Sunday 4 January 2015

இசை விரும்பிகள் XXIII- பாதையெல்லாம் பரவசம்

          விடாது பெய்யும் அடை மழைக் காலத்தில் ஒரு சிறிய இடைவெளியில் திடீரெனத் தோன்றும் சூரிய வெளிச்சம், 
       நீண்ட தூர வெய்யில் பயணத்தின்  நடுவே எதிர்பாராமல் கிடைக்கும்   ஓர் அரச  மரத்தின்  நிழல், 
     க்ரோட்டன்ஸ் செடிகளுக்கு மத்தியில் தலைகாட்டும் உயிரோட்டமான  ஒரு வண்ண மலர்.
  வண்ண வண்ணப் புகைப்படங்களுக்குள்   அசந்தர்ப்பமாக ஒளிந்திருக்கும் ஒரு கருப்பு வெள்ளைப்  புகைப்படம்,   
  சிமெண்ட் கட்டிடங்களுக்கு இடையே  திடீர் பசுமையாகக்  காட்சியளிக்கும் வயல் வெளிகள், 
   மேகங்கள் அடர்ந்த கருமையான இரவு  வானத்தில் எதோ ஒரு மூலையில் ஒளிரும் ஒரே ஒரு நட்சத்திரம், 
   காதுகளைக் குடையும் வாகன இரைச்சலின் நடுவில் சன்னமாக  ஒலிக்கும்  மழைத் துளிகளின்  ஓசை,  
      சோடியம் வேப்பர் மின் விளக்குகளின் நிழல் படாத ஓர்  ஓலை  வீட்டின் வெளியே இரவு நேரத்தில் காற்றில் அசைந்து எரியும் ஒரு விறகு அடுப்பு,   
    கண்களைக் கவரும் கவர்ச்சியான அந்நிய முகச் சாயல் கொண்ட தோற்றங்களுக்கு மத்தியில் மனதை மயக்கும் ஒரு மண் சார்ந்த முகம்....


                                                   

              பாதையெல்லாம் பரவசம்.


   சில வேலைகளைச் செய்வதில் எனக்கு எப்போதுமே  விருப்பமிருந்ததில்லை. அதில் ஒன்றுதான் இந்த காய்கறிக் கடைகளுக்குச் செல்வது. வெண்டைக்காய், முருங்கைக்காய், பூசணிக்காய், தக்காளி  போன்ற சமாச்சாரங்களை விலை விசாரித்து வாங்குவது ஒரு ஆயாசமான வேலை. Frankly speaking, I am very selective.  எனவே பொதுவாக இதை நான் முடிந்தவரை தவிர்க்கவே பார்ப்பேன். ஆனால் சிறு வயதில் பல சமயங்களில் இந்த விருப்பமில்லாதச்  செயலைச் செய்திருக்கிறேன். தயங்கும் சமயங்களில் தப்பித்துக் கொண்ட என் அண்ணன் சொல்வான்: "டேய் ரொம்ப ஈஸிடா. மார்கெட்டுக்கு  நெறைய பொண்ணுங்க  வருவாங்க. ஒரு அழகான  பொண்ணு பின்னாடி போய் நின்னுக்க. அவ எத வாங்கினாலும் உடனே "எனக்கும்" அப்படீன்னு பின்னாடியிருந்து கத்து. அப்புடியே  அவ வாங்கறதையெல்லாம் வாங்கிட்டு வந்துரு." இந்த "எனக்கும்" என்பது கொஞ்சம் உச்சக் குரலில் சொல்லவேண்டியது. அதாவது அப்போது நகைச்சுவை நாயகனாக இருந்த சுருளிராஜன் பாணியில். அவனுக்கு நக்கல் கொஞ்சம் ஜாஸ்தி. எனக்கும் அவன் சொன்னபடி செய்ய ஆசைதான். ஆனால் அந்த விருப்பத்தை பூர்த்தி செய்யும் விபரீதத்தில் என்றைக்கும் இறங்கியதில்லை. இருந்தும் நான் காய்கறி கடைக்குச் சென்றதில் ஒரு காரணம் இருக்கவே செய்தது. அது என்னவென்றால் என் பள்ளித் தோழியின் வீடு அங்கேதான் இருந்தது. தேவையில்லாத வாக்கியமாக இருந்தாலும் சொல்லவேண்டியதைப் போல உணர்வதால் சொல்கிறேன். மிக அழகானவள். வகுப்பில்  என்னைத் தேடி வந்து அவள் பேசும் சயமங்களில் மற்ற சிறுவர்கள் என்னை பொறாமையுடன் பார்க்கும் பார்வைகளில்  வீசும் அனல் என்னை மிகவும் பயப்படுத்தும். இருந்தும் அதுபோன்ற சந்தர்ப்பங்களை நான் ரசிக்கத்   தவறியதில்லை. அந்த சமயங்களில் ரெட் புல் குடித்ததைப் போன்றதொரு  உற்சாகம் கரைபுரண்டோடும். அவளைப் பார்த்து  அவளொரு நவரச நாடகம் என்று பாட்டு கூட பாடியிருப்பேன் ஆனால் எனக்கு அப்போது அது தோன்றவில்லை. ஒவ்வொரு முறை மார்கெட்டுக்கு  செல்லும்போதும் அவள் வீட்டிலிருந்து எங்கிருந்தோ என்னைப் பார்ப்பது போல எதோ ஒரு கற்பனை சிறகடிப்பது ஒரு சுகம். ஆனால்  ஒரு முறை கூட அந்தக் கற்பனை உண்மையானதில்லை என்பது ஒரு சுரீர்.

     அடுத்த பத்தியைப் படிப்பது உங்கள் விருப்பம். ஆனால் அது இந்தப் பதிவுக்கு அவசியமில்லாதது.

  ....பல வருடங்கள் கழித்து (என் சகோதரியும் அவள் சகோதரியும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள்.) சில அரிய தகவல்களை என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. அதில் ஒன்றுதான் அந்தப் பெண் என்னைப் பற்றி விசாரித்தாள் என்பது. "அவளா? அடிக்கடி என்ட்ட உன்னப் பத்தி  கேப்பாளே?" என்று ஒருமுறை என் அக்கா என்னிடம் கூறியதும் அடிப்பாவி  இப்ப வந்து இதச் சொல்றியே  என்று மனதில் கறுவிக்கொண்டே "இப்ப எங்க இருக்கா?" என்றால் பதில் வந்தது: "பெங்களூர்ல இருக்கா, கல்யாணமாயி புருஷன்கூட".  மனது உடைந்ததா இல்லையா என்று ஞாபகமில்லை. ஆனால்   எல்லா துயர சூழலுக்கும் பொருத்தமான இந்தப் பாடல் மட்டும் நினைவுக்கு வந்தது.  நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...




      இப்படி நான் வெறுத்த ஒரு காரியத்தை செய்தபோது  (மார்கெட் செல்வது) எனக்கு நிகழ்ந்தததைப் பற்றியே இப்போது குறிப்பிட இருக்கிறேன். மற்றபடி இது என் சிறு வயது infatuation, crush  பற்றியதல்ல.    ஒருமுறை காய்கறிக் கடைக்குச் சென்று வாங்கவேண்டியதை  வாங்கிவிட்டு வீட்டிற்கு வந்தபோது  அடுப்பில் கொதிக்கவேண்டியதெல்லாம்  என் அம்மாவின் முகத்தில் வெடிப்பதைக் கண்டேன்.  என்னை உக்கிரமாகப் பார்த்து என் அம்மா, "பத்து எட்டு வச்சா  கட வந்துரும். இங்கருக்கிற கடையில கால் கிலோ வெங்காயம் வாங்கிட்டு வரதுக்கு இவ்வளவு நேரமா? அப்படி என்னதான் கனவோ? போற வழியில என்னத்ததான் கண்டியோ?" என்று 45 டிகிரி செல்சியஸில் கத்தியது என் நினைவிலிருக்கிறது. உண்மைதான். ஐந்து  நிமிட வேலைதான் அது. என்னிடம் அகப்பட்டதல்லவா? பதினைந்து  நிமிடம் ஆனது. அதற்குக் காரணம் நான் எதையும் காணவில்லை- மாறாகக் கேட்டேன்.

   நடந்தது இதுதான். கடைக்குப் போகும்  வழியில் ஒரு மஞ்சள் வண்ணம் பூசிய வீட்டிலிருந்த வானொலியிலிருந்து ஒரு வசியப்படுத்தும் கானம் கசிந்துகொண்டிருந்தது. அது என்னுடைய மனதை கொள்ளை கொண்ட பாடல். வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா என்று எஸ் பி பி துயரமாகத் துவங்க நான் அதைக் கேட்ட அந்தக்  கணத்திலேயே என் வேலையைத் தவற விட்டுவிட்டு    மிகுந்த குதூகலத்துடன்  வழியிலிருந்த   ஒரு வேப்ப  மரத்தினருகே நின்றுவிட்டேன். ஒன் டூ த்ரீ போர் என்ற சம்பிரதாயமான கணக்கைத் தாண்டியதும் டடாங் டிங் என்று இசை வெடித்துப் புறப்பட்ட  எனக்குள் பட்டென்று  ஆயிரம் வண்ணங்கள் சிதறின. அதிகம் ஆளரவமற்ற அந்தக்  காலை வேளையில் நான் எதோ பாத்திரங்களுக்கு வெள்ளிப் பூச்சு பூசுபவனைப் போன்ற தோரணையில் நின்றுகொண்டு பாடலை ரசித்துக்கொண்டிருக்க சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர்களில் சிலர்  என்னை அந்த திருப்பம் வரை திரும்பிப் பார்த்தபடியே சென்றார்கள். நானோ என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு என்று எதிரியாகிவிட்ட தன் காதலியை எஸ் பி பி குசலம் விசாரித்து, அந்தக்  காதல் தோல்வியிலும்  ஒரு துள்ளல் ஆட்டத்திற்ககான பாடலைப்  பாடி முடித்ததும்தான் நகர்ந்தேன். எதோ மட்டன் பிரியாணியை கோழிக் குருமாவுடன் சேர்த்து அடித்த   திருப்தியுடன் அதன் பின் கடைக்குச் சென்று எனக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக(!)  முடித்துவிட்டு வெற்றியுடன்  வீடு திரும்பியபோது எனக்குக் கிடைத்ததுதான்  மேலே உள்ள  என் அம்மாவின் பாராட்டு. அதற்குப் பிறகு என்னை ஏதாவது கடைக்கு அனுப்பவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் என் அம்மாவிடமிருந்து வரும் வார்த்தைகள் இவைதான்: "அய்யோ இவனா? நாலு எட்டு வைக்க நாப்பது நிமிஷம் ஆக்குவானே?".

      வானொலிகள், சாலையோர தேநீர்க் கடைகள், கல்யாண மண்டபங்கள் திரையரங்குகள் போன்ற இடங்களில் மட்டுமே பாடல்கள் ஒலித்த காலத்தைச் சேர்ந்த பலருக்கும் இந்தப் பாதையோர பாடல்  அனுபவங்கள்  புதிதல்ல. இன்னொரு  முறை இதேபோல காலை உணவு வாங்க ஹோட்டல் ஒன்றிற்க்கு   செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் மனதில் மண்டிய வெறுப்புடன் நான் நடந்து சென்றுகொண்டிருந்தபோது வழியிலிருந்த தேநீர்க் கடையிலிருந்து  ஒலித்த ஒரு பாடல் என்னை அப்படியே நிறுத்திவிட்டது. இளமை என்னும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு என ஒரு ஏகாந்தம் என்னைத் தடவ,  மழைக்கு முன் வீசும் ஒரு குளிர்ந்த காற்றின் தொடுகை போன்ற  பாடலின் அந்தச் சுகமே வீடு வரும் வரை என்னைத் தாலாட்டியது.  ஆண் -பெண் உறவை குறியீடாகச் சொல்லிய எண்ணிலடங்கா தமிழ்ப் பாடல்கள் வரிசையில் வந்த மற்றொரு பாடல். என்றாலும்  அப்படி சட்டென்று பத்தோடு பதினொன்றாக வைத்துவிடமுடியாத ஒரு மந்திர கானம்.  இது  ஒரு மோக மெட்டு.  சற்று காமம் தோய்ந்த  காதலோடு  பொருத்தமான பாவணையில்  எஸ் பி பி பாடுவதும், மழை நேரத்துச் சாரல் தீற்றுகள் முகத்தைத் தீண்டுவது போன்ற ஆர்ப்பரிப்பில்லாத சன்னமான இசையும் ..நீங்கள் வேண்டாம் என்றாலும் மனதுக்குள் புகுந்துகொள்ளும்  செல்லப் பாடல்.  ஒரு தென்றல் துளி. எனது பால்ய தினங்களில் இளையராஜா இசையின் முகமாக இருந்த பாடல் இது.

         இந்தப் பாடல் மூன்று சரணங்கள் கொண்டது.  எனவே இந்த முறை நான் வீடு திரும்ப வழக்கத்தை விட சற்று அதிக  நேரம் பிடித்தது. வந்ததும்  என் அம்மா என்னிடம் ஒரு இகழ்ச்சியான புன்னகையுடன் கேட்டது இது: "ஆமா தெரியாமத்தான் கேக்கிறேன், நீ கடையில இருந்து வாங்கிட்டு வரியா இல்ல செஞ்சு எடுத்துட்டு வரியா?". நீண்ட தூரம் நடந்து வந்த வெறுப்பு மேலும் இந்த நக்கல் இரண்டும் என்னை மேலும் சூடாக்கியது.  "அதான் வந்தாச்சே" என்றேன் எரிச்சலுடன். என் அம்மா ஒரு கேள்வியோடு தனது குறுக்கு விசாரணையை முடித்துக்கொள்ளும் ஆசாமி கிடையாது. "அது தெரியுது நல்லா. ஏன் இவ்வளவு லேட்டு?" என்று அடுத்த கேள்வி பாய, சிறுவர்களுக்கு வரும் இயல்பான கோபத்தோடு '" பாட்டு கேட்டுட்டு வந்தேன். வர வழியிலே. ஒரு டீ  கடையிலே. போதுமா?" என்றேன் விறைப்பாக.  என் அம்மாவின் முகத்தில் தோன்றியது  கோபமா இல்லை அதிர்ச்சியா என்று இன்றுவரை எனக்குத் தெரியவில்லை.

   இதே போல பின்னொரு நாளில் சாலையோரத்தில் (என்று நான் நினைத்திருந்தேன்) நின்றபடி மீன்கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் என்ற பாடலை ரசித்துக் கொண்டிருந்த போது  கிரீச்சிட்டு என்னருகே நின்ற ஒரு பைக் "என்ன வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா?" என்று கடுமையான குரலில் விசாரித்தது.  கூட  வந்திருந்த என் நண்பன் என்னிடம் "இன்னும் கொஞ்சம் முன்னாடி நின்னுருந்தீன்னா நீயே ஊர்வலமா போயிருக்கலாம்"  என்று சொல்லி என்னை இன்னும் கதிகலங்கடித்தான்.
                      

   இது ஒரு புறமிருக்க பின்னாளில் ஆங்கிலக்  கவிதை வகுப்பொன்றில் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தின்  The Solitary Reaper கவிதையைப் படித்த போது சரிதான் அப்பேற்பட்ட வேர்ட்ஸ்வொர்த்தே  நம்ம கட்சிதான்  போல என்று ஒரு ஆனந்த நிம்மதி ஏற்பட்டது.  கொஞ்சம் மகிழ்ச்சியாக ஏன்  பெருமையாகக் கூட இருந்தது. ஏனென்றால் இந்தக் கவிதையில் அவர் சொல்லியிருப்பது அவருடைய சுய அனுபவம் சார்ந்தது. இதைப் படித்த பலருக்கும் இது  ஞாபகமிருக்கலாம். கவிதை இப்படிப் போகும். ஒருமுறை வேர்ட்ஸ்வொர்த் ஆங்கில-ஸ்காட்டிஷ் எல்லையில் ஒரு ஸ்காட்டிஷ் பண்ணை யுவதி பாடும் ஒரு துயர இசையைக் கேட்டு அப்படியே உறைந்துபோய் நின்றுவிடுகிறார். அந்தப் பெண்ணின் குரல் அவருக்குள் ஆயிரம் சிறகுகளை உருவாக்குகிறது. பாடலின் சோகமோ விதவிதமான லயிப்பான எண்ணங்களையும், தூரமான ஒப்பீடுகளையும் அவர் மனதில் விதைக்கிறது. தவிர  பாடலின் போதையான சுகம் அவரை வேறு எதைப்  பற்றியும் சிந்திக்க விடாது அவரை ஒரு வசிய நிலைக்குக் கொண்டுசென்று விட வேர்ட்ஸ்வொர்த் என்ற மிகப் பெரிய அந்தக் கவிஞன் அந்த மொழி புரியாத பாடலின் துயர இசையில் தன்னையே கரைத்துக்கொண்டு காணாமல் போகிறான்.  அவரது  கற்பனை அரேபிய பாலைவனம், ஹிப்ரீட்ஸ் தீவுகள் என்று நீண்ட தூரங்கள்  பறந்து செல்ல   பெயரில்லாத  அந்த ஸ்காட்டிஷ் வனிதை   தனது கீதத்தை முடித்துக்கொண்டு  தன் பண்ணைப் பரிவாரங்களோடு  அந்த இடத்தைவிட்டு அகன்று சென்ற பின்னர்தான்  மீண்டும் வேர்ட்ஸ்வொர்த் தன் இயல்பு நிலைக்கு வருகிறார்.  யோசித்துப் பார்த்தால் இது ஒரு வெகு சாதாரண நிகழ்வு. ஆனால் அதை அவர் கவிதையாக வடித்த விதம் ஒரு அசாதாரண வாசிப்பின் பரிமாணமாக விரிகிறது.

O, listen! for the Vale profound 
Is overflowing with the sound   மற்றும்
The music in my heart I bore 
Long after it was heard no more

போன்ற திகைக்க வைக்கும் மரணிக்காத மின்சார வரிகள் இதில்தான் இருக்கின்றன. இதைப் படித்தபோது எனக்குத் தோன்றியது இதுதான்.  இங்கிலாந்தோ இந்தியாவோ உயர்ந்த கவிதையோ அல்லது சாதாரண சொற்களோ புரிகிறதோ இல்லையோ இசைதான் அதைக் கேட்பவனை எப்படிக் கட்டிப்போட்டுவிடுகிறது! இசையின் உன்னதத்தை வேர்ட்ஸ்வொர்த்தின் எழுத்தில் படித்த எனக்கு அதன் உண்மை பல சமயங்களில் புரிந்தே இருந்தது. பிடித்த பாடலைக் கேட்டுக்கொண்டு நடந்து செல்லும் அந்தப் பரவசமான பாதையோர பயணங்கள் விலை மதிப்பில்லாதவை. அதற்காக எத்தனை தொலைவு வேண்டுமானாலும் நடக்கலாம்.

      ஆனால் இன்றைக்கு இந்தச்  சுகங்கள் செல்லாக் காசாகிவிட்டன.  ஐ பாட், எம்பி த்ரீ  போன்ற இசைச் சாதனங்கள்  இதே அனுபவத் தேடலை   இன்று மிக மிக எளிதாக்கிவிட்டன.  விரல் நுனியில் சாத்தியப்படும்   இந்த வசதி   இசை என்னும் அந்த   ஆழமான அனுபவத்தை நீர்த்துப் போகச் செய்ய உதவும் ஆன்மாவைத் தொலைத்த   கருவிகளாக  எனக்குத் தோற்றமளிக்கின்றன.   இன்றைக்கு டிஜிட்டல் துல்லியத்தில் இசையை ரசிக்க முடிந்தாலும் பழைய ரேடியோ நாட்களின் அந்த கரகரப்பான தெளிவில்லாத இசை அனுபவம் எனக்கு ஊட்டிய எல்லையில்லாத உற்சாகம் மற்றும் திகைப்பூட்டும் மகிழ்ச்சிக்கு இவை இணையாகவில்லை என்பது ஒரு அதிர்ச்சியான முரண்.

      இளமை ஊஞ்சலாடுகிறது  படத்தின் மிகப் புகழ்பெற்ற காதல் கீதமான ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது  (நிலவில் கிழவிதான் வடை சுட்டுக்கொண்டிருப்பாள். அவளுக்காகவா  இந்தப் பாட்டு? என்று என் சகோதரிகள் இந்தப் பாடலை கிண்டல் செய்வதுண்டு.) என்ற பாடலை விட என் மனதில்  தங்கிவிட்ட என்னடி மீனாட்சி  ஒலிக்கத் துவங்கினால் என்னை ஒரு ஆனந்தப் பூங்காற்று சூழ்ந்துகொள்ளும்.  அதற்கு ஒரே காரணம்தான்.  அது இளையராஜா. வானொலியில் பாடல்கள் ஒலிபரப்பப்படும் போது படத்தின் பெயர் பாடகர்கள் இயற்றியவர் என்ற வரிசையைத் தாண்டி இசை இளையராஜா என்று காதில் விழுந்துவிட்டால் என் கவனம் ஒரே வினாடியில் ஒரு லேசர் ஒளிக்கற்றையைப் போல அந்தப் பாடலின் மீது குவிந்துவிடும். அன்னக்கிளியின் மச்சானப் பாத்தீங்களா எனக்குக் கொடுத்திருந்த உற்சாக போதை இளையராஜாவின் மீது எனக்கிருந்த ஆர்வத்தை அவருடைய அடுத்தடுத்த பாடல்கள்  மூலம்  அதிக உயரங்களுக்கு எடுத்துச் சென்றபடி இருந்தது. இளையராஜாவைப் பற்றி பலவித விமர்சனங்களும் குற்றச் சாட்டுகளும் வீட்டில் அதிகம் எழுந்தாலும் என் இளையராஜா விருப்பம் அடர்த்தியாகிக் கொண்டேதான் போனது. நானும் என் அண்ணனும் இந்தப் பக்கம்  மற்றவர்கள் அந்தப் பக்கம். முதல் முறையாக பஸ் ஒன்றில் பயணம் செய்யும் ஆனந்த அனுபவமாக அவர் இசை என்னைத் தீண்டியது. இருந்தும் நான் வெறும் இளையராஜா இசையை மட்டும் கேட்டு வளர்ந்தவனில்லை.

     இளையராஜாவின் இசைக்கும்  எனக்குமான இசைத் தொடர்புகள்  ஒரு முதல் நண்பனின் அன்யோன்யத்தைப்  போன்றது.  எனது காலகட்டத்தைச் சேர்ந்த பலருக்கும் இதே போன்றதொரு உணர்வுப் பிணைப்பு இருப்பதை நானறிவேன். ஒருவிதத்தில் இளையராஜா அப்போதைய  மற்ற சில அம்சங்களைப் போலவே என் பால்ய தினங்களின் குறியீடாக எனக்குத் தோற்றமளிக்கிறார். அன்னக்கிளி படத்தின் போதே எனக்கு இளையராஜா என்ற  பெயர் ஒரு இனிப்புச் சுவையாக நெஞ்சத்தில் தங்கி  விட்டது.  நான் அப்போது அறிந்திருந்த   மற்ற இசை அமைப்பாளர்களின் பெயர்கள்   மிகப் பெரிய அளவில் எம் எஸ் விஸ்வநாதன், ஷங்கர்-கணேஷ், கொஞ்சமாக கே வி மகாதேவன், அதைவிட மெலிதாக எ எம்  ராஜா,  டி ஆர் பாப்பா. (இவரது பெயரை வானொலில் கேட்டாலே என் மனதில் ஒரு பாப்பாவின் முகம்தான் நினைவுக்கு வரும்.) மேற்குறிப்பிடப்பட்ட அனைவருமே என் காலத்தைச் சார்ந்திராதவர்கள். எனக்கு முன்னிருந்த ஒரு கடந்த கால இசைப் பாரம்பரியத்தைப் பாதுகாத்து   என் காலத்திற்கு நகர்த்தி வந்தவர்கள்.  எனது பால்யப் பள்ளி நாட்களில் இவர்களது இசையே என்னைச் சூழ்ந்திருந்தது. இசையின் சூட்சுமங்கள் புரிபடாத, வாத்தியங்களின் பெயர்கள் கூட தெரிந்திராத வெறும் ரசனை மட்டுமே ஒரு உந்து சக்தியாக இருந்த  பருவத்தில் நான் கேட்ட அவர்களது   பல கானங்கள் என்னை சிறை பிடித்தன. இருந்தும் அவர்களின் பாடல்களில் இருக்கும் வழக்கமான  தாளங்களும் பாரம்பரிய  இசைக் கோர்வையும் திருப்பங்களில்லாத ஒரு நீண்ட பாதையில் பயணம் செய்யும் உணர்வை எனக்குக் கொடுத்தன.

     இந்தச் சூழலில்தான்  ஒரு அதிசய வானவில் போன்று பாரம்பரியத்தின் வேர்களும் நவீனத்தின் இலைகளும் ஒரு சேரத் தோன்றும் ஒரு அற்புதச் செடியாக இளையராஜாவின் இசை எனக்குப் பரிச்சயமானது. வயல்வெளிகளில் ஓடும் ட்ராக்டர் போன்றதொரு முரண்படாத நவீனமாகவும், ஒரு தேவையான மாற்றமாகவும் அவரது இசை என்னைத் தொட்டது. வானத்தில் பறக்கும் விமானம் போலன்றி  கிராமத்துச் சாலைகளில்  ஓடும் மாட்டுவண்டியாகவும்,  சமயத்தில் அதே கிராமத்து  வயல் வெளிகளை முத்தமிட்டுச் செல்லும் ரயில்வண்டி போலவும் அவரது இசை இரட்டை  முகம்  கொண்டிருந்தது. உறவுகள் தொடர்கதை, நானே நானா யாரோதானா  போன்ற மேற்கத்திய வாசனைத் திரவியங்களும் உன்ன நம்பி நெத்தியிலே  போன்ற மண்வாசனைகளும் அவரது இசையின் வினோத சுவைகள். உதாரணத்திற்கு அன்னக்கிளி ஒன்ன தேடுதே பாடலில் வரும் அந்தத் துயரமான குயிலின் குக்கூ ஒரே நொடியில் அந்தப் பாடலை வேறு நிலைக்கு  எடுத்துச் சென்றுவிடுகிறது.  அந்த ஓசையை  நவீனமென்பதா இல்லை நிஜத்தைப் பிரதியெடுக்கும் ஒரு புதிய பாணி  என்பதா?  சுத்தச் சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் பாடலின் இயல்பான சமையலறைச்  சத்தங்கள் அப்போது  பலருக்கு வியப்பைக்  கொடுத்தன. அதைப் பற்றிப் பேசாதவர்கள் அன்றைக்கு வெகு குறைவே. பாடலின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம். அதுபோன்ற   சாதாரண எளிமையான ஓசைகள் இளையராஜாவின் இசையை  மிக வித்தியாசமாக இனம் காட்டின. தவிர அவரது பாடல்களில் ஒரு போதைச் சுவடாக வலம் வந்த  தாளம் கேட்பவரை சுண்டியிழுத்தது. அதுவரை கேட்காத மெட்டுக்கள் வயல்வெளி கீதங்கள் என அவர் இசை சுழன்றடித்தது. ஆனால் இதையெல்லாம் மீறி என் காலத்து இசைஞன் என்ற எனது சுயத்தை அடையாளப்படுத்தும் பெருமை எனக்கு இளையராஜாவின் இசை மீது இருந்தது.

      பாரம்பரியத்தை ஒட்டியே   ஓடிய இளையராஜாவின் இசை நதி துவக்கத்தில் சந்தித்தத்  தடங்கல்கள் அதிகம். அவர் இசை மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் மிகக் கடுமையானவை. இன்று அவரது ரசிகர்கள் ரஹ்மானின் மீது வைக்கும் அதே மாதிரியான குற்றச்சாட்டுகள் இளையராஜாவின் மீது அன்றைக்கு சுமத்தப்பட்டன. வார்த்தைகளை மீறிய இசை, வெறும் வயல்வெளிப்  பாடல்கள், இசையின் தூய்மையை பாழ் செய்த பறையோசை, மலிவான இசையமைப்பு  என வகைவகையான விமர்சனங்கள் எழுந்தன. மேலும் அவர் குறைந்த வாத்தியங்களைக் கொண்டு  இசை அமைத்தது பற்றியும் கேலிப் பேச்சு எழுந்தது. (ஆனால் உண்மையில் அது பாராட்டப்படவேண்டிய அம்சம் என்பது அப்போதே எனக்குத் தெரிந்திருந்தது.) எம் எஸ் விஸ்வநாதன் எங்கே நிம்மதி பாடலில் பயன்படுத்தியது  நூறு வயலின்கள் (ஒருவேளை எண்ணிக்கை தவறாக இருக்கலாம்.)  என்ற தகவலை இந்த ஒப்பீட்டில்தான் அறிந்தேன். ஆனால் அது பற்றி பெரிதாக எண்ணிக்கொள்ளவில்லை. அவரெல்லாம் பழைய ஆளுப்பா என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது.

   அன்னக்கிளிக்குப் பிறகு வந்த படங்களில் இளையராஜாவின் இசை சிறப்பாகப் பேசப்படவில்லை. பாலூட்டி வளர்த்த கிளி, உறவாடும் நெஞ்சம் என்ற படங்கள் வந்த சுவடே தெரியாமல் மறைந்துபோயின. மச்சானப் பார்த்தவரை இதில் பார்க்க முடியவில்லை போன்ற தொனியில் பிரபல வாரப் பத்திரிகைகள் இவரது இசையை கிண்டலடித்தன. இருந்தும் அவரது பாடல்கள் - நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தையில்லை, ஒரு நாள் உன்னோடு ஒருநாள் உறவினில் ஆட -அன்றைய காலத்தின் கண்ணாடியாக இன்று பரிணாமம்  அடைந்திருக்கின்றன. சொல்லத் தேவையில்லாமல் அவை இனிமையான இசைத் துளிகள்.  எனது அபிமானத்திற்குரிய பாடல்களாக அவை இன்னமும் இருக்கின்றன. மேற்கத்திய இசை மரபில் கவுண்டர் பாயிண்ட் என்று சொல்லப்படும் மெட்டுக்களின் சங்கமத்தை இளையராஜா முதல் முறையாக நான் பேச வந்தேன் பாடலின் ஹம்மிங்கில் செய்திருப்பார்.   பாலூட்டி வளர்த்த கிளி படத்தில்   அடி ஆத்திரத்தில் சாத்திரத்தை மறந்தாயோ?  என்ற  அதிகம் அறியப்படாத   பாடலொன்று   உண்டு. கேட்க நான்றாகவே இருக்கும். கொலகொலயாம்  முந்திரிக்கா (சரியாகத்தான் சொல்கிறேனா?)  என்ற பாடல்  வெளியே தெரிந்தது. சற்று கேட்கலாம்.  உறவாடும் நெஞ்சம் படத்தின் நெனச்சதெல்லாம் நடக்கபோற நேரத்தில வாடி   என் காதல் ராணி நான் தானே தேனீ என்ற பாடல் மிக ரம்மியமானது. கேட்டால்  இளையராஜா இப்படியெல்லாம் கூட இசையமைப்பு செய்தாரா என்ற கேள்வி தோன்றக்கூடிய அளவுக்கு நம்மை துவம்சம் செய்யாத இசைக் கோர்ப்பு.  அவரது   வழக்கமான அதிரடி தாளமில்லாத அதிகம் ஆர்ப்பாட்டமில்லாத மிருதுவான நாட்டுப்புற இசை. இந்தப் பாணியை அவர் எதற்காக மாற்றிக்கொண்டார் என்பது ஒரு விடையில்லாக்  கேள்வி.

    மாலை இளம் மனதில் ஆசைதனை தூவியது இளம் காலை-  இந்தப்  பாடல் அவளொரு பச்சைக் குழந்தை என்ற ஒரு காணாமல் போன படத்தில் இருக்கிறது. மற்றொரு அற்புதம். வானொலியில் இந்தப் பாடல் வந்த புதிதில் ஒன்றிரண்டு முறை கேட்டது. இளையராஜாவின் இசையில் வி குமார் சாயல் ஏகத்து இந்தப் பாடலில் தென்படும். மிக நேர்த்தியான நல்லிசை. இதே போல மற்றொரு காவிய கீதம் 77இல் வந்த சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு என்ற படத்தில் உண்டு.  ஒரு காதல் தேவதை இரு கண்கள் பூமழை என்று துவங்கும் பாடல். இசையின் போக்கு எங்கும் தறிகெட்டு ஓடாமல் நிதானமாக நடை பயிலும் ஒரு இளம்பெண் போல கேட்பவரை வசீகரிக்கும்.

   பத்ரகாளி படத்தில் இளையராஜாவின் அதிரடி கேட்டேளா அங்கே அத பாத்தேளா இங்கே  என்று வெடித்தது. சலசலக்கும் அமைதியான நதியலைகளைப் போன்ற பாடல்களைப் பாடிய சுசீலா இந்தப் பாடலைப் பாடியது குறித்து (வாங்கோன்னா அட வாங்கோன்னா) அப்போது பலர் ஆச்சரியப்பட்டார்கள். பெரும் அமளியை கிளைப்பிய இந்தப் பாடல்  ஒரு சமூகத்துக்கு பெரும் சங்கடத்தைக்  கொடுத்தது. அந்தப் பாடலையே  தடை செய்யவேண்டும் என்று கோரிக்கை எழுந்ததாக நினைவு. (சில வருடம் கழித்து வந்த ஓரம்போ ஓரம்போ ருக்குமணி  வண்டி வருது பாடல் தமிழ் வானொலிகளில் தடை செய்யப்பட்டது. அப்படித்   தடை செய்யப்பட்ட முதல் தமிழ்ப்  பாடல் அது என்று நினைக்கிறேன்.) இதே படத்திலுள்ள கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை என்றொரு மதுர கானம் ஒரு ஏகாந்த உணர்வுக்கு ஏற்ற உணவு. பொதுவாக காலையில் பள்ளிக்குச் செல்ல வேண்டிய அவசரகதியில் இந்தப் பாடல் திடுமென வானொலியில் ஒலிபரப்பாகும். இதைக் கேட்டாலே அந்த வெறுப்பூட்டும் பள்ளிச் சீருடையும் அந்த விருப்பமில்லாத ஓட்டமும்தான் நினைவுக்கு வரும்.  அதை சற்று ஒதுக்கிவிட்டு இந்தப் பாடலை ரசிக்க நான் பிற்பாடு கற்றுக்கொண்டேன். இளையராஜாவின் தரமான நல்லிசையின்  முத்திரைப் பாடல். ஒரு உண்மையான இசைத் தேடலுக்குப் பிறகு காலம் கடந்து நான் ரசித்த பல பாடல்களில் இதுவும் ஒன்று.  தனது தாய் பாடிய தாலாட்டுப் பாடல்களின் மெட்டில் இளையராஜா தன் ஆரம்பகால பாடல்கள் பலவற்றை அமைத்திருப்பதாக ஒரு தகவல் இருக்கிறது. இந்தப் பாடல் கூட ஒரு தாலாட்டுப்  பாடல் போன்றே துயில் கொள்ளச் செய்யும் கீதம்.

    ஒரு பாடலை அணுகுவது ஒருவரின்  ரசனையோடு அதிக தொடர்புடையது. கவிதை, குரல், இசை போன்ற அடிப்படையான இசைக் கோடுகளை இணைப்பது தாளம் என்பது என் எண்ணம். பாடல்களின் வசீகரமான தாளம் என்னை அதிகம் கவரக்கூடியது. காரணம் நான் எனது சிறு வயதில் ஒரு ட்ரம்மராக என்னையே கற்பனை செய்துகொண்டதன் விளைவாக இருக்கலாம்.  இளையராஜாவின் தாளம் ஒரு தனி ரகம். அது ஒரு புதுவிதம். கதவுகளையெல்லாம் சாத்தியபின் எதிர்பாராமல் வரும் ஒரு  திடீர் விருந்தாளியைப்  போன்று சமயங்களில் ஆச்சர்யத்தையும்  சமயங்களில் மிரட்சியையும்  கொடுக்கக்கூடியது. சம்பிரதாயமான தாளங்களில் நனைந்து கொண்டிருந்த  என் மனது இளையராஜாவின் நவீன தாளக்கட்டில் அருவியில் குளிக்கும் சிலிர்ப்பை உணர்ந்தது. உதாரணமாக கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்றப் பாடல்களைப் பாருங்கள். அவற்றின் தாளங்களே அவைகளின் தனி முத்திரையாக இருப்பதை உணரலாம்.

மச்சானைப் பாத்தீங்களா- அன்னக்கிளி.
நினைவோ ஒரு பறவை- சிகப்பு ரோஜாக்கள்.
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு- இளமை ஊஞ்சலாடுகிறது.
வாழ்வே மாயமா- காயத்ரி.
தோட்டம் கொண்ட ராசாவே சூடிக்கொண்ட ராசாத்தி- பகலில் ஒரு இரவு.
உச்சி வகுடெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி- ரோசாப்பு ரவிக்கைக்காரி.
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் -முள்ளும் மலரும்.
ஆயிரம் மலர்களே மலருங்கள்- நிறம் மாறாத பூக்கள்.
மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் - கரும்பு வில்.
சின்னப்புறா ஒன்று எண்ணக் கனாவினில்- அன்பே சங்கீதா.
ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி  - தர்ம யுத்தம்.
ஆசைய காத்துல தூது விட்டு -ஜானி.

         இன்னும் பல பாடல்கள் இந்த வகையில் இருக்கின்றன. வசியம் செய்யும் இந்த மந்திரத் தாளம் இளையராஜாவின் பாடல்களுக்கு புதிய வண்ணம் பூசியது. ஒப்பீட்டளவில் அப்போது இசைக்கப்பட்டுக்கொண்டிருந்த மரபு நீட்சியான இசைக்கும் இளையராஜாவின் இசைக்கும் அதிக ஒற்றுமைகள் இருந்தாலும், சில இடங்களில் அவரது இசை நாம் பயணம் செய்யும் வாகனம் திடீரென குலுங்குவதைப் போன்று நம்மை உலுக்கி விட்டுச் செல்லும். இடையிசையிலோ அல்லது தாளக்கட்டிலோ ஒரு திடீர் சுவை ஒளிந்திருக்கும்.  திடுமென அது வெளிப்பட்டு  ஒரு ஆனந்த அதிர்ச்சியை அளித்துவிட்டு அடடா இது என்ன என்று திரும்பிப் பார்ப்பதற்குள்  நம்மை கடந்து போய்விடும்.

   இளையராஜாவின் நாட்டுப்புற இசையே அவரது முதன்மையான விலாசமாக இன்றுவரை நிலைத்திருக்கிறது. அவரது இசை பாணி நம்  நாட்டுப்புற மற்றும் மேற்கத்திய செவ்வியல் கலப்பு என்று ஒரு விதமாக அடையாளப்படுத்தப்படுகிறது. தனது முதல் படதிலேயே  அவர் இதன் வித்துக்களை நட்டாலும் அதன் பின் வந்த படங்களில் அவ்வகையான மனதை பிசையும் நாட்டார் பாடல்களை அவர் கொடுத்ததாகத்  தெரியவில்லை. பதினாறு வயதினிலே படத்தில்தான் அவர்  இந்த நாட்டார் இசை வடிவத்தை  மீட்டெடுத்தார்.  மேலும் அதை மிகச் சிறப்பாக அரங்கேற்றினார்.   இந்தப் படமே நம் மண்ணின் இசைஞன் என்ற முத்திரையையும்  மக்களின்  அங்கீகாரத்தையும் அவருக்களித்தது. ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சு வந்ததென்னு  பாடலாகட்டும் கிராமத்துப் பெண்களின் உற்சாகத்தைப் பிரதியெடுத்த  மஞ்ச குளிச்சு அள்ளித் தெளிச்சு பாடலாகட்டும், எழுபதுகளின் இறுதியை மொத்தமாக குத்தகைக்கு எடுத்த  செந்தூரப்பூவே பாடலாகட்டும் இவை அனைத்தும் நம் மண்ணின்  மரபிசையின்   வேர்களோடு ஒட்டிப்  பிணைந்த கானங்கள்.  கேட்கும் போதே பச்சை வயல்களும், தென்னத் தோப்புகளும், சலசலக்கும் ஓடைகளும், நாற்று நாடும் மாந்தர்களும் கொஞ்சம் கொஞ்சமாக உருவம் பெறும்   ஒரு கிராமிய சூழல் மனதில் சுகமாக விரிவதை உணரலாம். இளையராஜாவின் நாட்டுபுற இசையின் வடிவங்கள் அதுவரை கேட்டுக்கொண்டிருந்த அம்மாதிரியான இசையின் சாயல் கொண்டிருந்தாலும் அவரது பாடல்களில் புதைந்திருக்கும் ஏதோ ஒரு இசையிழை கேட்பவரின் நெஞ்சத்தை தனது  மண் சார்ந்த அனுபவங்களோடு நெருக்கமாக உணர வைத்ததே பலருக்கு இளையராஜா ஒரு போதை தரும் பெயராக இருப்பதன் ரகசியம் என்று தோன்றுகிறது.

    சிட்டுக்குருவி என்ற படத்தின்  அதிகம் பிரபலமடையாத உன்ன நம்பி நெத்தியிலே  பொட்டு வச்சேன் மத்தியிலே  மச்சான் என்ற கண்ணீர் கானம்  இளையராஜா ஏன் நாட்டுப்புற இசையின் நாயகனாக அடையாளப் படுத்தப்படுகிறார் என்ற கேள்விக்கான விடையை பாசாங்குகள் இல்லாமல் உணர வைத்துவிடுகின்றது. படம் வந்த புதிதில்  ஒலித்த சமயங்களில் அதிகம் நாடாத இப்பாடலை நீண்ட வருடங்கள் கழித்துக் கேட்டபோது சுசீலாவின் குரலில் தென்படும் வேதனை கையைவிட்டு அகன்று போகும் ஒரு கனவை எனக்கு நினைவூட்டியது. துயரத் தாலாட்டின் தூய்மையான வசீகரம் இந்தப்பாடல். இளையராஜா எத்தனை விதமான அல்லது எண்ணிக்கையிலான நாட்டுப்புறப்  பாடல்களை அமைத்திருந்தாலும் உன்ன நம்பி நெத்தியிலே போன்றதொரு காவிய கீதம் என்னைப் பொருத்தவரை அவர் இசையில் அதன் பின் வரவில்லை  என்பேன். பாடலின் வரிகள் மிக எளிமையானது.  ஒரு சராசரி கிராமத்துப் பெண்ணின் சிந்தனையில் உதிக்கும் எண்ணங்கள் கவிதை வரிகளாக  விரிவதும், நெஞ்சத்தைத்  தழுவும் ஈரமான இசையமைப்பும், மனதில் மீண்டும் மீண்டும் வட்டமடிக்கும் அந்த ஹான்டிங்  மெட்டும் ...துயில் கொள்ள அல்லது துயிலைத்  தொலைக்க ஏதுவான கானம்.  இளையராஜாவின் காவிய கானங்களாக நான் கருதும் பாடல்களில்  ஒன்று. சோகத்தின் ஈரத் தொடுகை. (ஒரு தகவல் இந்தப் பாடல் ஒரு நாட்டுப்புற பாடலின் அப்பட்டத் தழுவல் என்று சொல்கிறது.) இத்தனைச் சிறப்பான இந்தப் பாடலைவிட இந்தப் படத்தில் அதிகம் பிரபலமானது  என் கண்மணி உன் காதலி இள மாங்கனி  என்ற மெட்டுக்கள் மீது மெட்டுக்கள் சவாரி செய்யும் (கவுண்டர் பாயிண்ட் என்று மேற்கத்திய செவ்வியலில் வர்ணிக்கப்படும் ஒரு இசை பாணி.) பாடலே. எம் எஸ் விஸ்வநாதன் காலத்திலேயே இந்த யுக்தி தமிழ்த்திரைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது என்ற போதிலும் இந்தப் பாடலில் அது மிகவும் வெளிப்படையாகத் தெரியும்படியான அலங்காரம் கொண்டிருந்தது. ஒப்பனை அதிகம் செய்துகொண்ட ஒரு பெண் அதிகம் கவனம் பெறுவது போல. இதனாலேயே பலர் இந்தப் பாடலுக்கு அந்த முதல் மரியாதை சிறப்பைக் கொடுத்துவிடுகின்றனர். இருந்தும்  எனக்கு  தேனாம்பேட்டை  என்ற பெயரே இந்தப் பாடலை நினைவூட்டிவிடும் இன்றுவரை. சென்னைவாசிகள் இந்தப் பாடலை அப்போது மிகவும் ரசித்திருக்கலாம் என்று தோன்றுகிறது.  இந்தப் பாடல் நமக்கு ஒரு நகரப் பேருந்து ஒன்றில் பயணம் செய்யும் உணர்வை கொடுக்கும். (இளையராஜாவின் பிற்காலப் பாடல்கள் பலவும் இதுபோன்று புறநகர் சிறுநகர் பேருந்துகளில் அதிகம் ஒலிப்பதால் அவரது இசையே பேருந்து ஒன்றில் பயணிப்பது போன்ற உணர்வை அளிப்பதாக எனக்குத் தோன்றுவதுண்டு.)

    இளையராஜா பலவாறான விமர்சனங்களுக்கு உட்பட்டிருந்த தனது துவக்கக் காலத்தில் வந்த  கவிக்குயில் படத்தின் குயிலே கவிக்குயிலே யாரை எண்ணிப் பாடுகின்றாய்? பாடல் ஒரு ஆனந்த கீதம். அது போன்ற ரசனைக்குரிய சுகந்த மெட்டுக்கள் கொண்ட பாடல்கள் ஒரு ராகத்தாலாட்டு.  வெகு சொற்பமான இசைக் கருவிகளைக் கொண்டு ஒரு எளிமையான இசையை மனதுக்குள் நுழைக்கும் வித்தையை படிப்படியாக இளையராஜா மெருகேற்றிகொண்டு வந்த காலகட்டமது.   படத்தின் உயிர்நாடியான சின்னக் கண்ணன் அழைக்கிறான் பாடல் பலரை அப்போது வியப்புக்குள்ளாக்கியது. பாடலின் ராகம், அதைப் பாடியவர் என்று ஆச்சர்யங்கள் குவிந்த அற்புத கானம். சங்கீத மேதை பாலமுரளி கிருஷ்ணாவை அவர் பாடவைத்தது ஒரு இன்றியமையாத நிகழ்வு என்றே தோன்றுகிறது. இந்தப் பாடலுக்குப் பிறகே பல இசை விமர்சகர்கள் மற்றும் சில மடங்காத கழுத்து  கொண்ட சாஸ்திரீய சங்கீத அபிமானிகள் போன்றவர்களின்  பார்வை இளையராஜா பக்கம் திரும்பியது. இசை சமூகத்துப் பெருமை கொண்டோர் கூட அவரை அங்கீகரித்தது இந்தப் பாடலுக்குப் பிறகு வந்த ஒரு மாற்றம்.

           78 சுதந்திர தினத்தில்  சத்தமில்லாமல் வெளிவந்த ஒரு படம் தன் முகவரியை இழந்திருக்கவேண்டிய சூழலில் மக்களின் வாய்மொழி விளம்பரத்தால் யு டர்ன் அடித்து வெறியோடு எழுந்து சக்கைப் போடு போட்டு திரையுலக ஆரூடங்களை துவம்சம் செய்தது. அது இன்றுவரை பலரால் தமிழ் சினிமாவின் உச்சங்களில் ஒன்றாகக்  கருதப்படும் முள்ளும் மலரும் என்ற இயக்குனர் மகேந்திரனின் .முதல் படம். படத்தைப்பற்றி நான் சில எதிர்க் கருத்துக்கள் கொண்டிருந்தாலும் தமிழ் சினிமாவில்  ரியலிசம் என்ற வார்த்தைக்கான தகுதிகள் அதிகம் கொண்ட படமிது என்பதில் உறுதியாக இருக்கிறேன். பாரதிராஜாவின் 16  வயதினிலே படம் கூட ஏகப்பட்ட நாடகத்தனம் பூசப்பட்ட ஒரு பாசாங்கான திரைப் படம் என்பது என் எண்ணம். குறிப்பாக கடைசிவரை எதற்காகவும் தன் ஆளுமையை சமரசம் செய்துகொள்ளாத காளி கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் அதுவரை வந்ததாக நினைவில்லை. ஒருவிதமான அதிர்ச்சியூட்டும் கதாநாயகனை (அந்த நாள் சிவாஜிக்குப் பிறகு) அப்போதுதான் முதல் முறையாக திரையில் பார்க்க முடிந்தது.

      கொஞ்சம் படத்தை விலக்கி விட்டு பாடல்கள் பக்கம் வருவோம். பலர்  அதிகம் விரும்பிய பாடல் ஒன்று இந்தப் படத்தில் இருக்கிறது.  பல உள்ளங்களை உற்சாக ஊற்றில்  ஆழ்த்தியது இந்தப் பாடல் என்பது கூட ஒரு சாதாரண வாக்கியம். நான் சந்தித்த சிலரின்  ரிங் டோன் இந்தப் பாடலாக இருப்பதில் எனக்கு பெரிய வியப்பில்லை. ஏனெனில் இது அப்படியான ஒரு குளிரையும், சுகத்தையும் நம் மீது தெளிக்கும் ஒரு இசைக்கோலம்.  கண்ணதாசனின் வரிகள், இளையராஜாவின் நவீன மெட்டு, ஜேசுதாசின் தென்றாலாக வீசும் குரல் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா  பாடலை கேட்டதும் அதை  மனதுக்கருகே அழைத்து வந்துவிடுகின்றன. வயலினும் புல்லாங்குழலும் இத்தனை புதுமையாக இழைந்து இசை படைக்க முடியுமா என்ற பிரமிப்பை உண்டாக்கும் பாடல். இளையராஜாவின் நவீன பாணி இடையிசை பாடலை தொய்வின்றி நகர்த்திச் சென்று சரணங்களுக்குள் நம்மைப்  புதைத்துவிடும். பல பெண்கள் இந்தப் பாடல் தனக்காகவே பாடப்பட்டதைப்  போல உணர்ந்ததாக படித்திருக்கிறேன்.  இதே படத்தின் மற்றொரு நல்ல பாடல் அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை.  சிறப்பான இசையமைப்பு குதித்துக்கொண்டு ஓடும் ஒரு மானைப் போன்று தோன்றும். நித்தம் நித்தம் நெல்லுச் சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா பாடல் பெரிய வரவேற்பைப் பெற்றது.  பாடலோடு வரும் சில ஓசைகள் கேட்க இனிமையாக இருக்கும். சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்கும் கருவாட்டு மனம் தூக்கலாக வீசும் அடாவடிப் பாடல். ஏறக்குறைய உன்ன நம்பி நெத்தியிலே பாடலின் சாயல் இதில் அதிகம் இருப்பதை உணரலாம்.இளையராஜாவின் இசையில் வாணிஜெயராம்  இதுபோன்ற வெகு சில பாடல்களே பாடியிருக்கிறார். இதைத் தவிர ஒரு கும்மாளப் பாடல் இதிலுண்டு. அது ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே. அப்போது இது வானொலிகளில் அதிகம் ஒலிபரப்பானது. செந்தாழம் பூவில் ஒரு தென்றல் என்றால் இது ஒரு சூறாவளி. பொதுவாக எம்மனசு தங்கம் போன்று மிகப் பாமரத்தனமான மேளம் கொட்டும் (ராமராஜன், ராஜ் கிரண் வகையறாக்களின்)  பாடல்களே இளையராஜாவின் டப்பாங்குத்து இசையின் மகுடங்களாக இன்று நினைவூட்டப்படுகின்றன. எனது பார்வையில் ராமன் ஆண்டாலும்  வெகு நேர்த்தியாக அமைக்கப்பட்ட கிராமத்துக் குதியாட்டம். இந்தப் பாடலின் அமைப்பே வித்தியாசமானது. மாமா ஒ பொண்ணக் கொடு, நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு, நம்ம மொதலாளி நல்ல மொதலாளி, ஊரு விட்டு ஊரு வந்து பாடல்கள் வரிசையில் கண்டிப்பாக இதைச் சேர்க்க முடியாது. இந்தப் பாடலின் தாளம் வினோத வடிவம் கொண்டது. வசியப்படுத்தக்கூடியது.   அடுத்த முறை இதைக் கேட்கும் போது இந்தத் தாளத்தை மட்டும் நீங்கள் கவனிப்பீர்களேயானால் நான் சொல்வதை உணர்ந்து கொள்ள முடியும். இசைக்கேற்றவாறு  வளைந்து, நின்று, தாண்டி, குதித்துச் செல்லும் அபாரமான தாளம் பாடலோடு பின்னணியில்  ஒரு வசீகர உலா வர,  அலட்சியக் குரலில் எஸ் பி பி பாட, கேட்பதற்கு போதையேறும் உணர்வைக் கொடுக்கும் கிறக்கமான கானம்.  ஒரு டப்பாங்குத்துப் பாடலை இத்தனைச்  செழுமையாக உரமேற்ற முடியுமா என்ற வியப்பு இதன் சிறப்பு. இதே  பாதையில் இளையராஜா நிறைய பாடல்கள் அமைக்காதது ஏன் என்ற வினா என்னிடம் உண்டு.  இதுபோன்ற நல்லிசையின் பிரதியாக இருந்த இளையராஜாவின் இசை பாணி பின்னாட்களில் மாறிப் போனது குறித்து எனக்கு நிறைய வருத்தங்கள் இருக்கின்றன.

        நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை பாடலை முதல் முறை வானொலியில் கேட்டபோது என்னைப் போன்ற ஒரு சிறுவனுக்கு அப்போது ஏற்பட்ட  பிரமிப்பு வெறும் வார்த்தைகளில் அடக்கிவிடமுடியாதது. ஒரு வகையான சோகம் போர்த்திய காதல் டூயட். குறிப்பாக இரண்டு இடையிசைகளிலும் ட்ரம்ஸ், ட்ரம்பெட், ஃப்ளூட்  என இந்தப் பாடல் ஆர்ப்பரிக்கும். ஒரு தரமான மேற்கத்திய விருந்து. கமலஹாசனின் குரல் பொதுவாக அவர் பாடும் பாடல்களை  பல படிகள் சடாரென கீழே தள்ளிவிடும்  வினோத தன்மை கொண்டது.  உதாரணமாக பன்னீர் புஷ்பங்களே வாழ்த்துப் பாடு  என்ற அவள் அப்படித்தான் படத்தின் அழகான பாடலை இவர் கொடூரமாக சிதைத்திருப்பார். கேட்டால் தூக்கிவாரிப் போடும்.  ஆனால் விதிவிலக்காக சில அருமையான பாடல்களை அதன் ஆன்மா கெடாமல் அவர் பாடியதும் உண்டு.  அதில் இது ஒன்று- சந்தேகமில்லாமல். இதே படத்தின்  இந்த மின்மினிக்குக் கண்ணிலொரு மின்னல் வந்தது வண்ணத்துப் பூச்சி சிறகடிப்பதைப் போன்ற மிகத் துடிப்பான கானம். இளையராஜாவின் எந்தப் பாடல்களையும்  சற்றும் விரும்பாத எனது சகோதரிகளில் ஒருவர்   என்னுடைய தொல்லையூட்டும் நச்சரிப்புக்குப் பிறகு இளையராஜாவின் இசையில் தனக்குப் பிடித்ததாகக் குறிப்பிட்டது  இந்தப் பாடலைத்தான்.  ஜானகியின் ஹம்மிங், இசை கோர்ப்பு, பாடலின் கவிதை என்று அனைத்தும் இதில் கவிபாடும்.

    விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது என்ற புவனா ஒரு கேள்விக்குறி (கதை; மகரிஷி என்ற எழுத்தாளருடையது) படப் பாடல் ஒரு மலையோரக் காற்று. வயலின் இசையோடு குரலோசை பிணைந்து கொண்டு பாடும் அழகு கேட்பதற்கு ஒரு ஏகாந்தம். வார்த்தைகள் வாயில் வராது ( தெரியாது) வெறும் ம்ம்ம் என்று சிறுவயதில் அடிக்கடி நான் ஹம் செய்த பாடல் இது. ராஜா என்பார் மந்திரி என்பார் ஒரு ராஜ்ஜியம் இல்லை ஆள என்றொரு சோகப் பாடல் இதிலுண்டு. கேட்க நன்றாகவே இருக்கும். என் நண்பர்கள் வட்டத்தில் இந்தப் பாடல்தான் வெகு பிரபலம். சோகத்தை சுகமென  பார்க்கச் சொல்லும் புரியாத தத்துவங்களை எட்டிப்பார்க்கும் வயது அப்போது.  இளையராஜாவின் ஆரம்பகாலமாக இருந்ததால் இந்தப் பாடல் பிழைத்தது. இதே பாடலை எண்பதுகளில் இளையராஜா தண்ணித் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான் பாணியில்   வேறு மாதிரி அமைத்திருப்பார் என்று தோன்றுகிறது.

   இதே போல சற்று சோக உணர்வுகள் பின்னிப் பிணைந்த மற்றொரு பிரம்மிப்பான பாடல் அவள் அப்படித்தான் படத்திலுள்ள உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை. இளையராஜாவின் காவிய கானங்கள் பட்டியலில் கண்டிப்பாக இருக்கும் ஒரு உயர்ந்த இசை. என்னால் மறக்க முடியாத ஒரு பாடல். பியானோ இசை உறுத்தாமல் பின்னணி பாட, ஜேசுதாசின் சோகம் தோய்ந்த குரல் பாடலை கொஞ்சம் கொஞ்சமாக நெஞ்சத்தில் தேய்க்கும். சரணம் முடிந்து பல்லவிக்கு பாடல் மாற்றம் பெறும் அந்த இடம்  கேட்க அலாதியானது.  இதுபோன்று இசை, குரல், கவிதை என அனைத்து ராகத்  தேவைகளும் ஒருசேர ஒரு அழகைப் படைப்பது இளையராஜாவிடம் அதிக எண்ணிக்கையில் இல்லை.

   மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன் -  என்ற அச்சாணி படப் பாடலும் இதே உணர்வை தவறாமல் அளிக்கும் பாடல்தான். அழுகை வந்ததில்லை ஆனால் மனதை பிழியும் பாடல்.  பல வருடங்கள் கழித்து பயணங்கள் முடிவதில்லை படத்தின் மணியோசை கேட்டு எழுந்து பாடலில் இந்தப் பாடலின் நிழலைக் காண முடிந்தது.

   அவர் எனக்கே சொந்தம் படத்தின் தேவன் திருச்சபை மலர்களே ஒரு தேவாலய தாலாட்டு. கேட்ட முதல் நொடியிலேயே  என்னை அதிகம் கவர்ந்தது இந்தப் பாடல். கண்மூடி இதைக் கேட்கும் சமயங்களில் என்னுள்ளே இந்தப் பாடல் உயிர்கொடுக்கும் காட்சிகள் ஒரு இன்பமயம். இதே படத்தின் தேனில் ஆடும் ரோஜா பூந்தென்றல் ஆடக்கண்டேன்  என்ற பாடலும் அருமையான வார்ப்பில் உருவாக்கப்பட்ட  கானம். எழுபதுகளின் ஏகாந்தத்தை உணர்வுபூர்வமாக நெஞ்சத்தில் இறக்கிய இசை வடிவம்.

     ஒரு விவாதத்தைத் துவக்க விருப்பமில்லாவிட்டாலும்  இதைச் சொல்லியே ஆகவேண்டும் என்றுணர்வதால் இந்த ஒப்பீடு. சிலரது இசையமைப்பை கேட்கக் கேட்க பிடிக்கும் என்று ஒரு புதிய இசைக் கோட்பாடு தற்போது அதிகமாக பரப்பப்பட்டு வருகிறது. இணையம் அல்லது அதைத் தாண்டிய பொதுவெளி இரண்டிலும் இப்படியான ஒரு நவீன சிந்தனை வேரூன்றிக் கொண்டு வருகிறது. குறிப்பாக ரஹ்மானின் இசை இப்படிப்பட்டது என்றே பலர் சொல்லிவருகிறார்கள். (ஆங்கிலத்தில் Rush என்றொரு Canada நாட்டைச் சேர்ந்த இசைக்  குழுவினரின் இசையமைப்பு ஒருவிதத்தில் இம்மாதிரியானதே. ரஷ் குழுவைப் பற்றி பேச ஆரம்பித்தால் வேறு திசைக்கு பயணம் மாறும் என்பதால் அதற்கொரு  சிகப்பு விளக்கு.)   ஆனால் இளையராஜாவின் இசையில் இந்த தலையைச் சுற்றும் சங்கதிக்கே இடமில்லை. அவர் பாடல்களில் இரண்டே வகைதான் உண்டு. ஒன்று கேட்டதும் பிடித்துப் போய்விடும். இல்லை   வெறுத்துப் போய்விடும். அவ்வளவே. கேட்கக் கேட்கப் பிடிப்பதற்கான ரகசிய இழைகளை இளையராஜா தனது இசையில் ஒளித்து வைத்ததேயில்லை. இது எனக்குத் தோன்றும் எண்ணம். ஏனென்றால் என்னுடைய இளையராஜா இசை அனுபவம் இப்படிப் பட்டதே. கீழேயுள்ள பாடல்களை கவனித்தால் இதை எளிதாகப்  புரிந்துகொள்ளலாம். இன்னும் இரண்டு மூன்று முறை கேட்டுவிட்டு என் கருத்தைச் சொல்கிறேன் என்ற வசனம் இவைகளுக்குப் பொருந்தவே பொருந்தாது.

       நானே நானா யாரோதானா - மனதுக்குள் சுழன்றடிக்கும் மோகக் காற்று. வாணியின் வெள்ளிக் குரலும், இளையராஜாவின் இனிமையான குறிப்பாக இதயச் சுவர்களை மீட்டும் அந்த கிடார் இசையும் ஒருங்கே இணைந்து படைத்த ஒரு அபாரமான மேற்கத்திய வருடல். இதை ரசிக்காமலிருக்கவே முடியாது. போதை தரும் மெட்டு.

   மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் -முதல் இரவு என்ற படத்தில் வரும் இந்தப் பாடல் ஒரு ஜில்லென்ற குளிர்க் காற்று. எனக்கு பாடகர் ஜெயச்சந்திரன் என்றால் மனதில் தோன்றும் முதல் பாடல் இதுதான். அன்றைய சமயத்தில் இது ஒரு மிகப் புதுமையான இசையமைப்பு. இளையராஜா  இசையின் நவீனம் தொடர்ந்து பரவசப்படுத்தும் பரிமாணங்களை எட்டியதன் நீட்சி.

  வெள்ளி நிலாவினிலே தமிழ் வீணை  வந்தது- சொன்னது நீதானா? படத்தின் இந்தப் பாடலும் அதே ஜெயச்சந்திரனை எனக்குள் கொண்டுவந்து சேர்த்தது. எதோ ஒரு வகையில் ஜேசுதாசின் குரலை விட ஜெயச்சந்திரனின் குரல் என்னை ஈர்த்தது. ஒருவேளை ஜேசுதாசிடம் தென்படும் சோகத்தை விட இவரது குரலின் அந்த துடிப்பான உற்சாகம் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

    அடுத்து நான்  குறிப்பிட இருக்கும்  இந்தப் பாடலை பலர் வியக்காமல் இருந்ததில்லை. அப்படியான அபூர்வப் பாடல் இது.  வந்த புதிதில் முதலில் கேட்டுவிட்ட என்  நண்பனொருவன் இந்தப்  பாடலைப் பற்றி வெகுவாகப் புகழ்ந்து பேசி எனக்குள் ஒரு தீப்பொறியை பற்றவைத்திருந்தான். சிலோன் வானொலியில் முதல் முறையாக இதைக் கேட்டதும் அந்தத்  தணல் ஒரு நெருப்பின் வடிவம் பெற்றது. அந்தப் பாடல் சின்னப் புறா ஒன்று எண்ணக் கனாவினில் வண்ணம் கெடாமல் வாழ்கின்றது. மனதைத்  தைத்த இசை. அபாரமான சரணங்கள், ஆச்சர்யப்படுத்தும் இடையிசை, ஆர்ப்பரிக்கும் தாளம் என ஒரு நவீனத்தின் அனைத்து வண்ணங்களையும் கொண்டு வரைந்த அழகோவியம். ஒரு தென்றலின் சுவடு. (மிகப்பெரிய முரணாக படத்தில் தேங்காய் சீனிவாசனும் ராதிகாவும் சேர்ந்துகொண்டு இதன் அழகை சிதைத்திருப்பார்கள். கண்டிப்பாகப்  பார்க்கக்கூடாத  பாடல்களில் இது முதன்மையானது.)  அன்பே சங்கீதா என்ற இந்தப் படத்தின் மற்றொரு அருமையான கானம் கீதா சங்கீதா சங்கீதமே சௌபாக்கியமே. தரமான நல்லிசை. பெத்தாலும் பெத்தேனடா ஒரு போக்கிரிப் பையனைத்தான் என்றொரு வேடிக்கைப் பாடலும் இதிலுண்டு. நல்லவேளையாக எண்பதுகளில் இதே இளையராஜாவிடம் காணப்பட்ட இசைச் சரிவின் சாயல்   (வாடி எ கப்பக் கிழங்கே) சற்றும் தலைகாட்டாத  நயமான பாடல்.

           மேகமே தூதாக வா அழகின் ஆராதனை  கண்ணன் ஒரு கைக்குழந்தை என்ற படத்தில் உலாவந்தது  இந்த மெல்லிசை மேகம். இள நிலவின் குளுமை வீசும் சுகம் கொண்ட பாடல். இளையராஜா மோகன், ராமராஜன் போன்றவர்களுக்கு மிகச் சிறப்பான பாடல்கள் அமைத்திருப்பதாக  பொதுவாக ஒரு கருத்து இருக்கிறது.  அவர்  நடிகர் சிவகுமாருக்கும் பல இனிமையான கீதங்களை படைத்திருக்கிறார் என்ற உண்மையை உணர்த்தும் சுவையான பாடல்.  மோக சங்கீதம் அதை கேட்க வந்தாயோ மற்றும் கண்ணன் அருகே பாடவேண்டும் காதல் கிளி நான் ஆட வேண்டும்  என்று அதிகம் பிரபலமடையாத மேலும் இரண்டு நல்ல பாடல்கள் இதில் இருக்கின்றன.

    இதேபோல கடவுள் அமைத்த மேடை படத்தில் உள்ள ஒரு அருமையான கானம் மயிலே மயிலே உன் தோகை இங்கே. ஜென்சியின் சகிக்க முடியாத குரலை சற்று மன்னித்துவிட்டால் எஸ் பி பி மிகவும் ரம்மிய உணர்வுடன் பாடியிருப்பதை ரசிக்கலாம். எனது ரேடியோ நாட்களை மெருகூட்டிய பலரது இசையைப் போலவே இதுவும் என் நினைவுகளின் மேல் பூசப்பட்ட இன்னொரு வண்ணம். மேலும் இளையராஜாவின் இசையில் பி பி ஸ்ரீனிவாஸ் பாடிய  தென்றலே நீ பேசு உன் கண்களால் நீ பேசு என்ற பாடல் இதில் இருக்கிறது.  சில சமயங்களில் அலங்காரத் தோரணங்களை விட வீட்டிலுள்ள கல்தூண்கள் நமது கவனத்தை கவருவதுண்டு. எளிமையான இந்த சாதாரணங்களே வாழ்கையை அதிகம் ருசியூட்டுகின்றன என்பது என் எண்ணம்.

      இளையராஜாவின் இசையில் நான் கண்ட பூங்காவனங்களும் வண்ணத்துப் பூச்சிகளும் பறவைகளும் என்னை அழைத்துச்  சென்ற இடங்கள் வண்ணமயமானவை. நறுமணமிக்கவை. சலசலப்பான ஒரு தனிமையான ஓடையின் வசீகரத்தைக் கொண்டவை. அவரது இசை ஒரு மிகப் பெரிய மாற்றத்திற்கான முதல் சுவடு. எனது பார்வையில் இளையராஜாவின் இசை ஒரு தேவைப்படும் மருந்து போன்றது.  என் மதிப்பீட்டில் அது ஒரு வகையில் மனதைப் பிழியும் ஒரு இசை அல்லது அர்த்தமில்லாத ஒரு இரைச்சல். எனவேதான் அவர் பாடல்களை ஒரு காலத்தில் நிறைய ரசித்தேன் ஒரு கட்டத்திற்குப் பின்னர்  அதே அளவு நிறைய வெறுத்தேன். அவரைப் பற்றிய எனது விமர்சனங்களைத்  தவிர்த்து இந்தப் பதிவில் நான் அவரது இசையில் ரசித்தவைகளை மட்டுமே  விவரித்திருக்கிறேன்.   என்னுடைய பால்ய தினத்து நினைவுகளில் அவரது இசைக்கு மிகப் பெரிய பங்கு இருக்கிறது.  எனது பள்ளி நாட்களின் பல மறக்கமுடியாத அனுபவங்களைச் செதுக்கிய இசை அவருடையது. இளையராஜா என்ற பெரிய இசைப் பாய்ச்சல் இல்லாத எழுபதுகளின் இறுதியை நம்மால் எண்ணிப்பார்க்க  முடியாது. அவரை வெறுப்பவர்கள் கூட அவரில்லாத காலகட்டத்தை சுகமாக கற்பனை செய்துகொள்வது இயலாத காரியம்.

   இந்த இடத்தில் ஒன்றைச் சொல்வது அவசியம் என்று படுகிறது. அது அவருடைய சாதனை பற்றியது.  இளையராஜாவின் சாதனைகள் என்று பலரும் பலவிதமான கருத்துக்களை முன்வைக்கிறார்கள். அவற்றில் பெரும்பாலும் அபத்தமான மலிவான கைத்தட்டல்களே  இருக்கின்றன. என்னைப் போன்று மிகத் தீவிரமாக அவரை நோக்குபவர்கள் இந்தப்  பாமரத்தனமான கூச்சல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை. அவர் தொடர்ந்து இசை ராஜ்ஜியம் நடத்தினார், அவரது பாடல்களே தொடர்ச்சியாக வெற்றி பெற்றன  என்பதைத் தாண்டி மிக சிறுபிள்ளைத்தனமாக அவர் பெயருக்கு மக்கள் கைதட்டினார்கள் என்று ஆரம்பித்து ஒரு இசையமைப்பாளருக்கென அவருக்குத்தான் முதலில் கட்டவுட் வைத்தார்கள் என்று இளையராஜாவின் பெருமையை ஒரு பத்தடி மூங்கில் மற்றும் இருபதடி பேப்பரில் சுருக்கி விடுகிறார்கள். இளையராஜாவின் சாதனை இதுதான் என்று அவரது ரசிகர்களாகிய சிலர் சொல்லும்போது  அவரை கடுமையாக விமர்சிக்கும் நான் சொல்கிறேன் அவர் இதையெல்லாம் தாண்டியவர் என்று.

         பண்ணைபுரத்திற்கு சென்று வந்தவர் என்ற வகையில்  என் தந்தை ஒரு முறை இளையராஜா பற்றிய விவாதத்தில் சில கருத்துக்களை வீட்டில் தெரிவித்தார். அப்போது சிறுவனான எனக்கு நம்முடைய  வினோத சமூக கோட்பாடுகளும், மக்களைப் பிரிக்கும்  கீழ்த்தரமான கோடுகளும் புரியவில்லை. ஆனால் நாம் வாழும் இடத்தின் அரசியல் மற்றும் சமுதாய விழுமியங்கள் விரும்பியும் விரும்பாமலும் நம் மனதில் ஒட்டிக்கொண்ட, நமது  பால்ய பிராயத்து அறியாமைகள் நம்மை விட்டு அகன்று சென்றுவிட்ட யதார்த்தத்தில் அவர் சொன்ன கருத்தை நான் முழுமையாகப் புரிந்துகொண்டேன்.

      இசை என்னும் மக்களின் ஆதார உணர்ச்சியை , அவர்களின் வாழ்வியலின்  அடிப்படையான கலையுணர்வை, அழகுணர்ச்சியை, உயிர்நாடியை   ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளமாக மாற்றிக்கொண்டுவிட்ட அநீதியின் பின்னணியில் வாழ்வின் அடிமட்டத்தில் உழன்றுகொண்டிருக்கும் மக்களிடமிருந்து வந்த ஒருவர், அதிலும் நமது சமூகத்தின் பெருமைமிக்க பாரம்பரிய இசை தொடர்பில்லாத ஒருவர் ஆணவம் கொண்ட ஒரு சமூகத்தின் மாயையை தனது மண் சார்ந்த இசை மூலம் உடைத்து நொறுக்கிவிட்டு அவர்கள் கோலோச்சிய அந்த உயர்ந்த இடத்தில் தன் முத்திரையை தமிழிசை வரலாறு பேசுமளவுக்கு ஆழமாகவும், கேட்பவர்களின் மனதை அசைப்பதோடு மட்டுமல்லாது அவர்களின் நெஞ்சத்தை ஆக்ரமிக்கும் உன்னதமாக உருவாக்கி இசை என்னும் எல்லையற்ற மதமற்ற சாதியற்ற உணர்வை மிகையின்றி அதன் உயர்ந்த ரசனையின் வெளிப்பாடாக மாற்றி, பாமரர்களின் இசை வேட்கையை ஏளனம் செய்த ஒரு புனைவுக்கு முற்றுப்புள்ளி வைத்ததே இளையராஜாவின் மிகப் பெரிய சாதனை.

       என் தந்தை சொன்னது இதுதான்:"இவர்கள் மட்டுமே செய்ய முடியும் என்ற நிலையில் இவன் வந்து என்னாலும் முடியும் என்று செய்து காட்டினான் பார் அதுதான் அவன் சாதனை."

     ஆழமான கடல்களுக்கடியில் ஓடும் தண்ணீர் நூற்றாண்டுகளுக்கொரு முறைதான் கடலுக்கு மேலே வரும் என்கிறார்கள் கடல் ஆராய்ச்சியாளர்கள்.  உண்மைதான்.  இளையராஜா ஒரு விபத்தல்ல அவர் ஒரு நிகழ்வு.


   
 
   



      அடுத்து: இசை விரும்பிகள் XXIV-  எழுபதெண்பதுகள்: மாலை நேரத்து  வெளிச்சம். 
















116 comments:

  1. அட்டகாசம் காரிகன். விடியற்காலையில் எழுந்து பாலச்சந்தரைப் பற்றிய பதிவு இன்னமும் முடிக்கப்படாமல் இருக்கிறதே அதனை முடித்து வலைப்பூவில் சேர்த்துவிடலாமே என்று எழுத ஆரம்பிப்பதற்கு முன் ஒரு வலம் வந்துவிடலாம் என்று உங்கள் தளத்தைப் பார்வையிட வந்ததில் இந்தப் பதிவு.
    பதிவு பற்றிப் பேசுவதற்கு முன்னால் உங்களுடைய நேர்மையைப் பற்றிச் சொல்லிவிட வேண்டும். இளையராஜாவின் எதிர்ப்பாளர் என்ற ஒரு முத்திரை என் மீதும் உங்கள் மீதும் மிக மிக ஆவேசமாக இணைய உலகில் குத்தப்பட்டு விட்டது. அல்லது குத்தப்பட்டு வருகிறது. அப்படி இல்லை. நாங்கள் இளையராஜாவையும் ரசிக்கிறோம். இளையராஜாவின் பெருமைகளைப் புறம் தள்ளுவதில்லை. அவர் சாதனைகளை மறுப்பதில்லை. அவர் இசையை நிறைய ரசிக்கிறவர்களாகவே இருக்கிறோம் என்று எத்தனைச் சொன்னாலும் அதனை ஒப்புக்கொள்கிறவர்களாகவோ, ஏற்றுக்கொள்கிறவர்களாகவோ அவர்கள் இருப்பதில்லை(அவர்கள் ஒப்புக்கொண்டால் என்ன? ஏற்காவிட்டால் நமக்கென்ன என்பது ஒருபுறம் இருக்கட்டும்) அத்தகைய பிம்பம் ஒன்று உங்கள் மீதும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்ட பிறகும் அதுபற்றியெல்லாம் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல்- இந்தக் கூட்டத்தைப் பற்றிய நினைப்பையே கொஞ்சம்கூட வைத்துக்கொள்ளாமல், இதன் பாதிப்பு சிறிதும் இல்லாமல்- அன்றைய நிலையில், உங்களை இளையராஜா எப்படிப் பாதித்தார் என்பதை இத்தனை வெளிப்படையாக, இவ்வளவு உயர்வாக சொல்லியிருக்கிறீர்களே அதற்காக உங்களுக்கு முதல் பாராட்டு.
    இந்த நேர்மைதான் உங்களின் எழுத்துக்கு அச்சாணி.
    அதுமட்டுமில்லை, இப்படிப்பட்ட நேர்மைதான் எதிராளிகளை அதிகம் அச்சுறுத்துவது. சும்மாவே எதிர்ப்பது, சும்மாவே பாராட்டுவது என்ற பித்தலாட்டங்களையெல்லாம் இன்றைய நிலையில் எல்லாரும் சுலபமாக அங்கீகரித்துவிட்டுப் போய்விடுவார்கள்.அந்தப் பித்தலாட்டங்களுக்குப் புகழ் பாட்டுக்களும் உண்டு. ஆனால் எழுத்து நேர்மையுடன் செய்யப்படும் விமரிசனங்களுக்கு அதிகமாக மிக அதிகமாகக் கொதிப்பார்கள். அத்தகைய கொதிப்பு உங்களை நோக்கியும் இருக்கிறது என்பதற்கு நீங்கள் கர்வப்படவே வேண்டும்.
    இளையராஜா எழுபதுகளின் மத்தியிலும் எண்பதுகளிலும் அன்றைக்கு, அப்போதுதான் முகிழ்த்துவந்த இளைஞர்களை எந்த அளவில் பாதித்தார் என்ற செய்தி வெகு அருமையாகவே உங்கள் பதிவில் சொல்லப்பட்டிருக்கிறது.
    நீங்கள் முதன்முதலாக வானொலியில் என்னடி மீனாட்சி கேட்டு நின்றது போலவே ஒருநாள் காலையில் சர்ச்சுக்குப் போய்க்கொண்டிருந்த விடியலில் வயல்வெளிகளுக்கு இடையில் நடந்துசென்று கொண்டிருந்த ஒரு பனிக்காலத்து மார்கழியில்தான் முதன்முதலாக 'பாலும் பழமும் கைகளில் ஏந்தி' என்ற பாடலை முதன்முதலாகக் கேட்டு அந்த வயல்களுக்கு மத்தியிலேயே உறைந்து நின்றது ஞாபகம் வருகிறது.
    பழைய நினைவுகளை மீட்டியெடுத்து அற்புதமான நினைவோட்டங்களுடனும் அருமையான கணிப்புக்களுடனும் இ.ராவுக்கு மிக நிறைவான மதிப்பீட்டை சரியான பாடல்களுடன் செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வெகு நாட்களுக்குப் பிறகு மனதை வருடும் பதிவு.
    படித்தேன் மகிழ்தேன்.

    ReplyDelete
    Replies
    1. அப்பாடா படிச்சுட்டீங்களா?

      Delete
  3. காரிகன். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .தங்களின் பாதையெல்லாம் பரவசம் படிக்கப் படிக்க பரவசமாயிருந்தது .புதிய காற்றில் இளையராஜாவை துவம்சம் செய்த காரிகனா என்று நம்பமுடியவில்லை .இசைஞானியைப் பற்றிய ஓர் அருமையான பதிவு.(உசுப்பேத்தி ரணகளமாக்குவதை தங்கள் நலம்விரும்பி சிறப்பாக செய்கிறார் .)எனினும் எதிர்பாராத நல்லதொரு பதிவை வழங்கியமைக்கு வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  4. ஹலோ காரிகன்

    அதிசயம் . ஆனால் உண்மை . இது எவ்வாறு நடந்தது என்று புரியவில்லை. கையைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டேன் . காரிகன்தானா இதை எழுதியது!?


    நல்லதொரு பதிவு . நீங்கள் ரசித்த இளையராஜா பாடல்கள் சிலவற்றை குறிப்பிட்டு எழுதி விட்டீர்கள் . அப்படியானால் ரசித்த பாடல்கள் இவ்வளவுதான் எனும்பட்சத்தில் ரசிக்காத பாடல்கள் பலவற்றை சாட தயாராகி வருகிறீர்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம் . ஏனென்றால் 19 பதிவுகளில் இளையராஜாவை பலவிதங்களில் வசை பாடிவிட்டு 20 வது பதிவில் ஆகா ஓகோ என்று கொஞ்சம் பெருமை பேசியிருப்பது சந்தேகம் வரவழைக்கிறது. ' பூனை ஒருநாள் வெளியில் வரும் ' . பார்ப்போம்.


    ' தூய்மையை பாழ் செய்த பறையோசை' என்று எழுதியிருப்பது சற்று நெருடலாகப் பட்டது. இசைக் கருவிகளில் மனிதர்கள் போல உயர்ந்தது தாழ்ந்தது என்று எதுவுமில்லை . குறிப்பிட்ட சமூகத்தினர் அதிகம் பயன்படுத்துவதால் அது தாழ்ந்த இசைக் கருவி என்ற பொதுப் பார்வை உங்களிடத்திலும் உள்ளதோ என சந்தேகிக்க வைக்கிறது. அது தவிர்க்கப்படவேண்டும்.

    வழக்கம்போல அமுதவன் சார் உங்கள் கட்சிக்காரர் உங்களை புகழ்ந்து தள்ளியிருக்கிறார். ஆனால் இளையராஜா ரசிகர்கள் மற்ற இசையமைப்பாளர்களை இகழ்ந்து தள்ளியது போலவும் அவரும் நீங்களும் ராஜாவை பாராட்டிக் கொண்டேயிருப்பது போலவும் ஒரு பிரமையை வாசிப்பவர்களுக்கு ஏற்படுத்த நினைக்கிறார். வினோதம்! ராஜா ரசிகர்கள் அவருக்கு முந்தைய இசை முன்னோர்களை இழித்துப் பேசியதாக நான் எங்கும் வாசிக்கவில்லை.

    மற்றபடி நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சில பாடல்கள் தவிர எல்லா பாடல்களும் நானும் கேட்டு ரசித்தவை ருசித்தவை. நினைவுகள் எப்போதும் தொடர்கதைதானே!


    ReplyDelete
  5. வாருங்கள் அமுதவன்,

    நன்றி உங்களின் ஆதரவுக்கும் பாராட்டுக்களுக்கும்.

    இணையத்தில் இளையராஜாவின் எதிரிகள் என்ற முத்திரை நம் மீது இருப்பதாக நானும் அறிகிறேன். ஆனால் அதைச் செய்வதுஉண்மைகள் கபாலத்தில் ஏறாத சில வெற்று மண்டைகள். நியாயமாக நம்மை நோக்கும் எவருமே இதுபோன்று சொல்ல மாட்டார்கள். விமர்சனங்கள் இல்லாத மனிதர்கள் இருக்க முடியுமா? இளையராஜா மட்டும் எதோ தொட முடியாத உயரத்தில் இருப்பதாக செய்துகொள்ளப்படும் வீண் கற்பனையின் முட்டாள்தனமான பிரதிபலிப்பு.

    70, 80 களைச் சேர்ந்தவர்கள் இளையராஜா இசையின்றி தமிழகத்தில் காலம் கழித்திருக்க முடியாது. அவரது இசை அப்படிப்பட்டது. ஆனால் அதே சமயத்தில் அதை நல்ல தரமான இசை என்றும் தமிழிசையின் முன்னேற்றம் என்றும் கருத்திக்கொள்வது அவ்வளவு சரியானதல்ல. அவர் பெரிய வெற்றி பெற்றார். மறுப்பதற்கில்லை. ஆனால் வணிக வெற்றி மற்றும் தரம் இரண்டையும் பல சமயங்களில் சில கோடுகளைக் கொண்டு இணைத்துவிட முடியாது என்பது எனது எண்ணம்.

    நான் இளையராஜாவின் இசையில் பல இன்பங்களை ருசித்திருக்கிறேன். அதை மிகையின்றி வெளிப்படையாக நேர்மையாக தெரிவிப்பதில் எனக்கு சிக்கல்கள் இல்லை. நல்ல இசையை ரசிப்பதில் எதற்கு சில சுவர்கள்? 80கள் வந்தபோது எனக்கு அவரது இசையின் மீதிருந்த ஈர்ப்பு விலகியது. கடுமையான வெறுப்பும் கோபமும் தோன்றியது. சரி. இதுபற்றி பதிவுகளில் எழுதுகிறேன்.

    நீங்கள் சொல்வது உண்மையே. நேர்மையாக விமர்சிப்பதை பலர் விரும்புவதில்லை. அவர்களையெல்லாம் தீவிரமாக கருத்தில் எடுத்துக்கொண்டால் நாம் அவர்கள் தரத்திற்கு கீழிறங்கி விடக்கூடிய அபாயம் இருக்கிறது. பிடித்ததை ஆம் என்றும் பிடிக்காததை இல்லை என்றும் தெளிவாக சொல்வது ஒன்றே எனக்குத் தெரிந்தது.

    -------நீங்கள் முதன்முதலாக வானொலியில் என்னடி மீனாட்சி கேட்டு நின்றது போலவே ஒருநாள் காலையில் சர்ச்சுக்குப் போய்க்கொண்டிருந்த விடியலில் வயல்வெளிகளுக்கு இடையில் நடந்துசென்று கொண்டிருந்த ஒரு பனிக்காலத்து மார்கழியில்தான் முதன்முதலாக 'பாலும் பழமும் கைகளில் ஏந்தி' என்ற பாடலை முதன்முதலாகக் கேட்டு அந்த வயல்களுக்கு மத்தியிலேயே உறைந்து நின்றது ஞாபகம் வருகிறது. --------------
    அனுபவம் ஒன்றேதான். அதை நமக்குக் கொடுக்கும் இசைதான் வேறுபடுகிறது. இப்படிப்பட்ட மறக்க முடியாத அனுபவம் தரும் எந்த இசையும் சிறப்பானது. விஸ்வநாதன்- ராமமூர்த்தி, கே வி மகாதேவன், இளையராஜா என்றில்லை, வி குமார், சங்கர் கணேஷ், ஏன் டி ராஜேந்தர் போன்ற பலரது இசைக்கும் இந்த சிறப்பு இருக்கிறது. ஆனால் அவர்களை சிலரே திரும்பிப் பார்க்கிறார்கள்.

    மீண்டும் சந்திப்போம். உங்கள் தளத்தில் விரைவில் ஒரு புதிய பதிவு வரும் என்ற எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. நிறைவேற்றவும்.

    ReplyDelete
  6. வாருங்கள் சேகர்,

    இரண்டே வரிகளில் உங்கள் கருத்தை சொல்லிவிட்டீர்களே, இன்னும் எழுதியிருக்கலாம்.

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  7. வாருங்கள் அருள் ஜீவா,

    பாராட்டுக்கு நன்றி. பாதையெல்லாம் பரவசம் என்ற தலைப்பை நான் தீர்மானித்ததுமே மேற்கொண்டு என்ன எழுதுவது என்று முடிவாகிவிட்டது. என் பால்ய தின இசை அனுபவத்தில் இளையராஜா இல்லாமலா?

    ----------புதிய காற்றில் இளையராஜாவை துவம்சம் செய்த காரிகனா என்று நம்பமுடியவில்லை .இசைஞானியைப் பற்றிய ஓர் அருமையான பதிவு.---------

    ஏனிப்படி உங்களுக்குத் தோன்றுகிறது என்று தெரியவில்லை. நல்ல இசையை பிடிப்பதில் என்ன வியப்பு? நீங்களே ஒரு கோடு போட்டுக்கொண்டு அதற்குள் மற்றவர்களை திணிக்க முயற்சிப்பதன் விளைவாக இருக்கலாம். அமுதவனை பற்றி நீங்கள் சொன்ன கருத்து அவசியமில்லாததைப்போல தோன்றுகிறது. தவிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  8. நண்பர் காரிகன் ,
    உங்கள் எண்ணங்களும் சிந்தனைகளும் கொட்டோ கொட்டென்று கொட்டிவிடுகின்றன .ஒரு பத்து பதிவுகளை ஒரே பதிவில் நெருக்கி கொடுத்து விடுகிறீர்களே .
    நல்லது கண்டு ரசிப்பதும் ,இல்லாதவற்றை சாடுவதும் ஒரு உண்மையான ரசிகனுக்கு பொருத்தம்தான் .
    உங்கள் எழுத்து நடை தென்றலாய் வருடவும் செய்கிறது, புயலாய் சாடவும் செய்கிறது.
    உங்கள் பதிவைப்படிக்கும்போது , உங்களில் வெளிப்படும் ரசிகனை மிஞ்சி , ஒரு கவிஞனும் ஒளிந்திருப்பதை கண்டுகொண்டேன் .
    உம் எழுத்துப்பணி தொடரட்டும்.தமிழ்ப்பணி வளரட்டும் .வாழ்க வாழ்க

    ReplyDelete
  9. 'விழியிலே மலர்ந்தது', 'தேவன் திருச்சபை மலர்களே', 'உன்ன நம்பி நெத்தியிலே'....ஆஹா, இது போல இசை அமைக்க ஒருவர் இனி பிறக்க வேண்டும் அல்லவா?

    இந்த பதிவை பல முறை திரும்ப திரும்ப படித்தேன். ஒவ்வொரு முறையும் ஒரு புது விதமான புத்துணர்வு தோன்றியது என்றால் மிகையாகாது. இளையராஜாவுக்கு இதை விட ஒரு பெரிய பாராட்டு வேறு எங்கும் கிடையாது என்றே நினைக்கிறேன். இசையை ரசிப்பதும் அதை ரசித்து இந்த அளவுக்கு அலசுவதும் எல்லோராலும் முடியாது. அதை நீங்கள் நடத்தி விடீர்கள். ஒரு உண்மையான இசை ரசிகனால் மட்டுமே இது முடியும். அற்புதம் காரிகன்.

    ReplyDelete
  10. வாருங்கள் சால்ஸ்,

    பாராட்டுக்கு நன்றி.

    ------அதிசயம் . ஆனால் உண்மை . இது எவ்வாறு நடந்தது என்று புரியவில்லை. கையைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டேன் . காரிகன்தானா இதை எழுதியது!? -------------

    இதை நீங்கள் எழுதியிராவிட்டால்தான் ஆச்சர்யப்பட்டிருப்பேன். கையை ரொம்ப கிள்ளிப் பார்க்கவேண்டாம். கையில் அழியாத வடு தோன்றிவிடப்போகிறது. உங்களுத்தான் பிறகு சிக்கல் ஏற்படும். உண்மையை சொல்லவேண்டுமென்றால் இந்தப் பதிவை நான் எழுதிக்கொண்டிருக்கும்போதுதான் உங்களின் தளத்தில் மிகப் பெரிய சண்டை நடந்துகொண்டிருந்தது. ஒரு கையில் ஆயுதமும் இன்னொரு கையில் பேனாவுமாக இந்தப் பதிவை நான் என் நடுநிலையை எதற்காகவும் சமரசம் செய்துகொள்ளாது உள்ளது உள்ளபடியே எழுதியிருக்கிறேன். அங்கே நான் சந்தித்த எந்த விகாரங்களும் என் எழுத்தை சற்றும் பாதிக்கவில்லை என்பதை இந்நேரம் புரிந்துகொண்டிருப்பீர்கள்.

    -------நல்லதொரு பதிவு . நீங்கள் ரசித்த இளையராஜா பாடல்கள் சிலவற்றை குறிப்பிட்டு எழுதி விட்டீர்கள் . அப்படியானால் ரசித்த பாடல்கள் இவ்வளவுதான் எனும்பட்சத்தில் ரசிக்காத பாடல்கள் பலவற்றை சாட தயாராகி வருகிறீர்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம் . ஏனென்றால் 19 பதிவுகளில் இளையராஜாவை பலவிதங்களில் வசை பாடிவிட்டு 20 வது பதிவில் ஆகா ஓகோ என்று கொஞ்சம் பெருமை பேசியிருப்பது சந்தேகம் வரவழைக்கிறது. ' பூனை ஒருநாள் வெளியில் வரும் ' . பார்ப்போம். -----------

    பாராட்டுக்குப் பின் வழக்கமான உள்குத்து உங்களின் இயல்பு என்று எடுத்துக்கொள்கிறேன். நான் இந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கும் பாடல்கள் மட்டுமல்ல இன்னும் சில நான் ரசித்த இளையராஜா பாடல்கள் இருக்கின்றன. பின் வரும் பதிவுகளில் அவைகள் பற்றிய என் எண்ணங்கள் வெளிப்படும். நான் இளையராஜாவையும் ரசித்தேன் என்ற நிதர்சனத்தையே உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை போலும். எதற்காக நான் எழுதாத விஷயங்கள் பற்றி இப்போதே கவலை கொள்கிறீர்கள்? மழையே வரவில்லை. குடையை விரித்துவைத்துக்கொண்டு தயாராக இருப்பது ஏனோ? உங்கள் ஜீனிலேயே இருக்கும் பழக்கத்தை சோப்பு போட்டா கழுவ முடியும்? நல்லது.

    -----' தூய்மையை பாழ் செய்த பறையோசை' என்று எழுதியிருப்பது சற்று நெருடலாகப் பட்டது.----------

    இது உங்களுக்கு சரியாக படிக்கத் தெரியாதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நான் இவ்வாறு கூறியதாக நீங்கள் கருத்துக் கொள்வது நான் எழுதியிருப்பதற்கு எதிரானது. இளையராஜா பற்றி அவரது துவக்க காலத்தில் பல விமர்சனங்கள் எழுந்தன. அதில் இப்படியும் சிலர் அவரை பரிகாசித்தனர் என்றே எழுதியிருக்கிறேன். அது என் கருத்து என்று நீங்கள் விஷமத்தனமாக திரிப்பது தேவையில்லாத முரட்டுப் பாதைகளுக்கு நம்மை அழைத்துச் செல்லும் அபாயத்தை உள்ளடக்கியது.

    இதோ நான் எழுதியது. இன்னொரு முறை படித்துப் பார்க்கவும்.

    ////// பாரம்பரியத்தை ஒட்டியே ஓடிய இளையராஜாவின் இசை நதி துவக்கத்தில் சந்தித்தத் தடங்கல்கள் அதிகம். அவர் இசை மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் மிகக் கடுமையானவை. இன்று அவரது ரசிகர்கள் ரஹ்மானின் மீது வைக்கும் அதே மாதிரியான குற்றச்சாட்டுகள் இளையராஜாவின் மீது அன்றைக்கு சுமத்தப்பட்டன. வார்த்தைகளை மீறிய இசை, வெறும் வயல்வெளிப் பாடல்கள், இசையின் தூய்மையை பாழ் செய்த பறையோசை, மலிவான இசையமைப்பு என வகைவகையான விமர்சனங்கள் எழுந்தன. ////

    இந்த எளிமையான கருத்தை எவ்வாறு குதர்க்கமாக திரிக்கமுடியும் என்று வியப்பாக இருக்கிறது.

    நீங்களும் அருள் ஜீவாவும் அமுதவனை விடாது சீண்டுவது ஏனென்று புரியவில்லை. ஒரு கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருப்பது இயற்கையானது. இதில் எனக்கு ஆதரவாக அமுதவன் எழுதினால் அதை கடுமையாக விமர்சனம் செய்வது முதிர்ச்சியற்ற மனப்போக்கு. தவிர்க்கவும்.

    -----ராஜா ரசிகர்கள் அவருக்கு முந்தைய இசை முன்னோர்களை இழித்துப் பேசியதாக நான் எங்கும் வாசிக்கவில்லை. ---

    வினோதம்தான். உங்கள் தளத்தில்தானே எம் எஸ் வி செத்தா போனார் என்று உங்கள் கும்பலில் ஒருவர் மிகவும் நாகரீகமாக ராஜாவுக்கு முந்தைய இசை அமைப்பாளர்களை புகழ்ந்து பேசியிருந்தார்? அதற்குள் மறந்துவிட்டீர்களோ? உங்கள் பெயர் சால்ஸா இல்லை சஞ்சய் ராமசாமியா?

    ReplyDelete
  11. காரிகன்

    பறையிசை பற்றி யார் சொல்லியிருந்தால் என்ன ...அது தவறான பார்வை என்பதிலிருந்து நான் விலகமாட்டேன் . அமுதவன் அவர்களை நான் சீண்டவில்லையே! அவர் கருத்துக்கு மறு கருத்து சொல்லியிருக்கிறேன் . அவ்வளவுதான். உங்களுக்கும் சரியாக வாசிக்கத் தெரியவில்லை .

    எம். எஸ்.வி செத்தா போனார் என்று எந்த Context இல் சொன்னார் என்பதை மறைத்துப் பேசுகிறீர்கள். ' இளையராஜா யாரும் நெருங்க முடியாதபடிக்கு ஆள் வைத்தோ காசு கொடுத்தோ தமிழ்த் திரை இசையை தனித்து ஆக்ரமித்ததாக ' நீங்கள் பொய்யான குற்றச்சாட்டை வைத்தீர்கள் . அதனால் விமல் ஒரு கேள்வி கேட்டார் . 80 களில் இளையராஜா இசையமைத்தபோது மற்ற மூத்த இசையமைப்பாளர்களும் அந்த கால கட்டத்தில் உயிரோடுதான் இருந்தார்கள் . ஏன் வெற்றி பெறவில்லை என்ற ரீதியில்தான் அவ்வாறு கேட்டார் . நீங்கள் திரித்துவிட்டீர்கள்.

    ReplyDelete
  12. சால்ஸ்,

    எதோ கலகத்துக்கான முதல் விதை போல தோன்றுகிறது. இதைத் தொடர எனக்கு விருப்பமில்லை. என்னைப் பற்றிய உங்கள் எண்ணம் எப்படி இருந்ததோ அல்லது இருக்கிறதோ அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்.

    ReplyDelete
  13. காரிகன். #அமுதவன் பற்றி நீங்கள் சொன்ன கருத்தைத் தவிர்த்திருக்கலாம் .#என்று அறிவுறுத்துவது எனக்கு ஒரு வாக்கியத்தை நினைவூட்டுகிறது .(தன் கண்ணிலுள்ள துரும்பை எடுத்தபின் மற்றவர் கண்ணிலுள்ள துரும்பை எடுக்க முயற்சிக்கவும் )தாங்கள் விமல் மற்றும் பிற இளையராஜா ரசிகர்களை விமர்சித்ததை நினைவு கூறவும் . அமுதவன் அவர்களுக்கான தங்கள் பின்னூட்டத்தில் உபயோகிக்கப்பட்டுள்ள வாக்கியம் .மீண்டும் உங்களின் கவனத்திற்கு .(உண்மைகள் கபாலத்தில் ஏறாத மரமண்டைகள் ) இதை விட மோசமாக வா அமுதவனை விமர்சித்தோம் ? தருமி அவர்கள் குறித்த தங்கள் விவாதங்களையும் ,விமர்சனங்களையும் நினைவு கூறவும் .நாங்களும் பண்பாடு அறிந்தவர்களே!

    ReplyDelete
  14. வாருங்கள் நண்பர் ஆல்பி,

    உங்களின் முதல் வருகைக்கு நன்றி. மனராதப் பாராட்டியிருக்கிறீர்கள் அதற்கும் நன்றி.

    நீண்ட பதிவுகள் எழுதுவதே எனக்குப் பிடித்த ஒன்று. ஆனால் எங்கே நிறுத்த வேண்டும் என்பது மட்டும் சற்று குழப்பமாக இருக்கும் எப்போதும்.

    ------நல்லது கண்டு ரசிப்பதும் ,இல்லாதவற்றை சாடுவதும் ஒரு உண்மையான ரசிகனுக்கு பொருத்தம்தான் .
    உங்கள் எழுத்து நடை தென்றலாய் வருடவும் செய்கிறது, புயலாய் சாடவும் செய்கிறது.------

    இதே ஒரு கவிதை போலிருக்கிறது. சிலர் எப்போதுமே புகழ்ந்துகொண்டே இருக்கவேண்டும் என்று முஷ்டியை மடக்குவதுதான் வேடிக்கை. சரியான நியாயமான கருத்து.

    எழுத்துப் பணி, தமிழ்ப் பணி என்பதெல்லாம் நானே எதிர்பார்க்காத நோக்ககங்கள்.அப்படி ஒன்றுமில்லை. எழுதுவது ரொம்பப் பிடிக்கும். இசை அதைவிட ரொம்பப் பிடிக்கும். இரண்டும் இணைந்தால் கேட்கவா வேண்டும்?

    மீண்டும் நன்றி. சந்திப்போம்.

    ReplyDelete
  15. வாருங்கள் குரு,

    நீண்ட நாட்கள் கழித்து வந்திருக்கிறீர்கள். நன்றி.

    எத்தனை அற்புதமான கானங்கள் இளையராஜாவிடமிருந்து வந்திருக்கின்றன! அவரை விமர்சிக்கும் ஒரே காரணத்திற்காக அதையெல்லாம் புறந்தள்ளிவிட முடியுமா? எனது பாராட்டு அவருக்கு பெருமை சேர்க்கும் இடத்தைத் தாண்டி அவர் இருக்கிறார். இருந்தும் என் மனதில் தோன்றியதை எழுதிய திருப்தி எனக்கு இருக்கிறது.

    உங்களின் பாராட்டுக்கு நன்றி. உங்கள் தளத்தில் நிறைய எழுதுங்கள் என்ற வேண்டுகோள் வைக்கிறேன். உங்கள் எழுத்து படிக்க மிக சுவாரஸ்யமானது.

    ReplyDelete
  16. ஹலோ காரிகன்

    counter point முறையில் முதன்முதலில் பாடல் அமைத்தவர் இளையராஜா என்றுதான் இதுவரை அறியப்பட்டு வந்திருக்கிறது . எம்.எஸ்.வி அவர்கள் ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் ' மதன மாளிகையில் ' என்ற பாட்டில் அமைத்திருப்பது அந்த வகை அல்ல. அது தவறான செய்தி. கடைசிச் சரணத்தில் ' மதன மாளிகையில் ' என்று டி. எம்.எஸ் பாட இன்னொரு மெட்டில் அதே வார்த்தையையே சுசீலா அவர்களும் தொடர்வது counter point வகையைச் சாராத இசையமைப்பு. எம்.எஸ்.வி செய்திருப்பது எல்லா இசையமைப்பாளர்களும் செய்திருப்பதுதான் . counter point முறை கேள்வி பதிலாக வார்த்தைகளும் மெட்டும் வேறு வேறாக இருக்கவேண்டும் . தனித்துப் பார்த்தாலும் அர்த்தமும் தர வேண்டும். மதிமாறன் அவர்கள் தன் பதிவில் இதைப் பற்றி தவறாக சொல்லியிருப்பார். உண்மைக்கு புறம்பான செய்தியை நீங்களும் பின்னூட்டத்தில் பாராட்டி இருப்பீர்கள். இதைப் பற்றி தெளிவாக ஆராய்ந்து எழுதவும் .

    ReplyDelete
  17. சால்ஸ்,

    உங்களின் இயல்பு எதையும் ஆழமாகத் தெரிந்து கொள்ளாது கருத்து சொல்வது. அதை மற்றொரு முறை நிரூபித்"திரிக்கிறீர்கள்." கவுண்டர் பாய்ன்ட் பற்றிய உங்களின் கருத்து அப்படிப்பட்டதே.

    இன்றைக்கு ஏறக்குறைய எட்டு ஏன் அதற்கும் மேலான நூற்றாண்டுகளுக்கு முன்னே தோன்றியது தமிழில் இளையராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டது என்று நீங்கள் சொல்லும் கவுண்டர் பாய்ன்ட் எனப்படும் மேற்கத்திய இசை முறை. பின்னர் Bach என்ற (Johann Sebastian Bach) ஜெர்மானிய மேற்கத்திய செவ்வியல் இசைக் கலைஞரால் இந்த பாணி ஒரு புதிய அவதாரம் எடுத்தது. அவர் வாழ்ந்த காலம் 17 மற்றும் 18ஆம் நூற்றாண்டுகள். அப்போதைய இசை என்பது கவிதைகள் இன்றி வெறும் இசை மட்டுமே கொண்டது. வெறும் இசை என்றால் அதில் கவிதைகள் இல்லை என்பதை நான் சொல்லவேண்டியதில்லை. எனவே கவுண்டர் பாய்ன்ட் என்ற மெட்டுக்கள் மேல் மெட்டுக்கள் என்பது ஒரு விதமான இசை மட்டுமே கொண்ட ஒரு இசை வடிவம்.

    இரண்டு வெவ்வேறான மெட்டுக்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளாமல் ஒரு ஹார்மனி கொடுப்பதே இதன் நோக்கம்.ஹார்மனி என்னவென்பதை நான் சொல்லவேண்டியதில்லை. நீங்கள் சொல்லும்

    -----counter point முறை கேள்வி பதிலாக வார்த்தைகளும் மெட்டும் வேறு வேறாக இருக்கவேண்டும் . தனித்துப் பார்த்தாலும் அர்த்தமும் தர வேண்டும். ------------

    என்பது இளையராஜா அதைப் புரிந்துகொண்ட விதமாக இருக்கலாம். அது உண்மையில்லை. வார்த்தைகள் இல்லாமல் வெறும் இசை மூலமே இரண்டு மெட்டுக்கள் முரண்படாமல் பயணம் செய்யும் முறையே கவுண்டர் பாய்ன்ட் என்பது . இதிலும் பல வகைகள் இருக்கின்றன. ஒரு சிறிய பின்னூட்டத்தில் இதை விளக்கி விடமுடியாது. எனவே உங்களின் கருத்து வெறும் மேம்போக்கான ஒரு கேள்விஞானத்தில் விளைந்த ஒரு அபத்தம். அதை வைத்துக்கொண்டு கருத்து சொல்வது மதியீனம்.

    ஒரு கருத்தை வைக்கும் முன் சில முக்கியமான அத்தியாவசப்படும் தகவல்களை அறிந்துகொண்டு அதன் பின் வெளியிடுவது நலம். உங்கள் இளையராஜா அபிமானத்தை வைத்துக்கொண்டு இவ்வாறான அபத்தமான விளையாட்டுகளில் நீங்கள் ஈடுபடுவது ஒன்றும் புதிதல்ல. உங்களைப் போன்றவர்களுக்கு தெரிந்தது இது ஒன்றுதானே.

    இளையராஜாவால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு இசைப் புரட்சி என்னவென்பதை நான் ஏற்கனவே பலமுறை சொல்லியிருக்கிறேன். அது சகலகலாவல்லவன் என்ற சாக்கடைப் படத்திற்கு முன்னே வந்துவிட்டது.

    ReplyDelete
  18. எனது பதிவின் பின்னூட்டத்தில் கண்ட உங்களது எழுத்துக்களை படிக்க வந்தேன். ஒரு நீண்ண்ண்ட பதிவு. திரையிசைப் பாடல்கள் பல வற்றையும் காட்டி உங்கள் ரசனையை வெளிப்படுத்தி உள்ளீர்கள். எனக்கு திரை இசைப் பாடல்களைக் கேட்பது பிடிக்கும். யார் இசை என்று பார்ப்பது கிடையாது. இசை கேட்டால் ஒரு மன அமைதி கிடைக்க வேண்டும் பலவிதமான அலைகள் மனதில் தோன்றவேண்டும் யார் இசை என்பது பிறகே. அண்மையில் இசை என்பதே cacophony ஓசையாக மட்டுமே தெரிகிறது. நானும் இப்போது இன்றைய தியாகராஜ ஆராதனை குறித்து பதிவிடுகிறேன் முன்பே “ வாழ்வியலில் சினிமாப் பாடல்கள் “ என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன்.சுட்டி இதோ gmbat1649.blogspot.in/2012/06/blog-post_03.html படித்துப் பாருங்களேன். இசையுடன் வரிகளும் கேட்டு அனுபவிக்குமாறு இருக்கும் பாடல்கள் எல்லாமே எனக்குப் பிடிக்கும். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. காரிகன்

    இளையராஜா இந்த கவுண்டர் பாய்ன்ட் முயற்சியை முதன் முதலாக தமிழ்த் திரையிசையில் அறிமுகப்படுத்தியிருக்கிறார் என்றுதான் சொன்னேன். இதற்கு முன்னர் மேலை நாட்டு இசை வல்லுனர்கள் ஏற்கனவே செய்து காட்டியவர்கள் என்பது எனக்கும் தெரியும் . நீங்கள் சொன்ன விளக்கம் ராஜாவிற்கே புரியாது என்று சொல்கிறீர்களே அங்குதான் உங்களின் தலைக் கணம் வெளிப்படுகிறது. இசையில் பெரிய ஆராய்ச்சி செய்தவர் இளையராஜா . இதெல்லாம் தெரியாமலா முயற்சித்திருப்பார். வெறும் இசைக்கருவிகள் கொண்டு எழுப்பும் இசை வடிவத்தை அகத் தூண்டலாக எடுத்துக் கொண்டு குரலிசையிலும் கொண்டு வந்திருக்கிறார். அதற்கு கவிதையும் வெவ்வேறு மெட்டு போல வித்தியாசமாய் இருக்கவேண்டும் என்பது ராஜாவின் புதுமை முயற்சி . அதைத்தான் பாராட்ட வேண்டும் . அவருக்கு முன்னாள் யாரும் செய்ததில்லை.

    ReplyDelete
  20. என்னுடைய தளத்தில் பாலச்சந்தரைப் பற்றிய பதிவின் முதல் பகுதியை எழுதியிருக்கிறேன். பாலச்சந்தர் தமது படங்களில் பாடல்களுக்கு என்ன முக்கியத்துவம் தந்தார், அவற்றை எப்படிக் கையாண்டார் என்பது பற்றிய பதிவு. தமிழ்மணத்தில் இணைக்க முயன்றபோது 'ஏற்றுக்கொள்ளப்பட்டது. சன்னலை மூடவும்' அறிவிப்பு வந்தது. சன்னலை மூடினாலும் தமிழ்மணத்தில் வரவில்லை. என்ன தொழில்நுட்ப காரணமோ தெரியவில்லை. முடிந்தால் படித்துப் பாருங்கள்.

    ReplyDelete
  21. வாருங்கள் அமுதவன்,

    தமிழ் மனத்தில் நேற்றே உங்கள் பாலச்சந்தர் பதிவை படித்துவிட்டேன். இப்போது ஒரு பின்னூட்டம் அளித்துவிட்டு இங்கே வருகிறேன். தொடர்ச்சியை விரைவில் வெளியிடவும்.

    ReplyDelete
  22. வாருங்கள் ஜி எம் பி சார்,

    உங்களின் முதல் வருகைக்கு நன்றி.

    இசை என்பது ஒரு உன்னதமான நிகழ்வு. அதை கேட்பதோடு அனுபவிக்கும் மனதே இசையை உண்மையாக ரசிக்க முடியும் என்று நினைக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள உங்களது வாழ்வியலில் சினிமா பாடல்கள் கட்டுரையை நான் ஏற்கனவே படித்திருக்கிறேன். அதில் முதலிரவுப் பாடல் என்று நீங்கள் குறிப்பிட்டிருந்த ஒரு பாடலைத் தவிர மற்ற அனைத்தும் மிகவும் அருமையானவை.

    ReplyDelete
  23. --------வெறும் இசைக்கருவிகள் கொண்டு எழுப்பும் இசை வடிவத்தை அகத் தூண்டலாக எடுத்துக் கொண்டு குரலிசையிலும் கொண்டு வந்திருக்கிறார். அதற்கு கவிதையும் வெவ்வேறு மெட்டு போல வித்தியாசமாய் இருக்கவேண்டும் என்பது ராஜாவின் புதுமை முயற்சி . ---------

    சால்ஸ்,

    கவுண்டர் பாய்ன்ட் என்றால் என்னவென்பதை நான் சொன்னேன். நீங்கள் முதலில் இதை வேறுமாதிரி விளக்கிவிட்டு

    -------எம்.எஸ்.வி செய்திருப்பது எல்லா இசையமைப்பாளர்களும் செய்திருப்பதுதான் . counter point முறை கேள்வி பதிலாக வார்த்தைகளும் மெட்டும் வேறு வேறாக இருக்கவேண்டும் . தனித்துப் பார்த்தாலும் அர்த்தமும் தர வேண்டும்--------

    இப்போது டணால் தங்கவேலு பாணியில் படாரென்று அது எனக்குத் தெரியும் என்று ஒரே போடாக போடுகிறீர்கள். அது ஒரு வார்த்தைகளில்லாத இசை பாணி. இரண்டு வெவ்வேறு மெட்டுகள் அவ்வளவே.

    -----எம்.எஸ்.வி அவர்கள் ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் ' மதன மாளிகையில் ' என்ற பாட்டில் அமைத்திருப்பது அந்த வகை அல்ல. அது தவறான செய்தி. கடைசிச் சரணத்தில் ' மதன மாளிகையில் ' என்று டி. எம்.எஸ் பாட இன்னொரு மெட்டில் அதே வார்த்தையையே சுசீலா அவர்களும் தொடர்வது counter point வகையைச் சாராத இசையமைப்பு. -----

    இதைச் சொன்னதும் நீங்கள்தான். என்னுடைய பின்னூட்டதிற்குப் பிறகு

    -----வெறும் இசைக்கருவிகள் கொண்டு எழுப்பும் இசை வடிவத்தை அகத் தூண்டலாக எடுத்துக் கொண்டு----

    என்று உடனே சப்பைக்கட்டு கட்டுகிறீர்கள். கவுண்டர் பாய்ன்ட் என்றால் என்ன என்று இப்போதுதான் உங்களுக்குப் புரிந்ததுபோலும். அதில் வார்த்தைகளை இணைப்பது அல்லது தொடுப்பது என்பதெல்லாம் இந்த வகையா என்று ஆராய்ந்துதான் பார்க்கவேண்டும். அது ஒரு புதிய முயற்சி என்பது உண்மையே. ஆனால் அதுதான் கவுண்டர் பாய்ன்ட் என்று நீங்கள் எண்ணுவதுதான் வேடிக்கை.

    இந்த இரண்டு வெவ்வேறு மெட்டுகள் எம் எஸ் வி ஏற்கனவே செய்ததுதான். இன்னும் ஆழமாக தமிழிசையை ஆராய்ந்தால் ஒருவேளை எம் எஸ் வி க்கு முன்னே இதுபோன்ற இசையமைப்பு வந்திருக்கலாம் என்ற நிலை கூட வரலாம்.அப்படியிருக்கும் பட்சத்தில் நான் அதையும் ஏற்றுக்கொள்வேன். முரண்பட மாட்டேன். சற்று இந்த அக்கப்போரை நிறுத்திக்கொண்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தலாமா?

    ReplyDelete
  24. காரிகன்

    /// என் தந்தை சொன்னது இதுதான்:"இவர்கள் மட்டுமே செய்ய முடியும் என்ற நிலையில் இவன் வந்து என்னாலும் முடியும் என்று செய்து காட்டினான் பார் அதுதான் அவன் சாதனை." ///


    இளையராஜா இசையமைத்து புகழ் பெற்றுக்கொண்டிருந்த காலத்தில் மேல்தட்டு வர்க்கத்தினர் இழிவு பேசினர். அது இசை குறித்த இழிவாக காட்டப்பட்டிருந்தாலும் உண்மையில் அவர் இனம் குறித்த இழிவே! ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே கேட்டு ரசித்து வந்த கர்னாடக இசையை ஆதாரமாகக் கொண்டு மெல்லிசையை பல இசை முன்னோர்கள் உருவாக்கி வைத்திருந்தாலும் குறிப்பிட்ட ராகங்களில் மட்டுமே இசையமைத்தும் குறிப்பிட்ட இசைக் கருவிகள் மட்டுமே பயன்படுத்தி வந்த காலகட்டத்தில் இளையராஜா மற்றவர் தொடாத ராகங்கள் , மற்றவர் பயன்படுத்தாத இசைக்கருவிகள் மீட்டி நல்லதொரு இசையை உருவாக்கிக் கொடுத்தார்.

    ஒரு 'சின்ன'பையனுக்கு இத்தனை அறிவா என்ற ஆணவப் போக்கு அதிகரித்ததன் வெளிப்பாடாக இளையராஜா பயன்படுத்திய இசைக்கருவிகள் மீது ஒரு இழிவான விமர்சனத் தாக்குதல் நடத்தினார்கள். பத்திரிக்கைகளும் அதில் பங்கு வகித்தன . ஆனால் மக்களின் மனதைக் கொள்ளை கொண்ட அவருடைய இசை இந்த விமர்சனங்களையும் தாண்டி மிகப் பெரிய ஆதரவைப் பெற்றவுடன் தாக்குதல் விமர்சனங்கள் போற்றுதல் விமர்சனங்களாக மாறிப் போயின. சாதியப் பூச்சுக்கு மக்களே சாவு மணி அடித்தால் மேல்தட்டு வர்க்கமும் வாய் மூடி பாராட்ட ஆரம்பித்தன. அதன் பிறகு இளையராஜா தன் புதுமை இசையால் புகழின் உச்சிக்கு சென்றார். இன்றுவரை உச்சியில்தான் இருக்கிறார் . பேரும் புகழும் குறையவேயில்லை.






    ReplyDelete
  25. சால்ஸ்,

    நீங்கள் கூறும் கருத்துடன் எனக்கு உடன்பாடே. நான் சொல்வதும் இதுதான்.

    //இசை என்னும் மக்களின் ஆதார உணர்ச்சியை , அவர்களின் வாழ்வியலின் அடிப்படையான கலையுணர்வை, அழகுணர்ச்சியை, உயிர்நாடியை// என்று துவங்கி நான் எழுதியதும் இதுவேதான்.

    நான் இளையராஜா பற்றி கூறியதை நல்ல விதமாக புரிந்துகொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  26. தி. செந்தில் சிகாமணி
    திரு காரிகன் அவர்களுக்கு ,தங்களின் இசை விரும்பிகள் XXIII- பாதையெல்லாம் பரவசம் அற்புதமான படைப்பு .இளையராஜாவின் சங்கீத கடலில் நல்ல நல்ல முத்துக்களை தேடி எடுத்து எங்களை மீண்டும் பழைய சுக அனுபவங்களில் மூழ்கடித்து விட்டிர்கள் . உங்களின் அனைத்து பதிவுகளையும் படித்திருக்கிறேன் . அனைத்து இசை அமைப்பார்களையும் ,அவர்களின் காலத்தால் அழியாத பாடல்களை அறிமுகம் செய்ததை பல முறை படித்திருக்கிறேன் .என்னை நானே இசையில் மறந்த கணங்கள் அது மிக்க நன்றி . தங்களின் இளையராஜாவின் இசை பட்டியலில் ,மிக அறிய படாத பாடல்கள் - மற்றும் எனக்கு மிக பிடித்த பாடல்கள் இதோ
    கங்கை நதி மீனோ மங்கை விழி தானோ - நியாயம் (1984)
    மாலை செவ்வானம் உன் கோலம் தானோ - இளையராஜாவின் ரசிகை -படம் வெளியாக வில்லை
    .நல்ல நாள் (1984) - அனைத்து பாட்டுக்களும்
    மற்றும் ராகங்கள் மாறுவதில்லை(1983) - அனைத்து பாட்டுக்களும் -இவற்றையும் உங்களின் இளையராஜாவின் மிக சிறந்த பாடல் களில் அணி செய்யலாமே ? மிக்க நன்றி .

    ReplyDelete
  27. சார்லஸ்
    \\கர்னாடக இசையை ஆதாரமாகக் கொண்டு மெல்லிசையை பல இசை முன்னோர்கள் உருவாக்கி வைத்திருந்தாலும் குறிப்பிட்ட ராகங்களில் மட்டுமே இசையமைத்தும் குறிப்பிட்ட இசைக் கருவிகள் மட்டுமே பயன்படுத்தி வந்த காலகட்டத்தில் இளையராஜா மற்றவர் தொடாத ராகங்கள் , மற்றவர் பயன்படுத்தாத இசைக்கருவிகள் மீட்டி நல்லதொரு இசையை உருவாக்கிக் கொடுத்தார்.\\

    சார்லஸ் இதுபற்றிய பட்டியல் உங்களிடம் இருக்கிறதா? ஏனெனில் நண்பருடன் அமர்ந்து கர்நாடக இசையில் வந்த ராகங்களின் பாடல்களை வேறொரு விஷயத்திற்காகத் தொகுத்துக்கொண்டிருந்தபோது கர்நாடக இசையில் கேவிமகாதேவன் செய்திருக்கும் சாதனைகள் வியக்கவைத்தன. அந்தத் தொகுப்பை சரிபார்த்துக்கொண்டிருக்கும்போது உங்களின் இந்த விமர்சனம்....
    ஒருவேளை மகாதேவனைத் தாண்டி இ.ரா கர்நாடக இசையில் சாதனைகள் புரிந்திருப்பாரேயானால் தயவுசெய்து அதனைத் தாருங்கள். திருவிளையாடல் துவங்கி ஏபிஎன்னின் பல படங்களில் அவர் மற்ற இசைவிற்பன்னர்கள் வியக்கும் சாதனையைச் செய்திருக்கிறார். அதற்கான பட்டியல் என்னிடம் இருக்கிறது. இங்கே இரண்டே இரண்டு படங்களின் பட்டியல் மட்டும் தருகிறேன்.
    மன்னவன் வந்தானடி - பாடலை கோரஸ் முடிந்ததும் வீணையில் ரஞ்சனி ராகத்தை இழைத்து கல்யாணி ராகத்தில் தொடர்கிறார். ஜதிகளை பி.எஸ் கோபாலகிருஷ்ணன் பாட, விநாயக்ராம் கடம் வாசிக்கிறார்.
    'விரைவினில் நீ, மணமலர் தா, திருமார் பா, தாமத மா - என்ற கண்ணதாசனின் ஒற்றெழுத்துக்களையே ஸ்வரங்களாக்கி சுசீலாவைப் பாடவைத்து கல்யாணியில் பாடலைக் கொண்டுசெல்கிறார்.
    டிஎம்எஸ்ஸின் குரலில் 'உலகெலாம் உணர்ந்தோதற்குரியவன்' விருத்தத்தை வலஜி ராகத்தில் அமைத்திருக்கிறார். வலஜி ராகம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
    'இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி' சித்தர் பாணியில் அமைந்த கவிஞரின் பாடலுக்கு கரகரப்பிரியா ராகம். தந்தி வாத்தியங்களே இல்லாமல் வெறும் தாள வாத்தியங்களைக் கொண்டே பாடல் அமைக்கப்பட்டிருக்கிறது.
    சுந்தரர் தேவாரம் 'பித்தா பிறைசூடி'என்று ஆரம்பிக்கிறது. 'சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே' என்று சிந்துபைரவி ராகத்தில் டிஎம்எஸ் உருகுகிறார்.
    அப்பர் தேவாரமான 'மாசில் வீணையும்' பீம்ப்ளாஸில் அமைக்கப்பட்டிருக்கிறது.
    'பண்ணின் நேர்மொழியாள் உமை பங்கனோ' அப்பர் தேவாரம் உதய கால ராகமான் 'பெள்ளி'யில் ஆரம்பித்து 'தாழ் திறவாய்' என்று பிலஹரியில் தொடர்கிறது.
    'சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும்' என்ற தேவாரப் பதிகம் காபி ராகத்தில் வருகிறது.
    'ஆதிசிவன் தாழ்பணிந்து அருள்பெறுவோமே' - சிந்துபைரவி.
    'நாதர்முடி மேலிருக்கும் நல்ல பாம்பே' -புன்னாகவராளி. இம்மாதிரி ஒவ்வொரு படத்திற்கும் ஏகப்பட்ட ராகங்களை (இத்தகைய பட்டியலுக்காக மட்டும் ஐம்பது அறுபது படங்கள் இருக்கின்றன) இழைத்துப் பின்னியிருக்கிறார் திரைஇசைத் திலகம். இதைத்தாண்டி இன்னொருவர் இத்தகைய செயற்கரிய செயலைச் செய்திருக்கிறார் என்றால் அதனையே தொகுக்கலாம் என்று எண்ணம். தயவுசெய்து பட்டியலுடன் வருகிறீர்களா?

    ReplyDelete
  28. இங்கே ஒரு படத்தின் பட்டியல்தான் தந்திருக்கிறேன். அடுத்த படத்தின் பட்டியல் உங்கள் பதிலைப் பார்த்துக்கொண்டு.

    ReplyDelete
  29. உங்கள் பதிவு படிக்கையில் பல வரிகளில் அந்தக் கால நினைவுகள் எழும்பி என்னை மாறுபட்ட உணர்வலைகளில் அடித்துச் சென்றன.
    செமையான எழுத்து ... சூப்பர்மா
    எம்.எஸ்.வி, கண்டசாலா, மரகதமணி, லஷ்மி காந்த் ப்யாரி லால் என்று பலவேறு இந்திய இசையமைப்பளர்களை ரசித்தாலும்
    என் மனதில் ராஜா ஒரு சிம்மாசனத்தில்தான் இருக்கிறார். உங்களின் பார்வையில் அவரிடம் ஓராயிரம் குறைகளை தெரிவிக்கலாம். ஆனால் உங்கள் இறுதி வரிதானே உண்மை ... அவர் ஒரு நிகழ்வு..

    மாபெரும் இசை ஆளுமை. நாம் அதை சொல்ல வேண்டியதில்லை காலம் தனது ஏடுகளில் அப்படித்தான் குறித்து வைத்திருக்கிறது.
    ஒரு தலித் வீட்டில் பிறந்து
    வீட்டில் இருந்த ஆர்மோனியப் பெட்டியை தொட்டதற்காக தனது சகோதரர் பாவலர் வரதராஜன் அவர்களால் விரல்களின் மேற்புறம் ஸ்கேலால் அடிவாங்கி, ஏகப்பட்ட கனவுகளுடன் தன்ராஜ் மாஸ்டரிடம் சேர்ந்து, பஸ் டிக்கெட்டுக்கு காசில்லாமல் நீண்ட தூரம் நடந்து, சில மாதங்களில் தானே வகுப்பெடுக்க ஆரம்பித்து, எப்படியோ வாய்ப்பு பெற்று அவர் இன்று சிகரம் தொட்டது நிச்யமாக ஒரு ப்ளாக் பஸ்டர் திரைப்படத்திற்கான கதை.

    அவர் இசை மேதைகள் என்று அறியப்பட்ட மொசார்ட், பீதோவன், பீச் போன்றவர்கள் வாழ்ந்த நகரங்களுக்கே சென்று வந்ததும் நமது சகிக்க முடியாத சாதீய சாக்கடை சமூகத்தில் நம்பமுடியாத சாதனைகள். எனவே அவர் என் ஹீரோ.

    நீங்கள் பட்டியலிட்ட பல பாடல்கள் என் பேவரிட்... நன்றி காரிகன்.

    உங்கள் எழுத்து எப்படி சாத்தியப் பட்டது என்று அறிய விரும்புகிறேன்.

    ReplyDelete
  30. kareeganji a very exhaustive well analysed interesting research paper really i readmore than five times
    your great tribute/our tribute also/ to late mahadevan jis immense musical talents had come out very nicely in your article. best wishes kareeganji

    ReplyDelete
  31. a well analysed exhaustive article really kareeganji.
    your great tribute/our tribute also/ about mahadevan mamas immensemusical talents had come out very nicely in your posting. best wishes kareeganji

    ReplyDelete
  32. வாருங்கள் செந்தில் சிகாமணி,

    நன்றியை தெரிவிக்கிறேன் முதலில்.

    இளையராஜாவின் பல பாடல்கள் ஒரு ஆழமான ரசிப்பிற்க்குரியவையே. இதில் மாற்றுக் கருத்து எதுவும் என்னிடமில்லை. நான் தேடி எடுத்த இசை முத்துகள் என்று நீங்கள் குறிப்பிடுவது இன்னும் இருக்கிறது.

    நீங்கள் சொல்லியிருக்கும் படங்கள் எண்பதுகளில் வந்தவை. இந்தப் பதிவு இன்னும் எண்பதுகளுக்கு வரவில்லை. இளையராஜாவின் ரசிகை என்றொரு படம் அப்போது பெரிதாக பேசப்பட்டது. முதல் முதலில் ஒரு இசை அமைப்பாளரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாக அது இருந்திருக்க வேண்டியது.ஆனால் என்ன காரணத்தினாலோ அந்தப் படம் வெளிவரவில்லை.

    எண்பதுகளில் இளையராஜா-வைரமுத்து நட்பில் பூத்த சில பாடல்கள் கேட்பதற்கு மிக மென்மையானவை. அருமையானவை. பெரும்பாலானவர்கள் இந்த காலகட்டத்தைதான் இளையராஜாவின் இன்னிசையாக இன்றுவரை குறிப்பிடுகிறார்கள். ஆனால் எண்பதுகள் என்றால் எனக்கு இளையராஜா ஈர்ப்பு சற்று குறைந்துகொண்டிருந்த நேரம். எனவே என் எண்பதுகள் பற்றிய பதிவு உங்களை இந்த அளவுக்கு திருப்தி செய்யாது என்று தோன்றுகிறது.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  33. அமுதவன்,

    ஆர்ப்பாட்டமில்லாத கருத்தாழமிக்க பின்னூட்டம். இது போன்ற பின்னூட்டங்களே தேவை.

    கே வி மகாதேவனை எம் எஸ் வி மிக உயர்வாக மதிப்பவர். கர்நாடக ராகங்களை வைத்து அவர் படைத்த இசை ஜாலங்கள் மேன்மையான இசைப் படிவங்கள். எம் எஸ் வியே கூட அவரளவுக்கு இசைக்க முடியாது என்று சிலர் சொல்லக்கேட்டிருக்கிறேன். திருவிளையாடல், சங்கராபரணம் என்ற இரண்டு படங்கள் போதாதா?

    ராஜா ராஜாதான் ஆட்களுக்கு நீங்கள் சொல்வது அத்தனை விரைவில் புரிந்துவிடுமா என்ன? அப்படி புரிந்துவிட்டால் நலமே.

    சால்ஸ் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். அவருக்கு துணையாக பலர் இருக்கிறார்கள். எனவே இன்னும் வீரியமாக வேறு எதையாவது கருத்திடுவார் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  34. அமுதவன்

    மன்னவன் வந்தானடி பாடல் கல்யாணி ராகம் தான் என்பது எல்லோருக்கும் தெரியும் .அதில் ரஞ்சனியை இழைத்தார் என்று கே .வீ .மகாதேவனை கேவலப்படுத்தாதீர்கள்.

    அந்தப் பாடலுக்கு முன் வருவது தொகையறா சார் ..

    பெள்ளி அல்ல அது பௌலி ! புராணப்படங்கலுக்கு கர்நாடகமாகத் தான் இசையமைக்கமுடியும்.வெஸ்டர்ன் இசையிலா இசையமைக்க முடியும்.?

    அந்தக் காலத்து இசையமைப்பாளர்கள் எல்லோரும் கர்நாடக பாணியில் தான் பாடல்கள் தந்தார்கள.அதுவே விஸ்வநாத ராமமூர்த்தி மெல்லிசை தந்து புகழ்பெற உதவியது.

    // கர்னாடக இசையை ஆதாரமாகக் கொண்டு மெல்லிசையை பல இசை முன்னோர்கள்..//

    என்று தான் சார்ல்ஸ் சொல்கிறார் கவனியுங்கள் ,,,,"மெல்லிசையை "
    என்றே சொல்கிறார்.

    ஒவ்வொரு ராகத்திலும் இளையாராஜா போல அதிகமான பாடல்களை இதுவரை யாரும் தந்ததில்லை. யாரும் தொடாத ராகங்களையும் தொட்டவரும் ராஜா தான்.

    அந்த தொகுப்பை தரட்டுமா ?

    ReplyDelete
  35. வாருங்கள் மது,

    பாராட்டுக்கு மிக்க நன்றி.

    என் அனுபவங்கள் 70களைச் சேர்ந்த பலருக்கும் ஏற்பட்டிருக்கக்கூடியதே. இளையராஜா பற்றி நீங்கள் ஒரு பதிவு எழுதப்போவதாக சொல்லியிருந்தீர்கள். சீக்கிரமாக எழுதுங்கள்.

    --------என் மனதில் ராஜா ஒரு சிம்மாசனத்தில்தான் இருக்கிறார். உங்களின் பார்வையில் அவரிடம் ஓராயிரம் குறைகளை தெரிவிக்கலாம். ஆனால் உங்கள் இறுதி வரிதானே உண்மை ... அவர் ஒரு நிகழ்வு.. ----------

    பார்வைகள் வேறுபடுவது இயல்பானதே. இருந்தும் சில நாலாந்தர ஆட்கள் அடிதடியில் இறங்கும் பாணி உங்களிடம் இல்லை. இதுபோன்ற முதிர்ச்சியான கண்ணோட்டம்தான் இசை ரசனையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என்பது என் எண்ணம். இப்போது உங்களின் கருத்தை விவாதிப்போம். உண்மையில் இளையராஜா ஒரு குறிப்பிடத்தக்க இசை அமைப்பாளர். அவரன்றி தமிழிசையின் ஒரு காலகட்டத்தை நம்மால் கற்பனையே செய்ய முடியாது. ஆனால் அந்த காலத்தை ஒவ்வொருவரும் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதில்தான் எனக்கும் மற்றவர்களுக்கும் வேறுபாடு எழுகிறது. ஒருவர் தனது கருத்தைச் சொல்ல இருக்கும் உரிமை கூட இப்போது தமிழகத்தில் தள்ளாடுவதாக நினைக்கிறேன்,

    நீங்கள் இளையராஜா பட்ட துன்பங்களை குறிப்பிட்டு இப்படியானவர் வெற்றி பெற்றது என்று சிலாகித்து சொல்லியிருப்பது இங்கே ஒரு சிலரின் இன்னல்கள் மட்டுமே நம் கவனத்தை கவர்வத்தின் பின்னே இருக்கும் யதார்த்தம். சிறு வயதில் தந்தையை இழந்து படிப்பை கை விட்டு, குடும்பத்தை தான் காப்பாற்ற திலீப் குமார் பட்ட துன்பங்கள் இதைவிட அதிக கவனம் ஈர்ப்பது. சினிமா தியேட்டர்களில் இனிப்பு விற்கும் சிறு பையனாக சென்று அங்கே ஓடும் படங்களின் பாடல்களை ரசித்த எம் எஸ் வி யின் அதிகம் அறியப்படாத நிகழ்வுகள் எல்லாமே ஒரு வெற்றிக் கதையின் கருக்கள்.

    உங்களின் ஹீரோ இளையராஜா என்று தெரிவித்துள்ளீர்கள். ஒன்றும் சாதிக்காத வெறும் சினிமா நடிகர்களை ஹீரோவாக நினைக்காமல் நம் மண் இசையை அழகு படுத்திய ஒரு இசை அமைப்பாளரை நீங்கள் இவ்வாறு நினைப்பது பாராட்டிற்குரியதே. தமிழ் சினிமாவின் அழியாத ஒரே அம்சமாக பிற்காலத்தில் நிலைப் பெறப்போவது அதன் பாடல்களே.

    ReplyDelete
  36. வாருங்கள் நட் சந்தர்,

    கே வி மகாதேவனைப் பற்றி இங்கே நான் எதுவும் எழுதவில்லையே பின்னர் எவ்வாறு அப்படி ஒரு பார்வை எடுத்தீர்கள் என்று தெரியவில்லை. வருகைக்கு நன்றி. ஒருவேளை அமுதவன் கே வி மகாதேவன் பற்றி சால்ஸ் என்பவருக்கு அளித்திருந்த பதிலை குறித்துச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  37. சிவா,

    நீங்கள் யாரென்று தெரிந்துவிட்டது. விமல் என்ற பெயரில் சில கருத்துக்களை சொன்னீர்கள். நான் உங்கள் கருத்தை வெளியிடுவதில்லை என்று ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன். நீங்கள் புதிய காற்று தளத்தில் உடனே சென்று "அவன் என்னை அடிச்சுட்டான்" என்ற பாணியில் புலம்பியிருப்பது நான் யூகித்ததே. உங்கள் கருத்தை வெளியிட நான் பயப்படவில்லை. மாறாக விரும்பவில்லை. நீங்கள் என்னத்தை எழுதுவீர்கள் என்று நான் நன்கறிவேன். கடுகு போன்ற இசை அறிவை வைத்துக்கொண்டு ஒரே புள்ளியில் சுற்றிக்கொண்டே இருப்பது மட்டுமே நீங்கள் அறிந்த இசை ஞானம். அதிலும் இளையராஜா ஒருவரே உங்களுக்குத் தெரிந்த இசை அமைப்பாளர். இதில் புதிதாக என்ன சொல்லப்போகிறீர்கள்? விமல் என்ற பெயர் இல்லாவிட்டால் சிவா, விஷ்ணு இன்ன பிற பல பெயர்களில் நீங்கள் என் தளம் வந்தபடிதான் இருக்கிறீர்கள். இதோ இந்த சிவா ஆசாமி சொன்ன கருத்தும் (கருத்து என்று சொல்லவே தகுதியில்லாத ஒரு பின்னூட்டம்) எந்த புதிய செய்தியையும் தெரிவிக்கவில்லை. புதிய தளம் ஒன்று ஆரம்பித்து என்னைப் போன்று பதிவுகள் எழுதப் போவதாக பாஞ்சாலி சபதம் பாணியில் நீங்கள் உங்கள் முடியை முடிந்த ஞாபகம். தாராளமாக எழுதுங்கள். அங்கேயாவது உருப்படியாக உங்கள் இளையராஜாவை பற்றி யாரும் அறியாத புதிய தகவல்களை தெரிவியுங்கள். என்னைப் பற்றி விவாதிக்க வேண்டாம். இதற்கு நீங்கள் எழுதப் போகும் பின்னூட்டம் எந்த தரத்தில் இருக்கும் என்பது தெரிந்ததே. வேறு பெயர் கொண்டு வாருங்கள்.

    ReplyDelete
  38. அமுதவன் அவர்களே,

    ----புராணப்படங்கலுக்கு கர்நாடகமாகத் தான் இசையமைக்கமுடியும்.வெஸ்டர்ன் இசையிலா இசையமைக்க முடியும்.? ---------

    நன்றாகவே நமது விமல் கேட்டிருக்கிறார். சரிதான். அப்படியானால் காதல் ஓவியம், சிந்து பைரவி, பதினாறு வயதினிலே, மண் வாசனை, படங்களையும் நாம் விட்டுவிடலாம். ஏனென்றால் அந்தப் படங்களின் கதைக் களங்களை ஒட்டியேதானே இளையராஜா இசை அமைத்திருந்தார்? என்ன வெஸ்டர்ன் இசையா செய்திருந்தார்?

    சிவா என்ற விமல்,
    உங்கள் கேள்வியே உங்களுக்குப் பதில் சொல்லிவிட்டது. உங்கள் கடையை மூட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  39. தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
    கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
    தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
    பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
    எனது மனம் நிறைந்த
    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
  40. வாருங்கள் யாதவன் நம்பி,

    வாழ்த்துக்கு நன்றி. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் உங்களுக்கும்.

    ReplyDelete
  41. காரிகன், அந்த பதிலைப் பார்த்ததும் குறிப்பாக ஓரளவு மட்டுப்படுத்தப்பட்ட அந்த language ஆசாமி யாரென்பதைக் காட்டிக்கொடுத்துவிட்டது. தீசல் வாசம் அடித்ததனால் நான் எச்சரிக்கையாகிவிட்டேன். அவருக்கு நான் பதில் சொல்ல விரும்பாததால் பேசாமலிருந்துவிட்டேன். நான் சொல்லியிருந்தால் என்ன சொல்லியிருப்பேனோ அதன் ஒரு பகுதியை நீங்களும் சொல்லியிருப்பது என்னை ஆச்சரியப்படுத்தியது. மேலும் மகிழ்ச்சியும் கொள்ளவைத்தது.(சிந்துபைரவி, மண்வாசனை இத்யாதி உதாரணங்கள்)...........
    எப்படியும் சின்னக்கண்ணன் அழைக்கிறான் ரீதிகௌளை ராகம் என்று ஆரம்பிக்கப்போகிறார்கள். அவர்களுக்கான பட்டியலுடன் வரட்டும், பார்ப்போம்.

    ReplyDelete
  42. அறியாமையில் புலம்ப வேண்டாம் நண்பர்களே! உங்களை போதி மரத்திற்கு அழைத்து செல்ல முயற்சி தவிர வேறில்லை.இசையில் அஞ்ஞானத்தை அகற்றுங்கள்.

    ReplyDelete
  43. சிவா என்ற விமல்,

    என்னால் இதற்கு மேல் உங்களுக்கு மரியாதை தர முடியாது. நீங்களாகவே இங்கே வருவதை நிறுத்திக்கொண்டால் நலம். விவாதத்திற்குரிய கனமான தரமான தகுதியான கருத்து உங்களிடம் இருந்தால் மீண்டும் வாருங்கள். தனி மனித தாக்குதல் மட்டுமே உங்களின் நோக்கம் என்றால் மன்னிக்கவும் அதை நீங்கள் புதிய காற்று நடத்துகிறாரே அவர் தளத்திலேயே செய்துகொள்ளுங்கள். அதுதான் உங்களைப் போன்றவர்களுக்கு ஏற்ற இடம். அங்கு யாரும் உங்களை கேள்விகள் கேட்கப் போவதில்லை. மேலும் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவார் சால்ஸ். நன்றாக அங்கேயே gossip செய்துகொண்டிருங்கள். என் தளத்தில் உங்களைப் போன்ற நாலாந்தர ஆட்களிடம் நான் என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. எனக்கென்று சில நாகரீக கோடுகள் இருக்கின்றன. அதை மீறுபவர்கள் இங்கே கண்டிப்பாக வர முடியாது.

    ஒரே உதாரணம் மது என்னும் என் நண்பர். அவரும் உங்களைப் போன்றே ஒரு இளையராஜாவின் ரசிகர்தான். அவர் எழுத்தில் இருக்கும் பண்பு உங்களிடம் இருக்கும் பட்சத்தில் உங்களை வரவேற்பதில் எனக்கு தயக்கங்கள் இல்லை.

    ReplyDelete
  44. விமல்,

    நீங்கள் இந்தியாவில் இல்லை என்பதையும் இங்கிலாந்தில் இருக்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். அதன் பின் நாம் பேசலாம். நீங்கள் எந்த பெயரில் வந்தாலும் உங்கள் எழுத்தின் தரம் உங்களைக் காட்டிகொடுத்துவிடும். அத்தனை அருமையான தமிழ் உங்களுடையது. நீங்கள் படிக்காமலே கருத்து எழுதும் சவுந்தர் கூட அங்கேதான் இருக்கிறார்.

    ReplyDelete
  45. அன்பு காரிகன்,
    மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு இனிமையான பதிவு. 80 களுக்குப் பிறகு வந்த இளையராஜா அவர்களின் பாடல்கள் மீது தான் உங்களுக்கு வெறுப்பும் ,ஆதங்கமும் என்று நினைக்கிறேன். அதன் காரணமும் உங்களுக்குத் தெரிந்தது தான்.
    தமிழ் திரையுலகில் அதுவரை நல்ல திறமையும், அநுபவமும் கொண்டிருந்த தயாரிப்பு நிறுவனங்களும், இயக்குனர்களும் ஓய்ந்திருந்த நேரமது. சினிமா எடுத்து பணம் பண்ணலாம் என்று ஒரு கூட்டம் உள்ளே நுழைந்தது.பொரி விற்பவர்களும், பொட்டுக்கடலை விற்பவர்களும் சினிமா எடுக்க வந்ததார்கள். கதை வேண்டாம். சதை போதும் என்றும், பாடல்களைப் பொருத்தவரை இளையராஜா மட்டும் போதும் என்றும் நம்பி எடுக்கப்பட்ட படங்களிலிருந்து வந்த பாடல்கள்தான் அந்த வகையானது.
    எம்.ஜி.ஆர் பாடல் வரிகளுக்கும், ட்யூன்களுக்கும் முக்கியத்துவம் தந்து திருப்தி ஏற்படும்வரை விடமாட்டார் என கேள்விப்பட்டிருக்கிறேன்.நான் குறிப்பிட்ட வகையினர் "கற்பகத்தருவிடம் சென்று கஞ்சி கேட்டவர்களைப்போல" அவர்களின் 'மனம் போல' இளையராஜா அவர்களிடமிருந்து பாடல்களை பெற்றார்கள். அந்த காலகட்டத்தை ஒரு ரசனை வீழ்ந்த காலமாகத்தான் நான் காண்கிறேன். இளையராஜா ஏன் இதற்கு துணை போனார் ? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. டப்பா பாடலைத் தரும் பாடலாசிரியர்கள் ஒரு பக்கம். எதைக்கொடுத்தாலும் கேள்வி கேட்காமல் வாங்கிக் கொள்ளும் கூட்டம் ஒரு பக்கம். இதில் காலத்தை வென்ற கானங்கள் எப்படி பிறக்கும்?. அந்த வகைப் பாடல்களை "விரும்பிய" கூட்டங்களின் தினவை அடக்க பின்பு அந்தவகை பாடல்களே வழக்கமாயிற்று.
    அந்த நேரத்திலும் சிறந்த பாடல்கள் வந்திருக்கின்றனவே ? குறிப்பாக பாரதிராஜா, பாலசந்தர், எஸ்.பி.முத்துராமன் ஆகியோர் படங்களில் பாடல்கள் சுகமாயிருந்தது மறுக்க முடியாத உண்மை.
    இளையராஜா அவர்கள் ஒரு கர்ம யோகியைப் போல பாட்டின் தரம் பற்றியோ அது பெறும் வெற்றியைப் பற்றியோ கவலை கொள்ளாமல் தந்த பாடல்கள் அவை என நான் எண்ணுகிறேன்.

    ReplyDelete
  46. காரிகன்.. ஒரு களஞ்சியத்தை எடுத்து கொண்டு முன்னால் வைத்து விட்டீர்கள். சொல்லிய ஒவ்வொரு பாடலும் காலாத்தால் அழியாதவை. சில பாடல்கள் ( வாழ்வே மாயமா - காயத்ரி) கேட்டு வருடங்கள் 20க்கும் மேல் ஆனாலும், அந்த வார்த்தைகளை கேட்ட வுடன் ராகம் தானாக வந்து விட்டது.
    12 -13 வயது இருக்கும் என்று நினைக்கின்றேன். எங்கேயோ சென்று கொண்டு இறக்கும் பொது வாகனத்தில் " பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே ..." என்ற ஒரு பாடல். ஒரு முறை தான் கேட்டேன். ஒட்டி கொண்டது மனதில். அதே போல்.. நல்லது நடக்கட்டும் ராஜா நம்ம ராஜ்ஜியம் (ராம் லக்ஷ்மன்) மற்றும்.. வாழ்வு மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம் (காளி) .. என்ன அருமையான நினைவுகள்.

    உங்கள் ஒரு பதிவை படித்து விஷயங்களை அறிய ஒரு வாரம் ஆகும் போல் உள்ளது. நேராகவே சொல்லலி விடுகின்றேனே.. தம் பதிவை பார்த்தவுடன்.. " என்னமா எழுதுறார், எனக்கு வரலையே... " என்று தருமி போல் ஒரு நிமிடம் புலம்பினேன்.

    அந்தி மழையை தொடர்ந்து பொழியவும்.

    ReplyDelete
  47. நன்றி காரிகன் அவர்களே ! இளையராஜா இசையில் உடல் , மனம் நிலைகளை கடந்து ஆத்ம அனுபவங்களில் மூழ்கி , பிறருக்கு வார்த்தையில் விவரிக்க முடியாத புலன் கடந்த சுகங்களில் சுயத்தை - தன்னை முழுவதுமாக இழந்த கணங்களை பெறும் பாக்கியசாலிகள் கூட்டமான லட்சகணக்கான இளையராஜா ரசிகர்களில் நான் ஒரு சிறு துளி அவ்வளவுதான் தங்களின் அடுத்தடுத்த இளையராஜா பாடல்கள் பதிவை எதிர் நோக்கி - T செந்தில்சிகமணி


    ReplyDelete
  48. வாருங்கள் அனானி,

    நல்ல கருத்துக்கு நன்றி. எண்பதுகளின் மத்திக்குப் பிறகு நம் இசை சரிந்தது ஒரு வேதனையான நிகழ்வு. இ. ராஜா இசையை மட்டுமே கேட்டவர்களுக்கு அது அவ்வளவு சுலபத்தில் புரியாது. அப்படியே புரிந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள அவர்களால் முடியாது.----அந்த காலகட்டத்தை ஒரு ரசனை வீழ்ந்த காலமாகத்தான் நான் காண்கிறேன்---- என்ற உங்களின் கருத்தைத்தான் நான் வலியுறுத்தி சொல்லிவருகிறேன்.

    இ.ராஜா வின் இசைச் சரிவு ஏன் ஏற்பட்டது குறித்து நீங்கள் கூறியிருக்கும் உண்மைகளை நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். மேலும் அவைகளை சுருக்கமாக இங்கே எழுதிவிட முடியாது. எனவே எண்பதுகள் பற்றிய என் பதிவில் விரிவாக அவரது வீழ்ச்சியை ( எனது கண்ணோட்டத்தில்) விவரிக்கலாம் என்றிருக்கிறேன்.

    சில உண்மைகளுக்கு எதிர்ப்புகள் வருவது இயற்கையே. ஆனால் புரிந்துகொள்ளவும் சிலர் இருக்கிறார்கள் என்பது ஒரு ஆறுதலான அம்சம்.

    ReplyDelete
  49. விசு வாங்க வாங்க,

    வருகைக்கு நன்றி. பாராட்டிற்கும் நன்றி.

    வாழ்வே மாயமா வெறும் கதையா ஒரு மாதிரியான திகில் பாடல். சிறு வயதில் அந்தப் பாடல் காட்சியில் வரும் நெகடிவ் தோற்றங்கள் என்னை பயப்படுத்தியதை என்னால் மறக்க முடியாது. நானே வருவேன் பாடலின் சாயல் இதில் லேசாக தெரியும். காளி படத்தின் வாழ்வு மட்டும் நன்மைக்காக ரொம்பவும் அருமையான பாடல். அதில் ரஜினியின் அலட்சியமான நடிப்பை அப்போது நாங்கள் வெகுவாக சிலாகித்துப் பேசுவோம்.

    என் எழுத்து உங்களைக் கவர்ந்தது போல இயல்பான நகைச்சுவையுடன் எழுதும் உங்கள் பாணி என்னைக் கவர்ந்த ஒன்று. அதிலும் அந்த புடவை பற்றிய பதிவு நச். மிகவும் ரசித்தேன்.

    அந்தி மழை பொழியும் தொடர்ந்து. ஆனால் அந்தப் பாடல் பற்றிய பதிவு இன்னும் தாமதமாகும்.

    ReplyDelete
  50. அமுதவன் சார்

    சில நாட்கள் இணையத் தொடர்புடன் இல்லாததால் உடனடியாக பதிலளிக்க முடியவில்லை . கர்னாடக இசை பற்றிய உங்கள் கேள்விகளுக்கு நான் பதிவு ஒன்றையே கொடுக்கலாம் என்று நினைக்கிறேன் . இன்னும் காலம் இருக்கிறது. புதிய காற்று உங்களுக்கு புளித்த காற்றாக இருப்பதால் அங்கு வரமாட்டீர்கள். எல்லாவற்றையும் பின்னூட்டத்திலேயே சொல்ல முடியாது . கே வி மகாதேவன் அவர்கள் கர்னாடக இசையில் இளையராஜாவை விட அதிகம் பாண்டித்தியம் பெற்றவர் என்பது எல்லோரும் அறிந்ததே. இளையராஜாவே அதை ஏற்றுக் கொள்வார். ஆனால் நான் சொல்ல வருவது அதுவல்ல . கர்னாடக இசையையும் படித்த பிறகே பலவிதமான ராகங்களில் ராஜா அவர்கள் நிறைய முயற்சிகளை மேற்கொண்டார் என்பதையே சொல்ல வருகிறேன்.

    காரிகன் அவர்களே விமல் , சிவா என யார் உங்களிடம் எதிர் கருத்துக்களோடு வந்தாலும் ஒரே மாதிரி பார்க்கிறீர்கள் அல்லது ஒரே ஆளாக பார்க்கிறீர்கள்.. ஏன்? உங்கள் கருத்தோடு எல்லோரும் ஒத்துப்போய்விட முடியாது . எல்லோரையும் எதிர்கொள்ளத்தான் வேண்டும். நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மையாக இருந்துவிட முடியாது. மறுப்பு சொல்லும்போது சரியான ஆதாரத்துடன் மறுத்தால் உங்கள் கருத்துக்கு நாங்களும் ஒத்துப்போவோம் . நீங்கள் மேற்பூச்சு பூசி சொற்போர் நடத்துவதில் குறியாய் இருக்கிறீர்கள் .



    ReplyDelete
  51. சால்ஸ்,

    நீங்கள் அமுதவனுக்கு சொல்லியிருப்பது பற்றி நான் கருத்து எதுவும் கூறவிரும்பவில்லை. உங்களின் கர்நாடக இசை பற்றிய பதிவை இப்போதிலிருந்தே ஆவலுடன் எதிர்பார்க்கத் துவங்கிவிட்டேன். எழுதுங்கள். நலம்.

    இது என்னைப் பற்றி நீங்கள் கூறியதற்கானது. விமல் என்ற அந்த நவீன கோமாளி செய்யும் அலப்பரைகள் ஏராளம். இப்போது கூட இனிஒரு டாட் காம் தளத்தில் டி சவுந்தரின் புதிய பதிவில் என்னைப் பற்றியும் திரு அமுதவன் பற்றியும் மிகவும் "நாகரீகமாக" தேவையில்லாமல் சொல்லியிருக்கிறார். இவர் கருத்து சொல்லும் ஒவ்வொரு இடங்களிலும் இதைத் தவறாமல் செய்துவருவது அவருடைய கோழைத்தனம், பிற்போக்குத்தனம், வஞ்சம் போன்ற கருப்பு எண்ணங்களின் வெளிப்பாடாகவே நான் பார்க்கிறேன். ஒருவரைப் பாராட்டும் போது அந்த இடத்திற்கு தொடர்பில்லாத ஆட்களை வம்படியாக இழிவாக பேசும் ஒரு நபரை அவர் என்ன கெட்ட வார்த்தையா சொன்னார்? அதிலென்ன தவறு? என்று நீங்கள் பாதுகாப்பது நடுநிலை அறிந்த யாரும் செய்யத் துணியாத செயல். நீங்கள் அதைப் பற்றியெல்லாம் கவலை கொள்பவர் கிடையாது. இதே தருமியைக் கூடத்தான் நான் எதிர்த்து மிகவும் கடுமையான பின்னூட்டங்கள் எழுதினேன். அவர் போகிற இடங்களிலெல்லாம் என்னைப் பற்றி இந்த சில்லுவண்டுகள் போலவா விமர்சித்துக்கொண்டிருக்கிறார்? விமல் ஒரு முகமில்லாத அனானி. அவர் பெயர் அதுவல்ல. என் தளத்திலும் உங்கள் தளத்திலும் பல பெயர்களில் அவர் கரடு முரடான கருத்துக்களை வழக்கமாகச் சொல்லிவருபவர்தான். மேலும் அவர் ஒரு வெளிநாட்டு (இங்கிலாந்து) இந்தியர். இப்போதைய தமிழக மக்களின் இசை சார்பு எப்படி இருக்கிறது என்பதை அறியாதவர். இன்னும் சகலகலாவல்லவன், பாயும் புலி போன்ற தமிழின் "இசைப் பொற்காலத்திலேயே" வாழ்கிறார். பரிதாபம்.

    அவர் பழைய இசை அமைப்பாளர்களைக் குறித்து உங்கள் தளத்தில் எழுப்பிய ஒரு அதிர்ச்சியூட்டும் மிகக் காட்டுமிராண்டித்தனமான கருத்துக்குப் பிறகே அவரை நான் ஒதுக்க ஆரம்பித்தேன். இதுபோன்ற குகை மனிதனின் நாகரீகம் எனக்குத் தேவையில்லாத ஒன்று. இளையராஜாவைத் தாண்டி சிந்தனை செய்யமுடியாத மரமண்டைகள், உண்மையான நல்ல இசையைக் காணவே முடியாத மனநோய் பீடித்தவர்கள் என் தளத்தில் அநாகரீகமாக கருத்து சொல்வதை நான் விரும்பவில்லை. அதேசமயம் என்னோடு எல்லோரும் உடன்படவும் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை. முரண்படுவது மனித இயல்பு. தவறான தகவல்கள் இருந்தால் சுட்டிக்காட்டுவதை நான் என்றைக்கும் தடை செய்யமாட்டேன். என்னை குறித்து விமர்சனம் எழுந்தாலும் அப்படியே.

    சொற்போர் நடத்துவது நீங்கள்தான் என்பது என் எண்ணம். மீண்டும் மீண்டும் குழாயடிச் சண்டைக்கு என்னைத் தயார் செய்கிறீர்கள். அது ஒரு வீண்வேலை. சிலர் ஆரம்பிக்கிறார்கள். சிலர் நிறுத்திக்கொள்கிறார்கள்.

    ReplyDelete
  52. காரிகன் .#இளையராஜாவைத் தாண்டி எதையும் யோசிக்காத மரமண்டைகள் ,உண்மையான நல்ல இசையைக் கேட்கவே முடியாத மனநோய் பிடித்தவர்கள் என் தளத்தில் அநாகரீகமாக கருத்து சொல்லவேண்டாம் #இதிலிருந்தே தங்களின் நாகரிகம் நன்கு புலப்படுகிறது .பதிவில் வார்த்தைகளுக்கு வண்ணமிடுபவர் விமர்சனங்களைக் கண்டு தயங்குவதும் ,தவிர்ப்பதும் ஏன் ?

    ReplyDelete
  53. அருள் ஜீவா,

    உங்களால் வேறு விதமாக யோசிக்கவோ பேசவோ முடியாதோ? நீங்கள் சொல்வது உங்களுக்கே எக்கோ அடிக்கவில்லையா?

    ReplyDelete
  54. இன்றைய எனது பதிவு
    "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
    சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
    குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
    படரட்டும்!
    நன்றியுடன்,
    புதுவை வேலு,
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

    ReplyDelete
  55. நண்பரே,

    நல்ல பதிவைப் படித்தேன். எனது கருத்தை சொல்லியுள்ளேன். வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  56. வணக்கம் காரிகன் !

    வழக்கம் போலவே மிகவும் தாமதம் ! வழக்கம் போலவே நானே விரும்பி எடுத்துக்கொள்ளும் தாமதம் !!

    " விடாது பெய்யும் அடை மழைக் காலத்தில் ஒரு சிறிய இடைவெளியில் திடீரெனத் தோன்றும் சூரிய வெளிச்சம்,"

    அந்த வெளிச்சம் தரும் இதமான கதகதப்பு !

    " நீண்ட தூர வெய்யில் பயணத்தின் நடுவே எதிர்பாராமல் கிடைக்கும் ஓர் அரச மரத்தின் நிழல், "

    அந்த மரத்தின் கிளை அசைவில் உடல் வருடும் இளம் தென்றல் !

    " க்ரோட்டன்ஸ் செடிகளுக்கு மத்தியில் தலைகாட்டும் உயிரோட்டமான ஒரு வண்ண மலர். "

    அந்த ஒற்றை மலர் பரப்பும் நறுமணம் !

    " வண்ண வண்ணப் புகைப்படங்களுக்குள் அசந்தர்ப்பமாக ஒளிந்திருக்கும் ஒரு கருப்பு வெள்ளைப் புகைப்படம், "

    அந்த புகைப்படம் நம் மன குளத்தில் தோற்றுவிக்கும் நினைவலைகள் !

    " சிமெண்ட் கட்டிடங்களுக்கு இடையே திடீர் பசுமையாகக் காட்சியளிக்கும் வயல் வெளிகள், "

    அவற்றிலிருந்து கிளம்பும் பசுமை வாசனை !

    " மேகங்கள் அடர்ந்த கருமையான இரவு வானத்தில் எதோ ஒரு மூலையில் ஒளிரும் ஒரே ஒரு நட்சத்திரம், "

    அது கலங்கிய மனதினுள் ஏற்றும் நம்பிக்கை ஒளி !

    " காதுகளைக் குடையும் வாகன இரைச்சலின் நடுவில் சன்னமாக ஒலிக்கும் மழைத் துளிகளின் ஓசை,"

    அந்த ஓசை காலங்காலமாய் நமக்கு தெரிவிக்க விரும்பும் நாமறியாத ராகம் !

    " சோடியம் வேப்பர் மின் விளக்குகளின் நிழல் படாத ஓர் ஓலை வீட்டின் வெளியே இரவு நேரத்தில் காற்றில் அசைந்து எரியும் ஒரு விறகு அடுப்பு, "

    அசையும் தழல்கள் உணர்த்த விரும்பும் வாழ்வின் நிலையின்மை !

    " கண்களைக் கவரும் கவர்ச்சியான அந்நிய முகச் சாயல் கொண்ட தோற்றங்களுக்கு மத்தியில் மனதை மயக்கும் ஒரு மண் சார்ந்த முகம்.... "

    ஒரே ஒரு நொடியில் அந்த முகம் பிரதிபலித்துவிடும் நாம் வாழ்வாங்கு வாழ்ந்த மண்ணின் வாழ்க்கை !

    ஏனோ, கடந்த இரண்டு பதிவுகளாக உங்களின் முன்னுரைக்கே ஒரு நீண்ட பின்னூட்டம் அமைந்துவிடுகிறது ! பதிவுக்காக மீன்டும் வருவேன் காரிகன் ! மன்னிக்கவும் !!

    நன்றி
    சாமானியன்


    ReplyDelete
  57. வாங்க சாம்,

    நன்றி.

    வரிவரியாகப் படிப்பது என்பது இதுதான் போலும். ஒரு கதை ஒன்று உண்டு. அதில் ஒரு கவிஞன் "நான் மாதம் ஒன்றுக்கு ஒரு வரிமட்டுமே எழுதுவேன்" என்பான். கடைசியாக என்ன எழுதினாய் என்ற கேள்விக்கு "The past is deep " என்று சொல்வான். அற்புதமான வரி. உங்கள் பாராட்டைப் படித்ததும் எனக்கு ஏனோ இதுதான் தோன்றியது. பாராட்டுக்கு மிக்க நன்றி. அதையும் கவிதை போலவே சொல்லியிருக்கிறீர்கள்.

    மீண்டும் வருவதாக சொல்லியிருப்பதால் பிறகு பேசலாம் என்று நினைக்கிறேன். கண்டிப்பாக வரவும்.

    ReplyDelete
  58. சார் ,
    இந்த பதிவை படித்துக்கொண்டே வரும்போது, பாடல்கள் அறிமுகத்திற்கு இடைஇடையே கேட்டும் உங்கள் அம்மாவின் குரல் 'என் கண்மணி என் காதலி " பாடலை நினைவுபடுத்துகிறதே என நினைத்தேன். நீங்களும் அந்த பாடலை குறிப்பிடிருக்கிறீர்கள். சந்தேகமே இல்லாமல் நீங்க வோர்ட்ஸ்வர்த் சாதி தான். spontaneous overflow of powerful feelings:) உங்கள் வரிகளில் தெறிக்கிற இசை! அடேயப்பா!!! அழகு:) ஜானி படத்தின் பாடல்கள் எல்லாமே இன்றுவரை என் பேவரிட் . ஆமா ஒரு சின்ன டௌட். கேட்ட கோச்சுக்காதீங்க. இவ்ளோ பாடலை mention பண்ணுறீங்களே, இதை வேற பதிவில் ரிபீட் ஆகாமல் எப்படி ஞாபகம் வச்சுபீங்க.!!!!!!!!!!!! ஒரே பதிவிலேயே எப்படி இவ்ளோ பாடலை mention பண்ணமுடியிது!! அது சரி அது உங்க சீக்ரெட் ரெசிபியா கூட இருக்கலாம். இதில் பல பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆமா இந்த ருக்மணி வண்டிக்கு ஏன் தடை போட்டாங்க பாஸ்??

    ReplyDelete
  59. "இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!"
    ஜெய் ஹிந்த்!
    நன்றியுடன்,
    புதுவை வேலு
    (இன்றைய எனது பதிவு
    "இந்திய குடியரசு தினம்" கவிதை
    காண வாருங்களேன்)

    ReplyDelete
  60. வாங்க மைதிலி மேடம்,

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ஒவ்வொரு பாடலுக்குப் பின்னும் கதைகளும் சம்பவங்களும் இருக்கின்றன. இது எல்லோருக்கும் நடப்பதுதான். கவிதை ஆழமான உணர்ச்சிகளின் இயல்பான வெளிப்பாடு என்று வேர்ட்ஸ்வொர்த் குறிப்பிட்டதாக படித்திருக்கிறேன். என்னை அப்படி சொல்வதெல்லாம் கொஞ்சம் ஓவர். மனதுக்குப் பிடித்ததை செய்யும்போது இயல்பாகவே ஒரு பிடிப்பும் ஈர்ப்பும் வந்துவிடுகிறது. அவ்வளவே.

    ஜானி படப் பாடல்கள் மட்டுமல்ல, நினைவெல்லாம் நித்யா, நிழல்கள், பயணங்கள் முடிவதில்லை, தென்றலே என்னைத் தொடு என பல இளையராஜாவின் பாடல்கள் மனதோடு பேசுபவை. அடுத்தடுத்த பதிவுகளில் அவைகளைப் பார்க்கலாம். பள்ளி, கல்லூரி நாட்களின் நினைவுகள் என்றும் அழியாதவை. அந்த பருவத்தில் கேட்கும் இசைக்கு ஒரு வசிய சக்தி இருக்கிறது. எத்தனைப் பாடல்களாக இருந்தாலும் அவற்றை நம்மால் மறக்கவே முடியாது. பொதுவாக நான் அதிகமான எண்ணிக்கையில் பாடல்களை அடையாளம் காட்டுவதையே விரும்புகிறவன். நீங்கள் வியப்பதுபோல அத்தனைப் பாடல்களையும் குறிப்பிடுவது ஒன்றும் விசேஷமான சங்கதி இல்லை என்று நினைக்கிறேன். உங்களாலும் முடியும்.

    ருக்குமணி பாடல் அப்போது பெண்களை கிண்டல் செய்ய ஏதுவாக இருந்ததாக ஒரு பேச்சு உண்டு. அது ஒரு காரணமாக இருக்கலாம் என்றாலும் இதன் பின் இளையராஜா அமைத்த பல பெண்களை கேலிசெய்யும் பாடல்களைப் பார்க்கையில் ருக்குமணி எவ்வளவோ தேவலை என்ற எண்ணமே வருகிறது. தமிழகத்தின் எதோ ஒரு இடத்தில் சில போலிஸ்காரர்களை சிறுவர்கள் சிலர் இந்தப் பாடலைப் பாடியபடி நக்கல் செய்தததால் உடனே ருக்குமணிக்கு தடா போட்டுவிட்டார்கள். இந்தச் செய்தி அப்போது எங்கள் நண்பர்கள் வட்டத்தில் பிரபலமாக இருந்தது. இது நான் கேள்விப்பட்ட செய்திதான். தவறாக இருந்தால் விபரம் அறிந்தவர்கள் திருத்தலாம்.

    ReplyDelete
  61. ஹலோ காரிகன்

    'ருக்குமணி வண்டி வருது ' என்ற பாடல் பொது விழாக்களில் ஒலிபரப்பக் கூடாது என்றுதான் தடை வந்தது . வீடுகளில் கேட்கக் கூடாது என்று தடை இல்லை. ரேடியோவில் ஒலிபரப்பக் கூடாது என்ற தடையுமில்லை.

    ReplyDelete
  62. வாங்க சால்ஸ்,

    பத்ரகாளி படத்தைப் பற்றிய உங்களின் பிழையான தகவல் ஒரு பெரிய வார்த்தைப் போருக்கு நம்மை இட்டுச் சென்றது. அதேபோல தற்போது மீண்டும் மற்றொரு பிழையை பதிவு செய்கிறீர்கள். கவனம் தேவை. ஓரம்போ பாடல்தான் (சுதந்திர இந்தியாவில்) முதன் முதலாக தமிழ் வானொலிகளில் தடை செய்யப்பட்ட பாடல்.(என்று நினைக்கிறேன்.) பொதுவிழாக்களில் தடை, வானொலியில் தடை இல்லை என்பது ஒரு அபத்தமான கருத்து. தடை என்றாலே அரசாங்க வானொலிகளில் தடை என்றுதான் அர்த்தம். கசெட்டோ எல் பி ரெகார்டோ வாங்கி வீடுகளில் தனிப்பட்ட முறையில் யாரும் கேட்டுக்கொள்ளலாம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

    திருச்சி வானொலியின் தலைவராக இருந்தவர் (பெயர் தெரியவில்லை. ஓரம்போ பாடல் தடை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்.) பற்றி இளையராஜா ரசிகர் ஒருவர் பயங்கர காட்டத்துடன் சொல்லியிருந்ததை நான் ஒரு பாரம் ஒன்றில் படிக்க நேர்ந்தது. மேலும் அந்தப் பாடல் தடை செய்யப்பட்ட போது அது எங்களுக்கு நன்றாக தெரிந்தே இருந்தது. நீங்களும் இதை அறிந்தவராகத்தான் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இருந்தும் ஏனிந்த வம்படியான பொய்யை பதிவு செய்கிறீர்கள் என்று தெரியவில்லை.

    அமுதவன் சொல்வதுபோல உங்களுக்கு சில விஷயங்கள் பரிச்சயமில்லை என்று தெரிகிறது. அதுவாவது பரவாயில்லை. உங்களுக்குத் தெரிந்ததே உண்மை என்று நீங்கள் எண்ணுவதுதான் வேடிக்கை.

    ReplyDelete
  63. மாலையிட்ட மங்கை படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் தூள் கிளப்பிக்கொண்டிருந்த சமயத்தில் அதில் வரும் 'எங்கள் திராவிடப் பொன்னாடே' பாடல் சிலோன் வானொலியில் தடை செய்யப்பட்டிருந்தது. அந்தத் தடையைப் பற்றிப் பேசியே திமுக கூட்டங்களில், அந்தக் காலத்தில் அந்தப் பாடலை ஒலிபெருக்கியில் போடுவார்கள் அல்லது யாராவது பாடுவார்கள் என்று நண்பர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். இலங்கை வானொலி தடை பற்றிக் கண்ணதாசனும் நிறையப் பேசியிருக்கிறார். இது ஒருபுறமிருக்க -
    காரிகன் நீங்கள் ஒன்று செய்யுங்கள். 'இந்தியா சுதந்திரமடைந்தது 1947ல் . முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு என்றும், திருக்குறள் எழுதியவர் திருவள்ளுவர்' என்றும் ஒரு பதிவு போடுங்கள்.
    சில மேதாவிகள் வருவார்கள். 1947ல் சுதந்திரம் கிடைத்ததாகச் சொல்வது தவறு. 47ல் சிப்பாய்க் கலகம்தான் ஆரம்பமாயிற்று. தவிர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு இல்லை. அவருடைய அண்ணன்தான் இந்தியாவின் முதல் பிரதமர்.
    திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவரல்ல. அதற்கு உரை எழுதியவர்தான் திருவள்ளுவர் என்று பின்னூட்டம் போடுவார்கள். காசா பணமா? பின்னூட்டம் என்றாலேயே எதையாவது அடித்துவிட்டுப் போவது. அதன்மூலம் ஒரு அக்கப்போர் ஆரம்பிக்கமுடியுமா என்று பார்ப்பது என்றே ஆகிவிட்டது இணையத்தில். இது தமிழில் மட்டும்தானா மற்ற மொழிகளிலும் இப்படியா என்பதுதான் தெரியவில்லை.

    ReplyDelete
  64. வாருங்கள் அமுதவன்,

    சால்ஸ் இப்படி எதையாவது சொல்லிப் போவது அவர் வழக்கம் போல. பத்ராகாளி பட தகவல் என்று ஆரம்பித்தார். பின்னர் கவுண்டர் பாய்ன்ட் என்று குழப்பினார். தற்போது ஓரம்போ பாடல் ஏறக்குறைய தமிழகத்தில் தடையே செய்யப்படவில்லை என்பதுபோன்று சொல்கிறார். படிக்கும்போதே அவருக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை என்றே எனக்குத் தோன்றியது.

    ReplyDelete
    Replies
    1. காரிகன்

      ருக்குமணி பாட்டு எங்கும் ஒலிக்கவில்லை எங்கும் பாடவில்லை என்பது போல் மாயையை உருவாக்க வேண்டாம். படம் வெளிவந்தபோது நான் அந்தப் பாடலை ரேடியோவில் கேட்டிருக்கிறேன் . திருவிழாக்களிலும் கேட்டிருக்கிறேன். அப்போது டேப் ரெகார்டர் வீட்டில் இல்லை . வேறு எங்கு அந்தப் பாடலை நான் கேட்டிருக்க முடியும் ? தடை தாமதமாக வந்திருக்கலாம் . ரேடியோவில் ஒலிபரப்பவேயில்லை என்று சொல்வது அபத்தம் . அமுதவன் சார் கற்பனையில் அடுத்தவரைப் பற்றிய தாழ்மையான கருத்தாடல் நல்ல நகைச் சுவை.

      Delete
  65. திரு.அமுதவன்,

    இணையத்தில் உலா வந்தபோது இரண்டு வலைப்பூக்கள் கண்ணில் சிக்கின. பதிவுகளைவிட பின்னூட்டங்கள் நிறைய சொல்கின்றன. இது உங்களின் பார்வைக்கு. நேரமிருந்தால் படித்துப்பார்க்கவும்.
    http://www.tamilpaper.net/?p=6309

    http://mkarthik.blogspot.in/2007/12/blog-post_8297.html

    ReplyDelete
  66. நன்றி காரிகன். நீங்கள் குறிப்பிட்டதால் படித்தேன். திரும்பத் திரும்ப அதையே படித்த சோர்வுதான் வந்தது.

    ReplyDelete
  67. வாங்க சால்ஸ்,

    உங்களுக்கு இதே வேலையாப் போச்சு. முதலில் ஒன்று சொல்வது பின்னர் அப்படியில்லை என்று இன்னொன்று சொல்வது என்று. ஓரம்போ பாடல் முதலில் வானொலிகளில் ஒலிபரப்பப்பட்ட பாடல்தான். அதன் பின்னரே அது தடை செய்யப்பட்டது. நான் இதைத்தான் சொல்லியிருக்கிறேன். முதலில் தமிழக வானொலிகளில் இந்தப் பாடல் தடை செய்யப்படவேயில்லை என்று சொல்லிவிட்டு இப்போது ஒருவேளை பின்னர் தடை வந்திருக்கலாம் என்று நீங்கள் சொல்வதே போதும் உங்களுக்கு சில உண்மைகள் தெரியவில்லை என்பது.

    ReplyDelete
  68. சால்ஸ்,

    உங்கள் தளத்தில் விமல் என்ற குகை மனிதன் வழக்கம் போல சில அபத்தங்களை வெளியிட்டிருக்கிறார். அதற்கு முன் இங்கே வந்திருந்தார். அவரை நான் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. எனவே அவர் சொல்லியதை நான் வெளியிடவில்லை. உடனே உங்கள் தளம் வந்து இப்புடி பண்ணிட்டாங்க என்று புலம்பியிருக்கிறார். நீங்களும் அவரை வரவேற்பறையில் உட்கார சேர் போட்டு கொடுக்கிறீர்கள். வேறென்ன செய்ய முடியும்? இதில் எனக்கு அவர் மீது பயம் என்று குழந்தைத்தனமான சால்ஜாப்பு வேறு. அவர் போன்ற ஆசாமிகள் சொல்லும் கருத்துக்கெல்லாம் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில் நீங்கள் இருப்பதற்காக நான் உங்கள் மீது பரிதாபப்படுகிறேன். இதுதான் உங்களின் தரம் போலும். நன்றாக கும்மியடியுங்கள்.

    ReplyDelete
  69. காரிகன் மற்றும் அமுதவன்,

    தமிழ் இசையமைப்பாளர்கள் பற்றி எழுதும் பலர் பல சாதனைகள் செய்த பழைய மேதைகளைப் பற்றி எழுதுவது இல்லை.

    இளையராஜா மட்டுமே பல சாதனைகளை நிகழ்த்தியதாகவும் அவருக்கு முன்பு பாடல்களும் பின்னணி இசையும் தரமற்றும் ரசிக்கும் தன்மை இல்லாமலும் இருந்ததாகத் தவறான செய்திகளைப் பலர் எழுதிவருகிறார்கள்.

    இப்படியே போனால் இன்னும் ஐம்பது வருடம் கழித்துத் திரைப்படப் பாடல்கள் தரமாகவும் ரசிக்கும் விதத்தில் இருக்க இளையராஜா தான் காரணம் என்றும் . ராகங்களை இயற்றியதும் அவரே என்றும் வரலாற்றில் எழுதப் பட்டிருக்கும்.

    நம் வருங்காலச் சந்ததிகளுக்கு உண்மையை உணர்த்தப் பாடுபடுவோம்.

    ReplyDelete
  70. சேகர்

    உங்கள் கருத்து நல்லது தான்.உங்கள் கூட்டணி தான் சரியில்லை.அரைகுறை தகவல்களை உண்மையாகத் திரிப்பவர்கள் இவர்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஏன் நீங்க உண்மையை சொல்ல வர மாட்டீர்களா?

      Delete

  71. \\தமிழ் இசையமைப்பாளர்கள் பற்றி எழுதும் பலர் பல சாதனைகள் செய்த பழைய மேதைகளைப் பற்றி எழுதுவது இல்லை.

    இளையராஜா மட்டுமே பல சாதனைகளை நிகழ்த்தியதாகவும் அவருக்கு முன்பு பாடல்களும் பின்னணி இசையும் தரமற்றும் ரசிக்கும் தன்மை இல்லாமலும் இருந்ததாகத் தவறான செய்திகளைப் பலர் எழுதிவருகிறார்கள்.

    இப்படியே போனால் இன்னும் ஐம்பது வருடம் கழித்துத் திரைப்படப் பாடல்கள் தரமாகவும் ரசிக்கும் விதத்தில் இருக்க இளையராஜா தான் காரணம் என்றும் . ராகங்களை இயற்றியதும் அவரே என்றும் வரலாற்றில் எழுதப் பட்டிருக்கும்.

    நம் வருங்காலச் சந்ததிகளுக்கு உண்மையை உணர்த்தப் பாடுபடுவோம்.\\
    சேகர், முக்கியமாக நீங்கள் குறிப்பிடும் இந்தக் காரணத்திற்காகத்தான் நான் இணையத்தில் திரையிசைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். இத்தனைக் காலமும் இல்லாத இந்தப் போக்கு அச்சு ஊடகங்களிலும் மெல்ல எட்டிப்பார்க்க ஆரம்பித்திருக்கிறது.
    உங்களைப் போன்ற நடுநிலை எண்ணம் கொண்டவர்களின் கருத்துக்களும் எங்களுடைய கருத்துக்களுடன் சேரும்பொழுது நிச்சயம் சிலவற்றைப் பதிந்துவைக்க முடியும்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி.
      பழைய கலைஞர்களின் உண்மையான திறமை உலகத்திக்கு மறைக்கப்பட்டு விடக்கூடாது என்று நினைக்கும் சாதாரண மனிதன் நான்.
      என் தோழமை என்றும் உங்களுக்கு(உண்மைக்கு) உண்டு.

      Delete
    2. உங்களை நினைக்க பாவமாக இருக்கிறது !

      Delete
  72. வாருங்கள் சேகர்,

    மிகவும் நியாயமான பொருள் பொதிந்த உங்களின் கருத்துக்கு நன்றி. நீங்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் வேளையில் ஒரு சிறிய ஆனால் ஆழமான உண்மையை பதிவிட வேண்டியிருக்கிறது. இணையத்தில் இ.ராஜா ரசிக சிகா மணிகள் என்னவிதமான பிம்பத்தை செயற்கையாக உருவாக்க முயற்சித்தாலும் இணையத்தை தாண்டிய நடைமுறை உலகில் அவர்களின் போலித்தனம் சிதைந்து வருகிறது. அவர்களின் ஆழ்மன அபிலாஷைகள் வெறும் ஆசைகளாகவே இருந்துவருகின்றன.

    தமிழ்நாட்டில் அதிகம் கேட்கப்பட்ட,இன்றும் கேட்கப்படும் பாடல்கள் என்றால் அது எம் ஜி ஆர் பாடல்கள்தான் என்று சொல்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள். அது மறுக்கமுடியாத உண்மையாகவே இருக்கிறது. எம் ஜி ஆர் பாடல்கள் என்றால் அங்கே கண்டிப்பாக இளையராஜாவுக்கு இடமே இல்லை. எம் ஜி ஆர்- இளையராஜா இணைப்பில் ஒரு படம் வந்திருந்தால் கூட ராஜா ரசிகர்கள் இந்த உண்மையை தங்களுக்கு சாதகமாக திரிக்க ஒரு வாய்ப்பு இருந்திருக்கும். But sadly that's impossible.உன்னை விட மாட்டேன் என்றொரு படம் எம் ஜி ஆர் நடிக்க இளையராஜா இசையில் வருவதாக பேச்சு அடிபட்டது. படம் கை விடப்பட்டது.

    இளையராஜாவுக்கு முன் தமிழர்கள் நல்ல இசையை ரசிக்கவில்லை, ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கான பாடல்களே இசைக்கப்பட்டன போன்ற மூளை மழுங்கிய வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் கிளாசிக் என்றாலே அங்கே இளையராஜாவை எதோ ஒரு மூலையில் தேட வேண்டியதாக இருப்பதுதான் உண்மை. புனைவுகளுக்கு அலங்காரம் செய்து தேரில் ஏற்றி ஊர்வலம் வந்தால் அந்த மாயை எத்தனை காலம் நிலைக்கும்?

    மூன்றாம் பிறை படப் பாடல் ஒன்று உண்டு."நீல சாயம் வெளுத்துப் போச்சு.டும் டும் டும் ராஜா வேஷம் கலைஞ்சு போச்சு டும் டும் டும் " இளையராஜாவே ஒரு தீர்க்கதரிசி போல பாடிவிட்டார் என்று எடுத்துக்கொள்ளலாம்.

    ReplyDelete
    Replies
    1. பழைய பாட்டு உதாரணம் ஏது கிடைக்கலியா காரிகன் ? இளையராஜா உங்களுக்கும் உதவுறார் பாத்தீகளா?

      Delete
  73. அனானி,
    நீங்கள் யார் என்று எனக்குத் தெரியும். விமல் என்று ஒரு பெயர் சிவா என்றொரு பெயர். ஏதேதோ சொல்லிப்பார்த்தீர்கள். குட்டைகளில் குடியிருக்கும் சிறு பூச்சிகளின் தரத்திற்கேற்ற தளம் இதுவல்ல. சேகரைப் பார்த்து பரிதாபம் கொள்வது இருக்கட்டும். அவர் கேட்ட "ஏன் நீங்க உண்மையை சொல்ல வர மாட்டீர்களா?" என்ற கேள்விக்கு உங்களின் பதில் தான் "உங்களை நினைக்க பாவமாக இருக்கிறது !" என்பதாக இருக்குமோ? இதுபோன்று அடக்கி வாசித்தால் நலம். மாறாக தனி மனிதத் தாக்குதலில் ஈடுபடும் விதமாக காட்டுமிராண்டித்தனமாக கருத்து சொல்ல எத்தனித்தால் உங்களின் குப்பை தூக்கி எறியப்படும். சவுந்தர், சால்ஸ் தளங்களில் உங்களின் கருமத்தை வைத்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  74. நான் போடுவதுதான் இசை அதைக் கேட்க வேண்டியது உங்க தலைஎழுத்து என்று சொன்ன ராசாவை இன்னும் தூக்கித் தலையில் வைத்து ஆடும் கூட்டம் இருக்கும் வரை நாடு உருப்படாது.

    ReplyDelete
  75. எப்படி இவ்வளவு பாடல்களை நினைவில் வைத்திருகிறீர்கள் என்பது ஆச்சர்யம். இசை அலசல் அபாரம்.
    நான் தீவிர இசை விரும்பி இல்லை. நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் இளைய ராஜா புகழின் உச்சியில் இருந்தார். திரை இசையை அவ்வளவாக விரும்பிக் கேட்டதில்லை. திருவிழாக்கள், நிகழ்ச்சிகள் போன்றவற்றில் ஸ்பீக்கர் வைத்து போடப்படும் பாடல்கள் மட்டுமே எனக்கு தெரியும். இசை அமைத்தவர் பாடியவர் பாடல் இயற்றியவர் போன்றவற்றை அறிந்து கொள்ளும் ஆர்வம் அப்போது இல்லை. ஏதோ காதில் விழுவதை கேட்பேன்.
    அதனால் நான் சொல்லும் கருத்துகள் கேவிப் பட்ட விஷயங்களை வைத்து எழுதப்பட்டவை என்பதை முதலிலேயே கூறி விடுகிறேன்
    நீங்கள் குறிப்பிட்ட சில பாடல்கள் இதுவரை நான் கேட்ட நினவு இல்லை. எம்.எஸ். வி, ராஜா அளவுக்கு ரசிகாபிமானிகளை பெறவில்லை என்றே கருதுகிறேன். காரணம் அவர்களது படங்கள் நாயகன் நாயகி படங்களாகவே கருதப் பட்டன. எம்ஜி ஆர் பாடல்கள் சிவாஜி பாடல்கள் என்றுதான் பிரித்துப் பார்ப்பார்கள். பாமர மக்கள் கூட கண்ணதாசனை தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் எம். எஸ். வி.யை அவ்வளவாக அறிந்திருக்க வாய்ப்பு குறைவாகத்தான் இருந்திருக்கும் . ஊடகங்கள் தொழில்நுட்பங்கள் வளர்ச்சிக்குப்பிறகு நாயகனின் படங்கள் எல்லாம் இயக்குனரின் படங்களாக மாற்றம் பெற்றன. இசை அமைப்பாளரின் முக்கியத்துவமும் தெரிய ஆரம்பித்தது. பரவலான உலக அறிவு கலைகளை நுணுக்கங்களை விவாதிக்கும் தலைமுறை தொடங்கியது. அது இளையராஜாவுக்கு ஒரு சாதகம் அவரது அபார இசைத் திறமை அந்த தலைமுறையை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டது. என்று நினைக்கிறேன். ராஜாவின் ரசிகர்கள் பெரும்பாலும் நடுத்தர வயதுடையவர்கள்.
    ரஹ்மானின் ரசிகர்கள் இளைஞர்கள். அவர்களின் அபிமானம் நிலைத்த தன்மை கொண்டது அல்ல. எளிதில் மாறக்கூடியது. தலைமுறை இடைவெளியே இதற்கு காரணம் . ராசாமீது ரசிகர்கள் கொண்டுள்ள அபிமானம் வெறும் இசை சார்ந்தது மட்டுமல்ல
    தற்போது கடுகளவு மேம்பட்ட இசை அறிவை வைத்துப் பார்க்கும்போது மூவருமே ஒரு தனித் தன்மை பெற்றவர்கள் என்பதாகவே உணர்கிறேன்.

    ReplyDelete
  76. டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று
    \\எம்.எஸ். வி, ராஜா அளவுக்கு ரசிகாபிமானிகளை பெறவில்லை என்றே கருதுகிறேன். காரணம் அவர்களது படங்கள் நாயகன் நாயகி படங்களாகவே கருதப் பட்டன. எம்ஜி ஆர் பாடல்கள் சிவாஜி பாடல்கள் என்றுதான் பிரித்துப் பார்ப்பார்கள். பாமர மக்கள் கூட கண்ணதாசனை தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் எம். எஸ். வி.யை அவ்வளவாக அறிந்திருக்க வாய்ப்பு குறைவாகத்தான் இருந்திருக்கும் . ஊடகங்கள் தொழில்நுட்பங்கள் வளர்ச்சிக்குப்பிறகு நாயகனின் படங்கள் எல்லாம் இயக்குனரின் படங்களாக மாற்றம் பெற்றன. இசை அமைப்பாளரின் முக்கியத்துவமும் தெரிய ஆரம்பித்தது. பரவலான உலக அறிவு கலைகளை நுணுக்கங்களை விவாதிக்கும் தலைமுறை தொடங்கியது. அது இளையராஜாவுக்கு ஒரு சாதகம் அவரது அபார இசைத் திறமை அந்த தலைமுறையை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டது. என்று நினைக்கிறேன். \\

    முரளிதரன் அவர்களே, இளையராஜாவுக்கு எப்படி ஒரு ரசிகப்பட்டாளம் அமைந்தது என்பதற்கான அழகிய அலசலாக உங்கள் கருத்து அமைந்திருக்கிறது. நீங்கள் இது சம்பந்தமாக இங்கே சொல்லியிருக்கும் தகவல்கள் அறுபது சதவிகித விஷயத்தைப் பூர்த்தி செய்துவிடுகிறது. ரசிகப்பட்டாளம் ஏற்படுவதற்கான காரணத்தை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அந்தக் காரணம் மட்டுமே உண்மையாகவும் வரலாறாகவும் மாறிவிடுமா மாறிவிடலாமா என்பதுதான் கேள்வி. அவருக்கு இப்படி ஒரு ரசிக மனப்பான்மை ஏற்பட்டுவிடுவதற்கு ஊடகங்கள் மட்டுமின்றி பல்வேறு காரணிகள் இருக்கின்றன. ஒரு உதாரணம் சொல்கிறேன். இன்றைக்கு சமையல் கலையில் நிறைய நிபுணத்துவம் பெற்றவர்கள் இருக்கிறார்கள். சன் டிவி ஆரம்பிக்கப்பட்ட புதிதில் நட்சத்திர ஓட்டலைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் இளைஞர் மிகவும் பிரபலமாக இருந்தார். அடுத்து மல்லிகா பத்ரிநாத். அதற்கடுத்து தாமோதரன், கொஞ்ச நாட்களுக்கு ஜேக்கப், கண்ணதாசனின் மகள் ரேவதி சண்முகம், இப்போது வெங்கடேஷ் பட், மால்குடி கவிதா இவர்களெல்லாம் இன்றைக்கு சமையலில் மிகமிகப் பிரபலம். இவர்களெல்லாம் இத்தனைப் பிரபலங்களாக இருப்பதற்கு காரணம் இன்றைய ஊடகம். இதை சாதாரண ஒன்றாக எடுத்துக்கொள்வீர்களா அல்லது இவர்கள்தாம் சமையலின் உச்சம், இவர்கள்தாம் சமைக்கக் கற்றுக்கொடுத்தவர்கள், இவர்கள் சொல்லித்தான் எங்கள் வீட்டில் சமையலே நடைபெறுகிறது, சமையல் என்றால் அது இவர்கள் மட்டுமே. பலர் வீட்டில் அடுப்பு எரிவதே இவர்களால்தான். எங்கள் ஊண், உயிர், உதிரம் எல்லாமே இவர்கள்தான். இவர்களுக்கு இணை இந்த உலகில் எங்கேயும் கிடையாது என்று கூப்பாடு போடுவதை ஒப்புக்கொள்வீர்களா?ராஜாவிலிருந்து மட்டுமே உன்னுடைய இசை ரசனை துவங்குகிறது என்றால் அதற்கு முன்னரும் இங்கே இசை என்பது இருந்தது என்பதைத்தான் சொல்கிறோம்.
    நீங்கள் ஒரு இலக்கிய ரசிகர். இன்றைய படைப்புலகம் முன்பு வைக்கப்படும் சேதி என்ன? தமிழில் எழுத்தாளர்கள் மூன்றே மூன்று பேர்தான். ஜெயமோகன், சாருநிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன் என்பது. நமக்கென்ன என்று பேசாமல் போய்விடுகிறோமா? கல்கி புதுமைப்பித்தனிலிருந்து அகிலன் திஜா ஜெயகாந்தன் என்று அடையாளம் காட்டமுற்படுகிறோம் இல்லையா? அதுதான் இங்கே செய்யப்படுகிறது.

    ReplyDelete
    Replies
    1. சார்

      சமையலும் சங்கீதமும் ஒன்றாகிவிடுமா? சங்கீதம் தெரிந்தோர் எளிதாக சமைத்து விடலாம் . சமைப்பவர்கள் சங்கீதம் கற்று விட முடியுமா என்ன!? ஒப்புமை சரியில்லை . சமையல் கலைஞர்களை ஒரு சிலருக்கே தெரியும் . சங்கீதக்காரர்களை கோடி ஜனங்களுக்கு தெரியும் . இளையராஜா சங்கீதம் காற்றில் கரையும் கற்பூரம் அல்ல , கற்படியுருவம் . காலத்தால் அழியாதது . அவருக்கு முன்னர் உள்ள இசை மேதைகளுக்கும் இது பொருந்தும் .

      Delete
  77. --------நான் போடுவதுதான் இசை அதைக் கேட்க வேண்டியது உங்க தலைஎழுத்து என்று சொன்ன ராசாவை---------

    வாங்க கண்ணன்,

    வருகைக்கு நன்றி. இ.ராஜா இந்தப் பொன் மொழியை ஒரு பொங்கல் நிகழ்ச்சியின் போது ஒரு டிவி சானலில் சொல்லியதாக படித்திருக்கிறேன். இதுபற்றி ஒரு பிரபல பதிவர் கூட மனம் குமைந்து எழுதியிருந்தார். தொன்னூறுகளில் ராஜாவின் அட்டகாசம் சகட்டுமேனிக்கு ஏறிக்கொண்டிருந்தது. கவிதை என்கிற பெயரில் கண்ணா பின்னா வென்று ஏதேதோ வார்த்தைகள் இசையோடு இழையாமல் கரடுமுரடாக ஒரு பக்கம் பாட, இந்தப் பக்கம் இடையிசை என்று ஒரு அவஸ்தை சம்பந்தமில்லாமல் நின்று நின்று ஒலிக்க, தொடர்பில்லாத தாளம் பாடலோடு முட்டிமோதிக்கொண்டு இருக்க அவற்றையெல்லாம் தமிழர்கள் வேறு வழியின்றி கேட்டார்கள். அதனால்தான் ரஹ்மானின் சுத்த சங்கீதம் ஒரே நொடியில் இ.ராஜாவின் இசைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. சொல்லப் போனால் உச்சத்தில் இருந்தபோதே வீழ்ந்தவர் இவராகத்தான் இருக்க முடியும். ஜென்டில்மேன் பாடல்கள் தமிழகத்தை கலங்கடித்துக்கொண்டிருந்த வேளையில் இ.ராஜாவை தேடவேண்டிய நிலை வந்துவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. எல்லோருமே உச்சத்தில் இருக்கும்போதுதான் வீழ்வார்கள் . புதிதாய் ஏதோ சொல்கிறீர்களே! எம்.எஸ்.வி , கே. வி . அவர்களுக்கும் அந்த கதிதானே!

      Delete
  78. \\ராஜாவின் ரசிகர்கள் பெரும்பாலும் நடுத்தர வயதுடையவர்கள்.
    ரஹ்மானின் ரசிகர்கள் இளைஞர்கள். அவர்களின் அபிமானம் நிலைத்த தன்மை கொண்டது அல்ல. எளிதில் மாறக்கூடியது. தலைமுறை இடைவெளியே இதற்கு காரணம் . ராசாமீது ரசிகர்கள் கொண்டுள்ள அபிமானம் வெறும் இசை சார்ந்தது மட்டுமல்ல\\
    உங்களுடைய இந்தக் கடைசி வரி மிகவும் முக்கியம். இதில் பெருமளவு அரசியலும் சார்ந்திருக்கிறது. ஆனால் அந்த அரசியலுக்கு இ.ராவிடமிருந்து எந்தவிதமான ஆதரவோ பங்களிப்போ இல்லை என்பதுதான் நகைமுரண். ஆனால் இ.ராவின் ஆதரவு இருக்கிறதோ இல்லையோ எங்களுக்கு அவருடைய பெயர் ஒன்றே போதும் என்ற அளவில் ஒரு அரசியல் ஓடிக்கொண்டிருக்கிறது.
    ரகுமானின் பாடல்கள் வெறும் அவருடைய ரசிகர்களைச் சார்ந்து மட்டுமே இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. இன்றைய உலக இசையின் ரசனையை, அதன் போக்கை உணர்ந்துகொண்டு செயல்புரியும் ஒரு கலைஞர் அவர். அவர் இசையமைப்பது இசை ரசிகர்களுக்காகத்தானே தவிர அவருடைய ரசிகர்களுக்காக இல்லை. அவர் அடைந்த உச்சமும் சரி; அடையப்போவதும் சரி இனிமேல் எந்த இந்திய இசைக்கலைஞனாலும் அவ்வளவு எளிதாக நினைத்துக்கூட பார்க்கமுடியாத உச்சம்.
    எனக்கு ரகுமான் பிடிக்குமா இல்லையா, உங்களுக்குப் பிடிக்குமா இல்லையா என்ற பாமரத்தனமான ரசிக கண்ணோட்டத்தையெல்லாம் அவர் கடந்துவிட்டார் என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
  79. வாருங்கள் மூங்கில் காற்றே,

    பாராட்டுக்கு நன்றி. எத்தனைப் பாடலாக இருந்தால் என்ன? பிடித்துவிட்டால் அவை என்றைக்கும் மறந்து போகாது. சில சமயங்களில் பல கன்றாவிகளும் கூட நினைவில் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. வினோதம்தான்.

    நீங்கள் சொல்லியிருக்கும் இ.ராஜா பற்றிய கருத்துக்கு எனது பதில் வருகிறது.திரு அமுதவனே உங்களுக்கு பதில் சொல்லிவிட்டாலும் எனது பார்வையில் சில கருத்துக்களை நான் எழுதவுள்ளேன்.

    ராஜா அளவுக்கு எம் எஸ் விக்கு ரசிகர்கள் இல்லை என்ற எண்ணம் உங்களின் பால்ய தினத்து அனுபவங்களின் மீது கட்டமைக்கப்பட்ட ஒரு தனிப்பட்ட கருத்து. அதில் உண்மையில்லை.ஆனால் எம் எஸ் வி காலத்தில் எம் ஜி ஆர் பாடல்கள் சிவாஜி பாடல்கள் என்றே பெரும்பான்மையான மக்கள் பகுத்துப் பார்த்தனர். (மோகன் பாடல்கள், ராமராஜன் பாடல்கள் என்று பின்னாட்களில் இ.ராஜாவின் இசைக்கும் இந்தக் கொடுமை நடந்தது) கவிஞர்கள், இசை அமைப்பாளர்கள் எல்லோருமே அப்போது மக்களிடம் அறியப்பட்டே இருந்தார்கள். மருதகாசி, பட்டுக்கோட்டையார்,கண்ணதாசன், வாலி, எம் எஸ் விஸ்வநாதன், கே வி மகாதேவன் போன்ற பெயர்கள் மக்களின் புழக்கத்தில் இருந்தே வந்தது.

    எழுபதுகளில் நமது சினிமா நீர்த்துப்போனது. புதிய முயற்சிகளும் நவீன சிந்தனைகளும் அரிதாகிப்போயின. கே பாலச்சந்தர் ஒருவரே உருப்படியான படங்கள் கொடுத்துக்கொண்டிருந்தார். எழுபதுகளின் இறுதியில் ஒரு திடீர் மாற்றம் நிகழ்ந்தது. கதை சொல்லும் பாணியும், படப்பிடிப்பு அரங்கங்களும், காட்சிகளும், இசையும் இந்த மாற்றத்தின் முக்கிய வித்துக்கள். பாரதிராஜா, இளையராஜா, நிவாஸ், பாக்கியராஜ், என்று ஒரு புதிய பாய்ச்சல் அதுவரை இருந்த வண்ணங்களை மாற்றி அமைத்தது. ஒளிப்பதிவு நிவாஸ், பாலுமஹேந்திரா, அசோக் குமார் என்றால் கை தட்டிய ரசிகர் கூட்டம் அப்போது இருந்தது.இதே வரவேற்பு இளையராஜாவுக்கும் இல்லாமலில்லை. கதைக் களங்கள், கதை சொல்லும் யுத்தி, காட்சிகளின் பாணி மாறியதற்கேற்ப இசையும் மாற வேண்டிய சூழல் உருவானது. இந்த இடத்தில் இளையராஜா மிகச் சரியாக பொருந்தினார். அதுதான் அவரை மேலே மேலே உயர்த்திச் சென்றது. இ. ரா வுக்குப் பிறகு இதே போல 15 வருடங்கள் கழித்து ஏற்பட்ட மற்றொரு இசை வெற்றிடம் ரஹ்மானை கொண்டுவந்தது. 52இல் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, 65இல் தனியாக விஸ்வநாதன்,76இல் இளையராஜா, 92இல் ரஹ்மான். அடுத்த இசையதிர்ச்சி எப்போது நிகழும் என்று தெரியவில்லை.

    இவர்கள் மூவரும் (டி கே ராமமூர்த்தியைச் சேர்த்து நால்வரும்) தமிழிசையின் நவீன பாணிக்கு வித்திட்டவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. இப்ப மட்டும் இளையராஜா தமிழிசைக்கு வித்திட்டவர் ஆகிறாரா? நேற்று ஒரு பேச்சு . இன்று ஒரு பேச்சு .

      Delete
  80. பாரதிராஜாவின் முதல் படம் பதினாறு வயதினிலே என்று பலர் நினைக்கிறார்கள். அவரின் முதல் படம் (பெயர் தெரியவில்லை )ஆனால் அதன் இசை V.குமார் அந்தப் படம் சில காரணத்தால் எடுக்கமுடியவில்லை.

    ஒருவேளை அந்தப் படம் முழுதாக எடுத்து திரையிட்டு வெற்றி அடைந்திருந்தாலும் சரி தோல்வியாக இருந்தாலும். இளையாராஜா பத்தோடு பதினொன்றாகவே இருந்திருப்பார்.

    பாரதிராஜாவின் முதல் படம் வெற்றி என்றால் அவருடைய அடுத்தப் படத்தின் இசை V.குமாராகதான் இருக்கும்.
    தோல்வி என்றால் பாரதிராஜாவும் அவர் மூலம் சினிமாவுக்கு வந்த இயக்குனர்களும் திரைத்துறையில் இருந்திருக்க மாட்டார்கள் பிறகு எப்படி இளையராஜா மேதையாகியிருக்க முடியும்.
    .........................................................................................

    ReplyDelete
  81. சேகர்

    பாரதி ராஜாவினால்தான் இளையராஜா முன்னேறினார் என்று சொல்கிறீர்களா?

    ReplyDelete
    Replies
    1. சற்று வலுவில்லாத கருத்தை சொல்லும்போது பாய்ந்து வந்து கேள்வி கேட்கிறீர்கள்.

      இதற்கு முன் சாட்சியுடன் சொன்ன குறைகளுக்கு முடிந்தால் பதில் சொல்லுங்கள்.

      அரைகுறையாக அவிழ்த்து விட்ட பல பாடல்களைச் சொல்லமுடியும்.

      சவாலுக்கு நீங்க தயாரா?

      Delete
    2. பார்த்தீர்களா உங்களுக்கே தெரிகிறது நீங்கள் சொன்னது வலுவில்லாத கருத்து என்று!

      Delete
  82. -----அந்த அரசியலுக்கு இ.ராவிடமிருந்து எந்தவிதமான ஆதரவோ பங்களிப்போ இல்லை என்பதுதான் நகைமுரண். ஆனால் இ.ராவின் ஆதரவு இருக்கிறதோ இல்லையோ எங்களுக்கு அவருடைய பெயர் ஒன்றே போதும் என்ற அளவில் ஒரு அரசியல் ஓடிக்கொண்டிருக்கிறது.----

    அமுதவன் சார்,

    சில சமயங்களில் இளையராஜாவுக்கும் மைக்கல் ஜாக்ஸனுக்கும் பெரிய ஒற்றுமை இருப்பதாக எனக்குத் தோன்றுவதுண்டு. இருவருமே தாங்கள் சார்ந்த இனத்தை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பாதவர்களாக தோற்றமளிக்கிறார்கள்.

    எம் ஜே - கறுப்பின கலைஞனாக பிறந்து தோற்றத்தில் வெள்ளையனாக மாறியவர். இதனாலே பல கறுப்பின மக்கள் இவரை தங்கள் அடையாளமாக கருதுவதில்லை.

    இ.ராஜா- சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து வந்த இவர் இன்றைக்கு பூஜை புனஸ்காரம் என்று பார்பனீயத்தின் பாகம் சாய்ந்திருப்பது பலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. காரிகன்

      பூஜையும் புனஸ்காராமும் பார்பனிய சமூகத்திற்கு மட்டும் சொந்தம் என்ற எண்ணமே தவறானது . அவர்கள் ஏற்படுத்தியிருக்கும் மாயை . உங்களுக்கும் அந்த மாயை இருக்கிறது.

      Delete
  83. சேகர்,

    பாரதிராஜாவுக்கு பதினாறு வயதினிலே படம் வரும் முன்னே ஒரு படம் வாய்த்ததும் சில காரணங்களினால் அந்தப் படம் நின்றுபோனதும் பற்றி படித்திருக்கிறேன். அதற்கு இசை வி குமார் என்பது இப்போதுதான் அறிகிறேன். ஆச்சர்யமாக இருக்கிறது. அந்தப் படம் வந்திருந்தால் அது தமிழ்த் திரையை வேறுவிதமாக மாற்றியிருக்கலாம். யார் கண்டது?

    ----ஒருவேளை அந்தப் படம் முழுதாக எடுத்து திரையிட்டு வெற்றி அடைந்திருந்தாலும் சரி தோல்வியாக இருந்தாலும். இளையாராஜா பத்தோடு பதினொன்றாகவே இருந்திருப்பார். பாரதிராஜாவின் முதல் படம் வெற்றி என்றால் அவருடைய அடுத்தப் படத்தின் இசை V.குமாராகதான் இருக்கும்.
    தோல்வி என்றால் பாரதிராஜாவும் அவர் மூலம் சினிமாவுக்கு வந்த இயக்குனர்களும் திரைத்துறையில் இருந்திருக்க மாட்டார்கள் பிறகு எப்படி இளையராஜா மேதையாகியிருக்க முடியும். -----

    It's purely a hypothetical question. ஆனால் நீங்கள் குறிப்பிட விரும்பும் செய்தி கண்டிப்பாக விவாதிக்கப்படவேண்டியதே. ஏனென்றால் அதில் உண்மை இருக்கிறது.

    என் நண்பன் ஒருவன் பதினாறு வயதினிலே படம்தான் இளையராஜாவுக்கு முதல் படம் என்றும் அன்னக்கிளி இதற்குப் பிறகு வந்தது என்றும் நினைத்திருந்தான். அன்னக்கிளிக்குப் பிறகு இளையராஜாவுக்கு பத்ரகாளி பெரிய வெளிச்சம் கொடுத்தது. மறுப்பு இல்லை. ஆனால் அவர் மீண்டும் பெரிய அளவில் பேசப்பட்டது 16 வயதினிலே படத்தில்தான். இளையராஜா அறிந்திருந்த அவருக்கு வசப்பட்ட இசை பாணிக்கான கதைக் களங்கள் அப்போது வேறு எவரிடமும் இல்லை. 77இல் பாரதிராஜா வந்ததும்தான் அவருக்கு அந்த பாதை கிடைத்தது. இளையராஜாவின் இசைக்கான வழித் தடத்தை ஏற்படுத்திக் கொடுத்தது பாரதிராஜாதான் என்பது மிகையில்லாத உண்மை. எனவே --பாரதி ராஜாவினால்தான் இளையராஜா முன்னேறினார் என்று சொல்கிறீர்களா?-- என்ற திரு சால்ஸ் அவர்களின் கேள்விக்கு பதில் நேரடியாக இல்லாவிட்டாலும் ஒரு விதத்தில் ஆம் என்பதே.

    ஒரு பதிவாகவே எழுதப்படவேண்டிய கருத்தை முன் வைத்திருக்கிறீர்கள் சேகர். அதற்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  84. வாங்க சால்ஸ்,

    நீங்கள் சொன்ன எதுவுமே எந்த உருப்படியான தகவலையும் எனக்குத் தெரிவிக்கவில்லை.

    -----எல்லோருமே உச்சத்தில் இருக்கும்போதுதான் வீழ்வார்கள் . புதிதாய் ஏதோ சொல்கிறீர்களே! எம்.எஸ்.வி , கே. வி . அவர்களுக்கும் அந்த கதிதானே!-------

    என்ற உங்களின் நக்கலுக்கு மட்டும் சற்று விளக்கம் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

    எம் எஸ் வியோ கே வி மகாதேவனோ உச்சத்தில் இருந்த போது வீழ்ந்தவர்கள் கிடையாது. அன்னக்கிளி வந்ததும் எம் எஸ் வி காணாமல் போகவில்லை. ஆனால் அவரது இசை கொஞ்சம் கொஞ்சமாக இளையராஜா என்ற புதிய இசை வரவினால் மூழ்கடிக்கப்பட்டது உண்மைதான். இளைய தலைமுறையினர் ஒரேடியாக இ.ராஜா பக்கம் சாய்ந்ததும் எம் எஸ் வி சென்ற தலைமுறை இசை அமைப்பாளராக மாறினார். எண்பதுகளுக்குப் பிறகு பல நல்ல பாடல்களை அளித்திருந்தாலும் அவர் இசை பெரிதாக பேசப்படவில்லை. ரசனை மாற்றமே இதன் காரணம். எம் எஸ் வி படிப்படியாக கீழிறங்கினார்.

    இ.ராஜா வின் கதையே வேறு. 92 இல் அவர் இசை அமைத்த படங்கள் ஏறக்குறைய 50தை எட்டும். இந்த வருடம்தான் ரஹ்மானின் ரோஜா வந்தது. அது வந்ததும் எப்படி ஒரு பெரிய இசை சாம்ராஜ்யம் சரிந்தது என்பதை வரலாறு பதிவு செய்தே வைத்திருக்கிறது. அதை நீங்களோ நானோ மாற்ற முடியாது. சின்ன சின்ன ஆசை தமிழகத்தை என்ன செய்தது என்பதும், அது ஏற்படுத்திய பாதிப்பும் நாம் அறிந்த ஒன்றுதான். இதில் நான் புதிதாக சொல்ல என்ன இருக்கிறது? ஒரே பாடலில் ஒரு மிகப் பெரிய இசை சகாப்தம் வீழ்ந்தது என்றால் அது நடந்தது 92இல்தான். அதைச் செய்தது ரஹ்மான் என்ற ஒரு சின்னப் பையன். அதை யாருக்கு செய்தார் என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ?

    உச்சத்தில் இருந்த போது சடாரென்று காணாமல் போனதால்தான் ராஜா ரசிகர்களால் இன்றுவரை ரஹ்மான் என்ற ஒரு வராலற்று நிகழ்வை ஜீரணிக்க முடியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. காரிகன்

      ரகுமான் வந்த வருஷமே அதாவது 92 இல் ஒரு படமும் இல்லாமல் இளையராஜா வீழ்ந்துவிட்டார் என்று பொய்யுரைக்கிறீர்கள். 92 இல் மட்டும் 66 படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார் . பல படங்களின் பாடல்கள் ஹிட். 93 இல் 52 படங்களுக்கு , 94 இல் 33 என்று சொல்லிக் கொண்டே போகலாம் . சந்தேகம் இருந்தால் இணையத்தில் அந்த எண்ணிக்கையை சரிபார்க்கவும். 2014 முடிந்து இப்போதும் இசையமைத்துக் கொண்டுதான் இருக்கிறார் . வீழவில்லை. இன்னும் இளையராஜாவிற்கு என்றே நேரம் ஒதுக்கும் டி வி சேனல்களும் எப் .எம். களும் உண்டு . ஆனால் எம்.எஸ்.வி க்கும் மகாதேவனுக்கும் தனி நேரம் ஒதுக்கவில்லை . படாரென்று வீழ்ந்தவர்கள் அவர்களே! இளையராஜா வீழவேயில்லை.

      Delete
    2. முரசு, சன் லைப், ஜெயா மேக்ஸ்,போன்ற சானல்களையும் மெகா டிவி யின் அமுதகானம், என்றென்றும் எம் எஸ் வி போன்ற நிகழ்சிகளையும் நீங்கள் கேள்விபட்டதே இல்லையா?

      Delete
    3. நான் சொன்னது தனிப்பட்ட பெயரில் நிகழ்ச்சி உள்ளதா என்பதுதான்! என்றென்றும் எம்.எஸ்.வி ஒன்று இருக்கிறது . வேறு ஏதாவது இருக்கிறதா?

      Delete
  85. காரிகன்
    \\சில சமயங்களில் இளையராஜாவுக்கும் மைக்கல் ஜாக்ஸனுக்கும் பெரிய ஒற்றுமை இருப்பதாக எனக்குத் தோன்றுவதுண்டு. இருவருமே தாங்கள் சார்ந்த இனத்தை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பாதவர்களாக தோற்றமளிக்கிறார்கள்.

    எம் ஜே - கறுப்பின கலைஞனாக பிறந்து தோற்றத்தில் வெள்ளையனாக மாறியவர். இதனாலே பல கறுப்பின மக்கள் இவரை தங்கள் அடையாளமாக கருதுவதில்லை.

    இ.ராஜா- சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து வந்த இவர் இன்றைக்கு பூஜை புனஸ்காரம் என்று பார்பனீயத்தின் பாகம் சாய்ந்திருப்பது பலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.\\

    இ.ரா இந்த உத்தியை வெகு பிரமாதமாகவே கையாள்வார். 'தியாகராஜரின் கீர்த்தனைகளும் நாய் குரைக்கும் ஓசையும் எனக்கு ஒன்றுதான்' என்று பேட்டி தருவார். எதிர்க்கூட்டம் ஆர்ப்பரித்து எழும் என்று தெரியும். ஸ்ரீரங்கத்துக்குக் கோபுரம் கட்டித்தருகிறேன் என்று அறிவிப்பார்.
    பெரியார் படத்துக்கு இசையமைக்க முடியாது என்று மறுப்பார்.
    தம்முடைய வீட்டிற்கு நவராத்திரி கொலுவோ, ஏதோ ஒன்றை ஏற்படுத்தி தமக்கு வேண்டிய மிகச்சில நண்பர்கள் உறவினர்களை மட்டும் அழைத்து பிரபல கர்நாடக இசை விற்பன்னர்களை வீட்டிற்கு வரவழைத்து சங்கீதக் கச்சேரி நடத்தவைத்து அவர்களுக்கு மிகப்பெரிய தொகையைப் பரிசளித்து மகிழ்வார்.
    'அவரு என்ன வேணும்னாலும் பண்ணிட்டுப் போறாரு. எப்படியிருந்தாலும் அவரு நம்மாளு இல்லையா' என்று மறுபக்கக் கூட்டம் அவரை எந்த நிலையிலும் கைவிட்டுவிடாமல் பேசும், தூக்கிவைத்துக் கொண்டாடும். மக்களின் இந்த மனோநிலைதான் இத்தகைய பிரபலங்களுக்கு என்றைக்கும் இருக்கும் வரம்.
    நம்மைப் பொறுத்தவரை சாதி, இனம் என்ற அடிப்படையில் ஒரு கலைஞனை அணுகக் கூடாது என்பதுதான். திறமை, படைப்பாற்றல் என்ற கோணம்தான் நமக்கானது.

    ReplyDelete
    Replies
    1. சவாலுக்கு அழைத்தேன் அதற்கு பதில் சொல்லாமல் மழுப்புகிறீர்கள்.

      தரமற்ற பாடல்களை தந்து ரசிகர்களை ஏமாற்றி பணம் ஈட்டியிருக்கிறார் என்பதே என் வாதம்.
      அதை தக்க ஆதாரத்துடன் நிரூபிக்கிறேன் தயாரா?

      Delete
  86. மோகன்லால் நடத்திய இசை நிகழ்ச்சி தங்களைத் திருப்திப்படுத்தவில்லை என்று நடந்த போராட்டத்திக்குப் பிறகு நிகழ்ச்சி நடத்தத் தான் வாங்கிய பணத்தைத் திருப்பித் தருவதாக ஒப்புக்கொண்டார்.
    ..........................................................................................................................................................
    இளையராஜா இசையமைத்த 35% பாடல்கள் தொழில்நுட்பக் கோளாறு மற்றும் தரக்குறையுடன் சந்தைப்படுத்தி அதன் மூலம் தான் பெற்ற வருவாயை திருப்பித் தராவிட்டாலும் பரவில்லை தன் ரசிகர்களை ஏமாளிகளாக நினைக்கவேண்டாம் என்பதே ரசிகர்களின் ஆதங்கம்.

    ReplyDelete
    Replies
    1. இளையராஜாவின் எந்தப் பாடல் தரம் குறைந்தது என்பதையும் இசையால் ஜனங்களை எந்தப் பாடல் வைத்து ஏமாற்றினார் என்பதையும் தக்க ஆதாரத்தோடு நிரூபியுங்கள் .

      Delete
    2. ஒரு நடுவரும் பந்தயத் தொகையை இரண்டு லட்சமும் ஏற்பாடு செய்யுங்கள். பிறகு பார்ப்போம்.

      Delete
  87. நீங்கள் சொன்னதுபோல் இனியொரு தளத்தில் வியாசனின் பதிவு படித்தேன். நன்றி. உண்மைத்தமிழன் 'இசை' படத்திற்கான விமர்சனத்தை அவரது தளத்தில் எழுதியிருக்கிறார். பார்த்தீர்களா? பம்பாயில் இ.ராவுக்கும் மணிரத்தினத்திற்கும் இடையில் எழுந்த தகராறு பற்றியும் வேறு சில விஷயங்களையும் எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள்.

    ReplyDelete
  88. This comment has been removed by the author.

    ReplyDelete
  89. சொந்தக்கதை இல்லை.சொந்த கவிதை . அல்லது பயண அனுபவம் எழுதி பதிவுலகில் தொடர்ந்து இருக்க வாழ்த்துக்கின்றேன்!ஹீ

    ReplyDelete
  90. அமுதவன் சார்,

    உண்மைத் தமிழன் இசை பற்றிய விமர்சனத்தில் இ.ரா-மணிரத்னம் லடாய் பற்றி சொல்லியிருந்ததை படித்தேன். இன்னும் கொஞ்சம் விரிவாக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் வந்தது. இப்படித்தான் மமதையுடன் எல்லோரிடமும் முறைத்துக்கொண்டு இ.ராஜா தன்னைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் போட்டுக்கொண்டார் போலும். ரஹ்மான் வந்ததும் எல்லாம் டமால். இப்போது பார்த்தால் சகட்டு மேனிக்கு அட்ரெஸ் இல்லாத இயக்குனர்களுக்கெல்லாம் இசை அமைக்கிறார். ஒரு பாடலும் பெரிய தாக்கத்தை உண்டுபண்ணவில்லை. இப்போதுகூட ஷமிதாப் ஹிந்திப் படத்தின் பாடல்கள் நன்றாக இருப்பதாகவும் bgm படு கேவலமாக இருப்பதாகவும் ஒரு பேச்சு.

    ReplyDelete
  91. வாங்க சேகர்,

    உங்கள் கோபம் வார்த்தைகளில் தெரிந்ததால் உங்களின் பின்னூட்டத்தை நான் எடுத்துவிட்டேன். உங்களை அப்படித் தூண்டிய திரு சால்ஸ் ஸின் கருத்துக்கும் அதே கதவடைப்பு.

    கொஞ்சம் அதிகம் உணர்ச்சிவசப் படுகிறீர்கள் என்று தோன்றுகிறது. அது என்ன தரம் குறைந்த இசை? நான் பேச வந்தேன் நல்ல பாடல். ஒருவேளை ரெகார்டிங் விஷயத்தில் டெக்னிகலாக சில குளறுபடிகள் இருந்திருக்கலாம். நீங்கள் அந்தத் துறையச் சார்ந்தவர் என்று நினைக்கிறேன். எனவே உங்களின் பார்வை போன்று எனக்குத் தோன்றவில்லை. அறிந்த சங்கதிகள் நிறைய எழுதுங்கள்.

    ReplyDelete
  92. வாங்க தனிமரம்,

    கருத்துக்கு நன்றி.

    சாதி பற்றி நான் பேச ஆரம்பித்தால் இசை யின் போக்கு வேறு பக்கம் திரும்பிவிடும். எனக்கு அந்த நோக்கம் கிடையாது. எனவேதான் உங்களின் அந்த பின்னூட்டத்தை தடை செய்தேன். காரி உமிழ்வது என்றெல்லாம் சொல்லாதீர்கள். இ.ராஜாவின் இசையை விமர்சனம் செய்தால் இப்படித்தான் அர்த்தம் எடுத்துக்கொள்வீர்கள் போல.

    சொந்தக் கதை கவிதை பயன கட்டுரை எழுதும் பாணி என்னுடையது அல்ல. ஒருவேளை நீங்கள் அந்த ரகமாக இருக்கலாம். எனக்கு வேறு தளங்கள் வேறு எண்ணங்கள் வேறு பார்வைகள் உள்ளன. இந்தப் பதிவு முழுவதும் இளையராஜா என்ற இசை எழுச்சி எப்படி என்னை பாதித்தது என்பதுதான். இருந்தும் என் எழுத்து ஏன் இப்படி சிலருக்கு கலக்கத்தை கொடுக்கிறது என்று வியப்பாக இருக்கிறது.

    ReplyDelete
  93. காரிகன், தங்களுடைய ஈமெயிலில் பிறகு சந்திக்கிறேன்.

    ReplyDelete
  94. @காரிகன்
    தரம் பற்றி என் தேடலுக்காக நான் கொடுத்த விலை 5 லட்சம். பிறகுதான் பதிவு செய்யும் இடத்தில் நடக்கும் தவறுகள் என்பதை உணர முடிந்தது.
    இது (இசையமைப்பாளர்கள்) அவர்களுக்கும் தெரிந்தே வெளியிடப்படுகிறது புரிந்துகொண்டேன். அதற்குச் சாட்சியாக இன்னும் என்னிடம் இளையராஜாவுடைய 700 புத்தம் புதிய சிடிகள் உள்ளது.

    ReplyDelete
  95. சேகர்,

    நீங்கள் சொல்வது தரமில்லாத இசை கோர்ப்பு. இது டெக்னிகலாக ரெகார்டிங் தொடர்புடைய துறை. எனக்கு இதில் அதிக பரிச்சயங்கள் இல்லை. நீங்கள் அந்தத் துறை சேர்ந்தவராக இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் ஒரு விஷயம் கேள்விப்பட்டிருக்கிறேன். ரஹ்மான்தான் முதலில் தமிழில் நல்ல தரமான ஒலிப்பதிவு செய்தவர் என்பது. அதனால்தான் அவரது பாடல்கள் வேறு பரிமாணத்தில் ஒலித்தன.

    5 லட்சம் என்பது மிகப் பெரிய விலைதான். தொழில் நுட்பக் குளறுபடி இசை அமைப்பாளர்களுக்குத் தெரிந்தே நடக்கிறது என்பது அதிர்ச்சியூட்டும் உண்மை. இசையின் இந்தப் பக்கம் நான் அறியாதது.

    ReplyDelete
  96. kareeganji one interesting point. arrahman never acknowledged anywhere so far that he had worked under ilayaraja. music lovers would often refer rahman as very modest but rahman deliberately and firmly refused to share this information.... i do expect yourself and amudavan ji also to express opinions onthis issue.

    ReplyDelete
  97. நான்கைந்து வாத்தியக்கருவிகள் வாசிக்கத் தெரிந்த இசை வல்லுநர்கள் பொதுவாக ஒரு இசையமைப்பாளரிடம் வேலைப் பார்த்தாலும், அடுத்தடுத்த இசையமைப்பாளர்களின் பாடல் பதிவுகள் மற்றும் பின்னணி இசைக் கோர்ப்புக்களின்போது மற்றவர்களிடமும் சென்று பணியாற்றுவது வழக்கமான ஒன்றுதான். அப்படிப் பணியாற்றுகின்ற எல்லாரையும் தங்கள் ஆத்மார்த்த இசையமைப்பாளர்களாக எல்லாரும் சொல்லிக்கொண்டிருப்பதில்லை. இளையராஜாவும் நிறையப் பேரிடம் வாத்தியங்கள் வாசித்தவர்தாம். வாத்தியங்கள் வாசித்த எல்லார் பெயரையும் சொல்லிக்கொண்டா இருக்கிறார்?

    ஏ.ஆர்.ரகுமானும் நிறையப்பேரிடம் வாத்தியங்கள் வாசித்திருக்கிறார். இ.ராவிடமும் கீ போர்டு வாசித்திருக்கிறார். இன்றைய ஹாரிஸ் ஜெயராஜும் நிறையப் பேரிடம் வாத்தியக்கருவிகள் வாசித்திருக்கிறார். எல்லாரையும் தங்கள் மாஸ்டர் என்று குறிப்பிடுவதில்லை. அம்மாதிரி ஏ.ஆர்.ஆரும் நினைத்திருக்கலாம். அல்லது இ.ராவின் பெயர் இல்லாமலேயே தன்னால் இந்த ஃபீல்டில் நிலைக்கமுடியும் என்ற தன்னம்பிக்கைக் காரணமாகவும் இருக்கலாம்.

    ReplyDelete
  98. ரஹ்மான் இ ரா விடமிருந்ததற்காக இ ரா தான் பெருமை படவேண்டும். ஆனால் அவர் பொறாமை படுவதுதான் நிதர்சனமாக இருக்கிறது.

    ReplyDelete