இசை அமைப்பாளர்கள் வருவது அந்த தமிழ் திரை உலகத்திற்கும் ரசிகர்களும் நல்லதுதானே?இருந்தும் நீங்கள் விரும்பியபடிஏதான் ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு நடந்தது. இளையராஜா செய்த திமிர் தனமான ஆணவமான போக்கினாலேயே இவர்கள் வேறு இசை அமைப்பாளர்களை நோக்கி செல்ல நேரிட்டது. அது ஒரு குற்றம் போல நீங்கள் எழுதுவது உங்கள் சிறந்த இசை அறிவுக்கு ஏற்புடையதா என்பதை நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள். அப்படி வந்தவர்களும் ஒரு புதிய இசையை மக்களுக்கு கொடுக்க முடியவில்லை. அவர்களும் வழக்கம் போல இளையராஜாவின் பாதையிலேயே பயணித்தனர்.எனவேதான் அவர்களை ரசிகர்கள் உடனே மறந்தும் போய்விட்டார்கள்.இப்படி இருந்தவரும் தலைகால் தெரியாமல் ஆட்டம் போட, மாற்றாக வந்தவர்களும் அவரையே காப்பி அடிக்க தமிழ் ரசிகர்களுக்கு இசை என்பது எண்பதுகளின் கடைசியில் ஒரே தாளம் கொண்ட பூவு, எசப்பாட்டு, ராசா ரோசா மாமா போமா நோவுது நீவுது போன்ற அர்த்தமில்லாத வார்த்தைகளோடு முடிந்துபோனது..இந்த மூச்சடைத்து போன தமிழ் இசையில் தொண்ணூற்று இரண்டில் ஒரு புதிய காற்று வீசியதை உங்கள் அரசியல் கலந்த விமர்சனம் மறுக்கிறது.ஒரு மிகப்பெரிய இசை அமைப்பாளருக்கு எதிராக ஒரு சின்னப்பையனை சிலர் உள்நோக்கத்தோடு உருவாகினார்கள் என்று மற்றவர்கள் போல நீங்கள் பேசுவது வினோதம்தான். ரகுமானின் இசை தமிழ் மக்களுக்கு ஒரு புதிய விடியலை காண்பித்தது. இப்படிகூட இசை இருக்குமா,இப்படிப்பட்ட இசை ஒலிகள் உண்டா என்று ரகுமான் பாடல்களை கேட்டவர்கள் வியந்தது உண்மையில்லையோ?ரகுமான் வருகைக்கு பிறகே தமிழ் இசையில் பல பாடகர்கள் இசை அமைப்பாளர்கள் வர முடிந்தது.இளையராஜாவின் இரும்பு திரையை ரகுமான் சிதற அடித்து ஒரு புதுவெள்ளத்தை ஓட வைத்தார்.அந்த வெள்ளத்தில் காணமல் போனவர்களில் ஒருவர்தான் இசைஞானி அவர்கள். இதை உணர்ந்தும் இளையராஜாவின் அபிமானிகள் இளையராஜாவின் வீழ்ச்சியை ஏற்க முடியாமல் பலவிதமான குற்றச்சாட்டுகளை ரகுமான் மீது வாரி இறைப்பது அவர்களின் வெறுப்பை வெளிப்படுத்துகிறது.
    இசை என்பது மாறிவரும் கலாசார நுட்பங்களை தனக்குள் உள்வாங்கிக்கொண்டு அதை பிரதிபலிப்பது. இது எங்கேயும் எப்போதும் நடந்து கொண்டே இருக்கும் மாற்ற முடியாத வளர்ச்சி.ஐம்பதுகளின் ஆங்கில இசை அறுபதுகளில் ராக் அன்டு ரோலாக மாறி எழுபதுகளில் ராக், ஹெவி மெட்டல் சைகேடேலிக் ராக்,டிஸ்கோ, பாப் என்று உருமாறி எண்பதுகளில் பாப் ராக் பங் என்று வளர்ந்து தொன்னூறுகளில் அல்டேர்நெடிவ் வடிவம் பெற்று இப்போது முழுதும் மாறிப்போய் எல்விஸ் ப்ரெஸ்லி, பீட்டில்ஸ், டர்டில்ஸ், ஈகிள்ஸ், பிங்க் பிளாயிட், டயர் ஸ்ட்ரைட்ஸ் இசை இலிருந்து வேறுவிதமாக ஒலிப்பதை அந்த நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். நாமோ பழசு மாறி இல்லை என்று ஒரே காமென்ட் சொல்லி ஒரே வட்டத்தில் சுற்றி சுற்றி வருகிறோம்.ரகுமானை சீர்கெட்ட இசை அமைப்பாளர் என்று வர்ணிக்கும் உங்களுக்கு இதே போல்தான் இளையராஜா வந்த போது பலர் சொன்னார்கள் என்பது தெரியாதா? அந்தந்த தலைமுறையின் இசையை மதிக்கதெரியாத யாருமே பழமைவாதிகள்தான். எனக்கும் கூட இந்த காலத்து இசையை பிடிக்கவில்லைதான். இருந்தும் அதை ரசிக்கும் பல லட்சக்கணக்கான ரசிக்கர்களின் ரசனையை மதிக்கிறேன். அவர்களை குறை சொல்ல மாட்டேன். ஏனென்றால் இசை நமக்கு பிடிக்காத அல்லது புரியாத வகையில் மாறிக்கொண்டே இருக்கும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
    ஜி.ராமநாதன் , எஸ்.எம் சுப்பைய்யாநாயுடு போன்ற இசைமேதைகள் தமிழ்த்திரை இசையை மண் மணத்தோடு ஒரு எல்லை வரை வளர்த்தெடுத்தார்கள்..அதை அடுத்த கட்டத்திற்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி , கே.வீ.மகாதேவன் போன்றோர் வளர்த்தெடுத்தார்கள்.அவர்கள் வழியே இளையராஜா இசையின் உச்சங்களை தொட்டார். கலையம்சமான இசையின் தொடர்ச்சி அவருடன் நின்று விட்டது வேதனைக்குரியது.
    இப்படி உங்கள் கடைசி வரிகள் முடிந்துபோகிறது. இனிய இசை இளையராஜாவோடு முடிந்து போகவில்லை மாறாக நீங்கள் இளையராஜாவுடன் நின்று விட்டீர்கள் என்பதே உண்மை.

    தமிழ்சினிமா இசையில் அகத்தூண்டுதல் : 6(முற்றும்) : T .சௌந்தர்
    என்ற பதிவில் இது நான் எழுதிய பின்னூட்டம்.

    ReplyDelete
  12. காரிகன்,
    ரகுமானை எதோ அமெரிக்க ஏஜென்ட் போல சிலர் விமர்சிப்பதை நானும் கேட்டிருக்கிறேன். இவர்களுக்கு எல்லாம் ஒரே எண்ணம்தான். தங்களுடைய இசை ராஜாவை ரகுமான் வீழ்த்திவிட்டாரே என்ற வயித்தெரிச்சல் மற்றும் வெறுப்பு. அது மட்டுமே காரணம். மற்றபடி வேறு ஒன்றுமில்லை. ஏன் ரகுமானும் தமிழன்தானே? அவர் ஆஸ்கார் வாங்கியது நமக்குப் பெருமை இல்லையா? ராஜா சிம்பனி போட்டார் என்று சொல்லியே மகிழ்கிறார்கள்.அது எங்கே என்றால் முழிக்கிறார்கள். இங்கே கூட விமல் என்னும் ஒருவர் ஒரு டிபிகல் ராஜா ரசிகர் போலவே பேசுகிறார்.

    ஜெயசூர்யா

    ReplyDelete
  13. திரு சண்முகநாதன்,
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நீங்கள் சொல்வதோடு நான் உடன்படுகிறேன். இசை மாறிக்கொண்டே இருப்பது. ராஜா ரசிகர்கள் மட்டுமே இதை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களைப் பொறுத்தவரை இளையராஜாவுடன் தமிழிசை முடிவு பெற்றுவிட்டது. அவ்வளவே. அவருக்குப் பிறகு வருவதெல்லாம் வெறும் ஓசைகள். அல்லது குப்பைகள். நீங்கள் சொல்வது நிதர்சனம். நீங்கள் என்ன பட்டியல் போட்டாலும் சிலருக்கு அது போய்ச் சேரவே சேராது. மீண்டும் சந்திப்போம்.

    ReplyDelete
  14. Dear Kaarigan,
    So much has been said. I took the road to Inirou.com as often this link is referred to here by various Raja fans. I read T. Soundar's articles on Rahman's music where you have posted your above comment. I get no words to explain how this man could think so hard to justify his claim Rahman is a foreign agent just like KFC... No wonder he checked out lots of facts about globalisation. international marketing... and he seems to attack everything that was in vogue in the early 90s.. Poor soul! Confused beyond limit, the author goes berserk to find a missing link between local politics, globalisation, Miss Universe, and Indian music.. I wonder how people could be so irrational when it comes to their favourite music..Feeling dizzy..

    ReplyDelete
  15. காரிகன் உங்கள் பதிவு படித்து அதற்கான பதிலை எழுத ஆரம்பித்து அதற்குள் வேறு வேலை வந்துவிட்டதால் அப்படியே விட்டுவிட்டுப்போய் மறுபடி இப்போதுதான் வர நேர்ந்திருக்கிறது. நேற்றைக்கு பதிவு படித்ததும் என்ன எழுத நினைத்திருந்தேனோ அதன் கண்ணி தொடர்ச்சியாக இங்கே வாய்க்குமா என்பதும் தெரியவில்லை.
    ஆனாலும் ஒன்று. இளையராஜாவுக்கு அடுத்து தமிழ்த்திரை இசையில் ஏற்பட்ட மாறுதலை இத்தனை அழகாகப் படம் பிடித்த எந்த ஒரு கட்டுரையையும் நான் படித்ததில்லை. சரியான பார்வையுடன் எழுதப்பட்ட, பார்க்கப்பட்ட, அணுகப்பட்ட ஒரு பதிவாகவே இதனை நான் பார்க்கிறேன்.
    நாம் ஒரு விஷயத்தைச் சொல்லும்போது அதனைப் படிக்கும் அத்தனைப் பேருக்குமே அது ஏற்புடையதாக இருக்கும் என்பதோ இருக்கவேண்டும் என்பதோ அவசியமே இல்லை. நமக்குச் சரியென்று பட்டதை எழுதவேண்டும். அப்படித்தான் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதாகவே உங்கள் பதிவுகளை நான் பார்க்கிறேன்.
    சிறிது நாட்களுக்கு முன்னர் திண்டுக்கல்லிலிருந்து ஆடலூர், பன்றிமலை போன்ற பகுதிகளுக்கு வாடகைக்கார் ஒன்றில் பயணம் செய்ய நேர்ந்தது. காரில் ஏறி உட்கார்ந்தது முதல் திரும்பவும் கீழே இறங்கி ஹோட்டலுக்கு வந்து சேரும்வரை கார் ஓட்டிய அந்த நண்பர் காரில் போட்டிருந்தது இளையராஜாவின் பாடல்களைத்தான். ஒரு நூறு பாடல்களாவது இருக்கும். ஒரு சில பாடல்களைத்தவிர பெரும்பாலான பாடல்கள் ஒரே மாதிரியாகவே இருந்தன. பல பாடல்களில் பல்லவியைத் தவிர ஒன்றுமே இல்லை. பல டியூன்கள் ஒரே ஸ்டீரியோ டைப். பல பாடல்களில் பெரும்பாலும் தாளத்திற்கேற்ப பாடகர்கள் பேசவைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு சில பாடல்களுக்கு நடுவில் நான் அந்த ஓட்டுநரைக் கேட்டேன். "ஏம்ப்பா இந்தப் பாடல்களிலெல்லாம் டியூன் என்று ஏதாவது இருக்கிறதா? பல்லவியில் மட்டும்தானே டியூன் இருக்கு....இதையெல்லாம் உண்மையிலேயே நீ ரசிக்கிறியா?"
    கார் ஓடிக்கொண்டிருந்த கொண்டை வளைவுகளிலிருந்து கண்களை எடுக்காமலேயே அந்தப் பையன் சொன்ன பதில்,"அதெல்லாம் தெரியாது சார். இப்படிப் போட்டுக்கிட்டு வண்டி ஓட்டினால் நடுவில் தூக்கம் வராம இருக்கு அவ்வளவுதான். வேணும்னா நிறுத்திரட்டுமா?"
    "வேணாம் வேணாம். நீ தூக்கம் வராம வண்டி ஓட்டணும் அதான் முக்கியம்" என்று சொல்லி மேற்கொண்டும் அந்தப் பாடல்களைக் கேட்டுக்கொண்டுதான் வந்தோம். அந்தப் பாடல்களை ரசித்தோம் என்று சொல்வதைக் காட்டிலும் பொறுத்துக்கொண்டோம் என்றுதான் சொல்லவேண்டும். இப்படிச் சொல்வதால் ராஜா நல்ல இசையமைப்பாளர் இல்லை என்று சொல்லவரவில்லை. இதற்கான பதில் உங்கள் பதிவில் இருக்கிறது. \\92 இல் இளையராஜா அதிகபட்சமாக 52 படங்களுக்கு இசைஅமைத்தார்.\\
    அவர் ஆட்சி செலுத்த, அல்லது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்த வருடங்களிலிருந்து பார்த்தால், இசையமைக்கும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போக பாவம் அந்த மனிதரும் என்னதான் செய்ய முடியும்? இரண்டாவது இசையமைப்பது என்பது தயாரிப்பாளரைப் பார்த்துப் பேசுவது, இயக்குநர் நடிக நடிகையர் பற்றிப் பேசுவது, கதை கேட்பது, சம்பளம் ஒப்புக்கொள்வது, எனப் பல படிகள் கொண்டது.

    எல்லாவற்றுக்கும் 'ஆர்கனைஸ்டாக' ஆட்கள் இருந்தாலும் தீர்மானிப்பவர் இவர் ஒருவர்தான் எனும்போது சம்பந்தப்பட்டவரின் பேச்சுவார்த்தைகளும், முடிவெடுப்பதற்கான நேரமும், யோசிப்பதற்கான அவகாசமும் என்று இன்னமும் எத்தனையோ இருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் இத்தனைக் குறுகிய கால அவகாசங்கள் எல்லாம் போதாது. ஏனெனில் இது கற்பனை, படைப்பு என்று விரிவடைகிறது. மட்டுமல்லாமல் மற்றவர்களைப் பாடவைப்பது, கலைஞர்களை இசைக்கவைப்பது, அதனை சரிபார்ப்பது இயந்திரத்தில் ஏற்றுவது, அதனை சரிபார்ப்பது என்று எத்தனையோ அடுக்குகள் கொண்டது. இவையெல்லாம் நொடியில் அல்லது சில மணி நேரங்களில் நடந்து முடிகிற சமாச்சாரமல்ல. இப்படியொரு இயந்திரத்தனத்திற்கு ஒரு மனிதன் வந்துவிட்டாலேயே அவனிடமிருக்கும் படைப்பாற்றல் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறிவிடும். அதுதான் இளையராஜாவுக்கும் நடைபெற்றது.

    ReplyDelete
  16. சிவாஜி ஒரு மிகப்பெரிய மேதை என்னும்போது அவர் நடித்து பிற்காலத்தில் வந்த பல வண்ணப்படங்களை சிவாஜியின் படங்களாகவே நான் நினைப்பதில்லை. 'அவற்றிலெல்லாம் அவர் நடித்திருக்கக்கூடாது. ஒதுங்கியிருந்திருக்க வேண்டும்' என்று சொல்லும் நேர்மையும் துணிச்சலும் எனக்கு இருக்கிறது. ஒருவரைப் பிடிக்கும் என்பதற்காக அவர் எம்மாதிரிக் குப்பையைக் கொடுத்தாலும் ஏற்றுக்கொண்டு கொண்டாடும் மனோநிலை தன்னுடைய சூப்பர் ஹீரோவைத் தனது வாழ்க்கைக் கதாநாயகனாக நினைத்து மறுகும் சர்வசாதாரண சினிமா ரசிகனுக்கு மட்டுமே உரியது. இந்த ரசிக மனோ நிலையைப் பெரிதாக மதித்து பதில் சொல்லிக்கொண்டிருக்கத் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.
    ரகுமான் பாடல் தமிழகத்தில் அல்லது இந்தியாவில், ஏன் உலகின் பல பகுதிகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் பற்றி எழுதியிருக்கிறீர்கள். இவரைப் பற்றி எழுத்தாளர் சுஜாதா, ரோஜா நாட்களில் 'சின்னச் சின்ன ஆசை' வெளிவருவதற்கு முன்பே அந்த இசைக்கோர்ப்புக்குப் போய்விட்டு வந்து அவர் சொன்ன அனுபவத்தை எனது சமீபத்தில் வெளிவந்திருக்கும் சுஜாதா பற்றிய நூலில் விவரமாக எழுதியிருக்கிறேன். 'ஒரு மிகப்பெரிய புகழுக்குத் தயாராயிக்கோ'ன்னு அந்த இளைஞனிடம் சொல்லிட்டு வந்திருக்கேன். அவ்வளவு நல்லா படு வித்தியாசமா அந்தப் பாட்டைப் போட்டிருக்கான்யா' என்று அவர் சிலாகித்துச் சொல்லிக்கொண்டிருந்தது இன்னமும் காதுகளிலேயே ஒலிக்கிறது. அதற்குப் பின் அந்தப் பாடல் ஏற்படுத்திய தாக்கமும், அதைத் தொடர்ந்து ரகுமான் பெற்ற வெற்றிகளும் சாதனைச் சரித்திரங்கள்.

    இனியொரு பதிவில் ரகுமான் பற்றி நீங்கள் எழுதியிருப்பவை தனியொரு பின்னூட்டத்தில் எழுதியவை என்பதையும் தாண்டி ஒரு தனிப்பதிவாகவோ அல்லது தனிக்கட்டுரையாகவோ வந்திருக்கவேண்டிய அளவு விஷயமும் செறிவும் கொண்டவையாக உள்ளன. இதற்காகவும் உங்களுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. Sir,
      Intha mathiri niraya pathachi... Rahman deserves to all. Amuthan please dont write anything about rahman. If you want pleaee ask kaarigan to do this.

      Delete
  17. திரு ஜெய சூர்யா,
    கருத்துக்கு நன்றி. சில மூன்றாந்தர ராஜா ரசிகர்கள் இப்படிச் சொன்னால் பரவாயில்லை. எல்லாம் தெரிந்த சில இசை விமர்சகர்களே இதே குற்றச்சாட்டை ரஹ்மான் மீது வைப்பது ராஜா ரசிகர்கள் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்பதை நிரூபிப்பதாக உள்ளது.இவர்களோடு பேசிப் பயனில்லை என்பதால் விட்டுவிட்டேன்.

    ReplyDelete
  18. Dear Aanadhakumar,
    Please avoid talking about someone who is not a part of this post. I greatly admire T.Sounder for his music sense and genius despite the differences. It so happens that when it comes to Rahman, his music genius and maturity have been overtaken by his personal preferences. I argued with him in vain. What do you expect from a person who confesses that " he does not have enough music sense to judge Ilayraajaa's music". I like his way of writing. I still believe he is the only Raajaa fan who gives the musicians of the older generation the credit they deserve.

    ReplyDelete
  19. வேட்டைக்காரன்29 September 2013 at 11:22

    //தேவா, தேவேந்திரன், சந்திரபோஸ், மரகதமணி போன்றவர்கள் interlude அமைப்பதில் இளையராஜாவின் பாணியை அப்படியே பின் பற்றும் போது அதை ரஹ்மானால் செய்ய முடியாதா என்ன?//

    ரஹ்மானின் interlude என்ன பாணி என்று விளக்குவீர்களா ஐயா? மேல்நாட்டு பாணிங்களா? நான் கூட ஏதோ சொந்த பாணியோன்னு நெனச்சேன்.

    ReplyDelete
  20. குமரன்29 September 2013 at 12:04

    திரு காரிகன்
    தங்கள் நீண்ட பதிவை படித்தேன்.நானும் ஒரு காலத்தில் ரகுமானை வரவேற்றவன் என்ற வகையில் சில கருத்துக்களை எழுதலாம் என நினைக்கின்றேன்.
    ரோஜா பாடல்கள் வந்த சமயததில் அந்தப்பாடல்கள் மிகவும் வித்தியாசமனாதாகவே இருந்தது.ராஜாவுக்கு ஈடு கொடுக்க முடியாத பல இசையமைப்பாளர்கள் தடுமாறிக் கொண்டிருந்த நேரம்.
    கோடம்பாக்கத்தில் 1- 14 வது இடம் வரை ராஜாதான் என்றெல்லாம் பேசிக்கொள்வார்கள்.மற்றைய இசையமைப்பாளர்களும் ராஜாவையே காப்பி பண்ணிக் கொண்டிருந்த இசை நமக்கு அலுப்புத் தட்டியது.
    ரோஜாவில் ரகுமான் தனிடமிருந்த சரக்கை எல்லாம் திரட்டிக் கொடுத்தார்.அதன் பின்பு அவரது இசை குறித்த ஓர் ஆர்வம் ,எதிர்பார்ப்பு நிறையவே எனக்கு இருந்தது.ராஜாவை வீழ்த்த காத்திருந்தவர்களுக்கு ரகுமான் குதூகலம் கொடுத்தது.இன்று அவர் எங்கேயோ போய் விட்டார்.
    ரோஜா , புதிய முகம் போன்ற படங்களில் நல்ல பாடல்களைத் தந்த ரகுமானைத் தேடுகிறேன்.அந்த நேரத்தில் இடையில் புகுந்த தேவா நல்ல பாடல்களியு தந்தார் என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள்.
    ஆனால் இன்று இசைரீதியாகப் பார்த்தால் ரகுமானின் இசை பெருத்த ஏமாற்றத்தையே எனக்கு தருகிறது.

    நாம் எத்தனை நாளைக்குதான் ரோஜாவை பற்றி பேசப்போகிறோம்.
    அலசுங்கள்.

    ReplyDelete
  21. அமுதவன் அவர்களே,
    சினிமா தொடர்பான சங்கதிகளை அதன் பின்புலம் தெரிந்த உங்களைப் போன்றவர்கள் விளக்குவது சிறந்தது. ஒரே வருடத்தில் 40-50 படங்களுக்கு இசை அமைத்தால் இயந்திரத்தனம் வந்து ஒட்டிக்கொள்வதை யாரும் தவிர்க்க முடியாது. மேலும் ஒரு பாடல் வெளிவருவதற்கான கால அவகாசம் குறித்து நீங்கள் சொல்லியிருப்பதும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டியதே. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எல்லாவற்றிக்கும் குறிப்புகளைக் கொடுத்துவிட்டு (தன் மனதுக்குப் பட்டதை அவர் எழுதிவிடுவார். அதனால்தான் ஷெனாய் கலைஞர் பண்டிட் பாலேஷ் அவர் சுலபமாக எழுதிவிடுவார். வாசிப்பவர்கள்தான் சிரமப்படவேண்டும் என்று சொல்லியிருப்பார் போல). தன் வேலை முடிந்தது என்று அவர் எண்ணியிருக்கலாம்.

    " சிவாஜி ஒரு மிகப்பெரிய மேதை என்னும்போது அவர் நடித்து பிற்காலத்தில் வந்த பல வண்ணப்படங்களை சிவாஜியின் படங்களாகவே நான் நினைப்பதில்லை. 'அவற்றிலெல்லாம் அவர் நடித்திருக்கக்கூடாது. ஒதுங்கியிருந்திருக்க வேண்டும்' என்று சொல்லும் நேர்மையும் துணிச்சலும் எனக்கு இருக்கிறது. ஒருவரைப் பிடிக்கும் என்பதற்காக அவர் எம்மாதிரிக் குப்பையைக் கொடுத்தாலும் ஏற்றுக்கொண்டு கொண்டாடும் மனோநிலை தன்னுடைய சூப்பர் ஹீரோவைத் தனது வாழ்க்கைக் கதாநாயகனாக நினைத்து மறுகும் சர்வசாதாரண சினிமா ரசிகனுக்கு மட்டுமே உரியது."

    நெத்தியடியான வார்த்தைகள்.இந்தத் துணிச்சலும் நேர்மையும் இல்லாதவர்கள் ஒரே வட்டத்தில் சுற்றிக்கொண்டேயிருக்க வேண்டியதுதான்.

    ReplyDelete
  22. திரு குமரன்,
    வருகைக்கு நன்றி. தரமான எழுத்தில் ஒரு சிறந்த கருத்தை முன்வைத்தற்கு பாராட்டுக்கள். நீங்கள் குறிப்பிட பல அம்சங்கள் உண்மையானவையே. ரஹ்மானை இசை சீரழிவு என்று முத்திரை குத்தி உடனே அவர் பற்றிய பேச்சை மூடிப் புதைத்து விடுவது பல ராஜா ரசிக சிகாமணிகள் வழக்கமாகச் செய்வதே. ஆனால் ரஹ்மான் உண்மையில் கொஞ்சம் பாராட்டுகளுக்கும் அதைவிட அதிகமான விமர்சனங்களுக்கும் உரியவர் என்பது எனது கருத்து. ஒரு மிகப் பெரிய இசை ஆளுமையாக வலம் வந்த இளையராஜாவை ஓரம் கட்டியவர் என்பதால் ரஹ்மான் சற்று விரிவாக விவாதிக்கப்பட வேண்டியவராக இருக்கிறார்.
    தேவாவைப் பற்றி சொன்னீர்கள்.உண்மையே.தேவாவும் சில நல்ல பாடல்களைக் கொடுத்தவர் என்பதில் எனக்கு உடன்பாடே. வைகாசி பொறந்தாச்சு படத்திலிருந்து அவர் இளையராஜாவை அப்படியே பிரதி எடுத்து வந்தார்.ஆசை படத்திற்குப்பின் ரஹ்மானை தொடர ஆரம்பித்தார். அவர் மட்டுமல்ல. இந்தி இசை அமைப்பாளர்கள் கூட ரஹ்மான் பாதிப்பிலேயே இருந்தார்கள் என்பதே உண்மை.ரஹ்மான் இந்தி இசையையும் வெகுவாக மாற்றிஇருப்பவர் என்று பொதுவாக சொல்லப்படுகிறது. பிடிக்கிறதோ இல்லையோ யதார்த்தத்தை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். நீங்கள் சொல்வதுபோல ரஹ்மானிடம் அந்த பழைய இனிமை இப்போது இல்லைதான்.அவர் தன் ஓட்டத்தை ஓடி முடித்துவிட்டார் என்றே தோன்றுகிறது.
    இறுதியாக இதையும் சொல்லவேண்டும். பராசக்தியையும், பதினாறு வயதினிலேயையும், அன்னக்கிளியையும் பற்றி நாம் இன்னும் பேசிக்கொண்டிருக்கும் போது ரோஜாவை மட்டும் ஒதுக்கி வைப்பது என்ன நியாயம்?

    ReplyDelete
  23. சிவாஜியும் இளையராஜாவும் ஒன்றா?இளையராஜாவின் இந்தியாவின் தலை சிறந்த கலைஞன் என்று எலோரும் ஒத்துக்கொள்வர்.
    எந்த ஒரு இந்திய இசையமைப்பாலனும் ராஜா நல்ல இசைக்கலைஞன் இல்லை என்று சொல்லியிருக்கின்றார்களா ?
    வங்காள திரைப்பட மேதை மிருனாள் சென் சிவாஜியை நல்ல நடிகர் என்று ஏற்றுக்கொள்ளவில்லை.அந்த நடிகர் அதிகமாக அழுவதாக அவர் கேலி பேசியிருக்கிறார்.

    அவருடைய நடிப்பு ஓவர் அக்டிங் என்பது எல்லோருக்கும் தெரியும் .ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூவாக இருந்தார்.அதை தமிழர்கள் ஏற்றுக்கொண்டோம்.அது வேறு கதை.

    அதே போலத்தான் ரகுமான் பெறும் விருதுகளை பார்த்து வாயை புளக்காதீர்கள்.அது எம்.ஜி.ஆர் சிறந்த நடிகர் என்ற விருது வாங்குவது போலத்தான்.

    'ஒரு மிகப்பெரிய புகழுக்குத் தயாராயிக்கோ'ன்னு- அமுதவன்
    அவர் தான் புகழ் அடைந்து விட்டாரே.ஜீனத் அமன் , சில்க், அனுராதா புகழ் அடையவில்லையா..? ரகுமானின் 5 பாடலாவது தேறுமா பழைய மேதாவிகளைக் கொண்டாடும் எழுத்தாளர அமுதவன் அவர்களே?
    சினிமா தொடர்பான சங்கதிகளை அதன் பின்புலம் தெரிந்த உங்களைப் போன்றவர்கள் விளக்குவது சிறந்தது- காரிகன்

    காரிகன் நீங்கள் அவரை ஏன் வீணாக உசுப்பேத்தி விடுகிறீர்கள்.அவர் உங்களை உசுப்பேத்தி விடுகிறதாலேயா..?
    அவர் தானே தனது பதிவில் கங்கைஅமரன் ராஜாவுடன் கோவித்து கொண்டுதான் இசையமைக்கபோனார் என்று பச்சை புழுகை அவிழ்த்து விட்டவர்.

    படம்: ராஜாவின் கதை
    இசையமைப்பு:
    விமரிசைமன்னர்கள்
    அமுதவன் - காரிகன்

    ReplyDelete
    Replies
    1. 'ஒரு மிகப்பெரிய புகழுக்குத் தயாராயிக்கோ'ன்னு- அமுதவன்.
      Mr.Amuthavan, please dont write anything about rahman. If you want please ask kaarigan to do this.

      Delete


  24. Kaarigan,
    அக்னி நட்சத்திரம், அஞ்சலி padathin isai pathi neenga enna kurai kandeergal?I want the answer desperately..
    And i know how the music is super for Pudiya Paravai?
    World accepted Rahman did well for Western..

    ReplyDelete
  25. திரு விமல்,
    முதலில் மற்றவர்களை அநாகரீகமாகப் பேசுவதை தவிர்க்கவும்.அமுதவனின் திரையுலக அனுபவங்கள் பல செய்திகளை உள்ளடக்கியது. அவர் சொல்வதில் நியாயம் இருப்பதை நீங்கள் உணர்ந்திருந்த போதிலும் அவற்றை ஏற்றுக்கொள்வதில் உங்களுக்கு சிக்கல்கள் இருப்பது தெரிந்ததே.

    சிவாஜியும் இளையராஜாவும் வெவ்வேறுகளத்தில் சாதனைகள் படைத்தவர்கள், இருவரையும் ஒப்பிடுவது அபத்தம்.நீங்கள்தான் சிவாஜி ரஜினி என்று இந்த அபத்தத்தை ஆரம்பித்தீர்கள்.ஆனால் இளையராஜாவை விட சிவாஜி நம் மக்களை அதிகமாக பாதித்தவர்.சிவாஜியை நேர்மையாக விமர்சிக்கும் துணிச்சல் அமுதவனுக்கு இருக்கும் பட்சத்தில் அதே நேர்மை உங்களிடம் இருக்கிறதா என்று அவர் நியாயமான கோரிக்கையை வைக்கிறார். அதில் நான் எதுவும் முரண்பாடுகளை காணவில்லை.சிவாஜியை பலர் விமர்சித்துள்ளார்கள். சிவாஜி நாடகத் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர் என்பதால் அவரின் நடிப்பில் சினிமாவுக்கு பொருந்தாத சில அம்சங்கள் இருந்ததை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.நீங்கள் அவரை "ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூவாக இருந்தார்.அதை தமிழர்கள் ஏற்றுக்கொண்டோம்.அது வேறு கதை." என்று கேலியாக பேசுவது வீணான இலக்குகளுக்கு உங்களை அழைத்துச் செல்லும். கீழே உள்ள லிங்க் சென்று படிக்கவும்;
    http://worldcinemafan.blogspot.in/2013/09/blog-post_27.html
    நீங்கள் பிறந்தவுடனே நடக்கவும் ஓடவும் ஆரம்பித்துவிட்டதைப் போல பெரிய சகாப்தம் படைத்தவர்களை நக்கலடிப்பது நாகரீகம் அல்ல. சிவாஜிக்கு இணையான நடிகர்கள் அவர் காலத்தில் இந்தியாவில் இல்லை என்பதே உண்மை. இப்போது அதுவல்ல பிரச்சினை. ரஹ்மான் பெற்ற விருதுகள் வெகு சாதரனமானவை என்ற எண்ணம் உங்களுக்கு இருப்பது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. இளையராஜாவின் மேஸ்ட்ரோ,இசைஞானி,ராகதேவன்,பத்மஸ்ரீ, இன்ன பிற விருதுகளும் பட்டங்களும் மட்டுமே உண்மையானவை.அப்படித்தானே? நல்லது. இதுதான் வெறுப்பு உமிழும் கருத்து. உங்களால் இப்படித்தான் மூர்க்கத்தனமாக பேசமுடியும்.வேறுவழியில்லை. ரஹ்மானின் புகழை சில்க்,ஜீனத் அமன்,அனுராதா போன்ற நடிகைகளோடு ஒப்பீடு செய்து உங்களின் மனவிகாரத்தை வெளிபடுத்துகிறீர்கள் .ஒரு பேச்சுக்கு அப்படியே எடுத்துக்கொண்டாலும் இளையராஜாவின் புகழை ஜோதி லக்ஷ்மி, விஜய நிர்மலா போன்றவர்களோடு ஒப்பிடலாம் என்று தோன்றுகிறது. சரிதானே?

    ReplyDelete
  26. திரு அனானி,
    உங்கள் கேள்வியின் முதல் பாதி புரிகிறது. அக்னி நட்சத்திரம், அஞ்சலி படப் பாடல்கள் வெற்றி பெற்றவை என்பதை மறுக்கமுடியாது.ஆனால் "நின்னுக்கோரி" என்ற பாடல் மட்டுமே சற்று கேட்கக்கூடிய வகையில் இருந்தது.மற்றவை எல்லாம் அங்கே இங்கே எதை எதையோ தட்டி (ட்ரம்ஸ் என்று சொல்வார்கள்) சகிக்க முடியாத ஓசைகளை எழுப்பி, (ராஜாவுக்கு வந்த மேற்கத்திய பாணி இசை அது) போரடிக்கும் வார்த்தைகளோடு வந்த மிகவும் சராசரியான பாடல்கள். அஞ்சலி படப் பாடல்கள் தலைக்குள் சுத்தியல் கொண்டு அடிக்கும் உணர்வை கொடுப்பவை. இதே மேற்கத்திய பாணியல் வந்த இளையராஜாவின் பனி விழும் மலர் வனம், தென்றல் வந்து என்னைத் தொடும், இளைய நிலா போன்றவைகளோடு இவற்றை ஒப்பிட முடியுமா என்று நீங்களே சொல்லுங்கள்.

    இரண்டாம் பாதி சரியாக புரியவில்லை.

    ReplyDelete
  27. குமரன்30 September 2013 at 05:55

    திரு காரிகன்

    நான் சொல்ல வந்ததை சொல்லாலாமல் ஒரு மறதியில் முடித்து விட்டேன்.
    தங்களால் அதிகம் விமர்சிக்கப்படும் ராஜாவின் பாடலகளை
    தொடர்ந்து கேட்டதில் , ரகுமான் வந்த பின்பும் காதுக்கு இதமான பாடல்களை கொடுத்துக் கொண்டே வந்தார் என்பது எனது கருத்து.
    ராஜகுமாரன், செந்தமிழ் பாட்டு ,எங்கதம்பி, வள்ளி ,வீரா என்று அதன் தொடர்ச்சியை 2000 களிலும் சொல்லலாம்.

    நன்றி.

    ReplyDelete

  28. திரு .காரிகன்
    //இங்கே எதை எதையோ தட்டி (ட்ரம்ஸ் என்று சொல்வார்கள்) சகிக்க முடியாத ஓசைகளை எழுப்பி- காரிகன்
    சாவு மேளமா....
    மீண்டும் முருங்கை மரத்தில் ஏறும் திரு .காரிகன் !

    ராஜா விடும் மூச்சுமே இசை தான் என்று புகலிடம் தேடி அலைந்த பேரேரசு கவிராயர் சொன்னதை மறந்து விட்டீர்களா..?
    அக்னி நட்சத்திரம்

    தூங்காத விழிகள் இரண்டு
    வா வா அன்பே அன்பே
    ரோஜா பூ ஆடி வந்தது
    நின்னு கோரி
    ராஜ ராஜாதி ராஜன் இந்த ராஜ
    ஒரு பூங்காவனம்


    இந்தபாடல்களை மீண்டும் மீண்டும் கேளுங்கள்.

    ReplyDelete
  29. குமரன்,
    இளையராஜா "ரகுமான் வந்த பின்பும் காதுக்கு இதமான பாடல்களை கொடுத்துக் கொண்டே வந்தார் என்பது எனது கருத்து."

    தவறு. ரஹ்மான் வந்த பிறகே இளையராஜா விழித்துக்கொண்டு கொஞ்சம் சிரத்தையுடன் பாடல்கள் அமைத்தார் என்பதே உண்மை. ரஹ்மானின் வரவுக்குப் பின்னர் அவர் இசையில் தென்படும் மாற்றத்தை நீங்கள் உணரவில்லை போலும். இது ரஹ்மான் கொடுத்த அதிர்ச்சி வைத்தியமாக இருக்கலாம். சந்திரலேகா (புதியது) என்ற படத்தில் அல்லா உன் ஆணைப்படி, கண்ணுக்குள் நிலவு படத்தில் ரோஜா பூந்தோட்டம் போன்ற பாடல்கள் வெகு சிறப்பானவை. இதுபோன்று தன்னை புதுப்பித்துக்கொள்ளும் அவசியத்தை இளையராஜா ரஹ்மான் வந்த பிறகே அறிந்துகொண்டார். ஆனால் அதற்கான விலைதான் ரொம்ப அதிகம்.

    ReplyDelete
  30. விமல்,
    வார்த்தைகளைப் பிடித்துகொண்டு ஆட்டம் போடும் சிறு பையனின் மனநிலையை துறந்துவிட்டு சொல்ல வந்த கருத்துக்களை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். சாவு மேளம் என்பது ஒரு வகை இசை.அதே இளையராஜா மேற்கத்திய பாணியில் செய்த சீரியசான அதே சமயம் கோமாளித்தனமான இசையோசைகளையே நான் இங்கே குறிப்பிட்டுள்ளேன். மேலும் உங்களால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் அக்னி நட்சத்திரம் பாடல்கள் நான் அறியாததல்ல. இதே போல காதலன் அல்லது பாம்பே படப் பாடல்களை நான் உங்களுக்குப் பரிந்துரைத்தால் உங்களின் பதில் என்னவாக இருக்குமோ அதுவே என்னுடைய பதிலும்.

    ReplyDelete
  31. காரிகன் அவர்களே
    உங்களுக்கு மெசின் சத்தம் தான் பிடிக்கும்.
    தாங்கள் ஒரு ஆங்கில பாடலின் மோகி என்பது புலனாகிவிட்டது.ரகுமானின் பாடல்களைக் கேட்பதை விட ஆங்கிலப் பாடல்களை கேட்டு தொலைக்கலாம்.
    உங்களுக்கு பரிதாபமான ரசனை.

    சந்திரலேகா (புதியது) என்ற படத்தில் அல்லா உன் ஆணைப்படி, கண்ணுக்குள் நிலவு படத்தில் ரோஜா பூந்தோட்டம் //
    அதுவும் சிறப்பானது தான்.

    என்னுடைய நண்பன் சொல்வான்
    முத்தமிழ் கவியே வருக பாடலை யாரும் தாண்டியிருப்பானா ..? என்று.

    இறுதியாக ஒரே ஒரு கேள்வி :
    // தமிழ்த் திரையை தங்களது மந்திரக் குரல்களால் கட்டிப்போட்டுவைத்திருந்த தியாகராஜ பாகவதர், கிட்டப்பா, பி யு சின்னப்பா, டி ஆர் மகாலிங்கம், கண்டசாலா,// -காரிகன்

    உங்கள் இஸ்டத்திற்கு அளக்கின்றீர்கள். எல்லாம் தெரிந்தவர் போல எழுதுகின்றீர்கள்.பழையவர்களை சும்மா கண் துடைப்புக்காகவே எழுதுகிறீர்கள் என்பது பாலா தடவை நான் சொல்லி ஆயாயிற்று.

    கிட்டப்பா எந்த படத்தில் பாடினார் என்று சொல்ல முடியுமா ?

    ReplyDelete
  32. விமல்,
    தமிழ்த்திரையிசைப் பற்றி பேசும்பொழுது கிட்டப்பாவின் பெயரை தவிர்த்துவிட்டு நாம் பேசமுடியாது என்னதான் அவர் திரை இசைக்கு முன்பே வந்துவிட்டவராக இருந்தாலும்.உங்களைப் போன்றவர்களுக்காக மேடைப் பாடகர் நாடகத்தில் பாடியவர் போன்ற வார்த்தைகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் போல தெரிகிறது. மேலும் நான் தமிழ்த்திரை என்று உருவகமாகவே குறிப்பிட்டுள்ளேன்.
    உங்களால் என் பதிவில் உள்ள உண்மைகளை எதிர்த்து எதுவும் சொல்ல முடியாத நிலை.எனவே என் வார்த்தைகளிலும், பெயர்களிலும் குற்றம் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. ரஹ்மான் என்ற புயலில் காணாமல் போன இளையராஜாவைப் பாதுகாக்க உங்களிடம் வேறு ஆயதங்கள் இல்லாததால் இவ்வாறு உங்களை நீங்களே சமாதானப் படுத்திக்கொள்கிறீர்கள். அது உங்கள் இஷ்டம்.

    இறுதியாக நீங்கள் கேட்கவில்லை என்பதற்காக நீங்கள் கேட்காத இசையை குறை சொல்வது முட்டாள்தனம். இளையராஜாவின் கரகரப்பான பாவங்கள் ராகங்கள் சுரங்கள் இல்லாத குரலையே கேட்டுத்தொலைத்தவர்கள் நாம்.அவர் பாடிய பாடல்களையே விரும்பிக் கேட்ட உங்களுக்கல்லவோ பரிதாபமான ரசனை. இப்படி சகட்டு மேனிக்கு எல்லா கன்றாவிக் குப்பைகளையும் கேட்டுத் தொலைத்ததினால்தானே அதுக்கு இது பரவாயில்லை என்ற மனோபாவம் இப்போது நமக்கு ஏற்பட்டிருக்கிறது.

    ReplyDelete
  33. Mr. Anonymous,

    Yet another usual Raja stuff.. excruciatingly sentimental.. I've read those posts.. Now read this..

    http://chellakirukkalgal.blogspot.in/2012/09/blog-post.html

    ReplyDelete
  34. ரிம்போச்சே1 October 2013 at 03:12

    //என்னதான் அவர் திரை இசைக்கு முன்பே வந்துவிட்டவராக இருந்தாலும்.உங்களைப் போன்றவர்களுக்காக மேடைப் பாடகர் நாடகத்தில் பாடியவர் போன்ற வார்த்தைகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் போல தெரிகிறது. //

    ஏன் அரியக்குடி, செம்மங்குடி, லால்குடி, குன்னக்குடி, செம்பை, மகாராஜபுரம் இவர்களையும் சேர்த்திருக்கலாமோ?

    ஆனால் MS மற்றும் GNBயை குறிப்பிட மறந்துவிட்டீர்கள்.

    ReplyDelete
  35. திரு காரிகன்,
    இளையராஜா அபிமானியான என் நண்பன் என்னுடன் ரகுமான் குறித்த வாக்குவாதத்தில் அடிக்கடி ஈடுபட்டு ரகுமான் ஒரு சிறந்த சவுண்டு இஞ்சினியர் நல்ல இசை அமைப்பாளர் கிடையாது என்று சொல்வதுண்டு-நீங்கள் எழுதியிருப்பதைப் போலவே. அவனுக்கு என்ன பதில் சொன்னாலும் அதை ஏற்காமல் முரட்டு பிடிவாதம் செய்வதுண்டு. இப்போது உங்கள் பதிவு படித்தபின் சில குழப்பங்கள் தீர்ந்தது போல இருக்கின்றன. நான் கூட ரகுமானுக்கு interlude அமைக்கத் தெரியாது என்று நினைப்பது வழக்கம். "தன் இசையில் ராஜாவின் பாதிப்பு தெரியாத வண்ணம் அவர் வேண்டுமென்றே இணைப்பிசையின் பங்கை பெருமளவில் குறைத்தார்" என்ற உங்கள் கருத்து சற்று சிந்திக்கக்கூடியதே. பாராட்டுக்கள். திரு அமுதவன் கூறியது போன்று ராஜாவுக்கு பிறகான இசை மாற்றத்தை விலாவாரியாக (நடுநிலையோடு)யாரும் இணையத்தில் எழுதவில்லை. பொதுவாக ஒருவிதமான இகழ்ச்சியுடனே ரகுமானைப் பற்றி பலர் எழுதுவது வழக்கம். பதிவுகள் தொடர என் வாழ்த்து.

    ReplyDelete
  36. பதிவர் காரிகன்,
    உங்களுடைய மீண்ட இசை இலிருந்து தொடர்ச்சியாக படித்து வருகிறேன். இளையராஜா பற்றி பாராட்டியும், கேலிசெய்தும், நீங்கள் எழுதி இப்போது ரஹ்மான் வரை வந்துவிட்டீர்கள். என்னைப் பொறுத்தவரை ரஹ்மான் ஆங்கில மற்றும் அராபிய இசையை தமிழில் கொண்டுவந்து இப்போது காணப்படும் கேடுகெட்ட சூழ்நிலைக்கு காரணமானவர். அவரிடம் ஓசைகளே அதிகமாக உண்டு. உங்கள் பதிவில் ரஹ்மானைப் பற்றிய நெகடிவ் கருத்துக்கள் எதுவும் காணப்படவில்லையே ஏன்?

    பிரிட்டோ

    ReplyDelete

  37. //..உங்களால் என் பதிவில் உள்ள உண்மைகளை எதிர்த்து எதுவும் சொல்ல முடியாத நிலை.// காரிகன்

    சார்.
    எங்கே இருக்கிறது உண்மை.? அதனால் தன கிட்டப்பா பற்றி கேட்டோம்.அபத்தம் நிறைந்த பதிவு.நிறைய பேசியாயிற்று .

    //இறுதியாக நீங்கள் கேட்கவில்லை என்பதற்காக நீங்கள் கேட்காத இசையை குறை சொல்வது முட்டாள்தனம்.// காரிகன்

    என்ன சார் தலை சுற்றுகிறது !!

    கடைசியாக..

    எம்.எஸ்.வீ என்ற மகான் பாடிய " எனக்க்கொரு காதலி இருக்கின்றாள் " பாடலையும் ரசித்தவர்கள் நாங்கள்.அவ்வளவு மோசமாக பாடியிருப்பார்.அந்த அளவுக்கு ராஜா மோசமாக பாடவில்லை.அவ்விதம் பாடியிருக்கின்றார்கள் என்றால் அவர்களை நாம் மன்னிக்கலாம்.தாங்கள் சொல்வது போல அவர்கள் எங்கள் இசை வேர்களில் உதித்த கலைஞர்கள்.
    சி.எஸ்.ஜெயராமன், மதுரை சோமு போன்ற இசை மேதைகளின் பாடல்களையும்" ரசித்தோம்."

    தானும் ஒரு மைக்கேல் ஜாக்சன் எண்ணிக்கொண்டு கூச்சல் போடும் கண்ணராவியாகப் பாடும் கொடுமைக்காரன் ரகுமானால் அல்லவா நமது இசைக்கு சிரங்கு பிடித்தது.

    அது உங்களைப் போன்ற இசை அசடுகளுக்கு ஒ.கே. என்றால் உங்களைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது.

    அமுதவருக்குகுப் பதிலாக பாஸ்கரர் வந்து விட்டார் போலிருக்கிறது !? இசை விளங்கிடும்.!!

    ரிம்போச்சே !
    நெத்தி அடி என்பது இது தானோ.!

    ReplyDelete
  38. திரு விமல்,
    உங்களின் தரக்குறைவான பின்னூட்டங்கள் தற்போது அதிகமாக இடம்பெறுவது கவலைக்குரியது.

    "எம்.எஸ்.வீ என்ற மகான் பாடிய " எனக்க்கொரு காதலி இருக்கின்றாள் " பாடலையும் ரசித்தவர்கள் நாங்கள்.அவ்வளவு மோசமாக பாடியிருப்பார்.அந்த அளவுக்கு ராஜா மோசமாக பாடவில்லை"


    இளையராஜா ஒழுங்காகப் பாடினார் என்று அவரே கூட ஒப்புக்கொள்ள மாட்டார். பல நல்ல பாடல்களை தன் தகரக் குரலினால் கற்பழித்துக் கொலை செய்தவர் இளையராஜா என்பதை அவர் ரசிகர்களே ஏற்றுக்கொள்வார்களே. இத்தனை "அபாரமான"குரல் வளம் கொண்ட உங்கள் இளையராஜா எம் எஸ் வி துப்பிய எச்சிலைத்தான் தன் இசை என்று மேடையிலேயே சொல்லியிருக்கிறார். கொஞ்சம் நாகரீகமாக பேசுவது நன்று. எம் எஸ் வி யாவது அசரீரி பாடல்களை பாடியவர். இளையராஜா போன்று கர்ண கடூரமாக (அவர் அறிமுகப்படுத்திய மிருகமான க....குரலில்) நான் தேடும் செவ்வந்தி பூவிது இதயம் ஒரு கோவில் போன்ற மிக முக்கியமான பாடல்களை பாடியவர் அல்ல.உங்கள் இளையராஜாவின் தரமில்லாத இசையின் நீட்சி தான் இன்றைய சீரழிவு. தன்னால் முடிந்த அளவுக்கு தமிழிசையை கெடுத்தவர் இளையராஜா.(அவருக்கு தெரிந்தது அவ்வளவுதான்). எட்டாயிரம் பாடல்களில் வெறும் முந்நூறு அல்லது நானூறு பாடல்களை ஒழுங்காக கொடுத்த இளையராஜாஎம் எஸ் வி யைவிட பெரியவர் என்ற அபத்தம் வேறு.என்னை இசை அசடு என்று சொல்லும் நீங்கள் சொந்தமாக பதிவுகள் எழுதுங்களேன். அதை செய்ய உங்களுக்கு துப்பில்லை என்று நான் சொன்னால் எப்படியிருக்கும் என்று எண்ணிப்பார்க்கிறேன். உங்கள் பதிவுகளில் இளையராஜாவை தூக்கிபிடியுங்கள் நான் அங்கே வந்து உங்களை இடைஞ்சல் செய்ய மாட்டேன். மறுபடி இசை சகாப்தம் படைத்த இசை மேதைகளை கிண்டல் செய்யும் உங்கள் எழுத்தை நான் அனுமதிக்கப் போவதில்லை. இளையராஜா போன்று நம் தமிழிசையை கெட்டு குட்டிச்சுவராக்கியவருக்கு வக்காலத்து வாங்கும் உங்களைப் போன்ற இழிந்த ரசனை கொண்டவர்கள் வாயை திறக்காமல் இருப்பது நலம். உங்கள் வார்த்தைகளின் தரத்தைப் பொறுத்தே இனி உங்களோடு விவாதிக்க முடியும். இதுவே நான் உங்களுக்கு கொடுக்கும் கடைசி மரியாதையாக இருக்கும் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.

    ReplyDelete
  39. வேட்டைக்காரன்1 October 2013 at 08:40

    // "தன் இசையில் ராஜாவின் பாதிப்பு தெரியாத வண்ணம் அவர் வேண்டுமென்றே இணைப்பிசையின் பங்கை பெருமளவில் குறைத்தார்" என்ற உங்கள் கருத்து சற்று சிந்திக்கக்கூடியதே. பாராட்டுக்கள்.//

    அண்ணே, பூவ பூவுன்னும் சொல்லலாம், புய்ப்பம்னும் சொல்லலாம், நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்ணே!

    அப்புறம் ஒலக இசை பாதிப்பு இருந்தா ஓக்கேவாண்ணே?

    ReplyDelete
  40. காரிகன் அவர்களே
    எம்.எஸ்.வீ என்ற மேதை மோசமாகப் பாடினார் " என்று ஒரு வசனம் எழுதியத்தர்க்கு இப்படி குதிக்கும் நீங்கள் இளையராஜாவை எப்படி எல்லாம் மோசமாகத் தாக்கியிருக்கின்றீர்கள் தெரியவில்லையா?

    // தன் தகரக் குரலினால் கற்பழித்துக் // - // அவர் அறிமுகப்படுத்திய மிருகமான ..// காரிகன்
    இது போன்ற பொன் மொழிகளை நான் மொழியவில்லை.

    அந்த அளவுக்கு நான் ஒன்றும் எம்.எஸ்வி யை தரக் குறைவாக எழுதவில்லை.உண்மை உங்களுக்கு கசக்கிறது.
    தாங்கள் சொல்வது போல உண்மைகளை சொல்லுவதே.!
    //இளையராஜா போன்று நம் தமிழிசையை கெட்டு குட்டிச்சுவராக்கியவருக்கு வக்காலத்து வாங்கும் உங்களைப் போன்ற //- காரிகன்
    எப்படி "தமிழிசையை கெட்டு குட்டிச்சுவராக்கினார் "என்று உங்கள் கட்டுரையில் எங்கும் ஒரு ஆதாரத்தையும் நீங்கள் தரவில்லை.நீங்கள் கொண்டாடும் ரகுமான் தான் கெடுத்தார் என்பது குமரிகளிளிருந்து கிழவிகள் வரை சொல்லும் சேதி.
    "எம்.எஸ்.வீ. துப்பிய எச்சில் தான் தனது இசை " என்று ராஜ சொன்னது அவரது பெருந்தன்மை.
    அப்போ நௌசாட் சங்கர் ஜெய்கிசன் ,மடன் மோகன் , எஸ்.தீ.பர்மன் துப்பிய எச்சில் தான் எம்.எஸ்.வீ என்று நாம் சொன்னால் என்னவாகும்.பெரியவரை அவமரியாதை செய்கிறீர்கள் என்பீர்கள்.
    அதை எம்.எஸ்.வீ எங்கேயாவது சொல்லியிருக்கின்றாரா ...?




    ReplyDelete
  41. ஹல்லோ காரிகன்

    உங்கள் பதிலும் சற்று தரம் குறைந்ததாகத்தான் இருக்கிறது . விமல் அவர்களை மட்டும் விமர்சிக்கிறீர்கள் . இளையராஜா பற்றிய தரம் குறைந்த வார்த்தைகளை நீங்கள் எவ்வளவு பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்பதை நான் சுட்டிக் காட்டவா? அது ஒரு புறம் இருக்கட்டும் .

    காலி பெருங்காய டப்பா பற்றி பேச்சு வந்தது . இப்ப ரகுமானும் காலி பெருங்காய டப்பா என்பதை அவரின் சமீபத்திய
    பாடல்கள் தெளிவாகவே காட்டி வருகின்றன . பத்து வருடத்துக்கு முன்பே அவர் இசை படுத்து விட்டது - ஹாரிஸ் வரவால் ! ரகுமானை விட வித்தியாசமான மேற்கத்திய பாணியை அவரை விட சிறப்பாக செய்து வருகிறார் ஹாரிஸ் . காப்பி அடிப்பதில் அவரை விட வல்லவர் . அவரையும் மிஞ்சியவர் . இந்த உண்மையை யாரும் சொல்ல மாட்டேன் என்கிறார்கள் . இரண்டாம் உலகம் பட பாடல்கள் இந்த வருடத்திலேயே அதிக எண்ணிக்கையில் தரவிறக்கம் செய்யப்பட்டன என்று ஊடகங்கள் சொல்கின்றன . ஹாரிஸ் ரேட் ஏறிக் கொண்டிருக்கும் வேளையில் ரஹுமான் தான் வடிச்ச பழைய சாதத்தையே தாளிச்சு கொடுத்துக் கொண்டிருக்கிறார் . அருமையான பிரியாணி என்கிறீர்கள் .

    ReplyDelete
  42. திரு பாஸ்கரன்,
    நன்றி. ராஜா ரசிகர்களால் ரஹ்மான் மோசமாக விமர்சிக்கப்படுவது பெரிய விஷயமில்லை.இன்று தமிழிசையின் போக்கையும் பெரும்பான்மை மக்களின் இசை ரசனையையும் மாற்றி இருக்கிறார் ரஹ்மான். அதில் எனக்குப் பிடிக்காத அம்சங்களும் இருக்கின்றன. ஆனால் அவருக்கு நியாயமாக சேர வேண்டிய மரியாதை அல்லது பாராட்டு கண்டிப்பாக கொடுக்கப்படவேண்டியதே. ரஹ்மான் சிரத்தை எடுத்துக்கொண்டு தன் இசையில் இளையராஜாவின் பாதிப்பு வராத வண்ணம் பாடல்களை அமைத்து இசையின் வடிவத்தையே நவீனப்படுதியிருக்கிறார்.இளையராஜாவின் புதல்வர் யுவனே தன் அப்பாவைப் போலில்லாமல் ரஹ்மானை பிரதி எடுக்கிறார் என்பதே இதற்கு சான்று.

    ReplyDelete
  43. திரு பிரிட்டோ,
    நான் எங்குமே இளையராஜாவைவிட ரஹ்மான் சிறந்தவர் என்று குறிப்பிடவில்லையே. நம் இசை இத்தனை மோசமடைந்திருப்பதற்கு ரஹ்மானும் ஒரு காரணம்.மேலும் ரஹ்மான் ஆரம்பத்தில் தரமான இசையைத்தான் கொடுத்தார். ரஹ்மான் பற்றிய என் பதிவு இன்னும் முடிவுபெறவில்லை. எனவே பொறுமை காக்கவும்.

    ReplyDelete
  44. சால்ஸ்,
    வந்துவிட்டீர்களா? எங்கே சத்தத்தை காணவில்லையே என்று பார்த்தேன். முதலில் ஒன்றை தெளிவு படுத்தவேண்டும். என் பதில் தரம் குறைந்ததாக இருப்பது தேவைக்கேற்ப்பவே. I paid Mr.Vimal back in the same coin. இதற்கு முன்பே சிவாஜியைப் பற்றி நாலாந்தர நக்கல் செய்திருந்தார்.( அதை நீங்கள் படித்திருப்பீர்கள். உங்களுக்கும் அதில் உடன்பாடு போல் தெரிகிறது). சிவாஜிக்கு நடிக்கத் தெரியாது. எம் எஸ் வி ஒரு "மகான்"என்று ஒரு கிண்டல்.அவர் மோசமாக பாடுபவர். இளையராஜா மட்டுமே ஆகச் சிறந்தவர் எல்லாவற்றிலும் என்ற மடத்தனமான எண்ணம் அவருக்கு. அவருக்கும் பதில் வைத்திருக்கிறேன். அதை அவருக்கே சொல்லவேண்டும்.

    "நீங்கள் சொல்வதுபோல ரஹ்மானிடம் அந்த பழைய இனிமை இப்போது இல்லைதான்.அவர் தன் ஓட்டத்தை ஓடி முடித்துவிட்டார் என்றே தோன்றுகிறது."

    என்று இதே பதிவில் திரு குமரன் என்பவருக்கு பதில் சொல்லியிருக்கிறேன்.நீங்கள் நுனிப்புல் மேய்வதைப் போல அங்கே இங்கே எதையோ படித்துவிட்டு உதார் விடுவது நல்ல வேடிக்கை. ரஹ்மான் இசை ஓய்ந்துவிட்டது என்று நானும் நீங்கள் சொல்வதைத்தானே சொல்லிகொண்டிருக்கிறேன். இதில் நான் எங்கே ரஹ்மானின் தற்கால இசையை பிரியாணி என்று சொன்னேன் என்று எனக்கே தெரியவில்லை. தமிழிசை இளையராஜாவின் காலத்திலேயே சீரழிவு அடைந்துவிட்டது. ரஹ்மானின் காலத்தில் அது இன்னும் கொஞ்சம் அதிகமானது. தற்போது கேட்கவே தேவையில்லை.இருந்தும் அவ்வவ்போது சில நல்முத்துக்கள் வராமலில்லை என்பதையும் நாம் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.

    ReplyDelete
  45. காரிகன்,
    விமல் என்பவர் இளையராஜாவைத் தவிர மற்ற எல்லாரும் ஒன்றும் தெரியாதவர்கள் என்பதுபோலவே எழுதிகொண்டிருக்கிறார். அவருக்கு நீங்கள் கொடுத்தது சரிதான். இளையராஜாவை நீங்கள் இவ்வளவு காட்டமாக விமர்சிப்பதை இப்போதுதான் பார்க்கிறேன்.

    ReplyDelete
  46. விமல்,
    நான் உங்கள் "மொழியிலேயே" பதில் சொல்லியிருக்கிறேன். அதனால் அவ்வாறு தரக்குறைவாக இருப்பதாக உங்களுக்குத் தெரிகிறது போலும். அது போகட்டும்.

    எம் எஸ் வி என்றைக்கும் தான் சிறப்பான குரல் கொண்டவர் என்று தனக்கே சான்றிதழ் அளித்துகொண்டவர் கிடையாது. சொல்லப்போனால் என் குரல் எந்த நடிகருக்கும் ஏற்றது இல்லை என்றே அவர் எண்ணம் கொண்டிருந்தார். எனவேதான் அவர் பாடிய பாடல்கள் பொதுவாக இரண்டாம் மூன்றாம் நிலை நடிகர்களுக்காக அமைக்கப்பட்டது. அல்லது அசரீரி என்று சொல்லப்படும் குரல் மட்டுமே ஒலிக்கும் வகையான பாடல்கள். அல்லது நகைச்சுவை ,வில்லன் போன்ற நடிகர்கள் பாடும் பாடல்களாக இருக்கும். சொல்லத்தான் நினைக்கிறேன், சம்போ சிவசம்போ, வசந்த கால நதிகளிலே போன்ற பாடல்களைக் குறிப்பிடலாம். நீங்கள் நக்கல் செய்திருக்கும் எனக்கொரு காதலி இருக்கின்றாள் தேங்காய் சீனிவாசன் பாடுவதாக இருக்கும். ஆனால் அது ஒரு அருமையான பாடல்.

    இளையராஜா இதிலிருந்து வேறுபட்டவர். அவர் வம்படியாக நல்ல பாடல்களை தன் தகரக் குரலில் "பேசி"(பாடுவதற்கான பாவங்களோ உணர்ச்சியோ, ஏற்ற இறக்கங்களோ எதுவுமின்றி) கெடுத்தவர். இதையே நான் குறிப்பிட்டுள்ளேன். இளையராஜா பாடுவதை ஆரம்ப காலங்களிலேயே அவரது ரசிகர்களே விரும்பியது கிடையாது. இவர் எதற்குப் பாடுகிறார் என்றுதான் எல்லோரும் கேட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை போலும். வேடிக்கைதான்."இந்தாளு பாடாம பேசாம மியுசிக் மட்டும் போட்டா போதும் " என்றே மக்கள் வழக்கமாக சொல்வதுண்டு. அப்படியும் விட்டாரா என்றால் இல்லை.உதாரணமாக இதயம் ஒரு கோவில் என்ற பாடல். அடுத்து நானாக நானில்லை தாயே என்ற அருமையான பாடல். இரண்டையும் எஸ் பி பி யும் பாடியிருக்கிறார். நீங்களே இவற்றில் யார் பாடியதை விரும்பிக் கேட்பீர்கள் என்று மனதை தொட்டுச் சொல்லுங்கள். அப்போது ரெகார்டிங் கடைகளில் இந்த இரண்டு பாடல்களையும் பதிவு செய்ய விரும்பினால் "இளையராஜா பாடியதா எஸ் பி பி பாடியதா?" என்ற கேள்வியே கேட்காமல் எஸ் பி பி பாடியதையே பதிவு செய்வார்கள். இளையராஜா பாடியது வேண்டும் என்றால் கடைக்காரரே அதிர்ச்சியடைந்து போன சம்பவங்கள் கூட நடந்ததுண்டு. இத விட அது நல்லாயிருக்கும் என்று பரிதாபமாக அவர் கடைசி நம்பிக்கையாக சொல்லிப்பார்த்துவிட்டு(அவருக்குள்ள கருணையுள்ளம் அல்லது மனிதாபிமானம் என்று எடுத்துக்கொள்ளலாம்) அப்படியும் கேட்காவிட்டால் பிறகு உன் விதி வலியது என்று தன் வேலையை பார்க்கப் போய்விடுவார்.காதல் ஓவியம் என்ற ஒரு நல்ல பாடலை மூக்கால் பாடும் ஜென்சியும், கட்டைக்குரல் இளையராஜாவும் சேர்ந்தே கொலை செய்திருப்பார்கள். நல்ல இசை, சகித்துக்கொள்ளக் கூடிய கவிதை போன்றவை இருந்ததால் அப்பாடல் பிழைத்தது. அதையும் எஸ் பி பி பாடியிருந்தால் கண்டிப்பாக அந்தப் பாடலே இன்று நின்றிருக்கும்.

    அது மட்டுமா? தென்பாண்டிச் சீமையிலே பாடல் கமலஹாசன் பாடும்போதுதான் ரசிக்கப்படுகிறது.(இவ்வளவுக்கும் கமல் ஒன்றும் சிறப்பான பாடகர் இல்லை).இதைத் தாண்டி இளையராஜா ஓய்ந்துவிட்ட பிறகு (ரஹ்மானுக்குப் பிறகு) இசை அமைத்த பல படங்களில் தானே எல்லா பாடல்களையும் பாடி கொஞ்ச நஞ்சம் அவர் மீது இருந்த மரியாதையும் அவரே கெடுத்துக்கொண்டார். "அவதாரம்"(மிகச் சரியான பெயர்தான்) படப் பாடல்கள் எல்லாமே அவரே பாடியது என்று நினைக்கிறேன்.பாடலின் சிறப்பான வடிவத்தையே இவர் குரல் வெகு சாதாரண நிலைக்கு கொண்டுவந்துவிடுகிறது. வழிவிடு வழிவிடு, நில் நில் நில் போன்ற பாடல்கள் அருமையாக இருந்தாலும் வேறு ஒருவர் பாடியிருந்தால் மிக நன்றாகவே அமைந்திருக்கும். என்ன செய்வது? இளையராஜா பாடிய பாடல்கள்-- வரமா சாபமா என்று பட்டிமன்றமே நடத்தலாம்.அந்த அளவுக்கு அது மக்களால் விமர்சிக்கப்பட்டது.

    சரி இப்போது அவர்தான் ஒரு மூலையில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார். பிழைத்தோம் என்று நிம்மதி பெருமூச்சு விட்டால் அவர் புதல்வன் யவுன் தான் தன் தந்தைக்கு எந்தவிதத்திலும் சளைத்தவரல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் எதோ கழிப்பறையில் உட்கார்ந்து முக்குவது போன்ற சகிக்க முடியாத குரலில் "வசனம் பேசி" நம்மை நிலை குலையச் செய்கிறார்.தாங்கவில்லை. (உடனே ரஹ்மான் பாடவில்லையா என்று கேள்வி வர வாய்ப்பிருக்கிறது. ரஹ்மானும் அப்படியேதான். ஆனால் யுவன் அளவுக்கு மோசமில்லை). யுவன் நன்றாகப் பாடுகிறார் என்று யாராவது துணிச்சலாக சொல்ல முடியுமா? (பவதாரிணி பரவாயில்லை).

    இன்னும் இருக்கிறது....

    ReplyDelete

  47. ஏன் சமீபத்தில் ஏகப்பட்ட பில்டப்புகளுடன் வந்த நீதானே என் பொன் வசந்தம் படத்தின் தோல்விக்குஒரு முக்கிய காரணம் இளையராஜாவின் இசை என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. படத்தின் காட்சிக்கு சம்பந்தம் இல்லாமல் திடீர் திடீரென இளையராஜா ஆ ஊ என்று ஊளை...மன்னிக்கவும் ஹம்மிங் செய்யும்போது தியேட்டரே அதிர்ந்தது..சிரிப்பில். சமந்தா ஜீவா போன்ற இளைய தலைமுறை நடிகர்களுக்கு இளையராஜாவின் இசை பொருந்தவேயில்லை. கவுதம் பேசாமல் ஹாரிஸ் ஜெயராஜிடமே போயிருந்திருக்கலாம் என்றே பேசப்பட்டது. அடுத்த படத்தில் கவுதம் இன்னொரு தற்கொலை முயற்சிக்கு தயாரில்லை என்று தெரிகிறது.

    உண்மை இப்படி இருக்க பூசணிக்காய் சோறு என்ற பழமொழிக்கேற்ப யாருக்கும் ஒன்றும் தெரியாது என்று நினைத்துக்கொண்டு, எம் எஸ் வி மீது பாய்கிறீர்கள் விமல். இத்தனை எழுதிய பின்னரும் நீங்கள் அடங்கப்போவதில்லை. இதில் கிடைக்கும் எதோ ஒரு பிழையை (பெயர்,எண்ணிக்கை, படம் வெளிவந்த ஆண்டு, போன்ற ஒன்றுமில்லாத விஷயங்களை) எடுத்துக்கொண்டு அடுத்த போருக்கு வருவீர்கள். அப்படித்தானே? அதற்கு முன் ஒரு முப்பது நிமிடம் தொடர்ச்சியாக இளையராஜா பாடிய பாடல்களை கேட்டுவிட்டு வாருங்கள். சுத்தம்.

    ReplyDelete
  48. மிஸ்டர் காரிகன்

    எம்.எஸ்.வி ,இளையராஜா , ரகுமான் மூவரின் குரல்களிலும் ஒரு வித்தியாசம் இருக்கிறது .ஒரு புதுமையும் உண்டு . மூவரும் பாடிய பாடல்கள் ஹிட் ஆனதும் உண்டு . professional singers போல அவர்கள் பாட முடிந்திருக்காவிட்டாலும் அவர்கள் குரலுக்கு என்று தனித்துவம் இருக்கிறது . ரசிகர்கள் இருக்கிறார்கள் . அவர்கள் பாடியது சில பாடல்களுக்கு பொருத்தமாக இருப்பதாக பெரிய பாடகர்கள் கூட ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் . அவர்களின் குரல்களை நீங்களும் விமலும் விமர்சனம் செய்வது நாகரீகம் அல்ல .

    பெரிய பெரிய பாடகர்கள் இருந்த காலத்தில் சந்திரபாபு பாடி ஹிட் கொடுக்கவில்லையா!? அவர் குரல் போல இன்னொரு குரல் இல்லை. அதே போல்தான் கமலின் குரலும்! கமல்ஹாசனும் நூறு பாடல்கள் பாடி இருக்கிறார் . அதிக ஹிட் கொடுத்திருக்கிறார். அவர் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள் . விஜய் தற்போது நிறைய பாடல்கள் அழகாகவே பாடுகிறார் . குரல்களை கேலி பேச நாம் இங்கே வரவில்லை . புதுசா ஒரு பையன் வந்துள்ளான் . அவனை பாட வைத்தும் ஹிட் கொடுத்திருக்கிறார் இமான் .ஊரே அவன் பாட்டை பாடுது .

    மக்கள் எல்லோரது குரலையும் ஏற்றுக் கொள்ளதான் செய்கிறார்கள் . இளையராஜாவின் குரலை அதிகமாகவே ஏற்றுக் கொண்டார்கள் . அதிக பாடல்கள் பாடிய இசை அமைப்பாளர் லிஸ்டில் இளையராஜாதான் வருவார் . அவர் குரல் தனித்துவம் வாய்ந்தது . எல்லா கச்சேரிகளிலும் இளையராஜா குரல் பாடகர் என்று நிச்சயம் ஒருவர் இருப்பார் . அப்படிப்பட்ட குரலை மித சாதாரணமாக தூக்கி எரிந்து பேசாதீர்கள்




    ReplyDelete
  49. திருவாளர் சால்ஸ்,
    உங்கள் பதிலைப் படித்தபின்புதான் எனக்கு இன்னொரும் ஞாபகத்திற்கு வந்தது. இளயராஜாவுக்குப் போட்டியாக தானே பாட்டெழுதி இசை அமைத்துப் பாடிய மற்றொரு இசையமைப்பாளரின் ஒரு பத்துப் பாடல்களை கொண்டுவாருங்கள் என்று இன்னொரு தளத்தில் எனக்கு ஒருவர் வீட்டுப்பாடம் கொடுத்திருந்தார். அப்படி எனக்கு நினைவுக்குத் தெரிந்தவரை டி ராஜேந்தரைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதால் இவரின் பத்துப் பாடல் அவரின் பத்துப் பாடல் என்று சுலபமாக இந்த வீட்டுப்பாடத்தை முடித்துவிடலாம் என்று எண்ணினேன். பிறகு எதற்கு வீணாக சில காபி ஷாப் அப்பாடக்கர்களை கொதிப்படைய வைக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் விட்டுவிட்டேன். உங்கள் பட்டியலில் டி ராஜேந்தரையும் சேர்த்துக்கொள்வது நன்றாக இருக்கும். அவரும் சில நல்ல பாடல்களை கொடுதவர்தானே? எனக்கு அறிவுரை சொல்லும் முன் உங்கள் நண்பர் விமலுக்கு அதைச் செய்யுங்கள். அப்படியே சிவாஜி பற்றிய அவரின் அரைவேக்காட்டுக் கருத்துக்கும் சூடு போடுங்கள். நலமாக இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளும் உங்களின் மனப்பக்குவம் எல்லோரிடமும் இருந்தால் சிறப்பே. கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  50. ரிம்போச்சே2 October 2013 at 01:03

    //இளயராஜாவுக்குப் போட்டியாக தானே பாட்டெழுதி இசை அமைத்துப் பாடிய மற்றொரு இசையமைப்பாளரின் ஒரு பத்துப் பாடல்களை கொண்டுவாருங்கள் என்று இன்னொரு தளத்தில் எனக்கு ஒருவர் வீட்டுப்பாடம் கொடுத்திருந்தார். அப்படி எனக்கு நினைவுக்குத் தெரிந்தவரை டி ராஜேந்தரைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதால் //

    1. தேவா
    2. சந்திரபோஸ்

    ReplyDelete
  51. ரிம்போச்சே2 October 2013 at 01:28

    //இளயராஜாவுக்குப் போட்டியாக தானே பாட்டெழுதி இசை அமைத்துப் பாடிய மற்றொரு இசையமைப்பாளரின் ஒரு பத்துப் பாடல்களை கொண்டுவாருங்கள் என்று இன்னொரு தளத்தில் எனக்கு ஒருவர் வீட்டுப்பாடம் கொடுத்திருந்தார். அப்படி எனக்கு நினைவுக்குத் தெரிந்தவரை டி ராஜேந்தரைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதால் இவரின் பத்துப் பாடல் அவரின் பத்துப் பாடல் என்று சுலபமாக இந்த வீட்டுப்பாடத்தை முடித்துவிடலாம் என்று எண்ணினேன். பிறகு எதற்கு வீணாக சில காபி ஷாப் அப்பாடக்கர்களை கொதிப்படைய வைக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் விட்டுவிட்டேன். //

    இதைத்தானே சொல்கிறீர்கள்?

    ReplyDelete
  52. ரிம்போச்சே என்ற....v....

    மேதாவித்தனமாக செய்வதாக நினைத்துக்கொண்டு நீங்கள் இது போல லிங்க் கொடுப்பது ஏற்கனவே நீங்கள் என் போன பதிவிலேயே செய்துவிட்டீர்களே? மறுபடியும் ஏன்? அதுசரி உங்களுக்கு வேட்டைக்காரன் என்பவர் "நெருங்கிய நண்பரோ?". இன்னும் எத்தனை முறைதான் இந்த மதிகெட்ட செயலை செய்வீர்கள்? வேறு புதிய யுக்தியை கண்டுபிடிக்க முயற்சி செய்யவும்.அதுசரி. உங்களுக்கெல்லாம் புதிய சிந்தனை கூட வருமா என்று சந்தேகமாக இருக்கிறது.

    ReplyDelete
  53. ரிம்போச்சே2 October 2013 at 08:23

    நீங்க பாட்டுக்கு அடிச்சுவிட்டுட்டு போறீங்க. அந்த இழையில் என்ன நடந்ததின்னு context நண்பர்களுக்குத் தெரிய வேண்டாமா?

    ReplyDelete
  54. எதுவும் புதிதில்லை. ஏற்கனவே தெரிந்ததுதான். என்னை மட்டம் தட்டுவதாக நினைத்துக்கொண்டு மலிவான யுக்தியை நீங்கள் கைக்கொள்வது நல்ல நகைசுசுவை. நான் பதிவுகள் எழுதிகொண்டிருக்கிறேன், அவர்களோ திண்ணையில் உட்கார்ந்துகொண்டு புரளி பேசிக்கொண்டிருக்கும் வேலை வெட்டி இல்லாத கும்பல். parasite.என்ன ஒன்று ஆங்கிலத்தில் வெட்டிக்கதை பேசுகிறார்கள் அவ்வளவே. ஒரு பதிவு எழுதக்கூட தைரியமில்லாத கோமாளிக்கூட்டம். என் தரத்திற்கு அவர்களின் இசை ரசனை இல்லை. வெறும் ராஜா என்று போதையேறி புலம்புகிறார்கள். அவர்களை கொஞ்சம் அடுத்த நிலைக்கு கொண்டுசெல்லலாம் என்று பார்த்தால் இந்த dustbin இசையே போதும் என்று வீம்பாக பேசுபவர்களிடத்தில் என்ன லாஜிக் எதிர்பார்க்கமுடியும்? சில ஜென்மங்கள் என்றைக்கும் திருந்தாது. அது இளையராஜா forum என்பதால் சற்று அடக்கி வாசிக்கவேண்டிய கட்டாயத்தில் நானிருந்தேன். அது என்னுடைய புரிதல்.மூளை இல்லாத ஜடங்கள் என்றைக்கும் உண்மைகளை புரிந்துகொள்ளமுடியாது. உங்களுக்கு மூளை என்று ஒன்று இருக்கிறது என்று நினைக்கறேன். இல்லையா?

    ReplyDelete
  55. திரு .காரிகன் அவர்களே

    நீங்கள் சொடிக்கிய கடிகாரத்திற்கு பயந்து நீங்களே ஓடுவதாகத் தெரிகிறது.
    இளையராஜாவை தரம் குறைவாக வர்ணனை செய்தது தாங்கள்.

    அதற்க்கு நான் எம்.எம்.வீ பாடிய ஒரு பாடலை சொன்னேன்.அவ்வளவே. பழையவர்களை இழிவு படுத்துக்றேன் என்று புலம்புகிறீர்கள்.அருமையான பாடல் என்கிறீர்கள்.நல்ல பாடல் தான் ஒத்துக் கொள்கிறேன்.அதற்காக அவர் பாடிய முறை நன்றாகவ இருக்கிறது.



    // தன் தகரக் குரலினால் கற்பழித்துக் // - // அவர் அறிமுகப்படுத்திய மிருகமான ..// காரிகன்

    இது தானே உங்கள் பொன்மொழிகள்.இப்போ யுவனுக்கு பொன் மொழியால் வாழ்த்துக்கிறேர்கள்
    // கழிப்பறையில் உட்கார்ந்து முக்குவது போன்ற சகிக்க முடியாத குரலில் "வசனம் பேசி" நம்மை நிலை குலையச் செய்கிறார்.தாங்கவில்லை.// காரிகன்

    நீங்கள் கிலாகிக்கும் ரகுமான் வந்ததற்கு பின்னால் தானே இந்த கோமாளித்தனங்கள் நடைபெறுகின்றன.கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு என்று ஒரு பெண் ஆன் குரலில் கத்தவில்லையா ? இதெல்லாம் ரகுமானிடம் சகஜம் அப்பா !! அவரை மட்டும் உச்சி முகர்கிரீர்களே , ரகுமானை பின்பற்றும் யுவனை ராஜாவின் மகன் என்பதற்காக மட்டும் இகழ்கிறீர்கள். அப்படிதான் எடுத்தக் கொள்ள வேண்டியிருக்கிறது.ஏன் இந்த வன்மம்.?

    vயாகாவாராயினும் நா காக்க

    இசையை ரசிப்பது என்பது வேறு.பாடகரின் குறை ரசிப்பது என்பது வேறு.
    நடிப்பிசைப்புலவர் [ நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்களோ ], இசைசித்தர் , மதுரை சோமு , போன்ற இனிய குரல் வளமற்ற பாடகர்களின் பாடல்களை எல்லாம் இசை ரசிகர்கள் ரசித்தார்கள்.
    உங்களுக்கு இசை பற்றிய தவறான புரிதல் உள்ளன.

    சிவாஜி பற்றி நான் ஏதோ அவதூறு பேசியதா சொல்கிறீர்கள்.நீங்கள் தலையில் வைத்துக் கொண்டாடும் சிவாஜியை பற்றி , உலக திரைப்பட அரங்கில் புகழ் பெற்ற மிருனாள் சென் அவர்கள் கூறிய கருத்தையே சொன்னேன்.அப்படி யாராவது இளையராஜாவை நல்ல இசையமைப்பாளன் இல்லை யாரவது சொல்ல முடியுமா ? அல்லது சொல்லியிருக்கின்றாரா என்று தான் கேட்டேன்.அவ்வளவே.

    கொப்பு விட்டு கொப்புத் தாவுகிறீர்கள்.

    // இதில் கிடைக்கும் எதோ ஒரு பிழையை (பெயர்,எண்ணிக்கை, படம் வெளிவந்த ஆண்டு, போன்ற ஒன்றுமில்லாத விஷயங்களை) எடுத்துக்கொண்டு அடுத்த போருக்கு வருவீர்கள். அப்படித்தானே?// காரிகன்

    இப்படி ஒரு கருத்தை ராஜ ரசிகர்கள் சொன்னால் என்ன சொல்வீர்கள்." ராஜ ரசிகர்களுக்கு இது கூட் தெரியவில்லையே ? இதை நாம் சொல்வோமே என்று குதிப்பீர்கள்.

    அது நான் கேட்கும் போது தானே தெரிகிறது உங்கள் புளுகு மூட்டை.நான் கேட்காதவரை அதை உண்மை என்று உங்களை போன்றோர் நினைத்துவிடுவார்கள் இல்லையா?

    பழைமை பற்றி பெரிதாக எல்லாம் தெரிந்தவர் போல உளறவேண்டாம்.உங்களுக்கு பழமையும் தெரியவில்லை புதுமையும் தெரியவில்லை.பழமையை போற்றுபவராக நீங்கள் இருந்தால் ரகுமானைஒரு வார்த்தை கண்டிக்காமல் இந்த கட்டுரையை எழுதியிருக்க மாட்டீர்கள்.இசையில் புதுமை பற்றிய தெளிவிருந்தால் ராஜாவை தாழ்த்தியிருக்க மாட்டீர்கள்.

    நான் கேட்காதவரை கிட்டப்பா திரை இசைக்கலைஞர் என்றுதானே ரகுமான் அடிப்பொடிகள் நினைப்பீர்கள்.

    பல தவறான கற்பிதங்கள் , தவறான தகவல்கள் ,தவறான ஒப்பீடுகள் , தவறான இசை பற்றிய புரிதல்கள் கொண்ட " கட்டுரை " இது.

    பாட்டெழுதுவது , இசையமைப்பது , பாடுவது , வாத்திய இசையை நெறிப்படுத்துவது , பின்னணி இசை அமைப்பது , நெறிப்படுத்துவது , இசைக்கட்டுபாடு செய்வது என்று திகழும் முழுமையான , இந்தியாவின் ஒரு அபூர்வ கலைஞனை முட்டாள் தனமாக எழுதி உங்கள் அறியாமையை இன்னும் வெளிச்சம் போடா திருக்க வேண்டுகிறேன்.போதுமான அளவு அவை தெரிந்து விட்டன.
    ஐரோப்பிய கலைஞர்கள் பெரும் பாலும் தாங்களே எழுதி , இசையமைத்து பாடுவதையே மதிப்பவர்கள்.அப்பாடியானவர்களியே முழுமயான கலைஞர்கள் என்றுபோற்றுகின்றனர்.அப்படிப்பட்ட ஒருவரே ராஜா.அவரின் பாடல் எழுதும் திறமையை வாலி புகழ்ந்து பேசியிருக்கிறார்.


    அதுதானே தெரியுமே என்று தங்கவேலு பாணியில் காமடி பேச வேண்டாம்.

    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே கேட்டு விட்டு தான் எழுதத் தொடங்கினேன்.

    ஓம் சாந்தி சாந்தி.

    ReplyDelete
  56. ரிம்போச்சே2 October 2013 at 23:21

    //உண்மையில் ரஹ்மான் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் அதிக சிரத்தை எடுத்துக்கொள்வது அவரின் பல பாடல்களை கேட்கும் போது நமக்குப் புரிகிறது. சிலர் ரஹ்மானை கம்ப்யூட்டர் கொண்டு எம் எஸ் வி பாணி பாடல்களை தருபவர் என்று விமர்சிக்கிறார்கள். இளையராஜாவின் காலத்தில் வார்த்தைகள் பின்னடைவை அடைந்தன. இசை பிரதானமானது. ரஹ்மான் இந்த எதிர் சுழற்சியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவந்தார். இதனாலேயே ரஹ்மானின் இசையில் இணைப்பிசை (interlude) சாதாரணமாக இருந்தது. இணைப்பிசையின் பங்கை ரஹ்மான் வெகுவாகக் குறைத்தார்.//

    இணைப்பிசையைத் தவிர்த்தும் 'அதிரடிக்காரன்' - சிவாஜி படப் பாடல் போன்றவைகளில் என்ன பாடுகிறார்கள் என்று விளங்கவில்லையே?

    ReplyDelete
  57. ரிம்போச்சே2 October 2013 at 23:36

    //ஹரிஹரன், ஹரிணி, ஸ்ரீநிவாஸ், சுரேஷ் பீட்டர்ஸ்,உன்னி மேனன், உன்னி கிருஷ்ணன்,அனுபமா,நித்யஸ்ரீ, மின்மினி,ஷங்கர் மகாதேவன் போன்ற பல குரல்கள் ஒலிக்கத் துவங்கின. //

    உதித் நாராயண், சுக்விந்தர் சிங், மதுஸ்ரீ, அட்னான் சாமி போன்ற குரல்களை அறிமுகப்(படுத்தாமலே) இருந்திருக்கலாம். பாட்டுப் பாடி தமிழ் மொழியின் கழுத்தைத் திருகி பலியாடாக்கினார்கள்.

    இளையராஜா காலம் வரை பாடகர் பாடும்போது இசையமைப்பாளர் உடனிருந்து உச்சரிப்பை சரிபார்த்தார்கள்/திருத்தினார்கள். பின்னர் காலங்களில் இசையமைப்பாளர்கள் அந்தப் பொறுப்பைத் தட்டிக்கழிக்க பாடகர் உச்சரிப்பில் பெருந்தவறுகள் கண்டுகொள்ளாமலே விடப்பட்டன. இசையமைப்பாளர்களின் மொழியறிவே கண்றாவியாக இருக்கும் இக்கால கட்டத்தில், முண்ணனிப் பாடகர்கள் டிராக்கில் பாடும்போது பாடல் உச்சரிப்பு மிகவும் தரம் தாழ்ந்து போனது. அதைக் கணக்கில் எடுக்க மாட்டீர்களே!

    ReplyDelete
  58. ரிம்போச்சே2 October 2013 at 23:51

    //தன் சி டிக்களில் அவருடன் பணியாற்றிய அணைத்து இசை உதவியாளர்களையும் பெயர்களையும் வெளியிட்டு அவர்களை அங்கீகரித்தது பொதுவாக நம் திரையுலகம் அறியாத ஒரு பண்பு. தன்னை மட்டுமே இசையின் முகமாக முன்னிறுத்தும் அகங்காரப் போக்கு ஒரு முடிவுக்கு வந்தது.//

    அது அஹங்காரமல்ல, ஆளுமையின் வெளிப்பாடு. இளையராஜா இசையில் ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நோட்சும் இது இப்படித்தான் இருக்கவேண்டும் என அவரே தீர்மானித்தது.

    அதுவே ரஹ்மான் இசையில் அவர் மற்ற கலைஞர்களுடன் jamming session நடாத்தி இசைக்கலைஞர்களின் பல்வேறு இசையை பதிவு செய்து கொள்கிறார். பின்னர் பலமுறை கேட்டுக்கேட்டு ஆங்காங்கே வெட்டி ஒட்டிப் பாடலை உருவாக்குகிறார். (Check out the book "A.R. Rahman The Musical Storm" by Kamini Mathai)

    இது என் சொந்த ட்யூன், மொத்தமாக 100% என் சிந்தனையில் உதித்தது எனக் கூறமுடியாததாலேயே அவர் மற்றவர்க்கும் credit கொடுக்கிறார் என்பது என் கருத்து. இதை நான் குற்றச்சாட்டாக வைக்கவில்லை. இது ரஹ்மான் ஸ்டைல் அவ்வளவுதான்.

    ReplyDelete
  59. குமரன்3 October 2013 at 05:46

    சில வருடங்களுக்கு முன்னர் பாடகி நித்யஸ்ரீ கண்ணோடு காண்பதெல்லாம்.பாடல் டான்ஸ் பாடல் என்று ஒரு முறை தான் டியூன் சொல்லப்பட்டது என்றும் ,ரகுமானுக்கு எந்த பெரிய எதிபார்ப்பும் இல்லை என்றும் , பாடலில் வரும் தக திமி ,தக திமி என்ற பகுதிகளை அரைமணி நேரம் பாடியதாகவும், கூறியிருந்தார்.

    இதைப் போல பல கலைகன்ர்களும் கூறுகிறார்கள்.

    ReplyDelete
  60. விமல் , ரிம்போச்சே ரெண்டு பேரும் கலக்குறீங்களே! காரிகனுக்கு புரிய வைக்க நீங்கள் தரும் செய்திகள் எனக்கும் புதிய செய்திகளாகத்தான் தெரிகிறது .

    இளையராஜாவை இகழ்வோர் சங்கத்தின் தலைவர் அண்ணன் 'போஸ் பாண்டி' காரிகன் அவர்களும் செயலர் அண்ணன் 'கோடி' அமுதவன் அவர்களும் five star விளம்பரத்தில் வரும் 'பசங்க' மாதிரி 'இது soft டா இருக்கு' ... 'இல்ல இல்ல மிருதுவாய் இருக்கு ' என்று தாங்கள் சொன்னதையே சொல்லி கொண்டிருப்பார்கள் . இவரை அவர் பாராட்டுவார் ,அவரை இவர் பாராட்டுவார் . ஆனால் எதற்கு என்றுதான் புரியமாட்டேன் என்கிறது . கடைசியா ரெண்டு பேருமே இசை பற்றிய புரிதல் இல்லாமலேயே பேசிக் கொண்டிருக்கிறார்கள் .

    தமிழ்த் திரை இசையை சீரழித்த , அதன் ஆரோக்கியத்தையே கெடுத்துப் போட்ட, தமிழிசையின் சுயத்தை அழித்துப் போட்ட ரகுமான் இசையில் என்ன புதுமை இருக்கிறது ? அராபிய சூஃபி இசை ,ஆப்பிரிக்க கானா இசை ,மேற்கத்திய செவ்வியல் இசை என்று இந்தியாவிற்கு வெளியே உள்ள இசை எல்லாம் எடுத்து fusion என்ற பெயரில் கலவைக் கொடுமையை கொடுத்தார் ...இல்லை ...கெடுத்தார் . வேற வழி தெரியாமல் மக்கள் ...இல்லை ..மாக்கள் கேட்டுத் தொலைக்க வேண்டியதாய் போச்சு. 80 படங்களுக்கு மேல் தாண்டாத ரகுமான் எங்கே ...800 படங்களுக்கு இசை அமைத்த இளையராஜா எங்கே !

    ReplyDelete
  61. திரு ரிம்போச்சே,
    பாடல் வரிகள் புரியவில்லை என்ற குற்றச்சாட்டு இளையராஜாவின் காலத்திலேயே எழுந்தது.இதை எத்தனை முறைதான் சொல்வது? ரஹ்மானின் இசையில் இந்த ஓசைகள் அதிகமாயின என்பதும் உண்மையே. நானே ஒத்துக்கொள்ளும் ஒரு விஷயத்தை என்னிடமே கேள்வியாக வைப்பது என்னவிதமான புத்திசாலித்தனமோ உங்களுக்கே வெளிச்சம்.

    ரஹ்மான் பல பாடகர்களை அறிமுகப்படுத்தினார் என்பது உண்மையில்லை என்று சொல்ல வருகிறீர்களா? நான் அவர்கள் எல்லோருமே சிறப்பாகப் பாடினார்கள் என்று எழுதவில்லையே? மேலும் இளையராஜா தன் பங்குக்கு மூக்குப்பாடகி ஜென்சி என்ற ஒரு அவஸ்தையையும் எஸ் பி ஷைலஜா (எஸ் பி பியின் தங்கை) என்ற கொடுமையையும் மனோ என்ற எஸ் பி பி காப்பிகேட் டையும்,சித்ரா என்ற யாருக்குமே பொருந்தாத குரலை கொண்டவரையும் அறிமுகப்படுத்தி நம்மை துவம்சம் செய்யவில்லையா? ரஹ்மானின் அறிமுகத்தில் இப்படிப்பட்ட சில தவிர்க்க முடியாத தவறுகள் ஏற்பட்டன என்பதையும் நான் குறிப்பிட்டுள்ளேன். ஏன் புகழ்பெற்ற ஜேசுதாசே தெருக்கோவிலே ஓடி வா என்று தமிழைக் கொலை செய்யவில்லையா? இளையராஜா வார்த்தைகளில் உச்சரிப்பில் கவனம் எடுத்துக்கொண்டார் என்பது உண்மையில்லை. அவர் ஆரம்பத்தில் அதை செய்தார். பின்னர் அவருக்கு அதற்க்கெல்லாம் அவசியமேயில்லாமல் போய்விட்டது. தன் இசையே பேசுகிறது என்று ஆட்டம் ஆடினார்.அதனால்தானே அவர் பாடல்கள் சீரழிவை அடைந்தன.

    இறுதியாக ரஹ்மான் தன்னுடன் பணியாற்றிய எல்லா இசைஞர்களையும் மதிக்கும் பண்பாடு தெரிந்தவர். இதை நீங்கள் ரஹ்மான் அவர்களுக்கு கடமைப் பட்டவர் என்று ஒரே வரியில் முடக்கிவிடுகிறீர்கள். இளையராஜா என்னதான் நோட்ஸ் அருமையாக எழுதினாலும் அதை அதே அழகுடன் உயிர்பெறச் செய்ய இசைக் கலைஞர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்களை ஓரம் கட்டிவிட்டால் அவ்வாறான அருமையான சிறப்பான இசைஞர்களின் பங்களிப்பு இல்லை என்றாகிவிடுமா? இளையராஜாவிடம் மற்றவர்களை மதிக்கும் அங்கீகரிக்கும் பண்பு இல்லை என்பதையே நான் குறிப்பாக எழுதியிருந்தேன். அதை நீங்கள் புரிந்து கொண்டாலும் உங்களின் ஈகோ அதை வெளிப்படையாக அறிவிக்க முடியாமல் தடுக்கிறது. இளையராஜாவிடம் குறைகளே கிடையாது என்ற போதையேறிய கருத்தாடல்கள் உங்களிடம் தென்படுவது ஒன்றும் புதிதில்லை.

    ReplyDelete
  62. திரு குமரன்,
    துவக்கத்தில் நடுநிலை கொண்டவர்போல வண்ணம் காட்டினீர்கள். தற்போது உங்களின் நிறம் மாறுகிறது. வழக்கமான ராஜா ரசிகசிகாமணி ரேஞ்சில் ரஹ்மானுக்கு ராகங்கள் தெரியாது, நோட்ஸ் எழுதத் தெரியாது போன்ற வசதியான குற்றச்சாட்டுகளுடன் படைஎடுக்கிறீர்கள். ரஹ்மான் இளையராஜா அளவுக்கு இசைஞானம் உள்ளவர் என்று நான் சொல்லியிருக்கும் பட்சத்தில் நீங்கள் இதைச் சொல்வது பொருத்தம். நான் அந்தத் தவறை என் பதிவில் எங்குமே செய்யவில்லை. மேலும் ரஹ்மான் தன் குருக்களை மிஞ்சிய சிஷ்யன், அவரே தமிழில் எல்லா புரட்சிகளும் செய்தார், அவரைப் போன்றவர் உலகத்திலேயே கிடையாது, அவருக்கு இசையில் தெரியாதது எதுவுமேயில்லை என்று சில கூமுட்டைகள் தங்களுக்கு பிடித்தவரைப் பற்றிக் கூவுவதைப் போல நான் எங்காவது எழுதியிருந்தால் சுட்டிக்காட்டவும். மன்னிப்புக் கேட்டுக்கொண்டு திருத்திக்கொள்கிறேன். ரஹ்மான் இளையராஜாவுக்கு மாற்றாக வந்தவர். இசை அமைப்பில் மாற்றங்கள் செய்தார். புதிய இசைபாணியை அரங்கேற்றினார் என்பதே என் பதிவின் சாரம்.இளையராஜா அளவுக்கு ரஹ்மான் மனதில் தங்கும் பல பாடல்களைத் தரவில்லை என்ற ஒரே காரணத்தினால் அவர் பாடல்களில் எதுவுமே சிறப்பானதில்லை என்று சில மூடர்களைப் போல சொல்லிவிடமுடியுமா?

    ReplyDelete
  63. திரு சால்ஸ்,
    உங்களுக்கு இளையராஜாவைத் தாண்டி எந்த தகவலுமே புதியதாகத்தான் இருக்கும். இதில் ஆச்சர்யம் எதுவுமில்லை. உங்கள் இசை ரசனை மீது பெட்ரோல் தான் ஊற்ற வேண்டும். கொஞ்சம் வெளில வாங்கப்பா.

    என்னையும் அமுதவனையும் பற்றிய உங்கள் கருத்து கண்டிப்பாக வெகு மலிவான சிறுபிள்ளைத்தனமான காலித்தனம். அதையும் ஏற்றிவிட்டேன். காரணம் அது உங்களின் தரத்தை சிறப்பாக வெளிப்படுத்துகிறது என்பதால். நீங்கள் இன்னும் கூட இரண்டு மூன்று பத்திகள் எங்களைப் பற்றி எழுதியிருக்கலாம். எங்களை இகழ்வதுதான் உங்களின் பின்னூட்டத்தின் நோக்கமா? சரி. விடுங்கள். விஷயம் தெரிந்தவர்கள் கருத்தை விவாதிப்பார்கள். அது இல்லாவதர்கள் ஆட்களை விவாதிப்பார்கள்.அவ்வளவுதான் வித்தியாசம். நீங்கள் எந்த ரகம் என்று நீங்களே கோடு போட்டுக்கொள்ளுங்கள்.

    ஆரம்பத்தில் ரஹ்மான் வந்த போது இப்படியெல்லாம் ஆபிரிக்க இசை, அராபிய இசை என்று யாரும் பேசவில்லை. ரஹ்மான் சார்ந்த மதத்தின் இசையாக சூபி இசையை நாம் பார்த்தால் அவர் செய்ததில் இருக்கும் நியாயம் ஒருவேளை நமக்குப் புரியலாம். உலக இசையின் கூறுகள் இல்லாமல் தமிழ்ப் பாடல்கள் இருக்கமுடியுமா என்று நீங்களே உங்களை கேட்டுக்கொள்வது நல்லது. மேற்கத்திய பாணி சற்றும் இல்லாமல் வெறும் கர்நாடக ராகங்களை வைத்துக்கொண்டு பாடல்களை அமைக்கமுடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? அப்படித்தான் இளையராஜா வேறு எந்த உலக இசையின் பாதிப்பே இல்லாமல் பாடல்கள் அமைத்தாரா? அவர் செய்தால் புரட்சி. இவர் செய்தால் கெடுதி. அப்படித்தானே? கன்னாபினாவென்று எதையெதையோ எழுதித் தள்ள வேண்டாம்.

    ReplyDelete
  64. குமரன்3 October 2013 at 20:17

    திரு காரிகன்
    தாங்கள் சொல்லும் கருத்துக்கு ஆமாம் போட வேண்டும் என்று எண்ணுகிறீர்களா?
    நிதயஸ்ரீ தனது அனுபவத்தை சொன்னதை சொன்னதும் உங்களுக்கு ஏன் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது.?
    இசைக்கலைஞர்களின் பெயர்கள் போடுவது பற்றி பேச்சு வந்ததால் சொல்கிறேன்.
    கலை :தோட்டாதரணி என்று டைட்டிலில் போடுவார்கள்.அவருக்கு உதவி செய்த 150 பேர்களையும் திரையில் போட முடியுமா.?அவ்வளவு எண்ணிக்கையில் ராஜாவுக்கு இசைக்கலைஞர்கள் வாசிக்கின்றார்கள்.அதனால் அவரை பொருத்தவரையில் அது சாத்தியமில்லை.
    களிஞர்களின் உதார குணத்தைப் பற்றி பேசுகிறீர்களே ராஜா எத்தனையோ பேருக்கு உதவி செய்தார் என்பதையும் அறிவோம்.[ அதில் எத்தனையோ டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் அடக்கம் ] அது உங்களுக்கு தெரியாதா?

    நடுநிலை இல்லை என்று என்னை விமர்சிக்கும் நீங்கள் ராஜாஎன்று வந்ததும் தடுமாறுகிறீர்கள்.உங்களிடம் நடுநிலை இல்லை.வருந்துகிறேன்.

    தங்களால் பண்பாளன் என்று வர்ணிக்கப்படும் ரகுமான் வந்த புதிதில் இளையராவை தவிர்த்துத் தானே குமுதத்தில் பேட்டி கொடுத்தார்.நாம் மறக்கவில்லை.அப்போ இல்லாத பண்பு இப்போ எப்படி வந்தது?
    நாம் பாடல்களுடன் நிறுத்திக் கொள்வோம்.
    வணக்கம்.

    ReplyDelete
  65. ரிம்போச்சே4 October 2013 at 03:10

    //உலக இசையின் கூறுகள் இல்லாமல் தமிழ்ப் பாடல்கள் இருக்கமுடியுமா என்று நீங்களே உங்களை கேட்டுக்கொள்வது நல்லது. //

    இப்படியும் கேட்கலாம். தன் உலகப் புகழை வைத்து தமிழிசையை (வேண்டாம் இந்திய இசையை) வெளியுலகிற்கு எடுத்துச் சென்று பரப்பினாரோ?

    ReplyDelete
  66. திரு விமல்,
    எம் எஸ் வி எப்படியான பாடல்களைப் பாடினார் என்பதை நான் விளக்கமாகச் சொல்லி விட்டபோதிலும் விடாமல் அதையே பேசுவது..என்ன விவாதம் என்று தெரியவில்லை.யுவன் எப்படி பாடுகிறார் என்பதை இணையத்திலும் நேரிலும் பலர் விமர்சித்திருகிறார்கள். அதில் ஒருவரோ இருவரோ தவிர மற்ற எல்லாருமே அவர் பாடுவது சகிக்கவில்லை என்றே கருத்து கொள்கிறார்கள்.உங்களுக்கு அப்படியில்லை என்பது அவர் இளையராஜாவின் புதல்வன் என்பதால் மட்டுமே. இளையராஜா வீட்டு கழுதை பாடினாலும் (உண்மையான கழுதையையே சொல்கிறேன்.வேறு யாரையும் குறிப்பிடவில்லை)அதையும் ஆஹா என்ன நளினம் என்று பாராட்டும் கூட்டமல்லவா நீங்களெல்லாரும்.இசையையும் குரலையும் ரசிப்பது வேறு என்று ஒரு முத்தை உதிர்த்துவிட்டு போயிருக்கிறீர்கள். அடடா என்ன ஒரு வியாக்கியானம்! சிவாஜி பற்றிய உங்களின் கருத்துக்கு நான் என்ன தடையா போட்டேன்?அது உங்கள் எண்ணம் அவ்வளவே. தமிழகத்தில் இன்றுவரை பொதுவாக எலோருமே பாராட்டும் ஒரு நடிகரை இகழ்வாக பேசுவது உங்களின் தனிப்பட்ட விருப்பம். அதே போல இளையராஜாவை நான் விமர்சித்தால் மட்டும் உடனே ஓடி வந்து அது எப்படி என்று நீங்கள் கேள்வி கேட்பது கடைந்தெடுத்த முட்டாள்தனம். பழமையை நான் மதிப்பவன் என்பதால்தான் ஏழு பதிவுகளுக்குப் பிறகு உங்கள் இளையராஜா வருகிறார். ரஹ்மானை நான் விமர்சித்தே இருக்கிறேன். அவரால் கிராமத்து இசையை வெகு சிரத்தையுடனே செய்ய முடிவது அவருக்கு பின்னடைவே என்று குறிப்பிட்டிருக்கிறேன். மேலும் ரஹ்மான் பற்றி என் பதிவுகள் இன்னும் முடிவடையவில்லை. உங்களுக்காக அவரை நான் குறை சொல்லாவிட்டாலும் எனக்கே தெரிந்த காரணங்களுக்காக ரஹ்மானை நான் கண்டிப்பாக விமர்சிப்பேன். நீங்களும் அதை படிக்கத்தான் போகிறீர்கள்.

    "ஐரோப்பிய கலைஞர்கள் பெரும் பாலும் தாங்களே எழுதி , இசையமைத்து பாடுவதையே மதிப்பவர்கள்.அப்பாடியானவர்களியே முழுமயான கலைஞர்கள் என்றுபோற்றுகின்றனர்."

    இது நீங்கள் சொன்னது. நான் சொல்லியிருந்தால் உனக்கு எப்பவுமே ஐரோப்பிய இசைதான் பெருசு என்று கிண்டலடித்திருப்பீர்கள்.இருந்தும் நீங்கள் சொன்னது சரியே.இளையராஜா நன்றாக இசை அமைத்தார் என்பது சரி. அதுவும் ஓரளவுக்குத்தான். அவர் நன்றாக பாடல்கள் எழுதினார் சிறப்பாகப் பாடினார் என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ளமுடியாத புரட்டு.ஏன் இந்த கோணல் புத்தி?

    முடிவாக உங்களை நான் ஒரு முப்பது நிமிடம் தொடர்ச்சியாக இளயராஜா பாடிய பாடல்களை கேட்டுவிட்டு பதில் எழுதச் சொன்னால் நீங்கள் ஜேசுதாஸ் பாடிய அம்மா என்றழைக்காத உயிரில்லையே பாடலைக் கேட்டுவிட்டு எழுதுகிறீர்கள். இளையராஜாவின் "இனிமையான"குரலை கேட்க உங்களுக்கே பயம். இதுவே உண்மை.

    ReplyDelete
  67. "இப்படியும் கேட்கலாம். தன் உலகப் புகழை வைத்து தமிழிசையை (வேண்டாம் இந்திய இசையை) வெளியுலகிற்கு எடுத்துச் சென்று பரப்பினாரோ?"

    ரிம்போச்சே,
    இல்லாவிட்டால் எதற்காக ஹாலிவுட் இயக்குனர்கள் "உலகிலேயே மிகச் சிறந்த"இளையராஜாவை விட்டுவிட்டு ரஹ்மானிடம் வந்தார்கள்? நம் தமிழிசையே (திரையிசை)உண்மையில் மேற்கிசையின் கலப்பே. கப்பிள்ஸ் ரிட்ரீட் படத்தில் ரஹ்மான் ஒரு தமிழ் பாடலை பயன்படுத்தியிருக்கிறார் என்று கேள்விப்படிருக்கிறேன். மேலும் அவரின் சில பாடல்கள் ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.பாம்பே டிரீம்ஸ் இசை ஆல்பத்தில் ரஹ்மான் பெரும்பாலும் தமிழ் ஹிந்திப் பாடல்களையே ஆங்கிலத்தில் செய்திருந்தார்.(இதை விமர்சிக்கவும் முடியும்).

    ReplyDelete
  68. திரு காரிகன்,
    படித்தேன்.நன்றாக எழுதி உள்ளீர்கள். பாராட்டுகள். ரகுமானின் இசையை மிகவும் வித்தியாசமான கோணத்தில் இருந்து விமர்சித்திருப்பது இதுவரை நான் அறியாதது. ராஜாவா ரகுமானா என்ற கேள்வி அடிக்கடி கேட்கப்படுகிறது. அதற்கு உங்களின் பதில் என்னவாக இருக்கும் என்று அறிய ஆவல்.

    ReplyDelete
  69. குமரன்,

    "தாங்கள் சொல்லும் கருத்துக்கு ஆமாம் போட வேண்டும் என்று எண்ணுகிறீர்களா?"

    கண்டிப்பாக இல்லை. அது ராஜா ரசிக.....மணிகளின் எதிர்பார்ப்பு. மேலும் நீங்கள் ஆமாம் போடுவதால் எனக்கொன்றும் ஆகப்போவதில்லை. எனக்கு எதற்காக கோபம் வரவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? உங்களுக்குத்தான் உங்களின் வேடம் கலைந்ததை நான் சுட்டிக்காட்டியதும் அது வருகிறது. (கோபம் மட்டுமே உங்களுக்கெல்லாம் உடனே வந்து விடுகிறது.. அறிவார்ந்த கருத்துகளோ வர தாமதமாகின்றன.)

    நடுநிலை எனக்கு இருக்கிறது. நான் ராஜா என்று வந்ததும் தடுமாறவில்லை குமரன் அவர்களே,ஒரு வழக்கமான ராஜா ராஜாதான் பதிவர் போல நான் எழுதாததால் என் எழுத்து உங்களுக்கு அப்படிப்பட்ட எண்ணத்தை தருகிறது. நான் எப்போதுமே இளையராஜாவை ஒரே மாதிரியாகத்தான் பார்த்துக்கொண்டு வருகிறேன். அவரை பாராட்டினாலும் விமர்சித்தாலும் அது என் மன ஆழத்திலிருந்தே வருகிறது.என் இனிய ராஜாவை இப்படி பேசி விட்டானே என்று நீங்கள்தான் தடுமாறுகிறீர்கள்.கோபம் கொப்பளிக்கிறது. வார்த்தைகளிலே தெளிவு இல்லை. கைகள் நடுங்குவதால் பிழைகள் வேறு. சற்று இளைப்பாறிவிட்டு எழுதினால் உங்களுக்கும் நல்லது.

    நித்யஸ்ரீ என்ற புகழ் பெற்ற சபா பாடகியை தமிழ்த் திரைக்கு அறிமுகம் செய்து அவர் பெயரை இன்னும் பலரை அடையச் செய்த ரஹ்மானைப் பற்றி அவர் இப்படி சொல்லியிருப்பது குறித்து எனக்கு கவலை இல்லை. அவரவர் திறமைக்கேற்ற பாராட்டுகள்..விமர்சனங்கள்.. மேலும் நித்யஸ்ரீ கருத்தையெல்லாம் மண்டைக்குள் நுழைத்துக்கொண்டு நேரத்தை வீணடிப்பவன் நானில்லை. இதே போல இளையராஜா வெள்ளை சட்டை வேட்டி அணிந்து தன்னை ஒரு பக்திப்பழமாக காட்டிக்கொள்ள துவங்கிய காலத்தில் குமுதம் இதழில் ஒரு இயக்குனர் அவரை மிகக் கடுமையாக சாடியிருந்தார். இளையராஜா தன் அண்ணன் பாவலரின் மெட்டுகளையே தன் மெட்டுகளாக போட்டு வந்ததாகவும் அது தீர்ந்து போனதும் வேறு விதமாக பாடல்கள் அமைத்து வருவதாகவும் அப்போது அவர் கூறியிருந்தார். இதை நான் பதிவேற்றினால் உடனே உங்களுக்கு ரத்தக்கொதிப்பு அதிகமாக வாய்ப்பிருககிறது. இதுவெல்லாம் சிலர் புகழ் பெற்றவர்களைக் குறித்து சொல்லும் தனிப்பட்ட கருத்து.அவ்வளவே. இதைத் தாண்டி இதற்கு எந்த மரியாதையும் தேவையில்லை. என்னைப் பொறுத்தவரை இசை தட்டுகளில் இசை என்று இளையராஜா ரஹ்மான் என்ற ஒருவரின் பெயரை அச்சிடுவதே மிகப் பெரிய மோசடித்தனம். பிறர் பங்களிப்பு இல்லாமல் எந்தக் கொம்பனும் ஒன்றும் செய்துவிட முடியாது. இதில் ரஹ்மான் கொஞ்சம் தேவலை என்று நினைக்கிறேன்.

    ராஜா பிறருக்கு உதவி செய்தார் என்று யாருமே ஏற்றுக்கொள்ள அஞ்சும் ஒரு கருத்தை முன்வைக்கிறீர்கள். இருக்கலாம். அவர் இசையமைத்த படங்கள் நன்றாக ஓடியதால் தயாரிப்பாளர் இயக்குனர் சில நடிகர்கள் என்று அந்த படத்துடன் தொடர்புடையவர்கள் பயனடைந்திருக்கலாம். இதையா பெரிய உதவி என்று சொல்லவருகிறீர்கள்?

    ரஹ்மான் ஒரு நல்ல பண்பாளன் என்பதை நான் மட்டும் சொல்லவில்லை. ரஹ்மானை விமர்சிப்பவர்கள் கூட அப்படித்தான் சொல்கிறார்கள். அவரது அடக்கம் பணிவு பண்பு போன்றவைகளால் அவர் இன்னும் பேசப்படுகிறார். இளையராஜாவை விட ரஹ்மான் ஒரு பண்பாளன் என்பது பலரறிந்த உண்மை. உங்களுக்கு வேறுவிதமாக உண்மைகள் வெளிப்படுகின்றன போலும். அல்லது வெறும் இளையராஜா பாடல்களை மட்டுமே கேட்டுக்கொண்டு காலத்தைக் கழித்துக் கொண்டிருகிறீர்களா?

    ரஹ்மான் இளையராஜாவை தவிர்த்தே ஆரம்ப காலங்களில் பேட்டிகள் கொடுத்தார். அதில் என்ன தவறு என்று எனக்குத் தெரியவில்லை. அது அவர் விருப்பம். கார்த்திக் ராஜா, யுவன் ,பவதாரிணி போன்றவர்கள் கூட நாங்கள் அப்பா இசையை மட்டும்தான் கேட்போம் ரஹ்மான் இசையை கேட்டதேயில்லை (இவர்கள் சன் டிவி போன்ற சாட்டிலைட் டீவீ சேனல் களே பார்க்க மாட்டார்களா என்று அந்த பேட்டி கண்டவர் நக்கலாக எழுதியிருந்தார்) என்று சொல்லியிருந்தார்கள். இது உங்கள் எண்ணப்படி என்ன பண்போ? இது ஏன்? இளையராஜா ரஹ்மானின் இசையை அவர் வந்த புதிதில் எப்படி வர்ணித்தார் என்பது உங்களுக்குத் தெரியாதா? இளையராஜாவின் பண்பைப் பற்றி புதிதாக எதையும் கண்டுபிடித்து பதிவேற்ற வேண்டாம்.

    "நாம் பாடல்களுடன் நிறுத்திக் கொள்வோம்."

    மிகச் சரி. ஆனால் என் வசனத்தை நீங்கள் பேசுகிறீர்கள். நல்ல வேடிக்கைதான்.

    ReplyDelete
  70. குமரன்4 October 2013 at 07:35

    காரிகன் அவர்களே

    நித்யஸ்ரீ பற்றிய எனது கருத்தை மீண்டும் தவறான கோணத்தில் எனது கருத்தை புரிந்து கொடிருக்கின்றீர்கள்.மற்றவர்களின் ஐடியாக்களை தனதாக்கிக் கொள்ளும் ரகுமானின் இசை இயலாமையை தான் குறிப்பிட்டேன்.உங்களுக்கு விலாவாரியாக விளக்கினால் தான் புரியுமோ.?

    ஒரு மெட்டை கொடுத்து விட்டு ஒவ்வொரு வாத்தியக் காரனையும் தனியே கூப்பிட்டு இதற்க்கு பொருத்தமாக வாசி என்பவர் என்ன உயர்ந்த கலைஞனா ..?

    வாழ்க வளர்க.


    கலை :தோட்டாதரணி என்று டைட்டிலில் போடுவார்கள்.அவருக்கு உதவி செய்த 150 பேர்களையும் திரையில் போட முடியுமா.?

    ReplyDelete
  71. திரு குமரன்,

    உங்கள் மொழியிலேயே பதில் சொல்ல வேண்டாம் என்று பார்த்தேன். நீங்கள் என்னை அப்படி பேச வைக்கிறீர்கள்.

    நல்லது. யார் உயர்ந்த கலைஞன் என்ற பேச்சு இளையராஜா ரஹ்மான் மத்தியில்எழ வாய்ப்பேயில்லை. ஏனென்றால் இருவருமே ஒரே கீழ்த்தரமான இசைவடிவத்தின் பிரதிநிதிகள். என்ன இளையராஜா ஒரு நானூறு நல்ல பாடல்கள் ரஹ்மான் நூறு அவ்வளவே வித்தியாசம். எனவே எனக்கொன்றும் பெரியதாக தென்படவில்லை.

    மெட்டுக்குப் பாட்டு போட்டவர்களில் முதன்மையானவர் இளையராஜா. தானா தானா தனனா என்று வாய்க்கு வந்தபடி எதையோ பாடிவிட்டு ...சொல்லிவிட்டு என்பதே பொருத்தம் ... அதற்கு ஏற்றாற்போல் வார்த்தைகள் எழுதச் செய்தவர் இளையராஜா. இடையிடையே மேற்கத்திய செவ்வியல் ..கிளாசிக் என்று சொல்வார்கள்... இசையை அப்படியே காப்பி செய்து போட்டவர்தான் இளையராஜா. Bach என்ற மேற்கத்திய செவ்வியல் இசைஞரின் இசையிழைகளை யாருக்கும் தெரியாது என்று நினைத்துக்கொண்டு தன் இணைப்பிசையில் பிரதி ...காப்பி.. செய்தவர் இளையராஜா.இதற்க்கு அக தூண்டுதல் என்று சிலர் பொருள் சொல்வது அடுத்த மோசடி. இளையராஜாவின் இசையில் எல்லாமே தனித்தனியாக ஒலித்தது. ஒரு முழுமையான இசை அனுபவம் அவரின் சில பாடல்களிலேயே கிடைத்தது. மற்ற எல்லாமே வெறும் patch work எனப்படும் தொடர்பில்லாத இசைதான். பல்லவி ஒரு பக்கம், இணைப்பிசை கொஞ்சமும் தொடர்பில்லாமல் அங்கே இங்கே என்று திருவிழாவில் காணாமல் போன குழந்தை போல இன்னொரு பக்கம், சரணம் வேறொரு பக்கம் என்று ஒரு முழு பாடலின் சுவையையும் கெடுத்த இசை அவருடையது.இதை உண்மையான இசை விரும்பிகள் வெகு சுலபமாக அடையாளம் கண்டுகொள்வார்கள். பாதி இசைஞானம் கொண்டவர்களும் ஞான வெறுமைகளும் இதன் ஒரு எழுத்தைக்கூட புரிந்துகொள்ள முடியாது. இளையராஜாவின் இசையை மட்டும் கேட்கும் எவருமே ஒரு மகத்தான இசை அனுபவத்தை தவற விட்டவர்கள் என்பது என் கருத்து. இது மாற்ற முடியாத உண்மையும் கூட. இதை அவர்கள் இப்போது ஒரு நக்கலோடு புறந்தள்ளினாலும் பின்னர் கசப்போடு உணர்ந்து கொள்வார்கள். இளையராஜாவோ ரஹ்மானோ அல்லது பிற யாராவோ எவரின் இசையுமே இங்கே நீண்ட நாட்களுக்கு நிலைத்து நிற்கப்போவதில்லை. இன்றைய இசை அப்படிப்பட்ட வாழ் நாள் வரையான இசையில்லை என்பதை அதை அமைப்பவர்களே உணர்ந்திருக்கிறார்கள்.இன்று காலை தோன்றி இன்று மாலையே உதிர்ந்துவிடும் பூக்களுக்கு மத்தியில் என்ன போட்டி வேண்டிக்கிடக்கிறது? வெட்கக்கேடு.

    ReplyDelete
  72. காரிகன் சார்

    தரம் குறைந்தவன் என்று என்னை சுட்டிக் காட்டியது இருக்கட்டும். நீங்கள் பின்னூட்டத்தின் இடையிடையே முட்டாள் , மூடர் , பைத்தியக்காரர்கள் என்று ராஜா ரசிகர்களை சொல்வது மட்டும் தரம் குறைந்த பதில் இல்லையா!?

    திரும்ப திரும்ப சிறுபிள்ளைதனமாக இளையராஜாவின் ஆளுமையை குணநலனை பற்றிதான் பேசிக் கொண்டே இருக்கிறீர்கள் . அவர் இசை பற்றி யுகா போலவோ சௌந்தர் போலவோ அலசத் தெரியவில்லை. நீங்கள் சொல்வதே சரி என்று முன் தீர்மானித்தலில் முங்கிப் போய் கிடக்கிறீர்கள். வீணாய்ப் போன ரகுமான் இசையை நல்ல இசை என்று புலம்பிக் கொண்டு திரிகிறீர்கள் .

    ரகுமான் பாடல்களில் 10 நல்ல பாடல்களை உங்களால் சொல்ல முடியுமா ? தொண்டை கிழிய கத்தி கத்தி பாடப்படும் பாட்டுக்கள்தான் அதிகம் . 'ரகுமான் பாட்டுக்களை பாட ஆரம்பிச்ச பிறகு என் தொண்டையே கெட்டுப் போச்சுங்க ' என்று கச்சேரிகளில் பாடும் என் நண்பர் ஒருவர் சொல்லுவார் . ' நல்ல மெலடி இல்லாத பாட்டுக்கள்தான் நிறைய போட்டிருக்கிறார் ரகுமான் ' என்று ஒரு வாத்திய இசைக்காரர் சொல்லுவார் . சின்ன பசங்க நாலு பேரு ஆஹா ஓஹோ என்று பாராட்டுவதால் நல்ல இசையை கொடுத்தவர் ஆகி விடுவாரா?

    ReplyDelete
  73. பிரதீபன்4 October 2013 at 15:49

    ஐய்யா வார்த்தை விரும்ப்பம் நாயகரே

    மற்றவர்களை " தரம் குறைந்தவன் " என்று உலரும் உங்கள் வார்த்தை பிரயோகங்களை இந்த பதிவிலயே தொகுத்து தருகிறேன்.

    - மூக்குப்பாடகி ஜென்சி என்ற ஒரு அவஸ்தையையும் எஸ் பி ஷைலஜா (எஸ் பி பியின் தங்கை) என்ற கொடுமையையும் மனோ என்ற எஸ் பி பி காப்பிகேட் டையும்,சித்ரா என்ற யாருக்குமே பொருந்தாத குரலை கொண்டவரையும்

    // தன் தகரக் குரலினால் கற்பழித்துக் கொலை செய்தவர் இளையராஜா // - // அவர் அறிமுகப்படுத்திய மிருகமான ..

    வக்காலத்து வாங்கும் உங்களைப் போன்ற இழிந்த ரசனை கொண்டவர்கள் வாயை திறக்காமல் இருப்பது நலம்// காரிகன்

    [ ரிம்போச்சே ]
    உங்களுக்கு மூளை என்று ஒன்று இருக்கிறது என்று நினைக்கறேன். இல்லையா?

    தன் தந்தைக்கு எந்தவிதத்திலும் சளைத்தவரல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் எதோ கழிப்பறையில் உட்கார்ந்து முக்குவது போன்ற சகிக்க முடியாத குரலில்..//

    // எல்லாவற்றிலும் என்ற மடத்தனமான எண்ணம் அவருக்கு//



    கீழ்த்தரமான உங்களைப் போன்ற ராஜா ரசிகசிகாமனிகள் என்.///

    அற்ப்புதமான சிறந்த வார்த்தைகள்.பெரியவர்களை போலிக்கு இழுத்துவரும் உங்கள் இசை ரசனையும் இப்படித் தானிருக்கும்.

    நேர்மையாக ரகுமானின் சிஷ்யப்பிள்ளை என்று நீங்கள்ஒத்துக்கொள்ளுங்கள்.

    Amudhavan25 September 2013 00:25
    காரிகன்
    \\உங்களைப் போன்றவர்களுக்காகவே பல ராஜா ஹோட்டல்கள் இருக்கிறன. அங்கே உங்களுக்கு வேண்டிய உணவு வகைகள் கிடைக்கும்.\\

    அடடே, இப்படியெல்லாம் ஹோட்டல்கள் உள்ளனவா? அரிய செய்தி. இப்போதுதான் தெரிந்துகொண்டேன்.

    உங்களுக்கென்ன சிங்கிச்சா ஒருவர் இருக்கின்றார்.

    ReplyDelete
  74. திரு பிரதீபன்,
    என்ன இன்னும் வந்து சேரவில்லையே என்று பார்த்தேன். என் பின்னூட்டங்களில் இருக்கும் சில தரமில்லாத வார்த்தைகளை இப்படி சேகரித்து ஒரு தொகுப்பாக வெளியிடுவது குறித்து மகிழ்ச்சியே.இதுதான் உங்களின் தரம் என்று தெரிகிறது. அவற்றை நான் எந்த கேள்விகளுக்கு பதிலாகச் சொன்னேன் என்பதை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் உங்களின் நோக்கத்தை பூர்த்தி செய்யும் வார்த்தைகளை மட்டும் பொறுக்கி (இதையும் அடுத்த பின்னூட்டத்தில் சேர்க்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்) எடுத்து பதிவேற்றினால் என்னைப் பற்றிய பிம்பம் நீங்கள் விரும்பும் வகையிலேயே இருக்கும் மறுக்க முடியாது. ஆனால் நான் யாரையும் வேண்டுமென்ற இகழ்ச்சியாகப் பேசுவது இல்லை. சிலரின் சொற்களை கொண்டே பதில் சொல்வதால் இப்படியான விபத்துக்களை தவிர்க்கமுடிவதில்லை.

    நான் ஒரு ரஹ்மானின் ரசிகன் என்று எனக்கே தெரியாத ஒன்றை கூறியிருக்கிறீர்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் என் எழுத்துக்கள் வேறுவிதமாக இருந்திருக்கும். நான் ரஹ்மானை ரொம்பவும் சிலாகித்து ரசிப்பவன் கிடையாது. அவர் இசை வித்தியாசமாக இருந்தது. சில பாடல்கள் நன்றாக இருந்தன என்பதோடு எனக்கும் ரஹ்மான் இசைக்குமான தொடர்பு முடிந்துவிடுகிறது.ஒவ்வொரு காலகட்டத்திலும் நம் இசை மாறிக்கொண்டே வருகிறது. இப்போது ரஹ்மான் வந்த பிறகு எவ்வாறு இசையின் வடிவங்கள் மாறிப்போயிருக்கின்றன என்பதை எழுதும்போது அவரைப் பற்றி எழுதாமல் இருக்கமுடியாது. இதை நான் அவரை புகழ்வதாக அர்த்தம் கொள்வது முரண். இப்படியான மிக எளிமையான விஷயங்களைப் புரிந்துகொள்ள விசேஷ மூளை எதுவும் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  75. காரிகன், வெளியிலும் வெவ்வேறு தளங்களிலும் போய் சூடான விவாதங்களில் கலந்துகொண்டுவிட்டு வரும் உங்கள் சுறுசுறுப்பு வியக்கச்செய்கிறது. அந்தத் தளங்களில் உங்கள் விவாதங்கள் பார்த்தேன். பொறி பறக்கிறது. போர்களில் எதிரி முகாமுக்கும் சென்று நம்முடைய கொடியை ஏற்றிவிட்டு வருவதுதான் சிறந்த போர்க்கலைகளில் ஒன்று. அதனை நீங்கள் இந்த விவாதங்களில் செய்வது பாராட்டத்தக்கது.
    சில கருத்துக்களைச் சொல்லிவிட்டாலேயே விஷக்கிருமிகள் ஆக்கிரமிப்பதைப் போல் எதிர்த்து ஆக்கிரமிக்கும் போக்கு பதிவுலகில் உள்ளது. இங்கே வந்திருப்பது 'கூட்டமா' அல்லது வெறும் மூன்று நான்கு பேர் மட்டுமே வெவ்வேறு பெயர்களில் வருகிறார்களா என்பதும் தெரியவில்லை. ஆனாலும் இங்கே மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் வருகிறவர்கள் ஒன்றும் சாதாரண ஆட்களில்லை, சாதாரண ரசிக சிகாமணிகள் இல்லை. எல்லாரும் பல்வேறு துறைகளிலும்- அதுவும் குறிப்பாக நடிப்புத் துறையிலும், டைரக்ஷன் துறையிலும் பல்வேறு distinction பெற்றவர்கள் வருகிறார்களே என்பதுதான் மகிழ்வுக்கும் பெருமைக்கும் உரிய செய்தி.
    ஏனெனில் இளையராஜாவை விமர்சித்தாலேயே வரிந்து கட்டிக்கொண்டு வந்து, உனக்கு மியூசிக் தெரியுமா, இசை தெரியுமா, ராகம் தெரியுமா இசை பற்றி ஆராய்ச்சி செய்திருக்கிறாயா, அதுபற்றித் துறைபோக அறிந்திருக்கிறாயா- இசை பற்றி முழுமையாகத் தெரியாமல் எப்படி இளையராஜா பற்றிப் பேசலாம் என்றெல்லாம் கேள்வி எழுப்புபவர்கள், நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவராகப் புகழப்படும் சிவாஜியைப் பற்றி- அவர் ஒன்றுமே இல்லை, நடிக்கத் தெரியாதவர், ஆலையில்லா ஊரின் இலுப்பைப்பூ என்றெலாம் பேசுகிறார்கள் என்றால் அப்படி ஒன்றும் சும்மா பேசுகிறவர்களாக இருக்கமாட்டார்கள். நிச்சயம் நடிப்புக்கலையிலும் டைரக்ஷன் கலையிலும் நான்கைந்து பட்டங்கள் வாங்கியவர்களாகவும், ஏழெட்டுத் திரைப்படங்களில் நடிக நடிகையருக்கு நடிப்புச் சொல்லிக்கொடுத்து நடிப்புக்கலைஞர்களை உருவாக்கியவர்களாகவும்தாம் இருப்பார்கள். இல்லாவிட்டால் வெறுமனே மிருணாள்சென் சொல்லிவிட்டார், மறுநாள் சென் என்ன சொன்னார் என்றெல்லாம் கேள்வி எழுப்புபவர்களாக இருப்பார்களா என்ன?
    அதனால் நீங்கள் இவர்களின் வருகைக்கு நிச்சயம் மகிழ்ச்சி அடையலாம்.

    ReplyDelete
  76. \\நான் கேட்காதவரை கிட்டப்பா திரை இசைக்கலைஞர் என்றுதானே ரகுமான் அடிப்பொடிகள் நினைப்பீர்கள்.

    பல தவறான கற்பிதங்கள் , தவறான தகவல்கள் ,தவறான ஒப்பீடுகள் , தவறான இசை பற்றிய புரிதல்கள் கொண்ட " கட்டுரை " இது.\\

    பாருங்கள் காரிகன் கிட்டப்பாவைப் பற்றியெல்லாம் எத்தனைத் தவறான தகவல்கள் தந்து வரலாற்றை திசைமாற்றுகிறீர்கள். நீங்கள் சிம்பொனி பற்றி மட்டும்தான் இங்கே தவறான தகவல்களைப் பரப்பலாம். இளையராஜா சிம்பொனி அமைத்தார் என்று இத்தனைக் காலமும் அவர் புகழ் பாடிக்கொண்டிருக்கலாம். எங்கே சிம்பொனி, அது அங்கீகரிக்கப்பட்டிருக்கிறதா, வெளிவந்திருக்கிறதா என்றெல்லாம் கேள்வி எழுந்தால் அப்படியே பம்மி, ஏதாவது ஒரு ஆங்கிலப் பதிவை copy paste செய்யலாம். கூடவே how to name it கேட்டிருக்கிறாயா, how to blame it தெரியுமா என்றெல்லாம் கேட்டு மடைமாற்றலாம். இதையெல்லாம் நீங்கள் செய்யவே இல்லை.கிட்டப்பா பற்றி மட்டும் தவறு. என்ன செய்ய?

    நித்யஸ்ரீ சொல்லியிருப்பது உண்மையாயிருக்கும் பட்சத்தில் ரகுமான் பாராட்டப்பட வேண்டியவரே. ஏனெனில் பிற கலைஞர்களின் பாணியையும் அழகுகளையும் திறமைகளையும் அங்கீகரித்து அவற்றை ஏற்றுக்கொள்பவனே சிறந்த மாஸ்டர். எம்எஸ்வி மெட்டு போடுகிறார் என்றால் டிஎம்எஸ் பாணி என்னவோ அதில்தான் பாட வைப்பார். இசைக்கலைஞர்களின் வாத்தியங்களும் அவ்வளவே. சில கலைஞர்கள் சில இடங்களில் அவர்களுக்கேயுரிய அழகுகளை வெளிக்கொணர்வார்கள். அதனை அங்கீகரிப்பவன்தான் நிஜக்கலைஞன். கேபி அப்படித்தான். காட்சியைப் பற்றிச் சொல்லிவிட்டு 'இதனை உன்னுடைய பாணியில் நடி' என்பார். அதனால்தான் கமல்ஹாசன் போன்ற ஒரு சிறந்த நடிகர் கிடைத்தார். எல்லாமே 'ஒருவருடைய பாணியிலேயே' இருந்தால் அது வெகு சீக்கிரம் படுகுழிக்குத்தான் போகும்.
    ஆரம்பத்திலிருந்து நீங்கள் எந்தப் பதிவிலும் யாரையும் மோசமான வார்த்தைகளிலோ, காட்டமான வரிகளிலோ விமர்சிக்கவில்லை. சில பின்னூட்டங்களில் உங்களை அப்படிச் செய்யவைத்துவிட்டார்கள் என்றால் அது அவர்களின் தவறுதான். 'நான் எந்தவகையான ஆயுதம் எடுக்கவேண்டும் என்பதை என்னுடைய எதிரிதான் தீர்மானிக்கிறான்' என்று ஒரு போராளித் தலைவன் சொன்னது நினைவு வருகிறது. அங்கே எதிரி; இங்கே பதிவுலக நண்பர்கள்.
    இங்கே சில பின்னூட்டங்களில் நிறைய எழுத்துப்பிழைகள் பார்க்கும்போது கொஞ்சம் நிதானமாக டைப் செய்திருக்கலாமே அவர்கள் என்றுதான் நினைப்பேன். நீங்கள் சொல்லித்தான் 'கைகள் நடுங்குவதால்தான்' இத்தனை எழுத்துப்பிழைகள் என்ற செய்தியும் தெரியவருகிறது.
    இளையராஜா என்று ஆரம்பித்தாலேயே பாராட்ட வேண்டும் என்பதும், ரகுமான் என்று ஆரம்பித்தாலேயே திட்டித்தீர்க்கவேண்டும் என்பதும் எந்தவிதமான அராஜகம் என்று புரியவில்லை. எந்தவித சலசலப்பிற்கும் சரிந்துவிடாமல் நீங்கள் பாட்டுக்கு உங்கள் பாணியிலேயே எழுதுங்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  77. திரு பஷீர்,
    வருகைக்கு நன்றி. ராஜாவா ரகுமானா என்ற விவாதம் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இந்த ஒப்பீடே தேவையற்றது என்பது எனது அபிப்ராயம். இருவரும் வேறு விதமான இசை வடிவங்களை பின்பற்றுபவர்கள்.வணிக ரீதியாக ரஹ்மான் தொட்ட உயரங்கள் அதிகம். ஆனால் இசை ஞானம் என்றால் அது கண்டிப்பாக இளையராஜா என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.

    ReplyDelete
  78. அமுதவன் அவர்களே,
    பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி. ஒரு உண்மையான இசைக் கலைஞன் இசையின் மேன்மையை வெளிப்படுத்தும் விதத்தில் பல சிறப்பான இசையிழைகளை தன் பாடலில் கொண்டுவருவதே உண்மையானது. இதற்கு பல கலைஞர்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. ஒவ்வொரு கலைஞனிடமும் இருக்கும் தனித்தன்மையையும், அவர்களின் சிறப்பான இசையையும் ஒருங்கே கலப்பதாலேயே பாடல்கள் அபாரமாக அமைகின்றன. இதெல்லாம் இல்லாமல் ஒருவரே தனக்கு தோன்றியதை குறியீடுகளாக எழுதி அதை மற்றவர்கள் பின்பற்ற வைப்பது என்ன இசையோ புரியவில்லை. பாடல் என்பதே ஒரு கூட்டு முயற்சிதானே? The best of every musician contributes to the song. Or it will be a one man show...
    மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள். வழக்கம்போல போய்ச் சேரவேண்டியவர்களுக்கு இது போய்ச்சேராது என்பது மட்டும் தெரிகிறது.

    ReplyDelete
  79. பிரதீபன்5 October 2013 at 05:51

    திரு.அமுதவன்,

    /// தமிழ்த் திரைஇசையின் பிதாமகன் என்று சொல்லப்படும் பாபநாசம் சிவன்,
    தமிழ்த் திரையை தங்களது மந்திரக் குரல்களால் கட்டிப்போட்டுவைத்திருந்த தியாகராஜ பாகவதர், கிட்டப்பா, பி யு சின்னப்பா, டி ஆர் மகாலிங்கம், கண்டசாலா,
    இசைச் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படும் பல இசைப் புரட்சிகளை தொழில் நுட்பம் பெரிதாக இல்லாத காலத்திலேயே அறிமுகம் செய்து மேலும் தமிழ் திரையில் நாட்டுப்புற இசையை வெற்றிகரமாக அரங்கேற்றிய ஜி ராமநாதன்,......//- காரிகன்

    கிட்டப்பா சினிமாவில் பாடவில்லை என்பது இப்போது எனக்குத் தெரியும்.

    "பாருங்கள் காரிகன் கிட்டப்பாவைப் பற்றியெல்லாம் எத்தனைத் தவறான தகவல்கள் தந்து வரலாற்றை திசைமாற்றுகிறீர்கள்." - அமுதவன்

    தாழம்பூ சாட்சி சொல்ல வந்துவிட்டது.
    அரிசந்திரன் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரர் அமுதவன்
    வந்துவிட்டார் காரிகன் போடும் "மெட்டுகளை" நெறிப்படுத்த!..
    தமிழ் சினிமாபற்றி " உள்ளும் , புறமும் " தெரிந்த பெரியவர் அமுதவன் ஆயிற்றே.

    " நான் எந்த வகையான ஆயுதம் எடுக்கவேண்டும் என்பதை என்னுடைய எதிரி தான் தீர்மானிக்கிறான்." - அமுதவன்
    அது யாரோ சொல்லவில்லை சொன்னவர் சீனத் தலைவர் மாவோ.

    தீதும் நன்றும் பிறர் தர வாரா .

    அமுதவன் அவர்களே காரிகனை நிம்மதியாக இருக்க விடுங்க.

    ReplyDelete
  80. பிரதீபன்5 October 2013 at 06:05


    திரு.அமுதவன்,

    " இல்லாவிட்டால் வெறுமனே மிருணாள்சென் சொல்லிவிட்டார், மறுநாள் சென் என்ன சொன்னார் என்றெல்லாம் கேள்வி எழுப்புபவர்களாக இருப்பார்களா என்ன? "- அமுதவன்

    ஆமாம் ! எல்லாம் அவருக்கும் காரிகனுக்கும் தான் தெரியும்.அப்படித்தானே அமுதவன் சார்.

    " ஆரம்பத்திலிருந்து நீங்கள் எந்தப் பதிவிலும் யாரையும் மோசமான வார்த்தைகளிலோ, காட்டமான வரிகளிலோ விமர்சிக்கவில்லை. சில பின்னூட்டங்களில் உங்களை அப்படிச் செய்யவைத்துவிட்டார்கள் என்றால் அது அவர்களின் தவறுதான். " -அமுதவன்

    சார் , அவர் அப்படி சொல்லவில்லை ,சொன்னவர்களை அல்லவா திட்டியிருக்க வேண்டும்.

    - மூக்குப்பாடகி ஜென்சி என்ற ஒரு அவஸ்தையையும் எஸ் பி ஷைலஜா (எஸ் பி பியின் தங்கை) என்ற கொடுமையையும் மனோ என்ற எஸ் பி பி காப்பிகேட் டையும்,சித்ரா என்ற யாருக்குமே பொருந்தாத குரலை கொண்டவரையும்

    // தன் தகரக் குரலினால் கற்பழித்துக் கொலை செய்தவர் இளையராஜா // - // அவர் அறிமுகப்படுத்திய மிருகமான ..


    என்று பின்னூட்டம் இட்டவர்களை அல்லவா திட்டித் தீர்க்க வேண்டும்.அதற்க்கு மாறாக யாரை எல்லாம் காரிகன் பழித்து இகழ்கிறார் அமுதவன்.

    அதனை நீங்கள் ஏன் தட்டிக் கொடுக்கின்றீர்கள்.விஷயங்கள் தெரியாவிட்டால் அமுதாவைக் கேட்டு எழுதுங்கள் காரிகன்.

    ReplyDelete
  81. ரிம்போச்சே5 October 2013 at 07:00

    // ஒவ்வொரு கலைஞனிடமும் இருக்கும் தனித்தன்மையையும், அவர்களின் சிறப்பான இசையையும் ஒருங்கே கலப்பதாலேயே பாடல்கள் அபாரமாக அமைகின்றன. இதெல்லாம் இல்லாமல் ஒருவரே தனக்கு தோன்றியதை குறியீடுகளாக எழுதி அதை மற்றவர்கள் பின்பற்ற வைப்பது என்ன இசையோ புரியவில்லை. பாடல் என்பதே ஒரு கூட்டு முயற்சிதானே? The best of every musician contributes to the song. Or it will be a one man show...
    மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள். வழக்கம்போல போய்ச் சேரவேண்டியவர்களுக்கு இது போய்ச்சேராது என்பது மட்டும் தெரிகிறது.//

    அருமையாகச் சொன்னீர்கள் காரிகன். பீத்தோவன், மொஸார்ட், பாக் இவங்கெல்லாம்தான் உங்க கருத்தைக் கேட்காமப் போய் சேர்ந்திட்டாங்க.

    எப்படியோ சீக்கிரம் டிசம்பர் சங்கீத சீசன் தொடங்கப்போகுது. உங்க வாக்க ம்யூசிக் அகாடமி வாசல்ல கல்வெட்டா வெட்டி வெச்சீங்கன்னா அங்க வரப்போற வித்வான்கள் பாத்து தெளிவா நடந்துக்கவாங்க.

    ReplyDelete
  82. ரிம்போச்சே,

    உங்களின் இசை அறிவை எண்ணி வியப்படைகிறேன் நீங்கள் குறிப்பிட்டுள்ள மேற்கத்திய கிளாசிக் இசைஞர்கள் சினிமா பாடல்களுக்கு இசை அமைத்தவர்கள் கிடையாது. அந்த இசை வேறு வகையைச் சார்ந்தது. இளையராஜா சினிமா இசையில் அவர்களின் இசையை இணைத்து இரண்டையும் குழப்பி ஒரு புது வித இசையை உருவாக்கினார். கழுதைப் புலி போன்று. உங்களால் மேற்கத்திய செவ்வியலை புரிந்துகொள்ள முடியும் என்றால் இப்படி பேச மாட்டீர்கள். Bach,Mozart போன்றவர்களின் பெயர்களோடு எந்த இழிவான சினிமா இசைஞைரையும் ஒப்பீடு செய்வது மகா மகா மடத்தனம். கொஞ்சம் எல்லாம் தெரிந்துகொண்டு பேசுவது நலம். என்னை நக்கல் செய்வதாக நினைத்துக்கொண்டு நீங்கள் எழுதியிருப்பது உங்களின் மதியீனத்தையே காட்டுகிறது. பாவம். அடுத்த முறை சிறப்பாக முயற்சி செய்யவும்.

    ReplyDelete
  83. பிரதீபன்,

    நான் எதற்க்காக பின்நூட்டமிட்டவர்களை திட்டவேண்டும்? விமல் கூறிய கருத்துக்கு நான் பதிலளித்தது இவ்வாறு.
    விமல் சொன்னது:
    "நீங்கள் கிலாகிக்கும் ரகுமான் வந்ததற்கு பின்னால் தானே இந்த கோமாளித்தனங்கள் நடைபெறுகின்றன.கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு என்று ஒரு பெண் ஆன் குரலில் கத்தவில்லையா ? இதெல்லாம் ரகுமானிடம் சகஜம் அப்பா !! அவரை மட்டும் உச்சி முகர்கிரீர்களே"

    இதனால் சில உண்மைகளை தெரிவிக்கவேண்டியதாகவிட்டது. ஜென்சி என்பவர் அருமையாகப் பாடுபவர் என்று நீங்கள் நினைத்தால் உங்களின் ரசனையை எண்ணி பரிதாபப்படுகிறேன். ஆயிரம் மலர்களே மலருங்கள் என்று மூக்கால் அவர் பாடியது கேட்டு தமிழ்நாடே சிரித்தது. அவரை அப்போது பொதுவாக எல்லோருமே இப்படி மூக்கால் பாடுகிறாரே என்றே விமர்சித்தார்கள்.ஜானி படத்தின் என் வானிலே பாடலின் பல்லவியில் இறுதியில் ஊர்வலம் என்று அவர் நாசிக்குரலில் பாடும்போது பாடலின் சுவையே கெட்டுப்போகிறது. ஷைலஜா ஒன்றும் மிக சிறப்பாகப் பாடுபவர் கிடையாது. நான் ஒன்றும் அவர்களைப் பற்றி தரக்குறைவாக சொல்லவில்லை. உண்மையையே சொல்லியிருக்கிறேன்.உங்களால் என் பதிவுகளில் உள்ள உண்மைகளை எதிர்த்து எதுவும் சொல்ல முடியாத இயலாமையில் என்னை பற்றி அவதூறு சொல்வது உங்களுக்கு சுலபமாக வரும் யுக்தி. ராஜா ரசிகர்களுக்கு வேறென்ன தெரியும்? புத்திசாலித்தனமாக விவாதம் செய்யவா முடியும்? சரக்கு இல்லாவிட்டால் இப்படி புகுந்து விளையாடவேண்டியதுதானே? இதெல்லாம் நான் எதிர்பார்த்ததுதான். பறவைகள் பறக்கின்றன. புழுக்கள் நெளிகின்றன.

    ReplyDelete
  84. பிரதீபன்5 October 2013 at 10:58

    காரிகன் அவர்களே
    " நான் எதற்க்காக பின்நூட்டமிட்டவர்களை திட்டவேண்டும்? " காரிகன்

    அப்போ பாடகர்களைக் கூடாத வார்த்தையால் திட்டியதை சரி என்கிறீர்களா?
    இவை மட்டும் தான் உங்கள் வார்த்தை விருப்பமா?நல்ல ரசனை தான்.

    ராஜா ரசிகர்களுக்கு வேறென்ன தெரியும்? ராஜா ரசிகர்களுக்கு வேறென்ன தெரியும்?
    என்கிறீர்களே இப்படி எல்லாம் பாடகர்களை அசிங்கம் பண்ணி எழுத முடியாது தான்.ஒத்துக்கொள்கிறோம்.

    இங்கே யாரோ சொன்னது போல இசையில் நல்ல ரசனை தெரியவில்லை என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது.இரட்டைப் பிரவிபோல் உங்களை தூண்டி விடுகிறாரே அவருக்கும் இல்லை என்பது நமக்கு தெரியும்.
    கேள்விச் செவியன்கள் இருவரும்.

    ReplyDelete
  85. " பீத்தோவன், மொஸார்ட், பாக் இவங்கெல்லாம்தான் உங்க கருத்தைக் கேட்காமப் போய் சேர்ந்திட்டாங்க. "

    அருமையாகச் சொன்னீர்கள் ரிம்போச்சே,

    "எப்படியோ சீக்கிரம் டிசம்பர் சங்கீத சீசன் தொடங்கப்போகுது. உங்க வாக்க ம்யூசிக் அகாடமி வாசல்ல கல்வெட்டா வெட்டி வெச்சீங்கன்னா அங்க வரப்போற வித்வான்கள் பாத்து தெளிவா நடந்துக்கவாங்க." - ரிம்போச்சே

    இசை என்பது கூட்டு முயற்சியாம் கூழ் முட்டை முயற்சி?!
    என்ன ரசனை என்ன அறிவு,உங்களுக்கு ராஜாவை வசை பாட விருப்பம் என்றால் ஏன் இந்த கோமாளித்தனமான பதிவுகள்.?
    ரகுமான் சி.டீ க்களில் வெளியிட்ட அத்தனை பேரையும் பிளேன் ஏத்தி அந்த " ஒஸ்காரை " வாங்கிக் கொடுத்திருக்கலாம்.

    ஒரு காரியக் கிறுக்கனுக்கு[ ரகுமான் ] எத்தனை பில்டப்.

    //இளையராஜா சினிமா இசையில் அவர்களின் இசையை இணைத்து இரண்டையும் குழப்பி ஒரு புது வித இசையை உருவாக்கினார்.// காரிகன்
    என்ன பெரிய மேதாவி பாருங்கள்.
    இவருக்கு தான் என்ன எழுதுகிறேன் என்றே புரியவில்லை.என்ன செய்வது " அந்த ஞானப்பிரகாசத்தைத் தான் கூப்பிட வேண்டும்."

    ReplyDelete
  86. அமுதவன் என்கிற சினிமா வட்டாரத்தின் நெளிவு சுழிவுகள் எல்லாம் அறிந்த பெரியவருக்கு பின்னணி ,இசை ,பற்றி ஒன்றும் தெரியவில்லை என்பது தெட்ட தெளிவாகத் தெரிகிறது.

    கொஞ்சம் புரிகிற மாதிரி பாவனை காட்டும் காரிகனுக்கு அவர் வக்காலத்து வாங்குவதால் அவரும் ஆமாம் போடுவதால் ,அவருக்கும் புரியவில்லை என்றே நினைக்கின்றேன்.

    ஏதோ வாத்தியங்களில் துண்டு துண்டாக போட்டு பின்னணி இசை போட்டார் என்று அமுதவன் என்கிற பெரியவர் புரிந்து வைத்திருக்கின்றார்.அவர் தன்னாலும் ,காரிகனாலும் பதில் சொல்ல முடியவில்லை என்றால் சிம்பொனி ஏன் வெளிவரவில்லை என்று பெரிய கெட்டிக்காரன் போல் கேட்பார்.
    இதை விளக்க எனக்கும் அதிகம் தெரியாது.இருந்தாலும் இந்த அமுதவன் என்ற பேபிக்கு விளக்கலாம் என்கிறேன்.
    ராஜாவின் இடையிசைக் கேட்கும் ஒவ்வொருவருக்கும் தெரியும் அதன் அற்ப்புதம்.அந்த இசையிசைகளில் வரும் வாத்தியங்களின் இசை ஓட்டங்கள் சிம்பொனியில் விரிவாக செய்யப்பட்டிருக்கும்.
    ராஜ அமைத்த சிம்போனியை கண்டக் செய்தவர் சென்னையில் நடந்த பாராட்டுவிழாவில் கலந்து கொண்டார்.
    சிம்பொனி வரவில்லை என்றாலும் ராஜாவுக்கு அந்த திறமை இருக்கிறது என்பதை உலகம் நன்கு அறியும். how to name it , how to blame it போன்றவையும் அதையும் நிரூபிக்கும்.
    எஸ்.பி.பாலசுப்ரமணியம் முதன் முதலில் பாடியது ஹோட்டல் சொர்க்கம் என்ற படத்திற்காக.இசைமயமைத்தது எம்.எஸ்.வீ. ஆனால் படம் வெளிவரவில்லை என்றார்.[இதை அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் சொன்னார் ]அதற்காக அவர் பாடவில்லை என்று அர்த்தமா?

    அமுதவன் ஐயா
    நடிப்பு , இசை இரண்டும் கலை தான்.இருந்தாலும் அதற்க்கேன தனித்தனியே விதிகள் இருக்கின்றன.
    " கேபி அப்படித்தான். காட்சியைப் பற்றிச் சொல்லிவிட்டு 'இதனை உன்னுடைய பாணியில் நடி' என்பார்." அமுதவன்
    கே.பி. அப்படித்தான் சொல்லமுடியும்.நடிகனால் நூறு வீதம் அப்பிடியே நடித்து விட முடியாது.அதன்அளவு அது தான்.அப்படி சொல்லி கொடுத்து நடி என்று சொல்லி நடிக்க வரா விட்டால் வேறு யாராவது வந்து தான் நடித்துக் கொடுக்க வேண்டும்.அல்லாவிட்டால் இதுவே போதும் என்று ஒப்பு கொள்ள வேண்டியது தான்.

    இசை அப்படியல்ல.நோட்ஸ் எழுதினால் அதை அப்படியே 200 வருடங்கள் கழித்தும் வாசிக்க முடியும்.ஒரு இசைகலைஞன் தனது எண்ணத்தை அங்கே அதன் நெறியில் நின்றும் ,தனது கற்பனையின் அழகையும் வடிப்பான்.
    இது புரியாத மேதாவியை என்ன என்பது.

    அதி புத்தி சாலி என்ற எண்ணம்.கோமாளித்தனமான கேள்வி.
    ஐயோ பாவம்.

    ReplyDelete
  87. \\சிம்பொனி வரவில்லை என்றாலும் ராஜாவுக்கு அந்த திறமை இருக்கிறது என்பதை உலகம் நன்கு அறியும். how to name it , how to blame it போன்றவையும் அதையும் நிரூபிக்கும்.\\

    முதலாவதைப் பிறகு பார்ப்போம். இந்த இரண்டாவது பற்றி கொஞ்சம் விவரமாகச் சொல்லமுடியுமா?

    \\எஸ்.பி.பாலசுப்ரமணியம் முதன் முதலில் பாடியது ஹோட்டல் சொர்க்கம் என்ற படத்திற்காக.இசைமயமைத்தது எம்.எஸ்.வீ. ஆனால் படம் வெளிவரவில்லை என்றார்.[இதை அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் சொன்னார் ]அதற்காக அவர் பாடவில்லை என்று அர்த்தமா?\\
    அவர் பாடியிருந்தாலும் 'ரெஃபரன்ஸுக்காக'வெல்லாம் அந்தப் பாடலைக் குறிப்பிட்டுக்கொண்டிருக்க முடியாது. வெளிவந்திருந்தால் மட்டுமே, அங்கீகரிக்கப்பட்டிருந்தால் மட்டுமே அதனைக் குறிப்பிட்டுப் 'பெருமையாகப்' பேசமுடியும்.
    நீங்கள் ஐஏஎஸ் பரீட்சை எழுதிவிட்டீர்கள் என்பதால் உங்களை ஐஏஎஸ் என்றா சொல்லமுடியும்? தேர்வுபெற்று அங்கீகரிக்கப்பட வேண்டாமா?
    எம்.பி. தேர்தலுக்கு நின்று தோற்றுப்போய்விட்டவன் எல்லாம் தன்னை எம்.பி என்றா சொல்லிக்கொண்டு அலைவான்?
    நான் கேள்வி கேட்கப்போய்த்தானே இப்போது யாரும் சிம்பனி பற்றிப் பேசுவதில்லை. இல்லாவிட்டால் சிம்பனி அமைத்தார் உலகத்தையே புரட்டிப்போட்டுவிட்டார் என்று எத்தனை அலப்பறைகள்?
    நீண்ட நாட்களுக்கு எல்லாரையும் ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது என்பதை உணருங்கள்.

    ReplyDelete
  88. விமல்,
    உங்கள் எழுத்தில்தான் பிழைகள் என்றால் என் வார்த்தையைப் படிப்பதிலுமா? நான் பாடல் ஒரு கூட்டு முயற்சி என்றுதான் சொல்லியிருக்கிறேன். இசை அல்ல. இரண்டும் தொடர்புடையவை ஆனால் வெவ்வேறானவை.

    "இசை என்பது கூட்டு முயற்சியாம் கூழ் முட்டை முயற்சி?!
    என்ன ரசனை என்ன அறிவு,உங்களுக்கு ராஜாவை வசை பாட விருப்பம் என்றால் ஏன் இந்த கோமாளித்தனமான பதிவுகள்.?"

    இளையராஜா செய்து வரும் இசைக்கு வேண்டுமானால் கூழ் முட்டை முயற்சி என்பது பொருத்தமாக இருக்கும். அவர் இசையை அப்படித்தான் பொடிமாஸ் போடுகிறார்.

    "ரகுமான் சி.டீ க்களில் வெளியிட்ட அத்தனை பேரையும் பிளேன் ஏத்தி அந்த " ஒஸ்காரை " வாங்கிக் கொடுத்திருக்கலாம்."

    அப்படியே வெளிவராத சிம்பனியை இசைத்த அனைவருக்கும் மேஸ்ட்ரோ,இசைஞானி என்ற பட்டங்களை கொடுத்துவிடலாம்தானே? எப்படி வசதி?

    "ஒரு காரியக் கிறுக்கனுக்கு[ ரகுமான் ] எத்தனை பில்டப்."

    பிறக்காத குழந்தைக்கு பெயர் வைத்து,சீராட்டி பாராட்டி வளர்த்துவரும் புண்ணியவானுக்கு என்ன பெயர் சரியாக இருக்கும் என்று நீங்களே சொல்லிவிடுங்கள். இளையராஜா நீர்த்துப்போன வகையில் மேற்கத்திய இசையை நம்மிசையோடு கலந்தார். அதாவது எண்ணையையும் தண்ணீரையும் கலப்பது போல. அதனால்தான் அவரின் முக்கால்வாசி பாடல்களில் பெரும்பாலும் இசையின் எல்லா கூறுகளும் எதோடும் ஒட்டாமல் தன் இஷ்டத்திற்கு ஒலிக்கும். இது போன்ற உருப்படி இல்லாத இசைக்கு ஆயிரம் பாராட்டுக்கள்.வெற்றுக் கூச்சல்கள். இளையராஜாவுக்கு சிம்பனி அமைக்கும் திறமை இருக்கிறதாம். சிம்பனி என்ன சினிமாவில் வரும் பின்னணி இசையா? வயலினை இரண்டு இழுப்பு சேர்த்து இழுத்துவிட்டு நேராக சிம்பனி அமைக்கப் போய்விடலாம் போலிருக்கிறது. எத்தனை சுலபம்? சிம்பனி என்றால் என்ன என்பதை தெரிந்துகொண்டு பேசுங்கள்.

    ReplyDelete
  89. காரிகனுக்கும் அமுதவனுக்கும்

    இசை பற்றிய அடிப்படை அறிவே இல்லை.
    " சிம்பனி என்ன சினிமாவில் வரும் பின்னணி இசையா? " காரிகன்
    சினிமாவில் வரும் சிறிய ஹார்மொனி இசையை புரிந்து கொள்ள முடியாத " வசை இரட்டையர்கள் " ராஜாவை பற்றி எழுதுவதை பார்த்தால் எந்த பக்கத்தால் சிரிப்பது என்று புரியவில்லை.
    பட்டு சேலையில் நூலை மாட்டும் பார்க்கும் முட்டாள்த்தனமான "அறிவாளிகளை " என்னவென்பது.?

    இசையின் அரிச்சுவடி பாடம் நடத்த எனக்கு இஸ்டமில்லை.

    அப்போ டிசம்பர் சங்கீத சீசனில் இருக்கா என்று நாம் கேட்கலாமா..?உயர்ந்த சங்கீதகாரர்கள் ராஜாவை அங்கீகரிக்கவில்லை என்று வாய் மலர்ந்தருளிய காரிகனைப் பார்த்து நாம் கேட்க் நாம் ஒன்றும் முட்டாள்களில்லை.

    சினிமாவில் இளையராசாவை பின்னணி இசையில் மிஞ்ச யாருமில்லைஎன்பது ஊர் அறிந்த செய்தி.
    உங்கள் மரமண்டைக்கு ஏறவில்லை என்றால் அதற்க்கு யார் பொறுப்பு.மீண்டும் ,மீண்டும் ராஜாவின் இசையைக் கேட்டாவது பயிற்சி எடுங்க.பிறகு சிம்போனியை பற்றி பேசலாம்.

    சிம்பொனி வெளிவரவில்லை என்றால் இசையமைக்கவில்லை என்று அர்த்தமில்லை என்பது துப்பறியும் பத்திரிகையாளர் அமுதவருக்கு ஏன் புரியவில்லை.
    கங்கைஅமரன் ,இளையராஜவுடன் கோபித்துக் கொண்ட பின் தான் இசையமைக்கப் போனார் , அமரனின் மெட்டுக்களை எல்லாம் பயன்படுத்தினார் என்றும் பொய்களை கட்டவிழ்த்து விடவும் ,

    " தமிழ்த் திரையை தங்களது மந்திரக் குரல்களால் கட்டிப்போட்டுவைத்திருந்த தியாகராஜ பாகவதர், கிட்டப்பா, பி யு சின்னப்பா, டி ஆர் மகாலிங்கம்" - என்ற காரிகனின் உளறலுக்கும் ஒத்து ஊதும் கோமாளித்தனத்தையும் நாம் சும்மா ஒதுக்கிவிட முடியாது.
    " இப்போது யாரும் சிம்பனி பற்றிப் பேசுவதில்லை. "அமுதவன்

    சரி ,அப்படியே வெளிவராத இசையை பற்றிய பேச வேண்டாம் என்றால் வெளிவந்த இசையை பேச அமுதவன் தயாரா,? பாரதி , மோகமுள் போன்ற படங்களில் வந்த இசை ,பாடல்கள் பற்றி எழுத முடியுமா ?

    ராஜ அமைத்த சிம்பொனி பற்றி விழாவில் அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் பேசினார்கள்." குமுதம் ", " விகடன் " பத்திரிகையாளரின் துப்பு துலக்கலை அங்கே போய் செய்திருக்கலாம். அங்கே போய் கேட்டிருக்கலாம் " ஏன் செய்யாத சிம்பொனிக்கு விழா என்று? அல்லது இப்போதாவது தனது பத்திரிகைத் துறை அனுபவத்தை வைத்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை செய்து " உண்மை"யை நமக்குப் புரியவைக்கலாம்.

    ராஜா ரசிகர்களை வாய் பொத்த செய்யலாம்!! அது தானே உங்கள் பேராசை அமுதவன்..

    வெளிவராத ஒரு இசைக்கு ஏன் இவ்வளவு எதிர்பார்ப்பு என்பது தான் அமுத்வனைக் குடையும் வெறுப்பு.

    வெளிவந்து பரிசை வாங்கிய போது " இவ்வளவு தானா ஒஸ்கார் !?" என்று கருத்து உலா வந்து நகைப்புக்குள்ளானதும், "வெளிவராத ஒரு இசை" பற்றிய ஆச்சரியமும் ,எதிர்பார்ப்பும் இருப்பது அவரவர் தராதரம் தெரிந்ததாலேயே.

    இங்கே காரிகனினதும் ,அமுதவனினதும் இசை தராதரம் தெரிந்தது போல.!

    அமுதவன் சுஜாதவிடமே கேட்டு அறிந்திருக்கலாம்.

    ReplyDelete
  90. காரிகன் அவர்களே

    ஜென்சி , சைலஜா போன்ற பாடகிகளை நாகரீகமில்லாமல் குறை சொல்லி இருக்கிறீர்கள். அவர்களும் நல்ல பாடல்களை தரமாக நயமாக பாடியவர்கள்தான். எத்தனையோ ரசிக உள்ளங்களை கொள்ளை கொண்டவர்கள்தான். சுசீலா , ஜானகி , சித்ரா அளவிற்கு சிகரம் தொட்டவர்கள் இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம் . கேவலமாக எழுதக் கூடாது . ஜென்சியின் நாசிக் குரலிலும் ஒரு அழகு இருந்ததால்தான் இசை அமைப்பாளர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள் . "தேவனின் கோயில்" என்ற அறுவடை நாள் பாடலை அழகாக பாடி இருப்பார் ஜென்சி .

    சைலஜா அவர்களின் " ஆசைய காத்துல தூது விட்டு ","ராசாவே உன்ன நான் எண்ணித்தான் " போன்ற அற்புதமான பாடல்களை காலம் மறந்து விடாது . அவர் குரலும் தனித்துவம் வாய்ந்தது . வாய் கூசாமல் யாரையும் குறைத்துப் பேசுவது உங்களுக்கு கை வந்த கலை போலிருக்கிறது . உங்களின் ஆவேசம் உங்களின் பின்னூட்டத்திலேயே தெரிகிறது .

    ReplyDelete
  91. ஹல்லோ காரிகன்

    நீங்கள் சொன்னது கீழே !

    /// உங்களின் இசை அறிவை எண்ணி வியப்படைகிறேன் நீங்கள் குறிப்பிட்டுள்ள மேற்கத்திய கிளாசிக் இசைஞர்கள் சினிமா பாடல்களுக்கு இசை அமைத்தவர்கள் கிடையாது. அந்த இசை வேறு வகையைச் சார்ந்தது. இளையராஜா சினிமா இசையில் அவர்களின் இசையை இணைத்து இரண்டையும் குழப்பி ஒரு புது வித இசையை உருவாக்கினார். கழுதைப் புலி போன்று. உங்களால் மேற்கத்திய செவ்வியலை புரிந்துகொள்ள முடியும் என்றால் இப்படி பேச மாட்டீர்கள். Bach,Mozart போன்றவர்களின் பெயர்களோடு எந்த இழிவான சினிமா இசைஞைரையும் ஒப்பீடு செய்வது மகா மகா மடத்தனம்.///

    ' I don't like tamil picture ; I like only english picture' என்ற இந்த 'காதலிக்க நேரமில்லை ' வசனம் உங்களுக்கு ரொம்ப பொருந்தும் காரிகன் . சில நூறு வருடங்களுக்கு முன் வந்த ஆங்கில மொழியும் ஆங்கில இசையும் உங்கள் பார்வையில் மேன்மையானது . ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றிய நம் மொழியும் இசையும் இழிவானதா? சினிமா பாடல்களுக்கு இசை அமைத்தவர்கள் எந்த விதத்தில் அவர்களை எல்லாம் விட குறைந்து போனார்கள் . ஒப்பிட்டு பேசுவது மடத்தனம் என்றால் நீங்களும் அதைதானே செய்து கொண்டு இருக்கிறீர்கள் . ரகுமானை இளையராஜாவோடு ஒப்பிடவில்லையா? நம் நாட்டையும் நமது இசை கலைஞர்களையும் அசிங்கப்படுத்துவது என்ன ஒரு மனோபாவம் . உங்களை மாதிரி நிறைய பேர் இருக்கிறார்கள் - திண்ணைப் பேச்சு வீரர்கள் !

    மேல் நாட்டு கலைஞர்களின் இசை தூண்டு கோலாக கொண்டு இளையராஜா செய்த அதிசயங்களை வேறு வேறு மிருகங்களின் கலப்பில் உருவான கழுதை புலியோடு ஒப்பிட்டால் இளையராஜாவிற்கு முன் வந்த எம். எஸ். வி , எ . எம் . ராஜா அவர்களின் இசையையும் அப்படியே ஒப்பிடலாம் . சினிமாவிற்கு என்று தனி இசை என்பதே கிடையாது . பல இசை கலவைகளின் தொகுப்பு . அப்படி என்றால் எல்லோரும் கழுதைப் புலிகளே! ரகுமான் பெரிய கழுதைப் புலி !







    ReplyDelete
  92. விமல்,
    கருத்துக்களோடு மோத முடியாத உங்களின் பலவீனம் உங்கள் எழுத்துக்களில் அப்பட்டமாகத் தெரிகிறது. மீண்டும் மீண்டும் தனி மனித தாக்குதலை தொடர்கிறீர்கள்.

    "உங்கள் மரமண்டைக்கு ஏறவில்லை என்றால் அதற்க்கு யார் பொறுப்பு."

    இவ்வளவு கொதிக்கும் நீங்களே ராஜாவைப் பற்றி பத்தி பத்தியாக அவரின் வெளிவராத சிம்பனி இசை, பின்னிசை, இடையிசை, முன்னிசை,பின்னணிஇசை என்று பதிவுகள் எழுதலாமே?அதில் உங்களின் ஆதாரப்பூர்வமான உண்மைகளை முன்வையுங்கள். இப்படி காட்டுக்கூச்சல் தேவையில்லை. உங்களின் எதிர்ப்பு எல்லாமே நான் இளையராஜாவை நேர்மையாகவும் நியாயமாகவும் விமர்சிப்பதால்தான். மருந்து சாப்பிட்ட எலி அங்கும் இங்கும் ஓடுவதுபோல உங்கள் கொதிப்பு உங்களை அல்லாட வைக்கிறது.என் மீது அமுதவன் மீது ரஹ்மான் மீது என்று ஏதேதோ முட்டிப்பார்கிறீர்கள்.

    "வெளிவராத ஒரு இசைக்கு ஏன் இவ்வளவு எதிர்பார்ப்பு என்பது தான் அமுத்வனைக் குடையும் வெறுப்பு".

    அப்படியில்லை. வெளியேவே வராத. அதாவது என்றைக்கும் அது நடக்காது. இளையராஜா இசை அமைத்தாரா என்பது பிரச்சினை இல்லை. அது சிம்பனியா என்பதே கேள்வி. உங்களைப் போன்ற இசை "அறிஞர்களுக்கு " சிம்பனி ஒரு சுலபமான இசை. கிடார் ட்ரம்ஸ் என்று எதுவுமில்லாமல் நீண்ட நேரம் ஒற்றை வயலின் அல்லது கூட்டு வயலின் இசை வந்தால் அதை சிம்பனி என்று முடிவுகட்டிக்கொண்டு குதிப்பீர்கள்.76 றில்தான் தமிழ்த்திரையிசை துவங்கியது என்று முட்டாள்தனமாக நம்பும் நீங்களெல்லாம் இசை பற்றி எனக்கு பாடம் நடத்தவேண்டுமா என்ன? அவசியமேயில்லை. ராஜா புகழ் பாடும் பாடல்களை கேளுங்கள். ரஹ்மானைப் பற்றி உங்களின் எழுத்து கடைந்தெடுத்த வயிற்றெரிச்சல். சிரிப்புத்தான் வருகிறது. பாயை பிராண்டிக்கொண்டிருங்கள். உங்களால் வேறென்ன செய்யமுடியும்?

    ReplyDelete
  93. காரிகன் அவர்களே
    தப்பும் தவறும் பொருளற்ற ஒப்பீடும் கொண்ட உங்கள் கொண்ட கட்டுரைகளில் ராஜாவின் வெறுப்பு நெடியை குறையுங்கள்.பாடகர்களைப் பற்றி வீணாக அவதூறு செய்யாதிருங்கள்.

    சைலஜா பாடிய "சோலைக்குயிலே காலைக்கதிரே " கேட்கவில்லையா ? ஐயோ பாவம்.

    உங்களை நினைக்கப் பரிதாபமாக இருக்கிறது.

    அமுதவன் என்பரின் முதுகை நீங்கள் சொறிவதும், உங்கள் முதுகை அவர் சொறிவதும் ஒன்றும் நமக்கு புதிதில்லை.சொரிந்து கொண்டே இருங்கள்.

    நாம் கேட்ட கேள்விகளுக்கு எப்போதாவது முறையாக பதில் தந்ததுண்டா சொல்லுங்க?அதனால் தான்
    நீங்கள் ஆப்பு இழுத்த குரங்கு போல் தவிக்கின்றீர்கள்.

    " 76 றில்தான் தமிழ்த்திரையிசை துவங்கியது என்று முட்டாள்தனமாக நம்பும் நீங்களெல்லாம்.." காரிகன்

    சும்மா புளுக வேண்டாம் .இப்படி நான் நம்பினேன் என்று எனது பதிலில் எங்கேயாவது காட்ட முடியுமா ..? சும்மா கரடி விட வேண்டாம் !

    வதந்தி எழுத்தரை பின்பற்றுங்கள். நல்ல முன்னேற்றம்.
    இசை விளங்கிடும்.

    இப்போ ஏதோ ஒரு கதை போய்க்கொண்டிருக்கிறது மிஸ்கின் படத்திற்கு சிறப்பான பின்னணி இசை என்று , சிலவேளை கங்கை அமரன் தான் இசையமைத்தாரோ என்ற எண்ணம் உங்கள் ஞானத் தந்தைக்கு வரலாம் , கேட்டு சொல்லுங்கள்.

    ReplyDelete
  94. காரிகன்

    உங்கள் இசை அறிவு என்னை மிகவும் வியக்க வைக்கின்றது, பின்னூட்டங்கள் அற்புதம் அபாரம். உங்கள் வார்தை விருப்பங்கள் மிகவும் அருமையனவை. அடுத்த அத்தியாயத்தை எதிர்பார்து காத்திருக்கிறேன், வாழ்க வளர்க.

    http://www.youtube.com/watch?v=08MNu20rf7U

    இந்த பாடலையும் பார்த்து மகிழுங்கள்.

    ReplyDelete
  95. http://www.radiospathy.com/2011/05/blog-post.html

    பதில்- நிச்சயமாக. நிச்சயமாக இருந்தது. அவர் ஏற்கனவே வந்து செல்வமணி உனக்கு வந்து என்னோட வால்யூ தெரியலை. நீ வந்து பாட்டே இல்லாம படம் எடுத்தாய். இப்ப பாரு இந்தப் படத்திலே ஒன்பது பாடல் வைச்சிருக்கேன். இப்ப பாரு இளையராஜா இளையராஜா என்டு சொல்ல வைக்கிறேன்னு சொல்ல வைக்கிறேன்னு சொல்லி அவர் சொல்லிலே அதை ஒரு பாட்டாக வைச்சு சொன்னாரு. ஆனால் இளையராஜா வந்து உலகத்திலேயே மிகப் பெரிய இசையமைப்பாளர்னு ஏற்றுக்கிட்டேன்னா இந்த ஒன்பது பாடல்களையும் காலை 6.45க்கு போட்டு start பண்ணினோம்;. எட்டு மணிக்கு வேற படத்தோட டியூன்ஸ்ல அவரு இருந்தாரு. அங்க அவங்களுக்கு ஒன்பது மணிக்கு பணி ஆரம்பிக்கும். அதுக்கு முன்னாடி எனக்கு டியூன்ஸ் கரெக்ட் பண்ணிட்டு போகணும். இந்த ஒன்பது பாட்டும் குறைஞ்சபட்சம் ஒரு முக்கால் மணி நேரம் ஒரு மணிக்குள்ள கொடுத்திட்டு அவரு டிபன் சாப்பிட்டு வேலைக்கு போனாரு. இந்த உலகத்தை கலக்கிய இந்த ஒன்பது பாட்டுமே ஒரு முக்கால் மணி நேரத்தில தான் டியூன் செய்யப்பட்டதுன்னா மிகப் பெரிய என்னைப் பொறுத்தவரைக்கும் அது ஒரு உலக சாதனை தான்.

    கேள்வி- கண்டிப்பாக. இப்போதெல்லாம் நாட்கணக்கில் எல்லாம் எடுக்கக் கூடிய பாடல் பதிவுகளென்பது...
    இடையிலே குறுக்கிட்டு சொல்கிறார்...(நாட்கணக்கில் இல்ல வாரக்கணக்கில மாதக்கணக்கில இந்த கம்போஸ் வந்து அங்க போறாங்க இங்க போறாங்க வெளிநாடு போறாங்க ஊட்டி போறாங்க காஷ்மீர்
    போறாங்க இல்ல தாய்லாந்து போறாங்க அமெரிக்கா போறாங்க எங்கேயும் போகாமல் பிரசாத் ரெக்காடிங் தியேட்டர்ல ஒரு சின்ன ரூம்ல எனக்கு வந்து ரெக்கார்ட் பண்ணிக் கொடுத்தாங்க.)

    ReplyDelete
  96. http://meedpu.blogspot.in/2010/02/blog-post_03.html

    Please read the Full Article.

    அவரைப் பலர் ஆணவக்காரர், கோபக்காரர் என்று பலவாறு என்னிடம் குறைக்கூறியிருக்கிறார்கள். உங்களின் மூலம் இப்பொழுது பணம் பண்ணப் பார்க்கிறார், என்றெல்லாம் நகைத்திருக்கிறார்கள். எதுவும் இல்லாமல் சென்ற, அவருடன் எந்த நெருங்கிய உறவோ, நட்போ இல்லாத எனக்கு, யாரிடமிருந்தும் சிபாரிசோ, அறிமுகமோ இல்லாத எனக்கு நம்பிக்கைத் தந்து, ஆல்பம் தந்து என் கனவுகளுக்கு வழியமைத்துக் கொடுத்த அந்த இளையராஜா, நான் கேள்விப்படாத, படித்திராத, இளையராஜா.

    ReplyDelete
  97. விமல்,
    முதலில் உங்கள் பின்னூடங்களில் வார்த்தைகளை பிழையின்றி தட்டச்சு செய்யக் கற்றுக்கொள்ளுங்கள். சில சமயங்களில் குத்துமதிப்பாகத்தான் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை புரிந்துகொள்ளமுடிகிறது.

    ஒருவரை மற்றொருவர் பாராட்டினால் அதற்கு முதுகு சொரிவது என்ற இலக்கியத் தமிழ் கொண்டு பொருள் காட்டுகிறீர்கள்.அப்படியானால் வேட்டைக்காரன்,பிரதீபன்,ரிம்போச்சே சால்ஸ் போன்றவர்களின் முதுகுகளை நீங்கள் சொரிந்து கொண்டிருந்தீர்கள் போலும் அவர்களும் அதையே உங்களுக்குச் செய்தார்கள் என்று வைத்துக்கொள்ளலாமா? இளையராஜா என்று வந்தும் இப்படி ஆத்திரம் கண்களை மறைக்கும் என்பது தெரிந்ததுதான்.இதற்குபெயர்தான் பேடித்தனம்.

    ஷைலஜா பாடிய எதோ ஒரு பாடலை குறிப்பிட்டு அதை என்னை கேட்கச் சொல்லும் அதிமேதாவியே நானும் இதே போன்று சில பாடல்களைக் குறிப்பிட்டு பட்டியல் போடட்டுமா? அதற்கு என்ன பதில் உங்களிடமிருந்து வரும் என்று எனக்குத் தெரியும். அதை அப்படியே உங்களுக்கான பதிலாக எண்ணிக்கொள்ளுங்கள்.

    "இப்போ ஏதோ ஒரு கதை போய்க்கொண்டிருக்கிறது மிஸ்கின் படத்திற்கு சிறப்பான பின்னணி இசை என்று "

    உண்மைதான். அது கதைதான். யுத்தம் செய் படத்திலும் கே என்னும் புதியவர் இதேபோன்ற மேற்கத்திய இசையை செய்திருந்தார். நன்றாகவே இருந்தது. அப்போது வெகு சிலரே அவரைப் பாராட்டினார்கள்.ஆனால் நமக்குத்தான் பிராண்ட் நேம் தேவைப்படுகிறதே. இளையராஜா என்றதும் கூச்சல் ஜாஸ்தியாகிறது. இரண்டு மூன்று இடங்களைத் தவிர இளையராஜாவின் இசை காட்சியமைப்புடன் சேராமல் அதுபாட்டுக்கு எங்கோ செல்கிறது. மேலும் படம் முழுவதும் ஒரே மாதிரியான வயலின் நம்மை தொந்தரவு செய்கிறது. முதல் முறை நன்றாக இருந்தாலும் கேட்கக் கேட்க அலுப்பு தட்டும் பாணியில் இருப்பதை கண்டிப்பாக சொல்லவேண்டும். இதைஒருவர் pure western classical என்று வேறு சிலாகித்திருந்தார். என்ன புரிதலோ? ஞான வெறுமைகள்.

    ReplyDelete
  98. பிரதீபன்7 October 2013 at 07:32

    திரு.சண்முகநாதன்

    இது போன்ற பாடல்களை காரிகன் கேட்டிருக்க வாய்ப்பில்லை போலும்.கேட்டிருந்தால் இவ்வளவு குப்பையை ராஜா மீது கொட்டியிருக்கமாட்டார்.

    சிலவேளை காட்சியில் வரும் நாய்கள் பாடலைவிட நன்றாக இருக்கிறது என்று எழுத கூடியவர் தான் இந்த விமர்சகர்.

    " ..இளையராஜா சினிமா இசையில் அவர்களின் இசையை இணைத்து இரண்டையும் குழப்பி ஒரு புது வித இசையை உருவாக்கினார்." - காரிகன்
    இது தன்னை இசை விமர்சகர் என்பவர் உதிர்த்த முத்துக்கள்.

    ராஜாவை திட்டி எழுதி பேர் எடுக்க எத்தனை கோமாளிகள்.!!!??

    ReplyDelete
  99. அது உண்மைதானே. எதைஎதை எங்கெங்கு சேர்க்கணுமோ அப்படி இல்லாம கண்ணா பின்னாவென்று சக்கரப் பொங்கலுக்கு வடகறி காம்பினேஷன் மாறி அள்ளிவிட்டா வேற என்னத்த சொல்றதாம்?

    ReplyDelete
  100. விமல் சகாக்கள் படிக்கவும்

    http://chennaipithan.blogspot.com/2013/10/blog-post_7.html

    ReplyDelete
  101. ஹலோ காரிகன்

    நாங்கள் அவ்வளவாக ஒருவரை ஒருவர் முதுகு சொரிந்து கொண்டதில்லை . நீங்களும் 'ஆமாம் சாமி ' அமுதவனும் ஒருவர் முதுகை ஒருவர் தேய்த்து கொள்கிறீர்கள் . அழுக்குதான் ரொம்ப இருக்குது . விஷயம் ஒன்றும் இல்லை .

    யாரையும் திட்ட மாட்டோம் என்று நீங்களாகவே சொல்லிக் கொண்டு பேடித்தனம் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறீர்கள் . அது சில ஊர்களில் 'ஒம்போது' என்று பொருள்படும் . வார்த்தைகளில் ரொம்ப கவனம் தேவை காரிகன் !

    இளையராஜா ரசிகர்களின் எதிர்ப்பு அலையின் அனல் தாங்க முடியாமல் நீங்கள் தடுமாறுவது உங்களின் பதிலில் நன்றாக தெரிகிறது . சரக்கு தீர்ந்து போன ரகுமான் காலி பெருங்காய டப்பா என்று கூட சொல்ல முடியாது ; கழுவி போட்ட டப்பா . ஞான வெறுமை ரகுமானுக்கு உருவாகி விட்டது .

    ஒன்று புரிந்து கொள்ளுங்கள் . இளையராஜாவிற்கு மாற்று இன்னும் யாரும் வரவில்லை என்பதே உண்மை . இப்போது உள்ள இசை அமைப்பாளர்கள் யாருமே ஈடில்லை . உண்மையான தமிழ் இசை கொடுக்க யார் வந்தாலும் இளையராஜாவின் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் .

    ReplyDelete
  102. " உண்மையான தமிழ் இசை கொடுக்க யார் வந்தாலும் இளையராஜாவின் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் ."
    சரியாகச் சொன்னீர்கள் சார்ர்ல்ஸ்.

    அதுமட்டுமல்ல, 900 படங்கள்.அதில் ஒவ்வொரு படத்திலும் ஒரு பாடல் வீதம் ஹிட் என்று பார்த்தாலே 900 ஹிட்ஸ் பாடல்கள்.
    ஒரு படத்தில் குறைந்தது 4 பாடல்கள் சூப்பர் , டூப்பர் ஹிட் என்று பார்த்தாலே 3.600 பாடல்கள்.குவாலிட்டியிலும் யாரும் குறை சொல்ல முடியாது.

    ஒரு இசையமைப்பாளனின் இசை இருந்தால் போதும் படம் ஓடும் என்ற நிலையை உருவாக்கி இசையமைப்பாளர்களுக்கு பெருமை சேர்த்த முதல் கலைஞன்.
    சாதனைகள் விரிந்து செல்லும்.

    சில நாய்கள் குளுமையும் ,அழகும் நிறைந்த நிலவை பார்த்து குரைக்கின்றன.நிலவோ நம்மை மகிழ்வித்துக் கொண்டுதான் இருக்கிறது.

    ReplyDelete
  103. சால்ஸ்,
    முன்பே உங்களுக்கு பிரத்தியோகமாக ஒரு பதிலை தயார் செய்திருந்தேன்.அதற்குள் விமல் அவர்களின் பின்னூட்டங்கள் ரொம்பவும் நகைச்சுவையாக இருந்ததால் அவருக்கு பதிலளிக்க சென்றுவிட்டேன். யாருக்குச் சொன்னால் என்ன? நீங்கள் எல்லோருமே android போன் Talking Tom பூனை போல சொன்னைதையே சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். இதில் அனலாம்...என்னால் தாக்குப் பிடிக்க முடியவில்லையாம்... அடடா இப்படியெல்லாம் கூட நினைப்பு வருகிறதாக்கும் உங்களுக்கு? வெளங்கிரும்....

    மேற்கத்திய இசை என்றால் அது உடனே ஆங்கில இசையாகத்தான் இருக்கும் என்ற பாமரத்தனமான உங்களின் நுண்ணறிவு ஆஹா அபாரம்...Bach, Mozart,Chopin,Beethoven போன்ற மேற்கத்திய செவ்வியல் இசைஞர்களில் யாருமே ஆங்கிலம் பேசும் நாடுகளைச் சேர்ந்தவர்களல்ல. பொதுவாக ஐரோப்பியர்கள் என்று சொல்வது கொஞ்சம் பொருத்தம். உங்களுக்கு இளையராஜாவை விட்டால் நாட்டின் விலைவாசி கூட தெரியாது போலிருக்கிறது. கொடுமை. அதுசரி அறுவடை நாள் படத்தின் தேவனின் கோவில் பாடலைப் பாடியது ஜென்சி அல்ல ஞானத் தங்கமே ..அது சித்ரா...(அடுத்த அவஸ்தை). அதில் இரண்டாம் சரணத்துக்கு முன் வரும் இளையராஜாவின் கோரஸ் நாட்டுபுற இசை எல்லாமே மிக நன்றாக இருக்கும். பாருங்கள் இதை நான் உங்களுக்கு சொல்லவேண்டியதாக இருக்கிறது. பாடலைப் பாடியது சித்ரா என்று தெரியாதது ஒன்று..ஜென்சியின் நாசிக்குரல் "உலகத்திலேயே" வேறு யாருக்கும் இல்லை என்ற புகழ் பெற்றதாயிற்றே... எப்படி சித்ராவுக்கும் ஜென்சிக்கும் ஒற்றுமையை கண்டீர்களோ புரியவில்லை....

    பேடித்தனம் என்பதை கோழைத்தனம் என்பதாக அர்த்தப்படுத்திக்கொள்வதே நமக்கு வழக்கம். இதை விட்டு விட்டு பத்துக்கு முன்னாள் இருக்கும் எண்ணை குறிப்பிட்டு அப்படியாக்கும் தெரியுமா என்று சலம்புவது கீழ்நிலை நாகரீகம். காலி பெருங்காய டப்பா என்பது இளையராஜாவைக் குறிக்கும் சொல். பலர் அவரை இப்போது அப்படித்தான் அழைக்கின்றார்கள்.. கழுவிப் போட்ட டப்பா என்பதெல்லாம் டி ராஜேந்தர் பாணி வசவு. இளையராஜாவுக்கு ஈடாக ரஹ்மான் வந்து அவரின் சகாப்தத்திற்கு முடிவுகட்டி இருபது வருடங்கள் ஆன பின் இப்போது கோமாவிலிருந்து விழித்துக்கொண்டுஆ ஊ என்று குதிப்பது கோமாளித்தனம். உங்கள் பெயர் சார்லஸ்ஸா அல்லது சர்க்கஸ்ஸா ?

    ReplyDelete
  104. விமல்,
    உங்கள் நகைச்சுவை உணர்ச்சிக்கு அளவேயில்லையா? 900 படங்களில் ஒரு பாடல் என்றாலும் 900 வருமாம்.. நல்ல கணக்குத்தான்... ஆனால் உண்மை வேறுவிதமாக அல்லவா இருக்கிறது? ராஜா ரசிகர்களைத்தாண்டி வேறு யாரும் அவர் இசையமைத்த எல்லா படங்களிலும் பாடல்கள் சிறப்பாக இருந்ததாகச் சொல்லமாட்டார்கள். 92 இல் இளையராஜாவின் இசையில் வந்த 52 க்கும் மேலான படங்களில் ஒரு பத்து தேறுமா? நீங்கள் வெற்றி பெற்ற பாடல்களை சிறப்பானவை என்று சொல்வது வேடிக்கை. அப்படியானால் ரஹ்மானின் வெற்றி பெற்ற பாடல்களை மட்டும் ஏன் வெறி கொண்டு கடித்துக் குதறுகிரீர்கள்? காதலன், ஜென்டில்மேன், திருடா திருடா ,ஜீன்ஸ், ரிதம், பாம்பே, என்று அவரின் பிரபலமானப் பாடல்களை ஏன் குறை சொல்லவேண்டும்? ஏனென்றால் அதற்கு உங்களுக்கு காரணம் இருக்கிறது. அதைப் போலவே நீங்கள் தலையில் தூக்கிவைத்துக் கொண்டு ஆடும் பல இளையராஜாவின் பாடல்களை நான் விமர்சிக்கவும் எனக்கு காரணங்கள் இருக்கின்றன.
    இளையராஜாவுக்கு முன்னே பாடல்களுக்காக பல தமிழ்ப் படங்கள் வெற்றிபெற்றிருக்கின்றன. பாடல்களுக்காகவே வருடக்கணக்காக ஓடிய சிந்தாமணி போன்ற படங்களைஎல்லாம் கணக்கில் சேர்க்காமல் இப்படி அடித்துவிடுவதைதான் நான் 76 தமிழ் இசை துவக்கம் என்று நீங்கள் நம்புவதாக குறிப்பிட்டேன். ஸ்ரீதரின் படங்கள் எல்லாவற்றிலும் பாடல்கள் பெரிதும் சிறாப்பாக இருந்தாதால் அதற்காகவே மக்கள் அவற்றை வெற்றியாக்கிய கதைகள் உங்களுக்கு எப்படித் தெரியும்? உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் மிகப் பெரிய வெற்றிக்கு ஒரு மிக முக்கிய காரணம் எம் எஸ் விஸ்வநாதன். நினைத்தாலே இனிக்கும் என்று இன்றைக்கு மறுபடி தூசி தட்டி ஓட்டிக்கொண்டிருக்கும் படத்தின் முகவரி அதன் நடிகர்கள் இல்லை. இசைதான். இளையராஜாதான் நம் இசை அமைப்பாளர்களுக்கு பெருமை சேர்த்தார் என்று உளறுவதை ராஜா பதிவர்கள் தளத்தில் போய் சொன்னால் உங்களுக்கு நிறைய கைத்தட்டல்கள் கிடைக்கும். இங்கே அதை சொன்னால் பதிலடிதான்.

    மீண்டும் உருவகமாக நாய்கள் என்று நீங்கள் மற்றவர்களை விளிக்கும் பழக்கத்தை விடவில்லை என்று தெரிகிறது. என்ன ஒரு பண்பாடு தெரிந்த கணவான்!கழுதைக் குரலை அறிமுகப்படுத்தியதால் இளையராஜாவை அதே பெயர் கொண்டு அழைப்பதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

    ReplyDelete
  105. Never argue with stupid people, they will drag you down to their level and then beat you With experience...

    - Mark Twain

    ReplyDelete
  106. காரிகன் அவர்களே

    தங்கவேலு பாணியில் ஆரம்பித்து விட்டீர்களா உங்கள் " அது தானே தெரியுமே " காமடி பீசை.

    " பாடலைப் பாடியது சித்ரா என்று தெரியாதது ஒன்று..ஜென்சியின் நாசிக்குரல் "உலகத்திலேயே" வேறு யாருக்கும் இல்லை என்ற புகழ் பெற்றதாயிற்றே... எப்படி சித்ராவுக்கும் ஜென்சிக்கும் ஒற்றுமையை கண்டீர்களோ புரியவில்லை...." காரிகன்

    சரி ...சரி ..ரொம்ப அலட்ட வேண்டாம்.அது சித்ரா பாடிய பாடல் தான்.

    அமுதை பொழியும் நிலவே பாடலுக்கு இசையமைத்தவர் ஜி.ராமநாதன் என்றும் ..

    தங்களது மந்திரக் குரல்களால் கட்டிப்போட்டுவைத்திருந்த தியாகராஜ பாகவதர், கிட்டப்பா, என்று" வரலாற்று அறிவோடு " எழுதித் தொலைப்பவர் தானே நீங்கள்.

    கிட்டப்பா பேசும் சினிமா வந்த புதிலேயே மரணமடைந்து விட்டார் என்பது குழந்தை ராஜா ரசிகர்களுக்கும் தெரியும்.

    உங்களுக்கும் ,அமுதவ்னுக்கும் தானே எல்லாம் தெரியும் என்ற எகத்தாளம்.
    இளையராஜாவுடன் சண்டை போட்ட பின்னால் தான் கங்கை அமரன் இசையமைக்க வந்தார்.அதற்க்கு முன்பே கங்கை அமரன் வைத்திருந்த மெட்டுக்களை எல்லாம் பயன் படுத்தினார் என்று அண்ட புளுகை எல்லாம் "பதிவில்" அவிழ்த்து விடுபவர் அல்லவா நீங்கள்.
    அரையும் , குறையுமான செய்திகளை வைத்தே " பதிவுகள் " எழுதும்.

    இந்தக் கொடுமைகளை எல்லாம் நாம் சகித்துக் கொண்டு தானே இருக்கின்றோம்.

    ." .. என்று உளறுவதை ராஜா பதிவர்கள் தளத்தில் போய் சொன்னால் உங்களுக்கு நிறைய கைத்தட்டல்கள் கிடைக்கும். இங்கே அதை சொன்னால் பதிலடிதான். - காரிகன்.

    ராசா , இங்கே அதை சொன்னால் பதிலடிதான். சரியான வசனம் தான். மேலே நீங்கள் உளறியவைகளுக்குப் "வரலாற்று பொய்களுக்கு " பதிலடியை தாருங்கள் பார்க்கலாம் ஞானத் தங்கமே!

    தட்டிக் கேட்க ஆளில்லாட்டி
    தம்பி சண்டப் பிரசண்டன்.

    ".ஸ்ரீதரின் படங்கள் எல்லாவற்றிலும் பாடல்கள் பெரிதும் சிறாப்பாக இருந்தாதால் அதற்காகவே மக்கள் அவற்றை வெற்றியாக்கிய கதைகள் உங்களுக்கு எப்படித் தெரியும்? "- காரிகன்

    பழைய விஷயங்கள் எல்லாம் உங்களுக்குத் தானே தெரியும்.!!

    ஐய்யா ஞானத் தங்கமே!! நீண்ட நாட்கள் ஓடி சரித்திரம் படைத்த பாகவதரின் ஹரிதாஸ் [1945 ] ,ஏன் ஓடியது என்பதை பற்றி வெங்கட் நாதன் என்ற புகழ்பெற்ற விமர்சகர் , போர் காலத்தில் அதிக படங்கள் வராத காரணத்தால் ஓடியது என்கிறார்.அவரும் ராஜ ரசிகன் என்பீர்கள் போல.
    அந்த சாதனையையும் முறியடித்தது கரகாட்டக்காரன் என்பதும் சினிமா வரலாறு.

    " உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் மிகப் பெரிய வெற்றிக்கு ஒரு மிக முக்கிய காரணம் எம் எஸ் விஸ்வநாதன்." - காரிகன்
    அப்போதும் ஹிந்தி இசைதான் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருந்தது.இல்லையா ?

    ஞானத் தங்கமே!அன்னக்கிளி வந்தது கதை முடிந்தது.இல்லையா ?

    புயலிசைமன்னன் ரகுமானின் பட்டப்பகல் [கொள்ளை ]திருவிளையாடலை பாருங்கள் கடல் படத்தில் நெஞ்சுக்குள்ளே பாடலை எங்கே இருந்து உருவினார் என்று.
    Runrig The Fisherman என்று யு டியூபில் டைப் செய்யவும்.
    ஒன்று கூட சொந்த சரக்கில்லை புயலுக்கு.

    இந்த ஒய்யாரக் கொண்டைக்கு தாழம் பூ கேட்குதா?

    ReplyDelete
  107. Mr. Kaarigan,
    Good work. Very reasonable write-up about the music scene of the 90s. As you have pointed out Rahman came like a whirlwind and swept all the traces of Raja's outdated music.Here, some people are upto some mischief. The only complaint they can hold against you is that you are not praising Raja as much as they want you to...It's a very sensible theory you have come up with regarding Rahman's sound of music which is so different and fresh.

    ReplyDelete
  108. சில நாய்கள் குளுமையும் ,அழகும் நிறைந்த நிலவை பார்த்து குரைக்கின்றன.நிலவோ நம்மை மகிழ்வித்துக் கொண்டுதான் இருக்கிறது.

    சில நேரங்களில் உங்கள் வார்த்தைகளில் அதிக தாக்கம் இருப்பதாக நினைத்தேன் விமல் .ஆனால் ரவீந்திர நாயக் , விஷ்ணு மாதிரி ஆட்களுக்கு மேற்சொன்ன வாக்கியம் பொருந்தும் . நீங்கள் சரியாகத்தான் எழுதுகிறீர்கள் . ரகுமானின் அடி வருடிகள் அல்லது அடிப் பொடிகள் நம்மை ஸ்டுபிட் என்று சொல்கின்றன . ரகுமானின் பெருபான்மையான இசை வடிவம் இசையாக இல்லாமல் வெறும் வாசிப்பாகதான் இருக்கும் . அந்த வடிவமே ஸ்டுபிட் தான் ! அது புரியவில்லை... ஸ்டுபிட்!

    இளையராஜாவிடம் வேலை செய்தவர்கள் செய்கிறவர்கள் எல்லோருமே (ரகுமான் உட்பட )இசை இயக்குனர்களே! அந்த இசை இயக்குனர்கள் எல்லோருக்கும் இசை இயக்குனர் இளையராஜா அவர்கள் . இந்த செய்தி எத்தனை பேருக்கு தெரியும் ?

    சார்லசா ..சர்க்கசா என்று என்னை கோமாளியாக்க துடிக்கும் காரிகனே ! இளையராஜாவை இழிவு செய்யும் உங்கள் மடமையை கொளுத்தவே நாங்கள் வந்துள்ளோம் . இசை பற்றிய சொல்லாடல் மறந்து நான்கு பேர் எங்களை தூற்றிப் பேச அனுமதித்து களிப்புறும் நீங்கள் காரிகனா...காரிய கருக்கனா ? (வேற மாதிரி வாசிக்காதீங்க ..நான் கருக்கன் என்றுதான் சொல்ல வந்தேன் )

    கடல் பாட்டு கடைஞ்செடுத்த காப்பி என்று நாம் சொல்லவே வேண்டாம் விமல் . சௌந்தர் பார்த்துக் கொள்வார் . நம்ம ஊர் எப் .எம் . பார்த்து கொள்ளும் . அழகாக பிரித்து எடுத்து மேய்ந்து விடுவார்கள் .

    ஒய்யார கொண்டையாம் தாழம் பூவாம் ! உள்ளே இருக்குமாம் ஈரும் பேனுமாம்! அதையும் சேருங்கள் விமல் . அப்போதுதான் பொருத்தமாய் இருக்கும் ரகுமான் பாட்டுக்கான வர்ணனை!

    ReplyDelete
  109. "கடல் பாட்டு கடைஞ்செடுத்த காப்பி என்று நாம் சொல்லவே வேண்டாம் விமல் . சௌந்தர் பார்த்துக் கொள்வார் . நம்ம ஊர் எப் .எம் . பார்த்து கொள்ளும் . அழகாக பிரித்து எடுத்து மேய்ந்து விடுவார்கள் . "

    சிலோன் வானொலியில் அசலும் நகலும் நிகழ்ச்சியில் இளையராஜாவின் பாடல்களை பிரித்து ;மேய்ந்தது போன்றுதானே சார்லஸ் அவர்களே?

    இப்படி கன்றாவித்தனமாகக் குரங்கு போல குதிக்கும் நீங்கள் இளையராஜாவின் காப்பியையும் பட்டியல் போட்டால் என்ன செய்வீர்கள்? உங்கள் எழுத்தில் தேவையில்லாத வெறுப்பு, அயோக்கியத்தனம், எல்லாமே ஓவராக வழிகிறது.

    ReplyDelete
  110. விமல்
    சூப்பர் ..!
    " ஒன்று கூட சொந்த சரக்கில்லை புயலுக்கு./ " அப்படியல்ல.பயலுக்கு என்று மாற்றி சொல்லுங்கள்.A - Z திருட்டுப்புயல்.

    " ரகுமான் ,யுவன் ,அனிருத், ஹரிஸ் , ஜி.வீ.பிரகாஸ் போன்ற குறைமாதக் குழந்தைகளின் பாடல்களைக் கேட்பதை விட ஒழுங்காக ஆங்கிலப் பாடல்களையே நாம் கேட்டுத் தொலைக்கலாம்." /// விமல்

    சூப்பர் ..! சூப்பர் ..! சூப்பர் ..!

    ReplyDelete
  111. Mr.Vishnu,
    Thanks for the comment. It's not just mischief some Raajaa fanatics are up to. You see, how venomous their words are. Utterly uncultured, uncivilised, and totally barbaric! They time and again prove that Raajaa fans have no culture or whatsoever.They can only scream like brutes,They can't digest the fact that their myths about Ilayaraajaa are broken to smithereens.

    Happy that you could see something to appreciate in my writing.

    ReplyDelete
  112. //You see, how venomous their words are. Utterly uncultured, uncivilised, and totally barbaric! //

    It is all instigated by you my friend and pretend to be coy.

    ReplyDelete
  113. Mr. Anonymous,
    You can't prove your statement. By the way, coy itself means "pretending to be shy". So pretend to be coy may mean something like "pretend to pretend to be shy...?" Riddle, I guess.

    ReplyDelete
  114. Read this please,

    http://nanprasanna.wordpress.com/2012/01/09/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8D/#comments

    ReplyDelete
  115. விமல்,
    எதுவும் அகப்படவில்லை என்றால் என் எழுத்தில் ஏற்படும் சில பிழைகளை விடாமல் சுற்றிச் சுற்றி வருவது உங்கள் வழக்கம்தான். என்ன செய்வது? செக்கு மாடுகள் சுற்றி வருவது என்ன புதுமையா என்ன?
    "தட்டிக் கேட்க ஆளில்லாட்டி
    தம்பி சண்டப் பிரசண்டன்."
    இது நினைத்தாலே இனிக்கும் படத்தில் எம் எஸ் வி அமைத்த பாடல் என்பது உங்களுக்குத் தெரியவில்லை போலும். சரி அதை விடுங்கள். இதெல்லாம் நடப்பதுதானே.

    "நீண்ட நாட்கள் ஓடி சரித்திரம் படைத்த பாகவதரின் ஹரிதாஸ் [1945 ] ,ஏன் ஓடியது என்பதை பற்றி வெங்கட் நாதன் என்ற புகழ்பெற்ற விமர்சகர் , போர் காலத்தில் அதிக படங்கள் வராத காரணத்தால் ஓடியது என்கிறார்.அவரும் ராஜ ரசிகன் என்பீர்கள் போல."

    ஒரு உளவியல் காரணத்தை சுட்டிக்காட்டி நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தகவல் அருமை.அதே போல் 80, 90 களில் இளையராஜா மட்டுமே இசை அமைத்துக்கொண்டிருந்தார் ரஹ்மான் வந்து அவரை ஓரம் கட்டும் வரை. நம் மக்கள் இளையராஜாவின் இசையை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது இதே உளவியல் காரணமாகத்தான்.It's a simple case of probability. இதை மட்டும் ஏற்றுக்கொள்ள உங்களுக்கு கசக்கும் என்பது எனக்குத் தெரிந்ததே.
    "அந்த சாதனையையும் முறியடித்தது கரகாட்டக்காரன் என்பதும் சினிமா வரலாறு."
    சாதனைகள் முறியடிக்கப்படுவது வரலாற்றின் மீற முடியாத விதி.
    அன்னக்கிளி ஹிந்தி இசையின் கதையை முடித்தது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.அதை நான் மறுப்பதாக இருந்தால் நீங்கள் அதை குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். அப்படி இல்லாத பட்சத்தில் இது ஒரு தேவையில்லாத தகவல். டெம்ப்ளேட் தகவல்களை வைத்துக்கொண்டு கரகாட்டம் ஆடுவதுதான் உங்கள் வீரமோ?
    ரஹ்மான் காப்பி அடித்தார் என்று கோரஸாக கூப்பாடு போடுவது மட்டுமே உங்களுக்கு வரும் யுக்தி. Bach என்ற மேற்கத்திய இசை மேதையின் இசை அமைப்பை அப்படியே பிரதியெடுத்தவர் இளையராஜா. மேற்கத்திய செவ்வியல் இசையை இளையராஜா காப்பியடித்தால் அதைப் பற்றி வாயைத் திறக்காமல் ரஹ்மான் என்றால் குலைப்பது உங்களுக்கெல்லாம் வாடிக்கைதானே?

    ReplyDelete
  116. வாருங்கள் சர்க்கஸ்,
    காரிய கருக்கன் என்பதெல்லாம் உங்கள் மனதின் கரிய பக்கம். அதை இப்படி வெளிச்சம் போட்டுக் காண்பிக்கவேண்டுமா?

    "இளையராஜாவிடம் வேலை செய்தவர்கள் செய்கிறவர்கள் எல்லோருமே (ரகுமான் உட்பட )இசை இயக்குனர்களே! அந்த இசை இயக்குனர்கள் எல்லோருக்கும் இசை இயக்குனர் இளையராஜா அவர்கள் . இந்த செய்தி எத்தனை பேருக்கு தெரியும் ? "

    ஆஹா அற்புதம். இளையராஜா மட்டும் அப்படியே வானத்திலிருந்து நேரடியாக 76 இல் கோடம்பாக்கத்தில் குதித்தவரா? எம் எஸ் வி, ஜி கே வெங்கடேஷ் போன்றவர்களிடத்தில் அவர் வேலை பார்த்தது இன்னொரு பிரபஞ்சத்தில் நடந்த நிகழ்வோ? இளையராஜா இசை இயக்குனர்களுக்கு இசை இயக்குனர் என்று வெண்டைக்காய் வியாக்கியானம் வேறு. அப்படியானால் இளையராஜா யாரிடம் வேலை பார்த்தாரோ அவர்களை இசை இயக்குனர்களின் இசை இயக்குனரின் இசை இயக்குனர்கள் என்று சொல்லலாமா? என்ன ரொம்ப தலையை சுற்றுகிறதா? கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொண்டு பிறகு வந்து இன்னொரு குழப்பமான கருத்தை எழுதுங்கள்.

    மற்றபடி பிரித்து மேய்வது பற்றி பரத் உங்களுக்கு நல்ல சூடு கொடுத்திருக்கிறார். இளையராஜாவிடம் ஒரு சிலோன் தொகுப்பாளர் அவர் அடித்த காப்பிகளைப் பற்றி சகட்டு மேனிக்கு கேள்விகள் கேட்க, உங்கள் இசை ஞானி விழி பிதுங்கியது உங்களுக்குத் தெரியாதா?

    இளையராஜா நிலவு போல நம்மை குளிர்விக்கிராறாம். உண்மைதான். பவுர்ணமி எல்லாம் முடிந்து இப்போது தொடர்ச்சியான நீண்ட அமாவாசை நடந்து கொண்டிருக்கிறது. இப்போது நிறைய நட்சத்திரங்கள் ஜொலித்துக்கொண்டிருக்கின்றன.

    ReplyDelete
  117. will the stars make us feel the moon's chill?

    ReplyDelete
  118. காரிகன் சார்

    நீங்கள் எம்.எஸ்.வீயை சொந்தம் கொண்டாட வேண்டாம். இங்கே யாரும் , நீங்கள் இளையராஜாவை மட்டம் தட்டுவது போல , எம்.எஸ்.வீயை மட்டம் தட்டவில்லை.

    அவை தாங்கள் செய்யும் தகிடு தித்தங்களுக்கும் ,ராஜா பற்றிய உதிர்ப்புக்களுக்கு எதிர் வினையே தவிர வேறல்ல.ராஜாவை கடுமையாக , வன்மத்தோடு இழிவு படுத்துவது , ராஜா சிகாமணிகள் என்று ராஜ ரசிகர்களை இழிவு படுத்துவது போல நீங்கள் புளுகும் " நடுநிலைமை விமர்சனம்" எப்போதும் இருந்ததில்லை.

    ராஜாவை தாக்குவதற்கு மட்டுமே பழமையும் , தமிழர்களுக்கு ஒட்டாத வீண் "புதுமை "யையும் பற்றி புலம்புகின்றீர்கள்.

    நீங்கள் கிலாகிக்கும் ரகுமான் ,மற்றும் அவர் போன்ற குறைமாதக் குழந்தைகளின் இசை ஓடோடி , என்ன தான் பரிசுகளைக் குவித்தாலும் தமிழ் மக்கள் மனதில் ஒட்டாது என்பது நிரூபனாகிவிட்டது.

    ராஜாவின் பெருமை என்னவென்றால் ,தனது இசைச் செடியை தமிழ் மண்ணோடு எங்கும் பதி வைத்தத் தாலேயே தான் அது உயிர் பெற்று வளர்ந்திருக்கிறது.

    இளையராசாவை இவ்வளவு தூரம் வெறுக்க உங்களுக்கு பல காரணங்கள் இருக்கலாம்.இசையோடு இணைத்து நீங்கள் சொல்லும் காரணங்கள் சப் என்று உள்ளது.

    " அதே போல் 80, 90 களில் இளையராஜா மட்டுமே இசை அமைத்துக்கொண்டிருந்தார் " காரிகன்

    அப்படியல்ல காரிகன் , கங்கை அமரன் , சங்கர் கணேஷ் , சக்கரவர்த்தி , ஜி.கே வெங்கடேஷ் , சந்திரபோஸ் , டி.ராஜ்நேதர், மனோஜ் கியான் ,எம்.எஸ்.விஸ்வநாதன் , கே.வீ மகாதேவன் ,சௌந்தர்யன் , ஷ்யாம், வீ.குமார் , ரமேஸ் நாயுடு , ஏ.வீ.ரமணன் ,சலீல் சவுத்ரி போன்ற பலரும் ஆட்டத்தில் இருந்தவர்களே..உபயம் ..விக்கிபீடியா.


    இவர்கள் பாடலகளை எல்லாம் பின் தள்ளி புதுமைக்கு புதுமையாய் இருந்தது ராசாவின் இசையே.பழைய இசைஞர்களின் பாடல்களை பழசு ஆக்கியவர் ராசா.இனிமையிலும் ஒன்றும் சோடை போகவில்லை.இல்லையா?

    " ரஹ்மான் வந்து அவரை ஓரம் கட்டும் வரை. நம் மக்கள் இளையராஜாவின் இசையை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது " காரிகன்

    ஓரம் கட்டப்பட்டது நல்லிசையே! அது ராஜவுடேனே இப்போதும் இருந்து வருகிறது. ராஜா இப்போது ஆட்டத்திலேயே தான் இருக்கின்றார். இல்லையா ?

    நல்ல பாடல்களை அவர் வழங்கிய வண்ணமே இருக்கின்றார்.நிலவு பொழிந்து கொண்டே இருக்கிறது.டியூப் லைட் அழகில் மகிழச்சி கொள்ளும் மனிதர்களை நாம் குறை சொல்ல முடியாது.அதற்காக நிலவை சரியில்லை என்பவர்களை என்ன சொல்வது.?

    நிலவை அனுபவிக்கத் தெரியாதவன் மடையன் என்று மஹாகவி பாரதி சொல்லியிருக்கின்றார்.அவரையும் ராசா ரசிகனாக்கி விடாதீர்கள்.

    காப்பி விஷயம் பேசியிருக்கின்றீர்கள்.

    எம்.எஸ்.வீ காப்பி ஏராளம் ஹிந்தி பாடல்கள்;
    உபயம்: இனிஒரு.

    ராசா 900 படங்கள் 4,500 பாடல்கள்.இவ்வளவு பாடல்களை யாரும் இதுவரை இசையமைக்கவில்லை.
    அதில் ஒரு 15 பாடல்களை யாரும் சாம்பிள் சொல்லலாம்.

    புயல் ரோஜாவில் தொடங்கி இன்று வரை காப்பி , ஒவ்வொரு படத்திலும் தொடர்கிறது.

    இது தெரியாமல் நீங்கள் தான் குலைக்கின்றீர்கள்.

    ReplyDelete
  119. திரு அனானிக்கு,
    படித்தேன். (பிரசன்னா என்பவரின் )தன்னை ஆக்ரமித்த ரஹ்மானின் இசையைப் பற்றிய ஒரு நாஸ்டால்ஜிக் உணர்வு அந்தப் பதிவில் பிரதிபலித்தது.

    "எங்களுக்கு முன்னாடி இருந்த தலைமுறை எப்படி இளையராஜாவை கொண்டாடிச்சோ, நாங்க ரஹ்மானைக் கொண்டாடினோம். "

    என்று வெகு சாதாரணமாக ஒரு சராசரி இசை ரசிகனின் இயல்பை சொல்லியிருக்கிறார். இதைத்தான் நானும் சொல்கிறேன். ராஜா ரசிகர்களுக்கு ரஹ்மானை யாருக்கும் பிடிக்கக்கூடாது என்ற எண்ணம் இருக்கும் போல தெரிகிறது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  120. http://www.youtube.com/watch?v=bQstQST1GiM

    http://www.itwofs.com/tamil-others.html
    http://www.itwofs.com/tamil-arr.html
    http://www.itwofs.com/tamil-ir.html
    http://www.itwofs.com/tamil-kr.html
    http://www.itwofs.com/tamil-yuvan.html
    http://www.itwofs.com/coincidence.html
    http://www.youtube.com/watch?v=2ZSADBhXBm4
    http://www.youtube.com/watch?v=CbuYrnzTLrw

    List of Copies and Inspirations.

    ReplyDelete
  121. when it comes to Copy and Inspirations no one is spared here.

    ReplyDelete
  122. "பொதுவாக நம் தமிழ்நாட்டில் ஒரு கலாச்சாரம் இருக்கிறது. ராஜா ரசிகர்களைப் பொறுத்தவரை ஏ.ஆர்.ரகுமானுக்கு இசை அமைக்கவே தெரியாது, தாதா ரசிகர்களுக்கு சச்சின் சுயநலமாக ஆடுபவர், விஜய் ரசிகர்களுக்கு அஜித் படமெல்லாம் ஃப்ளாப், இந்த வரிசையில் கமல் ரசிகர்களுக்கு ரஜினிக்கு நடிக்கவே தெரியாது."

    விமல்,
    இது என் வார்த்தைகள் அல்ல. முகிலன் என்பவர் தனக்குப் பிடித்த பத்துப் படங்களைப் பற்றிச் சொல்லும்போது தெரிவித்தவைகளே.இதன் முழு பதிவு கீழே இருக்கிறது.

    http://www.pithatralkal.com/2010/04/10.html

    ராஜா- ரஹ்மான் பற்றி அவர் சொல்லியிருப்பது நிதர்சனம். ஏன் உங்களைப் போன்ற ராஜா ரசிகர்களுக்கு ரஹ்மானைப் பிடிக்காது என்பது ஒன்றும் விளங்கிக்கொள்ள முடியாத நூதனம் இல்லை. வெறும் வயிற்றெரிச்சல். எம் எஸ் வி க்குப் பிறகு இளையராஜா வந்தார் வென்றார் என்பதை ஆராவாரமாக கைதட்டி வரவேற்கும் நீங்கள் அதே வரலாறு 92 இல் ரஹ்மான் மூலம் திரும்பியது என்றால் மட்டும் அதை அண்டப் புளுகு என்று திருவாய் மலர்வது மடத்தனம். நான் ரஹ்மான் ரசிகனில்லை என்பதை என் எழுத்துக்களே சொல்லிவிடுகின்றன. இதற்கு மேலே நான் சுய நியாயபடுத்துதல் செய்யவேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். ரஹ்மான் சில சிறப்பான பாடல்களை வந்த புதிதில் கொடுத்தார் என்பது பலரும் (ராஜா ரசிகர்களைத் தவிர) பொதுவாக ஏற்றுக்கொள்ளும் உண்மை. எனக்கு எந்தவிதமான தனி மனித ஆராதனைகள் கிடையாது என்பதால் என் எழுத்தில் நியாயம் இருக்கிறது. உங்களிடத்தில் அது மருந்துக்கும் இல்லை.

    தொடரும் ....

    ReplyDelete
  123. வேட்டைக்காரன்9 October 2013 at 22:30

    காரிகன் ஐயா,

    இனியொரு மற்றும் ராஜவின் தளங்களில் உங்களின் கருத்தை வைக்க முயன்றீர். இப்போது உங்கள் பதிவில் ராஜாவின் ரசிகர்களும் விவாதம் நடத்தினார்கள். உங்கள் மற்றும் எம் கருத்தை மாற்றிக் கொள்ள முடியுமெனதெ தோன்றவில்லை.

    தாண்டிச் செல்வோமே. அடுத்த இடுகைக்குப் போலாமே.

    ReplyDelete
  124. காரியாகன் அவர்களே

    வாய்க்கு வந்தபடி எல்லாம் எழுதாதீர்கள்.

    " எம் எஸ் வி க்குப் பிறகு இளையராஜா வந்தார் வென்றார் என்பதை ஆராவாரமாக கைதட்டி வரவேற்கும் நீங்கள் அதே வரலாறு 92 இல் ரஹ்மான் மூலம் திரும்பியது........ " - காரிகன்

    எம் எஸ் வி க்குப் பின்னால் ராஜா வந்தார் என்றால், அது இசையின் இனிமையை தொட்டுத்தான் நின்றது." இது தவில் கம்பனி " என்று கிண்டல் செய்யப்பட்ட அவரது இசை புதிய திசையில் இனிமையை அள்ளி கொட்டியது.பழித்தவர்கள் வாயை பொத்தினார்கள்.

    ரகுமானை பாருங்கள் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக , பச்சையாக அன்னிய மோகியாகவே வலம் வருகிறார்.அவரது இசையில் 90% மான பாடல்கள் மோசமான காப்பியே.அது ரகுமானின் தவறு அல்ல. ஏனென்றால் அவர் ஆங்கிலப் பாடல் மோகி , அதற்க்காகவே இசைக்குழுவையும் நடத்தி வந்தவர்.அவரை கொண்டு வந்து கிராமிய , மெல்லிசைப்பாடலைத் தா என்றால் என்ன செய்ய முடியும்.வைத்துக் கொண்டா இல்லை என்கிறார்.?

    நீல சாயம் போட்ட நரி. ஒரு நாளைக்கு அதன் சாயம் போகத்தானே செய்யும்.

    ஒரு நரியை பரியாக்கிய கதை தமிழ் மண்ணில் நடந்தது தானே.அப்போ அந்தக் காலத்தில் இவ்வவளவு நவீன வசதிகள் இல்லாத காலத்திலேயே ஒரு அரசனின் மந்திரி [ மாணிக்க வாசகர் ] செய்த ஊழல் இறை பக்தியாக திரிக்கப்பட்டது.

    " திறமை இல்லாத ஒரு காப்பிகேட் இந்த அளவுக்கு வர முடிந்தால் அது எல்லோருக்குமே சாத்தியம்தானே. "
    என்று , முன்பு ஒரு முறை எனக்கு பதில் சொல்லியிருக்கின்றீர்கள் காரிகன்.

    சுந்தர மூர்த்தி நாயனார் வெள்ளை யானையில் சொர்க்கம் போனார். நந்தனோ தீயில் வெந்து தான் சொர்க்கம் போனார் தெரியுமா உங்களுக்கு.? இரண்டு பேரும் " நாயன்மார்" தான்.கௌரவங்களும் வேறு, வேறானவை தான்.

    இப்போது பாரதிராஜா என்ன பேசுகிறார் பாருங்கள் . இசை என்கிற கோபுரம் மொட்டையாகி நிற்கிறது வா என்கிறார்.

    " எனக்கு எந்தவிதமான தனி மனித ஆராதனைகள் கிடையாது என்பதால் என் எழுத்தில் நியாயம் இருக்கிறது. " காரிகன்

    இதை நீங்கள் ஒப்புக்கு தான் சொல்கிறீர்கள் ஐயா.

    ரகுமான் பற்றியும் , மற்றவர்கள் பற்றியும் மென்மையான போக்கை கொள்ளும் நீங்கள் ராஜா என்று வந்ததும் வன்மமும் , காழ்ப்புணர்வும் தான் காட்டுகின்றீர்கள்.அங்கே முழு நிதானத்தையும் இழந்து விடுகின்றீர்கள்.

    சிலர் உங்களைத் தூண்டி விட்டுக் கொண்டே இருக்கின்றார்.அவர்களால் உங்கள் அளவுக்கு எழுத முடியாதிருப்பது காரணமோ தெரியவில்லை.

    "" என் எழுத்தில் நியாயம் இருக்கிறது" என்று சொல்ல உங்களுக்கு உரிமை இருப்பது போல , நாம் அது இல்லை என்று உண்மையைச் சொல்லவும் எமக்கு உரிமை இருக்கிறது என்று உரிமையுடன் சொல்கிறோம்.

    எங்கள் மண்ணுடனும் , அதன் வேரோடும் ஒட்டி நின்று உறவாடி எம் மண்ணின் இசையை உலகம் வியக்க கொண்டு சென்ற ஒரு மாபெரும் கலைஞனை , ஹிந்தி இசையை ஒரே ஒரு படம் மூலம் ஊருக்கு அனுப்பியவனை சாவுமேளம், தவில் கோஸ்டி பழிப்பதும் , எள்ளலும் ,கிண்டலுமாக எழுதுவது நடுநிலைமையா ?

    பாமரத்தனம்.!!

    கொஞ்சம் யோசித்து, நிதானித்து விரும்பும் "வார்த்தை விருப்பமாக " உண்மையை எழுதுங்கள்.

    ReplyDelete
  125. திரு சண்முகநாதன்,
    பெரும்பான்மையான இசை அமைப்பாளர்கள் காப்பி எனப்படும் தழுவலை செய்பவர்களே. உங்கள் ஒரு வரிக் கருத்து உண்மையே. ஆனால் ராஜா ரசிகர்கள் மட்டும் இதை ஒப்புக்கொள்ளமாட்டார்கள். அதற்கு வேறு வியாக்கியானம் சொல்வார்கள். அதனால்தான் இத்தனை ஆவேசமாக பேச வேண்டியதாக இருக்கிறது.

    ReplyDelete
  126. "கங்கை அமரன் , சங்கர் கணேஷ் , சக்கரவர்த்தி , ஜி.கே வெங்கடேஷ் , சந்திரபோஸ் , டி.ராஜ்நேதர், மனோஜ் கியான் ,எம்.எஸ்.விஸ்வநாதன் , கே.வீ மகாதேவன் ,சௌந்தர்யன் , ஷ்யாம், வீ.குமார் , ரமேஸ் நாயுடு , ஏ.வீ.ரமணன் ,சலீல் சவுத்ரி போன்ற பலரும் ஆட்டத்தில் இருந்தவர்களே..உபயம் ..விக்கிபீடியா."

    விமல்,

    உங்கள் பட்டியல் பெயரளவில் சரியே. அதிலும்கூட ஒரு நேர்மை இல்லை.எம் எஸ் வியையும் கே வி மகாதேவனையும் எதோ பத்தோடு பதினொன்றாக குறிப்பிடுள்ளீர்கள். இதில் சங்கர் கணேஷ் மட்டுமே இளையராஜாவுக்கு அடுத்த இடத்தில் இருந்தார் பட எண்ணிக்கையில். மற்றவர்கள் எல்லாருமே வெகு சொற்பமான படங்களுக்கு இசை அமைத்தவர்கள். சலில் சவுத்திரி மிகப் பிரபலமான பெங்காலி இசைஞர். ஹிந்திப் படங்களுக்கும் அவர் இசை அமைத்திருக்கிறார். இளையராஜாவே அவரிடம் பணி புரிந்தவர்தான்.அவரை எதோ உப்புக்கு சப்பாணியாக சேர்த்திருப்பது உங்களின் இசை அறிவை பன்மடங்கு பெரிதாக காட்டுகிறது. நீங்கல்லாம் நல்லா வருவீங்க..நடத்துங்க..

    மீண்டும் ரஹ்மான் பற்றிய உங்களின் ஆலாபனை வேறு எந்த புதிய புள்ளியையும் தொடாமல் அலுப்பூட்டும் பழைய செய்தியையே சொல்கிறது. உங்களுக்கு ரஹ்மானின் இசை பிடிக்கவில்லை என்பது வேறு அதனால் அவர் எதையும் சாதிக்கவில்லை என்பதும் அந்த சாதனைகள் எல்லாமே ஒன்றுமில்லாதவை என்பதும் நியாயமா?ரஹ்மான் தமிழிசையை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கினார் என்பது உங்களுக்கெல்லாம் வெகு இலகுவாக வரும் குற்றச்சாட்டு. உண்மையில் இளையராஜாவின் ராஜாங்கம் இங்கே உச்சத்தில் இருந்த போதே இந்த இசைச் சீரழிவு ஆரம்பித்துவிட்டது என்பதே என் கருத்து. ரஹ்மான் 90 களின் இளைய தலைமுறைக்கான இசையை அளித்தார். தலைமுறை இடைவெளி, பொறாமை,வெறுப்பு,சகிப்புத்தன்மையின்மை போன்ற வார்த்தைகளின் பின்னே உங்களின் ரஹ்மான் கருத்து புனையப்படுகிறது. நான் மக்களின் இசை ரசனை மாறியதை குறித்து எழுதுகிறேன்.

    "இப்போது பாரதிராஜா என்ன பேசுகிறார் பாருங்கள் . இசை என்கிற கோபுரம் மொட்டையாகி நிற்கிறது வா என்கிறார்."

    பாரதிராஜா இளையராஜாவை மட்டுமல்ல. ரஹ்மான், தேவா, ஜி வி பிரகாஷ் என்று எல்லோரையும் புகழ்ந்தவர்தான். அவர் சொல்வது உண்மைதான். ஆனால் இளையராஜாவோ இன்னமும் வெறுப்பை உமிழ்ந்து தன் அகங்காரத்தை துறக்க முடியாது தவிக்கிறார்.

    "ரகுமான் பற்றியும் , மற்றவர்கள் பற்றியும் மென்மையான போக்கை கொள்ளும் நீங்கள் ராஜா என்று வந்ததும் வன்மமும் , காழ்ப்புணர்வும் தான் காட்டுகின்றீர்கள்.அங்கே முழு நிதானத்தையும் இழந்து விடுகின்றீர்கள்."

    இது ஒரு மேலோட்டமான அவதானிப்பு. இளையராஜாவை நான் இரண்டு பதிவுகளில் பாராட்டியே எழுதியிருக்கிறேன். அதையெல்லாம் மறுபடி இங்கே கோடிட்டு காட்ட முடியாது. ரஹ்மானை விமர்சிக்கும் வரை பொறுத்திருக்கவும் என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன். உங்களுக்கு ராஜா மோகம் உடல் முழுதும் துடிப்பாக இருப்பதால், நான் சிறிதாக அவரை விமர்சித்தாலே பொறுக்கவில்லை. இது உளவியல் உண்மை.

    "" என் எழுத்தில் நியாயம் இருக்கிறது" என்று சொல்ல உங்களுக்கு உரிமை இருப்பது போல , நாம் அது இல்லை என்று உண்மையைச் சொல்லவும் எமக்கு உரிமை இருக்கிறது என்று உரிமையுடன் சொல்கிறோம்."

    தாராளமாகச் சொல்லுங்கள். எனக்கு ஆட்சேபனையே கிடையாது.

    "எங்கள் மண்ணுடனும் , அதன் வேரோடும் ஒட்டி நின்று உறவாடி எம் மண்ணின் இசையை உலகம் வியக்க கொண்டு சென்ற ஒரு மாபெரும் கலைஞனை , ஹிந்தி இசையை ஒரே ஒரு படம் மூலம் ஊருக்கு அனுப்பியவனை '

    ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்? இவ்வாறான இமாலய சாதனைகள் புரிந்தவரை ஒரே ஒரு படம் மூலம் முகவரி இழக்க வைத்தவர் ரஹ்மான். முடிந்தது.

    ReplyDelete
  127. ரிம்போச்சே10 October 2013 at 09:09

    //ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்? இவ்வாறான இமாலய சாதனைகள் புரிந்தவரை ஒரே ஒரு படம் மூலம் முகவரி இழக்க வைத்தவர் ரஹ்மான். முடிந்தது.//

    அண்ணே, நீங்க பத்தாங்கிளாஸ் பெயில்ணே. நா எட்டாங்கிளாஸ் பாஸ்ணே. பாஸ் பெருசா, பெயில் பெருசா?

    ReplyDelete
  128. காரியக்காரன் அவர்களே ....சாரி ...காரிகன் அவர்களே

    போகாத ஊருக்கு வழி கேட்பவர்தானே நீங்கள் ! இல்லாத இசைப் பெருமையை ரகுமானுக்கு இருப்பதாகச் சொல்லும் பொய்ப் பதிவர்தானே! வார்த்தை விருப்பத்தின் ஆரம்பத்திலிருந்தே இளையராஜா மீது நீங்கள் காட்டும் விருப்பம் ...இல்லை ...வெப்பம் எங்களுக்கு புரிகிறது . என் எழுத்தின் வெப்பம் பரத்துக்கு பாதித்திருக்கிறது . பாவம் புலம்புகிறார் ..உங்களை போலவே ..இல்லை ..இல்லை...'காதல்' பரத் போலவே!

    இளையராஜாவின் அருமை பெருமைகளை ஏதோ லேசா ஆங்காங்கே காட்டிவிட்டு " இது ஒரு மேலோட்டமான அவதானிப்பு. இளையராஜாவை நான் இரண்டு பதிவுகளில் பாராட்டியே எழுதியிருக்கிறேன். அதையெல்லாம் மறுபடி இங்கே கோடிட்டு காட்ட முடியாது " என்று பொய்யான தகவல் வேறு தருகிறீர்கள் . எல்லா பதிவிலும் இளையராஜா வசவுதான் . வார்த்தை விருப்பமா ...வசவு விருப்பமா? இளையராஜா அடிவருடிகள் நாங்கள் என்றால் ரகுமான் அடி தொழுது கொண்டிருக்கும் உங்களை சுட்டிக் காட்டும்போது அனல் அடிக்கிறது . நெருப்பை உமிழ்கிறீர்கள் . உங்களை போலவே நக்கல் .. விக்கல் எல்லாம் நாங்களும் செய்வோம் . வெறும் வார்த்தைச் சாடல் ..வாய்ச் சவடால் பேசி ராஜாவை பற்றிய அற்புதங்களை அழிக்க துடிக்கும் அரை குறை இசை ஞானமே ! ஆங்கில இசை மோகம் கொண்டு அலையும் உங்களைப் போன்ற அதிசய பிறவிகளுக்கு ரகுமானின் இசை அழகாகத்தான் தோன்றும் . அவரும் ஆங்கில இசை தவிர ஏதும் அறியாதவர்தானே!



    ReplyDelete
  129. திரு காரிகன்

    " அதே போல் 80, 90 களில் இளையராஜா மட்டுமே இசை அமைத்துக்கொண்டிருந்தார் " காரிகன்

    நாம் சொன்னோம்
    "அப்படியல்ல காரிகன் , கங்கை அமரன் , சங்கர் கணேஷ் , சக்கரவர்த்தி , ஜி.கே வெங்கடேஷ் , சந்திரபோஸ் , டி.ராஜ்நேதர், மனோஜ் கியான் ,எம்.எஸ்.விஸ்வநாதன் , கே.வீ மகாதேவன் ,சௌந்தர்யன் , ஷ்யாம், வீ.குமார் , ரமேஸ் நாயுடு , ஏ.வீ.ரமணன் ,சலீல் சவுத்ரி போன்ற பலரும் ஆட்டத்தில் இருந்தவர்களே..உபயம் ..விக்கிபீடியா.
    என்றோம்.அதற்க்கு நீங்கள் என்ன எழுதினீர்கள் பாருங்கள்.
    " உங்கள் பட்டியல் பெயரளவில் சரியே. அதிலும்கூட ஒரு நேர்மை இல்லை.எம் எஸ் வியையும் கே வி மகாதேவனையும் எதோ பத்தோடு பதினொன்றாக குறிப்பிடுள்ளீர்கள். இதில் சங்கர் கணேஷ் மட்டுமே இளையராஜாவுக்கு அடுத்த இடத்தில் இருந்தார் பட எண்ணிக்கையில். மற்றவர்கள் எல்லாருமே வெகு சொற்பமான படங்களுக்கு இசை அமைத்தவர்கள். சலில் சவுத்திரி மிகப் பிரபலமான பெங்காலி இசைஞர். ஹிந்திப் படங்களுக்கும் அவர் இசை அமைத்திருக்கிறார். இளையராஜாவே அவரிடம் பணி புரிந்தவர்தான்.அவரை எதோ உப்புக்கு சப்பாணியாக சேர்த்திருப்பது உங்களின் இசை அறிவை பன்மடங்கு பெரிதாக காட்டுகிறது. நீங்கல்லாம் நல்லா வருவீங்க..நடத்துங்க.." - காரிகன்
    என்று அதை ஒப்புக் கொள்ள முடியாத நீங்கள் , பிறகு என்ன எழுதுகிறீர்கள் பாருங்கள்.
    " அதிலும்கூட ஒரு நேர்மை இல்லை.எம் எஸ் வியையும் கே வி மகாதேவனையும் எதோ பத்தோடு பதினொன்றாக குறிப்பிடுள்ளீர்கள். - காரிகன்

    எம் எஸ் வியும் கே வி மகாதேவனும் 1980 களில் இசையமைக்கவில்லை என்கிறீர்களா?

    நேர்மையுடன் நீங்கள் தான் இல்லை , ராஜா ரசிகர்கள் எல்லாவற்றையும் நேர்மையுடனும் , கூர்மையுடன் தான் பார்க்கின்றோம்.தங்களைப் போல் குத்துமதிப்பாக அல்ல.

    மீண்டும் ,மீண்டும் வரலாற்று பொய்களை நீங்கள் எழுத் நாங்கள் அதை திருத்த வேண்டி இருக்கிறது.
    1980 கலீல் யார் யார் என்னென்ன படத்திற்கு இசையமைத்தார்கள் என்ற பட்டியலும் தயாராக உள்ளது.அதில் நீங்கள் ஒப்புக்கு புகழும் எம்.எஸ்.வீ , கே.வீ. எம் மும் அடங்கும்.

    சலீல் சௌத்த்ரி பற்றி லெக்சர் அடித்துள்ளீர்கள் , ஏதோ நம்மக்கு அஅவரைப் பற்றி தெரியாதது போல.அவர், ஆர்.டி.பரமன் , நௌசாத் எல்லாம் ராஜாவின் மிகப் பெரிய ரசிகர்கள் தெரியுமா உங்களுக்கு?

    "இப்போது பாரதிராஜா என்ன பேசுகிறார் பாருங்கள் . இசை என்கிற கோபுரம் மொட்டையாகி நிற்கிறது வா என்கிறார்."- விமல்
    " அவர் சொல்வது உண்மைதான்."
    இப்போது தான் நீங்கள் உண்மையை கக்கி விட்டீர்கள்.ஆனாலும் மீசையிலே மண் ஒட்டவில்லை என்ற கதை தான் !

    " கோபுரம் மொட்டையாகி நிற்கிறது வா " என்று பாரதி ராஜா , இளையராஜாவை ஏன் கூப்பிட வேண்டும்.ரஹ்மான், தேவா, ஜி வி பிரகாஷ் எல்லாம் லாயக்கில்லை என்பதால் தானோ?

    " ராசா 900 படங்கள் 4,500 பாடல்கள்.இவ்வளவு பாடல்களை யாரும் இதுவரை இசையமைக்கவில்லை.
    அதில் ஒரு 15 பாடல்களை யாரும் சாம்பிள் சொல்லலாம்."- விமல்
    " புயல் ரோஜாவில் தொடங்கி இன்று வரை காப்பி , ஒவ்வொரு படத்திலும் காப்பி ,, காப்பி தொடர்கிறது."

    ரகுமானை சொந்தமாக ஏதாவது போடச் சொல்லுங்கப்பா..?

    மற்றவன் எடுத்த வாந்தியா நமக்கு சாப்பாடு ? எத்தனை நாள் இந்த கொடுமையை சகிப்பது.?

    அரை குறைத் தகவல்கள்,பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் , கொட்டைப்பாக்கு விலை சொல்லும் குதர்க்கம் , அடிமைத்தனமான இசை அடிவருடிக்கு வக்காலத்து வாங்கும் இசை மடமை.
    நல்ல பொருத்தம்.வாழ்க cut & Paste.

    ReplyDelete
  130. "சலீல் சௌத்த்ரி பற்றி லெக்சர் அடித்துள்ளீர்கள் , ஏதோ நம்மக்கு அஅவரைப் பற்றி தெரியாதது போல.அவர், ஆர்.டி.பரமன் , நௌசாத் எல்லாம் ராஜாவின் மிகப் பெரிய ரசிகர்கள் தெரியுமா உங்களுக்கு?"

    அப்புடியே மைக்கல் ஜாக்சனு, பாரக் ஒபாமா, ஒசாமா பின் லாடன், நெல்சன் மண்டேலா பேரையெல்லாம் சேத்துக்கங்க...

    ReplyDelete
  131. . "எல்லா பதிவிலும் இளையராஜா வசவுதான் . வார்த்தை விருப்பமா ...வசவு விருப்பமா? இளையராஜா அடிவருடிகள் நாங்கள் என்றால் ரகுமான் அடி தொழுது கொண்டிருக்கும் உங்களை சுட்டிக் காட்டும்போது அனல் அடிக்கிறது . நெருப்பை உமிழ்கிறீர்கள் . உங்களை போலவே நக்கல் .. விக்கல் எல்லாம் நாங்களும் செய்வோம் . வெறும் வார்த்தைச் சாடல் ..வாய்ச் சவடால் பேசி ராஜாவை பற்றிய அற்புதங்களை அழிக்க துடிக்கும் அரை குறை இசை ஞானமே !"

    திரு சர்க்கஸ்,
    மனோகரா காலத்து கண்ணாம்பா பேசும் வசனம் போல தமிழ் குதிக்கிறதே உங்கள் எழுத்தில்! வாழ்த்துக்கள். எதோ சதி செய்து அரசாட்சியை கைப்பற்றிய நயவஞ்சகனை நோக்கி தூணில் கட்டிப்போடப்பட்டிருக்கும் கதாநாயகன்வீராவேசமாக முழங்குவதைப் போலிருக்கிறது. இத்தனை உக்கிரத்துக்கு நான் உகந்தவனில்லை என்று தோன்றுகிறது. மதுரையை எரித்த கண்ணகி தோற்றாள் போங்கள்!

    ReplyDelete
  132. குமரன்11 October 2013 at 13:11

    ஐயா
    எழுதும் அதிகப்பிரசங்கதனமான நக்கல், நையாண்டிகளை,வசைகளை நிறுத்திக் கொண்டு ஒழுங்காக பதிவுகளை எழுத முயற்ச்சி செய்யுங்கள்.அப்போதாவது உருப்படியா ஏதாவது வருகிறதா பார்ப்போம்.

    ReplyDelete
  133. குமரன்,
    எல்லோரிடமும் எப்போதுமே சீரியஸாக பேசிக்கொண்டிருக்க முடியுமா? நியாயங்கள் நிறைய எடுத்துரைத்தும் வீம்பாக மல்லுக்கு நிற்பவர்களிடத்தில் அவர்களுக்குப் புரியும் மொழியில் பேசுவதே மேல் என்பது நான் கண்ட உண்மை. நான் யாரையாவது மனக்காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோரலாம். நீங்கள் கூப்பாடு போடுவது ஏனென்று விளங்கிக்கொள்ள முடியவில்லை.வேண்டுமானால் ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவத்தைப் பற்றி விவாதிக்கலாமா?

    உருப்படியாக பதிவுகளை எழுதுங்கள் என்ற உங்களின் அறிவுரைக்கு மிக்க நன்றி.இளையராஜாவைப் பற்றி எழுதினால் அது தேறாது, உருப்படி இல்லை என்று நீங்கள் நினைப்பதுபோல எனக்குப் படுகிறது.

    ReplyDelete
  134. திரு காரிகன்,
    முதலில் உங்களுக்கு வந்திருக்கும் பின்னூட்டங்களைப் படிப்பவர்கள் நீங்கள் ரஹ்மானின் விசிறி என்றே நினைப்பார்கள். ஆனால் உங்களின் பதிவைப் படித்த பிறகே இது ஒரு உண்மையில்லாத குற்றச்சாட்டு என்பதை புரிந்துகொள்ள முடியும்.தரமான எழுத்துடன் நியாயமான கருத்துக்களுடன் நீங்கள் எழுதி வரும் பதிவுகள் அருமை. எதோ சிலர் வீண் பழி சுமதுவதற்க்காக உங்கள் நியாயங்களை சொல்லாமல் நிறுத்தி விடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இது போன்ற நம்முடைய இசை பற்றி சிலரே எழுதி வருகின்றனர். இலைய்ராஜாவுக்குரிய பாராட்டுகளை இன்னும் அதிகமாக கொடுத்திருந்தால் இத்தனை எதிர் வினைகள் வந்திருக்காது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  135. Rahman copies western music.We blame him. Ilayaraja did the same lifting tunes and tones from Bach and Mozart.And we call it classic. Isn't it time we talked some sense?

    ReplyDelete
  136. திரு ராதா கிருஷ்ணன்,
    வருகைக்கு நன்றி. ரஜினியை விமர்சிப்பவர் கமல் ரசிகராகத்தான் இருக்க முடியும் என்ற பிற்போக்குத்தனமான எண்ணம் நிறைய ஆசாமிகளுக்கு இருக்கிறது. அப்படியில்லாவிட்டாலும் அதுதான் சுலபமாக ஒருவரை எதிர்க்க ஆயுதமாக பயன்படுகிறது.ராஜாவா ரஹ்மானா என்ற விவாதத்துக்குள்ளே நான் என் பதிவை இழுத்துச் செல்லவில்லை.இருந்தும் சிலருக்கு அதுதான் தேவைப்படுகிறது. என்ன செய்வது?அப்போதுதான் அவர்களால் மேற்கொண்டு எதையாவது பேசமுடிகிறது. அவர்களுக்குப் பழக்கமான சாலையில் என்னை நிறுத்தி இப்படி வா என்று சொல்கிறார்கள்.Cheap trick.

    ReplyDelete
  137. Mr. Anonymous,
    You said it.Thanks. Despite the fact that Ilayaraajaa did lift some tunes from the great western classics, he is still considered "The King Of Tamil Folk Music". He deserves that much better than any other pointless title.There's a subtle design here in the internet to paint him larger than life, to portray him more than what he really is. But sadly this is done only by his die-hard fans and not by any unbiased critic..Let Ilayaraajaa be where he belongs. Give him the crown but let that not be snatched from someone's head.

    ReplyDelete
  138. நீதிதேவன்12 October 2013 at 22:23

    இசையில் தனித்தன்மை காட்டிய சிறப்பு ராஜாவுக்கே உரியது.

    எம்.எஸ்.வீ. காலத்தில் பல இசையமைப்பளர்கள் இருந்து இனிய பாடல்கள் தந்தார்கள் என்றால் ,அவருடனேயே ராமமூர்த்தி பங்களித்தார்.மற்றவர்களின் பெயர்களை சொல்வதென்றால் பட்டியல் நீளும்.

    ராஜா காலத்தில் அவர அளவுக்கு நவீன , இனிய பாடல்களை மற்றவர்களால் கொடுக்க முடியவில்லை.

    நல்ல இசையின் படுதோல்வி ரகுமான்.!

    அவருக்கு பின் வந்தவர்களை பற்றி கதைக்க தேவை இல்லை.

    இதை தாண்டி யாரும் "பதிவு" எழுத முடியாது.

    ஆகவே ராஜா தான் சிறப்பு வாய்ந்தவர் என்று தீர்ப்பு வழங்குகின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. சிறுவர்கள் சற்று தள்ளி விளையாடுவது நலம்.

      Delete
  139. யாருப்பா இந்த கோமாளி? படு மொக்கையா எதோ சொல்றாரு?

    ReplyDelete
  140. காலித்தனமான கருத்து. காரிகன் அவர்களே நீதிதேவன் என்ற பெயரில் வந்து எதையோ உளறி இருப்பவரின் பின்னூட்டத்தை எடுத்துவிடவும்.

    ReplyDelete
  141. திரு ஆர் கிருஷ்ணன் (ராதா கிருஷ்ணன் ?),
    நீதிதேவன் (என்ன கொடுமையான பெயர்?) எதோ தன்னால் ஆன மட்டும் சிரிப்புக்காக கைக்கு வந்ததை தட்டச்சு செய்திருக்கிறார். இருந்துவிட்டுப் போகட்டும். இது போன்ற கருத்துக்கள்தான் நமக்குத் தேவை. ராஜா ரசிகர்கள் நியாயமாக கருத்து சொல்பவர்கள் என்று விமல் வகையறாக்கள் புராணம் பாடிக்கொண்டிருக்கிறார்கள். இதுதான் அவர்களுடைய உண்மை முகம்.

    பல பேர் களத்தில் இருக்கும் சமயத்திலும் சிறப்பாக பாடல்கள் கொடுப்பதே நியாயமாக பாராட்டப்படவேண்டியது. ஒருவர் மட்டுமே விளையாடும் விளையாட்டில் வெற்றி பெரும் அந்த ஒருவரே சிறந்தவர் என்று பூமாலை சூட்டுவது சல்லித்தனமில்லையா?

    ReplyDelete
  142. பிரதீபன்13 October 2013 at 08:04

    காரிகன்

    நீதி தேவன் சொன்னது உண்மையே.

    " பல பேர் களத்தில் இருக்கும் சமயத்திலும் சிறப்பாக பாடல்கள் கொடுப்பதே நியாயமாக பாராட்டப்படவேண்டியது. ஒருவர் மட்டுமே விளையாடும் விளையாட்டில் வெற்றி பெரும் அந்த ஒருவரே சிறந்தவர் என்று பூமாலை சூட்டுவது சல்லித்தனமில்லையா? " காரிகன்

    பல பேரை களத்தில் நிற்கவேண்டாம் என்று யாராவது "தடா " போட்டார்களா ..?அல்லது ராஜா , தானே படங்களைத் தயாரித்து தானே இசையமைத்தாரா ..? அல்லது ராஜாவை " பாசத்தில் " வைத்திருந்தார்களா?

    அவனவனுக்கு கடவுளின் கொடை.அதை ஏன் உங்கள் அறிவுக்கண் பார்க்க மறுக்கிறது.அங்கே தான் இருக்கிறது உங்கள் பதிவின் சூட்சுமம்.

    சந்திரபோஸ், கங்கை அமரன் , எம்.எஸ்.வீ. , கே.வீ.எம் , சௌந்தர்யன், மனோஜ் கியான் ,சங்கர் கணேஷ்,இன்னும் பலர் ஆட்டத்தில் ஆங்காங்கே ஆடியவர்கள் தான் என்பது உண்மை தானே ?

    அப்படியில்லை.என்கிறீர்களா சாரே ..?

    "விமல் வகையறாக்கள்" என்று புராணம் பாடாமல் அவர்கள் சொன்ன கருத்துக்களை கருத்தாக எதிர் கொள்ள உங்களால் முடியவில்லை என்பதே உண்மை.

    உண்மையை ஒத்துக் கொள்ள ஈக்கோ விடுகுதில்லை அல்லவா.காரிகன்.?

    ReplyDelete
  143. "உண்மையை ஒத்துக் கொள்ள ஈக்கோ விடுகுதில்லை அல்லவா.காரிகன்.?"

    அய்யா பிரதீபன் புண்ணியவானே ,
    தயவு செய்து கொஞ்சம் சிரத்தையோடு தட்டச்சு செய்யுங்கள். உங்கள் பின்னூட்டங்களில் பிழைகள் மலிந்து கிடக்கின்றன.

    சரி. விஷயத்துக்கு வருவோம்.
    கே வி மகாதேவன்,எம் எஸ் வி,காலத்தில் இசை ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் இளையராஜாவின் காலத்தில் இசை monopoly ஆனது. எம் எஸ் வி, சங்கர் கணேஷ் என்ற இரண்டு இசை அமைப்பாளர்களைத் தவிர மற்ற எல்லோருமே தொடர்ச்சியாக ஒரு பத்துப் படங்களுக்குக் கூட இசை அமைத்தது கிடையாது. மனோஜ் கியான், சந்திர போஸ் இவர்களையெல்லாம் இளையராஜாவுக்கு போட்டி என்று சொல்வது மகா நகைச்சுவை. மேலும் இளையராஜாவின் இசையை இளைய தலை முறையினர் ரசித்தனர். அவரிடம் சரக்கு தீர்ந்து போனபின்பும் அவரையே நாம் சார்ந்திருந்தது தமிழ்த்திரைஇசையின் வீழ்ச்சியை குறிக்கிறது. அவரின் நல்ல பாடல்கள் என்பதெல்லாம் அவரின் மொத்த பாடல்களோடு ஒப்பிட்டால் குறைவானவையே. நீண்ட காலம் இருந்தார் என்பதை வேண்டுமானால் ஒரு சாதனையாகச் சொல்லலாம். (அதுவே ஒரு சர்வாதிகாரத்தனம்). இளையராஜாவின் பாதிப்பு இல்லாமல் இசை அமைத்த முதல் இசைஞர் ரஹ்மான்இந்த தனித்தன்மையே அவரின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்.

    ReplyDelete
  144. திரு காரிகன்,
    இளையராஜா சாயல் இல்லாமல் இசை அமைத்த இன்னொருவர் (அதுவும் அவர் கோலோசிக்கொண்டிருந்தபோதே) டி ராஜேந்தர். கவிதை இசை என்று எல்லாவற்றிலும் ராஜேந்தரின் இசை வேறுமாதிரி இருந்ததை நீங்கள் உணரவில்லையா?

    ReplyDelete
    Replies
    1. அனானி,
      நீங்கள் வேண்டுமென்றே ராஜேந்தரைப் பற்றி பேசுகிறீர்களா அல்லது சீரியசாகவே இதுதான் உங்கள் கருத்தா என்று தெரியவில்லை. ராஜேந்தரின் இசை தனியாகத் தெரியும் அளவுக்கு இளையராஜாவிடமிருந்து வித்தியாசமாகத்தான் இருந்தது. ஆனால் அவர் பொதுவாக மற்ற படங்களுக்கு இசை அமைப்பவர் கிடையாது. மேலும் அப்போது இருந்த இசையின் போக்கை வேறு வழியில் மாற்றி அமைக்கும்படியான இசையை அவர் அளிக்கவில்லை. அவரை ஒரு டிரெண்ட் செட்டர் என்ற அளவில் வைத்துப் பார்க்க முடியாது என்பதாலேயே அவரைக் குறிப்பிடவில்லை.அதே சமயம் ஒரு தலை ராகம் படப் பாடல்கள் மிக சிறப்பாக இருந்ததை கண்டிப்பாக மறுக்க முடியாது.

      Delete
  145. காரியக்கார ஐய்யா !

    /// கே வி மகாதேவன்,எம் எஸ் வி,காலத்தில் இசை ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் இளையராஜாவின் காலத்தில் இசை monopoly ஆனது. எம் எஸ் வி, சங்கர் கணேஷ் என்ற இரண்டு இசை அமைப்பாளர்களைத் தவிர மற்ற எல்லோருமே தொடர்ச்சியாக ஒரு பத்துப் படங்களுக்குக் கூட இசை அமைத்தது கிடையாது. மனோஜ் கியான், சந்திர போஸ் இவர்களையெல்லாம் இளையராஜாவுக்கு போட்டி என்று சொல்வது மகா நகைச்சுவை. மேலும் இளையராஜாவின் இசையை இளைய தலை முறையினர் ரசித்தனர். அவரிடம் சரக்கு தீர்ந்து போனபின்பும் அவரையே நாம் சார்ந்திருந்தது தமிழ்த்திரைஇசையின் வீழ்ச்சியை குறிக்கிறது. அவரின் நல்ல பாடல்கள் என்பதெல்லாம் அவரின் மொத்த பாடல்களோடு ஒப்பிட்டால் குறைவானவையே. நீண்ட காலம் இருந்தார் என்பதை வேண்டுமானால் ஒரு சாதனையாகச் சொல்லலாம். (அதுவே ஒரு சர்வாதிகாரத்தனம்). இளையராஜாவின் பாதிப்பு இல்லாமல் இசை அமைத்த முதல் இசைஞர் ரஹ்மான்இந்த தனித்தன்மையே அவரின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்.///

    மேற்கண்ட உங்கள் பதிலில் இருந்தே பதில் சொல்லலாம் . நாங்கள் பதிலுக்கும் அடிப்போம் . பதிலாலேயும் அடிப்போம் .

    இளையராஜா காலத்தில் monopoly செய்து அவர் இசை சாம்ராஜ்யம் செய்யவில்லை . எல்லாம் தானாக தேடி வந்த வாய்ப்புகள் . யார் வாய்ப்பையும் அவர் தட்டி பறிக்கவும் இல்லை . மற்றவர் செய்த இசையில் ஒரு சில பாடல்களே வெற்றி அடைந்தன . மற்றவை ப்ளாப் . இளையராஜா தொட்டது அனைத்தும் துலங்கியது . மற்றவர் அவர் இசை அருகில் வர முடியவில்லை . அது monopoly ஆகாது . ஆனால் ரகுமான் வந்த பிறகு அவருக்கு இணையாக வாசிக்கக் கூடிய மற்ற இசை அமைப்பாளர்களும் முளைத்தனர் . ஏன் அவரை விட சிறப்பாக இசை அமைத்தவர்களும் உண்டு . வித்தியாசாகர் , ஹாரிஸ் அந்த வரிசையில் நிற்கிறார்கள் . நீண்ட காலம் இசை அமைப்பில் இளையராஜா இன்னும் சாதித்து கொண்டுதான் இருக்கிறார் . ஏதோ அவர் சாதனை முடிந்து போனதைப் போல பிரமையை பொய்யாக பிரதி இடுவது அபத்தம் . இளையராஜாவிற்கு போட்டி என்று எல்லா இசை அமைப்பாளர்களையும் சொல்லலாம் . வெற்றி பெற்றவர்கள் யாரும் இல்லை என்பதே உண்மை . நூற்றுக்கு நூறு வாங்கும் ஒரு மாணவனுக்கு அடுத்த அதிக மதிப்பெண் 60 என்ற வீதத்தில்தான் இளையராஜாவும் மற்ற இசை அமைப்பாளர்களும் !

    இதற்கு சர்வாதிகாரம் என்ற மடத்தனமான வார்த்தை பிரயோகம் அனாவசியமானது . நீண்ட கால சாதனை என்பது சர்வாதிகாரமா? சகாப்தம் ஐயா சகாப்தம் . அந்த வகையில் பார்த்தால் ரகுமான் வாங்கிய ஆஸ்கார் அவார்ட் கூட சர்வாதிகாரதனத்தின் உச்சம் அல்லது எச்சம் என்று சொல்லிக் கொள்ளலாமா!? ஏனென்றால் அவரை விட மிகச் சிறந்த இசை அமைப்பாளர்கள் இருக்க அவார்டை அவர் வாங்கியது ஞாயமில்லை . சரியா !?




    ReplyDelete
  146. சால்ஸ்,
    உங்களுக்கு சில விஷயங்கள் புரியவில்லை என்றால் அதை அறிந்துகொண்டு பிறகு கருத்து சொல்வது நன்று.

    "அந்த வகையில் பார்த்தால் ரகுமான் வாங்கிய ஆஸ்கார் அவார்ட் கூட சர்வாதிகாரதனத்தின் உச்சம் அல்லது எச்சம் என்று சொல்லிக் கொள்ளலாமா!? ஏனென்றால் அவரை விட மிகச் சிறந்த இசை அமைப்பாளர்கள் இருக்க அவார்டை அவர் வாங்கியது ஞாயமில்லை . சரியா !? "

    இது ஒரு மகா அபத்தமான சிறுபிள்ளைத்தனமான கருத்து என்பதை ராஜா ரசிகர்களே ஒத்துக்கொள்வார்கள். மன்னிக்கவும் மடத்தனமான என்ற வார்த்தையையும் சேர்த்துக்கொள்ளவும்ஒரு இளைஞன் தன் முறை வந்ததும் அதை இன்னொரு வயதானவருக்கு விட்டுக்கொடுப்பதற்கு . ஆஸ்கார் அவார்ட் என்ன ரேஷன் கடை கியூவா? அல்லது வங்கி டோக்கன் நம்பரா? ஆங்கிலப் படங்களுக்கு இசை அமைத்தால் ஒருவரின் பெயர் ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. காந்தி படத்துக்கு இசை அமைத்ததால் பண்டிட் ரவிசங்கரின் பெயர் ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு கிடைக்கவில்லை. ரஹ்மானே இசைக்கென ஆஸ்கார் வாங்கிய முதல் இந்தியர். சற்று உங்களுடைய தனிப்பட்ட குரோதங்களை தள்ளிவைத்துவிட்டு ஒரு தமிழன் இதை சாதித்திருப்பதை வரவேற்பது நல்ல பண்பாடு. ஒருவேளை (நடக்க சாத்தியமேயில்லாவிட்டாலும்) இளையராஜா ஆஸ்கார் வாங்கியிருந்தால் கண்டிப்பாக நான் அவரை பாராட்டுவேனே தவிர இவ்வாறு அவதூறு பேச மாட்டேன்.

    "இளையராஜா காலத்தில் monopoly செய்து அவர் இசை சாம்ராஜ்யம் செய்யவில்லை . எல்லாம் தானாக தேடி வந்த வாய்ப்புகள் . யார் வாய்ப்பையும் அவர் தட்டி பறிக்கவும் இல்லை . மற்றவர் செய்த இசையில் ஒரு சில பாடல்களே வெற்றி அடைந்தன . மற்றவை ப்ளாப் . இளையராஜா தொட்டது அனைத்தும் துலங்கியது . மற்றவர் அவர் இசை அருகில் வர முடியவில்லை . "

    சரியே- ரஹ்மான் வரும்வரை. அதன் பின் என்ன நடந்தது என்பதை நாடறியும். உங்கள் பதிலிலேயே என் பதிலும் இருக்கிறது. ரஹ்மான் monopoly செய்யவில்லை. அவர் மற்றவர்களும் இசை அமைக்கும் படியாக இளையராஜா மூடி வைத்திருந்த கதவுகளை திறந்து வைத்தார். ரஹ்மான் வந்த பிறகே பலவிதமான இசை அமைப்பாளர்கள் தமிழில் வருவதற்கான சாத்தியங்கள் ஏற்பட்டன. ரஹ்மானை விட ஹேரிஸ், வித்யாசாகர் நன்றாக இசை அமைப்பதாக நீங்கள் சொல்வது உங்களின் தனிப்பட்ட கருத்து. அதை நான் மறுக்கப்போவதில்லை. அதே போல இளையராஜாவை விட ரஹ்மானோ அல்லது மற்ற யாரோவோ நன்றாக இசை அமைக்கிறார் என்று நான் சொன்னால் அதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? இங்குதான் என் நடுநிலை இருக்கிறது. உங்களைப் போன்ற ராஜா ரசிகர்களின் யோக்கியம் பல்லிளிக்கிறது.

    ReplyDelete
  147. பிரதீபன்14 October 2013 at 08:04

    " மனோஜ் கியான், சந்திர போஸ் இவர்களையெல்லாம் இளையராஜாவுக்கு போட்டி என்று சொல்வது மகா நகைச்சுவை." காரிகன்

    இப்படி போட்டி என்று இங்கே யார் சொன்னார்கள்.ஏதோ இருந்தார்கள்.என்று தான்சொல்கிறோம்.ராஜாவுக்கு நிகராக வரவே முடியவில்லை.
    பிறகெங்கே நல்ல பாடல்கள் கொடுப்பது?

    (அதுவே ஒரு சர்வாதிகாரத்தனம்) - காரிகன்

    அதற்கும் ராஜாவின் சர்வாதிகாரமா காரிகன்? இது தான் உண்மையான எந்த காரணமும் இல்லாத ராஜா மீதான வெறுப்பு. !

    டி.ராஜேந்தர் இசையில்[ ஒரு தலை ராகம் ] இன்னொரு இசையமைப்பாளரின்
    பங்கு இருந்ததாக என் நண்பர் சொல்கிறார்.

    "இளையராஜா காலத்தில் monopoly செய்து அவர் இசை சாம்ராஜ்யம் செய்யவில்லை . எல்லாம் தானாக தேடி வந்த வாய்ப்புகள் . யார் வாய்ப்பையும் அவர் தட்டி பறிக்கவும் இல்லை . மற்றவர் செய்த இசையில் ஒரு சில பாடல்களே வெற்றி அடைந்தன . மற்றவை ப்ளாப் . இளையராஜா தொட்டது அனைத்தும் துலங்கியது . மற்றவர் அவர் இசை அருகில் வர முடியவில்லை . "

    சரியே- காரிகன்.

    இதைத்தானே காரிகன் நாங்களும் நூற்றுக்க்னனக்கான பின்னூட்டங்களில் , திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

    // மற்றவர் செய்த இசையில் ஒரு சில பாடல்களே வெற்றி அடைந்தன . மற்றவை ப்ளாப் . இளையராஜா தொட்டது அனைத்தும் துலங்கியது . மற்றவர் அவர் இசை அருகில் வர முடியவில்லை / சார்ல்ஸ்

    இது தான் ரகுமானுக்கும் நடந்தது.அவரும் காலி டப்பாவாகி விட்டார்.

    ரஹ்மான் வந்த பிறகே பலவிதமான இசை அமைப்பாளர்கள் தமிழில் வருவதற்கான சாத்தியங்கள் ஏற்பட்டன. ரஹ்மானை விட ஹேரிஸ், வித்யாசாகர் நன்றாக இசை அமைப்பதாக நீங்கள் சொல்வது உங்களின் தனிப்பட்ட கருத்து. அதை நான் மறுக்கப்போவதில்லை. அதே போல இளையராஜாவை விட ரஹ்மானோ அல்லது மற்ற யாரோவோ நன்றாக இசை அமைக்கிறார் என்று நான் சொன்னால் அதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?- காரிகன்

    ஏற்றுக் கொள்கிறோம்.ரோஜா பாடலை ரசித்தோமில்லே! மரகதமணியை ரசித்தோம் அல்லவா..!!
    ரகுமான் ஒரிஜினலா அதாவது செய்தால் ரசிப்போமில்லே!!

    ReplyDelete
  148. பிரதீபன்14 October 2013 at 08:11

    அதே போல இளையராஜாவை விட ரஹ்மானோ அல்லது மற்ற யாரோவோ நன்றாக இசை அமைக்கிறார் என்று நான் சொன்னால் அதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?- காரிகன்

    ஏற்றுக் கொள்கிறோம்.ரோஜா பாடலை ரசித்தோமில்லே! மரகதமணியை ரசித்தோம் அல்லவா..!!
    ரகுமான் ஒரிஜினலா அதாவது செய்தால் ரசிப்போமில்லே!!

    "ரஹ்மான் வந்த பிறகே பலவிதமான இசை அமைப்பாளர்கள் தமிழில் வருவதற்கான சாத்தியங்கள் ஏற்பட்டன. " kaarigan

    ஆமாம் கீபோட் வைத்திருந்த சிறு பிள்ளைகள் எல்லாம் வந்து சீரழிந்த இசை தந்த கொடுமையை தானே சொல்கிறீர்கள். நல்ல இசை சாகடிக்கப்பட்டது

    ReplyDelete
  149. ரிம்போச்சே15 October 2013 at 06:58

    //அதற்கும் ராஜாவின் சர்வாதிகாரமா காரிகன்? இது தான் உண்மையான எந்த காரணமும் இல்லாத ராஜா மீதான வெறுப்பு. !//

    அட விடுங்க பிரதீபன். 80கள்ல இளையராஜா முழுநேரமும் தமிழ்ப்படங்களுக்கு கந்து வட்டி பைனான்ஸ் பண்ணிட்டு, கட்டப்பஞ்சாயத்து செஞ்சிட்டு, கதை, வசனம், பாடல் வரிகள், ஒளிப்பதிவு முதற்கொண்டு தலையீடு செய்துகொண்டு, 10/15 ரவுடிகள வச்சிகிட்டு கோடம்பாக்கம் வர்ர இசையமைப்பாளர்கள ஓட ஓட அடிச்சு விரட்டிட்டு ஒரு பெரிய தாதாவா வலம் வந்திருந்திருப்பாரா இருக்கும். இல்லாமப் போனா தமிழத் திரையுலக கைப்பிடியில வச்சிருந்திருக்க முடியுமா?

    ReplyDelete
  150. திரு பிரதீபன்,
    ரஹ்மான் காலி டப்பா ஆகிவிட்டடார் என்பது உண்மையெனில் இளையராஜா அதற்கு முன்பே காலி பெருங்காய டப்பா ஆகிவிட்டார் என்பதையும் நீங்கள் ஒத்துக்கொள்கிறிர்கள். நல்லது. நல்ல இசையை யார் கொடுத்தாலும் அதை நீங்கள் ஆதரிப்பீர்கள் என்ற வாக்குறுதியே போதும். இதுவே நான் விரும்பியது.

    ReplyDelete
  151. பிரதீபன்15 October 2013 at 09:15

    திரு ரிம்போச்சே
    சூப்பர்.அருமையான பதில்.

    //இளையராஜா அதற்கு முன்பே காலி பெருங்காய டப்பா ஆகிவிட்டார் என்பதையும் நீங்கள் ஒத்துக்கொள்கிறிர்கள்./ -காரிகன்

    ஐயா காரிகன் ,
    என்னை தாலாட்ட வருவாளா ,
    உன்னை விட இந்த உலகத்தில் உசந்தது
    ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம்
    கூட வருவியா என்னோடு கூட வருவியா

    என்று இசை அருவியில் நனைந்து கொண்டே இருக்கின்றோம்.வருடத்திற்கு 1, 2 படங்களுக்கு முக்கி முக்கி இசையமைத்து விட்டு நல்ல பாடல்களை கொடுக்க முடியாத கையாலாகாதவர்களை எல்லாம் , படத்திற்கு படம் பெரு வெற்றி பாடல்களை கொடுத்தவரை மட்டம் தட்டுவதையே தட்டி கேட்க நேர்ந்தது.

    சார்ல்ஸ் சொன்னது
    " இளையராஜா காலத்தில் monopoly செய்து அவர் இசை சாம்ராஜ்யம் செய்யவில்லை . எல்லாம் தானாக தேடி வந்த வாய்ப்புகள் . யார் வாய்ப்பையும் அவர் தட்டி பறிக்கவும் இல்லை . மற்றவர் செய்த இசையில் ஒரு சில பாடல்களே வெற்றி அடைந்தன . மற்றவை ப்ளாப் . இளையராஜா தொட்டது அனைத்தும் துலங்கியது . மற்றவர் அவர் இசை அருகில் வர முடியவில்லை . "

    அதற்க்கு நீங்கள் சொன்னது.

    சரியே- காரிகன்.
    என்பதாகும். இல்லையா.

    பின்னால் வந்த ரகுமான் கூட அவரளவு நல்ல பாடல்களை இசையமைக்க முடியவில்லை என்பதை நீங்களே ஒத்துக் கொள்வீர்கள் ...இல்லையா ..?

    அங்கொன்றும் , இங்கொன்றும் சுமாராக பாடல் தருபவர்களை [ அதில் தற்போதுள்ள எல்லா இசையமைப்பளர்களும் அடக்கம் ]அவருக்கு நிகராக வைக்க முடியாது என்பதை இப்போதாவது ஒத்துக் கொள்ளுங்கள்.

    நீங்கள் உதிர்த்த பல தவறான செய்திகளுக்கு நிறையவே ராஜ ரசிகர்கள் பதிலளித்து விட்டார்கள்.

    ReplyDelete
  152. பிரதீபன்,
    நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறீர்கள்? Time loop என்னும் காலச்சுழலில் மாட்டிகொண்டு விட்டீர்களா? நீங்கள் மட்டுமல்ல எல்லா ராஜா ரசிகர்களுமே இப்படித்தான் இருக்கிறார்கள்.இன்றைய இளைஞர்கள் கேட்கும் இசை வெகுவாக மாறிப்போய்விட்டது.இதில் ஒரு சிலர் ரஹ்மானையே போன தலைமுறையை சேர்ந்தவர் என்று சொல்லும் அளவுக்கு அவர்களின் இசை தேர்வு புதியவர்களை நோக்கிச் செல்கிறது.நீங்கள் இன்னும் இளையராஜா பாடலை எல்லோரும் விரும்பிக்கேட்பது போல ஒரு பொய்யான தகவலை ஸ்தாபிக்கிறீர்கள். ராஜா ரசிகர்களுக்கு அவர் இன்னும் இசைத்துறையில் இருக்கிறார் என்ற மாயை இருக்கிறது. மற்ற எல்லோரும் இளையராஜாவின் காலம் முடிந்து போய் இருபது வருடங்கள் ஆகிவிட்ட உண்மையை அறிந்தவர்கள். கொஞ்சம் 80 களை விட்டு நிகழ் காலத்துக்கு வாருங்கள். இங்கே என்ன விதமான இசை கேட்கப்படுகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.(உடனே இதெல்லாம் ஒரு பாட்டா? இதுதான் உங்களுக்கு பிடிக்குமோ என்றெல்லாம் திரியை கொளுத்த வேண்டாம். இருப்பதை சொல்கிறேன்.)

    ReplyDelete
  153. பிரதீபன்15 October 2013 at 22:34

    நீங்கள் தான் மாயையில் இருக்கின்றீர்கள்.

    அங்கொன்றும் , இங்கொன்றும் சுமாராக பாடல் தருபவர்களை [ அதில் தற்போதுள்ள எல்லா இசையமைப்பளர்களும் அடக்கம் ]அவருக்கு நிகராக வைக்க முடியாது என்பதை இப்போதாவது ஒத்துக் கொள்ளுங்கள்

    ReplyDelete
  154. பிரதீபன்,
    உங்களுக்கு தற்காலத்து பாடல்கள் பிடிக்காமலிருப்பதற்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம். உங்களின் சொந்த கருத்து பொதுவானதாக இருக்கவேண்டிய கட்டாயமில்லை.என்னைக் கேட்டால் இளையராஜாவின் 80 களின் (மத்தியில் வந்ததவை)பாடல்களே தரமானவை இல்லை என்பேன். அப்போதே இசை கெட்டுவிட்டது. அவ்வப்போது அத்தி பூத்தாற்ப் போல சில நல்ல பாடல்களை அவர் கொடுத்தார் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. ஒத்துக்கொள்வீர்களா? நானாவது பரவாயில்லை. எனக்குத் தெரிந்த சிலர் இளையராஜாவின் ஒரு பத்து இருபது பாடல்களைத் தவிர வேறு எதையும் கணக்கிலேயே சேர்த்துக்கொள்வது கிடையாது. எல்லோரும் சிலாகிக்கும் மன்றம் வந்த தென்றலுக்கு பாடலையே கிழி கிழியென கிழித்து துவம்சம் செய்யும் நபர்களையும் நானறிவேன். எனவே அங்கொன்றும் இங்கொன்றும் என்ற வார்த்தைப் பதம் இளையராஜாவுக்கும் பொருந்தும். இதில் என்ன ஒருவர் மேலே மற்றவர்கள் கீழே? இன்னும் சொல்லவேண்டுமென்றால் தமிழ்த்திரையிசையின் பொற்காலம் முடிந்து பத்துவருடங்கள் கழித்தே இளையராஜாவே வருகிறார். உங்கள் கருத்து பக்குவமற்றது. மாறிக்கொண்டு வரும் இசையை ஏற்றுக்கொள்ளாவிட்டால் உங்களைச் சுற்றி சிலந்திகள் கூடு கட்ட ஆரம்பித்துவிடும் அபாயம் இருக்கிறது. கவனம் தேவை.

    ReplyDelete
  155. "மாறிக்கொண்டு வரும் இசையை ஏற்றுக்கொள்ளாவிட்டால் உங்களைச் சுற்றி சிலந்திகள் கூடு கட்ட ஆரம்பித்துவிடும் அபாயம் இருக்கிறது. கவனம் தேவை."

    ரசித்தேன். உண்மையே.

    சதீஷ்குமார்

    ReplyDelete
  156. \\"மாறிக்கொண்டு வரும் இசையை ஏற்றுக்கொள்ளாவிட்டால் உங்களைச் சுற்றி சிலந்திகள் கூடு கட்ட ஆரம்பித்துவிடும் அபாயம் இருக்கிறது. கவனம் தேவை."\\

    \\பறவைகள் பறக்கின்றன. புழுக்கள் நெளிகின்றன.\\
    காரிகன், சில வறட்டு வாதக்காரர்களைத் தாண்டி அவர்களுக்கும் மிகவும் சீரியஸாக நீங்கள் பதிலளிக்கும்போது இப்படி இயல்பாக வந்துவிழும் வார்த்தைகளையும் உவமானங்களையும் ரொம்பவே ரசிக்கமுடிகிறது. இது உங்களின் படிப்பறிவைப் பறைச் சாற்றுகிறது.
    இங்கே சிலர் என்னதான் சொன்னாலும் ஒரே பல்லவியைக் கீறல் விழுந்த தொனியில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள், முதலில் இவர்களுக்கெல்லாம் 'தனிப்பட்ட விருப்ப இசைக்கும்' சமுதாயத்தில் மக்களிடம் பாதிப்பை ஏற்படுத்திய இசைக்கும் இருக்கும் வித்தியாசமே தெரியவில்லை. எனக்கு ரொம்பவும் பிடித்த இசை என்னுடைய நண்பர் ராகவன் என்பவர் வாசிக்கும் புல்லாங்குழல் இசைதான். அதற்கு ஈடு இணையே கிடையாது. ஆனால் இதனை நான் பொதுத்தளத்தில் வைத்துப் பேச முடியாது. தனிப்பட்ட ரசிகர்களைத் தாண்டி எல்லோரையும் கவரும் இசையைப் பற்றித்தான் பொதுத்தளத்தில் விவாதிக்க முடியும். இங்கே சிலர் இளையராஜாவின் இந்தப் பாடலைக் கேட்டீர்களா, அந்தப் பாடலைக் கேட்டீர்களா என்றெல்லாம் பட்டியல் போடுகிறார்கள். அப்படியெல்லாம் பல பாடல்கள் வந்தனவா என்பதே தெரியாது. இதைச் சொல்வதற்கு முன்பு நிறையப் பாடல்களைக் கேட்கும் நண்பர்கள் சிலரிடமும் விசாரித்துவிட்டுத்தான் இதனை எழுதுகின்றேன். அந்தப் பட்டியலில் இருக்கும் பாடல்களில் ஒன்று இரண்டைத் தவிர வேறு பாடல்களை அவர்கள் கேட்டதில்லை என்றே சொல்கிறார்கள். இவர்களுக்கு அதெல்லாம் தெரியாது. இளையராஜா சிடிக்களை இவர்கள் பத்திரமாக வைத்துக்கொண்டு இவர்கள் மட்டுமே ரசிப்பார்கள். அதனை ஊரெல்லாம் ரசித்து மகிழ்கிறது என்பதாக இவர்களே கருதிக்கொள்வார்கள்.
    இதோ சமீபத்தில் திரைப்பட நூறாவது ஆண்டுவிழா சென்னையில் ஜெயலலிதா தலைமையில் கொண்டாடப்பட்டது. (அந்த நிகழ்ச்சி சரிவர நடத்தப்படவில்லை. நிறைய காழ்ப்புணர்வுகளுடன் மதிக்கவேண்டிய பலரை மதிக்காமல் கொண்டாடப் பட்டது. ஜெயலலிதாவின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப நடத்தப்பட்டது என்பதெல்லாம் வேறுவிஷயம்.) அங்கே நடைபெற்ற பல்வேறு பாடல்களையும் நடனங்களையும் பார்த்தோம்.( அவை சரியான தேர்வு இல்லையென்ற போதிலும்) இவர்களெல்லாம் பேசுவது மாதிரி அல்லது நினைத்துக்கொண்டிருப்பது மாதிரி 'அன்னக்கிளியிலிருந்து நீதானே என் பொன் வசந்தம்' வரையிலான பாடல்கள் மட்டும்தான் இடம் பெற்றனவா? வேறு யார் பாடலும் இடம் பெறவில்லையா? ஜிராமனாதன், விஸ்வநாதன்- ராமமூர்த்தி, விஸ்வநாதன், கேவிமகாதேவன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, சுதர்சனம், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ், இமான், ஜிவிபிரகாஷ்குமார் என்று எத்தனையோ இசையமைப்பாளர்கள் இசையமைத்த பாடல்கள்தாமே ஒலித்தன? இவர் வந்தபிறகு அத்தனைப்பேரையும் ஓரம் கட்டிவிட்டார், எல்லாரும் காணாமல் போய்விட்டனர் என்றெல்லாம் எழுதும் நண்பர்கள் இதற்கெல்லாம் என்ன செய்யப்போகிறார்கள்?
    சமுதாயம் யார் யாரை மதிக்கிறது என்பதற்கும் யார் யார் பாடல்கள் இன்னமும் ஒலிக்கின்றன என்பதற்கும் இம்மாதிரியான நிகழ்வுகள்தாம் சான்று. இதெல்லாம் என்றென்றைக்கும் தொடரும். இந்தப் பட்டியலில் இளையராஜாவுக்கும் நிச்சயம் இடம் உண்டு.

    ReplyDelete
  157. ரிம்போச்சே16 October 2013 at 09:09

    //இவர்களெல்லாம் பேசுவது மாதிரி அல்லது நினைத்துக்கொண்டிருப்பது மாதிரி 'அன்னக்கிளியிலிருந்து நீதானே என் பொன் வசந்தம்' வரையிலான பாடல்கள் மட்டும்தான் இடம் பெற்றனவா? வேறு யார் பாடலும் இடம் பெறவில்லையா? ஜிராமனாதன், விஸ்வநாதன்- ராமமூர்த்தி, விஸ்வநாதன், கேவிமகாதேவன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, சுதர்சனம், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ், இமான், ஜிவிபிரகாஷ்குமார் என்று எத்தனையோ இசையமைப்பாளர்கள் இசையமைத்த பாடல்கள்தாமே ஒலித்தன? இவர் வந்தபிறகு அத்தனைப்பேரையும் ஓரம் கட்டிவிட்டார், எல்லாரும் காணாமல் போய்விட்டனர் என்றெல்லாம் எழுதும் நண்பர்கள் இதற்கெல்லாம் என்ன செய்யப்போகிறார்கள்? //

    திரு.அமுதவன்,

    "சிவாஜி கணேசன் மிகச் சிறந்த நடிகர்" என்றால் "MR. ராதா, பாலையா, நாகையா, ரங்காராவ், நாகேஷ், ஜெமினி, SSR போன்றவரெல்லாம் நடிகர்களே இல்லை, நடிக்கவே தெரியாதவர்கள்" என்று புரிந்து கொள்வீர்களா?

    //சமுதாயம் யார் யாரை மதிக்கிறது என்பதற்கும் யார் யார் பாடல்கள் இன்னமும் ஒலிக்கின்றன என்பதற்கும் இம்மாதிரியான நிகழ்வுகள்தாம் சான்று. இதெல்லாம் என்றென்றைக்கும் தொடரும். இந்தப் பட்டியலில் இளையராஜாவுக்கும் நிச்சயம் இடம் உண்டு.//

    ஆம், முதன்மையான இடம் உண்டு!

    ராஜா சாரை பற்றி பேச ஆரம்பித்தார். “மியுசிக்ல மட்டுமில்ல ராஜா போட்டோகிராபியிலும் பெரிய கில்லாடி. என்கிட்ட நிறைய ஆல்பங்களை காட்டியிருக்கார். இசை ஆளுமை அது இதுனு சொல்வாங்க. நான் அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன். இசையை தன் இஷடத்துக்கு ஆட்டி வைக்கக் கூடியவர் ராஜா. அந்த மேதமை எவனுக்கும் வராது. தப்பா நினைக்காதீங்க. இந்த மனுஷனோட திறமையும், பெருமையும் நமக்கு எப்ப தெரியும் தெரியுமா…அவர் இல்லாத போதுதான். இந்த நாட்டின் சொத்து ராஜா” என்று சொல்லி விட்டு ஒரு நிமிடம் அப்படியே தரையை பார்த்தபடி அமைதியாக இருந்தார் கமல். இசைஞானி மேல் அவர் வைத்திருக்கும் பாசத்தை பளீச் என்று காட்டியது அந்த மவுனம்

    இது பத்திரிகையாளர் தேனி கண்ணன் எழுதியது.

    ReplyDelete
  158. காரிகன்

    நீங்கள் கொண்ட பல தவறான கருத்துக்களுக்கு நீங்கள் " விமல் வகையறாக்கள் " என்று நிந்திக்கும் சிலர் தங்கள் கருத்துக்களை சொல்லி ,உங்கள் தப்பிதங்களை வெளிக்காட்டியுள்ளார்கள்.

    உங்கள் பதிவு மற்றும் பின்னூட்டங்களில் இருக்கும் இளையராஜா வெறுப்பை நாம் துல்லியமாக அறிந்து கொண்டோம்.நிறைய பேசியாயிற்று.நாய் வாலை நிமிர்த்த முடியாது என்ற கதைதான்.

    //.. எனக்குத் தெரிந்த சிலர் இளையராஜாவின் ஒரு பத்து இருபது பாடல்களைத் தவிர வேறு எதையும் கணக்கிலேயே சேர்த்துக்கொள்வது கிடையாது. எல்லோரும் சிலாகிக்கும் மன்றம் வந்த தென்றலுக்கு பாடலையே கிழி கிழியென கிழித்து துவம்சம் செய்யும் நபர்களையும் நானறிவேன்.// காரிகன்
    உங்களுக்கு உங்கள் ஆசான் அமுதவன் பதிலளிப்பதை பாருங்கள்.
    //எனக்கு ரொம்பவும் பிடித்த இசை என்னுடைய நண்பர் ராகவன் என்பவர் வாசிக்கும் புல்லாங்குழல் இசைதான். அதற்கு ஈடு இணையே கிடையாது. ஆனால் இதனை நான் பொதுத்தளத்தில் வைத்துப் பேச முடியாது./// அமுதவன்
    நீங்கள் இரண்டு பேரும் இரட்டைப்பிறவிகளா? சரி போகட்டும்.

    ராஜா இசையமைத்த பாடல்களில் 300 பாடல்கள் தான் நல்லது என்று திருவாய் மலர்ந்தருளியது யாரோ?இப்போ என்ன 20 என்ற புதுக்கவிதை இன்னும் அருமையாக இருக்கிறது.கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையா ?

    " எனக்குத் தெரிந்த சிலர் " யாரென்று நமக்கு சொல்வீர்களா ?


    திரு.அமுதவன்
    இந்த தளத்தில் நடந்த நகைச்சுவையை கொஞ்சம் பாருங்களேன்.
    காரிகன் சொன்னது:- " அதே போல் 80, 90 களில் இளையராஜா மட்டுமே இசை அமைத்துக்கொண்டிருந்தார் " //
    விமல் சொன்னது :- "அப்படியல்ல காரிகன் , கங்கை அமரன் , சங்கர் கணேஷ் , சக்கரவர்த்தி , ஜி.கே வெங்கடேஷ் , சந்திரபோஸ் , டி.ராஜ்நேதர், மனோஜ் கியான் ,எம்.எஸ்.விஸ்வநாதன் , கே.வீ மகாதேவன் ,சௌந்தர்யன் , ஷ்யாம், வீ.குமார் , ரமேஸ் நாயுடு , ஏ.வீ.ரமணன் ,சலீல் சவுத்ரி போன்ற பலரும் ஆட்டத்தில் இருந்தவர்களே..உபயம் ..விக்கிபீடியா.//

    விமல் சொன்னது :- பலர் இருந்தும் ராஜா அளவுக்கு நல்ல பாடல்களை கொடுக்க முடியவில்லை.//

    காரிகன் சொன்னது:- " பல பேர் களத்தில் இருக்கும் சமயத்திலும் சிறப்பாக பாடல்கள் கொடுப்பதே நியாயமாக பாராட்டப்படவேண்டியது. ஒருவர் மட்டுமே விளையாடும் விளையாட்டில் வெற்றி பெரும் அந்த ஒருவரே சிறந்தவர் என்று பூமாலை சூட்டுவது சல்லித்தனமில்லையா? "

    பிரதீபன் சொன்னது:- "பல பேரை களத்தில் நிற்கவேண்டாம் என்று யாராவது "தடா " போட்டார்களா ..?அல்லது ராஜா , தானே படங்களைத் தயாரித்து தானே இசையமைத்தாரா ..? அல்லது ராஜாவை " பாசத்தில் " வைத்திருந்தார்களா?

    காரிகன் சொன்னது:- "நீண்ட காலம் இருந்தார் என்பதை வேண்டுமானால் ஒரு சாதனையாகச் சொல்லலாம். (அதுவே ஒரு சர்வாதிகாரத்தனம்)."//

    சார்ல்ஸ் சொன்னது :- //" இளையராஜா காலத்தில் monopoly செய்து அவர் இசை சாம்ராஜ்யம் செய்யவில்லை . எல்லாம் தானாக தேடி வந்த வாய்ப்புகள் . யார் வாய்ப்பையும் அவர் தட்டி பறிக்கவும் இல்லை . மற்றவர் செய்த இசையில் ஒரு சில பாடல்களே வெற்றி அடைந்தன . மற்றவை ப்ளாப் . இளையராஜா தொட்டது அனைத்தும் துலங்கியது . மற்றவர் அவர் இசை அருகில் வர முடியவில்லை . " //

    அதற்க்கு காரிகன் என்ன சொன்னார் பாருங்கள் !

    காரிகன் சொன்னது:- //சரியே- //

    பிரதீபன் சொன்னது:- இதைத்தானே காரிகன் நாங்களும் நூற்றுக்கணக்கான பின்னூட்டங்களில் , திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

    சார்ல்ஸ் சொன்னது :- // மற்றவர் செய்த இசையில் ஒரு சில பாடல்களே வெற்றி அடைந்தன . மற்றவை ப்ளாப் . இளையராஜா தொட்டது அனைத்தும் துலங்கியது . மற்றவர் அவர் இசை அருகில் வர முடியவில்லை ///

    ரிம்போச்சே சொன்னது :- " அட விடுங்க பிரதீபன். 80கள்ல இளையராஜா முழுநேரமும் தமிழ்ப்படங்களுக்கு கந்து வட்டி பைனான்ஸ் பண்ணிட்டு, கட்டப்பஞ்சாயத்து செஞ்சிட்டு, கதை, வசனம், பாடல் வரிகள், ஒளிப்பதிவு முதற்கொண்டு தலையீடு செய்துகொண்டு, 10/15 ரவுடிகள வச்சிகிட்டு கோடம்பாக்கம் வர்ர இசையமைப்பாளர்கள ஓட ஓட அடிச்சு விரட்டிட்டு ஒரு பெரிய தாதாவா வலம் வந்திருந்திருப்பாரா இருக்கும். இல்லாமப் போனா தமிழத் திரையுலக கைப்பிடியில வச்சிருந்திருக்க முடியுமா?

    காரிகன் தட்டுததடுமாருவதை பார்க்க பரிதாப மாக இருக்கிறது.
    இப்போது தான் குளம் தெளிந்து வருகிறது . நீங்கள் வந்து கல் எறிய வேண்டாதிருக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  159. விமல்,
    கட் அண்ட் பேஸ்ட் செய்து நான் இப்படி சொன்னேன் நீ இப்படி சொன்னாய் என்று வித்தை காட்டுவது போலித்தனமாக இருக்கிறது. மேலும் உங்களிடத்தில் சொந்த சரக்கு என்று எதுவுமில்லை என்று தெரிகிறது. எனவேதான் இந்த வெட்டி ஓட்டும் தையல் வேலை செய்கிறீர்கள். இளையராஜா பாடல்களில் செய்த patch work போல. நீங்களெல்லாம் android போன் talking tom என்பதை மறுபடியும் நிரூபித்த உங்கள் திறமைக்கு சபாஷ்.இப்படியே மற்றவர்கள் சொல்வதையே வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்துங்கள். முன்னுக்கு வந்துருவீங்க.

    சால்ஸ் ஸுக்கு நான் சரியே என்று சொன்னேன். ரஹ்மான் வரும் வரை என்றும் சேர்த்தே சொல்லியிருக்கிறேன். தந்திரமாக அதை வெட்டி விட்டு இதோ பார் என்று மோடி மஸ்தான் போல பூச்சாண்டி காட்டுவது ஏன்? இளையராஜாவை அசைக்க யாராலும் முடியவில்லை என்றார் அவர். உண்மையே ரஹ்மான் வரும் வரை என்று பதில் நான் சொல்லியிருக்க அதில் இருக்கும் உங்களுக்குத் தேவையான உண்மையே என்ற வார்த்தையைக் காட்டி கொக்கரிப்பது கடைந்தெடுத்த காலித்தனம்.

    பிரதீபன், ரிம் போச்சே, குமரன் என்று பல பெயர்களில் நீங்கள் அதாவது ராஜா ரசிகர்கள் இருந்தாலும் எல்லாரும் ஒன்றுதான். எனக்கொன்றும் வேறு வேறு ஆட்கள் என்று தோன்றவில்லை. பல பெயர்கள் ஒரே கருத்து. அவ்வளவே. நான் நிதானமாகவே பதில் சொல்லிவருகிறேன். என் ஒவ்வொரு பதிலும் என் எண்ணங்களின் தொகுப்பாக இருக்கின்றன ஒட்டுப்போட்ட துணி போன்ற உங்களின் கருத்து போலல்லாமல்.

    உங்கள் பின்னூட்டம் ஒரே quotation மயமாக இருப்பதால் நானும் அதே தவறை செய்ய விரும்பவில்லை. என் விருப்பம் 300. நான் 10,20 என்று சொல்வது எனக்குத் தெரிந்த சில நண்பர்களின் விருப்பப் பாடல்கள். ஒழுங்காகப் படிக்கக்கூட நான் சொல்லித்தரவேண்டுமா என்ன? அது என்ன என் நண்பர்கள் யார் என்று சொல்ல முடியுமா என்று அநாகரீகமாக ஒரு கேள்வி? இசை ரசனைதான் கேடு கெட்டத்தனமாக இருக்கிறது என்றால் உங்களது எண்ணங்கள் படு பாமரத்தனமாக இருக்கிறதே. என்ன நினைத்துக்கொண்டு இப்படியெல்லாம் எழுதுகிறீர்கள் என்று தெரியவில்லை. உங்கள் எல்லை எங்கு இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டு அங்கேயே நின்று கொள்ளுங்கள்.

    ReplyDelete
  160. ரிம்போச்சே

    \\"சிவாஜி கணேசன் மிகச் சிறந்த நடிகர்" என்றால் "MR. ராதா, பாலையா, நாகையா, ரங்காராவ், நாகேஷ், ஜெமினி, SSR போன்றவரெல்லாம் நடிகர்களே இல்லை, நடிக்கவே தெரியாதவர்கள்" என்று புரிந்து கொள்வீர்களா?\\

    சிவாஜிகணேசனை எல்லாம் எங்கே எதற்காகப் பேசவேண்டும் என்ற வரைமுறையெல்லாம் ஒன்றுமே இல்லாமல் 'மொட்டைத் தாதன் குட்டையில் விழுந்தான்' என்பதுபோல் பேசிவிடுகிறீர்கள். சிவாஜி ஒரு கதாநாயக நடிகர். இவரைப் பல்வேறு குணச்சித்திர நடிகர்களுடன்(அவர்கள் மிகச்சிறந்த நடிகர்கள் என்பது உண்மையே) ஒப்பிட்டுப் பேசுவதன் மூலம் வாதத்தை நீங்கள் எந்தத் திசைக்குத் திருப்பவிரும்புகிறீர்கள் என்பது புரியவில்லை. ஆனாலும் உங்களின் இந்தக் 'கம்பேரிசன்' அப்படியே புல்லரிக்கவைக்கிறது.
    இன்னொரு மகா அறிஞரான ராஜா ரசிகர் ஒருவர் சிவாஜியெல்லாம் ராஜாவுக்கு ஈடாகிவிடுவாரா என்று வேறு கருத்துத் தெரிவித்திருந்தார். இது சிவாஜியின் கஷ்ட காலம் என்பதைத் தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை. 1952 முதல் ஒரு முப்பது வருடங்களுக்கு நடிப்புத்துறைக்கே இலக்கணம் வகுத்துக்கொண்டிருந்த ஒரு மகா பெரிய கலைஞனை ஒரு பத்து வருடங்களுக்கு சினிமாவின் ஒரு துறையில் முன்னணியிலிருந்த ஒருவருடன் ஒப்பிட்டுப் பேசுவதே கேவலமானது. அவரை விடவும் இவர்தான் ஒசத்தியாக்கும் என்ற பீடிகை வேறு. இளையராஜாவை எப்போதாவது நேரில் சந்திக்க முடிந்தால் அவரிடமே இதுபற்றிக் கேட்டுவிடுங்கள். "உங்களை சிவாஜியைவிட மேலானவர் என்று நாங்கள் சொல்லுகிறோம் அப்படிச் சொல்லலாம்தானே?" உங்கள் கன்னம் பழுக்காமல் நீங்கள் திரும்பிவந்தால் நீங்கள் செய்த அதிர்ஷ்டமாக இருக்கும். அல்லது இதே கேள்வியை நீங்கள் கமல்ஹாசனிடமும் கேட்டுப் பார்க்கலாம். பதில் பெற்றபிறகு நாம் மேற்கொண்டு இதுபற்றிப் பேசுவோம். அதுவரையிலும் சிவாஜி பற்றி எந்த அக்கப்போரும் வேண்டாம்.
    //சமுதாயம் யார் யாரை மதிக்கிறது என்பதற்கும் யார் யார் பாடல்கள் இன்னமும் ஒலிக்கின்றன என்பதற்கும் இம்மாதிரியான நிகழ்வுகள்தாம் சான்று. இதெல்லாம் என்றென்றைக்கும் தொடரும். இந்தப் பட்டியலில் இளையராஜாவுக்கும் நிச்சயம் இடம் உண்டு.//- இது நான் சொன்னது.

    \\ஆம், முதன்மையான இடம் உண்டு!\\ - இது உங்களுடைய பதில்.

    தமிழ்த்திரை இசை அமைப்பைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் எந்த மகானுபாவன் இளையராஜாவிலிருந்து ஆரம்பிப்பான்? தமிழில் கவிஞர்கள் வரிசையைச் சொல்லும்போது பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் என்று ஆரம்பிப்பானா, மு.மேத்தாவிலிருந்து, நா.காமராசனிலிருந்து, வைரமுத்துவிலிருந்து என்று ஆரம்பிப்பானா? அப்படி எவனாவது ஆரம்பித்தால் அவனுடைய வார்த்தைக்கு ஏதாவது மரியாதை இருக்குமா? 'அட பைத்தியக்காரப் பயலுக்கு ஒண்ணுமே தெரியலைப்பா. ஏதோ உளர்றான்' என்று சொல்லிவிட மாட்டார்களா? முதன்மை கிதன்மை எல்லாம் கிடையாது. தமிழின் இசையமைப்பாளர்கள் வரிசையில் ஆறாவதோ ஏழாவதாகவோதான் வருகிறார் இளையராஜா.

    ReplyDelete
  161. "காரிகன் தட்டுததடுமாருவதை பார்க்க பரிதாப மாக இருக்கிறது."

    யார் தடுமாறுகிறார்கள் என்று படிப்பவர்களே தெரிந்துகொள்ளட்டும். இதை விட இன்னொரு சான்று வேண்டுமா?

    ReplyDelete
  162. \\இந்த நாட்டின் சொத்து ராஜா” என்று சொல்லி விட்டு ஒரு நிமிடம் அப்படியே தரையை பார்த்தபடி அமைதியாக இருந்தார் கமல். இசைஞானி மேல் அவர் வைத்திருக்கும் பாசத்தை பளீச் என்று காட்டியது அந்த மவுனம்\\
    - இது பத்திரிகையாளர் தேனி கண்ணன் எழுதியதாம். இருக்கட்டும்.
    நீங்கள்ளாம் சொந்தமாக எதுவுமே எழுத மாட்டீர்களா, உங்களுக்கு எதுவுமே பேசத்தெரியாதா? எப்போதுபார் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று யாருக்கும் தெரியாத எந்தெந்த பேச்சுக்களையோ வைத்துக்கொண்டுதான் விவாதம் செய்ய வருவீர்களா?
    எங்க வீட்டுப் பக்கத்தில் ஒரு பாட்டி இருந்தார். அவர் இடுப்பில் எப்போதும் ஒரு சுருக்குப் பை இருக்கும். அவ்வப்போது அந்தச் சுருக்குப் பையிலிருந்து சில சோழிகளை வெளியில் எடுப்பார். "இதெல்லாம் நாங்க அந்தக் காலத்துல தாயம் ஆடியது" என்று சொல்லி அவற்றை ஒரு விகசிப்புடன் தடவிக்கொடுத்துவிட்டு மறுபடியும் அந்தச் சோழிகளை பத்திரமாக சுருக்குப்பைக்குள் போட்டு வைத்துக்கொண்டு விடுவார். அந்தச் சோழிகள் அவரிடம் இருக்கும் விஷயமும் யாருக்கும் தெரியாது. அதனால் யாருக்கும் எந்தவிதப் பிரயோசனமும் கிடையாது. அதுபோல உங்கள் சுருக்குப்பைகளில் நிறைய சோழிகள் இருக்கின்றன என்று நினைக்கிறேன்.
    எந்த ஒரு விஷயம் பேசினாலும் அதன் மைய நீரோட்டத்தை விட்டு விலகி எங்கேயோ ஏதோ ஒரு ஒற்றை வரியையோ ஒற்றைப் பாராவையோ பிடித்துக்கொண்டு அதிலிருந்து வாதங்களை திசை திருப்பும் வேலையைத்தான் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறீர்கள். மக்கள் முன்பு அங்கீகரிக்கப்பட்ட ஒரு சில நிகழ்வுகள் நடைபெறும்போது என்னமாதிரியாக இசையோ பாடல்களோ வைக்கப்படுகின்றன, பெரும் கலைஞர்களுக்கான வரிசை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்பதுபற்றிச் சொல்லியிருக்கிறேன். கமல்ஹாசன் ஏதோ ஒரு புகைப்படக் கண்காட்சியில் ராஜா பற்றி என்ன பேசினார் என்று பதில் தருகிறீர்கள்.
    ராஜாவும் கமல்ஹாசனும் முட்டிக்கொண்டு மோதிக்கொண்டு நின்றார்களே அப்போது பேசினதா அதற்கப்புறமா, அல்லது முன்பேவா? அவருடைய சில படங்களுக்கு ராஜாவுக்குப் போட்டியாய் யார் யாரையோ கொண்டுவர முயன்றாரே, புதுப் புது 'ரகுமான்களை' உருவாக்க முயன்றாரே அப்போது பேசினாரா அல்லது வேறு சமயத்திலா?
    அந்தச் சமயத்தில் ராஜா என்று சொல்லிவிட்டு அவர் தரையைப் பார்க்கவில்லையா?
    காரிகன்கூட முன்பே ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார். திரையுலகில் ஒரு ஜோக் உண்டு. ரகுமான் ஆஸ்கார் விருது வாங்கியபோது இரண்டு பேருக்குத் தூக்கம் போய்விட்டது. ஒருவர் இளையராஜா இன்னொருவர் கமல்ஹாசன் என்று. ஒருவர் ஆஸ்கார் நாயகர். இன்னொருவர் சிம்பொனி நாயகர். இருவரும் ஒரே புள்ளியில் இணைகிறார்கள் என்னும்போது தோளோடு தோள்சேர்ந்து நிற்பது இயல்பானதுதான்.


    \\உங்களுக்கு உங்கள் ஆசான் அமுதவன் பதிலளிப்பதை பாருங்கள்.\\
    விமல், இந்த ஆசான் பூசான் என்பதையெல்லாம் விட்டுவிட்டு உருப்படியாகப் பேசப்பாருங்கள். எல்லாரும் நண்பர்கள்தாம்.

    ReplyDelete
  163. அமுதவன் அவர்களே,
    உங்கள் கருத்துக்கு ஒரு ராட்சத சபாஷ். கலக்கலோ கலக்கல். இப்போது ஒரு விரிவான பதிலுக்கு நேரமில்லையாதலால் மேற்கொண்டு எழுத முடியவில்லை. நன்றி. மீண்டும் வருகிறேன்.

    ReplyDelete
  164. விமல்..16 October 2013 at 22:21

    அமுதவனய்யா
    தமிழ் திரையின் பெருமை இசை.அந்த இசையின் உச்சம் ராஜா.
    எம்.எஸ்.வீ என்று அறிய வேண்டிய பாடல்களை எல்லாம்
    "சிவா....ட்சீ சீ "பாடல் என்று "எம்..ஜி....ஜீ ,....ஆர்ர்ர்ர் " பாட்டு என்றும் அறிய வேண்டியிருந்தது.என்ன செய்வது கருமாந்திர காலம்.

    ரஜனியா ,, கமலா , ராமராஜனா , விசயகான்ன்ன் தா , போய் வேலையை பாரய்யா ...கொண்டு வா ராஜாவை !

    இது து தான் முன்னைக்கும் பின்னைக்கும் உள்ள வித்தியாசம்
    எம்.ஜி.ஆர் ,சிவாஜி படத்துக்கு யார் இசையமைத்தாலும் வெற்றி தான்.பாடல்களும் ஒ.கே தான்.அவர்கள் ஹீரோக்கள்.இசையமைப்பாளர்கள் எல்லாம் நடிகர்களின் கைபாவைகளே.அந்தக்காலத்தில்.

    இளையராஜா காலத்தில் அவரே தான் ஹீரோ..
    அதை ஏற்க்க முடியவில்லை.இது உங்கள் ஈகோ
    காரிகனும் அமுதவனும் ஒருவரை ஒருவர் பாராட்ட வேண்டியது தான் வேறு வழியில்லை.இருவரது எழுத்திலும் உண்மையும் இல்ல. எல்லாம் கோமாளித்தனமே.அதற்க்கு அவர்கள் இடும் பின்னூட்டங்களே சாட்சி.
    உலகைக் கண்டால் சிருப்புத்தான் வருகுதைய்யா

    ReplyDelete
  165. //1952 முதல் ஒரு முப்பது வருடங்களுக்கு நடிப்புத்துறைக்கே இலக்கணம் வகுத்துக்கொண்டிருந்த ஒரு மகா பெரிய கலைஞனை ஒரு பத்து வருடங்களுக்கு சினிமாவின் ஒரு துறையில் முன்னணியிலிருந்த ஒருவருடன் ஒப்பிட்டுப் பேசுவதே கேவலமானது.// அமுதவன்

    ஐய்யா
    சிவாஜி ரசிகனாக நீங்கள் இருந்துவிட்டு போங்கள்.
    சிவாஜி பற்றி மிருனாள் சென் என்ற உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் தான் சொன்னார்.
    " உங்கள் நடிகர் ஓவராக அழுகின்றார் ,எனக்கு பிடிக்காது என்று "
    மிருனாள் சென்னுக்கு ஒன்றும் தெரியாதா..?
    அதே கேள்வியை உங்களிடம் கேட்கிறேன் .இளையராஜா ஒரு நல்ல இசையமைப்பாளன் இல்லை என்று எந்த ஒரு இசையமைப்பாளன் அல்லது வேறு யாராவது சொல்லியிருக்கின்றர்களா?சொல்லத்தான் முடியுமா,,?

    தமிழ் சினிமாவை கெடுத்ததே எம்.ஜி.ஆறும், சிவாஜியும் தான்.கெடுத்து குட்டி சுவர் ஆக்கிய புண்ணியவான்கள்.

    ReplyDelete
  166. அமுதவன் அவர்களே,
    பல அருமையான கருத்துக்களை உள்ளடக்கிய அதுவும் நாகரீகமான நடையில் எழுதப் பட்ட அபாரமான பதில் உங்களுடையது என்பதில் சந்தேகமேயில்லை. இத்தனை அழகான தரமான தமிழில் இப்போது இணையத்தில் வெகு சிலரே எழுதி வருகிறார்கள்.பாராட்டுக்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நியாயமான கருத்தை படித்த திருப்தி உண்டாகிறது உங்களின் எழுத்துக்கள் மூலம். வாழ்த்துக்கள். அதுவும் அந்த பாட்டி சுருக்குப்பை கதை நெத்தியடி உவமை. சிறுவர்கள் காகித விமானம் செய்து விளையாடுவார்கள். அதுவே அவர்களுக்கு பெரிய மகிழ்ச்சி. உண்மையான விமானம் ஓட்டும் விமானியைப் பற்றி அவர்களுக்கு என்ன தெரியப் போகிறது?அந்த அனுபவத்திற்கு அவர்கள் இன்னும் நீண்ட தூரம் பயணம் செய்யவேண்டும் என்பது மட்டும் உண்மை. இவர்களோ வெறும் குளத்துத் தவளைகள். இவர்களிடம் கடலைப் பற்றி பேசி ஒன்றுக்கும் ஆகப்போவதில்லை.

    விமல் வகையறாக்கள் என்னதான் முயன்றாலும் அவர்களின் பண்பாட்டுக்கோடு ஒரு நாகரிக கேடு என்பதே உண்மை. சிவாஜி எம் ஜி ஆர் போன்றவர்களை கீழ்த்தரமாக விமர்சிப்பது அவர்களின் தனிவிருப்பம். அதே போலே இளையராஜாவை விமர்சிப்பதும் நடைமுறையில் சாத்தியமே. இவர்களால் ஒன்றும் உருப்படியாக சொந்தமாக சொல்லவே முடியாது. மிருனாள் சென் சொன்னார். சத்யஜித்ரே சொன்னார் என்று சிரிப்பொலி கிளிப்பிங் மாதிரி ஜோக்கடிப்பதே இவர்களின் ஒரே யுக்தி. இவர்களிடம் என்னவிதமான தரத்தை நாம் எதிர்பார்க்கமுடியும்?

    ReplyDelete
  167. When did Ilaiyaraaja and Kamal had Differences? The below video was taken in August this year.

    http://www.youtube.com/watch?v=2uCWp-bZlb0
    http://www.youtube.com/watch?v=utWjAUe7KEk

    Don't give False in formations.

    ReplyDelete
  168. "தமிழ் சினிமாவை கெடுத்ததே எம்.ஜி.ஆறும், சிவாஜியும் தான்.கெடுத்து குட்டி சுவர் ஆக்கிய புண்ணியவான்கள்."

    விமல்,
    கொஞ்சம் எல்லை தாண்டி வருகிறீர்கள் என்று தோன்றுகிறது. . எம் எஸ் வி காலத்தை கருமாந்திர காலம் என்று விவஸ்தையில்லாமல் சொல்லும் உங்களுக்கு இசையைப் பற்றிய எந்த சிறு அறிவும் இல்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது. அப்படியானால் இளையராஜா தமிழ் இசையை கெடுத்தவர் என்று தாராளமாகச் சொல்லலாம். உங்களோடு பேசிப் பயனில்லை. இனிமேலும் உங்களைப் போன்ற இசை வெறுமைகளை என் தகுதிக்கு இணையாக வைத்துப் பேசுவது முட்டாள்தனம் என்று உணர்வதால் உங்களோடு என்னால் இதற்கு மேல் நியாயமாக பேசமுடியாது என்று தோன்றுகிறது. உங்களின் கேடுகெட்ட ராஜா இசை ரசனையை உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள். என் தளத்தில் உங்களுக்கு வேண்டிய ஆட்டம் ஆடிவிட்டீர்கள்.இனிமேல் கொஞ்சமாவது நாகரீகத்துடன் ஏதாவது சொல்வதாக இருந்தால் வாருங்கள். இளையராஜாவைப் பற்றி நானும் கீழ்த்தரமாக பேச முடியும் என்பதை நினைவில் கொள்ளவும்.

    ReplyDelete
  169. பிரதீபன்17 October 2013 at 12:13

    "...தமிழ்த்திரை இசை அமைப்பைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் எந்த மகானுபாவன் இளையராஜாவிலிருந்து ஆரம்பிப்பான்? தமிழில் கவிஞர்கள் வரிசையைச் சொல்லும்போது பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் என்று ஆரம்பிப்பானா, மு.மேத்தாவிலிருந்து, நா.காமராசனிலிருந்து, வைரமுத்துவிலிருந்து என்று ஆரம்பிப்பானா?.." அமுதவன்.

    அமுதவன் சார்,
    தாங்கள் தானே இளையராஜா பற்றி எழுத வந்தால் கிட்டப்பா , கொன்னப்பா ,ராமநாதன் ,கே.வீ.எம் ,எம்.எஸ்.வீ என்று ஆரம்பிக்க வேண்டும் என்பீர்கள்.இப்போது ஏன் பாரதியிலிருந்து ஆரம்பிக்கின்றீர்கள்.?வள்ளுவன் ,இளங்கோ ,,மணிவாசகர் ,சுந்தரர், சம்பந்தர் ,கம்பன் ,அருணகிரி இன்ன பிற எல்லோரையும் கைகழுவி விட்டு திடும் என பாரதியிலிருந்து ஆரம்பிக்கின்றீர்கள் ! உங்கள் வார்த்தை சித்ததிலிருந்தே அதற்க்கு நாம் சொல்கிறோம்.இதோ..
    " அப்படி எவனாவது ஆரம்பித்தால் அவனுடைய வார்த்தைக்கு ஏதாவது மரியாதை இருக்குமா? 'அட பைத்தியக்காரப் பயலுக்கு ஒண்ணுமே தெரியலைப்பா. ஏதோ உளர்றான்' என்று சொல்லிவிட மாட்டார்களா?

    உங்கள் பாரதி கதையையும் அப்படி அர்த்தம் கொள்ளலாமா ஐய்யா !
    கமல் சொன்னது மீண்டும் ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது.
    " கவிதையில் பாரதி எப்படியோ அப்படித்தான், இசையில் இளையராஜா " -கமல்ஹாசன்

    "தமிழின் இசையமைப்பாளர்கள் வரிசையில் ஆறாவதோ ஏழாவதாகவோதான் வருகிறார் இளையராஜா..." அமுதவன்

    அப்போ உங்க அதிகாரப்படி பாரதிக்கு எத்தனையாவது இடத்தைக் கொடுக்கலாம்?
    அமுதத்தில் விஷம் கலக்காமல் பார்க்கவும்.

    ReplyDelete
  170. ரிம்போச்சே17 October 2013 at 19:27

    //நீங்கள்ளாம் சொந்தமாக எதுவுமே எழுத மாட்டீர்களா, உங்களுக்கு எதுவுமே பேசத்தெரியாதா? எப்போதுபார் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று யாருக்கும் தெரியாத எந்தெந்த பேச்சுக்களையோ வைத்துக்கொண்டுதான் விவாதம் செய்ய வருவீர்களா?//

    எல்லாம் உங்க கிட்ட கத்துக்கிட்டதுதான்.

    பிரபலமான, நீண்ட நெடிய அனுபவமுள்ள எழுத்தாளரான நீங்களே சாருவை, கங்கை அமரனை, சோவை வைத்து கருத்துகளைக் கட்டமைத்துக்கொள்ளும்போது அடியார்க்கும் அடியாரான இச்சிறியோன் செய்யக்கூடாதா?

    அதற்கு அமுதவன் மற்றும் காரிகன் இருவரிடமும் ஏதாவது "special permission" வாங்கவேண்டுமோ? சில காலத்துக்கு முன் பதிவுலகில் 'இணையத் தாசில்தார்கள்' என்ற சொல்லாடல் புழக்கத்தில் இருந்தது. அக்காலம் திரும்புகிறதோ என ஐயுறுகிறேன்.

    ReplyDelete
  171. ரிம்போச்சே17 October 2013 at 19:51

    // அதுபோல உங்கள் சுருக்குப்பைகளில் நிறைய சோழிகள் இருக்கின்றன என்று நினைக்கிறேன்.//

    Same here அய்யா.

    //எந்த ஒரு விஷயம் பேசினாலும் அதன் மைய நீரோட்டத்தை விட்டு விலகி எங்கேயோ ஏதோ ஒரு ஒற்றை வரியையோ ஒற்றைப் பாராவையோ பிடித்துக்கொண்டு அதிலிருந்து வாதங்களை திசை திருப்பும் வேலையைத்தான் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறீர்கள்.//

    இந்த இடுகையில் நான் இதுவரை இசையை மட்டுமே விவாதித்தாக நம்புகிறேன்.

    //பெரும் கலைஞர்களுக்கான வரிசை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்பதுபற்றிச் சொல்லியிருக்கிறேன்.//

    இதற்கு ஏதாவது ISO, CMMi போன்றவர்களிடமிருந்து தரச்சான்று வாங்கி வைத்திருக்கிறீர்களா?

    // கமல்ஹாசன் ஏதோ ஒரு புகைப்படக் கண்காட்சியில் ராஜா பற்றி என்ன பேசினார் என்று பதில் தருகிறீர்கள்.//

    தயவு செய்து நானிட்ட பின்னூட்டத்தின் மேல் சொடுக்கினால் மூலக் கட்டுரைக்கு எடுத்துச் செல்லும்; context புரியும்.

    ReplyDelete
  172. விமல் வகையறாக்களுக்கு,
    எம் ஜி ஆர், சிவாஜி என்ற இரண்டு மிகப் பெரிய ஆளுமைகள் இருந்த போதே தங்களின் தனித்தன்மையை நிரூபித்தவர்கள் நீங்கள் கருமாந்திர காலம் என்று வர்ணிக்கும் காலத்தில் இருந்த இசை மேதைகள். அவர்களின் இசையை நடிகர்களின் இசையாகப் பார்க்கும் பொதுபுத்தி நம்மிடம் இருந்த அபத்தத்தை குறை சொல்வதே பொருத்தம். அதையும் அந்த நடிகர்களின் ரசிகர்கள் மட்டுமே செய்தார்கள். உண்மையான இசை ரசனை கொண்டவர்கள் எம் எஸ் வி கே வி மகாதேவன் என்று இசைஞர்களை குறிப்பிட்டு சொல்வதே வழக்கம்.
    இளையராஜாவின் காலத்தில் எல்லாம் சட்டென மாறிவிடவில்லை. அப்போதும் கமல் பாட்டு ரஜினி பாட்டு என்றே ரசிகர்கள் பேசினார்கள். விமல் எந்த பிரபஞ்சத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்தாரோ தெரியவில்லை. ஏன்? இன்று கூட மோகன் ஹிட்ஸ் ராமராஜன் ஹிட்ஸ் ராஜ் கிரண் ஹிட்ஸ் என்று இளையராஜாவின் இசையை கூறு போட்டு தெருயோரக் கடைகளில் விற்றுக்கொண்டிருப்பது கண்ணில் படவில்லை போலும். கமல் ரஜினி படங்களுக்கு இசை அமைத்தன் மூலம் இளையராஜாவும் வளர்ந்தார் என்பதே உண்மை. சகலகலாவல்லவன் படத்திற்குப் பின் வந்த பாயும் புலி படப் பாடல்கள் நன்றாக இல்லை என்று ரஜினி ரசிகர்கள் இளையராஜாவின் வீட்டில் ரகளை செய்து கல்லெறிந்த சம்பவங்களை விமல் கேள்விப்பட்டதில்லையா? அப்போது "இளையராஜா காலத்தில் அவரே தான் ஹீரோ." என்ற உங்களின் வாதம் அடிபட்டுப்போகவில்லையா? இளையராஜா ஆரம்பத்தில் நன்றாக நகைச்சுவை உணர்ச்சி கொண்ட சாதாரண மனிதனாகவே இருந்ததை அவருடைய ஆரம்பகால பேட்டிகளிலிருந்து நாம் அறியலாம். வெள்ளை வேட்டி சட்டை சகிதம் ஞானி போல தன்னை காண்பிக்க துவங்கியதிலிருந்தே அவரின் போக்கு மாறியது.
    "உலகைக் கண்டால் சிருப்புத்தான் வருகுதைய்யா"
    என்ன ...சொல்ல வருகிறீர்கள் என்று ஒரு ...புரியவில்லை. ஒழுங்காக தட்டச்சு கூட செய்யத் தெரியாத நீங்களளெல்லாம் கருத்து சொல்லவேண்டும் என்று யார் கேட்டார்கள்?

    எம்ஜிஆர் சிவாஜி மட்டுமல்ல கமல் ரஜினி கூட தமிழ் சினிமாவை கெடுத்தவர்கள்தான். அதே போல இளையராஜா தமிழ் திரையிசையை தன்னால் இயன்ற அளவுக்கு கெடுத்தவர். தமிழ் திரையின் சாதனையாளர்களை தூக்கிஎறிந்து பேசக்கூடிய சுதந்திரம் உங்களுக்கு இருக்கும் பட்சத்தில் இன்னும் இருபது முப்பது வருடங்களில் காணாமல் போகக்கூடிய இளையராஜாவை அதே வார்த்தைகளை கொண்டு விமர்சிப்பதே நியாயம் என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  173. திரு .காரிகன்

    // எம் எஸ் வி காலத்தை கருமாந்திர காலம் என்று விவஸ்தையில்லாமல் சொல்லும் உங்களுக்கு இசையைப் பற்றிய எந்த சிறு அறிவும் இல்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது.// காரிகன்
    தயவு செய்து நான் எழுதியதை திரிக்க வேண்டாம்.
    //இசையமைப்பாளர்கள் எல்லாம் நடிகர்களின் கைபாவைகளே.அந்தக்காலத்தில்.//

    என்றுதான் எழுதியுள்ளேன்.உங்களைப்போல் " // தன் தகரக் குரலினால் கற்பழித்துக் கொலை செய்தவர் இளையராஜா // - // அவர் அறிமுகப்படுத்திய மிருகமான ..

    என்றெல்லாம் நான் வசைபுராணம் படிக்கவில்லை.எம்.எஸ்.வீ என்ற நல்ல இசையமைபபாளனுக்கு சேர வேண்டிய அங்கீகாரத்தை எல்லாம் இந்த " நடிகர்கள் " பறித்துக் கொண்டார்கள் என்று புரிய மறுக்கும் " இசைவிமர்சகர் " அல்லவா நீங்கள்.இந்த லட்சணத்தில் எம்.எஸ்.வீ ஏதோ உங்களுக்குத் தான் உரிமை என்ற போலி வேஷம்.அப்படி என்றால் எம்.எஸ்.வீ யை மதிக்கும் ராஜாவை நீங்கள் போற்ற வேண்டும். ஆனால் லொஜிக் எங்கேயோ உதைக்கிறதே!

    // உங்களைப் போன்ற இசை வெறுமைகளை என் தகுதிக்கு இணையாக வைத்துப் பேசுவது முட்டாள்தனம் என்று உணர்வதால் உங்களோடு என்னால் இதற்கு மேல் நியாயமாக பேசமுடியாது என்று தோன்றுகிறது. உங்களின் கேடுகெட்ட ராஜா இசை ரசனையை உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள்.// காரிகன்

    " என் தகுதிக்கு இணையாக வைத்துப் பேசுவது முட்டாள்தனம் ,,"
    இந்த மாதிரி இணையத்தில் யாருமே எழுதியதை நான் பார்க்கவில்லை.

    உங்கள் "தகுதிக்கு" இணையாக வைத்துப் பேச எங்களால் முடியாது தான் ஏனென்றால் நீங்கள் தான் " கேடுகெட்ட ராஜா " என்று தரமான , நாகரீகமான நடையில் எழுதுபவர் அல்லவா?
    ஒரு தாழம் பூ வந்து எப்படி எப்படி பதில் சொல்கிறது பாருங்கள்.

    //காரிகன், சில வறட்டு வாதக்காரர்களைத் தாண்டி அவர்களுக்கும் மிகவும் சீரியஸாக நீங்கள் பதிலளிக்கும்போது இப்படி இயல்பாக வந்துவிழும் வார்த்தைகளையும் உவமானங்களையும் ரொம்பவே ரசிக்கமுடிகிறது. இது உங்களின் படிப்பறிவைப் பறைச் சாற்றுகிறது. // அமுதவன்

    பதில் சொல்ல வக்கில்லாதவர்கள் " வரட்டு வாதம் " என்பார்கள்.இது தானே அவரது அகராதி.பாவம்.

    //கட் அண்ட் பேஸ்ட் செய்து நான் இப்படி சொன்னேன் நீ இப்படி சொன்னாய் என்று வித்தை காட்டுவது போலித்தனமாக இருக்கிறது.// காரிகன்

    ஏனென்றால் நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் என்றுமே புத்திசுவாதீனத்துடன் பதில் அளித்ததில்லை. அமுதவன் போல் தாண்டி சென்று ஓடி விடுவீர்கள்.

    நாங்கள் சொல்வதை " மோடி மஸ்தான் போல பூச்சாண்டி காட்டுவது " என்று நீங்கள் கருதினால் நாங்கள் சொன்ன முன்னுக்கு பின முரணான கருத்துக்கள் இருந்தால் நீங்களும் கட் அண்ட் பேஸ்ட் செய்து காட்டவும்.

    நீங்கள் தான் "இளையராஜா ஒருவரே 80 கலீல் இசையமைத்தார் "என்பீர்கள் , பிறகு "அதுவும் சர்வாதிகாரம் தான்" என்பீர்கள்.ஏனென்றால் நீங்கள் சொல்வதை நீங்களே மறந்து போவது தான் காரணம்.

    அதை தான் ஞாபகப்படுத்த வேண்டியிருக்கின்றது.

    செய்வன திருந்தச் செய்.
    ஆறுவது சினம்.

    சொன்னது அவ்வை.விமல் வகையறாக்கள் அல்ல.

    ReplyDelete
  174. எல்லாவற்றிலும் நடைபெறும் மாற்றங்களைப் போலவே திரையுலகிலும், இசையுலகிலும் அவ்வப்போது மாற்றங்கள் நடைபெறுகின்றன- நடைபெறவேண்டும்! பாடுபவர்களே நடிகர்களாக இருந்த காலங்கள்போய் சிவாஜி எம்ஜிஆர் காலத்தில்தான் பின்னணி பிரபலமானது. அந்தக் காலத்தில் எத்தனைக் குரல்களை, காலமெல்லாம் நிலைத்திருக்க வேண்டிய குரல்களைத் தேடிப்பிடித்து, அவற்றில் என்னென்னவோ வித்தியாசங்கள் பார்த்து, எந்தெந்த பாடல்களுக்கு, எந்தெந்த சூழல்களுக்கு அல்லது யார் யாருக்கு எந்தெந்த குரல்கள் பொருத்தமாயிருக்கும் என்றெல்லாம் பார்த்து அவர்களைத் தெரிவு செய்து பாடவைத்து பலமுறை ரிகர்சல் பார்த்து இசைக்கோர்ப்பு செய்து பாடல் போட்டவர்கள் அவர்கள். இந்த வகையில்தான் இவர்கள் போட்டுவைத்த சாலையில் பயணம் செய்தவர்தான் இளையராஜாவும் அவருக்குப்பின் வந்த இசையமைப்பாளர்களும். இன்றைய ஜிப்ரான் வரையிலும் இவர்கள்தாம் முன்னோடி. .........இவர்களின் பாடல்கள்தாம் கருமாந்திரக் கால பாடல்களாம். இப்படியெல்லாம் பொதுவெளியில் பேசுவதற்கே தயக்கமும் பயமும் கூச்சமும் வேண்டும். ஒரு நல்ல சமூகத்தில் இப்படிப்பட்ட கருத்துக்களை புத்திசுவாதீனமுள்ள நபர்கள் யாரும் பேசமாட்டார்கள். ஆனால் இணையத்தில் தயக்கமில்லாமல் கூச்சமில்லாமல் பேசுகிறார்கள்.
    எம்ஜிஆர் சிவாஜியின் ஆதிக்கம் தமிழ்த்திரை உலகையே ஆட்டிப்படைத்த ஆதிக்கம். அதுபற்றி பின்னூட்டங்களில் எல்லாம் பேசி மாளாது. சும்மா ஒரு அடையாளத்துக்காக 'அவர்களுக்குப் பின்னர்' கமல் ரஜனி என்று சொல்லலாமே தவிர எம்ஜிஆர் சிவாஜியின் 'ஆளுமைகளுக்கு' இதெல்லாம் ஈடானது அல்ல. 'அப்படிப்பட்டவர்களின்' காலத்திலேயே அவர்களுக்கு இணையாக பத்மினி, சாவித்திரி,சரோஜாதேவி,தேவிகா ஜெயலலிதா என்றெல்லாம் கதாநாயகிகள் அவர்களுக்கு ஈடான அந்தஸ்திலேயே பேசப்பட்டார்கள்.
    இதற்கு அடுத்த காலகட்டம் வந்தது. கமல், ரஜனி என்று பேசப்பட்டவர்களின் காலத்தில் ஸ்ரீப்ரியா, சுஜாதா, சரிதா,அம்பிகா, ராதா,ஸ்ரீதேவி என்று சிலர் பேசப்பட்டாலும் பழைய நடிகைகளின் அந்தஸ்தில் பேசப்பட்டவர் குஷ்பு ஒருவர்தான்.
    இதோ இன்றைக்கு விஜய், அஜித், சூர்யா ஆகியோரின் காலம்.....இரண்டு படங்களுக்கு ஒரு கதாநாயகி என்று வந்து நடித்து காணாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஆக இன்றைக்கு கதாநாயகிகளே முக்கியமில்லை. யார் வேண்டுமானாலும் கதாநாயகியாகலாம். ஹீரோக்கள் மட்டும்தான் முக்கியம். இந்த அடிப்படையில் பார்த்தால் சிவாஜி எம்ஜிஆரெல்லாம் கதாநாயகர்களே அல்ல; ஹீரோக்களே அல்ல. தமிழின் உண்மையான முதன்மையான ஹீரோக்கள் என்றால் விஜய்தான்; அஜீத் தான்; சூர்யாதான் - என்று எந்த மடையனாவது பேசுவானா?
    அப்படித்தான் இருக்கிறது, 'இசையமைப்பாளர்தான் குறிப்பிட்ட காலகட்டத்தின் ஹீரோ, கதாநாயகர்கள் இல்லை' என்பதும்.
    மாற்றங்கள் நடைபெற்றுக்கொண்டேதான் இருக்கும். அந்த மாற்றங்கள் சரியானவைதானா என்றுதான் பார்க்கவேண்டும்.

    ReplyDelete
  175. காரிகன் சார்

    கொஞ்ச நாளா உங்க பதிவுக்குள் வர முடியாத சூழல். இப்ப வந்து பார்த்தால் நிறைய பேசி இருக்கீங்க !

    /// ராஜா ரசிகர்களுக்கு அவர் இன்னும் இசைத்துறையில் இருக்கிறார் என்ற மாயை இருக்கிறது. மற்ற எல்லோரும் இளையராஜாவின் காலம் முடிந்து போய் இருபது வருடங்கள் ஆகிவிட்ட உண்மையை அறிந்தவர்கள். ///

    என்ன இப்படி ஒரு அபாண்டம் !? இன்னும் எல்லோரும் இளையராஜா காலத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம் - நீங்கள் உட்பட ! இன்னும் இசைத்துக் கொண்டுதான் இருக்கிறார் . சிலந்தி வலைக்குள் இருக்கிறீர்களோ - பூச்சிகள் போல !?

    /// இன்னும் சொல்லவேண்டுமென்றால் தமிழ்த்திரையிசையின் பொற்காலம் முடிந்து பத்துவருடங்கள் கழித்தே இளையராஜாவே வருகிறார். உங்கள் கருத்து பக்குவமற்றது. மாறிக்கொண்டு வரும் இசையை ஏற்றுக்கொள்ளாவிட்டால் உங்களைச் சுற்றி சிலந்திகள் கூடு கட்ட ஆரம்பித்துவிடும் அபாயம் இருக்கிறது.///

    உங்கள் இசை ரசனை சிலந்தி வலை போன்றததுதான் காரிகன் . அதில் மாட்டிக் கொண்டு நீங்கள் புழுக்களாக நெளிய இளையராஜா இசையினால் பறவைகள் போல் சிறகடித்து நாங்கள் பறக்கிறோம். இளையராஜாவின் இசை பேரண்டம் போன்றது . மற்றவர் இசை கேலக்சிதான் . அண்டம் விரிந்து கொண்டே செல்லும் . எங்களைச் சுற்றி கூடு இல்லை . நீங்கள்தான் அர்த்தமற்ற இசை தந்து தமிழ் திரை இசையை நாசப் படுத்திய ரகுமான் போன்றோரின் மாய வலைக்குள் சிக்கி சின்னாபின்னமாகி விட்டீர்கள். ஒரு கேள்வி . பொற்காலம் என்று சொன்னீர்களே . அது எப்போது ?

    /// எம் ஜி ஆர், சிவாஜி என்ற இரண்டு மிகப் பெரிய ஆளுமைகள் இருந்த போதே தங்களின் தனித்தன்மையை நிரூபித்தவர்கள் நீங்கள் கருமாந்திர காலம் என்று வர்ணிக்கும் காலத்தில் இருந்த இசை மேதைகள். அவர்களின் இசையை நடிகர்களின் இசையாகப் பார்க்கும் பொதுபுத்தி நம்மிடம் இருந்த அபத்தத்தை குறை சொல்வதே பொருத்தம்.///

    பூசணிக் காயை சோற்றில் மறைக்க முடியுமா ? அந்தக் காலத்தில் எம். ஜி. ஆர் பாட்டு , சிவாஜி பாட்டு என்றுதான் மக்கள் பேசிக் கொள்வார்கள் . இளையராஜா வந்த பிறகே எல்லோரும் பரவலாக இது இளையராஜா பாட்டு என்று சொல்ல ஆரம்பித்தார்கள் . மக்கள் எல்லோரும் இசை அமைப்பாளனை திரும்பி பார்க்க வாய்த்த பெருமை இளையராஜாவையே சாரும் . அந்த அங்கீகாரம் வாங்கிக் கொடுத்தவரே இளையராஜாதான் ! இல்லாவிட்டால் இது ரகுமான் பாட்டு என்று சொல்லிக் கொள்கிறீர்களே அது கூட சொல்ல முடிந்திருக்காது .



    ReplyDelete
  176. பிரதீபன், தமிழில் கவிஞர்கள் வரிசையை ஆரம்பிக்கும்போது தொல்காப்பியரிலிருந்து ஆரம்பிக்காமல் பாரதியிலிருந்து ஏன் ஆரம்பிக்கிறேன் என்றால் பேசுபொருளுக்கு ஏற்ப இசைபற்றிப் பேசும்போது நான் தியாகய்யர் சியாமா சாஸ்திரிகள் என்றெல்லாம் ஆரம்பிக்காமல் ஜி.ராமனாதனிலிருந்து ஆரம்பிக்கிறேன் இல்லையா அந்த ஃபார்முலாபடிதான்.
    கமலஹாசனின் சில கருத்துக்களை 'அப்படியே' ஏற்றுக்கொள்வதற்கில்லை. அவர் ஒருமுறை சொன்னார் "நான் கம்பனைக்கூட பெரிய கவிஞர் என்று ஒத்துக்கொள்ள மாட்டேன். என்னைப் பொறுத்தவரை கண்ணதாசன்தான் பெரிய கவிஞர்"- இதுபற்றி அப்போதே நான் பிலிமாலயாவில் கட்டுரை எழுதியிருக்கிறேன்.

    ரிம்போச்சே,
    'ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம் என்பதில்லை' என்று சொல்வார்களே, அதைத்தான் உங்கள் பதில் நினைவுபடுத்துகிறது. 'சொந்தமாகவே எதுவும் பேசமாட்டீர்களா, பேசத்தெரியாதா எடுத்ததற்கெல்லாம் அவர் சொன்னார் இவர் சொன்னார்' என்றுதான் விவாதம் செய்ய வருவீர்களா என்று நான் கேட்டதற்குக் காரணம் விவாதங்களின்போது எந்த வாதங்களையுமே எடுத்துவைக்காமல் வெறும் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று மட்டுமே சொல்லி புளகாங்கிதம் அடைகிறார்களே அவர்களுக்காகத்தான். பேசும்போதும் சரி, எழுதும்போதும் சரி மற்றவர்கள் இப்படிச் சொன்னார்கள் என்று சொல்லி வாதங்களைக் கொண்டு செல்வதுதான் சுவாரஸ்யமானது மட்டுமல்ல, புத்திசாலித்தனமானதும்கூட. ஒரு நல்ல பேச்சாளனோ கட்டுரையாளனோ இப்படித்தான் தன்னுடைய வாதங்களைத் தகவமைத்துக்கொள்வான். அப்படியில்லாமல் 'அவர் இதைச் சொல்லிவிட்டார்; இவர் அதைச் சொல்லிவிட்டார்' என்று சொல்லிவிட்டு அங்கேயே தேங்கி நின்றுவிடுகிறார்கள் பாருங்கள் அவர்களை சகித்துக்கொள்வதற்கில்லை. ஒருவரை Quote செய்வது தப்பில்லை. அந்தக் Quotation னிலேயே தேங்கி நின்று அங்கேயே அழுது புரண்டுகொண்டிருக்கிறார்களே அவர்களை என்ன செய்யலாம்?
    சிவாஜி என்று ஆரம்பித்தாலேயே விமல் என்பவர் மிருணாள்சென் என்ன சொன்னார் தெரியுமா என்பதைத்தவிர வேறு ஏதாவது பேசியிருக்கிறாரா என்பதைக் கொஞ்சம் தேடிப்பாருங்கள்.
    நான் சாரு சொன்னதையும், சோ சொன்னதையும், கங்கை அமரன் சொன்னதையும் எழுதியிருக்கிறேன்தான். அங்கேயே தேங்கி நின்று ஜல்லியடித்துக்கொண்டில்லையே. வேறு விஷயங்களுக்கு நகர்ந்துவிட்டேனா இல்லையா?
    பெரும் கலைஞர்களுக்கான வரிசையைச் சொல்ல யாரிடமும் தரச்சான்றுகளெல்லாம் வாங்கத்தேவையில்லை. கம்பன், இளங்கோ, பாரதி, பாரதிதாசன் என்றெல்லாம் சொல்ல இலக்கிய நிகழ்வுகளையும் சமூகத்தின் தாக்கங்களையும் சரியான பார்வையுடன் கவனித்து வந்தாலேயே போதும், ஒரு மரபுத்தொடர் தானே உருவாகிவிடும்.

    ReplyDelete
  177. விமல்,
    கருமாந்திர காலம் என்று காறித்துப்பிய நீங்கள் இப்போது என்னை அப்படி திரிக்கவேண்டாம் என்று கூப்பாடு போடுவது வேடிக்கையாக இருக்கிறது.நான் இளையராஜாவை காட்டமாக என் பதிவுகளில் விமர்சனம் செய்வதில்லை. பின்னூட்டங்களில் அப்படி செய்வதின் காரணம் உங்களைப் போன்றவர்களின் பக்குவமற்ற போக்கினாலேயே. இது ஒரு எதிர்வினை. இப்படி நான் உங்களுக்கு புரியும் மொழியில் பேசும்போதுதான் நீங்கள் சில விஷயங்களை உணர்வதாக எனக்குத் தோன்றுகிறது.
    எம் எஸ் வி யை மதிக்கும் இளையராஜாவை நான் போற்ற வேண்டுமாம். அது என்னால் முடியாது. ஆனால் அதற்காக இளையராஜாவை நான் கண்டிப்பாகப் பாராட்டத் தயங்க மாட்டேன்.எம் எஸ் வி போன்ற இசை ஆளுமைகள் பாடுபட்டு கட்டி எழுப்பிய இசை மாளிகையை சீரழித்தவர் இளையராஜா என்பதை நான் பலமுறை சொல்லிவருபவன்.அதிலிருந்து நான் பின்னோக்கிப் போவதில்லை. திடமான எண்ணங்கள் என்னிடம் உண்டு. ஓடி ஒளிந்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் நானில்லை.என்னுடைய வீழ்ந்த இசையில் இளையராஜா எவ்வாறு இந்த சீரழிவை நிறைவேற்றினார் என்பதை உங்களுக்குப் புரியும் வண்ணம் தெளிவாகவே சொல்லியிருக்கிறேன். புரியாதது போல நடிப்பதால் நீங்கள்தான் கோமாளியாக காட்சியளிக்கிறீர்கள். வெகு காட்டமாக எதுவும் பேச வேண்டாம் என்று நான் சில சமயங்களில் சில விவாதங்களை தவிர்க்கக்கூடியவனாக இருப்பதால் என் அமைதியை நீங்கள் தவறாக புரிந்துகொள்கிறீர்கள். உங்களுக்கோ அமுதவனையும் என்னையும் விமர்சனம் செய்வதே நீங்கள் எனக்குச் சொல்லும் பதில் என்ற எண்ணம் இருக்கிறது. மீண்டும் மீண்டும் நாங்கள் பேசும் வார்த்தைகளை வைத்துக்கொண்டு பல்லாங்குழி ஆடுகிறீர்கள். இதில் நானும் கட் அண்ட் பேஸ்ட் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வேறு. அதி மேதாவிதான்.
    என் தகுதி என நான் குறிப்பிட்டது எல்லா நல்லிசையையும் நேசிக்கும் என் இசை ரசனையையே. இதில் இளையராஜாவின் இசையும் அடக்கம் என்பதை எந்தவிதமான போலித்தனமும் இல்லாமல் சொல்கிறேன். . மேலும் எனக்குப் பிடித்தவர்களை உலகத்திலேயே இவர்கள் மாதிரி கிடையாது என்று வறட்டு வாக்கியங்களுக்குள் அவர்களை கொண்டு சென்று நான் அடைப்பதில்லை. இந்த நேர்மை உங்களைப் போன்றவர்களிடத்தில் இருக்கிறதா என்று உங்களயே கேட்டுக்கொள்ளுங்கள். நல்ல இசை எங்கிருந்தாலும் அதை ரசிக்கும் தகுதி இல்லாதவர்கள் என் கருத்தை துல்லியமாக புரிந்துகொள்ளமுடியாது.

    ReplyDelete
  178. War of words. Well done. Interesting. Keep it going.

    ReplyDelete
  179. பிரதீபன்18 October 2013 at 13:21

    அமுதவன் சார்
    //"நான் கம்பனைக்கூட பெரிய கவிஞர் என்று ஒத்துக்கொள்ள மாட்டேன். என்னைப் பொறுத்தவரை கண்ணதாசன்தான் பெரிய கவிஞர்"- இதுபற்றி அப்போதே நான் பிலிமாலயாவில் கட்டுரை எழுதியிருக்கிறேன் //-அமுதவன்

    நல்லா எழுதலாமே.ஆனால் நமக்குத்தான் எந்த பக்கத்தால் சிரிப்பது என்று தெரியவில்லை.வாசிக்கத கட்டுரை பற்றி நாம் ஒன்றும் சொல்வதற்க்கில்லை.
    ஆனால் ஒன்று " நான் கம்பனைக்கூட பெரிய கவிஞர் என்று ஒத்துக்கொள்ள மாட்டேன்." எனபதும் இளையராஜாவை மறுப்பதும் உங்கள் இஸ்டம்.

    ஆனால் இளையராஜா பற்றிய உங்கள் கூச்சல் எங்களிடம் எடுபடாது.இளையராஜா பற்றிய உங்கள் கூச்சல் இசையில் பால்குடித்தனம் என்பது மட்டும் தெரிகிறது.

    பூனை கண்ணை மூடிக் கொண்டால்
    உலகம் இருண்டு போகுமா ..
    என்று சொன்னவர்கள் முட்டாள்களாய் இருக்குமோ?

    ReplyDelete
  180. வழமையான உங்கள் எழுத்து நாடகத்தால் கயிறு திரிக்கும் வேலையை ஆரம்பித்து விட்டீரகள் அமுதவன் சார்.

    //எல்லாவற்றிலும் நடைபெறும் மாற்றங்களைப் போலவே திரையுலகிலும், இசையுலகிலும் அவ்வப்போது மாற்றங்கள் நடைபெறுகின்றன- நடைபெறவேண்டும்! பாடுபவர்களே நடிகர்களாக இருந்த காலங்கள்போய் சிவாஜி எம்ஜிஆர் காலத்தில்தான் பின்னணி பிரபலமானது. அந்தக் காலத்தில் எத்தனைக் குரல்களை, காலமெல்லாம் நிலைத்திருக்க வேண்டிய குரல்களைத் தேடிப்பிடித்து, அவற்றில் என்னென்னவோ வித்தியாசங்கள் பார்த்து, எந்தெந்த பாடல்களுக்கு, எந்தெந்த சூழல்களுக்கு அல்லது யார் யாருக்கு எந்தெந்த குரல்கள் பொருத்தமாயிருக்கும் என்றெல்லாம் பார்த்து அவர்களைத் தெரிவு செய்து பாடவைத்து பலமுறை ரிகர்சல் பார்த்து இசைக்கோர்ப்பு செய்து பாடல் போட்டவர்கள் அவர்கள். // அமுதவன்
    எல்லாம் தெரிந்தவர் போல உளற வேண்டாம்.

    அப்போ ஏன் ஏ.எம்.ராஜா ,ஸ்ரீநிவாஸ் ,டீ.ஆர்.மகாலிங்கம் , சீர்காழி கோவிந்தராஜன் , திருச்சி லோகநாதன் , பி.லீலா , ஜமுனாராணி, எம்.எஸ்.ராஜேஸ்வரி , ஜிக்கி, கோமளா போன்றவர்கள் ஓரம் கட்டப்பட்டார்கள்.அவர்களது குரல் நன்றாக இல்லையா?அல்லது ஒரு படத்தில் ஒரு பாட்டு மட்டுமா வந்தது?

    "என்னென்னவோ வித்தியாசங்கள் பார்த்து," ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. இவருக்கு இவர் தான் பாட வேண்டும் என்ற முட்டாள்தனம் தான் காரணம்.வேறு இல்லை. ஒருவருக்கு ஒருவர் பாடுவது என்பதே பொய் என்ற பின் யாருக்கு யார் பாடினால் தான் என்ன.?சிவாஜி கூட இதை நம்பாதவர் என்று அறிந்தேன்.அவருக்கு யார் பாடினாலும் நடிப்பேன் என்று சொல்லும் "தில் " இருந்தது என்பார் எனது மாமா.
    இரண்டு நடிகர்கள் அதிகமாக பிரபலமாக இருந்தததால் தான் அந்த பாடல்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். சிவாஜி பாடல் என்று அறிய நேர்ந்தது.
    இது தான் உண்மை.அதை விட்டு .."என்னென்னவோ வித்தியாசங்கள் பார்த்து," என்று வீணான பில்டப்.

    பாலசுப்ரமணியன் பாடிய ஆரம்பகாலப் பாடல்கள் இரு திலகங்களுக்கும் பொருத்தமாக இருந்ததில்லை,அது ஒரு பெண் சாயல் குரல் என்று "வெற்றி மீது வெற்றி வந்து "என்ற பாடலை என் மாமா கூறுவார்.அப்போ பொருத்தமில்லாதவர் எப்படி பாடினார்.இசையமைப்பாளர்களுக்கு வேண்டியவராக அவர் இருந்திருப்பார் போலும்.

    இசையமைப்பாளருக்கு யாரை பிடிக்குதோ அவர் தான் பாடகர்.இது தான் நடந்தது..இப்போதும் நடக்கிறது.இனியும் நடக்கும்.

    உங்கள் ஒவ்வொரு கேள்விகளுக்கும் நாம் பதில் சொல்ல தயாராக இருக்கின்றோம்.உங்களைப் போல் திசை திருப்ப மாட்டோம்.தாவித் தாவி ஓட மாட்டோம்.

    நான் எழுதியது பின்வருமார்.
    //" எம்.எஸ்.வீ என்று அறிய வேண்டிய பாடல்களை எல்லாம்
    "சிவா....ட்சீ சீ "பாடல் என்று "எம்..ஜி....ஜீ ,....ஆர்ர்ர்ர் " பாட்டு என்றும் அறிய வேண்டியிருந்தது.என்ன செய்வது கருமாந்திர காலம். "// -விமல்
    நான் எழுதியது எம்.எஸ்.வீக்கு சாதகமாகத்தான்.நடிகர்களைத் தான் சொன்னேன்.இதை புரிய மறுக்கும் காரிகன் ஏதோ புலம்புகிறார்.

    மோகன் பாடல் என்றெல்லாம்!
    அதெல்லாம் இளையராஜாவின் படங்களையும் போட்டு தான் விற்றார்கள் என்பது அய்யாவுக்கு தெரியாது போலும்.எங்கேயாவது எம்.எஸ்.வீ.கே,வீ.எம் படங்களைப் போட்டு விற்றிருக்கின்றர்களா .?

    இப்போதும் அவர்கள் சி.டீ க்கள் வருகிறதே உங்களைப்போல் படித்தவர்கள் அமுதவனைப் போல் சினிமாவின் நெழிவு சுழிவு , பிகைண்ட் சீன எல்லாம் தெரிந்தவர்கள் தானே சி.டிக்களை வெளியிடுகிறார்கள்.

    அவர்கள் இனி மேலாவது எம்.எஸ்.வியின் படங்களைப் போட்டு வெளியிடுவார்களா ? உங்களால் முடியும் என்றால் அவர்களுக்கு சொல்லுங்கள்.பார்ப்போம்.
    எம்.எஸ்.வி, கே.வீ.எம் படங்கள் போட வேண்டாம் இன்னார் இசையமைத்தார்கள் என்று கூட போடுவார்களோ தெரியாது.

    ஒரு இசையமைபபாளனுக்கு கடவுட் வைத்த கதை காரிகன் ஐய்யா மறந்து விட்டாரா? அல்லது அமெரிக்காவில் இருந்தாரா

    அதுவும் இளையராஜாவின் சர்வாதிகாரமோ..?


    ReplyDelete
  181. https://www.facebook.com/photo.php?fbid=10202489084252890&set=a.3785290675313.172262.1368417608&type=1
    Kalaichelvan Rexy Amirthan
    கமல்ஹாசன் + இசைஞானி + ஒற்றை வயிலின் = மனிதம்

    உன்னைப்பார்த்துக் குரைக்கும் நாய்களைப் பார்த்து கல்லெறிவதில் உனது நேரத்தை வீணாக்காதே. அப்படிச் செய்வாயானால் நீ சென்றடையவேண்டிய தூரத்தை அடைந்து விட முடியாது
    - Winston Churchill -

    அவரை எல்லோரும் ராசு என்று அழைப்பார்கள். அவரது
    முழுப்பெயர் என்னவென்று எவருக்குமே தெரியாது. நான் பிறந்து வளர்ந்த ஊரில் எனக்கு விபரம் தெரிந்த காலம் முதலே அவரை நான் கண்டிருக்கின்றேன். பிறவியிலேயே மனநலம் குன்றியிருந்த அவர் சிறுவர்கள் இளையோர் ஏன் அனேகமான பெரியவர்களுக்குமே ஒரு கேலிக்குரியவர். அவரது சொந்தங்களுக்கு அவர் ஒரு வேண்டாப்பொருள்..அஃறிணை.

    ஒவ்வொருநாள் காலையிலும் நான் பாடசாலைகுப் போகும் வழியில் தனது அழுக்கான உடுப்புப் பொதியை இடுப்புக்கும் கைக்கும் இடையில் அழுத்தித் தூக்கியவாறு தன்பாட்டில் தனக்குள்தானே பேசிச் சிரித்தபடி எங்காவது போய்க் கொண்டிருப்பார். எதிர்ப்படுபவர்களில் எவரேனும் ஒருவர் அவரைக் கோபப்படுத்தும் வகையில் ஏதாவது கூறுவார் உடனே தனது உடுப்புப் பொதியை அவர்களை நோக்கி எறிந்தபடி தூஷணை வார்த்தைகளால் திட்டத் தொடங்குவார். அதை எதிர்பார்த்துக் காத்திருந்த, அவருக்குக் கோபம் ஏற்படுத்தியவர் தான் நினைத்ததை சாதித்துவிட்ட மகிழ்ச்சியில் விழுந்து விழுந்து சிரிப்பார்.

    அந்த வழியால் போய்க்கொண்டிருப்போரும் அந்தச் சம்பவத்தைப் பார்த்தபடி தாமும் சிரித்தபடியே போய்க்கொண்டிருப்பார்கள். தனது கோபத்தையெல்லாம் கத்தியும் தூஷித்தும் வெளிப்படுத்திய ராசு என்ற அந்த மனநலம் குன்றிய அப்பாவி முதியவர் சிறிது அமைதி அடைந்ததும் அவரின் கண்களில் இருந்து ,சிறிது சிறிதாக கண்ணீர் வடியத் தொடங்கும். . அது அவர் தனக்குள்ளே அமைதியாக அழுவதன் வெளிப்பாடு . தனது சக மனிதர்களால் கேலிக்குள்ளான அந்த மனிதன் அமைதியாக அழுதபடி தான் வீசியெறிந்த அழுக்கு உடுப்புக்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பொதியாக்கி மீண்டும் தனது இடுப்பில் தாங்கியவாறு எங்கோ ஒரு திசையை நோக்கி நடக்கத் தொடங்குவார். அந்த நடை அடுத்த சந்தியில் இன்னொரு சகமனிதனால் அவமானப் படுத்தும் வரையே தொடரும் என்பதும், இதே போன்றதொரு சம்பவம் அவருக்கு இன்னும் சில மணிகளிலோ அல்லது நிமிடங்களிலோ ஏற்படும் என்பதும் எனக்குத் தெரியும். அவர் கேலி பண்ணப்பட்ட பல சந்தர்ப்பங்களை நான் கண்டிருக்கிறேன், ஆனால் ஒருதடவை கூட எவரிடமும் அவர்கள் செய்யும் தப்பை சுட்டிக்காட்டியதில்லை…அப்போது இளைஞனாக இருந்த என்னை, எனது சக மனிதர்களின் அந்த அருவருக்கத்தக்க செயற்பாட்டின் வீரியம் பெரிதளவில் பாதிக்கவில்லையென்பதே உண்மை.

    யாழ்ப்பாணத்தில் சிவில் நிர்வாகம் குழம்பத்தொடங்கியது. நான் கொழும்புக்கு உயர் கல்விக்காகச் சென்றிருந்தேன். அங்கும் நிலைமை மோசமாக தமிழகப் பயணம். மீனம்பாக்கத்தை விட்டு வெளியே சென்றதும் முதலில் விசாரித்தது அருகிலுள்ள தியேட்டரில் என்ன படம் ஓடுகின்றது என்பதைப்பற்றித்தான். பல படங்கள் வெளியாகி இருந்தன. அதில் கமலின் அபூர்வ சகோதரர்களும் ஒன்று. ஆஹா.. கமலின் படத்தைத்தான் முதலில் பார்ப்பது என முடிவெடுத்துவிட்டேன். என்னுடைய முடிவில் நண்பர்களுக்கு எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.

    அப்போதைய எங்களின் வயதுக்கும் அறிவிற்கும் பெரிய வித்தியாசமில்லை. சிறிய வயது, சிறிய அறிவு. ஒரு படம் நல்லதா கூடாதா என்பதை ஹீரோவின் நட்சத்திர அந்தஸ்தையும் பாடல்கள் பிரபலமாகியிருக்கிறதா என்பதையும் வைத்தே தீர்மானிப்போம். அந்தவகையில் அப்போதைய காதல் இளவரசன் கமல் நடித்த அபூர்வ சகோதரர்களைப் பற்றி சினிமா எக்ஸ்பிரஸ் மற்றும் பொம்மை போன்ற சினிமா சஞ்சிகைகளினூடாக அறிந்திருந்தேன். பாட்டுக்கள் ஏற்கனவே இலங்கையில் கொழும்பில் பிரப்லமாகிவிட்டிருந்தது. குறிப்பாக உன்னை நினைச்சேன் பாட்டுப்படிச்சேன் தங்கமே என்ற பாட்டு கசற்களில் எல்லா இடங்களிலும் விற்பனையாகிக் கொண்டிருந்தது. கமலின் படம் ராஜாவின் பிரபலமான பாட்டுக்கள்… அப்போதைய அறிவுக்கு அந்தப்படத்தைப் பார்ப்பது என முடிவெடுப்பதற்கு இது போதாதா என்ன.

    ReplyDelete
  182. https://www.facebook.com/photo.php?fbid=10202489084252890&set=a.3785290675313.172262.1368417608&type=1
    Kalaichelvan Rexy Amirthan

    பாரீஸ் கார்னருக்கு அருகிலுள்ள ஒரு தியேட்டர் என்ற நினைவு. அபூர்வ சகோதரர்களுக்கு சென்றிருந்தோம். படம் தொடங்கி ஓடிக்கொண்டிருந்தது. உண்மையில்அந்த நாட்களில் இலங்கையில் ஒரு படம் பார்ப்பதற்கும் இந்தியாவில் படம் பார்ப்பதற்கும் நிரம்ப வித்தியாசம். தியேட்டர்கள், ரசிகர்கள், என எல்லாமே வித்தியாசம். படத்தில் மெக்கானிக் கமலின் துடிதுடிப்பிலும் குள்ளக்கமலின் நகைச்சுவையையும் பார்த்து சாதாரண ரசிகனாக ரசித்துக் கொண்டிருந்தேன். கமல் குள்ளனாக நடிப்பதற்கு எப்படியெல்லாம் முயன்றிருப்பார் என்றோ இதில் ஒளிப்பதிவாளரின் கமராக் கோணம் எவ்வளவு நுணுக்கமாக இருக்க வேண்டுமென்றோ கமல் தன்னுடையை இரு கைகளையும் கீழே பார்த்தபடி தொங்கவிடாமல் மடித்து வைத்திருந்தார் என்பதைப்பற்றியெல்லாம் சிந்திக்கவில்லை அதன் தேவையும் எனக்கிருக்கவில்லை. நான் சென்றிருந்தது ஜாலியாகப் படம் பார்ப்பதற்காக அதை இந்தப் படம் கொடுக்கின்றது அது போதும் எனக்கு என்ற ஒரு சராசரி ரசிகனின் மனநிலையில் இருந்து படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

    ஜாலியாகப் போய்க்கொண்டிருந்த படத்தின், கதையில் திருப்பம் ஏற்படுகின்றது. அடுத்தநாள் திருமணத்திற்காக திருமணப்பதிவு ஆபீசுக்கு வரும்படி கூறி மோதிரம் ஒன்றை குள்ளக் கமலின் விரலில் மாட்டிவிட்டுச் செல்கிறார் நாயகிகளில் ஒருவரான ரூபினி. குள்ளனான தன்னை அழகி ரூபினி திருமணம் செய்யப்போகிறார் எனத் தப்பாக நினைத்து குதூகலப் படும் கமல், அடுத்தநாள் ரூபினியுடன் வாடகைக் காரில் ரெஜிஸ்டர் ஆபீசுக்குச் செல்கிறார். முதலில் காரை விட்டு இறங்கிச் சென்றுவிடுவார் ரூபினி. அதன்பிறகு வாடகைக் காருக்குப் பணம் கொடுக்கும் கமல் சாரதி வாழ்த்துச் சொல்லவும் 20 ரூபா வாடகையையும் கொடுத்து 30 ரூபா ரிப்ஸ்சும் கொடுக்கிறார். அதன்பின் ரெஜிஸ்டர் ஆபீசை நோக்கி நடக்த் தொடங்கும் போதுதான் அந்தச் சம்பவம் என்னுடைய வாழ்க்கையில் என்னைச் சிந்திக்க வைக்கத் தூண்டிய சம்பவம் நடக்கத் தொடங்குகின்றது அதுதான் கமல் என்ற மாபெரும் நடிகனின் உணர்வுகளை இசைஞானி என்ற மாபெரும் இசையமைப்பாளன் தனது ஒற்றை வயிலின் இசையால் வெளிப்படுத்திய / கதறிய சில நிமிடங்கள்.

    கமல் காரை விட்டு இறங்கி தனது கல்யாணக் கனவுகளோடு சிரித்த முகத்துடன் ரெஞிஸ்டர் ஆபீசை நோக்கி நடக்கத் தொடங்குகிறார். அப்போதுதான் முதன் முதல் ரூபினியை ஆனந்துடன் அன்னியோன்யமாக சேர்த்துப்பார்க்கிறார். ஆனந்தைக் கட்டிக்கொள்ளும் ரூபினியிடம் “ இரு கல்யாணம் முடியட்டும்” என்கிறார் ஆனந்த். ஆனந்தின் அந்த வசனம் கமலுக்குள் கேள்வியையும், குழப்பத்தையும் பயத்தையும் ஏற்படுத்துகின்றது.

    [ நண்பர்களே பொறுமையாக கூர்ந்து இந்தக் காட்சியைப் பார்த்து பின்னணி இசையயும் நீங்கள் கேட்கவேண்டும் அப்போதுதான் நான் எழுதுவதை நீங்கள் படிப்பதில் அர்த்தம் உண்டாகும் http://www.youtube.com/watch?v=gv6kincY9u8 ]

    ReplyDelete
  183. இதில் எந்தவித வசனமும் கமலுக்கு இல்லை. ஆனால் கமல் பேசவேண்டிய வசனத்தை....இந்தக் காட்சிக்கான பின்னணியிசையில், ( back ground music / score அல்லது B.G.M ) கமலுக்குள் எழும்பும் ஆச்சரியத்தையும் குழப்பத்தையும் வயிலின்கள் மூலமாக வெளிப்படுத்தத் தொடங்குகிறார் இசைஞானி. அதிலும் கூர்ந்து நோக்க வேண்டியது என்னவென்றால் ஆனந்த் கூறிய வசனம் பொதுவானது. “ இரு கல்யாணம் முடியட்டும்” என்றுதான் கூறியிருப்பார். இதைக் கேட்டதும் திகைத்த கமல் கல்யாணம் முடியட்டும் என்று பொதுவாகத்தானே ஆனந்த் கூறியுள்ளார்.. அது தன்னுடனான ( கமலுடன் ) கல்யாணமாகக் கூட இருக்கலாம்தானே .. என்று நினைப்பதை இசைஞானி எப்படி தனது இசையால் காட்டுகிறார் என்பதைக் கூர்ந்து கேட்டபடி காட்சியைப் பாருங்கள்.
    இந்தக் காணொளியின் 30வது செக்கனில் இருந்து 32வது செக்கன் வரை ஒலிக்கும் வயிலின் இசை ஆச்சரியம் அதிர்ச்சி, வேதனையை சொல்கிறது. அதாவது கமல் குழம்புவதையும் ஆனால் 3வது செக்கனான 33 வது செக்கனில் இருந்து செல்லோக்களின் ஆக்கிரமிப்பை வயிலின்களுக்குள் அதிகரிப்பதன் மூலம் அந்த உணர்வை கமலின் கேள்விக்குறியான உணர்வுக்கு மாற்றுகிறார். இசைஞானி இந்த செல்லோக்கள் செய்யும் உணர்வுமாற்றம் 40 செக்கன் வரை செல்கின்றது மொத்தம் 7 செக்கன்களே.

    அடுத்ததுதான் முக்கியமான கட்டம் .ஒரு ஒற்றை வயிலின் இசை எனது வாழ்க்கையையே புரட்டிப்போட்ட கட்டம்.. 41வது செக்கனில் இருந்து 47 வது செக்கன் வரை இசையில்லாத அமைதி. அந்த அமைதி ஏன் இசைஞானியால் விடப்பட்டது ??? காட்சியில் இடம்பெறப்போகும் முக்கியமான வசனத்துக்காக இசைஞானியால் அமைதியாக விடப்பட்டது. ஆறே ஆறு செக்கனான அந்த அமைதியில் கமலுக்கு ரூபினி திருமணம் செய்யப் போவது தன்னையல்ல, ஆனந்தினைத்தான் என்ற உண்மை புரியவைக்கப் படுகின்றது. அந்த உண்மை புரிந்தவுடன் அந்த வயிலின்…. ஒற்றை வயிலின்… இசைஞானியின் அதிஅற்புதக் கற்பனையில் பிறந்த அந்த வயிலின்… , கமல் என்ற வலது குறைந்தவருக்காக… குள்ளருக்காகக் கதறத்தொடங்குகின்றது.
    ரிஜிஸ்டர் ஆபீசின் முன்னால் கண்ணன் என்னும் ஆனந்தின் நண்பன் பகிடிபண்ணும் போது அந்த வேதனையை கதறிக்கொண்டேயிருக்கின்றது. ரெஜிஸ்டர் ஆபீசுக்குள் அனந்துவால் (ரெஜிஸ்தார் ) அவமானப்படுத்தப்படும் போதும் கேவிக் கேவிக் கதறுகிறது ,. ரூபினி கையெழுத்து இடும் போது அந்த ரெஞிஸ்டார் புத்தகத்தை ஏமாற்றத்துடன் பார்க்கிறார் கமல் அப்போது அந்தக் குள்ள மனிதனின் அவமானம் வேதனை, சோகம், இயலாமை, எல்லாவற்றையும் ஒரே நோட்சில் சில நிமிடங்களுக்குக் கதறிக் கொண்டிருக்கும் அந்தத் தனி வயிலினுடன் சேர்ந்து கோரசாக வயிலின்களின் கூட்டணி தமது சகாவுக்காக அழத் தொடங்குகின்றன.

    அதன் பின் ரூபினியின் தந்தையான மௌலி மகளின் திருட்டுக் கல்யாணத்தை எதிர்த்து கோபாவேசமாகத் துள்ளும் போதும் அந்த நேரத்தில் ஏமாற்றத்துடன் வேதனையின் விளிம்பில் கமல் தனது உணர்வுகள் எல்லாவற்றையும் முகபாவத்தால் அற்புதமாக வெளிப்படுத்தும் போதும் இசையின்றி அமைதிகாக்கும் இசைஞானி கமலைப் பெற்ற, தாயான ஸ்ரீவித்யாவே மௌலியிடம், “ மாப்பிள்ளைக்கு என்ன குறை என்று எதிர்க்கிறீர்கள்.. என்னுடைய மகனைப் போல குள்ளனாக இருந்தால் நீங்கள் எதிர்ப்பதில் நியாயமிருக்கிறது ஆனால் இவர் ஒழுங்கானவர்தானே ..அவர் நல்லாகத்தானே இருக்கிறார் “ என்னும் போது.. தனது சொந்தத்தாயே தன்னை குள்ளன் என்று குறைவாக நினைக்கிறாரே என்ற வேதனையை கமல் தனது முகத்திலும் இசைஞானிதனது ஒற்றை வயிலினிலும் ஒரே நேரத்தில் காட்டுவார்களே… அந்த நேரத்தில் கண்கலங்காதவர் இருந்தால் அவர் மனிதரேயல்ல. கமல் என்ற மகா நடிகனின் நடிப்பைப் புரிந்து கொண்டு இசைஞானி வயிலினால் வெளிப்படுத்திய அந்த உணர்வுகள்…அந்தக் காலத்தில் புதுமை.. வேறு எந்த ஒரு Composer ம் அப்படியொரு இசையை....வயிலினை மனித உணர்வாக தத்ரூபமாக வெளிப்படுத்தியிருப்பார்களென நான் நினைக்கவில்லை. என்ன ஒரு பின்னணியிசை.. அதை விபரிக்க வார்த்தைகள் இல்லை..

    அதன் பிற்பாடு அந்தப்படத்தில் குள்ளக்கமல் பங்குகொள்ளும் பல உண்ர்வுமிகு காட்சிகளின் போது, அந்த ஒற்றை வயிலின் கமலுடனேயே பயணிக்கும். அந்தப் படத்தின் பின்னணியிசையில் முக்கியபாத்திரமாகவே மாறியிக்கும் அந்த ஒற்றை வயலின்.
    https://www.facebook.com/photo.php?fbid=10202489084252890&set=a.3785290675313.172262.1368417608&type=1
    Kalaichelvan Rexy Amirthan

    ReplyDelete
  184. சரி மீண்டும் ஆரம்பத்துக்கே வருகின்றேன். தமிழகத்தின் தியேட்டர் ஒன்றில் அபூர்வ சகோதரர்களை இந்தக் காட்சிவரை சாதாரணமாகப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த எனக்கு இசைஞானி, ரெஜிஸ்டர் ஆபீசில் கமலுக்காக அந்த ஒற்றை வயிலின் மூலம் கதறிய போது பொட்டிலடித்தாற்போல் வலிக்கத் தொடங்கியது, அதுவரை இல்லாத மனிதம் எட்டிப்பார்க்கத்தொடங்கியது. கமல் என்ற அந்தக் குள்ள மனிதன் யாருமற்று தனிமைப்படுத்தப்பட்டு, அவனின் குறைபாட்டுக்காக சக மனிதர்களால் எள்ளி நகையாடப்பட்டபோது உடம்பு சிலிர்க்கத் தொடங்கியது … காரணம் அந்த இடத்தில் நான் கமலைப் பார்க்கவில்லை என்னயறியாமலேயே ராசு என்ற என்னுடைய ஊரைச் சேர்ந்த மன நலம் குன்றியவரை, மற்றவர்களால் நகைப்புக்கு உள்ளாக்கப்பட்டவரை, வேதனைப் படுத்தப்பட்டவரை, வேதனையைக் கூட வெளியே சொல்லத்தெரியாமல் அழுது கொண்டே நடந்து போகின்றவரைப் பார்த்தேன். அதுவரை எனக்குள் இல்லாத பச்சாத்தாப உணர்வு என்னுள் எட்டிப்பார்த்தது. கண்கள் கசியத் தொடங்கின.

    அந்தப்படத்தில் இசைஞானியும் கமலும் வயிலின் மூலம் வெளிப்படுத்திய அந்த மனிதம் என்னை ராசு வைப்பற்றி விசாரிக்கச் செய்தது. அந்தக் காட்சியை யூடியூப்பிலோ வேறு எங்கேயோ பார்க்கும் ஒவ்வொரு தடவையும் அந்த வயினினின் கதறல் ராசு வின் கதறலாகவே எனக்குப்படும். ஊரில் எல்லோருமே இடம்பெய்ர்ந்து விட்டார்களென்றும் மனநலம் குன்றியவர்கள் மட்டும் அங்குள்ள கிறீஸ்தவ பாடசாலையில் தஞ்சமடைந்து பாதுகாக்கப்படுவதாகவும் கேள்விப்பட்டிருந்தேன். அவர்களுக்குப் பொறுப்பாக இருந்தவர் எங்கள் பாடசாலையின் அப்போதைய அதிபரான கத்தோலிக்க குருவான அருட்திரு.ஜேசுதாசன் அடிகளார்..


    சில ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் புலம் பெயர் தேசங்களிற்கு விஜயம் செய்தபோது எனக்கும் அறிவித்திருந்தார். அவரை பலவருடங்களின் பின் சென்று சந்திக்கும் ஆவலுடன் ஓடோடிச் சென்று சந்தித்தேன். என்னைப் போன்றே எங்கள் கல்லூரியின் பழையமாணவர்கள் பலரும் சந்தித்து அவரைக் கௌரவப்படுத்தியிருந்தோம். அப்போது அவருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது ஆவலை அடக்க முடியாமல் அவரிடம் கேட்டேன்.
    ஃபாதர், ராசு உங்களின் பராமரிப்பிலும், பாதுகாப்பிலும் இருக்கிறார் எனக் கேள்விப்பட்டேன் ..இப்போ எப்படியிருக்கிறார்..
    சிறிது நேரம் அமைதியாக இருந்த பாதிரியார் கூறினார்:
    அது ஒரு சோகக்கதை ஐசே..பாதிரியார் கூறினார், இளைஞர்கள் சுறாடலிலுள்ள ஊர்களைவிட்டு வெளியேறிய சில் மாதங்களிலேயே நிலைமை மோசமகி எல்லோருமே அந்த வட்டாரத்தை விட்டு திடீரென்று இடம்பெயரவேண்டிய கட்டாயம். அதனால் நடக்க முடியாத முதியவர்களையும் கடும் நோயாளிகளையும் தம்முடன் கூட்டிக் கொண்டு போக முடியாத நிலை. அப்போது எது நடந்தாலும் பரவாயில்லை இங்கேயிருந்துகொண்டு அவர்களைப் பராமரிப்பது என முடிவெடுத்தோம். என்னுடன் இன்னும் சில குருக்களும் சில கன்னியாஸ்திரிகளும் நின்றார்கள். அப்போதுதான் முதியவர் நோயாளிகளுடன் ராசுபும் கொண்டுவரப்பட்டார்.

    சில நாட்கள் அவரை ஒருவாறு கட்டுப்படுத்தி வெளியே எங்கும் செல்லாமல் பாடசாலைக்குள்ளேயே தடுத்து வைத்திருந்தோம். ஆனால் ஒருநாள் இரவு எமக்குத் தெரியாமல் அவர் வெளியே சென்றுவிட்டார். அப்போதெல்லாம் இரவு 7 மணிக்குப் பின்பு ஊரடங்குச் சட்டம். அதைப்பற்றி அவர்க்குப் புரியாதுதானே. அப்போ அவர் சூடுபட்டு இறந்துவிட்டார். அடுத்தநாள் சில முதியோர்கள் முயன்றும் அவரின் உடலைக் கூட எடுத்து அடக்கம் பண்ண முடியாமல் போய்விட்டது,,,, நினைத்தால் தாங்க முடியாத கவலையை ஏற்படுத்தும் சம்பவம் அது. ம்ம்ம்ம் என்று பெருமூச்சு விட்டார் Fr. ஜேசுதாசன்.
    https://www.facebook.com/photo.php?fbid=10202489084252890&set=a.3785290675313.172262.1368417608&type=1
    Kalaichelvan Rexy Amirthan

    ReplyDelete
  185. https://www.facebook.com/photo.php?fbid=10202489084252890&set=a.3785290675313.172262.1368417608&type=1
    Kalaichelvan Rexy Amirthan
    சொல்லிலடங்காத வேதனை.. அந்த மனிதன் தன்பாட்டில் வாழவும் முடியவில்லை.. தன்பாட்டில் இறக்கவும் முடியவில்லை. ஆனால் அவனையும் எம்மைப் போன்ற சக மனிதனாக , ஊன் உணர்வுள்ள ஒருவனாக மதிக்க வேண்டுமென்பதை எனக்கு உணர்த்தியது இசைஞானியின் அந்த ஒற்றைவயிலின்.
    இது சத்தியமான உண்மை. என்னுடைய பதிவுகள் எல்லாம் என்னுடைய அனுபவங்களே. அப்படி நான் கடந்துவந்த பாதையில் விலத்திக் கொண்டு வந்த மனிதனைப்பற்றிய கசப்பான அனுபவம்தான் இது..இப்படி என்னை மனிதனாக நினக்கத் தூண்டியவர்கள் இசைஞானியும் கமலும்.

    சமீபத்தில் ஒரு செய்தியைப் பார்த்தேன் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் பின்னணியிசை நன்றாக இல்லையாம். சொல்கிறார்கள்.

    .நீங்கள் எல்லாம் மனிதர்கள்தானா ?? உங்கள் இனத்தைச் சேர்ந்த ஒரு தமிழன் 1989 இலேயே.. படைத்த சாதனைகளை தேடிப்பார்த்திருக்கிறீர்களா? சத்யா படத்தில் வேலையற்ற பட்டதாரியின் மனக் கொதிப்பை ரயிலின் ஆக்ரோஷமான சத்ததின் மூலம் வெளிப்படுத்திய மேதையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா ?? உங்களைப்போன்ற அறிவிலிகளுக்கும் மூடர்களுக்கும் வின்ஸ்டன் சர்ச்சில் பல வருடங்களுக்கு முன்பே ஒரு பொன்மொழியை சொல்லிவிட்டுச் சென்றுள்ளார் :

    உன்னைப்பார்த்துக் குரைக்கும் நாய்களைப் பார்த்து கல்லெறிவதில் உனது நேரத்தை வீணாக்காதே. அப்படிச் செய்வாயானால் நீ சென்றடையவேண்டிய தூரத்தை அடைந்து விட முடியாது,. — END of Article.

    ReplyDelete
  186. நல்ல கதை இன்னும் எழுதியிருக்கலாமே மகாதேவன் சார், இதே போல குணா, எங்க ஊரு பாட்டுக்காரன், தளபதி, கிழக்கே போகும் ரயில் படங்களைப் பார்த்து அதன் இன்னிசையை உணர்வுபூர்வமாக நீங்கள் அனுபவித்ததையும் எழுதுங்களேன். அதுதான் இளையராஜா 800 படங்களுக்கு இசை அமைதிருக்கிறாரே? ஓஹோ கமல்-ராஜா காம்பினேஷனா? எப்படியும் ஒரு இருநூறு படங்கள் இருக்கும். எல்லாவற்றையும் எழுதிவிட உத்தேசமா என்ன?

    ReplyDelete
  187. Article was by Mr.Kalaichelvan Rexy Amirthan. There are lots and lots of music lovers all over the world and they will share their Experiences through the Internet medium. Even old timers write their experiences, Do search the tamil blogs for them. Have fun.

    ReplyDelete
  188. ஹலோ மகாதேவன்

    இளையராஜாவின் இசை அற்புதத்தை அது செய்யும் மாயையை அது கொடுக்கும் பேரின்ப உணர்வை அது ஏற்படுத்தும் பொய்யற்ற சிலிர்ப்பை வார்த்தைகள் அற்ற மனித உணர்வுகளை எல்லோருக்கும் புரியும்படி மிகவும் அருமையான உண்மைச் சம்பவம் மூலம் அழகாக சொல்லி இருக்கிறீர்கள் . ஏனென்றால் இளையராஜாவின் இசை எதையும் செய்யும் .

    ஆனாலும் இதையும் நக்கல் அடித்து மனித உணர்வை காயப்படுத்தும் கூட்டம் பின்னூட்டம் போடப் போவதை பொறுத்திருந்து பாருங்கள் . காரிகன் ஆரம்பித்து வைத்திருக்கிறார் .


    ReplyDelete
  189. திண்டுக்கல் முத்துகணேஷ்19 October 2013 at 00:57

    மகாதேவன்
    கழுதைக்கு தெரியுமா கற்ப்பூர வாசனை.விட்டுத் தள்ளுங்கள்.நரகலில் நல்லரிசி தேடுவது போலத்தான் இது.

    ReplyDelete
  190. மகாதேவன்,
    அவ்வவப்போது சில பொன்மொழிகளை தந்துவிட்டு காணமல் போய்விடுவதாக இருந்தீர்கள். நீங்கள் இந்தப் பக்கமா அந்தப் பக்கமா என்று விடை தெரியாத மதில் மேல் பூனை என்று நினைத்திருந்தேன். இப்போதுதான் தெரிகிறது நீங்கள் அந்தப் பக்கம் சேற்றில் குதித்து உங்களின் நிறத்தை காண்பித்துவிட்டீர்கள். சேற்றில் குதித்து விட்டு சகதியில் சந்தன வாசத்தை தேடுவதுதான் உங்கள் திறமை போலும். அடடா என்ன அற்புதமான சிறுகதை. ரசித்துப் படித்தேன். நீங்களோ அல்லது அமிர்தம் என்பவரோ ராஜா ரசிகர்கள் என்ன சொன்னாலும் அது ஒரே மாதிரியாகவேகத்தான் இருக்கிறது. வழக்கமான வாரத்தைப் புலம்பல்கள். ஒற்றை வயலின் சோகம் என்று திருப்பி திருப்பி ஒரே ஆலாபனைதான்.இது போன்ற தனி மனித உணர்ச்சிகளை சுண்டக் கூடிய வலிமை இசைக்கு உண்டு. அது இளையராஜாதான் என்றில்லை. என் நண்பரின் உறவினருக்கு நெஞ்சம் மறப்பதில்லை பாடல் அதன் இசை மனதை பிழியும் என்று கூறக் கேட்டிருக்கிறேன். அவர் வாழ்விலும் எதோ ஒரு ராசா அல்லது மூஸாவைக் கண்டிருக்கலாம். யாருக்குத் தெரியும்? இப்படியான கட்டுரைகள் நம்மை சிந்திக்க விடுவதில்லை. மேலும் அவைகள் சொல்வதெல்லாம் உண்மையாகிவிடாது. யாரோ ஒருவருக்கு நிகழ்ந்தது எனக்கும் அப்படியே கிடைக்கும் அனுபவமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. இதற்கு மூன்று நான்கு பத்திகளை நீங்கள் செலவு செய்திருக்கவேண்டாம் என்று நினைக்கிறேன்.
    இறுதியாக ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் இசையைப் பற்றி சிலர் சொல்வது குறித்து வேதனை அடையவேண்டாம். தேவையில்லாத இடங்களில் அலறும் இசையை இளையாராஜா என்றைக்கும் நிறுத்தப்போவதில்லை. அந்தப் படத்தின் இரவு நேரத்தின் தனித்தன்மையையே இளையராஜாவின் வயலின் விழுங்கி விட்டது என்று ஒருவர் எழுதியிருந்தார். எனக்கும் அப்படித்தான் தோன்றியது. மேற்கத்திய செவ்வியல் பாணியில் இசை அமைப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அது எவ்வாறான கதைக்களம் கொண்ட படத்திற்கு அமைக்கப்படவேண்டும் என்ற ஆதார சிந்தனையை தகர்த்திருக்கிறது இளையராஜாவின் இசை. பீட்சாவுக்கு வெங்காய சட்னி போன்ற தொடர்பில்லாத இணைப்பாக அவரது இசை இருந்தது. (அவரது பின்னணி இசை பெரும்பாலும் இப்படித்தான்).
    நீங்கள் வின்ஸ்டன் சர்ச்சிலை இங்கே பயன்படுத்தி உங்களின் அறிவை வெளிக்காட்டிவிட்டீர்கள். அவர் சொன்னது இரு புறமும் வெட்டும் கத்தி போன்ற கருத்து. உங்களுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். அடுத்த முறையாவது சொந்தமாக எதையாவது எழுத முயற்சி செய்யுங்கள். இப்படி அவரைப் பார் இவரைப் பார் என்று டிராபிக் போலிஸ் போல கையை காட்டவேண்டாம். (உங்களுக்கெல்லாம் எத்தனை முறை சொன்னாலும் விளங்காது போலும்)

    ReplyDelete
  191. சால்ஸ்,
    உப்புக்கு சப்பாணியாக சில சிறுவர்களை நிற்க வைத்துவிட்டு சிலர் சாலைகளில் விளையாடுவது உண்டு. நீங்களும் அப்படிதான் போலிருக்கிறது. உங்கள் கருத்தெல்லாம் கூட்டத்தோடு கத்தும் குரல் போல ஒலிக்கிறது. ஒரு விவாதம் முடிந்த பின் திடீரென மாயாவி போல குதித்து மறுபடியும் ஒன்றிலிருந்து ஆரம்பி என்று சண்டித்தனம் செய்கிறீர்கள்.

    "இளையராஜாவின் இசை அற்புதத்தை அது செய்யும் மாயையை அது கொடுக்கும் பேரின்ப உணர்வை அது ஏற்படுத்தும் பொய்யற்ற சிலிர்ப்பை வார்த்தைகள் அற்ற மனித உணர்வுகளை எல்லோருக்கும் புரியும்படி மிகவும் அருமையான உண்மைச் சம்பவம் மூலம் அழகாக சொல்லி இருக்கிறீர்கள் . ஏனென்றால் இளையராஜாவின் இசை எதையும் செய்யும் ."
    அதுதான் ஏற்கனவே செய்துவிட்டதே. இப்படி உணர்ச்சிப் பிழம்பாக நீங்கள் புலம்புவதிலிருந்தே அதை நான் கண்கூடாகக் காண்கிறேன். கவனம். இளையராஜாவின் உங்களை இசை வேறு ஏதாவது செய்துவிடப் போகிறது. "ஏனென்றால் இளையராஜாவின் இசை எதையும் செய்யும் ." நீங்கள் சொன்னதுதான். உங்களுக்கே திரும்ப வருகிறது.

    ReplyDelete
  192. திண்டுக்கல் முத்துகணேஷ் என்ற புதிய பெயரில் வரும் வழக்கமான ராஜா ரசிகரே,
    கழுதையைப் பற்றி பேச உங்களுக்கே அதிக உரிமை உண்டு. ஏனென்றால் கழுதையின் குரலையே இசையாக வடித்தவரல்லவா இளையராஜா? பொருத்தமான உவமைதான்.

    ReplyDelete
  193. விமல்,
    இளையராஜா தன் முகத்தை சினிமா போஸ்டரில் அச்சிடவேண்டும் என்று நிர்பந்தித்ததாக கரகாட்டகாரன் பட வெற்றிப் பிறகு பேச்சு எழுந்தது.அவருக்கு அப்படிப்பட்ட விளம்பரம் அவசியப்பட்டது. அவர் படத்தை போட்டு சி டிக்கள் விற்பனை செய்வது என்ன உலக பெரிய சாதனையா? என்ன மடத்தனமான பேச்சு இது? ரகுமான் படத்தை கூடத்தான் போட்டு சிடிக்கள் விற்பனை செய்யப்படுகிறது . இதெல்லாம் எந்த விதத்தில் ஒருவருக்கு புகழ் சேர்க்கும் என்று எனக்குத் தெரியவில்லை. எம் எஸ் வி யின் படம் போட்டு யாராவது அவர் பாடல்களை விற்பனை செய்வார்களா என்று கேட்பது வீர பாண்டிய கட்ட பொம்மனாக எங்கள் எம் ஜி ஆர் நடித்திருந்தால் சிவாஜி போன்று தூக்கில் தொங்கியிருக்க மாட்டார் எதிரிகளை அடித்து உதைத்து துவம்சம் செய்து தப்பி போயிருப்பார் என்று வீரம் பேசும் எம் ஜி ஆர் ரசிகர்கள் போல இருக்கிறது .என்ன புத்திசாலித்தனம்! என் கருத்துக்கு இணையாக எதையும் புதிதாக யோசிக்கக்கூட முடியாத அவல நிலையில் நீங்கள் இருப்பது குறித்து வேதனை அடைகிறேன். கட் அவுட் என்ற கேவலமான கலாச்சாரத்தையே நான் வெறுப்பவன். இதில் ராஜாவுக்கு கட் அவுட் என்று சிலாகிக்கிறீர்கள். மதீயீன மடையர்களின் பிழைப்பு அது என்பது என் எண்ணம். வர வர உங்களின் எழுத்தின் சாரம் வெகுவாக கீழிறங்கிச் செல்வதை நன்றாகவே உணர முடிகிறது.

    ReplyDelete
  194. மகாதேவன், உங்களுக்கும் உங்களைப் போன்றவர்களுக்கும் சிலவற்றை எத்தனை முறை சொன்னாலும் புரிவதில்லை என்பதற்கு யார் என்ன செய்யமுடியும்? உங்கள் கதையை ஒரு நான்கைந்து பேரைக்கூப்பிட்டு படிக்கச் சொன்னேன். படித்த ஒவ்வொருவரும் அழுது மூர்ச்சையாகி விழுந்தவர்கள் நாலுமணி நேரம் ஆனபோதிலும் இன்னமும் எழுந்திருக்கவே இல்லை. அதுவும் படித்த போதே இத்தனை சோகரசம் சொட்டுகிறதே. இன்னமும் அந்த 'ஒற்றை வயலினைக்' கேட்டிருந்தால் அவர்கள் பாடு என்னவாகியிருக்கும் என்பதே தெரியவில்லை.
    ஐயா, இங்கே பலமுறை சொல்லியிருப்பதே தனிப்பட்ட உணர்வுகளைப் பொதுவெளிக்கான விவாதங்கள் ஆக்காதீர்கள் என்பது. அதற்கென்று தனி ஏரியாக்கள் இருக்கின்றன. இணையத்திலேயே ஃபேஸ்புக்கை நிறையப்பேர் அதற்கான சரியான கோணத்தில் பயன் படுத்துகிறார்கள். நிறையப் புகைப்படங்களாலேயே நிறைக்கிறார்கள். 'என் வாழ்க்கையை வசந்தமாக்கிய என்னவர்' என்று கணவர் படம் போடுகிறார்கள். 'இதோ எங்கள் பொன்வீடு' என்று புதிதாகக் கட்டிய வீட்டின் படம் போடுகிறார்கள்.'இந்த அழகுக்கு ஈடு இணை உண்டா?' என்று சிரித்துக்கொண்டிருக்கும் குழந்தையின் படம் போடுகிறார்கள். 'என் செல்லக்குழந்தை' என்று அவர்கள் வீட்டு நாய்க்குட்டியின் படம் போடுகிறார்கள். 'என்னால் மறக்கமுடியாத பாடல்' என்று போறாளே பொன்னுத்தாயி பாடல் போடுகிறார்கள். இவையெல்லாம் அவரவர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள். தனிப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடு. 'என் செல்லக்குழந்தை' என்று அவர்கள் வீட்டு நாய்க்குட்டி படத்தைப் போட்டதனால் அந்த நாய்க்குட்டிதான் எல்லாரின் வீட்டுக் குழந்தையும் என்று சட்டம் கொண்டுவந்துவிட முடியுமா என்ன?
    அதுபோல உங்கள் உணர்வை நீங்கள் சொல்கிறீர்கள். அதை எல்லார்மீதும் திணிக்கப் பார்க்காதீர்கள்.
    ஒன்று மட்டும் உண்மை. இந்தப் பின்னணி இசைபற்றிச் சொல்லியிருக்கிறீர்கள் பாருங்கள்..........அது பிறந்ததே 1976ல்தான். அதற்கு முன்னால் எல்லாம் ஊமைப் படங்கள்தாம் வந்து கொண்டிருந்தன. சிவாஜி எம்ஜிஆரெல்லாம் ஊமைப்படங்களில்தான் நடித்துக்கொண்டிருந்தார்கள். இரண்டொரு சிவாஜி எம்ஜிஆர் படங்களில் இசை என்ற பெயரில் ஏதோ சில சத்தங்கள் வரும். அது மிகக் கண்ணராவியாக இருக்கும். அந்த இசையமைப்பாளர்களுக்கெல்லாம் காட்சிக்கேற்ற பின்னணி இசை தெரியாது. குழந்தை அழுதால் கீய் என்று வயலினை ஒருமுறை தேய்ப்பார்கள். சிரித்தாலும் அதே சத்தம்தான். யாராவது இறந்துபோகிறமாதிரி காட்சி வந்தால் ஆர்மோனியத்தை ஒரு அழுத்து அழுத்துவார்கள். அது ம்கும் என்று கத்தும். குழந்தை பிறந்து தொட்டிலில் போட்டு அது சிரிக்கிற காட்சிக்கும் அதே ம்கும் என்ற சத்தம்தான்.........சோக நடைக்கும் ஒரே தாளம், சந்தோஷ நடைக்கும் ஒரே மாதிரியான தாளம், பார்வையாளர்களாயிருந்தவர்களுக்கும் எவ்வித ரசனையும் கிடையாதாம். எல்லாரும் சோற்றால் அடித்த பிண்டங்கள்போல் அந்த சினிமாக்களை ரசித்துக்கொண்டிருந்தார்களாம்.
    நிலைமை 1976க்குப் பிறகு மாறியதாகவும் யாரோ ஒரு புதிய இசையமைப்பாளர் வந்துதான் இது அத்தனையையும் சீர் செய்தார் என்றும் சொல்கிறார்கள்.சரியான விவரம் தெரியவில்லை. உங்களைப் போன்றவர்கள் சொன்னால் நலமாயிருக்கும்.
    பாரதிராஜாவின் கிராமத்துப் படங்களில் சில வேலைவெட்டியில்லாதவர்கள் உட்கார்ந்துகொண்டு யார் எதைச் சொன்னாலும் எதிர்த்து எகத்தாளம் பேசிக்கொண்டு வீண் வம்பிழுத்துக்கொண்டிருக்கிற காட்சிகள் வரும். ஏறக்குறைய அந்த மாதிரியான டம்பப்பேச்சுக் களமாக இணையத்தை மாற்றிக்கொண்டிருக்கிறீர்கள்.
    இசைபற்றிய ஒரு விவாதத்திற்கு வரவேண்டுமென்றாலேயே நான்கைந்து கர்சீஃபுகளைக் கொண்டுவந்தால்தான் முடியும் என்ற நிலைமையை ஏற்படுத்த முனைகிறீர்கள் என்று நினைக்கிறேன்.
    ஒன்று மட்டும் நன்றாகப் புரிகிறது. உங்கள் பூஜைக்குரியவரைக் காப்பாற்ற உங்களிடம் இருந்த அஸ்திரங்கள் எல்லாம் செல்லரித்துப் போய்க் குப்பையாகிவிட்டன. ஆகவே அழுத கதைகளைச் சொல்லி புகழ்பாடும் நிலைமைக்கு வந்துவிட்டிருக்கிறீர்கள். ஒருபக்கம் பரிதாபமாகவும் மறுபக்கம் எரிச்சலாகவும் இருக்கிறது.

    ReplyDelete
  195. ஐய்யா அமுதவன்
    நீங்கள் எரிச்சல் படுவது எங்களுக்கு நமக்கு நன்றாகவே தெரிகிறது.அந்த வயித்தெரிச்சல் தானே எல்லாவற்றிற்கும் காரணம்.அதுதானே சும்மா அர்த்தமில்லாமல் சிறுபிள்ளைத்தனமான இசைஞானம் கொஞ்சம் கூட , சாதாரண ரசிப்பு கூடாத இல்லாதவர் போல பினாத்துகிறீர்கள்.
    "அவர்கள் வீட்டு நாய்க்குட்டி படத்தைப் போட்டதனால் அந்த நாய்க்குட்டிதான் எல்லாரின் வீட்டுக் குழந்தையும் என்று சட்டம் கொண்டுவந்துவிட முடியுமா என்ன?
    அதுபோல உங்கள் உணர்வை நீங்கள் சொல்கிறீர்கள். அதை எல்லார்மீதும் திணிக்கப் பார்க்காதீர்கள்.
    ஒன்று மட்டும் உண்மை." என்கிறீர்களே.

    நீங்கள் எழுதும் கருத்து என்ன மக்களிடம் கணிப்பீடு நடாத்தி எழுதும் திருவாசகங்களா..?நீங்கள் தான் சோ சொல்லிவிட்டார் ,கங்கை அமரன் சொல்லிவிட்டார் , இளையராஜா சொல்லிவிட்டார் இவர் அப்படி சொன்னார் ,அவர் இப்படிச் சொன்னார் என்று ஏன் ராகம் பாடுகிறீர்கள்.? உங்களுக்கு அதை பற்றிய தெளிவில்லாததாலேயே அவர்கள் சொல்லிவிட்டார்கள் நீங்கள் வாயை பொத்துங்கள் என்று திணிக்கின்றீகள்.

    //நான்கைந்து கர்சீஃபுகளைக் கொண்டுவந்தால்தான் முடியும் என்ற நிலைமையை ஏற்படுத்த முனைகிறீர்கள் என்று நினைக்கிறேன்.//

    உண்மை தான் சார்.
    கட்டின புடவைகளையும் ,வேட்டி சட்டை சால்வைகளையும் தன கண்ணீரால் தோய வைத்த சிவாஜியின் அடிப்பொடி தானே கமல்.ஏதோ அவருடைய தரத்திற்கு 4 கர்ச்சீப் என்று புரிந்து கொள்ளல் நலம். அழுவது தான் நல்ல நடிப்பு என்று எண்ணிய காலம் சிவாஜியினுடையது.
    இல்லாவிட்டால் காவேரி என்ற நாடகம் எடுத்த மெட்டி ஒலி திருமுருகனை கூப்பிட்டு "எப்பா , உலகத்தையே அழ வைத்த என்னையே அழ வைச்சிடேயே அப்பா " என்று பாராட்டுவாரா?
    4 கர்ச்சீப் கமலுக்கு டூமச் என்பதும் சரிதான்.ஏனெற்றால் அவர் ஓரளவு சினிமா மொழி தெரிந்த நடிகர்.

    " நிலைமை 1976க்குப் பிறகு மாறியதாகவும் யாரோ ஒரு புதிய இசையமைப்பாளர் வந்துதான் இது அத்தனையையும் சீர் செய்தார் என்றும் சொல்கிறார்கள்.சரியான விவரம் தெரியவில்லை. உங்களைப் போன்றவர்கள் சொன்னால் நலமாயிருக்கும்.
    ." அமுதவன்
    ஆமாம் அமுதவன் தமிழ்திரை இசையின் இனிய மாற்றம் வந்தது அந்த யாரோவால் தான். விசுவநாதன் ஒரு இனிமை என்றால் அந்த இனிமையை புதிய திசையில் தந்து இனிமைக்கு இனிமை சேர்த்தார்.

    அந்த "யாரோ தான்" பின்னணி இசையிலும் புதுமை செய்தார். அதனால் தான் " தம்பி நான் மெட்டு போடுகிறேன் , நீ பின்னணி இசையிய செய் " என்றவர்
    விசுவநாதன்."அதை நாம் இருவரும் ஆதார்த்தமாக செய்தோம்" என்றவரும் விஸ்வநாதனே தான்.

    அந்த பின்னணி இசைதான் பலரை ராஜா பாடல்கள் என்று நம்பவைத்துள்ளது.

    "பாரதிராஜாவின் கிராமத்துப் படங்களில் சில வேலைவெட்டியில்லாதவர்கள் உட்கார்ந்துகொண்டு யார் எதைச் சொன்னாலும் எதிர்த்து எகத்தாளம் பேசிக்கொண்டு வீண் வம்பிழுத்துக்கொண்டிருக்கிற காட்சிகள் வரும்." அமுதவன்

    இதெல்லாம், எங்கள் கருத்துக்கு எதிர் கருத்து சொல்ல சரக்கு இல்லாதவர்களின் புலம்பல் என்று எடுத்துக் கொள்ளலாமா..?
    அதில்லாததால் தான் அந்த யாரோ பற்றிய அவதூறுகளை பரப்புகிறீர்கள் என்கிறோம்.

    ReplyDelete