Sunday 16 April 2017

மாறும் இசை மரபுகள்

 
 

   தற்போது அதிகமாக விவாதிக்கப்பட்ட கருத்தாக்கங்களில் ஒன்றான இசைக்கான உரிமை பற்றி நிறையவே வாசித்தாயிற்று. இப்போது எழுந்திருக்கும் ராயல்டி விவகாரங்களோ, பாடலின் உரிமை குறித்த வழக்குகளோ   வணிக அம்சங்கள் கொண்டவை. அவை முற்றிலும்  பாடலை உருவாக்குபவர்களுக்கும் அதை உபயோகிப்பவர்களுமான வியாபார யுத்தம்.  இசையின் இன்னொரு பக்கத்தில் இருக்கும் ஒரு சராசரி இசை ரசிகனுக்கு இதில் பங்கில்லை. ஒரு பாடல் யாருக்கு சொந்தம் என்பது குறித்த சந்தேகங்கள், விவாதங்கள், நியாயங்கள் இன்னும் நம் தமிழிசையில் ஒரு தெளிவான வரையறுத்தலுக்கு உட்பட்டு விவரிக்கப்படவில்லை. எல்லாமே ஆங்கில இசைப்  பாரம்பரியத்தின் நீட்சியாக  தொடர்கிறது. 

     அதே சமயம் மேற்கத்திய சங்கீதத்தின்  பின்புலம் குறித்த போதிய அறிவு நம்மிடம் பெரிதும் இல்லை என்ற உண்மையை மறுக்க முடியாது. தமிழிசை மேற்கத்திய இசையின் வணிக அம்சங்களை தற்போது சுவீகாரம் எடுத்துக்கொண்டாலும் நமது சங்கீதப்  பாரம்பரியத்தில் இது  ஒரு பொருந்தாத வடிவமாகவே  காட்சியளிக்கிறது.  அதற்கான காரணங்கள் பல.

    முதலில் இசை என்னும்  மகத்துவம் ஒரு தனி ஆளுமையாக நம்மிடம் பொதுவாக இல்லை. அவ்வாறு நிலைபெற்றிருக்கும் இசையின் மீது பலருக்கு மோகம், ஈர்ப்பு போன்ற இத்யாதிகள்  கிடையாது. இந்த வாக்கியம் சற்று துருத்தலாக தெரிந்தாலும் இதுவே உண்மை. பெரும்பாலும் நமக்கு இசை என்பது மற்றொரு மிகப் பிரம்மாண்ட விருட்சத்தின் நிழல். அந்த விருட்சம் என்னவென்று நான் குறிப்பு வரையாமலே உங்களால் எளிதில் புரிந்துகொள்ளமுடியும். இசைக்கான தனிப்பட்ட சாலைகளை பெரிய அளவில் நாம் இதுவரை அமைக்கவில்லை. அப்படி உருவான சாலைகளும் சாமானியர்களை சென்றடையாது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் மேட்டுக்குடி மனோபாவத்திற்கு அடிகோலின.

   ஆனால் மேற்கத்திய நாடுகளில் இசை என்பது அவ்வாறதானதல்ல. இசையின் பல்வேறு கூறுகள் அங்கே காலம் காலமாக சிறிது சிறிதாக ஊன்றப்பட்டு, நூற்றாண்டுகளாக  ஆழமாக, அழுத்தமாக வளர்த்தெடுக்கப்பட்டு, எதையும் சாராத இசைக் கோட்பாடுகள் வழியே அங்கே மேற்கத்திய சங்கீதம் ஒரு தனியான, மேன்மையான தகுதிக்கு உயர்ந்துள்ளது. அங்கேயும் மேட்டுக்குடியினரின்  இசை, சாமானியர்களின் இசை என்ற பகுப்புகள் உண்டு. இசை  என்பது மிக மிகப் பிரதானமான ஒன்றாக அங்கே வடிவமைக்கப்பட்டுள்ளது.   அதை யாராலும் மாற்றியமைக்க இயலாது.

     ஒப்பீடடளவில் நம் தமிழிசை முழுதும் எதிர்மறையான இன்னொரு புள்ளியில் நிற்கிறது.  மார்கழி கால சாஸ்திரீய சங்கீதங்களையும் , ரிமோட் கருவியில் பொத்தான்களை அழுத்தும்போது திரையில் சில வினாடிகளில் தோன்றி கடந்து போகும் பொதிகை டீவி  போன்றவைகளில் ஒலிக்கும் கானங்களையும் இங்கே நினைவில் கொள்ளவேண்டாம்.  மேற்கத்திய இசை போன்றே ஒரு தனி ஆளுமையாக உயர்ந்திருக்க வேண்டிய நமது தமிழிசை, முப்பது நாற்பதுகளில் ஏற்பட்ட  சினிமா என்ற காட்சி வடிவத்தின் முன்னே வீழ்த்தப்பட்டுவிட்டது.  இன்று நமக்கு இசை அல்லது பாடல் என்றால் அது எந்தப் படத்தைச் சார்ந்தது என்ற கேள்வியே பிரதானம். சினிமா என்ற அந்தக் கவர்ச்சி நாகம்  நமது இசையை விழுங்கியதன்   விளைவு ஒரு மகத்தான பாடல் தனக்கான சுயத்தை முழுதும் இழந்து ஒரு நடிகனின் முகமாக வார்க்கப்பட்டு சிதைக்கப்படுகிறது.

      இங்கே ஒரு பாடலின்  வெற்றி என்பது வெறும் இசை மட்டுமல்லாது அது அடையாளப்படுத்தும் திரைப்படத்தின் வெற்றியை சார்ந்தும் இருக்கிறது. ஒரு படத்தின் வெற்றி  அதனுடன் தொடர்புடைய பலரை உச்சியில் நிறுத்திவிடுகிறது. பாடல்களுக்காக ஓடிய படங்கள் என்பது வெகு சில உதாரணங்களே. "பாட்டு நல்லாயிருந்தது என்ன பிரயோசனம்? படம் ஓடலியே!" என்ற விமர்சனம் நம்மிடம் மிகப் பொதுவானது.

      இசையை இசைக்கெனெ விரும்பும் மனோபாவம் நம் பொதுபுத்தியில் இன்னும் ஒரு முக்கிய இடத்தைப்  பெறவில்லை.

        உதாரணமாக புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்க்காக தோழா ஏழை நமக்காக என்ற பாடலை பெரும்பான்மையினோர் "எம் ஜி ஆர் பாடல்" என்று தீர்மானிப்பதில் எந்தவித குற்றயுணர்ச்சியும் கொள்வதில்லை. பாடலை எழுதிய வாலி என்ற கவிஞனும் அதற்கான மனதை மயக்கும் மெட்டு அமைத்து அதை ஒரு மரணமில்லா  கானமாக்கிய எம் எஸ் வி யையோ யாரும் பொருட்படுத்துவதேயில்லை. இதேபோல் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே  என்ற பாடலும் வெறும் சிவாஜி பாடல் என்ற குறிப்புடன் பலரை திருப்தி செய்துவிடுகிறது. அதற்கு உழைத்த மாபெரும் ஆன்மாக்களை நாம் சடுதியில் கலைத்துப் போட்டுவிடுகிறோம். என்னடி மீனாட்சி  அது கமலஹாசன் பாடும் பாட்டலாவா என்ற முற்றுப்புள்ளியும் சம்போ சிவசம்போ ரஜினிகாந்த் அதகளம் பண்ணிய பாடலாகவும் நிலைபெற்றுவிட்டன.  இந்த அநீதியான அபத்தத்தின் முடிச்சுகளில் நியாயத்தை தேடுவது மிக சிக்கலான காரியம்.

         இந்த நிலைமை மாறவேண்டிய நிர்ப்பந்தம் எண்பதுகளில் நிகழ்ந்தது. இந்த மாற்றத்தின் பின்னே இருந்தது  நவீன இசையின் முகமாக அப்போது அறியப்பட்ட ஒருவர்.

       எண்பதுகளில் திரையில் நடிகர்கள் தாண்டி இன்னொருவரின் பெயருக்கு அரங்கங்கள்  அதிர்ந்தன.  விசில்கள் விளையாடின. அது இளையராஜா. அன்னக்கிளி, பதினாறு வயதினிலே, இளமை ஊஞ்சலாடுகிறது, பிரியா போன்ற அவரது துவக்ககால அணிவகுப்புகளுக்கு மக்கள் அளித்த பாராட்டாக அந்த கைத்தட்டல் பொருள் கொண்டது. அவருக்கு முந்தின தலைமுறை இசை ஜாம்பவான்களுக்கும்  கிடைத்திருக்க  வேண்டிய இந்த அங்கீகாரம்  எண்பதுகளில்தான் இசையமைப்பாளர்களுக்கு   சாத்தியமானது.

      ஒரு திரைப்படத்தில் வரும்  பாடலோ பின்னணி இசையோ வெறும் ஜிகினா வேலை கிடையாது.   அது ஒரு படைப்பின் ஆழமான சுவடு.

  நடிகர்கள் மற்றவர்களை விட வெகு எளிதாக மக்களின் மனதை ஆக்ரமித்துக்கொள்ள முடியும். அவர்கள் அழுதாலோ, வீரம் காட்டினாலோ, காதலித்தாலோ, நையாண்டி செய்தாலோ  அவை யாவுமே பார்ப்பவர்களை ஒரு உடனடி பாதிப்புக்கும் எதிர்வினைக்கும் இட்டுச் சென்று விடும். கைத்தட்டலோ, கல்வீச்சோ  இதன் ஆயத்த பரிசுகள்.  ஆனால் ஒரு இசைஞன் தனது முகம் காட்டாது தன் மேதமையை மக்களிடம் கொண்டுசேர்ப்பது அவ்வளவு சுலபமல்ல.

   அவனது ஒரே முகம் இசை மட்டுமே. இசைக்கருவிகள்  கொண்டு அவன் படைக்கும்  ஒரு இணை சினிமா கண்களுக்குத் தெரியாதது. ஆனால் அது நாம் காணும் காட்சிகளின் ஆன்மாவாக இருக்கிறது. மனதை துளைக்கிறது. நெருடுகிறது. நெஞ்சத்தை வருடுகிறது. கண்ணீருக்கும் புன்னகைக்கும் ஏதுவான களம் அமைக்கிறது. இசை இல்லாவிட்டால் நமது சினிமா இறந்துபோய்விடும்.

 இன்றைய சூழலில் இளையராஜாவைத் தொடர்ந்து ரஹ்மான் போன்றவர்களுக்கு கிடைத்திருக்கும் மரியாதையும் அதன் விளைவாக எழுந்திருக்கும் ஏகமான எதிர்ப்பார்ப்புகளும் இசை என்னும் அந்த பிரமாண்டத்தை நாம் பார்க்கும் பார்வை மாறிக்கொண்டு வருவதை குறிப்பதாக தோன்றுகிறது. ஒரு விதத்தில் இது மிகவும் ஆரோக்கியமானதும் கூட.

        சில மரபுகள்  மாறத்தான் வேண்டும். தவறில்லை.
       
     
 

   

11 comments:

  1. ஆச்சரியம் ஆனால் உண்மை . இளையராஜாவைப் பற்றி நீங்கள் எழுதியிருப்பது ஆச்சரியம்தான். நடிகர்களின் அங்க அசைவுகளிலும் வார்த்தை வசனங்களிலும் ஒய்யார நடைகளிலும் நடனங்களிலும் மதிமயங்கி கிடந்த மக்களை தன் இசை மூலம் திரும்பி பார்க்க வைத்ததும் விரும்பி கேட்க வைத்ததும் இளையராஜா என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள். ஏனென்றால் அதுதான் உண்மை. அவருக்குப் பின் வந்தவர்களுக்கும் அந்த மரியாதை கிடைப்பதில் ஆச்சரியமில்லை.

    வித்தியாசம் தந்தால் மக்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். இல்லாவிடில் தூக்கி எறிந்து விட்டு போய் விடுவார்கள். ரகுமானின் இசை ஆரம்பத்தில் கொண்டாடப்பட்ட அளவு இப்போது இல்லை. தற்போது சின்ன சின்ன இசையமைப்பாளர்களால் இசைக்கப்படும் பாடல்களை கேட்கும்போது 70 முதல் 75 வரை ஏற்பட்ட வெறுமையும் வறுமையும் மீண்டும் ஏற்பட்டுள்ளதோ என நினைக்கத் தோன்றுகிறது.

    ஹாலிவூட் படங்களில் இசைக்கப்பட்ட இசை மட்டும் அல்லாது தனி இசைக் கலைஞர்களின் கூட்டு முயற்சி அதிகம் உருவானதின் தாக்கமே மேனாட்டு இசை ஆல்பங்கள் அதிகம் வரவேற்கப்பட்டதிற்கான காரணம் . நம் தமிழிசையில் தனியார் இசைத்த பாடல்கள் எதுவும் புகழ் அடையாமல் போனது . காரணம் சினிமா இசையை மிஞ்சிய பிரமாண்ட இசையை தனி இசைக் கலைஞர் யாரும் கொடுக்க முடியவில்லை. சினிமா கவர்ச்சியை மக்களிடமிருந்து கவர்ந்தாலொழிய தனி இசைக்கு மகத்துவம் என்பது குதிரைக் கொம்பே! ஒரு வேளை நீங்கள் எதிர்பார்க்கும் நிகழ்வு சினிமா அழிந்த பிறகு உருவாகலாம்.

    ReplyDelete
  2. காரிகன்
    மாறும் இசை மரபுகள் வித்தியாசமாக ,வழக்கத்திற்கு மாறாக வேறுபட்டதாக உள்ளது.வாழ்த்துக்கள் .
    மாற்றம் ஒன்றைத் தவிர எல்லாம் மாறுவதுதானே இயல்பான ஒன்று.
    #இசை என்னும் பிரமாண்டத்தை நாம் பார்க்கும் பார்வை மாறிக்கொண்டு வருகிறது.#
    நிதர்சனமான உண்மையே.தொழிநுட்பம் வளர்ச்சி குறைந்திருந்த காலங்களில் அநேகஇசைக்கலைஞர்களின் உழைப்பால் இசைக்கு உயிர்கொடுத்த இசையமைப்பாளர்கள் எங்கே !நாடகம் ,கூத்து போன்ற கலைகள் அழிந்துவருவது போல பல்வகையான இசைக்கருவிகளுக்கும் அதனை இயக்குபவர்களுக்கும் வேலையில்லாது அவைகள் அழிவுப்பாதை நோக்கி நகர்த்திச் செல்லும் நவீன தொழில் நுட்பத்தாலான இயந்திரத்தனமான இசையை தந்து கொண்டிருக்கும் தற்போதைய இசையமைப்பாளர்கள் எங்கே!காலம் மாறிக்கொண்டே இருக்கிறது என்பதற்கு இதுவும் சான்று தானே .இசைநிகழ்ச்சிகளில்

    நிறைய இசைக்கலைஞர்கள் இசையமைக்க கேட்கப்படும் பாடல்களுக்கும் வெறும் கீபோர்டு மட்டுமே இசைக்க கேட்கப்படும் பாடல்களுக்கும் வித்தியாசம் இருக்கத்தானே செய்கிறது.

    இது குறித்து திரு .பாலசுப்பிரமணியம் அவர்கள் சமீபத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெளியிட்ட கருத்துக்களைப் பதிவு செய்ய விரும்புகிறேன் .தற்போது இசைநிகழ்ச்சிகள் நடத்தும் பலரும் நவீன தொழில் நுட்பத்தாலான இசைக்கருவியைப் பயன்படுத்தவே விரும்புகிறார்கள் .ஒரு பாடல் இசையமைக்கப் படுவதற்கு பயன்படுத்தப்பட்ட அத்தனை இசைக்கருவிகள் மற்றும் அதனை இசைக்கும் இசைக்கலைஞர்களோடு இசையின் தன்மை மாறாமல் ரசிகர்களுக்கு வழங்கும் நிகழ்வை இன்றும் நிகழ்த்திக் கொண்டிருப்பவர் இளையராஜா ஒருவரே. .

    ReplyDelete
  3. இசை மேட்டுக்குடியினரிடம் மட்டுமே இருக்கிறது என்பது போன்ற பொய்யான வாதம் இன்னும் எத்தனை நாட்களுக்கு எடுபடும் என்று தெரியவில்லை. இசையில் மேட்டுக்குடி, கீழ்க்குடி என்று எதுவும் இல்லை. என்னுடைய ரசிக்கும் தகுதியைப் பொறுத்து நான் ரசிக்கவேண்டிய இசையை நான் தேர்ந்தெடுக்கிறேன். இன்னொரு இசையை நான் ரசிக்கவேண்டுமானால் எனது ரசிப்புத்தகுதியை உயரத்திக்கொள்ள அலது மாற்றிக்கொள்ள வேண்டிய பொறுப்பு என்னுடையதே. இசை என்னை நோக்கி ஓடி வராது. நான்தான் அதை நோக்கி ஓடவேண்டும். அதைதான் இளைராஜா செய்கிறார். காசுகொடுத்து கேசட் வாங்கிக் கேட்டால் எலாருக்குமான இசை வரும். திருட்டுத்தனமாக இசையை, சினிமாவை ரசிப்பது என்பது நம் தமிழர்களின் இரத்தத்தில் கலந்துவிட்ட ஒன்று. எனவே நியாயமாக இசைக் கலைஞர்களுக்கு கிடைக்கவேண்டிய வருமானம் கிட்டாமல் போகிறது. (2) எனவே, மக்களின் எண்ணம் எதுவோ அதுவே செயலாக மற்றவர்கள் மூலம் வெளிப்படுகிறது. மக்களின் எண்ணப்போக்கு நியாயத்தை ஒட்டி வளருமானால், எல்லாக் கலைகளும் நிச்சயம் வளரும். (3) சினிமா என்பது ஒரு தொழில். சினிமாப் பாடலுக்கு இசை அமைததவருக்கு அப்போதே பணம் கிடைத்தாகிவிட்டது. எனவே அவர் 'இசைக்கு சேவை செய்தார்' என்பதெல்லாம் கவைக்கு உதவாத பேச்சு. காசு வாங்காமல் இசை அமைத்திருந்தால் மட்டுமே அது போற்றப்படவேண்டிய, அனுதாபபடவேண்டிய விஷயம். காசு வாங்கிக்கொண்டு சட்டை தைத்துக் கொடுத்த டைலரை விட, காசு வாங்கிக்கொண்டு சிகையலங்காரம் செய்த நாவிதனைவிட, காசு வாங்கிக்கொண்டு மருத்துவம் பண்ணும் டாக்டரைவிட, காசு வாங்கிக்கொண்டு இசையமைத்தவன், பாடியவன், நடித்தவன் இவர்களெல்லாம் எந்த வகையில் உயர்ந்தவர்களாகிவிட முடியும்? ஒவ்வொருவரின் உழைப்பையும் சமுதாயம் சரியான அளவுகோலினால் எடை போடப் பழகவில்லை என்பதே நம் உள்ள சவால்.

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
  4. மாறும் இசை மரபுகள்............ என்னும் தலைப்பு சரியானதுதானா என்பதே என்னுடைய சந்தேகம். சரிந்து வரும் இசை மரபுகள், பாழ்பட்டுக்கொண்டிருக்கும் இசை மரபுகள் என்றெல்லாம் நான் நினைத்துக்கொண்டிருக்கும்போது மாறிவரும் இசை மரபுகள் என்கிறீர்கள். இன்றைய இசையுலகில் எதனை நீங்கள் மரபு என்கிறீர்கள்?
    இசை மட்டுமல்ல பல கலைகளும் சரிவை நோக்கியே பயணித்துக்கொண்டிருக்கின்றன. எதுவும் மாறலாம் தவறல்ல என்பது உண்மைதான். மாறிக்கொண்டிருக்கிறதா? என்பதுதான் கேள்வி. அப்படி மாறிக்கொண்டிருந்தால் சந்தோஷமே. இன்னமும் கொஞ்ச நாட்கள் கழித்துப் பார்ப்போம் இந்த மரபுகள் எல்லாம் எங்கே வந்து நிற்கின்றன என்று.

    ReplyDelete
  5. நடிகர்களின் அங்க அசைவுகளிலும் வார்த்தை வசனங்களிலும் ஒய்யார நடைகளிலும் நடனங்களிலும் மதிமயங்கி கிடந்த மக்களை தன் இசை மூலம் திரும்பி பார்க்க வைத்ததும் விரும்பி கேட்க வைத்ததும் இளையராஜா என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள்.---

    சால்ஸ்,

    இது நான் இராவுக்காக எழுதியதே இல்லை. மன்னிக்கவும்.

    நானே குரு, தனிக்காட்டு ராஜா போன்ற படங்களில் இளையராஜாவின் பெயருக்கு மானசீகமாக கைதைட்டியவன். அதைத்தான் இங்கே குறிப்பிட்டிருக்கிறேன். அதற்காக எனக்கு இரா ஒரு மிகப் பெரிய ஆளுமை, அதற்கு முன்னே இருந்த எல்லா இசை ஜாம்பவான்களையும் விழுங்கி விட்டார் என்ற எண்ணம் கொஞ்சமும் இல்லை. இரா அப்போது அங்கிருந்தார் . அவ்வளவே. அதுவே என் கருத்து. எம் ஜி ஆர் சிவாஜி தலைமுறை கடந்து அடுத்து வந்த தலைமுறை சினிமாவின் மற்ற அம்சங்களை ஆராய்ந்து அதை கொண்டாடியது என்று எடுத்துக்கொள்ளலாம். இராவுக்கு அது சாதகமாக இருந்தது.

    பிறகு ரஹ்மான் குறித்த உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ரஹ்மானுக்கு இன்னும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அவர் பாடல்கள் முன்பை விட வேறு தளத்தில், வேறு வகையில், வேறு சுவையில் வந்துகொண்டிருக்கின்றன. உங்களுக்கு ரஹ்மான் என்றாலே அலர்ஜி. இராவை இல்லாமல் பண்ணியவர் என்பதால் அவர் மீது இரா வாசிகளுக்கு இருக்கும் கடும் கோபம், பொறாமை, ஆற்றாமை என்றுமே குறையாது. என்ன செய்ய?

    70 இலிருந்து 75 அது என்ன இசை வறுமை? உலகம் சுற்றும் வாலிபன், உரிமைக்குரல், பல்லாண்டு வாழ்க, அவன்தான் மனிதன், ராஜா, அபூர்வ ராகங்கள், சொல்லத்தான் நினைக்கிறேன், வெள்ளிவிழா போன்ற படங்களின் பாடல்களை நீங்கள் கேட்டதில்லை போலும். 76 இல் இரா வந்ததால் சரியாக 75 என்று நீங்கள் சொல்வது நகைப்புக்குரியதாக இருக்கிறது. 88-92 காலகட்டத்தில் நிலவிய இசை வறட்சி என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். அதாவது ரோஜா வரும்வரையான காலகட்டம். இரா நம்மை இம்சித்த காலங்கள்.....

    இராவின் சிறப்பை குறைத்து பேசுவது என் நோக்கமல்ல. நடந்ததை அப்படியே பதிவு செய்வதுதான் என் எண்ணம். அதற்காக இரா தவிர வேறு யாரும் இங்கே சாதிக்கவில்லை போன்ற தப்பிதங்களை தட்டச்சு செய்ய மாட்டேன். அந்தப் பார்வை எனக்கு அந்நியம்.

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  6. வாங்க அருள் ஜீவா,

    கருத்துக்கு நன்றி.

    இசையின் தனித்தன்மை எப்படி நம்மிடம் இல்லாமல் போனது என்ற கருத்தே இந்தப் பதிவின் அடிநாதம். மற்றபடி இரா வின் புகழ் பாடும் எழுத்து கிடையாது நீங்கள் நினைப்பதுபோல.

    இசையமைப்பாளர்களுக்கு வேண்டிய அங்கீகாரம் கிடைத்தது ஒரு நல்ல மாற்றம். இது இளையராஜாவினால் நிகழ்ந்தது என்றெல்லாம் எண்ணிக்கொள்வதில்லை. இது ஒருவிதமான அரசியல் பார்வை கொண்டது. அதிகம் விவரித்தால் வேறு பக்கம் போய்நிற்கும். எனவே இப்போது அடித்துக்கொள்ளும் எஸ் பி பி அன்று இரா பற்றி "புகழ்ந்து" பேசியது எதுவாக இருந்தாலும் அது எனக்கு பெரியதாக தோன்றுவதில்லை.

    மேலே நின்று பார்த்தால் ஒரு இடத்தின் முழுமையை நாம் காண்பது போல இசை ரசனையில் கொஞ்சம் மேலே சென்றால் பல ஆளுமைகளை நம்மால் அடையாளம் கண்டுகொள்ளமுடியும். இல்லாவிட்டால் இப்படித்தான் ஒருவரின் பெயரையே மாற்றமில்லாமல் சொல்லிக்கொண்டிருக்கவேண்டும். தமிழிசையில் பல சகாப்தங்கள் இருக்கின்றன. அது ஒருவருக்கு மட்டும் சொந்தமல்ல. ஒருவரை சுற்றியே வருவதுமல்ல.

    நீங்கள் உங்கள் வட்டத்தை விட்டு வெளியே வந்தால் இதை புரிந்துகொள்வீர்கள்.

    ReplyDelete
  7. வாங்க ராய செல்லப்பா,

    முதல் முறையாக வந்திருப்பது குறித்து மகிழ்ச்சி.

    வருகைக்கு நன்றி.

    மேட்டுக்குடி ரசிக்கும் இசை, சாமானியன் ரசிக்கும் இசை என்று வைத்துக்கொள்ளலாம். இரண்டும் இணையாது. ஆனால் நீங்கள் கூறுவது போல இன்னொரு வகை இசைக்கு நாம் மாற விரும்பினால் நமது ரசனையிலும் ஒரு மாற்றம் நிகழ்கிறது. அப்போது நம் பார்வை விரிவடைகிறது. உதாரணமாக Ghasal பாடல்களில் பஞ்சு போன்று நம்மைத் தீண்டும் இனிமையை உணர வேண்டுமானால் நாம் அதை அங்கேதான் தேடவேண்டும். ராக் இசையின் நெருப்பை நாம் ராக் இசையில்தான் தொடமுடியும்.

    -----------சினிமா என்பது ஒரு தொழில். சினிமாப் பாடலுக்கு இசை அமைததவருக்கு அப்போதே பணம் கிடைத்தாகிவிட்டது. எனவே அவர் 'இசைக்கு சேவை செய்தார்' என்பதெல்லாம் கவைக்கு உதவாத பேச்சு. காசு வாங்காமல் இசை அமைத்திருந்தால் மட்டுமே அது போற்றப்படவேண்டிய, அனுதாபபடவேண்டிய விஷயம். காசு வாங்கிக்கொண்டு சட்டை தைத்துக் கொடுத்த டைலரை விட, காசு வாங்கிக்கொண்டு சிகையலங்காரம் செய்த நாவிதனைவிட, காசு வாங்கிக்கொண்டு மருத்துவம் பண்ணும் டாக்டரைவிட, காசு வாங்கிக்கொண்டு இசையமைத்தவன், பாடியவன், நடித்தவன் இவர்களெல்லாம் எந்த வகையில் உயர்ந்தவர்களாகிவிட முடியும்?--------

    சபாஷ். மறுபேச்சின்றி உடன்படுகிறேன் உங்கள் கருத்தோடு. உழைப்பு குறித்த நமது கோணம் புதுப்பிக்கப் படவேண்டும். உண்மையே..

    ReplyDelete
  8. வாங்க அமுதவன்,

    வருகைக்கு நன்றி.

    இசை மரபு என்று நான் சொல்வது ஒரு சமூகத்தின் இசை குறித்த பார்வையை. சரிந்தாலும் பாழ்ப்பட்டாலும் அது கூட மாற்றத்தின் மற்றொரு வடிவம்தானே?

    இசை என்றாலே நம்மில் பலருக்கு சினிமா இசைதான். இது மாறாது என்று தோன்றுகிறது. மேற்கில் இருப்பது போன்ற இசை உலகம் நம்மிடம் உருவாக வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால் அப்படித்தான் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.

    அதிலும் சினிமா இசை குறித்த நம் எண்ணம் பல காலங்களுக்கு நடிகர்களை சுற்றியே இருந்தது என்பதும் உண்மையே. இப்போது சிலருக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரத்தை நாம் ஏன் மற்றவர்களுக்கும் தரத் தவறினோம் என்ற நியாயமான கேள்விக்கான பதில் நமது சமூகத்தில் நிலவி வரும் சாதி அரசியலுக்குள் ஒளிந்திருக்கிறது.

    ReplyDelete
  9. வழக்கம்போல..அசத்தல்

    ReplyDelete
  10. அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    எனது புத்தாண்டு பதிவு : ஒரு நொடி சிந்திப்போம்...
    http://saamaaniyan.blogspot.fr/2017/12/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும்

    நன்றியுடன்
    சாமானியன்

    ReplyDelete
  11. To Quote ..." உதாரணமாக புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்க்காக தோழா ஏழை நமக்காக என்ற பாடலை பெரும்பான்மையினோர் "எம் ஜி ஆர் பாடல்" என்று தீர்மானிப்பதில் எந்தவித குற்றயுணர்ச்சியும் கொள்வதில்லை. பாடலை எழுதிய வாலி என்ற கவிஞனும் அதற்கான மனதை மயக்கும் மெட்டு அமைத்து அதை ஒரு மரணமில்லா கானமாக்கிய எம் எஸ் வி யையோ யாரும் பொருட்படுத்துவதேயில்லை. இதேபோல் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே என்ற பாடலும் வெறும் சிவாஜி பாடல் என்ற குறிப்புடன் பலரை திருப்தி செய்துவிடுகிறது. அதற்கு உழைத்த மாபெரும் ஆன்மாக்களை நாம் சடுதியில் கலைத்துப் போட்டுவிடுகிறோம்...."

    அசல் வாத்தியங்கள் வைத்து
    பாடல்களை உருவாக்கி தந்தவர்
    கொடுத்த பாடல்கள்....இன்றும்,
    என்றும்....சாகா சாக வரம் பெற்று வாழ்கிறது....!

    அவருக்குப் பின் இசையுடன் மார்க்கெட்டிங்
    தெரிந்தவர்கள் வந்த பின்பு
    அவர்கள் வாழ்கிறார்கள்....!

    அன்பிலே,
    நாகை வே. கண்ணன்

    ReplyDelete