Wednesday 29 April 2015

இசை விரும்பிகள் XXV - உடைந்த ஒப்பனைகள்



கண்ணாடியில் தெரியும் ஒரு நிஜத்தின் பிரதிபலிப்பு, 
அலங்காரம்  கலைந்த ஒரு உண்மைத்  தோற்றம், 
கொஞ்சம் கொஞ்சமாக உருமாறும் மேகங்கள்,
வானவில் மறைந்த ஒரு  வெற்றிடம், 
தொலைந்துபோன குழந்தைத்தனம். 
வண்ணங்களை  இழந்த  ஓவியம், 
ஒரு கோமாளியின் அழுகை.




                           உடைந்த  ஒப்பனைகள் 

         தொண்ணூறுகளின் இறுதி என்று நினைவு. 96 ஆம் ஆண்டாக இருக்கலாம். மதுரையிலிருந்த ஒரு இசைப் பதிவகம் எனக்கு கொஞ்சம் பழக்கமாகியிருந்தது. சி டிக்கள் பதிவகங்களின் எல்லா வரிசைகளையும் நிரப்பிக்கொண்டிருந்த  கசெட்டுகளின் அந்திம காலம் அது.  ஆங்கிலப் பாடல்களை சற்று ஒதுக்கிவிட்டு மீண்டும்  தமிழ் கானங்களை நோக்கி நகர்த்திச் செல்லும்    ஒரு  புதிய கண்டெடுத்தல் என்னைச்  செலுத்திக்கொண்டிருந்தது.    காரணம்  இதுதான்;   நான் ஐந்து வருடங்கள் வட இந்திய மாநிலத்தில் இருந்தது  என் தமிழ் அடையாளத்தின் மீது என்னை ஆழமாகத் தைத்திருந்தது. என் தமிழ் வேர்களை நான் முதல் முறையாக புதிய கண்கள்  அணிந்துகொண்டு பார்க்க ஆரம்பித்திருந்தேன். கல்லூரி விடுதியில் இருப்பவர்களுக்குத்தான் வீட்டு நினைவு அதிகம் இருப்பதாக பொதுவாக கூறுவார்கள். அதைப் போன்றதொரு  உளவியலே இது. அதன் விளைவாக எனது பால்ய தினத்து தமிழ்ப் பாடல்கள் மீது நான் ஒரு நாஸ்டால்ஜிக் காதல் கொண்டு அவைகளை சிறை பிடித்துக்கொண்டிருந்தேன்.

       எனக்குப் பழக்கமாகியிருந்த அந்த பதிவகத்தை ஒரு முதியவர் --- ஏறக்குறைய 60 வயது இருக்கலாம். அனுமானம்தான். அவரைக் கேட்டதில்லை---- நடத்திக்கொண்டிருந்தார். அந்த ஒலிப்பதிவின்  நேர்த்தியும் தரமும் எனக்குப் பிடித்துப்போய் விட்டதால் அடிக்கடி அங்கே சென்று பாடல்கள் பதிவு செய்வது வழக்கம்.    என் பள்ளிக் கல்லூரி தினங்களில் நான் கேட்டு ரசித்திருந்த பழைய பாடல்கள் பற்றிய எண்ணம் என்னில் அதிகமாகி என்னை தொந்தரவு செய்த  நாஸ்டால்ஜிக் போதையேறிய ஒரு சந்தர்ப்பத்தில், என் நினைவடுக்குகளிலிருந்து தேடிக் கண்டுபிடித்த 40,50  பாடல்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை தயாரித்து எடுத்துக்கொண்டு  உற்சாகமாக  அந்த கடைக்குச் சென்றேன். "புது படம் எதுவும் வரலியேப்பா"  என்றார் அவர்.  "தெரியும். கொஞ்சம் பழைய பாடல்கள் வேண்டும்" என்றேன்  குதூகலத்துடன். அவருக்கு இது கொஞ்சம்  அதிர்ச்சியாக  அல்லது வியப்பாக இருந்திருக்க வேண்டும். (எப்போதும் ரஹ்மான் பாடல்களைப்  பதிவு செய்யும்) என்னை அவர் சற்று விநோதமாகப் பார்த்துவிட்டு  ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தை  எடுத்து நீட்டினார்.  மிகத் தடியாக இருந்த அந்த நோட்டை ஆவலுடன் பிரித்தேன். அடுத்த வினாடி எனக்கு    நூடுல்ஸ்சுக்குப் பதிலாக எதோ ஒரு மின்சார வயரை கடித்து விட்ட  அதிர்ச்சி ஏற்பட்டது.

     ஏனென்றால் நான் கேட்ட கொஞ்சம் ரொம்பவாக மாறியிருந்தது. படகோட்டி, ஆயிரத்தில் ஒருவன், ஆலய மணி, சாந்தி நிலையம், பார்த்தால் பசி தீரும், நெஞ்சில் ஓர் ஆலயம், வெண்ணிற ஆடை என்று பெயர்கள் வரிசையாக என் கண்களில் விழுந்தன. அச்சத்துடன், "இத்தனை பழசு வேண்டாம்." என்றேன் கலவரமாக. "பின்ன?" என்றார் அவர். "கொஞ்சம் பழசு." என்றேன். முதலில் கூறிய கொஞ்சத்திற்க்கும் இப்போது சொன்னதற்கும் வித்தியாசம் இருந்தது. இரண்டாவது முறை சற்று அந்த வார்த்தையை அழுத்திச் சொன்னேன். சொல்லும்போதே இது எத்தனை அபத்தமாக இருக்கிறது  என்ற எண்ணம் வரவே, சுதாரித்துக்கொண்டு இப்படிச் சொன்னேன் : "இளையராஜா காலத்துப் பாடல்கள்."  அவர் என்னை முன்பை விட இன்னும் தீர்க்கமாக --கொஞ்சம் சலிப்பாக-- பார்த்துவிட்டு இன்னொரு நோட்டை என் கைகளில் திணித்தார். சரியான  வேட்டைதான் என்று எண்ணிக்கொண்டே அதைப் புரட்டிப் பார்த்தேன். உடனே திடுக்கிட்டேன். காரணம்  அதில் எழுதியிருந்த தலைப்பு. படித்தால் உங்களுக்கூட அதே திடுக்கிடல் நடக்கலாம். அதில் இப்படி எழுதப்பட்டிருந்தது: நடுத்தரப் பாடல்கள்.  கொஞ்சம் குழப்பம், கொஞ்சம்  அதிர்ச்சியாக இருந்தது. "ஏன் இப்படி எழுதியிருக்கிறீர்கள்? இளையராஜா பழைய பாடல்கள் வரிசையில் வரவில்லையா?" என்றேன் வழக்கமான சுதந்திரம் எடுத்துக்கொண்டு.   அவரிடம் நிறைய இசை பற்றி விவாதித்திருக்கிறேன். ஆனால் இளையராஜாவைப்  பற்றி எனக்கு இன்றிருக்கும் ஆழமான விமர்சனங்கள் அப்போது என்னிடமில்லை. அப்போது அவர் சொன்னது இன்னும் என் நினைவிலிருக்கிறது. "இதை எப்படி பழசுன்னு சொல்றது?" என்று அவர் என்னைக் கேட்டுவிட்டு  சில மவுனமான வினாடிகளுக்குப் பிறகு, " இதை புதுசிலயும் சேக்க முடியாது. அதான்." என்றார் வெகு சாதாரணமாக.

         சற்று சிந்தித்துப் பார்த்தால் அது உண்மைதான் என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை. பழைய பாடல்கள் என்றதும் மக்களின் நெஞ்சத்தில் வண்ணம் வண்ணமாக வலம் வருவது அறுபதுகளின் இசையே.  எம் ஜி ஆர், சிவாஜி பாடல்கள் , கண்ணதாசன், வாலி பாடல்கள் அல்லது விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே வி மகாதேவன் பாடல்கள், டி எம் எஸ்- சுசீலா பாடல்கள், பி பி ஸ்ரீனிவாஸ் பாடல்கள்  என அவை வித விதமாக  பகுக்கப்பட்டாலும் ஒரு ஆல மரம் போன்று தமிழ் சமூகத்தின் மன ஆழத்தில் வேரூன்றி இருப்பது அந்தப்  பொற்கால இசைதான். நவீனம் என்றால் ரஹ்மானிலிருந்து துவங்குவதில் பெரிய ஆட்சேபனைகள் யாருக்கும் இருக்கப் போவதில்லை. பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அவர் இசையை நாம் ஒரு கால கட்டத்தின் அவசியம் கருதியாவது நவீன இசை என்ற குடையின் கீழ் கொண்டுவரத்தான் வேண்டும். இப்போது எழும் ஒரு இயல்பான கேள்வி இளையராஜாவின் இசையை நாம் எந்த காலத்தில் வைப்பது என்பதுதான்.

   மத்திய எழுபதுகள் தொடங்கி எண்பதுகள் வரையான நமது இசைப் பாரம்பரியத்தை(!) எந்த முத்திரை கொண்டு அழைப்பது? இளையராஜாவின் இசையை பழைய இசை என்று குறிப்பிட முடியாது , புதிய நவீன இசை என்று சொல்வதும் இப்போது முரணாக இருக்கிறது. சிலர் இடைப்பட்ட பாடல்கள் என்று எழுதுவார்கள். அதாவது எம் எஸ் விக்கும் ரஹ்மானுக்கும் இடையில் வந்தவர் என்ற அர்த்தத்தில். இது ஒரு நிரப்பு இசை என்ற தொனியை அளிக்கிறது. எனவே  நான் இதை விரும்பவில்லை.  சில தீவிர ரஹ்மான்மேனியாக்கள் என்னிடம் இதுபோன்று ஒரு முறை   கூறியபோது, நான் சொன்னேன் ,  "இளையராஜாவைப் பாராட்டுவது வேறு: ஆனால் அவரை விமர்சிப்பதாக இருந்தால் நீங்கள் அவரது இசையை கேட்டு வளர்ந்தவர்களாக இருக்க வேண்டும்."  நிரப்பு இசை என்ற பதம் ஏறக்குறைய பதினைந்து வருடங்களாக தமிழ்த் திரையில் ராஜாங்கம் நடத்திக்கொண்டிருந்த ஒருவரின் மிக அகலமான இசைச் சாலையை கருணையின்றி குரூரமாக சுருக்கிவிடுகிறது. இது  கண்டிப்பாக உண்மையில்லை. பழைய இசை, புதிய இசை, இடைப்பட்ட  இசை என்ற எந்த கோட்டுக்குள்ளும்  அடக்கிவிட முடியாததாக இருப்பதால் இளையராஜாவின் இசையை அந்த மதுரை முதியவர் தனது நோட்டுப் புத்தகத்தில் எழுதியிருந்தது போன்று நடுத்தரப் பாடல்கள் என்று அழைப்பதுதான்  பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. அவர் அந்த காலத்தை மனதில் கொண்டு இப்படி எழுதியிருந்தாலும் நமது தமிழிசையின் தரம் எண்பதுகளில் எப்படிப்  "பட்டொளி வீசிப் பறந்தது"  என்பதை அசை போடும்போது நடுத்தரம்  என்ற வார்த்தையின் உண்மையை எண்ணி சற்றேனும் ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை.

     இப்போது எவ்வாறு எழுபதுகளின் இறுதியில் நமது தமிழிசையின் போக்கு மாறியது என்பதை குறித்துப்   பேசுவோம் .    தமிழ் சினிமாவை சற்று உற்று நோக்கினால் ஒவ்வொரு பத்து வருட இடைவெளியில் நம் திரையிசையின் வடிவம் மாறிவருவதை அறியலாம். சில உண்மைகள் உறங்குவதை உணரலாம்.  ஐம்பதுகள் புராணம் பாடும் சரித்திர கதைக் களங்கள் கொண்டதாகவும் (பாரம்பரிய ராகங்கள் சூழ்ந்த சாஸ்திரிய இசை),  அறுபதுகள் குடும்பம்  சார்ந்த மிகைப்படுத்தப்பட்ட நாடகத்தனமான திரைப்படங்களின் காலமாகவும் (மெல்லிசை மற்றும்  அதோடு கலந்த திகட்டாத மேற்கத்திய இசை)  இருந்தன. இது இந்த காலகட்டத்தைக் குறித்த பார்வை மட்டுமே தவிர இதில் எது உயர்ந்தது என்ற நாட்டாமைத்தனம் எனக்கில்லை. எழுபதுகளையும்  அறுபதுகளின் நீட்சியாக குடும்பம் சூழ்ந்த களங்கள் ஆட்சி செய்தன. எனவே  காட்சிகள் நவீனத்தின் பக்கம் சாயாத ஒளியிழந்த சாயல் கொண்டிருந்தன. இது ஒரு மிகத் தொய்வான காலகட்டம் என்பதை எளிதாக சொல்லக்கூடிய அளவில் அப்போது தமிழ்த் திரை ஒரு சரிவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. எ வி எம், விஜயா-வாஹினி  போன்ற பெயர் பெற்ற  பெரிய திரைப்பட நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பை நிறுத்திவிட்ட காலகட்டம் அது. சிறிய தயாரிப்பாளர்கள், சிறிய முதலீடு, எளிமையான கதை போன்ற திடீர் விதிகள்  புதியவர்களும், இளைஞர்களும்,  நவீன கதை சொல்லிகளும்,  திரைக்குப் பின்னே வெகுவாக படையெடுக்க உதவி செய்தன.  இருந்தும்  திரையில் தோன்றியதோ   அதே விக் வைத்து பென்சில் மீசை கொண்ட, கேமராவைப் பார்த்துப் பேசும்  பத்தாயிரம் முறை பார்த்துப் பார்த்து சலித்துப்போன முகங்கள்தான்.  அது எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினி, முத்துராமன், ஜெய் ஷங்கர், ரவிச்சந்திரன், விஜயகுமார், சிவகுமார் என யாராக இருந்தாலும்  எல்லா முகங்களுமே பார்வையாளர்களுக்கு எந்த வித சலனத்தையும்  கொடுக்கவில்லை. "இதே  மூஞ்சிகள்தானா?" என்ற சலிப்புதான் மிஞ்சியது.

      அதே சமயத்தில் இன்னொரு பக்கம் கதாநாயகிகள் தேவிகா, சரோஜா தேவி, கே ஆர் விஜயா என்பதிலிருந்து லதா, மஞ்சுளா, ஸ்ரீப்ரியா, ஜெயசித்ரா, சுஜாதா என மாறியிருந்தார்கள். கதாநாயகர்கள் நரை தட்டிப் போய், எல்லாம் அடங்கிய பின்னும், ஐ சி யு விலிருந்தே  திரும்பி வந்தாலும் திரையில் முகத்தோடு முகம் வைத்து உரசி பெண்வாசனை பிடிக்கவும் , பார்பவர்களுக்கு எரிச்சல் ஏற்படுத்தும் ரொமாண்டிக் புன்னகையுடன் அவளது சேலையை பிடித்து இழுக்கவும்,  ஒரு இளமையான நடிகை ------அவள் தனது பேத்தி வயதை ஒத்திருந்தாலும்---- தேவைப்படும் இந்த அருவருப்பான வினோதம் தமிழுக்கு ஒரு புதிய சங்கதி அல்ல. எம்ஜிஆர் இதயக்கனி படத்தில் ராதா சலூஜாவோடு அடித்த கூத்தும், சிவாஜி லாரி டிரைவர் ராஜாக்கண்ணு படத்தில் ஸ்ரீ ப்ரியாவுடன் செய்த சில்மிஷங்களும், ரஜினிகாந்த் லிங்கா என்ற கருமத்தில் சொனாக்ஷி சின்ஹாவை காதல் வீரியத்துடன் அனைத்ததும், கமலஹாசன் தசாவதாரத்தில் அசினோடு "அற்புதக்" காதல் லீலைகள் புரிந்ததும் இந்த அசிங்கத்தின் அடுத்தடுத்த அத்தியாயங்களே.

    எழுபதுகளில்  ஹிந்தியில்  பிரபலமான  யாதோங்கி பாரத் என்ற படத்தை தமிழில் எடுத்தபோது  அதில் எம். ஜி. ஆர். இரண்டு வேடங்களில் நடித்தார். (இதெல்லாம்  மிக மலிவான  ரசிகமனப்பான்மையின் வெளிப்பாடு) மூன்றாவதாக கமலஹாசன் நடிக்க இருந்தார் . எதனாலோ அவர் அப்புறப்படுத்தப்பட்டு ஒரு தெலுங்கு நடிகர் சந்திர மோகன் (பெயர் தவறாக இருக்கலாம்) அங்கே வந்தார். இவ்வாறு 70கள் முக்கால்வாசி நமது பொலிவிழந்த கதாநாயகர்களால் நிரப்பப்பட்டிருந்தது.  சிவாஜியைப் பற்றி கேட்கவே வேண்டாம். 70களின் மத்தியிலிருந்து அவர் நடித்த படங்களைப் பார்க்காமல் தவிர்ப்பதே நாம் அவருக்குச் செய்யும் மரியாதை என்று நினைக்கிறேன். இதைத் தவிர கதைக்களம் எந்த புது அனுபவத்திற்கும் பார்ப்பவர்களை அழைத்துச் செல்லாத அவலம் இன்னொரு பக்கம்தமிழ் சினிமாவுடன் கூடவே வந்துகொண்டிருந்தது.

    உண்மையில் 70களில்  நமது திரைப்படங்களில் இருந்த ஒரே ஒரு பாராட்டிற்குரிய அம்சம் the only saving grace --எந்தவித சந்தேகமுமின்றி-- அதன் பாடல்கள் மட்டுமே.  உதாரணமாக 70களின் மத்தியில் வந்த மாலை சூட வா என்ற படத்தில் கே ஜே ஜேசுதாஸ் பாடிய யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா? எனக்கென்றும் நீயே சொந்தம் என்ற பாடலை சற்று நினைவுக்கு இழுத்துவருவோம். இணையத்தின் பல இடங்களில் இதன் இசை அமைப்பாளரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. சில இடங்களில் ஓல்ட் என்ற ஒரு ஒற்றைச் சொல் இதை அமைத்தவரை இழிவு செய்கிறது. உண்மையில் இது விஜய பாஸ்கர் என்ற இசை அமைப்பாளரின் இசை வண்ணம். மிக அருமையான கீதம். நான் அப்போது பிரபலமாக இருந்த எம் எஸ் வி, வி குமார், ஷங்கர் கணேஷ் போன்றவர்களின் பாடல்களைக் குறிப்பிடாமல் அதிகமாக அறியப்படாத விஜய பாஸ்கரின் பாடல் ஒன்றை இங்கே அடிக்கோடிடுவதின் காரணம் இதன் பின்னே இருக்கும் அந்த மறைந்த நிஜம் நாம் அசட்டை செய்த பல அபாரமான  பாடல்களை பெரிய எழுத்துகளில் நம் நினைவுச் சுவர்களில் எழுதட்டும்  என்பதற்காகத்தான். மேலும் சில அற்புதத் தேன்துளிகளை random வகையில் கீழே கொடுத்துள்ளேன்.  எப்படி நம் இசை குதூகலமாக நம்மைக் கொண்டாடியது என்பதன் சுவடுகள் அவை.

சப்தஸ்வரம் புன்னைகையில் கண்டேன்- நாடகமே உலகம் - வி குமார்.
அவளொரு பச்சைக் குழந்தை  பாடும் பறவை- நீ ஒரு மகாராணி- சங்கர் கணேஷ்.
சம்சாரம் என்பது வீணை சந்தோஷம் என்பது ராகம் - மயங்குகிறாள் ஒரு மாது- விஜயபாஸ்கர்.
உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்- தேன் சிந்துதே வானம்- வி குமார்.
கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம் -மேயர் மீனாட்சி-எம் எஸ் வி.
கங்கை நதியோரம் ராமன் நடந்தான்- வரபிரசாதம்- கோவர்த்தனம்.
மயங்குகிறாள் இந்த மதுரை மீனாட்சி- பிராயச்சித்தம்- எம் எஸ் வி.
உள்ளத்தில் நூறு நினைத்தேன்- மாப்பிள்ளை அழைப்பு- சங்கர் கணேஷ்.
நான் பாடிய முதல் பாட்டு நீ பேசிய தமிழ் கேட்டு - ஐந்து லட்சம்- கே வி மகாதேவன்.
ஜில்லென்ற காற்று வந்ததோ- நில் கவனி காதலி- எம் எஸ் வி.
குயிலாக நானிருந்தென்ன குரலாக நீ வரவேண்டும்- செல்வமகள்- எம் எஸ் வி.
செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்- நான்கு கில்லாடிகள்- வேதா.
ஒருவர் மனதை ஒருவர் அறிய உதவும் சேவை இது- கௌரி கல்யாணம்- டி கே ராமமூர்த்தி.
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு- வசந்தத்தில் ஓர் நாள்-  எம் எஸ் வி.
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது- பிராப்தம்- எம் எஸ் வி.
நினைத்துப் பார்க்கிறேன் என் நெஞ்சம் இனிக்கின்றது- அவள் தந்த உறவு- எம் எஸ் வி.
திருக்கோவில் தேடி ரதி தேவி வந்தாள்-  தெய்வம் தந்த வீடு- எம் எஸ் வி.
திருமகள் தேடி வந்தாள்- இருளும் ஒளியும்- கே வி மகாதேவன்.
இளமை நாட்டிய சாலை- கல்யாணமாம் கல்யாணம்- விஜய பாஸ்கர்.
என்னோடு என்னன்னவோ ரகசியம் - தூண்டில் மீன்- வி குமார்.

        எழுபதுகளின் பாடல்கள் குறித்து நான் பல பதிவுகள் எழுதியிருப்பதன் ஒரே நோக்கம் நமது இசை எத்தனை பொலிவாக இருந்தது என்பதை படிப்பவர்களுக்கு உணர்த்தவே.  அப்போது வானொலிகளிலும் சாலையோர தேநீர்க்கடைகளிலும், திருமண மண்டபங்களிலும் ஒலித்துக்கொண்டிருந்த மேற்குறிப்பிட்ட ரம்மியமான பாடல்களை   திடுமென வந்து வாரிச் சுருட்டிச் சென்ற ஒரு புதிய இசையலை நமது இசை அனுபவத்தை ஒரேடியாக முற்றிலும் மாற்றிப்போட்டதன் விளைவாக பலர் இந்தப் புதிய இசை வசந்தத்தை போற்றிக் கொண்டாடி அதற்கு முன் வீசிய இளந்தென்றல் போன்ற எழுபதுகளின் ஏகாந்தத்தை அசட்டை செய்து, நடந்த நிகழ்வை மாற்றிச் சொல்லும் புனைவுகளை உருவாக்கி ஒரு இல்லாத வரைபடத்தை தயார் செய்கிறார்கள். ஹிந்தி இசை என்னும் ஒரே பதத்தை வைத்துக்கொண்டு தமிழர்கள் தங்கள் தமிழ்த்தனத்தையே இழந்து விட்டதாகவும், ஹிந்தி இசைக்கு தங்களை விற்று விட்டதாகவும் தங்கள் மனம்போன போக்கில் கடுகு போன்றதொரு உண்மைக்குள் பொய் காற்று செலுத்தி பெரிய பலூன் ஒன்றை இணையத்தில் பறக்க விடுகிறார்கள்.   ஒரு வசந்தத்தின் தீற்றலாய் பொழிந்த  இந்த இசையலை கொடுத்த அதிர்ச்சி ஒரு பக்கம், ஆனந்தம் இன்னொரு பக்கம், இவை இரண்டுமில்லாத மற்றொரு உணர்ச்சி  மற்றொரு பக்கம் என தொடர,  போகிற போக்கில் இந்த  இசை வசந்தத்தின் தூரிகை வேறு ஓவியம் வரைய, எண்பதுகள் வந்தபோது  நமது தமிழ்த் திரையிசையின் முகம் முழுவதும் உருமாறிப்போயிருந்தது.  அதன் பாய்ச்சல், வேகம், தொனி, குரல்கள், இசையமைப்பு, பாடல் பேசும் களம் என எல்லாமே வேறு திசையில் நகர்ந்து கொண்டிருந்தது. எந்தப் புள்ளியில் இந்த திடீர் முக மாற்றம் சாத்தியமானது என்று நூல் பிடித்துச்  சென்றால்  ஒரு இடத்தில் நாம் நிற்கவேண்டி வருகிறது.   அதை அறிவது அவசியம்.

    தமிழ்த்திரையில் ஒரு அசுர  மாற்றம் கொண்டுவந்தது என்று  இரண்டு படங்களை சுட்டிக்காட்டுகிறார்கள் திரை விற்பன்னர்கள். முதல் மாற்றம் 52இல் வந்த பராசக்தி. பாடிப் பாடி  நம்மை பரவசப்படுத்திய அல்லது படுத்திய படங்களை பராசக்தி ஆயிரம் மெகா டன் குண்டு வைத்து ஒரே நொடியில் காலி செய்தது.  பராசக்திக்குப் பிறகு தமிழ்த் திரையை புரட்டிப் போட்ட படமாக பொதுவாக பலர் கருதுவது 77வந்த பதினாறு வயதினிலே. நாடகத்தனமாக  கதை சொல்லும் விதத்தை இந்தப் படம் சப்பாணி, பரட்டை, மயிலு மூலம் ஒரே விழுங்கில் கபளீகரம் செய்தது. ஒரு மகா அலைபோல மீண்டுமொரு முறை  தமிழ்த் திரை புரண்டு படுத்தது- பராசக்திக்குப் பிறகு.

   ஏகப்பட்ட கட்டுரைகள் எழுதப்பட்ட, காட்சி காட்சியாக விமர்சிக்கப்பட்ட, எண்ணில்லா புகழாரங்கள் சூட்டப்பட்ட படம் இது. பாரதிராஜா என்ற மண் வாசனையும், மாற்று சினிமா வேட்கையும்  கொண்ட ஒரு சாமானியனின் முதல் படைப்பு தமிழ் சினிமாவின்  போக்கையே  திசை திருப்பியது ஒரு வியப்பான  நிகழ்வு. தமிழ்த் திரை கட்டிவைத்திருந்த பல பிம்பங்களை சரேலென்று ஒரே வீச்சில் உடைத்த விசித்திரமாக வந்தது 16 வயதினிலே. சட்டென்று மாறியது தமிழ் சினிமா. அலட்சியம் செய்யக்கூடியதாக  இல்லாமல்  இந்த மாற்றம் பெரிய அளவில் நடந்தது. தமிழ் சினிமாவின் போக்கு என்பது வெறும் நடிகர்களை குறிக்கும் ஒரு சொல் அல்ல. மாறாக கதை சொல்லும் விதம், ஒளிப்பதிவு கோணம், வசனம்,மற்றும் இசையமைப்பு எல்லாம் சேர்ந்ததே. 16 வயதினிலே குளிர் காலத்திற்குப் பிறகு ஒரு மரம் புதிய இலைகளால் தன்னை முழுதும் வேறுவிதமாக அலங்கரித்துக்கொள்ளும் ஒரு புத்துயிர்ப்பு. 70களின் சூழலில் அந்தப் படம் ஒரு மகா ஆச்சர்யம். கிராமத்தை அதற்கு முன் இத்தனை உயிரோட்டமாக , ரத்தமும் சதையுமாக வரைந்த படம் எதுவுமில்லை. கதைமாந்தர்கள் பேசிய வசனங்கள், பின்னணி காட்சிகள், அந்த இயல்பான தெருக்கள் எல்லாமே ஒரு புதிய ஒளியால் தமிழ்த் திரையை நிரப்பின

     இருந்தும்  வெறும் காட்சி என்பது உண்மைக்கு வெகு அருகே நிற்கும் ஒரு நிழல்தான். அதோடு பொருத்தமான இசையும் இணையும் போதுதான் அந்தக் காட்சியின்  ஆன்மாவை நம்மால் உணர முடியும். அவ்விதமான கிராமத்து சூழலுக்கான மண் மனம் கமழும் நாட்டார் இசை அதே மண் சார்ந்த பாடல்களையும் மெட்டுக்களையும் தன் சுவாசத்தில் உள்வாங்கியிருந்து, அந்த மண்ணின் மரபுகளோடு தனது  பிறப்பிலிருந்து இரண்டறக் கலந்திருந்த ஒருவரால்தான் எந்தவித ஒப்பனைகளுமின்றி மனதோடு  தைக்கும்படி கொடுக்க முடியும். அது இளையராஜாவிடமிருந்தது. அன்னக்கிளி படத்தில் ஒரு கேள்விக்குறியாக அறிமுகம் ஆன இளையராஜா 16 வயதினிலேவில் ஒரு ஆச்சர்யக்குறியாக மாறினார். நாட்டுப்புற இசைக்கு  ஒரு மகத்தான அங்கீகாரம் கிடைத்ததே   இளையராஜாவின் இசை தொட்ட உச்சம் எனலாம். வயல் காடுகளிலும், நீர் நிலைகளிலும், பயிர்த் தோட்டங்களிலும் உலா வந்த நாட்டுப்புற இசையின் குரல்  தமிழகம் முழுவதும் உரத்து ஒலிக்கச் செய்த   மெட்டுகள், கானங்கள் அவரது இசையின் மையப்புள்ளியாக   இருந்தது.  இந்த மண் முடிச்சு அவர் இசைக்கு மகுடம் சூட்டியது.

     16 வயதினிலேவுக்குப் பிறகு தமிழ்த் திரைக்குக் கிடைத்த புதிய கருப்பொருளான கிராமத்து சூழல்தான் அவரின் இவ்வாறன இசை வேட்கைக்கு ஒரு களம்  அமைத்துக் கொடுத்தது  .  பகட்டாக அலங்கரிப்பட்ட வரையப்பட்ட செயற்கை மரங்கள் வீசும் மின் காற்றாடி தென்றல்கள் கொண்ட கிராமங்கள் மறைந்து, கிராமத்தை அதன் வாழ்வியலின் அழகோடும் அழுக்கோடும் காட்சிபடுத்தும் ஒரு "வேறுமாதிரி"யான சினிமா பிறந்தது.  பாரதிராஜாவின் வருகை ஒரு புதிய அத்தியாயத்தை தமிழ்த் திரையில் ஆரம்பித்துவைத்தது என்று பொதுவாக சொல்லப்படுகிறது. அது உண்மைதான். பாரதிராஜா படைத்த இந்த வேறுமாதிரியான சினிமா அதே வேறுமாதிரியான இசையால் மட்டுமே பூர்த்தியானது.  ஒரு புதிய இசை பாணிக்கான முதல் விதையை பாரதிராஜா நட்டார். இவ்வாறு பாரா அமைத்த அஸ்திவாரத்தில் பலரால் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு இசை வண்ணம் பூசினார் இரா. பதினாறு வயதினிலே பாதிப்பின் நீட்சியாக வந்த ஏராளமான கிராமத்துப் படங்கள் இளையராஜாவின் இசைக்கான மைதானமாக மாறின. அவரது  இசையினால் அவை பலம் பெற்றன. மைதானம் முழுதும் அவர் விளையாடினார். படத்துக்குப் படம் அவர் இசை இளைஞர்களை தன் பக்கம் ஈர்த்தது.  பாரதிராஜா துவக்கிய இந்தப்   புதிய பாதை அப்போது அமைந்திராவிட்டால்  இளையராஜா தன்னை நிலைநிறுத்திக்கொள்ள இன்னும் கடுமையாக போராடவேண்டியதாக இருந்திருக்கும். தன் கையெழுத்து இசையை  அவர் பதிப்பதற்குள் சடுதியில் பல திருப்பங்கள் நிகழ்ந்திருக்கலாம். இளையராஜாவின் வருகையில் வி குமார் என்ற மகத்தான இசை மேதை திடீரென காற்றில் கரைந்துபோன விசித்திரம் போல..

    எவ்வாறு மணிரத்னம் என்ற முத்திரை ரஹ்மானின் வளர்ச்சிக்கு அடிநாதமாக இருந்ததோ அதேபோல பாரதிராஜாவின் வருகையில் இளையராஜா இரண்டாம் முறை பிறந்தார்.  பல டை ஹார்ட் இளையராஜா விசிறிகளால் இந்த வாக்கியத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இளையராஜா யாரை பிரிந்தாலும் இவர்களது விரல் சுட்டுவது அப்படிப் பிரிந்தவர்களைத்தான். எனவே பாரதிராஜா- இளையராஜா வர்த்தக வெற்றிகளுக்குள் இவர்கள் ஒருவரை மட்டுமே காண்கிறார்கள். விந்தையான பார்வை. இவரால் அவரா அல்லது அவரால் இவரா என்பதெல்லாம் முடிவின்மையை நோக்கி நகரும் அர்த்தமற்ற  பேச்சு. இருவரும் சேர்ந்து தமிழ் சினிமாவின் திசையை மாற்றி அதன் வரைபடத்தை புதுப்பித்தார்கள். (அவர்கள் படைத்ததெல்லாம் நல்ல படங்களா  நல்ல பாடல்களா என்ற கோட்டுக்குள் இப்போது செல்லவேண்டாம்.) இருவரும்   வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றார்கள். இவ்வாறு நட்பின் அடையாளமாக இணைந்திருந்த  இருவரும் பின்னர் சில மறைமுகக் காரணங்களினால் பிரிந்தார்கள். பிறகு மீண்டும் இணைந்து பிறகு  மீண்டும்  பிரிந்து... மற்றொரு 16 வயதினிலே படைப்பதற்குள்   தமிழ் சினிமா பல மைல்கள் வனாந்திரங்களையும், பாலைவனங்களையும், ஓடைகளையும், சோலைகளையும், புல்வெளிகளையும், பூந்தோட்டங்களையும்,     இராவையும் பாராவையும்  தாண்டி வந்துவிட்டது.

    பாரதிராஜாவினால் உருவான கிராமத்து சினிமா பல முகமில்லாதவர்களை தமிழ்த் திரைக்கு அழைத்து வந்தது. வந்தவர்களில்  ஒரு சிலரைத் தவிர பலர் ஒரே வார்ப்பில் பாரதிராஜாவைப் பின்பற்றி தங்கள் சுவடுகளை எடுத்து வைத்தார்கள். ஒரு படமோ ஒரு பாடலோ வெற்றி பெற்றுவிட்டால் அதன் நீட்சியாக பல பிரதிகள் வரும்  தமிழ் சினிமாவின் பாரம்பரியம்  இங்கேயும் தொடர்ந்தது. இந்த மாற்றத்தில் பெரிதும் பயன் அடைந்தது இளையராஜாதான். இந்தப் புதிய சாலையில் அவர்  இசைக்கு மிகப் பெரிய அங்கீகாரமும் அதைத் தாண்டிய ஒரு ஒளிவட்டமும் கிடைத்தது என்பது புனைவுகளற்ற ஒரு வாக்கியம்.  நாட்டுபுற நாயகன் என்ற பட்டம் இளையராஜாவுக்கு மக்களின்  மனதில் அப்போதே  கொடுக்கப்பட்டுவிட்டது.

    கிரௌண்ட் ப்ரேகிங் 16 வயதினிலேவுக்குப் பிறகு பாரதிராஜா  கிழக்கே போகும் ரயில்,புதிய வார்ப்புகள் என்று தன் ராஜபாட்டையில் நடை போட்டார். அவர் காட்டிய கிராமம் அவரைத் தொடர்ந்து வந்தது. கோவில் மணி ஓசை தனை கேட்டதாரோ, மாஞ்சோலை கிளிதானோ, பூவரசம்பூ பூத்தாச்சு, இதயம் போகுதே, தந்தனநம்தன தாளம் வரும்  என்று தமிழ் இசை அடுத்த பரிமானத்திற்குத்  தயாரானது.  புதிய வார்ப்புகளின் தந்தனநம்தன  பாடலின் கோரஸ்  பிரசித்திபெற்ற ஒன்று.   ஒரு கடலலை போல பாடல் மீது படர்ந்து சென்றாலும் சரணத்தில் இந்த கோரஸ் செயற்கையாக திணிக்கப்பட்டிருப்பதை போல ஒலிக்கும். வசீகரமான மெட்டுடன் கூடிய அனாசயமான பாடல்.

    பாரதிராஜா தனது  சப்பாணி கதாபாத்திரத்திற்கு ஆரம்பத்தில் நடிகர் சிவகுமாரைதான் தேர்வு செய்திருந்ததாகவும் கோவணம் அணிந்து நடிக்கவேண்டிய சங்கடத்தை விரும்பாத அவர் மறுத்துவிட்டதாகவும் ஒரு தகவல் உண்டு.  கமல் வந்து அந்த இடத்தை தமிழ் சினிமா மறக்க முடியாத அளவுக்கு நிரப்பினார்.  அதன் பின் எந்த வெகுளித்தனமான கதாபாத்திரம் தமிழில் வந்தாலும் அது சப்பாணியின் நிழலாகவே மக்களால் பார்க்கப்பட்டது.  இதற்கிடையில் ரோசாப்பூ ரவிக்கைக்காரி என்ற தனது 100 வது படத்தில்,  திடீரென விழித்துக்கொண்ட சிவகுமார் அதே சப்பாணி வேடத்தை தன் மீது பூசிக்கொண்டு நடித்தார். படம் நன்றாகவே ஓடியது. ஆனாலும் " சப்பாணி மாதிரி  வராது" என்றே மக்கள் பேசிக்கொண்டார்கள். படம் நடக்கும் காலம் இந்திய சுதந்திரத்திற்கு முன். ஆனால் பாடல்களைக் கேட்டால் அப்படியான எந்த உணர்வும் நமக்கு வராது.  என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்  என்று வாணியின் குரல்  விரக வேதனையை வெளிப்படுத்தியது. உச்சி வகுடெடுத்து ஒரு சோகத் தாலாட்டு. இதன் தாளம் மனதை வசப்படுத்தக்கூடியது. இதைத்தவிர இன்னும் இரண்டு பாடல்கள் இருக்கின்றன. கேட்க சகிக்காது.

       இந்த சமயத்தில் வெளிவந்த  பொண்ணு ஊருக்குப் புதுசு என்ற படத்தின் பாடல்கள் பெரிதாக பிரபலம் அடைந்தன. சாமக் கோழி கூவுதம்மா, ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டிவருது போன்ற பாடல்கள் இளையராஜாவின் இசை வேறு விதமாக உருமாறிக் கொண்டு (சிதைந்து!)  கொண்டு வருவதை அறிவித்தன. தனிப்பட்ட விதத்தில் நான் விரும்பிக் கேட்காத பாடல்கள் இவை. எஸ் பி ஷைலஜா பாடிய முதல் தமிழ்ப் பாடலான   சோலைக் குயிலே காலைக் கதிரே இதிலுண்டு. கேட்க நன்றாகவே இருக்கும். இதே அலைவரிசையில் வந்த சக்களத்தி (என்ன ஒரு பெயர்?) படப் பாடல்களும் இதே ரகம்தான். என்ன பாட்டு பாட என்ன தாளம் போட, வாட வாட்டுது என இளையராஜா தனது "காந்தக்"  குரலில் பாடிய பாடல்கள் சிலரை வெகு தூரம் ஓட வைத்தன. என்ன பாட்டு பாட என்ற குழப்பத்தையே இளையராஜா ஒரு பாடலாக பாடிவிட்டார் பாரேன் என்று சொன்ன நண்பர்களும் எனக்கு அப்போது இருந்தார்கள்.

      79 இல் கல்யாணராமன் என்ற படம் சக்கைப் போடு போட்டது. இதில் ஆஹா வந்துருச்சு (எதை என்று கேட்காதீர்கள்.) என்று பெரிய ஹிட் அடித்த ஒரு பகடிப்பாடல் அதன் இயல்பான நகைச்சுவைக்காக பெரிய அளவில் புகழ் பெற்றது. அப்போது சிறுவர்களான எங்களுக்கு இந்தப் பாடல் ஒரு உல்லாசம்தான். காதல் தீபமொன்று நெஞ்சிலே ஏற்றி வைத்தேன், மலர்களில் ஆடும் இளமை புதுமையே போன்ற பாடல்கள் அடிக்கடி கேட்டவை.

    உல்லாசப் பறவைகள் படப் பாடல்கள் என்னைப் போன்றவர்களுக்கு என்றைக்கும் ஒரு மறக்க இயலாத நாஸ்டால்ஜிக் உணர்வின் ஊற்று.  ஜெர்மனியின் செந்தேன் மலரே, தெய்வீக ராகம் ( தேனிசை கோரஸ், ஹான்டிங் மெலடி. ஜென்சியை சற்று மன்னித்துவிட்டால் இது ஒரு அபாரமான பாடல்தான்.) போன்றவை  சலிப்பில்லாத சுவை கொண்டவை. 

     தனிப்பட்ட விதத்தில் எனக்கு குரு  படப் பாடல்கள் மிகவும் பிடித்தவை. படம் வந்த புதிதில் பறந்தாலும் விடமாட்டேன் பாடலை எஸ் பி பி போன்று ஸ்டைலாக பாட முயன்று கேலிச் சித்திரமாக மாறிய கதையெல்லாம் உண்டு. அதில் எஸ் பி பி கொஞ்சலோடு சொல்லும் " Senorita, how you feel about me now I say?" போன்ற ஆங்கில வரிகள் அப்போது எனக்கு பெரிய பிரம்மிப்பை கொடுத்தன. மேற்கத்திய இசையை கேட்பதற்கு முன் இதைதான் நான் ஆங்கிலப் பாடல்களுக்கு இணையான ஒரு பாடலாக கருதினேன்(!).  இப்போது சில பிம்பங்கள் உடைந்து விட்டாலும் இந்தப்  பாடல் அளிக்கும் சுகம் சிதைந்து விடாமல் இருக்கிறது. ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளைப் பொன்வண்டுகள் என்றொரு குழந்தைப் பாடல் இருக்கிறது. அப்போது அவ்வளவாக பிடிக்காத பாடல் இப்போது நிறையவே பிடிக்கிறது. எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் என்ற பாடலில் ஸ்ரீதேவி போதையில் ஆடிப்பாடி வர,  அது பிடிக்காத  கமலஹாசன்  நாயகியின் விலகும் முந்தானையை சரி செய்துகொண்டே ரொம்ப நல்ல பிள்ளையாக நடிப்பார்.  பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா என்று ஸ்ரீதேவி தன் காதலன் பெயரைச் சொல்லாமல் தமிழ்ப் பண்பாட்டை  காக்கும் ஒரு  பாடலும்  இதில் உண்டு. இசையும் மெட்டும் ஏகத்துக்கு உற்சாகம் ஏற்றும் மிக அருமையான பாடல். நான் இன்றுவரை விரும்பிக் கேட்கும் அதிசய ராகம். இளையராஜாவின் இசையில் ஒளிந்திருக்கும் திடீர் ஆச்சர்யங்களில் இது ஒன்று.

     குருவின் அதிரடி பாய்ச்சலில் அதோடு  வெளிவந்த மகேந்திரனின் ஜானி வந்த சுவடே தெரியாமல் காணாமல் போனது.  இரட்டைவேடத்தில் ரஜினிகாந்த் என்ற விளம்பரம் படத்துக்கு பல மடங்கு எதிர்பார்ப்பை செலுத்திவிட, மகேந்திரனோ  "உங்க நெனெப்பெல்லாம் எங்கிட்டே ஆவாது" என்கிற ரேஞ்சில் இரண்டு ரஜினியை வைத்து ஒரு காதல் கதையை கண்ணில் காட்ட (எந்த நம்பிக்கையில் என்று இன்றுவரை தெரியவில்லை),  காசு கொடுத்து ரஜினியின் கோமாளித்தனத்தையும், ஆக்ரோஷ அடி தடியையும், சிகரெட் வித்தையையும்  காண வந்த ரசிகர் கூட்டம் எதிர்பார்த்த எதுவும் இல்லாததால், (ஸ்ரீதேவி கூட  போர்த்திய புடவையோடு  படம் முழுவதும் நடித்திருப்பார்.) நரி போல ஊளையிட்டு படத்தை இரண்டே நாளில்  காலி செய்தது. படத்தில் துப்பாக்கி, திருட்டு,கொலை, போலிஸ் துரத்தல் என ஒரு ரஜினி படத்திற்கான  எல்லாமே உண்டு- சுவாரஸ்யம்  தவிர. கலைப் படம் எடுப்பவர் கையில் கொலைப் படத்தை கொடுத்தால் அவர் என்ன செய்வார்? இருந்தும் இன்றைக்கு ரஜினிகாந்த் சற்றேனும் ஒழுங்காக நடித்த படங்களில்  ஒன்று என்ற நல்ல பெயரும், சில மென்மையான காதல் காட்சிகளும்,  அருமையான பாடல்களும் அதைவிட கவர்ச்சி நாயகியாக பெயர் எடுத்த ஸ்ரீதேவி புடவை  நாயகியாக மிக கண்ணியமாக  நடித்த ஒரே படம் என்ற பெயரையும் பெற்றுள்ளது.

     காற்றில் எந்தன் கீதம் ஒரு ராக உலா என்றால், என் வானிலே ஒரே வெண்ணிலா ஐஸ் க்ரீம் சுவை. ஒரு இனிய மனது இசையை அலைத்துச்  செல்லும்,(ஜென்சி அழைத்து என்பதை அலைத்து  என்றுதான் பாடியிருப்பார்.) ஒரு வெண்மேகம்  என்றால் ஆசைய காத்துல தூது விட்டு ஒரு இடி மின்னல். இது தவிர சிநோரீடா ஐ லவ் யு என்று ஒரு உற்சாக கானம் உண்டு. இப்போது காற்றில் எந்தன் கீதம் தாண்டி மற்ற எதுவும் மனதில் தங்கவில்லை.

           ஏறக்குறைய இதே வரிசையில் வந்த ஒரு படம் ப்ரியா. எப்படி ஒரு கறுப்பின பையனான மைக்கல் ஜாக்சன் ஒரு வெள்ளைப் பெண்ணாக மாறினாரோ அதுபோல சுஜாதாவின் சுவாரஸ்யமான கதைக்கு ஏகப்பட்ட பிளாஸ்டிக் சர்ஜரி செய்து எதோ அமிஞ்சிக்கரையில் இரண்டு கோஷ்டிகளுக்குள் நடக்கும் ஒரு கைகலப்பு ரேஞ்சுக்கு கதையை  மாற்றியிருப்பார்கள். ப்ரியா என்ற ஒற்றைப் பெயருக்காக கதை சுஜாதா என்று டைட்டில் கார்டு காண்பித்து அவருக்குப்  பெருமை செய்திருப்பார்கள்.  பாடல்கள், இசை எல்லாமே மெட்ராஸை தாண்டாத வெகு லோக்கல் பாணியில் இந்தப் படத்தை சிங்கப்பூரிலா எடுத்தார்கள் என்று நினைக்கவைக்கும். அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆடக் கண்டேனே என்றொரு பாடல் மட்டும் ஒரு சுகம். (ஆனால் இதன் நதி மூலத்தை ஆராய்ந்தால் இது ஒரு மேற்கத்திய தழுவல் என்ற உண்மை நம்மைப் பார்த்து சிரிக்கும்.) மற்ற எல்லா பாடல்களும் வெகு எளிமையான வண்ணம் கொண்ட yet another typical mundane stuff  from Ilayaraajaa. டார்லிங் டார்லிங் டார்லிங் என்று ஒரு மேற்கத்திய வகைப் பாடலை நான் மிகவும் ரசித்துக் கேட்பதுண்டு இரண்டு வருடங்களுக்குப் பிறகு போனி எம் இசைக் குழுவினரின் sunny என்ற பாடலைக் கேட்கும் வரையில். இளையராஜாவினால் எம் எஸ் வி யின் மேற்கத்திய பாணி இசைக்கு ஈடு கொடுக்க முடியாத இயலாமையை இந்தப் படத்தில் அறிமுகம் செய்யப்பட்ட  ஸ்டீரியோ போனிக் என்ற கிம்மிக் சமன் செய்துவிட்டது.  ஸ்டீரியோ போனிக் என்றால் என்னவென்றே தெரியாத சில ஜென்மங்கள் இந்தப் புதிய தொழில் நுட்பத்தைப் பற்றி என்னென்னமோ கதை அளக்க, ("ரெண்டு ஸ்பீக்கர்ல ரெண்டு குரல் தனித் தனியா கேக்குது பாரு. அதான் ஸ்டீரியோ போனிக்.") சிறுவர்கள் வாய் பிளந்ததுதான் மிச்சம். அந்த போதையிலேயே ப்ரியாவின் பாடல்கள் உச்சத்திற்குப் போயின. இதைவிட உலகம் சுற்றும் வாலிபன், நினைத்தாலே இனிக்கும், சிவந்த மண் படப் பாடல்கள் அந்தந்த  மண்ணின் வாசத்தை  இசைப்  பிரதி எடுத்து அவைகளுக்கு அழகூட்டிய மந்திர கானங்கள். இதை நான் ஒரு சவால் போன்றே சொல்கிறேன். உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் எந்த ஒரு பாடலின்  அருகே கூட ப்ரியா படப் பாடல்கள் சற்றும் மழைக்குக் கூட ஒதுங்க முடியாது. 

    இது எப்படி இருக்கு? என்ற இந்தப் படத்தில் வரும் எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ  காயத்ரியின் காலைப் பனியில் ஆடும் மலர்கள் போன்ற பாடல்கள் மெல்லிய மேகம் ஒன்று முகத்தை உரசும் மெல்லிசைத் துளிகள். காயத்ரி படத்திலுள்ள வாழ்வே மாயமா வெறும் கதையா  பாடலின்  தாளம், சசிரேகாவின்(!) மிரட்சியூட்டும் குரலோடு இணைந்துகொண்டு நம் திகில் செல்களுக்கு  தீனிபோடும்.

    தர்ம யுத்தம் படத்தின் பாடல்கள் அடுத்து பெரிய வெற்றி பெற்றன. என் நினைவில் ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு, ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி இரண்டும் அந்தப் பழைய  ரேடியோ நாட்களை மீட்டுக்கொண்டுவரும் பல பாடல்களில் அடக்கம். ஆகாய கங்கையை  அதிக முறை ரேடியோக்களில் கேட்ட நினைவிருக்கிறது. ஆனால் புரியாத ஒன்று என்னவென்றால் ஒரு காதல் பாடலுக்கு எதற்காக மிக சோகமான இசையை பாடலின் ஆரம்பத்திலும் இடையிலும் கொடுக்க வேண்டும்? பாடல் சொல்லும் கருத்துக்கு ஏதுவான இசையை விட தனக்கு தோன்றியதை இசையாக படைப்பதே இளையராஜாவின் சிறப்பு. அவரது பல பாடல்களில் வரும் இடையிசைக்கும் சரணத்திற்கும் எந்தவித தொடர்பும் இருக்காது என்பதை அவர் பாடல்களை உன்னிப்பாக கேட்பவர்கள் அறிவார்கள். அவரது இடையிசையை நன்றாக கவனித்தால் முதலில் ஒரு குழல் அதைத் தொடரும் வயலின்கள் பிறகு சில கிடார் ஓசைகள் பின் மீண்டும் குழல் அல்லது வயலின் இசையோடு சடாரென்று சரணத்திற்குள் பாடல் அதிரடியாக படையெடுக்கும். சில சமயங்களில்  இந்த வயலின், குழல், கிடார் வாத்தியங்கள் அவ்வபோது இடம் மாறும். வெகு சில பாடல்களைத் தவிர இதுவே அவரது இசையின் வரைபடம்.

       ஹிந்தியில் மா என்று தர்மேந்திரா நடித்த படத்தை தமிழில் தேவர் பிலிம்ஸ் அன்னை ஓர் ஆலயம் என்று எடுக்க, ஜீப்பில் பெரிய துப்பாக்கியோடு உட்கார்ந்துகொண்டு ரஜினிகாந்த் காட்டு மிருகங்களை சினிமா வீரத்துடன் வேட்டையாடுவார். அதிலும் அவர் இரண்டு புலிகளை பிடிப்பதையெல்லம் இன்றைக்குப் பார்த்தால் படு தமாஷாக இருக்கும். இளையராஜாவின் இசை ஒன்றே சற்று சகித்துக்கொள்ளக்கூடிய அம்சம். நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு நாட்டியமாடுது என்றொரு அருமையான பாடல் இருக்கிறது. எஸ் பி பியின் அத்தனை மென்மையான குரலுக்கும்  அதற்கு ரஜினிகாந்த் காட்டும் முக பாவனைகளுக்கும் நீயா நானா என்று ஒரு போட்டியே நடக்கும்.  நந்தவனத்தில் வந்த குயிலே என்று  நாயகியை நாயகன் பகடி செய்யும் தமிழ் சினிமாவின் காதல் பாரம்பரியத்தை மீறாத பாடல் ஒன்று உண்டு.  டி எம் எஸ்  பாடிய அம்மா நீ சுமந்த பிள்ளை சிறகொடிந்த கிள்ளை என்ற பாடல் கொஞ்சம் நெஞ்சத்தை உருக்கும். இளையராஜாவின் முத்திரையான அம்மா பாடல்களுக்கு இதுவே முதல் விதை என்று நினைக்கிறேன்.  இதிலுள்ள இன்னொரு நல்ல பாடல் அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே. ரஜினியும் ஸ்ரீ ப்ரியாவும் குட்டி யானையை (உண்மையில் யானையைத்தான் குறிப்பிட்டேன்) சுற்றி வந்து பாடுவார்கள். படம் வந்த புதிதில் மதுரையில் சில கோவில் திருவிழாக்களில் காலை நேரங்களில் இந்தப் பாடலை அம்மன் பாடல்கள் ரேஞ்சுக்கு  சத்தமாக ஒலிபரப்பிய வேடிக்கையெல்லாம்  நடந்திருக்கிறது.   மேற்கத்திய இசை பின்னிப் பிணைந்த இளையராஜாவின் ஆரம்பகால  அதிரடி. சுசீலாவின் குரல் கேட்க வெகு சுகம். அவருக்காகவே நான் இந்தப் பாடலை பலமுறை ரசித்திருக்கிறேன். 

     காளி என்ற படம் சினிமாஸ்கோப்பில் எடுக்கப்பட்டு மண்ணைக் கவ்வியது. இதில் இரண்டு பாடல்கள் கேட்க நன்றாக இருக்கும். வாழும்  மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம் என்று விஜயகுமார் ஓடும் காரில் பலவித சர்க்கஸ் குதியாட்டம் போட்டுக்கொண்டு பாடுவார். ரஜினியோ ரொம்ப சாந்தமாக உதடு பிரியாமல் புன்னகைத்துக்கொண்டே காரை ஓட்டிக்கொண்டிருப்பார்.  ரஜினியின் இந்த அலட்சியம் அப்போது எங்களை கவர்ந்தது. மற்றொரு பாடல் டாக்டர் கல்யாண், எஸ் பி பி இணைந்து பாடிய  ஆங்கிலத்தமிழ் பாடல். பெய்பி ஷேக்கிட்  பெய்பி என்று அதிரடியாக கல்யாண் ஆரம்பிக்க ஆர்ப்பாட்டமான மேற்கத்திய கிடார், ட்ரம்ஸ் வாத்திய இசைக்குப் பிறகு தித்திக்கும் முத்தம் ஒன்று அள்ளிக்கொடு என எஸ் பி பி பின் தொடர, வெட்டி வெட்டி ஆட வேண்டிய டிஸ்கோ நடனத்திற்கேற்ற  சரியான இசை.  சரணம் முடிந்து பல்லவிக்கு பாடல் திரும்பும் அந்த கணம் ஒரு உற்சாகத் தடவல். இதே படத்தின் அடி ஆடு பூங்கொடியே என்ற ஒரு பாசப் பாடல் அப்போது சற்று வெளிச்சம் கண்டது. 

 கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ என்ற மென்மையான கீதம் ஆறிலிருந்து அறுபதுவரை படத்தில் வந்தது. வானொலிகளில் அதிகம் கேட்கப்பட்ட பாடல்களில் ஒன்று.

   மீண்டும் கோகிலாவின் சின்னஞ்சிறு வயதில்  எனக்கோர் சித்திரம், ராதா என் ராதா என்ற இரண்டு பாடல்களும் பிரபலம் அடைந்தாலும் எனக்கு ஹேய் ஓராயிரம் ....மலர்களே மலர்ந்தது என்ற எஸ்  பி பி குழைந்து கொண்டு பாடும் அந்தப் பாடல்தான் விருப்பம்.

     அழகே உன்னை ஆராதிக்கிறேன் என்ற படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் ஒலிப்பெருக்கிகளில் ஓயாது உரத்து ஒலித்தவை. அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க, குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை, சிறுசு ரொம்ப சிறுசு எளசு அம்மாடி எளசு (நான் படம் பார்த்ததில்லை. எனவே எதைச் சொல்கிறார் என்று தெரியவில்லை. அப்போதே ஆரம்பித்துவிட்டார் இளையராஜா தனது இசைப் "புரட்சியை".) பாடல்களைவிட நானே நானா யாரோதானா, என் கல்யாண வைபோகம் உன்னோடுதான் போன்ற பாடல்கள் தரமான இசை வடிவங்கள்.  தனிமையில் யார் இவள் என்றொரு பாடல் இருக்கிறது. பாடலின் துவக்கத்தில் வரும் சில ஓசைகளை வெட்டிவிட்டால் பாடலின் அருமையை எந்தவித தடங்கலுமின்றி ரசிக்கலாம். ஒரு நல்ல பாடலுக்கு எதற்காக தேவையில்லாத கேட்கவே கூசும் prelude என்று புரியவில்லை. ஆச்சர்யமாக இந்தப் படத்தில் வாணிஜெயராமை முழுமையாக பயன்படுத்தியிருந்தார் இளையராஜா.

      தைப் பொங்கல் படத்தில் இடம் பெற்ற கண் மலர்களின் அழைப்பிதழ், பனிவிழும் பூ நிலவே, தீர்த்தக்கரைதனிலே செண்பக புஷ்பங்களே பாடல்கள் கேட்க இனிமையானவை.

     சாமந்திப் பூவின்  ஆகாயம் பூமி என்றும் ஒன்றா? பாடல் அடிக்கடி சிலோன் வானொலியில் உலா வரும். பொன் மான தேடி நானும் பூவோட வந்தேன் பாடலோடு இதை தாராளமாக குழப்பிக்கொள்ளலாம்.

    ருசி கண்ட பூனை என்றொரு படத்தில்  அன்பு முகம் கண்ட சுகம் என்று இளையராஜா கொஞ்சம் நன்றாகவே பாடியிருக்கும் பாடல் ஒன்று இருக்கிறது. இதில்தான்  எஸ் ஜானகியை ஒரு  மிமிக்ரி பாடகியாக மாற்றிய  கண்ணா நீ எங்கே வா வா நீ இங்கே என்ற பாடல் உள்ளது. ஜானகி ஒரு குழந்தை போல பாடி அப்போது பலரது பாராட்டைப் பெற்றாலும் அவர் குரலில் துருத்திக்கொண்டு வெளியே தலைகாட்டும் செயற்கைத்தனம் இவருக்கு இதெல்லாம் தேவையா என்று எண்ணவைக்கும். பலர் இந்தப் பாடலை விரும்பவில்லை. இதே ஜானகி போடா போடா பொக்க (என்ன அரிதான தமிழ்!) பாடலில் ஒரு கிழவி போல  பாடியிருப்பார். இளையராஜாவின் இசையில் இவர் பாடியதோடு நின்றுவிடாமல், இப்படி மிமிக்ரி வேலைகள் செய்தும், முக்கி முனகி, விசேஷ சத்தங்கள் கொடுத்தும், கீச் என்று கத்தியும் பல புதுமைகள் செய்திருக்கிறார்.

     ஒரே முத்தம் என்ற ஓடாத படத்தில் அதிகம் அறியப்படாத ஒரு பாடல் இருக்கிறது. பாவையர்கள் மான் போல காவிரியின் நீர் போல. கவ்வாலி பாணியில்  இளையராஜா இசை அமைத்த ஒரே பாடல் இதுவாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. 65இல் வெளி  வந்த வல்லவனுக்கு வல்லவன் படத்தில் வேதா இசையமைத்த  பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம் பாடலின் சாயல் இதில் தெரியும்.

    இளையராஜாவின் 100வது படமாக வந்தது மூடுபனி. பாலுமஹேந்திரா சிகப்பு ரோஜாக்களையும், சைக்கோ என்ற ஹிட்ச்ஹாக்கின் படத்தையும் ஒரு பெரிய பாத்திரத்தில் ஒன்றாக கொட்டிக் கலந்து ரசிகர்களுக்கு ஒரு திர்ல்லர் விருந்தை வைத்தார். சிகப்பு ரோஜாக்கள் போலில்லாது  சற்று subtle லாக கதையின் போக்கு நகரும். சிகப்பு ரோஜாக்களை ரசித்த நம்ம ஊர் பெண்களுக்கு ஏனோ இந்தப் படம் பிடிக்கவில்லை. படத்தின் இறுதியில் நாயகன் பிரதாப் கிடாரை வைத்துகொண்டு  ஷோபாவை பார்த்து கிறங்கிப் போய் என் இனிய பொன் நிலாவே என்று பாடும் அந்தப் பாடல் இன்று வரை பலரது நினைவுகளில் ஒரு ரசாயன மாற்றத்தை உண்டாக்கி,  பல ஞாபகங்களை மீட்டிவிட்டுப் போகிறது. மறுபேச்சின்றி கிளாசிக் என்ற முத்திரை குத்திவிடலாம். பருவ காலங்களின் கனவு என்ற பாடல் அதிகமாக ஒலிபரப்பப்படாவிட்டாலும்  கேட்க நன்றாகவே இருக்கும்.

    கண்ணில் தெரியும் கதைகள் என்றாலே ஷங்கர் கணேஷின் நா ஒன்ன நெனச்சேன் என்ற பாடல்தான் முதலில் எட்டிப் பார்க்கும். கொஞ்சம் பின்னே பார்த்தால் நானொரு பொன்னோவியம் கண்டேன் எதிரே என்ற இளையராஜாவின் பாடலையும் காணலாம். படத்தின் அடையாளமாக இந்த இரண்டு  பாடல்கள்தான் இன்று நிலைத்திருக்கின்றன.

   நான் போட்ட சவால் என்றொரு படம் வந்து, உடனே யு டர்ன் அடித்து காணமல் போனது. சுகம் சுகமே ஏய் தொடத்தொடத்தான் என்று ஒரு சுமாரான பாடல் உண்டு. அதைவிட நெஞ்சே உன் ஆசை என்ன? என்ற பாடல் கேட்க அமர்களமாக இருக்கும். அருமையான தடதடக்கும் இசையமைப்பில் டி எல் மகாராஜனின் குரலில் இந்தப் பாடல் ஒரு இனிமை. இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்திலும் இளையராஜா தனது பாணியை விட்டு விலகிய வேறு  இசையை கொடுத்திருப்பார்.

      நதியை தேடிவந்த கடல்  என்றொரு படம் எண்பதுகளில் வந்தது. ஜெயலலிதா நடித்த கடைசிப் படம் இது. இதில் தவிக்குது தயங்குது ஒரு மனது என்று ஜெயச்சந்திரன் பாடிய பாடல் உண்டு. படத்தில் ஜெயலலிதா காலை உடற்பயிற்சி செய்ய, நாயகன் சரத்பாபு ( அவர்தான் இவருக்கு ஜோடி! இப்போது இதை நினைக்கவே தயங்குது நம் மனது.) அவர் மீது மையலோடு பாடுவதாக காட்சி போகும்.

       இப்போது மிக முக்கியமான கட்டத்திற்கு வந்துவிட்டோம். எவ்வாறு நமது இசையின் ஒப்பனைகள் கலைந்தன என்பதை கீழே உள்ள ஒரு குறியீட்டுப் பாடல்  உங்களுக்கு விளக்கிவிடும்.

        பிரியமான பெண்ணை ரசிக்கலாம் என்ற வரியை பெரியம்மா பெண்ணை ரசிக்கலாம் என்று தவறாக பாடி உறவு முறைகளை கொச்சைப் படுத்தியதாக சில வருடங்களுக்கு முன் ஒரு பாடகர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதற்கும் முன் கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா இல்ல ஓடிப்போயி கல்யாணந்தான் கட்டிக்கலாமா என்ற பாடல் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டது. தமிழ்க் கலாச்சாரத்தை சிதைக்கும் பாடல்கள் என பல குரல்கள்  அப்போது கேட்டன. ஆனால் இதுபோன்ற சீரழிவின் முதல் வித்து எப்போது ஊன்றப்பட்டது என்று சற்று ஆராய்ந்தால், அந்தக்  கோடு நம்மை இளையராஜாவிடம் இழுத்துச் செல்கிறது.  இளையராஜாவின் இசையில்தான் இந்த ஆபாசம் அரங்கேறியது. இதை அவர் ஒரு பரிசோதனை என்ற அளவில் வைத்துக்கொள்ளாமல் ஒரு பாணியாகவே மாற்றிக்கொண்டார். இந்த ஆபாச டிரெண்ட் செட்டர் பாடல்கள் தமிழிசையின் ஆத்மாவை கேலி செய்து, எச்சில் துப்பி, புதைக்குழிக்குள் தள்ளி, அதன் மீது கல் நட்டு இனி என் ராஜ்யம்தான் என்று நாம் அறிந்திருந்த தரமான இசையை துவம்சம்  செய்தது.

            இளையராஜா அமைத்த adult songs அதாவது ஆபாச பாடல்கள் அவை வந்த சமயத்தில் பெருத்த கலாச்சார அதிர்வை கொடுத்ததும், ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு உட்பட்டதும் இன்றைக்கு பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. இன்று அவர் ஒரு சாமியார் தகுதிக்கு வந்துவிட்டதாலும் அவர் மீது பாய்ச்சப்படும் இந்த பாசாங்கான ஒளி வட்டமும் அவரை காட்டமாக விமர்சிப்பதிலிருந்து ஒருவரை தள்ளி நிற்க வைத்து விடுகிறது.  பலவிதமான மேற்பூச்சுகளுடன் அவரது ரசிகர்கள் அவ்வாறான பாடல்களுக்கு புதுவண்ணம் அடித்தாலும், புற்கள் பூண்டுகள் முளைத்த பழந்தமிழ் வார்த்தைகளைக் கொண்டு அந்த ஆபாசங்களை அழகுபடுத்தி அவற்றை குறித்து பத்தி பத்தியாக பொழிப்புரைகள்  எழுதினாலும் சில நிகழ்வுகளை காலம் பதிவு செய்தே இருக்கிறது.  அதன் மீது ஆயிரம் புல்டோசர்களை விட்டு ஓட்டினாலும் அது அழியப்போவதில்லை. அது போன்ற பல இழிவான பாடல்களிலிருந்து உதாரணத்திற்கு நான் ஒரு பாடலை மட்டுமே இங்கே குறிப்பிட இருக்கிறேன். மற்றவை மற்றொரு பதிவில் படையெடுக்கும்.

       1982இல் வந்த ஒரு திரைப் படம் கடல் மீன்கள். கமலஹாசன் இரட்டை வேடங்களில் வழக்கமான  அதிகப்பிரசங்கித்தனத்துடன் நடித்த yet another crap. இதில் தள்ளாடுதே வானம் என்றொரு நல்ல பாடல் இருக்கிறது. இதே படத்தில் இளையராஜா ரசிகர்கள் வசதியாக மறந்துவிட்ட   "கலாச்சார பெருமை" கொண்ட பாடல் ஒன்று உள்ளது.  இதை நான் என் நண்பனிடம் தெரிவித்தபோது ,"அப்படியா?" என்றான். அவனைப் போலவே இதைப் படிக்கும் பலருக்கும் தோன்றலாம். அது என்ன பாடல் என்ற கேள்வி எழும். பாடலின் முதல் வரி ஆண் குரலில்  இப்படி;"மதனி மதனி," உடனே பெண் ,"கொழுந்தா கொழுந்தா" ஆண் "மதனி மதனி மச்சான் இல்லையா இப்ப வீட்டுல?" பெண் "கொழுந்தா  கொழுந்தா எதுக்கு கேக்குற எதுவும் வேணுமா?"  அடுத்து வரும் வரி  நம் சமூகம் அறிந்திருக்கும்  உறவு முறைக்குள்  அதிர்ச்சி ஊசி செலுத்தும்.  " நா ராத்திரிக்கு துணையாக  வரலாமா?"  எதற்கு என்ற கேள்விக்கு இங்கே இடமில்லை. Pretty straight. உடனே அவள் சொல்வாள்; " ஹே உளறாத எனக்கொன்னும் பயமில்ல" ரொம்பவும் தைரியம். Highly adventurous.  ஆஹா இதுவல்லவோ தரமான நல்லிசை! நம்  பண்பாட்டைச் சொல்லும் அதி அற்புதப் பாடல்! சரணத்தில் பாடல் இன்னும் கொஞ்சம் அசைவமாக போகும்.

   மதனி என்ற பெயரையே அப்போதுதான் நான் முதல் முறையாகக் கேட்டேன். கேட்டதும் மதனி என்பது  தலையில் பானையைச்  சுமந்து பதனி விற்கும் ஒரு பெண்னைக் குறிக்கும் ஒரு சொல்  என்றுதான்  நினைத்தேன். அன்றைய சமயங்களில் சிறிய ஊர்களில் தினமும்  காலை வேளையில் சில  பெண்மணிகள்  பதனி விற்றபடி வருவது அன்றாட நிகழ்வுகளில் ஒன்று. மேலும் மதனிக்கும் பதனிக்கும் இயல்பாக இருக்கும் எதுகை மோனை சத்தம் என் புரிதலின்  மீது புகுந்து விளையாடிவிட்டது. வீட்டில் இதைச் சொன்னதும் புரையேறிய சிரிப்பலை  அடங்குவதற்குள் எனக்கு எரிச்சலைத் தாண்டி கோபம் வந்துவிட்டது. "சில இடங்கள்ள அண்ணியத்தான் மதனிம்பாங்க" என்ற விளக்கம் இன்னும் அதிகமாக  என் தலையை  சுற்ற வைத்தது. "அது எப்படி?" என்று குழம்பிப்போனேன். காதலர்கள் பாடும் ஒரு டப்பாங்குத்து பாடலுக்கு எதற்காக மதனி - கொழுந்தன் tag என்று எனக்குப் புரியவில்லை. என் குழப்பத்திற்கு பதில் வந்தது;  "கன்றாவிக் கழிசடையெல்லாம் கேக்கறத மொதல்ல நிறுத்து".

    கீழே இந்தப்  பாடலின் "கவிதை" உள்ளது. படித்துப் பாருங்கள். எழுதியது பஞ்சு அருணாசலம் என்ற "அரிதான" கவிஞர்.

மதனி மதனி,     கொழுந்தா கொழுந்தா
மதனி மதனி மச்சான் இல்லையா இப்போ வீட்டுல
கொழுந்தா கொழுந்தா எதுக்கு கேக்குற எதுவும் வேணும்மா
நா ராத்திரியில் துணையாக வரலாமா
ஹே உளராத எனக்கொன்னும் பயமில்லே

ஊரும் ஒலகம் எல்லாம் இதை பார்த்தா ஏதோ சொல்லும்
வாயு மனக்கும் பேசி பல வார்த்தையாலே கொல்லும்
யாரு சொன்னா என்ன
எங்க மதினிய போல இல்ல
யாரு சொன்னா என்ன
எங்க மதினிய போல இல்ல
ஊரு எல்லாம் ஹ ஹ ஹ ஹ ஊரு எல்லாம் தேடி பார்த்தேன்
உங்கள போல யாரு
ஓடி யாடும் சின்ன வயசு ஒரு குறையாச்சும் கூறு
ஆமாங்க எனக்கு ரொம்ப வெவரம் தெரியாத போதே மனமாச்சு
மதனி மதனி     கொழுந்தா கொழுந்தா
மதனி மதனி மச்சான் இல்லையா இப்போ வீட்டுல
கொழுந்தா கொழுந்தா எதுக்கு கேக்குற எதுவும் வேணும்மா

நாளும் மூணும் ஏழு ஆமா நமக்கும் நல்ல நாளு
நானும் உங்க ஆளு ஆமா எல்லாத்துக்கும் மேலு
அண்ணன் வீட்டு நெல்லு
எங்க அண்ண பொண்டாட்டி கையு
அண்ணன் வீட்டு நெல்லு
எங்க அண்ண பொண்டாட்டி கையு
ஹ ஹ எனக்கு ஹ ஹ ஹ ஹ ஹ ஹ
எனக்கு உன்ன பார்த்தா ஏதோ போல ஆச்சு
அள்ளி கட்டி நானும் சேர்க்க ஆசை மீறி  போச்சு
ஹ ஹ ஹ நெஜமா எனக்கும் ஒன்னு நெனப்பா இருக்குது சிரிக்காதீங்க
மதனி மதனி  கொழுந்தா கொழுந்தா
மதனி மதனி மச்சான் இல்லையா இப்போ வீட்டுல
கொழுந்தா கொழுந்தா எதுக்கு கேக்குற எதுவும் வேணும்மா
நா ராத்திரியில் துணையாக வரலாமா
ஹே உளராத எனக்கொன்னும் பயம்மில்லே
மதனி மதனி 
கொழுந்தா கொழுந்தா 


    இளையராஜா எதை கணக்கில் கொண்டு இந்தப் பாடலை அமைத்தாரோ தெரியவில்லை. மேலே மேலே சென்ற  வணிக வெற்றியின்  உற்சாகத்தில் அவருக்கு  வானமே வசப்பட்டு விட்டதைப் போல ஒரு உணர்வு வந்திருக்கலாம்.  இல்லாவிட்டால் இதுபோன்ற ஆபாசக் குப்பைகளுக்கு இளையராஜாவின்  முத்திரை கிடைத்திருக்காது. பாடல் வந்த சில நாட்களிலேயே இதற்கு  பலத்த எதிர்ப்பு கிளம்பியது. (நல்லவேளையாக எதிர்ப்பு வந்தது.  இல்லாவிட்டால் இளையராஜா இன்னும் பலவிதமான உறவு முறைகளுக்கு புரட்சி  மெட்டு போட்டிருப்பார். இதேபோல பயணங்கள் முடிவதில்லை படத்தின் ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா? பாடலுக்கும் மக்கள் மத்தியில் சலசலப்பு உண்டானது.) நெருக்கமான உறவு முறைகளை இளையராஜா கொச்சைப் படுத்துவதாக கண்டனக் குரல்கள் உக்கிரமான  டெசிபெலில்  ஒலிக்க, இந்தக் கலாச்சார எதிர்ப்பில் மதனி "மயிலு"வானாள். கொழுந்தா "குமரா" ஆனான். வேடிக்கையாக திரையில் மட்டுமே மயிலு, குமரா. ஆனால் வானொலிகளில் மதனியும் கொழுந்தனும் கலாச்சாரத்தை காலில் மிதித்து துவசம்சம் செய்தபடிதான் இருந்தார்கள். இப்போது கூட யு டியூபில் நீங்கள் அவர்களைத்தான் காண முடியும்.

       இதற்கு எப்படி இளையராஜாவை குற்றம் சொல்ல முடியும் பாடலை எழுதிய கவிஞர்தான் culprit என்ற எண்ணம் உங்களுக்கு வரலாம். உண்மைதான். பாதி உண்மை. ஆனால் வசதியாக இன்னொரு பாதியை மறந்துவிடுகிறோம். ஒரு பாடலில் எதை அனுமதிக்கவேண்டும் என்பது இசையமைப்பாளரின் முடிவில் இருக்கிறது. பாடமுடியாது என்று பாடகர்கள் மறுக்க அதனால் மாற்றப்பட்ட கவிதை வரிகள், மெட்டுக்குப் பொருந்தாத வரிகளை அங்கே இங்கே வெட்டி ஒட்டி அமைத்த பாடல்கள் போன்றவைகளைத் தாண்டி, இயல்பாக ஒரு இசையமைப்பாளருக்கு இருக்க வேண்டிய சமூக அக்கறை அல்லது  எதை பொதுவில் வைக்கவேண்டும் என்ற வியாபார நோக்கமற்ற சிந்தனை இளையராஜாவிடம் இல்லாதிருந்தது தமிழ் திரையிசையின் வீழ்ச்சிக்கு பாதை அமைத்தது. அதேசமயம்  நகைமுரணாக இளையநிலா பொழிகிறதே, அந்தி மழை பொழிகிறது  போன்ற பாடல்களுக்கு  பெரும்பான்மையானவர்கள் இளையராஜாவை மட்டுமே  பாராட்டுகிறார்கள்.  எழுதிய வைரமுத்துவை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இளையராஜா என்று வந்துவிட்டால் பாராட்டு மட்டும் அவருக்கு. திட்டு என்றால் இருக்கவே இருக்கிறார்கள் கவிஞர்கள், இயக்குனர்கள்.

       இசை என்ற ஒரு முழுமையான உணர்வின் சுவையை அம்மா அப்பா சகோதர சகோதரிகளுடன் ஒரே அலைவரிசையில்  அறியும் அந்த ஒருங்கிணைந்த மேலான அனுபவத்திற்கு இளையராஜா  தடுப்பான்கள் அமைத்தார். அவரின்  பல பாடல்களில் இந்தச் சுவர் நம் இசையின்பத்தை கூறு போட்டு அந்த மகத்தான  இசைப் பகிர்வை   தனித்தனித்  தீவுகளாக மாற்றியது. "இதெயெல்லாம் எப்படி வீட்டில சத்தமாக வெச்சுக் கேக்க முடியும்?" என்ற புதிய வகை இசை உண்டானது. "சீ இந்த கருமத்தையா கேக்கிற?" என்று பெரியவர்கள் சிறியவர்கள் மீது சீறி விழுந்த  பாடல்கள் உண்டாயின. இந்தப் பிரிவின் கீழ்  இளையராஜாவின் எண்ணிலடங்காப் பாடல்கள் வரிசை கட்டி நின்றன. அவற்றை நான் இங்கே குறிப்பிட்டால் பதிவின் சாராம்சம் திசை விலகிப் போய்விடும்.  மேலும் அது இப்போது எனது நோக்கமல்ல.

     கடலோர கப்சாக்கள் என்ற தலைப்பில் திரு சேட்டைக்காரன் என்பவர் இந்தப் பாடல்  பற்றி எழுதியிருக்கிறார். கீழ் வருவது அவருடைய எழுத்து.

இந்தப் படத்தில் ‘மதனி மதனி மச்சான் இல்லையா இப்போ வீட்டுலே? கொழுந்தா கொழுந்தா எதுக்குக் கேட்குறே?‘ என உடைபட்ட உறியடிப்பானைபோல இலக்கியரசம் சொட்டிய பாடலும், அதற்குக் கமல் ஆடிய விறுவிறு ஆட்டமும். அதிலும் ‘ஆஹா எனக்கு உங்களைப் பார்த்தா ஏதோ போல ஆச்சு’ என்ற வரிகளுக்கு உலகநாயகன் பிடிக்கிற அபிநயத்தைப் பார்த்துவிட்டு, அப்பாலிக்கா விஸ்வரூபம்கதக் டான்ஸ் பத்திப் பேசுங்கப்பா! இந்தப் பாடல் தமிழ்க் கலாச்சாரத்துக்கே இழுக்கு என்று அனைவரும் அல்சர் வந்தது போல ஆவேசமாகக் கத்தவே, நெல்லை, குமரி மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் மட்டும் ‘மயிலு மயிலு மச்சான் இல்லையா இப்போ வீட்டுலே?என்று பல்வலி, அதாவது பல்லவி மாற்றப்பட்டது.


     அதே சமயத்தில் இதே கடலோரப் பின்னணியில்   சில வருடங்களுக்கு முன் வந்த ஒரு படப்  பாடலை கீழே கொடுத்துள்ளேன்.  எம் ஜி ஆர் நடிப்பில் ஸ்ரீதர் இயக்கிய மீனவ நண்பன் என்ற படத்தின் பாடல் அது. பொதுவாக இந்தப் படத்தில்  தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து, நேரம் பவுர்ணமி நேரம் என்ற இரண்டு பாடல்கள் அதிகம் பிரசித்திபெற்றவை. நான் குறிப்பிடுவது அலைகளின் மீது ஆடிச் செல்லும் படகில் பயணம் செய்யும் தாலாட்டின்  உணர்வை கொடுக்கும் பாடல். இசை என்ற மந்திரத்தின் புரிந்துகொள்ள முடியாத வினோத அழகை மனதில் காட்சியாகக் காணும் ஒரு அற்புதப் பாடல். பொங்கும் கடலோசை தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே கொஞ்சும் தமிழோசை  என்று  வாணியின் குரலில் நம் நெஞ்சத்தை  அருவியின் தண்ணீர்த் துளிகள் போல நனைக்கும் கானம். இந்தப் பாடலின் இசையை ஒரு மகா இசைக் கலைஞனின்  வறண்டு போகாத கற்பனை ஒன்றே படைத்திருக்க முடியும். வேறு யார்? எம் எஸ் விஸ்வநாதன்தான்.  ஜலதரங்கம்  மற்றும் Xylophone வாத்தியங்களைக் கொண்டு எம் எஸ் வி ஒரு கடல் காட்சியை அதன் வனப்பு குறையாமல் இசையாக வடித்திருக்கிறார்  என்று தாராளமாக சொல்லலாம்.  தமிழில் இந்த Xylophone வாத்தியம் அதிகம் இசைக்கப்பட்டதில்லை. தண்ணீர்த் துளிகளின் ஓசைக்கு  இணையாக  இந்த இரண்டு வாத்தியங்களைக் கொண்டு எம் எஸ் வி பாடலில் வரவேண்டிய  சம்பிரதாயமான தபலா தாளக்கட்டை வியப்பான முறையில் சமன் செய்துவிடுகிறார். அதிகம் ஆராவாரம் இல்லாத பாடல். குளிர்ந்த நீர்த்துளிகள் மேனியின் மீது சிதறும் போது நமக்குக் கிடைக்கும் சிலிர்ப்பை  இதன் இசையில் நீங்கள் உணரலாம்.

    எழுபதுகளின் முடிவு மற்றும் எண்பதுகளில் இளையராஜாவின் graph மேல்நோக்கி எகிறிச்  சென்றுகொண்டிருந்தது. வர்த்தக வெற்றியைக் குறிக்கும் இந்தக் கோடு அவருக்கு கிரீடம் அளித்தது.  அவரது ராஜாங்கம் துவங்கியது. ஒரு தலைமுறையை மயக்கும் இசைக்கான  ஆயத்தங்கள் தென்பட ஆரம்பித்தன. இசையின் புதிய அத்தியாயங்கள் எழுதப்பட காத்திருந்தன. எல்லாம் இருந்தும் நமது இசையின் இந்த முக மாற்றம் ஒரு ஆழ்ந்த பெருமூச்சை நம்மிடம் உருவாக்குகிறது.  பழைய புகைப்படங்களை பார்க்கும்போது நமக்குத் தோன்றும் அந்த துயர உணர்வைப் போல. மீண்டும் பெற முடியாத நாம் இழந்துவிட்ட குழந்தைத்தனத்தை விரும்பும் உணர்வின் வலியைப்  போல.

    இளையராஜா மேலேதான் சென்றுகொண்டிருந்தார். ஆனால் கூடவே நமது தமிழிசையின் தரத்தையும் எடுத்துச் செல்ல மறந்துவிட்டாரோ என்று தோன்றுகிறது.
   








அடுத்து : இசை விரும்பிகள் XXVI  - எண்பதுகள்-  கவிதைக் காற்று.