Sunday 19 June 2016

திரைமுகம்



 ஒரு திரைப் படம் ஒருவரை ஈர்ப்பதன் பின்னே பல காரணிகள் இயங்குகின்றன. பெரிய அளவில் நடிகர்கள், இயக்குனர்கள், இசையமைத்தவர்கள், டீசர்கள், பெருத்துத் தெறிக்கும் பிரமாண்ட வியாபாரப் பொய்கள், விளம்பரங்கள், வாய்வழிப் பிரச்சாரங்கள், நேரத்தை கடத்தும் கணங்கள், சாகச மனோபாவங்கள்,.....

  எனக்கோ ஒன்றே ஒன்றுதான்.  படத்தின்  தலைப்பு.  அவ்வளவே. ஏனென்றால்  ஒரு  தலைப்பு என்பது அந்தத் திரைப்படத்தின்  முகம் போன்றது. அதைப் பார்த்ததும் அந்தப் படம் பற்றிய ஒரு வரைபடம் எனது கற்பனையில் உருவாகிவிடும். தலைப்பை வைத்து  படத்தின் கதையை தீர்மானிப்பதோ அல்லது படம் பார்க்கலாமா வேண்டாமா என்ற பூவா தலையா விளையாட்டோ இல்லாவிட்டாலும், தலைப்புகளின் மீது ஒரு மோகம் உண்டு. 

   நான் சந்தித்த வரை வெகு சிலரே ஒரு திரைப் படத்தின் தலைப்பைக் குறித்து சற்றேனும் சிந்தனை செய்கிறார்கள். அல்லது கவலை கொள்கிறார்கள். நான் குறிப்பிடுவது ஒரு படத்தின் தலைப்பை வைத்து படம் வெளிவரும் முன்னரே செய்யப்படும் அரசியல் பற்றியதல்ல. எப்படி ஒரு படத்தின் தலைப்பு ஒரு அழகியலின் வெளிப்பாடாக, முதிர்ச்சி பெற்ற பண்பாட்டுச் சிந்தனையின் குறியீடாக, நெஞ்சத்தில் தைக்கும் வெல்வெட் ஊசியாக, மனதில் கரையும் மயக்கமாக, அறிவு சார்ந்த மேதமையின் அடிக்கோடாக ஒரு திரைப் படத்தை அலங்கரிக்கிறது என்பதை குறித்தே நான் இங்கு பேச விழைகிறேன்.

   ஒரு படத்தின் தலைப்பு ஒரு குழந்தைக்குச் சூட்டும் பெயர் போன்றிருக்க வேண்டும்  என ஏ வி எம் நிறுவனர் மெய்யப்பச் செட்டியார் கருதியதாக  ஒரு தகவல் படித்திருக்கிறேன். ஒரு விதத்தில் அது உண்மைதான். தமிழ்த் திரையில், எனக்குத் தெரிந்தவரை, சொற்பமான சில இயக்குனர்களுக்கே இந்த வசீகரச் சிந்தனை வயப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஸ்ரீதர், கே பாலச்சந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்றவர்கள். கொஞ்சம் பாக்கியராஜையும்  இதில் சேர்த்துக்கொள்ளலாம். 

   மணாளனே மங்கையின் பாக்கியம், தாய் மகளுக்குக் கட்டிய தாலி, அலிபாபாவும் நாற்பது திருடர்களும், பணம், முதல் தேதி, பாசமலர், பார்த்தால் பசி தீரும் (இன்றுவரை இதன் பொருள் எனக்குப் புரியவில்லை) என அடர்த்தியான அறிவு தேவைப்படாத எளிமையான தலைப்புகளின் காலத்தில் ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம் சட்டென்று கவிதை பாடுகிறது. சிவந்த மண் சற்று யோசிக்கத் தூண்டுகிறது.  பெண், பாகியலஷ்மி, சித்தி, கற்பகம் என்றால் கடந்து போகும் ஒருவன் வெண்ணிற ஆடை என்றால் கொஞ்சம் தடுமாறி நிற்கிறான். முழுவதும் காதல் காற்று வீசும் திரைக்கதைக்கு  காதலிக்க நேரமில்லை என்று ரசிகர்களை சீண்ட ஸ்ரீதரால் முடிந்தது.  உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், அழகே உன்னை ஆராதிக்கிறேன், தென்றலே என்னைத் தொடு என்று காதலை யாசிக்கும் நீளமான தலைப்புகளின் மத்தியில்    இளமை ஊஞ்சலாடுகிறது  மனதை சட்டென்று கட்டிப்பிடிக்கிறது.   நினைவெல்லாம் நித்யா என கவிதை பாட வந்த திரைப் படம் மிகக் கொடூரமாக தலைப்பை கொலை செய்தது.

       அதே சமயம் பாலச்சந்தரின் தலைப்புகள் வேறு வகை. கொஞ்சம் நமது மூளையிலுள்ள  நியூரான்களை துடிக்க வைக்கும் தலைப்புகள் அவரது பாணி. நூல்வேலி என்ற பெயரே என்னை அந்தப் படத்தைப் பார்க்கத் தூண்டியது. ஆனால் வீட்டிலோ என் அம்மா ஒரேடியாக ,"இந்தப் படமெல்லாம் உனக்குப் புரியாது. போய் பிரியா படம் பாரு" என்று திசையை மாற்றிவிட, நீண்ட வருடங்கள் கழித்து ஆறு வருடங்களுக்கு முன்பு  எதோ ஒரு சேனலில் நூல்வேலியைப்  பிடித்தேன். நீர்க்குமிழி, எதிர்நீச்சல்,அபூர்வ ராகங்கள், அரங்கேற்றம்,   (The height of sarcasm?), மூன்று முடிச்சு, சொல்லத்தான் நினைக்கிறேன் போன்ற தலைப்புகள் "படத்தோட ஹீரோ பேரையே தலைப்பா வச்சுடலாம்" என்ற மொழி வறட்சியின் மீது அடிக்கப்பட்ட ஆணிகள் என்று நினைக்கிறேன்.  தனது படத் தலைப்புகளில் கூட பாலச்சந்தர் மலர்ச்சியை கொண்டுவந்தவர்.  இரு கோடுகள் என்ற அவரது தலைப்பில் ஐன்ஸ்டீனின் relativity theory  ஒளிந்திருப்பதைக் கண்டுபிடிக்க சற்று அவகாசம் தேவை. முயன்று பாருங்கள். புரியும்.

   அவள் ஒரு தொடர்கதை படத்தின் பெயரிலேயே ஒரு புதினம் இருப்பதை உணர்கிறீர்களா?   அந்தப் படத்திற்கு கவிதா? என்று தலைப்பிட்டு படம் எடுத்திருந்தால் கூட பொருத்தமாகத்தான் இருந்திருக்கும். நல்லவேளையாக பாலச்சந்தர் கொஞ்சம், ஏன் நிறையவே என்று சொல்லலாம், உட்கார்ந்து படத்தின் தலைப்பை உருவாக்கும் இயக்குனர். தப்புத் தாளங்கள் அதன் பெயருக்காகவே அதிகம் விமர்சனம் செய்யப்பட்டது. எம் எஸ் வி  அதற்கு இசையமைக்க மறுத்ததும் படத்தின் இந்தத் தலைப்பினால்தான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

       நினைத்தாலே இனிக்கும் என்றாலே இளமை ததும்பும் நினைவுகள் ஒரு நீண்ட ரயில் போல தொடர்ச்சியாக நெஞ்சத்தில் கிளை பரப்பும். நிழல் நிஜமாகிறது  இன்றும் ஒரு கவிதையின் நீட்சி போலவே ஒலிக்கிறது.

       இதேபோல அழியாத கோலங்கள் என்னை பல நாட்கள் ஆட்டுவித்தது. மூடுபனி என்ற தலைப்பு ஒரு விதமான போதை தரும்.  மூன்றாம் பிறை பற்றி நம் மக்கள் அதிகம் பேசிக்கொண்டது அந்தப் படம் வந்தபிறகே என்று நினைக்கிறேன். இதில் என் உறவின சகோதரர்கள் ஆளாளுக்கு மூன்றாம் பிறைக்கு  விஞ்ஞான விளக்கம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். பாலு மகேந்திராவிடம் எனக்கிருந்த ஈர்ப்பு இப்போது விலகிவிட்டாலும், அவருடைய தலைப்புகள் ஒரு தனிரகம்.  அதை மறுப்பதற்கில்லை.

      பாலச்சந்தர் போன்றே பாரதிராஜாவிடமும் ஒரு நல்ல தமிழ் தாகம் இருப்பதை அவருடைய படத் தலைப்புகள் தெரிவிக்கத் தவறுவதில்லை. 16 வயதினிலே துவங்கி கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், சிகப்பு ரோஜாக்கள், நிறம் மாறாத பூக்கள், நிழல்கள் என அவரது படப் பெயர்கள் நிறைய தரமான தமிழும், கொஞ்சம் கவிதை வாசமும், ஜன்னல் வைத்த ஜாக்கெட் போல  கொஞ்சமாக  (கதையை) காட்டும்  கவர்ச்சியும் கொண்டவை. அலைகள் ஓய்வதில்லை என்று பாரதிராஜா ஆரம்பித்து வைக்க  அதன் பின் அதே போன்ற இலக்கிய வாசம் எகிறி அடிக்கும் தலைப்புக்கள்  அப்போது தொடர்ச்சியாக வந்து இலக்கியம் இன்னும் வேணுமா என்று கேட்டன.  உதாரணமாக பயணங்கள் முடிவதில்லை, ராகங்கள் மாறுவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை...  இது ஆவறதில்லை  என்று சராசரி ரசிகன் விலகிப் போய்விட்டதால் விட்டார்கள். ஒரு சமூகத்தின்  பண்பாட்டுச் சித்திரங்களும், நாட்டார் மரபுகளும், மக்களின் எளிமையான வாழ்க்கை முறையும் இந்த ஒரே தலைப்பில் அமிழ்ந்திருப்பதாக நினைக்கிறேன். அது மண் வாசனை. தமிழின் மிகச் சிறந்த படத் தலைப்புகளில் ஒன்று. ஆனால் வாலிபமே வா வா என்று இதே பாரதிராஜாவுக்கு தோன்றியது ஒரு ஆபாச விபத்து.

   கடலோரக் கவிதைகள், கடல் பூக்கள் என்று சிந்திக்க கொஞ்சமாவது தமிழ்த் தேடல் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் கதாநாயகனின் பெயரைத்தாண்டி சிந்தனை ஓடாது. இல்லாவிட்டால் நல்லவன், கெட்டவன், பொல்லாதவன், வேட்டைக்காரன், படிக்காதவன் என்ற  beaten - track  ஒன்றே வழி. 

   பாரதிராஜா பள்ளியிலிருந்து வந்த பாக்கியராஜ் தன் ஆசான் போலவே சுவர் இல்லாத சித்திரங்கள், ஒரு கை ஓசை, விடியும் வரை காத்திரு, மௌன கீதங்கள் என்று நன்றாகத் துவங்கினார். தூறல் நின்னு போச்சு அதிகம் பாராட்டப்பட்ட தலைப்பாக அப்போது இருந்தது. பிறகு முந்தானை முடிச்சு என்று  சற்று தடம் மாறினார். தாவணிக் கனவுகள் என்ற சிறிய ஒத்தடம் கொடுத்துவிட்டு பின்னர் சரசரவென கீழிறங்கினார்.  சின்ன வீடு, எங்க சின்ன ராசா, இது நம்ம ஆளு (அவர் இயக்கிய படம் இல்லை என்றாலும்), ஆராரோ ஆரிரரோ, பவுனு பவுனுதான், ராசுக்குட்டி... என்று துவக்கத்தில் தன்னிடமிருந்த தரமான தமிழை தூர விரட்டினார்.  சொல்லப்போனால் நகை முரணாக பாரதிராஜா வகையறாக்கள் வந்த பின்னரே தமிழில் மகா கேவலமான படு திராபையான தலைப்புகள் சாத்தியமாயின. ஏ  வி எம்மின் சின்ன வீடு என்று விளம்பரம் வரும் என  அறுபதுகளில் யாரும் நினைத்திருக்கவே மாட்டார்கள். குழந்தைக்கு சூட்டுவது  போன்று திரைப் படங்களுக்கு பெயர் வேண்டும் என்று விரும்பிய நிறுவனம் கடந்து வந்த வணிகப் பாதையில் இந்த இடறல், சறுக்கல், தவிர்க்கமுடியாத ஒரு வியாபார சமரசம்.

      நல்ல தலைப்புகள் பற்றி பேசும் சமயத்தில் கண்ணைச் சாய்த்து கடந்து செல்ல முடியாத ஒருவர் இயக்குனர் மகேந்திரன். முள்ளும் மலரும் என்ற தலைப்பு இன்று வரை தமிழில் வந்த மிகச் சிறந்த தலைப்புகளில் ஒன்றாக சிலாகிக்கப்படுகிறது.  அந்தத் தலைப்பை சற்று நிதானமாக ஆராய்ந்தால் அதனுளில் இருக்கும் இலக்கியச் சுவையை அறியலாம். அதை நீங்கள் எப்படி உள்வாங்கினாலும் படத்தின் கதைக்கேற்றபடியே அது பொருந்துவதை நீங்கள் காணலாம். One of the most classic titles.

   நெஞ்சத்தைக் கிள்ளாதே (பின்னாட்களில் இதயத்தை திருடாதே) நண்டு (எந்த இயக்குனருக்கும் தோன்றாத ஒன்று), ஜானி என்று  மகேந்திரனும் கொஞ்சம் சறுக்கினார். இருந்தும் தமிழின் ஆகச் சிறந்த தலைப்புகளில் ஒன்றான உதிரிப்பூக்கள் அவர் பெயரை என்றும் சொல்லிக்கொண்டே இருக்கும். எனது பார்வையில் உதிரிப்பூக்கள் போன்றதொரு தலைப்பு ஒரு மகா மகா ஆச்சர்யம். காவியத் தலைப்பு. இதற்கு சற்றேனும் இலக்கியப் பரிச்சயம் அவசியம். புதுமைப் பித்தனின் சின்னம்மா (என்று நினைக்கிறேன்) உதிரிப்பூக்களாக மலர நிறைய வாசிப்பும் நிறைய யோசிப்பும் கண்டிப்பாகத் தேவை. மகேந்திரனிடம் அவை இரண்டுமே இருந்தன என்று தெரிகிறது.  கை கொடுக்கும் கை, கண்ணுக்கு மை எழுத்து, ஊர் பஞ்சாயத்து என்று தமிழ் சினிமாவின் சாபத்திலிருந்து மகேந்திரனும் தப்பவில்லை.  இறுதியாக சாசனம் என்று கொஞ்சமாக அந்தப் பழைய மகேந்திரனை காண முடிந்தது. பிறகு தெறி என்ற வணிக அபத்தத்தில் தோன்றி காணாமல் போனார்.   தமிழின் மிகச் சிறந்த ஒரு படைப்பாளி இன்றைய வணிக வெற்றியின் குறியீடான  விஜய் போன்றவர்களின் வில்லனாக நடிக்க வேண்டியது ஒரு  துர்பாக்கியம். இன்றைய தலைமுறை இனி அவரை இப்படித்தான்   பார்க்கும் என்று கவலையாக இருக்கிறது.

  ஒரு தலை ராகம் என்று படம் எடுத்த ராஜேந்தர் பின்னர் ரயில் பயணங்களில், வசந்த அழைப்புகள், நெஞ்சில் ஒரு ராகம்,(நெஞ்சில் ஓர் ஆலயம் பாதிப்பு) ராகம் தேடும் பல்லவி என்று வெற்றிக் கனி சுவைக்காமல் பின்னர் தடாலடியாக உயிருள்ளவரை உஷா வென லோக்கல் பாணியில் இறங்கி வர சூடு பிடித்தது அவருடைய சினிமா. இதற்கிடையில்  பன்னீர் புஷ்பங்கள், பாலைவனச் சோலை, நெஞ்சமெல்லாம் நீயே என்று தமிழ் சினிமாவுக்கு சற்று ஆக்சிஜன் செலுத்தப்பட, அதுவுமே கொஞ்ச காலமே.

    உச்ச கட்டம் என்று ராஜ் பரத் என்பவர் ஒரு திர்ல்லர் கொடுக்க, தொடர்ந்தது அவருடைய  கவிதை சொட்டும் தலைப்புக்கள் சொல்லாதே யாரும் கேட்டால், சின்ன முள் பெரிய முள் பின்னர் தொட்டால் சுடும் என விரிய  நான்கே படங்களில்  தனது அடையாளம் இழந்தார்.

     தமிழ் சினிமாவின் தலைப்புகள் இன்றைய தேதியில் தனது சுயத்தை இழந்து விட்ட ஒரு விலாசம். மீண்டும் திருவிளையாடலும் மர்ம யோகியும், பில்லாவும், தசாவதாரமும், தில்லு முல்லுவும் தோன்றிக்கொண்டே இருக்கும் கற்பனை வறட்சியின் நீட்சி.

   தமிழுக்கு புதிய ரத்தம் செலுத்திய மணிரத்னம் தனது படங்களுக்கு அவ்வளவாக சிரத்தையுடன் தலைப்புகள் வைப்பதில்லை என்று நான் நினைக்கக் காரணம் (பகல் நிலவு, அக்னி நட்சத்திரம்,தவிர), நாயகன், இதயத்தை திருடாதே, தளபதி, அஞ்சலி, ரோஜா, திருடா திருடா, கன்னத்தில் முத்தமிட்டால் (இதற்கு என்ன அர்த்தம் என்று அவருக்காவது தெரியுமா) கடல், ராவணன், காதல் கண்மணி போன்ற மிக மலிவான அபத்தமான தலைப்புகள்தான். கொஞ்சமும் நேரம் செலவழிக்க விரும்பாமல் எதோ ஒரு சொல்லை  படத்தின் தலைப்பாக வைப்பதிலிருந்து மணிரத்னம் இன்னமும் மீளவில்லை. இருவர் என்ற தலைப்பில் ஒரு காவியத் தொடுகை இருந்ததை இப்போது சற்று எண்ணிக்கொள்கிறேன். பம்பாய், உயிரே படங்களுக்கு அந்தத் தலைப்புகள் மிகப் பெரிய அவமானம்.

     எம் எஸ் வி எண்பதுகளில் ஒரு திரைப்படம் தயாரித்தார். படத்தின் பெயர் என்னை மிகவும் வேதனைப் படுத்தியது. அது சில்க் சில்க் சில்க்... நான் மிகவும் மதிக்கும் நபர் எம் எஸ் வி என்பதற்காக அவருடைய இந்தத் தேர்வை நான் நியாயப்படுத்தி எனது  வார்த்தைகளை விரயம் செய்ய மாட்டேன்.  மிக மிக மோசமான தலைப்பு. படம் ஊற்றிக்கொண்டதால் எம் எஸ் வி வியாபார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டார் என்று பின்னர் அறிந்தேன். எப்படி எம் எஸ் வி போன்ற இசையின் அதிசயங்கள் நடைமுறை வாழ்க்கையின் நிர்ப்பந்தங்களுக்கு அடிமையாகிறார்கள் என்பது விஷம் தரும் வலி. இடறல் இல்லாமல் நடை பயில முடியாது என்ற உலக உண்மை ஒன்றே இதற்கான வலி நிவாரணி.

    நாயகனின் பெயரோ. அவனுடைய குணாதிசயங்களில் ஒன்றோ, அவன் புகழ் பாடும் எதோ ஒரு கண்றாவியோ,  பேச்சு வழக்கு சொற்களோ, கொச்சை வார்த்தைகளோ தலைப்புகளாக மாறுவதில் இருக்கும் வசதியும் விரைவும் அற்புதமான தமிழ் சொற்கள் மீண்டும் வருவதை தடை செய்வதாக உணர்கிறேன். கண்ணியமான தலைப்புகளும், தரமான கவிதை கொண்ட பாடல்களும் இப்போதைய மிகத் தீவிரத் தேவை.   இல்லையென்றால் போடா போடி, தெறி, தெனாவெட்டு, மங்காத்தா போன்ற அருவருப்புகளும், ராசா ரோசா, மானே தேனே, ராஜா கூஜா, பூவு நீவு, எசப்பாட்டு நிப்பாட்டு போன்ற கருமாந்திரங்களும் மறுபடி படையெடுக்கும் ஆபத்து  அடுத்து நிகழக் காத்திருக்கிறது. இளையராஜா காலம் முடிந்து விட்டதால் நமது தமிழ்ப் பாடல்களுக்கு இனி அவ்வகையான சித்ரவதைகளும், கொடூரங்களும் நடக்கப்போவதில்லை என்றாலுமே அவர் துவக்கி வைத்த "அந்தத் திருப்பணியை" தொடர்ந்து செய்ய யாரேனும் முயலக்கூடிய வாய்ப்பு இன்னுமிருக்கிறது.

     இன்றைய தரை லோக்கல் சூழலில் (முத்தின கத்தரிக்கா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, நாங்கல்லாம் அப்பவே அப்படி, மிளகா, இன்ன பிற அவஸ்தையான பெயர்கள்..) இன்னும் சற்றேனும் தமிழ்த் தனம் குறையாமல், ஒரு சதவிகிதமாவது கவிதை புனைந்த வார்த்தைகளோடு தனது படங்களுக்குப் பெயர் சூட்டும் ஒரே இயக்குனர் கௌதம் மேனன் ஒருவரே. மின்னலே, காக்க காக்க, போன்ற இரண்டு சமரசங்களை தள்ளி வைத்துவிட்டால், பின்னர் நமக்குக் கிடைப்பது ஒரு நல்ல தமிழ் கொண்ட தலைப்புகள். வாரணம் ஆயிரம், நீதானே என் பொன் வசந்தம், வேட்டையாடு விளையாடு, நடுநிசி நாய்கள், விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, என்னை அறிந்தால்  (நல்ல கவிதை வரியை தன் படத் தலைப்பாக தேர்ந்தெடுப்பது ஒரு விதத்தில் வரவேற்கப்படவேண்டிய முயற்சி.) என்னை நோக்கிப் பாயும் தோட்டா போன்ற தலைப்புகள்  நல்ல தமிழ் நோக்கி நமது திரையுலகம் நகர்வதின் அடையாளமாகத் தோன்றுகிறது.

      தனிப்பட்ட விதத்தில் தமிழின் மிகச் சிறந்த தலைப்புகள் எவை என்ற கேள்வி என்னை நோக்கிப் பாய்ந்தால் எனது பதில்;

மண் வாசனை, 
நூல்வேலி, 
உதிரிப்பூக்கள்......

   ஒரு கவிதையின் கடைசி வரி போன்ற தலைப்புகள் தமிழ்த் திரையில் மீண்டும் வரும் என்ற நம்பிக்கை இன்னும் என்னிடமிருக்கிறது.

   









தொடர்வது ; இசையுதிர்காலம் இரண்டு 

12 comments:

  1. சட்டென்று யாருக்கும் தோன்றாத ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு அதில் நீண்டதொரு பயணம் செய்து பல நல்ல கருத்துக்களைப் படிக்கிறவர்களின் மனதில் விதைத்திருக்கிறீர்கள். ஸ்ரீதரின் தலைப்புக்களை சின்ன வயதிலேயே பெரிதும் சிலாகித்து, பேசி, மற்றவர்களுடன் கலந்துரையாடியது நினைவுக்கு வருகிறது. தமிழ்த் திரையுலகின் நிறைய மாற்றங்களுக்கும் மாறுதல்களுக்கும் காரணமாயிருந்த ஸ்ரீதர்தான் படத்தலைப்புகள் விஷயத்திலும் பெரிய சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். அவருடைய எல்லா படத்தலைப்புகளையும் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு பதிவு எழுதலாம். அதிலும் அந்த வெண்ணிற ஆடை என்ற பெயர் தோற்றுவித்த விமரிசனமும் சரி; கலந்துரையாடல்களும் சரி சாதாரணமல்ல.
    உதிரிப்பூக்கள், நண்டு இரண்டுமே மிக நல்ல தலைப்புக்களாக இருந்தபோதிலும் அந்தச் சமயத்தில் வந்து புகழ்பெற்ற நாவல்களின் தலைப்பு அவை. முள்ளும் மலரும்கூட உமாசந்திரன் எழுதிய அந்தப் பெயரிலேயே வந்திருந்ததைச் சொல்லவேண்டும். அந்தப் பெயரை சினிமாவுக்காக மாற்றிவிடாமல் இருந்த மகேந்திரனை வேண்டுமானால் பாராட்டலாம்.
    ஸ்ரீதர் படத்தலைப்புகளை அறிவித்தபிறகுகூட மாற்றிக்கொண்டே இருப்பார். சிவந்த மண் படத்திற்கு முதலில் கைப்பிடி மண் என்றும் பிறந்த மண் என்றும் நான் பிறந்த மண் என்றும் பெயர் சூட்டிவிட்டுப் பிறகு இறுதியில் சிவந்த மண் என்று வைத்தார் என்று ஞாபகம்.
    அதே போல் அவர் மிகவும் தடுமாறிய தலைப்பு ஊட்டி வரை உறவு. முதலில் 'வயது பதினெட்டு ஜாக்கிரதை'(இந்தத் தலைப்பில்தான் குமுதத்தில் தொடர்கதை வந்திருந்தது) என்று பெயர் வைத்ததாக ஞாபகம். பிறகு சிவாஜி பட டைட்டில் போல இல்லையே என விநியோகிஸ்தர்கள் சொல்ல வேறொரு தலைப்பு வைத்து இறுதியாக வைத்த தலைப்புதான் ஊட்டிவரை உறவு.(இதன் கதை ராகி ரங்கராஜனுடையது.)
    படத்தில் என்ன இருக்கிறது என்பதை தலைப்பு சொல்லிவிட வேண்டும் என்பது ஒரு ஆதாரமான கருத்து. இந்தக் கருத்தின்படி கேஎஸ்கோபால கிருஷ்ணனும் சரியான தலைப்புகளை வைப்பதில் தேர்ந்தவர் என்று சொல்லப்படுவதுண்டு.
    வித்தியாசமான தலைப்பில் ஒரு பதிவைக் கொண்டுவந்ததற்காகப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. சிவந்த மண் படத்திற்கு முதலில் 'ஒரு பிடி மண்' என்ற தலைப்பு வைத்திருந்தார் என்று வாசிக்கவும் (பிறகு கதையையும் மாற்றித்தான் சிவந்த மண் எடுக்கப்பட்டது.)

      Delete
  2. அருமையான கட்டுரை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி பிசாசு அவர்களே.

      Delete
  3. வித்தியாசமான பதிவு என்று சொல்லலாம் . திரைப்படங்களின் தலைப்பில் நீங்கள் கொண்டிருக்கும் ரசனை ரசிக்கத் தகுந்தது. மொத்தத்தில் கவிதைத் தனமான தலைப்புகளை மட்டும் எடுத்துப் போட்டிருக்கிறீர்கள். அவைகள் பொதுவாக எல்லோருக்கும் பிடித்த தலைப்புகள். உங்களுக்கும் பிடித்ததில் ஆச்சரியம் இல்லை.

    கவிதைத்தனமாக தலைப்பிட்டு ஓடாத படங்களும் உண்டு . சுமாரான தலைப்பிட்டு சூப்பராக ஓடிய படங்களும் உண்டு. தலைப்பிற்காக படம் பார்த்தவர்கள் உங்களைப் போல சொற்பமானவர்களே இருப்பார்கள். மற்றபடி நடிகர், இயக்குனர் , இசையமைப்பாளர் யார் என்பதை வைத்துதான் படம் பார்க்க வருவார்கள்.

    ராகம் தேடும் பல்லவி , பூட்டாத பூட்டுக்கள், தூரத்து இடி முழக்கம் போன்ற படங்களின் தலைப்பின் கவர்ச்சியால் படம் பார்த்து நொந்து போயிருக்கிறேன். கண்றாவி கதையம்சம் கொண்ட தோல்வி படங்கள்.
    அதிலிருந்து படம் பற்றி கேள்விப்படாமல் படம் பார்க்க முயற்சிப்பதில்லை.

    ReplyDelete
  4. காரிகன் வித்தியாசமானதொரு பதிவு . திரைப்பட தலைப்பு குறித்த அலசல் அருமை. ஏனைய இயக்குனர்கள் பற்றிய செய்திகளைத் தந்த தாங்கள் பச்சிளம் குழந்தை முதல் பல் இழந்த பெரியவர்கள் வரை பார்த்து மகிழக்கூடிய தலைப்பிலேயே கதையை யூகிக்கக்கூடிய விரசமில்லாத அற்புத படங்கள் தந்த இயக்குனர் விசுவை மறந்ததேன் .இன்றளவும் சம்சாரம் அது மின்சாரம் என்ற பெயரைக் கேட்டாளே தொலைக்காட்சியின் மற்ற நிகழ்ச்சிகளை ஒதுக்கிவிட்டு அப்படத்தைக் காண ஆர்வம் காட்டுகிறார்கள் எனது பிள்ளைகள்.
    #எத்தனைப் பிரமாதமான உணவுபடைத்தாலும் தயிர் சாதம் ஊறுகாய்க்கு ஈடு இணை இல்லாத து போல எத்தகைய பதிவாயினும் இழிவு படுத்துவதாக எண்ணி இளையராஜா என்னும் நாமத்தைப் பதியாவிடில் உங்கள் பதிவே முழுமையடையாதோ !

    ReplyDelete
  5. அருமையான பதிவு. சிறு வயதில் படித்த கதை நினைவுக்கு வருகிறது. 'பெயரில் என்ன இருக்கிறது'. அதில் பிச்சைக்காரனுக்கு கோடீஸ்வரன் என்றும், கண்ணில்லாதவனுக்கு கண்ணாயிரம் என்றும் இருக்கும். ஆனால், அது திரைப்படங்களுக்கு பொருந்தாது. படத்தின் தலைப்பே படத்தைப் பற்றி சொல்ல வேண்டும். கடைசியாக அதை நான் உணர்ந்த படம் 'நேரம்'.

    மற்றபடி கௌதமின் படங்களில் படத்திற்கும் தலைப்பிற்கும் சம்பந்தமே இருக்காது கருத்து. அதே போல கன்னத்தில் முத்தமிட்டால் படத்திற்கு முதலில் மஞ்சள் குடை என்ற தலைப்பே இருந்தது. அது படத்தில் மாதவன் எழுதும் சிறுகதை. மற்றபடி அந்த அந்தப் படத்திற்கு தேவை இல்லாதது.

    அதே போல இந்த நல்ல தலைப்புகளை மொக்கை நாடகங்களுக்கு வைக்கிறார்களே. அதைப்பற்றி உங்கள் கருத்து?

    அருள் ஜீவாவின் கருத்தோடும் நான் வழி மொழிகிறேன். இதில் இளையராஜாவை இழுக்க வேண்டிய அவசியமே இல்லை. ஒருவேளை எழுதாவிட்டாலும், வேறு யாராவது வந்து 'நல்ல வேளை, இதிலாவது நீங்கள் இளையராஜா பற்றி எழுதவில்லையே' என்று என்று சொல்வார்கள்.

    ReplyDelete
  6. வாங்க அமுதவன்,

    திரைப்படத் தலைப்புகள் ஆய்வுக்குரிய வகையைச் சேர்ந்தவை. கொஞ்சம் சுவாரஸ்யமானதும் கூட. ஸ்ரீதர் சந்தேகமேயில்லாமல் ஒரு புதிய பாணி இயக்குனர்தான். கதை சொல்லும் நேர்த்தி, படத் தலைப்புகள், ஒளிப்பதிவு, பாடல்கள், நாடகத் தமிழை விட்டு விலகிய வசனங்கள் என்று அவர் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே சென்றார். இடையில் சில சறுக்கல்கள் இருந்தாலும் அவரை தமிழின் புதுமை இயக்குனர்களில் ஒருவர் என்று தாராளமாகச் சொல்லலாம்.

    சிவந்த மண் என்ற தலைப்பு கூட கொஞ்சம் சிந்திக்கவைக்கும் வலிமை கொண்டது. அதை சற்று மறந்துபோனேன். நினைவூட்டியதற்கு நன்றி.

    உதிரிப் பூக்கள் புதுமைப் பித்தனின் கதை என்ற தகவல் தெரியும். ஆனால் அதே தலைப்பு என்பது இதுவரை தெரியாது. நீங்கள் கூறியது படி தன் விருப்பம் போல அதைச் சிதைக்காமல் புதுமைப் பித்தனுக்கு மரியாதை செய்த மகேந்திரனுக்கு நன்றி சொல்வோம்.

    ReplyDelete
  7. வாங்க சால்ஸ்,

    வருகைக்கு நன்றி.

    படத் தலைப்பைப் பார்த்து படம் பார்ப்பேன் என்று நான் சொல்லவில்லை. அவைகள் மீது ஒரு ஈடுபாடு, மோகம் உண்டு என்பதோடு சரி.

    ஒரு தலை ராகம் வந்த சமயத்தில் அதை சிலாகித்து எழுதப்பட்ட கட்டுரைகள் என் நினைவுக்கு வருகின்றன. பல படங்களுக்கு தலைப்புகள் கை கொடுப்பதில்லை. பார்த்துவிட்டு ஒரு பாட்டம் அழுதுவிட்டு நாம் தான் வெளியே வரவேண்டும். "துடிக்கும் கரங்கள்" என்ற ஸ்ரீதர் படம் பார்த்து எனக்கு நேர்ந்த கொடுமை இது. கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், காதல் ஓவியம் போன்ற பாரா வின் படங்களும் இந்த வகையே. அவை எப்படி இப்படி ஓடின என்பது இப்போது கேள்விக்குறியாக இருக்கிறது.(காதல் ஓவியம் தவிர).

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி அருள் ஜீவா அவர்களே,

    விசு படங்களின் தலைப்புகள் நகைச்சுவை ரகம். சம்சாரம், மங்கை, நாணயம், காவலன் போன்ற வார்த்தைகளுக்கு பொருத்தமாக இன்னொரு வாரத்தை சேர்ப்பார். மணல் கயிறு கொஞ்சம் தேவலாம்.

    அடுத்து முக்கியமாக இளையராஜா குறித்து நீங்கள் கேட்டிருக்கும் கேள்வி. இளையராஜாவின் நாமம் என்று எழுதி அவரை ஏதோ கடவுள் ரேஞ்சுக்கு பில்டப் கொடுப்பதை தவிர்க்கவும். மகா மட்டமான மலிவான வார்த்தை பிரயோகம். என்ன செய்வது தரமிழந்த தமிழ்த் திரையின் அங்கங்களில் உங்கள் இளையராஜா மிக முக்கியமானவராக இருக்கிறாரே? அதை குறிப்பிட்டால் எதோ நான் அவர் புகழ் பாடியதுபோல திசையை திருப்புகிறீர்கள். இளையராஜா இல்லாமல் நம் இசை கெட்டுப்போனதை விவரிக்க முடியாது.

    ReplyDelete
  9. வாங்க அரவிந்த்,

    நன்றி.

    ரொம்ப நாளாச்சு உங்களப்பாத்து. நலமா?

    மஞ்சள் குடை என்ற தலைப்பே பரவாயில்லை கன்னத்தில் முத்தமிட்டால் என்ற அர்த்தமற்ற அவஸ்தைக்கு. பூக்கடை என்று பத்திரிக்கைகள் கொளுத்திப்போட மணிரத்னம் கடல் என்று அழகான தலைப்பிட்டு கடலையே கொளுத்தினார். பார்த்த ரசிகன் வெந்து போனான். மணிரத்னம் கவிதைகள் பக்கம் சாய்ந்தால் சற்று நல்ல தலைப்புகள் சாத்தியமாகலாம்.

    இளையராஜா பற்றிய எனது வாக்கியம் இயல்பாக வந்து விழுந்த ஒன்று. சிலரது வருகைக்குப் பிறகே தமிழ்த் திரை அசிங்கமானது. அதில் பாரதிராஜா முதன்மையானவர். பாரதிராஜா வளர்த்துவிட்ட புதிய பாணி எல்லா தளங்களையும் பதம் பார்த்தது. இசையையும் விட்டு வைக்கவில்லை. இசையில் அதை முன்னின்று வெற்றிகரமாக நடத்திக்காட்டியவர் இளையராஜா. நல்ல மெட்டுகளையும், தமிழ்க் கவிதையையும் ஒழித்துக்கட்டினார்.

    ReplyDelete
  10. JI NICE ARTICLE YOU WOULD HAVE INCLUDED VIJAY ANTONYS DARING FILM TITLES UNMINDFUL OF THE POPULAR TAMIL FILM SENTIMENTS KEEP IT UP JI

    ReplyDelete