Sunday 27 April 2014

இசை விரும்பிகள் XVI--- இசைச் சாரல்கள்


கொட்டித் தீர்க்கும் உக்கிர மழையை வியப்பான விழிகளோடு நோக்கும் நாம்  ஏன் சிறு சாரல்களையும் தூறல்களையும் அலட்சியம் செய்கிறோம் ?

                                     

                               
                      

                                              இசைச்  சாரல்கள் 


       சிறு  வயதில் கேட்ட பல கானங்கள் நம் மனதில் படிந்துவிட்ட கரையாத இசைப் படிவங்கள். அதிலும் வானொலியில் எந்தவித அறிமுகமும் இல்லாமல் திடும் என ஒரு அபாரம் ஒலிக்கத் துவங்கினால் அப்போது கிடைக்கும் இன்பம் என்னைப் பொறுத்தவரை குழந்தைகளின் குதூகலம் போன்றது. சுயநலமில்லாதது. இசையின்பம்  ஒரு  மேன்மையான தெளிவையும் புரிதலையும் அளித்து கறை  படிந்த நம் நெஞ்சங்களிலிருந்து  ஒரு சில  கணங்களுக்காவது   ஒரு   குழந்தையின் உள்ளதை  நமக்குள்   மீட்டெடுக்கிறது. சில நிமிடங்கள்  உலகின் மாசுக்களிலிருந்தும் போலித்தனங்களிலிருந்தும் நாம் விடுதலையடைகிறோம். காலங்கள் பல கடந்த பின்னும் இனிப்பான தினங்கள் இறந்த பின்னும்   நெஞ்சத்தில் தங்கிவிட்ட சில நினைவுகளை அதே பழைய சுவையுடன் ருசிக்கும் அற்புதத்தை  இசை எத்தனை எளிமையாக, எளிதாக செய்துவிடுகிறது! ஒரு மூன்று நிமிடப் பாடலுக்குள் முழுதும் மூழ்கும்  கணத்தில் உண்டாகும் பரவசம் விலைமதிப்பில்லாதது.

    மழையே மழையே பாடலுக்கு முன்பே  மற்றொரு மழைப் பாடல் என் மனதை கொள்ளைகொண்டது. இதுவும் வார்த்தைளை  மீறிய ஒரு இன்னிசை அனுபவம். சுகமான  தென்றல் நம்மைத் தீண்டும்  உணர்வைத் தரும் கீதம். மென்மையும், இனிமையும் ஒருங்கே பாடலோடு பயணிக்க  இறக்கை கட்டிய உணர்வு இதைக் கேட்டவுடனே எனக்குக் கிடைத்தது. மனிதரில் இத்தனை நிறங்களா என்ற படத்தில் வரும் "மழை தருமோ என் மேகம்?" என்ற பாடலே அது. ஷியாம் என்ற ஒரு மலையாள இசை அமைப்பாளரின் இசையில் வந்தது அப்பாடல்.  அவரைப் பற்றி அப்போது அதிகம் நான்  அறிந்ததில்லை.  பாடலின் மெட்டும்  இசை கோர்ப்பும் மிக மென்மையானவை. எஸ் பி பியின் பால் நிலவுக் குரல் அழைத்துச் செல்லும் இசைவெளிகள் கேட்பவரை திகைக்கவைக்கின்றன. ஒரு பாடலுக்குள் இத்தனை சுகமா என்ற வியப்பை பல பாடல்கள் எனக்குக் கொடுத்துள்ளன. அதில் இதுவும்  ஒன்று.

           இதன்பின் தேவதை என்ற ஒரு படத்தில் எஸ் ஜானகி பாடிய கலீர் கலீர் என்று துவங்கும் ஒரு பாடல் ஷ்யாம் என்ற பெயரை எனக்கு அறிமுகம் செய்தது. இதை ஒரு  தேவதையின் கானம் என்றே சொல்லலாம். இருபுறமும் மரங்களடர்ந்த ஒரு நீண்ட சாலையில் மதி மயங்கும் ஒரு மாலை வேளையில் தனியே நடக்கும் ரம்மியத்தை கொண்டது இப்பாடல். இவரது இசை எளிமையானது அதே சமயம் மிகச்  சிறப்பானது. முழுவதும் வேறு தளத்தில் பயணிப்பது. தேவையில்லாத ஆடம்பர வாத்திய ஓசைகள், பொருத்தமில்லாத இணைப்பிசை, அலங்காரமான அதிரடி தாளங்களின்றி மிக நளினமாக ஒரு குழந்தையின் தழுவலைப் போன்றதொரு இசை பாணி இவருடையது. . பொதுவாக 70 களின் இசையை  ஒரு அமைதியான நதியோட்டத்துடன் ஒப்பிடலாம். (கடலலைகளைப் போல ஆக்ரோஷமாக  ஆர்ப்பரிக்கும் மாற்றம் அதன்பிறகே ஏற்பட்டது. அத்துடன் தமிழ் திரையிசையின் இனிமையும் மெலிந்து  சீர் குலைந்து போனது.)

      ஷ்யாம் (சாம்வல் ஜோசெப்) சென்னையில் பிறந்ததிருந்தாலும்   கேரளாவை பூர்விகமாகக் கொண்டவர். சிறிய வயதில் தேவாலய choir இசையினால் ஈர்க்கப்பட்டு  பின்னர் தன்ராஜ் மாஸ்டரிடம் மேற்கத்திய இசையை பயின்றவர். வயலின் வாத்தியத்தை சிறப்பாக வாசிப்பதில் மேதமை கொண்ட இவர் தமிழ்த் திரையின் இசை உன்னதங்களான எம்  எஸ் வி- டி கே ஆர்,  சுப்பையா நாயுடு, பின்னர் ஜி தேவராஜன் (தேவ மைந்தன் போகின்றான், வானமென்னும் வீதியிலே பாடல்களை அளித்தவர்) போன்றவர்களிடம் பணி புரிந்திருக்கிறார். இன்றைய புகழ் பெற்ற ஹேரிஸ் ஜெயராஜின் தந்தை இவரிடம் உதவியாளராக இருந்திருக்கிறார். ஷ்யாம் மொத்தம் ஏறக்குறைய முப்பது தமிழ்ப் படங்களுக்கு இசை அமைத்துள்ளார் என்று தெரிகிறது. கமலஹாசன் முதல் முதலில் கதாநாயகனாக நடித்த உணர்சிகள் என்ற படத்திற்கு இசை அமைத்தவர் இவரே. 80களில் மவுலி என்னும் நாடக இயக்குனர் தமிழ்த் திரையில் சில படங்களை இயக்கினார். மற்றவை நேரில், வா இந்தப் பக்கம், நன்றி மீண்டும் வருக, ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது, போன்ற இவரது படங்களுக்கு ஷ்யாம் இசை அமைத்திருந்தார்.  மனிதரில் இத்தனை நிறங்களா, உணர்சிகள், தேவதை, குழந்தை இயேசு, விலாங்கு மீன், இதயம் பேசுகிறது, பஞ்ச கல்யாணி,கள் வடியும் பூக்கள், நலம் நலமறிய ஆவல், சலனம் போன்ற படங்கள் இவரது இசையில் குறிப்பிடத்தக்கவை. நான் முடிந்தவரை தேடி எடுத்த சில அபாரமான பாடல்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். இணையதில் இவை கிடைக்கவே செய்கின்றன. (cool toad .com என்ற இடத்தில் ஏறக்குறைய உங்கள் தேடல் எல்லாம் முற்றுப்பெற்று விடும் என்று எண்ணுகிறேன்.) ஷ்யாம் என்ற இசை அமைப்பாளரின் இனிமையை சற்றேனும் நாம் உணரவேண்டாமா?

மழை தருமோ என் மேகம்?-மனிதரில் இத்தனை நிறங்களா?
பூமா தேவி போல வாழும் ஜீவன் நீதானே- பஞ்ச கல்யாணி. (எஸ் பி பி இத்தனை உருகி உருகிப் பாடுவது ஒரு கழுதையைக் குறித்து.)
இரவும் பகலும் ஒருவன் நினைவை பாடும் பறவை- நீ சிரித்தால் நான் சிரிப்பேன்.
மாந்தளிரே மயக்கமென்ன, கலீர் கலீர் என்று காலம் தன்னால் இங்கே முன்னேறுது- தேவதை.
நினைத்திருந்தது நடந்துவிட்டது- மற்றவை நேரில்.
இவள் தேவதை இதழ் மாதுளை,ஆனந்த தாகம் (அழகான கீதம். சொக்கவைக்கும் இசைக்கோர்ப்பு. இந்தப் பாடலின் இசை வடிவத்தை   80 களின் ஆரம்பத்தில் இளையராஜாவின் பாடல்களில்  அதிகமாக காணலாம்.) - வா இந்தப் பக்கம்.
எனை ஆளும் காதல் மன்னன்-குங்கும கோலங்கள்.
தேவைகள் ஆயிரம்- தேவைகள் ஆயிரம்.
காதல் கனவுகளே நீராடும் என் நினைவுகளே- நன்றி மீண்டும் வருக.
இதயம் இதயம் முழுதும் மோகங்கள், மோகம் சங்கீத மோகம், வாராய் கண்ணே  - இதயம் பேசுகிறது.
மழைக்கால மேகங்கள், வானம் பன்னீரைத் தூவும் - கள் வடியும் பூக்கள்.
மாமரத்தின் பூங்குயில்கள் மங்கள கீதம் பாடுமே- நலம் நலமறிய ஆவல்.
செல்வமே தெய்வீக மலரே, கண்ணே வா கண்மணியே வா  - குழந்தை யேசு.(இரண்டுமே மிக சிறப்பானவை.)
முத்து முத்து புன்னகையோ - சந்தோஷ கனவுகள்.
ஆசைகள் தேய்ந்ததே, பூ மாலைகள் இரு தோள் சேருமே- கல்லுக்குள் தேரை.

      மேற்கூறப்பட்ட பாடல்களில் சிலவற்றைத் தவிர மற்றவை எல்லாம் அதிகமாக நாம் கேட்டிராத பாடல்கள். இப்போது கேட்கும்போது நாஸ்டால்ஜிக் உணர்வை மீறிய மற்றொரு சுவையையும் நாம் ருசிக்க முடிகிறது. அதே சமயத்தில் இசை எத்தனை இன்பமயமாக இருந்தது என்ற ஆழ்ந்த பெருமூச்சும் வரத் தவறவில்லை. குறிப்பாக ஆனந்த தாகம், கலீர் கலீர், மழை தருமோ என் மேகம்?, பூமா தேவி போல வாழும், வானம் பன்னீரை தூவும் ஆசைகள் தேய்ந்ததே போன்ற பாடல்கள்   கேட்க அலாதியானவை. ஒரு மிகப் பெரிய மழைக்கு முன் ஆரவாரமின்றி அமைதியாக வீசும் ஒரு ஒற்றைக் காற்றின் தொடுகை போல அத்தனை அழகு.

   ஷ்யாம் போன்று   இனிமையான இசைக்குரிய இன்னும் சிலர்  70களில் தமிழ்த் திரையில் இருந்தார்கள். இவர்களின் பாடல்கள் நேர்த்தியானவையாக இருந்தாலும் மாறிவிட்ட இசை பாணியும், ரசனையும்  ரசிகர்களின் இசை தேர்வும் இத்தகைய பாடல்கள் வெளிச்சத்துக்கு வருவதற்கு மிகப் பெரிய முட்டுக்கட்டையாக இருந்தன. பழைய பாணி என்ற ஒரே விமர்சனத்தில் இவ்வாறான இசை முத்துக்கள் புறக்கணிக்கப்பட்டன.அவைகள் வானொலிகளில் விடாது ஒலிபரப்பப்படும் அந்தஸ்தை அடைந்தாலும் இன்று மீட்டெடுக்கப்படாத ஆழத்தில் உறங்கிக் கொண்டிருக்கின்றன. A state of intentionally  induced coma. Our pathetic taste of music can only be blamed for this artificial amnesia.  ஆனால் உண்மையைத் தேடுபவர்களுக்கு எந்தப் பாதையும் தடையில்லாதது. இப்போது மற்றவர்களையும் சற்று அறிவோம்.
 
   விஜய பாஸ்கர்-  கன்னடத்தின் புகழ் பெற்ற இசை அமைப்பாளராக இருந்தவர். வெகு சொற்பமான தமிழ்ப் படங்களுக்கும் இசை அமைத்துள்ளார்.இவரது சில பாடல்களைக் கண்ணுற்றால்  அடடா இவரா என்ற எண்ணம் உண்டாகாமல் இருக்காது. இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பாடல்கள் அனைத்தும் 70 களின் இசைப்  பொக்கிஷங்கள்   என்ற வகையைச் சேர்ந்தவை.

அன்பு மேகமே இங்கு ஓடிவா - எங்கம்மா சபதம்,
இளமை நாட்டியசாலை, காலம் பொன்னானது- கல்யாணமாம் கல்யாணம்
வரவேண்டும் வாழ்கையில் வசந்தம், சம்சாரம் என்பது வீணை-மயங்குகிறாள் ஒரு மாது. (சிலோன் வானொலியில் இந்தப் பாடல்கள்  எத்தனை முறைகள் ஒலித்திருக்கின்றன! )
சங்கீதம் ராகங்கள் இல்லாமலா, எனது வாழ்க்கை பாதையில்- மோகம் முப்பது வருஷம்.
யாருக்கு யார் சொந்தம்- மாலை சூட வா.(கமலஹாசனின் நடிப்பில் 75இல் வந்த படம்.  அன்றைய வானொலிகளில் அதிகம் ஒலித்த பாடல்.)
வானுக்கு தந்தை எவனோ (மிக உன்னதமான கானம்.) ,உறவோ புதுமை  -ஆடு புலி ஆட்டம்,
அட என்னடா பொல்லாத வாழ்க்கை  -தப்புத் தாளங்கள். எஸ் பி பி இதுக்கு போயி அலட்டிக்கலாமா என்று பாடுவதே அலட்டலாக இருக்கும். 
இதோ உன் காதலி,ரசம் பழரசம்- சௌந்தர்யமே வருக வருக.
மனமகளே உன் மணவறை கோலம்- காலங்களில் அவள் வசந்தம்.

   ராஜன் நாகேந்திரா- வீட்டு வீடு வாசப்படி என்று ஒரு படம் 80 களின் துவக்கத்தில் வந்தது. அதில் இடம் பெற்ற வீட்டுக்கு வீடு வாசப்படி விஷயங்கள் ஆசைப்படி என்ற பாடல் அதிகம் வானொலிகளில் உலா வந்த ஞாபகம் இருக்கிறது. கன்னடத்தைச் சேர்ந்த ராஜன் நாகேந்திரா இரட்டையர்கள் தமிழில் நிறைய படங்களை செய்யவில்லை. ஆட்டோ  ராஜா என்ற படத்தில் வரும் மிக அற்புதமான மென்மையின் இசைப் பிரதியாக ஒலிக்கும் மலரே என்னென்ன கோலம் பாடல் இவர்களின் இசையில் வந்தது என்ற செய்தி சற்று அதிர்ச்சியாக இருந்தது எனக்கு. அதை இளையராஜாவின் பாடல் என்றே நினைத்திருந்தேன் பல காலங்கள். நிறம் மாறிய பூக்கள் என்ற தலைப்பில் இப்பாடலைப் பற்றி நான் எழுதியதை கீழே கொடுத்துள்ளேன்.

      =மலரே என்னென்ன கோலம் (இளையராஜாவின் மிக அற்புதமான இசை சிற்பம் இது. இன்றுவரை இது இளையராஜாவின் பாடல்தானா என்று எனக்கு சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது. இந்தப் பாடலில் நீங்கள் கொஞ்சம்கூட அவரின் சாயலை காண முடியாது. மிகவும் ரம்மியமான பாடல்.இந்தப் படத்திற்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத சிறப்பான பாடல்.)=

      இது ராஜன் நாகேந்திராவின் இசை என்பதை அறிந்தபோது முதலில் ஏற்பட்ட அதிர்ச்சி பின்னர் இந்த உண்மையை சரியாக  யூகித்த மன திருப்தியில் கரைந்தேபோனது.

    சலில் சவ்திரி- ஹிந்தியில்  மிகப் புகழ் பெற்ற சலில் சவ்திரி தமிழில் சில படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவரது இசையை இந்த உலகத்தைத் தாண்டிய இசை என்று சிலர் வர்ணிப்பதுண்டு. ஆனந்த் என்ற ஹிந்திப் படத்தின்  ஸிந்தகி என்ற ஒரு பாடலைக் கேட்டால் உங்களுக்கும் இப்படியே தோன்றக்கூடும். அழியாத கோலங்கள் படத்தின் கதையோட்டத்தை தனது இசையில் வடித்திருப்பார் இந்த இசை மேதை. நான் எண்ணும் பொழுது பாடலைக் கேட்கும் பொழுதே நாம் நம்முடைய இறந்த தினங்களுக்கு சென்றுவிடுகிறோம். அந்தப் பாடல் ஒரு அனுபவம். பூ வண்ணம் போல நெஞ்சம்  என்ற பாடலோ ஒரு இனிமையான தாலாட்டு. இந்த இரண்டு பாடல்களைக் கேட்கும்பொழுதெல்லாம் எனக்கு ஏற்படும் எண்ணங்களுக்கு புதிய வார்த்தைகளைத்தான் கண்டுபிடிக்கவேண்டும். இசைச் சித்திரங்கள் என்று சொல்வது வெறும் சம்பிரதாயமானது. ஆனால் உண்மை அதுவே. 71 இல் உயிர் என்ற தமிழ்ப் படத்திற்கு பின்னணி இசை மட்டும் அமைத்திருந்த சலில் சவ்த்ரி தொடர்ந்து கரும்பு (73),பருவ மழை (78), அழியாத கோலங்கள் (79),தூரத்து இடி முழக்கம் (80) போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். தூரத்து இடி முழக்கம் படத்தின் நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு , உள்ளமெல்லாம் தள்ளாடுதே  என்ற இரண்டு பாடல்களும் மனதை சிறைபிடிக்கும் சிறப்பான இசைச் சிற்பங்கள்.

          எல். வைத்தியநாதன்- கேட்ட அதே நொடியில் புதைகுழி போல என்னை உள்ளே இழுத்துகொண்ட இன்னொரு அபூர்வமான பாடலை இங்கே குறிப்பிடவேண்டும். இந்தப் பாடலை விரும்பாதவர்களை நான் இதுவரை சந்தித்ததில்லை. இருப்பார்களேயானால் அவர்களை சந்திக்க விருப்பமும் இல்லை. ஏறக்குறைய முப்பது வருடங்கள் கடந்தும் இந்தப் பாடல் இன்றும் புதுமையாக ஒலிப்பதே இதன் மகத்துவம். மகாகவி பாரதியாரின் பாடல்கள் பல தமிழ்த் திரையில் இசைக்கப்பட்டுள்ளன. பல இசை ஜாம்பவான்கள் அவரது கவிதைக்கு இசை அலங்காரம் செய்திருக்கிறார்கள். காலத்தைத் தாண்டிய கானங்களாக அவை நம் நெஞ்சில் நிழலாடுகின்றன. மறுப்பதற்கில்லை. ஆனால்  எல் வைத்தியநாதன் பாரதியின் இந்தப் பாடலுக்கு செய்திருக்கும் சிறப்பு வாரத்தைகளை மீறிய மரியாதை. அவர் பாரதியின் இந்தப் பாடலுக்கு உயிர் அளித்திருக்கிறார். அந்தப்  பாடல்: ஏழாவது மனிதன் படத்தின் காக்கைச் சிறகினிலே. இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் பாரதியாரின் கவிதைகளே.  இருந்தும் காக்கைச் சிறகினிலே 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் போன்ற அபூர்வம். இன்றும் நவீனமாக ஒலிக்கும் அற்புதம்.  கே ஜே யேசுதாஸ் குரலில் ஜொலிக்கும்   இசை வைரங்களில் இதுவும்  ஒன்று.  பூங்காற்றின் தென்றலாக இசை நம்மை தடவிச் செல்ல, அபாரமான கவிதை நம்மை அசையவிடாது அனைத்துச் செல்ல,பாடலின் இறுதியில் மனிதக் குரல் மென்மையான சீழ்க்கையாக உருமாறி இந்த அற்புதப் பாடலுக்கு இன்னும் அழகு சேர்க்கிறது. இந்த இடத்தில் பொதுவாக புல்லாங்குழல் இசை வருவது  இயல்பே. ஆனால் அந்த சம்பிரதாய இசையை எல் வைத்தியநாதன் சத்தமில்லாமல் உடைத்திருகிறார். இதை நான் முன்பே காலமும் கானமும் என்ற பதிவில் காலத்தைத் தாண்டிய கானம்  என குறிப்பிட்டிருந்தேன். அந்த ஒரு வரிக்குப் பின்னால் நான் சொல்ல விரும்பிய விஷயங்களுக்கு  இந்த ஒரு பத்தி அவசியப்படுகிறது.

          சிலர் பத்தாயிரம் பாடல்கள்   என எண்ணிக்கையை வைத்து ஒரு மாயத் தோற்றத்தை வடிவமைக்கிறார்கள். ஆனால் அவற்றில் வெகு சிலவற்றைத் தவிர மற்றதெல்லாம் ஒரு முறை மட்டும்  கேட்பதற்காக உருவானவை.  ஒன்றே செய் அதை நன்றே செய் என்று சொல்லப்படுவதைபோல சிலர் சொற்பமான பாடல்களையே கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்த சொற்பதிலும் பல  சிறப்பானவை. தரமானவை. இதுவன்றோ இசை!

         77இல் ஆறு புஷ்பங்கள் என்ற படத்தில் இடம் பெற்ற ஒரு நாட்டுப்புற பாடல்  பலரின் கவனத்தை ஈர்த்தது. எம் எஸ் வி யின் இன்னிசையில் வந்த ஏண்டி முத்தம்மா ஏது புன்னகை என்ற பாடல் அது. அதைப் பாடியது  சந்திரபோஸ் என்ற புதியவர். இவரே பிறகாலத்தில் பல அதிரடி ஹிட் பாடல்களைக் கொடுத்து, சங்கர்-கணேஷுக்கு மாற்றாக அறியப்பட்டவர். 78 இல் சந்திரபோஸ் மச்சானப் பாத்தீங்களா என்ற படத்தில் அறிமுகமானார். (சிலர் மாங்குடி மைனர் படமே முதலில் வந்தது என்று சொல்கிறார்கள்.) இதில் வரும் மாம்பூவே சிறு மைனாவே என்ற பாடல்  இனிமை நிறைந்தது. இந்தப் பாடலில் இளையராஜாவின் நிழல் கொஞ்சம் அடர்த்தியாகவே இருக்கும். தன் சொந்தப் பாதையை அறிந்துகொள்ள முடியாத பல இசை அமைப்பாளர்களில் இவரும் ஒருவர். ஆனாலும் கவனிக்கத்தக்க விதத்தில் சில இனிமைகளை இவர் அளித்திருகிறார். உதாரணமாக மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு (அண்ணா நகர் முதல் தெரு),  நீலக்குயில்கள் ரெண்டு  (விடுதலை) என்ற பாடல்கள் மனதை சட்டென கொள்ளை கொள்பவை. குறிப்பாக மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு பாடலே  சந்திரபோஸின் மிகச் சிறப்பான பாடலாக இருக்கும் என்று நினைக்கிறேன். செவிகளை தொந்தரவு செய்யாத தாலாட்டும் இசை, அருமையான மெலடி என நேர்த்தியாக அமைக்கப்பட்ட இசைச் சித்திரம். அவரின் பெயரைச் சொல்லும் மற்ற எல்லா பாடல்களுமே  என்னைப் பொறுத்தவரை மூன்றாம்தர ரசனைக்கு ஏதுவானவைகள்.  காக்கிச் சட்ட போட்ட மச்சான் (சங்கர் குரு), சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா (ராஜா சின்ன ரோஜா), டில்லிக்கு ராஜான்னாலும் (பாட்டி சொல்லைத்  தட்டாதே),  காள காள மொரட்டுக்காள (மனிதன்) பிறகு சற்று சகித்துக்கொள்ளக்கூடிய மனிதன் மனிதன் இவன்தான் மனிதன் (மனிதன்) போன்றவை இவரது இசையில் பெரிய அளவில் வெற்றி பெற்ற பாடல்கள். ஆனால் பெரிய உயரிய ரசனைக்கு உட்படாதவைகள். முகச் சவரம் செய்துகொண்டோ, அல்லது நாளிதழை புரட்டிக்கொண்டோ கவனமில்லாது  சற்று  கேட்கலாம் அவ்வளவே. மறந்து விட்டாலும் பாதகமில்லை. மன்னிப்பு உண்டு. ஏனென்றால் இவைகளைப்போல ஒரு பத்தாயிரம் கருமாந்திரங்கள்   நம்மிடம் இருக்கின்றன. 

      இப்போது நாம் மறந்துவிட்ட மற்றொரு இசை அமைப்பாளரை நினைவு கொள்ளவேண்டியது கட்டாயமாகிறது. இவர்  16 வயதினிலே படத்தின் முத்திரையாக ஒலிக்கும் செந்தூரப்பூவே மற்றும் அலைகள் ஓய்வதில்லை படத்தின் தரமான பாடலென நான் கருதும் புத்தம் புது காலை பொன்னிறவேளை போன்ற  பாடல்களை  இயற்றியவர். இவர் 80களில் உச்சத்தில் இருந்த இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன். இவர் ஒரு கவிஞர், இசை அமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குனர் என்று பல அவதாரங்கள் எடுத்தவர். குறிப்பாக எனக்கு கங்கை அமரன் இசை என்றால் நினைவுக்கு வரும் மூன்று படங்கள் இவை: மௌன கீதங்கள்,  வாழ்வே மாயம் மற்றும் சட்டம். இதற்குப் பிறகே சின்ன தம்பி பெரிய தம்பி, சுவரில்லாத சித்திரங்கள் ( கங்கை அமரன் இசை அமைத்த முதல் படமிது. காதல் வைபோகமே என்ற சிறப்பான பாடல் இதில் உண்டு), கனவுகள் கற்பனைகள், விடுகதை ஒரு தொடர்கதை போன்ற படங்களுக்கும் இவரே இசை அமைத்துள்ளார் என்ற தகவலை அறிந்தேன். இது சற்று ஆச்சர்யத்தை அளித்தது. காரணம் கனவுகள் கற்பனைகள் என்ற படத்தில் வரும் வெள்ளம் போல துள்ளும் உள்ளங்களே என்றொரு பாடலை நான் வெகுவாக ரசிப்பதுண்டு. இணையத்தில் எவ்வளவு தேடியும் இதுவரை இந்த முத்து எனக்கு அகப்படவில்லை. மிக அருமையான கீதம். இதே படத்தில் உள்ள தென்றல் ஒரு தாளம் சொன்னது என்ற பாடலும் இனிமையானது.  இசை அமைத்தது யார் என்றே தெரியாமல் நான் பல பாடல்களை அனுபவித்துக் கேட்டிருக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு ஆனந்த உணர்வை கொடுத்த பாடல் விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று ( விடுகதை ஒரு தொடர்கதை). துயரமான பாடலென்றாலும் சுகமான சோகம் இது. பாடல் அப்படியே நெஞ்சுக்குள் வழிந்து செல்வதை உணரலாம். கங்கை அமரனின் இசை இளையராஜாவின் சுவட்டை ஒட்டியே இருந்தாலும் (மவுன கீதங்கள் படத்தில் இளையராஜா நோட்ஸ் எழுதிக்கொண்டிருக்க கங்கை அமரன் பின்னாலிருந்து அவற்றை சத்தமில்லாமல் சுடுவது போல காட்டியிருப்பார் பாக்கியராஜ்.) உன்னிப்பாக அணுகினால் ஒரு மயிரிழை இடைவெளியை இனம் காண முடியும். வாழ்வே மாயம் படத்தில் வந்தனம், மழைக்கால மேகம் ஒன்று  இரண்டையும் தவிர மற்றவை கங்கை அமரனின் படைப்புகள். இதில் உள்ளதை உருக்கும்  உன்னத கீதம் ஒன்று உண்டு. எனக்கு மிகவும் விருப்பமான பாடலும் அதுவே. நான் குறிப்பிடுவது நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா என்ற பாடலை. இது முதலில் மலையாளத்தில் வந்த பாடல் என்று பிற்பாடு அறிந்தேன். அதற்கு இசை அமைத்தது இளையராஜாவாக இருக்கலாம் என்று அவதானிக்கிறேன். உண்மையா என்று தெரியவில்லை. தேவி ஸ்ரீ தேவி, வாழ்வே மாயம் போன்ற பாடல்களும் கேட்கக் கூடியவையே. மவுன கீதங்களின் டாடி டாடி ஒ மை டாடி, மூக்குத்தி பூமேலே காத்து ஒக்காந்து பேசுதம்மா( மூக்குத்திப் பூ மீது  காற்று உட்கார்ந்து பேசுதம்மா என்றிருக்க வேண்டிய தமிழே  இப்படிப்  பாடாவதியானது), மாசமோ மார்கழி மாசம் (வழக்கமான வாசனை! பாடலின் இறுதியில் எஸ் ஜானகி ஒரு அபாராமான கூச்சலிடுவார்.  கேட்டால் "சிலிர்த்துவிடும்". என்ன ஒரு காவியச் சிந்தனை!)  போன்ற பாடல்கள் பெரிய அளவில் வெற்றியடைந்தன.

         கங்கை அமரனின் இசையில் வந்த சட்டம் (தோஸ்தானா என்ற ஹிந்திப் படத்தின் தமிழ்த்  தழுவல்)படத்தின் பாடல்கள் கூட ஒரு நல்ல ரசனைக்கு உகந்ததாகவே இருந்தன. வா வா என் வீணையே விரல் மீது கோபமா?,அம்மம்மா சரணம் சரணம், நண்பனே எனது உயிர் நண்பனே, ஒரு நண்பனின் கதையிது போன்ற பாடல்கள் சலிப்பில்லாது கேட்கப்படக்கூடியவை. குறிப்பாக வா வா என் வீணையே ஒரு நளினமான காதல் கானம். ஏறக்குறைய ஐம்பது படங்களுக்கு கங்கை அமரன் இசை அமைத்துள்ளார். (ஒருவேளை எண்ணிக்கை தவறாக இருக்கலாம்.) நான் அவ்வளவாக இவர் இசையை தொடர்ந்தவன் இல்லை என்பதாலும் 80 களின் இசைப் போக்கை கடுமையாக வெறுத்ததாலும் இவரது அண்ணனின் இசைப் "பொக்கிஷங்களையே" விரும்பி காதுகொடுத்து கேட்டதில்லை என்பதாலும்   இவரது இசையில் வந்த பல பாடல்களை குறிப்பிட முடியவில்லை. சிலவற்றை கேட்டிருக்கிறேன். உதாரணமாக இசைக்கவோ நம் கல்யாண கானம்-மலர்களே மலருங்கள், நாளெல்லாம் பவுர்ணமி என்ற படத்தின் நீதானா நெசந்தானா நிக்க வச்சு நிக்க வச்சு ..... (ஏடாகூடமாக கற்பனை விரிய வாய்ப்புகள்  இருக்கின்றன. எல்லாம் அவரது அண்ணன் காட்டிய வழி. இப்படித்தான் இவர்களின் தமிழ்த் தொண்டு நம் இசையை "அடுத்த கட்டத்திற்கு" எடுத்துச் சென்றது! ) போன்றவை நினைவில் இருக்கின்றன.  இதன் பின் சின்ன தம்பி பெரிய தம்பி என்ற படத்தில் இடம் பெற்ற ஒரு உண்மையான நல்ல பாடல் என்னைக் கவர்ந்தது.  ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது என்ற அந்தப் பாடல் வெகு சிறப்பாக இசைக்கப்பட்ட அழகான கானம். இதை இளையராஜாவின்  இசை என்று நினைத்திருந்தேன்.  படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்திருந்தாலும் இந்தப் பாடல் மட்டும் அவர் இசையமைப்பில் வரவில்லை என்றும் இது உண்மையில் இளையராஜாவின் பாடலேதான் என்றும் பின்னர் தெரிய வந்தது.

     80களில் அதிசயமாக இன்னும் சிலர் இசைக் களத்தில் திடீரெனெ தோன்றி அதே திடீரெனெ மறைந்தும் போனார்கள்.

            ஸ்பரிசம் என்றொரு படம் ஆர் சி சக்தியின் இயக்கத்தில் 82இல் வந்தது. இதற்கு ரவி என்பவர் இசையமைத்திருந்தார். யார் இந்த ரவி என்று தெரியவில்லை. ஒருவேளை இவர்  பழம்பெரும் ஹிந்திப் பட இசை அமைப்பாளர் (பாம்பே) ரவியாக இருக்கலாம்.  இரண்டு அற்புதமான பாடல்கள் இதில் உண்டு. ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து, மற்றும் நான் என்னுடைய பழைய பதிவுகளில் அடிக்கடி  குறிப்பிட்டிருக்கும் ஊடல் சிறு மின்னல். ஊடல் என்ற இந்தப் பாடல்  ஒரு அபூர்வ இசை வடிவம். மொத்தப் பாடலும்  நான்கே வரிகள் கொண்டது.

           ஊடல் சிறு மின்னல் 
           குளிர் நிலவே வாடலாமா?
           காதல் விளையாட்டில் 
           கண்ணீர் மாலை சூடலாமா?

      பாடலின் பல்லவியாக வரும் இதே வரிகளே  இடையிசைக்குப் பின் வரும் சம்பிரதாயமான சரணமாகவும் இருக்கும். மூன்று வெவ்வேறு மெட்டுகளில் இந்தப் பல்லவியை பாடல் முழுவதும் இனிமையான இசையோடு படைத்திருப்பார் ரவி. கேட்க அசாதரணமாக, 80களின் இசைப் பாணியை விட்டு வெகுவாக விலகியிருப்பதை உணரலாம். கண்டிப்பாக சிறந்த இசை ரசனைக்கு உகந்த கானம். இந்தப் பாடலை நான் ஒரு நவீன முயற்சியாகவே காண்கிறேன். இதே போல மற்றொரு பாடல் மரகதமணியின் இசையில் நீ பாதி நான் பாதி என்ற படத்தில் வந்த நிவேதா என்ற பாடல்.  இடையிடையே ராக ஆலாபனைகள் பின்பாட்டு பாட முழு பாடலும் நிவேதா என்ற ஒற்றைச் சொல்லைக்கொண்டே அமைந்திருக்கும். ஒருவிதத்தில் இதை ஒரு instrumental music எனலாம். இம்மாதிரியான இசை முயற்சிகள் (புரட்சிகள்!) பாராட்டப்படாமல் போனது வருத்தமளிக்கும் உண்மை. மாறாக இதுபோன்ற புதிய இசை வடிவங்கள்  புகழ் பெற்ற வேறு ஒருவரிடமிருந்து வந்திருந்தால் அவரைக் கொண்டாடியிருப்பார்கள் நம் ரசிகர்கள்.

            காற்றுக்கென்ன வேலி (82) என்ற படத்தில் சிவாஜி ராஜா என்ற ஒரு புதிய இசை அமைப்பாளர் மிகச் சிறப்பான வகையில் பாடல்கள் அமைத்திருந்தார். கடல் மீதிலே தன் மீனை தேடினாள்  மற்றும் சின்னச் சின்ன மேகம் என்னைத் தொட்டுப் போகும் என்ற பாடல்கள் இனிமையான கீதங்கள். அவ்வளவாக தமிழ்ப் பாடல்களை விரும்பிக் கேட்காத  அந்த நாட்களிலேயே என்னைக் கவர்ந்தன இந்தப் பாடல்கள். அப்போது உச்சத்தில் இருந்தவரைப்  பற்றிய எந்த சிந்தனையுமே இல்லாதிருந்த நான் ஒரு விதத்தில் அவரது பாணியை சலிப்புத் தட்டுவதாக உணர்ந்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. எனவேதான் எந்த புதிய இசையையும் அது தரமானதாக இருக்கும் பட்சத்தில் வரவேற்கத்  தயாராக இருந்தேன்.

     அடுத்து   வி எஸ் நரசிம்மன் என்ற  தேர்ந்த வயலின் வித்வான் ஒருவரை பற்றி பேசவேண்டியது அவசியம் என்றுனர்கிறேன். இவர் இளையராஜாவின் குழுமத்தில் வயலின் வாசித்தவர்.  How To Name It? என்ற அவரது முதல் இசைத் தொகுப்பில் வரும் அந்த வயலினிசை நரசிம்மனுடையது. மிகுந்த இசை அறிவு கொண்டவரான இவர் முதலில் பாலச்சந்தரின் அச்சமில்லை அச்சமில்லை படத்திற்கு இசை அமைத்தார். அதில் உள்ள ஆவாரம் பூவு, ஓடுகிற தண்ணியில என்ற பாடல்கள் கவனத்தை ஈர்த்தன.  தொடர்ந்து புதியவன் படத்தில் நானோ கண் பார்த்தேன், தேன் மழையிலே தினம் ரசிக்கும், வந்தது வசந்த காலம்  போன்ற இனிமையான இசை கீதங்களைப் படைத்தார்.இதன் பின் மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலமடைந்தது ஆயிரம் பூக்கள் மலரட்டும்  என்ற படத்தின் ஆயிரம் பூக்கள் மலரட்டும், இது இளமை எழுதும் கதை, பூ மேடையோ, மேகம் அந்த மேகம் பாடல்கள்.  குறிப்பாக பூ மேடையோ பாடல் இரவினில்  ஜன்னலோரம் அமர்ந்து வீசும் தென்றலை உள்வாங்கும் சுகத்தைக் கொண்டது. இந்தப் பாடலின் இசைத் தொழில் நுட்பம் வெகு துல்லியமாக இருக்கும். கேட்டால் நீங்களே இதை உணர்வீர்கள். நீண்ட நாட்கள் கழித்து பாச மலர்கள் என்ற  படத்தில் மீண்டும் இசையமைத்தார். ஹே ராம் படத்தில் இவரது பங்கு இருப்பதாக ஒரு தகவல் சொல்கிறது. தற்போது தனி இசை தொகுப்புகள் வெளியிடுவதில் இவர் கவனம் செலுத்தி வருவதாக அறிந்தேன்.

    80 களின் மையத்தில் தேவேந்திரன் என்னும் ஒரு திடீர் இசையமைப்பாளர்  மண்ணுக்குள் வைரம்,  வேதம் புதிது போன்ற படங்களுக்கு இசையமைத்தார். இவரது இசையில் எந்தவிதமான தனித் தன்மையையும் நம்மால் பிரித்துப் பார்க்க இயலாத அளவுக்கு இளையராஜாவின் நகல் போலவே  இசையளித்தார். மண்ணுக்குள் வைரம் படத்தில் பொங்கியதே காதல் வெள்ளம், இதழோடு என்ற  பாடல்கள் கொஞ்சம் வெளிச்சம் கண்டன. இளையராஜாவை விட்டுப் பிரிந்த பின்  பாரதிராஜா முதன் முதலில் அணுகிய வேற்று இசையமைப்பாளர் இவர்தான். வேதம் புதிது படத்தில் கண்ணுக்குள் நூறு நிலவா, புத்தம் புது ஓலை வரும், சந்திக்க துடித்தேன் போன்ற பாடல்கள் பிரபலமடைந்தன. இருந்தும் இவரால் இங்கே தொடர முடியாததில் பெரிய மர்மங்கள் எதுவுமில்லை.  

              இதே வரிசையில் வந்த இன்னொருவர் ஹம்சலேகா என்ற கன்னட இசையமைப்பாளர்.  இவர்  கன்னடத்தில் முன்னூறு படங்களுக்கு மேல் இசை அமைத்திருப்பவர். பருவ ராகம் என்ற படத்தில் இளைஞர்களைக் கவர்ந்த இவர் பாரதிராஜாவின் கொடி  பறக்குது, கேப்டன் மகள் என்ற இரண்டு படங்களுக்கு இசையமைத்திருந்தார். பருவ ராகம் படத்தின் இளமைத் துடிப்புடன் வந்த  பூவே உன்னை நேசித்தேன்,  ஒரு மின்னல் போல எங்கள் முன்னாள் போவது யாரு?,காதல் இல்லை, கேளம்மா கேளம்மா, யார் இவனோ பாடல்கள்  முனு முணுக்க வைத்தன. சராசரிப் பாடல்கள் என்ற அளவிலேயே இவற்றை நாம் பார்க்கமுடியும். கொடி பறக்குது படத்தின் சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு என்ற பாடல் அப்போது மிகப் பெரிதாக உலா வந்தது. காதல் என்னை  என்ற பாடலும் சற்று தலை காட்டியது. பின்னர் வேலை கிடைச்சிருச்சு, நாட்டுக்கொரு நல்லவன், படங்களில் பணியாற்றினார். கேப்டன் மகள் படத்தின்  எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று  பாடல் ரசனைக்கு ஏதுவாக கேட்கக்கூடிய விதத்தில்  இருந்தது. அவ்வளவே. இவரது இசையைத்தான் இளையராஜா "எதோ டப்பிங் பட இசை போல இருக்கிறது" என்று "பாராட்டினார்" கொடி பறக்குது படம் வந்த புதிதில். இவர் தமிழில் காலூன்ற முடியாததில் வியப்பொன்றுமில்லை.

     87 இல் வந்த ஒரு வெற்றிப் படம் சின்னப் பூவே மெல்லப் பேசு. பிற்காலங்களில் வெறும் ல ல லா இசையமைப்பாளர் என்று பெயரெடுத்த எஸ் எ ராஜ்குமார் அறிமுகமான படமிது. இதில் அவர் சில ரசிக்கக்கூடிய பாடல்களை கொடுத்திருந்தார்.( ஆனால் நான் அதிகம் இவைகளை விரும்பியதில்லை. ) குறிப்பாக சின்னப் பூவே மெல்லப் பேசு, சங்கீத வானில் இரண்டும் மெல்லிசையின் சிறப்பான பதிவுகள். ஏ புள்ள கருப்பாயி என்ற பாடல் மிகவும் பிரபலமான ஒன்று. ஆனால் இவர்  இசையில் எந்த விதமான புதுமையும் இல்லாதிருந்தது. இது  இவரது  பாடல்களை  ஏற்கனவே பத்தாயிரம் முறை கேட்ட சலிப்பையே கொடுத்தது. இளையராஜாவின் முத்திரையை உடைக்கும் இசையை மக்கள் தங்கள் ஆழ்மனதில் எதிர்பார்த்திருந்தார்கள். அதற்கான தகுதிகள் இல்லாத இசையமைப்பாளர்களே இந்த சமயத்தில் தமிழ்த் திரைக்கு வந்தனர். எனவே சில நல்ல சிறப்பான பாடல்களோடு இவர்களைப் போன்றவர்களின் இசையோட்டம் முடிந்து போனது.

  இதற்கிடையில்  ஹிந்திப் படங்களில் இசை அமைத்துக்கொண்டிருந்த  மனோஜ்-கியான் என்ற இருவர் ஊமை விழிகள் என்ற திரைப்படக் கல்லூரி மாணவர்களின் படத்தின் மூலம் 86 இல்  தமிழில் அறிமுகமானார்கள்.  படம் எதிர்பாராத அளவில் பெரிய வெற்றியை அடைந்தது. படத்தின் பாடல்களும் அதே அளவுக்கு பிரபலமானது ஒரு வியப்பான நிகழ்வு. கண்மணி நில்லு, மாமரத்துப் பூ பாடல்கள் மென்மையாக இருக்க திடீர் அதிரடியாக கொஞ்சம் விரக ஓசையுடன் துடித்தது ராத்திரி நேரத்துப் பூஜையில். மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்ட தத்துவப் பாடல்களான நிலைமாறும் உலகில், தோல்வி நிலையென நினைத்தால் இரண்டும் இன்றுவரை பாராட்டப்படுபவை. மனோஜ் கியான் ஒரே படத்தில் கவனத்தை ஈர்த்தனர்.  இவர்களது இசை இளையராஜாவின் சாயலை கொண்டிராது வேறு தொனியில் இருந்தது ஒரு குறிப்பிடத்தக்க அம்சம். சொல்லப்போனால் 86-92 காலகட்டங்களில் இளையராஜாவின் இசைச் சாயலின்றி இசையமைக்க முடியும் என்பதே ரஹ்மானின் வருகைக்குப் பிறகுதான். இருந்தும்  மனோஜ்-கியான் இசையில் நாம் சற்று அதிகமாகவே அவர்களின்  தனித்தன்மை இழையோடுவதைக்  கேட்கலாம். தமிழில் பத்துப் படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ள மனோஜ் கியான் முடிந்தவரை சிறப்பான இசையையே தந்திருக்கிறார்கள். இவர்கள் இசையில் வந்த இன்னொரு அருமையான கானம் வெளிச்சம் படத்தில் இடம் பெற்ற  துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே. இது  ஒரு இனிமையின் விலாசம். இதைக் கேட்கும் போதெல்லாம் பல வகையான காட்சிகள் மனதில் தோன்றுகின்றன. இதைத் தவிர இவர்கள் இசையில் வந்துள்ள இன்னும் சில இன்னிசை கீதங்களை இப்போது உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

என்ன சொல்ல ( ஆனந்த ஆராதனை),
அழகான புள்ளிமானே (மேகம் கறுத்திருக்கு),
செந்தூரப் பூவே இங்கு தேன் சிந்த வா வா (செந்தூரப் பூவே),
மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம், பொன்மானே நில்லடி என்பேரை சொல்லடி, விடுகதை போட்டுவிட்டு விடை ஒன்று தேடுகிறேன் (உரிமை கீதம்), 
நான் முதன் முதல் பாடிய பாட்டு,ஓ  கண்களே,  ஒரு முல்லைப் பூவிடம் கொஞ்சும் (தாய் நாடு),
அந்தி நேர தென்றல் காற்று-  (இணைந்த கைகள்) தென்றலாக வீசும் கீதம். இதுதான் கடைசியாக இவர்களின் இசையில் வந்த நினைவில் நின்ற பாடல் என்று நினைக்கிறேன். இதன் பின் மனோஜ் கியான் காதல் ராசி என்ற படத்திற்கு இசை அமைத்திருந்தார்கள். பின்னர் இவர்கள் பெயர் மறைந்தே போனது.

    எண்பதுகளின் மத்தியில்  ஹிந்தியின்  பிரபலமான இரண்டு இசை அமைப்பாளர்கள் தமிழில் தங்களின் முத்திரையை சற்றே பதித்த நிகழ்வும் நடந்தது.  பூ மழை பொழியுது என்ற படத்தில் ஹிந்தியின் இசை சகாப்தம் என்று வர்ணிக்கப்படும் ஆர் டி பரமனின் இசையில் நதியா நதியா நைல் நதியா என்றொரு பாடல் கவனிக்கத்தகுந்த அளவில் புகழ் பெற்றது. பாபி பட இசை அமைப்பாளர்களாகிய லக்ஷ்மிகாந்த் பியாரிலால் உயிரே உனக்காக என்ற தமிழ்ப் படத்தில் பல சிறப்பான பாடல்களை கொடுத்திருந்தார்கள். தேனூறும் ராகம், பன்னீரில் நனைந்த பூக்கள், பல்லவி இல்லாமல் பாடுகிறேன்,கையாலே உன்னைத் தொட்டால் போதும்,கவிதைகள் விரியும் விழியிலே, ஐ வாண்ட் டு பி எ ரிச் மேன் என்ற பாடல்கள்  ரசனைக்கு ஏற்றவகையில் இருந்தன. கல்லூரி விடுதியில் தனியறை கிடைக்காததால் 25பேர் கொண்ட ஒரு அகண்ட ஹாலில் நான் தங்கியிருந்த சமயத்தில் ஒரு அவஸ்தை (தாமஸ் என்று பெயர்) பன்னீரில் நனைந்த பூக்கள் பாடலை நாள் முழுதும் கேட்டுக்கொண்டிருப்பான். நாள்தோறும் இந்தத் தலைவலி தொடர்ந்தது. அதற்குப் பிறகு இந்தப் பதிவுக்காக இப்போதுதான் மீண்டும் இந்தப் பாடலைக் கேட்கிறேன். இந்தப் படத்தில் என் தனிப்பட்ட விருப்பம்  தாளங்கள் எதுவுமின்றி ஒற்றைக் கிடார் இசையில்  எஸ் பி பி மிக ரம்மியமாகப் பாடும் பல்லவி இல்லாமல் பாடுகிறேன் பாடல்தான். எதோ கடற்கரை மணலில் தனியே வானில் விண்மீன்களைப் பார்த்தவாறு படுத்திருப்பதைப் போன்ற உணர்வை இப்பாடல் அளிக்கிறது- ஒவ்வொரு முறையும்.

     இப்போது சற்று பின்னோக்கிக்  சென்றால் இன்னொரு முக்கியமான நபரை அறிந்துகொள்ளலாம். 80ல்  விழாக் கோலம் கண்ட ஒரு  படம் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும்  ஒரு ஜல்லிக்கட்டுக் காளையைப் போல சீறிப்பாய்ந்தது. இப்படத்தின் வெற்றி பொதுமக்கள் முதல் திரைத் துறையைச் சேர்ந்த பலருக்கும் தணியாத திகைப்பை கொடுத்தது. காரணம் இந்தப் படத்தில் திரையிலும் அதன்  பின்னும்  பணியாற்றிய அனைவருமே (சந்திரசேகர் என்ற நடிகரைத் தவிர) திரையுலகிற்கு மிகப் புதியவர்கள். அதுவரை இவர்களின் பெயர்களை தமிழகத்தில் யாரும் உச்சரித்துக் கேட்டதேயில்லை. ஒரே படம் இப்படத்தில் பணியாற்றிய அனைவரையும் (சற்று மிகைப்படுத்தப்பட்ட சொல்) ஒரே நொடியில் அரியணையில் ஏற்றியது. இதை பலரும் 16 வயதினிலே பட  வெற்றியோடு ஒப்பிட்டு பாராட்டினாலும்   அதன்  வெற்றிக்கு பாரதிராஜா, இளையராஜா பாக்கியராஜ்  கூட்டணியைத் தாண்டி கமல், ஸ்ரீதேவி, ரஜினி போன்ற நட்சத்திரங்களின்  துணை  ஒரு முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் இதுவோ   முற்றிலும் ஒரு அந்நியர்களின் படையெடுப்பு. ஷேக்ஸ்பியர் ஜூலியஸ் சீசரைப் பற்றிப் பேசும்போது  வந்தான், கண்டான், வென்றான் என்று எழுதியது இலக்கிய உலகில்  மிகப் புகழ் பெற்றது. அதே போல் வந்தார்கள் வென்றார்கள் என்றே இந்தப் படத்தை உருவாகியவர்களைப் பற்றி நாம் சொல்லமுடியும்.  அந்தப் படம் ஒரு தலை ராகம். காதலர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளாமலே இருப்பது, டூயட் என்று பாடாதது,காதலன் காதலியைத் தொடாமலிருப்பது போன்ற சங்கதிகள் மக்களிடம் இந்தப் படத்தைப் பற்றிய நல்லெண்ணத்தை உண்டாக்கி இதன் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தன என்று சொல்லலாம். இந்தப்  படத்தில்  ஒரு காட்சி உண்டு. கல்லூரி பிரிவு உபச்சார நிகழ்ச்சியில் மாணவர்கள் பேச முடியாது திக்கித்  திணறி நாடகத்தனமாக அழுதுகொண்டிருக்கும் போது , தொடர்ந்து பேச  வேறொரு மாணவன் எழ எத்தனிக்கையில் குடிகாரனாக வரும் சந்திரசேகர் அவன் தோளை அழுத்தி உட்காரவைக்கும் அந்தக் காட்சிக்கு திரையரங்கம் முழுவதும் ஆர்ப்பாட்டமான உணர்சிக் கொந்தளிப்பைக் காண முடிந்தது.  விசில்கள், கைத்தட்டல்கள், "வாடா வாடா வந்து பேசுடா" என்று குதித்த ரசிகர்கள் என்று அரங்கமே அதிர்ந்தது. இது இன்றைய ஹீரோக்களுக்கு அறிமுகக் காட்சியின் போது கிடைக்கும் அதிரடியான ஆதரவைப் போன்றது. ஏனென்றால் அதன் பின்தான் சந்திரசேகர் அந்தப்  பிரபலமான வெள்ளைப் புறா(!)  சிகப்பாக மாறிய கதை சொல்வார். இப்போது எண்ணிப் பார்க்கையில் மனதை அசைக்கும் ஒரு சோகத்தை அதே சோகங்களுடன் ரசித்த ஒரு சாமானியனின் ரசனை இன்றைக்கு வெறும் உளுத்துப்போன பஞ்ச் வசனங்களுக்குள் தொலைந்து போய்விட்டதே என்ற வருத்தம் வருகிறது.


          படத்தின் எதிர்பாராத மகா வெற்றி  படத்தின் பின்னணியில் வேலை செய்த எல்லோரையும் (லைட் பாய்ஸ் தவிர) இது என் படம் என்று சொல்லவைத்தது. இப்ராஹிம் (இவர்தான் இப்படத்தின் இயக்குனர் என்று டைட்டிலில் காண்பிக்கப்படும்)  என்பவர் தொடர்ந்து தணியாத தாகம் என்று படம் "இயக்கி" தணிந்தே போனார்.  ராபர்ட் ராஜசேகரன் கூட்டணி அடுத்து பாலைவனச் சோலை எடுத்து நம்மை நிமிர்ந்து உட்கார வைத்தாலும் அதன் பின் கல்யாண காலம் என்று ஒரு படம் காட்டி  காணாமல் போனார்கள். படத்தின் இசை அமைப்பாளர்களாகிய டி ராஜேந்தர்-எ எ ராஜ் என்ற இருவரில் முன்னவர் மட்டும் தொடர்ச்சியாக காதல் தோல்விப் படங்களாக படுத்தி எடுத்து  ஒரு தலை ராகம் படத்தின் இயக்குனர்  உண்மையில் யார் என்ற கேள்விக்கு  விடையளித்தார்.

          ஒரு தலை ராகம்  டி ராஜேந்தர் என்ற (இவரை எந்த வகையில் சேர்ப்பது என்ற குழப்பம் இருக்கிறது) புதிய இசை அமைப்பாளரை தமிழ்த் திரையில் கரையேற்றியது.  படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய அளவில் அதன் பாடல்கள் துணை நின்றன. இதில் இடம் பெற்ற ஏழு பாடல்களும் வானொலியிலும்,கச்சேரிகளிலும், டீக்  கடைகளிலும், திருமண மண்டபங்களிலும் விடாது ஒலித்தன. சிறப்பு என்னெவென்றால் இந்த ஏழில் ஒன்றில் கூட மருந்துக்கும் பெண் குரல் கிடையாது. எல்லாமே ஆணின் ஏக்கம்,காதல்,மோகம், குதூகலம்  மற்றும் வேதனையை வெளிப்படுத்திய பாடல்கள்.  குறிப்பாக வாசமில்லா மலரிது கேட்டவுடனே எல்லோரையும் கவர்ந்தது.  டி எம் எஸ்  இந்தப் படத்தில் பாடியதால்தான் மார்கெட்டை இழந்தேன் என்று ராஜேந்தரை மன்னிக்காத குறையாக குற்றம் சாட்டிய என் கதை முடியும் நேரமிது, நான் ஒரு ராசியில்லா ராஜா இரண்டுமே அருமையானவை. மன்மதன்  ரட்சிக்கனும் அப்போது வெகு பிரபலம். ஏகப்பட்ட பெண்களின் பெயர்களோடு ஜாலி ஏப்ரஹாம் குதூகலமாக பாடியதை அப்படியே வீடுகளிலும் பள்ளிக்கூடத்திலும்  பெயர்களை மாற்றிப் பாடுவதில்தான் எத்தனை மகிழ்ச்சி! கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம் ஒரு ஆழமான சோகத்தின் வலியை உணர்த்தும் haunting tune.  கூடையிலே கருவாடு அந்த காலகட்டத்தின் அவசியப்பட்ட அபஸ்வரம். குறிப்பாக இந்தப் படத்தின் மிக சிறப்பான பாடல் என்னைப் பொறுத்தவரை முரண்களின் முத்தாய்ப்பாக ஒலிக்கும்  இது குழந்தை பாடும் தாலாட்டு என்ற பாடலே. இதை ஒரு extended paradoxical oxymoron வகையைச் சேர்ந்தது  என்று குறிப்பிடலாம். (இருந்தும் இது சரியானதா என்று தெரியவில்லை.)

     இது குழந்தை பாடும் தாலாட்டு 
     இது இரவு நேர பூபாளம் 
     இது மேற்கில் தோன்றும் உதயம்    
     இது நதியில்லாத ஓடம் 

     டி ராஜேந்தரை இப்போது ஒரு நகைச்சுவைத்  துணுக்காக பார்க்கும் மனோபாவம் பலரிடம் இருக்கிறது. ஏனென்றால் அவர் சினிமா போஸ்டர் ஓட்டுவதைத் தவிர தன் படத்தின் அத்தனை விஷயங்களையும் தானே வலிந்து  செய்பவர் என்று  பெயர் பெற்றவர். அவருடைய நடிப்பு என்னும் சேஷ்டைகளையும் கோமாளித்தனங்களையும் இயக்கம் என்ற அவஸ்தையையும் இன்னபிற சங்கடங்களையும் மன்னித்து விடுவது உத்தமம். ஆனால் அவர் ஒழுங்காகச் செய்த ஒரே பணி இசை என்று தோன்றுகிறது. அவரது படங்களைப் பார்த்தால் இதை நீங்கள் வேறுவழியின்றி ஒத்துக் கொள்வீர்கள்.  ஒரு தலை ராகத்திற்குப் பிறகு  அந்த கூடாரத்திலிருந்து வெளியேறியவர்களில் வெற்றிகரமாக தமிழ்த் திரையில் உலா வந்தவர்  இவர் மட்டுமே. இவரது பாடல்கள் வந்த புதிதில் தரமானதாகவே இருந்தன.  எண்ணிவிடக்கூடிய சில அற்புதங்களை இவர் படைத்திருக்கிறார் என்பதும்  உண்மையே. இவரது கவிதைகள்   சில எதிர்பாராத ஆச்சர்யங்களைத்  தரக்கூடியது  மேலே உள்ளதைப் போல. ஏறக்குறைய 80களின் இறுதிவரை இவர் பாடல்கள் ரசிக்கக்கூடிய விதத்திலேயே இருந்தன. அதன் பின் இனிமை தேய்ந்துபோய் வெறும் வெற்று ஓசைகளாக இவரது பாடல்கள் முடங்கிப் போயின.

  அட நீல சேல பறக்கையில, தேவலோகம் அழைத்தாலும், கங்கை பொங்குதே என் கண்களோரம், முத்து முத்து ஜாதி முல்ல- வசந்த அழைப்புகள்.

  அட யாரோ பின்பாட்டு பாட, அமைதிக்குப் பெயர்தான் சாந்தி , நூலுமில்லை வாலுமில்லை, வசந்த காலங்கள், வசந்தம் பாடி வர- ரயில் பயணங்களில். இந்தப்  படத்தின் அனைத்துப் பாடல்களும் மிக பிரபலமானவை. அடிக்கடி வானொலிகளில் இவற்றை கேட்கமுடியும் அப்போது. ராஜேந்தரின் கவிதை நயம் மக்களின் கவனத்தை ஈரத்தது இந்தப் படத்தில்தான் என்று நினைக்கிறேன். பெண்களை வர்ணிப்பதில் ராஜேந்தர் ஒரு புதிய பாணியை கொண்டிருந்தார் என்றே சொல்லலாம். குறிப்பாக இதழ்கள் ஊறுமடி என்று ஒரு வரியை இதழ் கள் ஊறுமடி என்று பாடவைத்திருப்பர் வசந்த காலங்கள் என்ற பாடலில். எஸ் பி பியின் மெழுகுக்  குரலில்   வசந்தம் பாடி வர என்ற பாடல் மிகச் சிறப்பானது.

     நெஞ்சில் ஒரு ராகம் என்ற அடுத்த படத்தில் ராஜேந்தர் சில சிறப்பான பாடல்களை அளித்திருந்தார். இதய வாசல்வருகவென்று பாடல் ஒன்று பாடும் (அருமையான ட்ரம்ஸ் இசையுடன் சரியான மேற்கத்திய கலவையாக ஒலிக்கும் அற்புதப் பாடல்.),மேகம்தான் இதில் மழையே  இல்லை (இது ஒரு குழந்தை பாடும் தாலாட்டு பாணியில் இருக்கும் சராசரிப் பாடல்.),  நெஞ்சம் பாடும் புதிய ராகம் ( அடுத்த அற்புதம். ஜானகி பாடலைப் பாட இடையிடையே எஸ் பி பி பெரும்பாலும் ஹம்மிங் செய்துகொண்டே இருப்பது ஒரு நவீனம். எந்த சாயலையும் தன மீது போர்த்திக்கொள்ளாத புதுமையான  இசை பாணி.)

       ராஜேந்தரின் மிக சிறப்பான பாடல்கள்  என்று நான் நினைப்பது ராகம் தேடும் பல்லவி என்ற படத்தில் வரும் ஆழ்கடலில் தத்தளித்து (நானெடுத்த முத்து ஒன்றை விதியவன் பறித்தது ஏன்), மற்றும் மூங்கிலிலே பாட்டிசைக்கும் (இந்தப் பாடலை கேட்கும் போதே மனதுக்குள் எதிரொலிப்பது போல ஒரு உணர்வு வரும். கேட்டதும் சட்டென நெஞ்சத்தை நிரப்பும் பாடல்.) என்ற இரண்டு கானங்களைத்தான். குறிப்பாக ஆழ்கடலில் தத்தளித்து பாடலின் இறுதி சரணத்தில் வக்கிரமான போதைகளில்லாமல் தரமான  தமிழில்  உடைந்த காதலின் வலியை  உணர்த்தும் அபாரமான வரிகள் உண்டு.

       கரைபோல் காத்திருந்தேன் 
       நதியை எதிர்பார்த்திருந்தேன் 
       கதை மாறிடவே 
       கரை வேறு கண்டாள் 
       கால அலைகளுடன் 
       புது நதியைக் கொண்டாள் 
       அது ஏன்?
        என் மனதில் பாலைவனமானேன் 
       மணிவிழியில் சோகக் கடலானேன்.

      தனது படங்களைத் தவிர சில வேறு இயக்குனர்களின் படங்களுக்கும் ராஜேந்தர் இசை அமைத்துள்ளார். பசி இயக்குனர் துரையின் கிளிஞ்சல்கள் படத்தில் இவரது இசையில் "அழகிலினில் விளைந்தது மழையினில் நனைந்தது, விழிகள் மேடையாம்,சின்ன சின்ன கண்ணா" போன்ற பாடல்கள் இன்றளவும் ரசிக்கப்படக்கூடியவை. தொடர்ந்து சட்டம் சிரிக்குது,பூக்களைப் பறிக்காதீர்கள், கூலிக்காரன்,இவர்கள் வருங்காலத் தூண்கள், முத்துகள் மூன்று,பூபூவா பூத்திருக்கு, பூக்கள் விடும் தூது போன்ற படங்களுக்கு இசை அமைத்தார். இதில் பூக்களைப் பறிக்காதீர்கள் படத்தின் பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலமானவைகள். அடி அம்மாடி சின்னப் பொண்ணு (ஒரு மணப் பெண்ணுக்கான சம்பிரதாய அறிவுரைகள்  சொல்லும் பாடல்), காதல் ஊர்வலம் இங்கே, மாலை என்னை வாட்டுது (காதலில் விழுந்த என் உயிர் நண்பன் இந்தப் பாடலை ஒரு கசெட் தேயும் வரையில் ரீவைண்ட் செய்து ரசிப்பதைக் கண்டு நான்  வியந்து போனேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சுவை பிடிக்கிறது.) மானே தேனே, பூக்களைத்தான் பறிக்காதீங்க  போன்ற பாடல்கள் நல்ல வரவேற்பைப்  பெற்றன.  கூலிக்காரன் படத்தின் வச்ச குறி தப்பாது,குத்து விளக்காக குல மகளாக நீ வந்த நேரம் பாடல்களும் கவனத்தை ஈர்க்கத் தவறவில்லை.

     ராகம் தேடும் பல்லவிக்குப்  பிறகு ராஜேந்தரின் பாடல்கள் என்னைக் கவரவில்லை என்பதை இங்கே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இருந்தும் இதன் பிறகே அவர் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டார். கீழே அவருடைய வெற்றி பெற்ற பாடல்களை குறிப்பிட்டுள்ளேன். என்னைப் பொறுத்தவரை உண்மையான இசை ரசனை கொண்டவர்கள்  இதிலுள்ள முக்கால்வாசி பாடல்களை junk music என்று ஒதுக்கிவிட வாய்ப்புள்ளது.

         ராஜேந்தரின் திரைப் படங்களில்  மிகப் பெரிய அளவில் வணிக வெற்றியை பெற்றது  உயிருள்ளவரை உஷா. ஆயிரம் முறை சுட்ட அதே  கல்லூரிக்   காதல் தோசைதான். படம் படு செயற்கையாக பார்பதற்க்கே எரிச்சல் மண்டிக்கொண்டு வரும். கொஞ்சம் இளைஞர்களின் நாடித்துடிப்பை சீண்டிப் பார்க்கும்  காட்சிகள் (பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை ஆரம்பித்து வைத்த  கோளாறு.), ராஜேந்தரின் கிளாசிக் கோமாளித்தனம், அபத்தமான கல்லூரிக் காட்சிகள் ,சரவெடியாக வெடித்த பாடல்கள் என இந்தப் படம் எகிறிக் குதித்தது. அனைத்துப் பாடல்களும் உரத்து ஒலித்தன. இளையராஜா  உச்சத்தில் இருந்த சமயத்தில்  அவர் பாடல்களுக்கு இணையான  அதிரடி ஹிட் கொடுத்தவர் ராஜேந்தராகத்தான் இருக்க முடியும். இதை அவர் தொடர்ந்து மூன்று நான்கு படங்களில் செய்தார். ராஜேந்தரின் பாடல்களுக்கு பள்ளிச் சிறுவர்களும் கல்லூரி மாணவர்களும் கொண்ட  ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. வெற்றிக்காக தன் இலக்கியத் தரமான கவிதையைக்  கூட அவர்  துறந்தாரோ  என  எண்ணுமளவுக்கு பெண்களைக் கிண்டல் செய்ய ஏதுவான பாடல்கள் இந்த காலகட்டத்தில் ராஜேந்தரின் இசையில் அதிகம் வந்ததும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். உயிருள்ளவரை உஷா படத்தின் பாடல்களான அடி என்னடி பந்தாடும் பாப்பாக்களே (Obviously no pun intended), இதயமதை கோயில்  என்றேன், இந்திரலோகத்து சுந்தரி ராத்திரி, கட்டடிப்போம் கட்டடிப்போம் காலேஜுக்கு,மோகம் வந்து தாகம் வந்து (பாடலின் நடுநடுவே வரும் இச்சை ஹம்மிங் இல்லாதிருந்தால்  இது ஒரு சகித்துக்கொள்ளக் கூடிய  பாடல் என்பதில் சந்தேகமேயில்லை. இதற்கு முன்பே இளையராஜா இந்த புது "நவீன" பாணியை வெற்றிகரமாக துவக்கிவைத்துவிட்டார்.) உன்னைத்தானே அழைத்தேன், வைகைக் கரை காற்றே நில்லு (இந்தப் படத்தின் ஒரே நல்ல பாடல் இதுதான். அருமையான தென்றலாக வீசும் கீதம்.) எல்லாமே மிகப் பெரிய அளவில் வெற்றி அடைந்தன.

        இதன்பின் தங்கைக்கோர் கீதம் என்ற படத்தில் டிஸ்கோ அதிரடியாக வந்த தினம் தினம் , இது ராத்திரி நேரம் (இளையராஜா ஆரம்பித்த இசைச் சீரழிவின் நீட்சி . ஆனால் நிலா காயுது, பொன்மேனி உருகுதே  அளவுக்கு மோசமில்லை. சசி ரேகாவின் கிளர்ச்சியூட்டும் குரல் கேட்க நன்றாகவே இருக்கிறது.) பகலென்றும் இரவென்றும் பூமியிலே நடமாடும், தங்க நிலவே ( ஒரு சாமானியனின்   கனவுகளை கவிதையாக வடித்த  இன்னுமொரு  வழக்கமான "தங்கச்சிப்" பாடல்.) தஞ்சாவூரு மேளம், அதன் பின் இன்றுவரை ராஜேந்தரை நக்கல் செய்ய  ஒரு ஆயுதமாக பலர் பயன்படுத்தும் தட்டிப் பாத்தேன் கொட்டங்குச்சி போன்ற பாடல்கள் திகைப்பூட்டும் வகையில் பெரிய வெற்றி பெற்றன.

      உறவைக் காத்த கிளி (இந்த மல்லிகை மனச, எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி - கொஞ்சம் ரசிக்கத்தக்க பாடல் இது மட்டுமே.)
மைதிலி என்னைக் காதலி (அட பொன்னான மனசே நீ வைக்காதே பொண்ணுமேலே ஆச -லேசாக எட்டிப்பார்க்கும் இன்றைய கானா  தொனியை இதில் காணலாம். என் ஆச மைதிலியே - வெற்றிகரமாக ரீமிக்ஸ் செய்யப்பட்ட பாடல். எங்கும் மைதிலி எதிலும் மைதிலி, கண்ணீரில் மூழ்கும் ஓடம், மயில் வந்து மாட்டிக்கிட்ட பாதையிலே, நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை, ராக்கால வேளையிலே, சலங்கையிட்டாள் ஒரு மாது (இதுவே ஒரு சிறிய திருப்தியை கொடுத்த பாடல்.)
ஒரு தாயின் சபதம் (ராக்கோழி கூவையிலே,சொல்லாமத்தானே இந்த மனசு தவிக்குது-  இது வேறு எதோ ஒரு  பாடலை நினைவு படுத்துகிறது.)
 போன்ற படங்கள் ராஜேந்தரின் இருப்பை உறுதி செய்தன. ராஜேந்தரின் பாடல்களில் இடையிடையே வரும் அர்த்தமில்லாத வார்த்தைகள் -ஓசைகள் என்று சொல்லலாம்- தற்போதைய ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் நாம் கேட்கும் ஓசைகளை நினைவுபடுத்துகிறன. ஒருவேளை இங்கிருந்துதான் இந்த அலை புறப்பட்டதோ என்று சந்தேகமாக இருக்கிறது.

     இதற்கிடையில் ராஜேந்தர் அரசியல் சாயம் பூசிக்கொண்ட கதையும்   நிகழ்ந்தது. அப்போது முதல்வராக இருந்த எம் ஜி ஆரை எதோ ஒரு விதத்தில் பகைத்துக்கொண்ட ராஜேந்தர் திடீரென தி மு க வில் இணைத்தார். இதன் காரணமாக தீவிர தி மு க விசுவாசிகளின் கவனம் அவர் படங்களின் மீது திரும்பியது. உறவைக் காத்த கிளி (என்று நினைக்கிறேன்) படத்தில் வரும் ஒரு வில்லி ஜெயலலிதாவை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டதாக அப்போது பேச்சு எழுந்தது. கல்லூரியில் நான் படித்துக் கொண்டிருந்த போது ஒரு தீவிர தி மு  க அனுதாபி என் வகுப்பில் இருந்தான். அவன் ராஜேந்தரின் பாடல்களை வெகுவாக ரசிப்பதுண்டு. எரிச்சலடைந்த ஒரு கணத்தில் ஒரு முறை அவனிடம் நான் சொன்னேன்: "என்ன இருந்தாலும் ராஜேந்தரால் இளையராஜா அளவுக்கு இசை அமைக்க முடியாது." (இதில் எந்த உள்குத்தும் இல்லை. ஏனென்றால் நான் அப்போது ராஜேந்தரின் நான்கைந்து  பாடல்களைத் தவிர மற்றவற்றை அறவே வெறுத்தேன். இப்போது ஒரு பத்து தேறும் அவ்வளவே வித்தியாசம்.) அவன் சொன்னான்: "ராஜேந்தர் கதை திரைக்கதை வசனம் ஒளிப்பதிவு இசை பாடல்கள் எடிட்டிங் தயாரிப்பு இயக்கம் என எல்லாவற்றையும் செய்கிறார். அப்படியும் அவர் பாடல்கள் சிறப்பாக இருக்கின்றன. அவர் மட்டும் இசை ஒன்றை மட்டுமே செய்தால் இளையராஜா காணாமல் போய்விடுவார்." அவன் சொன்னது என் சிந்தனைக்கு நல்ல உணவாக இருந்தது. ஆனால் இது ஒரு அதீத கற்பனை என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. ராஜேந்தர் சில நல்ல பாடல்களை கொடுத்திருகிறார். அதை மறுப்பதற்கில்லை.  ஆனால் அதுவே  இளையராஜா போன்ற இசை ஆளுமைகளை விழுங்கி விடக்கூடிய பலத்தை அவருக்கு கொடுத்துவிடவில்லை. நன்றாக துவங்கியவர் பின்னர் கண்ணா பின்னாவென்று இசை என்ற பெயரில் பல கண்றாவிகளைப் படைத்து தன் கோமாளித்தனங்களால் ஒரு சிறிய நகைச்சுவை நாயகனாகிப் போனார். இன்று அவர் சிம்பு என்ற நடிகனின் தந்தையாகவே பார்க்கப்படுகிறார். அவருடைய அருமையான கானங்கள் இன்று மக்களால் நினைக்கப்படுவதேயில்லை. அவரும் சில அற்புதங்களைக் கொடுத்தார் என்பதையே சிலர் நம்புவதில்லை. விசித்திரம்!

         சில பாடல்களை  காரணமில்லாமலே விரும்புவதும் வெறுப்பதும் இயல்பான  ஒன்று. காதல் செய்வதற்கு என்ன காரணம் ஒருவருக்கு தேவைப்படுகிறது?. "கேட்க நல்லா இருக்கு" அல்லது "சகிக்கலை". ஒரு பாடலை தீர்மானிக்க இதுவே போதும். . என் நண்பனொருவன்   தன் ஸ்மார்ட்போனில் ரிங் டோனாக கண்கள் இரண்டால் என்ற ஒரு பாடலை நீண்ட நாட்கள் வைத்திருந்தான். நல்ல பாடல்தான். (ஆனால் நான் அவ்வளவாக விரும்புவதில்லை.) சந்தர்ப்பம் கிடைத்த போது அதைப் பற்றி விசாரித்தேன். "ரொம்ப நல்லாயிருக்கு. அடிக்கடி கேட்பேன்." என்றான் . "அழகான  ராட்சஸியே பாடல் பிடிக்குமா?" என்றேன். "மணிஷா கொய்ராலா மூஞ்சியிலே பானையை மூடிக்கிட்டு ஓடுவாளே அதானே? அவளைப் பிடிக்கும். பாட்டு அவ்வளவா பிடிக்காது." என்றான் . நான் தொடர்ந்து   "சின்னக் கண்ணன் அழைக்கிறான் என்ற பாடல் பிடிக்குமா?" எனக்  கேட்டேன். எதிர்பார்த்தபடியே  "இல்லை." என்றான். "எதோ ஒரு  பழைய கருப்பு வெள்ளைப் படத்தில் அப்பாடல் வரும். டி வியில் பார்த்த ஞாபகம் இருக்கிறது. சாமி பாடல் போல இருக்கும். " என்று தொடர்ந்து எனக்கு அதிர்ச்சியூட்டினான். பின்னர் "ஏன் கேட்கிறாய்?" என்றான். " மூன்று பாடல்களும் ஒரே ராகத்தில் அமைந்தவை. அதனால்தான்." என்றேன். அந்தச் செய்தி அவனை சிறிதுகூட பாதிக்கவில்லை. மேலும் அதைப் பற்றி அவன்  அக்கறை கொண்டதாகவே தெரியவில்லை. "அதிலென்ன இருக்கிறது? ஒரே ராகமாக இருந்தால் என்ன? எனக்குப் பிடிக்கவில்லை." என்றான் ஒரேடியாக.  அதற்கு மேல் அவனிடம் நான் எதற்குப் பேசப் போகிறேன்?

          அடிப்படையான ஒரு கேள்வி இங்கே எழுகிறது. ராகங்களைக் கொண்டா நாம் ஒரு பாடலை அடையாளம் காண்கிறோம்? அல்லது ராகங்களே  பாடல்களின் சிறப்பையும் தரத்தையும்  தீர்மானிக்கின்றனவா? அப்படியென்றால் நாம் கேட்கவே  விரும்பாத கேடுகெட்ட கண்றாவிகளும் எதோ ஒரு மேன்மையான ராகத்தில்தானே அமைக்கப்பட்டிருக்கின்றன? இருந்தும் அதை நாம் ஏன் சிறப்பாகக் கருதுவதில்லை?  ஏனிந்த முரண்? குழப்பமாகக் கலைந்து கிடக்கும் இந்தக் கோடுகளை சற்று ஆழமாக நோக்கினால் நமக்கு ஒரு தெளிவான காட்சி தென்படும். அது இதுதான்: உண்மையில் ராகம் ஒரு பாடலின் குறிப்புச் சட்டம் போன்றது. அது ஒரு வரை படம் அவ்வளவே. ராகத்தின் மீது  எழுப்பப்படும் மெட்டே (Tune) ஜீவக் காற்றை ஒரு பாடலுக்குள் செலுத்தி அப்பாடலை  உயிர் பெறச் செய்கிறது. எனேவேதான் ராகத்தைப் பற்றிய  அரிச்சுவடி  அறியாத ஒரு பாமரனால் கூட   ஒரு சிறப்பான பாடலை இலகுவாக ரசிக்க முடிகிறது.  பொதுவாக பல சமயங்களில் ராகங்கள் என்று சொல்லப்படுவது  ஒரு பாடலின் மெட்டைக் குறித்துத்தான்  என்று நான் நினைக்கிறேன். மற்றபடி ஒரு ராகத்தின் உட்கூறுகளை தெளிவாகப் படம் பிடிக்கும் திறமை சிலருக்கே கைக்கூடுகிறது. தவிர இந்த ராக ஆராய்ச்சி ஒரு வித அலங்கார மேதமை கொண்டது. அது இசை விற்பன்னர்கள் தாங்கள்  மற்றவர்களைவிட உயர்ந்த இடத்தில்  இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் பகட்டான யுக்தி. ஒரு பாடலைப்  படைப்பதற்கு இது  அவசியப்படுகிறது. ஆனால் அதே பாடலை ரசிப்பதற்கு இதன் துணை கட்டாயமில்லை. ஏனெனில் உண்மையான ராகங்கள் என்னவென்றே தெரியாமல்தான்  பல கானங்கள்  காலம் காலமாக இங்கே ரசிக்கப்பட்டுக்கொண்டு வருகின்றன. மேலும் இந்த அறியாமை நம் இசை ரசனையை எவ்விதத்திலும் இடையூறு செய்வதில்லை.

        நம் கண்களுக்குத் தெரியாத பகல் விண்மீன்கள் போல, நாம் திறக்க மறந்த ஜன்னல்களைப் போல, அலட்சியம் செய்யப்படும் நம் மீது தெறித்து விழும் மழைச் சாரல்கள் போல எத்தனையோ  இசை இன்பங்கள் இங்கே கொட்டிக்கிடக்கின்றன. சற்று சிரத்தை எடுத்தால் , கொஞ்சம் முயன்றால், கையளவு கவனம் கொண்டால் இசையின் எல்லைகளற்ற மகத்துவத்தை, அதன் பல முகங்களை  எவ்வித முரணுமின்றி  நாம் அனுபவிக்கலாம். கடலில்தான் எத்தனைத் துளிகள் இருக்கின்றன! கொஞ்சம் உற்றுக் கேட்டால்  ஒவ்வொரு துளியும் ஒரு கதை சொல்லும்.



அடுத்து : இசை விரும்பிகள் XVII -  சுவர்களைத் தாண்டி.....






44 comments:

  1. இரண்டு கேள்விகளுக்கு எனக்கு முழுமையான விளக்கம் தருவீர்களா?

    1, இளையராஜாவின் பாணி என்று சொல்கிறார்களே அப்படி எதைப் புதிதாகக் கண்டு பிடித்துத் தனக்குத் தனித்தன்மையை ஏற்படுத்தினார்.(அப்படி அவர்தான் கண்டுபிடித்தார் என்றால் அதற்குச் சரியான ஆதாரம்)

    2, மற்ற இசை அமைப்பாளர்கள் மக்கள் மனங்களில் நிலைக்காமல் போனதற்கு என்ன என்ன காரணிகள்?

    உங்களிடம் இருந்து இன்னும் பல உண்மைக் காரணிகளை எதிர்ப்பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. மேலே நீங்கள் சொல்லும் பாடல்கள் எளிமையான மனிதர்களுக்கு முழுமையாகக் கிடைக்காததால் முழு வெற்றிக் கிடைக்கவில்லை.

    சாதாரண மனிதர்களுக்கு எளிமையாகச் சென்றடையும் பொருள்கள் தான் வணிக வெற்றிக் கிடைக்கிறது. அந்தப் பொருள்கள் தான் மனித மனதில் நிலைக்கிறது.

    நோகாமல் நோன்பு கும்பிடும் மனிதர்கள் இருக்கும் வரை எவ்வளவு திறமை இருந்தாலும் இரண்டாம் தர மனிதனின் நிலை என்றுமே ஜொலிப்பதில்லை.

    ReplyDelete
  3. காரிகன்,
    நல்ல நுணுக்கமாக எழுதப்பட்ட அருமையான பதிவு. படித்து வியந்தேன். நிச்சயமாக உங்களின் கடின உழைப்பை பாராட்டவேண்டும். வழக்கம் போலவே இளையராஜாவை கிடைத்த கேப்பில் சட்டினி ஆட்டியிருக்கும் உங்கள் பாணி இதிலும் இருக்கிறது. சரியா?

    ReplyDelete
  4. காரிகன், கொஞ்சநஞ்சமல்ல, நீங்கள் மேற்கொண்டிருக்கும் முயற்சி பாராட்டுக்களுக்கு அப்பாற்பட்டது என்றே சொல்வேன். தான் சொல்ல நினைத்த ஒரு கருத்தை- ஏதோ கையில் அகப்பட்ட சில விஷயங்களை மட்டும் வைத்துக்கொண்டு சொல்லிச் சென்றுவிடாமல், ஒவ்வொரு விஷயத்தையும் நுணுகி ஆராய்ந்து, அதற்கேற்ற பாடல்களைத் தெரிவு செய்து, அதனை 'முறைப்படிக் கேட்டு அனுபவித்து' அது தரும் அனுபவங்களை உள்வாங்கி, அதன் நீக்குப் போக்கறிந்து, அதன் உற்பத்தியாளர்கள் பற்றிய தகவல் சேகரித்து, அவற்றின் பின்புலம் அறிந்து அதற்குப்பின் இங்கே பரிமாறி உங்கள் கருத்தையும் வைத்திருக்கிறீர்கள் என்பது சாதாரணமான ஒன்றல்ல.

    இதனை மேம்போக்காகப் படிக்கும் எவருக்குமே எத்தனைப் பேர் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார்கள் இங்கே என்ற வியப்பே முதலில் வரும்.

    பலருடைய இசை ஏதோ அந்தக் காலத்தில், அந்தப் படங்களுக்கு மட்டுமே பொருந்தியதாக இருந்து சில காலம் வானொலியில் மட்டும் வந்து பின்னர் காலாவதியாகிப்போன நிலையில் 'அடடா, இந்தப் பாடலுக்குக் கிடைக்கவேண்டிய முக்கியத்துவம் கிடைக்காமல் போய்விட்டதே' என்ற வருத்தம் அந்தக் குறிப்பிட்ட படைப்பாளிக்கு இருந்திருந்து அவர் இந்தப் பதிவைப் படிக்க நேர்ந்தால் நிச்சயம் அவர் விழியோரங்களில் ஈரம் கசியும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். இது ஒரு அரிய சாதனை.

    குறிப்பிட்ட ஒருவருடைய இசையை மட்டுமே புகழ்ந்து பஜனை பாடிக்கொண்டிருக்கும் ஒரு காரியத்தைத்தான் இணையத்தில் சிலர் வேண்டுமென்றே செய்துகொண்டிருக்கிறார்கள். ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தால் மக்கள் மனதில் அது அப்படியே படிந்துவிடும் என்ற 'சைக்காலஜியை'ப் பயன்படுத்துவதாக நினைத்துக்கொண்டு சிலர் இதனைச் செய்துகொண்டிருக்கிறார்களாம்.

    கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் வாரத்திற்கு ஒரு பத்துப் பதிவுகளாவது 'அவர் பாட்டு மட்டும்தான் பாட்டு' என்ற அர்த்தத்தில் வந்துகொண்டிருப்பதைக் காணலாம். இதன் ரிசல்ட் என்னவென்றால் "அம்மாதிரிப் பதிவுகள் பார்த்தாலேயே அந்தப் பக்கமே போவதில்லை. கடந்துபோய்விடுகிறேன்" என்று சொல்கிறார்கள் நண்பர்கள்.

    இது ஒரு நல்ல ரிசல்ட்.

    அப்படியிருக்க, தமிழில் யார் யாரெல்லாம் என்னென்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் என்பதை 'அருத்தம் திருத்தமாகப்' பட்டியலிட்டு அவர்களை முன்னிலைப்படுத்தி, அந்தப் பாடல்களையெல்லாம் மக்கள் முன் கொண்டுவந்து நிறுத்தி "தமிழ்த்திரை இசையைச் சிறப்பித்திருக்கும் விற்பன்னர்களைப் பாரீர்" என்று இன்றைய தலைமுறைக்குச் சொல்லும் முக்கியமான சாதனையாக தங்களின் இந்தக் கட்டுரைகளை நினைக்கிறேன் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. \\இன்னொரு அபூர்வமான பாடலை இங்கே குறிப்பிடவேண்டும். இந்தப் பாடலை விரும்பாதவர்களை நான் இதுவரை சந்தித்ததில்லை. இருப்பார்களேயானால் அவர்களை சந்திக்க விருப்பமும் இல்லை.\\

    தங்களின் அபரிமிதமான தகவல்களுக்கு இடையில் வரும் இப்படிப்பட்ட வார்த்தைகளையும் மிகவும் ரசித்தேன். உங்கள் எழுத்தாற்றல் மட்டுமல்ல, மிகத் தேர்ந்த வாசிப்பும் இருந்தால்தான் இப்படிப்பட்ட வரிகள் சாத்தியம்.

    கீழேயுள்ள இந்த வரிகளையும் அதுபோன்றே சொல்லலாம்.

    \\இவரது இசையில் பெரிய அளவில் வெற்றி பெற்ற பாடல்கள். ஆனால் பெரிய உயரிய ரசனைக்கு உட்படாதவைகள். முகச் சவரம் செய்துகொண்டோ, அல்லது நாளிதழை புரட்டிக்கொண்டோ கவனமில்லாது சற்று கேட்கலாம் அவ்வளவே. மறந்து விட்டாலும் பாதகமில்லை. மன்னிப்பு உண்டு. ஏனென்றால் இவைகளைப்போல ஒரு பத்தாயிரம் கருமாந்திரங்கள் நம்மிடம் இருக்கின்றன.\\


    \\அடுத்து வி எஸ் நரசிம்மன் என்ற தேர்ந்த வயலின் வித்வான் ஒருவரை பற்றி பேசவேண்டியது அவசியம் என்றுனர்கிறேன். இவர் இளையராஜாவின் குழுமத்தில் வயலின் வாசித்தவர். How To Name It? என்ற அவரது முதல் இசைத் தொகுப்பில் வரும் அந்த வயலினிசை நரசிம்மனுடையது.\\

    நரசிம்மன் இளையராஜாவிடம் வருவதற்கு முன்பு எம்பி சீனிவாசனிடம் உதவியாளராக இருந்தார். நானும் சுஜாதாவும் எம்பிஎஸ் வீட்டிற்குப் போயிருந்தபோது ஒரு பாடலுக்கான ரிகர்சல் நடைபெற்றுக்கொண்டிருந்தது. "மிகப்பிரமாதமாக வரப்போகும் என்னுடைய உதவியாளர்" என்றுதான் திரு நரசிம்மனை எம்பிஎஸ் அறிமுகம் செய்துவைத்தார். சில அசிஸ்டெண்டுகள் ஏன் பிரமாதமாய் வருவதில்லை என்பது ஒரு பெரிய ஆராய்ச்சிக்கு உட்பட்டது.

    மனோஜ்- கியான் இந்தியின் புகழ்பெற்ற லக்ஷ்மிகாந்த்- பியாரிலாலின் உதவியாளர்கள் என்று நினைக்கிறேன்.

    பாரதிராஜாவுடன் இளையராஜாவுக்குத் தகராறு ஏற்பட்டு அவர் தேவேந்திரனைக் கொண்டுவந்த மாதிரி, கோவைத்தம்பிக்கும் இளையராஜாவுக்கும் தகராறு ஏற்படவே அவர் பம்பாய்க்குப் பறந்துசென்று அழைத்து வந்தவர்கள்தாம் லக்ஷ்மிகாந்த்- பியாரிலால் ஜோடி. என்னவெனில் இவர்களால் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. அதே சண்டை கே.பாலச்சந்தருக்கும் இளையராஜாவுக்கும், மணிரத்தினத்திற்கும் இளையராஜாவுக்கும்(இவர் யார் யாருடன் சண்டைப் போட்டிருக்கிறார் என்பதுபற்றி வவ்வால் போன்றவர்கள் கள ஆய்வில் ஈடுபட்டு நல்ல பதிவு ஒன்றை எழுதலாம்) ஏற்படவே இவர்கள் அழைத்து வந்தவர்தான் ஏ.ஆர்.ரகுமான். இவரால் ஏற்பட்ட 'மாற்றம்' என்னவென்பது உலகுக்கே தெரியும்.

    ஒருதலை ராகம் படம் மட்டுமல்ல, பாடல்களும் ஒரு புரட்சியையே ஏற்படுத்தியவைதாம். கதையும், பாடல்களும் பாடல்களுக்கான மெட்டுக்களும் டி.ராஜேந்தருடையவை. மற்றபடி அந்தப் படத்தின் முழு வடிவத்திற்குச் சொந்தக்காரர்கள் ராபர்ட்-ராஜசேகர் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் அந்தப் படத்தின் வெற்றி டி.ராஜேந்தருக்கு 'அள்ளித்தந்த வானத்தைப்போல' புகழையும் பெருமையையும் வாய்ப்புக்களையும் கொண்டுவந்து குவித்தது வரலாறுதான்.

    அதற்குத் தகுதியானவராக அவர் தம்மை வெளிப்படுத்திக்கொண்டதெல்லாம் அதிர்ஷ்டத்தை மட்டுமே சார்ந்தது என்று சொல்லமுடியாது. முற்றிலும் திறமையைச் சார்ந்ததுதான்.

    ரீதி கௌளை ராகத்தைப் பற்றிய உங்களின் லேசான கிண்டலையும் ரசித்தேன். அந்த ராகத்தில் அவ்வளவு எளிதாக பாடல் அமைக்கமுடியாது என்கிற மாதிரி நிறையப்பேர் சொல்லிக்கொண்டிருக்க ரொம்பவும் அசால்ட்டாக கண்களிரண்டால்- பாடலைப்போட்டு அசத்தினார் ஜேம்ஸ் வசந்தன்.

    ReplyDelete
  6. காரிகன் அவர்களுக்கு,

    முதலில் ஒவ்வொரு கட்டுரைக்கும் முன்னாலான உங்களின் உழைப்புக்கு, அசாதாரணமான களப்பணிக்கு எனது மரியாதை கலந்த பாராட்டுகள் ! உங்களின் இந்த சீரிய பணியை பற்றி நான் சொல்வதற்கு முன்னாலேயே, என்னைவிட வயதிலும் அனுபவத்திலும் மூத்தவரான திரு.அமுதவன் அவர்கள் மிக சரியான வார்த்தைகளில் பின்னூட்டமிட்டுவிட்டார்கள் !

    நீங்கள் இந்த கட்டுரையில் குறிப்பிட்ட பல பாடல்கள் இளையராஜாவினுடையது என்றே நம்பியிருந்தவர்களில் நானும் ஒருவன் ! இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று தமிழ் சினிமாவை பற்றிய ஆவணப்படுத்தபட்ட, ஆய்வுப்பூர்வமான பட்டியல் இல்லை என்பதே ! தமிழ் சினிமா உலகின் இசையை பொறுத்தவரையில், அந்த குறை உங்களின் வலைப்பூவின் மூலம் களையப்படிருக்கிறது.

    ...இந்தப் பாடலை விரும்பாதவர்களை நான் இதுவரை சந்தித்ததில்லை. இருப்பார்களேயானால் அவர்களை சந்திக்க விருப்பமும் இல்லை...

    உண்மைதான் ! கெட்ககூட வேண்டாம், " காக்கை சிறகினிலே.. " என உங்களின் கட்டுரையில் அந்த பாடலின் வரிகளை படித்த போதே அந்த காலகட்டத்தில், சிறுவனாய், அப்பாவின் சைக்கிளின் முன் பாரில் நின்றுகொண்டு அவரின் பிடறியை அணைத்தபடி மார்க்கெட் சென்றுவரும் ஞாபகம்... அப்பாவின் வியர்வை வாசனை, மீன் வாசனை, காய்கறிகளின் மண் வாசனை என எல்லாம் கலந்த மணம் மீன்டும் என் நாசியில் ! பாலியத்தின் பரவச நினைவுகளை சுமந்து மறைந்த அந்த திரும்பா நட்களை மீன்டும் மனதிரையில் சாத்தியமாக்குவது இதுபோன்ற இறவா கீதங்களே ! அந்த சூழ்நிலைகளில் இந்த கானங்களை ஒலிக்கசெய்து இறவா தருணங்களாக்கிய புண்ணியம் நீங்கள் கூறிய வானொலிகளுக்கே !!
    டி. ராஜேந்தரை எதில் சேர்ப்பது என்ற கேள்வியுடன் அவரை பற்றி நிறையவே எழுதியிருக்கிறீர்கள். தமிழ் சினிமாவில் ராஜேந்தருக்கென ஒரு இடம் இருந்தது என்பதை மறுக்க முடியாது ! அவரை பற்றி நீங்கள் பட்டியலிட்ட அனைத்தையும் தாண்டி வெகுஜனம் கவர்ந்த நடிகராகவும் அவர் ஒருகாலகட்டத்தில் வலம் வந்தார். ஸ்டைல் என்றாலே ரஜினிகாந்த் என்றிருந்த காலகட்டதில், ரஜினிகாந்தையே சற்று ஓரமாய் நிற்கவைத்துவிட்டு, முகத்தில் விழும் முடியை வழித்தபடி " மச்சி " என தமிழ்சினிமாவின் விசிலடிச்சான் குஞ்சுகளை சலம்ப வைத்தவர் டி. ராஜேந்தர் !

    மென்மையான இசையமைப்பாளாராகவும், காதல் கவிஞராகவும் ராஜேந்தர் தன் பங்களிப்பை குறிப்பிடும்படியாகவே கொடுத்துள்ளார் என்பது என் கருத்து.

    " தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி
    தாமரைப்பூமீது விழுந்ததுவோ...
    அதைகண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்
    படைத்திட்ட பாகம்தான் உன் கண்களோ ! "

    போன்ற அவரின் காதல் வரிகள் விடலை காதலர்களை வீழ்த்தும் வல்லமை கொண்டவையாகவே விளங்கின !

    " அதிகாலை நேரம் சுபுஹுக்கு பின்னே... " என்ற இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனிபாவின் பாடல், இஸ்லாமிய சகோதரர்களையும் தாண்டி அனைத்து மதத்தினரையும் வசீகரித்த பாடல். அந்த பாடலுக்கு இசை அமைத்தவர் ராஜேந்தர். ஒரு தலை ராகம் படத்துக்கு முன்னால் நிகழ்ந்தது இது.

    " அதற்குத் தகுதியானவராக அவர் தம்மை வெளிப்படுத்திக்கொண்டதெல்லாம் அதிர்ஷ்டத்தை மட்டுமே சார்ந்தது என்று சொல்லமுடியாது. முற்றிலும் திறமையைச் சார்ந்ததுதான். "

    திரு. அமுதவனின் இந்த கருத்துக்கு நானும் உடன்படுகிறேன். அப்படிபட்ட டி. ராஜேந்தர் இன்று ஒரு அரசியல் கோமாளியாக, பவர்ஸ்டார் ரேஞ்சுக்கு ( ஒப்பீட்டுக்கு மன்னிக்கவும் ! ) பந்தாடப்படுவது நீங்களே குறிப்ப்ட்டது போல விசித்திரம்தான் !

    புறக்கணைக்கபட்ட அன்பும், அங்கீகரிக்கபடாத திறமையும் வாழ்வின் இருபெரும் சோகங்கள். செல்லுலாய்டின் புகழ் வெளிச்சம் பரவாத மூலைகளில் தங்கிவிட்ட திறமைசாலிகளை வெளிச்சமிடும் உங்களின் பணி நிச்சயம் பாராட்டபட வேண்டியது. .

    நன்றியுடன்
    சாமானியன்.

    ReplyDelete
  7. மேலே உள்ள எனது பின்னூட்டத்தில் பதிவாகியுள்ள " கெட்ககூட " " நட்களை " " புறக்கணைக்கபட்ட " ஆகிய எழுத்து பிழைகளுக்கு வருந்துகிறேன் !

    ReplyDelete
  8. இளையராஜா இசை வெறுக்கும் இசை விரும்பியே காரிகனே!

    மற்ற எந்த இசை அமைப்பாளரையும் விட மோசமானவர் இளையராஜா என்பதை சொல்லும் உங்களின் வழக்கமான பல்லவி இந்த மற்றுமொரு பதிவு . காணாமல் போனவர்கள் பற்றிய செய்தி போல இருந்தது. இளையராஜா என்ற இமயத்தோடு ஒப்பிடாமல் இந்த சிறு குன்றுகளை பாராட்டினால் உங்களையும் பாராட்டலாம் . இளையராஜா ரசிகர்களை வெறுப்பேற்றும் நோக்கில் எழுதப்படும் பதிவு என்பதால் பாராட்ட முடியவில்லை.

    மேலே குறிப்பிட்டிருக்கும் கருமாந்திரங்களை .... சாரி.... பாடல்களை எல்லாம் நானும் கேட்டிருக்கிறேன். ( கருமாந்திரம் நீங்கள் கற்றுக் கொடுத்த வார்த்தைதான் ... அடிக்கடி கேட்டு பழகிப் போச்சு..ஹி..ஹி ) இளையராஜா பாட்டுக்கள் கருமாந்திரங்கள் என்று உங்களால் சொல்லப்படும்போது மற்றது எப்படி பாட்டுக்களாகும் !?
    இளையராஜா பாடல்கள் நூறு சதவீதம் ரீச் ஆனது . மேற்சொன்ன பாடல்கள் பத்து சதவீதம் கூட ரீச் ஆகவில்லை . சேகர் காரணி கேட்கிறார் . நீங்கள் ஆராய்ச்சி பண்ணி சொல்லுங்கள் .

    ReplyDelete
  9. வாருங்கள் சேகர்,
    இளையராஜாவின் பாணி என்ன என்று ஒரு இசை வடிவத்தை நம்மால் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது என்பது உண்மையே. ஏனென்றால் அவர் 76-80 களில் மென்மையான இசையை தாலாட்டு போல அளித்தார். பின்னர் தன் இசையை பிரதானப் படுத்தி 80களில் வேறு பரிமாணம் கொண்டார். அதன்பின் வெறும் தகர டப்பா ஓசைகளாக அவரது பாணி வறட்சியடைந்தது. இன்று பெரும்பாலும் அவரின் இந்த அலுப்பூட்டும் கிராமிய இசையையே பொதுவாக மக்கள் அவரது இசையாகக் கருதுகிறார்கள். மேற்கத்திய இசையை நமது நாட்டுபுற இசையுடன் கலந்து அவர் கொடுத்த பல நல்ல பாடல்கள் இருக்கின்றன. என்னைப் பொறுத்தவரை அவருடைய சாதனையில் இதை மிக முக்கியமானதாகச் சொல்வேன். ஆனால் இன்று அவர் ஒரு நாட்டுபுற இசையின் நாயகனாகவே முன் நிறுத்தப்படுகிறார். (கரகாட்டக்காரன் பாணி இசை.)

    நீங்கள் சொல்வது போல மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்கள் மக்கள் மனதில் நிற்கவில்லை என்பது விவாதத்திற்குரியது. சமயங்களில் இது உண்மை போல தோன்றினாலும் இது ஒரு ஆரோக்கியமற்ற இசை ரசனை. இளையராஜாவின் இசை பெருமளவில் சந்தைப்படுத்தப் படுவது ஒரு காரணமாக இருக்கலாம்.கிரிக்கெட் என்ற சோம்பேறிகளின் சொரனையற்ற அலட்டல்களை விளையாட்டு என்று வியாபாரம் செய்வதைப் போல இது ஒரு மூளைச் சலவை.

    ReplyDelete
  10. வாருங்கள் அனானி,
    பாராட்டுக்கு நன்றி. நீங்கள் சொல்லும் அந்த சட்னி சமாச்சாரம் தேவைப்படும் சமயங்களில் மட்டுமே செய்யப்படும். காரணம் இவரைப் போல வேறு யாரும் இல்லை என்ற one-track mind அதிகம் காணப்படுவதினால்தான். இட்லி நமது பாரம்பரிய உணவுதான். அதற்காக அது மட்டுமே சிறந்த உணவு ஆகிவிடுமா? (சட்னிக்கு இட்லி சரியாப் போச்சு.)

    ReplyDelete
  11. அமுதவன் அவர்களே,
    நான் எழுதும் பதிவுகளுக்கு உங்களின் பின்னூட்டம் எவ்வாறிருக்கும் என்று நினைத்துக்கொள்வதுண்டு. நான் எதிர்பார்க்காத வகையில் பல புதிய சிந்தனைகளை விதைக்கும்படியாக உங்களின் கருத்துக்கள் இருக்கின்றன.நன்றி.

    ( 'அடடா, இந்தப் பாடலுக்குக் கிடைக்கவேண்டிய முக்கியத்துவம் கிடைக்காமல் போய்விட்டதே' என்ற வருத்தம் அந்தக் குறிப்பிட்ட படைப்பாளிக்கு இருந்திருந்து அவர் இந்தப் பதிவைப் படிக்க நேர்ந்தால் நிச்சயம் அவர் விழியோரங்களில் ஈரம் கசியும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். இது ஒரு அரிய சாதனை.)

    அழகான சிந்தனை. நன்றாக சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் சாதனை என்பதெல்லாம் கொஞ்சம் அதிகம்தான். நம்மை தாலாட்டிய கானங்களை நினைவுகொள்வதில்தான் எத்தனை இன்பம் இருக்கிறது! அதை சற்று புதுப்பித்துக்கொள்வதில் தவறில்லை. அப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது.

    இசைத் தமிழுக்கு தமிழ்த் திரையில் பல இசையமைப்பாளர்கள் தங்கள் படைப்புக்களை அர்ப்பணித்திருக்கிறார்கள். அந்த இசை கீதங்கள் பன்முகம் கொண்டவை. சிலருக்கோ இந்த நியதி கசக்கிறது.அது எப்படி என்னவரைப் பாராட்டாமல் மற்றவர்களைப் பாராட்டலாம்? போன்ற அபத்தமான அபிப்ராயங்களை எந்தவித குற்ற உணர்ச்சியுமின்றி முன்வைக்கிறார்கள்.

    வி எஸ் நரசிம்மன் எம் பி ஸ்ரீனிவாசனிடம் உதவியாளராக இருந்து, பின் இளையராஜாவிடம் வந்து, பிறகு தனியாக இசை அமைத்தது போன்ற தகவல்கள் எத்தனைப் பேருக்கு தெரியும்? உங்களுக்கு அந்த நேரடி அனுபவம் இருப்பது ஒரு வகையில் சிறப்பே. பூ மேடையோ? பாடலை இன்றுவரை என் நண்பர்கள் குழுமத்தில் சிலர் "ராஜா விளையாடியிருக்கான்." என்று சிலாகிப்பதுண்டு.

    ஒரு தலை ராகம் படம் பற்றிய உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். எனக்கும் பாலைவனச் சோலை வந்த புதிதில் ஒரு தலை ராகம் படத்தை இயக்கியது ராபர்ட் ராஜசேகராகத்தான் இருக்கும் என்ற எண்ணம் தோன்றியது. இன்றுவரை நான் அப்படித்தான் நினைக்கிறேன். ராஜேந்தரின் மற்ற படங்கள் எல்லாமே சிறுபிள்ளைத்தனமாக இருக்கும். அரைவேக்காடு என்று உடனே சொல்லிவிடலாம். ஆனால் ஒரு தலை ராகம் கொஞ்சம் முதிர்ச்சியான காட்சியமைப்புகள் கொண்டது. ராஜேந்தரிடம் அந்த பக்குவத்தை எதிர்பார்க்கவே முடியாது. இருந்தும் அவர் ஒரு கவனிக்கத்தக்க இசை அமைப்பாளராக வலம் வந்தது வெறும் அதிர்ஷ்டத்தினால் அல்ல. ஒத்துக்கொள்கிறேன்.

    ரீதி கௌளை ராகத்தை திரை இசையில் பலர் அவ்வளவாக கையாண்டதில்லை என்று சொல்லப்படுவதுண்டு. அதில் வந்த பாடல்கள் வெகு சொற்பமே. கண்கள் இரண்டால் பாடலில் கூட சின்னக் கண்ணன் அழைக்கிறான் சாயல் இருப்பதை உணரலாம். இதை கேட்கப் போனபோதுதான் என் நண்பன் எனக்கு திகைப்பூட்டினான்.

    உங்களின் விரிவான தகவல்கள் பல அடங்கிய பின்னூட்டத்திற்கு என் நன்றி. அடுத்து சால்ஸ் வந்திருக்கிறார். வழக்கமான கோப்பையை ஏந்திக்கொண்டு. கொஞ்சம் அவருக்கும் ஊற்றுவோம்..பழரசத்தை.

    ReplyDelete
  12. திரு காரிகன்,
    அற்புதமான படைப்பு. திரு அமுதவன் சொன்னதுபோல தமிழ்த் திரைக்கு தங்கள் இசையால் பெருமையளித்த பல இசை அரசர்களை நீங்கள் வெளிப்படுத்தி உங்கள் எழுத்தின் மூலம் அவர்களை கௌரவப் படுத்தி வருகிறீர்கள். இது ஒரு அபூர்வமான காரியம். பலர் இசையைப் பற்றி எழுதினால் தாங்கள் எதை சிறுவயதில் கேட்டோம் என்பதை மட்டுமே எழுதிவருகிறார்கள். கொஞ்சமும் மற்ற இசை அமைப்பாளர்களை கண்டுகொள்ளாது கடிவாளம் போட்ட குதிரை போல இளையராஜா அல்லது ரகுமான் என்றே எழுதி உண்மையை திரிக்கிறார்கள். நீங்கள் ஒரு நியாயமான இடத்தில் இருந்துகொண்டு சிறப்பு சேர்க்க வேண்டிய எல்லோரையும் கவனத்தில் கொண்டு உங்கள் பதிவுகளை ஆச்சர்யமூட்டும் வகையில் மிக நேர்த்தியாக எழுதி கொண்டு வருகிறீர்கள். அபாரம்.

    ReplyDelete
  13. நண்பர்கள் சாமானியன், ரகுராமன் ஆகியோருக்கு என் நன்றி.

    ReplyDelete
  14. வாருங்கள் சாம்,
    என்ன ஒரு வார்த்தைகளின் ஜாலாட்டு! (எங்கள் பகுதியில் ஜாலாட்டம் என்று சொல்வதுண்டு. அதாவது அற்புதம்.) உங்களின் பின்னூட்டம் ஒரு சிறிய பதிவு போலவே இருக்கிறது. மிக அருமையாக எழுதுவது சிலருக்கே அமைவது. உங்களின் வார்த்தைத் தேர்வுகளைப் பாராட்டுகிறேன்.

    (நீங்கள் இந்த கட்டுரையில் குறிப்பிட்ட பல பாடல்கள் இளையராஜாவினுடையது என்றே நம்பியிருந்தவர்களில் நானும் ஒருவன் ! இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று தமிழ் சினிமாவை பற்றிய ஆவணப்படுத்தபட்ட, ஆய்வுப்பூர்வமான பட்டியல் இல்லை என்பதே ! தமிழ் சினிமா உலகின் இசையை பொறுத்தவரையில், அந்த குறை உங்களின் வலைப்பூவின் மூலம் களையப்படிருக்கிறது.)

    இது உண்மையில்லை. என்னைவிட சிறப்பாக சிலர் இணையத்தில் எழுதுகிறார்கள். இது உங்களின் அதீத பாராட்டு என்று எடுத்துக்கொள்கிறேன். நன்றி.

    காக்கைச் சிறகினிலே ஒரு அற்புதமான கானம். அதில் எதைப் பாராட்டுவது என்று குழப்பமே ஏற்படும். பாடல் வரிகளா, இசைக் கோர்ப்பா, குரலா, இசையா, அல்லது இறுதியில் வரும் சீழ்க்கை ஒலியா என அனைத்தும் சொல்லிவைத்தாற்போல் அபாரமாக ஒலிக்கும் இசை அபூர்வம். பல பழைய நினைவுகளை நமக்குள் உயிர்பெறச் செய்வதில் முதன்மையானது இசை. நீங்கள் சரியாகவே சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். இசையின் மகத்துவமே அதன் அனுபவங்கள்தாம். சிலவற்றை மட்டுமே வார்த்தைகளால் விவரிக்க முடியும். மற்றவை எல்லாமே வார்த்தைகளைத் தாண்டிய மாயாஜாலங்கள்.

    ராஜேந்தரின் "மச்சி" மிகப் புகழ்பெற்றது. இன்றைய அளவில் கல்லூரி மாணவர்களிடம் மச்சி என்ற சொல் உயிரோடு இருப்பதற்கு மிக முக்கியமான காரணம் டி.ராஜேந்தர். அவரது நடிப்பை விரும்பிய கூட்டம் கூட 80களில் இருந்தது என்பதே இப்போது வியப்பான உண்மையாக இருக்கிறது எனக்கு.

    (புறக்கணிக்கபட்ட அன்பும், அங்கீகரிக்கபடாத திறமையும் வாழ்வின் இருபெரும் சோகங்கள். செல்லுலாய்டின் புகழ் வெளிச்சம் பரவாத மூலைகளில் தங்கிவிட்ட திறமைசாலிகளை வெளிச்சமிடும்...)

    என்னை பாராட்டியிருப்பது குறித்து எனக்கு மகிழ்ச்சியே . அதைவிட எத்தனை சுருக்கமாக படிப்பவர்களின் மனதைத் தைக்கும் விதத்தில் வார்த்தைகளை அமைத்திருக்கிறீர்கள் சாம்! என்னால் கூட இப்படி எண்ணங்கொள்ள முடியவில்லை. உங்களின் எழுத்து வீரியம் மிக்கது. பாராட்டுக்கள். முடிந்தால் இசை பற்றி பதிவுகள் எழுதுங்கள்.

    பாராட்டுவதில் என்ன கஞ்சத்தனம்! சிறப்பான எல்லாவற்றையும் பாராட்டிவிட்டுப் போவோமே! இதில் எம் எஸ் வி, இளையராஜா , சங்கர்-கணேஷ், வி குமார், ரஹ்மான் என்ற வித்தியாசங்களே என்னிடமில்லை.

    உங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி சாம். தொடர்ந்து வாருங்கள்.

    ReplyDelete
  15. காரிகன்,

    அமுதவன் அவர்களின் நன்றிக்கும், உங்களின் பதிலுக்கும் நன்றிகள் பல ! உங்களின் கட்டுரையை படித்தபோது என் மனதில் தோன்றியதையே வார்த்தைகளாய் வடித்தேன். அப்படி பார்த்தால் என் எழுத்து சிறப்பாக அமைந்ததற்கு உங்களின் சிறப்பான கட்டுரையே காரணம்.

    உங்களின் வலைதளத்தில் எனது முதல் பின்னூட்டத்துக்கு பதிலாக, " இசையில் ஆர்வமிருந்தால் என் மற்ற பதிவுகளையும் படியுங்கள் " என குறிப்பிட்டிருந்தீர்கள்...

    " காக்கை சிறகினிலே " பாடலுக்கு முன்னோட்டமாக நீங்கள் எழுதியதையே சற்று மாற்றி சொல்கிறேன்...

    தமிழ் நாட்டில் திரைப்பட இசையால் ஈர்க்கபடாதவர்கள் என யாருமே கிடையாது, இதனை யாரேனும் மறுத்தால் அது பச்சை பொய் ! பிடித்ததை பற்றி பேசும் போதும் எழுதும் போதும் அவை சிறப்பாக அமைவது இயற்கையே ! பிடித்ததில் லயிப்பது தான் காதலென்றால், அந்த லயிப்பும் காதலை போலவே அழகாகதானே அமையும் !

    எழுத்துக்கு புதியவனான எனக்கு உங்களின் பாராட்டு நிச்சயம் பெரும் ஊக்கம் ! நன்றி.

    தமிழ் சினிமா சமூகம் அதன் இசையமைப்பாளர்களை போலவே நடிகர், இயக்குநர், பாடலாசிரியர் என அதன் அங்கங்கள் அனைத்திலும் பல திறமைசாலிகளை இருட்டு மூலையிலேயே நிறுத்தியிருக்கிறது. ஒவ்வொரு துறைக்கும் இமயமாய், மகுடமாய் ஒருவர் மட்டுமே ஓங்கி உயர்ந்த ஆலமரமாய் அலங்கரிக்கப்பட, மற்ற திறமைசாலிகள் அந்த மரத்தின் விழுதுகளிடையே மறைக்கப்பட்ட புற்களாய் போனது சோகம் !

    பல வருடங்களுக்கு முன்னால் படித்த ஒரு புத்தகத்தின் ஞாபகம் வருகிறது...

    " அறுபதாண்டுகால தமிழ் திரைப்பட பாடல்களின் வரலாறு ", எழுதியது சிலோன் விஜயேந்திரன் என நினைக்கிறேன் ( என்பதுகளின் படங்களில் அடியாளாய், பல வில்லன்களில் ஒருவராய் நடித்தவர் )அதனை படித்தபோதும் உங்களின் கட்டுரைகளால் அடைந்த வியப்பையே அடைந்தேன் ! கண்ணதாசன், வாலி, வைரமுத்து ஆகியோரில் ஒருவர் எழுதியவையாக இருக்கும் என நான் நினைத்த பாடல்களில் பல வெவ்வேறு பாடலாசிரியர்கள் எழுதியது ! ( அறுபதே பாடல்கள் எழுதிய பட்டுக்கோட்டையார் மட்டும் இந்த மூவருக்கு ஈடான மரியாதையை இன்றளவும் பெறுவது மகிழ்ச்சியான விதிவிலக்கு ! )

    ஒரு உதாரணம், நிமிர்ந்து நில் படத்தின் ( ரவிசந்திரன் நடித்தது )

    " ஒத்தையடி பாதையிலே அத்தை மக போகையிலே
    காலடியோ மண்மேலே அம்மாடி அவ கண்ணடியோ என் மேலே "

    என்ற தென்றல் போன்ற தெம்மாங்கு பாடல் ! அதனை எழுதியது கவிஞர் கா.மூ.ஷரீப்.

    எல்லாம் நம் சமூகத்தின் பாழாய் போன one man cult சாபம் !

    பின் குறிப்பு : அமுதவன் அவர்களின் வலைப்பூவினை படிக்க பல நாட்களாய் முயன்று வருகிறேன். ஆனால் முடியவில்லை ! வலைப்பூ தொடர்ந்து refresh ஆகிகொண்டே இருக்கிறது. உள்ளே நுழையமுடியவில்லை ! இதனை நிவர்த்தி செய்யும் வழி தெரிந்தால் கூறுங்களேன் !

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
  16. சாம்,
    one man cult பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். அது நமது சமூகத்தின் எல்லா இடங்களிலும் இருக்கிறது. திரைத் துறையில் சற்று அதிகம். அதை சாபம் என்று சொல்வதை மறுக்கமுடியாது. பலவிதமான திறமைகளை வெளிச்சம் காட்டும் புதிய சிந்தனைகள் வளர்ந்தால் மட்டுமே இந்த நோய் தீரும்.

    அமுதவன் தளம் உங்களுக்கு அகப்படவில்லையா? அவர் எழுதியிருக்கும் பின்னூட்டத்தில் அவர் பெயரின் மீது right click செய்தால் அவருடைய தளம் சென்றுவிடலாம். பின் அப்படியே ஒரு உலா வரலாம். ஒருவேளை இந்த முயற்சியை நீங்கள் செய்திருக்காத பட்சத்தில் முயன்று பாருங்கள். அதே போல உங்கள் தளத்தில் தேர்தல் திருவிழா வுக்குப் பிறகு வேறு எதுவும் காணப்படவில்லை. அடுத்த பதிவு சீக்கிரம் வரட்டும்.

    ReplyDelete
  17. வாருங்கள் ரகுராமன்,
    உங்கள் பாராட்டுக்கு நன்றி.
    என் எழுத்து நாம் நினைக்க மறந்த சில இசை மேதைகளுக்கு கவுரவம் அளித்தால் எனக்கு அதில் மட்டற்ற மகிழ்ச்சியே. கடிவாளம் போட்ட குதிரை என்று இணையத்தில் குவிந்து கிடக்கும் சில "கோமாளித்தனங்களை" நீங்கள் சாடியிருப்பது உண்மை. இந்தக் கூட்டத்தினரிடம் நியாயம் பேசினால் எடுபடுமா? 76இல் ஆரம்பித்து 92 இல் முடிந்துபோன தலைமுறை அது.

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. 'நான் எண்ணும் பொழுது' பாடலை பல முறை கேட்டு லயித்திருக்கிறேன். அதை இசை அமைத்தவர் யாரென்று இது வரை தெரியாது. அடடா, என்ன அற்புதமான பாடல். அதில் "ஏதோ சுகம், எங்கோ தினம் கேட்கும் பொழுது" என்ற வரியை எஸ்.பி.பி. துள்ளலாக பாடுவதை மீண்டும் மீண்டும் எத்தனை முறை கேட்டிருக்கிறேன் என்று எனக்கே தெரியாது. இது போன்ற பாடல்கள் இனி வருமா என்று மனம் ஏங்குகிறது.
    'ஒய் திஸ் கொலவெறி' போன்ற குப்பை பாடல்களை கேட்கும் அவல நிலைக்கு இன்று நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

    "ஆவாரம் பூவு" பாடலை இசைத்தது நரசிம்மனா? நான் இளையராஜா என்று இது வரை நினைத்திருந்தேன். அதில் வரும் 'ஹம்மிங்'கை கேட்க கேட்க வேறு ஒரு உலகுக்கு அழைத்து சென்று விடும்.

    "க‌ண்க‌ள் இர‌ண்டால்" பாட‌ல் "சின்ன‌ க‌ண்ண‌ன் அழைக்கிறான்" பாட‌லின் ராக‌ம் இல்லை சார், அப்ப‌டியே ஈ அடிச்சான் காப்பி தான். அத‌னாலேயே ந‌க‌லை என்னால் ர‌சிக்க‌ முடிய‌வில்லை.

    உங்க‌ளுடைய‌ ஒவ்வொரு ப‌திவின் ஒவ்வொரு வ‌ரியும் நல்ல நினைவுகளை தூண்டும் ஒரு பொக்கிஷ‌ம்.

    அருமை. சொல்வ‌த‌ற்கு வேறு ஒன்றும் இல்லை.

    ReplyDelete
  20. வாருங்கள் expatguru,

    உங்களின் வருகைக்கு நன்றி. உங்களைப் போலவே பலரும் பல இசைச் சித்திரங்களை இளையராஜாவின் இசை என்றே எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இப்போதாவது அந்த புகை படிந்த எண்ணம் கலைந்துபோனதே என்ற நிம்மதி எனக்கு உண்டாகிறது. எத்தனை சிரமப்பட்டு ஒரு அபாரமான கானத்தை சலில் சௌத்திரி உருவாகியிருக்கிறார். அதை வெகு சுலபமாக இன்னொருவருக்கு தாரை வார்க்கும் மனோபாவம் உங்களிடம் மட்டுமல்ல நிறைய பேரிடம் காணப்படுகிறது. புரிந்துகொண்டதற்கு நன்றி.

    கண்கள் இரண்டால் பாடல் என்னை கவர்ந்ததேயில்லை. ஏனென்றால் ஜேம்ஸ் வசந்தனை நான் ஒரு சீரியசான இசை அமைப்பாளராக கணக்கில் எடுத்துக்கொண்டதே கிடையாது. அதை விட சின்னக் கண்ணன் அழைக்கிறான் பாடல் வெகு அற்புதமானது.

    நீங்களும் சிறப்பாக எழுதுபவர்தான். அந்த ஆன்மீகப் பதிவுக்குப் பிறகு வேறு எதுவும் எழுதவில்லை என்று நினைக்கிறேன். எழுதலாமே.

    ReplyDelete
  21. வாருங்கள் சால்ஸ்,

    இதுபோன்ற அபத்தமான பின்னூட்டத்தை உங்களால் மட்டுமே எழுதமுடியும். என்னைப் பற்றி நீங்கள் என்னமும் நினைத்துக்கொள்ளலாம்.

    ...... இளையராஜா பாடல்கள் நூறு சதவீதம் ரீச் ஆனது . மேற்சொன்ன பாடல்கள் பத்து சதவீதம் கூட ரீச் ஆகவில்லை . சேகர் காரணி கேட்கிறார் . நீங்கள் ஆராய்ச்சி பண்ணி சொல்லுங்கள் .......

    இதில் என்ன ஆராய்ச்சி? ஒரே வரியில் சொல்லிவிடலாமே. மூளைச் சலவை. போதுமா? இந்தியாவில் கிரிக்கெட் போன்று சந்தைப் படுத்தப்படும் விளையாட்டு (?) வேறு எதுவும் இருக்கிறதா? அதன் ரீச் கூட 100%தான். ஆனால் உண்மையான விளையாட்டு ரசிகர்கள் கிரிக்கெட்டை ஒரு விளையாட்டாகவே எடுத்துக்கொள்வது கிடையாது.

    ReplyDelete
  22. சார்லசு அண்ணே!

    சொந்தமாக் கேள்விக் கேட்கத் தெரியாதா? என்னோட கேள்வியின் அர்த்தத்தையே மாற்றி விட்டீர்.

    அப்படி என்ன என் மேல் கோபம்.

    ReplyDelete
  23. இவரது இசையில் பெரிய அளவில் வெற்றி பெற்ற பாடல்கள். ஆனால் பெரிய உயரிய ரசனைக்கு உட்படாதவைகள். முகச் சவரம் செய்துகொண்டோ, அல்லது நாளிதழை புரட்டிக்கொண்டோ கவனமில்லாது சற்று கேட்கலாம் அவ்வளவே. மறந்து விட்டாலும் பாதகமில்லை. மன்னிப்பு உண்டு. ஏனென்றால் இவைகளைப்போல ஒரு பத்தாயிரம் கருமாந்திரங்கள் நம்மிடம் இருக்கின்றன.

    ஹா ஹா ஹா ரசித்தேன் காரிகன்,
    அதுசரி அதுஎன்ன பத்தாயிரம்? அடிக்கடி குறிப்பிடுள்ளீர்கள். ஏதேனும் குறியீடா?

    ReplyDelete
  24. வாங்க பரத்,
    நன்றி. பத்தாயிரம் என்பது ஒரு குறியீடா என்று கேட்டிருந்தீர்கள். உன்மையைச் சொல்வதானால் ஆம். புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் சரி.

    ReplyDelete
  25. காரிகன்

    நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த பத்தாயிரம் பாடல்களும் ..சாரி.. கருமாந்திரங்களும் இளையராஜாவின் படைப்புகளே என்பதை சொல்லாமல் சொல்லுகிறீர்கள் . எல்லோரையும் திருப்திபடுத்தியாகி விட்டதா?

    ReplyDelete
  26. காரிகன்

    ஒன்று நிச்சயம் . இளையராஜா பாடல்களை நேசிக்கும் கூட்டமே இங்கு அதிகம் . அவரை பாராட்ட மனம் இல்லாத உங்கள் கூட்டம் மிகக் குறைவு . உங்களின் பகல் விண்மீன் கூட்டம் போல!

    ReplyDelete
  27. சால்ஸ்,
    நீங்களாகவே ஒரு முடிவெடுத்துவிட்டு என்னை அதில் கையெழுத்து போடச் சொல்கிறீர்கள். தமிழில் வந்த மோசமான குப்பைகளையே நான் குறியீடாக சொல்லியிருக்கிறேன். அதில் இளையராஜாவின் பாடல்களும் அடக்கம். அவ்வளவே. அவரின் அனைத்துப் பாடல்களையும் நான் குறிப்பிடுவதாக நீங்கள் திரிப்பது தேவையில்லாதது. என் மனதை தாலாட்டிய பல பாடல்களை அவர் கொடுத்திருக்கிறார். இருந்தும் என்னை கட்டம் கட்டுவது உங்களுக்கு சுலபம்தான்.

    ReplyDelete
  28. ரிம்போச்சே3 May 2014 at 21:06

    வி.எஸ். நரசிம்மனின் 'கண் சிமிட்டும் நேரம்' படத்தில் வரும் 'விழிகளில் கோடி அபிநயம்' பாடல் கேட்டிருக்கிறீர்களா?

    ReplyDelete
  29. ரிம்போச்சே3 May 2014 at 21:36

    ஆபாவாணன் தயாரிப்பில் வந்த படங்களில் அவரே இணை-இசை. அதனால் மனோஜ்-கியான் இசையில் அதன் தாக்கம் அதிகம்.

    பார்க்க..

    http://www.radiospathy.com/2012/05/blog-post.html

    மேலும், இந்த இருவரிலும் கியான் வர்மாதான் அதிகம் பங்களித்ததாக நினைக்கிறேன்.

    மனோஜ் பின்னாளில் மனோஜ் பட்நாகர் என பிரசாந்த், விஜய் இவர்களை வைத்து படங்களை தயாரித்து 'நெறியாள்கை' செய்தார்.

    ReplyDelete
  30. ரிம்போச்சே3 May 2014 at 21:42

    பல பாடல்கள் 80-களின் வானொலியில் பலமுறை கேட்டவைதான். அவற்றைத் தொகுத்ததற்கு நன்றி.

    இன்னும் இளையராஜாவுடனான வாய்க்கா-வரப்பு தீரலை போல. தீரவும் தீராது என்றுதான் எண்ணுகிறேன்.

    80களில் 'கம்ப்யூட்டர் இசை' என அறியப்பட்டது இசைக்கப்பட்டது விக்ரம், புன்னகை மன்னனுக்குப் பின் 'சின்னப் பூவே மெல்லப் பேசு' படத்தில் வரும் பாடலே. இதையும் அப்போது வாசித்தவர் ரஹ்மானே என நினைக்கிறேன்.

    ReplyDelete
  31. ரிம்போச்சே3 May 2014 at 22:46

    //இதே போல மற்றொரு பாடல் மரகதமணியின் இசையில் நீ பாதி நான் பாதி என்ற படத்தில் வந்த நிவேதா என்ற பாடல். இடையிடையே ராக ஆலாபனைகள் பின்பாட்டு பாட முழு பாடலும் நிவேதா என்ற ஒற்றைச் சொல்லைக்கொண்டே அமைந்திருக்கும். ஒருவிதத்தில் இதை ஒரு instrumental music எனலாம். இம்மாதிரியான இசை முயற்சிகள் (புரட்சிகள்!) பாராட்டப்படாமல் போனது வருத்தமளிக்கும் உண்மை. மாறாக இதுபோன்ற புதிய இசை வடிவங்கள் புகழ் பெற்ற வேறு ஒருவரிடமிருந்து வந்திருந்தால் அவரைக் கொண்டாடியிருப்பார்கள் நம் ரசிகர்கள்.//

    இந்தப் பாடல் வெளியான போது ஒரு noveltyயாக கவனிக்கப்பட்டதுதான். பல முறையும் வானொலிகளில் ஒலிபரப்பப்பட்டது.

    ReplyDelete
  32. ரிம்போச்சே3 May 2014 at 22:55

    //மிகுந்த இசை அறிவு கொண்டவரான இவர் முதலில் பாலச்சந்தரின் அச்சமில்லை அச்சமில்லை படத்திற்கு இசை அமைத்தார். //

    இசைஞானி இளையராஜாவின் முக்கிய வாத்தியக்காரராகப் பாடல்களின் பின்னால் ராஜாங்கத்தின் ஆஸ்தான கெளரவத்தோடு இருந்த வி.எஸ்.நரசிம்மன் அவர்களை இளையராஜாவே ஶ்ரீரங்கம் ராஜகோபுரம் அமைக்கும் திருப்பணி இசை நிகழ்ச்சி நடந்த மேடையில், "இவரை இசையமைப்பாளராகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்று சொன்னபோது இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் கண்பட்டு தனது "அச்சமில்லை....அச்சமில்லை...!" திரைக்காக இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட இவர் தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராகப் பணியாற்றியது மிகச் சொற்பப் படங்களே.

    கானா பிரபாவுக்காக அவர் அளித்த பேட்டி.

    http://www.radiospathy.com/2012/02/blog-post_16.html

    ReplyDelete
  33. ரிம்போச்சே3 May 2014 at 23:21

    //ஹே ராம் படத்தில் இவரது பங்கு இருப்பதாக ஒரு தகவல் சொல்கிறது. //

    இதற்கு ஏதாவது தரவுகள் உள்ளதா?

    ReplyDelete
  34. ரிம்போச்சே3 May 2014 at 23:58

    சம்சார சங்கீதம் வரை அவரின் ஜனரஞ்சகமான இசை மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.

    //ராஜேந்தரின் பாடல்களில் இடையிடையே வரும் அர்த்தமில்லாத வார்த்தைகள் -ஓசைகள் என்று சொல்லலாம்- தற்போதைய ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் நாம் கேட்கும் ஓசைகளை நினைவுபடுத்துகிறன. ஒருவேளை இங்கிருந்துதான் இந்த அலை புறப்பட்டதோ என்று சந்தேகமாக இருக்கிறது.//

    சரியா பாத்துச் சொல்லுங்க காரிகன். இளையராஜா ஏதாவது தொடங்கி வச்சிருப்பாருங்க. அதையே TRம் பின்பற்றி இருக்கலாம்.

    ReplyDelete
  35. ரிம்போச்சே4 May 2014 at 00:05

    //சிலர் பத்தாயிரம் பாடல்கள் என எண்ணிக்கையை வைத்து ஒரு மாயத் தோற்றத்தை வடிவமைக்கிறார்கள். ஆனால் அவற்றில் வெகு சிலவற்றைத் தவிர மற்றதெல்லாம் ஒரு முறை மட்டும் கேட்பதற்காக உருவானவை. ஒன்றே செய் அதை நன்றே செய் என்று சொல்லப்படுவதைபோல சிலர் சொற்பமான பாடல்களையே கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்த சொற்பதிலும் பல சிறப்பானவை. தரமானவை. இதுவன்றோ இசை!//

    இப்படியும் சொல்லலாமோ? சிலருக்கு வாய்ப்பது 5-minute fame அல்லது one-movie-wonder என்று.

    ReplyDelete
  36. ரிம்போச்சே4 May 2014 at 00:12

    //அந்தி நேர தென்றல் காற்று- (இணைந்த கைகள்) தென்றலாக வீசும் கீதம். இதுதான் கடைசியாக இவர்களின் இசையில் வந்த நினைவில் நின்ற பாடல் என்று நினைக்கிறேன். //

    கடைசியாக அவர்கள் வெற்றியடைந்தது தாய்நாடு படத்தில். அனைத்துப் பாடல்களையும் TMS அவர்கள் பாடியிருப்பார்.

    ReplyDelete
  37. ரிம்போச்சே4 May 2014 at 00:14

    மனோஜ்-கியான் இசையமைத்த உழவன் மகன் படத்தை விட்டுவிட்டீர்களோ?

    ReplyDelete
  38. ரிம்போச்சே4 May 2014 at 00:26

    மரகதமணியின் இசை பிடிக்காதோ? வானமே எல்லை, அழகன் போன்ற படங்களின் பாடல்கள் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  39. ரிம்போச்சே4 May 2014 at 00:44

    //மேற்கத்திய இசையை நமது நாட்டுபுற இசையுடன் கலந்து அவர் கொடுத்த பல நல்ல பாடல்கள் இருக்கின்றன. என்னைப் பொறுத்தவரை அவருடைய சாதனையில் இதை மிக முக்கியமானதாகச் சொல்வேன். ஆனால் இன்று அவர் ஒரு நாட்டுபுற இசையின் நாயகனாகவே முன் நிறுத்தப்படுகிறார். (கரகாட்டக்காரன் பாணி இசை.) //

    சாஸ்வதியிடம் ஒரு முறை கர்நாடக இசையில் புது முயற்சிகள், புது கீர்த்தனைகள் என்று விவாதித்துக்கொண்டிருந்தபோது அவர் ஒரு விஷயம் சொன்னார். கர்நாடகத்தின் பிரயோகம் நேரிடையாக வெளிப்படாமல் இருந்தாலும் அசலான கர்நாடகத்தின் எல்லா அம்சங்களும் உள்ள பாடல்கள் பல வந்துக்கொண்டுதான் இருக்கிறது என்று. தனக்கு தெரிந்த ஒரு பாடலாக இளையாராஜாவின் சொர்க்கமே என்றாலும் அது நம்மூர் போலவருமா என்ற பாடலை கூறினார். அதைவிட நுட்பமாக கர்நாடக இசையை பயன்படுத்தி நான் கேட்டதில்லை என்றார். கிராமியமாக தோன்றும் ஒரு பாடல் எப்படி அசலான கர்நாடகமாக அவரால் பார்க்க முடிகிறது என்று ஆச்சரியத்தோடு கேட்ட போது அவர் அந்தப் பாடலை அதே மெட்டில் கர்நாடகத்தில் பாடி காட்டினார். கர்நாடகத்தை பற்றி முதலிலேயே கூறியது போல் சில குறிப்பிட்ட பாடுபொருள்தான் அதன் உள்ளடக்கமாக ஏற்கப்படுகிறது. அதற்கெதிரான முயற்சிகள் கேட்பதற்கு சில அசௌகரியங்களை உண்டு பண்ணிவிடுகிறது. அதனால் இந்த பாடலின் வரியை கண்டிப்பாக மாற்றியாக வேண்டும், அதை கர்நாடகத்தில் ரசிப்பதற்கு.

    http://alijournalist.blogspot.in/2010/01/blog-post.html

    முழு இடுகையும் வாசித்துப் பாருங்கள்.
    திரையிசை அமைப்பதில் ஹாலிவுட்டின் முறையையும், இந்திய முறையையும் ஒப்பிடும் பகுதி சிறப்பானது.

    ReplyDelete
  40. ரிம்போச்சே4 May 2014 at 00:52

    //வி எஸ் நரசிம்மன் எம் பி ஸ்ரீனிவாசனிடம் உதவியாளராக இருந்து, பின் இளையராஜாவிடம் வந்து, பிறகு தனியாக இசை அமைத்தது போன்ற தகவல்கள் எத்தனைப் பேருக்கு தெரியும்? //

    எல்லோரும் காரிகன் ஆக வேண்டுமா? தேவையில்லையே.
    என்ன வினாடி வினா நிகழ்ச்சியிலா கலந்து கொள்ளப் போகிறோம்? நல்ல பாடல்களை ரசிக்கத் தெரிந்தாலே போதும்.

    ReplyDelete
  41. ரிம்போச்சே4 May 2014 at 01:00

    //நன்றி. பத்தாயிரம் என்பது ஒரு குறியீடா என்று கேட்டிருந்தீர்கள். உன்மையைச் சொல்வதானால் ஆம். புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் சரி.//

    சார்ள்ஸ்,

    அவரு சங்கர் கணேஷைச் சொல்கிறார் போல.

    பார்க்கவும்.
    http://kaarigan-vaarththaiviruppam.blogspot.in/2014/04/xv.html

    **சங்கர்-கணேஷ் ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்திருப்பதாக (1053) இணையத்தில் ஒரு தகவல் இருக்கிறது. தமிழில் மட்டும் 418 படங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது சாதரணமாக கடந்து போகக்கூடிய சாதனை அல்ல. **


    ReplyDelete
  42. வாருங்கள் ரிம்போச்சே,
    முதலில் இரண்டு பின்னூட்டங்கள் பார்த்தேன். அதற்கு பதில் சொல்லும் முன் இன்னும் பனிரெண்டு வந்துவிட்டது. நன்றி.முடிந்தவரை எல்லாவற்றிற்கும் பதிலளிக்க முயல்கிறேன்.

    கண் சிமிட்டும் நேரம் படத்தின் பாடல் கேட்டிருப்பேன். சரியாக நினைவில்லை. மறுபடி கேட்டால் அட இதுதானா என்று கண்டுபிடித்துவிடுவேன். இப்படித்தான் ஷ்யாமின் ஆனந்த தாகம் பாடலை கண்டெடுத்தேன்.

    மனோஜ் கியான் இசை தனித்துவம் வாய்ந்தது. அதில் கொஞ்சமே இளையராஜாவின் சாயல் தெரியும். அதுவும் வீம்பாக தேடினால் மட்டுமே.

    இளையராஜாவின் இசையை விமர்சனம் செய்வதை எப்போது நிறுத்துவீர்கள் என்று கார்த்திகா கமலஹாசனைக் கேட்பதுபோல கேட்கிறீர்கள். பதிலும் நீங்களே சொல்லிவிட்டீர்கள். அதுவேதான். நிறுத்தகக் கூடிய சங்கதியா இது? மேலே இருந்த பாராட்டுக்கு நன்றி.

    உண்மைதான். நிவேதா பாடல் அப்போது ஒரு புதுமையாகவே சிலரால் (மட்டுமே) பார்க்கப்பட்டது. என்னுடைய கசின் ஒருவன் சொல்லித்தான் எனக்கு இப்படி ஒரு பாடல் இருந்ததே அப்போது தெரியும்.

    திறமையான வி எஸ் நரசிம்மனை இளையராஜா பாலச்சந்தருக்கு அறிமுகப்படுத்திய தகவல் உங்கள் மூலம்தான் அறிந்தேன். அதற்கு நன்றி.

    ஹே ராம் படத்தில் நரசிம்மனின் பங்கு இருந்ததாக ஒரு forum ஒன்றில் இந்தப் பதிவுக்காக சில தகவல்களைத் தேடிக்கொண்டிருந்த சமயத்தில் கண்டேன். மேலும் முன்பு ஒரு பின்னூட்டத்தில் வவ்வாலும் இதை சொல்லியிருந்ததாக ஞாபகம்.

    டி ஆரின் சில அர்த்தமில்லாத ஓசைகள் ஒரு நீட்சியாக ரஹ்மான், ஹேரிஸ் ஜெயராஜிடம் வந்திருக்கலாம் என்பதே என் எழுத்தின் சாரம். நீங்கள் ராஜா என்று வேறு எதற்கோ கோடு போடுகிறீர்கள். மேலும் எல்லா இசை இழிவுகளையும் இளையராஜாவே செய்ய வேண்டுமா என்ன?

    ... தொடரும்...

    ReplyDelete
  43. ரிம்போச்சே,
    ... இருக்கலாம். நமக்குத்தான் one -movie wonder சங்கதிகளை பாராட்ட மனமே வராதே. மேலும் அது அவர்களின் பலவீனம் என்று நான் எண்ணவில்லை. நமக்கு வேண்டியதெல்லாம் தொடர்ச்சியான வணிக வெற்றிகள்தான். அதை யார் செய்தாலும் உடனே கும்மாளம்தான்.

    உண்மையே. ஆனால் தாய் நாடு (89)படத்திற்குப் பிறகே இணைந்த கைகள் வந்தது (90). நான் குறிப்பிட்டது வெற்றி பெற்ற பாடல் என்றல்ல. நல்ல பாடல் என்றே. உழவன் மகன் படத்தை கழட்டி விட்டதை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். பிடித்துவிட்டீர்கள். சில சமயங்களில் இது நேரக்கூடிய விபத்துதான்.

    மரகத மணியின் இசை எனக்கு விருப்பமானதுதான். அழகன், வானமே எல்லை படங்களின் பாடல்கள் எனக்குப் பிடிக்கும். ஆனால் இந்தப் பதிவில் நான் 90களைத் தொட விரும்பாததேஅவரைப் பற்றி எழுதாதற்குக் காரணம்.

    இந்தத் தகவலை நான் படித்திருக்கிறேன். எல்லா பாடல்களுமே எதோ ஒரு ராகத்தில்தானே இருக்க முடியும்? சொர்கமே என்றாலும் ஒரு பாமரத்தனமான ( ரசிக்கக்கூடிய) பாடல். இளையராஜா அதற்கும் ஒரு ராகம் கொடுத்திருப்பதில் என்ன வியப்பு? புரியவில்லை. ஏன் நிலா காயுதே பாடலில் கூட முயன்றால் ஒரு ராகத்தைக் காணலாம். அடிப்படையில் இளையராஜா, ரஹ்மான் வரை நம் இசை அமைப்பாளர்கள் கர்நாடக ராகத்திலேயே மெட்டுக்களை அமைத்தது உண்மைதான். மற்றவர்கள் செய்யவில்லை என்று அர்த்தம் இல்லை. ஆனால் அந்த ராக வீரியம் தற்போது கவலைக்குரிய விதத்தில் செல்லாக் காசாகி வருகிறது.

    அமுதவன் கூறிய ஒரு கருத்துக்கு நான் இவ்வாறு சொல்லியிருந்தேன். நியாயமே. எனக்கும் இசை பற்றி சில விஷயங்கள் தெரியாது. ரசனை ஒன்றே பிரதானம். ஒத்துக் கொள்கிறேன்.

    இறுதியாக அந்தப் பத்தாயிரம். சால்ஸின் கேள்விக்கு நான் ஏற்கனவே பதில் சொல்லியாகிவிட்டது. பின் ஏன் இந்த வீண் நக்கல் என்று புரியவில்லை. ஆம் சங்கர் கணேஷையும்தான் குறிப்பிட்டேன்.

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  44. When someone writes an post he/she keeps the image of a user in his/her mind that how
    a user can be aware of it. Therefore that's why this post is outstdanding.
    Thanks!

    Feel free to surf to my page; website - -

    ReplyDelete