Sunday 24 May 2015

தீவிரத் தலையாட்டல்


               





  சில வருடங்களுக்கு முன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விரைவாக தாண்டிச் சென்றுகொண்டிருந்த ஒரு சமயத்தில் திடுமென ஒரு சானல் ஒன்றில் நான் நின்றேன். அங்கே ஒரு  இசைக் கலைஞரை     கர்நாடக இசையில் பாண்டித்யம் பெற்ற பெண் ஒருவர் பேட்டி எடுத்துக்கொண்டிருந்தார். பொதுவாக கர்நாடக இசை என்றால் வயலின், கடம், மிருதங்கம், தம்புரா என்ற சம்பிரதாய வாத்தியக் கலைஞர்கள் இல்லாமல் இங்கே பேசிக்கொண்டிருந்தவர் ஒரு கிடார் இசைஞர். கர்நாடக இசையில் எவ்வாறு கிடார்  ஊடுருவியது என்று எனக்கு மகா வியப்பு. உடனேயே நான் அந்த நிகழ்ச்சியை சுவாரஸ்வத்துடன் பார்க்க ஆரம்பித்து விட்டேன்.

  அந்த கிடார் இசைஞரின் பெயர் ஸ்ரீதர் என்று நினைவு. ஒருவேளை பெயர் தவறாக இருக்கலாம். ஆனால் பார்ப்பதற்கு எதோ மைதா மாவில் உருட்டி எடுத்த வஸ்து போல இருந்தார்.  வெகு இயல்பாக  பல தகவல்கள் அவரிடமிருந்து வந்தன. அவரை பேட்டி கண்ட அந்த கர்நாடக பாடகிக்கு(!) சாஸ்திரீய சங்கீதத்தை எட்டிப் பிடித்துவிட்ட மேற்கத்திய வாத்தியமான கிடாரின் மீது கடுமையான சம்பிரதாய கோபம் இருந்திருக்கவேண்டும்.  எப்படி கர்நாடக ராகங்களுக்கு கிடார் கொண்டு இசைக்க முடியும் என்ற நம்பாத கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார்.  அவர் கேள்விகளில் மேற்கத்திய இசையையும்  அதன்  இசைக் கருவிகளையும் இழிவாக எண்ணும் தொனி யூகத்துக்கு இடமில்லாமல் தெறித்து விழுந்தது. (உண்மையில் கர்நாடக சங்கீதத்தில் வாசிக்கப்படும் அதன் ராக வளைவுகளோடு இரண்டற பிரிக்க முடியாத அளவுக்கு கலந்துவிட்ட வயலின் ஒரு மேற்கத்திய இசைக் கருவி.) அவரின் கேள்விகளுக்கு அந்த கிடார் இசைஞர் மிகத் துல்லியமாகவும்  விளக்கமாகவும்  பதில் அளித்தது ஒரு ஆரோக்கியமான விவாதத்தை நோக்கி அவர் நகர விரும்புவதை தெளிவாக நிரூபித்தது.  ஒரு இடத்தில் கேள்வி கேட்ட பெண்மணி சொன்னது இது: "ஆனா ஒரு விஷயம் பாருங்க, மேற்கத்திய இசை கேக்கறவங்க காலைதான்  ஆட்டுவாங்க. நம்ம கர்நாடக இசை கேக்கறவங்க தலைய அசைப்பாங்க. அதாவது மேற்கத்திய இசை காலோடு முடிந்துபோற இசை. கர்நாடக இசையோ தலை வரை போகக்கூடியது. மேன்மையானது. மேற்கத்திய இசை போல கீழ்த்தரமானதல்ல". இதைக் கேட்டதும் என்னைப்போலவே அதிர்ச்சியடைந்த அந்த ஸ்ரீதர்  என்பவர் தன்னோடு  பேசிக் கொண்டிருக்கும் அந்த பாசிஸ்ட் பெண்மணியின் அபத்தமான கருத்தை ஒரு சிறிய புன்னகையோடு உதாசீனம் செய்தார். பின்னர் அவர்கள் பேசியதெல்லாம் இங்கே வேண்டாத சங்கதி.

 நான் எழுத விழைந்தது இந்த பேட்டியைக் குறித்தல்ல. மாறாக அந்தப் பெண்ணின் prejudiced opinion எத்தனை ஆழமாக  நமது பொது சிந்தனையில் ஊறிக் கிடக்கிறது என்பதை இதைப் படிப்பவர்களுக்குப் புரிய வைக்கவே. காலை ஆட்டுவதும்  தலையை அசைப்பதும் ஒரு இசையின் தரத்தை தீர்மானிக்கும் மிக முக்கியமான  செயலாக ஒருவரால் முன்னிறுத்தப்படுவது எத்தனை மலிவானத்  தீர்ப்பிடல்! ஒரு வெட்டி விவாதத்திற்காக  இதை எடுத்துக்கொண்டாலுமே இதில் சற்றும் உண்மை இல்லை. பொதுவாக நாம் தாளத்துடன் ஒன்றிக்கும் போது நமது கால்கள் இயல்பாகவே அனிச்சை செயலாக தரையில் ரிதமாக இடிக்கத்  துவங்கிவிடும்.  பாடல் அல்லது இசையின் சுவை அதிகரிக்க அதிகரிக்க நம் தலை போதையேறிய உணர்வுக்கு வந்துவிடும். அதன் நீட்சியே அந்தத் தலையாட்டல்.  மேலும் இந்தக் காலாட்டாலும் தலையாட்டாலும் ஒருவரின் விருப்பம் என்ற எளிமையான உடலசைவைத்  தாண்டி வேறு புனிதமான அல்லது மர்மமான குறியீடுகள் கொண்டவையல்ல. சிலர் ஒரு குறிப்பிட்ட இசை அமைப்பாளரின் பாடலில் இரண்டாவது சரணத்தில் வரும் ஒரு சிறிய வயலின் துணுக்கு  தன் உயிர்நாடியை தொட்டுவிட்டுச் செல்லும் என்று  உளறுவதைப் போன்ற நகைச்சுவைதான் இது.

  ஆனால் மேற்கத்திய இசைக்கும் தலையாட்டலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.  சொல்லப்போனால் இந்தத் தலையாட்டல் உண்மையிலேயே மேற்கத்திய இசையின் ஒரு இன்றியமையாத அங்கம்.  ஆங்கிலத்தில் இதை Headbanging என்பார்கள். ஹெட்பேங்கிங் மேற்கத்திய ராக் இசை கொடுத்த ஒரு திடீர் விபத்து. மேற்கத்திய இசை வல்லுனர்களின் கருத்துப்படி Led Zeppelin என்ற பிரிட்டிஷ் இசைக் குழுவினரின் அதிரடி இசையில் தூண்டப்பட்ட ரசிகர்கள் தங்கள் தலைகளை அரங்கத்தின் சுவர்களில் மோதிக்கொண்ட ஒரு நிகழ்வுடன் இந்தத் தலை மோதல் கலாச்சாரம் 1969இல் உருவானது. தொடர்ந்து மேற்கத்திய ஹெவி மெட்டல் இசைக் குழுக்களின் எல்லையற்ற தீரா இடி போன்ற இசையில் ரசிகர்களும் இசைஞர்களும் ஒரு சேர இந்தக்  கலாச்சாரத்தை புதுப்பித்துக்கொண்டே வந்தார்கள். சில வேளைகளில் இவர்கள் தலையை ஆட்டும் வேகமும் ஆவேசமும்    பார்ப்பவர்களுக்கு   மயக்கம் வந்துவிடும் அளவுக்கு ராட்சதத்தனமாக இருக்கும். பொதுவாக ராக் இசையை கேட்கும் ஒருவரால் தலையை ஆட்டாமல் இருப்பது என்பது ஒரு அசாதாரண காரியம். ராக் என்ற அந்த மின்சாரத்  துணுக்கு உங்களுக்குள் செல்லச் செல்ல  உங்கள் தலை எதோ பெயரறியாத  பிசிக்ஸ் விதிக்குட்பட்டு தானாகவே முன்னும் பின்னும்  அசைய ஆரம்பித்துவிடும்.

  இப்போது  பதிவின் துவக்கத்தில் குறிப்பிடப்பட்ட  அந்த பாசிஸ்ட் பெண்மணியின் தலையாட்டல் குறித்த கருத்தை ஒரு இசை ரசிகன் எந்த உண்மையின்படி நம்பமுடியும்? அவர் மமதையுடன் சொல்லியது போன்ற பல புரையோடிய அபத்தங்கள் நம்மிடம் நங்கூரமிட்டு  மன ஆழத்தில் தங்கியிருக்கின்றன.

   இறுதியாக ஒரு மருத்துவக்  குறிப்புடன் இந்தச் சிறிய பதிவை முடித்துக்கொள்ளலாம். ஹெட்பேங்கிங் நிஜத்தில் ஒரு ஆரோக்கியமான உடலசைவல்ல. இது ஒரு நல்ல  இசை ரசனையின் அபாயமான வெளிப்பாடு. தொடர்ந்து இதில் ஈடுபடும் இசைஞர்கள், ரசிகர்கள் சில வருடங்களில் தலை, நரம்பு தொடர்பான புதிய வியாதிகளுக்கு தங்களை தயார் செய்துகொள்வதாக மேற்குலகில் தற்போது கண்டுபிக்கப்பட்டுள்ளது. சில சமயங்களில் இது மரணம் வரை கூட செல்லலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் இந்தச் சாத்தியம் இது ஒரு மிகத் தீவிரமான பழக்கமாக மாறும்போதுதான். அதுவரை யாருமில்லா தனியறையில் பதவிசாக உட்கார்ந்துகொண்டோ படுத்துக்கொண்டோ உங்களுக்குப் பிடித்த பாடலைக் கேட்டபடி  தலையாட்டிக்கொண்டிருப்பதில் எந்தவித ஆபத்தும் இல்லை.







அடுத்து: இசை விரும்பிகள் XXVI  -கவிதைக் காற்று.

26 comments:

  1. ஹெட்பேங்கிங் மரணம் வரை... உண்மையிலேயே பயமுறுத்துகிறது...

    ReplyDelete
  2. முக்கியமான பதிவு...
    தரவுகளுடன் குறிப்பிட்டிருப்பது அருமை..
    தொடருங்கள் தோழர்...
    ஒரு அரைமணி நேரம் செலவு செய்து படிக்கவேண்டும் என்று நினைத்தேன் இரண்டு நிமிடத்தில் முக்கியமான இசப்பதிவோன்றை தரமுடியும் என்று நிருபித்துவிட்டீர்...
    வாழ்த்துக்கள்
    தொடர்க

    ReplyDelete
  3. ஆ.....ஆ...அப்படியா....???

    ReplyDelete
  4. வாங்க டி டி,

    எத்தனை துரிதமான பின்னூட்டம்! வருகைக்கு நன்றி.

    இசையைக் கேட்கையில் காலாட்டுவதும் தலையாட்டுவதும் இயல்பானது. ஒரு ரிப்ளெக்ஸ் ஆக்க்ஷன். ஆனால் காலை ஆட்டினால் கீழ்தரம் என்றும் தலையை ஆட்டினால் உயர்ந்தது என்றும் இல்லாத விதிகளை ஆணித்தரமாக சொல்லும் மலிவான போக்கை எதிர்த்தே இந்தப் பதிவை எழுதினேன். மற்றபடி மரணம் என்பதெல்லாம் தலையை பேய்த்தனமாக ஆட்டினால்தான் உண்டு. கவலை வேண்டாம். நம் இசை அத்தனை வேகம் கொண்டதில்லை. இராவின் நிலாவே வா செல்லாதே வா போன்ற மெலடிகளைக் கேட்டுக்கொண்டு ஹெட்பேங்கிங் செய்வதெல்லாம் சாத்தியமில்லை.

    ReplyDelete
  5. உங்களுடைய main தொடருக்கு இடையில் வரும் இப்படிப்பட்ட விஷயங்களைத் தனியாகவே சிறு சிறு பதிவுகளாக எழுதிச்சென்றுவிடுவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறீர்கள் என்பதை இந்தப் பதிவு தெளிவாக விளக்குகிறது.
    கர்நாடக சங்கீதத்திற்குத் தலையாட்டுவது என்பதும் மேற்கத்திய சங்கீதத்திற்குத் தலையாட்டுவது என்பதும் ஒரே நேர்க் கோட்டில் வந்துவிடாது என்றுதான் நான் நினைக்கிறேன். கர்நாடக சங்கீதத்திற்கானத் தலையாட்டல் என்பது ஒரு மென்மையான நிகழ்வு. மேற்கத்திய பாடலுக்குக் கேட்பவர்கள் தலையாட்டுவதும் சரி, பாடுபவர்கள் அல்லது இசைப்பவர்கள் தலையாட்டுவதும் ஒரு அசுதரத்தனமான நிகழ்வு.
    இதுதான் உசத்தி, இன்னது தரம் தாழ்ந்தது என்ற வாதங்களை வேண்டுமானால் நாம் புறக்கணிக்கலாம். ஆனால் இரண்டுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

    ReplyDelete
  6. நண்பரே,
    தங்கள் வலைதளத்தில் நானும் என்னை இணைத்துக்கொண்டேன்.
    இசை எனக்கும் பிடித்தமான சப்ஜெக்ட்தான், இனி வரும் பதிவுகளை தொடர்கிறேன்.

    ReplyDelete
  7. வாங்க மது,

    என்ன செய்வது? இணையத்தின் கருணை அதிகம் கிடைக்காத பகுதியிலிருந்து என்னால் முடிந்த அளவுக்கு ஒரு பதிவு. இவ்வளவுதான் எழுத முடிந்தது. எனவே அடுத்த பதிவில் அரைமணி நேரம் செலவிடுங்கள்.

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  8. வலிப்போக்கன்,

    என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. ஆ ஆ அப்படியாவுக்கு ஆம் அப்படித்தான்...

    ReplyDelete
  9. ---உங்களுடைய main தொடருக்கு இடையில் வரும் இப்படிப்பட்ட விஷயங்களைத் தனியாகவே சிறு சிறு பதிவுகளாக எழுதிச்சென்றுவிடுவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறீர்கள் என்பதை இந்தப் பதிவு தெளிவாக விளக்குகிறது. ---

    வாங்க அமுதவன் சார்,

    அப்படியெல்லாம் எண்ணவில்லை. என் நிலை அப்படி. தொடர்ந்து இணைய இணைப்பு கிடைக்கவில்லை. நீண்ட பதிவுக்கான கால அவகாசம் இப்போது இல்லை. எனவே ஒரு அவசர பதிவு. மெயின் மீல்ஸ் இல்லாதபோது டீ பிஸ்கட் இத்யாதிகளுடன் மதிய உணவை முடித்துக்கொள்வது போன்று..

    ----இதுதான் உசத்தி, இன்னது தரம் தாழ்ந்தது என்ற வாதங்களை வேண்டுமானால் நாம் புறக்கணிக்கலாம். ஆனால் இரண்டுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.----

    கர்நாடக இசையும் மேற்கத்திய இசையும் poles apart. நீங்கள் முதலில் சொன்ன கருத்துக்காகத்தான் இதை நான் எழுதினேன். எதையும் முறைப்படி சொல்லவேண்டும். தேங்காயை உடைப்பது போல இது பெஸ்ட் அது வொர்ஸ்ட் என்று சொன்னால் சற்று முரண்பட வேண்டியிருக்கிறது.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. நல்ல பதிவு காரிகன்.. இந்திய இசை கலைஞர்கள் பலருக்கு தம் இசை ஒன்று தான் இசை தமக்கு மட்டும் தான் இசை ஞானம் என்ற தலை கனம் உள்ளது என்ற உண்மை பொதுவாக அறிந்ததே.

    நன்றாக நினைவிருக்கின்றது.... .இந்த தீவிர தலையாட்டல் என்பது அவரவர் தனி விருப்பம். கல்லூரி நாட்களில் ஒரு முறை என் அறையில் அமர்ந்து DEEP PURPLE என்ற குழுவின் Smoke on the Water என்ற பாடலை என்னுடைய வாக் மெனில் கேட்டு கொண்டு இருந்தேன். என் தலையாட்டலை பார்த்த நண்பன் ஒருவன் என்ன பாடல் நான் கேட்டு கொண்டு இருக்கின்றேன் என்று அறியாமலே.. Smoke on the Water பாடலை கேட்டு கொண்டு இருகின்றாயா என்றான். எப்படி கண்டுபிடித்தாய் என்று கேட்டதற்கு... உன் தலையாட்டல் காட்டி கடுத்து விட்டது என்றான். மேலும் அவன் .. இந்த பாடலை கேட்க்கையில் ... தலையை நன்றாக ஈரம் செய்து கொள். சொட்ட சொட்ட தண்ணீரை தலையின் மேல் ஊத்தி கொண்டு இந்த பாடலை கேட்டு பார்.. அந்த சுகமே அபாரம் என்றான். செய்து பார்த்தேன்.. உண்மையிலேயே அபாரம் தான்.
    என்னுடைய இந்த தலையாட்டல்.. ஆங்கில பாடல்களுக்கு மட்டும் அல்ல .. இளையராஜாவின் இசையில் ஒரு பாடல்.. "கங்கை ஆற்றில் நின்று கொண்டு.. நீரை தேடும் பெண் மான் இவள் ..." அந்த பாடலின் தபேலா (மிருந்தங்கமோ...) என்னை அறியாமல் என் தலையை ஆட்டி படைத்துவிடும்..
    இசைக்கு ஏது மொழி.. இந்த அறியா பெண்மணியின் அரை அறிவுக்கு ஐயோ...
    இதில் என்ன விசேஷம் என்றால், இந்த மாதிரி பெண் ஏதாவது உலரும் போது, நம்ம அல்லகைகள்.. ஆஹா... ஓ ஹோ .. என்று அவர்களை புகழ்வார்கள்..

    ReplyDelete
  12. வாங்க காரிகன்

    என்னடா இளையராஜாவை இழுக்காமல் ஒரு பதிவு காரிகனிடமிருந்து வருகிறதே என்று சந்தேகப்பட்டு வாசித்துக்கொண்டே வந்தால் ..' ஆகா வந்திரிச்சி ' என்பது போல் ஒரு வரியைச் சேர்த்து விட்டீர்கள்.

    ///சிலர் ஒரு குறிப்பிட்ட இசை அமைப்பாளரின் பாடலில் இரண்டாவது சரணத்தில் வரும் ஒரு சிறிய வயலின் துணுக்கு தன் உயிர்நாடியை தொட்டுவிட்டுச் செல்லும் என்று உளறுவதைப் போன்ற நகைச்சுவைதான் இது.///

    'ஒரு இசையின் தரத்தை தீர்மானிக்கும் மிக முக்கியமான செயலாக ஒருவரால் முன்னிறுத்தப்படுவது எத்தனை மலிவானத் தீர்ப்பிடல் ' என்று நீங்கள் கூறியிருக்கும் வார்த்தைகளிலிருந்தே உங்களுக்கும் பதில் சொல்லலாம் . ஒருவரின் ஆத்மார்த்தமான உணர்வினை மலிவாக மதிப்பிடலோ தீர்ப்பிடலோ எப்படி நிஜமாகும் . விசு அவர்கள் தான் தலையாட்டி ரசித்த மேனாட்டுப் பாடலையும் ஒரு இளையராஜாவின் பாடலையும் சுட்டிக் காட்டியிருக்கிறாரே , அவரின் ரசனை மலிவானது என்று சொல்வீர்களா!? இது என்ன விதமான தீர்ப்பு ? குமாரசாமியின் தீர்ப்பைப் போலல்லவா இருக்கிறது.

    ReplyDelete
  13. காரிகன். பின்னூட்டத்தையே பதிவு போல் எழுதும் தாங்களா இப்பதிவை எழுதியது?(நம்பமுடியவில்லை ...)எனினும் நன்றாகவே இருக்கிறது .படிப்பதற்கு அலுப்பேற்படாத வகையில் ஓர் சிறிய பதிவு .வாழ்த்துக்கள் .இசைஞானியை இழுக்காவிட்டால் பதிவு முழுமையடையாது என்பதை தங்கள் கொள்கையாக கொண்டுள்ளீர்களோ!

    ReplyDelete
  14. வாருங்கள் செந்தில்,

    முதல் வருகைக்கு நன்றி. உங்களின் பதிவுகள் அனைத்தையும் படித்திருக்கிறேன். நீங்கள் இங்கு வருவது குறித்து மகிழ்ச்சி. தொடருங்கள்..

    ReplyDelete
  15. வாங்க விசு,

    வருகைக்கு நன்றி.

    கர்நாடக சங்கீதம் கேட்கும் பலருக்கு இந்த இசைதான் உயர்ந்தது என்ற எண்ணம் இருப்பதை நானறிவேன். அதனால்தான் இந்தப் பதிவை ஒரு ஆரம்பமாக எழுதினேன்.

    டீப் பர்பிள் குழுவின் ஸ்மோக் ஆன் த வாட்டர் பாடல் நிறைய பேருக்கு பிடித்த பாடல். கல்லூரி இசை நிகழ்சிகளில் இந்தப் பாடலைப் பாடாமல் இருக்கமாட்டார்கள். அதேபோல ஸ்கார்பியன் குழுவின் ஹாலிடே பாடல்.

    நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த இளையராஜா பாடல் 83இல் வந்த ஆயிரம் நிலவே வா என்ற படப் பாடல். இராவின் 200 அல்லது 250 வது படம் என்று ஞாபகம்.

    இசைக்கு மொழியில்லை என்று அடிக்கடி சிலருக்கு நினைவூட்டவேண்டியிருக்கிறது.

    ReplyDelete
  16. வாங்க சால்ஸ்,

    இராவைப் பற்றி எந்த எழுத்துமே நான் எழுதவில்லை. இருந்தும் உங்களுக்கு அப்படித் தோன்றுவது வினோதம்தான்.

    நண்பர் விசுவுக்கு பதில் சொல்லிவிட்டேன். அவரைப் போலவே நானும் சில இரா பாடல்களை நன்றாக ரசித்தவன்தான்.

    அந்த குமாரசாமி குறிப்பு தேவையில்லாத அரசியல் இடைச்செருகல்.

    ReplyDelete
  17. வாங்க அருள் ஜீவா,

    பாராட்டுக்கு நன்றி.

    இணையம் அவ்வப்போது கை விட்டுவிடுவதால் ஒரு திடீர் சின்ன பதிவு. அடுத்த பதிவில் சரிகட்டி விடலாம். பொறுமையோடு என் பதிவுகளைப் படிப்பதற்கு நன்றி.

    -----இசைஞானியை இழுக்காவிட்டால் பதிவு முழுமையடையாது என்பதை தங்கள் கொள்கையாக கொண்டுள்ளீர்களோ!----

    இளையராஜா என்றாலே போதும். இந்த அடைமொழியெல்லாம் எனக்கு அலர்ஜி. இரா வை பற்றி நான் எங்குமே எழுதவில்லை இதில். என்னைப் பொருத்தவரை இசை மிகப் பெரியது. அதில் நீங்கள் குறிப்பிடும் நபர் ஒரு சிறு புள்ளி.

    ReplyDelete
  18. வணக்கம் காரிகன்...

    " உண்மையில் கர்நாடக சங்கீதத்தில் வாசிக்கப்படும் அதன் ராக வளைவுகளோடு இரண்டற பிரிக்க முடியாத அளவுக்கு கலந்துவிட்ட வயலின் ஒரு மேற்கத்திய இசைக் கருவி "

    உங்களின் பரந்துபட்ட, ஆழமான இசை அறிவை உணர்த்தும் வரிகள் !

    " அவர் மமதையுடன் சொல்லியது போன்ற பல புரையோடிய அபத்தங்கள் நம்மிடம் நங்கூரமிட்டு மன ஆழத்தில் தங்கியிருக்கின்றன. "

    ... ஆமாம் ! விருந்தோம்பல், கற்பு போன்றவற்றுக்கெல்லாம் ஏகபோக உரிமை நாம் மட்டும்தான் என்றும் மேலைநாட்டினர் அனைவரும் குடித்து கூத்தாடி, ஒழுக்கமற்று வாழுபவர்கள் என்பதும்போன்ற அபத்தங்கள் !

    " இது ஒரு நல்ல இசை ரசனையின் அபாயமான வெளிப்பாடு... "

    ஒரு வகையான ஹிஸ்டீரியா !

    சிறிதானாலும் காரம் குறையாத பதிவு !

    ( எனது வலைதளத்தில் தங்களின் பின்னூட்டத்துக்கான என் பதிலை படியுங்களேன்... ! )

    நன்றி
    சாமானியன்.



    ReplyDelete
  19. வாங்க சாம்,

    வருகை மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி.

    ----... ஆமாம் ! விருந்தோம்பல், கற்பு போன்றவற்றுக்கெல்லாம் ஏகபோக உரிமை நாம் மட்டும்தான் என்றும் மேலைநாட்டினர் அனைவரும் குடித்து கூத்தாடி, ஒழுக்கமற்று வாழுபவர்கள் என்பதும்போன்ற அபத்தங்கள் !---

    இதைத்தான் நான் சொல்லவந்தேன். என் பள்ளிப் பருவத்திலிருந்தே இதுபோன்ற கருத்துக்களை நான் எதிர்த்து நிறைய நண்பர்களிடம் பேசியிருக்கிறேன். நான் குறிப்பாக உணர்த்தியதை நீங்கள் தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கிறீர்கள் . சில சமயங்களில் ஒரே அலைவரிசையில் நாம் இருப்பதுபோல தோன்றுகிறது.

    உங்களின் பொறுமை பதிவைப் படித்து, வியந்து,பின்னூட்டம் அளித்து, இன்று காலைதான் எனக்கான உங்களின் பதிலைப் படித்தேன். எனக்காக எழுதியுள்ளதாக நீங்கள் சொல்லியிருப்பது என்னை திடுக்கிட வைத்தது. ஒரு சந்தோஷ திகைப்பு. நன்றி. இணையத்தில் சந்தித்தாலும் உங்களின் ஆத்ம நண்பர்கள் வட்டத்தில் என்னையும் இணைத்துக் கொண்டதற்கு அடுத்த நன்றி. பதிவுகளில் மீண்டும் சந்திப்போம்.

    ReplyDelete
  20. காரிகன்...

    என்ன ஆயிற்று ? பின்னூட்டத்துடன் வந்தேன்... " புனித வியாபாரிகள் " பதிவை காணோம் ?!....

    சாமானியன்

    ReplyDelete
  21. வாங்க சாம்,

    "புனித" வியாபாரிகள் என்றொரு பதிவை நேற்று வெளியிட்டு நேற்றே எடுத்தும் விட்டேன்.

    நண்பர் ஒருவர் தினகரன் குடும்ப ஊழியம் செய்யும் நிறுவனத்திடமிருந்து வந்திருந்த நிதி திரட்டும்(என்ன ஒரு வேடிக்கையான பெயர்?) கடிதம் ஒன்றை என்னிடம் காண்பித்து ,"எப்படியெல்லாம் கொள்ளையடிக்கிறாங்க பாருங்க." என்றார். செங்கலுக்கு 300, 3000 என்று அச்சிட்டு இவ்வளவு கொடுத்தால் உங்களுக்காக நாங்கள் ஜெபிப்போம் என்று வாக்குறுதிகள் அள்ளி வீசியிருந்தார்கள். எனக்கு இந்த குழுமத்தின் நடவடிக்கைகள் அறவே பிடிக்காத ஒன்று. அவர்களை நவீன கொள்ளைக்காரர்கள் என்று நினைப்பவன். எனவே அந்த கடிதத்தை பிரசுரித்து "புனித" வியாபாரிகள் என்ற தலைப்பில் நேற்று ஒரு பதிவு எழுதினேன்.

    நண்பர் திரு மது எஸ் வந்தார். அந்த நிறுவனம் கோடி கோடியா இந்நேரம் குவிச்சுருப்பாங்க என்றார். மேலும் என் பதிவு மூலம் இன்னும் சில கோடிகள் அவர்களுக்கு வருமானம் வரலாம் என்று சொல்லி என்னை திடுக்கிட வைத்தார். இதை அடுத்து வந்த அமுதவன் அவர்கள் நீங்கள் எதற்கு இவர்களுக்கெல்லாம் விளம்பரம் செய்கிறீர்கள் என்று ஒரு கேள்வி வைத்தார். இரண்டாவது முறை திடுக்கிடல் எனக்கு நடந்தது. அதுவரை அப்படியான ஒரு பார்வை எனக்கில்லை. மேலும் அவர்கள் சொல்வது எனக்கு சரியென்றே பட்டது.

    என் பதிவைப் படித்துவிட்டு சில ஜென்மங்கள் ஆன் லைன் மணி ட்ரான்ஸ்பர் முறையில் சில ஆயிரங்களை அனுப்பிவைக்கக்கூடிய அபாயமான சந்தர்ப்பம் இருந்ததால் உடனே அந்தக் கடிதத்தை நீக்கிவிட்டு பதிவை மட்டும் வெளியிடலாம் என்று அந்த கடிதத்தை நீக்கினால் பதிவு மட்டும் இளையராஜாவின் இண்டர்லூட் போல பொருத்தமில்லாமல் தொங்கி நின்றது. சரி. கொள்ளையடிப்பவர்கள் அடிக்கட்டும் அதற்கு என் எழுத்து ஒரு காரணமாக இருக்ககூடாது என்ற எண்ணத்தில் மொத்தப் பதிவையுமே ஒரே வினாடியில் டிலீட் செய்துவிட்டேன். ஆனாலும் அதே தலைப்பில் பின்னர் இது போன்ற மத வியாபாரிகளை சாடி ஒரு பதிவு எழுத தீர்மானித்துள்ளேன்.

    நீங்கள் இத்தனை விரைவில் வருவீர்கள் என்று தெரிந்திருந்தால் இன்னும் சில மணி நேரங்கள் அதை விட்டு வைத்திருப்பேன். மன்னிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. காரிகன்...

      மதங்கள் மனிதனை பிரித்து அலைக்கழிப்பதை போல வேறெதுவும் உண்டா என தெரியவில்லை !...

      சில ஆண்டுகளுக்கு முன்புவரையிலும் இனி வரும் தலைமுறையினர் மதங்களை மீறிய மனித நேயத்துடன் வாழ்வார்கள் என நம்பினேன்... ஆனால் இன்றைய சூழல் இன்னும் மோசம் ! மிகவும் பக்குவப்பட்டவர்கள் என நாம் நப்புபவர்கள் கூட மதம் என்று வந்துவிட்டால் மரத்தில் ஏறி விடுகிறார்கள் ! மதம் ஒரு ஓப்பியம் என்பது தான் எத்தனை உண்மை ?!!!

      மதங்கள் தோன்றியதோ, தோற்றுவிக்கப்பட்டதோ... எப்படியிருந்தாலும் மனிதனை பண்படுத்துவதுதான் அவற்றின் நோக்கம்.

      ஆனால் அந்தந்த மதங்களின் பிரச்சாரகர்களாய் தங்களை முன்னிறுத்திக்கொள்ள தொடங்கியவர்கள் தொண்டு என்ற நிலையிலிருந்து மதங்களை தங்களின் பிழைப்பாக மாற்றியதின் விளைவே நீங்கள் குறிப்பிட்ட மத வியாபாரிகள் !

      இவர்கள் எல்லா மதங்களிலும் இருக்கீறார்கள். இறைவனை ஏதோ அரசியல் கட்சி தலைவரை போல உருவகப்படுத்தி இவர்கள் அள்ளிவீசும் வாக்குறுதிகளையும், திரட்டும் நிதியையும் நினைத்தால்...

      வாழ்வின் எல்லா கதவுகளையும் தட்டி சோர்ந்த எளிய பாமரனின் உழைப்பு சேர்த்த சில ரூபாய்களைக்கூட இந்த அட்டைகள் உறீஞ்சுவதுதான் வேதனை !

      என்னை சோர்ந்து போக செய்யும் சமூக விசயங்களில் மதம் முதலாய் நிற்கிறது காரிகன் !

      எது எப்படியோ, நீங்கள் பதிவை நீக்கியது சரி...

      " அதே தலைப்பில் பின்னர் இது போன்ற மத வியாபாரிகளை சாடி ஒரு பதிவு எழுத தீர்மானித்துள்ளேன். "

      உங்களின் அடுத்த பதிவே அதுவாக இருக்கட்டும் காரிகன். உங்களை போன்றவர்களால்தான் மிச்சமிருக்கும் மனித நேயமும் காக்கப்படும் !

      நன்றி
      சாமானியன்

      Delete
    2. ஆகா
      என் பின்னூட்டத்தின் விளைவே இது என்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது
      எனது உறவினர் இருவர் ஒரு சாமியார் பற்றி விமர்சித்துக் கொண்டிருந்தனர். நான் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தேன்.

      இருவருமே அந்த சாமியாரின் வித்தைகளை விமர்சித்துத்தான் பேசிக்கொண்டிருந்தனர்
      திடீர் திருப்பமாக இரண்டாவதாக பேசிய நபர் சரி இந்த வித்தைகளை அந்த சாமியார் என்று செய்வார் என ஆவலுடன் கேட்டார்.

      எனக்குப் புரிந்துவிட்டது எனது முதல் பங்காளியின் அறிவியல் பூர்வமான விமர்சனத்தில் கலந்து கொண்ட இரண்டாவது பங்காளி மெல்ல மெல்ல அந்த சாமியாரிடம் ஒரு ஈர்ப்பை வளர்த்துகொண்டுவிட்டான் ! அதுவும் அந்த அரைமணி நேரத்தில்!

      பல ஆண்டுகள் ஆகியும் இந்த சம்பவம் எனக்கு மறக்க முடியாததாக இருக்கிறது ..

      நாம் விமர்சிக்கும் பொழுது நம்மை அறியாமலே சிலர் ஆதரவாளர்களாக மாறிவிடுகிறார்கள்.

      Delete
    3. வாங்க மது,

      நீங்கள் சொன்னதும் அமுதவன் அவர்களும் அதையே குறிப்பிட்டதும் சரிதான் நான் ஏவிய ஏவுகணை இலக்கு தவறுகிறது என்று புரிந்தது. அதனால்தான் அந்த அவசர அறுவைச் சிகிச்சை.

      வேறு கோணத்தில் என் பதிவை கண்டு கருத்து கூறியதற்கு நன்றி.

      Delete
  22. காரிகன், இதற்கு முன்பே வந்திருந்தாலும், இடையில் தொடரவில்லை....ஸாரி...

    //அவரை பேட்டி கண்ட அந்த கர்நாடக பாடகிக்கு(!) சாஸ்திரீய சங்கீதத்தை எட்டிப் பிடித்துவிட்ட மேற்கத்திய வாத்தியமான கிடாரின் மீது கடுமையான சம்பிரதாய கோபம் இருந்திருக்கவேண்டும். எப்படி கர்நாடக ராகங்களுக்கு கிடார் கொண்டு இசைக்க முடியும் என்ற நம்பாத கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார். அவர் கேள்விகளில் மேற்கத்திய இசையையும் அதன் இசைக் கருவிகளையும் இழிவாக எண்ணும் தொனி யூகத்துக்கு இடமில்லாமல் தெறித்து விழுந்தது. (உண்மையில் கர்நாடக சங்கீதத்தில் வாசிக்கப்படும் அதன் ராக வளைவுகளோடு இரண்டற பிரிக்க முடியாத அளவுக்கு கலந்துவிட்ட வயலின் ஒரு மேற்கத்திய இசைக் கருவி.) //

    வயலின் என்று சொல்ல வந்தோம்....அதற்குள் நீங்களே குறிப்பிட்டு விட்டீர்கள்....ஆம்..இன்னும் சொல்லப்போனால் கிட்டாரில் ப்ரசன்னா அவர்கள் கர்நாடக சங்கீதத்தைப் பின்னி பெடலெடுப்பார் என்பது அந்தப் பாடகிக்குத் தெரியாமலா இருக்கும்? சாக்ஸ், மாண்டெலின், கீ போர்டில் எல்லாம் கர்நாடக சங்கீதம் எல்லாம் இவர் கேட்டிருக்க மாட்டாரோ? !

    அருமையான பதிவு....ஹெட்பேங்கிங்க் பற்றி ..நீங்கள் சொல்லி இருப்பது ஆம்...அது மூளையில் ஹெமடோமாஸ், அனியுரிசம் ஏற்படுத்த வாய்ப்புண்டு...மட்டுமல்ல கழுத்தில் உள்ள ஆர்டிரிஸ் பாதிப்புள்ளாகலாம் இப்படி நிறைய சொல்லலாம்தான்....

    ஆனால் கர்நாடக சங்கீதமும், மேற்கத்திய இசையும் வேறு வேறு துருவங்கள்.....கர்நாடக சங்கீதத்தில், சங்கராபரணமும், மோஹனமும் அந்த ஸ்வரங்களை வைத்து மேற்கத்திய இசை போல பாட/வாசிக்க முடிந்தாலும்......தலை அசைப்பு இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது இல்லயா? என்பது எங்கள் தாழ்மையான கருத்து.....



    ReplyDelete
  23. வாங்க துளசிதரன்,

    கருத்துக்கு நன்றி.

    தலையாட்டல் நல்லதுதான். அது தீவிரமாகும் போதுதான் சிக்கலே.
    ஒரு வேளை அந்த கிடார் இசைஞர் பிரசன்னாவாக இருக்கலாம். நீங்கள் சொல்வதுபோல மாண்டலின் போன்ற மேற்கத்திய கருவிகளே கர்நாடக இசைக்குள் பிரவேசித்துவிட்ட காலகட்டத்தில் அந்தப் பெண் காட்டிய அலட்சியம் எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

    நீங்கள் கூறிய கருத்தையே அமுதவன் அவர்களும் குறிப்பிட்டிருந்தார். மேற்கத்திய இசைக்கும் கர்நாடக இசைக்கும் உள்ள வேறுபாடுகள் தெரிந்ததே. அதற்காக அது மோசம் இது தரம் என்று முத்திரை குத்துவதைதான் தவறு என்கிறேன்.

    ReplyDelete