Friday 26 April 2013

இசை  விரும்பிகள் IV - புதிய உச்சங்கள்.

           
   ஐம்பதுகளின் இறுதியில் தொடுவானத்தில்  ஒரு புதிய வெளிச்சமாக தோன்றிய மெல்லிசை அறுபதுகளில் அஸ்தமிக்காத சூரியனைப் போல சுடர்விட்டது. படத்திற்கு படம் இந்த இசை நிற்காத நதியைப் போல கரை புரண்டோடியது. இந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாத எந்தத்  தமிழ் உள்ளமும் இருக்கமுடியாது.

      விஸ்வநாதன்-ராமமூர்த்தி  இரட்டையர்களைத் தவிர அதே காலகட்டத்தில் தன் இசைப் பயணத்தை ஆரம்பித்த கே வி மகாதேவன், ஏ எம் ராஜா போன்றவர்களும் மிக உன்னதமான திரையிசைப் பாடல்களை கொடுத்து மெல்லிசையை தமிழ்த் திரையின் இறவா இசையாக மாற்றி இருக்கிறார்கள்.

   

  திரையிசைத் திலகம் என்று அழைக்கப்பட்ட கே வீ  மகாதேவன் நாற்பதுகளில் ஒரு படத்திற்கு இசை அமைத்திருந்தாலும் ஐம்பதுகளில் வந்த "அவன் அமரன்" என்ற படத்தில்தான் அறிமுகம் ஆகிறார். மகாதேவன் கர்நாடக சங்கீதத்தில் அபாரமான தேர்ச்சி பெற்றவர். அவரது பாடல்களில் இந்த ராகங்கள் முன்னிறுத்தபட்டும்  தாளக்  கட்டு மிக உறுதியாகவும் பாடலுக்கு ஆதாரமாகவும் இருப்பதை அவற்றை   கேட்கும் போதே  நாம் புரிந்துகொள்ளலாம்.
    திருவருட்ச் செல்வர்(67) படத்தில்  கே வீ எம்மின் இசையில் வந்த ஒரு அபாரமான பாடல் "மன்னவன் வந்தானடி தோழி" இந்தப் பாடலில் கர்நாடக சங்கீதத்தின் வீச்சு வலிமையாக இருந்தாலும் அதை தாண்டிய இனிமை இருப்பதை உணரலாம் . 68இல் வந்த தில்லானா  மோகனாம்பாள் படத்தின் பாடல்கள் அனைத்தும்  மிகப் புகழ் பெற்றவை.அதில் ஆண் குரலே இல்லாத பாடல்களாக அமைத்தார் கே வீ எம். அந்தப் பாடல்கள் இன்றுவரை நம்மை சற்று ஒரு கணம் தாலாட்டி விட்டுப் போகத் தவறுவதில்லை. அதன் பின் வந்த வியட்நாம் வீடு(70) படத்தில் இடம் பெற்ற "உன் கண்ணில் நீர் வழிந்தால் " பாடல் கேட்பவரை ஆணியறைந்து உட்கார வைத்துவிடும். வயதான ஒரு தம்பதியினரின் ஆழமான காதலை இந்தப் பாடல் வேதனையுடன் உணர்த்தியது(இந்தப் பாடலின் இறுதியில் வரும் "என் தேவைகளை யாரறிவார்? உன்னைப்போல் தெய்வம் ஒன்றே தானறியும்"என்ற வரிகள் என்னை ஸ்தம்பிக்க வைத்தன) .கே வீ எம்மின்  கர்நாடக இசை ஞானத்திற்கு  சான்றாக வந்த ஒரு பாடல் திருவிளையாடல்(65)  படத்தில் இடம் பெற்ற மிகப் பிரசித்தி பெற்ற பாடலான "ஒரு நாள் போதுமா?". இந்தப்  பாடலின் ஒவ்வொரு வரிகளும் வெவ்வேறான கர்நாடக ராகங்களின் மீது கட்டப்பட்டது   என்பது  இன்றைய காலத்தில் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.

         இதையும் தாண்டிய ஒரு மகத்தான இசைப் பிரவாகத்தை கே வீ எம் 1979 இல் அரங்கேற்றினார். இந்திய மொழிகளில் வந்த இசை பற்றிய படங்களிலேயே முதன்மையான படம் என்று சொல்லக்கூடிய சங்கராபரணம் வெளிவந்தது இந்த ஆண்டில்தான்.  கே  வீ எம்மின் இசையே அந்தப் படத்தை இன்றும் சாஸ்திரிய ராகங்களில் ஊறித்திளைத்தவர்கள் கொண்டாடும் படமாக மாற்றியது .அதன் அத்தனை பாடல்களையும் மொழி வேறுபாடின்றி தமிழர்கள் ரசித்தார்கள். இந்த படத்திற்கு வேறு யாரேனும் இசை அமைத்திருந்தால் இத்தனை வெற்றியை அந்தப் படம் பெற்றிருக்குமா என்பது சந்தேகமே. கர்நாடக ராகங்களின் மேன்மையை சொல்லும் இந்தப் படம் கே வீ எம்மின்  முத்திரையாலே சிறப்பு பெற்றது என்பது மறுக்க முடியாத உண்மை.
     கே வி மகாதேவனின் இசை வீச்சு விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் காலகட்டத்திலேயே நடந்தது. இவர்களின் நேர்த்தியான, இனிமையான இசையில் வந்த பாடல்கள் இது இவருடையதா அல்லது   அவருடையதா என்று கேட்பவரை குழப்பக்கூடிய அளவில் ஒரே கோட்டில் நூலிழை போல பின்னப்பட்டு மெல்லிசையின் புதிய பரிமாணங்களை கோடை மழை போல கொட்டித் தீர்த்தன. இவர்களின் ஒவ்வொரு பாடல்களும் புதிய திருப்பங்களை அறிமுகம் செய்து கேட்பவர்களின்  உள்ளத்தின் உள்ளே பயணித்து  அவர்களின் மென்மையான இசை ரசனையை இன்னும் மெருகேற்றி மேன்மையாக்கி அறுபதுகளை ஒரு அனாசயமான காலமாக மாற்றின. உதாரணத்திற்கு கீழே கே வி எம் மின் சில ரம்மியமான பாடல்களை தொகுத்துள்ளேன். அவற்றை படிக்கும் போதே உங்களுக்குள் ஒரு மின்சார உணர்ச்சி பாயும் என்பதில் சந்தேகமே இல்லை. நீங்களே பாருங்களேன்.
          சிட்டுக் குருவி சிட்டுக் குருவி சேதி தெரியுமா?   (டவுன் பஸ்-55),
         ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா, மணப்பாறை மாடுகட்டி,சொன்ன பேச்சை கேட்டுக்கணும் (மக்களைப் பெற்ற மகராசி-57), இங்கே கே வி எம் நமது நாட்டுபுற இசையை எந்த வித வெளிப்பூச்சும் இல்லாமல் அபாரமாக கையாண்டிருப்பதை காணலாம். மணப்பாறை மாடு கட்டி பாடல் இன்று வரை நாட்டுப்புற இசையின் அடையமுடியாத உச்சத்தில் வீற்றிருக்கிறது.  இதன் பின் வந்த வண்ணக்கிளி நாட்டுப்புற இசையின் முழு ஆளுமையையும் தமிழ்த் திரையிசைக்கு அர்ப்பணம் செய்தது.  இந்தப் படத்தின் பாடல்களே பின்னர் வந்த பல நாட்டுபுற இசைக்கு அடித்தளமிட்டன என்பது தெளிவு. அந்தப் படத்தின் பாடல்களை சற்று பாருங்கள்;
        காட்டு மல்லி பூத்திருக்க,அடிக்கிற கைதான் அணைக்கும்,வண்டி உருண்டோட அச்சாணி, மாட்டுக்கார வேலா, ஆத்திலே தண்ணி வர, சித்தாடை கட்டிக்கிட்டு, (வண்ணக்கிளி-59) இந்தப்  பாடல்கள் எல்லாமே நாட்டுப்புற இசையும் மெலிதான மெல்லிசையும் கலந்து உருவாக்கப்பட்ட ஆச்சர்யங்கள். 59 லேயே கே வி எம் நாட்டுப்புற இசையை வெற்றிகரமாகவும் வீரியமாகவும் கொண்டு வந்துவிட்டார். நாட்டுப்புற இசையை பலமாக திரையில் ஒலிக்கச் செய்தவர்  இவர். உண்மை இப்படி இருக்க   இசை ஞானமில்லாத சில உள்ளங்கள் எண்பதுகளில் வந்த பாடல்களை (அவை பெரும்பாலும் டப்பாங்குத்து வகையைச் சேர்ந்தவை ) பெரிய எழுத்தில் எழுதி யும்,பெருங்குரலெடுத்து  கத்தியும் அவற்றை நாட்டுப்புறப்  பாடல்களின் உச்சம் என்று முழங்குவது  நகைப்புக்குரியது.  நாட்டுப்புற இசையைப் பொருத்தவரை ஜி ராமநாதன், கே வி மகாதேவன் இவர்களுக்கு அடுத்தே  மற்ற யார் பெயரையும் நாம் இங்கே சொல்லமுடியும். இதை விஷயம் அறிந்தவர்கள் ஒத்துக்கொள்வார்கள். கே வீ எம் மின் மற்ற பிரபலமான பாடல்கள்;
      கொஞ்சி கொஞ்சி பேசி (கைதி கண்ணாயிரம்-60),
      வண்ணத் தமிழ்ப் பெண்னொருத்தி , காவியமா (பாவை விளக்கு-60),
       கட்டித் தங்கம், நடக்கும் என்பார்,(தாயைக் காத்த தனயன்-60)
     எண்ணிரெண்டு பதினாறு வயது,   மடிமீது தலை வைத்து, நடையா  இது நடையா, (அன்னை இல்லம்-61), மேற்கத்திய இசையின் தீற்றலை இங்கே நாம் உணரலாம்.
         ஒரே ஒரு ஊரிலே, சீவி முடிச்சு, சிலர் அழுவார் (படிக்காத மேதை-61),
     சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய் ,பாட்டு ஒரு பாட்டு, போயும் போயும் ,காட்டுக்குள்ளே திருவிழா (தாய் சொல்லைத் தட்டாதே-61)
    மெல்ல மெல்ல அருகில், ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால், கண்ணானால் நான் (சாரதா-62)
   பசுமை நிறைந்த நினைவுகளே (ரத்தத் திலகம்-63),
   சின்ன சிறிய வண்ணப்பறவை (அருமையான பாடல்),பூந்தோட்டக் காவல்காரா, மயக்கம் எனது தாயகம், தூங்காத கண்ணொன்று ஒன்று (குங்குமம்-63),
     உன்னைச் சொல்லி குற்றமில்லை, இரவுக்கு ஆயிரம் கண்கள், ராதே உனக்கு கோபம் (குலமகள் ராதை-63),
       கங்கை கரைத் தோட்டம் (கர்நாடக ராகங்கள் பிசிறின்றி ஒலித்து  அவைகள் தெரியாதவர்களும் தலையாட்டும் பாடல் இது), ஏட்டில் எழுதி வைத்தேன் (வானம்பாடி-63),
      நதி எங்கே போகிறது, பறவைகள் பலவிதம், அழகு சிரிக்கின்றது, இதய வீணை  (இருவர் உள்ளம்-63)
       உன்னை அறிந்தால்- வேட்டைக்காரன் (64)
       உன்னைக் காணாத கண்ணும் (இதயக் கமலம்-65),
    கல்வியா செல்வமா வீரமா?,தெய்வம் இருப்பது எங்கே? (சரஸ்வதி சபதம்-66),
         கன்னத்தில் என்னடி காயம், உழைக்கும் கைகளே, ஒரே முறைதான் (தனிப்பிறவி-66),
     என்றும் பதினாறு(கன்னிப்பெண்-66) இந்தப் பாடல் மெல்லிசை-மேற்கத்திய இசை கலப்பின் உன்னதம் என்று சொல்லலாம். பாடும் குரல்களை தாண்டிச் செல்லாமல் பேஸ் கிடார் ஒரு அடிநாதமாக பாடல் முழுதும் பாய்ந்து வந்து நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
      நல்ல நல்ல நிலம் பார்த்து, கடவுள் என்னும் முதலாளி (விவசாயி-67),
    ஆயிரம் நிலவே வா, தாயிலாமல் நானில்லை, ஏமாற்றாதே,அம்மா என்றால் அன்பு,காலத்தை வென்றவன் நீ (அடிமைப் பெண்-69)
      ஓடி ஓடி, நீ தொட்டால், ஆகட்டுண்டா தம்பி, டிக் டிக் (நல்ல நேரம்-72)
      அன்னமிட்ட கை, பதினாறு வயதினிலே பதினேழு (அன்னமிட்ட கை-72)
  யாருக்காக, ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்,குடிமகனே,மயக்கம் என்ன,கலைமகள் கைப்பொருளே (வசந்த மாளிகை-73). வசந்த மாளிகை என்ற மகா வெற்றிக்குப் பிறகு  கே வி எம் வணிக ரீதியாக  சற்று சரிவை நோக்கி நகரத் துவங்கினார். அவரால் அறுபதுகளை மீட்டெடுக்க முடியவில்லை.   எழுபதுகளின் மத்தியில் தமிழ்த் திரையிசையில் ஒரு அதிரடி மாற்றம் ஏற்பட்டு பழைய இசை புதிய இசை என்று இரண்டு வகைகள் தோன்றின. இதைப் பற்றி பின்னர் விரிவாகப் பார்க்கலாம். இருப்பினும் சில நல்ல பாடல்கள் "பழைய" இசையிலிருந்து வந்தவண்ணம் இருந்தன.
      கேளாய் மகனே (உத்தமன் -76),
     பூந்தேனில் கலந்து(ஏணிப்படிகள்-79),
     நதிக்கரை ஓரத்து நாணல்களே (காதல் கிளிகள்-80),
  இதய வாசல் திறந்த போது, நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம் (தூங்காத கண்ணொன்று ஒன்று -83) இதன் பின் கே வி எம் மின் பெயர் திரையில் அரிதாகவே தோன்றியது.
    சரிவில்லாத பயணம் யாருக்கும் கைக்கூடுவதில்லை.



    ஐம்பதுகளில் தமிழ்த் திரையிசையில் மற்றொரு   மகா பெரிய ஆளுமை மையம் கொண்டது. மிகச் சிறப்பான இசை ஞானம் கொண்ட அவர் பிடிவாத போக்கினாலும்,எதற்கும் முரண்படாத தன் சுய தீர்மானித்தலாலும்,பிற வணிக அவசியங்களுக்கு உட்படாத தன்னுடைய வளையாத முடிவுகளாலும் பிற்பாடு ஓரம் கட்டப்பட்டு அதன் பின் பொதுநினைவுகளில் இருந்து மறக்கடிக்கப்பட்டார்.அவரே நம் திரையிசையில்  உள்ளதை உருக்கும்  பல பாடல்களுக்கு உரியவரான திரு ஏ எம் ராஜா அவர்கள்.  திரையிசையில் ராஜா போன்றவர்கள் மிகவும் அரியவர்கள்.(எனவேதான் அவர்கள் அறியப்படாமல் இருக்கின்றார்கள்).இந்த பத்தியில் நான் ராஜா என்று அழைப்பது ஏ எம் ராஜா அவர்களையன்றி வேறு எந்த ராஜாவையும் அல்ல என்பதை தெளிவு படுத்திக்கொள்ள விரும்புகிறேன்.
     
 ராஜா ஒரு  பாடகராகவே இப்போது எல்லோருக்கும் அறிமுகப்படுத்தப்படுகிறார்.அதில் தவறே  இல்லை. பல அருமையான பாடல்களை தன் வசீகர குரலினால் வடிகட்டி அவைகளை இறவா தன்மை அடையச் செய்தவர் இவர். என்றாலும் இவர் ஒரு மேதமையான இசைஞர்.சாஸ்திரிய ராகங்களும் மேற்கத்திய இசையும் இவரிடத்தில் ஒருசேர அலட்டிக்கொள்ளாமல் அமர்ந்தன. நான் என் பள்ளி நாட்களில் அபூர்வமாகக் கேட்டசில "பழைய" பாடல்கள் இவருடையது.அப்போதே இந்தக் குரல் என் நரம்புகளை எல்லாம் வெட்டிவிட்டு இசையால் என்னை நிரப்பியது.உணமையைச் சொல்லவேண்டுமென்றால்  ஏ எம் ராஜாவை விரும்பாதவர்கள்  உண்மையில் இசை ஏழைகள்.

       ராஜா தெலுகிலும் மலையாளத்திலும் ஹிந்தியிலும் மற்றும் தமிழிலும்  பலப் பாடல்களைப் பாடியவர். இருந்தும் அவர் ஒரு இசைஞராக மாற பெரிதும் விரும்பினார் என்று தெரிகிறது. எம் ஜி ஆர் நடித்த ஜெனோவா படத்திற்கு முதலில் ராஜாவைத்தான் ஒப்பந்தம் செய்ததாகவும்  அதன் பின் அந்த வாய்ப்பு எம் எஸ் வி க்கு சென்றுவிட்டதாகவும்  அறிகிறோம்.(சிலர் இந்த ஜெனோவா தான் எம் எஸ் வி யின் முதல் படம் என்று சொல்வதுண்டு). அப்போது ரத்த பாசம் படத்தில் வசனம் எழுதிய   ராஜாவின் நெருங்கிய தோழனாகிய அந்த இளைஞர் தான் எடுக்கப்போகும் முதல் படத்தில் ராஜாவையே இசைஞராக போடப் போவதாக உறுதி அளித்ததோடு தனக்கு அந்த வாய்ப்பு வந்த போது அதைச் செய்யத் தயங்கவில்லை..அந்தப் படம் தமிழ்த் திரையின் மாறிவரும் முகத்தை முன்னிறுத்தி காதல் என்ற கருப்பொருளை ஒரு  மூன்றுமணிநேரப் படத்தின் முதன்மை நாயகனாக  நம் திரைக்கு அறிமுகம் செய்தது.  கல்யாண பரிசு என்ற அந்தப் படம் அந்த காலத்து இளைய தலைமுறையினரின் இதயத் துடிப்பைத் துல்லியமாக பிரதிபலித்தது. ராஜாவை திரைஇசைக்கு அழைத்து வந்த அந்தத்  தோழன் ஸ்ரீதர்.

       ராஜாவின் முதல் இசைப் பயணம் 59 இல் துவங்கியது. கல்யாண பரிசு படத்தின் பாடல்கள் தீபாவளி வெடிகளைப் போல தமிழகம் முழுவதும் அதிர்ந்தன. பாடல்களைப் பாருங்களேன்; துள்ளாத மனமும் துள்ளும் ,ஆசையினாலே மனம், காதலிலே தோல்வியுற்றான் , உன்னைக் கண்டு நானாட, வாடிக்கை மறந்ததும் ஏனோ. எல்லாப் பாடல்களும் நம் மனதை ஆக்ரமிக்கும் வலிமை கொண்டவை. ராஜா தன் இசை மேதமையை தன் முதல் படத்திலேயே நிரூபித்துவிட்டார் என்று தோன்றுகிறது.  "பழைய" இசை என்று ஒரு மேம்போக்கான ஆயத்த காரணத்தைக் காட்டி இந்தப் பாடல்களை ஒதுக்கித் தள்ளலாமே ஒழிய வேறு எந்த குற்றமும் இவைகளில் காணமுடியாது என்பது திண்ணம்.  60இல் ராஜா-ஸ்ரீதர் இணைப்பில் விடிவெள்ளி என்ற படம் வெளிவந்தது. அடுத்த வருடம் ராஜாவின் இசை இன்னொரு உச்சத்தைத் தொட்டது. தேன் நிலவு (61) படம் ராஜாவின் இசையை வேறு பரிமானத்திற்கு கொண்டுசென்றது. மட்டுமல்லாது தமிழ் இசை ரசிகர்களின் ரசனையையும் மெருகூட்டியது. நிலவும் மலரும் ,காலையும் நீயே, போன்ற பாடல்கள் பெருத்த வரவேற்பைப் பெற்றன. இன்னும் இரண்டு மகத்தான பாடல்கள் இங்கே இருக்கின்றன. ஒன்று ஓஹோ எந்தன் பேபி இன்னொன்று இன்றைக்கும் இளமையாக இருக்கும் பாட்டுப்பாடவா. 

       பாட்டுப்பாடவா பாடல் ஒரு அற்புதம்.இந்தப் பாடலைக் கேட்கும் பொழுதெல்லாம் எனக்கு வானவில்லை முதலில் பார்த்த திகைப்பும், ரயிலில் ஜன்னலோரம் பயணம் செய்யும் ரசிப்பும், மழையில் நடக்கும் மகிழ்ச்சியும், கவிதை எழுதிய களிப்பும், அரவணைக்க கைகள் இருந்த ஆனந்தமும் ஒரு சேர உண்டாகத் தவறுவதில்லை. பொதுவாக நான் பாடல்களை பிரித்து மேய்ந்து ஆராய்பவன் கிடயாது. அது முட்டாள்தனம் என்ற எண்ணம் எனக்குண்டு. ஆனால் இது  மேற்கத்திய இசையும் மெல்லிசையும்  சுகமாக உறவு கொண்ட   ஒரு அரிதான பாடல். ராஜாவின் குரலோடு பாடல் முழுவதும் நிழலாக வரும் குதிரை ஒலியும், குரல் இல்லாத இடத்தை அழகாக நிரப்பும் மேற்கத்திய பாணி  இசையும், பாடலின் இறுதியில் மனதை மயிலிறகால் வருடுவதைப் போன்ற  சீழ்க்கை ஓசையும் இந்தப் பாடலை மெல்லிசையின் முகமாகவே தோற்றம் கொள்ளச் செய்கிறது.மேலும் பாடலின் முடிவில் இசை சிறிது சிறிதாக மறையும் fade out என்ற மேற்கத்திய யுக்தியை காணலாம். அந்த காலத்தில் வெகு சில பாடல்களே இப்படி fade out முறையில் கையாளப்பட்டிருக்கும்.இதற்கு மேலும் எழுதினால் இது  மனதைக்  கவர்ந்த  ஒரு பாடலை சிலாகிக்கும் ஒரு வழக்கமான பதிவாகிவிடக்கூடிய அபாயம் இருப்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

     ராஜாவுக்கும் ஸ்ரீதருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு அதன் பின் ஸ்ரீதரே அவரிடம் தன் அடுத்த படத்திற்கு இசை அமைக்க கேட்டும் ராஜா மறுத்துவிட, ராஜாவின் ரம்மியமான இன்னிசைக்கு முதல் சுவர் எழுப்பப்பட்டது. இந்த காலகட்டத்தில் அவர் பல அருமையான பாடல்களைப் பாடி தன் ஆளுமையை நிலை நிறுத்திக்கொண்டாலும் அவரால் நீண்ட காலங்கள் போரிட முடியவில்லை. இறுதியில் பி பி ஸ்ரீனிவாஸின் குரலில் ராஜாவின் மாற்று கண்டுபிடிக்கப்பட, ராஜாவுக்கு தமிழ்த்  திரையின் கதவுகள்  அடைக்கப்பட்டு அவர்  தனித்து விடப்பட்டார்.  வணிக    சமரசங்களுக்கு உடன் படாத ராஜா தன் வழியே தனியே பயணம் செய்யத் துவங்கினார். அவர் மீண்டும் திரும்பி வந்த போது இசை வெகுவாக மாறி இருந்தது. ராஜாவின் இசை அமைப்பில் வந்த படங்களையும் அவர் பாடிய சில  பாடல்களையும் இப்போது பார்ப்போம்;
 
           ராஜாவின் இசை அமைப்பு சில படங்களுக்கே இருந்தது.    கல்யாண பரிசு -59, விடிவெள்ளி-60, தேன் நிலவு-61, ஆடிப்பெருக்கு-62,வீட்டு மாப்பிள்ளை -73,எனக்கொரு மகன் பிறந்தான்-75. அவர் ஒரு அபாரமான பாடகர். பொதுவாக ராஜா எல்லா இசைஞர்களின் படங்களிலும்  பாடல்களைப்  பாடி இருக்கிறார். இருந்தும் ஐம்பதுகளிலேயே  எம் எஸ் வி ராஜாவை தவிர்த்துவிட்டார் என்று கூறப்படுகிறது. இதற்கும் ராஜாவின் வழக்கமான கண்டிப்பான போக்கே காரணமாக இருக்கலாம். ராஜா பாடிய  அத்தனை இனிமையான பாடல்களையும்  இங்கே பட்டியலிடுவது  தேவையில்லாதது  என்பதால் சிலவற்றை மட்டும் கீழே கொடுத்துள்ளேன்.

  காதல் வாழ்வில்-எதிர்பாராதது(54)
  மயக்கும் மாலைபொழுதே நீ -குலேபகாவலி (55)
  வாராயோ வெண்ணிலாவே,பிருந்தாவனமும் -மிஸ்ஸியம்மா (55)
  மாசிலா உண்மை காதலே-அலிபாபாவும் 40 திருடர்களும்(56)
  கண்மூடும் வேளையிலும் -மகாதேவி (57)
  தென்றல் உறங்கிய போதும் -பெற்ற மகனை விற்ற அன்னை (58)
 கண்களின் வார்த்தைகள் தெரியாதா, ஆடாத மனமும் ஆடுதே-களத்தூர்    கண்ணம்மா (59)
  துயிலாத பெண் ஒன்று, கலையே என் வாழ்கையின்- மீண்ட சொர்க்கம் (60)  
  தினமிதுவே -கொஞ்சும் சலங்கை(62)
  காவேரி ஓரம் கவி சொன்ன-ஆடிப்பெருக்கு (62)( இதை நினைவு படுத்திய திரு அமுதவன் அவர்களுக்கு நன்றி.)
 தெரியுமா-பாசமும் நேசமும் (64)
 சின்னக் கண்ணனே- தாய்க்கு ஒரு பிள்ளை(72)
 ராசி நல்ல ராசி-வீட்டு மாப்பிள்ளை (73)
       ராஜாவின் தொடர்ச்சியாக ஒலித்த பி பி  ஸ்ரீனிவாசின் குரல் பல அருமையான பாடல்களை  நமக்கு வழங்கி இருக்கிறது. ஸ்ரீனிவாசின் தொடர்ச்சியாகவே எஸ் பி பாலசுப்ரமணியம் எம் ஜி ஆரால் வரவைக்கப்பட்டார் என்று ஒரு கருத்து உண்டு. இவர்கள் மூவரிடமும் ஒரு ஒற்றுமையை நாம் காணலாம். இந்த மூவரும் பெண் தன்மை கொண்ட தங்கள் குரலினால் அதிக ஆர்பாட்டம் இல்லாமல் மிக நளினமாகப் பாடியவர்கள். (பின்னாட்களில் எஸ் பி பி வேறு பாணியில் பாட ஆரம்பித்தது தனிக் கதை).

      டி ஆர் பாப்பா இப்போது அதிகம் அறியப்படாத மற்றொரு சிறந்த இசைஞர். இவர் ஐம்பதுகளில் அறிமுகம் ஆகி அறுபதுகளில் சிறப்பான பல பாடல்களை கொடுத்துள்ளார்.  இரவும் பகலும்(65) (ஜெய்ஷங்கர் அறிமுகம்)படத்தின் பிரபலமான இரவும் வரும் பகலும் வரும், உள்ளத்தின் கதவுகள் கண்களடா, இறந்தவனை சுமந்தவனும் பாடல்களை அமைத்தவர். குமார ராஜா (61) படத்தில் சந்திரபாபு பாடிய ஒண்ணுமே புரியலே உலகத்திலே, சமரசம் உலவும் இடமே (ரம்பையின் காதல்-56), வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கு (மல்லிகா -57)சின்னசிறிய வயது முதல் (தாய் மகளுக்கு கட்டிய தாலி-56) போன்ற பாடல்கள் இவரிடமிருந்து உருவானவை. அதிகப் படங்களுக்கு இசை இவர் அமைக்கவில்லை என்று தெரிகிறது. சீர்காழி கோவிந்தராஜனுடன் சேர்ந்து இவர் நிறைய ஆன்மீகப் பாடல்களை அமைத்துள்ளதை அறிய முடிகிறது.

      மெல்லிசை வந்த பிறகே நம் தமிழ்த் திரையிசை வளம் பெற்றது. புதிய எல்லைகளும்,புதிய திருப்பங்களும், புதிய உச்சங்களும் இங்கே சாத்தியமாயின. இந்த வாக்கியம் சாஸ்திரிய சங்கீதத்தின் மேன்மையை இழித்துக் கூறுவதாக கண்டிப்பாக  நான் எண்ணவில்லை.சபாக்களில் பாடும் பாடல்களை மட்டுமே இசை என்று அங்கீகரிக்கும் "மேதாவித்தனமான" ரசனை எல்லோருக்கும் இருப்பதில்லை.அப்படிப்பட்ட உயர்ந்த ரசனை நம்மை பாமரர்களிடமிருந்து தனிமைப் படுத்திவிடக் கூடியது.இசையின் பண்முகத்தன்மையை மறுக்கக்கூடியது. வளர்ச்சிகளுக்கு வழி காட்டாதது. இசை உயர்ந்த இடங்களில் மட்டுமே இருக்கும் ஒரு விலை மதிப்பில்லா  ஆபரணமல்ல. அது எளிமையானது .  சிரமங்களின்றி புரிந்து கொள்ளக்கூடியது . ஒரு டிஜிட்டல் கைக்கடிகாரம்  சுலபமாக  நமக்கு நேரத்தை உணர்த்துவதைப் போன்று.


     அடுத்து: இசை விரும்பிகள் V -  வென்ற இசை.




 
 
 
 
      

18 comments:

  1. தமிழ்வெளியில் பார்த்துவிட்டு இங்கே உங்கள் தளத்திற்கு வந்தேன். இந்த விஷயத்திலேயே எனக்கு மகிழ்ச்சி. ஏனெனில் உங்களின் இதுபோன்ற கருத்துக்கள் நிறையப்பேருக்குச் சென்று சேரவேண்டும். பல பேர் ஒன்றும் தெரியாத அறியாமையால்தான் தாங்கள் பிடித்த முயலுக்கு எழுப்பத்து மூன்று கால்கள் என்று எக்குத்தப்பாக முரண்டு பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். இப்போதுகூட சென்ற தலைமுறையின் ஒரு இசையமைப்பாளரின் இசையில் வந்த ஒரு பாடலை சிலாகித்து இந்த இசைக்கு நான் அடிமை. இவரைப்போல் இன்னொருவரால் இசையைத் தரமுடியுமா என்றெல்லாம் உருகி வழிந்து அந்தப் பாடலை ஒரு நாளைக்கு மூன்றுமுறை கேட்பதாகவும் அந்த இசையை ரிங்டோனாக வைத்துக்கொண்டதாகவும் இன்னமும் என்னென்னவோ பிதற்றிய ஒரு பதிவைப் பாதிவரை படித்தேன்.
    திரைஇசைத்திலகம் பற்றியும் ஏ.எம்.ராஜா பற்றியும் எழுதியிருக்கிறீர்கள். மகாதேவன் தெலுங்கிலே போட்டிருந்தாலும் தமிழர்களும் சேர்ந்து கொண்டாடிய சங்கராபரணம் பற்றியும் நீங்கள் எழுதியிருக்கலாம்.
    ராஜாவின் இசையமைப்பில் வந்த மிக முக்கியமான பாடலான காவேரி ஓரம் பாடலை விட்டுவிட்டிருக்கிறீர்களே. அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன். தொடருங்கள்.

    ReplyDelete
  2. திரு அமுதவன் அவர்களுக்கு உங்களுக்கு எனது நன்றிகள். உங்கள் வருகைக்காக மட்டுமல்ல எனக்கு மறந்துவிட்டதை நினைவு படுத்தியதற்காக. கே வீ எம் மைப் பற்றி எழுதும் முன்பே சங்கராபரணம் பற்றியும் எழுதவேண்டும் என்றே எண்ணியிருந்தேன். தமிழ்ப் படங்களைப் பற்றியே எழுதிவந்ததால் சங்கராபரணத்தை மறந்துவிட்டேன். உங்களின் கருத்து என் தவறை எனக்கு நினைவூட்டி இந்தப் பதிவை திருத்த உதவியது. இந்தத் தவறை எனக்கு உணர்த்தியதற்கு நன்றி.மற்ற படி ஏ எம் ராஜாவைப் பற்றி எழுதாவிட்டாலும் அவர் ஒரு சகாப்தம்தான். இதை யாராலும் மறுக்க முடியாது. நீங்கள் என் பதிவை தொடர்ந்து படித்து வருவது எனக்கு மகிழ்ச்சியே. மீண்டும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  3. உங்கள் பதிவை ஆக்சிடெண்டலாக படிக்க முடிந்தது. நல்ல பதிவு. உங்களின் பழைய பதிவுகளையும் படித்தேன். இசையை பற்றி விலாவாரியாக எழுதி இருக்கிறீர்கள். மற்ற இசை பற்றிய பதிவுகளை விட இது கொஞ்சம் வித்யாசமாகவே இருக்கிறது. உங்கள் வார்த்தை நடையா அல்லது தகவலா அல்லது எழுதும் முறையா என்று தெரியவில்லை. பாராட்டுக்கள். அதுசரி முதல் பதிவிலிருந்தே நான் ஒன்றை கவனிக்கிறேன். அது இளையாராஜாவின் மீது நீங்கள் காட்டும் காழ்புணர்ச்சி.அது ஏன் என்று தெரியவில்லை. ஏ எம் ராஜா வை ராஜா என்று கூப்பிடுவது உங்கள் சுதந்திரம். இது வேறு எந்த ராஜாவும் அல்ல என்று போகிற போக்கில் ராஜாவின் மன்னிக்கவும் இளையராஜாவின் மீது இருக்கும் உங்கள் வெறுப்பை காட்டுகிறீர்கள். இரண்டாவது நாட்டுபுற இசையைப் பற்றியது. இந்த தமிழ்நாட்டுக்கே தெரியும் தமிழ் சினிமாவில் இளையராஜா வந்த பிறகே நாட்டுபுற இசை பிரபலமானது என்று. முதல் படத்திலேயே -அன்னக்கிளி- அவர் நாட்டுபுற இசையை கேட்பவர் மனது மயங்கும் வகையில் போட்டுவிட்டார். பதினாறு வயதினிலே , கிழக்கே போகும் ரயில், முரட்டுக்காளை அம்மன் கோவில் கிழக்காலே, கரகாட்டக்காரன், போன்று எத்தனையோ படங்கள் இருக்கின்றன. நீங்கள் ராமநாதன் மகாதேவன் என்று சொல்லி குழப்புகிறீர்கள். இளையராஜா ஒரு மாபெரும் சக்தி. நீங்கள் உங்கள் பதிவுகளில் அவரை வசைபாடுவதை தவிர்க்கலாம்.

    N. செல்வராஜ்.

    ReplyDelete
  4. நண்பர் திரு செல்வராஜ் அவர்களுக்கு,
    உங்கள் வருகைக்கு நன்றி. முதல் நான்கு வரிகள் இல்லாமலே நீங்கள் உங்கள் கருத்தை சொல்லி இருக்கலாம்.நன்றாகவே ரசித்துப் படித்தேன் உங்கள் கருத்தை. எப்படி இப்படியெல்லாம் சிலரால் யோசிக்க முடிகிறது என்று திகைப்பாக இருக்கிறது. முதலில் ஒன்றை தெளிவு படுத்திக்கொள்ள விரும்புகிறேன். இந்த இசை விரும்பிகள் பதிவுகள் நீயா நானா அல்லது அவரா இவரா என்ற ஓட்டப்பந்தயப் பதிவுகள் இல்லை.யாரையும் யாருக்கு முன்னும் வைத்துப் பார்க்கும் பதிவாக இது இருக்கககூடாது என்பதில் நான் தீர்மானமாக இருக்கிறேன்.ஆனால் அதே சமயம் உள்ளதை உள்ளபடி சொல்வதிலும் எந்த விதமான சமரசம் செய்து கொள்ளவும் தயாராக இல்லை.
    இளையராஜாவைப் பற்றியும் பின்வரும் பதிவுகளில் எழுதத்தான் போகிறேன். அது வரை கொஞ்சம் அமைதி காத்து இப்போதே உங்கள் வீரத்தை வீணடிக்க வேண்டாமே. நீங்கள் அதாவது உங்களைப் போன்ற சில இளையராஜா அபிமானிகள் எல்லோருமே எண்பதுகளில் நின்றுகொண்டே தமிழ்த் திரையிசையை ஆராய்கிறீர்கள்.50 களிலேயே நாட்டுப்புற இசை இங்கு வந்து விட்டாலும் இளையராஜா ஒருவரே தமிழில் நாட்டுபுற இசையை கொண்டுவந்தவர் என்று உண்மை தெரியாமல் பேசுவதே இதற்கு சான்று.ஒரு மாபெரும் சக்தி என்று அரசியல்வாதியை போல இளையராஜாவுக்கு அரிதாரம் பூசுவது பள்ளிக்கூட சிறுவர்களின் மனப்போக்கு. ஒன்று மட்டும் தெரிகிறது. இளையராஜாவைச் சுற்றியே எல்லோரும் இசை பதிவுகள் எழுதவேண்டும் என்பது உங்களைப் போன்ற இளையராஜாஅபிமானிகளின் விருப்பம். ஆனால் உண்மை அதுவல்லவே. அப்படியும் அதுவேதான் வேண்டும் என்றால் அதற்கு வேறு நிறைய பதிவர்கள் இருக்கிறார்கள். அங்கெ சென்று ஆனந்தம் அடையுங்கள்.

    ReplyDelete
  5. திரு செல்வராஜ் அவர்களுக்கு....நீங்கள் இசைப்பதிவுகள் பற்றிய உலகிற்குப் புதியவராக இருக்கவேண்டும் என்றே தோன்றுகிறது. இந்த இளையராஜா பற்றிய குழப்பங்களுக்காகவே நானும் திரு காரிகன் அவர்களும் இணையத்தில் நிறைய நேரத்தைச் செலவழித்து வருகிறோம்.என்னுடைய பதிவுகளையும் அவற்றிற்கு திரு காரிகன் எழுதியிருக்கும் நிறைய பின்னூட்டங்களையும் ஏகப்பட்ட பரபரப்புக்கிடையே படித்து நிறைய சண்டைப்போட்ட இளையராஜா அபிமானிகள் இருக்கிறார்கள். கடைசியில் இப்போதுதான் அவர்களின் வலுவற்ற ஆயுதங்களை இழந்து நிராயுதபாணிகளாக நிற்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
    இப்போதைய தமிழ்த் திரைஇசையைக் 'கண்டுபிடித்தவர்' இளையராஜா அல்ல; அதற்கு இப்போது இருக்கும் 'வடிவத்தைக்' கொண்டுவந்தவரும் இளையராஜா அல்ல.தமிழின் இனிமையான பாடல்களை முதலில் இசையமைத்தவரும் இளையராஜா அல்ல,நாட்டுப்புற மெட்டுக்களையும் தமிழுக்குக் கொண்டுவந்து அதில் வெற்றிபெற்று காட்டியவரும் இளையராஜா அல்ல.வேறு யார் யார் என்று கேட்டீர்களானால் அம்மாதிரியான கேள்விகளுக்கு இம்மாதிரியான பதிவுகள் உதவும்.
    அதுவரை மோனோவிலிருந்த இசையை முதன்முதலாக ஸ்டீரியோவில் ஒலிப்பதிவு செய்தவர் இளையராஜா.நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். 'ஒலிப்பதிவு'தான் இசையமைப்பு இல்லை. இது அவ்வப்போது எல்லாத்துறையிலும் நடந்துவரும் தொழில்நுட்ப மாறுதலின் விளைவுதான். Click-3 காமிராவை வைத்துப் புகைப்படமெடுத்துக்கொண்டிருந்த நாமெல்லாம் இப்போது கேனனையும் மற்ற டிஜிட்டல் காமிராக்களையும் உபயோகித்துக் கொண்டிருக்கிறோமில்லையா அப்படிப்பட்டதுதான்.
    அந்தந்த நாட்களுக்கு ஒவ்வொரு துறையிலும் 'பாப்புலராக' சிலபேர் வருவார்கள். எம்.எஸ்.விக்கு அடுத்து இசையமைப்பாளராக ஒரு பத்து வருடங்களுக்குக் கொடிகட்டிப் பறந்தவர் இளையராஜா. அந்த நாட்களில் அவரும் சில நல்ல படங்களுக்கு நல்ல பாடல்களைப் போட்டிருக்கிறார். இதற்காக தமிழ்த்திரை இசையைக் கண்டுபிடித்தவரே இளையராஜாதான் என்பதுபோல் இன்றைய இளைஞர்கள் நிறையப்பேர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
    சரியான தகவல்கள் அவர்களை எட்டாததன், அல்லது சரியான தகவல்களைத் தேடிப்போகாததன் விளைவுகளால் வந்த குழப்பம்தான் இது. முன்னோர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்பதை முதலில் தெரிந்துகொள்ள முயலுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நான் இசைப் பதிவுகளுக்கு புதியவன் என்பது ஒரு புறம் இருக்கட்டும். நீங்கள் கூறியுள்ள படி பார்த்தால் இளையராஜா எந்த புதுமையுமே செய்யவில்லை என்பது போல இருக்கிறது. சிந்து பைரவி படத்தில் அவர் நாட்டுபுற இசையையும் கர்நாடக இசையையும் இணைத்து அமைத்த பாடல்கள் புதுமை இல்லையா?அது போல வேறு பாடல்களை உங்களால் சொல்ல முடியுமா?அந்தி மழை பொழிகிறது பாடலில் அவர் இண்டர்லூடில் கொண்டு வந்த நாட்டுபுற ராகம் ஒரு புதுமை இல்லையா?செந்தாழம் பூவில் பாடல் ஒரு அற்புதம் இல்லையா? ஸ்டீரியோ மோனோ ஒரு புறம் இருந்தாலும் அதை எல்லாம் விட அவர் மனதை உருக்கும் பாடல்கள் தரவில்லையா? எம் எஸ் வி க்கு பிறகு பத்து வருடம் இளையராஜா இருந்தார் என் நீங்கள் சொல்வதே ஒரு பொய். இன்றும் அவர் இருக்கிறார். நீதானே பொன் வசந்தம் படத்தின் பாடல்களை நீங்கள் கேட்கவில்லை போலும்.
      N. செல்வராஜ்

      Delete
  6. அமுதவன் அவர்களே, என்னதான் பக்கம் பக்கமாக இசையைப் பற்றி எழுதினாலும் ஒரு வாக்கியத்தைக் கூட சரியாகப் புரிந்து கொள்ளாமல் வாதம் செய்ய பலர் இருக்கிறார்கள். தொழில் நுட்பம் மாறியது என்று நீங்கள் சொன்னதைக் கூட அது ஒரு புறம் இருக்கட்டும் என்று வசதியாக ஒதுக்கி வைத்து விட்டு அவருக்கு பிடித்த பாடல்களைப் பட்டியல் போடும் இந்த இசை ரசிகரை நான் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்கிற ரீதியில்தான் பார்க்கிறேன். இவர்கள் எல்லோருமே ஒரே மாதிரியேதான் சிந்திப்பார்கள். பார்க்கத்தானே போகிறோம்.

    ReplyDelete
  7. நாட்டுப்புற இசையையும் கர்நாடக இசையையும் மட்டுமல்ல இந்துஸ்தானி இசையையும் மேற்கத்திய இசையையும் கர்நாடக இசையையும் ஜாஸ் இசையையும் இப்படியெல்லாம் கலந்து கொடுப்பதும் இணைத்துக்கொடுப்பதும் சி.ஆர்.சுப்பராமன், ஜி.ராமனாதன் காலத்திலிருந்து நடந்துதான் வருகிறது. உத்தம புத்திரன் வஞ்சிக்கோட்டை வாலிபன் பாடல்களையெல்லாம் கேட்டுப்பாருங்கள். சி.ராமச்சந்திரா போன்றவர்களெல்லாம் என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் என்று. கர்நாடக இசையையும் மேற்கத்திய இசையையும் தில்லானா மோகனாம்பாளில் கலந்தடித்துக் கொடுத்திருப்பார் கே.வி.மகாதேவன். ஒவ்வொரு பாடலிலும் புதுமைகளைப் புகுத்தவேண்டுமென்று எல்லா இசையமைப்பாளர்களுமேதான் முயல்வார்கள். இந்த முயற்சிகளை சங்கர்-கணேஷிடம்கூடப் பார்க்கலாம்.
    செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் பாடல் என்ன அதிசயம்?

    ReplyDelete
  8. திரு அமுதவன் அவர்களே, இணையத்தில் இந்த வலைப்பூவின் மீது தடுக்கி விழுந்த போது இன்னொரு "அருமையான" கருத்தை காண நேரிட்டது. ஆர்வம் இருந்தால் படியுங்கள்.
    http://www.radiospathy.com/2013/04/blog-post_30.html

    ReplyDelete
  9. ஐயோ அந்த மனிதர் 'இன்னபிற பாடலாசிரியர்கள்-நா.காமராசன்' என்றொரு பதிவு எழுதியபோது இப்படியெல்லாம் தப்புத்தப்பாக ஏன் பிதற்றுகிறீர்கள் என்று கேட்டு சில வினாக்களையும் எழுதியிருந்தேன். 'அதுபற்றியெல்லாம் எனக்குத் தெரியாது.நான் கடந்த ஏழுவருடங்களாக எப்படி எழுதினேனோ அப்படித்தான் தொடர்ந்தும் எழுதுவேன்' என்று பதில் சொல்லியிருந்தார். அவருடைய மற்ற சில பதிவுகளைப் படித்துப்பார்த்து அவற்றுக்கும் இளையராஜா பற்றிய அவருடைய கருத்துக்களுக்கும் பதில் சொல்லி இன்னொரு பின்னூட்டத்தையும் எழுதினேன்.அவர் அதனை வெளியிடவில்லை. கவனமாகத் தவிர்த்துவிட்டார். தொலையட்டும் என்று விட்டுவிட்டேன்.
    மற்ற எந்த இசையமைப்பாளரைப் பற்றிய சிந்தனையோ நல்ல எண்ணமோ மற்ற பாடல்கள் பற்றிய குறைந்தபட்ச தெளிவோ முன்னோர்களைப் பற்றிய மரியாதையோ ஆயிரக்கணக்கில் உள்ள இனிமையான பாடல்களைப் பற்றிய அறிமுகமோ எதுவுமே இல்லாமல் வெறும் இளையராஜா பற்றிய மயக்கத்திலும் கிறக்கத்திலும் இருக்கும் சில வெறி பிடித்த ரசிகர்களைப் போல உள்ளவர்களைப் பற்றி இனி கவலைப்படவேண்டாம். அவர்கள் எப்படியாவது உளறிக்கொண்டு போகட்டும். அந்த தளங்களின் பக்கம் செல்வதில்லை என்று முடிவுசெய்து இப்போதெல்லாம் இதுமாதிரியான வலைப்பூக்களின் பக்கம் செல்வதில்லை. சில திரட்டிகளில் அதுமாதிரியான பதிவுகள் பார்த்துவிட்டு ஆரம்ப வரிகளுடன் விலகிவிடுகிறேன். சில பதிவுகள் மற்றவர்களுடைய பாடல்களைப் புகழ்வதுபோல ஆரம்பித்து இவர்கள் பயணம் செய்யப்போகும் நோக்கம் தெரிந்துவிடுவதால் அங்கிருந்தும் விலகிவிடுகிறேன்.
    இவர்களைப் பற்றி ஆச்சரியப்படுவதற்கோ கோபப்படுவதற்கோ ஒன்றுமில்லை. வேண்டுமானால் பரிதாபப்படலாம்.திரைப்படங்களில் எம்ஜிஆர் ரசிகர்கள் ரஜனிரசிகர்கள் இன்றைக்கும் விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்கள் என்றெல்லாம் இல்லையா? நீங்கள் ஆயிரம்தான் அவர்களிடம் பாடம் எடுத்தாலும் திரும்பத்திரும்ப அவர்கள் பித்துப்பிடித்திருக்கும் அந்த நபரை மட்டுமே உயர்த்திச் சொல்லிக்கொண்டும் அவர்கள் அவர்களுடைய படங்களில் செய்துள்ள சாதனைகளையும் சொல்லியவாறு மட்டும்தான் இருப்பார்கள்.
    இன்றைய நவீன ஹைடெக் சாமியார்கள் நடத்தும் சத்சங்கம் பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா அவற்றுக்குப் போயிருக்கிறீர்களா? அந்தந்த தியானபீடங்களில் நடைபெறும் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு அந்தந்த மடங்களில் இருக்கும் சாமியார்கள்தாம் இறைவன்கள், உலகைப் படைத்தவர்கள், உலகை நடத்துபவர்கள் தங்களுக்கு மீட்சி அளிக்கப்போகிறவர்கள்................ இது இத்தோடு நின்றுவிட்டால் பரவாயில்லை இதுதான் சாசுவதம், இதுதான் வரலாறு என்பதுபோல் திரும்பத் திரும்பச் சொல்லி மற்றவர்களையும் பிரெயின்வாஷ் பண்ணிவிடுகிறார்களே என்பதற்காகத்தான் இவர்களோடெல்லாம் அவ்வப்போது மல்லுக்கட்ட வேண்டியிருக்கிறது.
    பின்னணி இசையை யதார்த்தமாக அமைப்பது என்பது உலகத்திரைப்படங்களிலிருந்து கற்றுக்கொண்ட ஒரு யுக்திதான். அதனை இளையராஜா போன்றவர்கள் சிறப்பாகச் செய்தார்கள் என்பதும் உண்மைதான். அதற்காக இவருக்கு நிகராக ஆளே இல்லையென்று சாமியாடுவதைத்தான் சகிக்கமுடியவில்லை. பின்னணி இசை என்பது என்ன? பார்க்கிறவர்களைக் காட்சிகளுடன் ஒன்றச்செய்ய வேண்டும். அவ்வளவுதானே? அதனை இனிமையான இசையைக்கொண்டே செய்யமுடியும் என்று நிரூபித்தவர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்திதான். நூற்றுக்கணக்கான படங்களின் பின்னணி இசையில் இசை சாம்ராஜ்யமே நடத்தியிருப்பார்கள். அந்தப் பின்னணி இசையின் தொகுப்பு மட்டும் வந்தது என்றால் இளையராஜா எல்லாம் காணாமல் போய்விடுவார்.இதை நான் சொல்லவில்லை. சொன்னவர் கங்கை அமரன்தான். அந்தக் காலத்தில் இனிமையைக் கொண்டே பின்னணி இசையமைப்பது என்பதும் சோகத்தை அளிப்பது என்பதும் வழக்கமாக இருந்தது. அதனை திவ்வியமாய்ச் செய்திருப்பார்கள் விஸ்வநாதனும் ராமமூர்த்தியும். எத்தனைக் கோடிக்கணக்கான மக்களை எத்தனைக் காலத்திற்கு அழவும் உணர்ச்சிவசப்படவும் செய்திருக்கிறது தெரியுமா அவர்களுடைய பின்னணி இசை?
    இது அவ்வளவும் மேல்நாட்டு சிடிக்கள் இல்லாமல் அவர்களுக்குள்ளிருந்த திறமையை வைத்து அவர்கள் சாதித்த சாதனை. சிடிக்களைப் பார்த்து இசை அமைத்ததுவும் சிடிக்கள் பார்த்து பின்னணி இசை அமைத்ததுவும் இளையராஜா காலத்திலிருந்து ஏற்பட்ட தொழில்புரட்சி. இதனை சிறப்பாகச் செய்தவர்களில் இளையராஜாவும் ஒருவர்.

    ReplyDelete
  10. மேலே விடுபட்டுப்போன ஒரு விஷயம்;
    இளையராஜா ரசிகர்களின் இந்த track மாற்றத்தை நான் மிகவும் எதிர்பார்த்திருந்தேன். வெறும் பாடல்களைப் பற்றி அவர்கள் சொல்லிக்கொண்டிருக்க நானும் நீங்களும் திரு கிருஷ்ணமூர்த்தியும் வேறு சிலரும் மற்றவர்களைப் பற்றிய சிறப்புக்களையும் அந்தப் பாடல்களின் சாதனைத்திறனையும் சொல்ல ஆரம்பிக்க இவர்களுக்கு பேசுவதற்கு விஷயங்கள் இல்லாமல் போய்க்கொண்டிருந்தன. அதனால் இவர்கள் கூடிய சீக்கிரம் பின்னணி இசை என்ற ஒன்றில் வந்து நின்றுவிடுவார்கள் என்பதை நான் எதிர்பார்த்தே இருந்தேன். இதுபற்றியெல்லாம் தனிப்பதிவாக எழுதலாம் என்றிருந்தது நூலாகவே எழுதலாம் என்று இருந்ததனால் தள்ளிப்போட்டிருந்தேன்.நீங்கள் எழுதவைத்து விட்டீர்கள்.
    சிடிக்களை வைத்துக்கொண்டுதான் படமே எடுப்பது என்ற சூழல் வந்துவிட்டபிறகு சிடிக்களை வைத்துக்கொண்டு பின்னணி அமைப்பது இசையமைப்பது என்பதெல்லாம் சாதாரணம்தான்.(இது இளையராஜா காலத்திலிருந்துதான் வந்தது என்பதை மறந்துவிடக்கூடாது) ஆனால் அதனை சரிவரவும் சிறப்பாகவும் யார் செய்கிறார்கள் என்பதில்தான் வெற்றி இங்கே கட்டமைக்கப்படுகிறது.
    ஒரு படத்தின் பின்னணி இசை அந்தப் படத்தையும் தாண்டிய அனுபவங்களைத் தரவேண்டுமானால் அந்தப் படத்தின் ஒலித்தொகுப்புக்கள் தொகுக்கப்பட வேண்டும். இப்போதுதான் அதற்கான வசதிகள் எல்லாம் வந்துவிட்டபடியால் அந்தக்கால பிரபல படங்களிலிருந்து இன்றைய படங்கள்வரை பின்னணி இசை வால்யூம் வால்யூமாகத் தொகுக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட தொகுப்புக்கள் வரும்போது விஸ்வநாதன் ராமமூர்த்தி மற்றும் தனிப்பட்ட விஸ்வநாதனின் உயரம் விண்ணைத்தொடும் அளவுக்கு உயர்ந்துவிடும் என்பதை தாராளமாகச் சொல்லலாம்.இந்த 'இனிமை' விஷயத்தில் இளையராஜா இவர்களுக்குப் பக்கத்தில்கூட வரமுடியாது.
    படத்தைப் பார்க்கும்போது அந்தப் படத்துக்கு மட்டுமே பொருந்துகிறமாதிரி(இது தவறென்று சொல்லவில்லை) பின்னணி இசையமைத்த பலபேர் நிலைமை நிச்சயம் கவலைக்கிடம்தான்.
    இப்படியெல்லாம் பிரச்சினைகளைக் கொண்டு வந்ததனால்தான் இத்தகைய வாதங்களை வைக்க நேரிடுகிறதே தவிர நல்ல பின்னணி அமைப்புக்களை குறைசொல்வது நமது நோக்கமல்ல.அந்தக் காலத்தில் அந்த முறை. இவர் காலத்தில் இந்த முறை அவ்வளவுதான்.
    அந்தக் கால ஒளிப்பதிவையும் இந்தக்கால ஒளிப்பதிவையும் பார்த்தாலேயே காலமாறுதல்களால் என்னென்ன மாற்றங்கள் திரைப்படங்களில் உருவாகியுள்ளன என்பதை சுலபமாகப் புரிந்துகொள்ளலாம். அந்த மாற்றங்கள் பாடல்களிலும் பின்னணி இசையிலும் வராமலா போகும்?
    இந்தப் புரிதல்கள்கூட இல்லாமல் குதிப்பவர்களை எந்த லிஸ்டில் சேர்ப்பது?

    ReplyDelete
  11. திரு அமுதவன் அவர்களுக்கு.
    " உங்களின் பின்னூட்டத்தை படித்தேன். அதற்கு முன்பே நான் அந்த றேடியோஸ்பதிக்கு ஒரு பதில் எழுதி இருந்தேன். நீங்கள் எழுதி இருந்தபடி அதை அவர் வெளியிடவில்லை. எனவே கீழ் கண்ட பதிவை மிக காரமாக எழுதி இருந்தேன். இது போன்ற ஆட்கள் எதற்கு நடுநிலைமை என்று பசுந்தோல் போர்த்திக்கொண்டு பதிவுகள் எழுதவேண்டும் என்று தெரியவில்லை. இது இளையராஜாவை வெகுவாக தலையில் வைத்துக் கொண்டு கூத்தாடும் சில இசைஞானம் உள்ள நல்ல உள்ளங்களுக்காகவும்தான்.இதுதான் உங்கள் இளையராஜா பதிவர்கள் வழக்கமாக செய்யும் மரியாதை என்பதை இதன் மூலம் தெரியப்படுத்தவே இதை நான் இங்கே வெளியிடுகிறேன். இதை படித்த பிறகாவது இளையராஜாவை புகழ்ந்து எழுதும் உங்கள் போக்கு எந்த விதமான பாதிப்பை இந்த இணையத்தில் அனுமதிதுள்ளது என்பதை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
    "இதை நான் நீங்கள் இதை பிரசுரிக மாட்டீர்கள் என்று தெரியும் அதனால்தான் எழுதுகிறேன். நான் இதற்கு முன்பே நீங்கள் சிலாகித்திருந்த இளயராஜாவின் பின்னனி இசையைப் பற்றி சில உண்மைகளை எழுதி இருந்தேன். நீங்கள் அதை வெளியிடாமல் உங்கள் நேர்மையை நிரூபித்துவிட்டீர்கள். இளையராஜாவை மட்டும் போற்றும் உங்களைப் போன்ற இசை ஞானம் இல்லாத அறிவிலிகள் எதற்கு மடத்தனமாக பதிவுகள் எழுத வேண்டும் என்று தெரியவில்லை. எல்லோருமே இளையராஜாவை துதி பாட வேண்டும் என்று நீங்கள் எதிர்ப்பார்ப்பது முட்டாள்தனமில்லையா? அந்த அளவுக்கு உங்கள் இளையராஜா எதையும் சாதிக்கவில்லை என்பதாவது உங்களுக்கு தெரியுமா? இளையராஜாவைப் பற்றி எதிராக எழுதும் கருத்துக்களை நீங்கள் விரும்பவில்லை. அதனால் உண்மையை மூடி மறைக்க முடியுமா? இளையராஜாவைப் பற்றி இது போல பொய்யாக பதிவுகள் எழுதும் முன் அவருக்கு முன் இங்கே இருந்த பல இசை அமைப்பாளர்களைப் பற்றி தெரிந்து கொண்டு எழுதினால் நலமாக இருக்கும். நீங்கெல்லாம் இசையை பற்றி எழுதி என்ன ஆகப்போகிறது என்று புரியவில்லை. இலங்கையில் இருந்து கொண்டு தமிழ் இசையைப் பற்றி ஏன் தேவை இல்லாத சுய புராணம்? இங்கே தமிழ் நாட்டில் இளையராஜாவை இந்த தலைமுறையினர் மறந்து போய் பல வருடங்கள் ஆகிவிட்டது. உங்களுக்கு உண்மையிலேயே இசையின் மீது ஆர்வம் இருந்தால் என்னுடைய முந்தைய பதிவை வெளியிட துணிவு இருக்கிறதா என்று கேட்க விளைகிறேன்.இல்லாவிட்டால் இது போன்ற வீண் பதிவுகளை எதற்க்காக சில விசிலாடிச்சான் குஞ்சுக்களுக்காக எழுதுகிறீர்கள்? இதுதான் உங்கள் இசை அபிமானமா? இந்த லட்சணத்தில் ரேடியோஸ்பதி என்று பெயர் வேறு. உங்களுக்கு வெட்கமாயில்லையா? நீங்களெல்லாம் இசை பற்றி எழுதவில்லை என்று யார் அழுதது? எழுதுவதில் கொஞ்சம் கூட உண்மை இல்லாத நீங்கள் ஏன் பதிவுகள் எழுத வேண்டும்?"
    இதுவே நான் அந்த ரேடியோஸ்பதிக்கு எழுதிய கடைசி பின்னூட்டம்.

    ReplyDelete
  12. இளையராஜாவை மட்டுமே விபரீதமாகப் புகழ்ந்து எழுதிக்கொண்டிருக்கும் அன்பர்களின் எழுதும் பாணியை கவனித்திருக்கிறீர்களா? 'கற்பூர பொம்மை என்ற படம்.அதில் இசைஞானி அமைத்திருக்கும் இசைப்பிரவாகத்திற்கு ஈடாக எதுவுமே இல்லை. தென்றல் வந்துதொட்ட சுகம் பாட்டில் பல்லவிக்குப்பின் இன்டர்லூடில் வரும் வயலின் ஒலியில் உயிரே கரைந்துபோகும். அதற்குப்பின் வரும் செண்பகாவின் குரல் கொஞ்சம் கொஞ்சமாக உயர அந்த சாக்ஸபோன்...அம்மாதிரி இசையை இதுவரை கேட்டதேயில்லை.அதற்குப்பின் வரும் நாமெல்லாம் போலிதான் பாடலின் இடையில் இழைந்துவரும் மாண்டலின் சான்ஸே இல்லை.ராஜா ராஜாதான்.மாமரத்துப் பொன்னூஞ்சல் பாடலின் ஆரம்பத்தில் வரும் அந்த பேஸ்கிடார்..அப்படியே உயிரைக் கொள்ளைகொள்ளும்' இம்மாதிரி இஷ்டத்துக்கு அளந்துகொண்டே போகவேண்டியதுதான். பரிதாபம் என்னவென்றால் இவர்கள் சொல்லும் முக்கால்வாசிப் பாடல்கள் ஒரு இருநூறு பேரைத்தாண்டி வந்திருக்காது.யாருக்குமே அதுபற்றிய எந்த சிந்தனையுமே இருக்காது. சொல்லப்போனால் அப்படி ஒரு படம் வந்திருப்பதாகவோ அப்படி ஒரு பாடல் வந்திருப்பதாகவோ சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியாது. ஏன்? இளையராஜாவுக்கே நினைவில் இருக்காது.
    இளையராஜா இணையம் படிக்கிறாரா என்பது தெரியவில்லை. அப்படிப் படித்தாரென்றால் இம்மாதிரியான பதிவுகளை மிகவே சிரித்து ரசித்துப் படிப்பார்.படித்துவிட்டு வெடிச்சிரிப்பு சிரிப்பார். அவர் சுபாவம் அப்படி.
    இனிமேல் காமெடிக்காக வேண்டுமானால் நாம் இம்மாதிரியான பதிவுகளைப் படிக்கலாம்.

    ReplyDelete
  13. அமுதவன் அவர்களே, நீங்கள் சொல்வது மிகச் சரியே. இந்த அபத்தமான இசை ரசனையை வைத்துக்கொண்டு தங்கள் மனதுக்கு தோன்றியதை உளறுவது ஒன்றே இவர்கள் எழுதும் பதிவு.இது போல எல்லாப் பாடல்களையும் எல்லோருமே சிலாகித்து எழுத முடியுமே?தவிர இவர்கள் குறிப்பிடும் இளையராஜாவின் "பொன்னான"பாடல்கள் எல்லாமே வெகு அற்பமானவை, மிகவும் சாதாரணமானவை. இவர்கள் இளையராஜாவின் ஆரம்ப காலப் பாடல்களைப் பற்றி எதுவும் பேசமாட்டார்கள். தனக்கு பிடித்தவரின் பாடல்களை ரசிப்பதில் கூட ஒரு உண்மையான ரசனை இவர்களிடம் இல்லையே என்று வருத்தம் ஏற்படுகிறது. நீங்கள் சொலவது போல இப்போதெல்லாம் இது போன்ற புகழ் மாலைப் பதிவுகள் வேடிக்கையாகவும் லோக்கலாக சொல்ல வேண்டும் என்றால் செம காமடியாகவும் இருக்கின்றன. கோபம் குறைந்து போய் சிரிக்கத் தோன்றுகிறது.

    ReplyDelete
  14. காரிகன் , அமுதவன் என்ற இசை அறிவில்லாத இருவர் தமிழ் சினிமா இசையின் சூரியனை பார்த்து குரைக்கிறார்கள்.அமுதவனுக்கு தான் இசையறிவு இல்லை என்பது ஏற்க்கனவே தெரிந்தது.
    காரிகன் அந்த வழியிலே செல்வது சிரிப்பாக இருக்கிறது.இளையராஜாவை பற்றி எம் எஸ் வீயிடம் கேட்டால் அழகாக புரிய வைப்பார்.

    தமிழ் திரையில் ஹீரோக்கள் முன்னிலைப் படுத்தப்பட்ட நிலையில் இசையை ஹீரோ ஆக்கியவர் இளையராஜா.அமுதவன் வலிந்து இளையராஜாவை ஒன்றுமில்லை என்பதற்காக ஒரு பதிவை போட்டார்.அதை காப்பி பண்ணி , காரிகன் இசை ஞான்மில்லாதபடி சும்மா பழைய இசையமைப்பாளர்களின் பெயரையும் அவர்களது பாடல்களையும் ஒப்புவிப்பது போல ஒப்புவிப்பது சிரிப்பை வரவழைக்கிறது.அவரது எழுத்தில் ஒரு இசை ரசிகன் வெளிப்படவில்லை.
    ராமநாதன் ,விஸ்வநாதன் ராமமூர்த்தி , மகாதேவன் இந்த இசையமைப்பாளர்களை கேட்ட மக்கள் தான் இளையராஜாவை கொண்ட்டாடினார்கள்.இவர்களில் யாரவது இளையராஜா நல்ல இசையமைப்பாளன் இல்லை என்று சொல்ல முடிதததா ?
    நல்ல இசையால் தன முன்னோர்களை வென்றார் இளையராஜா! அவரை மட்டம் தட்ட அவர் போற்றும் இசை மேதைகளை முன்னிறுத்தி இளையராஜாவை மட்டம் தட்டுவது உங்கள் ஆசையாக இருக்கலாம் , அது நல்லஇசை ரசனையற்ற நயவஞ்சகர்களின் கிணற்றுத் தவளை மனப்பான்மையாகவே எனக்குத் தெரிகின்றது.தேவை என்றால் துணைக்கு கிருஷ்ணமூர்த்தியை அமுதவர் கூவி அழைக்கலாம்.அவர் பெரிய மேதாவி என்ற எண்ணம் அவருக்கு!

    இளையராஜாவின் மேதமை பற்றி எத்தனையோ மேதைகள் பேசியாயிற்று.செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் [அமுதவனுடன்]சேர்ந்துள்ளீர்கள்.ஆழ்ந்த அனுதாபங்கள்.

    " இந்த அபத்தமான இசை ரசனையை வைத்துக்கொண்டு தங்கள் மனதுக்கு தோன்றியதை உளறுவது ஒன்றே இவர்கள் எழுதும் பதிவு."
    இது உங்கலுக்கும் அமுதவ்னுக்கும் மிக பொருத்தம.

    தாஸ்

    ReplyDelete
  15. திரு தாஸ் அவர்களுக்கு,
    எதிர்பார்க்காத நேரத்தில் திடுமென குதித்து உங்கள் கருத்தை தெளிவாகவே புரியவைத்துவிடீர்கள். நன்றி. இளையராஜாவின் அபிமானிகளுக்கு தரமாகவோ நாகரீகமாகவோ எழுத வராது என்பதை மறுபடி நிரூபித்ததற்கு நன்றி.
    இசை சூரியன் இசை தேவன் என்பதெல்லாம் உங்களுக்குள்ளே இருக்கட்டும். அதை பொதுவுக்கு கொண்டுவர வேண்டாம். எம் எஸ் வி இடம் இளையராஜாவைப் பற்றி கேட்டால் அவர் பின்னவரைப் பற்றி புகழ்ச்சியாக சொல்வார் என்று சான்றிதழ் அளிப்பது என்ன லாஜிக்கோ புரியவில்லை. இளையராஜாவே எம் எஸ் வி துப்பிய எச்சிதான் என் இசை என்று மேடையிலேயே சொல்லி இருக்கிறாரே, அதற்கென்ன சொல்கிறீர்கள்? எனவே அவரைப் பற்றி இவரோ இவரைப் பற்றி அவரோ சொல்வது வைத்துக் கொண்டு வீணான வரைமுறைகளை வரையவேண்டாம்.
    "இளையராஜா வந்த பிறகுதான் தமிழ்த் திரையில் இசை அமைப்பாளர்களின் பெயர்களே வெளியே தெரிந்தது, மக்கள் அவர்கள் பெயருக்கு கைகளைத் தட்டினார்கள்" போன்ற கிளிஷே க்களை இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் வெட்டியாக சொல்லிக்கொண்டிருக்கப் போகிறீர்கள்? இதுவெல்லாம்ஆயத்தம் செய்யப்பட்ட ஒரு மாபெரும் பொய் என்பதை நான் இந்தப் பதிவில் நிறைய முறை ஊடகமாகவும் சில சமயங்களில் வெளிப்படையாகவும் தெரிவித்திருக்கிறேன்.
    அமுதவன் ரகுமானா ராஜாவா என்று ஒரு பதிவு எழுதினார். அதிலும் அதன் பின் அவர் எழுதிய இளையராஜா பற்றிய பதிவுகளிலும் நான் காரமாக பின்னூட்டம் போட்டு சில ராஜா விசுவாசிகளுக்கு எதிரியானேன்.ஆனால் என் இந்தப் பதிவு யார் யாரை விட பெரியவர் என்பதல்ல. தமிழ்த் திரையில் 30 கள் முதல் 2000 வரை நம் திரையிசை எப்படி வளர்ந்து வந்தது என்பதைக் குறித்தே நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். இளையராஜா என்ற கண்ணாடியை கழட்டி விட்டு நீங்கள் இதனைப் படித்தால் ஒருவேளை இது உங்களுக்கு இது புரியக்கூடிய வாய்ப்பு உள்ளது.
    அடுத்தது உங்களுக்கு சிரிப்பு வராமல் களிப்பு வரவேண்டும் என்றால் நான் நிறைய பொய்கள் சொல்ல வேண்டும்.மற்ற ராஜா பதிவர்கள் இப்படித்தான் உளறிக்கொண்டிருக்கிறார்கள்.நான் பாடலின் பெயரையும் படத்தின் பெயரையும் மட்டுமே ஒப்பிப்பது போல எழுதுவது குறித்து உங்கள் கருத்து அபத்தமாக இருக்கிறது. ராஜா பதிவர்கள் போல ஒரு பெயர் தெரியாத பாடலை எடுத்துக்கொண்டு அதை விலா வாரியாக அந்த 1.45 ஆம் நிமிடத்தில் வரும் ப்ளூட், அப்பறம் 4.32 இல் அந்த பேஸ் கிடார் , என்று விவரிப்பதுதான் உங்கள் இசை பற்றிய விமர்சனம் என்றால் உண்மையில் நான் உங்கள் இசைஞானம் குறித்து மிகவும் தீவிரமாக கவலைகொள்கிறேன். உங்களுக்குப் பிடித்த ஒருவரை மற்றவர்களுக்கும் பிடிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது ஒரு வித மன நோய்.
    ராமநாதன் ,விஸ்வநாதன் ராமமூர்த்தி , மகாதேவன் இந்த இசையமைப்பாளர்களை கேட்ட மக்கள் தான் இளையராஜாவை கொண்ட்டாடினார்கள்.இவர்களில் யாரவது இளையராஜா நல்ல இசையமைப்பாளன் இல்லை என்று சொல்ல முடிதததா ?

    இதை நான் கண்டிப்பாக மறுக்கிறேன். இளையராஜாவை கொண்டாடிய மக்கள் அன்றைய இளைய தலைமுறையினர். அவர்களுக்கு ஜி ராமநாதன் ,கே வி மகாதேவன், டி ஆர் ராமமூர்த்தி, எ எம் ராஜா போன்றவர்களை தெரியாது என்பதே உண்மை. இப்படியான இசைமேதைகளை ரசித்தவர்கள் கண்டிப்பாக இளையராஜாவின் இசையை தலையில் தூக்கிவைத்து கொண்டாடி இருக்க வாய்ப்பே இல்லை. இளையராஜாவின் இசை இவர்களின் இசை மேதமையோடு எந்த விதத்திலும் என்றைக்கும் ஒன்று சேராது. இதை நீங்கள் எப்படி ஒத்துக்கொள்வீர்கள்? நீங்களெல்லாம் இளையராஜாவை புகழ்ந்து எதையாவது கிறுக்கி வைத்தால் அதை என்ன ஒரு அருமையான பதிவு என்று பூரிப்படைவீர்கள். உங்கள் எதிர்பார்ப்புக்கு என் பதிவுகள் சரியான துணை கிடையாது. இளையராஜாவை மட்டுமே பார்க்கும் உங்களைப் போன்றவர்களால் நேர்மையாக இசையை அணுக முடியாது என்பது திண்ணம்.

    ReplyDelete
  16. ஒன்று மட்டும் உறுதி... இளையராஜா எதிர்பு அல்லது ஆதரவு(மிக அதிகம்) என்று மையப்புள்ளியாக அந்த ராஜா சிம்மாசனமிட்டுத்தான் இன்னமும் அமர்ந்துள்ளார்.இன்னமும் அப்பா இயக்குனர்களும் காக்கா முட்டை இயக்குனர்களும்(குற்றம் கடிதல்)அவர்தம் போகிறார்கள்

    ReplyDelete
  17. வாங்க இராவாசியே,

    பெயர் தெரியாத படங்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என லோ பட்ஜெட் படங்கள் இளையராஜாவிடம் வருவது குறித்து இத்தனை மகிழ்ச்சியா? எனக்கோ பரிதாபமாகத்தான் இருக்கிறது.

    அவர் இசை அமைக்கிறார் உண்மைதான். யார் அவர் பாடல்களை இப்போது கேட்பது?

    ReplyDelete