Thursday 19 February 2015

Music Maniacs:(Exclusive) SYNESTHESIA

நீங்கள் பூக்களோடு பேசியிருக்கிறீர்களா? வானவில்லின் மீது அமர்ந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறதா? மனித மொழிகளில் இன்னும் கண்டுபிடிக்கப்படாத வார்தைகளில்லாத பலவிதமான நிறங்கள் விவரிக்க முடியாத தோற்றத்தில் உங்கள் முன் தோன்றியிருகின்றனவா? உங்கள் மனதுக்குள் இன்னும் இன்னும் உள்ளே பயணம் செய்திருக்கிறீர்களா? மிக மிக முக்கியமாக  இசையைப் பார்த்திருக்கிறீர்களா ?



 ஸ்டீரியோ விஷன் 

    ரெகார்டிங் சென்டர்கள் எனப்படும் இசைப் பதிவகங்கள் இன்றைய தினத்தின் இந்த வினாடியில்   புராதான சின்னங்களாக  மாறி வரும் வேளையில் அவைகளின் இருப்பு எவ்வாறு கடந்த காலத்தின் ஒரு தலைமுறையின் வாழ்விலிருந்து பிரித்தெடுக்க முடியாத உறவாக இருந்தது என்பது ஒரு துயரமான ஆச்சர்யம். இப்படியான பதிவகங்கள் அவைகளை நாடும் இசைப் பறவைகளுக்கு அளித்த உணவுகள் ஏராளம்.  சில சமயங்களில் முக்கிய தெருக்களிலும், பல சமயங்களில் அவைகளைத் தேடிப் போக வேண்டிய நிர்ப்பந்தத்தைத் தவிர வேறொரு காரணங்களும் இல்லாத மர்மமான சந்துக்களிலும் அதிகம் தென்படாமல்  இம்மாதிரியான இசைப் பதிவகங்கள் இருந்தன. ஒரு பத்து வருடங்களுக்கு முன்புவரை புதிதாக ஒரு ரெகார்டிங் சென்டர் இருக்கிறது என்று நான் கேள்விப்பட்டால் எனது முதல் இலக்கு அதுதான். "அங்கெல்லாம் எந்த பஸ்சும் போகாது" என்றால்  நடந்தே போய்விடுவேன். 

        சக்தி மியுசிகல்ஸ், மியூசிக் லேன்ட், சசி ஆடியோ, ஓம் சக்தி, கண்ணன் மியுசிகல்ஸ்,ஆடியோ ஐலண்ட் போன்ற பல பெயர்களில் நான் என் இசைத் தேவைகளை பூர்த்திசெய்த இடங்கள் எனது நினைவடுக்குகளில் விவரிக்க முடியாத   சுகத்தை சுமந்தபடி  ஒளிந்துகொண்டிருக்கின்றன. திருச்சியில் படித்துக் கொண்டிருந்தபோது சிங்காரதோப்பின் ஒற்றையடிப் பாதைகளும், குறுக்குச் சந்துகளும் என்னைப் பார்த்து வியந்த கதைகள் நிறைய உண்டு. முதல் வருடதின் இறுதியில் பெல்லார்மின் ப்ளாக்கிலிருந்து கல்லூரி விடுதியில் இடம் கிடைத்து நான் அங்கு சென்றடைந்த போது என் அறைத்தோழர்கள் நால்வர் இருந்தனர். அவர்களில் ஒருவன்  கேரளாவைச் சேர்ந்த ஜென்சன் என்பவன்.  மெட்ராஸில் பள்ளி முடித்துவிட்டு செயின்ட் ஜொசெப்பில் கம்பியூட்டர் சையன்ஸ் சேர்ந்திருந்தான். ஆரம்பத்தில் வெறும் புன்னகை ஒன்றே இருவருக்கும் இடையேயான நட்பாக இருந்தது. பின்னர் நான் ஆங்கிலப் பாடல்களை தேடித் தேடி வேட்டையாடுவதைக் கண்டு ஒருநாள் ,"உனக்கு ஏற்ற  இடம் மெட்ராஸில் ஒன்று இருக்கிறது. போய்ப்பார். திரும்பியே வரமாட்டாய்." என்றான் வழக்கமான மலையாளம் குழைத்த தமிழிலில். "அப்படியா? அது என்ன இடம்?" என்றேன். "ஸ்டீரியோ விஷன் என்றொரு ரெகார்டிங் கடை மெட்ராஸில் இருக்கிறது. அங்கே இல்லாத ஆல்பங்களே இல்லை." என்று எனது இசை வேட்டைக்கு ஒரு புதிய வனாந்திரத்தையே அடையாளம் காட்டினான். அதுதான் நான் முதன் முதலாக ஸ்டீரியோ விஷன் என்ற பெயரைக் கேட்டது. கேட்ட அந்த நொடியிலேயே அந்தப் பெயர் என் நெஞ்சத்தில்  ஒரு   முதல் முத்தம்  போல உறைந்து விட்டது.

    அதன் பின்  மெட்ராஸ் என்று காதில் விழுந்தாலே எனக்குத் தோன்றும் முதல் காட்சி நான் கண்டேயிராத இந்த ஸ்டீரியோ விஷன் கடைதான். அது எப்படிப்பட்டது எத்தனை பெரியது   எங்கேயிருக்கிறது என்னென்ன இசைத்தட்டுக்கள் அங்கிருக்கின்றன என்ற விபரம் அறியாமலே ஒரு நெருப்புக் காதல் என்னுள் தகிக்க ஆரம்பித்தது. அப்போதுதான் ஆஹா என்ற நார்வே நாட்டின் இசைக்குழு எனக்குப் பரிச்சயமாகியிருந்த நேரம். அவர்களின் ஹன்டிங் ஹை அண்ட் லோ என்ற முதல் ஆல்பம் கொடுத்திருந்த இசையதிர்ச்சி மனதை முழுதும் ஆக்கிரமித்து ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தது. அவர்களின் இரண்டாவது ஆல்பமான ஸ்கவ்ண்ட்ரல் டேஸ் திருச்சியில் எங்கு அலைந்தும் கிடைத்தபாடில்லை. இறுதியில் ஸ்டீரியோ விஷன் மனதிலிருந்து விரலசைத்து அழைக்க என் அறைத் தோழன் ஜென்சனிடம் அது பற்றி விசாரித்தேன். "இதிலென்ன? லீவு முடிந்து வரும்போது வாங்கிவருகிறேன்." என்று மிக ஆதரவாக சொன்னவன், ஊரிலிருந்து திரும்பி வந்தபோது ஆஹாவுடன் வந்து என்னை தடாலடியாக திடுக்கிடச் செய்தான். "ஸ்டீரியோ விஷனில் வாங்கியது" என்று உபரியாக தெரிவித்தான். அப்போதுதான் பார்த்தேன்.  அந்த கசெட்டின் பின்னே கீழே சிவப்புக் கலரில் ஸ்டீரியோ விஷன் நிறுவனத்தின் லோகோவை. ஒரு கருப்பு பிரமிட் அதை மூன்று பகுதிகளாக பிரிக்கும் வெள்ளை நிறத்தில் ஆங்கில Y போன்றதொரு அமைப்பு.  அந்த ஸ்டிக்கர் என் நெஞ்சத்தில் ஒட்டிக்கொண்டது.

       இந்தப் பதிவில்  நான் ஸ்டீரியோ விஷன் கடையை கண்டுபிடித்ததைப் பற்றியோ அங்கு  சென்று வாங்கிய இசைத் தொகுப்புகள் பற்றியோ குறிப்பிடப்போவதில்லை.  இந்தப் பதிவு பாடல்கள் பற்றியதேயல்ல. இது முழுவதும் வேறு களம்.

    மெட்ராஸ் வந்ததும் கல்லூரி படிப்பு போன்ற சமாச்சாரங்களை  விட (!) எனக்கிருந்த ஒரே வேட்கை இசைத் தொகுப்புகள்தான். சைட் எபெக்டஸ், பேஸ்மென்ட் ப்ளுஸ், ஆடியோ போர்ட் போன்ற இசைப் பதிவகங்களுக்கு மத்தியில் ஸ்டீரியோ விஷன் என்ற பெயரே என்னுள் போதையூசி போல ஆழ இறங்கி,  காந்தம் போல ஈர்த்தது. ஸ்டீரியோ என்ற ஆங்கிலப் பெயருக்கு தமிழில் மிகப் பொருத்தமாக என்ன சொல்வது என்று சரியாக தெரியவில்லை.  பல திசைகளில் இருந்தும் ஒலி வரும் அமைப்புச் சாதனத்திலிருந்து ஏற்படும் ஒலி என்றும், ஒலி சாதனம் என்றும், பிரிப்பு இசை என்றும் இந்த சிறிய வார்த்தை தமிழில் வெகு கடினமாகப்  பகுக்கப்படுள்ளது. சுருக்கமாக இரட்டை ஒலி என்று கூறலாம் என்று தோன்றுகிறது. இருந்தும் ஸ்டீரியோ இரண்டுக்கும் மேற்பட்ட ஆதார துவக்கங்களிலிருந்து - உதாரணமாக ஐந்து-  ஒலியை தரக்கூடியது. ஸ்டீரியோ விஷன் என்பதை ஒலிக்காட்சி என்று தமிழ்ப் படுத்தினாலும் இசைக்காட்சி என்றே நான் அழைக்க விரும்புகிறேன். ஏனென்றால் அதில்தான் கனவும் யதார்த்தமும் ஒருங்கே பிணைந்த ஒரு நிஜத்தின் நிழல் எனக்குத் தென்படுகிறது.

    இசையை கேட்பது எல்லோரும் செய்யக்கூடியது. ஒரு இசை நம் மனதுக்குள் ஏற்படுத்தும் காட்சிகள் கூட பலருக்கும் இயல்பாக நடக்கும் நிகழ்வே. உதாரணமாக ஒரு ஒற்றை வயலின் இசை நாம் கடந்துவந்த சில துயர சாலைகளை நம் மனதில் மீண்டும் புதுப்பிக்கலாம். Pink Floyd குழுவினரின் The Wall இசைத் தொகுப்பு கேட்பவரின் மனதுக்குள் பலவிதமான வண்ணம் வரையும் மாய சக்தி கொண்டதாக பலர் சொல்வதுண்டு. அது உண்மைதான். ஏனென்றால்  எனக்கே அது நடந்திருக்கிறது.  ஆனால் நான் இசைக்காட்சி என்று சொல்வது கண்டிப்பாக அதுவல்ல.  இசைக்காட்சி  ஒரு உண்மையான மனித அனுபவம். ஆங்கிலத்தில் இது Synesthesia (ஸினஸ்தீஷ்யா)  என்றழைக்கப்படுகிறது.

            ஸினஸ்தீஷ்யாவை  (synesthesia ) ஒரு ஆச்சர்யமான ஆசீர்வாதம் என்று எடுத்துக்கொள்ளலாம். அல்லது ஒரு பரவசமான பரிசு என்று வியக்கலாம். சில சமயங்களில்  ஒரு சாபம் அல்லது மன நோய் என்று கூட தோன்றுமளவுக்கு  இது ஒரு  வழக்கத்தை மீறிய  வினோதம்.  மர்மமாக   இந்த ஸினஸ்தீஷ்யா அனுபவம் வெகு சிலருக்கே ஏற்படுகிறது. இதன் விகிதம் பத்துக்கு ஒன்று என்று கூட இல்லை. ஆயிரத்தில் ஒன்று என்று வைத்துக்கொள்ளலாம். ஏன் அப்படி என்பதற்கான  காரணிகள் இதுவரை ஒரு தெளிவான விளக்கத்தை அடையவில்லை. எனவே இதை அவர்கள் மற்றவர்களிடம் தெரிவிக்கும் போது  அது  சரியான விகிதத்தில் புரிந்துகொள்ளப்படுவதில்லை. ஸினஸ்தீட் என்று அழைக்கப்படும் இவர்களில் பலர்  மக்களின் பரிகாசிப்புக்கு தங்களின் அனுபவம் இரையாகிவிடக்கூடாது என நினைப்பதால் இதுபற்றி பேசுவதே கிடையாது. யார் இந்த ஸினஸ்தீட்? எளிதாக இப்படிச் சொல்லலாம். இசையைப் பார்ப்பவர்கள். 


     ஸினஸ்தீஷ்யா  உண்மையில் மூளையில் நடக்கும் ஒரு அசாதாரணமான  இசையிணைப்பு.  இரண்டு உணர்ச்சி நரம்புகள் ஒன்றையொன்று உரசிக்கொள்ளும், தொட்டுக்கொள்ளும் ஒரு திடீர் சம்பவம். It happens when two senses cross in the brain. பார்வை உணர்ச்சியும், தொடு  உணர்ச்சியும் ஒன்றின் மீது ஒன்று ஒட்டிக்கொண்டால் நீங்கள் ஒன்றைப் படிக்கும் போது  அந்த எழுத்தை ஒரு குழந்தையின் கன்னத்தைத்  தொடுவது   போல உணர்வீர்கள்.    இது  தவிர விவரிக்க இயலாத  வினோத வடிவம் பெறக்கூடியது ஸினஸ்தீஷ்யா.   வார்த்தைகளையும் எழுத்துக்களையும் காட்சியாக வண்ணமாக பார்ப்பது இதில் ஒரு வகை. திங்கட்கிழமை என்ற வாரத்தையை சிலர் நீல நிறமாகவும், சிகப்பு நிறமாகவும் காண்கிறார்கள். சில சமயங்களில் வார்த்தைகளை எதோ ஒரு மலரின் வாசம் போன்று நுகரக்கூட முடியும்.   H என்ற ஆங்கில எழுத்து சிலருக்கு ஒரு ஆணாக தோன்றும். உதாரணமாக L என்பதை ஒரு பல்லியாகவோ பூச்சியாகவோ   நீங்கள் கண்டால் நீங்களும் ஒரு ஸினஸ்தீட். எண்களை வண்ணங்களாக காண்பது, புரிபடாத வடிவங்களில் ஒலியை காண்பது போன்று    ஸினஸ்தீஷ்யா   நாம் அறிந்த அறிவியலை மாற்றிப்போட்டு  முற்றிலும் உருமாற்றம் செய்து சிலர் தங்களுக்கு எதோ நேர்ந்து விட்டது என முடிவு கட்டிக்கொள்ளுமளவுக்கு சமயங்களில் ஒரு அச்சமூட்டும் அனுபவமாக இருக்கிறது.

      ஸினஸ்தீஷ்யா பல வகைப் பட்டதாக இருந்தாலும் இதன் அபார உச்சம் ஒலியைக் காண்பதுதான். இதைப் படிக்கும் பலர் உடனே எனக்கும் இது நடந்திருக்கிறது என்று எண்ணினால் கொஞ்சம் உங்களையே ஆய்வு செய்து கொள்ளுங்கள்.  ஒரு குறிப்பிட்ட இசையைக் கேட்டதும்  மனித உருவங்களோ, மேகங்களோ, மின்சார ரயில்களோ, பச்சை வயல் வெளிகளோ, தண்ணீர்த் துளிகளோ, காதலன், காதலியின் முகமோ, நேற்று சாப்பிட்ட வெங்காய ஊத்தப்பமோ மனதில் தோன்றுவது கண்டிப்பாக இதில் அடங்காது. இது வேறு விதமானது. உயர்வானது. புதிரானது . பலருக்கு கிடைக்காதது அல்லது தோன்றாதது.  
     
         அதாவது ஸினஸ்தீஷ்யா கொண்டவர்கள்   இசையை வினோத வடிவங்களாக , பல நிறங்களாக, ஒலியலைகளாக, தெறிக்கும் ஒளிச்சிதறலாக, கோடுகளாக, மேலும் வார்த்தைகளற்ற காட்சிகளாக காண்கிறார்கள். இந்த அனுபவத்தைக் காண்பவர்கள் பல சந்தர்ப்பங்களில் இதை வெளியே சொல்வதில்லை.  பொதுவாக எல் எஸ் டி, வகை போதை  வஸ்துகளை உட்கொண்டவர்கள்  இது போல யதார்த்தம் உடைந்த விசித்திர தோற்றங்களை  காண நேரிடும்  என்பது அறிவியல் சொல்லும் உண்மை.  எல் எஸ் டி அனுபவம் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு  மிக மிக ஆபத்தான உணர்ச்சி. ஆனால்  ஸினஸ்தீஷ்யாவோ  இயல்பானது. அரிதானது. சிலர் இதை தங்களுக்குக் கிடைத்த மிக உன்னதமான தகுதி என்றே கருதுகிறார்கள். மேலும் சிலர் இசையை நுகர்ந்து அதன் வாசத்தை அனுபவிப்பதாக சொல்கிறார்கள். வேடிக்கை போல தோன்றினாலும் இது நிகழக்கூடியதே. When one's auditory and olfactory senses overlap, this phenomenon is possible.  

      இது போன்ற ஸினஸ்தீட் நம்மில் பலர் இருக்கக்கூடும். ஆனால் எல்லோருமே இதை வெளியே சொல்லிக்கொண்டிருப்பதில்லை. நாம் தனிமைப்படுத்தப்பட்டுவிடுவோமோ என்ற அச்சம் இதற்கு ஒரு முக்கிய காரணம்.  நான் இசையை காண்கிறேன் என்று நீங்கள் அதிரடியாக அறிவித்தால் அடுத்து நீங்கள் செல்லும் திருமண விருந்தில் மணமக்களையும் திருமண சாப்பாட்டையும் விட மற்றவர்கள் உங்களை அதிகம் விவாதிக்கலாம்.

    தனிப்பட்ட விதத்தில் ஒரு முறை The Alan Parson's Project இசைக் குழுவினரின் Eye In The Sky என்ற பாடலைக் கேட்டுக்கொண்டிருந்த சமயத்தில் நான்  இப்படியான இசைக்காட்சியை அதிகமாக உணர்ந்தேன். எனக்கு எப்போதிலிருந்து இது தோன்ற ஆரம்பித்தது என்று உறுதியாக சொல்லமுடியவில்லை.   பல வருடங்களுப் பிறகு என் சகோதரனிடம் ,"என்னால் இசையை பார்க்க முடியும்." என்று சொன்னேன். அவன் என்னை விசித்திரமாக பார்த்துவிட்டு," அப்படியா? எப்படி?" என்றான். " ஒரு பாடலைக் கேட்டால் எனக்கு அதன் இசை கோடுகளாக  விதவிதமான அலைகளாக தெரிகின்றன." என்றேன். "தண்ணீரில் விழுந்த கல் ஏற்படுத்தும் அதிர்வைப் போல, உடையும் கண்ணாடித் துண்டுகள் போல ஒரு மாதிரியான வடிவங்களாக அவை எனக்குத் தோன்றுகின்றன." என்று சொன்னேன். அவன் என்னை ஏற இறங்க பார்த்தான். பிறகு ," நல்லவேளை. எனக்கு அப்படியெல்லாம் எதுவும் இல்லை." என்றான் அவசரமாக. அதில் "நான் இன்னும் நார்மலாகத்தான் இருக்கிறேன் " என்ற செய்தி தெரிந்தது. அதன் பின் அதுபற்றி நான் பேசவில்லை. இது நான் ஸினஸ்தீஷ்யா என்ற வார்த்தையை அறியும் முன் நடந்தது.

   வெகு சமீபத்தில் என் நண்பனுடன் பேசிக்கொண்டிருந்த வேளையில் "நீ இசையை பார்த்திருக்கிறாயா?" என்று கேட்டேன். " தியேட்டர் பிரிண்ட்தான் கிடைத்தது. சத்யராஜ் நடிப்பு நன்றாக இருக்கிறது. ஒரு முறை பார்க்கலாம்." என்றான் அவன் படு சீரியஸாக. சரிதான் நான் கேட்ட நேரம் சரியில்லை என்று எண்ணிக்கொண்டேன். அவன் தொடர்ந்து ," நீ பார்த்துவிட்டாயா?" என்று என்னைக்  கேட்டான். என்ன சொல்வது என்று எனக்குத்  தெரியவில்லை. சற்று நேர சிந்தனைக்குப் பிறகு நான்  சொன்னேன். "இசையைப் பார்க்கிறேன்." 

       அவனுக்கு அது புரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். 




 அடுத்து: இசை விரும்பிகள் XXIV-  எழுபதெண்பதுகள்: மாலை  வெளிச்சம். 

20 comments:

  1. என்னை எனக்கே அறிமுகம் செய்தது போல் இருக்கிறது.

    ReplyDelete
  2. இதுபற்றிய மேலதிகத் தகவல்கள் தெரியாதே தவிர இதுபோன்ற அனுபவங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதுவும் சுஜாதாவிடம் பேசிக்கொண்டிருக்கும்போது இம்மாதிரியான வித்தியாசமான தகவல்களையெல்லாம் நிறையச் சொல்லுவார்.
    நீங்கள் சொல்லியிருப்பது அதுதானா என்பது தெரியாது. ஆனால் 'புலன்மாற்றி அடையும் அனுவங்கள்' வரிசையில்தான் இதுவும் வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்னால் நண்பர் சுகி சிவமும் நானும் இதுபற்றி நிறைய விவாதித்திருக்கிறோம். பாரதி இம்மாதிரி புலன்மாற்றி அடையும் அனுபவங்களைப் பேசியிருக்கிறார் என்பது சப்ஜெக்ட். தேன் வாயில் வைத்து சுவைக்கும் ஒரு பொருள். அது காதில் வந்து பாய்கிறது என்றெழுதுகிறார். செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது 'காதினிலே' . காது இனிப்பை உணரும் பொருளாகிறது அவருக்கு.(இதைக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு நண்பர் "ஆமாம் அந்த ஆள் கஞ்சா அடித்துவிட்டு மனதில் என்னென்ன தோன்றிற்றோ அதையெல்லாம் பாடிவைக்க நீங்க அதுக்கெல்லாம் புதுப்புது அர்த்தம் கற்பிக்கப் பாருங்க" என்று கமெண்ட் அடித்ததும் நினைவு வருகிறது)
    இப்படிப் புலன் மாற்றி அனுபவிக்கும் உணர்வுகள் பல கவிஞர்களுக்கு வரும் என்று சொல்வார்கள். "பூ முடித்தாள் இந்தப் பூங்குழலி - புதுச்சீர் பெறுவாள் வண்ணத் தேனருவி' என்பார் கண்ணதாசன். அருவி என்றாலேயே தண்ணீர். தண்ணீருக்கு நிறம் கிடையாது. அதற்கு வண்ணம் இருக்கிறது என்கிறார். கூடவே நீருக்கு சுவையில்லை. ஆனால் தேன் என்கிறார். அருவி என்கிறார். இது என்ன முப்பரிமாணம்?" என்று வியப்பார் இலக்கியச்சுடர் ராமலிங்கம்.
    எப்படியோ ஒரு பேரனுபவம் பற்றி மிக அழகாகவும் எல்லாரும் புரிந்துகொள்ளும்படியாகவும் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. பரவசம் என்பதில் சந்தேகமில்லை...

    நண்பர் ஒரு நாள் புரிந்து கொள்வார்...!

    ReplyDelete
  4. வணக்கம் காரிகன்,

    சற்று சீக்கிரமாக வந்துவிட்டேன்.... இப்போது நள்ளிரவை தாண்டி ஒரு மணி ஐம்பத்துமூன்று நிமிடங்கள்... உங்கள் கணக்கில் இன்னும் இரண்டு பாக்கியிருக்கிறது... மறக்கவில்லை நண்பரே ! விரைவில்.... ( புரிகிறதா ?! )

    மிக அருமையான ஒரு பதிவு. எழுத்து நடையும், பாணியும் புதுமை !

    ரெகார்டிங் சென்டர்களில் ஆரம்பிக்கவும், அட வாழ்வியல் அனுபவம் என வாசிக்க ஆரம்பித்தவுடன் எனக்கு எங்கள் ஊரின் இரண்டு ரெகார்டிங் சென்டர்களும் ஊரின் இளவட்டங்கள் அனைவரும் சென்டருக்கு ஒரு கோஷ்டி என பிரிந்து நின்று மல்லுக்கட்டிய காலமும் நிழலாட தொடங்கிவிட்டது ! இவை ஒரு காலத்து தலைமுறையின் பிரிக்க முடியாத அங்கமாக இருந்தது என்பது உண்மைதான் !

    ஒரு சின்ன உதாரணம்...

    தொன்னூறின் இறுதியில் சிடிக்களின் அசுர வருகையால் எனது முபாரக் பதிவில் நான் குறிப்பிட்ட ராஜா ரெகார்டிங் சென்டர், மூடப்பட்டு இரண்டு மூன்று வருடங்கள் இருக்கும். நான் ஊருக்கு சென்றிருந்த நேரம். அந்த சென்டர் இருந்த தெருவின் வேறொரு கடையில் நின்றுகொண்டிருந்தேன்... பழைய மிதிவண்டியில் இளைஞன் ஒருவன்... பின்னால் கேரியரில் இரண்டு டீ டி கே 90 கேசட்டுகள். ஒவ்வொரு கடையாய் தயங்கி தயங்கி ஏதோ விசாரித்துக்கொண்டிருந்தான்.

    " இங்க ராஜா ரெகார்டிங் சென்டர்... ? "

    என் கண் முன்னால் வீழ்ந்த ஒரு கலாச்சாரத்தை, அந்த கலாச்சாரத்தில் வந்த என்னிடமே கேட்டான் ! சட்டென என் கண்கள் கலங்கின !

    " இல்ல சார்...என் பிரெண்ட் ஒருத்தனோட கேசட்டுல கடையோட அட்ரஸ் பார்த்தேன்... ரெகார்டிங் செம ஷார்ப்பா இருந்திச்சி... "

    அப்படிப்பட்ட " ஷார்ப்புக்கு " பெயர்போன சகாயம் அண்ணன் எழுத்தர் வேலைக்கு சென்றுவிட்டார் என்பதை நான் அவனிடம் கூறவில்லை ! இது மட்டுமா ?! கிட்டி புல் தொடங்கி காமிக்ஸ் நரை நாம் இழந்தது தான் எத்தனை ? இன்று முகநூலில் அவசர லைக்ஸை அள்ளிக்கொண்டிருக்கிறோம் !!!

    அப்புறம் ஸ்டீரியோவை தொட்டு... ஸினஸ்தீஷ்யாக்குள் நுழைந்து விட்டீர்கள் !

    நேற்று சாப்பிட்ட வெங்காய ஊத்தப்பம்... திருமண வீட்டில் விருந்து, மணமக்களை தாண்டிய முக்கியத்துவம்....

    ரசித்து படித்தேன் !

    சரி, பதிவின் கருவை பற்றி...

    என்றோ இந்த அனுபவத்தை பற்றி படித்திருக்கிறேன்... இது போன்ற இன்னும் பல அனுபவங்கள் மனிதனின் விஞ்ஞான விதிகளுக்குள் அடங்காத ஒரே காரணத்தால் விஞ்ஞானத்தால் ஏற்றுக்கொள்ளப்படாமல் போய், அந்த அனுபவத்தை கண்டவர்கள் கேலி செய்யப்பட்டு, மனநோயாளிகள் என ஒதுக்கப்பட்டுவிடுவதால் பலர் இதைபற்றி பேசுவதே கிடையாது !

    சுருக்கமாய் சொன்னால்...

    " கண்டவர் விண்டிலார் விண்டவர் கண்டிலார் ! "

    என்ற சித்தர் வாக்கு மனிதனால் வகைப்படுத்த முடியாத எல்லா அனுபவங்களுக்குமே பொருந்தும் !

    எனது புதிய பதிவு : மதமாற்றம் மனமாற்றமாகுமா ?
    http://saamaaniyan.blogspot.fr/2015/02/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
  5. வாங்க சேகர்,

    ---என்னை எனக்கே அறிமுகம் செய்தது போல் இருக்கிறது.----

    அருமையான வார்தையமைப்பு. அப்படியானால் மகிழ்ச்சிதான்.

    ReplyDelete
  6. வாருங்கள் டி டி ,

    அவன் எங்கே புரிந்துகொள்ளப் போகிறான்? ஒருமுறை "அழகன் படத்தில சாதிமல்லிப் பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமேன்னு இளையராஜா ஒரு பாட்டு போட்டுருப்பான் பாரு" என்று ஆரம்பிக்க, நான் இடை மறித்து," அது மரகதமணி என்பவரின் இசை" என்று சொல்ல, அத்தோடு அமைதி.

    ReplyDelete
  7. இசையைப் பார்க்கிறேன்... அருமை...

    ReplyDelete
  8. 'ஸினஸ்தீஷ்யா' இது பற்றிய புரிதல் இல்லை. வெறுமனே இசையை ரசிக்கத்தெரியும் அவ்வளவுதான். தங்களைப் போன்றவர்கள் இசை பற்றியும் பாடல்கள் பற்றியும் எழுதும்போதுதான் ஓ... இதில் இத்தனை விஷயம் இருக்கிறதா என்று வியப்பு வருவதுண்டு. தங்களது பழைய பதிவுகள் சிலவற்றை சேமித்து வைத்து இன்னும் படித்தபாடில்லை.
    பாடல்களை ரெக்கார்டிங் செய்வதற்காக நானும் 80களில் அலைந்து திரிந்திருக்கிறேன். பழைய பாடல்கள் குறிப்பிட்ட சில இடத்தில் மட்டும்தான் கிடைக்கும். வேலூர் சாரதி மாளிகையின் முதல் மாடியிலிருந்த ஒரு ரெக்கார்டிங் சென்டருக்கு நடையாய் நடந்திருக்கிறேன்.
    கடுமையான மன உளைச்சலில் இருந்தேன். இன்று உங்கள் வலைப்பக்கம் வந்ததும் கொஞ்சம் மன நிம்மதி. இசையில் என்னை மறக்க முடியும்தானே? அதுதான் ஸினஸ்தீஷ்யா.... சரிதானே காரிகன்.

    ReplyDelete
  9. ஹலோ காரிகன்

    புதுப் பதிவு. புதுச் செய்தி. இசையைப் பார்க்க முடியும் என்பது புதிய செய்தி . இதுவரை அதைப் பற்றி எங்கும் எதிலும் படித்ததில்லை. இசையை விரும்பி கேட்கும்போது ஒரு பரவச நிலை ஏற்படும் . இதயம் படபடக்கும் ; கண்கள் கலங்கும் ; நெஞ்சம் பாரமாகும் . அர்த்தமேயில்லாமல் சிலரது உருவம் மனசுக்குள் வந்து போகும் . சில இடங்கள் , கட்டிடங்கள் , வயல் வெளிகள் , சூன்யமான காட்சிகள் என்று திடீரென சில தோற்றங்கள் கண்ணை மூடிக் கேட்டாலும் மனக் கண்ணில் வந்து மறையும். அதெல்லாம் ஸினஸ்தீஷ்யா வகை இல்லை என்றால் என்ன விதமான அறிவியல் !?

    இணையத்தில் இது சம்பந்தமாய் செய்தி ஏதும் உள்ளதா?

    ரெக்கார்டிங் சென்டர் தேடி அலைந்த கதை எனக்கும் உண்டு. எதில் ரெக்கார்டிங் துல்லியமாக இருக்கும் என கேட்டு அலைவதே வேலையாக வைத்துக் கொண்டிருப்பேன். இசையை விரும்புபவர் வாழ்க்கையில் பிரிக்க முடியாதது காசெட்டும் ரெக்கார்டிங் சென்டரும் !
    உங்கள் அனுபவப் பகிர்வு என் அனுபவத்தையும் நினைக்கத் தூண்டியது.

    சென்னையில் நானும் என் கசினும் சேர்ந்து ரோடு ரோடாக அலைவோம் . ஸ்டீரியோ விஷன் கடை தேடியும் போய் பாடல்கள் பதிவு செய்திருக்கிறோம். ஞாபக மூட்டியதற்கு நன்றி.

    இன்னொரு கேள்வி . அனஸ்தீஷ்யா கொடுத்து இசை கேட்கச் செய்தால் ஸினஸ்தீஷ்யா ஏற்படுமா?

    ReplyDelete
  10. வாருங்கள் அமுதவன் சார்,

    நன்றி. சுஜாதா இது பற்றியெல்லாம் பேசியிருப்பார் என்று யூகித்தேன். உண்மைதான். நீங்கள் குறிப்பிட்டபடி ஸினஸ்தீஷ்யா புலன் மாற்றி அனுபவிக்கும் உணர்வுகள்தான். ஆனால் அது இயல்பிலேயே சிலருக்கு இருப்பது. அது ஒரு வரம் என்று குறிப்பிடுவார்கள். பாரதியார் எழுதிய இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே இந்த வகையாகத்தான் இருக்க முடியும். காரணம் அவர் கஞ்சா உட்கொள்பவர். போதை சில சமயங்களில் இது போன்ற ஆச்சர்யங்களை அளிக்கக்கூடியது. எனக்கு இது தோன்றாமல் போய்விட்டதே என்று நீங்கள் எழுதிய பிறகுதான் உணர்ந்தேன். நீண்ட நாட்களாக இது பற்றி எழுத வேண்டும் என்ற ஆவல் இருந்தது. எழுதிவிட்டாலும் இன்னும் நிறைய எழுதியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  11. வாங்க பரிவை குமார்,

    வருகைக்கு நன்றி. இசையை கேட்பதே இன்பம் எனும்போது அதைக் காண்பது?

    ReplyDelete
  12. வாங்க சாம்,

    நன்றி. ஒன்று இரண்டு என்ற கணக்கெல்லாம் எதற்கு?

    -----என் கண் முன்னால் வீழ்ந்த ஒரு கலாச்சாரத்தை, அந்த கலாச்சாரத்தில் வந்த என்னிடமே கேட்டான் ! சட்டென என் கண்கள் கலங்கின ! ----

    பின்னூட்ட பதிலையே கதைபோல சொல்வது அபாரம். உண்மையாகவே இசைப் பதிவகங்கள் ஒரு வீழ்ந்த கலாச்சாரம்தான். ஆனால் அவை கொடுத்த இன்பங்கள்தான் எத்தனை? அவைகளை தேடிச் செல்வதே ஒரு சுக பயணம்தான். சினிமாவுக்கு கூட நான் அத்தனை ஆர்வமாக போயிருக்கமாட்டேன்.

    முகநூல் பக்கம் நான் போவதே இல்லை. அந்த கலாச்சாரம் எனக்கு பரிச்சயமாக வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.

    ----அப்புறம் ஸ்டீரியோவை தொட்டு... ஸினஸ்தீஷ்யாக்குள் நுழைந்து விட்டீர்கள் !----

    ஆம். ஸ்டீரியோ விஷன் என்ற பெயரே ஒரு oxymoron. அது என்னை பல சமயங்களில் வியக்க வைத்திருக்கிறது. அதன் நீட்சியே இந்த ஸினஸ்தீஷ்யா. இதை துவக்கத்தில் ஒரு மனநோய் என்ற அளவில் பார்த்த அறிவியல் இன்று இதை ஏற்றுக்கொண்டுவிட்டது. இருந்தும் பாட்டெல்லாம் கோடு கோடா தெரியுது என்றால் கேட்பவரின் ரியாக் ஷன் விநோதமாகத்தான் இருக்கும்.

    முபாரக் என்ற பதிவை தவறுதலாக மதமாற்றம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.உங்கள் பதிவு படித்து பின்னூட்டம் செய்துவிட்டேன்.

    ReplyDelete
  13. வாங்க கவிப்ரியன்,

    'ஸினஸ்தீஷ்யா' அதிகம் விவாதிக்கப்படாத களம். இதைப் பற்றிய சிந்தனை நமது சமூகத்தில் இருப்பது பற்றி எந்த கட்டுரையும் நான் இணையத்தில் இதுவரை தமிழில் படிக்கவில்லை. ஒருவேளை நான் எழுதிய இதுவே முதலாவதாக இருக்கும் என்றால் மகிழ்ச்சிதான். என் பழைய பதிவுகளை சேமித்து வைத்திருப்பது குறித்து மகிழ்ச்சியே. நேரம் கிடைக்கும் போது படியுங்கள்.

    ரெகார்டிங் கடைக்கு அலைந்த அனுபவம் நமக்குப் பிடித்தவர்களை தேடிப் போவது போல. ஆனால் நினைத்தது கிடைக்கவிட்டாலோ எரிச்சல் ஏகத்துக்கு வரும்.

    இசையில் தன்னை மறப்பது 'ஸினஸ்தீஷ்யா' வா என்ற கேள்வியே தேவையில்லை. வலிகள் மறந்துபோனால் அதுவே போதும். இசையின் மகத்துவமே அதுதானே.

    ReplyDelete
  14. வாங்க புதிய காற்றே,

    நீங்கள் சொல்வதுபோல ஸினஸ்தீஷ்யா ஒரு புதிய செய்திதான். எளிதில் புரிந்துகொள்ள முடியாதுதான். ரயிலையே பார்த்திராத ஒருவருக்கு என்ன சொல்லி நீங்கள் ரயிலை அவருக்கு புரிய வைக்க முடியும்?

    இணையத்தில் ஏகத்துக்கு இதுபற்றி விளக்கங்கள் விவாதங்கள் செய்திகள் இருக்கின்றன. ஆனால் எல்லாமே ஆங்கிலத்தில்தான். தமிழில் இதுவரை இல்லை என்றே நினைக்கிறேன்.

    மெட்ராஸில் நீங்களும் உங்கள் கசினும் தெருத் தெருவாக அலைந்தது போலவே பலருக்கும் இந்த தேடல் அனுபவங்கள் இருக்கின்றன.

    -----இன்னொரு கேள்வி . அனஸ்தீஷ்யா கொடுத்து இசை கேட்கச் செய்தால் ஸினஸ்தீஷ்யா ஏற்படுமா?----

    இதில் அனஸ்தீஷ்யா, ஸினஸ்தீஷ்யா என்ற ரைமிங் தவிர உங்களின் நக்கல் நன்றாகவே தெரிகிறது. வேண்டுமானால் முயற்சி செய்துதான் பாருங்களேன்.

    ReplyDelete
  15. செம இண்டரஸ்ட்டிங்,,,,, அடுத்த பாகத்தையும் எழுதவும்

    ReplyDelete
  16. காரிகன். தங்கள் புதிய பதிவான ஸினஷ்தீசியா பற்றி புரிதல் இல்லையாதலால் கருத்துக் கூற இயலவில்லை .ஆனால் நண்பர் ஒருவர் இப்புதிய பதிவின் அடுத்த பாகத்திற்கும் ஆவலாக இருக்கிறார் .தவறாமல் நிறைவேற்றுங்கள் .புரிந்ததை புரியாத மாதிரியும் ,புரியாத தை புரிந்த மாதிரியும் எழுதுவதில் எப்படி உங்களைப் போலவே உங்கள் நண்பர்களும் இருக்கிறார்கள் என்று விளங்கவில்லை .

    ReplyDelete
  17. வாருங்கள் பிச்சை,

    பாராட்டுக்கு நன்றி. என் தளம் முதல் முறையாக வருகிறீர்கள் என்று நினைக்கிறேன். இதன் அடுத்த பாகம் அடுத்து வருவதல்ல. இது ஒரு இடைச் செருகல். ஆங்கில இசை பற்றிய பதிவு எழுதினால் இந்த ஸினஸ்தீஷ்யா மீண்டும் தலை காட்டும்.

    ReplyDelete
  18. வாருங்கள் அருள் ஜீவா,

    வருகைக்கு நன்றி. வழக்கம் போலவே பாராட்டுவது போல இருக்கிறது உங்களின் உள்குத்து.

    --.புரிந்ததை புரியாத மாதிரியும் ,புரியாத தை புரிந்த மாதிரியும் எழுதுவதில் எப்படி உங்களைப் போலவே உங்கள் நண்பர்களும் இருக்கிறார்கள் என்று விளங்கவில்லை ----

    இது எனக்கு உண்மையிலேயே விளங்கவில்லை. இருக்கு ஆனா இல்ல எஸ் ஜே சூர்யா மாதிரியே பேசுகிறீர்கள்.

    ReplyDelete
  19. பதிவு முழுவதும் படித்து விட்டு வெகு நேரம் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தேன். அற்புதம், காரிகன். நீங்கள் இசையை 'பார்க்க' மட்டும் இல்லை, அதை அணு அணுவாக அனுபவித்திருக்கிறீர்கள். உங்கள் உடம்பில் நரம்பில் அனைத்திலும் இசையே என்பது தெள்ளத்தெளிவாக உள்ளது. அதை இவ்வளவு நுணுக்கங்களுடன் அதி அற்புதமாக எழுத்து வடிவில் கொடுத்திருக்கிறீர்கள். இது இறைவன் கொடுத்த வரம். அனைவருக்கும் கிடைத்திடாத அறிய ஆசீர்வாதம். தொடரட்டும் உங்களது அருமையான இசைப்பயணம்.

    ReplyDelete
  20. வாருங்கள் குரு,

    பாராட்டுக்கு நன்றி. முதலில் இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டதில்லை. இதைப் பற்றி சீரியஸாக எண்ணிக்கொள்ளாதிருந்த வேளையில் ஒரு புத்தகத்தில் இசையைப் பார்ப்பவர்கள் பற்றிய தகவலைக் கண்டதும் அது என்னை கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைத்தது. உடனே இதைப் பற்றி எழுதியாக வேண்டும் என்ற எண்ணம் வரவே விளைவு இந்தப் பதிவு.

    ReplyDelete