Thursday 10 April 2014

இசை விரும்பிகள் -XV - திறக்காத ஜன்னல்கள்.

காற்றுக்காக கதவுகளை விரியத் திறக்கும் நாம்  மூடப்படிருக்கும் சிறிய சாளரங்களை பெரும்பாலும் ஏனோ மறந்து போகிறோம்.


                     

                     திறக்காத ஜன்னல்கள் 


          சிலோன் வானொலியின் எதோ ஒரு  நிகழ்ச்சியில் அந்தப் பாடல் ஒரு நாள் ஒலித்த போது ஒரு தாலாட்டின் சுகம் அதிலிருந்ததை  உணர முடிந்தது. காதில் இசையும் வார்த்தைகளும் ஒருசேர விழுந்த அந்த ஒரே கணத்திலேயே அப்பாடல்  ஒரு மழை நேரத்து மண் வாசம் போல மனதை ஆக்கிரமித்துக்கொண்டது. சந்தேகமேயில்லாமல் மிக சிறப்பான வார்க்கப்பட்ட இசையோவியம் அது என்பதை  கேட்ட ஒரே கணத்தில் சொல்ல  முடிந்தது .  அது : "மழையே, மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா" என்கிற அம்மா என்ற படத்தில் இடம் பெற்ற பாடல். பாடலைக் கேட்கும் போதே மனதில் மழைச்  சாரல்கள் படிய  மானசீகமாக நாம் மழையில் நனைவதைப் போன்ற உணர்வு  தரும் சிறப்பான பாடல். அப்போது மிகவும் புகழ்பெற்ற பாடல்களில் ஒன்றாக இது இருந்தது. அதற்கு இசை அமைத்திருந்த சங்கர்-கணேஷ் ஏற்கனவே எனக்கு பரிச்சயமான பெயர்தான். 79 இல் வந்த கன்னிப்பருவத்திலே படத்தின் பிரசித்திப் பெற்ற பட்டு வண்ண ரோசாவாம் பாத்த கண்ணு மூடாதாம் (ரோசாப்பூ ரவிக்கைக்காரியின் உச்சி வகுடெடுத்து பாடலின் நகல் ) என்ற பாடல், நீயா படத்தின் "நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா" என்ற ஒரு பாடல், அதற்கும் முன்னே தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் குதூகலித்த ஆட்டுக்கார அலமேலுவின் "பருத்தி எடுக்கையிலே" போன்ற பாடல்கள் மூலம் நான் சங்கர்-கணேஷ் இரட்டையர்களைப் பற்றி இதற்கு முன்பே அறிந்திருந்தாலும், அதிகமாக அவர்களை அறிய முனைந்ததில்லை. அப்போது வானொலிகளில் இசைக்கப்படும் ஐந்தில் ஒன்று  இவர்களது பாடலாக இருக்கும்.  அதே சமயத்தில்  சங்கர்-கணேஷை அறிந்திராத காலங்களில்  நான்  கேட்ட அவர்களின்  சில  பாடல்கள்  இன்னும் அதே சுக கீதங்களாக என் மனதை சிலிர்க்கச் செய்கின்றன.  உதாரணமாக  "என் காதலி யார் சொல்லவா?", "பூவிலும் மெல்லிய பூங்கொடி", "அவளொரு பச்சைக் குழந்தை", "செந்தாமரையே செந்தேனிதழே" போன்ற பாடல்களைச் சொல்லலாம்.

      வியப்பான நிகழ்வாக 80களில் இளையராஜா உச்சத்தில் இருந்தபோது சங்கர் கணேஷுக்கும் ஒரு கவனிக்கக்தக்க ரசிகர் குழுமம்  இருந்தது. "நடைய மாத்துன்னு ஒரு பாட்டு. சங்கர்-கணேஷ் என்னாமா விளையாடிருக்கான் தெரியுமா?"  என்று குதூகலித்த நண்பர்களை நானறிவேன். (சங்கர்-கணேஷை ஒருவராகவே பாவித்து இப்படிச் சொல்வது அன்றைய காலகட்டத்தில் வழக்கமானதுதான்.)  பாலைவனச் சோலையின் "பவுர்ணமி நேரம் பாவை ஒருத்தி மின்னல் போல முன்னால் போனாள்..."  பாடல் அப்போது அதகளப்பட்டது. (ராப் வகையின் கூறுகளை கொண்டிருந்த பாடல் இது.) பாடலின் பல்லவியை எதோ மந்திரம் போல மனப்பாடம் செய்து அதில் சிறிது வார்த்தைத் தவறு ஏற்பட்டாலும் அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் பாட முயன்ற நண்பர்கள் எனக்கு இருந்தார்கள்.  எங்கள் ஊரின் புகழ்பெற்ற டீ கடையாக இருந்த மோகன்ஸ் கபேவில்  பெரும்பாலும் இவர்களின் பாடல்களைத்தான் கேட்கமுடியும்.  அவ்வப்போது வாடிக்கையாளர்களின் விருப்பதிற்க்காகாவும்  வியாபார நோக்கத்திற்காகவும் இளையராஜாவின் பாடல்களும் ஒலிப்பதுண்டு.(70, 80 களில் இவ்வாறான டீ கடைகளே தமிழகத்தின் நிறுவப்படாத  வானொலி நிலையங்களாக இருந்தன. இவைகளின் மூலமே பல  பாடல்கள் பெரு வெற்றி அடைந்தன என்பது புனைவுகள் இல்லா சரித்திரம்.)

    சங்கர்-கணேஷுக்கு இத்தனை தூரம் ஆழமான அறிமுகம் தேவையா என்றால் எனது பதில் ஆம் என்பதே. ஏனென்றால் இவர்களும் மற்ற எந்த தமிழ்த் திரை இசையமைப்பாளர்களைப்  போலவே  சாதித்தவர்கள்தான். பெரியதாக விளம்பரப்படுத்தப்படும் ஆடம்பரமான  வணிக வசீகரங்களையே   எப்போதும் நாம் கவனித்துக்கொண்டிருக்க வேண்டுமா என்ற கேள்விக்கான விடையே சங்கர்-கணேஷ் இரட்டையர்களைப் பற்றிய  இப்பதிவு. தமிழ்த்திரையிசையின் இரட்டையர்கள் என்றால் அது விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்ற உண்மை நம் நெஞ்சங்களில்  உறைந்து போயிருக்கிறது. இருப்பினும் அவர்களிடம் பணியாற்றிய சங்கர்-கணேஷ் இரட்டையர்களையும் (குறிப்பாக 60களின் ஆலயமணி, பாலும் பழமும் காலகட்டம்)  நாம் நினைவில் கொள்வது ஒரு நல்ல, தேர்ந்த  இசை ரசனையின் வெளிப்பாடு.   அவர்கள் போல இவர்கள் இல்லை என்ற சம்பிரதாயமான கூற்றை  சற்று தள்ளிவைத்து விட்டு இவர்களை அணுகுவது உகந்தது . ஏனென்றால் மற்றவர்களைப் போலவே சங்கர்-கணேஷ் இரட்டையர்களும் தாங்கள் அறிமுகமான  புதிதில் பல அருமையான பாடல்களைப் படைத்திருக்கிறார்கள். அந்த இனிமையான கானங்கள் இன்று வரை நறுமணம் வீசிக்கொண்டிருக்கின்றன.



           சங்கர்-கணேஷ் என்றால் எனக்குத் தோன்றும் ஒரு முத்திரைப் பாடல் பட்டிக்காட்டு ராஜா  படத்தில் மேற்கத்திய சங்கீத ஆர்ப்பரிப்பாக ஒலிக்கும் "உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்" என்ற பாடல்தான். சிறிய வயதில் இதை முதல் முறையாக கேட்ட பொழுதும் பின்னர்  கல்லூரி நாட்களில் இந்தப் படத்தைக்  காண நேர்ந்த துர்பாக்கிய நிலையிலும் இந்தப் பாடல் எனக்கு  ஊஞ்சலிலாடும் ஒரு உற்சாக உணர்வையூட்டியது. அபாரமான பாடல். துவக்கத்தில் வரும் அந்த ஹம்மிங், அதை தொடரும் எஸ் பி பி யின் நாட்டியமாடும் குரல், தடதடக்கும் தாளம் என்று ஒரு  சரியான கலவையில் ஊறிய இனிப்பான கானம். குறிப்பாக அந்த பபப்பா பபப்பா ஹம்மிங் அந்தப் பாடலுக்கு ஒரு அற்புதமான அலங்காரம். ஒரு சிறுவனின் மனநிலையில் நான் பல வருடங்கள் இந்தப் பாடலையே தமிழில் வந்த மேற்கத்திய இசையின் அளவுகோலாக வைத்து பல பாடல்களை இதனுடன்  ஒப்பிட்டு "இருந்தும் அந்தப் பாடல் மாதிரியில்லையே" என முற்றுப்புள்ளி வைத்ததுண்டு. என்னடி மீனாட்சி (இளமை ஊஞ்சலாடுகிறது), எங்கேயும் எப்போதும் (நினைத்தாலே இனிக்கும்) போன்ற பாடல்கள் கூட எங்கோ தடுமாறி சற்று தள்ளியேயிருந்தன. இப்போது அந்த அளவுகோல் மாறிவிட்டாலும் ஒரு சிறப்பான ஆங்கில இசையின் அனுபவத்தை கேட்கும்  ஒவ்வொரு முறையும் இந்தப் பாடல் எனக்கு இன்றைக்கும் அளிக்கத் தவறுவதில்லை.

         சங்கர்-கணேஷ் ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்திருப்பதாக (1053) இணையத்தில் ஒரு தகவல் இருக்கிறது. தமிழில் மட்டும் 418 படங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது சாதரணமாக கடந்து போகக்கூடிய சாதனை அல்ல. இருந்தும் இத்தனை படங்களுக்கு இசையமைத்தவர்கள்  இன்று ஏன் தமிழ்த்திரை வரலாற்றின் இருண்ட பக்கங்களுக்குள் புதைந்து போயிருக்கிறார்கள்  என்பது விளங்காத ஒரு புதிர். இது   வசதியான மேலும்  இலகுவான நமது  இசை விருப்பங்களின் கோளாறு என்று புரிந்துகொள்ளலாம். எப்படி வி குமாருக்கு சொந்தமான பாராட்டுகள் பல சமயங்களில் எம் எஸ் வி க்கும் இளையராஜாவுக்கும் சென்றதோ அதே போல் சங்கர்-கணேஷின் இசையை இளையராஜாவுக்கு தாரை வார்க்கும் மனோபாவமும் காணப்படுகிறது. சிவப்பு மல்லி படத்தின் ஒரே saving grace என்று சொல்லத்தக்க "ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்" பாடலை பலர் இளையராஜாவின் இசை என்று நினைத்துகொண்டிருப்பதை யு டியுபில் இந்தப் பாடலை தேடிய போது அறிந்துகொள்ள முடிந்தது. (வழக்கம் போல புளித்துப்போன  ராஜா ராஜாதான் பல்லவி வேறு!) இதைச் சொல்லும்போது பல ராஜா ரசிகர்களுக்கு இது எவ்வளவு கசக்கும் என்று தெரியும். நானும் இதே போன்ற தவறுகளை செய்தவன்தான். ஆனால் அதை உணரும்  அதே கணத்திலேயே என் மதிப்பீடுகளையும் தீர்மானங்களையும் புதுப்பித்துக் கொள்வதில் நான் தயக்கங்கள் காட்டுவதில்லை.

     சங்கர்-கணேஷின் பாடல்களைப் பற்றி விரிவாக பேசும் முன் அவர்களைப் பற்றிய பொதுவான குற்றச்சாட்டை சற்று விவாதிக்கலாம் என்று தோன்றுகிறது.  இணையத்தில் ஆராய்ந்த போது மையமாக  ஒரே ஒரு குற்றச்சாட்டு இவர்கள் மீது  வைக்கப்படுகிறது. அது இவர்கள் எம் எஸ் வி, இளையராஜா மேலும் ஹிந்தி ஆங்கில இசையை நகல் எடுப்பவர்கள் என்னும் தடாலடியான தாக்குதல்.  இந்தப் பார்வை  ஒரேடியாக மறுக்கப்படக்கூடியதல்ல என்பதை நான் நன்கறிவேன்.  இருந்தும்  சங்கர்-கணேஷ் இவ்வாறான நகல்களில் தங்களின் ஆளுமையையும் முத்திரை இசையையும் ரசிக்கத்தக்க விதத்தில்  கலந்து  அவற்றுக்கு  வேறு வடிவம் கொடுத்தார்கள் என்று சொல்ல விரும்புகிறேன்.  உதாரணமாக உச்சி வகுடெடுத்து பாடலைப் பின்பற்றி பட்டுவண்ண ரோசாவாம், ஒ ப்ரியா (இதயத்தை திருடாதே-இசை இளையராஜா) பாடலின் அச்சில் ஒ மை லவ் (இதய தாமரை) பாடல்கள் அமைக்கப்படிருந்தாலும் சரணங்களும் இசை அமைப்பும், வாத்திய ஒலியும் வேறுவிதமாக இருப்பது  கண்கூடு. மேலும்  புகழ் பெற்ற வேற்று மொழிப் பாடலின் பல்லவியை தமிழில் பயன்படுத்துவது இங்கே காலம்காலமாக செய்யப்படுவதுதான்.  அதையும் தாண்டி எவ்வாறு அந்தப் பாடலின் இசைக் கோர்ப்புகள் இசைக்கப்படுகின்றன, எப்படி அப்பாடல் வேறு தளத்தில் பயணிக்கிறது என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.  தாய் வீடு படத்தின் பாடல்களை சங்கர்-கணேஷின் நகல் இசைக்கு  ஆதாரமாகச் சொல்கிறார்கள். உண்மையில் அப்படப்பாடல்கள் முழுவதும் ஹிந்தியில் பப்பி லஹரியால் உருவாக்கப்பட்டவை.(இந்த பப்பி லஹரி நகல் இசை அமைப்பதில் கில்லாடி என்று பெயர்  பெற்றவர்.) படத் தயாரிப்பாளர்கள் வணிக வசதிகளுக்காக  அவற்றை  தமிழில் அப்படியே பயன்படுத்திக்கொண்டார்கள். சங்கர்-கணேஷ் வெறுமனே படத்தின் பின்னணி இசை மட்டுமே செய்தார்கள்.  இதுவே அபூர்வ சகோதரிகள், பாடும் வானம்பாடி படப் பாடல்களிலும் நிகழ்ந்தது. அதே சமயத்தில் மங்கம்மா சபதம் (கமலஹாசன் நடித்தது) படத்தின் சொர்கத்தின் வாசல் இங்கே மைக்கல் ஜாக்சனின் உலகப் புகழ் பெற்ற பில்லி ஜீன் பாடலின் தழுவலாகவும் நான்தானே  ஒரு புதுக்கவிதை (ஆணிவேர்) பாடல் பிரசித்தி பெற்ற போனி எம்மின் ரஸ்புடின் பாடலின் தமிழ்ப்  பிரதியாகவும் அமைத்திருந்தார்கள். ஆனாலும் வாத்திய இசையில் வேறு வடிவங்களை இவர்கள் முயன்றிருப்பது கவனிக்கத்தக்கது.

         இவர்களது மேற்கத்திய இசை பாணி எம் எஸ் வி, இளையராஜா போன்றவர்களின் பாதையிலிருந்து விலகியிருப்பதை சில பாடல்களின் பல்லவி மற்றும் இடையிசையிலிருந்து நாம்  தெளிவாக காண முடியும். சொல்லப்போனால் இளையராஜாவின் (மேற்கத்திய) பாணியை விட சங்கர்-கணேஷின் இசையில் நாம் இன்னும் அதிகமாகவே மேற்கத்திய இசையின்  தாக்கத்தையும் ஆளுமையையும் உணரலாம். (இளையராஜாவை விட) சங்கர்-கணேஷின் நவீன இசை மேற்கத்திய இசைக்கு வெகு அருகிலும்  அதேவேளையில் அந்த  அந்நிய வாசம் தூக்கலாக தெரியாத வகையிலும் மிக சிறப்பான விதத்தில் சமரசம் செய்யப்பட்டிருக்கும்.  syncopated drum beat இவர்களின் இசையில் ஆர்ப்பாட்டமாக துடித்துக்கொண்டு தாளமிடும். (இவ்வகையான syncopated பீட் இளையராஜாவின் இசையில் வெகு அபூர்வமாகவே கேட்கக் கிடைக்கும். (மன்றம் வந்த தென்றலுக்கு இதற்கொரு  உதாரணம்.) உலகின் பிரபாலமான drum beat என்று சொல்லப்படும் ஆமென் பிரேக் (Amen Break)  ட்ரம்ஸ் இசையை அதிகமாக இவர்கள்  பயன்படுத்தியிருக்கிறார்கள்.  மேலும் மயக்கம் தரும் கிடார் கார்ட்ஸ் மற்றும் guitar  riffs எனப்படும் lead கிடாரின் நீட்டிக்கப்பட்ட அதிர்வு இவர்களிசையின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம். இளையராஜாவைக் காட்டிலும் சங்கர்-கணேஷ் மேற்கத்திய கலப்பிசையை வெகு அனாசயமாக, அபாரமாக, அதே சமயத்தில் நமக்கு தொல்லை தராத, அலுப்பூட்டும் பாமரத்தனமான வெற்று காலி டப்பா ஓசைகளாக இல்லாமல் இனிமையான தாலாட்டாக வழங்கியிருக்கிறார்கள்- சித்திரமே உன் விழியில், பால் நிலவு காய்ந்தது (கிடார் மற்றும் ட்ரம்ஸ் இந்தப் பாடலில்  துடிப்பாக ஒலிப்பது இப்போது மறக்கப்பட்டுவிட்ட அபாரம்.), தேவி கூந்தலோ பிருந்தாவனம், சந்தன புன்னகை, சித்தர் கூட புத்தி மாறி தத்துவங்கள் சொல்லலாம், கேட்டது கிடைத்தது கோடிக் கணக்கில், எங்கள் கதை இது உங்களின் கதை,  நானூறு பூக்கள்,  அலை அலையாக போன்ற பாடல்களைக் கேட்டால் அவர்களின் மென்மையான மேற்கத்திய இசை வடிவங்களையும், முரண்படாத விதத்தில்  அவைகள் தமிழை  தழுவிக்கொண்ட ஆச்சரியங்களையும் அறியலாம்.

    புரிந்து கொள்ளமுடியாத வினோத விதிகளின் (கோட்பாடுகள்)  துயர ரேகைகள் நம் வாழ்வில் படிவதைப்  போல சங்கர்-கணேஷின் இசை எவ்வளவு இனிமையானதாக இருந்தாலும் அந்த  இசைப் புதையல்கள் எடுப்பாரற்று இன்னமும் தேங்கியே கிடக்கின்றன. இளையராஜாவுக்கும் ரஹ்மானுக்கும் பிரபலங்களின் நிழல்கள் கூடவே வந்தன. அவர்கள் இளைப்பாற சோலைகள் இருந்தன. சங்கர்-கணேஷுக்கோ இது போன்ற ஆயத்த வெற்றிகள்  கடைசிவரை கைகூடவில்லை. அவர்களுக்கு ஒரு பிராண்ட் நேம் எனப்படும் ஒரு முத்திரை முகம் அமையவில்லை. ஒரே ஒரு ஆறுதலாக சின்னப்பா தேவர் (தேவர் பிலிம்ஸ்) இவர்களை அறிமுகம் செய்ததோடு நிற்காமல்  தான் உயிரோடு இருந்தவரை  தன் படங்களில் இவர்களை தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டு வந்தார். (அதற்கு முன் தேவர் படங்கள் என்றால் அது கே வி மகாதேவன் இசையாகத்தான் இருக்கும். ஒரு மாற்றத்திற்காக தேவர் எம் எஸ் வி யை அணுகியபோது அவரும் ஒத்துக்கொண்டு முன் பணம் வாங்கியிருக்கிறார்.  கே வி மகாதேவன் மீது பெருத்த அபிமானம் கொண்டிருந்த எம் எஸ்  வி யின் தாய் இதை விரும்பவில்லை . மேலும் வணிக காரணங்களுக்காக இன்னொருவரை தேடி வரும் போக்கும்  அவருக்கு பிடிக்கவில்லை. முதலில் குருவை மதிக்க கற்றுக்கொள் என்று தன் மகனுக்கு அவர் போதிக்க தன் தாயின் வேண்டுகோளுக்கினங்க  எம் எஸ் வி தேவர் படங்களுக்கு இசை அமைத்ததில்லை என்று ஒரு செய்தி உண்டு. இதன் காரணமாக சங்கர் கணேஷ் அறிமுகப்படுத்தப்பட்டார்களா என்று என்னால் உறுதியாக சொல்ல இயலாது.) தேவரின் மறைவுக்குப் பின் தேவர் பிலிம்ஸ் இளையராஜாவை அணுகியது. அன்னை ஓர் ஆலயம், அன்புக்கு நான் அடிமை போன்ற படங்களில் இளையராஜா இசை அமைத்திருந்தார். தேவரைத் தவிர பசி பட இயக்குனர் துரை, பாஸ்கர் (தீர்ப்புகள் திருத்தப்படலாம் ), ராஜ் பரத் (உச்ச கட்டம்) என வெகு சிலரே சங்கர்-கணேஷுக்கு தங்கள் படங்களில் தொடர்ச்சியாக வாய்ப்பளித்து வந்தார்கள். மற்றபடி இவர்கள் பெரும்பாலும் B-movies என்று சொல்லப்படும் இரண்டாம் கட்ட (இரண்டாம் தரம் அல்ல) படங்களுக்கே அதிகமாக இசை அமைக்க வேண்டியிருந்தது. இருந்தும் அந்தப் படங்களில் இவர்கள் கொடுத்திருக்கும் பாடல்கள் சந்தேகமில்லாமல் தித்திப்பான சுவை கொண்டவை. படங்களும் பாடல்களும் அவ்வளவாக வணிக அளவில் வெற்றி பெறாவிட்டாலும் மனதை மயக்கும் மெலடிகள் அவைகளில்  பல உண்டு.

        எம் எஸ் வியின் காலத்தில் அவருக்கு அடுத்த இடத்திலும் பின்னர் இளையராஜாவின் தனிக்காட்டு ராஜாங்கதிலும் அதே இரண்டாவது இடத்திலும் இவர்கள் இருந்தார்கள். இளையராஜாவுக்கு மாற்றாக இவர்களைச் சொல்ல முடியாதென்றாலும்  பல தயாரிப்பாளர்களின் இரண்டாவது தேர்வு இவர்களே. ஆனாலும் எந்தவிதமான வஞ்சனைகளுமின்றி சிறப்பான இசையை வழங்கியதே இவர்களின் பாணியாக இருந்தது.  ஒரு முறை கங்கை அமரன் ஒரு பேட்டியின் போது "உங்கள் இசையில் உங்கள் அண்ணனின் தாக்கம் அதிகமாக இருக்கிறதே?" என்ற கேள்விக்கு "ரத்த சம்பந்தம் இல்லாதவர்கள் எல்லாம் என் அண்ணனை காப்பியடிக்கும்போது  நான் செய்வதில் என்ன தவறு?" என்று   குறிப்பாக சங்கர்-கணேஷை மனதில் வைத்து சொன்னதாக படித்திருக்கிறேன். உண்மையே. இளையாராஜாவின் இசைக் கூறுகள் சங்கர்-கணேஷின் இசையில் தென்படவே செய்தன. ஆனாலும் ஒரேடியாக அவை அவர்களின் தனித்தன்மையை ஆக்கிரமிக்கவில்லை என்று சொல்லலாம். உதாரணமாக மாம்பூவே சிறு மைனாவே  என்ற பாடலை பலர் இளையராஜாவின் பாடல் என்றே கருதுகின்றனர். அந்த அளவுக்கு அப்பாடல் இளையராஜாவின் சாயலை அடர்த்தியாக ஒத்திருக்கும். உண்மையில் மச்சானப் பாத்தீங்களா படத்தில் அப்பாடலை அமைத்தது சந்திரபோஸ். அது அவருடைய முதல் படம். சங்கர்-கணேஷின் இசையிலோ இதுபோன்ற தனி அடையாளம் முழுதும் தொலைந்து போகும் அபாயமான  இடையூறுகள் இருக்காது. மற்ற இசை அமைப்பாளர்களின் பாணியை கொஞ்சம் இங்கே அங்கே  தொட்டுக்கொன்டாலும் அது அவர்களின் பாடல்களை கொடூரமாக நெரித்து  ஆதிக்கம் செலுத்தாமல் அரவணைத்துச்  செல்லும் அழகைக் காணலாம்.

         எம் எஸ் விக்கு டி எம் எஸ்-சுசிலா, இளையராஜாவுக்கு எஸ் பி பி -ஜானகி போல சங்கர்-கணேஷின் ஆஸ்தான பாடகர்களாக ஜெயச்சந்திரனும் வாணி ஜெயராமும் இருந்தார்கள். ஜெயச்சந்திரன் இவர்களது இசையில் அதிகமான பாடல்களைப் பாடியிருப்பதாக ஒரு தகவல் உள்ளது. எனக்கு இன்றுவரை வாணி ஜெயராமின் பாடல் எதைக் கேட்டாலும் அது சங்கர்-கணேஷின் இசையாகத்தான் இருக்கும் என்ற எண்ணம்  அனிச்சையாக தோன்றும். பல நேரங்களில் அது உண்மையாகவும்  இருக்கும். பால் நிலவு காய்ந்தது மற்றும் யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப்போவது  என்ற இரண்டு வைர கானங்களை மறக்கத்தான் முடியுமா?



     சங்கர்-கணேஷின் டப்பாங்குத்து இசை(தற்போதைய கானா இசையின் முன்னோடிகளில் ஒன்று), மேற்கத்திய பாணி இசை, ஆங்கில மற்றும் ஹிந்திப் பாடல்களின் நகல் எல்லாவற்றையும் கேட்ட பிறகே நான் ஏன் பிறந்தேன், இதய வீணை என்ற இரண்டு  எம் ஜி ஆர் படத்திற்கும் இவர்கள் இசை அமைத்திருக்கிறார்கள் என்ற செய்தியை அறிந்தேன்.(!). குறிப்பாக நான் பாடும் பாடல் நலமாக வேண்டும் , தம்பிக்கு ஒரு பாட்டு, உனது விழியில் எனது பார்வை (மனதை வசீகரிக்கும் மந்திரப் பாடல் ), நான் ஏன் பிறந்தேன் போன்ற மிகவும் சிறப்பாக இசைக்கப்பட்ட கானங்கள் என்றும் பசுமையானவை. இதே படத்தில் உள்ள அபாரமான பாடல் என்று நான் எண்ணுவது சித்திரைச் சோலைகளே  பாடலைத்தான். பாரதிதாசனின் சிறப்பான கவிதையை மிக அழகாக நல்லிசை என்ற வண்ணம் தீட்டி காலத்தால் அழியாத ஒரு கானமாக அதை உருமாற்றியிருப்பதை இங்கே பதிவு செய்வது அவசியம். அதேபோல இதயவீணை படத்தின் திருநிறைச்செல்வி, ஆ...னந்தம் இன்று ஆ..ரம்பம், காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர் (ஹேப்பி இன்று முதல் ஹேப்பி என்ற பாடலை லேசாக நினைவூட்டும் ஆரம்பம் ), பிறகு படத்தின் சிறப்பான பொன் அந்தி மாலைப் பொழுது போன்றவைகள் மிகப் பெரிய வெற்றி பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. பாடல்களில் மிகுந்த ஈர்ப்புடன் கவனம் செலுத்தும் எம் ஜி ஆர் சங்கர் கணேஷிடமிருந்து அவர்களின் மிகச் சிறப்பான பாடல்களை  தேர்வு செய்திருப்பதை இதிலிருந்து நாம் உணரலாம்.

    அதியச தகவலாக இவர்கள் இருவரும் இசை அமைப்பளர்களாக அறியப்படும் முன்பே ஒரு புகழ்  பெற்ற படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்திருக்கிறார்கள்.  காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் தன் கனவுப் படத்திற்கான பாடலை அமைக்க அழைத்து வரும் இரண்டு இசை அமைப்பாளர்கள்  இவர்களே.  விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் சிபாரிசின் பேரிலேயே சங்கர்-கணேஷ் இதில் நடித்தார்கள் என்று   அப்போதே கேள்விப்பட்டிருந்தாலும் அதை பெரிதாக நினைக்கவில்லை. இந்தப் பதிவை எழுதத் துவங்கியபின்  சமீபத்தில் எதேச்சையாக இந்தப் படத்தை காண நேர்ந்தது. அப்போது குறிப்பிட்ட  அந்தக்   காட்சியை எதோ ஒரு neck and neck ரேஸின் முடிவைப் பார்ப்பதுபோல உன்னிப்பாக கவனித்து இந்தத் தகவலை உறுதி செய்துகொண்டேன். அது அவர்களேதான். குறிப்பாக சங்கரை  (இப்போது அவர் இல்லை.) எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. (கொஞ்சம் சேட்டு போன்ற தோற்றத்தில் வருபவரே சங்கர் .)

      60களின் இறுதியில்   கவிஞர்  கண்ணதாசனால்  சாண்டோ சின்னப்பா தேவருக்கு அறிமுகம் செய்யப்பட்டு, தேவரின் ஆஸ்தான இசை அமைப்பாளர்களாக இருந்த  சங்கர்-கணேஷ் தங்களின் நன்றியை எப்போதும் "கவிஞர் வழங்கிய தேவரின் சங்கர் கணேஷ்" என்றே  திரைப்படங்களில் தெரிவிப்பது வழக்கம். (சங்கர் புகழ் பெற்ற பழம்பெரும் இசை அமைப்பாளர் சி ஆர் சுப்புராமனின் சகோதரர்.)  மகராசி என்ற படத்தில் (ஒரு தகவல் இவர்களின் முதல் படம்  நல்  வரவு என்று சொல்கிறது.) அறிமுகமான இவர்கள்  70களில் பல உயிர்ப்பான கானங்களை என்றும் நீங்கா நினைவுகளாக, கரையாத வண்ணங்களாக நம் நெஞ்சங்களில் வரைந்திருக்கிறார்கள்.

     எம்  எஸ் வி யின் காலத்தில் துவங்கி, அந்த இசையின் சுவடுகளை கொஞ்சம் தொட்டுக் கொண்டு வந்த இவர்களின் இசை பாணி  பின்னர் 80களில் இளையராஜாவின் இசைக் கூறுகளையும் உள்வாங்கிக்கொண்டது. சிலர் இவர்களை ஒரேடியாக காப்பி இசை அமைப்பாளர்கள் என்று முத்திரை குத்தி புறம்பே தள்ளிவிடுகிறார்கள். இதில் பாதியளவு  உண்மை இருப்பதாகவே நான் நினைக்கிறேன். நகல் இசை என்ற குற்றச்சாட்டை சற்று   தவிர்த்து விட்டு அவர்கள் அளித்த அசல்களை   ஆராய்ந்தால் அவர்கள் இசையின் படிமானங்களை வியப்புறும் வகையில் நம்மால் உணரமுடியும். (ஒரு விதத்தில்) சங்கர் கணேஷின் இசை ஆர்ப்பரித்துக்கொண்டு பீறிட்டுப் பாயும் காட்டாறு வெள்ளத்தின் ஆக்ரோஷ அழகைப்   போலில்லாமல் அமைதியாக  சலசலக்கும் ஓடையின் இனிமையை கொண்டிருந்தது. எத்தனை ரம்மியமான  கீதங்கள் இவர்களிடமிருந்து புறப்பட்டிருகின்றன! கீழே இருக்கும் பட்டியலைப் பார்த்தால் இந்த எளிமையான உண்மையை சட்டென பிடித்துவிடலாம்.  (இதில் சில அதிரடிவகைப்  பாடல்களும் அடக்கம்.)

    சங்கர்-கணேஷின் துவக்க கால படைப்புகளின் மீது ஒரு பார்வை வீசுவோம்.(வெளிவந்த வருடங்கள் குறித்து என்னால் உறுதியாக கூறமுடியவில்லை. ஒரு அனுமானமாகவே பாடல்கள்  பட்டியலிடப்பட்டிருக்கின்றன.)

சின்ன கண்ணனே நான் தந்தையென-தாய்க்கு ஒரு பிள்ளை.
எதைக் கேட்பதோ எதை சொல்வதோ- பத்து மாத பந்தம்,
செந்தாமரையே செந்தேனிதழே - புகுந்த வீடு. (அபார கலைஞன் எ எம் ராஜாவின் இனிமையான குரலில் வந்த இந்த மூன்று பாடல்களும் மிகவும் சிறப்பானவை .)
பால் நிலவு நேரம்-அன்பு ரோஜா,
என் காதலி யார் சொல்லவா - தங்கத்திலே வைரம். (சந்தேகமேயில்லாமல் பலரின் விருப்பப்பாடல் இது.)
அவளொரு பச்சைக் குழந்தை- நீயொரு மகாராணி. (இனிமையின் இன்னொரு பெயர்.)
பூவிலும் மெல்லிய பூங்கொடி- கண்ணன் வருவான். (டி எம் எஸ்   எம் ஜி ஆர், சிவாஜி இருவரின்  குரல் பிரதிநிதியாக இருந்தாலும் அவர் அதிக எண்ணிக்கையில் பாடல்கள் பாடியது ஜெய் ஷங்கருக்குத்தான். அதிலும் இப்பாடல்  ஜெய் ஷங்கரே பாடியது போல ஒரு தோற்றம் தருகிறது. கேட்டதும் விரும்பக்கூடிய வெகு சில   பாடல்களில் இதுவும் ஒன்று. )
கண்ணே தேடி வந்தது யோகம்-வாக்குறுதி,
அன்புத் தெய்வம் நீ- கோமாதா எங்கள் குலமாதா,
எங்கெங்கும் உன் வண்ணம்- கண்ணம்மா,
கல்யாண ராமனுக்கும்- மாணவன்,
என் உள்ளம் அழகான வெள்ளித்திரை- சினிமா பைத்தியம். (இது கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது. வி குமாரா அல்லது சங்கர் கணேஷா என்று.)
ஜிலு ஜிலு குளு  குளு, தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது.(70 களின் மென்மையான ஞாபகங்களை உயிர் பெறச் செய்யும் ரம்மியமான பாடல். தரமான நல்லிசை.  பலர் இந்தப் பாடலை கேட்டு உணர்ச்சி வசப்படுவதை நான் கண்டிருக்கிறேன். அதுவே இப்பாடலின் வெற்றி. இப்படம் சங்கர்-கணேஷுக்கு வணிக அளவில் பெரிய வெற்றியை கொடுத்தது.)-வெள்ளிக்கிழமை விரதம்.

      இனி  70 களின்  இசை அழகை சற்றும் சிதைக்காமல் அவர்கள் அமைத்த சில பாடல்கள்.

ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை- என்னடி மீனாட்சி, (மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் கீதம்.)
என் காதல் கண்மணி-மஞ்சள் குங்குமம்.
சங்கீதம் மலர்கின்ற நேரம்- கைவரிசை.
இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான்- உயர்ந்தவர்கள். (உயர்ந்த கானம்.)
சந்தேகக் கோடு அது சந்தோஷக் கேடு - சொர்க்கம் நரகம். (Tamil tongue twister!)
நானூறு பூக்கள்-உறவுகள் என்றும் வாழ்க. (அபூர்வமான அழகியலின் அற்புத இசை அவதாரம் என்று சொல்லலாமா? Really a very rare gem.)
நீ (ர்) மேகம் ஆனால் என்ன நான் தோகையான பின்னே  - தாயில்லா குழந்தை. (சிலோன் வானொலியின் தங்க தினங்கள்  நினைவுக்கு வருவதை தவிர்க்கவே முடியாது .)
எதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போல -சொன்னதைச் செய்வேன், (இது சங்கர்-கணேஷின் பாடலா அல்லது எம் எஸ் வி யின் பாடலா என்ற குழப்பம் ஒரு பக்கம். இறுதியில் இவர்கள் இருவருமல்ல. வி குமாரின் இசையில் வந்த பாடல் இது என்று தெரிகிறது. இதை நான் சங்கர்-கணேஷின் இசை என்று எண்ணியதால் இங்கே சேர்த்திருக்கிறேன்.எவரின் படைப்பாக இருந்தாலும் இது ஒரு மிக அருமையான பாடல் என்பதை மறுபேச்சின்றி ஏற்றுக்கொள்ளலாம் .)
நடிகனின் காதலி, வடிவேலன் மனசு வச்சான்- தாயில்லாமல் நானில்லை,
நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு -தாய் மீது சத்தியம்,
என் கண்ணின் மணியே இளம் கன்னித் தமிழே  (சகோதர பாசத்தை பண்பட்ட வகையில் சொல்லும் மனதை உருக்கும் பாடல்.) -  காலைப் பொழுது விடிந்தது என் நெஞ்சத்தைப் போல (ஜானகி பாடிய மிக சிறப்பான விடியல் பாடல்.) -ராஜராஜேஸ்வரி,
மலைச் சாரலில் ஒரு பூங்குயில் (ரசிக்கவைக்கும் தட தடவென்ற  தாளம். ஜேசுதாஸின் குரலில் வந்த வைரங்களில் ஒன்று.) - ஒரு குடும்பத்தின் கதை.
நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா,ஒரே ஜீவன், ஒரு கோடி-நீயா?

    70 களின் இறுதியில் ஏற்பட்ட ஒரு திடீர் இசை பூகம்பம் இளையராஜா. அவரின் இசைச் சாயலை ஒட்டி  தங்களை புதுப்பித்துக்கொண்ட இசை வடிவத்தில் சங்கர்-கணேஷ்  படைத்த  சில பாடல்கள்.

பருத்தி எடுக்கையிலே-ஆட்டுக்கார அலமேலு.( சங்கர்-கணேஷின் முத்திரைப் பாடல்களில் ஒன்று. அவர்களுக்கு பெரிய வெற்றியை கொடுத்த பாடலும் இதுவே என்று நினைக்கிறேன். இந்தப் படத்தில்தான் சங்கர் கணேஷ் பாபி படத்தின் கிடார் இசைத்  துணுக்கு ஒன்றை  படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் பயன்படுத்தியிருப்பார்கள். அது படத்தின் 'ஹீரோவான" ஆடு "கெட்டவர்களை" துரத்தும் காட்சி என ஞாபகம்.  டிடிங் டிடிங் டிங் என்று அந்த  கிடார் துவங்கும் போது  அரங்கு முழுதும் விசில்கள் பறந்தது  நினைவு இருக்கிறது. ஒரு ஆட்டுக்கு இத்தனை ஆரவாரமா  என நான்  அதிர்ந்தே  போனேன்.)
ஆவாரம் பூமேனி, பட்டு  ரோசாவாம், நடைய மாத்து. (இளையராஜா கூட இது போன்ற street music செய்ததில்லை என்று சிலர் சொல்கிறார்கள். உண்மையோ  என தோன்றுகிறது. கேட்காவிட்டால் கொஞ்சம் கேட்டுவிட்டு பிறகு உடன்படுவதையோ அல்லது எதிர்ப்பதையோ செய்யுங்கள்.)-கன்னிப்பருவத்திலே
கொஞ்ச ஒதுங்கு  நா தனியா பேசணும் உன்னோடதான்-வசந்த காலம். (சுருளிராஜனின் குரலில் எஸ் பி பி பாடியது. சுருளிராஜனுக்கென்றே படங்கள் ஓடிய காலங்கள் உண்டு. ரசிக்ககூடிய பகடிப் பாடல். அப்போது இது ஒரு கொண்டாட்டமான பாடலாக வானொலியில் உலா வந்து மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது.  இதற்கு சுருளிராஜன் மற்றும் சுமித்ரா நடித்திருப்பார்கள்.  கம்பன் ஏமாந்தான் என கமல் நக்கலடிக்கும் அதே சுமித்ராதான். )
பொன்மான தேடி- எங்க ஊர் ராசாத்தி. (இளையராஜாவின் நிழல் அதிகமாக இதில் படிந்திருப்பதை காணலாம்.)
நா ஒன்ன நெனச்சேன்- கண்ணில் தெரியும் கதைகள். (மிக அபூர்வமான கானம். கேட்ட ஒரே கணத்தில் நெஞ்சத்தை நொறுக்கும் சக்தி வாய்ந்த இசையின் புரிபடாத மர்மங்களின் மறு வடிவம். ஐந்து பெரிய இசை ஆளுமைகள் இதில் இருந்தாலும் போட்டி என்னவோ நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே (இளையராஜா) என்ற பாடலுக்கும் இந்தப் பாடலுக்கும்தான். இறுதியில் வென்றது யார் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா? சங்கர்-கணேஷின் அதிகபட்ச வெற்றிகளில் இந்தப்  பாடலுக்கு ஒரு மிக முக்கியமான இடம் என்றைக்கும் உண்டு. ஒரு விதத்தில் சங்கர்-கணேஷின் முத்திரைப் பாடல் இதுவே என்று தோன்றுகிறது. )
எரிமலை எப்படிப் பொறுக்கும், ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம் ( என்ன ஒரு வசீகரமான கானம்! மெல்லிசையின் மிக மென்மையான மழைத் தூறல். இந்தப் பாடலை விரும்பாதவர்கள்  இருக்க முடியுமா என்று தெரியவில்லை.) - சிவப்பு மல்லி,
ரோசா மலரே அழுவக் கூடாது-ராஜாங்கம்.
செந்தமிழோ - புதியவர்கள்,
ஐ லவ் யு பனி தேன் மழையே -மாம்பழத்து வண்டு,
எ உன்னத்தான் (செப்புக்குடம்)-ஒத்தையடி பாதையிலே,
நாக்கிலே மூக்கில நாத்து பல்லாகிலே (தள தளன்னு வளந்த பொண்ணு)-சின்ன சின்ன வீடு கட்டி. விரசங்களில்லாமல்  குதூகலிக்கும் கும்மாளமான   நாட்டுப்புற கானம். பாடலின் துவக்கத்தில் அங்கே இங்கே என்று  பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கும்  ஆர்ப்பாட்டமான அந்த அதிரடித்  தாளம் தள தளன்னு வளந்த பொண்ணு தண்ணி மொள்ளும் போதிலே என்ற  இடத்தில்  வெடித்துக்கொண்டு  ஆர்ப்பரிப்பதை கேட்கும்  போது அந்த தண்ணீர்க் குடம் நம் தலையில் கவிழும்   சிலிர்ப்பை நீங்கள் உணர முடியும். மேலும்   தமிழில் வந்த மிக நீண்ட பல்லவி கொண்ட பாடல்களின் ஒன்று  என்ற சிறப்பை பெற்றது இது. (இன்னொன்றும் இவர்கள் இசையிலேயே வந்தது. அது  பவுர்ணமி நேரம் என்ற பாலைவனச்சோலை படப் பாடல்.)  சற்று இந்த பல்லவியைப் பாருங்கள்:

             நாக்கிலே மூக்கில 
             நாத்து பல்லாக்கிலே,
             தோப்பு பராக்கிலே,
             தாழ்வாரத்திலே, 
             தோளோரத்திலே,
             சிங்காரத்தில,
             தள தளன்னு வளந்த பொண்ணு 
             தண்ணி மொள்ளும் போதிலே 
             தாவி வந்து அணச்சுகிட்டேன், 
             கையிரண்டும் போதல,

  (இந்தப் பாடல் வானொலியில் ஒலிக்கும் சமயங்களில் தெருக்களில் இளம் பெண்கள், குறிப்பாக குடத்துடன்  பெண்கள் தண்ணீர் எடுக்க செல்ல நேரிட்டால் அவர்கள் காட்டும் முக பாவணைகளைக்  கண்டு  அவர்கள் கோபப்படுவதாக எண்ணியிருந்தேன். அது அப்படியல்ல என்று இப்போது தோன்றுகிறது.)

ஆல மரத்துக்கிளி,மச்சானே அச்சாரம் போடு- பாலாபிஷேகம்,
முத்து முத்து தேரோட்டம், நான்தானே ஒரு புதுக்கவிதை - ஆணிவேர், (ரஸ்புடின் என்ற போனி எம்  பாடலின் பிரதியாக இருந்தாலும் மிக சிறப்பாக இசைக்கப்பட்ட ட்ரம்ஸ் இசை சரணம் வரும் போது வேறு பரிமாணத்துக்குச் செல்கிறது. அருமையாக வாத்தியங்கள் இசைக்கப்பட்ட கானம். )
தேவி வந்த நேரம்- வண்டிச் சக்கரம். (மெல்லிசை என்ற தென்றல் வீசும் பாடல்.)
இனிக்கும் இளமை என்னிடம் - இனிக்கும் இளமை.

       80 களின் துவக்கத்தில் சங்கர்-கணேஷின் இசை வேறு தளத்தை எட்டியது. ஆர்ப்பாட்டமான ஆங்கில இசையின் அடிப்படையான உட்கூறுகளை தமிழுக்கேற்றவாறு இசை மொழி பெயர்ப்பு செய்து வெகு சிறப்பாக அவற்றை நமது மெல்லிசையின் மீது வைத்து கர்நாடக ராகத்தையும்  சேர்த்துத்  தைத்து மிக அருமையான பாடல்களை இவர்கள் உருவாகினார்கள்.

அவள் ஒரு  மேனகை - நட்சத்திரம். (இது தெலுகு படத்தின் பாடல் என்று தெரிகிறது. எஸ் பி பி சிவரஞ்சனி என்று உச்சஸ்தானியில்  நீண்ட நேரம் ராக ஆலாபனை செய்தது அப்போது பெரிதாக பேசப்பட்டது .)
தனிமையிலே ஒரு ராகம்- சட்டம் ஒரு இருட்டறை. (சுரேந்தரின் தேன் சிந்தும் குரலில் இந்தப் பாடல் ஒரு மேகத் தாலாட்டு. தனிப்பட்ட விதத்தில் இப்பாடல் அப்போது எங்கள் வீட்டுக்கு வந்திருந்த விருந்தினர்களையும்  இந்தப் படத்தைப் பார்க்கச் சென்ற ஒரு கோடை காலத்தின் வெயிலடிக்கும் மதிய நேரத்தையும் எனக்கு   நினைவூட்டும்.) Nostalgia at its best.

தேவி கூந்தலோ பிருந்தாவனம் - என் ஆசை உன்னோடுதான். (The Turtles என்ற 60களைச் சேர்ந்த  ஆங்கில இசைக் குழுவினரின் happy together பாடலின் தமிழ் வடிவம். இருப்பினும் அருமையாக தமிழில் வார்க்கப்பட்ட பாடல்.)
வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி-பொன்னகரம்.
மலர்களே இதோ இதோ- தீராத விளையாட்டுப் பிள்ளை. (என்ன ஒரு தரமான மேற்கத்திய இசையின் தமிழ்ப்  படிவம்! இணையத்தில் சிலர் இதையே சங்கர்-கணேஷின் சிறப்பான பாடல் என்று சொல்கிறார்கள். எனக்கு இதில் உடன்பாடு இல்லாவிட்டாலும் இது ஒரு அருமையான கானம் என்பதில் இரண்டாம் சிந்தனை கிடையாது ).இதே படத்தில் தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற ஒரு அதிரடி பாடல் உண்டு.
பனியும்  நீயே மலரும் நானே- பனிமலர். ( நளினமான பாடல்.)
தேவி நீயே - ஆசைகள். (இது கொஞ்சம் அபூர்வமான பாடல். எப்போதோ கேட்ட நினைவு மறுபடியும் கேட்கையில் தோன்றுகிறது.)

இந்த இரவில் நான் பாடும் பாடல்,மனம் உன்னை  நினைத்தது, பால் நிலவு காய்ந்தது (kraftwerk (Album: The Man Machine) என்னும் ஜெர்மானிய சிந்தசைசர் இசை குழுவின் The Model  என்ற பாடலின் நிழல். ஆனால் சங்கர்-கணேஷின் ட்ரம்ஸ் இங்கே நவீன தாளம் போடுகிறது.  kraftwerk கையாண்ட சிந்தசைசர் இசை இங்கே கிடார் மற்றும் அதிரடி ட்ரம்ஸ் இசையால் சமன் செய்யப்பட்டு  பாடல்  வேறு வடிவம் பெறுகிறது. அருமையான கவிதை கொண்டு உடைந்த  காதலின் வலியை வர்ணிக்கும் கானம் இது.  கண்டிப்பாக கேட்கப்படவேண்டிய பாடல்களில் ஒன்று.)  - யாரோ அழைக்கிறார்கள்,
நானொரு கோவில் நீயொரு தெய்வம்- நெல்லிக்கனி. (நட்பை நல்லிசையாக வடித்த பாடல். இது வெளிவந்த புதிதில் இதில் நடித்த சிவகுமார். சிவச்சந்திரனை விட இதைப் பாடிய எஸ் பி பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவனுக்காகவே இந்தப் பாடல் அதிகம் விரும்பப்பட்டது.  அப்போதைய இரண்டு முக்கியமான பாடகர்கள் (முதன் முதலாக?) இணைந்து பாடியிருந்ததே இதன் சிறப்பு.)
சித்திரமே உன் விழியில்- நெஞ்சிலே துணிவிருந்தால். (இது எதோ ஒரு ஆங்கிலப் பாடலை நினைவு படுத்துகிறது. துல்லியமாக அதை சுட்டிக்காட்ட முடியவில்லை இப்போதைக்கு. சங்கர்-கணேஷின் முத்திரையான தடதடக்கும் ட்ரம்ஸ் இந்தப் பாடலை ஒரு சுகமான ரசனைக்கு இட்டுச் செல்கிறது. .)
மரியா மை டார்லிங்- மரியா மை டார்லிங்,
ஒரு ஊரில் ஊமை ராஜா, ராகம் தாளம் பல்லவி (அது காதல் பூபாளமே) - தீர்ப்புகள் திருத்தப்படலாம்,
சரணம் சரணம் தலைவா சரணம், நிழல் தேடி வந்தேன்  - பவுர்ணமி அலைகள்,
ரோஜாவில் முள்ளுமில்லை- காதல் காதல் காதல்.
மங்கல குங்குமம்- தீர்ப்பு என் கையில்,
ஆகாயம் பூப்பூக்கும் நேரம்-சாட்சி,
எல் ஒ வி இ லவ்தான், வாடி மச்சி -விதி,
நான் இரவில் எழுதும்- சுப முகூர்த்தம்,
ஒ மேகமே ஓடும் மேகமே (காதல் தோல்வியின் வலியை சொன்ன பல அருமையான பாடல்களில் இதுவும் ஒன்று. மிக மென்மையான கானம்).- அந்தஸ்து.
எனக்கொரு மணிப் புறா ஜோடியென்று இருந்தது. (அதே காதல் தோல்வி ஜெயச்சந்திரனின் குரலில்.)- ஜோடிப் புறா.
பட்டுக்கோட்டை அம்மாளு- ரங்கா. ( மலேசியா வாசுதேவனும் எஸ் பி பி யும் இணைந்து பாடிய ஜாலியான பாடல். பொதுவாக எஸ் பி பி க்கு மேற்கத்திய பாணியும் மலேசியா வாசுவுக்கு நாட்டுபுற பாணியும் தான் வழக்கம். இதில் சங்கர்-கணேஷ் அந்த சம்பிரதாயத்தை தலைகீழாக மாற்றியிருப்பார்கள்.)

    80 களில் ராஜ் பரத் என்று ஒரு அறிமுக இயக்குனர் ஒரு திடீர் காளான் போல தமிழ்த் திரையில் தோன்றி நான்கு படங்களைக்  கொடுத்தார். அவை: உச்சகட்டம், சொல்லாதே யாரும் கேட்டால், சின்ன முள் பெரிய முள், தொட்டால் சுடும்.  (கே பாலச்சந்தரின் தில்லு முல்லு  படத்தின் இறுதிக் காட்சியில் தொட்டால் சுடும் பை ராஜ் பரத் என்று ஒரு பேனர் காண்பிக்கப்படும். ராஜ் பரத் பாலச்சந்தரின் மீதிருந்த அபிமானத்தால் உடனே அதே பெயரில் தனது  அடுத்த  படத்தை இயக்கினார் என்று சொல்லப்பட்டது. தொட்டால் சுடும் என்ற தலைப்புக்கு ஏற்றவாறு திரைக்கதையை அமைத்திருப்பார் இயக்குனர்.) அனைத்துமே திர்ல்லர் வகையைச் சேர்ந்தவை. அவைகளில் அதிகபட்சமாக இரண்டு பாடல்கள் மட்டுமே இருக்கும். இவரது படங்களில் ஒரே கதை சீரான நேர்கோட்டில் செல்லும் ஆங்கில திரைக்கதை யுக்தி  பிரமாதமாக கையாளப்பட்டிருக்கும். பாடல்கள் கூட அந்த காலகட்டத்தின் அவசியம் கருதியே இடம் பெற்றிருந்தன. சங்கர்-கணேஷின் இசை இவரின் படங்களுக்கு ஒரு சரியான பற்றை (grip) கொடுத்தது. இது போன்ற த்ரில்லர் வகைப் படங்களுக்கு சங்கர்-கணேஷின் இசை மிகப் பொருத்தமாக இருக்கும். பாமரத்தனமாக  பிண்ணனியில் மர்ம இசை  என்ற பேரில் எதையோ உருட்டி உடைத்து கதற வைத்து நம் செவிகளை பதம் பார்க்கும் கிறீச்சிடும் கண்றாவிகள் இவர்களிடம் பொதுவாக இருக்காது. சங்கர்-கணேஷின் பிண்ணனி இசையையும் கவனத்தில் கொள்ளும் ஒரு ரசனை மிக்க ரசிகர் கூட்டம் 80கள் வரை இருந்ததை நான் அறிவேன். "எங்கள் இசைத் தலைவர்கள் சங்கர்-கணேஷ் படம் காண வந்த ரசிகர்களுக்கு நன்றி" என்று படத்திற்கு முன் சிலைட் (இதற்கு தமிழில் என்ன சொல்வதென்று தெரியவில்லை.) தோன்றும் அபூர்வங்களை நான் பார்த்திருக்கிறேன்.

இதழில் தேன் பாண்டி முத்துக்கள், சித்தர் கூட புத்தி மாறி- உச்சகட்டம்,
பூவாகி இரவு நேரம், கேட்டது கிடைத்தது கோடிக்கணக்கில் (செவிகளை  தொந்தரவு செய்யாத genuine ட்ரம்ஸ் இசை)  - சொல்லாதே யாரும் கேட்டால்,
ராமன் போல தோற்றம்- தொட்டால் சுடும்,
மாலை சூட கண்ணே ராதா நாள் வராதா -கண்ணே ராதா.
சொல்லாதே யாருக்கும்- ஜிகு ஜிகு ரயில்,
சம்சாரம் அது மின்சாரம்- சம்சாரம் அது மின்சாரம். (பெரிய புகழடைந்த பாடல்.)
அழகிய விழிகளில் அறுபது கலைகளும், ஒ நெஞ்சே நீதான் பாடும்- டார்லிங் டார்லிங் டார்லிங் ,
கெண்ட சேவல் கூவும்  நேரம்- எங்க சின்ன ராசா. (இதே பாடல் பின்னாட்களில் ஹிந்தியில் அணில் கபூர் படமொன்றில்  கையாளப்பட்டது.)



          80கள் தமிழ்த் திரையில் பல புதிய இயக்குனர்களையும், நவீன சிந்தனைகளையும், வேறுபட்ட திறமைகளையும் அடையாளம் காட்டின. ஒரு தலை ராகம் என்ற சராசரிப் படத்தின் பிரமாண்ட வெற்றி தமிழ்த் திரையின் கதை களத்தை அதிரடியாகத் தாக்கியது.  இதன் தொடர்ச்சியாக வந்த பல படங்கள் அன்றைய இளைய தலைமுறையினரின் எண்ண ஓட்டங்களை ஏறக்குறைய கச்சிதமாக காட்சிப்படுத்தின. அதில் குறிப்பிடதக்க ஒரு படம் என்று நான் கருதுவது  81இல் வந்த பாலைவனச் சோலை என்ற ராபர்ட் ராஜசேகரின் படத்தையே. (நிழல்கள் படத்தின் அபாரமான, வைரமுத்துவின் முதல் திரைப் பாடலான, இளையராஜாவின் வைரமாக ஒளிர்ந்த  இது ஒரு பொன்மாலைப் பொழுது பாடலுக்கு "அற்புதமாக" நடித்த அதே ராஜசேகர்தான்.) பாலைவனச்சோலை மிகப் பெரிய உச்சத்தை தொட்டது. பொதுவாக எல்லோரும் பாராட்டிய படமாக இது இருந்தது. அதிகமான வர்த்தக சமரசங்கள் செய்து கொள்ளப்பட்டாத திரைக்கதை, இயல்பான வசனங்கள்,போலித்தனமில்லாத நடிப்பு, விரசமில்லாத காட்சிகள் மேலும் சிலிர்ப்பூட்டும் இசை, சிறப்பான பாடல்கள் போன்றவைகள் இதை 80 களின் முத்திரைப் படங்களில் ஒன்றாக மாற்றிவிட்டது. இப்போது சங்கர்-கணேஷின் இசையில் வந்த இப்படத்தின் பாடல்களைப் பார்ப்போம்.
    எங்கள் கதை இது உங்களின் கதை- இளைஞர்களின் "புகை"படிந்த, கவலைகள் துறந்த நிலையை சொல்லும் பாடல்.
      ஆளானாலும் ஆளு இவ அழுத்தமான ஆளு- மணப் பெண்ணை பகடி செய்யும் பாடல். இறுதி சரணத்தில் வரும் "முதல் முதலாக பார்க்கும் போது அச்சமாக இருக்கும், ஆனா விடியும் போது விளக்கில் எண்ண மிச்சமாக இருக்கும்." என்ற வரிகள் வெகுவாக ரசிக்கப்படவை.
     மேகமே மேகமே- வாணி ஜெயராமின் அற்புதமான பாடல்களில் ஒன்று. ஹிந்தி கஸல் இசையின் சுடப்பட்ட தமிழ் பிரதி இது என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இருப்பினும் தரமான நல்லிசை.
  பவுர்ணமி நேரம்- இதுவும் ஒரு பகடிப் பாடல்தான். பாடலின் இறுதிச் சரணம்  புத்தாண்டை வரவேற்பது போல அமைந்திருக்கும். தமிழின் மிக நீண்ட பல்லவி கொண்ட பாடல் இது என்று சொல்லப்படுகிறது. சற்று ஆராய்வோம்:

        பவுர்ணமி நேரம் 
        பாவை ஒருத்தி
        மின்னல் போல 
        முன்னால் போனாள் 
        பின்னல் கண்டு 
        பின்னால் சென்றேன் 
        பொண்ணு ஊருக்கு 
        புதுசோ என்றேன்   
        காலில்
        உள்ளது 
        புதுசு 
        என்றாள் 
        ஓ மேலே கேட்காதே!
 
    நாம் ஏறக்குறைய சங்கர்-கணேஷின் சிறப்பான பாடல்கள் பட்டியலின் இறுதிக்கு வந்துவிட்டோம். பல பாடல்களை நான் இங்கே குறிப்பிடவில்லை. ஆனால் கீழே இருக்கும் பாடல்கள் கண்டிப்பாக உங்கள் பார்வைக்கு உகந்தவை. They do deserve an honest listen.

கடலோடு நதிக்கென்ன கோபம்- அர்த்தங்கள் ஆயிரம். (இதை எண்ணும்  போதே சிலோன் வானொலி நினைவலைகளில் ஆனந்த தாண்டவம் ஆடுவதை உணர்கிறேன். மிகையின்றி சொல்லவேண்டுமானால் சங்கர்-கணேஷின் அபாரமான ஆனந்தங்களில்  ஒன்று. எஸ் பி பி யின் தாலாட்டும் குரலும், போதையூட்டும் அந்த ராக வளைவுகளும் நம்மை ஒரு உன்னதமான அமைதிக்கு அழைத்துச்  சென்று விடுகின்றன. )
சந்தன புன்னகை சிந்திய கன்னிகை- நாடோடி ராஜா. (திடு திடுக்கும் தாள நயத்துடன் ஒலிக்கும் இனிமையான ராக அழகுடன் வந்த மிக சிறப்பான  கானம்.  மிக மிக அரிதான பாடல். எப்போதோ சிலோன் வானொலியின் தயவில் இப்பாடலை ரசித்திருக்கிறேன். மீண்டும் கேட்கும் போதுதான் எத்தனை இன்பம் உண்டாகிறது!  )
அதி கலையில் பனி காற்றுகள் வீசிட- கல்யாண காலம். (அபூர்வமான பாடல். தேடித் தேடி இறுதியில் cool toad மூலம் இந்தப் பாடலை கண்டுபிடித்தேன்.)
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப்போவது-  நெஞ்சமெல்லாம் நீயே. (மற்றொரு கஸல் பாடலின் தமிழ் வடிவம். அதே சங்கர் கணேஷின் ஆஸ்தான பாடகி  வாணி ஜெயராமின் இனிமையான குரலில்.)
கண்ணோடு கண்ணும், எனை தேடும் மேகம், அலைஅலையாக -கண்ணோடு கண்.
குறிப்பாக கண்ணோடு கண் படத்தின்  பாடல்கள் நம் நெஞ்சத்தை தழுவும் வார்த்தைகளுக்குட்டபடாத மாயச்  சுவையை கொண்டவை. அலை அலையாக மிக சிறப்பாக இசை கோர்க்கப்பட்ட கானம். பாடலின் ராக அமைப்பும் மெட்டும் இசையின் மென்மையும் இதை கேட்கும் போதே நாம் எதோ ஒரு கடலலையின் மீது தவழ்வது போன்ற fantasy உணர்வை கொடுத்துவிடுகின்றன. மிகவும் அபாரமான வகையில் உணர்வின் இசையாக மீட்டப்பட்ட  இப்பாடல் கேட்பவர்களின் மனதில் ஆனந்த  அழகின் அலைகளை அழைத்துவந்துவிடுகிறது  . சங்கர்-கணேஷின்  பல பாடல்களை நீங்கள் கேட்டிருந்தாலும் அலை அலையாக பாடலை நீங்கள் கேட்கவில்லை என்றால் எங்கோ உங்கள் இசை  வட்டம் முற்றுப்பெறவில்லை என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். இது எப்படியென்றால் இளைய நிலா பொழிகிறதே பாடலைக் கேட்காமல் எப்படி ஒருவரின் இளையராஜா அனுபவம் துண்டிக்கப்பட்டு நிற்குமோ அதைப் போன்றது.   இந்தப் பாடலை நான் சங்கர் கணேஷின் முத்திரைப்  பாடலான    "நா உன்ன நெனச்சேன்"  பாடலோடு ஒப்பிட்டு, ஒரு  தராசின் இரண்டு  தட்டுகளிலும் இவற்றை வைக்கிறேன்.   The verdict is both are etherially beautiful. No more words to describe.


ஒரு காதல் தேவதை- இதய தாமரை. (இளையராஜாவின் பாடல் போலேவே தோன்றும் இசை. ஆனால் அவர் பாடல்களில் இல்லாத அளவுக்கு  மிக நவீனமாக இசைக்கப்படுகிறது  கிடார். இந்தப் பாடலை நான் அவ்வளவாக விரும்புவதில்லை. ஒருவேளை அவர்களின் முத்திரை இதில் சமரசம் செய்துகொள்ளப்பட்டதாக நான் எண்ணுவது இதற்கு  ஒரு காரணமாக இருக்கலாம். சங்கர் கணேஷ்  இசை அத்தியாயத்தின் இறுதிப்  பக்கம் இந்தப் படம்தான்.   இதன் பின் அவர்களின் பெயர் எங்கும் தோன்றவில்லை.)

  பெரிய பிம்பங்களும், அலங்கார விளக்குகளும், ஆடம்பரமான அணிவகுப்புகளும்  நம் கவனத்தை உடனே ஈர்ப்பது இயல்பானதே. ஆனால்  அதே வேளையில் வானில் சீராக பறந்து செல்லும் பறவைகளையும், மழை நேரத்தில் தங்கள் இருப்பிடங்களை மாற்றிக்கொள்ளும் எறும்புகளின் அழகான அணிவரிசையையும், சூட்டப்படாமல் செடிகளிலேயே தயங்கி நிற்கும் வசீகரமான மலர்களையும் கொஞ்சம் ரசிப்பதில் தவறில்லை. மண்வீடோ மாளிகையோ  எழுந்ததோ விழுந்ததோ எதுவாக  இருப்பினும்  ரசிப்பதற்கு அழகு என்ற ஒன்று  மட்டுமே நம் ரசனையின் அடிப்படை கோட்பாடாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.

     சங்கர்-கணேஷ் பற்றி இணையத்தில் அதிகம் எழுதப்படவில்லை என்பது ஒரு வருத்தம் தரும் நிஜம். நான் தேடியவரை 110 பதில்களுடன் ஒரு forum இவர்களைப் பற்றி உள்ளது. பின்னர் ஓசை..ஓயாத அலைகள்  என்ற தளத்தில் நண்பர் ஓசை (அவர் பெயர் தெரியவில்லை.) சங்கர் கணேஷ் பற்றி இரண்டு சிறப்பான பதிவுகள் எழுதியுள்ளார். இதில் கவனிக்கத்தக்க சிறப்பு அல்லது வியப்பு  என்னவென்றால் இவர் ஒரு தீவிர இளையராஜா ரசிகர். நல்லிசையின் மீது கொண்டிருக்கும் காதல் மட்டுமே சிலருக்கு தங்களின் சொந்த அபிமானங்களையும்  தாண்டி வேறுபட்ட விருப்பங்களை வளர்க்கும். இவர் அப்படிப்பட்டவர் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தே இல்லை. கீழே அவரது தளத்தின் சுட்டி உள்ளது.

          http://oosssai.blogspot.com/2013/09/blog-post_20.html

   சங்கர்-கணேஷின் இசையை இப்போது கேட்கும் போது இத்தனை அருமையான, கலை ரசனைக்குட்பட்ட ( சில சமயங்களில் ஆர்ப்பாட்டமான ) பாடல்களைக் கொடுத்தவர்களை நாம் எத்தனை எளிதில்  மறந்துவிட்டோம் என்ற குற்ற உணர்ச்சி  ஒரு  கூரான கத்தி போல நெஞ்சில் பாய்கிறது. இந்தப் பொது புத்தியின் பின்னாலிருக்கும் மடத்தனமான ஆட்டுமந்தை அணுகுமுறையை விட்டு நாம்  அகலவேண்டும் என்பதே என் விருப்பம். நமது குறுகிய இந்தப் பார்வை எத்தனை இசை இன்பங்களை நம்மிடமிருந்து அந்நியப்படுத்தியிருக்கிறது என்ற உண்மை தரும் குற்ற உணர்ச்சி வலி மிகுந்தது. இந்தப் பதிவை படித்தபின் உங்களுக்கு நாடகத்தனமாக சங்கர்-கணேஷின் மீது ஈர்ப்பு வந்துவிடும் என்றோ அவர்களின் பாடல்களை நீங்கள் உடனே கேட்க ஆரம்பித்துவிடுவீர்கள் என்றோ நான்  எண்ணவில்லை. அதற்க்கான ஆயத்தங்களும் வாய்ப்புகளும்  வெகு குறைவே. ஆனாலும் சங்கர் -கணேஷ் பாடல்களை நீங்கள் கேட்க வேண்டும் என்ற  எண்ணம் ஒரு   சிறிய பொறியாக உங்களுக்குத்    தோன்றினாலோ   அல்லது ஒருவேளை எப்போதோ நீங்கள்  கேட்டிருந்து இப்போது துறந்துவிட்ட அந்தப் பாடல்களைக்  குறித்து மனதில் மவுனமாக அசை போட்டாலோ அதுவே இந்தப் பதிவின் நோக்கத்தை பூர்த்தியடையச் செய்துவிடுகிறது.




அடுத்து: இசை விரும்பிகள் XVI -- இசைச்  சாரல்கள்.

70 comments:

  1. அருமை இந்தப் படைப்பு இனிமையான என் பழைய சந்தோசமான நாட்களுக்கு அழைத்துச் சென்றது.
    நெடுநாட்களுக்குப் பிறகு பறப்பது போன்ற உணர்வு . நன்றி

    ReplyDelete
  2. ஒவ்வொரு பாடலைப் படிக்கும் போது, பழைய இனிய நினைவுகள் ஞாபகம் வந்து பரவசப்படுத்தியது...

    ReplyDelete
  3. சேகர்,
    முதல் ஆளாக வந்து கருத்தை கூறியதற்கு நன்றி. நெடுநாட்களுக்குப் பின் பறப்பதைப் போன்ற உணர்வு... அபாரம். நீங்கள் அப்படி எண்ணுவது எனக்கும் மகிழ்ச்சியே.

    ReplyDelete
  4. வாருங்கள் டி டி,
    70 களில் வந்த பெரும்பாலான பாடல்கள் நம்மை பரவசத்தில் ஆழ்த்துபவைத்தான். வெறும் நாஸ்டால்ஜிக் உணர்வுகளைத் தாண்டி அதில் இருக்கும் ஜீவனை நாம் அறிவது இன்னும் பல ஆழங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும். உங்களின் கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  5. யாரும் எனக்கு இசையை கற்பிக்க முடியாது.
    அப்படி யாரவது நினைத்தால் அது
    அவர்களுக்கு அன்றைய போலியான மகிழ்ச்சி .

    ReplyDelete
  6. நான் எழுதியது தான் கருத்து அதை எல்லோரும் பார்த்துத் தான் தீரவேண்டும்.
    அது அவர்களுடைய தலைவிதி.

    இதெல்லாம் பத்திரிக்கையில் வரும் தத்துவங்கள் .

    எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.

    ReplyDelete
  7. காரிகன்,
    அமர்க்களம். பிச்சு எடுத்துட்டீங்க. வெல் டன். நானும் உங்கள் லிஸ்டில் உள்ளத்தில் சில பாடல் கேட்டுருக்கேன். குறிப்பா எனை தேடும் மேகம், அலை அலையாக, நா உன்ன நெனச்சேன் போன்றவை அதிகம் பிடித்தவை.

    ReplyDelete
  8. படம் -குமரிப்பெண்ணின் உள்ளத்திலே
    இசை -சங்கர்-கணேஷ்
    பாடியவர்கள் - ஜெயச்சந்திரன் -ஜானகி
    மதுக் கடலோ மரகத ரதமோ...மதன் விடும் கணையோ..

    ReplyDelete
  9. இந்தக் கட்டுரை ஒரு எதிர்பாராத இனிய அனுபவம் என்றுதான் சொல்லவேண்டும். உண்மையில் சங்கர் கணேஷைப் பற்றி இத்தனை விவரங்களுடனும், இவ்வளவு விரிவான பார்வையுடனும் இந்தத் தொடரில் இப்படியொரு பதிவு வரும் என்று நான் நினைக்கவில்லை.

    ஆனால் இதுபோன்றதொரு விரிவான அலசலுக்கும் ஆலாபனைக்குமான பாடல்களை அவர்கள் தந்திருக்கிறார்கள்.

    சங்கர் கணேஷ் இருவரும் சேர்ந்து 1053 படங்களுக்குமேல் இசையமைத்திருக்கிறார்கள் என்ற செய்தியே பலருக்குத் தூக்கத்தைக் கெடுத்த செய்தியாகத்தான் இருக்கப்போகிறது. ஏனெனில் அவர்கள் பார்வையில் ஒரே ஒருவர்தான் ஆயிரம் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அல்லது அதற்கான திறமை அவர் ஒருவரிடம்தான் உள்ளது என்று இறுமாந்திருக்கும்போது நீங்கள் பாட்டுக்கு சங்கர்கணேஷை அதைவிட அதிகப் படங்களுக்கு இசையமைத்தவர்கள் என்று கொண்டுவந்து நிறுத்தினால் எப்படி?

    இந்த 'அதிகபட்ச எண்ணிக்கை'தான் எங்கோ சென்றிருக்கவேண்டிய அவர்களின் இசையைக் கொஞ்சம் கீழே பிடித்து இறக்கிவிட்டது என்றும் சொல்லலாம்.

    கொஞ்சமும் தடுமாறாமல் சென்றுகொண்டிருந்த அவர்களின் இசை ராஜாங்கம் சட்டென்று கீழே இறங்கிவிட்டதற்கு அவர்களின் இசை காரணமல்ல.
    ஒன்று திரு சங்கரின் மரணம். இரண்டாவது ஏதோ ஒரு விவகாரத்தில் சிக்கிக்கொண்டு கைகளில் விரல்களை இழந்த கணேஷின் தவறான செயல்பாடுகள்.
    மற்றபடி உங்களின் மதிப்பீடுகளும் அலசல்களும் சங்கர்கணேஷ் மீதான ரசிகர்களின் 'சாதாரணப்பார்வையை' அதிரடியாக மாற்றிப்போடுகிறது என்றுதான் சொல்லவேண்டும். போகிறபோக்கில் கேட்டுவிட்டுப் புறந்தள்ளிவிட்டுப் போய்விடக்கூடிய இசையமைப்பாளர்கள் இல்லை இவர்கள் என்ற உணர்வை அழுத்தந் திருத்தமாக நிறுவியிருக்கிறீர்கள்.
    வண்டிச்சக்கரம் படத்தில் ஒரு குடிகாரப்பாடலைப் போட்டிருப்பார்கள். சுருளிராஜன் குரலிலெல்லாம் அபாரமாகப் போடப்பட்ட பாடல். அந்தப் பாடல்தான் பின்னாளில் கோழிகூவுது படத்தில் 'அண்ணே அண்ணே சிப்பாயண்ணே' பாடல் போடுவதற்கு இளையராஜாவுக்குத் தூண்டுதலாக அமைந்த பாடல் அது.
    என்னதான் கசலின் தழுவலாக இருந்தபோதிலும் இன்றைக்கும் பலரையும் கரைத்துப்போடும் பாடல் 'மேகமே மேகமே'. அதுபோலவே வாணிஜெயராமின் வசீகரிக்கும் குரலில் வந்த 'ஆலமரத்துக் கிளி' பாடலும் ஒரு அற்புதம்.

    ஐந்துபேரில் ஒருவராக இவர்கள் இசையமைத்த 'கண்ணில் தெரியும் கதைகள்' நான் பணியாற்றிய படம். (திரைக்கதை வசனம் எழுதித்தந்து அதன்பின்னர் மற்றொரு எழுத்தாளர் உள்நுழைந்து என அது வேறு கதை) ஐந்து பாடல்களில் இவர்களின் 'நான் ஒன்ன நினைச்சேன்', பாடலும் இளையராஜாவின் 'நானொரு பொன்னோவியம் கண்டேன் எதிரே' பாடலும் அருமையான பாடல்கள். இளையராஜாவின் பாடல் பதிவாகி முடிந்ததும் "இந்தப் படத்தில் இந்தப் பாடல்தான் மிகப்பெரிய வெற்றியைத் தரும்" என்று நான் அபிப்பிராயப்பட்டேன். பிறகு சங்கர்கணேஷின் 'நான் ஒன்ன நினச்சேன்' பாடல் முடிந்தபிறகு திரைத்துறையின் ஒரு பெரிய புள்ளி சொன்னார். "இந்த ஐந்து பாடல்களில் இளையராஜாவின் பாடலைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு சங்கர்கணேஷின் இந்தப் பாடல்தான் நிற்கப்போகிறது"
    அப்படியே நடந்தது என்பது ஒரு பெரிய ஆச்சரியம்.

    தமிழ்திரை இசையைப் பற்றிப் பேசும்போது காரிகன் என்ன சொல்லியிருக்கிறார் என்பதையும் பார்த்துக்கொண்டுதான் பேச முடியும் என்ற அளவுக்கு உங்கள் ஆளுமையை மிக அழகாகச் செலுத்தியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  10. அமுதவன் சார்

    //சங்கர் கணேஷ் இருவரும் சேர்ந்து 1053 படங்களுக்குமேல் இசையமைத்திருக்கிறார்கள் என்ற செய்தியே பலருக்குத் தூக்கத்தைக் கெடுத்த செய்தியாகத்தான் இருக்கப்போகிறது. ஏனெனில் அவர்கள் பார்வையில் ஒரே ஒருவர்தான் ஆயிரம் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அல்லது அதற்கான திறமை அவர் ஒருவரிடம்தான் உள்ளது என்று இறுமாந்திருக்கும்போது நீங்கள் பாட்டுக்கு சங்கர்கணேஷை அதைவிட அதிகப் படங்களுக்கு இசையமைத்தவர்கள் என்று கொண்டுவந்து நிறுத்தினால் எப்படி?//

    நீங்கள் யாரை குறி வைத்து எழுதி இருக்கிறீர்கள் என்று புரிகிறது . எம்.எஸ்.வி அவர்கள் 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்தவர் என்ற ஹிஸ்ட்ரி ( ஹிஸ்டரின்னா வரலாறுதானே!) எங்களுக்கும் தெரியும். அதற்காக கின்னஸ் சாதனையில் பதிவானவர் என்பதும் தெரியும் . சங்கர் கணேஷ் 1000 படங்களுக்கு மேல் இசைத்தவர்கள் என்பது புது செய்தி . ஆனால் இன்னொரு செய்தி இளையராஜா 1000 படங்களை தொட்டுவிட்டார் என்பதும்!அவர் இன்னும் ஓடும் குதிரையே!

    ReplyDelete
  11. காரிகன்

    நீங்கள் எழுதி இருக்கும் சங்கர் கணேஷ் பாடல்களில் பாதி பாடல்கள் அழகானவை . மீதி சொதப்பல்தான்! வணிக அளவில் மட்டும் அல்ல ... ஜனங்களின் நெஞ்சங்களிலும் வெற்றி பெறாதவை . ஹிட் ஆகாமல் 1000 படங்கள் இசை அமைத்து என்ன பிரயோஜனம் !?

    /// இவர்களது மேற்கத்திய இசை பாணி எம் எஸ் வி, இளையராஜா போன்றவர்களின் பாதையிலிருந்து விலகியிருப்பதை சில பாடல்களின் பல்லவி மற்றும் இடையிசையிலிருந்து நாம் தெளிவாக காண முடியும். சொல்லப்போனால் இளையராஜாவின் (மேற்கத்திய) பாணியை விட சங்கர்-கணேஷின் இசையில் நாம் இன்னும் அதிகமாகவே மேற்கத்திய இசையின் தாக்கத்தையும் ஆளுமையையும் உணரலாம். (இளையராஜாவை விட) சங்கர்-கணேஷின் நவீன இசை மேற்கத்திய இசைக்கு வெகு அருகிலும் அதேவேளையில் அந்த அந்நிய வாசம் தூக்கலாக தெரியாத வகையிலும் மிக சிறப்பான விதத்தில் சமரசம் செய்யப்பட்டிருக்கும். syncopated drum beat இவர்களின் இசையில் ஆர்ப்பாட்டமாக துடித்துக்கொண்டு தாளமிடும். (இவ்வகையான syncopated பீட் இளையராஜாவின் இசையில் வெகு அபூர்வமாகவே கேட்கக் கிடைக்கும். (மன்றம் வந்த தென்றலுக்கு இதற்கொரு உதாரணம்.) உலகின் பிரபாலமான drum beat என்று சொல்லப்படும் ஆமென் பிரேக் (Amen Break) ட்ரம்ஸ் இசையை அதிகமாக இவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். மேலும் மயக்கம் தரும் கிடார் கார்ட்ஸ் மற்றும் guitar riffs எனப்படும் lead கிடாரின் நீட்டிக்கப்பட்ட அதிர்வு இவர்களிசையின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம். இளையராஜாவைக் காட்டிலும் சங்கர்-கணேஷ் மேற்கத்திய கலப்பிசையை வெகு அனாசயமாக, அபாரமாக, அதே சமயத்தில் நமக்கு தொல்லை தராத, அலுப்பூட்டும் பாமரத்தனமான வெற்று காலி டப்பா ஓசைகளாக இல்லாமல் இனிமையான தாலாட்டாக வழங்கியிருக்கிறார்கள்///

    மேலே உங்களால் சொல்லப்பட்ட இந்த விமர்சனம் நல்ல நகைசுவை ! யாரும் இதுவரை சொல்லாத பாமரத்தனமான செய்தி . எப்படி காரிகன் இந்த மாதிரியான கற்பனைகள் எல்லாம் உங்களுக்கு தோன்றுகிறது ?
    ஆடு , மயில், நாய் நடந்து வந்தால் புதுமையான பின்னணி இசை கொடுப்பார் என்ற அளவில் அவர்கள் பிரபலம் . சில பாடல்கள் ஹிட் கொடுத்திருக்கிறார்கள். அவ்வளவே! மற்றபடி எந்த தனித்துவமும் இல்லாத இசை அமைப்பாளர்கள் . ட்ரம்ஸ் இசையில் புதுமை செய்தவர்கள் என்று உங்களை தவிர யாரும் பேசி நான் கேட்டதேயில்லை . நாலு பேரிடம் விசாரித்து எழுதுங்கள் . இசைக் கருவிகளை கூர்ந்து கேட்க வைத்தவர் இளையராஜா . அதில் மாற்று கருத்தே இல்லை .

    இசை விரும்பிகள் என்ற தலைப்பிற்கு பதிலாக இளையராஜாவை வெறுக்கும் இசை விரும்பிகள் என்று மாற்றிவிட்டு பதிவை தொடருங்கள் . அதுவே பொருத்தமாயிருக்கும்

    ReplyDelete
    Replies
    1. ரிம்போச்சே12 April 2014 at 04:58

      //இசை விரும்பிகள் என்ற தலைப்பிற்கு பதிலாக இளையராஜாவை வெறுக்கும் இசை விரும்பிகள் என்று மாற்றிவிட்டு பதிவை தொடருங்கள் . அதுவே பொருத்தமாயிருக்கும் //

      ப்ளாகரும் லைக் பொத்தானைக் கொடுத்திருக்கலாம்.

      Delete
  12. அனானிக்கு,
    நன்றி. இன்னும் பல அருமையான பாடல்கள் இவர்கள் இசையில் இருக்கின்றன. அவைகளையும் கேட்டால் சில உண்மைகளை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. வாருங்கள் அமுதவன்,
    உங்கள் கருத்து என்னவாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். நன்றி. கணேஷ் எதோ "பெண்"விஷயத்தில் அதிகம் ஈடுபட்டதால் அவருக்கு இதுபோல ஆயிற்று என்று என் நண்பரொருவர் சொல்லக்கேட்டிருக்கிறேன். எவ்வளவு தூரம் உண்மை அதில் இருக்கிறது என்பது தெரியாது.

    நியாயமாக சங்கர்-கணேஷ் பாராட்டபடவேண்டியவர்களே. இளையராஜாவின் வணிக வெற்றியின் பெரிய அலையில் இவர்களது அமைதியான கானங்கள் காணமல் போய்விட்டன என்பது ஒரு புறம் இருக்க பெரிய பேனர் படங்கள் இவர்களுக்கு கிடைக்கவில்லை என்ற தொடர்ச்சியான சவால்கள் இவர்களை ஒதுக்கிவிட்டன என்று சொல்லலாம். ஆனாலும் சிறப்பான பாடல்களைத் தருவதில் இவர்கள் காட்டிய முனைப்பு என்றும் குறைந்ததேயில்லை.

    கண்ணில் தெரியும் கதைகள் படத்தில் நீங்கள் சம்பந்தப்பட்டிருப்பது இதுவரை பலருக்கு தெரியாத தகவல். நீங்கள் அவ்வப்போது இதுபோல சில சங்கதிகளை தவணை முறையில் வெளியிட்டு சற்று படிப்பவர்களை ஆச்சர்யப்பட வைக்கிறீர்கள். இன்னும் என்னென்ன இருக்கிறது என்று "போகப் போகத் தெரியும்" என்று நினைக்கிறேன்.

    (தமிழ்திரை இசையைப் பற்றிப் பேசும்போது காரிகன் என்ன சொல்லியிருக்கிறார் என்பதையும் பார்த்துக்கொண்டுதான் பேச முடியும் என்ற அளவுக்கு உங்கள் ஆளுமையை மிக அழகாகச் செலுத்தியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.)

    இது கொஞ்சம் அதிகமான அடர்த்தியான பாராட்டு. இதற்கு நான் உகந்தவனில்லை என்பது எனது தாழ்மையான கருத்து. மீண்டும் எனது நன்றி.

    ReplyDelete
  14. ஹலோ சால்ஸ்,
    சங்கர்-கணேஷ் சொதப்பிய பாடல்கள் நிறையவே உண்டு. அவற்றை நான் குறிப்பிடவில்லை. அதுசரி, பத்தாயிரம் பாடல்களைப் படைத்திருக்கும் இளையராஜாவின் பாடல்கள் எல்லாமே ஒளிரும் வைரக்கற்களா? அவர் எத்தனை சொதப்பல்கள் கொடுத்திருக்கிறார் என்று கணக்குப் பார்த்தால் நீங்கள் எங்காவது ஓடி ஒளிய வேண்டியதிருக்கும். எப்படி வசதி?

    இளையராஜா வாத்திய இசையில் எதையாவது "வித்தியசாசமாக" செய்தால் அதை புரட்சி என்று குதூகலிக்கும் உங்கள் சுதந்திரத்தை நான் எங்காவது கேள்வி கேட்டிருக்கிறேனா? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி. சங்கர்-கணேஷின் இசை மேற்கத்திய இசையை முழுவதும் உள்வாங்கிக்கொண்டு முடிந்தவரை பாமரத்தனமாகவும் (உதாரணம் அக்னி நட்சத்திரம், அஞ்சலி படப் பாடல்கள் ) அந்நியமாகவும் (உதாரணம் ஹாரிஸ் ஜெயராஜின் முக்கால்வாசிப் பாடல்கள்) இல்லாமல் ஒலிக்கும். இளையராஜாவைத் தவிர வேறொருவர் சிறப்பாக வாத்திய இசை பங்களிப்பு செய்யவே மாட்டாரா? இதென்ன சர்வாதிகாரத்தனமான அகங்கார சிந்தனை?

    (ஹல்லோ காரிகன் சார்பு நிலை இல்லாதது போல் காட்டிக் கொண்டு விஸ்வநாதன் ராமமூர்த்தி தவிர மற்றவர் இசை பற்றி அதிகம் விமர்சிக்காதது ஒரு குறையே!
    சங்கர் கணேஷ் அவர்கள் இசை அமைத்த 'இதய வீணை ', 'நான் ஏன் பிறந்தேன் ' படங்களில் உள்ள பாடல்கள் மெல்லிசை மன்னர்களின் பாடல்களுக்கு கொஞ்சமும் குறைந்ததில்லை .
    v. குமார் அவர்கள் கொடுத்த அற்புதமான பாடல்களும் உங்களால் வசதியாக மறக்கடிக்கப் பட்டிருக்கின்றன. அவரும் இரட்டையர்களின் இசைக்கு சளைத்தவரில்லை .)

    இது நீங்கள் என் "நிற்காத மழை" பதிவுக்கு எழுதிய பின்னூட்டம்தான். அங்கே அப்படி வி.குமாரை புகழ்ந்த நீங்கள் என் போன பதிவில் அவரை சகட்டுமேனிக்கு வசை பாடியது எனக்கு வியப்பாக இருந்தது. பொறுத்திருந்தேன். தற்போது சங்கர்-கணேஷ் பற்றியும் அதே முறையில் உளறுவதைப் பார்க்கும்போது வேறு வழியில்லை என்றே உங்கள் பழைய கருத்தினை அச்சேற்றுகிறேன். ஒன்று மட்டும் புரிகிறது. அது நீங்கள் இரட்டை நாக்கு கொண்டவர் என்பது. உங்கள் மறுபெயர் சஞ்சய் ராமசாமியா?

    ReplyDelete

  15. "ஆடு , மயில், நாய் நடந்து வந்தால் புதுமையான பின்னணி இசை கொடுப்பார் என்ற அளவில் அவர்கள் பிரபலம் ."
    திரு சார்லஸ்,
    இளயராஜா கழுதைக்கு இசை மட்டுமா பாடலே கொடுத்திருக்கிறாரே? அதை மட்டும் மறந்தால் எப்படி?

    ReplyDelete
    Replies
    1. அருமை! சரியான தாக்குதால்

      Delete
  16. காரிகன்,
    சிறப்பான பதிவு. பாராட்டுக்கள். வர வர உங்கள் எழுத்தின் வசீகரம் கூடிக்கொண்டே போவதுபோல தெரிகிறது. "ஒரு மழை நேரத்து மண் வாசம் போல மனதை ஆக்கிரமித்துக்கொண்டது."
    "மென்மையான மேற்கத்திய இசை வடிவங்களையும், முரண்படாத விதத்தில் அவைகள் தமிழை தழுவிக்கொண்ட ஆச்சரியங்களையும் அறியலாம்."
    "கேட்ட ஒரே கணத்தில் நெஞ்சத்தை நொறுக்கும் சக்தி வாய்ந்த இசையின் புரிபடாத மர்மங்களின் மறு வடிவம்."
    எங்கிருந்து இப்படி வார்த்தைகளை பிடிக்கிறீர்கள்?
    நல்ல பதிவு. இளையராஜா மட்டுமே சிறந்தவர் என்று எண்ணும் சிலருக்கு உங்கள் எழுத்து பிடிக்காது என்பதில் ஆச்சர்யம் இல்லை. தொடருங்கள். அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  17. திரு அமுதவன் எழுதிய நிதர்சனமான வரிகளை நினைவுக் கூற விறும்புகிறேன் .

    "வானொலியிலும் லவுட்ஸ்பீக்கர்களிலும் மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்த பாடல்கள் இளையராஜாக் காலத்தில் டேப்ரிகார்டர் வந்ததால் இன்னமும் கொஞ்சம் அதிகமாகக் கேட்கக்கிடைத்தன.இதற்கு டேப்ரிகார்டர்கள்தாம் காரணமே தவிர இளையராஜா அல்ல"

    அனேக நபர்களின் கைகளுக்கு இசைத்தட்டுகளாகக் கிடைக்காத காரணத்தால் பல மேதைகளின் நினைவுகள் மனித மனங்களில் நிலையாக நிற்காமல் போய்விட்டது
    மேலும் பல பாடல்கள் யார் இசைத்தது என்று தெரியாத சூழ்நிலையில் இளையராஜாவின் இசை என்று ஒரு பொய்யான தகவல்களைப் பரப்பி உண்மையை மறைக்க முயற்சிச் செய்கிறார்கள்.

    ReplyDelete
  18. ரிம்போச்சே12 April 2014 at 04:40

    காரிகன்,

    ஏற்கனவே அறிமுகமான பாடல்களுடன் மேலும் பல பாடல்களை வழக்கம்போல் தொகுத்திருக்கிறீர்கள். நன்றி. 'எங்க சின்ன ராசா' வை ஒதுக்கி வைத்து விட்டீர்களே. அது ஒரு முழுப் பட ஆல்பமாக வெற்றி பெற்ற தொகுப்பு.

    //கணேஷ் எதோ "பெண்"விஷயத்தில் அதிகம் ஈடுபட்டதால் அவருக்கு இதுபோல ஆயிற்று என்று என் நண்பரொருவர் சொல்லக்கேட்டிருக்கிறேன். எவ்வளவு தூரம் உண்மை அதில் இருக்கிறது என்பது தெரியாது.//

    அவருக்குத் தபாலில் வெடிகுண்டு அனுப்பப்பட்டு அதை அவர் திறக்கும்போது வெடித்து அவரின் கைகள் பாதிப்புக்குள்ளானது. அதனால்தான் எப்போதும் கையுறை அணிந்துள்ளார்.

    ReplyDelete
  19. காரிகன்,
    சிலர் தங்களுக்குப் பிடித்தவர்களை மட்டும் ரொம்பவும் உயர்வாக சொல்வார்கள். அவர்கள் வேறு எதையும் பாராட்டுவது கிடையாது. ஆனால் உங்கள் பதிவுகளோ நம்மால் மறக்கடிப்பட்டவர்களை அறிமுகம் செய்கிறது.வி குமார்,ஜி கே வெங்கடேஷ் , சங்கர்- கணேஷ் என்று நீங்கள் மிக அரிதான பழைய பாடல்களை சுட்டிக்காட்டுகிறீர்கள். அதற்கு நன்றி. இதுபோல வேறு யாரும் செய்வது இல்லை. இசை என்றால் அது பலவகைப்பட்டது. உங்களின் பதிவுகள் வெகு சிறப்பாக வந்திருக்கின்றன. இனியும் தொடர வேண்டும் என்று ஆசைப்படும்

    ஜி.கோபால்

    ReplyDelete
  20. வாருங்கள் அனானி,
    திருவாளர் சால்ஸ் அள்ளிவிடுவதில் மன்னர். ஆட்டுக்கார அலமேலு, வெள்ளிக்கிழமை விரதம், தாய் மீது சத்தியம், தாயில்லாமல் நானில்லை படங்களுக்கு சங்கர் கணேஷ் இசை அமைத்தைத்தான் அப்படி நாய் குதிரை மயில் என்று வர்ணித்துள்ளார். ஆனால் கழுதைக்கு பாடல் கொடுத்த புண்ணியத்தை அவர்கள் செய்யவில்லை. சரியாக சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

    ReplyDelete
  21. பரத்,
    வருகைக்கு நன்றி. பதிவுகளை வெளியிட்ட பின் அவற்றைப் படித்துப் பார்க்கும்போது இன்னும் சில திருத்தங்கள் செய்திருக்கலாமோ என்று தோன்றும் எனக்கு. என் பிழைகள் எனக்கு நன்றாக தென்படுவதால் சில சமயங்களில் குற்ற உணர்ச்சி கூட தோன்றுவதுண்டு. உங்களின் பாராட்டுக்கு நன்றி.

    (இளையராஜா மட்டுமே சிறந்தவர் என்று எண்ணும் சிலருக்கு உங்கள் எழுத்து பிடிக்காது என்பதில் ஆச்சர்யம் இல்லை. )

    அது தெரிந்ததுதானே. அவர்களின் இசை இருளைப் போக்கும் வெளிச்சத்தின் ஒரு சிறிய பொறியாக இருந்துவிட்டுப் போவோமே?

    ReplyDelete
    Replies
    1. காரிகன் நீங்கள் சங்கர் - கணேஷின் பெருமைகளையும், அவர்களின் இனிமையான இசையை பற்றியும் எழுதுவதில் யாருக்கும் எந்த இடைஞ்சலும் இல்லை. சங்கர் - கணேஷ் பற்றிய புதிய சங்கதிகளை அறிந்து கொள்ள எனக்கும் ஆர்வம் தான். ஆயிரம் படங்களுக்கு மேல் அவர்கள் இசை அமைத்து இருப்பது எனக்கு இது வரை தெரியாத செய்தி. இதெல்லாம் சரிதான்.
      ஆனால் உங்கள் பதிவை நீங்களே இன்னொரு முறை வாசித்து பாருங்கள்... இளையராஜாவின் மேல் உங்களுக்கு இருக்கும் வன்மம் உங்களை அறியாமல் வெளிப்பட்டு இருக்கும். அது தேவை இல்லாதது. மற்றபடி சங்கர் - கணேஷின் பல அற்புதமான பாடல்கள் பற்றிய நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

      Delete
  22. சேகர்,
    அமுதவன் கூறியது ஒருவிதத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தே.

    தொழிநுட்பம் அடுத்த கட்டத்திற்கு நகரும் போது அது வழங்கும் சலுகைகள் பல சமயங்களில் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தி விடுவது இயற்கையே. பலருக்கு இன்னும் இளையராஜாவைத் தாண்டிய ஒரு ஆழமான இசைச் சிந்தனை வளரவில்லை என்பதை காணும்போது உங்கள் குற்றச்சாட்டை கற்பனை என்று ஒதுக்கிவிடமுடியாது.

    ReplyDelete
  23. வாருங்கள் ரிம்போச்சே,
    எந்தவித உள்குத்தும் இல்லாமல் நீங்கள் எழுதியிருக்கும் ஒரு அரிய பின்னூட்டம் இது என்று நினைக்கிறேன். நன்றி. எங்க சின்ன ராசா படத்தின் ஒரு பாடலைக் குறிப்பிட்டுள்ளேன். அதில் சங்கர்-கணேஷின் இனிமை சற்று தொலைந்துபோயிருந்ததைப் போல ஒரு தோற்றம் எனக்கு உண்டு. சங்கர்-கணேஷ்,இளையராஜா, ரஹ்மான் போன்ற பல இசை அமைப்பாளர்களின் படங்களில் பணியாற்றிய ஒரு நண்பர் மூலம் அந்த தபால் வெடிகுண்டு தகவலை நான் மிக சமீபத்தில்தான் அறிந்தேன்.உங்கள் பதில் அதை உறுதி செய்திருக்கிறது.
    வழக்கம் போல இளையராஜா பற்றி எதுவும் ஆலாபனை செய்யாமல் இருந்ததற்கு இன்னொரு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ரிம்போச்சே13 April 2014 at 19:42

      அதுவும் வரும், இதுவும் வரும். நான் மற்றவர்களின் இசையைக் கேட்டே இருக்கமாட்டேன் என்று நீங்களாகவே ஏன் முன்முடிவு செய்கிறீர்கள்?

      Delete
    2. கண்டிப்பாக அப்படியல்ல. பலரின் இசையையும் கேட்பதே ஒரு நல்ல இசை ரசனையின் வெளிப்பாடு. அதை நீங்கள் செய்வது குறித்து மகிழ்ச்சியே. மற்றவர்களும் ஒருவிதத்தில் சிறந்தவர்களே என்ற ஆரோக்கியமான சிந்தனை வளர வேண்டும் என்ற ஆசை எனக்குண்டு.

      Delete
    3. ரிம்போச்சே4 May 2014 at 05:17

      //வழக்கம் போல இளையராஜா பற்றி எதுவும் ஆலாபனை செய்யாமல் இருந்ததற்கு இன்னொரு நன்றி.//

      என்ன செய்ய? நீங்கள் தனி ஆவர்த்தனம் வாசிக்கும்போது நானும் பதிலுக்கு வாசிக்க வேண்டியுள்ளது.

      Delete
  24. எனது வலைப்பூவுக்கு வருகை தந்ததற்கு நன்றி காரிகன் ! இதை குறிப்பிட்டு நான் தொடங்க காரணம் நீங்கள் என் வலைப்பூவில் கருத்து பதியாமல் இருந்திருந்தால் உங்களின் தளத்தை காணும் பாக்கியம் கிட்டியிருக்காது. முக்கியமாய் இந்த கட்டுரையை படிக்கும் வாய்ப்பு ! மிக விரிவாய், நுனுக்கமாய் எழுதபட்ட மிக உண்மையான கட்டுரை.

    நீங்கள் குறிப்பிடும் " குறுகிய பார்வை " நம் சமூகத்தின் பலவீனம் ! தவறான தனிமனித வழிபாட்டு கலாச்சாரத்தின் சாபம் ! எம்.ஜி.ஆர் சிவாஜியை முன்னிறுத்தி அந்த காலகட்டத்தின் மற்ற அருமையான நடிகர்களை மறந்துவிட்டோம். கண்ணதாசன் காலத்தின் ஒன்றிரண்டு கவிஞர்களை தவிர மற்ற யாரையும் தெரியாது ! இந்த உதாரணங்கள் சினிமாவுக்கு மட்டும் என்றாலும்
    சமூகத்தின் அனைத்து தளங்களிலும் ஆட்டுமந்தை கூட்டமாகவே இருக்கிறோம்.

    இளையராஜாவின் அலையில் சங்கர்-கனேஷின் முத்துக்கள் அடித்துசெல்லப்பட்டுவிட்டது மிகவும் வருத்தமானது.

    ReplyDelete
    Replies
    1. "இளையராஜாவின் அலையில் சங்கர்-கனேஷின் முத்துக்கள் அடித்துசெல்லப்பட்டுவிட்டது மிகவும் வருத்தமானது." - அதற்க்கு இளையராஜாவை குறை சொல்வது சரி அல்ல. இந்த கட்டுரை சங்கர்-கணேஷின் சாதனைகளை கூறியதற்கு சமமாக, இளையராஜாவை தூற்றியும் எழுதப்பட்டு உள்ளது.

      Delete
  25. வாருங்கள் ஜி.கோபால்,
    இதற்கு முன் நான் எழுதிய பகல் விண்மீன்கள், இப்போதைய திறக்காத ஜன்னல்கள் பிறகு அடுத்து வரும் இசைச் சாரல்கள் மூன்றும் நாம் கவனிக்கத் தவறிய இசை அமைப்பாளர்களையும் அவர்கள் படைத்த இசை இன்பங்களையும் குறித்து விவாதிப்பது. நாம் மிக அதிகமாக சிலரைப் புகழ்ந்துவிட்டோம். தகுதிகள் இல்லாத சங்கடங்கள் கூட இன்று மிக அருமையான பாடல் என்ற முத்திரையைப் பெற்றுவிட்டன.வேதனையே மிஞ்சுகிறது. ஆனால் உண்மையான வைரங்கள் நம் ஞாபக மண்ணில் புதைந்து போய்க்கிடக்கின்றன. கொஞ்சம் அவற்றையும் ஆராய்வோமே?

    உங்கள் பாராட்டுக்கு நன்றி. இசை பலவகைப்பட்டது என்ற எண்ணம் பலருக்கு இல்லை. இந்தக் கூட்டத்தினரைப் பற்றி திருந்தாத ஜென்மங்கள் என்ற தலைப்பில் ஒரு பதிவே எழுதலாம் போலிருக்கிறது.

    ReplyDelete
  26. வருகைக்கு நன்றி சாம்,

    (இதை குறிப்பிட்டு நான் தொடங்க காரணம் நீங்கள் என் வலைப்பூவில் கருத்து பதியாமல் இருந்திருந்தால் உங்களின் தளத்தை காணும் பாக்கியம் கிட்டியிருக்காது.)

    பாக்கியம் போன்ற வார்த்தைகள் கொஞ்சம் அதிகம் என்று நினைக்கிறேன். என் கட்டுரையை சரியான கோணத்தில் உள்வாங்கியிருக்கிறீர்கள். நன்றி. முடிந்தால் பழைய பதிவுகளையும் படிக்கவும்.(இசை உங்களின் விருப்பமான விஷயமாக இருந்தால்.)

    உங்கள் கருத்தில் இருக்கும் உண்மை பலரால் உணரப்படாதது.எம் ஜி ஆர்-சிவாஜி, கமல்-ரஜினி, என்ற தனி மனித வழிபாடே பல புனைவுகளுக்கும் பொய்களுக்கும் ஊற்றுக்கண். இதை நீங்கள் பலவீனம் என்று பார்கிறீர்கள். நான் இதை மடத்தனம் என்கிறேன். இதன் நீட்சியே இளையராஜாவே எல்லாம் என்ற கோஷம்.

    இந்தப் பதிவின் உண்மையான நோக்கத்தை புரிந்து கொண்ட சிலரில் நீங்களும் ஒருவர் என்பது மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றி. இளையராஜா ஒரு மிகப் பெரிய அலை என்பது தெரிந்ததே. அதற்காக எல்லா மரியாதைகளும் பெருமைகளும் அவருக்கு மட்டுமே செல்ல வேண்டும் என்று நினைப்பது ஒரு மாசு படிந்த சிந்தனை. சாதனைகள் செய்த பலருக்கு ஒரு பக்கத்தையாவது இசை என்ற புத்தகத்தில் நாம் ஒதுக்க வேண்டாமா?

    ReplyDelete
  27. நண்பரே,

    உங்களின் ஆழமாம கட்டுரை ஆரோக்யமான விவாதத்தையும் ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

    நீங்கள் கூறியது போல தனிமனித வழிப்பாடு மடத்தனம்தான். ஆனால் தமிழ் சமுதாயத்தை அந்த மடத்தனத்திலிருந்து விடுவிக்கும் கல்வியறிவை ( ஏட்டுக்கல்வியை நான் குறிப்பிடவில்லை ! ) யாரும் முன்னெடுக்கவில்லை என்பதால் அது நம் பலவீனமாகிவிட்டது. தமிழனின் இந்த பலவீனம் எப்படி அரசியல் ரீதியாக, தலைவர்களின் சுயலாபத்துக்காக, பயன்படுத்தபடுகிறது என எழுத தொடங்கினால் அதற்கு தனி கட்டுரை வேண்டும் !

    இளையராஜாவின் இசை திறமை விவாதத்திற்கு அப்பாற்ப்பட்டது என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் அவர் தன் இசை திறமையையும் தாண்டி, தனக்கென ஒரு குழுவை ஏற்படுத்திகொண்டு, தயாரிப்பு உட்பட சினிமாவின் பல தளங்களிலும் தன் பிடியை இறுக்கி, தன் காலகட்டத்தில் மற்ற இசையமைப்பாளர்களின் வெளிச்சத்தை வெளிப்படாமல் செய்தார் என்பது என் கருத்து.

    ReplyDelete
    Replies
    1. நானும் அதே கருத்தைத் தான் வழியுறுத்தி வருகிறேன் .

      Delete
  28. Dear Kaarigan,
    Wonderful write-up yet again. Thrilled to read as usual. Though I agree with you about your views on the richness of Sankar-Ganesh music, I feel they copied so much from others that they have lost their identity during their dusk.

    The Turltes' Happy Together,It Ain't Me are some of the songs I prefer to listen. Your hard labour behind every post stuns me. Keep going.

    ReplyDelete
  29. திரு.காரிகன்,
    தமிழ்த் திரை இசை என்ற பெருங்கடலில் இருந்து இன்னொரு முத்தைக் கண்டுபிடித்திருக்கிறீர்கள்! தங்களுடைய உழைப்புக்கும் ரசனைக்கும் பாராட்டுக்கள். சங்கர்-கணேஷ் என்ற subject, இவ்வளவு பெரியது என்பதே வியப்பை மேலும் அதிகமாக்கி இருக்கிறது. அவர்களின் சங்கீதம், அந்தக் கால இசையமைப்பாளர்கள் பலரையும் தழுவி இருந்ததினால்தான் அவர்களுக்குக் கிடைத்திருக்க வேண்டிய recognition கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன். வழக்கம்போலவே, நீங்கள் என்னவோ ‘அவரை’ மட்டம் தட்டவே இந்தப் பாடு பட்டிருக்கிறீர்கள் என்று கருதி நண்பர்களின் ஒருமுகக் கருத்துக்களைப் பற்றி கவலைப்படவேண்டாம். நல்லவற்றைப் பகுந்தறிந்து பாராட்டப் பலர் இருக்கிறார்கள் என்று மகிழுங்கள் - இன்னமும் பல முத்துக்களைக் அளித்து மகிழ்வியுங்கள்!

    ReplyDelete
  30. சாம்,
    மடத்தனம் என்று ஏக கோபத்தில் சொல்லவேண்டிய நிரப்பந்தம். வேறென்ன? மற்றபடி நீங்கள் சொல்வதுபோல இது ஒரு பலவீனமே. உங்கள் கருத்தோடு எனக்கு உடன்பாடு உண்டு.

    இளயராஜா என்னென்ன அலப்பரைகள் செய்தார் என்று தமிழகத்துக்கே தெரியும். 90 களின் ஆரம்பத்தில் இவரை விட்டால் வேறு ஆள் இல்லை என்பதால் இவர் இசையை பலர் சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது. அவர் கொடுத்த பேட்டிகள், அவர் பேசிய "அடக்கமான" பேச்சுக்கள், மற்ற இசை அமைப்பாளர்களை அவர் "பாராட்டும்" "தாராள" குணம் எல்லாமே வெகு பிரசத்தி பெற்றவை. இவைகளைத் தாண்டி இன்னும் பல "ஆக்கப்பூர்வமான" வேலைகளிலும் அவர் ஈடுபட்டிருந்தார் என்பது எனக்கு கொஞ்சமே தெரியும். அவரது இசையில் தென்படும் அலுப்பூட்டும் பாணி தலைகாட்டத் துவங்கியது 80களின் இறுதியில் என்று நினைக்கிறேன். ரஹ்மான் வரும்வரை அவர் ஆடிய ஆட்டங்கள் சின்னச் சின்ன ஆசையுடன் முடிந்து போயின. மக்களுக்கு புது சுவாசம் கிடைத்தது. "புது வெள்ளை மழை" பெய்தது.

    இளையராஜாவின் இசையை கோவில் என்றும் அவரை இசை தெய்வம் என்றும் ஒரு புனைவை நிலைநிறுத்த இங்கே ஒரு பக்குவமற்ற முயற்சி நடைபெற்றுக்கொண்டு வரும்வேளையில் இது போன்ற மாற்றுச் சிந்தனைகள் வரவேற்க்கப் படவேண்டியவைகளே. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. காரிகன் உங்களுக்கு இளையராஜாவை எதற்காகவோ பிடிக்க வில்லை என்பதற்காக அவரின் இசையை வெறுப்பது சரியாக தோன்றவில்லை.அவர் என்ன ஆட்டம் ஆடினால் உங்களுக்கு என்ன? ஒரு படைப்பாளியின் படைப்பை எவ்வளவு வேண்டுமானாலும் கறாராக விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட மனித குணங்களையும், கற்பிதமான விஷயங்களையும் அவர்களின் படைப்புக்கு அளவுகோளாக கொண்டு விமர்சிப்பது தவறான போக்கு என்பது எனது கருத்து.

      Delete
  31. Welcome Oliver,
    Thanks for the visit. There's no denying that SG did copy. But having said that,
    it does not amount to stripping them off glories that they deserve. I personally feel SG's western tint is much sweeter and more melodious than that of Harris Jeyaraj. They have produced some of Tamil industry's best-remembered songs. Probably, the movies they worked in bombed at the box office resulting in their songs being sidelined. Sad! Pangs of reality.

    ReplyDelete
  32. வாருங்கள் ஆர் எஸ் கிருஷ்ணமூர்த்தி,
    வருகைக்கும் தரமான கருத்திற்கும் அன்பான பாராட்டுக்கும் மிக்க நன்றி.

    தமிழ்த் திரையிசையில் ஏகப்பட்ட முத்துக்கள் இருக்கின்றன. அந்த அற்புதங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தக்கூடியவை. உங்களுக்குத் தெரியாததா என்ன? பொதுவாக பழைய பாடல்கள் என்றால் ஒரேடியாக நமக்கு 50களும் 60 களுமே நினைவுக்கு வரும் வகையில் நம் ரசனை செதுக்கப்பட்டுள்ளது. பிறகு இளையராஜாவின் காலம் என்ற இடத்திற்கு வந்துவிடுவோம். இரண்டுக்கும் இடையில் இருக்கும் 70 களை ஏன் மறக்கவேண்டும் என்று விளங்கவில்லை. உண்மையைச் சொல்வதானால் இந்த காலகட்டத்தில் வந்த பாடல்கள் திகட்டாதவைகள். ஆடம்பரமில்லாத அழகின் அற்புத அவதாரங்கள்.

    எவரையும் மட்டம் தட்டவேண்டுமென்ற hidden agenda என்னிடமில்லை.70 களில் வந்த இளையராஜாவின் பாடல்களே அவரது இசையின் மிக சிறப்பானவை என்பது எனது கருத்து. இதை நான் அடிக்கடி சொல்வதுண்டு.

    நான் பாராட்டப்படுவதைக் காட்டிலும் இந்த இனிமையான அரிய கானங்கள் மறக்கப்படாமல் இருக்கவேண்டும் என்பதே என் நோக்கம்.

    ReplyDelete
    Replies
    1. Kaarigan,
      Well-said.
      Go ahead.

      Delete
  33. சங்கர் -கணேஷின் A to Z பதிவு நன்று. உங்களோடு சில விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். தாங்கள் பதிவில் குறிப்பிட்டது போல 80களில் மத்தியில் அவர்களின் பிடி தளர்ந்துவிட்டது என சொல்லலாம். அவர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன் போன்ற திரையுலக ஆளுமையுடன் பணிபுரியாதது, அவர்கள் இசைஞானி அளவுக்கு பேசப்படாமல் போனதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். பாலைவனச்சோலை போன்ற சில குறிப்பிட்ட படங்களை தவிர, ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிக்கிற அளவுக்கு, அவர்களின் பாடல்கள் இருந்ததில்லை என்பதை ஒப்பு கொள்ள வேண்டும். கே.ரங்கராஜ் உட்பட சில இயக்குனர்கள் தங்கள் முதல் படத்தில் சங்கர் -கணேஷ்டன் பணிபுரிந்திருந்தாலும், தொடர்ந்து இசைஞானியை பிடித்து கொண்டார்கள். பல புதியவர்கள், தங்கள் முதல் படத்திற்கு இசைஞானியை விரும்பிய அளவுக்கு சங்கர்-கணேஷை விரும்பவில்லை என்பதும் உண்மை. விநியோகஸ்தர்களும் அன்று இசையமைப்பாளரை தீர்மானித்தார்கள். உங்கள் பட்டியலில் சில நல்ல படங்கள் விட்டு போய் இருக்கின்றன. சிவாஜி நடிக்க துரை இயக்கிய துணை திரைப்படத்தில் நல்ல பாடல்கள் இருந்தன. மகனை பிரிந்து தந்தை பாடுவதாக ஒரு பாடல், "உனக்கும் எனக்கும் உறவு வர ஒரு பெண் தான் காரணம், உனக்கும் எனக்கும் பிரிவு வர ஒரு பெண் தான் காரணம்". இது போக அவர்களின் ஆஸ்தான பாடகர், பாடகிகள் பி.ஜெயசந்திரன், வாணிஜெயராம் பாடிய ஒரு ஜோடி பாடல் மற்றும் மலேசிய வாசுதேவன் பாடிய ஒரு பாடல். "யாரோ அழைக்கிறார்கள்" என்றொரு படம். அற்புதமான பாடல்கள். இந்த இரவில் நான் பாடும் பாடல், பால் நிலா காய்ந்ததே என ஆறு அற்புதமான பாடல்கள். உழைத்த உழைப்பு வீணானது போல படம் பேசப்படாமல் போனதால் பாடலும் பேசப்படவில்லை. முக்கியமான மூன்றுமுகத்தை விட்டுவிட்டீர்கள். ராம.நாராயணன் படங்களில் ஒரு பாடலாவது தேறிவிடும் - சங்கர்-கணேஷ் இசையில். "சீறும் சிங்கங்கள்" என்ற படத்தில் ஒரு அருமையான பாடல். "தண்ணிக்குள் நிக்குது தாவணி தாமரை, தள்ளாடுது தள்ளாடுது" என்ற பாடல். ஜெயசந்திரன், வாணிஜெயராம் பாடிய பாடல். ராம.நாராயணின் இளஞ்சோடிகளில் இடம் பெற்ற, "தோகை புல்லாங்குழல் பாடலும் அருமையான பாடல்". 80களின் நடுவே சந்திரபோஸ் இவர் இடத்தை பிடித்து கொண்டார் எனலாம். ராபாட்-ராஜசேகரும் எஸ்.ஏ.ராஜ்குமார் பக்கம் சென்றுவிட்டார்கள். இதய தாமரை ராஜேஷ்வரும் அமரனில் ஆதித்யனை அறிமுகப்படுத்திவிட்டார். ஏ.ஆர்.ரகுமானோடு டஜன் கணக்கில் வந்த இசையமைப்பாளர்களால் சங்கர்-கணேஷ் தேவைபடாமல் போய் விட்டார் எனலாம்.

    ReplyDelete
  34. வாருங்கள் ஓசை நண்பரே,
    பல தகவல்களை சொல்லியிருக்கிறீர்கள். சங்கர் கணேஷ் இசையில் வந்த பல பாடல்கள் விடுபட்டுபோய் விட்டதை நானறிவேன். துணை, மூன்று முகம், பந்தம், இளஞ்சோடிகள், பிறகு விசுவின் சில படங்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. சரியாக சுட்டிக்காட்டியதற்கு நன்றி. எவ்வளவுதான் சொன்னாலும் இன்னும் சொல்ல நிறையவே இருப்பது போன்ற உணர்வு ஏற்படுவது இயற்கையே.

    சங்கர் கணேஷின் இறங்கு முகம் பெரும்பாலும் அவர்கள் வெற்றி கண்ட பிரமாண்ட இயக்குனர்களுடன் பணியாற்றவில்லை என்பதால் இருக்கலாம். அவர்களின் படங்கள் பொதுவாக இரண்டாம் கட்ட திரைப்படங்களாகவே இருந்தன. எல்லோரும் இளையராஜாவை நோக்கி சென்றபடி இருந்த காலகட்டம் அது. பின் சந்திரபோஸ், தேவா என்று அடுத்தடுத்து காட்சிகள் மாறின. ரஹ்மான் வந்த பிறகு "பெரிய தலையே " காணாமல் போய்விட்டபோது சங்கர் கணேஷ் என்ன செய்வார்? இருந்தாலும் ஒரு படத்தின் வெற்றி தோல்விகளை வைத்து இங்கே ஒரு பாடலின் சிறப்பும் ஒரு இசை அமைப்பாளரின் திறமையும் கணிக்கப்படும் அவலம் அரங்கேறி வருகிறது தொடர்ச்சியாக.

    விரிவான பின்னூட்டதிற்கு நன்றி.

    ReplyDelete
  35. திரு காரிகன்,
    அற்புதமான கட்டுரை. பாராட்டுக்கள். சங்கர் கணேஷ் பற்றி மிக விரிவாக தெளிவாக நான் முதல் முறை படிக்கிறேன்.
    அமுதவன் அய்யா சொன்ன அந்த வண்டிச் சக்கரம் பாடல் வா மச்சி வா வண்ணாரப்பேட்ட என்ற பாடல். எஸ் பி பாலசுரமணியம் பாடியது. பால்காரி என்ற படம் உண்டு. அதில் சுருளிராஜனே பாடிய "பால்காரன் பொண்டாட்டி" என்று ஒரு பாடல் இருக்கிறது. கேட்க நன்றாக இருக்கும். சுருளிக்கு பாடல் கொடுத்தவர்கள் இவர்கள்தான். கொஞ்சம் ஒதுங்கு பாடல் வெகு ஹிட் அடித்த பாடல். நீங்கள் சொல்வதுபோல சங்கர் கணேஷ் இசையை நாம் நன்றாக ரசிக்கலாம் அது காப்பி என்று தெரிந்தாலும்.
    இதுபோன்ற இசை அமைப்பாளர்களைப் பற்றி எழுத வேண்டும் என்று உங்களுக்கு தோன்றியதே பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள்.

    முரளி

    ReplyDelete
  36. Mr. Kaarigan,
    Do Sankar-Ganesh duo deserve such a write up? It's sheer waste of time.

    ReplyDelete
  37. வாருங்கள் முரளி,

    கருத்துக்கு நன்றி. நன்றாகவே சொல்லியிருக்கிறீர்கள். நான் அந்தப் பால்காரி பாடலை முன்னர் எப்போதோ கேட்ட நினைவு இருக்கிறது.

    நீங்கள் சொல்வது உண்மையே. சுருளி ராஜனுக்கு சில பாடல்கள் கொடுத்தவர்கள் சங்கர்-கணேஷ் தான். அப்பாடல்கள் வெற்றி பெற்றதும் உண்டு. பெரிய இசை ரசனைக்கு ஏதுவாக அவைகள் இல்லாவிட்டாலும் சில நிமிட திருப்தியை அளிப்பதில் அவை சிறந்தவை. சில "பெரிய" இசை அமைப்பாளர்களின் பல பாடல்கள் இந்தச் சிறிய சேவையை கூட செய்வதில்லை. அவற்றை கேட்கும் போது எழுந்து ஓடிவிடலாமா என்ற எண்ணம் வருகிறது.

    எல்லோரையும் பாராட்டுவோமே? இதிலென்ன இருக்கிறது?

    ReplyDelete
  38. Mr. Anonymous,
    Every drop counts in the ocean.

    ReplyDelete
  39. திரு முத்துராம் ஸ்ரீநிவாசன்,
    உங்களின் கருத்துக்களைப் படித்தேன். புரிதலுக்கு நன்றி.

    உங்களின் தளத்தைப் பார்வையிட்டேன். உங்களின் இசைச் சார்பு என்னைப் பற்றி இவ்வாறு எண்ணம்கொள்ள வைத்திருக்கலாம். மற்றபடி இளையராஜா மீது எனக்கென்ன வன்மம்? இதுவெல்லாம் முதல் முறையாக என் எழுத்தைப் படிக்கும்போது தோன்றும் ஒரு திடீர் முடிவு. சொல்லவேண்டுமென்றால் வீழ்ந்த இசை என்ற பதிவில் நான் அவரது இசையை கடுமையாக விமர்சித்துள்ளேன். முடிந்தால் அதையும் படியுங்கள்.

    இளயராஜாவின் தனிக் காட்டு ராஜாங்கத்தில் பல இசை அமைப்பாளர்கள் முன்னுக்கு வரமுடியவில்லை என்பது ஒரு கண்ணோட்டம். அதை ஒரு செய்தியாக பாவித்தால் சரியாக இருக்கும். மாறாக ஒரு குற்றச்சாட்டாக அதை ஏன் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று தெரியவில்லை. நான் எனது பதிவுகளில் இளையராஜாவின் இசையை மட்டுமே விமர்சிக்கிறேன். அதையும் முடிந்தவரை நேர்மையாகவே செய்கிறேன். பின்னூட்டம் என்று வரும்போது அது என் சொந்த எண்ணங்களுக்கான வழித்தடம். எனவே அங்கே சில சமயங்களில் மற்ற விஷயங்கள் விவாதிக்கப்படும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. மேலும் இளையராஜாவின் தனி மனித குணங்களை அல்ல அவரின் இசை தொடர்பான பேச்சுக்களையே விமர்சிக்கிறேன். அதிலென்ன தவறு இருக்கிறது? விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று இங்கே யாரையும் குறிப்பிட முடியாது.

    இளையராஜா சிறப்பான பாடல்களைக் கொடுத்திருக்கிறார். அதே வேளையில் அவர் மட்டுமே சிறப்பான இசையை அளித்தார் என்றும் அவரது அனைத்துப் பாடல்களும் வைரங்களாக மின்னுவதாகவும் பதிவுகள் பதிவுகளாக சிலர் எழுதித் தள்ளுகிறார்கள். அவரைப் பற்றிய ஒரு மிகப் பெரிய புனைவு இணையத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதை அப்படியில்லை என்று சொல்ல சில இணைக் கோடுகளை நான் வரையும் போது அது உங்களைப் போன்றவர்களுக்கு பாயும் அம்பு போல தெரிகிறது.

    என்னைப் பொறுத்தவரை இசையே பிரதானமானது இசைஞன் அல்ல.

    ReplyDelete
  40. காரிகன்

    ///இளயராஜாவின் தனிக் காட்டு ராஜாங்கத்தில் பல இசை அமைப்பாளர்கள் முன்னுக்கு வரமுடியவில்லை என்பது ஒரு கண்ணோட்டம். அதை ஒரு செய்தியாக பாவித்தால் சரியாக இருக்கும். மாறாக ஒரு குற்றச்சாட்டாக அதை ஏன் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று தெரியவில்லை. நான் எனது பதிவுகளில் இளையராஜாவின் இசையை மட்டுமே விமர்சிக்கிறேன். அதையும் முடிந்தவரை நேர்மையாகவே செய்கிறேன். பின்னூட்டம் என்று வரும்போது அது என் சொந்த எண்ணங்களுக்கான வழித்தடம். எனவே அங்கே சில சமயங்களில் மற்ற விஷயங்கள் விவாதிக்கப்படும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. மேலும் இளையராஜாவின் தனி மனித குணங்களை அல்ல அவரின் இசை தொடர்பான பேச்சுக்களையே விமர்சிக்கிறேன். அதிலென்ன தவறு இருக்கிறது? ///

    இளையராஜா பற்றி வசைபாடவில்லையா? முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயல்வது கடினம் . உங்கள் பழைய பின்னூட்டங்களையும் மற்றவர் தளத்தில் நீங்கள் பேசிய வசவுகளையும் எடுத்து காப்பி பேஸ்ட் செய்தால் முத்துராம் அசந்து போய் விடுவார் . பாவம் அவருக்கு உங்களின் பாவனைகளும் பாசாங்குகளும் புரியவில்லை. உங்களின் இரட்டை நாக்கு இளையராஜா ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும் . இளையராஜாவின் இசையை மகா கேவலமாக விமர்சனம் செய்வதில் உங்களை விட மோசமாக நான் யாரையும் santhithathe இல்லை . அப்படி இருக்க முத்துராம் அவர்களின் கேள்விக்கான பதிலில் செந்தில் மாதிரி மூஞ்சி வைத்துக் கொண்டு எப்படி இப்படி பேச முடிகிறது !?

    ReplyDelete
  41. காரிகன்

    ///என்னைப் பொறுத்தவரை இசையே பிரதானமானது இசைஞன் அல்ல.///

    இது அடுத்த இரட்டை நாக்குக்கான உதாரணம். இளையராஜா பற்றிய தனிநபர் வசைபாடல்கள் பழசு நிறைய இருக்குது உங்களின் பின்னூட்டங்களில் ! எடுத்து போடலாமா!? முகமூடி கழட்டிட்டு நேர்மையாக பேசுங்கள் .

    ReplyDelete
  42. (இளையராஜாவின் இசையை ஏதோ ஒரு மூன்றாம்தர சினிமாவை விமர்சிப்பது போல எழுதியிருப்பது வருத்தமளிக்கிறது. அந்த இசையை சமகாலத்தில் இருக்கும் சாமானியர்களால் புரிந்து கொள்ள முடியாது. அதை உணர்த்து கொள்ள ஒரு 100 வருடங்கள் போனபின்பு தான் 'பொக்கிஷம்' என்பது கொண்டாடப்படப்போகிறது. )

    இது எதோ ஒரு தளத்தில் நீதானே என் பொன்வசந்தம் படப் பாடல்கள் குறித்து ஒரு ராஜா ரசிக சிகாமணி எழுதியிருந்தது. படித்துப் பார்த்தால் எவ்வளவு கேலித்தனமாக இருக்கிறது என்று நீங்களே பாருங்கள். சாமானியர்களுக்குப் புரியாதாம். ஆனால் அதே சமயம் இவர்தான் பாமரர்களின் இசையை கொண்டுவந்தார் என்றும் சாமானியர்களும் ரசிக்கும்படி இசை அமைத்தார் என்றும் கதகளி ஆடுவார்கள் ராஜா மணிகள். இதைதான் நான் இரட்டை நாக்கு என்கிறேன்.

    சால்ஸ்,

    (இளையராஜாவின் இசையை மகா கேவலமாக விமர்சனம் செய்வதில் உங்களை விட மோசமாக நான் யாரையும் santhithathe இல்லை . )

    இதைத்தானே நான் சொன்னேன். அவர் இசையை விமர்சனம் செய்கிறேன் அதையும் நேர்மையாக செய்கிறேன். மற்றபடி அவரது குணங்களைப் பற்றி பேசுவது கிடையாது என்று. மேலும் கேவலமானதை வேறென்ன சிறப்பாகவா சொல்லமுடியும்? ஒரு பொருளின் தகுதிகேற்றவாறு அதை விமர்சனம் செய்வது இயல்புதானே. நீங்கள்தான் நகைச்சுவை என்ற பெயரில் செந்தில் மாதிரி மூஞ்சி என்று காலித்தனம் செய்கிறீர்கள். இதுவெல்லாம் மூடர்களின் கலாட்டா.உங்களுக்கு நனறாகவே வருகிறது.

    நான் என்றும் திரித்துப் பேசுபவனில்லை. என் பின்னூட்டங்கள், மற்றவர்களுக்கு நான் அனுப்பிய பதில்கள் எல்லாவற்றிலும் இளையராஜாவின் உளுத்துப்போன பாடல்களை கடுமையாக சாடியிருக்கிறேன். இதை நான் எப்போது மறுத்திருக்கிறேன்?அதையெல்லாம் இங்கே நீங்கள் வலிந்து பதிவிட்டால் நான் எப்போதும் ஒரே மாதிரி பேசுபவன் என்ற உண்மை மட்டுமே நிற்கும். நீங்கள்தான் மாட்டிக்கொள்வீர்கள்.

    வேறு ஏதாவது யோசித்துக்கொண்டு வாருங்கள். விவாதிக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. ரிம்போச்சே4 May 2014 at 04:26

      அதெல்லாம் சரிங்க காரிகன்,

      இளையராஜா ரசிகர்கள் தளத்திற்கு சென்று ஒரண்டை இழுத்தீர்கள். அவர்கள் உங்களுக்குக் களம் அமைத்துத் தந்தபோது ஓடி வந்து விட்டீர்களே. என்ன காரணம்?

      Delete
  43. திரு காரிகன்,
    வாழ்த்துக்கள். 'செய்வதை திருந்தச் செய்' என்பார்கள். இந்தப் பதிவு அதற்கொரு உரைகல்லாக இருக்கிறது.

    எனக்கு சங்கர் கணேஷ் இசை பிடிக்கும். நீங்கள் குறிப்பிட்டுள்ள பல பாடல்களை நான் ரசித்துக் கேட்டதுண்டு. உங்கள் வார்த்தைகளின் மீது நடந்து சென்று என் பழைய நாட்களை அடைந்ததுபோல இருக்கிறது. அருமையான நடை.

    இளையராஜாவை விட சங்கர் கணேஷ் மேற்கத்திய இசையை நன்றாக அமைத்தார்கள் என்று நீங்கள் சொல்வதோடு எனக்கு உடன்பாடில்லை. Raja is far superior to SG in this realm.

    அதற்காக SG யின் இசையை ஒரேடியாக குறை சொல்லிவிடவும் இயலாது. இதை படித்த பிறகு அந்த தளதளன்னு வளந்த பொண்ணு பாடலைக் கேட்டேன். துடியான இசை. பட படக்கும் தாளம் என்று பிய்த்து மேய்ந்திருக்கிறார்கள் SG.

    நாட்டுப்புற இசையை இவர்கள் வேறு பாணியில் அமைத்தார்கள். ஆனால் என்ன ஒன்று ராஜா வுக்குப்பிறகே அவர்கள் இதைச் செய்தார்கள். எனவே இதற்கு அவர்கள் சொந்தம் கொண்டாட முடியாது போயிற்று.

    பல நல்ல பாடல்களை கொடுத்த இந்த இருவரையும் மறக்காமல் இருப்பதும் அவர்களைப் பற்றி ஒரு பதிவு எழுதுவதும் எல்லோரும் செய்வதில்லை.எனக்கு ஆச்சர்யம் ப்ளஸ் சந்தோஷம்.

    மிக நல்ல பதிவு. பாராட்டுக்கள்.

    இப்படிக்கு,
    பிலிப் டேனியல்.

    ReplyDelete
  44. வாருங்கள் பிலிப்,

    மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் எழுத்தில் வசீகரம் இருக்கிறது. நீங்கள் மட்டும் ஒரு பிளாக் ஆரம்பித்து இசை பற்றி எதுவும் பதிவுகள் எழுதினால் முதல் ஆளாக பின்னூட்டம் இடுவது நானாகத்தான் இருக்கும்.

    (இளையராஜாவை விட சங்கர் கணேஷ் மேற்கத்திய இசையை நன்றாக அமைத்தார்கள் என்று நீங்கள் சொல்வதோடு எனக்கு உடன்பாடில்லை. Raja is far superior to SG in this realm.)

    நன்று. இது உங்களுக்குத் தோன்றுவது. அவ்வளவே. உங்களின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் அதைச் சொல்லும் உரிமை உங்களுக்கு உண்டு என்பதில் உறுதியாக இருக்கிறேன். SG யின் வீதி இசை இளையராஜாவின் இசையை விட பலமாக இருக்கும். ஆனால் அவர்களால் பெரிய அளவில் பெயர் பெற முடியாததற்கு நீங்கள் கூறியதே சரி என்று படுகிறது.

    (நாட்டுப்புற இசையை இவர்கள் வேறு பாணியில் அமைத்தார்கள். ஆனால் என்ன ஒன்று ராஜா வுக்குப்பிறகே அவர்கள் இதைச் செய்தார்கள். எனவே இதற்கு அவர்கள் சொந்தம் கொண்டாட முடியாது போயிற்று.)

    உண்மையே. இந்த விஷயத்தில் இளையராஜா முந்திக்கொண்டுவிட்டார் என்று சொல்லலாம்.அல்லது அவருக்குப் பிறகே இந்த எண்ணம் இங்கே வலுப்பெற்றது என்றும் சொல்லலாம்.உங்களின் பாராட்டுக்கு நன்றி. ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது. அதை நாம் புரிந்து கொண்டால் சில வீண் வறட்டு விவாதங்களை தவிர்க்கலாம். மீண்டும் வருக .நன்றி.

    ReplyDelete
  45. இளையராஜா வந்தவுடன் தான் இசை பாணி மாறியது என்று சொல்வது விவேகமானது அல்ல . காக்காய் உக்காரப் பனம்பழம் விழுந்த கதை அது .

    இளையரஜவுடைய ஆரம்பக் காலம் மாறுபட்டக் கோணங்களில் படம் இயக்கப் பல இயக்குனர்கள் நுழைந்த காலம் அதனால் தான் இசையில் பாணி மாற்றப் பட்டது. முழுப் பலனையும் இளையராஜவுக்கே தருவது தவறான முடிவு .

    ஒரு பாடலின் வெற்றிக்கு இசை அமைப்பாளர் மட்டுமே சொந்தம் கொண்டாடுவது ஒழுங்கீனம் .படத்தின் இயக்குனருக்கும் இதில் சம பங்கு உள்ளது .

    ReplyDelete
    Replies
    1. ரிம்போச்சே3 May 2014 at 18:20

      //ஒரு பாடலின் வெற்றிக்கு இசை அமைப்பாளர் மட்டுமே சொந்தம் கொண்டாடுவது ஒழுங்கீனம் .படத்தின் இயக்குனருக்கும் இதில் சம பங்கு உள்ளது .//

      ஆனா, காட்சிக்குத் தக்கபடி பாடல் போட்டால் ஏச்சு மாத்திரம் இசையமைப்பாளருக்கே.

      வாழ்க நீதி, வாழ்க நேர்மை.

      சேகர் அய்யா, இது உங்களுக்கு இல்ல.

      Delete
  46. சேகர்,
    உங்கள் கருத்து மறுக்க முடியாத உண்மையை சொல்கிறது. இந்த சிந்தனை எனக்கும் ஏற்பட்டது. ஆனால் ஒரு பத்தியில் இதை விளக்கமுடியாது என்று நினைக்கிறேன். ஒரு தனி பதிவே இதற்கு அவசியப்படும். 70களின் இறுதியில் நமது இசை பாணி மாறியது எப்படி என்று கூடிய விரைவில் -ராஜா மணிகளுக்கு பிடிக்காத - ஒரு பதிவு எழுத உத்தேசித்துள்ளேன். இதற்கு ஒரு நல்ல தலைப்பைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.உங்கள் வருகைக்கு நன்றி. அற்புதமான கருத்துக்கு அடுத்த நன்றி.

    ReplyDelete
  47. என்னது? 'பூவினும் மெல்லிய பூங்கொடி' சங்கர் கணேஷ் இசையமைத்ததா? நான் எம்.எஸ்.வி.என்று நினைத்திருந்தேன். அற்புதமான துள்ளல் பாடல் ஆயிற்றே! 'நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்' - ஆஹா, நினைத்தாலே எத்தனை இனிமையாக இருக்கிறது! ஒரு அருமையான இசை ஜோடிக்கு நீங்கள் அர்ப்பணித்திருக்கும் பிரமாதமான கெளரவம் இந்த பதிவு. வாழ்த்துக்கள், காரிகன்!

    ReplyDelete
  48. வாங்க குரு,

    இப்போதுதான் உங்கள் ஆன்மீக கடலில் மூழ்கிவிட்டு வந்தேன். பார்த்தால் உங்கள் பின்னூட்டம். பாராட்டுக்கு நன்றி.

    நீங்கள் மட்டுமல்ல. பலரும் SG யின் இசையை இப்படித்தான் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

    (ஒரு அருமையான இசை ஜோடிக்கு நீங்கள் அர்ப்பணித்திருக்கும் பிரமாதமான கெளரவம் இந்த பதிவு.)

    (மிகச் சரியான) வார்த்தைத் தேர்வு என்னை மிரள வைக்கிறது. அருமையாக சொல்லிய உங்களுக்கு என் அன்பு கலந்த நன்றி.

    ReplyDelete
  49. முதலில் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன் ! விடலை பருவத்தில் இளையராஜாவின் இசைக்கு வெறியனாக இருந்தவன் நான். எந்த அளவுக்கு என்றால்... ரோஜா படம் வந்த புதிதில் இளையராஜாவுக்கு மாற்றாக ரஹ்மானை பேசியதால் ரோஜா பாடல்களையே பலகாலம் தவிர்த்திருக்கிறேன் ! விடலை பருவத்தின் அன்றைய எனது புரிதலை நினைத்தால் இன்று சிரிப்பு வருகிறது !!

    எம்.எஸ்.வி, ராஜா, ரஹ்மான் மூவருக்கும் முன்னும் பின்னும், ஏன் அவரவர்களின் காலத்திலேயே இன்னும் பல இசையமைப்பாளர்கள் சிறந்த பாடல்களை கொடுத்திருக்கிறார்கள், கொடுத்துகொண்டும் இருக்கிறார்கள் ! ஆனாலும் இவர்கள் மூவரை சுற்றியே தமிழ் சினிமா இசைத்தட்டு சுழல்வதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று இவர்களின் சந்தைபடுத்தும் மேலாண்மை ! பொருள் நன்றாக இருந்தால் மட்டும் போதாது, அதை சந்தைபடுத்தும் திறமையும் வேண்டும் ! எம்.எஸ்.வி, கண்ணதாசன் வாலி தொடங்கி எம்.ஜி.ஆர், சிவாஜி, பாடகர் டி.எம்.எஸ் என தன் செல்வாக்கைதிடபடுத்தி கொண்டார் என்றால் ராஜா கோலிவுட்டில் தயாரிப்பு, காப்பிரைட் என பலவகைகளில் தன் இருப்பை பலமாக்கிகொண்டார் ! இளையவர் ரஹ்மானோ சர்வதேச மார்க்கெட்டிங் புரிந்தவர் !

    " எனக்கு முன்னாடி இங்க இருக்கற பல இசையமைப்பாளர்கள் ஆஸ்கார் அவார்டு வாங்கற இசையை கொடுத்திருக்காங்க... ஆனா அவங்களுக்கெல்லாம் ஏன் கிடைக்கலன்னு நான் நினைச்சதுண்டு... நம்ம இசையை ஆஸ்கார் கமிட்டிவரை கொண்டு போகனும்... நடுவர்களை கேட்க வைக்கனும்.... "

    எம்.எஸ்.வியும் இளையராஜாவும் உடனிருக்க, ஆஸ்கார் விருது பாராட்டு நிகழ்ச்சியில் ரஹ்மானே கூறிய வார்த்தைகள் இவை !

    இளையராஜவை பற்றி விமர்சித்தாலே அவரின் ரசிகர்களுக்கு சட்டென கோபம் வரும் காரணங்களில் ஒன்று அவர் யாரின் இசையையும் பிரதியெடுக்காத சுயம்பு என்ற இமேஜ் ! இதற்கு பதிலாய் சங்கீத ஞானம் இல்லாத, கேள்வி அறிவை மட்டுமே பிரதானமாய் கொண்ட என் மரமண்டைக்கு தெரிந்த மூன்று பதில்கள் :

    ராஜா அவரின் பிரபல பாடல்களில் பலவற்றை குறைந்தபட்சம் இரண்டு முறையாவது மறுசுழற்சி பண்ணியிருக்கிறார். ஒரு உதாரணம் அவரே பாடிய " சோளம் விதைக்கயில " பாடல். அதன் பிரதியே " அம்மன் கோயில் கிழக்காலே, அம்மனூரு மேற்காலே " பாடல்.

    அவரின் கிராமிய பாடல்கள் பலவற்றின் டியூன்கள் பாமரமக்கள் காலங்காலமாய் பாடியது. அவர் சினிமாவுக்காக சுவீகரித்துகொண்டார் !

    மேற்கத்திய வெகுஜன பாடகர்களின் டியூனின் காப்பி என்றால், பாப் மர்லேயின் " பப்பலோ சோல்ஜர் " பாடலே தேவாவின் " அகிலா அகிலா " என என்னை போன்ற சாமானியர்களால் சட்டென கூறிவிடமுடியும் ஆனால் ராஜா தொட்டது மெற்கத்திய சிம்பொனி இசை கோர்வைகளை ! நண்பர் காரிகன் போன்றவர்கள் முயன்றால் இதனை ஆதாரத்துடன் கூற முடியும்.

    இதில் ரஹ்மானும் விதிவிலக்கல்ல ! அவரின் " உசிலம்பட்டி பெண்குட்டி " பாடலின் அச்சு அசலாய் ஒரு பிரெஞ்சு பாடல் உண்டு. இதை பற்றி அந்த சமயத்தில் அவரிடம் கேட்கபட்ட போது

    " எனது கீ போர்டில் கிடைத்த அதே லூப் அந்த இசையமைப்பாளருக்கும் கிடத்திருக்கும் " என பதில் கூறினார். " லூப் " கிடைக்கலாம். வாத்தியங்களின் சேர்ப்புமா ? என்ற என் சந்தேகம் சரிதானா என்பதை இங்குள்ள சங்கிதம் தெரிந்தவர்கள் விளக்க வேண்டுகிறேன்.

    இதையெல்லாம் நான் இங்கு எழுதுவதற்கு காரணம் இந்த மும்மூர்த்திகளின் திறமையை தவறாக குறிப்பிடவோ அல்லது மட்டம் தட்டவோ அல்ல ! இவர்களின் சங்கீத திறமை அளப்பரியது என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை ! ஆனால் இவர்களின் பெரும் பொக்கிச பெட்டிகளிடையே மற்ற இசையமைப்பாளர்களின் அற்புத ஆபரணங்களும் புதையுண்டிருக்கின்றன என்பதை புரிந்துகொள்ளவேண்டிதான் !

    தனிப்பட்ட முறையில் இளையராஜாவின் இசையை தாண்டி அவரின் குரலாலும் வசீகரிக்கபட்டவன் நான். " ஒரு ஜீவன் அழைத்தது ", " மெட்டி ஒலி காற்றோடு ", " அந்த முகம் தந்த சுகம் ", போன்ற வசிய பாடல்களை அவரால் மட்டுமே தர முடிந்தது. " நேத்து ராத்திரி யம்மா " " நிலா காயுது " போன்ற பாடல்களிலும் ஒரு ஏகாந்ததை புகுத்த ராஜாவால் மட்டுமே முடியும். ஆனால் அதற்காக அவரை விமர்சனத்துக்கு அப்பால் வைக்க முடியாது என்பதே நிதர்சனம் ! " மெட்டி ஒலி காற்றோடு " என் நெஞ்சை தாலாட்டிய முதல் காதலின் போது இளையராஜாவை கொண்டாடிய நான், அந்த காதல் முறிந்தபோது கேட்டழுத " பால் நிலவு காய்ந்ததே " பாடலை தந்த சங்கர் கணேஷை சிறுமை படுத்தினால், நூறாண்டு தொட்ட தமிழ் சினிமா இசையையே சிறுமைபடுத்துவதாகும் !

    நன்றி

    ReplyDelete
  50. அபாரமான பின்னூட்டம் சாம்,

    இது போன்றதொரு பின்னூட்டம் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நிறைய சொல்லியிருக்கிறீர்கள். அதிலும் உண்மையை அழுத்தமாகச் சொல்லும் உங்கள் சமரசமில்லாத பாணி பாராட்டுக்குரியது. நம் எண்ணங்களும் ரசனைகளும் காலம் செல்லச் செல்ல நிறம் மாறுவது இயற்கை. புதியதை நோக்கி பாதங்கள் நடந்தாலும் நம்மைத் தாலாட்டிய பழைய இன்பங்களை மனதில் சுமந்து செல்வதும் தேவைப்படுகிறது.

    தமிழ்த் திரையில் எம் எஸ் வி, இளையராஜா, ரஹ்மான் மூவரையும் சந்தைப்படுத்துகிறார்களோ என்ற எண்ணம் எனக்குண்டு. இது ஒரு மோசமான அணுகுமுறை. தனிப்பட்டவித்தில் எனக்கு எம் எஸ் வி யின் இசையின் மீது அலாதியான பிடிப்பு இருந்தாலும், அவர் மட்டுமே சிறந்தவர் இல்லை என்ற நிதர்சனத்தையும் உணர்ந்தே இருக்கிறேன். இது சில ராஜா விசில்களிடம் கிஞ்சித்தும் கிடையாது. (அபூர்வமாக சில ராஜா ரசிகர்கள் உண்மைகளை உரைப்பதுண்டு.)

    நீங்கள் சொன்ன சோளம் வெதைக்கயிலே, அம்மன் கோவில் கெழக்கால போன்றவற்றுடன் இன்னும் நிறையவே சேர்த்துக்கொள்ளலாம். இரண்டு முறை மறு சுழற்சி செய்தார் என்கிறீர்கள். அப்படியல்ல. ஏகப்பட்ட முறைகள் இளையராஜா தன் பாடல்களையே மீண்டும் மீண்டும் சுட்டுப்போட்டார். அதனால்தான் கரகாட்டக்காரன் காலத்திற்குப் பிறகு அவரது பெரும்பான்மையான பாடல்கள் ஒரே தொனியில் சலிப்பூட்டும் சங்கடங்களாக இருந்தன. மேலும் அவர் பாடல்களில் பல்லவி மட்டுமே சற்று வித்யாசப்படும். சரணங்கள், இடையிசை எல்லாமே ஒரு deja vu எண்ணத்தை கொடுக்கும். சரணங்களோ பாடப்படுவதை விட பேசப்படும் அவஸ்தையும் இதில் நிறைய உண்டு. சரணத்திலிருந்து இது இந்தப் பாடல்தான் என்று சட்டென்று அடையாளம் காண்பதில் சிரமங்களும் சிக்கல்களும் போனஸாக நிச்சயம்.

    தொடரும் ......

    ReplyDelete
    Replies
    1. ரிம்போச்சே4 May 2014 at 04:57

      //தமிழ்த் திரையில் எம் எஸ் வி, இளையராஜா, ரஹ்மான் மூவரையும் சந்தைப்படுத்துகிறார்களோ என்ற எண்ணம் எனக்குண்டு. இது ஒரு மோசமான அணுகுமுறை. தனிப்பட்டவித்தில் எனக்கு எம் எஸ் வி யின் இசையின் மீது அலாதியான பிடிப்பு இருந்தாலும், அவர் மட்டுமே சிறந்தவர் இல்லை என்ற நிதர்சனத்தையும் உணர்ந்தே இருக்கிறேன். இது சில ராஜா விசில்களிடம் கிஞ்சித்தும் கிடையாது. (அபூர்வமாக சில ராஜா ரசிகர்கள் உண்மைகளை உரைப்பதுண்டு.)//

      நீங்கள் விரும்பாவிட்டாலும் தமிழ்த் திரையிசையில் முதன்மையானவர் இளையராஜா என்பது என் கருத்து. இம்மூவரிடமும் திறமை இருந்தது. தொடர்ந்து வெற்றிப்பாடல்களாகக் கொடுத்ததால்தான் சந்தையில் நிற்க முடிந்தது. 70களில் இந்தித் திரையிசை முன்னால் MSV வெல்ல முடியவில்லை. 90களில் மேற்கத்திய இசை ஊடுறுவத் தொடங்கிய பின் அதையே ரஹ்மானும் தரவே இளையராஜா அலை ஓய்ந்தது. 2005-06க்குப் பிறகு தமிழில் ரஹ்மானின் அலை ஓய்ந்து விட்டது. சிற்சில exceptions விண்ணைத் தாண்டி வருவாயா போல. இது தான் ராஜாவுக்கும் நடந்தது, 2000களில் விருமாண்டியும், பிதாமகன் போல. இது தான் 80களில் MSV அய்யாவுக்கும் நடந்தது. சிகரத்தை அடைந்த ஒவ்வொருவரும் பிடிக்காவிட்டாலும் ஒரு கட்டத்தில் கீழிறங்க வேண்டியதுதான்.

      Delete
  51. சாம்,

    இளையராஜாவின் செவ்வியல் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். சரியான கணிப்பு. மற்றவர்கள் போல் பிரபலமான பாடல்களை தேடித் போகாமல் இவர் மேற்கத்திய செவ்வியல் இசை சகாப்தங்களின் உழைப்பை சற்று "தொட்டுக்"கொண்டவர்.(போனி எம் மின் சன்னி ஒரு விதிவிலக்கு.)இளையராஜாவின் மேற்கத்திய செவ்வியல் பிரதியெடுப்பு ஒரு புத்திசாலித்தனமான உருவல் (திருட்டு?). அவர் மேற்கத்திய மேதைகளின் அபாரங்களிலிருந்து இங்கே அங்கே சில இழைகளை தேடிப்பிடித்து அவற்றை தன் (பெரும்பாலும்) இடையிசையில் சட்டென வீசிவிட்டுப் போவார். கேட்க மிக புதுமையாக இருக்கும். அவைகளை எங்கேயிருந்து பிடித்தார் என்று நாம் சிம்பனி சிம்பனியாக ஆராய வேண்டும். இருந்தும் மொசார்ட் பாக் பீத்தோவன் என கேட்டால் இதை எந்த ரசிகனும் வேறு ஆதாரங்களின்றி ஒத்துக்கொள்வான். கேட்டால் இசை என்னுள் பீறிடுகிறது என்பார். (இவரும் சில ஆங்கிலப் பாடல்களை வெட்கமில்லாமல் காப்பி அடித்தவர்தான்.)

    50 களில் பிரபலமாக இருந்த The Fourம் Lads என்ற கனடாவைச் சேர்ந்த இசைக் குழுவின் Istanbul Not Constantinople. (வெளிவந்த ஆண்டு 1953. ) என்ற பாடலை தழுவி அமைத்ததே "சங்கத்தில் பாடாத கவிதை". தைப் பொங்கல் படத்தில் இது இடம் பெற்றது என்று நினைக்கிறேன். (இது முதலில் மலையாளத்தில் இவரது இசையிலேயே வந்த பாடல்.) பிறகு simon dupree குழுவினரின் kites பாடலையே அக்கரைச் சீமை என்ற பாடலாக்கினார். (இன்னும் என்னென்ன இருக்கிறது என்று தெரியவில்லை.) மற்றபடி அவரது மைதானம் மேற்கத்திய செவ்வியல்தான். ஏனென்றால் அங்கேதான் பலர் செல்வதில்லை.

    இவரது நாட்டுபுற இசை எல்லாமே உண்மையிலேயே இவரது படைப்புதானா என்பதும் கேள்விக்குரியதே. ஏனென்றால் அன்னக்கிளி படத்தின் போதே ஒரு நாட்டுப்புற இசைக் கலைஞர் அன்னக்கிளி உன்ன தேடுதே பாடலை இளையராஜா திருடிவிட்டதாக குற்றம் சாட்டியதை இங்கே நினைவு கொள்ளவேண்டும். ஆயிரம் தாமரை மொட்டுக்களே பாடல் தேனி பக்கம்புகழ் பெற்ற ஒரு கோவில் திருவிழா பாடல். பலவிதமான நாட்டுப்புற கானங்களை இவர் எடுத்து கையாண்டிருக்கலாம் அதில் தவறில்லை. நாட்டுப்புற இசைக்கு மிகப் பெரிய அங்கீகாரம் இதனால் கிடைத்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

    (இதையெல்லாம் நான் இங்கு எழுதுவதற்கு காரணம் இந்த மும்மூர்த்திகளின் திறமையை தவறாக குறிப்பிடவோ அல்லது மட்டம் தட்டவோ அல்ல ! இவர்களின் சங்கீத திறமை அளப்பரியது என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை ! ஆனால் இவர்களின் பெரும் பொக்கிச பெட்டிகளிடையே மற்ற இசையமைப்பாளர்களின் அற்புத ஆபரணங்களும் புதையுண்டிருக்கின்றன என்பதை புரிந்துகொள்ளவேண்டிதான் !)

    அற்புதமான வாக்கியம். பாராட்டுக்கள். நான் சொல்வதும் இதுவேதான்.

    பால் நிலவு காய்ந்ததே! ஆஹா என்ன ஒரு மென்மையான அதிரடி! உடைந்த காதலை உணர்த்தும் உள்ளதைச் சுடும் கவிதை கொண்டது . நீங்கள் இந்தப் பாடலில் கரைந்து போய் கண்ணீர் விட்டது அந்த மனநிலைக்கு சரியானதே.

    உங்களின் சிறப்பான பின்னூட்டம், நடுநிலையான கருத்து, அழகான சொற்கள் போன்றவற்றிக்கு என் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ரிம்போச்சே4 May 2014 at 05:07

      //இளையராஜாவின் மேற்கத்திய செவ்வியல் பிரதியெடுப்பு ஒரு புத்திசாலித்தனமான உருவல் (திருட்டு?). அவர் மேற்கத்திய மேதைகளின் அபாரங்களிலிருந்து இங்கே அங்கே சில இழைகளை தேடிப்பிடித்து அவற்றை தன் (பெரும்பாலும்) இடையிசையில் சட்டென வீசிவிட்டுப் போவார். கேட்க மிக புதுமையாக இருக்கும். அவைகளை எங்கேயிருந்து பிடித்தார் என்று நாம் சிம்பனி சிம்பனியாக ஆராய வேண்டும். இருந்தும் மொசார்ட் பாக் பீத்தோவன் என கேட்டால் இதை எந்த ரசிகனும் வேறு ஆதாரங்களின்றி ஒத்துக்கொள்வான். கேட்டால் இசை என்னுள் பீறிடுகிறது என்பார். //

      காரிகன்,

      நீங்கள் சொன்னதை ஆதாரத்துடன் நிறுவ வேண்டும். இல்லையேல் நீங்கள் செய்வது அவதூறு பரப்புவது.

      //இவரது நாட்டுபுற இசை எல்லாமே உண்மையிலேயே இவரது படைப்புதானா என்பதும் கேள்விக்குரியதே. ஏனென்றால் அன்னக்கிளி படத்தின் போதே ஒரு நாட்டுப்புற இசைக் கலைஞர் அன்னக்கிளி உன்ன தேடுதே பாடலை இளையராஜா திருடிவிட்டதாக குற்றம் சாட்டியதை இங்கே நினைவு கொள்ளவேண்டும். ஆயிரம் தாமரை மொட்டுக்களே பாடல் தேனி பக்கம்புகழ் பெற்ற ஒரு கோவில் திருவிழா பாடல். பலவிதமான நாட்டுப்புற கானங்களை இவர் எடுத்து கையாண்டிருக்கலாம் அதில் தவறில்லை. நாட்டுப்புற இசைக்கு மிகப் பெரிய அங்கீகாரம் இதனால் கிடைத்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை.//

      இதுவும் அவதூறுதான்.

      நாட்டுப்புறப் பாடல்கள் காலம் காலமாகப் பாடப்படுபவை. அவற்றுக்கு யாரும் காப்பிரைட் வைத்திருக்கவில்லை. மேலும் ராஜா வெறுமே காப்பி அடிப்பது மட்டும் செய்திருந்தால் 20 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் முதன்மையான இசையமைப்பாளராக வலம் வந்திருக்க முடியாது. அந்த மெட்டுகள் மீது அவரின் கற்பனைகளை வைத்து மாடங்கள் கட்டியதாலே அவர் ராசாவானார்.

      அது சரி, மற்ற இசையமைப்பாளர்கள் நாட்டுப்புற இசையை உருவவில்லை என்று உறுதியாகச் சொல்கிறீர்கள்?

      Delete
  52. ஏதோ ஒரு நதியில் இறங்குவதைப் போலே பாடல் மெல்லிசை மன்னர் இசையில் வெளிவந்தது. கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடல் என்ன தவம் செய்தேன் என்ற படத்தில் இடம் பெற்றது. 1977ல் வெளிவந்த படத்தை இயக்கியவர் கே.பஞ்சு.

    ReplyDelete
  53. ஜிரா சார்,

    தகவலுக்கு நன்றி. நான் இதை வி குமாரின் இசை என்று நினைத்திருந்தேன்.

    ReplyDelete
  54. நண்பர் காரிகன் அவர்களுக்கு
    திரு சங்கர் கணேஷ் அவர்கள் பற்றிய மிக பெரிய நினைவுகள் அருமை
    ஒரு சிறு திருத்தும் சொல்லலாம் என்று இந்த கருத்தை பதிவிடுகிறேன்

    நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு பாடலை
    பாடியவர்கள் எம் எல் ஸ்ரீகாந்த் வாணி ஜெயராம்
    பாடல் இடம் பெற்ற திரைப்படம் - நினைப்பது நிறைவேறும்
    இசை அமைப்பாளர் -எம் எல் ஸ்ரீகாந்த்

    ReplyDelete
  55. சங்கர் கணேஷ் . இளையராஜாவை விட சிறந்த இசையமைப்பாளர் என்று ஒத்து கொள்கிறோம்.

    ReplyDelete