Tuesday 4 March 2014

இசை விரும்பிகள் - XIV - பகல் விண்மீன்கள்



                                      




     சாலைகளின் பாதையோரங்களில் வண்ணமயமாக படர்ந்திருக்கும் சிறிய பூக்களின் வார்த்தைகளால் வடிக்க  முடியாத அழகு  ஏன் நம்மால் பாராட்டப்படுவதில்லை ? ஒரு உக்கிரமான மழையின் ஆர்ப்பாட்டத்தை அதிசயிக்கும் நெஞ்சங்கள் ஒரு சிறு மழைத்  துளியை அலட்சியம் செய்வது ஏன்?  பிரமிப்பு உண்டாக்கும் ஒரு மிகப் பெரிய ஆலமரத்தின் கீழிருக்கும் சிறிய செடிகள் ஏன் எப்போதுமே கவனிக்கப்படுவதில்லை? வித விதமான ஆடைகளின் செயற்கையான நிறங்களை தேடும் கண்கள் ஏன் ஒரு சிறிய வண்ணத்துப் பூச்சியின் சிறகில் இருக்கும் வியப்பூட்டும் வண்ணங்களை நோக்கிப் பார்ப்பதில்லை?

                        




                           பகல் விண்மீன்கள் 

       சிலோன் வானொலி தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாக இருந்த எழுபதுகளில் அவர்கள் ஒலிபரப்பும் பாடல்களுக்கு தமிழகத்தில் மிகப் பெரிய ரசிகர் வட்டம் இருந்தது. மெட்ராஸ், திருச்சி, கோவை போன்ற   பல இந்தப் பக்கத்து வானொலிகளை  விட சிலோன் நிகழ்சிகளையே தமிழர்கள் அதிகம் விரும்பியது விசேஷ புனைவுகள் கலக்காத  உண்மை. அதற்குக் காரணங்கள் இல்லாமலில்லை. சிலோன் வானொலியின் பாடல் தொடர்பான எல்லா நிகழ்சிகளும் அன்றைய காலத்தில் புரட்டிப்போடும் புதுமைகளாக  இருந்தன. உடைந்த கண்ணாடித் துண்டுகளிலெல்லாம் ஒரே பிம்பம் தெரிவதைப் போன்ற ஒரே மாதிரியான அலுப்பூட்டக்கூடிய பாடல்களாக இல்லாமல் ஒரு கலைடாஸ்கோப் காண்பிக்கும் வித விதமான வண்ணங்களைப் போன்ற பல சுவை கொண்ட கானங்களை வெவ்வேறு தலைப்புகளின் கீழ் ஒலிபரப்பு செய்துவந்தது சிலோன் வானொலியின் சிறப்பு. என்றைக்கும் எனது நினைவுகளிலிருந்து விழுந்துவிடாமலிருக்கும் சில நிகழ்சிகளை இங்கே  குறிப்பிடுவது அவசியப்படுவதால் இதோ அவைகள்:

      பொங்கும் பூம்புனல் (காலைப் பொழுதின் உற்சாகமான துவக்கத்தை இங்கே கேட்கலாம்.)  , அசலும் நகலும் (இதில் நம் தமிழ் இசைஞர்கள் வேறு மொழிப் பாடலை பிரதி எடுத்ததை விலாவாரியாக சொல்வார்கள்.சில சமயங்களில் நேரடியாக பேட்டி எடுத்து சம்பந்தப்பட்டவரை தடாலடியாக திடுக்கிட வைப்பதும் உண்டு.) இசையும் கதையும் (பொதுவாக காதல் தோல்வி கதைகளே இதில் அதிகமாக சொல்லப்படும். நடு நடுவே இனிமையான துயரப்  பாடல்கள் துணையாக வருவதுண்டு.  நான் பள்ளி விட்டு வீடு திரும்பும் போது  இந்த நிகழ்ச்சியின் முகப்பு இசை சோக வயலின்களுடன் இனிமையாக ஒலித்துக்கொண்டிருக்கும்.), டாப் டென்  (ஒருவேளை பெயர் தவறாக இருக்கலாம். வேறு பெயர் இதற்கு சொல்வார்கள். மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி. புதிய பாடல்ளை வரிசைப் படுத்த  தபால் முறையில் ஓட்டெடுப்பு நடத்தி பாடல்களை இந்தப் பாடல் இத்தனை ஓட்டு என்று அறிவிப்பார்கள். எனக்குத் தெரிந்து நிழல்கள் படத்தின் இது ஒரு பொன் மாலைப் பொழுது பாடல் 23 வாரங்கள் முதலிடத்தில் இருந்தது.அதன் பின் வறுமையின் நிறம் சிகப்பு படத்தின் சிப்பியிருக்குது பாடல் அதன் இடத்தைப் பிடித்தது இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது.) பிறகு   அத்திப்பூ என்ற ஒரு  பாடல் தொகுப்பு வாரம் ஒருமுறையோ இருமுறையோ வருவதுண்டு.  தலைப்புக்கு ஏற்றாற் போல்  இந்தத் தொகுப்பில் மக்கள் மத்தியில் போய்ச் சேராத அல்லது வணிக வெளிச்சம்படாத அதிகம் பிரபலமாகாத (ஆனால் அற்புதமான) பாடல்களை ஒலிபரப்புவார்கள்.  வெறுமனே பாடல்களை மட்டும் இப்போதைய எப் எம் களைப் போல ஒலிபரப்பு செய்யாமல் ஒலிபரப்பப்படும் பாடலின் படத்தின் பெயர், இசை  அமைப்பாளர், கவிஞர், பாடியவர்கள் என்று ஒரு பாடலின் எல்லா தகவல்களையும் மறக்காமல் குறிப்பிடுவார்கள். (ஆரம்ப காலங்களில் பொதுவாக எல்லா வானொலிகளிலும்  இது வழக்கமாக செய்யப்படுவதுதான்.)

       இந்த நிகழ்ச்சியில்தான் முதல் முறையாக சித்திரப்பூ சேலை என்ற பாடலை நான்   கேட்க நேர்ந்தது.  எழுத்தாளர் ஜெயகாந்தனின் இயக்கத்தில் எடுக்கப்பட்ட புது செருப்பு கடிக்கும் என்ற படத்தின் பாடல் அது. படம்  வந்ததா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் அந்தப் பாடல் மனதை தாலாட்டும் சுக கீதமாக இருந்தது என்பதில் மட்டும் சந்தேகமேயில்லை. வாத்தியங்கள் அதிகம் வாசிக்கப்படாமலிருப்பதும்  மிகக்  குறைவான இசையில் எஸ் பி பி யின் குரல் மட்டுமே மனதை ஊடுருவும்  விதத்தில் ஒலிப்பதும்  இதன் சிறப்பு. ஒரு விதமான  A capella வகையைச் சார்ந்த பாடல் இது .  அப்போது பிரபலமாக இருந்த எந்த இசையின்  சாயலையும்  கொஞ்சமும் ஒத்திராமல் எம் பி ஸ்ரீனிவாசன் என்பவரின்  இசை அமைப்பில் வந்த அந்தப் பாடல் கொடுத்த இனிமையான உணர்வு  ஒரு புதிய ரகம்.  எம் பி ஸ்ரீனிவாசனை ஒரு புதிய இசை அமைப்பாளர் என்றெண்ணி இருந்த நான் அவரைப் பற்றிய  சில தகவல்களை அறிந்ததும் திடுக்கிட நேர்ந்தது.

         பலரால் அறியப்படாதவராக இருக்கும் இவர்  எழுத்தாளர் ஜெயகாந்தனின் தேர்வுக்குரிய இசை அமைப்பாளராக இருந்தவர்.   கேரளாவில் மிகவும் புகழ் பெற்றவரான ஸ்ரீநிவாசன்  தமிழில் 60 களிலிருந்தே சிற்சில படங்களுக்கு இசை அமைத்துள்ளார். பாதை தெரியுது பார் (60)  என்ற ஜெயகாந்தனின் முதல் படத்தின் இசை அமைப்பாளர் இவரே.  அதே போல இன்று பலரின் அபிமானத்துக்குரிய கே ஜே யேசுதாசை மலையாளத் திரைக்கு அறிமுகப்படுத்தியதும் இவரே. (தமிழில் பொம்மை என்ற எஸ் பாலச்சந்தர் படமே யேசுதாசுக்கு முதல் தமிழ் அறிமுகம்).யாருக்காக அழுதான்? (66),  தாகம் (74), புது வெள்ளம்-(துளி துளி மழைத்துளி, இது பொங்கி வரும் புதுவெள்ளம் பாடல்கள் அப்போது பிரபலமாக வானொலிகளில் ஒலித்தன.)  (75), எடுப்பார் கைப் பிள்ளை (75), மதன மாளிகை (76),  (76),போன்ற சில  படங்களுக்கு இசை அமைத்துள்ள இவரின் இன்னொரு சிறப்பான பாடல் மதன மாளிகை படத்தின் "ஒரு சின்னப் பறவை அன்னையை தேடி" என்கிற எஸ் பி பி பாடிய பாடல். எவ்வளவு உற்சாகமான நறுமணம் வீசும் தென்றலான கானம் இது!  (என் நண்பன் ஒருவன் இந்தப் பாடலை வி.குமாரின் இசை என்று சொல்லியிருக்கிறான். பழைய பாடல்களைப் பொறுத்தவரை இது மாதிரியான தவறுகள் இயல்பாக நிகழக்கூடியதே.)

        நாம் சந்திக்கும் பத்தில் ஏறக்குறைய ஏழு பேர் ஒரு  முறையான இசைத் தொடர்பை அறிந்திருப்பதில்லை. அனிருத், இமான்,ஹேரிஸ் ஜெயராஜ்  என்ற இன்றைய இசை புழக்கத்தில் இருக்கும் பலருக்கு ரஹ்மான் இப்போது போன தலைமுறை இசை அமைப்பாளராகிவிட்டார். இளையராஜா பழையவர் என்று கணிக்கப்படுகிறார். "அவரெல்லாம்  என் அப்பா காலத்து ஆளு" என்றே பலர் குறிப்பிடுகிறார்கள். இளையராஜாவுக்கு முன்  என்று கேள்வி வந்தால் வரும் ஒரே பதில் "எம் எஸ் விஸ்வநாதன்". அதைத் தாண்டி இன்னும் பின்னே இருக்கும் இசையைப் பற்றி  அவர்கள் பெரும்பாலும்  எந்தவிதமான எண்ணமும் கொண்டிருப்பதில்லை.விஷயமறிந்த வெகு சிலரே கே வி மகாதேவன் பெயரை உச்சரிக்கின்றனர். மற்றபடி எ எம்  ராஜா, ஜி ராமனாதன் போன்ற  பெயர்கள் இசை வரலாறு தெரிந்தவர்களின் வாயிலிருந்தே வருகின்றன. இவர்களையும் தாண்டிய சிலரது பெயர்கள் அரிதாகவே உச்சரிக்கப்படுகின்றன.   தமிழ்த் திரையின் நாற்பதாண்டுகள் இசையை வசதியாக பலர்  எம் எஸ் வி இசை என்று குறியீடாக சொல்லிவிடுகிறார்கள். தொலைக்காட்சிகளில் எம் எஸ் வி, இளையராஜா, ரஹ்மான் என்று அதிகம் பேசப்படுவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். எம் எஸ் விக்கு முன் யார் என்ற கேள்விக்கு ஒரேடியாக (எம் கே டி) பாகவதர் என்று அறிவித்து விட்டு முற்றுப்புள்ளி வைத்து விடுவது அவர்களது  வழக்கம். அவர்களின் புரிதல் அப்படி.

       ஆனால்  தமிழ்த் திரையிசை கடந்த பாதைகளில் பல இசைச் சத்திரங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. அங்கெல்லாம் நமது முன்னோர்கள் இசையை அனுபவித்திருக்கிறார்கள். காலம் கடந்தாலும் சில இசை மாளிகைகள் நம் நினைவுகளில் தங்கிவிடுவதைப் போல இந்த சிறு சத்திரங்கள் நமது ஞாபகங்களில் வாழ்வதில்லை. வானவில்லின் வசியப்படுத்தும் வண்ணங்களை வியக்கும் நாம் அதே நிறங்கள் ஒரு சிறு தண்ணீர்த் துளியிலும் பிரதிபலிப்பதை ஏனோ மறந்துவிடுகிறோம். இதோ நம்மால் நம் நினைவுகளிலிருந்து தூரமாக விலக்கி வைக்கப்பட்ட சிலரை தெரிந்துகொள்வோம்.

      ஆர்.தேவராஜன்- 60 களில் பெற்றவள் கண்ட பெருவாழ்வு,யார் மணமகன்?, ஸ்ரீ குருவாயுரப்பன், துலாபாரம் படங்களுக்கு இசை அமைத்த இவர் கேரளாவின் இசை ஆளுமைகளில் ஒருவர் என்று சொல்லப்படுபவர்.  நீலக் கடலின் ஓரத்தில் என்ற பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? அல்லது டி எம் எஸ் குரலில் உள்ளதை உடைக்கும் தேவ மைந்தன் போகின்றான் (கண்ணதாசனின் கவிதை)? அல்லது மிக சிறப்பான வானமென்னும் வீதியிலே?  அன்னை வேளாங்கண்ணி என்ற படத்தின் பாடல்கள் அனைத்தும் ஓர் அற்புதம். வியப்பு என்னவென்றால் இந்தப் படத்திற்கு இசை அமைத்து இத்தனை நேர்த்தியான கிருஸ்துவ கானங்களை உருவாக்கிய ஆர் தேவராஜன் உண்மையில் ஒரு நாத்திகர். குமார சம்பவம், பருவ காலம், அந்தரங்கம் (இவரது இசையில்தான் கமலஹாசன் முதன் முதலில்  ஞாயிறு ஒளி மழையில் என்ற அருமையான பாடலைப் பாடியிருக்கிறார்.), சுவாமி ஐயப்பன்,குமார விஜயம், அலாவுதீனும் அற்புத விளக்கும் போன்ற பல படங்களுக்கு இசை அமைத்தவர்.

      ஆதி நாராயண ராவ்- கண்ணாலே பேசி பேசி கொல்லாதே (அடுத்த வீட்டுப் பெண்) என்ற ஒரு பாடல் இவரை எனக்கு அறிமுகம் செய்தது. வழக்கம் போலவே எம் எஸ் வி- டி கே ஆர் இசை என்று எண்ணியிருந்த என் புகை படிந்த இசையறிவை தூசி தட்டிய பாடல். To say it's a wonderful song is an understatement. இதே படத்தில் உள்ள கண்களும் கவி பாடுதே மாற்றொரு ரசனையான கீதம்.  மாயக்காரி, பூங்கோதை,மணாளனே மங்கையின் பாக்கியம் (அழைக்காதே என்ற அற்புதமான பாடல்  உள்ளது), மங்கையர் உள்ளம் மங்காத செல்வம் போன்ற படங்களுக்கு இசை அமைத்தவரான இவர் நடிகை அஞ்சலி தேவியின் கணவர். 47 இல் முதல் 80 வரை தமிழ் உட்பட எல்லா தென்னிந்திய மொழிகளில் இசை அமைத்துள்ள இவரின் முதல் படத்தில்தான் இவரைப் போல நமக்கு ஒரு அப்பா இல்லையே என்று பல இளம் பெண்களை ஏங்க வாய்த்த எஸ் வி ரங்காராவும் அறிமுகம் ஆனார்.

      ஆர் சுதர்சனம்- தமிழ்த் திரையை ஒரே வீச்சில் புரட்டிப் போட்ட பராசக்தி படத்தைப் பற்றி நிறையவே எழுதப்பட்டுவிட்டது. சிவாஜியையும், கருணாநிதியையும் வஞ்சகமில்லாது பாராட்டியாகிவிட்டது.ஆனால் அந்தப் படத்திற்கு இசை அமைத்த ஆர் சுதர்சனத்தைதான்  நாம் புகழுரைகளுக்கு  அப்பால் நிறுத்திவிட்டோம்.   என்ன விதமான இசையை சுதர்சனம் இந்த ground breaking movie யில் கொடுத்திருக்கிறார் என்பதை என்னும்போது ஆச்சர்யம் ஒன்றே மிஞ்சுகிறது. சமூக சாடல் வலிந்து ஒலிக்கும்  கா கா கா, 50 களின் காதல் உணர்வை பிரதிபலிக்கும் புது பெண்ணின் மனதை தொட்டு போறவரே போன்ற பல விதமான சூழல்களுக்கு ஏற்றவாறு  பாடல்கள் இதில் இருந்தாலும் உறைந்த பனித்துளிகள்  மென்மையாக தரைமீது விழுவதைப் போன்ற எவர் க்ரீன் கிளாசிக் அழகுடன்  வந்த ஓ ரசிக்கும் சீமானே  கர்நாடக மேற்கத்திய இணைப்பின் துல்லியம். கிழக்கும் மேற்கும் இசையில்  இணையும் அற்புதத்தை ஒரே முடிச்சில் பிசிறின்றி பிணைத்து அதை காலம் தாண்டிய கானமாக உருவாகிய சுதர்சனம் உண்மையில் அதிகம் பேசப்படவேண்டிய ஒரு மகா இசை கலைஞன். Tamil film music came of age and Sutharsanam  turned it  on its head.   52 இல் இப்படி ஒரு நாட்டியப்பாடல் வந்திருப்பது வியப்பான ஒன்று.  2014இல் கூட இப்பாடல் அதே பொலிவுடன் ஒலிப்பது மற்றொரு வியப்பு.  எப்படிப்பட்டப் பாடலிது? வெறும் கிளப் டான்ஸ் பாடல் என்ற சிறிய குதர்க்கமான குழிக்குள் அடையாளம் காணப்படும் நாட்டிய கானங்களுக்கு மத்தியில் இந்தப் பாடல் ஒரு வினோத அற்புதம். மேற்கத்திய இசை கலப்பை இவர் செய்தார் அவர் செய்தார் என்று சொல்வதுண்டு. எம் எஸ் வி- டி கே ஆர் செய்தார்கள் என்று கூட சொல்லப்படுவதுண்டு. ஆனால் அதற்கும் முன்னே  சுதர்சனம் எத்தனை அழகாக இந்த நவீனத்தை நிகழ்த்திக்காட்டிவிட்டு போய்விட்டார்? நதியின் சலனம் போன்ற இசையும்,அதனூடே வளைந்து நெளிந்து நடனமாடும் ராகமும், செயற்கைத்தனமில்லாத குரலும் ரசிக்கும் சீமானை கேட்கும் கனமெல்லாம் ரசிக்கவைக்கிறது. ஆர்ப்பாட்டமில்லாத அழகின் வெளிப்பாடாக இந்தப் பாடலை நான் பார்க்கிறேன்.

    பராசக்திக்கு முன்பே இசையமைக்க ஆரம்பித்துவிட்ட சுதர்சனம்  நாம் இருவர், பூமாலை, வாலிப விருந்து (ஒன்ற கண்ணு டோரியா),வாழ்க்கை, ஓரிரவு, தெய்வப்பிறவி,வேதாள உலகம், வேலைக்காரன்,செல்லப் பிள்ளை, நாகதேவதை,மாமியார் மெச்சிய மருமகள், சகோதரி (நான் ஒரு முட்டாளுங்க) திலகம், மணிமகுடம், பெண், நானும் ஒரு பெண் (கல்யாணம் ஆஹா கல்யாணம்..உல்லாசமாகவே   என்று  எஸ் பாலச்சந்தருக்கு சந்திரபாபு பின்னணி பாடியது),அன்னை (சந்திரபாபுவின் புத்தியுள்ள மனிதரெல்லாம் பாடலை மறக்கமுடியுமா?), களத்தூர் கண்ணம்மா, அன்புக்கரங்கள், பூம்புகார் போன்ற படங்களுக்கும் இசையமைத்துள்ளார். களத்தூர் கண்ணம்மா இவரின் இசை மேதமைக்கு ஒரு சான்று என்று எடுத்துக்கொள்ளலாம்.நீண்ட காலமாக நான் இந்தப் படத்தின் இசை எம் எஸ் வி என்று நினைத்திருந்தேன். கண்களின் வார்த்தைகள், ஆடாத மனமும் ஆடுதே,அம்மாவும் நீயே போன்ற பாடல்களைக் கேட்கும் போது எத்தனை சுலபமாக நாம் சில சாதனையாளர்களை அங்கீகரிக்க தவறிவிடுகிறோம் என்ற எண்ணம் எனக்கு ஏற்படுவதுண்டு. சிறுவன் கமலஹாசனை பாராட்டும் வார்த்தைகளில் ஒன்றையாவது  சுதர்சனத்தின் இனிமையான இசைக்காக விட்டு வைத்திருக்கிறோமா ?

            எஸ் வி வெங்கடராமன்- புராண படங்கள் புற்றீசல்கள்  போல புறப்பட்ட   40 களிலிருந்து இசை அமைத்தவர். தமிழிசையின் பெரிய ஆளுமைகளான ஜி.ராமநாதன், சுப்பையா நாயுடு, டி கே ராமமூர்த்தி, எம் எஸ் விஸ்வநாதன், சி ஆர் சுப்பராமன், இவருடன் இணைந்து பணியாற்றியிருக்கின்றனர். 42 இல் வந்த கண்ணாம்பா நடித்த கண்ணகி, எம் எஸ் சுப்புலக்ஷ்மி நடித்த மிகவும் புகழ் பெற்ற மீரா, பரஞ்சோதி, ஹரிச்சந்திரா, கண்கள், மனோகரா, இரும்புத்திரை, மருத நாட்டு வீரன்,அறிவாளி போன்ற படங்களுக்கு  இசை அமைத்தவர்.

      டி ஆர் பாப்பா- 52 இல் ஜோசெப் தலியெத் மூலம் மலையாளத்தில் அறிமுகம் ஆன டி ஆர் பாப்பா (படம் ஆத்ம சாந்தி, தமிழிலும் இதே பெயரில் வந்தது.)சிட்டாடல் பட நிறுவனத்தின் ஆஸ்தான இசை அமைப்பாளராக இருந்தவர். மல்லிகா(வருவேன் நான் உனது மாளிகையின்) , ரங்கூன் ராதா (தலைவாரி பூச்சூடி) , அன்பு, ரம்பையின் காதல்(சமசரம் உலவும் இடமே), ராஜா ராணி, தாய் மகளுக்கு கட்டிய தாலி (சின்னஞ்சிறு வயது முதல்) ,வையாபுரி வீரன்,குறவஞ்சி, நல்லவன் வாழ்வான், எதையும் தாங்கும் இதயம், குமார ராஜா (ஒன்னுமே புரியல உலகத்தில ), விளகேற்றியவள் (முத்தான ஆசை முத்தம்மா) , இரவும் பகலும் (தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் ஜெய்ஷங்கர் அறிமுகமான படம்),காதல் படுத்தும் பாடு, டீச்சரம்மா (சூடி கொடுத்தவள் நான் தோழி ) , ஏன் (இறைவன் என்றொரு கவிஞன்) , அவசர கல்யாணம் (வெண்ணிலா நேரத்திலே) , மறுபிறவி, வைரம் (பார்த்தேன் ஒரு அழகி) போன்ற படங்களுக்கு இசை அமைத்தார். இரவும் பகலும் படத்தின் உள்ளத்தின் கதவுகள் கண்களடா, இரவும் வரும் பகலும் வரும், இறந்தவனை சுமந்தவனும் என்ற பாடல்கள் சிறப்பானவை.

    டி ஜி லிங்கப்பா-கோவிந்தராஜுலு நாயுடு என்ற பழம் பெறும்   இசை அமைப்பாளரின் மகன்.  இருபதுக்கும் மேற்பட்ட  தமிழ்ப் படங்களுக்கு இசை அமைத்துள்ள லிங்கப்பா 60 களுக்குப்பிறகு கன்னட திரைக்கு சென்றுவிட்டார். சித்திரம் பேசுதடி (சபாஷ் மீனா)அமுதைப் பொழியும் நிலவே (தங்க மலை ரகசியம்) என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே (எல்லோரும் இந்நாட்டு மன்னர்) போன்ற மயக்கம் தரும் பாடல்கள் இவரது முத்திரையாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

       சுப்பையா நாயுடு- தென்னகத்தின் ஒ பி நய்யார் என வர்ணிக்கப்படும் இந்த இசை மேதை பல காலத்தை வென்ற கானங்களை படைத்திருக்கிறார். சுப்பையா நாயுடு என்றாலே  இந்த மாதிரியான பெயரை வைத்துக்கொண்டு என்ன விதமான  பாடல்களைக் கொடுக்க முடியும் என்று எனக்கு சிறு வயதில் ஒரு அலட்சியம் தோன்றியிருக்கிறது. பழைய பாடல்களை தேடிக்  கேட்கும் மன முதிர்ச்சி அடைந்த பிறகு நான் விரும்பிக் கேட்டிருந்த பல பாடல்கள் இவருடையது என்ற உண்மை என்னை பார்த்து சிரித்தது. 40 களில் ஜி ராமநாதன் எஸ் வி வெங்கடராமன் சி ஆர் சுப்புராமன் போன்ற ஜாம்பவான்களுடன் இணை இசையமைப்பு செய்த இவர் தொடர்ந்து தனியாக 80 களின் துவக்கம் வரை தன் இசை பிரவாகத்தை ரசிக்கும்படியாக நடத்தியிருக்கிறார். தமிழ்த் திரையில் முதன் முதலாக பின்னணி பாடும் முறையை அறிமுகம் செய்ததே இவர்தான் என்பது ஒரு சுவையான தகவல். சுப்பையா நாயுடுவின் ஆரம்பகால புராணப் படங்களை சற்று தாண்டி மலைக்கள்ளன், மர்மயோகி, நாடோடி மன்னன் (என் எஸ் பாலகிருஷ்ணன் என்ற இசை அமைப்பாளருடன் இணைந்து), அன்னையின் ஆணை, திருமணம், மரகதம், நல்ல தீர்ப்பு, திருடாதே, கொஞ்சும் சலங்கை, கல்யாணியின் கணவன், ஆசை முகம், பந்தயம், சபாஷ் தம்பி, மன்னிப்பு,தலைவன், தேரோட்டம் என்று வந்து நிற்கலாம். தமிழில் ஏறக்குறைய 50 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ள சுப்பையா நாயுடு 30 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையில் இருந்தவர் என்பது ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளிக்கக்கூடியது. பழைய பாடல் விரும்பிகளின் நிரந்தர தேர்வாக இருக்கும் பல பாடல்கள் இவருடையவை. குறிப்பாக எம் எஸ்  வி அல்லது கே வி மகாதேவன் என்று பொது சிந்தனையில் தோய்ந்திருக்கும் பல இனிமைகள் இவர் இயற்றியது.
அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை- அன்னையின் ஆணை.
சிங்கார வேலனே தேவா- கொஞ்சும் சலங்கை.
எத்தனை செல்வங்கள் வந்தாலுமே- தாயின் மடியில்

எம் ஜி ஆர் பாடல்கள் என மக்களால் குறிப்பிடப்படும் சமூக நெறி சார்ந்த, தத்துவ,கொள்கைப் பாடல்களில் சிலவற்றை  சுப்பையா நாயுடு சாகாவரம் பெற்றதாக்கியிருக்கிறார்.  உதாரணமாக

திருடாதே பாப்பா திருடாதே, (திருடாதே), எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே (மலைக்கள்ளன் ),தூங்காதே தம்பி தூங்காதே (நாடோடி மன்னன்) எத்தனை பெரிய மனிதருக்கு (ஆசை முகம்) போன்ற பாடல்களை சொல்லலாம்.

மன்னிப்பு படத்தின் நீ எங்கே என் நினைவுகள் அங்கே  மிகவும் சிறப்பான விதத்தில் இசைக்கப்பட்ட பாடல். இந்தப் பாடல் சுப்பையா நாயுடுவின் கை வண்ணம் என்ற உண்மை எனது சிந்தனையில் இவரைப் பற்றிய புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியது. மூன்று விதமான தொடர்பில்லாத வேறு வேறு  மெட்டுக்களுடன் இந்தப் பாடலை அவர் அமைத்திருப்பது இதன் மற்றொரு சிறப்பு. இதே போல வேறு ஏதும் பாடல்கள் உண்டா என்று தெரியவில்லை. (ஸ்பரிசம் என்ற படத்தில் ஊடல் சிறு மின்னல் என்ற ஒரே பாடலில்  பல வித மெட்டுக்கள் பின்னியிருக்கும்.) இதே படத்தின் இன்னொரு அற்புத கானம் வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்.

நாம் மூவர் படத்தில் வரும் பிறந்த நாள் என்ற பாடல்  சிலோன் வானொலியின் பிறந்த நாள் நிகழ்ச்சியின் முகவரிப்  பாடலாக  இருந்தது.     (அதை முழுவதும் கேட்க விரும்பிய நாட்கள் உண்டு.)   பிறந்த நாள் பாடல்கள் பல இருந்தாலும் அந்த நிகழ்ச்சிக்கு இத்தனை பொருத்தமான ஒரு பாடல் இதை விட்டால் வேறு இல்லை  என்று தோன்றுகிறது.

      டி கே ராமமூர்த்தி - தமிழ்த் திரையின் சிதிலமடையாத  பல இசை மாளிகைகளை உருவாக்கிய இரட்டையர்களான எம் எஸ் வி- டி கே ஆர் ஒரு மாபெரும் இசை சகாப்தம் என்பது என்றென்றும் மாற்ற உண்மையின் ஒரு சிறிய துளி மட்டுமே. அவர்களருகே மற்றவர்கள் வருவதென்பதே ஒரு தரமான, அழிவில்லாத இசையின் குறியீடு.  பலருக்கு அது ஒரு பகல் கனவாகவே நிலைத்துவிட்டது. தமிழிசையின் பல ஜீவ கீதங்களை படைத்த இந்த இரட்டையர்களின் பிரிவு தனித்தனிப் பாதைகளில் இருவரையும் செலுத்தினாலும் ஒருவர் வெற்றியின் உச்சியை நோக்கியும் மற்றொருவர் வரலாற்றின் மறைந்த பக்கங்களுக்குள்ளும் சென்றது ஒரு bittersweet reality. எம் எஸ் விஸ்வநாதன் புகழ் என்ற சிகரம் தொடர்ந்து சிகரம் தாண்டிச் செல்ல, டி கே ராமமூர்த்தியோ -தரமான நல்லிசையை வழங்கிய போதிலும்- அதே புகழின் எதிர் திசையில் சென்றபடியிருந்தார். பிரிவுக்குப் பின் 19 தமிழ்ப் படங்களுக்கு மட்டுமே இசை அமைத்திருக்கிறார் டி கே ஆர்.அவை :
சாது மிரண்டால், தேன்மழை(கல்யாண சந்தையிலே, நெஞ்சே நீ போ,) மெட்ராஸ் டு பாண்டிச்சேரி(மலரைப் போன்ற,பயணம் எங்கே,)மறக்க முடியுமா (காகித ஓடம் கடலலை மீது) ஆலயம், எங்களுக்கும் காலம் வரும், பட்டத்து ராணி, நான் (போதுமோ இந்த இடம், அம்மனோ சாமியோ,),மூன்றழுத்து (ஆடு பார்க்கலாம் ஆடு) சோப்பு சீப்பு கண்ணாடி,,நீலகிரி எக்ஸ்பிரெஸ்,தங்க சுரங்கம் (சந்தன குடத்துக்குள்ளே, நான் பிறந்த நாட்டுக்கு,), காதல் ஜோதி, சங்கமம், சக்தி லீலை, பிராத்தனை,அவளுக்கு ஆயிரம் கண்கள், அந்த 16 ஜூன், அவள் ஒரு பவுர்ணமி (விண்ணிலே மின்மினி ஊர்வலம்.)

 66ரிலிருந்து 69 வரை கொஞ்சம் பரபரப்பாக இயங்கி வந்த டி கே ஆர் 70 களில் தனது இசைத் தோழன் எம் எஸ் வி யின் அசாதரண வேகத்துக்கு முன் தலை பணிய வேண்டியிருந்தது. அவரது ஒவ்வொரு அடிக்கும் எம் எஸ் வி பத்துப் படிகள் முன்னேறிக்கொண்டிருந்தார். புரிந்து கொள்ள முடியாத வினோத உண்மையாக எம் எஸ் விக்கு சோலையாக இருந்த புகழ் டி கே ராமமூர்த்திக்கு  கடைசி வரை கானல் நீராகவே  காட்சியளித்தது.

   சலபதிராவ்- குறிப்பிட்ட சில படங்களுக்கு மட்டுமே இசை அமைத்திருந்தாலும் இவர் இசை மனதை வருடும் தென்றல் உணர்வை தரக்கூடியது. அமர தீபம் (ஜி ராமநாதனுடன் இணைந்து), மீண்ட சொர்க்கம், புனர் ஜென்மம்(உள்ளங்கள் ஒன்றாகி துள்ளும் போதிலே) , அன்பு மகன், நல்வரவு போன்ற படங்களில் இவரது இசை அமைப்பு இருந்தது.

      எஸ் தட்சிணாமூர்த்தி- அலிபாபாவும் 40 திருடர்களும் படப் பாடல்கள் எல்லாமே வெகு சிறப்பானவை. இன்றுவரை ரசிக்கப்பட்டுவரும் அந்த இனிமைகளை உண்டாக்கியவர் இவர். குறிப்பாக மாசிலா உண்மை காதலே பாடல் அற்புதமான கானம். பானுமதியின் ஊடல்,கொஞ்சல், நளினம் எல்லாம் இந்தப் பாடலை கேட்க மட்டுமல்லாது பார்க்கவும் ரசிக்க வைத்துவிடுகிறது. தவிர   சம்சாரம், சர்வாதிகாரி, வளையாபதி, கல்யாணி,வேலைக்காரி மகள், மங்கையர் திலகம்,யார் பையன்,பாக்கியவதி, உலகம் சிரிக்குது, பங்காளிகள் போன்ற படங்களுக்கு இசை அமைத்தார்.


    (வீணை) எஸ்.பாலச்சந்தர்-எந்த விதமான சமரசங்களையும் அனுமதிக்காத தமிழ்த் திரையின் அபூர்வ ஆளுமை.  புராணம், நாடகத்தனம், போலித்தனம், செயற்கைத்தனம் எல்லாம் புரையோடிப்போயிருந்த தமிழ்த் திரையின் 50, 60 களில் அந்தக் காலங்களைத் தாண்டி சிந்தித்தவர் என்பது இவரது அந்த நாள், பொம்மை, நாடு இரவில், அவனா இவன் போன்ற படங்களைப் பார்த்தால்  உணரமுடியும். பெரிய வெற்றி கண்ட பாடல்களை அமைக்காவிட்டாலும் இவரது பின்னணி இசை வெகு சிறப்பானது. குறிப்பாக அவனா இவன் படத்தின் பின்னணி இசைக்கு இணையான இன்னொன்றை தேடித்தான் கண்டுபிடிக்கவேண்டும். தமிழ்த் திரையில் பல் முகம் கொண்ட சினிமாத்தனம் அகன்ற ஒருவர் காலூன்ற முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அந்த சாத்தியம் இங்கே ஒரு உறுதிசெய்யப்பட அபத்தம். இந்த அபத்தத்தின் வினோத விதியில் காணாமல் போன சில மேதைகளில் ஒருவராகவே எஸ் பாலச்சந்தர் இருக்கிறார். பணத்துக்கு இசை என்றில்லாமல் மனதுக்கு இசை என்ற கோட்பாடு கொண்டவர் பின் எவ்வாறு இங்கே நீடித்திருக்க முடியும்? Obviously, a  man who deserves  superlative compliments.

       வேதா- மாடர்ன் தியேட்டர்ஸின் ஆஸ்தான இசைஞராக இருந்தவர்.   ஹிந்தி மெட்டுக்களை இந்த அளவுக்கு அழகாக தமிழில் பயன்படுத்தியது இவராகத்தான் இருக்கமுடியும்.  வேதா குறித்த  இந்த விமர்சனம் பொதுவாக அந்த காலத்து தமிழ் ரசிகர்கள் எல்லோருக்குமே தெரிந்தததுதான் என்பதால்  இதை ஒரு குற்றச்சாட்டாக  வைக்காமல் அவர் கொடுத்த பாடல்களை மட்டும் அலசலாம்.  வேதா தமிழுக்குக் கடத்திய கானங்கள் அனைத்தும் மிக அற்புதமானவை. இன்றிருக்கும்  இசை அமைப்பாளர்கள் தமிழுக்குத் தொடர்பில்லாத வேற்று மொழி மெட்டுக்களை  சிரமத்துடன் தமிழில் அமைப்பதுபோல இல்லாமல் வேதாவின் பாடல்கள் வெகு இனிமையாக வார்க்கப்பட்ட இசையோவியங்கள் என்பது என் எண்ணம். (அதே கண்கள் படத்தில் மட்டும் இப்படிச் செய்ய அனுமதி இல்லாததால் சொந்தமாக பாடல்கள் அமைத்தார் என்ற தகவலை கேள்விப்பட்டிருக்கிறேன்.) வேற்று மொழி பாடல்களின் மெட்டுக்கள் மீது தமிழ் வார்த்தைகளை உட்கார வைத்தாலுமே  வேதாவின் இசையில் ஹிந்தியின் சாயல் எட்டிக்கொண்டு தெரியாமல் தமிழ்ச்  சுவை இயல்பாகவே காணப்படும். பல சமயங்களில் அவரது தமிழ் நகல் ஹிந்தியின் அசலைவிட அதிக வசீகரமாக இருப்பதை நீங்கள் உணர்ந்திருக்கலாம். கீழ்க்கண்ட பாடல்களை சற்று ஆராய்ந்தால் இதை  நாம் தெளிவாகக் காணலாம்.
வல்லவன் ஒருவன்- இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால்,தொட்டுத் தொட்டுப் பாடவா,  பளிங்கினால் ஒரு மாளிகை.
வல்லவனுக்கு வல்லவன்- மனம் என்னும் மேடை மேல, பாரடி கண்ணே கொஞ்சம்,  ஓராயிரம் பார்வையிலே (காதல் பாடல்களின் உச்சத்தில் நீங்கள் எந்தப் பாடலை வைத்தாலும் இந்த கானம் அதற்கும் மேலேதான். அதிசயமாக இதன் ஹிந்திப் பதிப்பு தமிழுக்குப் பிறகே வெளிவந்தது.)
நான்கு கில்லாடிகள் - செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் ( சுசீலாவின் அற்புதமான குரலில் ஒலிக்கும் நட்சத்திர கானம்.)
இரு வல்லவர்கள்- ஆசையா கோபமா, காவிரிக் கரையின் தோட்டத்திலே, நான் மலரோடு  தனியாக ( மிக மென்மையான  காதல் கீதம்)
எதிரிகள் ஜாக்கிரதை- நேருக்கு நேர் நின்று.
யார் நீ- நானே வருவேன், பார்வை ஒன்றே போதுமே (லயிக்கச் செய்யும் தாளம்)
சி ஐ டி சங்கர்- பிருந்தாவனத்தில் பூவெடுத்து, நாணத்தாலே கண்கள் (நாட்டியமாடும் வார்த்தைகளும் அதோடு இணைந்த இனிமையான இசையும் இதை ஒரு இசை விருந்தாக மாற்றிவிடுகிறது.)
அதே கண்கள்- பூம் பூம் மாட்டுக்காரன் (நெத்தியடியான நாட்டுப்புற தாளம். ), ஓ ஓ எத்தனை அழகு இருபது வயதினிலே, கண்ணுக்குத் தெரியாதா,பொம்பள ஒருத்தி இருந்தாளாம், வா அருகில் வா,

    எம் பி ஸ்ரீநிவாசன்- இந்தப் பதிவின் துவக்கத்தில் குறிப்பிடப்பட்ட அசாதாரமான இசை அமைப்பாளர்.

          வி தட்சிணாமூர்த்தி- புகழ் பெற்ற மலையாள இசை அமைப்பாளரான இவர் எண்ணி விடக்கூடிய சில தமிழ்ப் படங்களுக்கும் இசை அமைத்திருக்கிறார். ஒருவேளை கீழே குறிப்பிட்டுள்ள பாடல்களை கண்ணுற்றால் அட இவரா என்ற எண்ணம் உங்களுக்கு வர வாய்ப்பிருக்கிறது. நந்தா என் நிலா(படமும் அதுவே),  நல்ல மனம் வாழ்க (ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது.) இவரையும் எஸ் தட்சிணாமூர்த்தியையும் ஒருவரே அல்லது இவரே அவர் என்ற புரிதல் இணையத்தில் சில இடங்களில் காணப்படுகிறது. அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தின் இசை என்று சில இடங்களில் இவரை அடையாளப்படுத்தியிருப்பது இந்தக்  குழப்பத்தின் வெளிப்பாடு.

     குன்னக்குடி வைத்தியநாதன்- மிகப் புகழ் பெற்ற வயலின் வித்வானாக  அறியப்பட்ட வைத்தியநாதன் (இவரது இசையில்  வயலின் பேசும் என்று சொல்லப்படுவதுண்டு.) சில படங்களுக்கும்  இசை அமைத்திருக்கிறார். வியப்பூட்டும் தகவலாக எம் ஜி ஆர் தனது கனவுப் படமான உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு முதலில் இவரைத்தான் இசை அமைப்பாளராக நியமித்திருந்தார். பாடல்களில் திருப்தி ஏற்பவில்லையோ அல்லது வேறு எதோ காரணங்களுக்காகவோ பின்னர் எம் எஸ் விஸ்வநாதன் அந்தப் படத்தில் இசை அமைத்தார். அதன் பின் நடந்தது வரலாறு. பாடல்களைப்  பற்றி நான் புதிதாக எதுவும் சொல்லவேண்டியதில்லை. வா ராஜா வா என்ற படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அவதாரம் எடுத்த வைத்தியநாதன் அகத்தியர், தமிழின் முதல் சினிமாஸ்கோப் படமான ராஜ ராஜ சோழன் முதலிய படங்களுக்கு இசை அமைத்துள்ளார். 80 களில் டி என் சேஷகோபாலன் நடித்த தோடி ராகம் என்ற படத்தை எடுத்தார். படம் படுத்துவிட்டது என்பதை எந்தவிதமான யூகங்களும் இல்லாமல் சொல்லிவிடலாம். வாங்க மாப்பிள்ளை வாங்க படத்தில்  என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி என்ற  இவரது இசையில் வெளிவந்த பாடல் அப்போது பட்டி தொட்டி எங்கும் காற்றில் படபடத்தது.

     ஆர் கோவர்தன்- ஆர் சுதர்சனத்தின் சகோதரர். எம் எஸ் வி இசை அமைத்த பல படங்களில் உதவி கோவர்த்தன் என்று காட்டப்படுபவர் இவரே. தனியாகவும் சில படங்களுக்கு இசை அமைத்துள்ளார். அவற்றில் சில;
       கை ராசி, மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே,பூவும் போட்டும், பட்டினத்தில் பூதம் (கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா, அந்த சிவகாமி மகனிடம் சேதி (இந்தப் பாடலுக்குப் பின்னே கண்ணதாசன்- காமராஜர் கதை ஒன்று உண்டு), உலகத்தில்  சிறந்தது எது ) பொற்சிலை, அஞ்சல் பெட்டி 520 (பத்துப் பதினாறு முத்தம்), தங்க மலர், வரப்பிரசாதம். குறிப்பாக கங்கை நதியோரம் ராமன் நடந்தான்(வரப்பிரசாதம்) என்ற பாடல் ஒரு அற்புதம். சிலர் இதை இளையராஜாவின் இசை என்று சொல்கிறார்கள். எதுவாக இருப்பினும் இந்தப் பாடல் 70களின் மென்மையான நல்லிசைக்கு மிகச் சிறந்த உதாரணம் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்கமுடியாது. கேட்பவர்களை உடனடியாக ஆட்கொள்ளும் அபாரமான கானம்.

           ஜி.கே.வெங்கடேஷ்- நமது தமிழ் இசை மரபின் முன்னோடிகளில் ஒருவர். இசை ஜாம்பவான்கள்  எம் எஸ் வி- டி கே ஆர், சுப்புராமன், போன்ற மகா ஆளுமைகளுடன் பணியாற்றிவர். கன்னடத்தில் மிகப் பெரிய புகழ் பெற்ற இவருக்கு தமிழில் ஒரு பதமான இடம் அமையாதது ஒரு வியப்பான வேதனை. 52 இல் நடிகை என்ற படத்துடன் தமிழில் அறிமுகமானவர் தொடர்ந்து மற்ற தென்னிந்திய மொழிகளில் அதிகமான படங்களுக்கு இசை அமைத்துள்ளார். பின்னர் 64 இல் மகளே உன் சமத்து, நானும் மனிதன்தான் என்று மீண்டு வந்தவருக்கு மறுபடியும் பின்னடைவு ஏற்பட, அதன் பின் சபதம் (மிக நவீனமான தொடுவதென்ன தென்றலோ என்கிற பாடலைக்  கேட்டிருப்பீர்கள்.70 களின் இசை முகத்தை இந்தப் பாடலில் காணலாம். ) படத்தில்தான் இரண்டாவது துவக்கம் கைகூடியது. தாயின் கருணை, பொண்ணுக்கு தங்க மனசு(தேன் சிந்துதே வானம்) முருகன் காட்டிய வழி, யாருக்கும் வெட்கமில்லை, தென்னங்கீற்று, பிரியாவிடை (ராஜா பாருங்க ), மல்லிகை மோகினி(எஸ் பி பி பாடிய அற்புதமான மேகங்களே இங்கு வாருங்களேன் இதில்தான் உள்ளது ), போன்ற படங்கள் இவரது இசையில் வந்தவை. அதன் பின் வந்த ஒரு படம் மிகவும் சிறப்பு பெற்றது. அந்து எந்தப் படம் என்பதும் ஏன் என்பதும் கீழே:

கண்ணில் தெரியும் கதைகள்- சரத் பாபு, ஸ்ரீப்ரியா, வடிவுக்கரசி நடித்த இந்தப் படத்தை பழம் பெரும் பாடகர் எ எல் ராகவன் தயாரித்திருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் பெரிய வீழ்ச்சியடைந்தது. ஆனாலும் தமிழ்த் திரையில் இந்தப் படம் ஒரே ஒரு காரணத்திற்க்காக நினைவு கொள்ளப்படுகிறது. முதல் முறையாக ஐந்து இசை அமைப்பாளர்கள் இணைந்து பணியாற்றிய படம் என்ற சிறப்பை பெற்ற படமாக இது இருக்கிறது. அவர்கள்
கே.வி மகாதேவன்-வேட்டைக்காரன் மலையிலே
டி ஆர் பாப்பா- ஒன்னுரெண்டு மூணு
ஜி.கே.வெங்கடேஷ்,- நான் பார்த்த ரதி தேவி எங்கே.
சங்கர் கணேஷ்- நான் உன்ன நெனச்சேன்
இளையராஜா- நானொரு பொன்னோவியம் கண்டேன் எதிரே

 ஐந்து பாடல்களும் வெகு அலாதியான சுவை கொண்டவை. நான் உன்ன நெனச்சேன், நானொரு பொன்னோவியம் பாடல்கள் பெற்ற வரவேற்பை மற்ற பாடல்கள் பெறாதது ஒரு வேளை தலைமுறை இடைவெளி ரசனையினால் விளைந்த கோளாறாக இருக்கலாம்.(இதன் பிறகே 2002இல் நீ ரொம்ப அழகா இருக்கே என்ற படத்தில் மீண்டும் ஐந்து இசைஞர்கள் பணியாற்றினார்கள்.)

   சின்னஞ்சிறு கிளியே, பெண்ணின் வாழ்க்கை (மாசிமாதம் முகூர்த்த நேரம்), தெய்வத் திருமகள் (மூன்று வெவ்வேறு கதைகள் கொண்ட படமாக இது இருந்ததால் இதில் கே வி. மகாதேவன், எம் எஸ் வி, ஜி கே வி இசை அமைத்திருந்தார்கள் ), நெஞ்சில் ஒரு முள் (நேராகவே கேட்கிறேன்,ராகம் புது ராகம் ), காஷ்மீர் காதலி (காதல் என்பது மலராகும், சங்கீதமே தெய்வீகமே, அழகிய செந்நிற வானம். இதே மெட்டில் இன்று நீ நாளை நான் படத்தின் மொட்டு விட்ட முல்லை கொடி பாடல் இருப்பதை கேட்டால் உணரலாம். ), அழகு, இணைந்த கோடுகள் என அவரது படவரிசை ஒரு முடிவை எட்டியது. இருந்தும் ஒரு மெல்லிசை நாயகனுக்கு வேண்டிய சிம்மாசனம் அவரை விட்டு விலகியே இருந்தது.

         இப்போது ஒரு சிறிய பின்னோக்கிய பார்வை. 60 களின் இறுதியில் ஜி கே வி தன்னிடம் ராசையா என்ற இசை தாகம் கொண்ட இளைஞனை உதவியாளராக சேர்த்துக்கொண்டார். இவரே பின்னாளில் ராஜா என பெயர் மாற்றம் செய்யப்பட்ட 80 களில் தமிழ்த் திரையிசையை ஒரே ஆளாக வழிநடத்திச் சென்ற இளையராஜா.  மனதை வசீகரிக்கும் பல பாடல்களை உருவாக்கி இருந்தாலும் ஜி கே வெங்கடேஷின் இசையை சிலர் இளையராஜாவின் இசையாகவே காண்பதுண்டு. முரணாக உண்மை அப்படியே இதற்கு நேர் எதிராக இருக்கிறது. ஜி கே வி யின் கூடாரத்திலிருந்து வந்த இளையராஜாவின்  இசைதான்  ஆரம்பத்தில் ஜி கே வெங்கடேஷின் இசை பாணியை தன்னிடத்தில் கொண்டிருந்தது. பொண்ணுக்கு தங்க மனசு படத்தின் மிகப் பெரிய பிரபலமான "தேன் சிந்துதே வானம்" பாடலை இளையராஜாவின் ரசிகர்கள் பலர் தங்கள் ஆதர்சன இசை அமைப்பாளரின் பாடல் என்றே கருதுகின்றனர். ஆனால் உண்மையில் ஜி கே வி இந்தப் பாடலை ஏற்கனவே கன்னடத்தில் அமைத்திருந்தார். ஒரு நாள் உன்னோடு ஒருநாள் (உறவாடும் நெஞ்சம்), நான் பேச வந்தேன் (பாலூட்டி வளர்த்த கிளி) கண்ணன் ஒரு கைக்குழந்தை (பத்ரகாளி) போன்ற இளையராஜாவின் பாடல்களில் ஜி கே வெங்கடேஷின் நிழலை நாம் அதிகமாகவே காணலாம். மேலும் வி குமார், எம் எஸ்  வி, ஜி கே வெங்கடேஷ் போன்றவர்களின் இசைபாணி இளையராஜாவிடம் 80 களுக்கு முன்பு வரை இருந்தது அவரது துவக்ககால பாடல்களை கேட்டால் புரிந்து கொள்ளலாம். கன்னடத்தில் ஒரு சிறப்பான இடத்தில் இருந்தாலும் தமிழில் ஜி கே வெங்கடேஷுக்கு  வாய்ப்புக்கள் குறைவாகவே இருந்தன. இளமை ஊஞ்சலாடுகிறது படத்தின் தண்ணி கருத்துருச்சு பாடல் இவர் பாடியதுதான். (அதற்கும் முன்பே பல பாடல்கள் பாடியிருக்கிறார்) அதன் பின் மெல்லத் திறந்தது கதவு படத்தில் நாயகனின் தந்தையாக நடித்தார். அதன் பின் மக்களின் பொது நினைவுகளிலிருந்து  இவர் பெயர் கரைந்து போனது. தனது கடைசி காலங்களில் இளையராஜாவிடம் உதவியாளராக இருந்ததாகத் தெரிகிறது. வினோதம்தான்.

   இன்னும் ஒருவரைப் பற்றி இங்கே பேச வேண்டியது கட்டாயமாகிறது. இவரை ஒரு முடிசூடா மன்னன் என்று ஒரே வரியில் வர்ணித்து விடலாம்.அந்த அவர்- வி.குமார்
   கே. பாலச்சந்தரின் மிகச் சிறப்பான கண்டுபிடிப்பு யார் என்று என்னை கேட்கும் பட்சத்தில் எனது பதில் வி.குமார்.  சில சமயங்களில் ஆடம்பரமான அலங்கார விளக்குகளை விட சின்னஞ்சிறிய அகல் விளக்குகள் நம் மனதை நிரப்புவதுண்டு. பலமான காற்றில் துடித்து அடங்கும் சுடாராக வந்தவர்தான் குமார். பாடப்படாத நாயகனாக, அரியணை இல்லாத அரசனாக, அடர்ந்த காட்டுக்குள் மாட்டிகொண்ட கவிஞனாக, தனித் தீவின் பாடகனாக இவர் எனக்குத் தோற்றமளிக்கிறார். சிறிது எம் எஸ் வியின் பாதிப்பு இருந்தாலும்  இவரின் முத்திரைப் பாடல்கள் வி குமார் என்ற மகத்தான இசைஞரை எளிதில் நமக்கு அடையாளம் காட்டிவிடும். நல்லிசை மற்றும்  மெல்லிசை என்ற சொற்களுக்கு ரத்தமும் சதையுமாக நிமிர்ந்து நின்ற அற்புதக்  கலைஞன். அபாரமான  பல கானங்களை உருவாகியிருந்தாலும் பலருக்கு அவை இவரது இசையில் உருவானவை  என்ற விபரம் தெரியாமலிருப்பது ஒரு சிறந்த இசைக் கலைஞனை நாம் சரியான உயரத்தில் வைக்கவில்லை என்பதை காட்டுகிறது. சில வைரங்களை நாம் கூழாங்கற்கல் என்றெண்ணி நீரினுள் வீசிவிட்டோம் என்ற உண்மையை குமாரின் இசையை கேட்கும் பொழுது புரிந்துகொள்ள முடிகிறது. குமாரின் பல பாடல்கள் பலரால் எம் எஸ் வி அல்லது இளையராஜா என்று முத்திரை குத்தப்படுவது வேதனை முற்களை நெஞ்சில் பாய்சுகிறது.  உண்மையில் அந்த அற்புதமான  இசை மேதை வார்த்தைகளின்றி மவுனமாகவே தன் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். ஆனால் துயர உண்மையாக   அவருக்குத் தகுதியான கிரீடம் அவர் தலை மீது கடைசி வரை சூட்டப்படவேயில்லை.  We salute and honour   you Mr. V. Kumar. Truly,  you deserve a lot more than what you were given in your heyday. Most importantly, we thank you for the music you gave us.

        1965 இல் நீர்க்குமிழி படத்தில் முதன் முறையாக தன் திரையிசை பிரயாணத்தை துவக்கிய குமார் (அவருடைய முதல் படத்துக்கு அவருக்கு மிகுந்த பக்க பலமாக இருந்தவர் ஆர் கே சேகர்- எ ஆர் ரஹ்மானின் தந்தை.) தொடர்ந்து நாணல், இரு கோடுகள், எதிர் நீச்சல், அரங்கேற்றம், வெள்ளிவிழா, நூற்றுக்கு நூறு, மேஜர் சந்திரகாந்த், நவ கிரகம், நினைவில் நின்றவள், தேன்  கிண்ணம், பத்தாம் பசலி, நிறைகுடம், பொம்மலாட்டம், குமாஸ்தாவின் மகள், கலியுகக் கண்ணன்,பெத்த மனம் பித்து, கண்ணா நலமா,தேன் சிந்துதே வானம்,ராஜ நாகம்,தூண்டில் மீன், நாடகமே உலகம், எல்லோரும் நல்லவரே, சதுரங்கம் உட்பட ஏறக்குறைய 35 தமிழ்ப் படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

          இப்போது குமாரின் மென்மையான எங்கும் துருத்திக்கொண்டு தெரியாத இனிமையான மெல்லிசையில் குழைந்து வரும்  சில பாடல்களைப் பார்ப்போம்.
             காதோடுதான் நான் பாடுவேன்- வெள்ளிவிழா. குமாரின் வைர கானம் . எல் ஆர் ஈஸ்வரியை பிடிக்காதவர்கள் கூட கொஞ்சம் தடுமாறித்தான் போவார்கள் இந்தப் பாடலைக் கேட்கும்போது. குழந்தைக்கான தாலாட்டும் கணவனுக்கான அந்தரங்க காதலும் ஒருங்கே பிணைந்த சாகாத பாடல்.
       புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன்- இருகோடுகள். அசாத்தியமான ராக நெளிவுகளுடன் வந்த மிகச்  சிறப்பான பாடல்.
      நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்-நூற்றுக்கு நூறு. என்ன ஒரு சுகமான கீதம்! சுசீலாவின் தேன் மதுரக் குரலில் இதை கேட்டு மயங்காத உள்ளங்கள் உண்மையில் இசைச் சாவு அடைந்துவிட்டன என்றே சொல்லலாம்.(காட்சியை மட்டும் பார்த்துவிடாதீர்கள். சற்றும் பொருத்தமில்லாத காட்சியமைப்பு)
   ஆடி அடங்கும் வாழ்க்கையடா-நீர்க்குமிழி. மரணத்தை வர்ணிக்கும் மரணமடையாத பாடல்.
     ஒரு நாள் யாரோ- மேஜர் சந்திரகாந்த். எத்தனை மென்மையாக  ஒரு பருவப் பெண்ணின் மோகத்தையும் விரகதையும் குமார் தன் அழகியல் இசையால் வண்ணம் பூசி செவி விருந்து படைத்திருக்கிறார்! எந்த விதமான படுக்கையறை முக்கல் முனங்கல்கள் இல்லாது இசை எத்தனை தூய்மையாக இருந்தது ஒரு காலத்தில் என்ற பிரமிப்பும் பெருமூச்சும் ஒரு சேர எழுகிறது.
     நேற்று நீ சின்ன பாப்பா- மேஜர் சந்திரகாந்த்.குதூகலமான இசையின் சிறப்பான வடிவம்.
       கண்ணொரு பக்கம்-நிறைகுடம். லேசாக எம் எஸ் வி யின் நிழல் படியும் அழகான கீதம்.
     அடுத்தாத்து அம்புஜத்த பாத்தேளா?- எதிர் நீச்சல். பகடிப் பாடல் என்ற வரிசையில் வந்தாலும் சுய விமர்சனம் செய்துகொள்ளும் தம்பதியினரின் இனிமையான ராகப் போட்டி மற்றும் வார்த்தை விளையாட்டு. இன்றளவும் ரசிக்கப்படும் நல்லிசை.
       தாமரைக் கன்னங்கள்-எதிர் நீச்சல். என்ன ஒரு ராக வார்ப்பு! இசையோடு குழையும் குரல்கள், லயிக்கச் செய்யும் இசை என்று கேட்ட வினாடியே நம்மை உள்ளே இழுத்துக்கொள்ளும் பாடல்.
     வெற்றி வேண்டுமா-எதிர் நீச்சல். ஒரு விதத்தில் குமார் தனக்காகவே அமைத்த பாடலோ என்று எண்ணம் கொள்ளவைக்கும் தன்னம்பிக்கைப் பாடல்.
        ஆண்டவனின் தோட்டத்திலே- அரங்கேற்றம். இளமையின் துள்ளல் அதன் குழந்தைத்தனமான பரிமாணங்களை எல்லோரும் ரசிக்கக்கூடிய வகையில் வெளிப்படுத்தும் கீதம். குதூகலமான பாடல்.
      மூத்தவள் நீ- அரங்கேற்றம். துயர இசையின் சிறப்பான படிவம்.
     தொட்டதா தொடாததா- நினைவில் நின்றவள்.  எத்தனை சிறப்பான பாடல்! எம் எஸ் வி பாடல் என்றே இதை பலர் சொல்லக்கேட்டிருக்கிறேன்.
    முள்ளுக்கு ரோஜா சொந்தம்-வெகுளிப்பெண். தாய்மையை நல்லிசையாக வடித்த பாடல். அவ்வளவாக கேட்கப்படாத கானம்.
     நல்ல நாள்- பொம்மலாட்டம். காதலை நளினமாக நாட்டியமாடும் ராக நெளிவுகளுடன் சொல்லும் அருமையான பாடல்.
     வா வாத்தியாரே- பொம்மலாட்டம். முழுதும் சென்னைத் தமிழில் மனோரமா பாடிய அப்போது பெரும் பிரபலமான பாடல்.
     முத்தாரமே உன் ஊடல்- ரங்க ராட்டினம். மகத்தான  கலைஞன் எ எம் ராஜாவின் குரலில் இந்தப் பாடல் ஒரு இனிமையான சுக அனுபவம்.
   தேவன் வேதமும் கண்ணன் கீதையும்- ராஜநாகம். கிருஸ்துவ மற்றும்  சாஸ்திரிய இசை கலப்புடன் துவங்கும் இனிமையான கீதம். இதன் பிறகே அலைகள் ஓய்வதில்லையில் காதல் ஓவியம் வந்தது. ஆனால் மக்கள் இந்தப் பாடலை மறந்துவிட்டது துரதிஷ்டமே.
       உன்னைத் தொட்ட காற்று வந்து- நவகிரகம். நளினமான கானம்.பாடலைக் கேட்கும் போதே நம்மையறியாமல் பாடத்தோன்றும் தூண்டுதலை உண்டாக்கும் இசை அமைப்பு.
      சப்தஸ்வரம்  புன்னகையில் கண்டேன்- நாடகமே உலகம். சிலிர்ப்பான பாடல். நேர்த்தியான இசை. ஒட்டி உறவாடும் குரல்கள்.
    நாள் நல்ல நாள்- பணக்காரப் பெண். நினைவலைகளை தூண்டி விடும் ரம்மியமான கீதம்.
    வாழ்வில் சௌபாக்கியம் வந்தது- தூண்டில் மீன். மிகவும் ரம்மியமான பாடல். பலருக்கு இந்தப் பாடல் அறிமுகம் ஆகியிருக்காத பட்சதில் எனது வேண்டுகோள்  ஒரு முறை இந்தப் பாடலை கேட்டுப்பாருங்கள். ராக தாளங்கள் எப்படி மோகம் கொண்ட காதலர்கள் போல சுகமாக மோதுகின்றன என்று நீங்களே வியப்படைவீர்கள். ராகங்களை வைத்து இத்தனை பின்னல்களை  ஒரு கானத்தில் இணைக்க முடியுமா என்ற வியப்பு உண்டாகும்.
   என்னோடு என்னென்னெவோ ரகசியம்- தூண்டில் மீன். என்ன ஒரு தேவ கானம் ! இதை கேட்கும் போது குமார் என்ற இசை மேதைக்கு நாம் தர மறந்த அங்கீகாரம் கூர்மையாக நமது நெஞ்சுக்குள் வலியோடு ஊடுருவதை உணரலாம்.
     பகை கொண்ட உள்ளம்-எல்லோரும் நல்லவரே. ஜேசுதாஸின் குரலில் என்ன ஒரு துயரத்தின் இசை!
   செவப்புக் கல்லு மூக்குத்தி- எல்லோரும் நல்லவரே. நல்லிசையாக ஒலிக்கும் நாட்டுப்புற கானம்.
   ஓராயிரம் கற்பனை- ஏழைக்கும் காலம் வரும். குமாரின் பியானோ இசையில் வந்த மிக அருமையான கீதம்.
     மதனோற்சவம்-சதுரங்கம். இந்தப் பாடலே ஒரு கனவுலகிற்கான நுழைவுச் சீட்டு என்பதை கேட்கும் போது உணரலாம். ஒரு மலர்ப் பூங்காவிற்குள் நுழைந்துவிட்ட அனுபவத்தை தரும் அருமையான பாடல்.
       உன்னிடம் மயங்குகிறேன்- தேன் சிந்துதே வானம். மெல்லிசையின் மேகத் தடவல். இசை என்னும் அழகியலின் நளினமான ஆர்ப்பரிப்பு! எப்போதோ ஒரு முறை பூக்கும் அதிசய மலர் போன்ற கானம். குமாரின் முத்திரை இசை பாணியான    கர்நாடக ராகத்தில் தோய்ந்த மெல்லிசையும் மேற்கத்திய இசையும் இனிமையாக உறவாடும்  திகட்டாத சுவை இந்தப் பாடல் முழுவதும் பின்னிப் பிணைந்திருப்பதை நாம் உணரலாம். பாடல் முழுவதும் அதை சுகமாக அணைத்தபடியே இசைக்கப்படும் பியானோவின் உன்னத தேவ இசை இந்தப் பாடலை ஒரு எல்லையற்ற கனவுலகில்  நம்மை விட்டுவிடுகிறது. குமார் எப்படிப்பட்ட மிக உன்னதமான நேர்த்தியான இசையின் மீது தீரா காதல் கொண்டிருந்தார் என்பதை கோடிட்டு காட்ட இந்த ஒரு பாடலே போதுமென்று தோன்றுகிறது. ஆஹா அபாரம்! என்ற வார்த்தைகள் உங்களுக்குத் தோன்றாமல் இந்தப் பாடலை கேட்டுவிட்டீர்களேயானால் ஆச்சர்யம்தான். அதற்கு உங்களுக்கு சில வேடிக்கையான அல்லது முரண்பாடான இசை ரசனை வேண்டும். அல்லது இவரைத் தவிர வேறு யாரும் இனிமையான இசை அமைக்க முடியாது என்ற கிணற்றுத் தவளை மனோபாவம்   வேண்டும். இவைகள் இல்லாவிட்டால் இந்த இன்பத்தை சுவைக்க  எந்தத் தடங்கலுமில்லை.

    இவர்களைத் தாண்டி அஸ்வத்தாமா-(நான் கண்ட சொர்க்கம்),சி என் பாண்டுரங்கன்,கே எஸ் பாலகிருஷ்ணன், திவாகர், டி வி ராஜு-(கனிமுத்து பாப்பா),கோதண்டபாணி -(குழந்தையின் உள்ளம்), ஆர் பார்த்தசாரதி இன்னும் பலர் மக்களின் மறந்த பக்கங்களில்  இருக்கிறார்கள். குறிப்பாக திவாகர் என்னும் இசை அமைப்பாளர் 60, 70 களில்  பல படங்களில் பணிபுரிந்திருப்பதை அறிந்து  அவரைப்  பற்றிய தகவல்களை தேடத் துவங்கினேன். எங்கு தேடியும் எழுதக்கூடிய அளவுக்கு தகவல்கள் சிக்கவில்லை (ஒருவேளை என் தேடல் இன்னும் கொஞ்சம் நீண்டிருக்கலாம்.) என்பதால்  அவரை குறித்த செய்திகளை பதிவு செய்யமுடியவில்லை. விபரம் அறிந்தவர்கள் இந்த இடைவெளியை நிரப்பலாம், விரும்பினால்.

      70 களில் இருந்த இன்னும் சிலரைப் பற்றிய- முக்கியமாக சங்கர்-கணேஷ் இரட்டையர்கள்- தகவல்களை அலச வேண்டியிருப்பதால் நீண்டுவிட்ட இந்தப் பதிவை தற்காலிகமாக நிறுத்திக் கொள்வது அவசியம் என்றுணர்கிறேன். இறுதியாக சொல்வதற்கு ஒன்றுதான் உள்ளது.  பாடல்களின் எண்ணிக்கையையும்  அதன் வெற்றியையும்  அளவுகோலாக வைத்து ஒரு இசையமைப்பாளரின் சாதனையை வியக்கும் பக்குவமில்லாத மனப்போக்கு நம்மிடம் பலருக்கு இருக்கிறது. அது குற்றமில்லை. ஆனாலும் ஒரு கேள்வி   இங்கே அவசியப்படுகிறது.  ஒன்று பெற்றாலும் பத்து பெற்றாலும் ஒரு தாயின் அன்பில் மாற்றம் இருக்குமா ?

 

  அடுத்து : இசை விரும்பிகள் -XV - திறக்காத ஜன்னல்கள். (பகல் விண்மீன்கள் பகுதி இரண்டு )
          


  

126 comments:

  1. பதிவில் குறிப்பிட்ட அனைத்து பாடல்களும் ரசிக்கத்தக்கவை...

    இனிய ரசனைக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நல்ல பதிவு. சுதர்சனத்தின் இசையை நான் விரும்பிக் கேட்பவன் என்ற முறையில் உங்களின் கருத்தோடு (Tamil film music came of age and Sutharsanam turned it on its head. )இணக்கமாக போகிறேன். சத்தியமான வார்த்தைகள். பழையவர்களை அங்கீகரிக்கும், மதிக்கும் நல்ல பண்பு உங்களிடம் காணப்படுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. காரிகன் சார்,
    மிக நீண்ட நல்ல பதிவுதான். என்னத்த எழுதினாலும் இளையராசாவ வம்புக்கு இழுக்காம இருக்க மாட்டீங்க போலயிருக்கே. காதல் ஓவியம் பாடலைப் பற்றி சொல்றதும் ஜி கே வெங்கடேஷ் ராஜாவிடமே அசிஸ்டண்டா சேர்ந்தது பத்தியும் எதோ நக்கல் தொணியில எழுதுறீங்க.
    தனது கடைசி காலங்களில் இளையராஜாவிடம் உதவியாளராக இருந்ததாகத் தெரிகிறது.வினோதம்தான் . எதோ குறும்பு செய்றீங்க.சரியா?

    ReplyDelete
  4. திரு டி டி,
    வருகைக்கு நன்றி. இனிமையான பாடல்களை ரசிப்பதில் தடையேதுமுண்டோ? டாட் இன் மற்றும் டாட் காம் வித்தியாசத்தை அறிந்தேன். தகவலுக்கு நன்றி. ஆனால் அதை செயல் படுத்துவதில் எதுவும் சிக்கல்கள் இருக்கலாமோ என எண்ணுகிறேன். எப்படி என்பதை தெளிவாக விளக்கவும், முடிந்தால். மீண்டும் வருக.

    ReplyDelete
  5. அன்பு காரிகன்,
    உங்களது பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன் .மிகவும் அருமையாக உள்ளது .உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் .

    ReplyDelete
  6. பசுபதி,
    பாராட்டுக்கு நன்றி. சுதர்சனம் ஒரு வரியிலோ அல்லது வாக்கியத்திலோ எழுதப்படக்கூடிய இசை அமைப்பாளர் கிடையாது என்பது தெளிவு. எத்தனை அருமையான பாடல்களை அளித்திருக்கிறார்? ஒ ரசிக்கும் சீமானே என்னுடைய என்றென்றும் விருப்பத்துக்குரிய கானம். பழையவர்கள் என்று முத்திரை குத்தி அவர்களின் சிறப்பை மறுக்கும் மக்களின் மனோபாவத்தின் மீது எனக்கு கோபம் உண்டு.

    ReplyDelete
  7. காரிகன்,
    அபாரம். எத்தனை உழைப்பு. பாராட்டுக்கள். வி குமார் பெயரை கேள்விப்பட்டிருக்கிறேன். சப்தஸ்வரம் புன்னகையில், உன்னிடம் மயங்குகிறேன், உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் போன்ற பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். வி குமார் அவர்களின் இசை அது என்று இன்றுதான் தெரிந்தது. நன்றி.

    ReplyDelete
  8. பிரமாதம்....அருமையான உழைப்புடன் மிக நல்லதொரு கட்டுரையைத் தமிழ் இசை உலகிற்கு வழங்கியுள்ளீர்கள். உண்மையில் இத்தனை விரிவாகவும் நல்ல இசை ரசனையுடனும் யாரும் யாரையும் பரப்புவதில்லை. வி. குமாரையெல்லாம் இத்தனை தூரத்துக்கு யாரும் சிறப்பித்துச் சொல்லியிருப்பதாகத் தெரியவில்லை. தொண்ணூற்று ஒன்பது சதவிதம் பேருக்குத் தெரியாத எம்.பி.ஸ்ரீனிவாசன் பற்றியும் எழுதியிருக்கிறீர்கள் என்றெல்லாம் பார்க்கும்போது எந்தவிதமான திரைமறைவுத் திட்டங்களும் இல்லாமல், இசை..... இசை...... இனிமையான இசையை ரசிப்பதும் கொண்டாடுவதுமே நம் எண்ணம் என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள்.
    சில நாட்களுக்குப் பயணத்தில் இருந்ததால் இணையம் பக்கம் வர முடியவில்லை. இன்றைக்குத்தான் ஊரிலிருந்து திரும்பி வந்ததும் படித்தேன். அகமகிழ்ந்தேன். நாளைக்குப் பதிவு பற்றி விரிவாக எழுதுகின்றேன்.

    ReplyDelete
  9. அனானி,
    பகல் விண்மீன்கள் என்ற தலைப்பே நாம் நினைவில் வைக்க மறந்த சிறப்பான இசை அமைப்பாளர்களைக் குறிப்பது என்று இருக்கும் போது ஏன் தேவை இல்லாமல் இணையம் முழுவதும் மூச்சுக்கு முன்னூறு முறை கூப்பாடு போடும் இளையராஜாவைப் பற்றி இத்தனை ஆவேசப்படுகிறீர்கள் என்று தெரியவில்லை. பூதக்கண்ணாடி வைத்துக்கொண்டு என்னுடைய பதிவுகளைப் படிப்பீர்கள் போலிருக்கிறது. ஒரு மாற்றத்திற்க்காகவாவது மற்றவர்களையும் கேளுங்களேன். புதிய அனுபவம் கிடைக்கும்.

    ReplyDelete
  10. அன்பு அனானிக்கு,
    நிறைய அனானிகள் வருவதாலும் நீங்கள் என்னை அன்பு காரிகன் என்று அழைத்ததாலும் உங்களுக்கு இந்தப் பெயரே பொருத்தம். நன்றி. என்னுடைய அனைத்து கட்டுரைகளையும் படிப்பது குறித்து மகிழ்ச்சி. மீண்டும் வருக.

    ReplyDelete
  11. பரத்,
    நன்றி. வி குமாரின் இசையை சிலர் ஒரிஜினல் இளையராஜாவின் இசை என்று சொல்கிறார்கள்.அதாவது இளையராஜாவின் இசையில் (76-80) தென்படும் இனிமையும் சுகமும் வி குமாரின் தாக்கத்தினால் வந்தது என்று இதற்கு நாம் பொருள் கொள்ளலாம். என்னுடைய கருத்தும் அதுவே. தூண்டில் மீன் படப் பாடல்களை கேளுங்கள். என்னோடு என்னன்னவோ ரகசியம் என்ற பாடல் அற்புதமானது. மீண்டும் குமாரைப் பற்றி ஒரு நீண்ட கட்டுரையாக இந்தப் பின்னூட்டம் அமைத்துவிடும் முன் நிறுத்திக்கொள்கிறேன்.

    ReplyDelete
  12. அமுதவன் அவர்களே,
    பாராட்டுக்கு நன்றி. வி குமார் பற்றி சொல்லப்படும் கருத்துக்களில் முக்கால்வாசி அவரை அங்கீகரிக்காத தமிழ்த் திரையை விமர்சித்தே காணப்படுகிறது. இப்போது அவர் பாடல்களைக் கேட்கும் போது எப்படிப்பட்ட உன்னதமான இசைக் கலைஞன் அவர் என்பது புரிந்தாலும் ஏன் அவருக்கு நாம் ஒரு சரியான இடத்தை தர மறுத்தோம் என்பது மட்டும் புரியவேயில்லை. என் சகோதரன் சொல்வதுபோல வி.குமார் பிரபலம் ஆகிக்கொண்டிருந்த சமயத்தில் இளையராஜாவின் அதிரடி துவக்கம் ஏற்பட்டது குமாரின் பின்னடைவுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
    எம் பி ஸ்ரீநிவாசன் பற்றி நான் எழுதிக்கொண்டிருந்த அதே வேளையில்தான் உங்களின் பாலு மகேந்திரா பதிவில் நீங்கள் அவரை குறிப்பிட்டு சொல்லியிருந்தீர்கள். உங்களுக்கு திவாகர் என்ற இசை அமைப்பாளரைப் பற்றியும் தெரிந்திருக்க வாய்ப்பிருப்பதாகவே நினைக்கிறேன். அப்படி இருந்தால் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளவும்.
    இசை.. இனிய இசை.. நல்லிசை.. யார் கொடுத்தால் என்ன? இதை வேறு வடிவில் முரண்பாடாக காண்பவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்.

    ReplyDelete
  13. இத்தனை நாட்களாக எப்படி இந்த அற்புதமான வலைதளத்தை பார்க்காமல் விட்டேன்? ஒவ்வொரு வரியும் ஒரு தகவல் களஞ்சியம். பின்னி விட்டீர்கள். வர்ணிக்க வார்த்தையே இல்லை.

    வெண்ணிலா வானில், நீ எங்கே - இதை போன்ற பாடல்கள் இனி வராதா என்று இருக்கிறது. வி.குமாரின் உன்னிடம் மயங்குகிறேன் போன்ற பாடல்களை கொடுக்க இனி ஒருவர் பிறக்க வேண்டும்.

    பல நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல விருந்தை உண்ட திருப்தி ஏற்பட்டது. பிரமாதம். சொல்வதற்கு வேறு ஒன்றும் இல்லை.

    ReplyDelete
  14. பிரமாதமான கட்டுரை காரிகன் சார். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நானென்லாம் பழைய பாடல் என்றால் அந்தி மழை பொழிகிறதே, என் இனிய பொன் நிலாவே, ஜெர்மனின்யின் செந்தேன் மலரே, பாடல்களை கேட்டு அற்புதம் என்று வியந்தவன். அப்பறம் கொஞ்சமா நான் ஆணையிட்டால், கொடுத்ததெல்லாம் கொடுத்தான், நான் பார்த்ததிலே, கேட்டு கிறங்கிப் போயிருக்கிறேன். பகல் விண்மீன்கள் படித்ததும் எனக்கு தோன்றியது அடடா எத்தனை பேரின் உழைப்பை நாம் நிராகரித்து இருக்கிறோம் என்று. உண்மையிலேயே உன்னிடம் மயங்குகிறேன் பாடலை யூ ட்யுபில் இப்போதுதான் மறுபடி கேட்டேன். பாடலை விவரிக்க வார்த்தைகளே வரவில்லை. போங்க சார்.. ரொம்ப தொல்லை பண்ணிட்டீங்க.. நான் பழையது அப்படி நினைச்சதெல்லாம் வேற மாதிரி இப்ப தெரியுதே.

    ReplyDelete
  15. காரிகன்,
    யாருக்குமே தெரியாத ஆட்களை பற்றி எழுதுவது என்ன பயன் தரும் ? அவர்கள் எம் எஸ் வி அல்லது ராஜா போல இல்லாததினால்தானே இப்படி ஆயிற்று? இது ஒரு தேவையில்லாத கட்டுரை.

    ReplyDelete
  16. Great post Mr. Kaarigan,
    As usual, yet another impressive write-up from you. I know what an amount of labour it takes to write this kind of note(?) on those who are forgotten by the public. I really love to listen to V. Kumar's songs especially Punnagai kannan, Thaamarai kannankal, Unndiam mayankukiren etc..
    I also share the same opinion about that great musician of Tamil film music like you do... an unsung hero, unrecognized genius.. truly a man who was denied the limelight of his day.

    ReplyDelete
  17. நாம் அனுபவிப்பதற்கென்று இசைச் செல்வத்தை வழங்கிச் சென்றிருக்கும் பலர் ஏதோ காரணங்களால் புகழ் வெளிச்சம் இல்லாமல் போயிருப்பார்கள் எனில் அவர்களை நன்றியுடன் நினைவுகூர்ந்து கொண்டாடுதல் ஒரு உயரிய பண்பு மட்டுமல்ல, நாகரிக அறம். அந்தப் பண்பின் வழி மிக அருமையாய்ப் பயணித்திருக்கிறது உங்கள் கட்டுரை.
    இதில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பலரில் ஒரு சிலர் மட்டுமே புகழ் வெளிச்சம் அவ்வளவாய்த் தங்கள் மீது படாதவர்கள். மற்றவர்கள் எல்லாம் புகழோடு இருந்தவர்கள்தாம்.

    அவர்களையெல்லாம் தெரியாமல், தெரிந்துகொள்ளாமல் சிலர் இருக்கக்கூடும். 'தேடுதல்' என்பது போய்விட்டபிறகு பழையவர்களைத் தெரிந்துகொள்ள விரும்பாமல், தங்களுக்கு முன்னால் என்ன இருக்கிறதோ இதுதான் சாசுவதம் என்றே நினைத்துக்கொண்டு தங்களை ஏமாற்றிக்கொள்பவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். அவர்கள்மீது வேண்டுமானால் பரிதாபப்படலாம்.
    சரி, நாம் விஷயத்துக்கு வருவோம். விஸ்வநாதன்- ராமமூர்த்தி காலத்தில் அவர்களுக்கே போட்டியாய் இருந்தவர் சுதர்சனம். அவரை என்றென்றும் நினைக்கவைக்கும் 'அன்பாலே தேடிய என் அறிவுசெல்வம் தங்கம்' பாடலை மறந்துவிட்டீர்களே. நானும் ஒரு பெண் படத்தின் இசை அமைப்பாளரும் சுதர்சனம்தான். 'கண்ணா கருமைநிறக் கண்ணா' எவ்வளவு பெரிய ஹிட்டான பாடல்.......அதனைக் குறிப்பிட மறந்திருக்கிறீர்கள்.
    அதே படத்தின் இன்னொரு அருமையான பாடல் 'பூப்போல பூப்போல பிறக்கும் பால்போல பால்போல சிரிக்கும்'.... பஞ்சு அருணாசலத்தின் வரிகளில் காதுகளில் தேனை ஊற்றும் பாடல் அது.
    பூம்புகார் படத்தின் 'பொன்னாள் இதுபோலே வருமா இனிமேலே' சுதர்சனத்தின் இசை மகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம். (டிஎம்எஸ் அனுபவித்து லயித்திருப்பபார்).
    வேதா பற்றிய தகவல்களில் முக்கியமான தகவலான 'பார்த்திபன் கனவு' படத்தை விட்டுவிட்டிருக்கிறீர்கள். கல்கி கதையை அற்புதமாகப் படமாக்கிய சினிமா அது. ஔவையார் அளவுக்குப் பெயர் சொல்லும் படமாக வந்திருக்கவேண்டிய படம். திரைக்கதையில் கோட்டை விட்டதால் படம் தோல்வி அடைந்துவிட்டது. இந்த சரித்திரக் கதைக்கு வேதாதான் இசை. அன்றைய ஓவிய சாம்ராட்டாகத் திகழ்ந்த மணியம்தான் படத்தின் ஆர்ட் டைரக்டர். செட்டிங்குகளெல்லாம் கண்களில் ஒற்றிக்கொள்ளும் நேர்த்தியுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும். வேதா கர்நாடகப் பின்னணியுடன் இசையமைத்த படம் அது. ஏ.எம்.ராஜா குரலில் 'இதயவானின் உதய நிலவே' பாடல் ஒரு அற்புதம். 'கண்ணாலே நான் கண்ட கனவே' இன்னொரு அருமையான பாடல். அதில் வரும் 'மல்லிகைப்பூவு மருக்கொழுந்து' பாடலும் நிறையப் பேரைக் கவர்ந்த பாடல்.
    நான்கு கில்லாடிகள் படத்தில் 'நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி நினைத்தால் எல்லாம் நமக்குள்ளே' என்றொரு மெலடியைப் போட்டிருப்பார். அப்படியே நெஞ்சை அள்ளும்.(பொழுதும் விடியும் பூவும் மலரும் பொறுத்திருப்பாய் கண்ணா- என்ற பாடலும் இதே டியூன்தான் என்றும் சொல்லப்படுவதுண்டு). சொந்த டியூன்கள் இல்லாமல் தனக்குப் பிடித்த இந்தி டியூன்களைப் போட்டு சோதனை பண்ணிப் பார்த்ததில் அது பிரமாதமாக எடுபடவே அதனையே தமது பாணியாக்கிக்கொண்டு விட்டவராக வேதாவைச் சொல்லலாம். சில இந்தி டியூன்கள் இந்தியை விடச் சிறப்பாக இருந்தமைக்கு இன்னொரு காரணம் கவிஞர். 'இந்த டியூனுக்கு இந்த வார்த்தையைப் போட்டால் நல்லாருக்கும்' என்ற வித்தை கண்ணதாசன் என்ற மகா கவிஞனுக்கு அமைந்திருந்ததைப் போல் வேறு எவரிடமும் அமைந்திருக்கவில்லை.
    எம்பிஎஸ் பற்றி நாளை எழுதுகிறேன்.

    ReplyDelete
  18. வாருங்கள் அமுதவன்,
    சில சிறப்பான பாடல்களை நான் குறிப்பிட மறந்தது உண்மையே. தனியாக குறிப்பு எதுவும் எழுதி வைத்துக்கொண்டு பதிவுகளை எழுதுவதில்லை என்பதால் இது போன்ற விபத்துகள் நேர்வதை தவிர்கமுடிவதில்லை. இன்னும் கொஞ்சம் தீவிரம் காட்டியிருக்கலாம். நான் தவற விட்டதை நீங்கள் சரியாக சொல்லி உங்கள் பின்னூட்டங்களின் மூலம் இந்தப் பதிவை இன்னும் விரிவாக கொண்டு செல்கிறீர்கள் . மகிழ்ச்சியாக இருக்கிறது.

    சுதர்சனம் விசு-ராமு (கொஞ்சம் உரிமை எடுத்துக்கலாம்) வுக்குப் போட்டியாக இருந்தார் என்பது உங்களைப் போன்ற அந்த கால கட்டங்களில் இருந்தவர்களுக்கே தெரிந்த தகவல். அதை குறிப்பிட்டு 60 களின் இசை பிம்பத்தை நினைவூட்டுவதற்கு நன்றி. நான் குறிப்பிட்டதுபோல (விபரம் அறிந்த சிலரைத் தவிர) பலர் சுதர்சனதையும் சுப்பையா நாயுடுவையும் எங்கே நினைவு கொள்கிறார்கள்?

    வேதாவைப் பற்றிய உங்கள் கருத்து நான் ஏற்கனவே கேள்விப் பட்டதுதான் என்றாலும் அதை நீங்களும் சொல்லும்போது அதில் உண்மை இருப்பதாகவே தெரிகிறது. ( "சொந்த டியூன்கள் இல்லாமல் தனக்குப் பிடித்த இந்தி டியூன்களைப் போட்டு சோதனை பண்ணிப் பார்த்ததில் அது பிரமாதமாக எடுபடவே அதனையே தமது பாணியாக்கிக்கொண்டு விட்டவராக வேதாவைச் சொல்லலாம்.") என் நண்பன் ஒருவன் வேதாவின் ஆர்ப்பாட்டமான விசிறி. இதெல்லாம் ஹிந்திப் பாட்டப்பா என்று சொன்னால், இருக்கட்டுமே நல்லாதானே இருக்கு என்பான். நிறைய பேருக்கு வேதாவின் இசை பிடித்திருப்பதை நான் அறிந்திருக்கிறேன். நீங்கள் சொல்லுவதுபடி அந்த அந்நிய மெட்டுகளுக்கு கண்ணதாசனின் உயிர் கொடுத்த வரிகளும் ஒரு முக்கிய காரணம்.

    நீங்கள் இன்னும் நிறைய எழுதவேண்டும் என்று விரும்புகிறேன். இசையை விவாதிப்பதில் அதுவும் இன்று வந்து இன்று மாலையே சலித்துப் போய்விடும் பாடல்கள் மத்தியில் இன்றுவரை மாறாத அதே சுக நறுமணத்துடன் காற்றில் உலா வரும் காலத்தை வென்ற இசையைப் பற்றி பேசுவதில் எனக்கு ஆட்சேபனையே கிடையாது. தொடருங்கள்...

    ReplyDelete
  19. வாருங்கள் Expatguru,
    மனம் திறந்த உங்களின் .பாராட்டுக்கு நன்றி. அவ்வப்போது நானும் உங்களின் தளம் வருவதுண்டு. அந்த சூரத் மர சிற்பம் பற்றிய உங்களின் பதிவு அருமை. என் பதிவுகளையே நல்ல விருந்து என்று வர்ணிக்கிறீர்களே, அப்படியானால் அந்த இசை எப்படிப் பட்டதாக இருக்கவேண்டும்?

    (" வெண்ணிலா வானில், நீ எங்கே - இதை போன்ற பாடல்கள் இனி வராதா என்று இருக்கிறது. வி.குமாரின் உன்னிடம் மயங்குகிறேன் போன்ற பாடல்களை கொடுக்க இனி ஒருவர் பிறக்க வேண்டும்".) அது நடக்குமா என்பது ஒரு கோடி ரூபாய்க் கேள்வி.

    மீண்டும் நன்றி.

    ReplyDelete
  20. திரு கார்மேகம்,
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி. அந்தி மழை பொழிகிறதே நல்ல பாடல்தான். ஆனால் அதைப் போன்ற அல்லது அதையும் விட அபாரமான பல பாடல்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோமா? உன்னிடம் மயங்குகிறேன் பாடலை விவரிக்க வார்த்தைகளே வரவில்லை என்று நீங்கள் சொல்வது மிகச் சரியானது. வி. குமாரை மெலடி கிங் என்று குறிப்பிடுவதுண்டு. அதில் உண்மை இருக்கிறது. இன்னும் நிறைய பழைய பாடல்களை கேளுங்கள்.

    ReplyDelete
  21. காரிகன் மின்னி மறைந்தவர்கள் பற்றி எதையோ எழுதப் போக அமுதவன் வந்து நல்லா கூவுறாரு.. ராஜாவை விட்டால் இங்கே இசை இருக்கிறதா என்ன?

    ReplyDelete
  22. நானும் எழுபதுகளிலிருந்துதான் இசையை கவனிக்க ஆரம்பித்தவன். அதற்கு முன்பெல்லாம் பள்ளிப்பருவத்தில் கேட்ட பாடல்களும், சிறுவயதில் தினத்தந்தியில் வந்த செய்திகளை அந்த நாட்களிலேயே கவனம் செலுத்துபவனாகவும் இருந்ததால் ஓரளவு எல்லாவற்றையும் 'முறைப்படி' தொடர முடிந்திருக்கிறது. எனக்கு விவரம் தெரிந்த நாட்களிலேயே சுதர்சனம் போன்றவர்களின் பங்களிப்பு முடிவுக்கு வந்திருந்தது. எம்எஸ்வி மட்டும்தான் உச்சத்தில் இருந்தவர். அவருக்குப் போட்டியாக கேவிஎம் இருந்தார்.
    எம்பிஸ்ரீனிவாசனின் 'தென்னங்கீற்று ஊஞ்சலிலே' பாடலைக் கேட்ட மாத்திரத்திலேயே அவரிடம் ஒரு மரியாதை தோன்றியிருந்தது. பிறகு என்னுடைய நண்பர் அகிலன் கண்ணனின் நண்பர் அவர் என்பதனால் எம்பிஎஸ்ஸைச் சந்திக்கும் வாய்ப்பும் அவரிடம் தொடர்ச்சியாகக் கடிதத் தொடர்பு வைத்துக்கொள்ளும் வாய்ப்பும் இருந்தது.
    அடிப்படையில் அவர் ஒரு கம்யூனிஸ்ட். அப்புறம்தான் இசையமைப்பாளர் என்கிற மாதிரி அவரது வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருந்ததனாலேயே அவரால் மிகப் பெரிய அளவில் வரமுடியவில்லை. சினிமா உலகில் முதன் முதலாக யூனியன் ஆரம்பித்து நடத்தியவர் அவர்தான் என்றே நினைக்கிறேன். இசையமைப்பு வேலைகளையெல்லாம் அப்படியே விட்டுவிட்டுத் தொழிலாளர்களுக்காகப் போராடப் போய்விடுவார் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்புறம் எப்படிப் பெரிய அளவில் வரமுடியும்?
    "பெரிய அளவில் பாப்புலர் ஆகணும்னா பெரிய பேனர் படங்களுக்கு இசையமைக்கணும். எம்ஜியார், சிவாஜி, ஏவிஎம், நாகிரெட்டி, ஸ்ரீதர் படங்களுக்கு இசையமைக்கணும். இந்த பேனர்களிலெல்லாம் ஒரு கம்யூனிஸ்டை, யூனியன் வைத்து நடத்துகிறவனை எப்படிக் கூப்பிடுவார்கள்? அக்கிரமங்களைத் தட்டிக்கேட்டு நியாயம் கிடைக்கச் செய்கிறேன். ஆத்மார்த்தமாக இசையை நேசிக்கிறேன். மனதில் தோன்றும் ராகங்களுக்கு வடிவம் கொடுக்கிறேன். வேறென்ன வேண்டும்?" என்பார் அவர்.
    தென்னங்கீற்று ஊஞ்சலிலே பாடலை எழுதியவர் ஜெயகாந்தன் என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
    மதன மாளிகை படத்தில் 'ஒரு சின்னப்பறவை' என்ற பாடலை எஸ்பிபியைப் பாட வைத்துப் பிரமாதப் படுத்திய எம்பிஎஸ் அதே படத்தில் கே.ஜே.ஏசுதாஸ் -சுசீலாவை வைத்து (இல்லை ஜானகியா? மறந்துவிட்டது)'ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா ஏனடி நீராடுது' என்றொரு அற்புதமான மெலடியைப் போட்டிருப்பார். தென்னங்கீற்று வகையிலான மெலடி இது. ஒருமுறைக் கேட்டாலேயே மனதிற்குள் ஊடுருவிச் சென்று அதற்குரிய இடத்தில் உட்கார்ந்துவிடும் டைப் பாடல். இணையத்தில் கிடைக்கும். கேட்டுப்பாருங்கள்.
    இசையில் இன்னமும் நிறைய செய்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்று சொல்லிக்கொண்டிருப்பார். அவரது அகால மரணம் இசையுலகுக்கு நேர்ந்த பேரிழப்புதான். மலையாளம் அவரை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டது என்றே சொல்ல வேண்டும்.
    திரு திவாகர் ஓரிரு படங்களுக்கு இசையமைத்தார் என்பதுவரைதான் தெரியும். மற்றபடி அவரைப் பற்றித் தெரியாது.
    உங்களின் இந்தப் பதிவுகள் மூலம் நிறையப்பேருக்குப் புதிய விஷயங்களைக் கொண்டு சேர்ப்பவராக இருக்கிறீர்கள் என்பதை வருகின்ற பின்னூட்டங்களின் மூலமே புரிந்துகொள்ள முடிகிறது. ஊடகங்கள் மற்றும் இணையத்தின் பக்கச் சார்பு நிலையினால் இசை பற்றிய தவறான கற்பிதங்கள் வைத்திருக்கும் நிறையப்பேர் உண்மைகளைப் புரிந்து மாறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரிகிறது.
    இன்னமும் போகவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்றே நினைக்கிறேன். தொடருங்கள்.

    ReplyDelete
  23. //பாதை தெரியுது பார் (60) என்ற ஜெயகாந்தனின் முதல் படத்தின் //

    அது ஜெயகாந்தன் கதையா...?
    பாட்டு எழுதினார். கதை அவர் கதையா?

    ReplyDelete
  24. தென்ங்னகீற்று ஊஞ்சலிலே..... அன்றிலிருந்து இன்றுவரை மனதைக் குலுக்கும், உருக்கும் ஒரு பாடல்.

    ReplyDelete
  25. வேட்டைக்காரன்16 March 2014 at 18:21

    தகவலுக்காக....

    http://www.tasteofcinema.com/2014/the-25-greatest-film-composers-in-cinema-history/2/

    ReplyDelete
  26. வாருங்கள் அனானிகளே,
    மின்னி மறைந்தவர்கள் என்று நக்கல் பேசும் உங்களிடம் ஆரோக்கியமான சிந்தனையை எதிர்பார்ப்பது மதியீனம். மறந்துதான் போய்விட்டோம் கொஞ்சமாவது அவர்களை அறிந்துகொள்வோம் என்று எண்ணுபவர்களுக்கே இந்தப் பதிவு. கண்டிப்பாக உங்களைப் போன்ற ஆட்களுக்காக அல்ல.

    ReplyDelete
  27. Mr.Oliver,
    Thanks for the visit. Surprised to know you love to listen to V.Kumar's compositions. Keep coming back..

    ReplyDelete
  28. தருமி சார்,
    முதல் முறையாக என் தளம் வந்திருக்கும் உங்களின் வருகைக்கு நன்றி. நான் அறுபதுகளில் பிறக்காதவன் என்பதால் சில தகவல்களை என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை. பாதை தெரியுது பார் ஜெயகாந்தனின் படம் என்று குறிப்பிட்ட ஒரு தகவலைக் கொண்டே எழுதினேன். உங்கள் பதிலைப் பார்க்கும் போது ஒரு வேளை அது அப்படியில்லையோ என்று தோன்றுகிறது. எனினும் கருத்துக்கு நன்றி. அமுதவன் சொல்லியது போல (நீங்களும்தான்) தென்னங்கீற்று ஊஞ்சலிலே அற்புத சுவையான பாடல்.

    ReplyDelete
  29. அமுதவன் அவர்களே,
    லேசாக உங்களின் பால்ய சினிமா ஞாபகங்களோடு உங்களின் இந்தப் பின்னூட்டம் வந்திருக்கிறது. எம் பி ஸ்ரீனிவாசன் பற்றி நிறையவே தெரிவித்திருக்கிறீர்கள். மேலும் அவருடன் பேசி பழகிய அனுபவமும் உங்களுக்கு இருப்பது வியப்பாக இருக்கிறது. நிறைய தகவல்களை பொக்கிஷமாக வைத்திருக்கும் நீங்கள் அதை வைத்து மலிவான விளம்பர யுக்திக்கு பயன்படுத்தாமல் அடக்கி வாசிப்பது அருமை. உங்களின் பதிலுக்கு நன்றி.

    ReplyDelete
  30. வேட்டைக்காரன்,
    பார்த்தேன். ஒன்பதாவது இடத்திலிருக்கும் நமது ஆளைப் பார்த்து பெருமிதம் அடைந்தேன். அது இருக்கட்டும். எதோ ஒருவரின் தனிப்பட்ட விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வரிசை குறித்து இவ்வளவு ஆர்பரிக்கும் உங்களைப் போன்றவர்கள் உலகமே பார்த்த ஆஸ்கார் நிகழ்ச்சியில் நம் எ ஆர் ரஹ்மான் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வாங்கியது குறித்து மட்டும் மவுனம் காப்பது ஏன்? அதை நான் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை எனும் பட்சத்தில் இதில் என்ன பெருமை இருக்கிறது?

    ReplyDelete
  31. Good post. But should you entertain those howlers who keep hooting about their one and only king of music? It's been tremendously painful to hear the same old stuff again and again. Some can never be woken up.

    ReplyDelete
  32. வாங்க காரிகன் வாங்க

    அடுத்தப் பதிவை அழகாக செதுக்கி எங்கள் இசைச் சிந்தனைகளை சீர் தூக்கி பார்க்கும் உங்களின் எழுத்துக் கலைக்கு முதல் வணக்கம் !

    பின்னி பெடல் எடுக்கிறீங்க! மறக்கப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட எத்தனையோ இசைக் கலைஞர்களை மீண்டும் ஞாபகப் படுத்தியதற்கு நன்றி !

    உங்களைப் போலவே நானும் இந்த இசை செல்வங்களை எல்லாம் ( சிலோன் வானொலியில் நீங்கள் குறிப்பிட்ட அந்த top ten நிகழ்ச்சியின் தலைப்பு இசைச் செல்வம் ) அள்ளிக் கொண்டவன் , ஆனந்தம் அடைந்தவன் , ஆர்ப்பரித்தவன் . கண் மூடி இந்தப் பாடல்களை எல்லாம் கேட்டு மதி மயங்கி சொக்கிப்போய் இருந்த இடத்தில அப்படியேதான் இருந்தேன் . அதே அனுபவத்தோடு இளையராஜாவின் சில பாடல்களை கேட்ட பிறகு மெல்ல பறந்தேன் . ஏன் ?

    பலர் மறந்த அந்த அருமையான இசைக் கலைஞர்கள் எல்லாம் உங்களைப் போன்ற சிலரால் நினைவூட்டப் படுகிறார்கள் . பலர் மறக்க முடியாத இளையராஜா மட்டும் உங்களைப் போன்ற சிலரால் மருதலிக்கப்படுகிறார். ஏன் ?

    அற்புதமான பாடல்கள் கொடுத்தார்கள் . மறுப்பதற்கில்லை. ஆனால் தொடரவில்லையே . ஏன்?

    நம் அருகில் இருக்கும் விண்மீன் அது சூரியன் . தூரத்தில் தொலைந்த சூரியன்கள் பகல் விண்மீன்கள் . சூரியன் யாரென்று நான் சொல்லாமல் தெரிந்திருக்கும் .

    வெங்கடேசை விட்டு வெளியேறியவர் அவரைப் போல இசை அமைச்சாராம்! இளையராஜாவை விட்டு வெளியேறிய ரகுமான் அவர் சாயல் இல்லாமல் இசை அமைச்சாராம்! நீங்க சொன்னதுதான் காரிகன் . இளையராஜா என்று வரும்போது மட்டும் நீங்கள் பசுதோல் போர்த்திய புலி , கண் படாம் போட்ட குதிரை , கண்ணிலாதவன் வரைந்த ஓவியம் , காது கேளாதவனின் இசை நயம் ! அப்படிதானே!

    ReplyDelete
  33. சார்லஸ்,
    கீழ் உள்ளது நலங்கிள்ளி என்னும் நண்பர் ஜானி படத்தின் ரஜினி ஸ்ரீதேவி காதல் காட்சி பற்றி எழுதி வரும் போது பின்னணியில் வரும் இசை பற்றி கூறுவது; படித்த போது எனக்கே அதிர்ச்சிதான். ஏனென்றால் நானும் உங்களைப் போலவே ராஜா ரசிகன்.


    (அடுத்தது இளையராஜா இசை பற்றி. நானும் இளையராஜாவின் தீவிரச் சுவைஞன்தான். ஆனால் உன்னதம் என நான் கருதி வந்த அவர்தம் படைப்புகள் பலவும் வேறொருவர் படைத்தளித்த இசையின் தாக்கமே, அல்லது பார்த்தொழுகலே என அண்மைக் காலமாக நான் உணர்ந்து வருகிறேன். இது எனக்குப் பேரதிர்ச்சியாகவும் மிகக் கசப்பான உணர்வாகவும் உள்ளது. என்ன செய்ய? இதுதான் உண்மை. திரு மதிமாறன் குறிப்பிடும் இந்தக் காட்சிக்கான இளைராஜாவின் பின்னணி இசையும் கூட நான் கீழ்க் குறிப்பிட்டுள்ள படைப்பின் தாக்கத்தில் வெளிப்பட்ட இசையே, நீங்களும் இந்த இசையைக் கேட்டுப் பாருங்கள் -

    Johann Sebastian Bach – Brandenburg Concerto No. 2 in F Major, BWV 1047 – Allegro assai)

    பதிவை முழுதும் படிக்க;

    http://mathimaran.wordpress.com/2014/03/07/johnny-788/

    ReplyDelete
  34. வாருங்கள் சால்ஸ்,
    பாராட்டுக்கு நன்றி. இசைச் செல்வம் என்ற பெயரை நினைவூட்டியதற்கு மிக்க நன்றி. தெளிவாக கருத்து சொல்ல ஆரம்பித்துவிட்டு என்னை தாக்கும் எண்ணத்தில் சொதப்பிவிட்டீர்கள். சூரியன் உதாரணம் எல்லாம் அரசியல்வாதிகளின் மேடை பேச்சுபோல இருக்கிறது.

    (பலர் மறந்த அந்த அருமையான இசைக் கலைஞர்கள் எல்லாம் உங்களைப் போன்ற சிலரால் நினைவூட்டப் படுகிறார்கள் . பலர் மறக்க முடியாத இளையராஜா மட்டும் உங்களைப் போன்ற சிலரால் மருதலிக்கப்படுகிறார். ஏன் ?)

    ஒரே விதமான மரங்கள் மட்டுமே வளரும் காட்டுக்கு என்ன பெருமை இருக்கமுடியும்? பலர் உங்களைப் போல பாராட்டப்பட்டவர்களையே சுற்றி வாருங்கள். என்னைப் போன்ற சிலராவது பெரிய அங்கீகாரத்துக்கு தகுதி இருந்தும் மறுக்கப்படவர்களை பாராட்டிவிட்டுப்போகிறோம்.

    (அற்புதமான பாடல்கள் கொடுத்தார்கள் . மறுப்பதற்கில்லை. ஆனால் தொடரவில்லையே . ஏன்?)

    இது உண்மையில்லை. இளையராஜா எண்பதுகளில் கொடுத்த அனைத்துப் பாடல்களும் ஹிட் அல்ல. மேலும் அவைகள் எல்லாமே தரமானவைகளுமல்ல. தனி அறையில் கண்களை மூடிக்கொண்டு இசைக்குள் புகுந்துகொள்ளும் சுக அனுபவம் அவரின் சில பாடல்களிலேயே உண்டு. மற்றபடி பொதுவாக இன்றைக்கு அவரது பாடல்களை கேட்கும் பொழுது மதுரையில் எதோ ஒரு மினி பஸ்ஸில் பிரயாணம் செலவது போலவே இருக்கிறது. அதன் தரம் அவ்வளவுதான்.

    துவக்ககால இளையராஜாவின் இசையில் ஜி கே வெங்கடேஷ் மற்றும் வி குமார் இவர்களின் பாதிப்பு இல்லை என்று நீங்கள் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து. நான் பேச வந்தேன் பாடலை கேட்டால் அதில் எண்பதுகளின் இளையராஜாவை நீங்கள் அடையாளமே காண முடியாது. இது உங்களுக்கே நன்றாகத் தெரியும். இளையராஜா எண்பதுகளில்தான் தனி முத்திரையை பதித்தார் என்பது என் எண்ணம். அது அப்படியில்லை என்பது உங்கள் விருப்பம். ரஹ்மானின் முதல் பாடலே எத்தனை வித்தியாசமாக இருந்தது என்பது தமிழகத்துக்கே தெரியும். நான் என்ன மேற்கொண்டு சொல்லமுடியும்?

    உங்களைப் போன்றவர்கள் ஏன் மீண்டும் மீண்டும் குழந்தைகள் விளையாடும் மரக்குதிரை சவாரி செய்கிறீர்கள் என்று புரியவேயில்லை. உங்களால் வேறு எங்குமே போக முடியாதா?

    ReplyDelete
  35. காரிகன்,
    யூ டியுபில் வி குமாரின் பாடல்களை கேட்க ஆரம்பிதிருக்கிறேன். அதில் பலரும் கூறிவரும் கருத்து இத்தனை இசை ஞானம் உள்ளவரை நாம் சரி வர பாராட்டவில்லை என்பதைத்தான். உண்மையே என்று எனக்கே சொல்லிகொள்கிறேன். பகல் விண்மீன்கள் என்ற தலைப்புக்கு ஏற்றவாறு மிக அருமையான பதிவு. திரு சார்லஸ் என்பவருக்கு நீங்கள் அளித்திருக்கும் பதிலைப் போல நாம் பாராட்ட மறந்த அல்லது மறுத்த பலரை நினைவூட்டும் கட்டுரையாகவே இதை நான் காண்கிறேன். தொடரட்டும் உங்களின் இந்த சிறப்பான பணி.

    உஷா குமார்.

    ReplyDelete
  36. திரு அனானி,
    நீங்கள் சார்லஸ் என்பவருக்கு எழுதிய பதிலைக் கண்டு இதை எழுதுகிறேன். இளையராஜாவின் புரட்சிகரமான மேற்கத்திய செவ்வியல் இசை அமைப்புகள் எல்லாமே களவாடப்பட்டதுதான் என்பதை நான் பல காலம் முன்னே அறிந்தவன். இதனாலேயேதான் என்னால் அவருடைய இசையில் மற்றவர்களைப்போல ஐக்கியமாக முடியவில்லை.மற்றவர்கள் அவரை அளவுக்கு மீறிப் புகழ்ந்தாலும் அதிலிருக்கும் வெற்றிடத்தை நன்றாகவே உணர்திருக்கின்ற காரணத்தினால் அதை எல்லாம் ஒரு சிரிப்புடன் கடந்து செல்லும் மனப்போக்கு எனக்கு வந்துவிட்டது.இந்த நேரத்தில் இலுப்பைப்பூ, சர்க்கரை என்ற ஒரு பழமொழி நினைவுக்கு வருவதை தவிர்க்கமுடியவில்லை. திரு நலங்கிள்ளி என்னும் நண்பருக்கு உண்மை தெரிந்தது கண்டு மகிழ்ச்சி ஏற்படுகிறது. இதை மற்ற ராஜா ரசிக சிகாமணிகளும் உணர்ந்துகொண்டால் நலமாக இருக்கும்.

    ReplyDelete
  37. இளையராஜாவின் பாடல்கள் மட்டுமல்ல பின்னணி இசையின் சில கீற்றுக்களைக் கூட எந்தெந்த ஆல்பத்திலிருந்து எடுத்துப் போட்டிருக்கிறார் என்றெல்லாம் என்னுடைய நண்பர்கள் அந்த எண்பதுகளிலேயே சொல்லுவார்கள். அதன்பிறகு அவர்கள் படம் பார்ப்பதைக் குறைத்துக்கொண்ட பிறகு பாடல்களில் வந்த ஒப்பீடுகள் நிறைய சொல்லுவார்கள். இப்போதுபோல் நாம் என்ன நினைக்கிறோமோ அதனையெல்லாம் அச்சு வடிவத்தில் கொண்டுவருகிற காலமாக அன்றைய நாள்கள் இருக்கவில்லை. அந்தக் காலம் நடைமுறைக்கு வந்துவிட்ட பிறகு எல்லாவற்றிலும் ஒரு புதிய மாறுதலை வரவேற்கத் தயாராகிவிட்ட நிலையில் சில விஷயங்களில் மட்டும் எதையும் பார்க்கமாட்டோம் என்று முகத்தைத் திருப்பிக்கொள்கிற, நாங்கள் என்ன நினைக்கிறோமா அதுமட்டும்தான் சாசுவதம், எங்களுக்கு என்ன தெரியுமோ அதற்குள்ளேயே உலகம் முடிந்துவிடுகிறது என்று பிடிவாதமாய் மறுக்கிற போக்கு வந்துவிட்டது.
    தங்களுக்கு வேண்டியதைப் 'புனிதப்பசுவைக் காப்பதுபோல்' சிலர் காக்க நினைத்தாலும் சில உண்மைகள் வெளிவந்து சம்பந்தப்பட்டவர்கள் ஆடிப்போய் பதில் சொல்லமுடியாமல் வார்த்தைகளற்று நின்றுகொண்டிருக்கிற போக்கையும் பார்த்துகொண்டுதான் இருக்கிறோம். அதில் ஒன்றுதான் சிம்பொனி.
    இவர்களையெல்லாம் சட்டையே செய்யாமல் காலம் அதுபாட்டுக்குத் தன் தேவைகளை நிறைவேற்றிக்கொண்டு போய்க்கொண்டே இருக்கிறது. பாருங்கள், நீங்கள் பாட்டுக்கு வி. குமாரைப் பற்றி எழுதப்போக நிறையப்பேர் அவரைக் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

    அன்றைக்கு டிவியில் 'ஒருநாள் யாரோ' பாடல் ஒளிபரப்பாக ஆரம்பிக்க "பாருங்க எம்எஸ்வி எத்தனை அழகான டியூன் போட்டிருக்கார்' என்றார் நண்பர். "எம்எஸ்வி இல்லைங்க அது வி.குமார்" என்று நான் சொன்னதை அந்த நண்பரால் நம்பவே முடியவில்லை. அத்தனைக்கு ஒரு பெரிய முழுமையான, 'தேர்ந்த' இசையமைப்பாளரின் கம்போசிஷனாக இருக்கிறது அந்தப் பாடல்.

    நல்ல பாடல்களுக்கான வரவேற்பு ஒரு பக்கம் மிக வேகமாகப் பரவிவருவதன் அறிகுறிதான் மேலும் மேலும் 'நல்ல பாடல்களுக்கான' தனிப்பட்ட சேனல்கள் பெருகிவருவது.

    முரசு, ஜெயா மேக்ஸ் இவற்றைத் தொடர்ந்து தற்போது சன் டிவியின் 'சன் லைஃப்' சேனலும் பழைய பாடல்களுக்கென்று தனிப்பட்ட நிகழ்ச்சி அல்ல; தனிப்பட்ட சேனலையே துவங்கியிருக்கிறது என்பதெல்லாம் சில இணையக்காரர்களை விடுத்து நல்ல இசை மக்களை நோக்கி ஆர்ப்பரித்து என்றென்றும் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளங்கள்தாம்.

    ReplyDelete
  38. வாருங்கள் உஷா குமார்,
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி. பழையவர்களை இகழ்ச்சியாகப் பார்க்கும் மனப்போக்கே வேதனை அளிப்பதாக இருக்க, அதை மேலும் தடிக்கச் செய்கிறது திருவாளர் சால்ஸ் போன்றவர்களின் நக்கல். வி குமாரின் இசையை நீங்கள் கேட்க ஆரம்பித்திருப்பது குறித்து மகிழ்ச்சி ஏற்படுகிறது. நல்ல ரசனையின் துவக்கமாக இதை நான் பார்க்கிறேன். நிறைய அலாதியான பாடல்கள் இவ்வாறு மறக்கப்பட்டுவிட்டன. அவற்றை மீண்டும் நமது சிந்தனைக்குள் கொண்டுசெல்வதே வி குமார் போன்ற இசை மேதைகளுக்கு நாம் செலுத்தும் மரியாதை . கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  39. அமுதவன் அவர்களே,

    (இளையராஜாவின் பாடல்கள் மட்டுமல்ல பின்னணி இசையின் சில கீற்றுக்களைக் கூட எந்தெந்த ஆல்பத்திலிருந்து எடுத்துப் போட்டிருக்கிறார் என்றெல்லாம் என்னுடைய நண்பர்கள் அந்த எண்பதுகளிலேயே சொல்லுவார்கள். )

    இது வேறயா? இப்படி பாக், விவால்டி, மொசார்ட், பீத்தோவன் (பைடோவன்) இசையின் பல கூறுகளை கூறு போட்டு நல்ல நாட்டுபுற சமையல் செய்திருக்கிறார் எண்பதுகளின் இசை ஆளுமை என்று புலனாகிறது. அப்போது தகவல் பரிமாற்றம், தகவல் தேடல் போன்றவை கடினமாக இருந்ததும் இவருக்கு வசதியாகப் போயிற்று என்று தோன்றுகிறது. புனித பசுவை போற்றிப் பாதுகாத்தாலும் சிம்பனி ஒரு மிகப் பெரிய கரும்புள்ளிதான். இளயராஜாவின் எண்பதுகள் சார்ந்த பாடல்களை இப்போது கேட்டால் கூட்டமான பேருந்து ஒன்றில் எதோ ஒரு சிற்றூருக்கு செல்லும் அனுபவமே கிடைக்கிறது. இது சிற்றின்பமா பேரின்பமா என்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.

    முரசு போன்ற சேனல்கள் தற்போது மக்களிடம் அதிகமாக பிரபலமடைந்து வருகின்றன. எல்லோரும் குடும்பத்தோடு நிம்மதியாக பார்க்கக்கூடிய வகையில் பாடல்கள் இருப்பதே இதற்குக் காரணம். இணையத்தில் என்னதான் forum வைத்துகொண்டு அறிவு ஜீவித்தனமாக ஆங்கிலத்தில் அலப்பரை செய்துகொண்டும் செண்டிமெண்டல் பதிவுகள் எழுதிக்கொண்டும் இளையராஜாவை இசையின் ஒரே முகமாக சிலர் நிறுவ முயன்றாலும், அவர்களின் கணினி திரையைத் தாண்டிய உலகத்தில் இசை வேறு விதமாக தன்னை அடையாளப்படுத்திகொண்டு வருகிறது.

    ReplyDelete
  40. வேட்டைக்காரன்24 March 2014 at 06:25

    //அமுதவன் அவர்களே,

    (இளையராஜாவின் பாடல்கள் மட்டுமல்ல பின்னணி இசையின் சில கீற்றுக்களைக் கூட எந்தெந்த ஆல்பத்திலிருந்து எடுத்துப் போட்டிருக்கிறார் என்றெல்லாம் என்னுடைய நண்பர்கள் அந்த எண்பதுகளிலேயே சொல்லுவார்கள். )

    இது வேறயா? இப்படி பாக், விவால்டி, மொசார்ட், பீத்தோவன் (பைடோவன்) இசையின் பல கூறுகளை கூறு போட்டு நல்ல நாட்டுபுற சமையல் செய்திருக்கிறார் எண்பதுகளின் இசை ஆளுமை என்று புலனாகிறது. அப்போது தகவல் பரிமாற்றம், தகவல் தேடல் போன்றவை கடினமாக இருந்ததும் இவருக்கு வசதியாகப் போயிற்று என்று தோன்றுகிறது. புனித பசுவை போற்றிப் பாதுகாத்தாலும் சிம்பனி ஒரு மிகப் பெரிய கரும்புள்ளிதான். இளயராஜாவின் எண்பதுகள் சார்ந்த பாடல்களை இப்போது கேட்டால் கூட்டமான பேருந்து ஒன்றில் எதோ ஒரு சிற்றூருக்கு செல்லும் அனுபவமே கிடைக்கிறது. இது சிற்றின்பமா பேரின்பமா என்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. //

    காரிகன் மற்றும் அமுதவன்,

    Itwofs.com என்ற தளம் இந்திய இசையமைப்பாளர்கள் அடிக்கும் இசைத்திருட்டை ஆதாரத்துடன் காட்டும் முன்னோடித் தளம்.
    நீங்கள் இருவரும் ஏன் உங்களிடம் உள்ள இளையராஜாவின் இசைத் திருட்டுக்கான ஆதாரங்களை அவர்களுக்கு கையளிக்கக்கூடாது?

    தமிழ்த்திரையுலகிற்கு ஆகப்பெரும் சேவை செய்த பாக்கியவான் ஆவீர்கள்.

    ReplyDelete
  41. காரிகன் சார்

    காப்பி அடித்தல் பற்றி பேசினால் எம்.எஸ்.வி, ரகுமான் உட்பட பலர் வருவார்கள் . அவர்களின் காப்பி அடிக்கும் திறமை பற்றி சௌந்தர் அவர்களின் பதிவிலேயே நீங்கள் வாசித்திருப்பீர்கள் . பகல் விண்மீன்களும் தனது முன்னவர்களை போலவே இசை அமைத்ததால்தான் தொடர்ந்து நிற்க முடியவில்லை . இளையராஜா ஏன் நிலைத்து நின்றார் என்பதற்கு நீங்கள் சாக்கு போக்குகளும் தொழில் நுட்ப வளர்ச்சியும் மட்டுமே காரணமாக சொல்லி வருகிறீர்கள். அமுதவனும் உங்களோடு கை கோர்க்கிறார் .

    லயம்,நயம் , புதுமை , கையாளும் திறமை , கொடுத்த விதம் , இசை அமைக்கும் இதம் போன்றவற்றில் நாயகனாக திகழ்ந்த காரணத்தினால்தான் அவர் நிற்க முடிந்தது . இல்லாவிட்டால் வி.குமார் போல காணாமல் போயிருப்பார் .

    வி. குமார் போல இளையராஜாவும் பத்து படங்களோடு முடித்து விட்டு போயிருந்தால் உங்கள் பகல் விண்மீன்களில் வந்திருப்பார் . பாவம் பல நூறு படங்கள் இசை அமைத்துவிட்டார் . மினி பஸ் பாட்டுக்களுக்குதான் லாயக்கு ! ஆனால் ஒரு நாள் கூட மினி பஸ்ஸில் குமார் பாட்டை நான் கேட்டதே இல்லை .

    அரை குறைகள் சிலர் இளையராஜா இசையை காப்பி என்று சொல்வது அடிக்கடி நாங்கள் கேட்டதுதான் ! இசை தெரிந்த கலைஞர் ஒருவரை சொல்ல சொல்லுங்கள் . சொல்ல மாட்டார்கள் .

    வி. குமார் பாட்டுக்களில் எம்.எஸ்.வி சாயலே அதிகம் இருந்தது . மக்கள் கேட்டு பழகிய அதே மாதிரி இசை . பத்து பாட்டுக்கள் கேட்க நன்றாக இருந்தது . இல்லை என்று சொல்லவில்லையே ! நிலைக்காமல் போனதற்கு என்ன காரணம் என்று கேட்டால் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறீர்களே! இளையராஜா காப்பி அடித்தார் டீ அடித்தார் என்று!




    ReplyDelete
  42. வேட்டைக்காரன்,
    ஒரு அருமையான வலைப்பூவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. நிறைய தகவல்கள் கிடைக்கின்றன. இளையராஜா இங்கொன்றும் அங்கொன்றுமாக மேற்கத்திய செவ்வியல் இசையை பிய்த்து பிய்த்து தன் நாட்டுப்புற இசையை வேறு பரிமாணத்துக்கு கொண்டு சென்றார் என்று தெரியும்.அதை அக தூண்டுதல் என்று சொல்லி ஒதுங்கிக்கொள்ளும் சாமர்த்தியம் எனக்கில்லை. எந்த இசையின் பாதிப்புமில்லாமல் இளையராஜா இசை அமைத்தாரா என்பதே இங்கு கேள்வி. அது இல்லை என்னும் போது அதை வீணாக தொடர்ந்து செல்வது எந்த பயனும் தரப்போவதில்லை.தேவா ரஹ்மான் ஹாரிஸ் ஜெயராஜ் யுவன் போன்றவர்களின் காப்பியடிக்கப்பட்ட பாடல்கள் அலசப்படுவதுபோல இளையராஜாவின் பாடல்களை பலர் விமர்சிப்பதில்லை. அப்படி விமர்சிப்பவர்களை கேள்விக்கு உட்படுத்துவது ஒரு தப்பிக்கும் யுக்தி.

    ReplyDelete
  43. அப்போதைய ஐடிஐ தொழிற்சாலையில் திரு தேசிகன் என்று என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் இருந்தார். பெரிய முக்கியமான பதவி வகித்தவர். அவருடைய நண்பர்கள் ஆர்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ராஜகோபாலன் மற்றும் சிலர் என்று அடிக்கடி ஒரு ஜமா சேரும். அவர்களில் நான்தான் வயதில் சிறியவன். எல்லாரும் கர்நாடக இசையை முறைப்படி பயின்றவர்கள். இவர்களுடைய பொதுவான விவாதங்களே இசை பற்றியதாகத்தான் இருக்கும்.

    இவர்களில் திரு தேசிகன் வெஸ்டர்ன் மியூசிக்கிலும் கரைதேர்ந்தவர். ஒரு ஆங்கிலோ இந்தியரின் தலைமையில் மியூசிக் ட்ரூப் ஒன்றும் நடத்திக்கொண்டிருந்தனர். அந்தக் காலத்து தமிழ்ப்பாடல்கள், இந்திப்பாடல்கள் என்று எதுவுமே இவர்களின் கூர்மையான இசைக்கண்ணோட்டத்திற்குத் தப்பாது. சின்னஞ்சிறிய இசைத்துணுக்கைக்கூட கண்டுபிடித்து இது இதில் ஏற்கெனவே வந்தது என்று சொல்லிவிடுவார்கள். வாயாலேயே அத்தனை சுத்தமாக, அழகாகப் பாடிக்காட்டுவார்கள். இந்தியில் நௌஷாத், சங்கர் ஜெய்கிஷன், ஓபிநய்யார் தொடங்கி எஸ்விவெங்கட்ராமன், ஜிராமநாதன்,சிஆர்சுப்பராமன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்று பிய்த்துப்போட்டு விவாதிப்பார்கள். சில முழுப்பாடல்களை அழகாகப் பாடவும் செய்வார்கள்.

    இவர்களில் சிலருக்கு குறிப்பிட்ட இசை விற்பன்னர்களின், இசையமைப்பாளர்களின் தொடர்புகளும் உண்டு. திரு தேசிகன் எஸ்விவெங்கட்ராமனிடமும், ஓபிநய்யாரிடமும் தொடர்பு வைத்திருந்தார். திரு ஆர்எஸ்கிருஷ்ணமூர்த்திக்கு வீணைசிட்டிபாபு மிக நெருங்கிய நண்பர். இருவரும் வாடா போடா என்று பேசுமளவுக்கு நண்பர்கள்.........இந்தக் கூட்டத்தில் நான் பங்கேற்கும்போது என்னுடைய பங்கு வெறும் பாடல்களிலுள்ள இலக்கிய நயத்தை சிலாகிப்பதாகத்தான் இருக்கும்.

    திரு தேசிகனின் வீட்டில் இசை ரிகார்டுகளும் , காசெட்டுகளும் ஆச்சரியமூட்டும் அளவுக்கு இருக்கும். அதிலும் ஆங்கில இசை ரிகார்டுகள்......
    இந்தப் பின்னணியில்தான் என்னுடைய இசை அனுபவங்கள் அமைந்திருந்தன. நல்ல இசை என்பது எது, அது எப்படியிருக்கவேண்டும், எப்படி இருக்கும் என்பது போன்ற அடிப்படைகள் எல்லாம் அத்துபடியாயின. அதுவரை சிலோன் வானொலியை மட்டும், லவுட் ஸ்பீக்கரில் வரும் பாடல்களையும் சர்ச்சுகளில் இசைக்கப்படும் பாடல்களையும் மட்டும் கேட்டுக்கொண்டிருந்த எனக்கு அவர் மூலம் அறிமுகமான ஆங்கில இசை பிரமிப்பை ஊட்டியது. இசை தொடர்பாக எதுபற்றிக்கேட்டாலும் சட்டென்று சொல்லுமளவுக்கு இருந்த தேசிகனின் இசை ஆச்சரியத்தைத் தந்தது. (ஆங்கில மொழியிலும் இவர் பெரிய மேதைமை கொண்டிருந்தவர்) இதற்கடுத்து நேவியில் இருந்த எங்கள் உறவுமுறை. இந்தக் கதையெல்லாம் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்.

    படங்கள், பாடல்கள், இசையமைப்பாளர்கள், என்று பிரித்துப்போட்டு அலசுவார்கள். பிஜிஎம் என்று அழைக்கப்படும் Back ground music, அதுதான் இளையராஜா காலத்தில் இளையராஜாதான் உலகிற்கு அறிமுகப்படுத்தினார் என்று சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்களே (இதனை சிரிப்பை அடக்கிக்கொண்டுதான் எழுத வேண்டியிருக்கிறது) அந்தப் பின்னணி இசை - இவற்றையெல்லாம் அற்புதமாக அலசுவார்கள்.....(தொடரும்)

    ReplyDelete
  44. மேலே சொன்னது போன்ற அலசல்கள் ரோஜா படம்வரை தொடர்ந்து நடைபெற்றன. அதற்குப்பின் வந்த வாலண்டரி ரிடையர்மெண்ட் , இடமாறுதல்கள், பிரமோஷன் போன்ற நிகழ்வுகள் இந்த செட்டப்பை எல்லாம் மாற்றிப்போட்டு விட்டன. 'பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே, பழகிக் களித்த தோழர்களே நாம் பிரிந்து செல்கின்றோம்' கதையாகிவிட்டது. 'எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ' நிலைமைக்குக் கொண்டுவந்துவிட்டது. எல்லாரும் எந்தெந்த மூலைக்கோ போய்விட்டார்கள். திரு ஆர்எஸ்கிருஷ்ணமூர்த்தி திருச்சியில் செட்டிலாகிவிட்டார். முன்பெல்லாம் இணையத்தில் எழுதிக்கொண்டும் என்னுடைய பதிவுகளுக்கெல்லாம் பின்னூட்டமிட்டுக்கொண்டும் இருந்த அவர் இப்போதெல்லாம் வலைப்பூக்கள் பக்கம் வருவதில்லை. என்னுடைய பதிவுகளைப் படித்துவிட்டு தொலைபேசி செய்வதோடு சரி; திரு காரிகன் பதிவுகளையும் படிப்பார்.

    திரு தேசிகன் இன்றைக்கு இல்லை.

    நல்ல இசை ஞானம் உள்ளவர்களோடு பழகியதால் சிலவற்றை மக்களுக்குச் சொல்லவேண்டியிருக்கிறது. யாரோ ஒரே ஒருவரைப் பிடித்துக்கொண்டு இவர்தான் இசைக்கே கடவுள் என்று மக்களை ஏமாற்ற பூச்சாண்டி காட்டிக்கொண்டிருப்பவர்கள் மத்தியில் சில உண்மைகளைச் சொல்லவேண்டியுள்ளது. உண்மைகளைச் சொல்லும்போது பொய்யான பிம்பங்கள் உடைபடுவதால் கோபமடைந்து பிரயோசனமில்லை.
    நான் மேலே சொன்னதுபோன்ற நட்பு வட்டங்கள் இன்னமும் அங்கங்கே நிறைய இருக்க வாய்ப்புண்டு. பிரச்சினை என்னவெனில் அவர்கள் புழங்கும் தளங்கள் வேறு. கணிணி அவர்களுடைய ஊடகமாக இல்லை. இப்போது அச்சு ஊடகங்களிலும் இளைய தலைமுறை வந்துவிட்டதால் முன்னோர்களை ஒப்புக்குத்தான் குறிப்பிடுகிறார்கள். இவர்களுக்கு முந்தைய தலைமுறையை 'மட்டுமே' குறிப்பிடுகிறார்கள். நடிகைகள் என்றால் ஸ்ரீதேவியிலிருந்துதான் ஆரம்பிக்கிறார்கள். சாவித்திரி பத்மினி சரோஜாதேவி இவர்களைப் பற்றியெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. அல்லது கேள்விப்பட்டிருந்தாலும் சொல்லத் தயாரில்லை. டைரக்டர் என்றால் மணிரத்தினத்திலிருந்து ஆரம்பி. ஒளிப்பதிவாளர் என்றால் பிசிஸ்ரீராமிலிருந்து ஆரம்பி. பாடகர் என்றால் எஸ்பிபியிலிருந்து ஆரம்பி. பாடகி என்றால் ஜானகியிலிருந்து ஆரம்பி. டான்ஸ் என்றால் பிரபுதேவாவிலிருந்து ஆரம்பி. இந்த வரிசையில் இசையென்றால்- இளையராஜாவிலிருந்து ஆரம்பி.

    இப்படித்தான் இருக்கிறது இவர்களுடைய சிலபஸ்.

    இது ஒரு அணுகுமுறைக் குறைப்பாடு, அறிவுக் குறைப்பாடே தவிர வயதுப்பிரச்சினையோ தலைமுறை இடைவெளியோ இல்லை. சிலருடைய கற்பிதங்கள் எல்லாம் எப்படி உடைபடுகின்றன என்றால் ஜனத்தொகையின் ஒரு பெரிய பகுதி இந்த சச்சரவுகளில் எல்லாம் ஈடுபடாமல், தெரிந்துகொள்ளாமல் தாங்கள் பாட்டுக்கு தங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்துவிட்ட இனிமையான பாடல்களை ரசித்துக்கொண்டே இருக்கின்றனர். அதற்கு உதாரணம்தான் முரசு, சன் லைஃப், ஜெயா பிளஸ் போன்ற முழுநேரச் சேனல்கள். இன்னும் மெகாடிவி, கேப்டன் டிவி, ராஜ் டிவி போன்ற சேனல்களும் இந்த மக்களுக்கு வேண்டிய பாடல்களை நெஞ்சில் நிறைந்தவை, என்றும் இனியவை, அமிர்த கானம், பிரேம கானம் என்றும் இன்னும் என்னென்னவோ பெயர்களில் நாள்தோறும் வழங்கியபடியே இருக்கின்றனர்.

    'தமிழ்த்திரையுலகத்திற்கு ஆகப்பெரும் சேவைசெய்த பாக்கியவான் ஆவதற்கான' வழிமுறைகளை ஒரு நண்பர் இங்கே சிபாரிசு செய்திருக்கிறார். இதனை நான் செய்யவேண்டியதே இல்லை. இவர் தொடர்ந்து கங்கை அமரன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளைப் பார்த்து வந்தாரேயானால் கங்கை அமரனே இது சம்பந்தமாய் நிகழ்ச்சிகளில் நிறைய டிப்ஸ் தருகிறார். அதனை இந்த நண்பரே தொகுத்தளித்து அப்படிப்பட்ட பாக்கியவான் ஆகலாம்.

    விஸ்வநாதன்-ராமமூர்த்தி காலத்திலும் அதற்கு முந்தைய காலத்திலும் வந்த பாடல்களின் இனிமைதான் மக்களுக்குத் தெரிந்திருக்கிறதே தவிர, அதன் பல்வேறு மகத்துவங்கள் அவர்களுக்குத் தெரியவில்லை. அந்த மகத்துவங்களைச் சொல்லும் விஷயங்களை எழுதும் பெரும்பணியைச் செய்யலாமென்றிருக்கிறேன்.
    அதில் சொல்லுவதற்கு நிறைய இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. இளையரஜவுடைய பல வெற்றிப் பாடல்கள் எழுதியது கங்கை அமரன்
      ஆனால் சமுகம் அவரை ஒரு கவிஞராக ஏற்கவே இல்லை.
      இது தான் காலத்தின் நிஜம் .தன்னுடைய உழைப்பிற்குக் கிடைக்க வேண்டிய நியாமான அங்கிகாரத்தைக் கங்கைஅமரனுக்குக் கிடைக்காமல் செய்தது யார்?

      Delete
  45. இரண்டு பின்னூட்டங்கள். ஆனால் ஆழமான சிந்தனைகளை தூவிப் போகும் ஒரு அழுத்தமான பதிவுக்குரிய சாரம்சங்களோடு கருத்தாழமிக்க பதில்கள். ஒருவேளை ஒரு பதிவைத்தான் இப்படி பின்னூட்டமாக வெளியிட்டு விட்டீர்களோ என்று எண்ணத் தோன்றும் விதமாக மிக நுட்பமான வார்த்தைகளுடன், பழைய நினைவுகளின் தெறிப்பாக வந்திருக்கிறது. சபாஷ் என்று சொல்வதைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை அமுதவன் அவர்களே.

    (விஸ்வநாதன்-ராமமூர்த்தி காலத்திலும் அதற்கு முந்தைய காலத்திலும் வந்த பாடல்களின் இனிமைதான் மக்களுக்குத் தெரிந்திருக்கிறதே தவிர, அதன் பல்வேறு மகத்துவங்கள் அவர்களுக்குத் தெரியவில்லை. அந்த மகத்துவங்களைச் சொல்லும் விஷயங்களை எழுதும் பெரும்பணியைச் செய்யலாமென்றிருக்கிறேன்.
    அதில் சொல்லுவதற்கு நிறைய இருக்கிறது.)

    உங்களை எது எழுதத் தூண்டியது என்று தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக இதைச் செய்யவும். விஷயமறிந்தவர்கள் அமைதியாக இருப்பதினால்தான் சில்லுவண்டுகளின் கூச்சல் காதை அடைக்கிறது.உங்களின் இந்தப் பதிவை அதிக விரைவில் எதிர்பார்கிறேன்.

    ReplyDelete
  46. வேட்டைக்காரன்26 March 2014 at 10:52

    சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பதை இப்படி நீட்டி முழக்கிச் சொன்னதற்கு நன்றி அமுதவன் அய்யா.

    வாய் புளித்ததோ இல்லை மாங்காய் புளித்ததோ எனப் பேசினால் ஆதாரம் ப்ளீஸ்!

    காரிகன்,

    சில்வண்டுகள் கேட்பதெல்லாம் நீங்கள் அறிந்த இசைத்திருட்டை உலகுக்கு அறிவியுங்கள் என்பதே.

    ReplyDelete
  47. அதுதான் கங்கை அமரன் அறிவித்துக்கொண்டே இருக்கிறாரே என்பதுதான் பதில்

    ReplyDelete
  48. திரு.காரிகன் அவர்களே,
    மொத்ததில், நாம் (அதாவது நம்மைப் போன்ற) ஜீவிகளெல்லாம் நல்ல திரை இசையை யார் கொடுத்தார்கள் என்ற பாகுபாடின்றி அன்றிலிருந்து சமீப காலத்தில் வந்த ’கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்’ என்ற வித்யாசாகரின் பாடல் வரை ‘ரசித்து’க் கொண்டு வருக்கிறோம். இந்த வரிசையில் இளையராஜாவின் பாடல்களில் சிலவற்றையும் நாம் ரசிக்கத் தவரவில்லை. அந்த வகையில் தங்களுடைய ஆய்வுரை ஒரு அருமையான பயணமாக இருக்கிறது. ரசனையை விட்டவர்களுக்குத்தான் ’ராஜாவைத்தவிர வேறு எவனுக்கும் திரை இசை அமைக்கவே தெரியாது, அதனால் அதை விட்டுவிட்டு மற்றவர்களின் பாடல்களை ரசிப்பவர்கள் எல்லாரும் அறிவிலிகள்’ என்ற எண்ணம் தலைதூக்கி நிற்கிறது. என்னுடைய எண்ணத்தில் இவர்களுக்கு பதிலளிப்பதே தேவையில்லை. நம்முடைய நேரத்தை வீணாக்காமல் இன்னும் சில பாடல்களை ரசித்து அவற்றைப்பற்றி அலசுவோம், வாருங்கள். இன்னொன்று, வி.குமாரைப் போன்றவர்களைக் ’காணாமல் போனவர்கள்’ என்கிறார்களே. நாமெல்லாம் இன்றும் அவர்களைப் பற்றியும், அவர்கள் கொடுத்த இசை பற்றியும் தான் எழுதிக்கொண்டிருக்கிறோமே, போதாதாமா?!

    ReplyDelete
    Replies
    1. அவருடைய பாடல்களின் சிறப்பை நானும் உணர்வேன் நிறைகுடம் தளும்பாது. அதனால் தான் அவர்களை உணர்ந்தவர்கள் அமைதியாக இருக்கிறார்கள் . பழைய இசை அமைப்பாளர்கள் காணமல் போகவில்லை பல பண்பட்ட உள்ளங்களில் குடியிருக்கிறார்கள்.
      ஒருவேளை அவர்களைத் தொலைத்து விட்டால் உண்மையான மனிதம் இல்லாமல் போய்விடும்

      Delete
  49. மேற்கண்ட என்னுடைய பின்னூட்டம் படித்துவிட்டு நீண்ட நாட்களுக்குப் பின் பதிவுலகம் வந்து பின்னூட்டமிட்டிருப்பதற்கு நன்றி ஆர்எஸ்கே.

    ReplyDelete
  50. சால்ஸ்,
    விதாண்டவாததிற்க்கான விதைகளை தூவுகிறீர்கள். காணாமல் போனார், நிலைக்கவில்லை, எங்கள் ராஜா மாதிரியில்லை போன்ற அரைவேக்காட்டுத்தனமான அலறல்கள் (உளறல்கள்) உங்களின் எண்ணத்தை நன்றாகவே தெளிவுபடுத்துகின்றன. அது என்னோடு முடிவில்லாத பயனற்ற முதிர்ச்சியற்ற பக்குவமில்லாத வாக்குவாதம் செய்வது. மன்னிக்கவும்.

    ReplyDelete
  51. திரு ஆர் எஸ் கிருஷ்ணமூர்த்தி அவர்களே,
    முதல் முறையாக என் தளத்திற்கு வருகை தந்திருப்பதற்கு மிக்க நன்றி. (அமுதவன் பின்னூட்டத்தில் அவர் எழுதியிருந்த தகவலான) என் தளத்தை நீங்கள் தவறாமல் படிப்பது குறித்து எனக்கு மகிழ்ச்சி. அவர் எழுத்தின் மூலமே உங்களைப் பற்றி நிறைய அறிந்து கொள்ள முடிந்தது. இத்தனை இசை அறிவு கொண்ட நீங்கள் என் எழுத்தையும் கவனிப்பது, தொடர்ந்து படிப்பது மேலும் என்னை பாராட்டி எழுதுவது நான் கொஞ்சமும் எதிர்பாராதது. அதற்கு எனது நன்றி.

    நல்ல இசையை ரசிப்பதில் பாகுபாடே இருக்ககூடாது என்பது என் எண்ணம். ராஜாவின் ரசிகர்கள் இந்த நிலையை இன்றுவரை அடையவில்லை என்பது திண்ணம். அவர்களின் முட்டாள்தனமான கருத்துக்களே இதை உறுதி செய்கின்றன. வி குமாரை காணாமல் போனவர் என்று சொல்லும் சில இசை சூனியங்களின் விருப்பங்கள், ரசனைகள் எந்த விதமானவை என்பது தெரிந்ததே. நான் இவர்களை என்றுமே பொருட்படுத்தியதில்லை.

    வி குமார், சுதர்சனம், கோவர்த்தன் மேலும் பல இசை மேதைகளை தூக்கிஎறிந்து தனக்கு பிடித்தவரை மட்டுமே நிறுவ முயலும் இந்த மோசடித்தனம் மற்றும் கோமாளித்தனம் படிப்பதற்கு நகைச்சுவையாக இருப்பது ஒன்றே இதில் நான் ரசிப்பது.

    உங்களது வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மீண்டும் எனது நன்றியைத் தெரிவிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி, திரு.காரிகன், திரு.அமுதவன்.

      நமது மற்ற நண்பர்களைப் பற்றி, வருத்தப் படுவது தவிர நம்மால் வேறு என்ன செய்ய முடியும். நமக்கு அன்றே கிடைத்தது அமிர்தங்கள் - இன்றும் அனுபவிக்கிறோம்! இவர்களுக்குக் கிடைத்துக் கொண்டிருப்பதோ...வேண்டாம்! நமது வருத்தத்திலும் நம்முடைய நல்ல எண்ணம், நமக்கு அன்று கிடைத்திருக்காத தடையில்லாத அதே அமிர்தம் இன்று பலவழிகளில் கிடைத்தும் .......! கடை விரிப்போம், கொள்வதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டுமல்லவா!

      Delete
  52. ஹலோ

    இளையராஜா ரசிகர்களை எல்லாம் அறிவிலிகள், அரைவேக்காடு , சில்லுவண்டுகள் , அரைகுறைகள் என்று காரிகன், அமுதவன், இப்போது கிரிஷ்ணமூர்த்தியும் சேர்ந்து ஏக மனதாக ' பாராட்டுகிறீர்கள்'. ஆனால் பதிலுக்கு நாங்கள் யாருமே உங்களை ஏசவில்லை . உங்கள் இசை ஆராய்ச்சியில் எங்களுக்கு எந்த குறையும் இல்லை . இளையராஜாவை புரிவதில் உங்களுக்கு குறை இருக்கிறது . அதை புரிய வைக்க நிறைய பேச வேண்டி இருக்கிறது .

    பகல் விண்மீன்கள் பொருத்தமான தலைப்பு . காணாமல் போனவர்கள் என்பது உண்மைதானே! பத்து படங்களில் ஒட்டு மொத்த திறமைகளையும் வடித்து முடித்து விட்டு அடுத்த படத்தில் அதே மாதிரியான இசை வடிவம் கொடுத்துக் கொண்டிருந்தால் மக்கள் புறம் தள்ளத்தான் பார்ப்பார்கள் . மக்களை குறைத்து மதிப்பிடாதீர்கள் . இசை அறிவே இல்லாவிட்டாலும் எந்த ஒரு இசை வடிவத்தையும் தரம் பார்த்து தீர்ப்பிடுவதில் சரியான நீதிபதிகள் . வெங்கடேஷ் , குமார் போன்றவர்களைப் பற்றி தாமதமாகத்தான் தெரிய வந்தது . காரணம் அவர்கள் இசையில் புதுமை இல்லை . எம்.எஸ்.வி பாடல்களாகவே ஒலிக்கப்பட்டன, நினைக்கப்பட்டன . அதனால் அவர்கள் நிலைக்கவில்லை . இணையம் வந்ததால் உங்களை போன்றோரால் நினைக்கப் படுகிறார்கள் . அவ்வளவே! மற்றபடி எந்த ஒரு புரட்சியையும் அவர்கள் செய்து விடவில்லை .

    இளையராஜா வெங்கடேஷிடம் வேலை பார்த்தார் . ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறாதா? பிற்காலத்தில் இளையராஜாவிடம் அவர் வேலை பார்த்திருக்கிறார் . இதில் என்ன வினோதம் காரிகன் !? அவரை மதித்து தன்னோடு சேர்த்துக் கொண்ட பண்பு உயர்ந்தது . பாராட்ட மனசு வராதே?

    முன்னோர்களின் இசையை நாங்களும் கேட்டு வளர்ந்தவர்கள்தான் ! ஜி. ராமநாதன் காலத்திலிருந்து காப்பி அடித்தல் நடந்து கொண்டுதான் இருக்கிறது . இளையராஜா மட்டும் செய்தார் என்பது போல் ஒரு மாயை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம் . காப்பி அடித்தாலும் அதில் கூட புதுமை , வித்தியாசம் , புரட்சி , சாகசம் கலந்து கொடுத்திருப்பார் . மற்றவர்கள் அதிலும் வேறுபட்டவர்களே என்பதைத்தான் அழுத்தமாக சொல்ல வருகிறோம் .

    வேட்டைக்காரன் சார் நான் பேசுவது உங்களுக்கு புரியிதா ? ரிம்போச்சே ...எங்க காணோம் ...உங்களுக்கு புரியிதா?








    ReplyDelete
    Replies
    1. திரு.சார்லஸ்,

      ஒரு மறுப்பு: தங்களையோ அல்லது மற்றவர்களையோ, நானோ நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மற்ற நண்பர்களோ இழிவாகப் எழுதியதாக எனக்குத் தெரியவில்லை. யாருடையதாயினும், எந்த இசையானாலும் நாமெல்லாருமே கருத்துப் பரிமாட்டம் நல்லபடி செய்து கொள்வது நமது இசையையும், ரசனையும், ஏன் நம்மையுமே மேலை தூக்கிச்செல்லும் -செல்ல வேண்டும். இது மனித இயல்பு என்பது என் கருத்து....
      இன்னொன்று, ‘அவர்கள்’ காப்பியடிக்கவில்லையா என்ற கேள்வி. இன்றும் தங்களுக்குக் கூடத் தெரிந்திருக்கும் ‘செந்தமிழ்த் தேன்மொழியாள்’ பாட்டின் பல்லவி (அதாவது முதல் இரண்டு வரிகளின் இசை) ஒரு இந்திப்படத்தின் அப்பட்ட காப்பி என்பது தங்களுக்குத் தெரியுமா? திரு.விஸ்வநாதனுக்கும் திரு.ராமமூர்த்திக்கும் பிரபல இந்தி இசையமைப்பாளர் நெள்ஷாத் அவர்கள் மீது அளவுகடந்த மரியாதை. அவரை பாராட்டுவதற்காகவே அவரின் இந்திபாடல் ஒன்றின் பல்லவியை (இதே மெட்டில் டி.ஏ.மோதி அதே ‘ஆன்’ எனும் இந்திப்படத் தமிழ் டப்பிங் படத்தின் பாடலான’’மோக முத்தம் தருமா மலர்க் கையாள்” இருக்கிறது! அன்றைய சிலோன் ரேடியோவில் பலமுறை கேட்டிருக்கிறேன். அதல்ல விஷயம், பாடலின் ‘சொந்த’ தொடர்ச்சியும் இன்றும் கிளைக்க வைக்கும் இசையும் தான் முக்கியம்! இன்னொன்று: ஒரு முறை பேசிக்கொண்டிருந்தபோது திரு.(விஸ்வநாதன்) ராமமூர்த்தி சொன்னார். ’ஸார், சொந்த மெட்டு என்பது மிகக் குறைவு. எப்போதோ காதில் விழுந்து மனதில் இடம் பெற்றது தான் இன்று பாடலாகிறது’ அது தான் உண்ர வேண்டிய உண்மை!

      Delete
  53. சால்ஸ்,
    உங்களின் பின்னோட்டம் எனக்குள் உண்டாக்கியிருக்கும் திகைப்பில் என்ன எழுதுவதுதென்றே தெரியவில்லை. உங்களின் "நாகரீகமான" கருத்துக்களோடு என்னால் மோத முடியுமா என்றும் தெரியவில்லை. உங்களின் "தரமான" இசை ரசனைக்கும் "வளமான" வார்த்தைகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  54. சார்லஸ்,
    நீங்கல்லாம் நல்ல வருவீங்க!

    ReplyDelete
  55. செந்தமிழ்த் தேன்மொழியாள் பாடல் பற்றிய இன்னொரு விஷயம், முதலில் இந்தப் பாடலுக்கு வேறொரு மெட்டு அமைக்கப்பட்டு அது கவிஞருக்குப் பிடிக்காமல் போய் அவர்தான் நௌஷாத்தின் இந்த மெட்டைக் குறிப்பிட்டு இதற்கேற்றமாதிரி போடுங்கள் என்று வற்புறுத்தி இன்றைக்கு நாம் கேட்டுக்கொண்டிருக்கிற மெட்டைக் கொண்டுவந்தார் என்று திரையுலகின் முன்னோடிகளில் ஒருவர் சொன்ன செய்தி ஒன்றையும் பத்திரிகையில் வாசித்திருக்கிறேன்.

    இவையெல்லாமே ஆரோக்கியமான செய்திப் பகிர்வுகள்.

    இதில் 'இவர்தான் இவர்மட்டும்தான். இவர்தான் இசைக்கடவுள்' என்றும், இவருக்கு முன்னேயும் இசை இருந்ததில்லை, பின்னேயும் இசை என்பது இருக்கப்போவதில்லை என்கிறமாதிரியான உளறல்களைக் கேட்கும்போதுதான் அப்படியெல்லாம் இல்லை என்பதைச் சொல்லவேண்டியிருக்கிறது.

    ReplyDelete
  56. அமுதவன் ஸார்,
    இது கோஹ்லியின் காலம். நீங்கள் இன்னமும் ’காணாமல் போன’ தெண்டுல்கர் என்றெல்லாம் பினாத்திக் கொண்டிருந்தால் எனக்கு கெட்ட கோபம் வரும், சொல்லிட்டேன்!

    ReplyDelete
  57. Mudiyala R.S.KRISHNAMURTHY sir...

    ReplyDelete
  58. அநானிமஸ் ஸார்,
    எங்களால கூடத்தான் முடியல! அதற்காக விட்டுர்ரதா!!!

    ReplyDelete
  59. ஆயிரம் அறிவாளிகளிடம் விவாதம் செய்துவிடலாம், ஆனால் ஒரு முட்டாளிடம் விவாதிக்க முடியாது.

    வெற்றி பெற்றவர் எல்லாம் திறமையானவர் அல்ல இளையராஜாவும் அப்படியே! அவருடைய காலத்தில் பல வெற்றிப்பட இயக்குனர்கள் அவர் கட்டுப்பாட்டில் வைத்துச் சூழ்ச்சியில் வென்றவர். வேறு இசை அமைப்பாளர்கள் வெற்றிப் பெற வாய்ப்பே இல்லாமல் செய்தவர் .
    எதுவும் இல்லாவிட்டால் பழைய சோறு கூட இனிமையாகத்தான் தெரியும். அதையே உண்டு பழகிய உடல் புதிய சத்தான உணவைக் கூட ஏற்றுக்கொள்ளாது. இது இளையராஜாவின் ரசிகர்களுக்குப் பொருந்தும்

    ReplyDelete
  60. எத்துனை இசை அமைப்பாளர்கள் தமிழ் திரை இசையை வளப் படுத்தி இருக்கிறார்கள். என்பதை அறியும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது. நான் அறியாத பல இசை அமைப்பாளர்களை இந்தப் பதிவின் மூலம் அறிந்தேன். சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்சிகளில்ரகுமான், எம்.எஸ்வி இளையராஜா பாடல்களுக்கே முக்கித்துவம் கொடுக்கப் படுகின்றன. என்ற வருத்தமும் எனக்கு உண்டு . வி குமாரின் பாடல்கள் எனக்கு பிடிக்கும்.இதை அமுதவன் அவ்ர்களுடியாய ஒருபதிவிலும் குறிப்பிட்டிருந்தேன்.

    தண்ணி கருத்துரிச்சி பாடலைப் பாடியவர் மலேசியா வாசுதேவன் அல்லவா. ஜி.கே.வெங்கடேஷ் என்று குறிப்பிட்டிருக்கிறீர்களே

    எம்.எஸ்.வியைக் கூட இளையாராஜா தன் இசை அமைகும்படங்களுக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.( நான் குறிப்பிடுவது சேர்ந்து இசை அமைத்த படங்கள் அல்ல)

    ReplyDelete
  61. சேகர்,
    வருகைக்கு நன்றி.
    நீங்கள் இளையராஜாவின் இசை பற்றி கொண்டிருக்கும் கருத்து முற்றிலும் உண்மை. மேலும் அதுவேதான் நான் சொல்வதும். தொடர்ச்சியான வணிக வெற்றி இளையராஜாவை தனி சிம்மாசனத்தில் அமர வைத்துவிட்டது. ஆனால் அவ் வெற்றிகள் அவரின் இசையின் தரத்தினால் நிர்ணயயிக்கப்படதல்ல.வெற்றி பெற்றவர்களை இந்த உலகம் கொண்டாடும் என்ற பொது விதியின் படி அவர் புகழப்படுகிறார். அவ்வளவே.

    (எதுவும் இல்லாவிட்டால் பழைய சோறு கூட இனிமையாகத்தான் தெரியும்.அதையே உண்டு பழகிய உடல் புதிய சத்தான உணவைக் கூட ஏற்றுக்கொள்ளாது. இது இளையராஜாவின் ரசிகர்களுக்குப் பொருந்தும்.)

    சபாஷ்! தெளிவான கருத்து. இதை சொன்னதற்காகவே உங்களை பாராட்டுகிறேன்.ஆனால் பழைய சோறு ஒரு ஆரோக்கியமான உணவு. அது நம் மண் சார்ந்தது, ஏழைகளின் உயிர் போன்ற வறட்டு வாதங்களை ராஜா ரசிகர்கள் முன்வைக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பழைய சோறு என்று நான் குறிப்பிடுவது அழுகியதை

      Delete
    2. அழுகிய மன நிலயில் அவர் இசைத்த அனேகப் பாடல்களை என்னால் குறிப்பிடமுடியும்.மற்றவர்களை கேவலமாக நினைத்து அவர் கொடுத்தா பேட்டிகள் ஏராளம்

      Delete
    3. ரிம்போச்சே7 April 2014 at 08:16

      //மற்றவர்களை கேவலமாக நினைத்து அவர் கொடுத்தா பேட்டிகள் ஏராளம்//

      ஐயனே,

      நீவிர் படைப்பைப் பற்றிப் பேசுங்கள், படைப்பாளியை விமர்சிக்காதீர்கள்.

      Delete
    4. ரிம்போச்சே7 April 2014 at 08:21

      //பழைய சோறு என்று நான் குறிப்பிடுவது அழுகியதை//

      பழைய சோற்றைப் பார்த்தில்லையோ?

      ஒரு வேளை சூஷியும், பரீட்டோவும் சாப்பிடுபவர்களாக இருப்பார்களோ என்னவோ?

      Delete
  62. வாருங்கள் மூங்கில் காற்றே,
    நன்றி.
    என் பதிவு உங்களின் இசை பற்றிய எண்ணத்தை விரிவுபடுத்தியிருக்குமேயானால் எனக்கு மகிழ்ச்சியே. தமிழ்த் திரை பல வளமையான இசை ஜீவன்களை உள்ளடக்கியது. சிலர் அதன் எல்லா பெருமைகளையும் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அளிக்க முயல்வது கண்டிப்பாக ஒரு கடைந்தெடுத்த மோசடித்தனம். இசை என்றால் இவர்தான் என்று பத்தாயிரத்தில் முன்னூறு பாடல் கூட தேறாத ஒருவரை சுட்டிக்காட்டும் அறிவின்மையையே நான் சாடுகிறேன். இது அவர்களுக்கு கசக்கிறது. இயல்பானதுதான்.

    வி.குமார் ஒரு மகத்தான இசைக் கலைஞன். குறிப்பாக தூண்டில் மீன் படத்தின் "என்னோடு என்னென்னெவோ ரகசியம்" ஒரு அற்புதம். சில அற்புதங்களை இப்படியாக்கும் அப்படியாக்கும் என்று விலா வாரியாக விளக்குவதே போலித்தனம். அவ்வாறு செய்வதால் அதன் அழகு கெட்டுவிடுகிறது என்பது என் எண்ணம். குமார் போன்ற கலைஞர்களை இழிவாக பேசும் சால்ஸ் வகையறா ராஜா ரசிகர்களின் ரசனையை எண்ணி வேதனையும் வியப்பும்தான் மிஞ்சுகிறது.

    தண்ணி கருத்துருச்சு பாடலைப் பற்றி முன்பு படித்த ஒரு தகவல் அது. அதை அவர் பாடியதாகவே குறிப்பிட்டிருந்தார்கள். அல்லது அந்தப் பாடலுக்கு நடித்தவரா என்று தெரியவில்லை. இதை உறுதி செய்துகொள்ளும் பொருட்டு அந்தக் கண்றாவியை இன்னொரு முறை கேட்கவேண்டாம் என்றிருக்கிறேன். தகவல் தவறாக இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

    (எம்.எஸ்.வியைக் கூட இளையாராஜா தன் இசை அமைகும்படங்களுக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.)

    இருக்கலாம். எப்படி பயன்படுத்திகொண்டார் என்பது குறித்து தெரிந்தால் சொல்லுங்கள். இருந்தாலும் இளையராஜா எம் எஸ் வி யை மிகவும் மதிப்பவர் என்பது சற்று ஆறுதலான விஷயம்.

    ReplyDelete
  63. I'm posting Mr.Sekar's comment in my name as it was accidentally deleted.

    இளையராஜா ரசிகர்களுக்கு,
    இந்தக் கட்டுரையின் நோக்கமே மாயவலையில் இருக்கும் உங்களை மீட்கத்தான்.
    எந்த ஒரு மனிதனும் தன்னைச் சேர்ந்த மனிதனை முட்டாளாக்க விரும்பமாட்டான் . ஆனால் இளையராஜா தன் ரசிகர்களை முட்டாளாகவும்,மூடர்களாகவும் வைத்து வியாபாரம் செய்தவர்.
    அதற்கு முன்று பாடல்களை மட்டும் உதாரணமாகச் சொல்கிறேன்
    பாடும் பறவைகள் = நிழலோ நிஜமோ
    அன்பின் முகவரி = உயிரே உறவோ
    காதல் கீதம் = வாழ்வோ சாவோ
    ஒரே மெட்டை முன்று படங்களுக்குப் பயன்படுத்தி ரசிகர்களை முட்டாள்களா நினைத்து இசைத்ததே இந்தப் பாடல்கள். இதுபோல் பல பாடல்கள் இருக்கிறது.
    ஞானி , கடவுள் என்றும் போற்றப்படுபவர் செய்யும் செயல் இப்படித்தான் இருக்குமா?

    ReplyDelete
    Replies
    1. ரிம்போச்சே7 April 2014 at 10:23

      இதென்னங்க பிரமாதம்.

      மோகனம்-ங்கற ராகத்த காப்பியடிச்சு 55 பாடல்கள் போட்டிருக்காருங்க.
      முட்டாள் ரசிகர்கள் யாரும் கண்டுபிடிக்கலையே.

      Delete
  64. ரகுமான் அலை வீச ஆரம்பித்த சமயத்தில் ஒரு தொளிக்கட்சிக்கு அவர் அளித்த பேட்டி இதோ , தற்போது தமிழ்த் திரை உலகில் உங்களுக்கு அடுத்து இரண்டாவது இருப்பவர் யார். இதுதான் கேள்வி அதற்கு அவர் சொன்ன பதில் தலைக்கனத்தின் உச்சம் இதோ பதில் -எனக்கு அடுத்து யாரும் இல்லை வெகு தொலைவில் ஒரு புள்ளி தெரிகிறது அது தேவா

    ReplyDelete
  65. மிக நீண்ட பதிவாக இருந்தாலும் ஒவ்வொரு பாடலையும் , இசையையும் உள் வாங்கி படித்து ரசித்தேன். அநேக தகவல்கள் ....ஆச்சர்யமான தாகவும். இசையின் தீரா தாகத்தை ஊற்று கொள்ளவும் செய்தது.

    ReplyDelete
    Replies
    1. கலாகுமரன்,

      வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி. நம் தமிழ் திரையிசையில் எத்தனை அற்புதங்கள் இருக்கின்றன என்று நாம் மறந்துவிட்டோம். ஸ்டீரியோ டைப்பாக சிலரை மட்டுமே நினைவில் வைத்திருக்கிறோம். நாம் இழந்துவிட்ட அந்தப் பொக்கிஷங்களை மீண்டும் நாம் திரும்பப் பெற வேண்டும் என்ற (என்றுமே சாத்தியமில்லாத) ஆசையின் வெளிப்பாடுதான் பகல் விண்மீன்கள். இதன் தொடர்ச்சியும் வர இருக்கிறது.

      Delete
  66. ரிம்போச்சே7 April 2014 at 07:55

    //அமுதவன் ஸார்,
    இது கோஹ்லியின் காலம். நீங்கள் இன்னமும் ’காணாமல் போன’ தெண்டுல்கர் என்றெல்லாம் பினாத்திக் கொண்டிருந்தால் எனக்கு கெட்ட கோபம் வரும், சொல்லிட்டேன்!//

    தப்பா சொல்லாதீங்க சார்.

    கவாஸ்கர்களும், கோஹ்லிகளும் கைகோர்த்துக் கொண்டு டெண்டுல்கர்களை மட்டந் தட்டும் காலம்!

    ReplyDelete
  67. ரிம்போச்சே7 April 2014 at 08:12

    //வெற்றி பெற்றவர் எல்லாம் திறமையானவர் அல்ல இளையராஜாவும் அப்படியே! அவருடைய காலத்தில் பல வெற்றிப்பட இயக்குனர்கள் அவர் கட்டுப்பாட்டில் வைத்துச் சூழ்ச்சியில் வென்றவர். வேறு இசை அமைப்பாளர்கள் வெற்றிப் பெற வாய்ப்பே இல்லாமல் செய்தவர் .//

    சரியாகச் சொன்னீர்கள் சேகர். சப்ப்பாஷ்!

    கங்கை அமரன், சங்கர் கணேஷ், சந்திரபோஸ், மரகதமணி, ஹம்சலேகா, டி.ராஜேந்தர், ரவீந்திரன், S.A. ராஜ்குமார், பாலபாரதி, மனோஜ் க்யான் எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

    இவர்களெல்லாம் இசையமைக்கும் போது இளையராஜா அந்தந்தப் படத் தயாரிப்பாளர்களை ரவுடிகள் வைத்து மிரட்டுவாரோ?

    இது போன்ற சம்பவம் அவர் காலத்துக்கு முன்னாலும் நடந்ததில்ல, அவருக்குப் பின்னாலும் நடந்ததில்ல.

    பாருங்கய்யா ரவுடி ராசையாவை!

    ReplyDelete
  68. ரிம்போச்சே7 April 2014 at 08:25

    //இதுபோல் பல பாடல்கள் இருக்கிறது.
    ஞானி , கடவுள் என்றும் போற்றப்படுபவர் செய்யும் செயல் இப்படித்தான் இருக்குமா? //

    ஞானிகள், கடவுள் தினமும் இட்டிலி, தோசையை சாப்பிடலாமா ஐயனே?
    இல்லை அண்டமெங்கும் சுற்றி அனுதினமொரு வகையான உணவை உண்ண வேண்டுமோ?

    என்ன கொடுமை, என்ன கொடுமை?

    ReplyDelete
  69. ரிம்போச்சே7 April 2014 at 08:31

    //வெற்றி பெற்றவர் எல்லாம் திறமையானவர் அல்ல இளையராஜாவும் அப்படியே! //

    திறமையே இல்லாமல் ஓரிரு படங்களை ஒப்பேத்தலாம். ஆயிரம் படங்களுக்கு இசையமைக்க முடியுமோ ஐயனே?

    உங்களுக்கு அத்திருமந்திரம் தெரிந்தால் ஆதித்யனுக்கும், சிற்பிக்கும், ஆரிஸ் ஜெயராஜுக்கும் அருளும்படி வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ரிம்போச்சே-
      கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லிப் பழகுங்கள் .
      பிறகு கிண்டல் செய்யலாம். விவாதத்தை திசை மாற்றி உண்மையை மறைக்க வேண்டாம்.

      Delete
    2. ரிம்போச்சே7 April 2014 at 10:07

      அதிர்ஷ்டம் ஐந்து படத்துக்கு உதவலாம். ஐம்பது, ஐந்நூறு, ஆயிரம் படங்களுக்கு உதவுமா ஐயனே?
      திறமையே இல்லாமல் ஆயிரம் படங்களுக்குத் தாக்குப் பிடிப்பதும் திறமைதானோ?

      Delete
  70. வெற்றி பெரும் குதிரையில் பந்தயம் கட்டுவது தானே மனித இயல்பு .
    மறுபடியும் சொல்றேன் வெற்றிப் பெற்றவர் எல்லாம் திறமையானவர் அல்ல. மொழி தெரியாதவனை வேறு மொழி பேசும் இடத்தில் விட்டால் வெகு இயல்பாக அந்த மொழியைக் கற்று தேற முடியும்.
    பாடல் வெற்றிக்கு இசை அமைப்பாளர் மட்டும் காரணமா?
    உதவி இசை அமைப்பாளர்களின் பங்களிப்பு என்ன உங்களுக்குத் திறமை இருந்தால் விளக்கம் தரவும்.

    ReplyDelete
    Replies
    1. ரிம்போச்சே7 April 2014 at 10:04

      //உதவி இசை அமைப்பாளர்களின் பங்களிப்பு என்ன உங்களுக்குத் திறமை இருந்தால் விளக்கம் தரவும்.//

      எனக்கு இல்லை ஐயனே. உங்களுக்கு இருக்கிறதா? இருந்தால் விளக்கவும்.

      Delete
  71. காரிகன்

    தெரிந்தோ தெரியாமலோ இளையராஜாவை கிரிஷ்ணமூர்த்தி அவர்கள் டெண்டுல்கர் அளவிற்கு ஒப்பிட்டு விட்டார் . எப்படி கிரிக்கெட் உலகில் டெண்டுல்கரின் சாதனையை யாரும் தொட முடியாதோ அதே போல இசை உலகில் இளையராஜாவின் சாதனையை யாருமே தொட முடியாது . அவர் ஒரு இசைக் கலைஞர். அவரே அழகாக சொல்லிவிட்டார் .

    ஒரு அறிவாளி இளையராஜா ரசிகர்களை முட்டாள் என விமர்சித்திருக்கிறார் . அவர் விமர்சனம் தனி மனிதனைப் பற்றி ! இசையைப் பற்றி அல்ல! முட்டாத்தனமாக தெரியவில்லையா? இசைஞானி இசையை மட்டும் பார்த்தால் அது மேன்மையானது என்பது புரியும் .

    ReplyDelete
    Replies
    1. charles-

      //பாடும் பறவைகள் = நிழலோ நிஜமோ
      அன்பின் முகவரி = உயிரே உறவோ
      காதல் கீதம் = வாழ்வோ சாவோ
      ஒரே மெட்டை முன்று பாடல்கள்.//
      கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லி பழகுங்கள் . பிறகு கிண்டல் செய்யலாம். விவாதத்தை திசை மாற்றி உண்மையை மறைக்க வேண்டாம்.

      Delete
  72. ரிம்போச்சே7 April 2014 at 09:42

    //வேட்டைக்காரன் சார் நான் பேசுவது உங்களுக்கு புரியிதா ? ரிம்போச்சே ...எங்க காணோம் ...உங்களுக்கு புரியிதா? //

    புரியாம என்னங்க?

    kindergarten சிறார்கள் அடுத்தவர் மீது எச்சி துப்புவதை old boys club தாத்தாக்கள் கைதட்டி ஊக்குவிக்கிறார்கள். அவ்வளவே.

    ReplyDelete
    Replies
    1. ரிம்போச்சே-
      kindergarten சிறார்கள் அடுத்தவர் மீது எச்சி துப்புவதை old boys club தாத்தாக்கள் கைதட்டி ஊக்குவிக்கிறார்கள். அவ்வளவே//

      நானா உங்கள ஏமாற்றினேன்!. உங்கள் ஞானியின் செயல் அது .
      உண்மை கசப்பாகத் தான் இருக்கும்.

      Delete
    2. ரிம்போச்சே7 April 2014 at 10:25

      Pardon me. Could you pls explain your statement?

      Delete
    3. புரியவில்லை என்றால் விட்டுவிடுங்கள்.

      Delete
    4. ரிம்போச்சே8 April 2014 at 11:01

      சேகர் அவர்களே,

      மிக்க நன்றி.

      Delete
  73. ஹலோ காரிகன்

    இன்னும் ஒரு பகல் விண்மீன் பற்றி சொல்லலாமா!?

    இசைஅமைப்பாளர் ஷ்யாம்

    அவர் இசை அமைத்த படங்களில் ஒரு சில படங்கள் இதோ கீழே !

    கருந்தேள் கண்ணாயிரம் , அப்பா அம்மா , உணர்சிகள் , மனிதரில் இத்தனை நிறங்களா , பஞ்ச கல்யாணி ,மற்றவை நேரில் ,வா இந்த பக்கம் , அந்தி மயக்கம் , கள் வடியும் பூக்கள் , ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது , தேவதை , குழந்த இயேசு , விலாங்கு மீன்

    தமிழ் , மலையாளம் என மொத்தம் 300 திரைப்படங்களுக்கு இசை அமைத்தவர் . இயற்பெயர் சாமுவேல் ஜோசப் . எம் எஸ் வி உதவியாளர் .

    மேற்சொன்ன படங்களில் சில பாடல்கள் அற்புதமானவை . சுவை மிகுந்தவை . ஆனாலும் பாருங்கள் நிற்கவில்லை நீடிக்கவில்லை . காரணம் இளையராஜாவா !!? சேகர் இதே புலம்பலை சொல்லிக் கொண்டிருக்கிறாரே ! நீங்களும் தலையாட்டி பொம்மை போல ஆடுகிறீர்கள்.

    வெற்றி பெற்றவர் எல்லாம் திறமையானவர் இல்லை என்றால் ஜி.ஆர் ,கே .வி.எம், எம்.எஸ்.வி, ரகுமான் கூட திறமையானவர்கள் இல்லை என்று எடுத்து கொள்ளலாமா !? இதில் வி.குமார் எந்த லிஸ்டில் வரப் போகிறார் ?

    ReplyDelete
    Replies
    1. ரிம்போச்சே7 April 2014 at 10:33

      //வெற்றி பெற்றவர் எல்லாம் திறமையானவர் இல்லை என்றால் ஜி.ஆர் ,கே .வி.எம், எம்.எஸ்.வி, ரகுமான் கூட திறமையானவர்கள் இல்லை என்று எடுத்து கொள்ளலாமா !? இதில் வி.குமார் எந்த லிஸ்டில் வரப் போகிறார் ?//

      என்னங்க சார்லஸ். இந்த அளவுகோல் இளையராஜாவுக்கு மட்டுந்தான்.

      //செந்தமிழ்த் தேன்மொழியாள் பாடல் பற்றிய இன்னொரு விஷயம், முதலில் இந்தப் பாடலுக்கு வேறொரு மெட்டு அமைக்கப்பட்டு அது கவிஞருக்குப் பிடிக்காமல் போய் அவர்தான் நௌஷாத்தின் இந்த மெட்டைக் குறிப்பிட்டு இதற்கேற்றமாதிரி போடுங்கள் என்று வற்புறுத்தி இன்றைக்கு நாம் கேட்டுக்கொண்டிருக்கிற மெட்டைக் கொண்டுவந்தார் என்று திரையுலகின் முன்னோடிகளில் ஒருவர் சொன்ன செய்தி ஒன்றையும் பத்திரிகையில் வாசித்திருக்கிறேன். //

      சிலர் தயாரிப்பாளர்களையே மிரட்டும் ரவுடிகள். சிலர் காப்பியடின்னு வற்புறுத்தினா மாட்டேன், போய்யா, நீயாச்சு, உன் படமாச்சுன்னு கோவப்படாம ட்யூன் போட்டுக் கொடுக்கும் அப்பாவிகள்.

      Delete
    2. ரிம்போச்சே-
      உங்களுக்கு படிக்க தெரியுமா இல்லையா! முழுவதும் படித்து புரிஞ்சு எழுதுங்கள் .

      Delete
  74. ஹலோ சேகர்

    ஒரே மெட்டில் பத்து பாடல்கள் கூட போடலாம் . அதை வித்தியாசப்படுத்தி காட்டுவதில்தான் இசை அமைப்பாளரின் திறமை உள்ளது . மதுரையில் நடந்த இசை நிகழ்ச்சியில் இரு பாடல்களை ஒரே நேரத்தில் ஒரே தாளத்தில் ஒரே சுதியில் மாற்றி மாற்றி பாட வைத்து காண்பித்தார் இளையராஜா . இஞ்சி இடுப்பழகி , சின்ன மணி குயிலே என்ற பாடல்கள்தான் அவை ! இது எல்லா இசை அமைப்பாளர்களும் செய்வதுதான் . அதிசயம் ஒன்றும் இல்லை. காரிகன் கண்டு பிடித்தால் கரீகிட்டா இருக்குமா என்ன!? அவர் இசை அறிவு அவ்வளவே! நீங்களும் ஈயடிச்சான் காப்பி மாதிரி பேசுகிறீர்களே!?

    ReplyDelete
    Replies
    1. நண்பர் charlesக்கு,

      அந்த பாடலை கேட்டு விட்டு பிறகு பதில் சொல்லுங்கள்.

      Delete
  75. This comment has been removed by the author.

    ReplyDelete
  76. This comment has been removed by the author.

    ReplyDelete
  77. அன்புள்ள காரிகன் அவர்களுக்கு
    ரிம்போச்சே-மறைமுகமாகப் பொடியன் என்று சிறுமைப் படுத்துகிறார் தேவை இல்லாமல் என்னை நானே தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை . பண்பு இல்லாதவர்கள் மத்தியில் விவாதம் செய்வது எந்த மாற்றத்தையும் தராது . எனவே விலகிக் கொள்கிறேன்.
    நன்றி வணக்கம்

    ReplyDelete
  78. வாருங்கள் சேகர்,
    நேற்று உங்களின் புதிய மூன்று பின்னூட்டங்களைப் பார்த்தேன். தொடர்ச்சியாக ரிம்போச்சே என்பவர்(வேட்டைக்காரன், விமல், ரிம்போச்சே,தகதிமிதா என்று வெவ்வேறு பெயர்களில் வருவார்கள். ஆனால் பாடுவது எல்லாமே பழைய பல்லவிதான்.) எதோ வழக்கம்போலவே எழுதியிருந்தார். சரி. காலையில் உங்களுக்கு பதில் எழுதலாம் என்று நினைத்திருந்தேன். இப்போது பார்த்தால் (அதிகாலை நேரம்) ஒரு விவாதமே நடந்து முடிந்திருக்கிறது.

    ரிம்போச்சே, சால்ஸ் வகையறாக்கள் வீண் வாதம் செய்யும் முரட்டு மனோபாவம் கொண்டவர்கள். இளையராஜாவைத் தாண்டி வேறு எதையும் சிந்திக்க மாட்டார்கள். இவர்களுடன் நான் நிறைய பேசியாயிற்று. இப்போதெல்லாம் இவர்களின் பேச்சு நல்ல நகைச்சுவையாக இருக்கிறது. ரசித்துவிட்டுப் போகிறேன். இவர்களுக்கு இவர்கள் அளவில் பதில் சொல்வது ஒரு விதத்தில் மடத்தனம்.

    உங்களின் தெளிவான கருத்தின் சாரத்தைப் புரிந்துகொள்ளாமல் (எப்போதும் அப்படித்தான்) குழந்தைகள் அழுவதைப் போல சொன்னதையே சொல்லும் இவர்களுக்கு நீங்கள் என்னவிதமான ஆரோக்கியமான கருத்தை முன்வைத்தாலும் நாகரீகமில்லாத தரமிழந்த தமிழில் மீசையை முறுக்குவார்கள். எல்லாம் தெரிந்ததுதான். நீங்களே சொல்லியிருக்கிறீர்கள். இளையராஜா ரசிகர்களுக்கு விமர்சனத்தை எதிர்கொள்ளும் பக்குவம் இல்லை என்று. அது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவே.

    உங்களின் ஆதரவுக்கு நன்றி. உங்களிடம் நான் ஒரு தெளிவான தேர்ந்த முதிர்ச்சியான இசை அணுகுமுறையைக் காண்கிறேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  79. (தெரிந்தோ தெரியாமலோ இளையராஜாவை கிரிஷ்ணமூர்த்தி அவர்கள் டெண்டுல்கர் அளவிற்கு ஒப்பிட்டு விட்டார் . எப்படி கிரிக்கெட் உலகில் டெண்டுல்கரின் சாதனையை யாரும் தொட முடியாதோ அதே போல இசை உலகில் இளையராஜாவின் சாதனையை யாருமே தொட முடியாது . அவர் ஒரு இசைக் கலைஞர். அவரே அழகாக சொல்லிவிட்டார் . )

    வாருங்கள் சால்ஸ்,
    திரு கிருஷ்ணமூர்த்தியின் அந்த டெண்டுல்கர் பதிலைப் படித்தால் அவர் அப்படி சொல்வது இளையராஜாவுக்கும் முன்னே இருந்த இசை அமைப்பாளர்கள் என்று தெரிகிறது. உங்களுக்கு மட்டும் எப்படி ஒரு சாதாரண அர்த்தம் சட்டென புரியமாட்டேன்கிறது என்று தெரியவில்லை. (இது தெரிந்ததுதானே!) ஒருவேளை அது அப்படியே இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. ஏனென்றால் நான் கிரிக்கெட் என்னும் மோசடியை அடியோடு வெறுப்பவன்.காவஸ்கரோ,கபில் தேவோ,டெண்டுல்கரோ வேற மற்ற பிற கிரிக்கெட் விளையாட்டு வியாபாரிகளோ..நான் அவர்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இதில் என்ன பெருமையோ?

    சேகர் கூறியது ஒரு ஆரோக்கியமான விவாததிற்க்கான தொடக்கப் புள்ளி. உங்களுக்குத்தான் ஒழுங்காகவே விவாதம் செய்வது பிடிக்காதே. கிண்டல், நக்கல், மேலும் அழுக்குத் தமிழில் (மன்னிக்கவும் அழகுத் தமிழ் என்று சொல்லவந்தேன் இப்படி மாறிவிட்டது. பரவாயில்லை. அதுவும் உண்மைதானே உங்கள் விஷயத்தில்.) தனிமனித தாக்குதல் செய்வது மட்டுமே உங்களின் சிறப்பு. அதுவே உங்களின் ஒரே ஆயுதம். நடத்துங்கள். சேகர் ஒரே மாதிரி மூன்று பாடல் என்று சொல்கிறார். அது தவறு என்று நினைக்கிறேன். . மூன்றென்ன மூவாயிரம் பாடல்களை இளையராஜா ஒரே தொனியில் அமைத்திருக்கிறார் என்பது என் எண்ணம். அந்தக் கருமங்களையெல்லாம் பட்டியல் வேறு போடவேண்டுமா? வெளங்கிரும்...இனிமையாகவும் அழகாகவும் ரசிக்கத்தக்க வகையில் சென்று கொண்டிருந்த தமிழ்த் திரையிசையின் போக்கை தடாலடியாக மாற்றி போதையேறிய தள்ளாட்டமாக மாற்றிய புண்ணியவான் இளையராஜா என்பது என் அசைக்க முடியாத கருத்து.

    ஷ்யாம் பற்றிய உங்கள் கருத்து வரவேற்கப்படக்கூடியதே. என் அடுத்த பதிவு இது போன்ற அதிகம் பேசப்படாத இசை மேதைகளைப் பற்றியது. அதில் ஷ்யாமுக்கும் இடம் உண்டு. எத்தனை அருமையான பாடல்களை அவர் கொடுத்திருகிறார். அவரைப் பற்றி பேசியதற்கு நன்றி. இறுதியாக ராஜா ரசிகர்கள் எங்கள் ஆள் பெரிய பெரிய வெற்றிகளை கொடுத்திருப்பதாக வெறியோடு மார் தட்டிகொண்டால் "வெற்றி பெற்றவர்களெல்லாம் புத்திசாலிகள் கிடையாது" என்ற பாடல் வரிகளை சிலர் நினைவூட்டத்தான் செய்வார்கள். கொஞ்சம் அடக்கி வாசிக்கவும்.

    ReplyDelete
  80. நன்றி காரிகன்,

    காற்றடித்தால் தரையில் உள்ள குப்பையும் கோபுரம் ஏறும்.
    கோபுரத்தில் இருந்தாலும் என்றுமே அதன் மதிப்புக் குப்பைத் தான்.
    ஆனால் மிகப் பெரிய சந்தன மரம் தரையில் சாய்ந்து விடும்.
    தரையில் சாய்ந்தாலும் அது மேன்மையே அடையும்.
    .

    ReplyDelete

  81. காரிகன் said.........
    \\இனிமையாகவும் அழகாகவும் ரசிக்கத்தக்க வகையில் சென்று கொண்டிருந்த தமிழ்த் திரையிசையின் போக்கை தடாலடியாக மாற்றி போதையேறிய தள்ளாட்டமாக மாற்றிய புண்ணியவான் இளையராஜா என்பது என் அசைக்க முடியாத கருத்து.\\

    உண்மைதான் காரிகன் இந்தப் புள்ளியில் தொடங்கிய போதையேறிய தள்ளாட்டம்தான் இன்றைக்குப் பலபேரின் கைகளில் சிக்கி ஒரே காட்டுக்கூச்சலாய் மாறி எங்கெங்கோ பயணித்துக்கொண்டிருக்கிறது. பாட்டு என்பதாகவே கவனத்தில் கொள்ளமுடியவில்லை. கேட்டால் 'இந்தக் காலத்துக்கு ஏற்ற மாதிரியான பாடல்' என்று எதையோ சொல்லிச் சமாளிப்பார்கள். எந்தக் காலத்துக்கு ஏற்றதாக இருந்தாலும் முதலில் அது பாடல் என்பதற்கு ஏற்றதாக இருக்கவேண்டுமா இல்லையா?

    திரு கிருஷ்ணமூர்த்தி தெண்டுல்கர் என்று சொன்னது விஸ்வநாதன் ராமமூர்த்தி போன்றவர்களையே. அவர்களைப் பற்றித்தான் நான் பேசிக்கொண்டிருப்பதைப் 'பினாத்திக்கொண்டிருப்பதாக' அவர் பாணியில் சொல்லியிருக்கிறார். தவிர அவர் கிரிக்கெட் ரசிகர். எனக்கோ கிரிக்கெட் சுத்தமாகப் பிடிக்காது. கிரிக்கெட்டை விமர்சித்து தினமணி தலையங்கப் பக்கத்தில் மட்டும் ஐந்து கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். கிரிக்கெட் பற்றி அவருக்கும் எனக்கும் எப்போதுமே ஒரு துவந்த யுத்தம் உண்டு.

    இந்த விவாதங்கள் எல்லாம் படித்தேன். இதிலிருந்து ஒன்றே ஒன்றுதான் புரிந்தது. இணையத்தில் திடீரென்று ஒரு புதிய மனிதர், சேகர் என்பவர்- சட்டென்று பலபேருக்குத் தெரிந்தவராக ஆகிவிட்டார்.

    வாழ்த்துக்கள் சேகர்!

    ReplyDelete
    Replies
    1. ரிம்போச்சே8 April 2014 at 10:58

      //இந்த விவாதங்கள் எல்லாம் படித்தேன். இதிலிருந்து ஒன்றே ஒன்றுதான் புரிந்தது. இணையத்தில் திடீரென்று ஒரு புதிய மனிதர், சேகர் என்பவர்- சட்டென்று பலபேருக்குத் தெரிந்தவராக ஆகிவிட்டார்.

      வாழ்த்துக்கள் சேகர்!//

      அம்மையப்பனே உலகம்.
      ஞானப்பழம் எனக்கே சொந்தம்.

      Delete
    2. எனக்குத் தேவையில்லை ஞானப்பழம் . தேவையெனில் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

      Delete
  82. இளையராஜாவின்,
    76 இருந்து 90 வரை வெளிவந்த அனைத்து இசைத் தட்டுக்களையும் வாங்கினேன். அதனால் எனக்கு மன வருத்தத்தையும் பொருள் இழப்பையும் தந்தது.

    தரமில்லாத பொருளைத் தயாரிப்பதும் விநியோகம் செய்வதும் தயாரிப்பாளரின் குற்றம்.

    உழைப்பின் மூலம் வந்த பணம் விரையம் ஆவதால் வரும் மனக் கஷ்டம் இழந்தவருக்கு மட்டுமே புரியும்.

    ('பொருள்' எனச் சொல்வது பாடல்கள்)

    தரமற்ற பொருளைத் தயாரித்த அவரை ஏன் குற்றம் சொல்லக் கூடாது?

    ReplyDelete
    Replies
    1. ரிம்போச்சே8 April 2014 at 10:49

      பாடல்களை தராசில் நிறுத்து எடை போட்டு வாங்குவீர்களா ஐயனே?
      எதற்கும் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து பாருங்கள்! இழப்பீடு கிடைத்தாலும் கிடைக்கலாம்.

      பதினான்கு வருடங்கள் தொடர்ந்து வாங்கும்படிக்கு அப்படி என்ன நிர்பந்தமோ?

      Delete
    2. ஒரே நேரத்தில் மொத்தமாக வாங்கியது.
      இசைத் தட்டுக்கள் வேண்டுமா உங்களுக்கு?

      Delete
    3. ரிம்போச்சே12 April 2014 at 05:14

      அடேங்கப்பா! ரிக்கார்டுகளா இல்ல காசெட்டா?
      அப்படி மொத்தமாக உங்களை வாங்க வைத்தது எது?

      Delete
  83. குப்பை உணவு மற்றும் துரித உணவு சாப்பிடும் நபர்களுக்கு நமது தேனும் தினைமாவும் அதன் தரமும் ருசியும் அறியவாப் போகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ரிம்போச்சே8 April 2014 at 10:54

      உண்மைதானுங்கோ.

      இப்ப தான் ரஹ்மான், ஆரிஸ் ஜெயராஜ், அனில் பிராண்டு ஆட்டா மாவு அடச்சே... அனிருத் பிராண்டு இம்போர்ட்டடு BT தேனும், திணை மாவும் ஏகமாக் கிடைக்குதே. வாங்கிப் பயன் பெறுங்கள்.

      Delete
    2. ரிம்போச்சே9 April 2014 at 10:53

      ஏதோ ஒண்ணு குறையுதேன்னு நெனச்சேன். யுவன் சங்கர் ராஜாவையும் சேர்த்துக்கிடுங்க.

      Delete
  84. ஹலோ சேகர்

    குப்பையில் கிடந்தவர்கள்தான் கோபுரம் ஏற முடியும் . ஆக எல்லா இசை அமைப்பாளர்களும் குப்பையாய் இருந்தவர்கள்தான்! மற்றவர்கள் குப்பை என்றால் இளையராஜா குப்பையில் கிடந்த குண்டுமணி . கோபுரம் ஏறி ரொம்ப நாளாச்சு !

    76 முதல் 90 வரை தேனும் திணை மாவும் தின்னுப்புட்டு அதுக்கு முந்தி சாப்பிட்ட பழைய சோற்றையும் இப்ப சாப்பிடுகிற பீட்சாவையும் நல்லா இருக்குது என்று சொல்ல வரீங்களா!?

    ReplyDelete
  85. சேகர்

    தரமற்ற பொருள் வாங்கியதாக குறைப்பட்டு 'கொல்'கிறீர்கள். எங்களுக்கு மற்றவர் பொருள் எல்லாம் தரங்கெட்டதாக தெரிகிறதே! எங்க போய் சொல்ல!? ஆனாலும் நாங்கள் அதையும் ஏற்றுக் கொள்வோம் . உங்களைப் போல் தரங்கெட்டு குற்றம் சொல்ல மாட்டோம் .

    ReplyDelete
  86. charles,

    //போதிக்கும் போது புரியாத விஷயங்கள்
    வாழ்க்கையை பாதிக்கும் போது புரிகிறது//

    இந்த உங்க வசனம் தான் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் பிறகு தேவைப்படும்.

    ReplyDelete
  87. அன்புள்ள திரு.காரிகன், திரு.சேகர், திரு.அமுதவன்,
    நான் தெண்டுல்கர் பற்றி எழுதியது திரு.அநானிமஸ் அவர்களின் எண்ணத்தைப் பிரதிபலிப்பதாக நினைத்துக் கொண்டு! ஆனால் அதை எப்படியெல்லாமோ திசை மாற்றி, திரு.சேகர் சொல்லியிருப்பதுபோல பண்பில்லாத வகையில் எல்லோரையும் (அதாவது, Non இளையராஜா) ரசிகர்களையும் எவ்வளவு கீழிறங்க முடியுமோ அவ்வளவுக்கும் இறங்கி தன்னையே தாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்! இவர்களின் வழக்கமே இதுதானோ? விவாதிக்க வார்த்தை அல்லது subject கிடைக்காவிட்டால் ‘நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள், நான் செல்வதுதான் சரி, உண்மை’ என்று கண்ணையும் காதையும் மூடிக்கொண்டு போய்விடுவார்கள். திரு.சேகரைப் போலவே நானும் பலமுறை வெளியேற எண்ணி இன்னமும் பொறுமை காத்துக்கொண்டிருக்கிறேன். பாவம், இன்னும் அவர்களுக்கு, இன்று கிடைக்கும் 24மணி தமிழ்த்திரையிசை (ஒன்றல்ல, பல) இசை ஒளியும் ஒலியும் சானல்களைப் பார்க்க நேரமில்லை, அனுபவிக்க ஆசையும் இல்லை! யாரால் என்ன செய்ய முடியும்?!

    ReplyDelete
    Replies
    1. ரிம்போச்சே8 April 2014 at 10:44

      அய்யா,

      உங்கள் பார்வையில் அமர்நாத், பட்டோடி , கவாஸ்கர், கபில்தேவ், வெங்சர்க்கார், டெண்டுல்கர், டோணி, கோஹ்லி யாரென்று நீங்களே சொல்லி விடுங்களேன்.

      Delete
  88. திருவாளர் சால்ஸ் சொல்கிறார்:

    ( எங்களுக்கு மற்றவர் பொருள் எல்லாம் தரங்கெட்டதாக தெரிகிறதே! எங்க போய் சொல்ல!? ஆனாலும் நாங்கள் அதையும் ஏற்றுக் கொள்வோம் . உங்களைப் போல் தரங்கெட்டு குற்றம் சொல்ல மாட்டோம் . )

    அதான் சொல்லியாச்சே. அப்பறம் என்ன?

    உங்களுகெல்லாம் "அரச்ச சந்தனம்", ஒன்றே போதும். அந்த "நறுமணமே" காலம் காலத்துக்கும் இருக்கும். அது சரி. உங்கள் வீடுகளில் மற்ற "குப்பை"களை கேட்கவே மாட்டீர்களோ? உங்கள் குழந்தைகளுக்கும் "அதே அரச்ச
    சந்தனம்தானா?" கொஞ்சம் வெளியில வாங்கப்பா.. "புதிய காற்றை" சுவாசிக்க வேண்டாமா?

    ReplyDelete
  89. This comment has been removed by the author.

    ReplyDelete
  90. காரிகன்

    நீங்க பழைய காற்றையே சுவாசித்துக் கொண்டிருக்காதீர்கள் ! நீங்களும் கொஞ்சம் வெளியே வரவேண்டும் .

    ReplyDelete
  91. This comment has been removed by the author.

    ReplyDelete
  92. சால்ஸ்,
    ஒரு சிறிய metaphor உங்களுக்குப் புரியாதது வினோதம்தான். புதிய காற்று என்று நான் சொன்னது பலவிதமான இசைகளையும் கேட்பது- இளையராஜா இசை உட்பட. நான் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  93. திரு.காரிகன் அவர்களுக்கு,

    தினமும் தங்களுடைய பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கும் என்னைச் சிறிது சோர்வடையச் செய்கிறீர்கள் .

    அடுத்தப் பதிவு எப்பொழுது வரும் என்று தெரியப் படுத்தினால் நன்றாக இருக்கும் .
    தங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் சேகர் .

    ReplyDelete
  94. This comment has been removed by the author.

    ReplyDelete
  95. வாழ்வியல் சொல்லும் பாடம்.

    மனிதன் என்பவன் :
    சுய ஒழுக்கம், பிறரிடத்தில் அன்பு , கருணை இவை அனைத்தும் உள்ளவனே மனிதன்.

    ஞானி என்பவர் :
    உலகமே தன்னைத் தூற்றினாலும் அன்பையும் ஞானத்தையும் உலகுக்குக் கொடுப்பவர் தான் ஞானி.

    ReplyDelete
  96. அருமையான பதிவு .. அனைத்தும் உண்மை அருமை ... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  97. அருமையான பதிவு .. அனைத்தும் உண்மை அருமை ... வாழ்த்துக்கள்

    ReplyDelete