Monday 16 November 2015

என் சென்னை.

ஏறக்குறைய இருபது வருடங்கள் சென்னையில் வாழ்ந்து வருகிறேன். இது போன்ற மழை, வெள்ளம் நான் கண்டதில்லை. சென்னை மட்டுமல்ல தமிழகத்தின் பல மாவட்டங்கள் நகரங்கள் தண்ணீரில் சிறைபட்டுள்ளன. நான் சென்னையில் வசிப்பவன் என்பதால் என்னால் இங்கே காணப்படும் துயரங்களை அதிக அளவில் பேசமுடியும் என்று தோன்றுகிறது.

நியூயார்க், லண்டன், பாரிஸ் என்று வெளிநாட்டு நகரங்களில் வசிக்கவேண்டும் என்ற என்னுடைய சிறுபிள்ளைத்தனமான எண்ணம் இங்கே வந்த இரண்டே வருடங்களில் நெருப்பு கண்ட மெழுகு போல உருகிப் போய்விட்டது. சொல்லப்போனால் என்னைப் பொருத்தவரை சென்னைதான் என்னுடைய நியூயார்க் லண்டன் பாரிஸ் எல்லாமே. புதுக்கோட்டை திருச்சியில் படித்த சமயங்களில் எனக்கு இருந்த ஒரே கனவு நகரம் மெட்ராஸ்தான். (அப்போது சென்னை கிடையாது பெரிய அளவில்.) மெட்ராஸ் வந்த முதல் கணத்திலேயே எனது கனவு மெய்ப்பட்டதுபோல ஒரு நிம்மதி உண்டானது. 

நான் என்னுடைய ஊருக்கு (அப்படி என்று எதுவுமே  கிடையாது) போகாத சமயங்களில் என்னை நோக்கி வீசப்படும் கேள்வி "இன்னுமா ஊருக்கு போகவில்லை?". நான் சொல்லாவிட்டாலும் நினைத்துக்கொள்வது இதுதான்: "இந்த சென்னைதான் எனது ஊர்". நான் வெளியே சொல்லாவிட்டாலும் அதுதான் உண்மை. இங்கே வசிக்கவேண்டும் என்றுதான் விரும்பினேன். இப்போது அது நிகழ்ந்திருக்கிறது. 

தற்போது சென்னையில் காணப்படும் வெள்ளம் ஆரோக்கியமானதல்ல என்று படுகிறது. பல இடங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. மக்களின் துன்பம் வெறும் டீவியில் ஆவேசமாக  பேசப்படும் வார்த்தைகளோடு முடிந்துவிடவில்லை. அதையும் தாண்டிய பெரும் சிக்கல் கொண்டதாக இந்தத்துயரம் வேறு பரிமாணம் பெறுகிறது. சென்னையில் இருப்பவர்கள் எல்லாம் பாக்கியசாலிகள் என்ற சென்னையைச் சாராத மக்களின் எண்ணம் கொஞ்சம் இந்த மழையின்  உக்கிரத்தில் நனைந்து, கண்ணீரில் கரையட்டும். 

கருணாநிதியோ ஜெயலலிதாவோ எந்த கட்சியாக இருந்தாலும் சென்னையின் நிதர்சனம் இதுதான். மழைக் காலத்தில் சென்னை மிதப்பது மாறவேண்டுமானால் அது மக்களின் மனதில் உருவாகும் கோபத்தினாலும், உண்மையான ஜனநாயகம் என்ன என்பதை புரிந்துகொண்ட புரிதலால் வரும் முதிர்ச்சியான பார்வையினாலேயே சாத்தியம். மாறாக எந்த அரசியல் கட்சியும் இதற்கு ஒரு மாற்று மருந்து கண்டுபிடிக்கப்போவதில்லை. நம் உரிமை என்ன என்பதை  நாம் உணர்ந்து அதை செயலாற்ற இயலாதவர்களை தூர எறிவதன் மூலமே இதற்கு தீர்வு கிடைக்கும் என்று தோன்றுகிறது.

சென்னை தமிழகத்தின் பல ஊர்களின் வேர்களின் அடையாளம். இதை நான் வட சென்னை தென் சென்னை என்று என்றுமே பார்ப்பதில்லை.

இது என் சென்னை.


29 comments:

  1. ஊர்பாசத்தை உணரமுடிந்தது..சென்னை மிதக்கின்றது ..சின்னாட்களில் அல்லாடும் நீருக்காய்..

    ReplyDelete
    Replies
    1. வாங்க கீதா மேடம்,

      ----.சென்னை மிதக்கின்றது ..சின்னாட்களில் அல்லாடும் நீருக்காய்..----

      அது வழக்கம்தானே?

      வருகைக்கு நன்றி.

      Delete
  2. காரிகன்.
    மழையின் தாண்டவம் பதிவிலே தெரிகிறது. .மக்களால் மக்களுக்காக மக்களே ஆட்சி செய்வதே மக்களாட்சி -இது ஆபிரஹாம் லிங்கனின் மக்களாட்சிக்கான விளக்கம் . இதுவே இன்றளவும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டும் வருகிறது . ஏட்டளவில் மட்டுமே .அதிகாரம் வந்தவுடன் ஆணவமும் கூடவே வந்து விடுகிறது . இலவசம் என்ற பெயரில் பாமர ர்களை ஏய்த்து அவர்களின் வாழ்வாதாரம் நிலைபெறுவதற்கு எந்தவொரு முயற்சியையும் எடுக்காமல் சுயநலமிகளாகவே இருக்கின்றார்கள் இன்றைய ஆட்சியாளர்கள் .இதே போல மழை தொடர்ந்து நீடிக்குமாயின் கடலூர் காணாமலே போய்விடும் போல .அனைத்துக் கட்சி தலைவர்களும் இருக்கும் சென்னைக்கே இந்நிலையெனில் மற்ற நகரங்களைக் கேட்கவா வேண்டும் .

    ReplyDelete
    Replies
    1. வாங்க அருள் ஜீவா,

      கருத்துக்கு நன்றி.

      வெள்ளத்திலும் அரசியல் லாபம் பார்க்கும் போக்கு நம்மிடம் இருக்கிறது. இதற்காக ஒரு குறிப்பிட்ட கட்சியை குறை சொல்லிப் பயனில்லை. ஏரிகளாக இருந்த இடங்களில் வீட்டு மனைகளை உண்டாக்கியவர்கள், அவர்களுக்கு அனுமதியளித்தவர்கள், அங்கே குடியேறியவர்கள் என எல்லோர் பேரிலும் தவறு இருக்கிறது.

      Delete
  3. எண்ணமெல்லாம் என் சென்னை என மொழிந்து
    தமிழ் மழையாய் பொழிந்த தங்களது பதிவு
    உள்ளதை உள்ள படி உவந்தளித்த உன்னதமான
    உயர் பதிவு நண்பரே!

    "கருணாநிதியோ, ஜெயலலிதாவோ,
    எந்த கட்சியாக இருந்தாலும் சென்னையின் நிதர்சனம் இதுதான்.
    மழைக் காலத்தில் சென்னை மிதப்பது மாறவேண்டுமானால் அது மக்களின் மனதில் உருவாகும் கோபத்தினாலும், உண்மையான ஜனநாயகம் என்ன என்பதை புரிந்துகொண்ட புரிதலால் வரும் முதிர்ச்சியான பார்வையினாலேயே சாத்தியம்.
    மாறாக எந்த அரசியல் கட்சியும் இதற்கு ஒரு மாற்று மருந்து கண்டுபிடிக்கப்போவதில்லை."

    தமிழக மக்களின் மனசாட்சி உருத்தட்டும்.
    மழையால் இனி பிழையில்லாத ஆட்சிக்கு இந்த மழை வழி வகுக்குமா?
    வாக்காள பெருமக்களே சிந்திப்பீர்!
    நன்றி நண்பர் காரிகன்.
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. ---தமிழக மக்களின் மனசாட்சி உருத்தட்டும்.
      மழையால் இனி பிழையில்லாத ஆட்சிக்கு இந்த மழை வழி வகுக்குமா?
      வாக்காள பெருமக்களே சிந்திப்பீர்!-----

      வாங்க யாதவன் நம்பி,

      கருத்துக்கு நன்றி.

      ஒரு சிறிய அரசியல் அரங்காகவே மாற்றிவிட்டீர்கள். அரசியல் தாண்டிய மனிதாபிமானமே தற்போதைய தேவை. பிறகு கொஞ்சம் சுரணை நிறைய கோபம். நீங்கள் அங்கு இருப்பதே எங்களுக்காகத்தான் என்ற எண்ணத்தை வரவேண்டியவர்களுக்கு நாம் வரவழைத்தால் போதும்.

      Delete
  4. நானும் சென்னையில் குடியைறியவன்தான் காரிகன் அவர்களே. இன்றைய சென்னையின் அவலத்தை உங்கள் பதிவின் மூலமும், நண்பர்கள் உறவினர்கள் மூலமும், இணையச் செய்திகள் வாயிலாகவும் அறிந்து வேதனையுற்றேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி திரு கவிப்பிரியன்,

      பலர் படங்களோடு பதிவுகள் வெளியிட்டுள்ளார்கள். படித்திருப்பீர்கள்.

      Delete
  5. இருந்த ஏரி, குளங்களை எல்லாம் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி குடியேறச் சொன்ன அரசாங்கத்திற்கும் நமக்கும் இந்த வேதனையில் முக்கிய பங்கிருக்கிறது. இனிமேலாவது மழைநீர் சேகரிக்க, எஞ்சிய நீர் வடிந்தோட வழிவகை செய்தால் பரவாயில்லை.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் செந்தில்,

      வருகைக்கு நன்றி.

      நீங்கள் சொல்வது உண்மைதான். இந்தியாவில் லஞ்சம் எந்த அளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதன் விளைவு இது. இனிமேலும் விழித்துக்கொள்ளாமல் இருந்தால் பரிதாபம்தான்.

      Delete
  6. 20 வருடம் "என் சென்னை" என்று தான் இருந்தேன் - "போடா வெண்ணை" என்று சொல்லும் வரை...!

    ReplyDelete
    Replies
    1. வாங்க தனபாலன்,

      போடா வெண்ணை என்பது போடா வெங்காயம் என்பது போல கேட்கிறது எனக்கு. யார் அந்த வெண்ணை என்பதையும் தெரிவித்திருக்கலாம். உங்கள் சென்னை கோபம் புரிகிறது.

      வருகைக்கு நன்றி.

      Delete
  7. சரியான வடிகால் திட்டங்கள் இல்லாததுவே மிக முக்கியமான காரணம். மும்பையில் எவ்வளவு பெரிய மழை கொட்டினாலும் இரண்டொரு மணி நேரத்தில் வடிந்துவிடும். அந்தளவுக்கு வடிகால் அமைப்புக்கள் எல்லாம் சிறப்பாகச் செய்யப்பட்டிருக்கின்றன என்று மும்பையில் பல ஆண்டுக்காலம் வசித்த என்னுடைய அண்ணன் சொல்லிக் கேட்டிருக்கிறேன். சென்னையில் அப்படிச் செய்யப்படவில்லை என்பதும் (ரியல் எஸ்டேட் பிரச்சினைகளையும் தாண்டி) ஒரு பெரிய காரணம். வெள்ளைக்காரன் காலத்தில் இப்படியான ஒரு மழை வந்திருந்தால் அவன் பிரமாதமான ஏற்பாடுகளையும் வசதிகளையும் செய்துவிட்டுப் போயிருப்பான். அப்படி வெள்ளைக்காரன் எதுவும் செய்துவிட்டுப் போகவில்லை என்பதும் அடுத்த காரணம்.
    மழை வெள்ளத்தில் மக்கள் தத்தளித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அரசியல் பேசலாமா, செய்யலாமா என்ற கேள்வி இந்த நேரத்தில் சுலபமாக வைக்கப்படும் கேள்விகளில் ஒன்றாக இருக்கிறது. சிக்கலான நேரங்களில்தான் அரசியல் சிந்தனைகள் வைக்கப்படவேண்டும். சில அரசியல் சர்ச்சைகள் மட்டும் எழுந்திருக்கவில்லையெனில் ஆளுங்கட்சி இந்த அளவுக்குச் செயல்பட்டிருக்குமா என்பதே சந்தேகம்தான்.
    அடுத்த அரசாங்கமாவது அடுத்த பெரிய மழைக்குள் தண்ணீர் வடிந்து செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறதா என்று பார்ப்போம்.

    ReplyDelete
    Replies
    1. --மழை வெள்ளத்தில் மக்கள் தத்தளித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அரசியல் பேசலாமா, செய்யலாமா என்ற கேள்வி இந்த நேரத்தில் சுலபமாக வைக்கப்படும் கேள்விகளில் ஒன்றாக இருக்கிறது. சிக்கலான நேரங்களில்தான் அரசியல் சிந்தனைகள் வைக்கப்படவேண்டும். சில அரசியல் சர்ச்சைகள் மட்டும் எழுந்திருக்கவில்லையெனில் ஆளுங்கட்சி இந்த அளவுக்குச் செயல்பட்டிருக்குமா என்பதே சந்தேகம்தான்.----

      வாங்க அமுதவன் ஸார்,

      வருகைக்கு நன்றி. நீங்கள் மேலே குறிப்பிட்டிருக்கும் கருத்து நியாயமானதே. அரசியல் கட்சிகள் இந்த நேரத்திலாவது மக்களின் வேதனைகளைப் பற்றி பேச முடிகிறதே என்று திருப்தி அடைய வேண்டியதுதான்.ஆனால் எந்த ஆளும் கட்சியும் இது போன்ற சூழலில் செயல்பட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியிருக்கும். இதுபோன்ற மழைக்கு நாம் இரண்டு மணி நேரத்தில் தீர்வு காண முடியாது என்பதும் உண்மை --மும்பை போல.

      ---அடுத்த அரசாங்கமாவது அடுத்த பெரிய மழைக்குள் தண்ணீர் வடிந்து செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறதா என்று பார்ப்போம்.---

      உங்களின் எதிர்பார்ப்பு புரிகிறது. இந்த வெள்ளத்தை வைத்துக்கொண்டு பெரிய திமிங்கிலத்தை பிடிக்கலாம் என்று சில கட்சிகள் வேகம் காட்டுகின்றன. உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுகிறதா என்று பார்ப்போம்.

      Delete
  8. ஏரி குளங்களை எல்லாம் தூர்த்து விட்டோம்
    வீடுகளாக்கி விட்டோம்
    வடிகால் இன்றி மழை எங்கு செல்லும்

    ReplyDelete
    Replies
    1. வாங்க கரந்தை ஜெயகுமார்,

      நன்றி.

      பாவம் மழை என்ன செய்யும்? அது கொட்டி வெள்ளமாக வரும் இடங்களில் வீட்டைக் கட்டிக்கொண்டு நாம் உட்கார்ந்திருந்தால் அது வேறு எங்கே போகும்? சரிதான்.

      Delete
  9. காரிகன்

    ஒரு பயலும் நமக்கு தண்ணி தர மாட்டேனுட்டான். இயற்கைக்கு கோபம் வந்து கொட்டோ கொட்டுன்னு கொட்டிடுச்சு . அவனுகளுக்கு தண்ணி வேணுமின்னா நாம கொடுப்போம்.

    தண்ணி பெருகிப் போனதை நினைச்சு மக்களுக்கு கண்ணீர்தான் பெருகிப் போச்சு. வந்ததை சேமிக்கவும் தெரியல , வெளியேத்தவும் தெரியல . மக்களுக்குத்தான் தெரியல என்று பார்த்தால் அரசாங்கத்துக்கே தெரியல !

    வேளச்சேரி வெனிஸ் நகரமாயிருச்சாம்ல!
    மாநகரம் இப்ப மாநரகம் . பொறுங்க....வடியட்டும்...விடியட்டும் !

    ReplyDelete
    Replies
    1. வாங்க சால்ஸ்,

      தண்ணீர் இல்லாவிட்டாலும் புலம்பல். கொட்டித் தீர்த்தாலும் புலம்பல். நமக்கு இதே வேலையாப் போச்சு.மழையை மணி ரத்னம் படம் போல ரசிக்கக் கற்றுக்கொண்டால் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கலாமோ?

      ஆமா, தமிழகம் எங்கும் மழை பேயாக பெய்கிறது. டி வி யில் மதுரை என்ற பெயரையே காணவில்லையே? நீங்க தமிழ் நாட்டிலதான இருக்கீங்க?

      Delete
  10. Rain poured in British period also amudhavan sir... but at that time there is no this much of encroachments & negligence. People has to think before buying a land & plan it before they build.

    ReplyDelete
  11. வணக்கம்,
    தாங்கள் கடைசியில் சொல்லியுள்ளீர்களே, மக்களின் கோபம்,,,,,,
    அது மட்டும் தான் மாற்றத்தை ஏற்படுத்தும்,,,,,
    நல்ல பகிர்வு, ஆனால் நீர் வடிகால் இடங்களை எல்லாம் பிளாட்டா போட்டா என்ன செய்ய ,,,,,,
    நாமும் மாறத்தான் வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. மக்கள் மாறவேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பமும். சாத்தியமா என்பது சந்தேகமே. உங்களின் வருகைக்கு நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன்.

      Delete
  12. THOUGH AT THE OUTSET CHENNAI LIVING PEOPLE LOOK UNFRIENDLY THEY RISE UP TO THE OCCASION TO HELP THE NEEDY>>>> MANY INCHENNAI EXPERIENCED THIS FEELING INTENSELY A GOOD ARTICLE KAREEGANJI

    ReplyDelete
    Replies
    1. http://www.jackiesekar.com/2015/11/this-november-heavy-rain-at-chennai.html

      Thanks Mr. Nat Chander. The above link will take you to another wonderful post.

      Delete
  13. \\மழைக் காலத்தில் சென்னை மிதப்பது மாறவேண்டுமானால் அது மக்களின் மனதில் உருவாகும் கோபத்தினாலும், உண்மையான ஜனநாயகம் என்ன என்பதை புரிந்துகொண்ட புரிதலால் வரும் முதிர்ச்சியான பார்வையினாலேயே சாத்தியம்.\\

    ஜனநாயகம் புத்திசாலிகளுக்கு மட்டும்தான் சரியாக செயல்படும். நம் மக்கள் அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் உள்ளவர்கள் அளவுக்கு புத்திசாலிகளாக இல்லாவிட்டாலும் கேரளத்தவர்கள் அளவுக்காவது விவரமானவர்களாக இருந்தால் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் தமிழகத்தின் நிலை பரிதாபமாக இருக்கிறது. எப்போது திராவிடக் கட்சிகள் தலையெடுத்தனவோ அப்போதிருந்தே சரிவைச் சந்தித்து இன்றைக்கு குட்டிச் சுவற்றில் போய் முட்டி நிற்கிறோம். ஐந்து முறை முதலமைச்சரா இருந்தேன் ஐம்பது வருஷம் MLA வா இருந்தேன்னு கணக்குதான் காண்பிப்பார்கள், மக்களுக்கு என்ன செய்தாய் என்றால் வெங்காயம் என்று தான் பதில் வரும். இவர்கள் குடும்பப்த்தை மேம்படுத்திக் கொண்டு மக்கள் வாயில் சாராயத்தை ஊற்றி சாகடித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகம் உருப்படுவதற்கு ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் தான் உண்டு.

    ReplyDelete
  14. We are safe Karigan... நலமாக இருக்கிறோம் !

    உங்களின் அக்கறையும் அன்பும் மிகுந்த விசாரிப்புக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  15. வணக்கம் காரிகன்...

    ஒரு ஆச்சரியம்....இதுநாள் வரையிலும் என்ன காரணத்தினாலோ உங்களை பெங்களூர்வாசியாக எண்ணிக்கொண்டிருந்தேன் ! நீங்கள் சென்னைவாசி என்பதை முன்னரே அறிந்திருந்தால் சென்ற ஆண்டு ஊர் வந்தபோது நிச்சயம் தேடிபிடித்திருப்பேன் ! ( நீங்கள் விரும்பியிருக்காவிட்டால்கூட !!! :-) )

    தான் வாழும் மண்ணை, அதன் நிறை குறைகளுடன் அப்படியே ஏற்று நேசிக்கும் ஒரு மனிதனின் வலியை ஆத்மார்த்தமாய் பிரதிபலிக்கிறது இந்த பதிவு.

    " தற்போது சென்னையில் காணப்படும் வெள்ளம் ஆரோக்கியமானதல்ல "

    வருங்கால பேராபத்தை உணர்த்தும் வரிகள் !

    " உண்மையான ஜனநாயகம் என்ன என்பதை புரிந்துகொண்ட புரிதலால் வரும் முதிர்ச்சியான பார்வையினாலேயே சாத்தியம். "

    நீங்கள் குறிப்பிட்ட அந்த " ஜனநாயக முதிர்ச்சியின் " அர்த்தம் நம் அரசியல்வாதிகளுக்கே புரியாது ! நீங்களே குறிப்பிட்டத்தை போல, அம்மாவோ, அய்யாவோ, அனைவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் !

    வெள்ளத்தை பார்வையிட ஹெலிகாப்டரில் பறக்கும் நம் அரசியல்வாதிகளின் குணம் ஒன்று போதும்... அவர்களின் " ஆண்டான் அடிமை " மனப்பான்மையை விளக்க !

    இந்த " ஜனநாயக மாமன்னர், மகாராணிகள் " அவ்வப்போது அள்ளிவீசும் இலவசங்களிலும், டாஸ்மார்க்கிலும் அடிமையாகி கிடக்கும் " குடிமக்களுக்கு " உண்மையான ஜனநாயகத்தின் அர்த்தம் என்று, எப்படி புரியும் ?!

    சில வாரங்களுக்கு முன்னர் ஜூனியர் விகடனின் " பெரியோர்களே, தாய்மார்களே ! " தொடரில் சென்னையை பற்றி எழுதியிருந்ததை படிக்க நேர்ந்தது...

    " சென்னை என்பது தமிழ் நாட்டின் தலைநகர் மட்டுமல்ல, தலையாய நகர். ஒரே நேரத்தில் உருவானது அல்ல சென்னை. சிறுகச்சிறுகச் சேர்ந்து தமிழகத்தின் தலிவிதியை தீர்மானிக்கும் இடமாக உருப்பெற்றது ! "

    எனத் தொடங்கும் கட்டுரை, சென்னை உருவானது தொடங்கி அதன் முக்கிய கட்டிடங்கள், தோட்டங்கள், தெருக்கள் தோன்றிய வரலாற்றை விவரித்து,

    " சிறுசிறு குப்பங்களாக இருந்த இருந்த சென்னைப் பட்டிணத்தை ஒன்றிணைத்து பெருநகரமாக ஆக்கிக் கொடுத்தார்கள் பிரிட்டிஷார். அதனை மீண்டும் குப்பையாக்கியதுதான் 60 ஆண்டு சாதனை " என முடியும்.

    60 ஆண்டு ஜனநாயக் சாதனை என்றிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும் !

    " இதை நான் வட சென்னை தென் சென்னை என்று என்றுமே பார்ப்பதில்லை. இது என் சென்னை. "

    படித்து, திகைத்திருந்தேன் காரிகன் ! கல்வி, பொருளாதாரம், வாழ்க்கை முறை என அனைத்திலும் நேர் எதிராய் ஊடகங்களாலும், சினிமாவினாலும் முன்னிறுத்தப்படும் சென்னையின் இரு பகுதிகளை ஒன்றாக பார்த்து நேசிப்பது ஜாதி, மத, மொழி, பிராந்திய அடையாளங்களை தாண்டிய மனிதனால் மட்டுமே சாத்தியம் !

    நன்றி
    சாமானியன்



    ReplyDelete
    Replies
    1. வாங்க சாம்,

      எத்தனை நாட்கள் ஆச்சு உங்களைப் பார்த்து?

      நலமாக இருப்பது குறித்து மகிழ்ச்சி. அந்த பாரிஸ் பயங்கரத்தைப் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை அடுத்த பதிவாக எழுதுங்கள்.

      மழை வெள்ளம் சாலைகளில் இருக்கின்றன குழிகளையும், பள்ளங்களையும் மட்டும் வெளிச்சத்திற்கு கொண்டுவரவில்லை. பல நிலைகளில் நமது நாட்டில் ஒய்யாரமாக உயர்ந்து நிற்கும் லஞ்சம், பேராசை, அக்கறையின்மை, அலட்சியம் போன்றவற்றையும் இனம் காட்டியிருக்கிறது.

      பாராட்டுக்கு நன்றி.

      Delete
  16. sir.. I think this is the right time to discuss about this article.. Chennai shattered by this disastrous rain.. " தற்போது சென்னையில் காணப்படும் வெள்ளம் ஆரோக்கியமானதல்ல "

    வருங்கால பேராபத்தை உணர்த்தும் வரிகள் ! (just want to remind this word which was said by our friend..

    ReplyDelete