Saturday 9 July 2016

ரத்த நிலம்.


    

    Scarecrow என்ற ஆங்கில வார்த்தையை நான் அறிந்துகொண்டது John Mellencamp என்ற அமெரிக்க folk-rock பாடகனின் 'Rain On The Scarecrow' என்ற பாடலை  முதலில் கேட்ட சமயத்தில்தான்.  இது 1985 இல் வெளிவந்த Scarecrow என்ற இசைத் தொகுப்பின் தலைப்புப் பாடல். ஸ்கேர்க்ரோ என்ற ஆங்கில வார்த்தைக்கான தமிழ்ச் சொல் பல உண்டு. பொதுவாக  இதை சோளக்காட்டு  பொம்மை அல்லது சோளக்கொள்ள பொம்மை என்றும் குறிப்பிடுவார்கள். காக்கா விரட்டி என்பது  ஸ்கேர்க்ரோவின் துல்லியத்  தமிழ் மொழிபெயர்ப்பாகத் தோன்றுகிறது.

      வயல் வெளிகளில் பழைய நைந்து போன சட்டை பேண்ட் அணிந்துகொண்டு கைகளை விரித்தபடி தொங்கிக்கொண்டிருக்கும் வைக்கோல் வைத்துத் தைக்கப்பட்ட, மனித சாயல் கொண்ட இந்தத்  திகில் உருவம் காகங்களை விட மனிதர்களைத்தான் அதிகம் பயப்படுத்தும்.  இந்த வைக்கோல் உருவத்தை வைத்துக்கொண்டு ஹாலிவுட் நிறைய பயங்கரப் படங்களை உருவாக்கியிருக்கிறது.

    இந்தப் பதிவு அவ்வகையான ஹாலிவுட் படங்கள் பற்றியதல்ல. ஸ்கேர்க்ரோவை வைத்து மனதை தைக்கும் ஒரு பாடலைக் குறித்த ஒரு பார்வை. அது மெலன்கேம்பின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்றென கருதப்படும் ரெய்ன் ஆன் தி ஸ்கேர்க்ரோ.  மிரட்சி தரக்கூடிய இந்த உருவத்தை கருப்பொருளாகக் கொண்டு ஒரு அசாதாரண, அர்த்தம் பொதிந்த ஒரு பாடலைப் படைக்க மெலன்கேம்பின் மனதில் அதே அசாதாரணமான கோபமும், அதீத வலியும், அமிழ்ந்திருக்க வேண்டும்.

   இப்போது நினைத்துப் பார்க்கையில்  ஸ்கேர்க்ரோ என்ற வார்த்தையில் ஏதோ ஒரு வசியம் இருந்தது என தெரிகிறது. அது என்னை ஈர்த்தது.  இன்னும் கொஞ்சம் ஆழமாக யோசித்துப் பார்த்தால் அந்த வார்த்தையை  விட அந்தப் பாடலில் இருந்த வெட்டும் தாளமும், நீண்டு செல்லும் கிடார் இசையுமே என்னை அதிகமாக  ஈர்த்தது.  ஆவேசமாக அதிரும் இசை என்பதைத் தாண்டி மூடிய கதவுகளை அடித்துத் திறக்கும் சூறாவளி போல  நெஞ்சுக்குள் தடாலடியாக புகுந்து  கேட்டவுடன் ஒரே வீச்சில் என்னைச் சாய்த்துவிட்ட ஒரு புயல் பாடல்.

   நிலத்தில் நட்டப்பட்டிருக்கும் கம்பிவேலியைப் பற்றிக்கொண்டு ஒரு மனிதன் (Mellencamp) துயில் கொண்டிருக்கும் கனத்த துயரத்துடன்  தன் வயல்வெளியைப் பார்த்தவாறு நின்றுகொண்டிருக்கும் படம் என்னைக் கவர்ந்தது. கருப்பு வெள்ளைத் திரைப்படங்கள் போன்று அது ஒரு கிளாஸிக் போஸ்டர். வணிக சமரசங்களுக்கு உடன்படாத, அந்த இசைத்தொகுப்பின் ஆன்மாவை குறிப்பால் உணர்த்தும் ஆழமான அர்த்தம் சொல்லும் படம் அது.


     

     திருச்சியிலிருந்த ஒரு இசையகத்தில் கசெட் டு கசெட் முறையில் பதிவு செய்திருந்த பதிமூன்று பாடல்களில் ஒன்றாக இது இருந்தது. பி சைட் எனப்படும் கசெட்டின் இரண்டாம் பக்கத்தில் நான்காவதாக இது பதியப்பட்டிருந்தது. இது இத்தனை தெளிவாக என் நினைவிலிருப்பதற்கு இன்னொரு  காரணம் இருக்கிறது.  The Police என்ற பிரிட்டிஷ் இசைக் குழுவின் பிரதான பாடகரான Sting பாடிய Russians என்ற இசைக் கருவிகள் இல்லாத மிக மெதுவான (அப்போது அலுப்பான) பாடல் முடிந்ததும் அடுத்து ஒரு மகா வெடிப்பு போல துடித்துக் கொண்டு கிளம்பும் கிடாரும், திமிரும் டிரம்ஸ் இசையும் ஒரு சினிமா நாயகனின் அறிமுகக் காட்சி போன்று அதிரடியாக என் மனதில் பசுமையாக தங்கிவிட்டது. இன்றும் ரஷ்யன்ஸ் பாடல் கேட்டால் அந்தப் பாடலின் இறுதியில் scarecrow வின் திடீர்த் தாளம்  அனிச்சையாக மனதுக்குள் ஒலிக்கும்.

     பாடல் எதைப் பற்றியது என்ற சிந்தனைக்கு என் வயது தயாராகவில்லை. கேட்டவுடனே இது சாதாரண காதல் பாடல் அல்ல என்பது மட்டும் தெரிந்தது.  பாடகனின் குரலும் அவன் பாடும் பாணியும், இசையும் எனக்குப் போதுமானதாக இருந்தது. பின்னாட்களில் ஆங்கிலப் பாடல் வரிகள் கொண்ட லிரிக்ஸ் புத்தகங்கள் ஒன்றில் இதன் வரிகள் படிக்கக் கிடைத்தாலும், பெரிதாக ஈர்க்கவில்லை.-- அதாவது அப்போது. ஏதோ ஒரு அமெரிக்க ஏழை உழவன்  தனது காய்ந்து போன வெற்று நிலத்தைக் குறித்து வேதனையுடன் பாடும் பாடல் என்ற ஒற்றைக் கோடு மட்டும் இதைக் கேட்கும் கணங்களில் தோன்றுவதோடு சரி.   வார்த்தைகளுக்குள்  அதிகம் உள்ளே சென்று ஆராய்ந்ததில்லை.

   ஆனால் நம்  உழவர்களின் தற்போதைய தொடர் தற்கொலை, உழவுத் தொழில் நமது நாட்டில் அரிதாகிக் கொண்டுவரும் ஆபத்தான சூழ்நிலை, விளை நிலங்கள் விலை போய் கட்டிடங்கள் அங்கே எழும்பும் கான்கிரீட் காடுகளின் உருவாக்கம், பண முதலைகளின் அரசியல் ஆடு புலி ஆட்டத்தில் தொடர்ந்து காணாமல் போகும் விவசாய நிலங்கள், இதன் பின்னணியில் இயங்கும்  உயர்மட்ட நயவஞ்சக காய் நகர்த்தல்கள், மோசடி சத்தியங்கள் என்று பல உண்மைகள் மனதை ஆக்கிரமிக்கும் இப்போதைய நிலையில் இந்தப் பாடலைக் கேட்கும் போது  இந்தப் பாடலின் ஆன்மாவை என்னால் தொடமுடிகிறது.

   வர்த்தகமயமான தொழில் நுட்பத்தின் கோபுரமான முதல் உலக தேசமோ,, சிகப்பு பூசிக்கொண்ட இரண்டாம் உலக தேசமோ, அல்லது நாள் தோறும் வாழ்க்கையை பணயம் வைத்துப் பிழைக்கும் மூன்றாம் உலக தேசமோ எந்த நாடாக இருந்தாலும் அங்கிருக்கும் உழவர்களின் நிலையும், அவர்கள் வாழ்க்கையும் பலவிதமான கடுமையான வன்முறையின் இடையே சிக்கித் திணறி, வலி ஒன்றை மட்டுமே சுவைக்கும் யதார்த்தம்  என்பதை உணர முடிகிறது.  அதை உணரும் தருணம் இந்தப் பாடலின் எங்கோ ஒளிந்திருப்பதை நாம் அறியும்பொழுது ஒரு துளி மின்சார ரத்தம்  நம் நெஞ்சத்தில் துளிர்க்கிறது. அத்தனை ஆவேசம், அத்தனைக்  கோபம், அத்தனை  வலி, அத்தனைக்  கண்ணீர்!

  இந்தப் பாடலின் பரிமாணம் வெறுமனே டிரம்ஸ்,கிடார் என்ற ஆங்கில இசையின் இன்னொரு பாடல் என்கிற வகையில் முடிந்துவிடுவதில்லை. "இப்போது  என் பிளே லிஸ்ட்டில் இருக்கும் பாடல்" போன்ற அபத்தமான வாரந்திரத் தேர்வுக்கான பாடல் இல்லை. பஸ் அல்லது ரயில் நிலையங்களில்  காத்திருக்கும் வேளையில் "சும்மா ஒரு டைம்பாஸ்" என்று காதில் வெள்ளை பட்டன் அணிந்துகொண்டு தலையை ஆட்டிக்கொண்டு ஒரு மூன்று நிமிடங்கள் ரசித்துவிட்டுப் போகும் பாடலும்  அல்ல.   ஆங்கில இசை என்றால் வெறும் இரைச்சல் என்று போதிக்கும் சில இசை  யோகிகளின் இருளடைந்த இசை "ஞானத்தை" உடைத்து நொறுக்கும் இரும்புப் புயல் இது.

   ஒரே பாடலில் மேலன்கேம்ப் நான்கு தலைமுறைகளை நமக்கு அறிமுகம் செய்கிறான். தாத்தா முதல் பேரன் வரையான  நான்கு தலைமுறைக்கும், பாடகனின்  நிலத்திற்குமான ஆத்மார்த்தமான உறவை நம்மால் உணரமுடிகிறது.  தன் தாத்தாவின் நிலம் எப்படி தந்தையின் காலத்தில் பயிர்களால் நிரம்பியிருந்தது என்று ஒரு வரியில் உணர்த்திவிட்டு, பயிர்கள் படர்ந்திருந்த தனது விளை நிலம் தன் காலத்தில் வெறும் காய்ந்த பூமியாக இருப்பதை துயரத்துடன் இசைத்துவிட்டு, ஒரு காலத்தில் பசுமையாக இருந்த அந்த நிலத்தின் நினைவுகளை மட்டும் தனது மகனுக்கு பரிசளிக்கிறான்.

     பல குறியீடுகள் பாடலில் விதைக்கப்பட்டிருக்கின்றன. Scarecrow on the wooden cross, black bird in the barn என்ற ஆரம்ப வரிகள்  தான் இழந்த நிலம் ஒரு உழவனுக்கு ஏசுவுக்கு நிகழ்ந்த கொடூர மரணம் போன்றது என்ற குறிப்பை (மரச் சிலுவையில்  தொங்கும் வைக்கோல் பொம்மை) உணர்த்துகிறது. Rain on the Scarecrow மழையில் நனையும் அந்த வைக்கோல் பொம்மையின் மரணத்தைச்  சொல்கிறது. களஞ்சியத்தில் இருக்கும் ஒரு கரும் பறவை ஒரு அபசகுணமாக பொதுவாகப் பார்க்கப்படுகிறது. (இது தேசத்திற்கு தேசம் மாறுபடலாம்)

      Four Hundred empty acres that used to be my farm என்ற இரண்டாவது வரியில் தன்னுடைய பாரம்பரிய நிலத்தின் இழப்பை சட்டெனெ போகிற போக்கில் கோடிட்டு காட்டிவிட்டு, அங்கே வளர்ந்த பயிர்கள் போல தான் வளர்ந்ததை உணர்த்துகிறான் தொடர்ந்து. அதில் பின்னே வெடிக்கக் காத்திருக்கும் ஆவேச உணர்ச்சிகளின்  ஆரம்பங்கள் அமைதியாகத் தவழும்   அழகை நீங்கள் மீண்டும் மீண்டும் இந்தப் பாடலைக் கேட்டால் மட்டுமே உணர்ந்துகொள்ள முடியும்.  

    I grew up like my daddy did and my grandpa cleared this land 
  When I was five I walked this fence while my grandpa held my hand என்ற வரிகளில் தங்களின் பாரம்பரிய நிலம் அவர்களுக்கு எத்தனை நெருக்கமாக இருந்தது என்ற காட்சி கேட்பவருக்குள் விரிகிறது.  ஒரு சிறுவன் தனது தாத்தாவின் கரத்தைப் பற்றிக்கொண்டு நடந்துசெல்லும் அந்தக் காட்சியை மங்கலாக, வெகு தூரத்தில் என்னைவிட்டு அகன்று செல்வதை போல என்னால்  காண முடிகிறது. 

   கோரஸில் வரும் Rain on the scarecrow blood on the plow  என்ற வேதனையாகட்டும், This land fed a nation this land made me proud என்ற  இழந்துவிட்ட பெருமிதமாகட்டும், And son, I'm just sorry there's no legacy for you now என்ற விரக்தியாகட்டும் ஜான் மெலன்கேம்ப்பின் குரல் ஒரு  தீண்டும் தீயாக சுடுகின்றது. அடுத்த சரணத்தில் அந்தத் தீ  தனக்குத் தேவையான ஆக்சிஜனை அதன் இசையிலிருந்து தொடர்ந்து பெற்றுக்கொண்டே இன்னும் வேகமாக ஆக்ரோஷமாக எரிகிறது .

  The crops we grew last summer weren't enough to pay the loans என இயற்கையின் சூழ்ச்சியையும்,  Couldn't buy the seed to plant this spring and farmers' bank foreclosed என்று சுயநல அரசியலின்  நயவஞ்சக நாடகத்தின் பிரமாண்டமான பிம்பத்தின் முன்னே தான் வலுவிழந்து வீழ்ந்ததையும் நெருப்பாகப்  பாடுகிறான்.

     நிலத்தை ஏலம் எடுக்கவந்த நண்பனும், அவனுடைய சுயமுறையீடும், வெளியே ஊஞ்சலில் அமர்ந்துகொண்டு கைகளில் பைபிளோடு "கடவுளே என்னை சுதந்திர தேசத்திற்கு எடுத்துச் செல்லும்" என பிரார்த்திக்கும் பாடகனின் பாட்டியும் நிலத்தில் நாற்றுகளோடு பிடுங்கி எறியப்பட்ட மனித நட்புகளுக்கும்,  சிதைந்து போன மனித நம்பிக்கைகளுக்குமான குறியீடுகள்.

    இறுதி சரணத்தில் வரும் 97 சிலுவைகள் ஒரு சர்காஸ்டிக் குறியீடு.  மனித உயிர்களின் மையமான உணவின் பிம்பமான பயிர்கள் நடப்படும் நிலத்தில் 97 சிலுவைகள் நடப்பட்டிருப்பது மரணத்தை விதைக்கும் அரசியலின் கோர முகத்தைக் காட்டுகிறது. பயிர்கள் இல்லாத நிலத்தில் சிலுவைகளின் தோற்றம் பாடகனின் நெஞ்சத்தில் விதைக்கும் மரண விதைகள் அவனை அந்த நிலத்தில் காவல் இருந்தாலும்  கையறு நிலையில் இருந்த வைக்கோல் பொம்மை போல உணர வைக்கின்றது.  அவன் பாடுகிறான்:"And some nights I feel like dying like that scarecrow in the rain."     மகத்தான வரிகள்.  அதை அவன் பாடும் தொனி நம்மை உறையச் செய்கிறது.

   பாடலின் இசை நெஞ்சில் ஈரமான கண்ணாடித் துண்டுகளை விதைக்கிறது. ஆங்கில ராக் இசைக்கே உரித்தான அலறும் கிடார் இசை இங்கில்லை. இங்கே ஒலிக்கும் கிடாரின் இசை  தேவாலயத்தில் கேட்கும் நீளமான மணியோசை போன்றது.  இந்தப் பாடலில் மெலன்கேம்ப்பின் கிடார் இசை நிறைய கண்ணீர்த் துளிகளால் உருவானது. அது வெறும் வாத்திய ஓசையாக மட்டும் இந்தப் பாடலில் ஒலிக்காமல், மனதுக்குள் கதறி அழும் ஒரு கையாலாகாத அப்பாவி உழவனின் ரத்தச் சிதறலாக வெடிக்கிறது.

   பாடலின் துவக்கத்தில் ஒலிக்கும் அந்த கிடாரின் நீள் ஓசை அதோடு ஒட்டிவரும் தாளம் சட சடவென்று  வேகம் பிடித்து பின்னர் ஒரு explosion போல வெடித்ததும் கிடார் வேறு மொழி பேசுகிறது.

      ஆங்கில ராக் இசையின் தாளம் (ட்ரம்ஸ்) அலாதியானது.  அமைதியாக, அதிரடியாக, ஆக்ரோஷமாக,, சில சமயங்களில் அதிர்ச்சியூட்டும்படியாக  அது பல விதமாக வெளிப்படும். இந்தப் பாடலின் டிரம்ஸ் மிகக் கூர்மையான  மெட்டாலிக் ஓசையுடன் தெறித்து ஒலிக்கும்.  இது போன்றதொரு டிரம்ஸ் வெகு அரிதானது.  இதுவரை நான் இதே போன்ற டிரம்ஸ் இசையை கேட்டதில்லை. பாடலின் துயரமான கருவின் வடிவை சிதைக்காமல் இன்னும் பிரமாண்டமாகக் காட்டும் மந்திரத்தைச் செய்கிறது அந்த டிரம்ஸ் இசை.

   அதிலும் குறிப்பாக பாடலின் இறுதியில் பாடகன், "சில இரவுகளில் நான் சாவதைப் போல உணர்கிறேன், அந்த வைக்கோல் பொம்மை மழையில் இறந்ததைப்  போல" என்று தன் குரலை உச்ச ஸ்தாயிக்கு கொண்டு செல்லும் போது கேட்கும் ரசிகனுக்குள்ளும் ஏதோ ஒன்று  சட்டென்று உடைகிறது.

  அதன் பின்னர் தெறித்து ஒலிக்கும் டிரம்ஸ் ஓசையின் ஒவ்வொரு தாளமும் தனக்கு நேர்ந்த அநீதியின் மீது வெடிக்கும் ஆங்கார ஓசையாகவே வெளிப்படுகிறது. உலகிலுள்ள ஒவ்வொரு உழவனின் கண்ணீர்த் துளியும் இந்தப் பாடலில் இசையாக, வரியாக, குரலாக பரிணாமம் அடைகிறது.

    


Rain On The Scarecrow



Scarecrow on a wooden cross blackbird in the barn 
Four hundred empty acres that used to be my farm 
I grew up like my daddy did my grandpa cleared this land 
When I was five I walked the fence while grandpa held my hand

[Chorus]
Rain on the scarecrow blood on the plow 
This land fed a nation this land made me proud 
And son I'm just sorry there's no legacy for you now 
Rain on the scarecrow blood on the plow 
Rain on the scarecrow blood on the plow

The crops we grew last summer weren't enough to pay the loans 
Couldn't buy the seed to plant this spring and the farmers bank foreclosed 
Called my old friend schepman up to auction off the land 
He said john its just my job and I hope you understand 
Hey calling it your job ol' hoss sure don't make it right 
But if you want me to Ill say a prayer for your soul tonight 
And grandmas on the front porch swing with a 
Bible in her hand Sometimes I hear her singing take me to the promised land 
When you take away a mans dignity he cant work his fields and cows

There'll be blood on the scarecrow blood on the plow 
Blood on the scarecrow blood on the plow

Well there's ninety-seven crosses planted in the courthouse yard 
Ninety-seven families who lost ninety-seven farms 
I think about my grandpa and my neighbors and my name and some nights 
I feel like dying like that scarecrow in the rain

[Chorus]

Rain on the scarecrow blood on the plow 
This land fed a nation this land made me so proud 
And son I'm just sorry they're just memories for you now 
Rain on the scarecrow blood on the plow 
Rain on the scarecrow blood on the plow


https://www.youtube.com/watch?list=SRjohn%20mellencamp%20rain%20on%20the%20scarecrow&v=joNzRzZhR2Y


எனக்கென சொந்தமாக நிலமோ, இடமோ இல்லை. நான் ஒரு உழவனுமல்ல. இருந்தும் மேலன்கேம்பின் ஓலத்தில் என் குரலும் இணைந்திருப்பதை என்னால் உணர முடிகிறது.  

இசைக்கு மனித மொழிகள் சுவர்கள் அமைக்க முடியாது என்ற உண்மையை மீண்டுமொரு முறை நிரூபிக்கும் மற்றொரு  மகத்தான பாடல். 











24 comments:

  1. காரிகன் .

    #இசைக்கு மனித மொழிகள் சுவர் அமைக்க முடியாது. #எவ்வளவு நிதர்சனமான உண்மை .கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய விளைநிலங்கள் மற்றும் விவசாயிகளின் நிலை குறித்து வெளிவந்த பாடலைக் கேட்க இயலாவிட்டாலும் தங்களின் பதிவு ஒரு அருமையான கதை படிப்பது போன்ற உணர்வையும் பாடலைக் கேட்கவேண்டும் என்ற ஆவலைத்தூண்டுவதாயும் உள்ளது. உழவன் வியர்வை ரத்தமாய் சிந்தப்படுவதால் தான் இவ்வுலகம் உய்த்துக்கொண்டிருக்கிறது .

    ReplyDelete
  2. எனக்கென சொந்தமாக நிலமோ, இடமோ இல்லை. நான் ஒரு உழவனுமல்ல.- பதிவை படித்து முடித்தபோது..என்னால் உணர முடிந்தது இந்திய விவாசாயத்தையும் விவசாயிகைளையும்...

    ReplyDelete
  3. பாடலைக் கேட்காவிட்டாலும் விரிவாக அறிந்து கொள்ள முடிந்த பகிர்வு...

    ReplyDelete
  4. காரிகன்

    ஆங்கிலப் பாடலின் கவிதையை கவித்துமாய் எழுதியுள்ளீர்கள் . பாராட்டுக்கள். இந்த இசை கேட்டு புளகாங்கிதம் அடைந்து உணர்வுகளால் உந்தப்பட்டு உருகி உருகி எழுதும் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் போலவே மற்றவர் இசையில் பிறரும் உருகுவார்கள் என்ற எளிமையான நிதர்சன உண்மையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    அடுத்தவரின் ரசனைகளை மட்டமாக விமர்சிக்கும் உங்களின் பல பின்னூட்டங்கள் உங்களின் இணையப் பதிவுகளில் scarecrow போலவே எனக்கு இப்போது காட்சியளிக்கின்றன . இதயத்தின் ஆழத்திலிருந்து அனுபவித்து எழுதும் உங்களின் பதிவை வேண்டுமென்றே கீழ்மைப்படுத்தி எழுத முனைந்தால் உங்களுக்கும் சிறு வலி தோன்றி மறையும் தருணம் முளைக்கலாம் ..இல்லையா!?

    நான் அப்படி எழுத நினைக்கவில்லை. உங்களின் ரசனையை கொச்சைப்படுத்தவும் வரவில்லை. அந்தப் பாடலை இரண்டு முறை கேட்டேன். நன்றாக இருந்தது. ஆங்கிலப் பாடலுக்கு தனி ' புரிதல் ' வேண்டும் போல தெரிகிறது. ஆம். எந்த இசைக்கும் இந்தப் ' புரிதல் ' மாறுபடும். இதுவே புரியாமல் போய் விடுகிறது.

    கிடார் , டிரம்ஸ் மட்டுமே இசைத்து ஒரு வலியை உங்களுக்கு இந்தப் பாடல் ஏற்படுத்துமென்றால் பலவிதமான இசைக்கருவிகளையும் ஒன்றோடொன்று இழைத்து மேற்பொருத்தி சுரம் கூட்டி தரம் காட்டும் மற்ற இன்னிசைப் பாடல்களும் அதே மாதிரியான அனுபவத்தைத் தரும் என்பதை நீங்கள் புரிந்து கொண்டால் சரிதான்!

    ReplyDelete
  5. வணக்கம்
    வழக்கம் போலவே அசத்தல்
    என்ன ஒரு ஆனந்த உணர்வு இருக்கும்
    இப்போ மனம் கனக்கிறது

    ReplyDelete
  6. I think charles has started the war again... let's see how this goes...

    ReplyDelete
  7. வாங்க அருள் ஜீவா,

    வருகைக்கு நன்றி.

    உழவனின் வியர்வையை ரத்தமாகப் பார்க்கும் பார்வையினால் விளைந்ததே இந்தத் தலைப்பு.

    சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  8. வாங்க வலிப்போக்கன்,

    அப்படியே முடிந்தால் பாடலையும் கேளுங்கள்.

    ReplyDelete
  9. பரிவை குமார் அவர்களே,

    உங்கள் பின்னூட்டம் பார்த்த பிறகுதான் நான் இந்தப் பாடலை இணைத்தேன். பொதுவாக எனக்கு இந்த வீடியோ இணைப்பில் அதிக விருப்பம் கிடையாது. விருப்பப்படுகிறவர்கள் நேர யூ டியூப் சென்று பார்த்துக் கொள்ளவும் என்றிருப்பேன். மேலும் இதுதான் அந்தப் பாடல் என்று கொடுத்துவிட்டால் "இதானா அது?" என்று சிலருக்குத் தோன்றும். இருந்தும் இந்தப் பாடல் ஒரு தனி ரகம்.

    ReplyDelete
  10. வாங்க சால்ஸ்,

    கருத்துக்கு நன்றி.

    நீங்கள் இப்படித்தான் எழுதுவீர்கள் என்று நினைத்தேன். அதை நிறைவேற்றியது குறித்து மகிழ்ச்சி.

    முதலில் உருகி உருகி புளகாங்கிதம் அடைந்து நான் இதை எழுதவில்லை. இந்தப் பாடலின் மையக் கருத்து எவ்வாறு மொழி, மதம், கலாச்சாரம், எல்லைக் கோடுகள் போன்றவற்றை விட்டு விலகி எல்லா உழவர்களின் வேதனையை பாடுகிறது என்ற காரணத்தினால்தான். இதுவே ஒரு சாதாரண காதல், அல்லது பெண்களை கேலி செய்யும் பாடலாக இருந்தால் கண்டிப்பாக எழுதியிருக்கவே மாட்டேன். (நீங்கள் புளகாங்கிதம் அடையும் பாடல்கள் பல இந்த வகையறாக்கள்தான்)

    எனக்கு உங்களவரை பிடிக்காது என்று நீங்கள் நினைப்பதால் நான் ரசிப்பதை குறித்து இகழ்வாக பேச விளைவது நற்ச் சிந்தனை கிடையாது. நீங்கள் என்னதான் நான் அப்படி செய்யவில்லை என்றாலும் அதுதான் உங்கள் பின்னூட்டத்தின் பொருள் என்று படுகிறது. நான் விமர்சித்த பாடல்கள் பற்றி scarecrow பட்டம் கட்டுவது இருக்கட்டும். நான் புகழ்ந்த பாடல்களுக்கு என்ன பட்டம் தயாராக வைத்திருக்கிறீர்கள்? மேலும் நான் எல்லா ஆங்கிலப் பாடல்களையும் விரும்பிக் கேட்பவனல்ல.

    கிடார், டிரம்ஸ் இரன்டும் ஆங்கில இசையின் தூண்கள். அவைகள் பிரதானமான இசைக்கருவிகள் என்பதால் அவற்றைக் குறிப்பிட்ட வேண்டியுள்ளது. மற்றபடி இவை இரண்டு மட்டுமே எல்லா ஆங்கில இசையிலும் இசைக்கப்படுகிறது என்று நீங்கள் எண்ணினால், பரிதாபம்தான். மேலும் ஒரு கிடாரைக் கொண்டே அவர்களால் பல இசைப் பிம்பங்களை கேட்பவர்களின் மனதில் உருவாக்கிவிட இயலும். ஏன் சில சமயங்களில் இசைக் கருவிகளே இல்லாத பாடல்கள் நம் மனதை கவர்வதில்லையா?

    இரண்டு வினாடி குழல், பத்து வினாடி வயலின், நான்கறை வினாடி கிடார், சம்பந்தம் இல்லாத தாளம், திடீர் ஷெனாய் போன்ற இசைக் கோர்வைகள் ஒரு பாடல் தரவேண்டிய முழுமையான அனுபவத்தை தருவதில்லை. இது புரியாமலிருப்பதால்தான் உங்களால் சில பாடல்களை ரசிக்க முடிகிறது. அனுபவித்து மகிழுங்கள். அதில் நான் தலையிட முடியாது.

    ReplyDelete
  11. அது சரி . உங்களுக்குப் புரியாததை நான் எவ்வளவு விளக்கிச் சொன்னாலும் நீங்கள் புரிய போவதில்லை . மீண்டும் மீண்டும் ' இரண்டு வினாடி குழல், பத்து வினாடி வயலின், நான்கறை வினாடி கிடார், சம்பந்தம் இல்லாத தாளம், திடீர் ஷெனாய் போன்ற இசைக் கோர்வைகள் ' என்று பாடிய பாட்டையேதான் பாடுகிறீர்களே ஒழிய music arrangement என்பது அப்படிப்பட்டதுதான் என்று எப்போது ஏற்றுக் கொள்ளப் போகிறீர்கள்?

    உங்கள் உணர்வுதான் உசத்தி என்ற இறுமாப்பு மட்டும் குறைவதேயில்லை. உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி என்ற பாணியில்தான் இப்போதும் உங்கள் விளக்கம் உள்ளது.


    கிடாரில் எல்லா உணர்வுகளையும் கொண்டு வரலாம் என்றால் மற்ற இசைக்க கருவிகளில் ஏன் கொண்டு வர முடியாது? எல்லாம் மன பிரமையே!

    ReplyDelete
    Replies
    1. நான் இசை என்று வரும் போது பல தரப்பட்ட இசை வடிவங்களை, இசை பாணிகளை முன் வைத்து என் எழுத்தை தீர்மானிக்கிறேன். நீங்கள் ஒரே ஒரு ஆளை வைத்துக்கொண்டு கும்மியடிக்கிறீர்கள். அதுதான் வித்தியாசம். கொஞ்சம் அந்த வட்டத்தை விட்டு வெளியே வந்தீர்களேயானால் நான் சொல்லும் உண்மை புரியும்.

      Delete
  12. வாங்க மது,

    மனது கனக்கும் பாடல்தான் அது. உங்களுக்கு எப்போதும் வரும் அந்த ஆனந்த உணர்வுக்கான பதிவு அடுத்து வரலாம்.

    ReplyDelete
  13. வாங்க சேவியர்,

    சால்ஸ் யாரை மனதில் வைத்துக்கொண்டு இப்படி எதையோ ஆரம்பிக்கின்றார் என்று உங்களுக்கும் தெரியும்தானே? இது போன்ற விவாதங்களுக்கு முடிவே இருக்காது. நான் என்ன எழுதினாலும் "இது சரி. அப்ப அது?" என்று ஆரம்பிப்பார்.

    ReplyDelete
    Replies
    1. Thanks for your reply Kaarigan.. My humble request is better you avoid answering these kind of blabberings...

      Delete
  14. வேலைப்பளுவால் முன்பே பாதி படித்தேன். இப்போதுதான் முழுமையாகப் படித்து முடித்தேன். பாடலையும் கேட்டேன். இரண்டாவது முறை உங்களுடைய பாடலின் வரிகளைப் பார்த்துக்கொண்டே பாடலைக் கேட்டபோதுதான் பாடலின் முழு வீச்சையும் புரிந்துகொள்ள முடிந்தது.
    உங்கள் விளக்கம் மட்டும் இல்லையானால் இதுவும் ஒரு சாதாரண ரகப் பாடலாகத்தான் முடிந்து போயிருக்கும். மயானமாகிப்போன அந்த விளைநிலமும் அங்கே பதிக்கப்பட்டிருக்கும் சிலுவைகளும் ரத்தக் கீறலை மனதில் ஏற்படுத்துவதை ஈர நெஞ்சமுள்ளவர்களால் நிச்சயம் புரிந்துகொள்ளமுடியும்.

    ReplyDelete
  15. வாங்க அமுதவன்,

    பாராட்டிற்கு நன்றி.

    ------மயானமாகிப்போன அந்த விளைநிலமும் அங்கே பதிக்கப்பட்டிருக்கும் சிலுவைகளும் ரத்தக் கீறலை மனதில் ஏற்படுத்துவதை ஈர நெஞ்சமுள்ளவர்களால் நிச்சயம் புரிந்துகொள்ளமுடியும்.------

    இதைத்தான் மெலன்கேம்ப் கேட்பவர்களின் மனதில் விதைக்கிறான்.

    இதைப் புரிந்துகொள்ள பெரிய சூட்சுமங்கள் தேவையில்லை. இருந்தும் சிலர் நான் எதற்காக இதை எழுதினேன் என்பதை விட்டுவிட்டு உடனே ஆங்கில இசை, தமிழ் இசை, இரண்டே இசைக்க கருவிகள் என வழக்கமான வசைக்கு தங்களையே சுருக்கிக் கொள்வது வேடிக்கையாக இருக்கிறது. ஒரு நல்ல கருத்து கொண்ட பாடலை பாராட்டுவதில் என்ன பிரச்சினை இவர்களுக்கு என்று தெரியவில்லை. அதை விட்டுவிட்டு எங்ககிட்டயும் இந்த மாதிரி பாட்டெல்லாம் இருக்கில்ல என்கிற தோரணையில் பேசுவது அரை ட்ரவுசர்களின் அலம்பல்.

    புதிய பதிவு எழுதுங்கள். உங்கள் தளம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன.

    ReplyDelete
    Replies
    1. புதியதொரு நூலை எழுதுவதிலும் அதனை முடிப்பதிலும் என்னை ஈடுபடுத்திக்கொண்டுவிட்டதால் பதிவுகள் எதுவும் எழுத நேரம் அமையவில்லை. நான் எழுதி முடித்த அந்தப் புத்தகம் வருகிற ஆகஸ்ட் 7ம் தேதியன்று ஈரோடு புத்தகச் சந்தையில் வெளியிடப்படவிருக்கிறது. இந்தப் பணியினால் பாதிக்கப்பட்டுவிட்ட வேறு சில வேலைகளை முடித்துக்கொண்டு பதிவு பக்கம் கவனம் செலுத்தலாம். தங்கள் அன்பிற்கு நன்றி.

      Delete
    2. ஈரோடு வந்தால் என்னை அழைக்கவும் நேரில் சந்திக்க விரும்புகிறேன்.

      Delete
    3. நிச்சயம் சேகர், என்னுடைய தளத்தில் உங்கள் தொலைபேசி எண்ணைக் குறிப்பிடவும். நான் தொடர்பு கொள்கிறேன்.

      Delete
  16. காரிகன்

    சமீபத்தில் 'அம்மா கணக்கு ' என்ற படத்தில் ' உனக்கும் எனக்கும் ' என்ற பாடல் கேட்டேன். உங்களின் Scarecrow உங்களுக்கு தந்த அதே உணர்வினை இந்தப் பாடலும் தந்தது. இந்தப் பாட்டிலும் கிடார் மற்றும் டிரம்ஸ் மட்டுமே பிரதானம். கேட்டுப் பாருங்கள் .

    ReplyDelete
  17. சால்ஸ்,

    உங்களுக்கு வச்சுக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள பாட்டைக் கேட்டாலும் scarecrow பாடல் தரும் உணர்ச்சிகள் வரலாம். நான் என்ன செய்வது? அதையே ரசித்துவிட்டுப் போங்கள். கழுகும் பறக்கிறது, காகமும் பறக்கிறது. இரண்டும் ஒன்று என்பது உங்கள் கணக்கு.

    ReplyDelete
  18. ஆமாம் . ஆங்கிலேயரின் அடிவருடிகள் போல பேசுபவர்கள் தங்களை கழுகுகளாக எண்ணிக் கொள்ளலாம். ஆனால் பிணம் தின்னி கழுகுகள்.

    ReplyDelete
  19. காத்திருக்கிறேன்

    ReplyDelete