Monday 17 June 2013

இசை விரும்பிகள் VIII - மீண்ட இசை.


                 ஒரு நட்சத்திர உணவகத்தின் அனுபவத்தை சில சமயங்களில் சாலையோர கடைகளில் கிடைக்கப் பெறுவது உண்மையில் ஓர் ஆச்சர்யமான நிகழ்வுதான்.ஹிந்தி இசையின் நவீனத்தை கொண்டாடிக்கொண்டிருந்த கொண்டிருந்த தமிழர்கள் 70 களின் மத்தியில் திடீரென நமது மண் வாசனையை நுகரத் துவங்கியது ஒரு மிகப் பெரிய இசை மாற்றத்திற்கான முதல் சுவடு.இவ்வாறு நம் இசை நம்மிடமே திரும்பிவந்ததைப் பற்றி விரிவாக பார்க்கும் முன் நாம் அந்த மிகப் பெரிய மாற்றத்திற்கான காரணிகளை ஆராய்வது அவசியம் என்று தோன்றுகிறது.

           70 களில் எம் எஸ் வி ஏறக்குறைய ஒரு தனிக்காட்டு ராஜாவாகவே வலம் வந்தார். அவருக்கு ஈடாக தடயத்தில் ஓட  அவரின் சமகாலத்து இசைஞர்களால் அவ்வளவாக முடியவில்லை என்பதை நாம் அறிவோம்.இது ஒரு அபூர்வமான சாதனைதான். இருபது ஆண்டுகள் கழித்தும் எம் எஸ் வி யின் இசை வெள்ளம் தடைகளற்று ஓடிக்கொண்டிருந்தது. சங்கர் கணேஷ்,வி குமார்,ஜி கே வெங்கடேஷ்,வேதா,தட்சிணாமூர்த்தி,கோவர்த்தன், ஷியாம்,விஜய பாஸ்கர்  போன்ற இசைஞர்கள் ஆடுகளத்தில் இருந்தாலும் எம் எஸ் வி மட்டுமே துவம்சம் செய்துகொண்டிருந்தார்.அவரின் பாடல்கள் சற்று வீரியம் குறைந்து, இனிமை சற்றே மெலிந்து ஒலித்தாலும் தரத்தில் சுவை குன்றவில்லை.சொல்லப்போனால் எழுபதுகளின் முக்கால்வாசி பிரபலமான பாடல்கள் எம் எஸ் வி யாலே இயற்றப்பெற்றவை.ஆனால் இருபது வருடங்களாக ஆட்சி செய்து வந்த எம் எஸ் வியால் கூட ஹிந்தி இசை என்ற அந்நிய ஊடுருவலை தடுக்க முடியவில்லை.இதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்று உளவியல் ரீதியாக பார்த்தோமானால் எம் எஸ் வி "every hero becomes a bore in the end" என்கிற கூற்றின் அடிப்படையில் வந்துவிட்டதைக் காணலாம்.காலத்தைத் தாண்டி நிற்கும் பல பாடல்களை just like that கொடுத்த அவரால் 70களின் மத்தியில் மாறிப்போய்விட்ட இசை ரசனையின் துடிப்பை துல்லியமாக கணிக்க முடியவில்லை என்பது ஒரு முரண். ஆனால் இது நிகழக்கூடியதே.

           இவ்வாறு தடம் மாறிய நாடித்துடிப்பை அறியாத எம் எஸ் வி எந்த விதத்திலும் தன்னை மாற்றிக்கொள்ளாமல் தன் வழக்கமான பாதையிலேயே பயணம் செய்ய அவரின் தாளத்திற்கு தலையாட்டாத ஒரு தலைமுறை தோன்றி  அவரின் இசையினால் ஈர்க்கப்படாமல் சலிப்புற்றிருந்தது .70 களின்   எம் எஸ்வி யின் பாடல்களில் தென்படும் போக்கை ரசிகர்கள் நன்றாகவே   அடையாளம் கண்டு கொண்டிருந்தனர். பல்லவியில் வித்தியாசத்தை காட்டிய எம் எஸ் வி சரணத்தில் தனக்கு வசதிப்படும் தாளத்திலேயே பாடல்களை அமைக்க மூன்றுக்குப் பின் நான்கு  என்ற தீர்மானித்தல் தரும் அலுப்பு ரசிகர்களுக்கு வந்ததில் வியப்பில்லை.(நான் கூட அந்த சமயத்தில்  எம் எஸ் வி யை தவிர்த்ததின் காரணம் இந்த வழக்கமான இசை அமைப்புதான்).

                ஹிந்தி இசை தோய்ந்து போக, மெல்லிசையும் மெலிந்து போக தமிழ் ரசிகன் ஒரு இடைச்சாலையில் (crossroads)திசை தெரியாமல் நின்றுகொண்டிருந்த சமயத்தில் அன்னக்கிளி என்ற படம் வந்தது . 76 இல் வந்த இந்தப் படம் இப்போது  நினைவு கொள்ளப்படுவதின் ஒரே காரணம் அதன்  இயக்குனரோ நடிகர்களோ இன்ன  பிற உதவியாளர்களோ அல்ல. இந்தப்  படத்தின் இசை அமைப்பாளராலேயே  இந்தப் படம் இன்று வரை குறிப்பிட்டுச் சொல்லப்படுகிறது. Infact,  "Annakkili" is a metaphor for its music. இதன் இசை அமைப்பாளர்  ஒரு மிகப் புதியவர். இளையவர். ஞானதேசிகன் என்ற இயற்பெயர் கொண்டு , ராசையா   என்று அழைக்கப்பட்டு, ராஜாவாக மாற்றப்பட்டு திரையில் இளையராஜா என்று தோன்றியவர். எம் எஸ் வி,  கே.வி மகாதேவன், ஜி கே வெங்கடேஷ், தட்சிணாமூர்த்தி, சங்கர் கணேஷ் போன்ற இசை அமைப்பாளர்களிடம் பெற்ற இசைப் பயிற்சி  மற்றும் தன்னிடத்திலேயே  இருந்த இசைதாகம் இரண்டும் இவரை இசையின் புதிய பரிமாணங்களை நோக்கி நகர்த்தியது.

               அன்னக்கிளி ஒரு புதிய அத்தியாயத்தை தமிழ்த்திரையிசையில் ஆரம்பித்துவைத்தது என்பது மிகைப்படுத்தப்படாத உண்மை.படத்தின் பாடல்கள் அனைத்தும் அதுவரை கேட்டிராத வகையில், நேராக சென்று கொண்டிருக்கும் கார் ஒன்று சட்டென்று யு டர்ன் அடிக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தின. "அன்னக்கிளி உன்ன தேடுதே"என்கிற பாடலே முதலில் பதிவு செய்யப்பட்ட பாடல். இந்தப் பாடல் பதிவின் போது மின்சாரம் தடைபட்டுப் போக "நல்ல சகுனம்"என்று ஸ்டூடியோவிலேயே  இகழ்ச்சி செய்யப்பட்ட இளையராஜா அந்தப் படத்தில் அமைத்தது தமிழிசையின் போக்கையே மாற்றிய பாடல்கள். குறிப்பாக அன்னக்கிளியின் உயிர்நாடியான "மச்சானப் பாத்தீங்களா?"பாடல் தமிழகத்தில்  ஏற்படுத்திய அலை இன்றளவும் மறக்கமுடியாதது. அது ஒரு கொண்டாட்டமான பாடல். ஒரு சாதாரண ஹம்மிங் குடன் துவங்கி ஜானகியின் குரலோடு  பின்புலத்தில் ஒற்றை புல்லாங்குழல் ஒலிக்க,இரண்டு வினாடிகளுக்குப் பின் உயிர்ப்பாக உருமாறி, "மச்சான பாத்தீங்களா" என்று பாடல் ஆரம்பிக்கும்போது யாருமே எதிர்பார்க்காத ஒரு கணத்தில்  ஒரு தடாலடியான தாளத்தோடு கேட்பவரை அதிரச் செய்யும் ஒரு அனாசயமான பாடல். எதிர்பாராத  ஒரு சந்தர்ப்பத்தில் நம் தலை மீது திடீரென கொட்டும் ஜில்லென்ற தண்ணீரின் சிலிர்ப்பை இந்தப் பாடல் கொடுத்தது. தமிழகம் நிமிர்ந்து உட்கார்ந்தது."அட யாருடா இந்த ஆளு?"என்று எல்லோரையும் கேட்க வைத்தது இந்தப் பாடல். இந்தப் படத்தின் அனைத்து பாடல்களுமே தமிழகம் முழுவதும் எதிரொலித்தன. மச்சான பாத்தீங்களா,அன்னக்கிளி உன்ன தேடுதே, சொந்தம் இல்லை, முத்து முத்தா பச்சரிசி, அடி ராக்காயி என்று எல்லா பாடல்களும் கிராமத்து வாசனை வீசின. பொதுவாக கூறப்படுவது போல பட்டி தொட்டி எங்கும் அன்னக்கிளியின் பாடல்கள் படபடத்தன. படத்தின் வெற்றிக்கு இளையராஜாவின் இசையும்  ஒரு காரணம் என்று அப்போது சொல்லப்பட்டது.ஆனால் இன்றோ அந்த இசை மட்டுமே அந்தப் படத்தின் அடையாளமாக நிலைத்திருக்கிறது.

            அன்னக்கிளியின் வெற்றி நமக்கு ஒரு புதிய இசை ஆளுமையை அறிமுகம் செய்தது. அன்றைய  புதிய தலைமுறையின் இசை  அரங்கேற, இளையராஜா இளைஞர்களின் ஆதர்ச இசைஞரானார். அபூர்வமாக இது ஒரே படத்தில் நடந்தது. இது எப்படி நிகழ்ந்தது என்று ஆராய்ந்தோமானால் சில கூறுகளை நாம் புரிந்துகொள்ளமுடியும். 76 இல் வந்த மற்ற படங்களை விட அன்னக்கிளியின் இசை பெருமளவில் வேறுபட்டிருந்தது.(76 இல் வந்த மற்ற சில படங்கள்-சித்ரா பவுர்ணமி,மன்மதலீலை, தசாவதாரம்,குமார விஜயம்,மூன்று முடிச்சு, நீ ஒரு மகாராணி(இதில்தான் அவளொரு பச்சைக் குழந்தை என்றொரு அருமையான பாடல் உள்ளது), ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது,ரோஜாவின் ராஜா, உணர்சிகள்,உழைக்கும் கரங்கள்). இளையராஜாவின் தாளம், இசை கோர்ப்பு இரண்டுமே அதுவரை இல்லாத பாணியில் அமைக்கப்பட்டிருந்தது .நாட்டுப்புற தாளம், கிராமிய வாசம்,சற்றே தென்படும் மேற்கத்திய இசையின் சாயல் என்று இளையராஜாவின் இசையில்  எளிமையான அதே சமயம் மிக நவீனமான ஒரு புதிய வெளிச்சம் ஒளிர்ந்தது.இதுவே அவரை அப்போது வேறுபடுத்திக் காட்டியது. இந்தப் புதிய இசையின் வேகத்தில் எம் எஸ் வி தவிர மற்றவர்கள் தங்கள் அடையாளங்களை துறந்து இளையராஜாவை பின்பற்ற, இசையின் போக்கு மாறத் துவங்கியது.

             அதே ஆண்டில் வந்த இளையராஜாவின் மற்ற படங்கள் இவை; பாலூட்டி வளர்த்த கிளி ,  உறவாடும் நெஞ்சம், பத்ரகாளி. இதில்  பத்ரகாளி தவிர மற்ற இரண்டு படங்களும் தோல்விப்படங்கள். ஆனால் இன்றைக்கு அந்தப் படங்கள் அதன் இசையினால் மட்டுமே  அடையாளப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக நான் பேச வந்தேன் (பாலூட்டி வளர்த்த கிளி),ஒரு நாள் உன்னோடு ஒருநாள் (உறவாடும் நெஞ்சம்) என்ற பாடல்கள் இளையராஜாவின் மென்மையான சிறகைக் கொண்டு  உள்ளத்தை வருடிச் செல்லும் இசை அமைக்கும் திறமைக்கு சான்றாக இருக்கின்றன. இளையராஜாவின் துவக்ககாலப்  பாடல்களில் கொஞ்சம் ஜி கே வெங்கடேஷ், கொஞ்சம் வி குமார் போன்றவர்களின் சாயலை தீவிர இசை விரும்பிகள் அடையாளம் காண முடியும் முடியும். மிகை இல்லாமல் சொல்லவேண்டுமென்றால் இளையராஜா தன் ஆரம்பகால படங்களில்(முதல் ஆறு வருடங்கள்) மிகச் சிறப்பான இசையை அளித்துவிட்டார் என்பதே உண்மை. படங்களின் வெற்றி தோல்வி பற்றி வணிக ரீதியிலான சிந்தனை கொள்ளாமல் அப்போது தான் இசை அமைத்த  எல்லா படங்களிலும் இளையராஜா அருமையான பாடல்களையும், நவீன  இசை அனுபவத்தையும் வஞ்சகமில்லாமல்  கொடுத்திருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது.தன்னை நிரூபிக்க இளையராஜா இவ்விதமான நிர்ப்பந்தங்களுக்கு உடன்பட்டார் என்பதை விட அவரின் இசைதாகமே இதன் பின்புலத்தில் இருந்ததாக எண்ணுகிறேன்.

            பத்ரகாளி படத்தின்  வெற்றியே இவரின் இடத்தை  இங்கே  உறுதி செய்தது என்பதை  விவரம் தெரிந்தவர்கள் அறிவார்கள். தெருவெங்கும் "அட வாங்கோன்னா "பாடல் கும்மாளம் போட்டது.அதே படத்தில் வரும் மிக நளினமான "கண்ணன் ஒரு கைக்குழந்தை" ஒரு அழகான தாலாட்டு. இளையராஜாவின் இசைக்கு மயங்கும் ஒரு  ரசிகர்களின் எண்ணிக்கை திரளாக பெருக ஆரம்பித்தது.  சில இசை விமர்சகர்கள் வாங்கோன்னா பாடலை தீவிரமாக  எதிர்த்ததும் தடை செய்யவேண்டும் என்று கோரியதும் கூட இந்தப் பாடலுக்கு சாதகமாகவே அமைந்ததை இங்கே குறிப்பிடவேண்டும்.

         77 ஆம் ஆண்டு இளையராஜா மட்டுமல்லாது தமிழ் சினிமாவுக்கே ஒரு மாபெரும் மாற்றத்தைக் கொடுத்தது. அந்த ஆண்டில் வந்த படங்களில் ஒரே ஒரு படத்தைப் பற்றியே இப்போது பார்க்கப்போகிறோம்.  . பராசக்தி வந்து இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து வெளிவந்த இந்தப் படம் தமிழகத்தையே உலுக்கியது என்று சொல்வது மிகப்பொருத்தமான வாக்கியமாகத்தான் இருக்க முடியும்.. உண்மையான மண்ணின் மைந்தர்களையும் அவர்களின் தாகத்தையும் கோபத்தையும், ஒப்பனை இல்லாத  கிராமத்தையும் திரையில் பிரதி எடுத்து தமிழ்த்திரைக்கு  ஒரு புதிய சகாப்தத்தை  அறிமுகம் செய்த "பதினாறு வயதினிலே" 77 இல் வெளிவந்தது.  தமிழ் சினிமா பராசக்திக்குப் பிறகு  மற்றொரு முறை புரண்டு படுத்தது.

          16 வயதினிலே தமிழ்சினிமாவின் ஒரு மாபெரும் மைல்கல் என்பது ஜோடிக்கப்படாத நிதர்சனம். முதல் முறையாக தமிழ் ரசிகர்கள் ஒரு படத்தின்  கதாபாத்திரங்களின் பெயர்களை வைத்தே படத்தின் நடிகர்களை  அடையாளம் கண்டுகொண்ட புதுமையை இந்தப் படம் தொடங்கி  வைத்தது.மயிலு,சப்பாணி,பரட்டை,டாக்டர் என்று ரசிகர்கள் இதன் நடிகர்களை மிக நெருக்கமாக அழைத்தார்கள். Flashback யுக்தியை மிகச் சிறப்பாக கையாண்ட இரண்டாவது படம் இது.(மற்றொரு  படம் 1954 இல் வந்த அந்த நாள்). 16 வயதினிலே வின் வெற்றியை ஒரு முழுமையானது என்று தாராளமாகக் கூறலாம். ஏனென்றால் இந்தப் படம் அதற்காக உழைத்த எல்லாமனிதர்களையும்இனம்காட்டியது.இயக்குனர்,நடிகர்கள்,இசைஅமைப்பாளர்,வசனகர்த்தா,ஒளிப்பதிவாளர்,தயாரிப்பாளர் என்று  பொதுவாக மக்கள் அவ்வளவாக அங்கீகாரம் அளிக்க மறுக்கும் எல்லோருக்கும்  இந்தப் படம் மரியாதை செய்தது.

         தன் முதல் படத்திலேயே இளையராஜா கிராமத்து இசையின் நாயகனாகிவிட்டார் என்று பலர் சொல்வதுண்டு. உண்மை என்னவெனில்  16 வயதினிலே படமே இவரை நாட்டுப்புற இசையின் பிரதான முகமாக மாற்றியது. ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாடலை கேட்டவர்கள் எந்தவித தயக்கமுமின்றி இளையராஜாவை கொண்டாட ஆரம்பித்தார்கள். கதையின் கருவுக்கேற்ற கிராமத்து இசையை இளையராஜா  மிகவும் நவீனமாக அதுவரை யாரும் திரை இசையில் கேட்காத பாணியில்  உருவாக்கி, தன் பெயரை தமிழகத்தின்  எல்லா வீடுகளிலும் உச்சரிக்க வைத்தார். "சோளம் வெதைக்கயிலே"என்று தலைப்புப் பாடல் ஒலிக்கும்போதே  அந்த இசையின் புதிய பரிமாணம் கேட்பவர்களுக்கு சட்டென  பிடிபட்டது."செவ்வந்தி பூ முடிச்ச","மஞ்ச குளிச்சு" என்று வரிசையாக நம் மண்ணின் இசை இயல்பான வாத்தியங்களோடு முழங்கியது..குறிப்பாக "செந்தூரப்பூவே","ஆட்டுக்குட்டி முட்டையிட்டு" பாடல்கள் அமோகமாக பாராட்டப்பட்டன. ஹிந்திப் பாடல்களின் காலம் முடிந்து நம் தமிழ் இசை நம்மிடம் திரும்பியது.  இத்துடன்  தமிழ் இசை பழைய இசை(எம் எஸ் வி), புதிய இசை (இளையராஜா) என்று இரண்டாகப் பிரிய, அப்போதைய இளைய தலைமுறையின்  துல்லிய இசை வடிவமாக இளையராஜா  கொண்டாடப்பட்டார்..  டி எம் எஸ், சுசீலா எல் ஆர் ஈஸ்வரி என்ற கட்டமைப்பு எஸ் பி பி, ஜானகி,சசிரேகா, ஜென்சி,மலேசியா வாசுதேவன் என்று மாறியது.  எம் எஸ் வி பழைய தலைமுறையையும்  இளையராஜா இளைய தலைமுறையையும் பிரதிபலிப்பதாக ஒரு தோற்றம் உருவானது.தமிழ்த் திரையிசையின் கடிவாளம் எம் எஸ் வி யின் கைகளிலிருந்து   இளையராஜாவின் கைகளை நோக்கி திசை மாறத் துவங்கியது.

    பாக் (Bach)என்ற   மேற்கத்திய செவ்வியல் இசை மேதையின்  மீது  இளையராஜா அதீத காதல் கொண்டிருந்ததும் அதன் பாதிப்பை  தவிர்க்க முடியாமல் தன் இசையில் அந்தச்  செவ்வியல் இசையை நிழல் படியச்  செய்ததும் உண்மையே. இந்த மேற்கத்திய நாட்டுபுற கலப்பிசையை  இளையராஜாதான் கொண்டு வந்தார் என்று விபரம் தெரியாத பல இசை விமர்சகர்கள்  சொல்வது அபத்தமானது. காரணம் சுதர்சனம், ஜி ராமநாதன், எஸ் பாலச்சந்தர், எ எம் ராஜா போன்ற பலர்  இப்படிப்பட்ட கலப்பிசையில் கைதேர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.  விஸ்வநாதன் ராமமூர்த்தி  இருவரும் இவ்வகையான இசை அமைப்பில் செய்த சாதனைப் பாடல்கள் வெகு அதிகம். இருந்தும் இளையராஜாவின் கலப்பிசை  இவர்களிடமிருந்து வேறுபட்டதாக இருக்கிறது. சில சமயங்களில் இவர்  செய்து பார்த்த இசை பரிசோதனைகள் வேறுபல வடிவங்களையும் வண்ணத்தையும் நம் தமிழ் இசைக்கு  கொண்டுவந்து சேர்த்தன என்பதையும் இங்கே பதிவு செய்ய வேண்டும். இளையராஜா நம் தமிழிசைக்கு கிடைத்த மிகச் சிறப்பான இசைஞர் என்பது நிரூபணமான உண்மை. மேலும் இளையராஜாவை ஒதுக்கி விட்டு தமிழ்த் திரையிசைப் பற்றி பேசுவது இயலாத காரியம்.

          77இல் வந்த இளையராஜாவின் சிறப்பான பாடல்களைக் கொண்ட மற்ற சில படங்கள் இவை:
  அவர் எனக்கே சொந்தம்- இதில்தான் "தேவன் திருச்சபை மலர்களே"என்கிற மிக அருமையான பாடல் இருக்கிறது.ராஜாவின் ரசிகர்களுக்கே இப்படிப்பட்ட ஒரு பாடல் இருப்பது தெரியுமா என்பது சந்தேகம்தான் .தேனில் ஆடும் ரோஜா மற்றொரு இனிமையான   மெலடி. குறிப்பாக சுராங்கனி  பாடல் எல்லோரையும் முணுமுணுக்க வைத்தது. (உண்மையில் இது சிலோன் மனோகர்  என்பவரின் புகழ் பெற்ற சிங்களப்  பாடல். அதை இந்தப் படத்தில் பயன்படுத்திகொண்டதாகத் தெரிகிறது.)
  புவனா ஒரு கேள்விக்குறி-"ராஜா என்பார்,விழியிலே மலர்ந்தது" இரண்டுமே இளையராஜாவின் இனிமையான முத்திரைப் பாடல்கள்.
  தீபம்-சிவாஜிக்காக இளையராஜா இசை அமைத்த முதல் படம். பூவிழி வாசலில் யாரடி, அந்தப்புரத்தில் ஒரு மகாராணி, பேசாதே போன்ற பாடல்கள் சிறப்பானவை.
  காயத்ரி-காலைப் பனியில்,வாழ்வே மாயமா(இந்தப் பாடல் யார்  நீ படத்தில் வரும் நானே வருவேன் பாடல் சாயலில் இருப்பதை ஒரு இலங்கை வானொலி அறிவிப்பாளர்  குறிப்பிட்டபோது அந்தப் பாடலை நான் கேட்டதேயில்லை என்று பதில் வந்தது இளையராஜாவிடமிருந்து .)
  கவிக்குயில்-பாலமுரளிகிருஷ்ணா பாடிய "சின்னக் கண்ணன் அழைக்கிறான் சற்றும் சந்தேகமில்லாத ஒரு அபாரமான பாடல்.பாலமுரளி கிருஷ்ணாவே இந்தப் பாடல் அமைக்கப்பட்ட ராகத்தைக்கேட்டு ஒரு கணம் அதிசயித்ததாக கருத்து உண்டு.  புல்லாங்குழல் இசை பாடல் முழுதையும் நளினமாக அரவணைத்துச் சென்று அதன் கருத்தோடு இணையும் அழகான தாலாட்டு இது.

            78 இல் இளையராஜாவின் இசைப் பயணம் புதிய இலக்குகளை எட்டியது என்பது ஒப்பனைக்காக சொல்லப்படும் வாக்கியம் அல்ல. இந்த ஆண்டில்தான் தமிழிசையில் முதல் முறையாக ப்ரியா என்ற படத்தில் ஸ்டீரியோ இசை அமைப்பு பயன்படுத்தப்பட்டது. இந்தப் படத்தின் பாடல்கள் வெகுவாக பிரசித்தி பெற இந்த அறிவியல் தொழில் நுட்பமும் ஒரு காரணம் என்பதை மறுக்கமுடியாது.கீழே உள்ளவை அந்த ஆண்டில் வந்த  இளையராஜாவின் பிரபலமான மற்ற சில படங்கள்:
   அச்சாணி-மாதா உன் கோவிலில்,தாலாட்டு
  இளமை ஊஞ்சலாடுகிறது-ஒரே நாள் உன்னை நான்(மென்மையான பாடல்)
என்னடி மீனாட்சி(இளைஞர்களின் விருப்பமான பாடல்) ) ,தண்ணி கருத்திருச்சு(ஆபாசமான பாடல் என்று பெயர் பெற்றது)நீ கேட்டால், கிண்ணத்தில் தேன்  வடித்து
  சிட்டுக்குருவி-என் கண்மணி(கவுண்டர் பாய்ன்ட் என்ற ஒரு மேற்கத்திய பாணியில் அமைக்கப்பட்டு பெருத்த வரவேற்பை பெற்ற பாடல்) அடடட மாமர கிளியே, ஒன்ன நம்பி நெத்தியிலே(ஒரு கிராமத்து பெண்ணின் காதலை நம் மண்ணின் இசையோடு சொன்ன பாடல்).
  காற்றினிலே வரும் கீதம்-சித்திரை செவ்வானம்,ஒரு வானவில் போலே,கண்டேன் எங்கும்(இந்தப் பாடலுக்கு இளையராஜா அதிகமான இசைக்கருவிகளை கொண்டு இசை அமைத்ததாக பேச்சு உண்டு.)
  கிழக்கே போகும் ரயில்-கோவில் மணி ஓசை, பூவரசம்பூ பூத்தாச்சு, மாஞ்சோலை கிளி,
  முள்ளும் மலரும்-ராமன் ஆண்டாலும்,அடி பெண்ணே,நித்தம் நித்தம் நெல்லுச்சோறு,செந்தாழம் பூவில்(பெருமான்மையானவர்கள் அதிகம் விரும்பும் இளையராஜாவின் பாடல் இது).
  தியாகம்-நல்லவெர்க்கெல்லாம்(ஒரு சிறப்பான பாடல்),வசந்த கால கோலங்கள், தேன்மல்லிப் பூவே.
  வட்டத்துக்குள் சதுரம் -இதோ இதோ என் நெஞ்சிலே.
  கண்ணன் ஒரு கைக்குழந்தை-மேகமே தூதாகவா
  ப்ரியா-ஏ  பாடல் ஒன்று,அக்கரைச் சீமை(சைமன் டூப்ரி என்ற மேற்கத்திய இசை குழுவினரின் கைட்ஸ் என்ற பாடலின் நகல்),டார்லிங் டார்லிங்( மிக பிரபலமான போனி எம் என்னும் இசையினரின் சன்னி என்ற பாடலின் பிரதி),என்னுயிர் நீதானே, ஸ்ரீ ராமனின் ஸ்ரீ தேவியே. சந்தேகமில்லாமல் இந்தப் படத்தின் பாடல்கள் மிகுந்த வெற்றியைப் பெற்றன.பலபேர் ப்ரியா படத்திற்குப் பிறகே இந்தி இசை கேட்பதை நிறுத்திவிட்டதாக சொல்லக்கேள்விப்பட்டிருக்கிறேன்.இருந்தும் சிங்கப்பூர் என்ற அயல் நாட்டில்   நடக்கும்  படத்தின் கதையோட்டத்திற்கு பொருத்தமில்லாத இசையை அமைத்திருந்தார் இளையராஜா. உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் பாடல்களில்  எம் எஸ் வி காட்டிய  அந்த நேர்த்தியை இளையராஜா கொண்டு வரவில்லை என்பது கண்கூடு.

    இதே ஆண்டில் வந்த மேலும் இரண்டு மிக முக்கியமான படங்களைப் பற்றி இங்கே குறிப்பிடுவது அவசியமாகிறது.முதலாவது இவர் இப்படித்தான் என்று பாரதிராஜாவை ஒரு கிராமத்து  ஆசாமியாக முத்திரை குத்திய தமிழ் ரசிகர்களை கலங்கடித்த ஒரு அதி வேக திரில்லரான சிகப்பு ரோஜாக்கள். இரண்டாவது தமிழ் சினிமாவில் அபூர்வமாக வரும் மிகச்  சிறந்த படங்களில் ஒன்றான  அவள் அப்படித்தான்.(இயக்கம்-ருத்தையா).இந்த இரண்டு படங்களுக்கும் இளையராஜாவின் இசை மிக நேர்த்தியாக இருந்தது.அதன் பாடல்கள்  இன்றளவும் இளையராஜாவின் இனிமையான  இசைக்கு  முகவரிகளாக இருக்கின்றன.இளையராஜா தான் உச்சத்தில் இருந்த  எண்பதுகளில் கூட இது போன்ற அற்புதமான  பாடல்களை கொடுக்கவில்லை என்பதை நல்லிசையை நாடுவோர்  அறிவார்கள்.

        ஒரு மின்மினிக்கு கண்ணில், நினைவோ ஒரு பறவை( பாடலைக் கேட்கும் போதே பறக்கின்ற உணர்வு ஏற்படுவது ஒரு சிறப்பு)என்ற இரண்டு பாடல்களும் சிகப்பு ரோஜாக்கள் என்ற படத்தின் மறக்ககமுடியாத பகுதியாகிவிட்ட  அற்புதங்கள்.அவள் அப்படித்தான் படத்தில்  கமலஹாசனின் குரலில் ஒலித்த  பன்னீர் புஷ்பங்களே(இன்னொரு சிறப்பான  பாடல் நாயகனின் தென் பாண்டிச் சீமையிலே ), மற்றும் ஜெயச்சந்திரனின் என்றும் இனிமையான  உறவுகள் தொடர்கதை என்ற பாடல்கள் இளையராஜாவின் இசைச் சிற்பங்கள்.  (உறவுகள் தொடர்கதை  என்னுடைய தனிப்பட்ட விருப்பமாக  இருந்தாலும் இளையராஜாவின்  பெஸ்ட் என்ற பட்டியலில் கண்டிப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்).

         79 இல் தமிழ்த் திரையின் தவிர்க்க  முடியாத இசை அமைப்பாளராக மாறியிருந்தார் இளையராஜா.அவரது இசையின் பரிமாணம் விரிவடைந்துகொண்டே சென்றது.
கண்மணியே காதல் என்பது (ஆறிலிருந்து 60 வரை)
எதோ நினைவுகள்-(அகல் விளக்கு)
கீதா சங்கீதா, சின்னப் புறா ஒன்று -இளையராஜாவை பிடிக்காதவர்கள் கூட விரும்பும் ஒரு நல்லிசை இது.(அன்பே சங்கீதா),
நதியோரம்,அப்பனே அப்பனே(அன்னை ஓர் ஆலயம்),
ஆகாய கங்கை(தர்மயுத்தம்),
பூப்போலே(கவரிமான்),
ஆஹா வந்துருச்சு, காதல் தீபம் ஒன்று-ஒரே மெட்டில்  இருந்தாலும் இந்தப் பாடலே என்னுடைய தேர்வு, இளமை நாட்டிய சாலை (கல்யாணமாம் கல்யாணம் 1974) என்ற பாடலை நினைவு படுத்தும்  மலர்களில் ஆடும் இளமை(கல்யாணராமன்),
மஞ்சள் நிலாவுக்கு-ரயில் ஓசையுடன் ஒலிக்கும் நெஞ்சத்தை கொள்ளைகொள்ளும் பாடல் இது. (முதலிரவு),
எந்தன் பொன் வண்ணமே(நான் வாழ வைப்பேன்),
சிந்து நதிக்கரை, செவ்வானமே செவ்வானமே(நல்லதொரு குடும்பம்),
ஆயிரம் மலர்களே, முதல் முதலாக காதல் டூயட் (நிறம் மாறாத பூக்கள்),
தேவதை, எங்கெங்கோ செல்லும்- நிறைய பேருக்கு தெரியாத மிக அருமையான இளையராஜாவின் பாடல் இது. பாடலுக்கு பொருத்தமில்லாத சிவாஜி, வெற்றி பெறாத படம் என்பதால் மக்களின் பொது எண்ணத்திலிருந்து காணாமல் போய்விட்ட மற்றொரு அபாரமான பாடல்  இது என்பதில் சந்தேகமேயில்லை. (பட்டாக்கத்தி பைரவன்),
ஓரம்போ- பெண்களை கலாட்டா செய்ய வசதியான பாடல் இது. (பொண்ணு ஊருக்கு புதுசு),
தம்தன தம்தன, வான் மேகங்களே (புதிய வார்ப்புகள்),
உச்சி வகுடெடுத்து, என்னுளில் ஏதோ(ரோசாப்பு ரவிக்கைக்காரி),
அழகிய கண்ணே(உதிரிப்பூக்கள்),
அபிஷேக நேரத்தில்,குறிஞ்சி மலரில்,நானே நானா-ஆர்ப்பாட்டம் இல்லாத மேற்கத்திய இசை கலந்து ஓடும் மிக ரம்மியமான மெல்லிசை(அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்).
பொன்னாரம் பூவாரம்,தோட்டம் கொண்ட ராசாவே(வித்தியாசமான டப்பாங்குத்து பாடல்),இளமை என்னும் பூங்காற்று (இளையராஜாவின் மிக அற்புதமான பாடல் இது என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது).-பகலில் ஒரு இரவு.
 
          போன்ற பாடல்களில் இளையராஜா தன் ஆளுமையை நிரூபித்து தமிழிசையின் அடுத்த சாரதி தான்தான் என்பதை எந்தவிதமான நெருடல்கள் இல்லாது உறுதி செய்தார்.தமிழ்த் திரையிசை இப்போது வெகுவாக மாறிவிட்டிருந்தது.இளையராஜா தமிழிசையை வேறு பாதையில் நடத்தி சென்று கொண்டிருந்தார். இசைப் புரட்சி, புதுமைகள் என்று பல விஷயங்கள் இதில் இருந்தாலும் தமிழிசை "பாட்டு பாடவா , நீரோடும் வைகையிலே,அனுபவம் புதுமை" காலத்திலிருந்து அதன் எதிர் திசையில் பயணம் செய்துகொண்டிருந்தது.தமிழிசையின் முகமும் மாறிக்கொண்டிருந்தது.

      80 இளையாராஜாவின் மறுபிறப்பு என்று சொல்லலாம். இந்த ஆண்டில்தான் சற்று தோய்ந்து போயிருந்த இளையராஜாவின் இசை மறுபடி ஒரு அசாத்திய உச்சத்தை எட்டியது.சிலர் தமிழ்த் திரையின் பொற்காலம் என்று தவறாக சொல்லக்கூடிய ஆனால் நிஜத்தில் இளையராஜாவின் பொற்காலம் என்று அழைக்கப்படவேண்டிய இளையராஜா-வைரமுத்து-பாரதிராஜா கூட்டணி பிறந்தது இந்த 1980 இல்தான். வைரமுத்துவின் வரவுக்கு  முன்பேயே இளையராஜா பல படங்களில் தன் திறமையை  மறுக்க முடியாத அளவுக்கு நங்கூரம் போட்டு நிலைநிறுத்தி இருந்தாலும், வைரமுத்துவின் கவிதை பின்புலத்திலேயே அவரின் இசைக்கு ஒரு மிகப் பெரிய மரியாதையும்,அங்கீகாரமும் கிடைத்தது என்பது உண்மை. இதை பல ராஜா அபிமானிகள் இன்றுவரை ஒத்துக்கொள்ளவதில்லை.ஆனால் இளையராஜாவின் வைரங்கள்   என்று அவர்கள் சொல்லும் பல பாடல்கள் 80களை பின்னணியாக கொண்டவையே.கண்ணதாசன், வாலி,பஞ்சு அருணாசலம்,முத்துலிங்கம்,கங்கை அமரன் மற்றும் இன்ன பிற கவிஞர்களின்    கவிதைகளை பாடல்களாக இசைத்த இளையராஜா 80 இல் வந்த பாரதிராஜாவின் முதல் தோல்விப் படமான "நிழல்கள்" மூலம் வைரமுத்து என்னும் அக்னிக் கவிஞரோடு கைகோர்த்தார். நிழல்கள் படத்தின் பாடல்கள் இளையராஜாவின் இசை அத்தியாயத்தில் அழிக்க முடியாத கோலங்கள்.


        வைரமுத்துவுடனான இளையராஜாவின் இசைப் பயணம் அவரின்  அடுத்த பரிமாணம் என்பதை  இளையராஜாவின் இசையை நுணுக்கமாகக் கேட்பவர்கள் உணர்வார்கள். எனவே இந்தப் பதிவை நான் இங்கே நிறுத்திக்கொள்வதே நியாயம் என்றுணர்கிறேன்.


அடுத்து: இசை விரும்பிகள்  IX - நிறம் மாறிய பூக்கள்