Thursday 9 April 2020

உறைந்த உலகம்.

மூன்றில் ஒரு பகுதி உலகம் இன்றைய கணத்தில் நிர்ப்பந்திக்கப்பட்ட தனிமையில் உறைந்து போயிருக்கிறது. கண்டங்கள், நாடுகள், நகரங்கள், வீதிகள், சாலைகள் எல்லாமே ஒரு புகைப்படம் போன்று அசைவுகளற்ற அமைதியில் அடங்கிப் போயிருக்கின்றன. வழிபாட்டுத் தலங்களும், வணிக வளாகங்களும், உணவரங்குகளும், கேளிக்கை விடுதிகளும், திரையரங்குகளும், முகவரியற்ற இடங்களாக மனிதத் தடம் படாத பகுதிகளாக மாறியிருக்கின்றன.  இயற்கையோ செயற்கையோ, விதியோ சதியோ நம் கண்களுக்குப் புலப்படாத இந்த எதிரியின் பின்னிருக்கும் காரணிகளை ஆராயும் நேரம் இதுவல்ல என்றாலும்  உலகம்  முழுவதும் இறந்து  கொண்டிருக்கும் எளிமையானவர்களின்  மரணத்திற்கு இயற்கையையும்  கடவுளையும்   சுட்டிக் காட்டி விட்டு   இதை  நாம் கடந்து சென்று  விடப் போகிறோமா?  

தற்போதைக்கு தனித் தனி தீவுகளாகவும், யாரையும் தொடாமலும், முகம் பார்த்து பேசாமலும், பிறரிடமிருந்து தள்ளி நின்றும் இருப்பதே பாதுகாப்பானது. ஆனால்  இதுவே ஒரு புதிய வாழ்க்கை முறையாக போதிக்கப் படாமலிருந்தால் மிகவும் நலம்.  


Wednesday 29 January 2020

இரண்டு கோமாளிகள்

பொதுவாக அரசியல் பற்றி விவாதங்கள் எழுந்தால் நான் விலகிச் செல்வதே வழக்கம். ஆனால் இது இணையத்தில் மட்டுமே. நேரில் என் அரசியல் கண்ணோட்டம் மிகவும் அழுத்தமானது. இப்போது நான் அதைப் பற்றி விவாதிக்கவில்லை. 

தற்போது தமிழகத்தில் புதிதாக ஒரு கேலிக்கூத்து வடிவம் பெற்றுவருகிறது. அதன் நாயகர்கள் ஒரு காலத்தில் நாம் ரசித்த, விரும்பிய, பாராட்டிய, புகழ்ந்த  இருவர்கள். ஒருவர் உச்ச நட்சத்திரம், மற்றவர் உலக நாயகன். இணையத்தில் நான் சில நெறிமுறைகளை கடைபிடிப்பதால் இந்த இரண்டு கோமாளிகள் பற்றி தரம் தாழ்ந்து பேச முடியாத நிலையில் இருக்கிறேன். வெளிநாட்டில் ஒளிந்துகொண்டு  மனப்பிறழ்வு நோயில் உழன்று கொண்டிருக்கும் சில பயித்தியங்கள் போல ஆங்கில ஆவேசம் கொண்டு  f ... என்று எல்லோரையும் திட்டுவது போன்று எழுத முடிந்தால் இந்தப் பதிவும் அதே தரத்தில் இருக்கும். எனக்கோ அதில் நாட்டமில்லை. 

கருணாநிதி ஜெயலலிதா என்ற இரண்டு ஆளுமைகள் இருந்தவரை சங்கி மங்கி களாக இருந்த இந்த கோமாளிகள் தற்போது அரசியல் போதை கொண்டு தினம் தினம் எதை எதையோ உளறுவது இவர்களையா நாம் அப்போது பெரிதாக நினைத்தோம் என்று நம்மையே குற்றவாளிகள்  போல  எண்ண வைக்கிறது.

ஆஸ்கார் நாயகன் என்று தன்னையே போற்றிக்கொண்டவர் ஆஸ்கர் விருதின் உண்மை தெரிந்தபின்பு உலக நாயகன் என்று அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தவர்  எனக்கு அரசியல் வராது என்று மேதாவித்தனமாக கதைத்தவர், நடிப்பு மட்டுமே எனது வாழ்க்கை என்று நடித்தவர் இன்றைக்கு மிக மலிவான யூ டர்ன் அடித்து பிக் பாஸ் போன்ற அலங்கார மேடைகளில் உலா வந்தபடி நடிப்பும் அரசியலும் பேசுவதைப் பார்க்கையில் நான் எனது காலணியை யோசிக்கிறேன்.

இந்த மேதாவி ஒரு புறம் இப்படி  நம்மை வதைக்க அடுத்த கோமாளி என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் எதை எதையோ ஆதாரம் என்று சொல்லி தேவையில்லாத பாதைகளில் பயணம் செய்கிறார். ஆன்மிக அரசியல் என்று புதிதாக பேசுவதாக இவர் எண்ணிக்கொண்டாலும்  அரசியலில் ஆன்மிகம் செய்யும் ஆட்களுக்கும் இவருக்கும் நூலிழை கூட வித்தியாசம்  இல்லை.

வரும் நாட்களில் இந்த இரண்டு கோமாளிகளும் இன்னும் அதிகமாக நம்மை வியக்க வைக்கப் போகிறார்கள்.  ரஹ்மானின் ஒரு பாடல் போன்று "என் மீது விழுந்த மழைத் துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?" என்று இவர்களைப் பார்த்து கேட்கத்தோன்றுகிறது.

எதோ ஒரு படத்தில் கவுண்டமணி மற்றவரைப் பார்த்து சொல்வார். "தெரிஞ்சத செய்ங்கடா". சரியான வார்த்தைகள். உச்சத்திற்கும் உலகத்திற்கும் இதை நாம் சமர்ப்பணம் செய்யாலாம் என்று தோன்றுகிறது....





Thursday 23 January 2020

வேடிக்கை இசை ஞானிகள்

திரு சவுந்தர் என்பவரின் இசை பற்றிய பதிவுகளை நான் ஆர்வத்துடன் படிப்பதுண்டு. எனக்கு இப்போது தோன்றுவதெல்லாம் இவர் எதற்க்காக எம் எஸ் வி, கே வி மகாதேவன், சுதர்சனம், லிங்கப்பா, ஜி ராமநாதன் போன்றவர்களைப்  பற்றி  தேவையில்லாமல் எழுதுகிறார் என்பதுதான். திரு சவுந்தர் உங்கள் முகமூடியை கழற்றி விடுங்கள்.  இளையராஜாவை பெரிய இசை சகாப்தம் என்று புகழ எதற்காக இத்தனை நகாசு வேலைகள்? உங்களைப் போன்ற இரா வாசிகள் என்ன எழுதினாலும் இண்றைய இசை வட்டத்தில் உங்கள் இரா இல்லவே இல்லை என்பதே உண்மை. வந்தனம்.