Thursday 25 August 2016

இழந்தவர்களின் இசை

                                                   We carry in our hearts the true country
                                                          And that can not be stolen
                                                    We follow in the steps of our ancestry 
                                                          And that can not be broken


                                                 
     

                                      இழந்தவர்களின் இசை  



    தங்களது சொந்த மண்ணை இழந்தவர்களின்  வரலாறு உலகெங்கும் நீக்கமற நிறைந்துள்ளது. தங்கள் கண் முன்னே பறிபோன தங்களின் மண் குறித்து அந்த இனம் ஒரு பாடல் பாட நேர்ந்தால் அது எப்படியான இசையாக இருக்கும்? துக்கம்? கோபம்? வலி? வெறுப்பு?

     உழவர்களின் ரத்த வேதனையை  கேட்பவர்களின் உணர்வுகளில் ஊசி போல செலுத்திய ஜான் மெலன்கேம்ப்பின் ஸ்கேர்க்ரோ போன்ற மற்றொரு பாடல் குறித்தே இந்தப் பதிவு. இதைப்  பாடியது ஆஸ்திரேலிய ராக் இசைக் குழுவான  Midnight Oil. பாடலின் பெயர் Dead Heart.

   தங்கள் வசமிருந்த தங்கள் மண் அந்நியர்களின் வருகையால் எவ்வாறு தங்களிடமிருந்து அபகரித்துக்கொள்ளப்பட்டது என்ற ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளின் எரிமலைத் துக்கத்தையும், தாங்கள் இழந்த நிலத்தின் மீது விடாது கொள்ளும் எல்லையில்லா பெருமிதமும், மிகப் பழமையான மனித இனங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஆஸ்திரேலிய அபாரிஜினல் இனத்தின் தோற்றுப்போன கோபமும் ஒரு சேர வெளிப்படும் ஒரு இனத்தின் அடையாளமாகத்  தெறிக்கும்   பாடலே  டெட் ஹார்ட்.

    1986 ஆம் ஆண்டு வெளிவந்த டீசல் அண்ட் டஸ்ட் என்ற இசைத் தொகுப்பின் பிரதான பாடலாகிய படுக்கைகள் எரிகின்றன (Beds are burning) என்ற பாடல் உண்டாக்கிய அதிர்வலைகள் ரிக்டர் அளவில் எட்டுக்கும் மேலே இருந்தாலும், அதே தொகுப்பில் இருக்கும் இறந்த இதயம் (Dead Heart)  என்ற இந்தப் பாடல் கேட்பவரை நிலைகுலையைச் செய்துவிடும் வலிமை கொண்டது.

      டெட் ஹார்ட் என்ற இந்தப் பாடல் கால ஓட்டத்தில் கரைந்து விடும், கணங்கள் தாண்டியதும் காணாது போய்விடும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான இசை கிடையாது.  இது ஒரு மன ஆழத்தின் வெளிப்பாடு. நாற்பதாயிரம்  ஆண்டுகளின் எரிமலைக் குமுறல். தனது நிலத்தை அந்நியர்களின் படையெடுப்பில் தொலைத்துவிட்ட ஒரு மண்ணின் மைந்தனின் ஆன்மாவில் புதைந்திருக்கும்  ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளான  ஆக்ரோஷம்.

   ஆனால் இந்த மகா கோபம் மட்டுமே பாடலின் நிறம் கிடையாது. பாடலுக்குள் பெருமை, சுய கர்வம், வீரம், தன்மானம், போர் மனப்பான்மை, என பல குறியீடுகள் வார்த்தைகளுக்குள்ளிருந்து மின்னல் போல வெளிப்பட்டு நம்மை திணறச் செய்கின்றன.

   குறிப்பாக  " We carry in our hears the true country"என்ற கோரஸில் இருக்கும் மந்திரத் துகள்கள் கேட்டவுடனே மனதில் ஈரக்காற்று போல ஒட்டிக்கொள்கின்றன. அடுத்த முறை அந்தக் கோரஸ் ஒலிக்கும்போது ஒரு அனிச்சை செயல் போல நாமும் அதோடு இணைந்து அந்த அபாரமான கவிதை வரிகளை முணுமுணுக்கத் துவங்கி விடுகிறோம். ஒரு இனத்தின்   பண்பாட்டு வேர்கள், கலாச்சார கர்வம் இந்தப் பாடலில் எத்தனை அழகாக வெளிப்படுகிறது என்று கேட்டுப்பாருங்கள்.


   தங்கள் நிலத்தை துண்டாட வந்திருக்கும் வெள்ளையர்களோடு  அபாரிஜினல் மக்கள் நடத்திய  யுத்தத்தின்  வீரமும் வலிமையையும்  அபார துணிச்சலும்    We don't need protection, We don't need your hand என்று பீட்டர் கரெட் பாடும் தொனியில் நமக்கு காட்சிகளாகத் தெரிகின்றன.  என்ன ஒரு மகத்தான கர்வம்!

     மிக முரணாக  இதைப்  பாடியது ஒரு ஆஸ்திரேலிய ஆபாரிஜினல் பாடகன் கிடையாது. ஆஸ்திரேலியாவில் வந்தேறிகளாக வந்திறங்கிய ஐரோப்பிய வம்சாவழியில் வந்த ஒரு வெள்ளைத் தோல் பாடகனான பீட்டர் கரெட். (Peter Garrett). எந்தவிதமான வியாபார வெற்றிகளுக்காகவோ, புகழ் என்ற போதையான பீடத்துக்காகவோ பீட்டர் கரெடின் குரல் இத்தனை வலிமையாக ஒலிக்கவில்லை.  உண்மையில் பீட்டர் கரெட் ஆஸ்திரேலிய ஆபாரிஜினல் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து தனது இசையின் மூலம் போராடி வந்த ஒரு போராளிப் பாடகன். ஆஸ்திரேலிய அரசியலில் தன்னைக் கரைத்துக்கொண்டு   மண்ணின் மைந்தர்களான அபாரிஜினல் இனத்துக்காக விடாது போராடும் ஒரு இசைப் போராளி.

   1989ஆம் வருடத்தில் மெட்றாஸ் எம் சி சியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் ஒரு விடுமுறையில் வீடு சென்ற கணத்தில் இந்த கசெட்டைக் கண்டேன். கண்டதும் கேட்டேன். முதல் பாடலாக ஒலித்தது Beds Are Burning. அது ஒரு இசையதிர்வு. மிட்நைட் ஆயில் குழுவின் மிகச் சிறந்த இசைத் தொகுப்புகளில் ஒன்றான டீசல் அண்ட் டஸ்ட் என்ற அந்தத் தொகுப்பின் ஆறாவது பாடலான டெட் ஹார்ட் கேள்விகளுக்கப்பாற்பட்ட, விவாதங்களைத் தாண்டிய மிக மகத்தான கானம்.

      அதுவரை ராக் இசை என்றால் அதில் கண்டிப்பாக ஒரு தனியான  கிடார் ஆலாபனை இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் வளர்ந்துவந்திருந்தேன்.

Highway Star (Deep Purple), 
Still Loving You (Scorpion), 
Comfortably Numb (Pink Floyd), 
Prime Time (Alan Parsons Project), 
Goodbye Stranger (Supertramp), 
Sultans Of Swing (Dire Straits), 
Stairway To Heaven (Led Zep) 

   போன்ற ராக் இசையின் ஆதாரத் தூண்கள் கற்பித்த சிந்தனை அது. வெறுமனே இரண்டு வினாடிகள் லீட் கிடார் இசைத்துவிட்டு பாடலுக்குள் புகுந்துகொள்ளும் இசைக்குழுக்களை நான் ஏளனத்துடன் எட்டியே வைத்திருந்தேன்.

     ஆனால் வியப்பான வகையில் டெட் ஹார்ட் என்ற இந்தப் பாடலில் ராக் இசைக்கே உரித்தான வீறிடும் லீட் கிடார் எங்கும் கிடையாது. பாடல் முழுவதும் ஒரே தாளம் ஒரே சீரான வேகத்தில் செல்ல, வார்த்தைகளை விழுங்காத கிடார் இசை முதல் முறையாக என்னை ஆச்சர்யப்படுத்தியது.

   பாடல் இப்படி ஆரம்பிக்கிறது.

  We don't serve your country, Don't serve your king,
   Know your custom, Don't speak your tongue,
   White man came took every one.

   பாடலில் தெறிக்கும் கோபம் கேட்கும் நமக்குள்ளும் தோன்றும் விந்தையை உணர மட்டுமே முடியும். உலகில் எங்கெல்லாம் வெள்ளையர்களால் அடிமைப்பட்டவர்களின் சுவாசம் மீதமிருக்கிறதோ அங்கு இந்தப் பாடல் கண்டிப்பாக  நூற்றாண்டுகள் கடந்த ஒரு கோபத்தை உருவாக்கும்.

   White man listen to the songs we sing,
   White man came took everything

என்ற வரிகளுக்குப் பிறகு வருவது  ஒரு  அபாரமான எபிக் கோரஸ்.

     We carry in our hearts the true country
           And that can not be stolen
    We follow in the steps of our ancestry 
          And that can not be broken                                             

  இரண்டாவது முறை இதே கோரஸ் பாடப் படும்போது நம்மால் அதை வெறுமனே கேட்டுக்கொண்டிருக்க இயலாமல் பாட ஆரம்பித்துவிடுகிறோம். இந்தப் பாடலின் ஆன்மா அங்கேதான் அமிழ்ந்திருக்கிறது.  கேட்டதும் சட்டென நம்மை அது ஆட்கொண்டுவிடுகிறது.  அடுத்து நிகழ்வது இதுதான்; அடிமைப் பட்டவனின் கோபத்தை அங்கே நாம் பீட்டர் கரெட்டுடன் பிரதி எடுக்கிறோம். அளவிடமுடியாத கோபம் ஒன்றே இதன் முத்திரை. வெறுப்பல்ல. பாடகனின் இந்த உணர்ச்சித் தேர்வு ஒரு மிகுந்த பாராட்டுதலுக்குட்பட்டது.
 
   ஆஸ்திரேலிய மண்ணின் மைந்தர்கள் என்றழைக்கப்படும் அபாரிஜினல் மக்கள்  வந்தேறிகளான வெள்ளையர்களிடம்  எவ்வாறு தங்கள் சுதந்திர பூமியை இழந்தார்கள் என்பது குறித்த விழிப்புணர்வை பிரமாண்டமான அளவில் வெளியே தெரியச் செய்த பல அசைவுகளில்  மிட்நைட் ஆயில் இசைக் குழுவிற்கு மகத்தான பங்கு இருக்கிறது. இந்தக் குழுவின்  குரல் மிகுந்த வீரியம் கொண்டதாக இருந்தது. அவர்கள் வெறுமனே  காதல், ஆண்-பெண் நட்பு, புணர்வு  உணர்ச்சிகள், முதல் முத்தம் போன்ற எளிமையான கருக்களை என்றுமே பாட விரும்பியதில்லை.. அவர்களது பார்வை மிகத் தீர்க்கமான சங்கதிகளின் மீதே இருந்தது.

  சுரங்கத் தொழிலாளர்களின் கண்ணீர் துளிகள், மேற்கத்திய நாடுகளின் முகமூடி அணிந்த அமைதிப் புறாக்கள், பனிப் போரின் அவலங்கள், துப்பாக்கி ரவைகள் கொண்டு ஏகாதிபத்திய நாடுகள் எழுதும் மரணக் கவிதைகள், முதலாளித்துவத்தின் கொடூர முகங்கள் , காலனி ஆதிக்கதின் காட்டுமிராண்டித்தனங்கள் என்று அவர்களின் பாடல்கள் தொட்டுக்கொள்ளும் கருக்கள் மிக வியப்பானவைகள், மிக மிக சிக்கலானவைகள்.

   உலகப் புகழ்பெற்ற பீட்டில்ஸ் இசைக் குழு போன்று லவ் மீ டு, ப்ளீஸ் ப்ளீஸ் மீ  என சுலபமாகப் பாடிவிட்டு டாலர் டாலர்களாக கல்லா கட்டி, வித விதமாக கேமெரா முன் நின்று போஸ் கொடுத்து, மட்டித்தனமாகச் சிரித்து, பத்திரிகை அட்டைகளில் கலர் கலராக விளம்பரம் செய்யப்பட்டு, "நாங்கள் ஏசுவை விட புகழ் பெற்றுவிட்டோம்" என்று உளறிக்கொட்டி, மீடியாக்களால் புனைவாக உருவாக்கப்பட்ட புகழ் புழுதியில் சிக்கிக்கொள்ளும் வியாபார விபத்தில் மற்ற இசைக்குழுக்கள் காண்பிக்கும் அக்கறையில் ஒரு சிறிய அளவேனும் மிட்நைட் ஆயில் காண்பித்திருந்தால் அவர்களின் பெயர் பலருக்குத் தெரிந்திருக்கும். பீட்டில்ஸ் முதல் ஜஸ்டின் பீபர் வரை  பல ஆங்கில இசைக்குழுக்கள்  இந்த  அருவருப்பான, தகுதியற்ற  விளம்பர வெற்றி பெற்றவைதான்.

      இறக்கை விரித்து பறப்பதெல்லாம் பறவையானாலும், அவற்றில் பல  வெறும் காகங்களாய் கரைந்து போய்விடுகின்றன. சில மட்டுமே கழுகுகளாக உயரப் பறக்கின்றன.

 DEAD HEART by MIDNIGHT OIL (FROM THE 1986 ALBUM "DIESEL AND DUST")


We don't serve your country
Don't serve your king
Know your custom don't speak your tongue
White man came took everyone

We don't serve your country
Don't serve your king
White man listen to the songs we sing
White man came took everything

We carry in our hearts the true country
And that cannot be stolen
We follow in the steps of our ancestry
And that cannot be broken

We don't serve your country
Don't serve your king
Know your custom don't speak your tongue
White man came took everyone

We don't need protection
Don't need your hand
Keep your promise on where we stand
We will listen we'll understand

We carry in our hearts the true country
And that cannot be stolen
We follow in the steps of our ancestry
And that cannot be broken

We carry in our hearts the true country
And that cannot be stolen
We follow in the steps of our ancestry
And that cannot be broken

Mining companies, pastoral companies
Uranium companies
Collected companies
Got more right than people
Got more say than people
Forty thousand years can make a difference to the state
of things
The dead heart lives here


   









11 comments:

  1. ஹாய் காரிகன்

    Dead Heart என்ற பாடல் கேட்டேன் . ஒரே beat உள்ள பாடலாக இருந்தாலும் கேட்பதற்கு சுவையான பாடலே! நாடு இழந்த மனிதர்களின் வலியை விட சொந்த நாட்டில் வந்தேறிகளால் அடிமைப்பட்டுக் கிடக்கும் மனிதர்களின் வலி மிகவும் கொடுமையானது. அந்த உணர்வை பாடலில் கொண்டு வருவது அழகாக தெரிகிறது.

    ஓரிரு முறை கேட்பதனால் மட்டும் அந்த வலியை முழுமையாக புரிந்து கொள்ள முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதில் ஆழ்ந்து அனுபவித்து பல முறை கேட்ட பிறகே புரியும்.

    ஆங்கிலப் பாடல்களில் நான் அந்த உணர்வுகளை அடைந்ததில்லை. என் மொழி அறிந்த பாடல்களில் மட்டுமே முழுமையாக உணர்ந்திருக்கிறேன்.

    அடிமைப்பட்டுக் கிடந்த நமது தேசத்தின் விடுதலைக்காக மகா கவி பாடிய சில பாடல்களில் அந்த வலியை உணரலாம். பல பாரதியார் பாடல்கள் பாடப்பட்டுள்ளன. உதாரணமாக , ' நல்லதொரு வீணை செய்தே ' என்ற பாடலுக்கு பல இசையமைப்பாளர்கள் இசை அமைத்திருக்கிறார்கள். ' வறுமையின் நிறம் சிவப்பு ' என்ற படத்தில் எம். எஸ். வி அவர்களின் இசையமைப்பில்தான் நான் அந்த வலி உணர்ந்தேன்.

    அதன் பிறகு 'மறுபடியும்' படத்தில் அதே பாடலில் மீண்டும் அந்த வலி தெரிந்தது. பாடலின் வரிகளை விட இசைதான் அந்த வலியை கொண்டு வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
    ஏனென்றால் ஒரே பாடலுக்கு பல இசையமைப்பு செய்தாலும் ஒரு மெலோடி மட்டுமே நம்மை பாதிக்கிறது. மனிதருக்கு மனிதர் இது வேறுபடும் விஷயம்.

    நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பாடலின் வலியை அழகாக வெளிப்படுத்திச் சொல்லியிருக்கிறீர்கள் . வரிகளை வாசித்துக் கொண்டே பாடல் கேட்டால் அதை உணர முடிகிறது.

    ReplyDelete
  2. ஒரு சிறு திருத்தம். மறுபடியும் படத்தில் வரும் 'நல்லதோர் வீணை செய்தே ' பாடலின் பல்லவி மட்டுமே பாரதியாரின் வரிகள். மீதி எல்லாம் வாலியின் வரிகள். நான் சொல்ல நினைத்தது ' பாரதி ' என்ற படத்தில் வரும் ' நல்லதோர் வீணை செய்தே ' பாடல்தான் .

    ReplyDelete
  3. காரிகன்
    இழந்தவர்களின் இசை வலியாய் வடிக்கப்பட்டிருக்கிறது அழகான வரிகளால். இப்பதிவு தங்களுக்கு ஆங்கிலப் பாடல்களின் மீதுள்ள அதீத ஈர்ப்பை பிரதிபலிக்கிறது .நம் தாய்மொழியாம் தமிழ் மொழியில் இது போன்ற அநேக வலிகளையுணர்த்தும் பாடல்களும் உள்ளன . உதாரணமாக கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் எம் .எஸ் வி அவர்கள் பாடிய விடைகொடு எங்கள் நாடே பாடலைக் கேட்டுப்பாருங்கள் .ஈழதமிழர்களின் வலி கேட்பவரையும் ஊடுருவி வலியையுணர்த்தும் அற்புத த்தை உணர்வீர்கள் .

    ReplyDelete
  4. மந்திரத் துகள்கள் - WOW
    அருமையான மற்றோர் அறிமுகம்.
    நன்றிகள்

    ReplyDelete
  5. ஆங்கிலத்தின் குறிப்பிடத்தக்க பாடல்களைத் தங்கள் பதிவின் வழியே அறிந்துகொள்ள முடிகிறது. அதன் ஆர்க்கேஸ்ட்ரேஷன் விஷயங்களையும் நீங்கள் குறித்துக்கொண்டே போவதால் ஒரேயொரு கிடாரையோ அல்லது ட்ரம்பட்டையோ பாடலின் நடுவில் வாசித்துவிட்டதாலேயே அவரே உலகின் மிகச்சிறந்த இசையமைப்பாளர் என்றும் உலகின் ஒரே இசையமைப்பாளர் என்றும் நினைத்துக்கொண்டிருக்கிற பல பேரின் அறியாமைகளும் இங்கே விழுந்து சிதறுகின்றன.
    ஒரு ஆங்கிலப் பாடலைச் சொன்னவுடனேயே நீங்கள் வேண்டுமானால் ஆங்கிலத்தை ரசித்துக்கொள்ளுங்கள். எனக்குத் தமிழே போதும் என்று அவசர அவசரமாய் பொந்துக்குள் போய்ப் புகுந்துகொண்டு தலையை மட்டும் நீட்டிப் பம்மும் ரசனையாளர்களைத்தான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. எட்டுத் திக்கும் சென்று கலைச் செல்வங்களை வாரிக்கொண்டு வந்து இங்கே குவிக்கச்சொன்ன பாரதிதான் உங்கள் பதிவைப் படித்ததும் என் நினைவுக்கு வருகிறான்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. வாங்க சால்ஸ் ,

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  7. பரிவை குமார்,

    நன்றி.

    ReplyDelete
  8. வாங்க அருள் ஜீவா,

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  9. வாங்க மது,

    உண்மையிலேயே அந்த கோரஸ் மந்திரத் துகள்தான். கேட்டால் விடாது மனதை சுற்றிக்கொள்ளும்.

    நன்றி.

    ReplyDelete
  10. வாங்க அமுதவன்,

    தெளிவான கருத்துக்கும் பாராட்டிற்கும் நன்றி.

    காவிரி நெருப்பாக எரியும் இப்போதைய நிலையில் பெங்களூரில் உள்ள தமிழர்களின் நலன் குறித்து அச்சம் எழுகிறது.

    ReplyDelete