Saturday 19 December 2015

இசை வசை

நூற்றாண்டு மழையை நாம்  கடந்து விட்டோம் என்று தோன்றுகிறது. காலையில் நான் நடந்து சென்றுகொண்டிருந்தபோது  "நீ ஏன்டா நேத்து லீவு போட்ட?" என்று ஒருவர் மற்றொருவரை கடுமையாக விளாசிக்கொண்டிருந்தார். கொஞ்சம் நகர்ந்ததும் இன்னொருவர் போனில், "நீ என்ன பெரிய **** ?" என்று மிக மென்மையாக குசலம் விசாரித்தபடி தென்பட்டார். அடுத்து இருவர் சாலையில் எதிர் எதிராக நின்றபடி ஒரு கைகலப்புக்குத் தயாராகிக்கொண்டிருந்தார்கள். மழை உணர்த்திய மனிதத்தையும், அது கரைத்துவிட்ட பிழைகளையும் நாம் வழக்கம்போலவே மறந்துவிட்டோம். உண்மைதான். சென்னை தன் இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது. 

மக்களின் துயரங்களும் கண்ணீர்த்துளிகளும் வடியும் முன்னே பல செய்திகள் மழையை பின்னுக்குத் தள்ளி நாளிதழ்களின் முதல் பக்கத்தில் வந்து உட்கார்ந்துவிட்டன. அரசியல் வசவுகள், பேரிடர் அறிவிப்புகள், விசாரணை விபரங்கள், இந்த அசாதரணமான கண்ணீர் நிகழ்விலும் ஆதாயம் தேடும் அரசியல் காய் நகர்த்தல்கள் என வரிசையான அபத்தமான அதிரடிகள் தலைப்புச் செய்திகளாக நாம் படிக்கப்படக்  காத்திருக்கின்றன.

இந்த வேளையில்  ஆண் தினவெடுத்த இருவர் பாடல் என்ற பெயரில் எதையோ பேசி, அதற்கு சில வாத்தியங்களை வைத்து இசை என்று ஒரு கருமத்தை அமைத்து பிரசித்தி பெற்ற ஒலியுடன் வெளியிட, அந்த ஒலிப் பாடல் உண்டாக்கிய அலையில் சென்னை வெள்ளமே மூழ்கி விட்டது. நம் தமிழ் இசை இத்தனை தூரம் ஒரு "உயரிய" இடத்திற்கு செல்லும் என்ற எண்ணம் எனக்கு நீண்ட நாட்களாகவே உண்டு. தடை செய்யவேண்டிய கருமாந்திரங்களை நாம் அப்போதே பாரபட்சமில்லாமல் தூர  தூக்கி வீசி எறிந்திருந்தால் இத்தனை ஆவேசத்திற்கு இப்போது அவசியம் ஏற்பட்டிருக்காது.

தடை செய் கைது செய் போன்ற ஆர்ப்பாட்டங்கள் பெண்களால் தற்போது முன்னிறுத்தப்படுவது இதற்குத் தேவையான எதிர்வினையே.   ஆண் திமிர் கொண்ட வசனங்கள் பெரிய பெரிய நடிகர்களால் பேசப்பட்டு, ஆராவாரமான கைத்தட்டல்கள் பெறப்பட்டு, பெண் எப்படி இருக்கவேண்டும் என்ற ஒரு சார்பான சிந்தனையை பொதுவானதாக கட்டமைத்த நமது சினிமா அதன் அடுத்த பரிணாமமாக பாடல்கள் மூலம் பெண்களின் மீது வன்முறை நடத்தியது. இந்த இசை வசை ஏறக்குறைய முப்பது வருட பாரம்பரியம் கொண்டது. இன்று விமர்சனக் கோட்டுக்கு மேலே உட்கார வைக்கப்பட்டிருக்கிற சிலரால் போடப்பட்ட  இந்த ஆபாசத்தின் வித்து புயலில் சிக்கிக்கொண்ட மரம் போன்று தற்போது தலைவிரித்து ஆடுகிறது. எனவே  இந்த இருவர் மட்டுமே குற்றவாளிகள் என்று நம்ப நான் தயாராக இல்லை. அவர்களுக்கு  ஏதுவான இந்தப் "புனிதப் பாதையை" அமைத்துக் கொடுத்த பல "புண்ணியவான்களை" நாம் மறந்துவிட்டு, அவர்களைப் பற்றிப் பேசாமல் இவர்களை  நோக்கி சாட்டையை சுழற்றுவதில் அர்த்தமில்லை.

இந்தப் பாடலை எதிர்த்த பலரில் ஒருவரது கருத்து என்னை கடும் கோபம் கொள்ளச் செய்தது. "இது போன்ற ஆபாசப் பாடல்களை ஆரம்பத்திலேயே தடுக்கவேண்டும்" என ஒரு காராசாரமான கருத்தை அவர் சொல்லியிருந்தார். படித்தபோது எனக்கு வியப்பு வரவில்லை. ஏனென்றால் சிம்பு, அனிரூத் போன்றவர்களுக்கு எந்தவிதமான தண்டனை சரியோ அது அவருக்கும் பொருந்தும். அவர் வேறு யாருமல்ல. இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன்தான் அந்த ஆவேசமான "திடீர் புனிதர்".

பள்ளி நாட்களில் நான் எழுத நினைத்த  ஒரு கதையின் தலைப்பு: "திருடுவது மகா குற்றம் என்றான் கொலைகாரன்."  க அ வின் கருத்தைக் கண்டதும் எனக்கு ஏனோ அந்த தலைப்புதான் நினைவுக்கு வந்தது. கொஞ்சம் எண்பதுகளைத் திரும்பிப் பார்த்தால், அலைகள் ஓய்வதில்லை என்றொரு படத்தை அடையாளம் காணலாம். அதில் வரும் ஒரு பாடல் அப்போது விடலைகளை அதிரடித்தது. அந்தப் பாடலைப் பாடாத உதடுகள் வெகு சிலவே. வாடி எ கப்பக்கிழங்கே என்ற அந்த கருமாந்திரம்  அப்போது போட்ட ஆபாசக் கூத்து இன்டர்நெட், யூ ட்யூப் இல்லாமலே சமூகத்தை அதிர்ச்சியடையவைத்தது. ( பொதுவாக அழகான பெண்களை கிழங்கு மாதிரி இருக்கா என்பார்களாம். கப்பக்கிழங்கு கேரளாவில் பிரசித்தி பெற்றதாம். மேலும் படத்தின் நாயகி ராதா கேரள தயாரிப்பு என்பதால்  வாடி எ கப்பக்கிழங்கே என்று தான் எழுதியதாகவும் இதே க அ பெருமை பொங்க விளக்கம் வேறு அளித்தார்! அதே சமயம் இதே படத்தில் இடம் பெறாத மிக அருமையான புத்தம் புது காலை பொன்னிற வேளை என்ற பாடலையும் இவர்தான் எழுதினார்.)

தமிழ் சினிமாவில் பெண்கள் மீதான வார்த்தை வன்முறை காலம் காலமாக எந்தவித எதிர்ப்புகளையும் சந்திக்காமல் திடமாக வளர்ந்துவந்தது. 70கள் வரை மரபு என்ற சொல்லுக்குள் புகுந்துகொண்டு திரைப்படத் துறையினர் பெண்களை ஆண்களுக்கான மற்றொரு உப பொருளாக மூளைச் சலவை செய்துவந்தார்கள். ஆணை எதிர்த்துப் பேசுவது, வேலைக்குச் செல்வது, ஆணை விட அதிகம் சம்பளம் வாங்குவது, அவன் காலை காலை வேளையில் தொட்டுக் கும்பிட்டாமல் இருப்பது போன்ற அம்சங்கள் ஒரு குடும்பப் பெண் தவிர்க்கவேண்டிய குணாதிசியங்களாக ஒரு அரைவேக்காட்டுச் சிந்தனை கட்டமைக்கப்பட்டது. இரண்டு திருமணம் செய்வதே ஒரு பெண்ணின் "கற்பு" சார்ந்த விஷயமாக பார்க்கப்பட்டது. அப்படி எட்டாவது அதிசயமாக அவள் இரண்டாம் திருமணம் செய்துகொண்டாலோ அவள் தன் முதல் கணவனுடன் உடல் ரீதியாக எந்தவித தொடர்பும் கொண்டிராதவளாக இருக்கவேண்டிய நிர்பந்தமும் அந்தப் பெண்ணின் மீது திணிக்கப்பட்டிருந்தது. 2000த்தில் கூட இந்த மக்கிப்போன எண்ணம் மாறவில்லை. ரிதம் என்ற படத்தில் திருமணமான அன்றே தன் புது  மனைவியை  தொடக்கூட நேரமில்லாமல் கணவன் அவரச வேலையாக அவளை  விட்டுப் பிரிந்து செல்லும் சமயத்தில் விபத்தில் சிக்கி உயிர் இழப்பதாக திரைக்கதை அபாரமாக பின்னப்பட்டிருக்கும். என்ன ஒரு புனிதமான கற்பனை நமது திரைத்துறையினருக்கு! ஆனால் தினவெடுத்த ஆணோ ஆயிரம் திருமணங்கள் செய்வதை கண்டு  மக்கள் அட்சதை போடாத குறையாக களி கூர்ந்து பரவசமடைந்தார்கள். ஆனால் பெண் என்றால் ஒரே முறைதான். கல்யாணம் மட்டுமல்ல. காதலும்தான். இரண்டாம் காதல் கூட  ஒரு பெண்ணுக்கு திரையில் அனுமதிக்கப்படவில்லை. இந்த புழுத்துப் போன ஆண் வர்கத்து அகம்பாவம் பெண்ணை தனக்கு விருப்பம்போல வரையறுத்தது மட்டுமில்லாது பெண்களையே அதுதான் உண்மை என நம்பவும் வைத்துவிட்டதுதான் கொடுமை.

இதன் நீட்சியாக வெளிப்பட்டதுதான் இசை வசை. பெண் பற்றிய ஒரு கருத்தியல் அடிமைத்தனம் கட்டமைக்கப்பட்டவுடன் அடுத்த கட்டத்திற்கு தமிழ்த்திரை நகர்ந்தது.   60களிலும் 70களிலும் கொஞ்சம் கவிதை கலந்த இச்சையுடன் சீண்டிய ஆண், எண்பதுகளில் கோவில் காளை போல அடங்காது அடாவடியாக பெண்ணை தன் பாடல்களால் இம்சித்தான். ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும், நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது என்றெல்லாம் பெண்ணை பகடி செய்தவன், பாரதிராஜா வகையறாக்களின் வருகைக்குப் பிறகு வாடி என் கப்பக்கிழங்கே என்று துணிந்து அவளது முந்தானையை பிடித்து இழுத்தான். மைனா மைனா மாமா புடிச்ச மைனா என்று நாலந்திரமாக சீண்டினான். வாட வாட்டுது என்று பாலியல் தொந்தரவு செய்தான். பொன்மேனி உருகுதே என்று பெண்ணை வெறும் போகத்துக்காக ஆயத்தம் செய்தான்.

இதன் உச்சமாக நிலா காயுது பாடலில் அவனும் அவளும் சேர்ந்து அடித்த கூத்து மிக மிக ஆபாசமான, அருவருப்பானது. அத்தனை அருவருப்பான பாடல் தமிழில் அதுவரை வந்ததில்லை. இனிமேலும் வரப்போவதில்லை. அந்தப் பாடலுடன் தற்போதைய பிரச்சினைக்குரிய ஒலிப் பாடலை ஒப்பிட்டால் யார் அதிகமாக நம் சமூகத்தை அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள் என்று புரியும். தடை செய்திருக்கப் படவேண்டிய பாடலாகிய நிலா காயுது வை அப்போது தமிழர்கள் ரசித்தது இன்றைய தினத்தில் மிகவும் வெட்கப்படவேண்டிய ஒன்று. இதைத்தான் இணையத்தில் ஒரு  பதிவர் நாம் நிலா காயுது பாடலையே ரசித்தோம் என்று நக்கலாக குறிப்பிட்டிருந்தார்.


பாரதிராஜாவின் வருகை ஒரு திருப்பத்தை தமிழ்த் திரையில் கொண்டுவந்தது என்று பொதுவாக சொல்லப்படுவதுண்டு. ஆனால் அவரோடு வந்த மாற்றம் தமிழ்த் திரை மற்றும் திரையிசையை சீரழிக்க பெரிதும் துணைபோனது பற்றி யாரும் பேசுவது கிடையாது. இந்த பாரதிராஜா- இளையராஜா வகையறாக்கள் வந்த பின்னர்தான் நம் இசை இத்தனை தூரம் கேடு கெட்டு நாற்றமடிக்க ஆரம்பித்தது. முதலாமவர் தன் முதல் படத்திலேயே கதாநாயகியை தண்ணீரில் உடை நனையாமல் ஒரு நதியை கடக்க வைத்து ஆண் வர்க்கத்துக்கே  சேவை செய்தார். பதினாறு வயதினிலே அப்படி வெறியாட்டம் போட்டதற்கு பாரதிராஜா விஷம் போல கொஞ்சமாக  செலுத்தியிருந்த பாலியல் காட்சிகளுக்கும் பங்குண்டு.  அதன் பின் சிகப்பு ரோஜாக்கள் என்று பெண்களை கொலை செய்வதை பெருமிதத்துடன் காட்சிபடுத்தினார். அதில் வரும் ஒரு வசனம் மிகப் புகழ் பெற்றது. அது பெண்களை எத்தனை தூரம் மனதளவில் காயப்படுத்தியிருக்கும் என்ற சிந்தனையே இல்லாமல் நான் உட்பட சிறுவர்கள், இளைஞர்கள் எல்லோரும் உரக்க பகிர்ந்து கொண்டதை நினைத்தால் இப்போது வலிக்கிறது. அந்த வசனம் இதுதான்;"இந்த பொம்பளங்களே இப்படித்தான். குத்துங்க எஜமான் குத்துங்க. நல்லா குத்துங்க". (திருமணம் ஆகாத நாதாரிகள் இப்படி எழுதினால் போடா என்று விட்டு விடலாம். ஆனால் பெண் மூலம் கிடைக்கும் அனைத்து சுக போகங்களையும் அனுபவித்துவிட்டு பணத்துக்காக அவளை இந்த அளவுக்கு காலில் போட்டு மிதிக்கும் ஆண் மனப்பான்மையை மன்னிக்கவே முடியாது.) இது பாரதிராஜா தமிழ் சமூகத்துக்கு அளித்த இரண்டாவது கொடை.

நிழல்கள் என்ற சகித்துக்கொள்ளக்கூடிய படம் எடுத்து கையை சுட்டுக்கொண்ட பிறகு சிலிர்த்துக்கொண்டு அவர் கொடுத்த அடுத்த ஆபாசம்தான் அலைகள் ஓய்வதில்லை. இன்றைக்கு நம் திரையில் பள்ளிச் சிறுவர்கள் சிறுமிகள் காதல் செய்வது  அந்தப் படத்தின் நீட்சியே.  காதல் ஒரு புனிதம் என்ற புரட்டை கடை விரித்து பள்ளிக்கூடப் பருவத்தில் காதல் செய்வது காதலின் மகத்துவம் என்ற புதிய "புரட்சியை" அலைகள் ஓய்வதில்லை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்தது.

தற்போதைய ஒலிப்பாடல் கூட ஒரு மோசமான கெட்ட வார்த்தையையோடு முடிந்துவிடக் கூடியது. அதை நீக்கிவிட்டால் அது மற்றொரு காதல் தோல்விப் பாடல்தான். ஆனால் வாடி எ கப்பக்கிழங்கே போன்ற இளையராஜா அமைத்த பல பாடல்கள் முழுவதும் ஆபாசத்தில் முக்கி எடுக்கப்பட்ட கடைந்தெடுத்த கருமாந்திரங்கள். பள்ளிச் சிறுவர்கள் பெண்களை குரூரமான வக்கிரத்தோடு இழிவு செய்ய ஏதுவான பாடல்கள் பலவற்றை  அவர் வெகு அலட்சியமாக அமைத்ததோடு மட்டுமில்லாது அந்த ஆபாச பாணியை தன் புதிய இசை வடிவமாக சுவீகரித்துக்கொண்டார். ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா பாடல் வந்த புதிதில் சில இடங்களில் பெரு உஷ்ணத்தை சந்தித்தது.அதே போலவே கடல் மீன்கள் படத்தின் மதனி மதனி மச்சான் இல்லயா இப்ப வீட்டுல பாடலும் சர்ச்சைகளில் சிக்கி தன் பல்லவியை மயிலு குமரா என்று மாற்றிக்கொண்டது.

இணையத்தில் ஒரு இராவாசி சின்ன வீடு படத்தில் வரும் ஒரு கண்றாவிப்பாடலை (பாக்கியராஜ் என்ற பாரதிராஜாவின் அடுத்த உருவாக்கம் இதில் பெண்களை நான்குவிதமாக பகுத்து அதை வைத்து கேவலமாக ஒரு பாட்டு வேறு பாடுவார்!) குறித்து சிலாகித்து (வழக்கம் போல முதல் சரணத்தில் இரண்டரை செகண்டுக்கு வரும் புல்லாங்குழல் ...வகை சிலாகிப்பு) எழுத ஒரு பெண் பதிவர் வெகு அலட்சியமாக "நாங்களெல்லாம் இது போன்ற பாடல்களை கேட்பதேயில்லை. முதல் வரியைக் கேட்டதுமே கடந்து போய்விடுவோம்" என்று சொல்லியிருந்தார். அப்படியானால் இளையராஜாவின் நிறைய பாடல்களை நம் பெண்கள் இது போலத்தான்  கடந்து சென்றிருப்பார்கள் என்று தோன்றுகிறது.  ஏனென்றால் வீட்டுக்குள் நிலா காயுது, நேத்து ராத்திரி யம்மா, பொன்மேனி உருகுதே, போன்ற பல பாடல்களை அம்மா அப்பா சகோதர சகோதரிகள் சகிதமாக கேட்பதற்கு இளையராஜா ரசிகர்களே விரும்பமாட்டார்கள்.

எங்கே நிம்மதி என்ற புதிய பறவை படப் பாடலில் கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே என்ற ஒரு வரி என்னை கேட்ட முதல் நொடியிலேயே அதிர்சிக்குள்ளாக்கியது. என்ன ஒரு அராஜக மனப்பான்மை! ஆணாக இருப்பதாலேயே தமிழ் சினிமா அவனுக்கு பெண்களை இழிவுபடுத்தும் எல்லா சுதந்திரங்களையும் கொடுத்துவிடுகிறது என்ற எண்ணமே என்னை திடுக்கிடவைத்தது.

கண்ணதாசன் சற்று கவிதை நயத்துடன் குறியீடாக உணர்த்திய ஆணாதிக்க அகம்பாவத்தை வாலி வைரமுத்து போன்றவர்கள் வெளிப்படையாகவே கவிதையாக வடித்தார்கள். எப்படி எப்படி சமஞ்சது எப்படி? பொத்தி வச்ச மல்லிக மொட்டு போன்ற பாடல்கள் பெண்களை இழிவு செய்த பாடல்கள் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்கமுடியாது.

பெண்களை பாடல்கள் மூலம் வன்முறை செய்யும் இசையை தமிழில் வெற்றிகரமாக அறிமுகம் செய்தவர் இளையராஜா. வாங்கோன்னா வில் விதைத்த இந்த விஷ வித்து பின்னர் ஆபாச மரமாக வளர்ந்து கிளை விட்டது மறுக்க இயலாத உண்மை. இதை நான் துணிந்து வெளிப்படையாகவே சொல்கிறேன். சொல்ல நினைப்பவர்கள் சற்று தயங்குகிறார்கள். அதுவே வித்தியாசம்.

இளையராஜா ஆரம்பித்துவைத்த இந்த இசைச் சீரழிவை எண்பதுகளில் யாரும் மிகத் தீவிரமாக எதிர்க்காததால் (தன் தலையைச் சுற்றி தானே ஒரு ஒளிவட்டம் போட்டுக்கொண்டதால்) தெருக்களில் சிதறும் ஆபாச வார்த்தைகள் தமிழ்ப் பாடல்களுக்குள் எந்தவித சிரமமுமின்றி புகுந்துகொண்டன. நல்ல கவிதை இலக்கியத்தரமான வார்த்தைகள் என்ற பேதமெல்லாம் இளையராஜாவின் இசைக்கு ஒரு பொருட்டே அல்ல. வெறும் பத்து வார்த்தைகளைக் கொண்டே எந்தவித கவிதை அனுபவமும் தராத சக்கைகளை அவர் தயாரித்து வெளியிட்டுக்கொண்டேயிருந்தார். தமிழிசையின் தரம் அதி வேகமாக படு பாதாளத்திற்கு சென்றுகொண்டே இருந்தது. பெண்களை வக்கிரமாக சீண்டும் இசை இளையராஜாவின் தவிர்க்க முடியாத இசை வடிவமாக  நிலைபெற்றது.

இளம் பெண்கள் என்றில்லை குடும்பத்து பெண்களைக் கூட இவரது இசை விட்டுவைக்கவில்லை. இசைக் குயில் சுசீலாவை வாங்கோன்னா என்று கண்ணியமில்லாமல் பாடவைத்து அவர் மீது இருந்த வஞ்சத்தை தீர்த்துக்கொண்டார். சுசீலா அப்படி பாடியது அப்போது பலரின் புருவத்தை உயர்த்தியது. ஜானகி பற்றி கேட்கவே வேண்டாம். அவரை மிமிக்ரி பாடகியாகவும் , கட்டில் பாடகியாகவும் அவருக்கு அபாரமாக புதிய அரிதாரம் பூசினார். ஜானகி இவரது இசையில் பாடிய "அந்த ஓசை" கொண்ட பாடல்கள் எண்பதுகளின் மத்தியில் அனேகமாக அனைத்துப் படங்களிலும் இடம்பெற தவறியதேயில்லை. அதையெல்லாம்  வீட்டிற்க்குத் தெரியாமலோ, தெரு டீக்கடைகளிலோ, வாக் மேன்  வசதியோடோதான் கேட்கவேண்டும்.  வீட்டில் தப்பித் தவறி கேட்டாலோ செருப்படிதான் கிடைக்கும்.

 வெள்ள நிவாரண நிகழ்ச்சிக்காக இளையராஜா சென்றிருந்தபோது தற்போதைய ஒலிப் பாடல் குறித்து ஒரு நிருபர் அவரின் கருத்தைக் கேட்க இளையராஜா தன் ட்ரேட்மார்க் ஆணவத்துடன் "ஒனக்கு அறிவிருக்கா?" என்று நிருபரை விலாச, பொது இடங்களில் எப்படி பேசவேண்டும் என்ற சபை நாகரிகம் அறியாத இந்த மனிதரைக் குறித்து பலர்  வெடித்து எழுதியிருப்பதை படித்து ஆச்சர்யப்பட்டேன். இளையராஜா என்ற தனக்குத் தானே ஒளி வட்டம் போட்டுக்கொண்ட இந்த அகம்பாவத்தின் ஊற்றை நாம் மிகையாகப் புகழ்ந்துகொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் இப்போதும் நமக்கு வராவிட்டால் சிம்பு, அனிரூத் வகையறாக்களை குறை சொல்வதில் பயனில்லை.

கீழே இருப்பது சுரேஷ்  கண்ணன் என்ற பதிவர் தனது  ஃபேஸ் புக்கில் எழுதியிருப்பது. நான் எனது பதிவுகளில் இளையராஜாவை காட்டமாக விமர்சிப்பதாக வரிந்து கட்டிக்கொண்டு முஷ்டியை மடக்கும் இராவசிகள் இதைப் படிக்கவும். இதுதான் நல்லிசை நாடும் இசை விரும்பிகளின் ஆதங்கம் கருத்து எல்லாமே.

ஆயிரம் முக்கல் முனகல்களுடன் பல அருவருப்பான பாடல்களை தம்முடைய தொழிலுக்காக செய்திருக்கும் ஓர் இசையமைப்பாளர் தன்னை ஒரு சுத்த ஒழுக்கமானவனாக உருவகித்துக்கொண்டு சீ சீ என்று அருவருப்பு காட்டும் அந்த போலித்தனம்தான் அருவருப்பூட்டுகிறது.

இதை மேலும் படிக்க கீழ் கண்ட தொடர்புகள்  உதவும்.

http://avargal-unmaigal.blogspot.com/2015/12/ilayaraja-answering-beep-song.html

http://anbanavargal.blogspot.in/2015/12/blog-post_19.html


இத்தனை அருவருப்பான சாக்கடைப் பாடல்களை அமைத்தவரிடம் போய் அவருடைய கோடிட்டிற்கு கீழே உள்ள ஒரு ஆபாச பாடலைப் பற்றிக் கேட்டால் அவரால் என்ன பதில் சொல்ல முடியும்? அதனால்தான் தன் மீது எந்த வித குற்றச்சாட்டும் விழாதவகையில் அவர் கோபம் ஆணவம் என்ற போர்வை கொண்டு தன்னை பாதுகாத்துக்கொண்டார் என்று தோன்றுகிறது. வழக்கம் போலவே இராவாசிகள் இதை அந்த நிருபருக்கு என்ன திமிர் என்று விமர்சனம் செய்கிறார்கள். பாவம் இப்படியெல்லாம் அபத்தமான போலி கேடயங்கள் அவர்களுக்குத் தேவைப்படுகிறது குறித்து பரிதாபம்தான் ஏற்படுகிறது.

இளையராஜா ஆரம்பித்த இந்த இசைச் சீரழிவே இன்றைய என்ன ***** லவ் பண்றோம் நிலைக்கு வந்திருக்கிறது. இன்றைய அறிவியல் விரைவு யூ டியூப் என எண்பதுகளில் சாத்தியப்பட்டிருந்தால் இளையராஜாவுக்கும் சிம்பு அனிரூத் கதிதான் ஏற்பட்டிருக்கும்.  கொஞ்சம் பிழைத்துகொண்டார்.  இந்த ஆபாசம் பற்றி பேச கங்கை அமரனுக்கோ, இளையராஜாவுக்கோ பாரதிராஜாவுக்கோ, வைரமுத்துவுக்கோ  கொஞ்சமும் அருகதை கிடையாது. சிம்பு மற்றும் அனிரூத் இருவரும் இந்த ஆபாச இசைச் சாக்கடையின் மற்றொரு துளி. அவர்களை மட்டுமே  தண்டனைக்கு உட்படுத்துவதில் நாம் ஒரு நல்ல இசை பாரம்பரியத்தை காப்பாற்றிவிட்டதாக வீண் கற்பனை செய்துகொள்ளவேண்டாம். அவர்கள் இந்த அசிங்கமான பாரம்பரியத்தை வளர்த்துவரும் கிளைகள்.  நான் வேர்களை குறித்துப் பேசுகிறேன். நம் இசையின் இன்றைய சீழ்  பிடித்த அருவருப்பின் ஆணிவேர் இளையராஜா.

என் கருத்துடன்  ஒன்றிக்க முடியாதவர்கள்  நிலா காயுது பாடலை தங்கள் வீட்டு வரவேற்பறையில் அம்மா மனைவி மகள் சகிதமாக உட்கார்ந்து கேட்கக்கூடிய அராஜக தைரியம் கொண்டவர்களாகத்தான் இருக்கமுடியும்.

என்னை எதிர்ப்பதற்கு முன் அந்த அசிங்கத்தையும் செய்துவிட்டு வாருங்கள்- மனசாட்சி என்று ஒன்று உங்களுக்கிருந்தால்.




Saturday 21 November 2015

இசை விரும்பிகள் XX VIII - எம் எஸ் வி : தீரா இசை.

                           




                       உணர்வு நரம்புகளை உரசும் உறவுமுறைகளின் உயிர்ப்பிசை                                    என்றன்றைக்கும் ரசிக்கும் ஒரு மழலையின் சிரிப்பலை 
                              இரவு வானில் ஒளிரும்  ஒற்றை நட்சத்திரப் பிரகாசம்  
                                இதயத்தை இனிமையாக  இதமூட்டும்  ஆலய ஒலி                                                        ரத்தத்தில் ஒன்றாகக்  கலந்த  கொள்கை கீதம்  
                                       காற்றில் மிதக்கும் சாயம் போகா சங்கீதம்     
                                         பெரு மழையிலும் கரையாத வானவில் 
                                            கவிதைகள் நெய்த இசைக்காவியம் 
                                                 மனதை தைக்கும் நெருப்பு ஊசி   
                                                   கசிந்துருகும் துயரத்தின் வலி
                                                       வண்ணம் வற்றா  தூரிகை  
                                                         கண்ணியக் காதல்சுவை        
                                                           மொழியின் கண்ணாடி 
                                                              இடைவிடா இன்பம் 
                                                               இரவா இசையூற்று
                                                                   ஜீவத்  தென்றல்  
                                                                         சுடும் பனி 
                                                                              
          
                                 

   
  



    அலைகள் போல நம் மீது மோதும் வாழ்வின் வசந்தங்களும், வருத்தங்களும் நம் மனதில் ஆழத்தில் நினைவலைகளாக படிந்து மிச்சமிருக்க, அவற்றை சில நேரங்களில் ஒரு பாடல் எந்தவித முன் தயாரிப்புமின்றி ஒரே நொடியில் சட்டென  உயிர்ப்பித்துவிடுகிறது. இசைக்கு மட்டுமே உள்ள இந்த அபூர்வ மாயத்  தொடுகை சிந்தனைகளைத் தாண்டிய ஒரு கடவுள்தனம் கொண்டது. உறங்காத நினைவுகளின்  இருப்பை அவ்வப்போது உறுதி செய்யும் இந்த இசை ஒரு நெருப்புத்துளி. ஒரு பொறி போதும். நினைவுகள் காட்டுத்தீ போல பரவி  நம் நெஞ்சத்தை எரித்துவிடும். எத்தனை ஆனந்தங்கள், களிப்புகள், ஏகாந்தங்கள் , குதூகலங்கள், துயரங்கள், சோகங்கள், வலிகள், ஏமாற்றங்கள் இந்த இசைக்குள் விடுபடக் காத்திருக்கின்றன?

   எழுபதுகளில் எங்கள்  வீட்டில் தினந்தோறும் என் சகோதரிகளுக்கும் எங்களுக்கும் (என் அண்ணன் உட்பட) ஒரு இசைப் போர் நடக்கும். வானொலியில் நான் கேட்கும் பாடல்களை அவர்கள் ஒரு சொட்டு கூட மருந்து போல உள்வாங்கிக் கொண்டதில்லை.  "இதெல்லாம் என்ன பாட்டு?" என்ற விமர்சனம் எப்போதும் அப்போதைய புதிய பாடல்கள் மீது அவர்கள் வைத்த முத்திரைக் குற்றச்சாட்டு. "சம்பந்தமில்லாத இசை. பாடல் ஒரு பக்கம். இசை இன்னொரு பக்கம்." என்று நான் லயித்துக் கேட்ட பாடல்கள் மீது கருணையில்லாமல்  அவர்கள் ஆயிரம் லிட்டர் பெட்ரோல்  ஊற்றுவார்கள். அதை கேட்கும் எனக்குத்தான் பற்றிக்கொண்டு எரியும். பழைய பாடல்கள் மீது அவர்களுக்கிருந்த இந்த ஈர்ப்பு என்னை மேன்மேலும் அவைகளை விட்டு  விலகிச் செல்ல வைத்தது. "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாடலில் ஒரு குதிரை ஓசை வரும் பார்." என்பார்கள். "நீ கேட்கும் பாடலில் கழுதைதான் கத்துகிறது" என்ற பின்குறிப்பு கட்டாயம் உண்டு. கேட்கவே தேவையில்லை. "சித்திரை மாதம் பவுர்ணமி நேரம் பாடல் கேட்க எத்தனை நன்றாக  இருக்கும் தெரியுமா?" என்று என்னால் நினைவு படுத்திக்கொள்ள முடியாத ஒரு பாடலைக்  குறிப்பிட்டு ஏற்கனவே எரியும் எனது நெருப்பில் இன்னொரு குவளை கெரஸின் கொட்டுவார்கள்.  நானோ என்னடி மீனாட்சி  என்றிருப்பேன்.  கடந்து போன பாடல்களை  திரும்பிப் பார்க்க விருப்பம் கொள்ளாத பருவத்தில் இது ஒரு நடக்கவேண்டிய அபத்தம். இப்போதுதான் அது தெரிகிறது.  இந்த விபத்து எல்லோருக்கும் நேர்வதே.

    பழைய பாடல்கள் என்ற இரண்டு வார்த்தைகளுக்குள்ளே சிறைபட்டுப்போன கனவுலக  இசை அனுபவங்கள் என்னைத் தீண்டியது எப்போது என்று  ஒரு குறிப்பிட்ட நாளையோ பொழுதையோ என்னால் தீர்க்கமாக சொல்லவே முடியாது.  பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயங்களில் என் நண்பர்களில் சிலர் இவ்வகையான பழைய பாடல்களைக் குறித்து சிலாகித்துப் பேசுவதை நான் கேலியுடன் உள்வாங்கியிருக்கிறேன். நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், போனால் போகட்டும் போடா, சட்டி சுட்டதடா என்று என் பள்ளி நண்பர்கள் தத்துவமாக பாடும்போது என் தலை அசையும். நல்ல பாடல்கள்தான்...ஆனாலும் புதிய பாடல்கள் போல இல்லையே  என்ற அவ்வயதுக்குரிய முதிர்ச்சியற்ற எண்ணம் என் உள்ளத்தில் உருவாகும். உண்மையில் எனது சிறு வயது நாட்களில் என் உணர்வுகளுக்கு உணவளித்தது  இந்தப்  பழைய இசையே. இவற்றில் எந்தப் பாடல் என்னை முதலில் கவர்ந்தது என்ற தகவல் என் நினைவடுக்குகளில் தேடியும் கிடைக்கவில்லை. அது அப்படித்தான். ஒரு வானவில் தோன்றும் அந்த ஆச்சர்யமான கணத்தை யாரால் படம் பிடிக்கமுடியும்? இருந்தும் ஆரம்பத்தில் நான் கேட்டு வளர்ந்த இசை ஆலயமான  எம் எஸ் வி என்ற மகத்தான இசைஞரின் பாடல்களைவிட்டு இடையில் வெகு தொலைவு வந்து விட்டபின்னர் மீண்டும் ஏற்கனவே நான் பயணப்பட்ட சாலையைத் தெரிந்துகொண்டது  பற்றி ஆராயத் தோன்றுகிறது.   In  a  way, it's  an  introspection ----- with regret.

     இது எம் எஸ் வியின் இசை ஆளுமை மற்றும் மேதமையை குறித்துப் பேசும் ஒரு இசை விமர்சனக் கட்டுரை இல்லை. அவர் இசையமைத்த படங்களை விவரிக்கும் ஒரு chronology ரகக் கட்டுரையும் அல்ல. அவரை உயர்த்திப் பிடிக்கும் நோக்கத்தில் தனிமனிதத்  துதியாக எழுதப்படுவதும் அல்ல. பரவலாக பல தரப்பட்ட பாடல்களை விரும்பிக் கேட்கும் என்னை "தமிழில் உனக்குப் பிடித்த இசையமைப்பாளர் யார்?" என யாராவது கேட்டால்  ஒரு நொடி கூட தாமதிக்காமல் ஒரு அனிச்சை செயல் போல "எம்.எஸ்.வி." என்று சொல்லும் காரணத்தை விளக்கும் என் ஆத்மார்த்த எழுத்து.  அவ்வளவே.

     "அதோ  அந்த பறவை போல வாழவேண்டும். இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்"   பள்ளிப் பருவத்தில் பழைய பாடல்கள் என்று காதில் என் விழுந்தாலே எனக்குத் தோன்றும் பல பாடல்களில் ஒன்று  இது . இன்னும் கொஞ்சம் என் மூளையில் தேடிப்பார்த்தால் காட்டுக்குள்ளே திருவிழா, வந்த நாள் முதல் இந்த நாள் வரை போன்ற பல பாடல்களை எடுக்கலாம். இருந்தும் அதோ அந்த பறவை ஒரு தனிச் சிறப்பானதுதான். சுதந்திரம் பற்றிய சிந்தனை, மனதில் நிழலாடும் ஹம்மிங், துளிர்ப்பான இசை, நெஞ்சத்தில் ஒட்டிக்கொள்ளும் மெட்டு என எனக்குள் பொங்கி எழுந்தது.

  கொஞ்சம் கொஞ்சமாக பின்னே நகர்ந்து சென்றால், நான்  காலம் தெளிவில்லாத எதோ ஒரு நேரத்தில்  கேட்ட அல்லது அடிக்கடிக் கேட்ட ஒரு பழைய பாடல்  எம் எஸ் வி என்ற இசை ஆளுமையின் போக்கில் என்னை திசை திருப்புவதை உணர்கிறேன். அது நம் உறவு முறையை உன்னதப்படுத்தும் உணர்வின் இசை. அத்தையடி மெத்தையடி ஆடி விளையாடம்மா. ஆடும் வரை ஆடி விட்டு அல்லி  விழி மூடம்மா என்ற தாலாட்டுப் பாடல் எனக்குள் துயரம் தோய்ந்த இனிமைகளை  புதிது புதிதாக உருவாக்கும் ஒவ்வொரு முறை கேட்கும்போதும். சுசீலாவின் குரல் மனதுக்கு நெருக்கமாக  நமது குடும்ப உறுப்பினர் ஒருவரின்  அன்னியோன்ய அரவணைப்பு போல  ஆன்மாவை ஆழமாக ஊடுருவிச் சென்று ஒரு முத்தம் கொடுக்கும். அந்தப் பாடல் எனக்குள் ஏற்படுத்தும் காட்சிகளை விவரிப்பது சற்று இயலாத காரியம்.  இதே அனுபவம் உங்களுக்கும் எதோ ஒரு பாடலில் ஏற்பட்டிருக்கலாம். கனவுகளை விதைக்கும் அந்த இசையை மனதுக்குள் பூட்டிவைத்து அழகு பார்ப்பதே சில சமயங்களில் அழகுதான்.

       எப்போது முதல் முறை என்று தெரியவில்லை. ஆனால் நூறு தடவைகளுக்கு மேலே சிறிய வயதில் கேட்ட அந்தப் பாடல் எப்போதும் கொஞ்சம் தென்றல், கொஞ்சம் பனிச் சாரல், கொஞ்சம் சோகக் காற்று, கொஞ்சம் கூரான கத்தி தரும்  வலி என்று பலவித உணர்ச்சிகளை ஒரு சேர செலுத்திவிட்டுப் போகும். என்னைப் பொருத்தவரை தமிழில் வந்த மிகச் சிறந்த பாடல்கள் என  நீங்கள் நூறு, ஐம்பது இருபது, பத்து ஏன் ஐந்து என்று பட்டியல் போட்டால்கூட கண்டிப்பாக இடம்பெறும் பாடல். இன்னும் நெருக்கி  மூன்று என்று அந்தப் பட்டியலை நீங்கள் சுருக்கினாலும் இந்தப் பாடல் அங்கே இருக்கும். இதற்கு மேலும் நான் இந்தப் பட்டியல்  குறித்துப் பேசினால்  தமிழின் மிகச் சிறந்த பாடல் இதுதான் என்று நான் உணர்த்துவதாக  நீங்கள் புரிந்துகொள்வீர்கள். அது எப்படி என்று பார்ப்போம். அதற்கு முன் கொஞ்சம் விஞ்ஞானத்தை தொட்டுக்கொள்வோம்.

      1979 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நாசா ஒரு  விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. அதன் பெயர் வாயேஜர்.  இந்த வாயேஜர் மற்ற நாசா விண்கலங்கள் போல ஒரு குறிப்பிட்ட பால்வெளிக் கோளத்தை அறியும் இன்னொரு ராக்கெட் கிடையாது. நிலவையோ சூரியனையோ ஆராயும் சந்திராயன் அல்லது இந்திராயன் போன்ற டிபிக்கல் ராக்கெட் இல்லை இது. இதன் நோக்கம் முற்றிலும் மாறுபட்டது. பூமி என்ற நமது உலகத்தின் முழுமையான வரலாற்றை பிற உயிரினங்கள் ---அறிவியல் மொழியில் வேற்றுகிரகவாசிகள் --- அறிந்துகொள்ளும் வகையில் இந்த வாயேஜர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நாசா இந்த விண்கலத்தில் கோல்டன் டிஸ்க் என்றழைக்கப்படும் பெரிய இசைத் தட்டை , குறிப்பாக இரண்டு இசைத்தட்டுக்கள், இதில் பொருத்தி அனுப்பியுள்ளது. இந்த இசைத் தட்டுக்கள் நமது பூமியின் மில்லியன் வருட வரலாற்றை இசைத் துணுக்குக்களாகவும், காண்கிற காட்சியாகவும் பதிவு செய்யப்பட்ட தகவல்களைக்  கொண்டவை.

   கார்ல் சாகன், ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற அஸ்ட்ரோ பிசிசிஸ்ட்ஸ் திடமாக நம்பும் வேற்றுகிரகவாசிகள் இந்த பிரபஞ்சத்தில் எங்காவது இருப்பின் அவர்கள் இந்த விண்கலத்தை அடையாளம் கண்டுகொண்டு அதன் தங்கத் தட்டை தங்களின் அறிவின் மூலம்  புரிந்துகொள்ளக்கூடிய வகையில்  அந்த கோல்டன் டிஸ்க்ஸ்  பல தகவல்களை டாட்ஸ் மற்றும் லைன்ஸ் எனப்படும் டிஜிடல்  செய்திகளாக தனக்குள்  அடக்கியவை. ஒவ்வொரு சமூகத்தின் பண்பாட்டு விழுமியங்களும்  இவற்றில் உண்டு. ஏறக்குறைய உலகின் அனைத்து மொழிகளிலும்  ஒரு வார்த்தையும் , பலவிதமான பண்பாட்டுக் கூறுகளை  விளக்கும் சிறிய காட்சிகளும்  , அது தொடர்பான  இசை வடிவங்களும்   கொண்ட இந்த தங்கத்தட்டில் நமது தமிழ் சமூகத்தின் அடையாளமாக என்ன இருக்கிறது என்பது குறித்து தெரியவில்லை. வேண்டுமானால் வணக்கம் அல்லது தமிழ் என்ற சொற்கள் இருக்கலாம். அல்லது இல்லாமலும் இருக்கலாம். இப்போது அதுவல்ல பிரச்சினை.

    ஆனால் தமிழ் இனத்தின் குறியீடாக ஒரு இசைத் துணுக்கை இதில் பொருத்த வேண்டுமானால் அந்த இசைத் துணுக்கு எதுவாக இருக்கும் என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு.  ஒரு நண்பரிடம் இது குறித்து விவாதித்துக்கொண்டிருந்தபோது  அவர் "அச்சம் என்பது மடமையடா பாடலை சேர்க்கலாம்" என்று கூறினார். தமிழ் இன அடையாளமாக இந்தப் பாடல் சேர்க்கப்படுவதில் எந்த பிழையும் இல்லைதான். ஆனால் நான் வெறும் வீர எழுச்சியான இசையாக இல்லாமல் மனதை பிழியும் இசைத்துளியாக இருந்தால் அது மிகப் பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். இது வெறும் கற்பனைதான். இருந்தும் இந்தக் கற்பனையை சற்று சிரத்தையுடன் கவனமாக செய்ய வேண்டிய கட்டாயம் நமக்குண்டு.

    கேள்வி இதுதான்: ஒரே பாடல். அது நமது தமிழ் இனத்தின் ஒட்டு மொத்த உணர்வுகளையும் ஒரு சிறிய துணுக்கில்  வடித்தெடுத்துவிடும் சுவை கொண்டதாக இருக்கவேண்டும்.  அது எந்தப் பாடல்? உங்களின் தேர்வு எதுவாக இருக்கும்? சற்று யோசித்துப் பாருங்கள். இந்தக் கற்பனை எத்தனை அற்புதமாக இருக்கிறது?

     நமது தமிழ் சமூகத்தின் உயிர் நரம்பை ஒரே வரியில் மீட்டும் அந்த ஒரே ஒரு பாடல் என்னைப் பொறுத்தவரை பாசமலர் படத்தின் மலர்ந்தும் மலராத பாதி மலர் போல பாடல்தான். உயிர் நரம்புகளை  ஆழமான வலியுடன் மீட்டிச் சென்று, அந்த வலியின் வேதனையை ஒரு நெருப்புத் துண்டு போன்று நெஞ்சத்தில் அடைகாக்கும் வலிமையான துயரம் இந்தப் பாடல்.  பல்லவியில் வரும்   நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளம் தென்றலே என்ற  கவிதை மின்னல் கேட்பவருக்குள் செங்குத்தாக இறங்கி ஆயிரம்  கண்ணீர்த் துளிகளை உருவாக்கும். வார்த்தைகளுக்குள் அடங்காத எதோ ஒரு சோகம் உடைந்த கண்ணடித் துண்டு போல மனதின் சுவர்களை கீறிச் சென்று துயரத்தின் ரத்தம் வழியச் செய்யும். வலியின் சுவையை மீண்டும் மீண்டும் ருசிக்க விரும்பும் ஆசையைத் தூண்டும் மெட்டும், கண்ணீர்க் கவிதை வரிகளும், சுகமான சோகத்தை பகிர்ந்துகொள்ளும் பாடகர்களின் உன்னதமான குரல்களும் ஒரு காவியம் பாடும். நமது வீட்டிற்குள்ளே பிணைந்திருக்கும் முதன்மையான உறவுமுறைகளை விண்வெளிக்கு எடுத்துச் செல்ல இதை விட்டால் வேறு என பாடல் இருக்க முடியும்?

     இதே அலைவரிசையில் நீந்தும் மற்றொரு காவிய சோகம் குவிந்த கானம் பாக்கியலட்சுமி படத்தின் மிகப் பிரபலமான மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி   பாடல். ஒவ்வொரு வரியும் பிரிவின் வேதனையை ஜன்னல் இடுக்குகள் வழியே வழியும் மழைத்துளி  போல நெஞ்சத்துக்குள் செலுத்தும். இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு சாதாரணமாக கடந்து செல்பவர்களின் இசை ரசனையை நாம் மிகத் தீவிரமாக எண்ணுவது முட்டாள்தனம் என்று நான் எண்ணுகிறேன். அதுபோன்ற இசை சூனியங்களின் விமர்சனங்களை நான் பெரிதாக எடுத்துக்கொண்டு அவர்களுக்கு பதில் சொல்வதில்லை. காரணம் இருக்கிறது. ஒருமுறை என் நண்பன் ஒருவனுடன் இசை பற்றிய விவாதத்தின் கடுமையான உஷ்ணத்தில்," மாலைப் பொழுதின் மயக்கத்திலே என்ற பாடல் போன்று இன்னொரு பாடலை எனக்குச் சொல்." என்றேன். "என்ன பெரிய பாடல்? எம் எஸ் வி போட்ட பாடல்களிலேயே நினைத்தாலே இனிக்கும் பாடல்கள்தான் சிறந்தவை" என்றான் அவன் சிறிதும் அசராமல்.  நினைத்தாலே இனிக்கும் படப் பாடல்கள் சந்தேகமில்லாமல் சிறந்தவைதான். ஆனால் அதுதான்  எம் எஸ் வி யின் உச்சம்  என்பதை நான் என்றுமே ஏற்றுக்கொள்வதில்லை. அதுவாவது பரவாயில்லை. அதன் பிறகு அவன் தனக்குப் பிடித்த பாடலாக ஒன்றைக் குறிப்பிட்டு ,"அடடா! என்ன ஒரு பாடல் அது!" என்று ஆரம்பித்து அதை இசை அமைத்தவரின் பெயரைச் சொல்லி வழக்கமாக அவரது அடிவருடிகள் சிலாகிக்கும் ஒரு கோஷ்டி கானத்தை பாடிவிட்டு ,"உனக்குப் பிடிக்காதா?" என்றான். குமட்டிக்கொண்டு வந்தது. "போய் அதே ரகத்தில் உன் ஆள் எக்கச் சக்கமான  சக்கைப் பாடல்கள் போட்டிருக்கிறார். அவைகளைக்  கேள்.  உன் ரசனைக்கு அதுதான் சரி." என்றேன்.  என் எக்ஸ்ட்ரீம் எதிர்வினைக்கான அவன் குறிப்பிட்ட பாடல் மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே. இவ்வகையான ரசிப்புத் தன்மை ஒருவரின் தனிப்பட்ட டி என் ஏ சம்பந்தப்பட்டது. எந்தவித கிருமிநாசினி கொண்டும் இந்த அழுக்கான ரசனையை கழுவித் துடைத்தெடுத்துவிட முடியாது  என்றாலும், சில இணைகோடுகள் ஒரு அபாரத்தை சில மகா கேவலமான அசிங்கத்துடன் இணைத்துவிடுவதை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன்.

   என்னுடைய பால்ய வயதில், வானொலி என்ற ஒரு சதுரப் பெட்டி சமூகத்தின் மிக முக்கியமான  பொழுதுபோக்கு  சாதனமாக இருந்த காலங்களில் படம், பாடகர்கள், இசையமைத்தவர், பாடலாசிரியர் என்ற எந்த பெயரும்  தெரியாமல் நான் கேட்ட  பல பாடல்கள் மோகனச்  சாரல்களை என் மீது சிதற அடித்திருக்கின்றன. என் மனதில் கவிதைகளை எழுதிச் சென்றிருக்கின்றன. பல குழந்தைப் பருவ நிகழ்சிகளை நினைவுகளாக என் நெஞ்சத்தில் படிவெடுத்திருக்கின்றன. கனவுகளால் என்னைப் போர்த்தியிருக்கின்றன.  என் மூளையின் நியூரான்களில் அந்தப் பாடல்கள் துளித் துளி அமிலங்களாக பதிந்திருக்கின்றன. தேடியும் கிடைக்காமல் பின்னர் திடீரென்று ஒரு நாள் எதிர்பாரா வேளையில் ஒரு தென்றல் போல என்னை நாடி வந்திருக்கின்றன. இசையை வெறுமனே எங்களைப் போன்றவர்கள் கேட்கவில்லை. ஒரு காதில் பாடலும் மற்றொரு காதில் உலக இரைச்சலுமாக நாங்கள் இசையை ரசிக்கவில்லை. ஒரு வரியைக் கேட்டுவிட்டு உடனே அடுத்த பாடல் நோக்கி நகரும் இன்றைய வைஃபை வேகமும் எங்களிடமிருந்ததில்லை. மாறாக இசையை நாங்கள் எங்கள் வாழ்வின் ஒவ்வொரு களிப்பான, துயரமான, இனிமையான, கசப்பான, அமைதியான, ஆர்ப்பாட்டமான, குதூகலமான, வேதனையான, தனிமையான, முதிர்ச்சியான, பைத்தியக்காரத்தனமான நிகழ்வுகளோடும் பின்னிப் பிணைந்த  வாழ்வியலின் மற்றொரு பரிமாணமாகவே உள்வாங்கி ரசித்தோம். நீரோடும், உணவோடும் ஒரு சேர அந்த இசையை சுவைத்தோம். பிராணவாயுவுடன் இசையையும் சேர்த்தே சுவாசித்தோம். இசையின் இழைகளை எங்கள் புன்னகைகளும், கண்ணீர்த்துளிகளும், அச்சங்களும், ஆச்சர்யங்களும், ஆனந்தங்களும், அழுகைகளும் பகிர்ந்துகொண்டன. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு கதை சொல்லும் ஆழமான அர்த்தம் கொண்டிருக்கின்றன. இசை எங்களைப்  போன்றவர்களுக்கு வெறும்  பொழுதுபோக்கு இல்லை, அலுப்பான கணங்களை நிரப்பும் வெறும் கால நகர்ப்பும் அல்ல. அந்தப் பாடல்கள் அனைத்தும்  எங்கள் வாழ்வின் பொன்னான தருணங்கள். அவைகளே இன்று மீண்டும் வாழ முடியாத என் கடந்த காலத்தை ஒரு வலியுடன் சுவைக்கும் வினோத விருந்து படைக்கின்றன.

     நாளை இந்த வேளை  பார்த்து ஓடி வா நிலா என்ற பாடல் ஒலிக்கும் சமயங்களில் வீடே சற்று அமைதியாகிவிடும். ஒரு குளிர் காற்று என் மீது மோதி விட்டுச் செல்லும். சுசீலாவின் குரல் செல்லும் ஏற்ற இறக்கங்கள் வியப்பை விதைக்கும். என்ன என்ன வார்த்தைகளோ, சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து, சொன்னது நீதானா சொல்  போன்ற பாடல்களும் இதே திகைப்பை எனக்குள் திணிக்கும். ஏன் இப்படி  என்ற விடை தெரியாத கேள்வி பல வருடங்கள் கழித்து எனக்கு ஒரு உண்மையை உணர்த்தியது.

     பாடல் என்பது கவிதை கொண்ட இசை. (இங்கே நாம் வெறும் இசை என்ற இன்ஸ்ட்ரூமெண்டல் பாடல்களைப் பற்றி விவாதிக்கவேண்டாம். அவை வேறு தளத்தில், வேறு நகர்வில் செல்பவை.)  புனையப்பட்ட ஒரு கவிதையை ஒரு இசைக் கோட்டின் மீது மென்மையாக உட்காரவைப்பது மெட்டு என்னும் சாகசம். அடுத்த நிலையாக காற்றில் கலந்து, கரைந்து உயிர்கொண்டு உலவும்  இசையை தன் கற்பனையில் தேடிப்  பிடித்து,  அந்தக் காற்றை வார்த்தைகளுக்குள் ஒரு இசைஞன் சுவாசமாக செலுத்தும்போது கவிதையும், மெட்டும், குரலும், இசையும் சேர்ந்து ஒரு பாடலாக உயிர்பெற்று எழுகிறது. இருந்தும் இந்த மாயாஜாலம் ஏறக்குறைய அனைத்துப் பாடல்களிலும் சாதராணமாக நடைபெறும் இயல்பான ஒன்றுதான். ஆனால் ஏன் நம் மனம் ஒரு சில பாடல்களை நோக்கியே திரும்புகிறது என்பதற்கு மிக மையமான காரணம் ஒன்று இருக்கிறது.

     ஒரு முறை  தேநீர்க் கடையொன்றில்  எப் எம் வானொலியில்  ஒலித்த நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே என்ற பாடலை ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தேன். கூட இருந்த என் நண்பரோ என்னைக் கிளம்பும்படி அவசரப்படுத்தினார். "பொறுங்கள். இந்தப் பாடல் முடியட்டும்." என்றேன். கொஞ்சம் விநோதமாக என்னைப் பார்த்து, "அப்படி என்னதான் இந்தப்  பழைய பாடலில் இருக்கிறதோ?" என்றார் கேலியுடன். "இசை கூட இதிலில்லை." என்றார் அந்தக் கேலியின் நீட்சியாக.  நான் பாடல் முடியும் வரை பேசவில்லை. அதன் பின், "நீங்கள் சொன்னபடி அந்தப் பாடலில் இசை இல்லாமலில்லை. நீங்கள்தான்  கவனிக்கவில்லை." என்றேன். "ஒரு வாத்திய ஓசை கூட எனக்குக் கேட்கவில்லை. எதை இசை என்று சொல்கிறீர்கள்?" என்றார் அவர். கொஞ்ச நேர தேவையான அமைதிக்குப் பிறகு நான் சொன்னேன்: "அந்தப் பாடலின் மெட்டுதான் அதன் இசை." அவருக்கு இது குழப்பமாக இருந்தது போலும்.  என்னிடம் மேற்கொண்டு அவர் எதுவும் கேட்கவில்லை. கேட்டால் இதைவிட இன்னும் அதிகமாக குழம்பிப் போய்விடுவோம் என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால் நான் சொல்ல வருவது இதுதான்: வாத்தியக் கருவிகளின் ஓசையை இசை என  புரிந்துகொள்வது ஒரு பொதுவான கருத்தோட்டம். ஆனால் சில இசை வடிவங்களுக்கு வாத்தியங்களின் துணையே தேவையிருக்காது. வாத்தியங்கள் இரண்டாம் பட்சம்தான்.  என்னுடைய வார்த்தைகள் அவருக்குப் புரிந்ததா என்று தெரியவில்லை. அதைப் பற்றி நான் அக்கறையும் கொள்ளவில்லை. ஆனால் எனது புரிதல் எண்ணிலடங்கா அபூர்வ ராகங்களை அனாசயமாக தன் விரல்களுக்குள் அடைத்துவைத்திருந்த எம் எஸ் வி என்ற அதிசயமானவரை நோக்கி என்னை நகர்த்தியதன் வெளிப்பாடு.

    எம் எஸ் வியின் மரணிக்காத, மகத்தான பாடல்களை அருகே கூர்ந்து நோக்கினால், புலப்படும் உண்மை இதுதான். அவரது பிரதான இசை அல்லது அவர்  பாடல்களின் முதன்மையான இசை எதுவென்று பார்த்தால், அது  அவர் மீட்டிய  வாத்தியக்கருவிகளிலிருந்து வருவதில்லை.  மாறாக அவர் அமைத்த மெட்டுக்களே அந்த  இசையாக இருக்கிறது. இன்று நம்மால் மறக்க முடியாத அவரது பல பாடல்களின் முகவரி அவ்வாறான இசை மெட்டுக்கள்தான். அவர் அமைத்த வாத்தியங்களின் இசையமைப்பு இரண்டாம் இடத்தில் நிற்க, அவரின் மெட்டுக்களே இசையாக நம்மில் நிலைத்திருக்கின்றன.  அந்த அற்புத மெட்டுக்குள் சுகமாக சவாரி செய்யும் குரல்கள் உற்சாக உச்சங்களுக்கும், கற்பனையே செய்ய இயலாத திடீர் ராக வளைவுகளுக்கும், சட்டென்ற இனிமைகளுக்கும், திகட்டாத திகைப்புகளுக்கும், லயிக்கச் செய்யும் லாவகங்களுக்கும், துயில் துறக்க ஏதுவான துயரங்களுக்கும் இடையே மாறி மாறிச் சென்று, அங்கே ஏறி, இங்கே இறங்கி, மீண்டும் ஒய்யாரமாகத் திரும்பி, அங்கங்கே கொஞ்சம் நின்று கனவுகளை  உருவாக்கும்.  மெட்டு என்ற அவருடைய அந்த அபாரமான இசைக் கூட்டுக்குள் மாட்டிக்கொள்ளும் எந்த மனிதக் குரலும் அந்த மெட்டின் ஈர்ப்பில் கேட்பவரை மெய்மறக்கச் செய்யும் விதத்தில் தன்னையே  மாற்றிக்கொள்ளும்.

     எம் எஸ் வியின் பல பாடல்களை இந்தக் கருத்துக்காக என்னால் அழைத்து வர முடிந்தாலும் ஒரு சிலவற்றை மட்டும்  ஆராய்வோம். கீழேயுள்ள பாடல்களைப் பாருங்கள். கொஞ்சம் அந்தப் பாடல்களை உங்கள் மனதிலிருந்து உதட்டுக்கு வரவழையுங்கள்.  நான் சொல்லும் உண்மையை உணர்வீர்கள்.

கட்டோடு குழலாட ஆட கண்ணென்ற மீனாட ஆட -  இந்தப் பாடல் ஒன்றே போதும்  நான் மேலே சொல்லியுள்ள மெட்டே ஒரு இசை என்ற கருத்தை கட்டமைக்க. பாடகர்களின் குரல்கள் எத்தனை இனிமையாக வளைந்து, நெளிந்து  சென்று , வாத்தியங்களின் இசையை இலகுவாக சமன் செய்துவிடுகின்றன என்று பாருங்கள். அதிக ஆர்ப்பாட்டமில்லாமல்  மிக மெல்லிய மெல்லிசையாக பின்னணியில் இசைக்கருவிகள் தங்களது தேவையின்மையை உணர்ந்ததைப் போல அடங்கி ஒலிக்க, பாடல் முழுவதையும்  குரல்களே இசைக்கின்றன.  மேலும் கூடவே  வரும் ஹம்மிங் மற்றொரு மகுடம் சூட்டுகிறது.

நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே - ஆன்மாவை சற்று அசைத்துப் பார்க்கும் அற்புதமான  மெட்டு. இந்தப் பாடல் முழுவதையும் முதலில் வெறும் விசிலோசை, ஹம்மிங் கொண்டே அமைப்பதாக எம் எஸ் வி- டி கே ஆர் தீர்மானித்திருக்க,  மெட்டைக் கேட்ட கண்ணதாசன் பிடிவாதமாக இந்த அபாரமான மெட்டுக்குப் பாட்டு எழுதியே தீருவேன் என்று சொல்ல, அதன் பின்னரே பாடலில் வரிகள் வந்து உட்கார்ந்தன என்று ஒரு தகவல் உண்டு.

மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா -  முதல் வரியே மனதுக்குள் ஒரு இசைத் தட்டை சுழல விடுகிறது. சுசீலாவின் குரலில்தான் நம் மனதை கரைக்கும் சோகம் எப்படி ஒரு நளினமான அழகோடு வெளிப்படுகிறது? நான் முதன் முதலாக கேட்ட எம் எஸ் வி பாடல்களில் இதுவும் ஒன்று. அடிக்கடி வானொலிக் காற்றில் மிதந்த  இந்த இசை  பழைய பாடல்கள்  குறித்த எனது பார்வையை சீரமைத்த பலவற்றில் ஒன்று.

அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப்  பாடும்-  சுசீலா ராஜாங்கம் நடத்திய பாடல்களில் ஒன்று. சுசீலாவின் குரலிசை கொஞ்சமும் பிசிறில்லாமல் வெவ்வேறு தளங்களில் ஏறி இறங்கி நளினமாக நடைபயின்று  ஆச்சர்யம் அளிக்கும் பாடல்.  எம் எஸ் வியின்  மெட்டில் ரகசியமாக மறைந்திருக்கும் வசீகரங்கள் சுசீலாவின் குரலில் உயிர் பெற்று ஒலிக்கும். குறிப்பாக பல்லவியில் நீராடும் மேலாடை நெஞ்சை மெல்ல மூடும், கை தேடி கை தேடி கன்னம் கொஞ்சம் வாடும்  என்ற இடத்தில் அவரது குரல் காட்டும் ஜாலங்கள் அபாரமானவை. அதே போல  சரணம் முடியும் இடங்களில் அவர் அம்மம்மாஆஆஆ என்று நீட்டிக்கும்போது, அந்தக் குரல் உள்ளே சென்று ஒரு பிரம்மிப்பை அழைத்துக்கொண்டு வரும். கேட்கும் போது மனதில்  விவரிக்க முடியாத எதோ ஒன்று சற்று புரண்டு படுக்கும். எந்தவித டெக்னாலஜி ஜிகினாவும் பூசப்படாத உண்மையான குரலிசை.  உயர்ந்த கற்பனையில் உருவான ஒரு கானக்கனவு.

கொடியசைந்ததும் காற்று வந்ததா? பாடலை எண்ணினாலே அந்த மெட்டு எத்தனை அழகாக நம்மை ஆட்கொள்கிறது? இந்த மெட்டுக்குள் புகுந்து கொள்ளும் காவியக் காதல் வரிகள் எப்படி மக்கள் மனதிலிருந்து மறக்கப்படும்? காலங்கள் பல கழிந்தாலும் இது போன்ற காவியங்கள் நிலைத்திருக்குமே ஒழிய கடந்து போவதில்லை.

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி - துயர தூரிகையை சோகத்தில் நனைத்தெடுத்து வேதனையின் வண்ணத்தை குழைத்து, பிரிவின் வலியை வரைந்த பாடல். சுசீலாவின் குரல் இல்லாவிட்டால் ஒரே நொடியில் இது  இறந்துவிடும். அல்லது இந்த மெட்டு இல்லாவிட்டால் சுசீலாவின் குரல் இனிமை இழந்துவிடும். காவியக் கலப்பு. மனதின் வேர்களுக்குள் ஒரு நெருப்புக் கத்திபோல குத்திக் கிழித்துச் சென்று  .....   தகிக்கும் கானம்.

நாளை இந்த வேளை  பார்த்து ஓடி வா நிலா - சுசீலாவுக்கு தேசிய விருது கிடைத்த பாடல் என்பதில் வியப்பே இல்லை. சாஸ்திரிய ராகங்களுக்குள் எம் எஸ் வி தேடி எடுத்த வானவில்.  இசையாகவே  மாறிவிடும்  சுசீலாவின் தேன் குரல் இந்த மெல்லிசை மெட்டின் மீது மற்றொரு ஓவியம் வரைகிறது. பால் போலவே வான் மீதிலே யார் காணவே நீ காய்கிறாய் என்ற prelude முடிந்த பின் இசையாகவே எழும் அவர் குரல்   எவ்வாறு  தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு என  மெழுகாய் உருகுகிறது என்று பாருங்கள். காலத்தால் கரைக்க முடியாத பாடல்.

சொன்னது நீதானா சொல் சொல் என்னுயிரே - துயரத்தைக் கூட விரும்பிக் கேட்க வைக்கும் மின்சார துக்கம். சரணங்களில் வாத்தியக் கருவிகளின் இசையுடன் சுசீலாவின் குரல் நடத்தும் போர்  வியப்பான சுவை கொண்டது. கண்ணீர்த் துளிகளில் புரண்டு எழுந்த மெட்டு. பாடல் சரணத்துக்குள் பயணிக்கும் போது  ஆயிரம் மின்னல்கள் அடிக்கும். நமது சோக நரம்பை கண்டுபிடித்து அதை மீட்டிவிட்டுப் போகும் இசை. இது ஒரு அமைதியான ஆனந்த அழுகை.

தமிழுக்கும் அமுதென்று பேர்- என்ன இசைக் கருவி இசைக்கப்பட்டது என்ற விபரங்கள் தேவைப்படாத கேட்பவர்களின் நெஞ்சங்களில் தமிழை சிறப்பு செய்யும் இசையாக உறைந்து விட்ட பாடல். இப்படியான மெட்டை தன் கற்பனையில் கண்டுபிடித்தவரின் மேதமையை என்னவென்று விவரிப்பது? 

நினைக்கத் தெரிந்த மனமே- காதலின் பிரிவை உணர்த்தும் முதன்மையான பாடல். பலர் விரும்பும், குறிப்பாக  பாட விரும்பும் சோக இழைகளை வைத்துத் தைத்த கண்ணீர் வலி. பலரின் மனதிலும் உதட்டிலும் உட்கார்ந்திருக்கும் உணர்ச்சிமயமான பாடல். மெட்டின் இசையே இந்தப் பாடலை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்கிறது. வாத்தியங்கள் கூடவே வருகின்றன.  எம் எஸ் வி யின் மெட்டுகள் செய்யும் இந்த விசித்திர வித்தை ஒரு வசியம் போன்று நம்மை ஆட்கொள்கிறது.

அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்- சற்று பிசகினாலும் விரச சகதியில் விழுந்து அசிங்கப்பட்டுப்போகும் பாடல். மிக மெல்லிய நூலிலையின் மீது சாதுர்யமாக நடந்து சென்று எம் எஸ் வி கொடுத்த  விரக தாப ஆனால் அதேசமயம் கண்ணியம் மிகுந்த காதல் கானம் இது.  என் நண்பன் இதையே விரசம் என்று சொல்லுவான்,  எம் எஸ் வியின் இசையில் விரசம் உண்டா என்ற என்னுடைய நீண்ட நாள் கேள்விக்கு கண்டிப்பாக இல்லை என்ற பதில் கிடைத்த பின்னே நான் மீண்டும் ஆழமாக இதைக் கேட்டபோது இந்தப் பாடலின் பலவித பரிமாணம் என் மூளைக்குள் சென்று என் சந்தேக எண்ணத்தை துவம்சம் செய்தது. இன்றும் பல பெண்கள் தயக்கமில்லாமல், எந்தவித பாசாங்கும் இல்லாமல் பொதுவில் ரசிக்கும் பாடல். ரசிப்பதென்ன பலர் வாய்விட்டுப்  பாடும் அற்புதமான பாடலிது. இதே பாடலை எம் எஸ் விக்குப் பிறகு வந்த "மற்றவர்கள்" அமைத்திருந்தால் .. முன்னிசை இடையிசை பின்னிசை என்று பலவிதமாக பலவித இயற்கையான "வாழ்வியல் ஓசைகளை" அமைத்து பின்னி எடுத்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. பாவம். எம் எஸ் விக்கு  "அந்த அளவுக்கு இசை ஞானம்" இல்லை. 

சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே லதா மங்கேஷ்கரை இந்தியாவின் நைடிங்கேல் என்றழைப்பதுண்டு. எனது விழியில் சுசீலா அவரை எப்போதோ ஓரம் கட்டிச் சென்றுவிட்டார். ஒரு உதாரணம் இந்தப் பாடல். அருவி போன்று சுசீலாவின் குரல் விழுந்து ஒரு புகை போன்று அடுத்த நொடியே எழுவது ஒரு மாயாஜாலம்.  எம் எஸ் வி மெட்டுக்குள்ளே மெட்டுக்கள் அமைப்பதில் இயல்பான திறமை கொண்டவர். இந்தப்  பாடலில் அதை நீங்கள் வெகுவாக உணரலாம். பல்லவியின் மூன்றாவது வரியிலேயே மெட்டு மாறும். சரணத்தில் கேட்கவே வேண்டாம். இசை வடகிழக்கு பருவ மழை போல நிற்காது கொட்டும். மெட்டுகளை சாமர்த்தியமாக வளைப்பதில் தான் ஒரு வல்லவர் என்பதை எம் எஸ் வி நிரூபித்த மற்றொரு மரணமில்லா கானம். பாடல் மொத்தமும் சுசீலாவின் இசை ராஜ்ஜியம் ரம்மியமாக நடைபோடும். என்னால் விவரிக்க முடியாத எதோ ஒரு மர்மமான வசீகரம் இதில் இருப்பதை நான் உணர்ந்தே இருந்தேன். அது என்னவென்பதை நீண்ட வருடங்கள் கழித்துத்தான் அறிந்துகொள்ள முடிந்தது. கீழே இருப்பது திரு முரளி ஸ்ரீநிவாஸ் என்பவர் எம் எஸ் வி பற்றிய திரெட் ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. படித்ததும் நான் உணர்ந்தது சரிதான் என்று தோன்றியது. இதோ உங்கள் பார்வைக்கு:  

தாயன்பன் எடுத்துக் கொண்ட பாடல் புதிய பறவையில் சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே பாடல். தன் மனதில் இருக்கும் காதலை காதலனிடம் வெளிப்படுத்த நினைக்கிறாள் அந்தப் பெண். நேரிடையாக சொல்ல முடியாமல் அதற்கு ஒரு உருவம் கொடுக்க முயற்சிக்கிறாள். அதாவது ஆங்கிலத்தில் metaphor என சொல்லபடும் வகையை சார்ந்து தன்னை ஒரு சிட்டுக் குருவியாக கற்பனை செய்துக் கொள்கிறாள். 

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே 
செவ்வானம் கடலினிலே கலந்திடக் கண்டனே
மொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிட கண்டேனே 
மூங்கிலிலே காற்று வந்து மோதிடக் கண்டேனே 
என்பது பல்லவி. 

சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து தன் இணையோடு சேர்வதும் செவ்வானம் மாலையில் கடலில் கலப்பதும் மலரினில் வண்டு மூழ்குவதும் மூங்கிலில் காற்று சேர்வதும் எவ்வளவு இயற்கையோ அதே போன்றதுதான் என் மனதில் உன் மேல் உள்ள காதல் என்கிறாள் காதலி. இந்த பல்லவியில் கவிஞர் ஸ்கோர் செய்கிறார் என்றால் சரணத்தில் மெல்லிசை மன்னர் கொடி நாட்டுகிறார் என்றார் தாயன்பன், 

எப்படி என்றால் இடம் பொருள் ஏவல் எதையும் பாராமல் எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி தன் ஆசையை விருப்பத்தை வெளிப்படுத்துகிறது நிறைவேற்றிக் கொள்கிறது சிட்டுக் குருவி. அதே போன்று சுதந்திரமாக தன் மன வானில் பறக்க நினைக்கிறாள் அந்த பெண். அதை குறிக்கும் விதமாக சரணம் தொடங்கும் முன்பு ஒரு ஹம்மிங்கை புகுத்துகிறார் எம்எஸ்வி. அஹா அஹா அஹா ஆஹா என்ற அந்த ஹம்மிங் அந்த பறவையின் மனநிலையில் அந்த பெண் இருக்கிறாள் என்பதை உணர்த்துகிறது. 

ஆனால் என்னதான் தன்னை பறவையாக கற்பனை செய்துக் கொண்டாலும் யதார்த்தம் என்று ஒன்று இருக்கிறதே. பறவையைப் போல் சுதந்திர வானில் பார்க்க முடியாதே. அந்த விருப்பம் ஏக்கமாக முடிவதை எம்எஸ்வி எப்படி கொண்டு வந்திருக்கிறார்? 

பறந்து செல்ல நினைத்திருந்தேன் என்ற தன் ஆசை எப்படி முடியாமல் போகிறது என்பதை

பறந்து செல்ல நினைத்திருந்தேன் எனக்கும் சிறகில்லையே என்கிறாள். இங்கே பறந்து செல்ல என்ற வார்த்தைகள் மேலே போய்விட்டு எனக்கோர் சிறகில்லையே எனும்போது அந்த குரலே கீழே இறங்குகிறது. சரணத்தில் வரும் வரிகளையே இரண்டாக பிரித்து ஒவ்வொரு வரியிலும் முதல் பகுதியில் இடம் பெறும் ஆசை விருப்பம் இவற்றை மேல்ஸ்தாயில் வருவது போன்றும் அதே நேரத்தில் அந்த ஆசை அல்லது விருப்பம் நடக்காது என்ற யதார்த்தம் மனசில் உறைக்க அந்த வரியின் இரண்டாம் பகுதியை கீழ்ஸ்தாயிலும் அமைத்திருப்பார் எம்எஸ்வி என்று சொல்லி அந்த சரணத்தின் வரிகளை அதே போல் பிரித்து பாடிக் காட்டினார் தாயன்பன்.

பறந்து செல்ல நினைத்து விட்டேன் - எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் - பறவை துணையில்லையே
எடுத்துச் சொல்ல மனமிருந்தும் - வார்த்தை வரவில்லையே
என்னென்னவோ நினைவிருந்தும் - நாணம் விடவில்லையே

மொத்த அரங்கமும் கைதட்டியது. கவியரசர் மெல்லிசை மன்னர் இசையரசி கூட்டணியின் மேதமைக்கு மட்டுமின்றி அதை அழகாய் திறானய்வு செய்த தாயன்பனுக்கும் சேர்த்துதான். 


    நானும் கொஞ்சம் கைதட்டிவிட்டு வருகிறேன்.

  பல்லவிக்கு மட்டும் தானானா தானானா என்று எதோ ஒரு மெட்டு அமைத்துவிட்டு சரணத்தில் பாடகர்களை பேசவைத்து அதற்கு பின்னணியில் 12 நொடிக்கு ஒரு குழல், 4.5 நொடிக்கு ஒரு வயலின், 10.3 நொடிக்கு ஒரு கிடார் என்று சம்பந்தம் இல்லாமல் தவணை முறையில்  இசையை அமைத்து, ஒரே மெட்டில் மொத்தப் பாடலையும் முடித்துவிடும் பல இசையமைப்பாளர்களின் பாடல்களையும் "இது என் ஆன்மாவை குடைகிறது" என்று சிலாகிக்கும் ஒரு சிலர் சற்று இவ்வகையான உண்மையான இசையின் பக்கம் ஒதுங்கினால் நலம்.

ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன் ,காலை நேர கானங்கள் என்ற வரிசையில் பலரின்   நினைவில் தங்கியிருக்கும் முதன்மையான பாடல். ஒரு வைகறை வைரம். பாடலின் துவக்கத்திலேயே அந்தக் காலை நேரம்  நம் நெஞ்சத்தில் புலர்ந்துவிடும். சுசீலா தனது மயக்கும் குரலில் பாடலைத் தொடங்கும்போது ஏற்படும் இசை  போதை பாடல் முடிந்தும் நீங்காது. மனதுக்குள் அந்தக் குரலும் இசையும் ஒலித்தபடியே இருக்கும். காலையை வரவேற்க இதை விட வேறு என்ன பாடல்  இருக்க முடியும் -- அடுத்து வருவதைத் தவிர?

வெள்ளிக்கிழமை விடியும் நேரம் வாசலில் கோலமிட்டேன். காலை நேர கானங்கள் என்றால் சில பாடல்களுக்கு  அழைப்பிதழே   அவசியமில்லாது போய்விடும். நாம் கேட்காமலே அவை நம்மருகே அமர்ந்துவிடும். குறிப்பாக நீ என்ற படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல் ஒரு  காலை நேரத்து ஏகாந்தம். இரண்டாவது வைகறை வைரம். எம் எஸ் வி தனியாக இசைக்க ஆரம்பித்ததும் அமைத்த முதல் மெட்டு இதுதான் என்று ஒரு தகவல் இருக்கிறது. பொற்கால அறுபதுகளின் அதே இனிமையின் நீட்சியாக ஒலிக்கும் சுகமான காலைத் தென்றல். இதன் இனிமையைத்தான் மறுக்க முடியுமா? 

வெள்ளிக் கின்னந்தான் தங்கக் கைகளில் பாடலில் சுசீலாவுக்கு வெறும் ஹம்மிங் மட்டுமே உண்டு. ஒரு முதலிரவுப் பாடலாக ஆரம்பித்து சரணத்தில் தேனிலவு காட்சியாக விரிவடையும். இருந்தும் எந்தவித ஆபாச ஓசைகள், விரகதாப முக்கல்கள் இல்லாமல் மயக்கும் ஹம்மிங் எப்படி சுசீலாவிடமிருந்து வருகிறது பாருங்கள்!  டி எம் எஸ் மொத்தப் பாடலையும் அபாரமாக பாடினாலும் சுசீலாவின் ஹம்மிங் அதை அதே அபாரத்துடன் சமன் செய்து  வேறு உயரத்திற்கு பாடலை நகர்த்துகிறது.

நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு  பாடலைக் கேட்டதும்   நான் நன்றி சொல்வேன்  எம் எஸ் விக்கு என்ற எண்ணம் தோன்றும். லேசாக மேற்கத்திய ரகே இசைச் சாயலோடு பல்லவி நம்மை ஒரு மானசீக  ஊஞ்சலில் வைத்து தாலாட்டும். சுசீலாவின்  குரல் பனித் துண்டுகளால் நெய்த ஒரு குளிர்த் தென்றலின் சுகமாக இருக்கும். வாத்தியங்களை மீறி ஆனால் வெகு ரம்மிய இசை போல ஒலிக்கும் அவரது குரலில் பாடல் அலுப்பே தராமல் நளினமாக நகர்ந்து செல்லும். 

சித்திரை மாதம் பவுர்ணமி நேரம் முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்- சுசீலா தவிர வேறு எந்தக் குரலும் இந்தப் பாடலை இத்தனை தூரம் அழகோடு பாடியிருக்க முடியாது என்று எண்ணக் கூடிய, மெட்டும் இசையும் ஒரே புள்ளியில் கைகோர்த்த அசாதாரணம். வானவில் நம் மீது படர்வது போன்ற இதம் தரும் பாடல். பலவிதமான  கற்பனைகளுக்கு சிறகுகள் கொடுக்கும் உன்னதமான இசையின் உள்ளார்ந்த தொடுகை. தூர வைத்துவிட்டு மறந்துபோக முடியாத வசீகரம்.

காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானா கிடார் இசை பாடல் முழுவதும் குழந்தையை அணைத்துக்கொண்டிருக்கும் ஒரு அன்னையின் கரம் போல மென்மையாக அரவணைத்துச் செல்ல, பாடல் தரும் மொத்த இசை அனுபவத்தையும் சுசீலாவின்  குரல் தனியே சாதித்துவிடும். இது போன்ற அபாரமான ஒரு மெட்டுடன் ஒரு இனிமையான குரலும் இணைந்தால் அது எட்டும் உயரங்கள் பிரம்மிப்பானவை என்று உணர்த்தும் பாடல்.

சத்திய முத்திரை கட்டளையிட்டது நாயகன் ஏசுவின் வேதம்-  கிறிஸ்மஸ் குதூகலம். கேட்டுப் பாருங்கள் எப்படி சுசீலாவின் தெளிவான குரல் இந்தப் பாடலைப் புனிதப்படுத்துகிறது என்று. துள்ளலும் துடிப்புமாக இதயத்தை இன்பமயமாக  நிரப்பும் சொர்க்க கானம்.  கிறிஸ்மஸ் உணர்வை உயிரூட்டி மனதுக்குள் உற்சாகம் பொங்கச் செய்யும் பாடல்.

மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ பாடலை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். சுசீலா அங்கில்லை. ஆனால் அந்த வசீகர இனிமை சற்றும் குறையாத அனுபவத்தை வாணிஜெயராமினால் கொடுக்க முடிகிறது என்பதன் பின்னே இருக்கும் ஒரே காரணி அந்தப் பாடலின் மெட்டுதான். இதேபோல உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் என்று எஸ் ஜானகி பாடும் போது இதே ஜானகிதானா பின்னாட்களில் வேறு விதமான ஓசைகளை தன் குரலினால் உருவாக்கி, ஒரு மிமிக்ரி பாடகர் போல மாறி "என்ன பாட சொல்லாத நா கண்டபடி பாடிபுடுவேன்" என்ற உண்மையைச் சொல்லி, பலரது அபிமானத்திலிருந்து அகன்று போனார் என்ற வியப்பு ஏற்படும். அத்தனை தூரம் காதலில் உருகிய குரல் கொண்டு பாடுவார். எம் எஸ் வி அமைத்த மெட்டினால் மட்டுமே அது சாத்தியப்பட்டது. 

      டி எம் எஸ், பி பி ஸ்ரீநிவாஸ், பி சுசீலா, எல் ஆர் ஈஸ்வரி, வாணி ஜெயராம், எஸ் பி பாலசுப்ரமணியம், ஜேசுதாஸ் என பல  பாடகர்களின் குரல்கள் இவரது மெட்டுக்குள் புகுந்துகொண்டு அடைந்த கோபுர உச்சங்களும், உயரங்களும் அணிந்துகொண்ட மாலைகளும், மகுடங்களும், மாற்றி எழுத முடியாத நிகழ்ந்த சரித்திரங்கள். யார் அந்த நிலவு போன்றெல்லாம் டி எம் எஸ் பாடுவாரா என்பதே அதுவரை அறியப்படாத ரகசியமாக இருந்தது. இயற்கை என்னும் இளைய கன்னி என்று எஸ் பி பி பாடிய அந்தப் பாடலை விரும்பாத உள்ளங்களே இருக்க முடியாது என்று அப்போது சொல்வார்கள்.  என்னதான் பெரிய உயரங்களுக்குச் சென்றுவிட்டாலும் தெய்வம் தந்த வீடு பாடல்தான் இன்று வரை பலருக்கு ஜேசுதாசின் முகமாகக் காட்சியளிக்கிறது.

      எம் எஸ் வி தனது மெட்டுகளை திடமாக நம்பியவர். மெட்டுக்களால்  அவர் தன் பாடல்களை நிரப்பினார். எல்லோரும்தான் இதைச் செய்கிறார்கள் என்ற எண்ணம் உங்களுக்கு வரலாம். ஆனால் எம் எஸ் வியின் மெட்டுக்கள் ஒரு இசையாகவே உருவாக்கப்பட்டவை. ஒரு பாடலுக்குத் தேவையான இசையின் பங்களிப்பை அவரது மெட்டுக்களே திருப்திகரமாக செய்துவிடும்.  வாத்தியங்களின் தேவை அதிகமில்லாமலே அவரது பாடல்கள் முழுமை பெற்றதாக இருந்தன. ரோஜா மலரே ராஜ குமாரி, பால் வண்ணம் பருவம் கண்டு, ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ, பனியில்லாத மார்கழியா போன்ற பாடல்களின் மெட்டின் அமைப்பே தேவையான இசையை கொடுத்துவிடுகிறது. அதனால்தான் அவரது இசையில் வாத்தியங்கள் அவருக்குப் பின் வந்தவர்கள் அமைத்ததைப் போல தனித்துத் தெரிய வேண்டிய அவசியமில்லாமல் இருந்தன. அவரது வாத்திய இசை துருத்திக்கொண்டு, செயற்கையான அலங்காரத்துடன், தேவையில்லாத ஆர்ப்பாட்டத்துடன் வெளிப்படாமல் பாடலோடு இசைந்து ஒரு முழுமையான பாடல் அனுபவத்தை கேட்பவர்களுக்குக் கொடுத்தது. "பாடல் சுமார்தான். ஆனால் அந்த இடையிசை அபாரம்." போன்ற பாராட்டுக்கள் எம் எஸ் விக்காக தயாரிக்கப்படவில்லை. அவரது பாடல்களில் எல்லா அம்சங்களும் சரியான, நேர்த்தியான விகிதத்தில் பகிரப்பட்டு, உண்மையான இசையினால் படைக்கப்பட்டவை. வெறும் இசைத் துண்டுகளாக அவை அறியப்படவில்லை. குறிப்பாக சங்கே முழங்கு என்ற பாடல் அதன் இசைக்காவும் பெரிய அளவில் புகழ் பெற்றது.   அதோ அந்த பறவை போல வாழ வேண்டும், எங்கே நிம்மதி?, ராஜாவின் பார்வை ராணியின் பக்கம், அன்று வந்ததும் அதே நிலா, கண் போன போக்கிலே கால் போகலாமா, அவளுக்கென்ன அழகிய முகம், ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன், என்ன என்ன வார்த்தைகளோ, யார் அந்த நிலவு?,  போன்றவை எத்தனை பிரமாண்டமான இசையைக் கொண்டிருந்தன என்பதை ஒரு புதிய தகவலாக தெரிவிக்க வேண்டியதில்லை.

  வாத்தியங்கள் ஒரு பாடலுக்கு முக்கியம்தான். ஆனால் பாடலை வாத்தியங்கள் தத்து எடுத்துக்கொண்டால் அந்தப் பாடல் நோய்வாய்ப்பட்டுப் போகிறது. மடிந்தும் போகிறது. நீங்களோ நானோ வெறும் வாத்திய ஓசைகளை நினைவில் வைத்திருந்து ஒரு பாடலை சிலாகிக்கப்போவதில்லை. அவ்வாறன இசையனுபவம் அளிக்கக்கூடிய இசைக்குத் தேவையான மெட்டு வசப்பட்டால் மட்டுமே இங்கே ஒரு பாடல் காலம் தாண்டியும் நினைக்கப்படும். இல்லாவிட்டாலோ மரத்தில் துளிர்க்கும் இலை போலத்தான். கொஞ்ச நாட்கள் பசுமையை அணிந்துகொண்டு பின்னர் சருகாகி விழ  வேண்டியதுதான்.

      ஒரு பாடலின் ஆன்மா அதன் மெட்டில்தான் இயங்குகிறது என்ற உண்மையை அவர் அறிந்திருந்ததனால்தான் அவரால் இத்தனை உயிர்ப்பான பாடல்களை......ஒரு திருத்தம்...... இத்தனை உயிர்ப்பான பல பாடல்களை .... மற்றொரு திருத்தம்.... இத்தனை உயிர்ப்பான கணக்கிலடங்கா  பல பாடல்களைக் கொடுக்க முடிந்தது. அவர் அமைத்த ஏறக்குறைய அனைத்துப் பாடல்களிலும் நீங்கள் இந்த அனுபவத்தை உணரலாம். எனவேதான் அவர் பாடல்கள் ஒலிக்கப்பட்டும், கேட்கப்பட்டும், ரசிக்கப்பட்டும், பாடப்பட்டும், ஓய்ந்துவிடாமல் இன்றளவும் நினைக்கப்பட்டு வருகின்றன.  மூன்று நான்கு தலைமுறைகளைத் தாண்டியும் உயிர் வாழ்கின்றன. இன்னும் பல வருடங்கள் எதிர்காலத்துக்குள்ளும் அவர் இசை அதிர்வலைகளை உருவாக்கும்.

      எம் எஸ் வி போன்று வசியப்படுத்தும், வலிமை மிகுந்த வசீகர மெட்டுக்களை அமைக்கமுடியாத இசையமைப்பாளர்கள் தஞ்சம் புகுந்த இடம் புதிய வாத்திய ஒலிகள்.  அவர்களது மிகச் சாதாரணமான, அயர்ச்சியான அலுப்பூட்டும் மெட்டில் இயற்கையாகவே உண்டாகும் விரிசல்களும், உடைசல்களும், இடைவெளிகளும்  கிளர்ச்சியூட்டும், தாளமிடவைக்கும் இசை வாத்தியங்களால் நிரப்பப்பட்டு பூர்த்தியாயின.  இது தவறா சரியா என்ற விவாதம் அவசியமில்லாதது. அப்படியும் சில பாடல்கள் கேட்கும்படியாக சிறப்பாகவே இருந்தன. ஆனால் இசையின்றி நம்மால் அவ்வாறன  பாடல்களை கற்பனை செய்யவே முடியாது. இது ஒரு புதிய பாணியாக அப்போது பரிணாமம் அடைந்தது. எம் எஸ் வி போல ஆழமான ஆத்மார்த்தமாக ஆன்மாவை அணைக்கும்  மெட்டுகளை உருவாக்க இயலாத அவர்களது இயலாமை ரசிகர்களின் விமர்சனப் பார்வைக்குள் வராமலிருக்க அவர்களுக்கு பல ஜிகினா வேலைகள் தேவைப்பட்டன. இதனால் ஸ்டீரியோ போனிக் சவுண்ட், ஒரு குரல் மேலே மற்றொரு குரல் படர்வது, ஆர்ப்பாட்டமான அடிதடி தாளம், கேட்கவே சகிக்காத ஊளைகள், முக்கல், முனங்கல்கள், கழுதைகள் கதறுவது, ஆபாசக் கூச்சல்கள், காதல் பாடலில் சம்பந்தம் இல்லாமல் ராக ஆலாபனைகள், விடலைகளின் இச்சைகளை உரசும் ஒலிகள்  போன்ற "நவீனங்கள்" தமிழிசைக்கு "கொடையாகக்" கிடைத்தன. பரிதாபம்! இதில் வீழ்ந்துபோன நம் ரசனை மீண்டு எழ நாம் மீண்டும் எம் எஸ் வியிடம் தான் செல்லவேண்டியிருக்கிறது.

   கால இயந்திரம் என்ற விஞ்ஞானக் கனவு காகிதத்தில் மட்டுமே சாத்தியமல்ல. இசையும் ஒரு வகையில் கால இயந்திரம்தான். ஒரு பாடல், அல்லது பல்லவி, அல்லது  ஒரே ஒரு ஹம்மிங் கேட்கும் அதே கணத்தில் அது நம்மை காலத்தின் பின்னே எங்கோ இழுத்துச் சென்றுவிடுகிறது. திகைப்பான விதத்தில் சில சமயங்களில் நாம் அறிந்தேயிராத உணர்வுகளையும், காட்சிகளையும் அந்த இசை நம் நெஞ்சத்தில் உயிர்ப்பிக்கிறது. இதை நம் கற்பனையின் வளம் என்று தீர்மானித்துக்கொண்டாலும் அந்த கற்பனையின் விசையைத் தட்டிவிடுவது இசைதான்.  நான்  நெஞ்சம் மறப்பதில்லை என்ற பாடலை முழுவதும் ஒருசேரக்  கேட்டது வெகு சொற்பமான முறைகள் மட்டுமே. காரணம் சுசீலாவின் ஹம்மிங் துவங்கும் போதே மனதில் விரியும் காட்சிகள் என்னை மலைக்க வைக்கும். எனக்குப் பரிச்சயமில்லாத இடங்களும் முகங்களும் மனதில் தோன்ற, சட்டென்று பாடலைவிட்டு நகர்ந்துவிடுவேன். பிறகு மற்றொருநாள் முதல் சரணம் இரண்டாம் சரணம் என்று அந்தப் பாடலை துண்டு துண்டாக ரசிப்பேன். ஒரு முரண்போல அத்தையடி மெத்தையடி பாடலோ என்  காலத்துக்கு  முந்தைய நான் பார்த்தேயிராத என் குடும்ப நிகழ்வுகளின் மீது ஒரு வசீகர வெளிச்சம் பாய்ச்சும். அந்தக் கற்பனையின் அரவணைப்பில் மனது மழையில் நனைந்த மலர்கள் போல புதிய வாசத்தையும், வண்ணத்தையும் அணிந்துகொள்ளும். என் பெற்றோர்களும், சித்திகளும், மாமாக்களும், சகோதர சகோதரிகளும் எவ்வாறு அந்தப் பாடலை ரசித்திருப்பார்கள் என்ற எண்ணம் என் கற்பனைக்கு வார்த்தைகள்  வராத வடிவம் கொடுக்கும்.

 சமீபத்தில் ஒரு மதிய வேளையில் ஆட்டோ ஒன்றில் பயனித்துக்கொண்டிருந்தேன். என்னைச்  சுற்றிலும் சென்னை பரபரப்பாக துடித்துக்கொண்டிருந்தது. போக்குவரத்து ஓசைகளும், நகரதுக்கேயுரிய இரைச்சல்களும், தனி மனித வசவுகளும், நிறம் நிறமான சினிமா போஸ்டர்களும், மெட்ரோ ரயில் கட்டமைப்புகளுமாக நான் எம் சி சியில் படித்த காலத்து மெட்ராஸ்  முகத்தின் சுவடே கொஞ்சமும் தெரியாத வேறு உருவத்துக்கு சென்னை மாறியிருந்தது. அப்போது  ஆட்டோ ஓட்டுனரின் அலைபேசியிலிருந்து செந்தமிழ் தேன்மொழியாள்  என்று  டி ஆர் மகாலிங்கம் பாட ஆரம்பித்தார்.   அலைபாய்ந்த மனது சற்று நிதானமடைந்து  பாடலைப் பற்றிக்கொள்ள ஆரம்பித்தது. காலம் இடம் தெரியாத எதோ  இனம் புரியாத எண்ணங்கள் என்னைச் சூழ்ந்தன.  பாடல் உள்ளே செல்லச் செல்ல ஒரு திடீர் கணத்தில் நான் அந்தப் பாடலின் பின்னே சென்றுகொண்டிருந்தேன். ஒரே நொடியில் நான் நம் தமிழ்ச் சமூகத்தின் வேர்களுக்குள் புதைந்து போனேன். நம்முடைய மரபு சார்ந்த ரசனைகளும், பாரம்பரிய தொடர்புகளும்,   அதன் நீட்சியாக நம் வாழ்வின் அன்றாட இயக்கங்களோடு இணைந்துகொண்ட இசையும், நானும்  ஒரே புள்ளியில் இணைந்தோம்.  கால இயந்திரம்!

    இன்று பழமையை நாம் ஏறக்குறைய இழந்து விட்டோம். அதைப் பற்றிய அக்கறை பொதுவாக நம்மிடமில்லை. நமது  கட்டிடங்கள் தூண்களையும், தாழ்வாரங்களையும் துறந்துவிட்டன.  சாலைகள் மீது விஞ்ஞானம் அசுர வேகத்தில்  பயணிக்கிறது.  தலைக்கு மேலே ரயில் பறக்கிறது.  கடைத் தெருக்கள் ஒரே குடையின் கீழே குவிந்துவிட்டன.  முறுக்கு, தேன்மிட்டாய், கடலை மிட்டாய், கலர் பானங்கள்  போன்ற பழைய சினிமா அடையாளங்கள் பெரிய காகிதப்பை  பாப்கார்னிலும், குளிர் கொண்ட  பெப்சி,கோக் பாட்டில்களிலும் கரைந்துபோய்விட்டன.   நமது சமூக விழுமியங்களும், அடையாளங்களும் கொண்டாட்டமான திருவிழாக்களிலும், புகைப்பட தொகுப்புக்களிலும், அரிதான சில குடும்ப நிகழ்வுகளிலுமே எஞ்சியிருக்கின்றன. நமது விரைவு வாழ்க்கை நம்மை திரும்பிப் பார்க்க விடாமல் செய்துவிட்டது. இந்த ராட்சதப் பாய்ச்சலில் நமது வேர்களோடு நம்மை இணைக்க  நம்மிடமிருக்கும் ஒரே பாலம் இசை ஒன்றுதான். அந்த ஆட்டோவில் நான் ஏறக்குறைய இருபது நிமிடங்கள் எதிர்காலத்தில் சென்று  என் வீடு அடைந்தேன். ஆனால் அங்கு ஒலித்த அந்தப் பாடலில் அறுபது வருடங்கள் பின்னே பயணித்தேன்.

  மனிதனுக்கு முதல் மழை கண்டிப்பாக பெருத்த திகைப்பை கொடுத்திருக்கவேண்டும். புரிந்துகொள்ள முடியாத பயத்தையும், விவரிக்க முடியாத வசீகரத்தையும் தந்திருக்கவேண்டும். ஆனால் இன்றைய விஞ்ஞானம்  மழையின் டிஎன்ஏ வைத் தெளிவாக வரைந்து  நமக்குப் புரியவைத்துவிட்டது. இயற்கையின் சுழற்சியாகிய மழை எப்போதும் நம்மிடமே இருக்கிறது.  அது எப்போதும் தீரப்போவதில்லை.

   எம் எஸ் வியின் இசையையும் நான் அப்படித்தான் பார்க்கிறேன்.  எத்தனைப் பாடல்கள் அவரது விரலசைவிலிருந்து வந்த வண்ணமிருந்தன என்ற வியப்பு ஏற்படாமல் அவரைப்  பற்றி எழுதுவது கடினம். தீவிரமான சிந்தனையோ, யோசைனையோ இல்லாது நீண்ட மணிநேரங்கள் விரயம் செய்யாமல் நமது நினைவுச் சுவர்களிலிருந்து  அவரது ஏராளமான  பாடல்களை நாம் அடையாளம் காட்டலாம். கொள்கை, தத்துவம், உறவுகள், காதல், மோகம், தாலாட்டு, பிரிவு, தாய்மை, வீரம், மொழிப்பற்று, ஆன்மிகம், குழந்தைப் பாடல், இளமைச் சீண்டல், தெம்மாங்கு, நவீனம்  என பலதரப்பட்ட வகைகளாகப் பகுத்தாலும் எம் எஸ் வி ஏராளமாகவும், தாராளமாகவும்  இருக்கிறார்.

     அவரது இசை நம்  காற்றில் கலந்திருக்கிறது. இலைகள் சலசலக்கும்போது, ஜன்னல்கள் அடித்துக்கொள்ளும்போது, வயல் வெளிப்பயிர்கள் தலையசைக்கும்போது, மரங்கள் சாய்ந்தாடும்போது, அலைகள் கரைகளுக்கு விரையும்போது , மேகங்கள் கும்பல் கும்பலாக இடம்பெயரும்போது நாம் உணரும் காற்றில் அவர் பாடல்கள்  ஒரு உயிரலையாகத்  தவழ்ந்து நம்மைத் தீண்டிக்கொண்டே இருக்கின்றன.  நம்மோடு அவை உறவாடிக்கொண்டே இருக்கின்றன. ----ஒரு மழையைப் போல. ஒரு காற்றைப் போல.  அவர் இசை என்றும் ஓயப்போவதில்லை.

ஆம்.   எம்.எஸ்.வி.  ஒரு தீரா இசை.






அடுத்த இசை விரும்பிகள் XXIX - எண்பதுகள்: இசையுதிர் காலம்.
ஆனால் அடுத்து?





Monday 16 November 2015

என் சென்னை.

ஏறக்குறைய இருபது வருடங்கள் சென்னையில் வாழ்ந்து வருகிறேன். இது போன்ற மழை, வெள்ளம் நான் கண்டதில்லை. சென்னை மட்டுமல்ல தமிழகத்தின் பல மாவட்டங்கள் நகரங்கள் தண்ணீரில் சிறைபட்டுள்ளன. நான் சென்னையில் வசிப்பவன் என்பதால் என்னால் இங்கே காணப்படும் துயரங்களை அதிக அளவில் பேசமுடியும் என்று தோன்றுகிறது.

நியூயார்க், லண்டன், பாரிஸ் என்று வெளிநாட்டு நகரங்களில் வசிக்கவேண்டும் என்ற என்னுடைய சிறுபிள்ளைத்தனமான எண்ணம் இங்கே வந்த இரண்டே வருடங்களில் நெருப்பு கண்ட மெழுகு போல உருகிப் போய்விட்டது. சொல்லப்போனால் என்னைப் பொருத்தவரை சென்னைதான் என்னுடைய நியூயார்க் லண்டன் பாரிஸ் எல்லாமே. புதுக்கோட்டை திருச்சியில் படித்த சமயங்களில் எனக்கு இருந்த ஒரே கனவு நகரம் மெட்ராஸ்தான். (அப்போது சென்னை கிடையாது பெரிய அளவில்.) மெட்ராஸ் வந்த முதல் கணத்திலேயே எனது கனவு மெய்ப்பட்டதுபோல ஒரு நிம்மதி உண்டானது. 

நான் என்னுடைய ஊருக்கு (அப்படி என்று எதுவுமே  கிடையாது) போகாத சமயங்களில் என்னை நோக்கி வீசப்படும் கேள்வி "இன்னுமா ஊருக்கு போகவில்லை?". நான் சொல்லாவிட்டாலும் நினைத்துக்கொள்வது இதுதான்: "இந்த சென்னைதான் எனது ஊர்". நான் வெளியே சொல்லாவிட்டாலும் அதுதான் உண்மை. இங்கே வசிக்கவேண்டும் என்றுதான் விரும்பினேன். இப்போது அது நிகழ்ந்திருக்கிறது. 

தற்போது சென்னையில் காணப்படும் வெள்ளம் ஆரோக்கியமானதல்ல என்று படுகிறது. பல இடங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. மக்களின் துன்பம் வெறும் டீவியில் ஆவேசமாக  பேசப்படும் வார்த்தைகளோடு முடிந்துவிடவில்லை. அதையும் தாண்டிய பெரும் சிக்கல் கொண்டதாக இந்தத்துயரம் வேறு பரிமாணம் பெறுகிறது. சென்னையில் இருப்பவர்கள் எல்லாம் பாக்கியசாலிகள் என்ற சென்னையைச் சாராத மக்களின் எண்ணம் கொஞ்சம் இந்த மழையின்  உக்கிரத்தில் நனைந்து, கண்ணீரில் கரையட்டும். 

கருணாநிதியோ ஜெயலலிதாவோ எந்த கட்சியாக இருந்தாலும் சென்னையின் நிதர்சனம் இதுதான். மழைக் காலத்தில் சென்னை மிதப்பது மாறவேண்டுமானால் அது மக்களின் மனதில் உருவாகும் கோபத்தினாலும், உண்மையான ஜனநாயகம் என்ன என்பதை புரிந்துகொண்ட புரிதலால் வரும் முதிர்ச்சியான பார்வையினாலேயே சாத்தியம். மாறாக எந்த அரசியல் கட்சியும் இதற்கு ஒரு மாற்று மருந்து கண்டுபிடிக்கப்போவதில்லை. நம் உரிமை என்ன என்பதை  நாம் உணர்ந்து அதை செயலாற்ற இயலாதவர்களை தூர எறிவதன் மூலமே இதற்கு தீர்வு கிடைக்கும் என்று தோன்றுகிறது.

சென்னை தமிழகத்தின் பல ஊர்களின் வேர்களின் அடையாளம். இதை நான் வட சென்னை தென் சென்னை என்று என்றுமே பார்ப்பதில்லை.

இது என் சென்னை.


Sunday 11 October 2015

நிலவு நிஜமா?





                                                       நிலவு நிஜமா?



இரவு வானத்தில் பளீரென மின்னும் நிலவைக் குறித்து உலகின் எல்லா மொழிகளிலும் கவிதைகள் புனையப்பட்டு விட்டன. எண்ணிலடங்கா பாடல்கள் இயற்றப்பட்டும்  விட்டன. இனி வரும் காலங்களிலும் இது தொடரத்தான் போகிறது.  உலகம் இருக்கும் வரை இது ஓயப்போவதில்லை.

உண்மையில் மனிதனுக்கு நிலவைக் குறித்த ஆர்வமும், அச்சம் கலந்த அதிசயிப்பும், மகா வியப்பும் ஒன்று சேர்ந்து அதை தன் இலக்கியங்களில், கவிதைகளில், இசையில் இழுத்துவரச் செய்வதாக தோன்றுகிறது.  நிலவு குறித்த மர்மமான திகைப்பு அவனை அதை நோக்கிச்  செலுத்துகிறது.

இரவில் நிலவு மிளிர்வது சந்தேகமில்லாமல்  ஒரு காவியக் காட்சி.  முழு நிலவாகத் தோன்றுவதும், வடிவம் மாறுவதும், சுருங்குவதும், பின் பொலிவடைவதும் நாம் தினமும் காணும் ஒரு சாதாரண அபூர்வம். பூமியின் தோற்றத்தைப் பற்றி நாம் ஏறக்குறைய (!) தெரிந்துகொண்டு விட்டோம். ஆனால் அதே சமயத்தில் பூமியின் வெகு அருகே எப்போதும் ஒரே முகத்தைக் காட்டிக்கொண்டு சுற்றிவரும் அந்த விசித்தரமான வெள்ளை உருண்டையைப் பற்றி பலவிதமான கருத்துக்கள் இருக்கின்றன. நிலவு தோன்றியதா அல்லது பூமியின் அருகே மனிதன் இன்னும் அறிந்திராத விஞ்ஞான விதியின் படி தானே வந்து சேர்ந்ததா இல்லை சிலர் சொல்வதுபோல பூமியின் அருகே செயற்கையாக கொண்டுவரப் பட்டதா என்பது குறித்து பல விவாதங்கள் கட்டுரைகள் கருத்துக்கள் முடிவின்றி அலசப்பட்டு வருகின்றன.

அப்படியான ஒரு சதிக்கதையைப் பற்றியே இப்போது பேச இருக்கிறேன். நிலவு நாம் எண்ணி வருவதுபோல இயற்கையான துணைக் கோள் அல்ல அது வேற்று கிரகவாசிகளின் மாபெரும் விண்கலம். இதைப் படிக்கும்போது உங்களுக்கு ஏற்படும் திகைப்பு அல்லது நக்கல் எனக்குத் தெரிந்ததே. ஏனென்றால் நானும் முதன் முதலில் இதைப் படித்தபோது இப்படித்தான் உணர்ந்தேன். ஆனால் இந்த நிலவு ஒரு வேற்றுகிரக  விண்கலம் என்ற தியரி சற்று ஆழமாக நோக்கவேண்டிய கருத்துக்களை ஒட்டியே பேசப்படுகிறது.

70களின் துவக்கத்தில் ரஷ்ய விஞ்ஞானிகள் இருவர் எழுதிய ஒரு புத்தகத்தில் இதைப் பற்றிய முதல் சிந்தனை விதை விதைக்கப்பட்டது. மைக்கல் வாஸின், அலெக்சாண்டர் ஷெசெபர்கவ் என்ற இரண்டு ரஷ்யர்கள் இந்தத் தியரியை உலகத்துக்கு அறிமுகம் செய்தார்கள். இதை ஆங்கிலத்தில் ஸ்பேஸ்ஷிப் மூன் தியரி (The spaceship moon theory)  என்று அழைக்கிறார்கள்.

நிலவு குறித்த சந்தேகங்கள்;

1. பூமியின் ஈர்ப்புச் சக்தியைத் தாண்டிய அளவுக்கு நிலவு மிகப் பெரிய அளவினாலான கோள்.  எனவே பூமியின் ஈர்ப்பின்படி நிலவு இங்கே வந்திருக்க முடியாது.

2. பூமி உருவானபோது அதோடு ஒட்டாமல் தனியே பிரிந்த  ஒரு துகளே நிலவு என்ற பொதுவான கருத்து ஒரு  பொய். நிலவிலிருந்து கொண்டுவரப்பட்ட நிலவுக் கற்கள் பூமியை விட பழமையானவை என்றறியப்பட்டுள்ளன.

3. நிலவுக் கற்களின் தனிமங்கள் பூமியில் இல்லாதவைகள்.

4. ஏன் நிலவானது ஒரு புதிர் போல எப்போதும் ஒரே பக்கத்தை பூமிக்கு காண்பித்தபடி சுற்றிவருகிறது?

இதன்படி  வேற்றுகிரகவாசிகள் நிலவை நமது பூமியின் அருகே கொண்டுவந்திருக்கலாம்  என்றும் அல்லது  இயற்கையாக பூமியின் அருகே நிலை கொண்டுவிட்ட நிலவை வேற்று கிரகவாசிகள் தங்களது விண்கலமாக மாற்றிக்கொண்டார்கள் என்றும் நம்பப்படுகிறது. இதற்கு இவர்கள் காட்டும் காரணம் நிலவின் மேல் காணப்படும் பள்ளங்கள்.

கிரேட்டர்கள் எனப்படும் நிலவுப் பள்ளங்கள் மர்மமான முறையில் தட்டையாக தோன்றுவது ஏன் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. உதாரணமாக பூமியில் மில்லியன் வருடங்களுக்கு முன் ஏற்பட்ட ஒரு விண்கல் மோதலில் உண்டான பள்ளம் மிக மிக ஆழமாக காணப்படுகிறது. (இது அட்லாண்டிக் கடலின் கீழே இருக்கலாம்  சொல்லப்படுகிறது.) இந்த விண்கல் மோதலில்தான் டைனோசர்கள் ஒரேடியாக ஒரே இரவில் மொத்தமாக அழிந்தன என்ற கருத்தும் தற்போது பெரிய அளவில் அங்கீகாரம் பெற்று வருகிறது.

மேலும் பல பள்ளங்கள் நமது பூமியில் விண்கல் மோதலினால் ஏற்பட்டுள்ளன. அவை பல மைல் தொலைவுக்கு ஆழமாக காணப்படும் அதே வேளையில் எந்தவித பாதுகாப்பு வளையங்களும் (ஓசோன் லேயர் போன்று) இல்லாத நிலவில் ஏற்படும் பள்ளங்கள் அதிக ஆழத்தில் இருக்கவேண்டும் ஆனால் வியப்பான வகையில் நிலவுப் பள்ளங்கள் வெகு தட்டையாக தோற்றமளிக்கின்றன. நான்கு அல்லது ஐந்து மைல் அளவிலேயே இவை இருக்கின்றன. இதன் பின்னணியில் என்ன விஞ்ஞான காரணம் இருக்க முடியும் என்று ஆராய்ந்தால் கிடைக்கும் பதில் நம் நிலவு நம்பிக்கையை தகர்த்துப் போடுகிறது.

ஆங்கிலத்தில் Hollow Moon Theory என்றழைக்கப்படும் சதிக்கதையின் படி நிலவின் உட்பகுதி நிஜத்தில் மற்ற கோள்கள் போன்று அடர்த்தியான பாறைகளால் ஆனதல்ல. நிலவின் உட்பகுதி பெரிய குழி போன்றது. மனித இனம் பூமியில் தோன்றும்  முன்னே நிலவில் இறங்கிய வேற்று கிரகவாசிகள் நிலவின் உட்பகுதியில் இருந்த கடிமனான பாறைகளை எதோ காரணங்களுக்காக (வெற்றுப் பகுதியை உருவாக்க அல்லது அந்தப் பாறைகளில் இருந்த தனிமத்துக்காக) முழுவதும் குடைந்து எடுத்துவிட்டதால் உண்டான   பவுடர் போன்ற நுண் துகள்களே   நிலவின் மேலே காணப்படும் நிலவு மண் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு நிலவின் உட்பகுதியை குடைந்து அதைச் சுற்றி மிக மிகத் தடிமனான ஒரு ஏலியன் உலோகத்தால் அதை பூசி அல்லது தடுப்புச் சுவர் அமைத்து உள்ளே அவர்கள் பல சோதனைகளில் ஈடுபட்டு வருவதாக சந்தேகர்கள் யூகம் கொள்கிறார்கள். எனவேதான் நிலவின் மீது மோதும் விண்கற்கள் நான்கு ஐந்து மைல் தொலைவைத் தாண்டி ஆழமாக பள்ளங்கள் ஏற்படுத்த முடியவில்லை என்றும்  அந்த தட்டையான பள்ளங்கள் நிலவின் மேற் பகுதியில் உள்ளனதன் காரணம் இதுதான் என்றும் இதன் மர்மத்தை உடைத்துச் சொல்கிறார்கள் அவர்கள்.

எதற்காக வேற்றுகிரகவாசிகள் இப்படியான சோதனைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதற்கான விடை இல்லை. அதை நம்மால் அறிந்துகொள்ள இயலாது. யூகங்கள் மட்டுமே சாத்தியம். மேலும் இந்த சோதனைகள் நடைபெறும் நிலவின் பகுதியானது நம்மால் எப்போதுமே காண முடியாத நிலவின் இருண்ட பகுதி என்றும் (The Dark Side Of The Moon)   நிலவு எப்பொழுதுமே பூமிக்கு தன் ஒரே பக்கத்தையே காண்பித்தவாறு சுற்றிவருவதன் மர்மம் இதுவே என்றும் பொதுவாக நம்பப்படுகிறது.

நிலவில் மனிதன் இறங்கினானா என்ற கேள்வியை சற்று ஒதுக்கிவிட்டு கீழே இருக்கும் கருத்தை ஆராயலாம். நிலவில் அப்போலோ 11 விண்கலம் இறங்கியபோது நீல் ஆர்ம்ஸ்ட்ராங் இந்த வேற்றுகிரகவாசிகளை எதிர்கொண்டாதாக ஒரு கதை நிலவுகிறது.  நீல் ஆர்ம்ஸ்ட்ராங்-ஹூஸ்டனுக்கும் இடையேயான தகவல் தொடர்பு இரண்டு நிமிடங்கள் முற்றிலும் அற்றுப்போனது. அவர் கருத்துப்படி நிலவில் மிக மிகப் பெரிய இரண்டு வேற்றுகிரக விண்கலங்கள் அங்கே ஏற்கனவே இருந்தன.

ஓட்டோ பைண்டர் என்ற ஒரு நாசா விஞ்ஞானியின் கருத்துப்படி அமெரிக்க ஹேம் ரேடியோக்கள் அப்போது நிலவில் நிகழ்ந்த உரையாடலை கிரகித்துக் கொண்டன. அந்த இரண்டு நிமிட வானொலி  அமைதியில் (Radio Silence)  நிகழ்ந்த உரையாடல்:

ஆர்ம்ஸ்ட்ராங்: என்னது அது? அதுதான் எனக்குத் தெரிய வேண்டும்...

மிஷன் கண்ட்ரோல்: அங்கே என்ன? மிஷன் கண்ட்ரோல் அப்போலோ பதினொன்றை அழைக்கிறது...

ஆர்ம்ஸ்ட்ராங்: இந்த இயந்திரங்கள் மிகப் பெரியதாக இருக்கின்றன. மகா பிரம்மாண்டமானவை.. கடவுளே, கண்டிப்பாக நீங்கள் இதை நம்பப்போவதில்லை.. நிலவின் பள்ளங்கள் உள்ள அந்தப் பகுதியில் நான் இன்னும் சில விண்கலங்களை இங்கே பார்க்கிறேன்.. நிலவின் மேலே அவை நின்று கொண்டிருக்கின்றன எங்களை கவனித்தவாறு...

நாசா அப்போலோ 17க்குப் பிறகு தனது நிலவுத் திட்டத்தை திடுமென நிறுத்திக்கொண்டது  வேற்றுகிரகவாசிகளின் எச்சரிக்கையினால்தான் என்று சிலர் நம்புகிறார்கள். லூனா பேஸ் (Luna Base) என்றழைக்கப்படும் இந்த வேற்று கிரகவாசிகளின் சோதனைகள் குறித்து நாசா அறிந்தே இருக்கிறது என்ற கருத்தும் இருக்கிறது.


நிலவு குறித்து மேலும்  பல நம்ப இயலாத கருத்துக்கள் இருக்கின்றன. அதில் ஒன்று டைம் ட்ராவல் சம்பந்தப்பட்டது.  கால பிரயாணம் செய்து பிற்கால நமது சந்ததியினர் ,மனிதன் உருவாகும் முன்னரே இங்கு வந்து நம்முடைய நல் வாழ்வுக்காக நிலவை அமைத்தார்கள் என்ற கருத்தும் பரவலாக எண்ணப்பட்டு வருகிறது.

கொஞ்சம் நிலவு கொஞ்சம் புனைவு என்பதை நிஜமாக்கும் இத்தனை சங்கதிகள் சற்று ஆச்சர்யம் சற்று அதிர்ச்சி அளிப்பவை என்பதை நானறிவேன். ஆனால் இதை நம்புவதும், ஒரேடியாக தூர எறிவதும் அவரவர் விருப்பதிற்க்குரியது.

நிலவைப் பற்றி இன்னும் நாம் பல கவிதைகள் புனைய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆனால் நிலவை காணும் பொழுதெல்லாம் இந்த வட்ட வடிவ வெண்ணிற அதிசயம் நம்மை கண்காணிக்கும் ஒரு வான்வெளிக் கண் என்பதை சற்று நினைவில் கொள்வது அவசியம் என்று தோன்றுகிறது.





 இசை விரும்பிகள் XXVIII - எம் எஸ் வி :  தீரா இசை.








Friday 18 September 2015

கொஞ்சம் நிலவு கொஞ்சம் புனைவு

இந்தப் பதிவு  அறிவியல் சம்பந்தப்பட்டதாக  இருந்தாலும் கான்ஸ்பிரசி தியரி எனப்படும் (தமிழில் சதிக்கதை?) மிகப் பிரபலமான   அல்லது உண்மையென நாம்  நம்பிக்கொண்டிருக்கும் பல நிகழ்வுகளை அதிர்ச்சியளிக்கும்  ஒரு  மாறுபட்ட பார்வையோடு  பார்க்கும் பதிவு.  இதை ஒரேடியாக மறுப்பவர்களும், இதை நம்புவர்களை ஏளனம் செய்பவர்களும் ஏராளம். நான் இதை எழுதும் நோக்கம் இதுதான்: மூளைச்  சலவை செய்வதைப் போன்று நமக்கு கொடுக்கப்படும் தகவல்களை பிரதானமாக மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார வைக்காமல்  பல  திகிலூட்டும் திகைப்பூட்டும்  பார்வைகளுக்கும் சிந்தனைகளுக்கும் நாம் தயாராக இருப்பது அவசியம்.

         Why should always we believe what we are told?

     

                       கொஞ்சம் நிலவு 
                             கொஞ்சம் புனைவு 


     "கழுகு தரையிறங்கி விட்டது." என்ற முதல் தகவல் நாஸாவிலுள்ள ஹூஸ்டனுக்கு வருகிறது. சற்று நேரம் கழித்து ஒரு மனித உருவம் மெல்ல மெல்ல லூனார் மாட்யூல் ஈகிள் கலத்திலிருந்து வெளியே படிகளில் இறங்குகிறது. திரளான மக்கள் கூட்டம் தொலைகாட்சி திரையை அமைதியாக கவனித்தபடி இருக்கிறது.  கடைசிப் படியைத் தாண்டியதும் அந்த மனித உருவம்  நிலப்பரப்பில் கால் வைக்கிறது.

  பார்த்துக்கொண்டிருக்கும் மக்கள் சிலிர்க்கிறார்கள். பலருக்கு அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. சந்தோஷக் கண்ணீர்.     பரவசமான நொடிகள். கனமான கணங்கள்.  " (ஒரு) மனிதனுக்கு இது ஒரே ஒரு  காலடி. ஆனால் மனித இனத்துக்கு  இது ஒரு ராட்சஷ  பாய்ச்சல் ." மிகப் புகழ் பெற்ற வரிகள் இவை. "A small step for (a) man but a giant leap for mankind" என்ற கரகரப்பான தெளிவற்ற குரல் கேட்கிறது.  வரலாறு நிகழ்ந்தது.

சொன்னவர்; நீல் ஆர்ம்ஸ்ட்ராங்.
நேரம் :  ஜூலை 20, 1969. காலை.
இடம்:   நிலவு.

   நிலவில் மனிதன் காலடி வைத்தது ஒரு மகா  திகைப்பான நிகழ்வு. ஒரு பெரிய ஆச்சர்யத்தை அதிரடியாக அரங்கேற்றிய அசாதாரண அனுபவம். நிலவின் சீ ஆப் ட்ரான்க்விலிடி, (Sea Of Tranquility) என்ற ஒரு இடத்தில் தரையிறங்கிய அமெரிக்க அப்போலோ 11 விண்கலம் ஒரு இறவா சரித்திரமாக எழும்பி நிமிர்ந்தது. மனிதர்கள்  எல்லோரும் பெருமைப் படக்கூடிய சாதனையின் உச்சம்  என அது வர்ணிக்கப்படுகிறது.  மறுக்க முடியாத பெருமைதான். 

 ஆனால் 69ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை கேட்கப்பட்டு வரும் கேள்வி ஒன்று இந்தப் பெருமையை குறித்து சிறிதும் அக்கறை கொள்ளவில்லை. கேள்வி இதுதான்:  "மனிதன் உண்மையிலேயே நிலவுக்குப் போனானா?" சற்று வேறு விதமாக சிந்தித்தால் நிலவில் மனிதன் நடந்து சென்ற சாதனையின்  பின்னே இருக்கக்கூடிய பல விடையில்லாத கேள்விகள் இந்த நிகழ்வின் சாத்தியங்களை உடைத்து நொறுக்குகின்றன.

        நிலவில் மனிதன் இறங்கினானா என்ற கேள்விக்கான பதிலை நாசாவும் அமெரிக்க அரசும் நமக்குத் தெளிவாக சொல்லிவிட்டன. நாம் படிக்கும் வரலாறும் இதை உறுதி செய்கிறது. உலகின் பெரும்பான்மையான மக்கள் இதை நம்பியே வருகிறார்கள். ஆனால் எல்லோருமல்ல. இன்றைக்கு 12 மில்லியன் அமெரிக்க மக்களே இந்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங் சாகசத்தை நம்பத் தயாராக இல்லை. அதை ஒரு புனைவு என்று ஒதுக்கிவிடுகிறார்கள். பொதுவில் ரஷ்யர்கள் இதை இது நிகழ்ந்த  1969லேயே நம்பவில்லை. நாசா கூறும் கதைகளில் நம்பிக்கை இழந்த பலர் உண்மையைத் தேடி வேறு பக்கம் நகர்ந்துவிட்டார்கள். இதைப் படிக்கும் பலருக்கு இது சற்று வியப்பாக ஏன் அபத்தமாகக் கூடத் தோன்றலாம். 400 மில்லியன் பொது மக்களால் நேரலையாக பார்க்கப்பட்ட ஒரு மின்சார அனுபவத்தை இவ்வாறு இரக்கமில்லாத இரேஸர் கொண்டு அழிப்பது முட்டாள்தனத்தின் உச்சம் என்ற எண்ணம் வரலாம். ஆனால் நாம் நம்பிக்கொண்டிருக்கும் பல "உண்மைகளுக்குப்" பின்னே உள்ள உந்து சக்தி அறிவியல் கோட்பாடுகளுக்கும் மனித ஆசைகளுக்கும்  இடையேயான தூரத்தை திரளான தகவல்களால் நிரப்பி நம்மை மூளைச் சலவை செய்வதில் அடங்கியிருக்கிறது.

     ஒரு காலத்தில் செவி வழிச் செய்தியாக கேட்ட ஒரு செய்தியை   பிறகு (எம் சி சி யிலிருந்து சுட்ட) ஒரு கம்யூனிகேஷன் புத்தகத்தில் காண நேரிட்ட போது எனக்குள் ஒரு உலுக்கல் உண்டானது. இன்டர்நெட் இல்லாத அந்த சூழலில் அதைப் பற்றிய மேலான தகவல்கள் அரிதாக வசப்படும் காலத்தில் நான் இந்த நிலவில் மனிதன் என்ற செய்தியை கொஞ்சம் சந்தேகத்துடனே பார்த்தேன். ரஷ்யர்கள் இதைப் பற்றி எழுதியிருக்கிறார்கள் என்றறிந்து அந்தப் புத்தகத்தைத் வீணாக தேடி அலைந்திருக்கிறேன். இறுதியில் கம்ப்யூட்டர் என் வசப்பட்டபோது நிறைய தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது.

      அடுத்து நான் எழுதப் போவது என் கற்பனையில் உதித்த  துளிகளல்ல. நாசாவின் நிலவுத் திட்டத்தை (moon mission ) துவக்கத்திலிருந்தே சந்தேக கண்களுடன் பார்த்துவந்த ரஷ்யர்கள் மேலும் மாற்றுப் பார்வை கொண்ட ஸ்கெப்டிக்ஸ் (தமிழில் இதை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. சந்தேககர்கள்?) இந்த நிலவு சாதனை பற்றி பலவிதமான கேள்விகளை எழுப்பியுள்ளார்கள். அவற்றையும் அவற்றிற்கு நாசா அளித்த விளக்கங்களையும்  கீழே  படியுங்கள்.

சந்தேகம்  1. காற்றில்லாமல் அசைந்த  கொடி. 



சந்தேகர்கள் நிலவு மிஷன் முழுவதுமே ஒரு நாடகம் என்று மேசை மீது அடித்துச் சொல்லும்படியாக  மிகத் துணிவாக கூறுவதற்கான முதல் காரணம் எப்படி காற்றில்லாத நிலவில் அமெரிக்க கொடி அசைந்து பறக்க முடியும் என்பதே.  இந்த அசையும் கொடி ஒரு மிக முக்கியமான ஆதாரமாக அவர்களால் முன் வைக்கப்படுகிறது. நீல் ஆர்ம்ஸ்ட்ராங் , எட்வின் பஸ் ஆல்டிர்ன் இருவரும் நிலவில் அமெரிக்கக்  கொடியை நட்டபோது அது பட்டொளி வீசிப் பறந்த கதையாக சற்று அசைந்ததை நாம் இன்றும் அந்த காணொளியை காணும்போது பார்க்கலாம். . நிலவில் காற்றுக்கான வாய்ப்பே  இல்லாத போது இந்த அசைவு எப்படி சாத்தியம்?

நாசாவின் பதில்: உண்மையில் கொடி அசைந்தது காற்றினால் அல்ல. ஏனென்றால் நிலவில் காற்று இல்லை. அந்த அசைவு இனெர்ஷா (Inertia) என்கிற இயற்பியல் விதியின் படி நிகழ்ந்தது. கொடிக் கம்பம் அசைந்தபோது அந்த அதிர்வு மேலே சென்று கொடியை அடைய  அதுவும் அதிர்ந்தது. மேலும் சுருட்டி வைக்கப்பட்டிருந்த கொடி விரிக்கப்பட்ட போது ஏற்பட்ட  சலனமாகவும் அது இருக்கலாம்.
   
பிற தகவல்: நிலவில் நடப்பட்ட முதல் கொடி  அப்போலோ 11 விண்கலம் நிலவிலிருந்து கிளம்பியபோது வெளியேறிய புகையின் வேகத்தில் அப்போதே சரிந்து விழுந்துவிட்டதாக நாசா தெரிவித்துள்ளது.

சந்தேகம் 2.  பாதிப்பு இல்லாத தரையிறக்கம் 



அப்போலோ விண்கலம் நிலவில் இறங்கிய போது அந்த இடத்தில் எந்தவிதமான பாதிப்புப்  பள்ளங்களும்  (impact crater or blast crater) உண்டாகாமல் இருந்தது எப்படி?  மேலும் நிலவின் மிக மிருதுவான மண் வெளியில் அந்த விண்கலத்தை ஒட்ட வைத்தது போல அந்தக் காட்சி தோன்றுகிறது.  நம் பூமி போன்று  ஒசான் படலம் எதுவும் இல்லாததால் இயல்பாகவே அண்டவெளி விண்கற்கள் மூலம் நிலவு  பலவிதமான பள்ளங்களை   தன் மேல் பரப்பில் கொண்டுள்ளது. அப்போலோ விண்கலம் போன்ற மிக சக்தி வாய்ந்த அறிவியல் இயந்திரம் ஒன்று ஆஜானுபாகுவாக அங்கே தரையிறங்கிய போதோ எந்த விதமான பாதிப்பும் நிலவின் மேற்பரப்பில் ஏற்படவில்லை.  இது ஏன்?

நாசா: ஒரு கிரேட்டர் ஏற்படத் தேவையான அதிக அழுத்தம் இல்லாமல் லூனார் மாடியூல் வெகு குறைந்த அழுத்தத்துடன்  நிலவில்  இறங்கியதால் அங்கே எந்த பள்ளமும் ஏற்பட்டவில்லை. மேலும் நிலவின் மேற்பரப்பை அடையும் முன் அந்த மாட்யூலின் ப்ரோபெல்லர்கள் அதிக அழுத்தத்தை வெளியிடாமல் தனக்குள் உள்ளிழுத்துக் கொண்டன. கான்க்ரீட் தளத்தில் ஒரு விமானம் தரையிறங்கும் போது அங்கே எந்த தடயங்களும் பதிவுகளும் இருக்காது என்ற விதியே இதற்குக் காரணம்.

சந்தேகம் 3. பல கோணத்து வெளிச்சம்.





நிலவின் வெளிச்சம் சூரிய ஒளியின் பிரதிபலிப்பு. ஆனால் நிலவில் அமெரிக்க விண்வெளியாளர்கள் இருக்கும் படங்களில் பல கோணங்களில் வெளிச்சங்கள் மற்றும் நிழல்கள் தெரிவது எப்படி? இது ஒரு சினிமா செட்டில் காணப்படும் ஸ்டூடியோ விளக்குகள் போல பலவிதமான இடங்களிலிருந்து வெளிச்சம் வருவதைப் போன்று தோன்றுகிறது. இந்த பல கோண வெளிச்சம் எப்படி சாத்தியம்?

நாசா: நிலவில் இருக்கும் ஒழுங்கற்ற மலை முகடுகளும், திட்டுக்களுமே இந்த கோளாறான நிழல்கள் தோன்றக் காரணம். . அவ்வாறான சீரற்ற மேல்பரப்பின் பாதிப்பே இந்த வித விதமான வெளிச்சம் மற்றும் நிழல்கள் என்று நாசா சொல்வதை  பல சந்தேகர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. எவ்வாறு சாதாரண மலை முகடுகள் இரண்டு நிழல்களை துல்லியமாக 45 டிகிரியில் வேறுபட்டு தோன்றச் செய்யமுடியும்?

சந்தேகம் 4. தொங்கும் பிம்பம்.


அப்போலோ 12 மிஷன் நிலவில் இறங்கிய படங்கள் வெளியிடப்பட்டதும் விண்வெளியாளரின் ஹெல்மெட்டில் தோன்றும் ஒரு பிம்பம் பலரை திகைப்பில் ஆழ்த்தியது. அது அந்தரத்தில் தொங்கும் ஒரு அடையாளம் தெரியாத பொருள் ஒன்றின்  பிம்பம். அம்மாதிரியான ஒரு பொருள் நிலவில் இருப்பதற்கான தேவையோ சாத்தியமோ இல்லாதபோது அது என்ன என்ற கேள்விக்கு  பதிலில்லை. சந்தேகர்கள் இதை ஸ்டூடியோவில் இருக்கும் ஸ்பாட் லைட் போன்ற ஒரு கருவி என்று நம்புகிறார்கள். நிலவு மிஷன் முழுவதுமே ஒரு ஸ்டூடியோ காட்சியமைப்பு என்ற அவர்களது கூற்றுக்கு இது ஒரு சான்று.

நாசா இதற்கு பதில் சொன்னதாகத் தெரியவில்லை.

சந்தேகம் 5.  நிலவு நடைபயணத்திற்கான மறைக்கப்பட்ட கேபிள்கள் .

நிலவில் ஆர்ம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின் இருவரும் குதித்து குதித்து நடை பயின்றது ஈர்ப்பு விசை இல்லாத சூழலின் உண்மைத் தன்மையை உலகுக்கு காட்டியது- விஞ்ஞான ரீதியில். ஆனால் சந்தேகர்கள் இந்த குதிப்பு நடையை நாசாவின் மோசடி என்று சொல்கிறார்கள். நிலவில் மனிதன்  நடந்த அந்த நிகழ்ச்சியின் காணொளி காட்சிகளை X2.5 என்ற வேகத்தில் ஓடச் செய்து பார்த்தால்  பூமியின் ஈர்ப்பு விசைக்கேற்ப அந்த இருவரும் சாதாரணமாக நடந்து செல்வதைக் காணலாம். அப்படியானால் அந்த ஈர்ப்பு விசையில்லாத சூழலுக்கான குதிப்பு எவ்வாறு சாத்தியப்பட்டது?  மறைவான கேபிள்கள் கொண்டு (போட்டோக்களில் மிக மெல்லியதாக இது தெரியும்) நாசா இந்த விஞ்ஞானத்தை மிமிக் செய்ததாக சந்தேகர்கள் கூறுகிறார்கள்.

நாசா இதற்கும் என்ன பதில் சொல்லியது என்று தெரியவில்லை. ஒருவேளை நாசா இதை மற்றொரு கற்பனை என்ற வகையில் ஒதுக்கியிருக்கலாம்.

சந்தேகம் 6. விண்மீன்கள் இல்லாத இரவு வானம்.





நாசா வெளியிட்ட அப்போலோ 11 நிலவில் இறங்கிய சாதனைப்  படங்கள் எதிலும் ஒரு துளி நட்சத்திரத்தைக் கூட பார்க்க முடியாது. அத்தனைப் படங்களிலும் வானம் மொத்தமாக கழுவி விடப்பட்டதைப்  போல முழு கருமையாக தோற்றமளிக்கும். புகைப்படம் என்றில்லை நாசா வெளியிட்ட காணொளி காட்சிகளில் கூட நட்சத்திரங்களை மருந்துக்கும் காண இயலாது. நிலவுக்கு மேலே மேகங்கள் இல்லாத நிலையில் நட்சத்திரங்கள் இங்கே பூமியிலிருப்பதை விட தெளிவாகவும், இன்னும் பிரகாசமாகவும் தோன்றவேண்டிய இயல்பான இயற்கை விதியின்படி இல்லாமல் ஒட்டு மொத்த விண்மீன்களும் காணாமல் போனது ஏன்?

நாசா இதற்கு  நிலவிலிருந்து படங்கள் எடுக்கப்பட்டது காலை நேரம். எனவே சூரிய ஒளியில் நட்சத்திரங்கள் தென்படவில்லை என்று பதில் சொல்லியது. மேலும்   விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட எந்த ஒரு படத்திலும் நட்சத்திரங்களை காண முடியாது. எனவே இது ஒன்றும் புதிதானதல்ல என்ற விளக்கமும்  கொடுக்கப்பட்டது. உண்மையில் விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட எந்த படத்திலும் வானம் வெறுமையாகவே காட்சியளிப்பது நாசாவின் இந்த விளக்கத்தை நம்பும்படி செய்தாலும் சந்தேகர்கள் இதற்கு கொடுக்கும் காரணம் வேறு.

நிலவிலிருந்து காணப்படும் பூமியின் தோற்றம் எதோ ஓட்ட வைத்தது போல தோன்றுவதாக பொதுவாக சந்தேகர்கள் நம்புகிறார்கள். அவர்களின் கருத்துப்படி நிலவிலிருந்து எடுக்கப்பட்டதாக நம்பப்படும் படங்களில் நட்சத்திரங்கள் இருந்தால் அவ்வகையான நட்சத்திரக்  கூட்டமைப்பு வானில் எங்கிருக்கிறது என்பதை வைத்து அந்தப் படம் பூமியின் எந்தப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டது என்பதை சுலபமாக அறிந்துகொள்ள முடியும். எனவே  நாசா தான் வெளியிட்ட படங்களில் நட்சத்திரங்களை முழுதும் அழித்து விட்டது. மேலும் நிலவிலிருந்து நட்சத்திரங்கள் எவ்வாறு தோன்றும் என்பதும் யாருக்கும் இதுவரை தெரியாது. எனவே இந்த உண்மையை பரிசோதிக்க வேண்டிய நிரப்பந்தகளை ஒதுக்கிவிட்டு ஒரேடியாக நட்சத்திரங்களை நீக்கிவிட்டால் அந்தப்  பிரச்சினைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிடலாம் என்பது   நாசாவின் எண்ணம்.

சந்தேகம் 7.  நிலவுப் பாறையின் மீது தெரியும் ஆங்கில எழுத்து.



நிலவு இறக்கம் (Moon landing) தொடர்பான நாசா வெளியிட்ட ஒரு படத்தில் அதிர்ச்சியூட்டும் ஒரு படம் சந்தேகர்களுக்கு தீனியாக அமைந்தது. அந்தப் படத்தில் நிலவில் இருக்கும் ஒரு பாறை (அல்லது கல் எனலாம்) ஒன்றில் மிகத் தெளிவாக ஆங்கில C என்ற எழுத்து இருப்பதைக் காணலாம். எப்படி இந்த C நிலவில் தோன்ற முடியும் என்ற கேள்விக்கு சந்தேகர்கள் கூறும் பதில் இதுதான்:  நிலவு இறக்கமே ஒரு நாடகம். அது ஒரு ஸ்டூடியோ செட்டப். எனவே வசதிக்காக ஒரு கல்லின் மீது அந்த C என்ற எழுத்து ஒரு குறியீடாக எழுதப்பட்டிருக்கலாம். செட் ப்ராபர்டீஸ் என்ற வகையில் அந்தக் கல் அங்கே இருந்திருக்கலாம். நாசா செய்த தவறு அந்த C எழுதப்பட்ட கல்லை கவனிக்காது நிலவுக் கல் என்று வெளியிட்டதுதான் என்கிறார்கள்.

நாசா இதற்கு அளித்த காரணம் அபத்தமானது. படத்தை டிவலப் செய்தபோது அந்த C என்ற எழுத்தை யாராவது எழுதியிருக்கலாம், அல்லது டிவலப் செய்முறையின் போது மனித ரோமம் ஒன்று அங்கே எதேச்சையாக ஓட்டியிருக்கலாம் என்பது நாசாவின் விளக்கம்.

சந்தேகம் 8. மறையும் கிராஸ் ஹேர்ஸ் (Cross-hairs)

கிராஸ் ஹேர்ஸ் என்பது  கூட்டல் குறி போன்ற (+) பிளஸ் வடிவம் கொண்டது. பொதுவாக கேமராக்களில் இந்த + பிம்பங்களை சரியாக படம் பிடிக்க வகை செய்யும் விதத்தில் பயன்படுத்தப்படுகிறது. (டெலஸ்கோப் துப்பாக்கிகளில் இதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஒரு பொருளை துல்லியமாக அடையாளம் கண்டு அதை மிகச் சரியாக position செய்வதற்கு இது உதவுகிறது.) இந்த + கேமராக்களில் எடுக்கப்படும் பிம்பங்களின் முன்னே ஒரு வாட்டர் மார்க் போன்று தென்படும். நாசா வெளியிட்ட நிலவுப் படங்களில் இந்த கிராஸ் ஹேர்ஸ் சில இடங்களில் படங்களின் பிம்பங்களுக்கு பின்னே தென்படுகிறது. அதாவது படங்கள் எடுக்கப்பட்ட பிறகு கிராஸ் ஹேர்ஸ்களுக்கு முன்னே சில பொருட்களை வைத்து புனைவாக படங்கள் மாற்றியமைக்கப்பட்டதைப் போல இது தெரிவதாக சந்தேகர்கள் கருதுகிறார்கள். ஆனால் மர்மம் என்னவென்றால் இத்தனை அப்பட்டமான தவறை நாசா ஏன் செய்யவேண்டும் என்பதுதான். நாசா நினைத்திருந்தால் இந்த கிராஸ் ஹேர்ஸ் இல்லாமலே படங்களை எடுத்திருக்க முடியும். பின் ஏன் இந்த வெளிப்படையான தவறு என்று புரியவில்லை.

சந்தேகம் 9.  நிலவில் பாதச் சுவடுகள்.



பஸ் ஆல்ட்ரினின் நிலவு பாதச் சுவடு மிகப் பிரசித்தமான ஒன்று. இந்த நிலவுச் சுவடுகள் எதோ ஈரப்பதமுள்ள மண் மீது படிந்த சுவடுகள் போன்று மிகத் தெளிவாக இருப்பது குறித்து சந்தேகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். நிலவின் மண்ணில் ஈரப்பதம் இல்லாதபோது   எவ்வாறு அங்கே இத்தனை துல்லியமாக சுவடுகளை பதிக்க முடியும்?

நாசா இதை அபத்தம் என்று ஒதுக்கிவிட்டது. ரெகலெத் எனப்படும் நிலவு மண் எரிமலை சாம்பலைப் போன்றது. நன்றாக அரைக்கப்பட்ட மாவுடன் இதனை ஒப்பிடலாம். எனவே அதன் மீது நீங்கள் நடக்கும் போது இயற்கையாகவே அது ஒன்றோடு ஒன்று எளிதில் குழைந்து பின் பிணைந்து உங்கள் காலனியின் பதிவை உண்டாக்கிவிடும் என  நாசா விளக்கம் அளித்தது.  ரெகலெத் எனப்படும் குழைவான மண் அண்டவெளிக் கற்கள், பாறைகள், மற்ற நிலவுகளிலும் உண்டு. ஏன்? இது பூமியிலும் இருக்கிறது. ஆனால் இங்கே இருக்கும் ஒன்று நிலவில் இல்லை. அது ஈரப்பதம். எனவே சந்தேகர்கள் நாசாவின் இந்தக் கூற்றை மறுக்கிறார்கள்.

சந்தேகம் 10. வான் ஆலன் கதிர்வீச்சுப் பாதை.

நிலவுக்குச் செல்ல வேண்டிய பாதை அத்தனை இலகுவானதும் இன்பமயமானதும் அல்ல. நிலவு செல்லும் எந்த விண்கலமும் அதிலுள்ள விண்வெளியாளர்களும் வான் ஆலன் என்ற மிகக் கடுமையான கதிர்வீச்சுப் பாதையை கடந்து செல்லவேண்டும். இது  Van Allen Radiation Belt என்று அழைக்கப்படுகிறது.  இந்தப் பகுதி பூமியின் காந்த ஈர்ப்பு சக்தியினால் நிலவைச் சுற்றி ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது. எப்போதும் மாறாதது. அப்போலோ திட்டங்கள் முதன் முதலாக மனிதர்களை இந்த ராட்சஷ கதிர்வீச்சுப் பாதைக்குள் செலுத்தின. இதைத்தான் சந்தேகர்கள் மறுகிறார்கள். வான் ஆலன் பெல்ட் பகுதிக்குள் நுழையும் எந்த மனிதனும் நொடியில் அந்த மிக சக்திவாய்ந்த கதிர்வீச்சின் வெப்பத்தில் உயிரோடு அவியலாகிவிடுவான். எத்தனை அடுக்குகளாக அலுமினியம் பூசப்பட்ட விண்கலமாக அது இருந்தாலும் இதுதான் அவனுக்கு ஏற்படும்  கதி. சந்தேகர்களின் கூற்றுப்படி இந்த வான் ஆலன் பெல்ட் பகுதியை மனிதன் தாண்டிச் செல்லக்கூடிய அந்த விந்தையான அறிவியல் தொழில்நுட்பம் இன்றுவரை நமக்கு கைகூடவில்லை. எனவே மனிதன் நிலவுக்குச் சென்றான்  என்பது ஒரு புனைவான நிகழ்வு என்று தீர்மானமாகச் சொல்கிறார்கள்.

நாசா இதற்கு ஒரு வினோதமான பதிலை கொடுத்தது. அதாவது மிகக் கடுமையான கதிர்வீச்சுப் பாதையான வான் ஆலன் பெல்ட் பகுதிக்குள் அமெரிக்க வின்வெளியாளர்கள் நீண்ட நேரம் பயணம் செய்யாமல் வெகு குறைந்த நேரத்தில் அவர்கள் அந்தப் பகுதியை கடந்து செல்லும்படி அவர்களது விண்கலம் ப்ரோகிராம் செய்யப்பட்டிருந்தது. எனவே அவர்கள் குறைவான கதிர்வீச்சு பாதிப்புடன் தங்களை பாதுகாத்துக்கொண்டனர் என்று நாசா விளக்கம் சொல்லியது.

பிற தகவல்:   2014 இல்  நாசாவைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானி," முதலில் நாம் வான் ஆலன் பெல்ட் போன்ற கடுமையான அபாயகரமான கதிர்வீச்சுப் பாதைகளில் எவ்வாறு மனிதர்களை பாதுகாப்பாக அனுப்புவது  என்ற அறிவைப்  பெறுவது அவசியம். அதன் பிறகே நம்மால் மனிதர்களை வேறு கிரகங்களுக்கு வெற்றிகரமாக அனுப்பமுடியும். இந்த அறிவு சாத்தியப்படும் நாள் வெகு தூரமில்லை" என்று தெரிவித்திருந்தார். பின் வேறெந்த அறிவையும் தொழில் நுட்பத்தையும் கொண்டு 69 லேயே மனிதனை நாசா நிலவுக்கு அனுப்பமுடிந்தது? என்று சந்தேகர்கள் தற்போது  தீவிரமாக குரலை உயர்த்த ஆரம்பித்துவிட்டார்கள்.

 பொதுவாக இந்த நிலவு சாகசத்தை நம்பாதவர்கள் எழுப்பும் கேள்விகளே மேலே இருப்பவை. இது  தவிர இன்னும் சில கேள்விகள்  இந்தப் பட்டியலில் உண்டு. இப்போது நாம் மற்றொரு கோணத்தையும் பரிசீலித்துவிடுவது தேவையாக இருக்கிறது.

ஸ்டான்லி குப்ரிக் தொடர்பு. (The Stanley Kubrick link)





நிலவில் மனிதனை அனுப்பிய அந்த அப்போலோ நிகழ்ச்சி ஒரு நாடகம்/செட்டப்  என்று சொன்னால் அதை அத்தனை தத்ரூபமாக நிஜம் போலவே எடுத்தது யார் என்ற கேள்வி உங்கள் மனதில் எழுவது ஒரு கண்டிப்பான அடுத்த கட்டம். இதற்கான பதிலையும் அதே சந்தேகர்கள் சொல்லிவிட்டார்கள்.

   நிலவில் மனிதன் இறங்கியதை படம் பிடித்தது ஸ்டான்லி குப்ரிக் என்னும் தனித்துவம் வாய்ந்த ஒரு அமெரிக்க இயக்குனர். இந்த ஸ்டான்லி குப்ரிக் The killing, Spartacus, Lolita, Dr.Strange Love போன்ற மிகப் புகழ் பெற்ற பல படங்களை இயக்கியவர். உதாரணமாக இன்றளவும் ஹாரர் என்ற ஜான்ரவில் (Genre) பலரால் முதலிடம் என்று கருதப்படும் தி ஷைனிங் (The Shinning) என்ற படத்தை இயக்கியவர் இவர்தான்.  இவர் போட்ட பாதையில்தான் பின்னாளில் மார்டின் ஸ்கோர்ஸசி, குவாண்டின் டாரண்டினோ போன்ற இன்றைய இயக்குனர்கள் உலா வர முடிந்தது. 1968 இல் இவரது இயக்கத்தில் வந்த படம் ஒன்று அப்போது ஒரு மாபெரும் சகாப்தமாக பெயர் பெற்றது. இன்று ஆயிரம் State Of The Art தொழில் நுட்பம் கொண்டு அவதார் போன்ற படங்கள் எடுக்கப்பட்டாலும் குப்ரிக்கின் 2001:The Space Odyssey படத்தையே பலர் science fiction ஜான்ரவின் அதி நவீனம் என்று சொல்கிறார்கள். நோலனின் Interstellar படத்தைக் காட்டிலும் குப்ரிக்கின் ஸ்பேஸ் ஒடிசியே மிகச் சிறந்த படம் என்று பெருவாரியான "மேல்தட்டு" வர்க்கத்தினர்  கூறுகிறார்கள்.

   இந்த 2001 ஸ்பேஸ் ஒடிசி   1968 இல் அதுவரை  மக்கள் காணாத அறிவியல் சாகசத்துடன்  வழக்கமான சை-பை போலில்லாது முற்றிலும் வேறு விதமாக இருந்தது. இப்படம் பார்த்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஸ்பீல்பெர்க் இது பற்றி  "எங்கள் தலைமுறை பிக் பேங் இந்தப் படம்" என்று சொல்கிறார். அத்தனை மகத்தான படமாக இது இருந்தது. சொல்லப்போனால் இன்னும் இருக்கிறது. இப்போது எதற்காக ஸ்பேஸ் ஒடிசி பற்றி ஒரு பத்தி என்கிறீர்களா? காரணம் இல்லாமலில்லை.

  சிலர் இந்தப் படத்தைக் கண்ட நாசா  தங்களது நிலவு திட்டத்திற்காக புனைவாக ஒரு சிறு படம் எடுக்க குப்ரிக்கை அணுகியது என்கிறார்கள். படத்தில் எடுக்கப்பட்டிருக்கும் நிலவு தொடர்பான காட்சிகளைக் கண்ட நாசா அதுவரை அத்தனை துல்லியமாக விண்வெளியை யாரும் காட்டியதில்லை என்ற உண்மைக்காக  குப்ரிக்கை தங்கள் திட்டத்திற்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொண்டதாக சொல்கிறார்கள். இன்னும் சிலர் குப்ரிக் நாசாவினால் பெரிய அளவில் வணிக ரீதியாக உதவி செய்யப்பட்டு, வளர்க்கப்பட்டு,   நிலவு திட்டத்துக்கான  ஒத்திகையாக  உருவாக்கிய படமே ஸ்பேஸ் ஒடிசி என்று ஆணித்தரமாக நம்புகிறார்கள்.

  இவர்களின் கூற்றில் ஒதுக்கித் தள்ள முடியாத பல உண்மைகள் உள்ளன. ஸ்பேஸ் ஒடிசி படத்திற்கான ஸ்பெஷல் கேமரா (விண்வெளியை தத்ரூபமாக படம் பிடிக்கவேண்டி) நாசாவினால் கொடுக்கப்பட்டது. இந்தப் படம் ஆரம்பித்த வருடம் 1964. அதே வருடம்தான் நாசாவின்  கனவுத் திட்டமான நிலவு மிஷன் -அப்போலோ 11 க்கான துவக்கமும் ஆரம்பித்தது. மேலும் சுவாரஸ்யமாக விஞ்ஞானி பிரெடெரிக் ஒர்ட்வே (Frederick Ordway) என்பவர் ஒரே சமயத்தில் நாசாவின் அப்போலோ 11 மிஷனிலும் குப்ரிக்கின் ஸ்பேஸ் ஒடிசி படத்தின் முக்கியமான விஞ்ஞான ஆலோசகராகவும் இருந்திருக்கிறார். இது தவிர இன்னும் பல கோடுகள் நாசாவின் அப்போலோ 11 நிலவு திட்டத்தையும் குப்ரிக்கின் அசாத்திய மூளையையும் இணைக்கின்றன. அவற்றை விரிவாக சொன்னால் கட்டுரை வேறு வடிவத்துக்கு மாறிவிடும்.

  அப்போலோ 11 சாகசம் குப்ரிக்கினால் ஸ்டூடியோ ஒன்றில் எடுக்கப்பட்டு, விண்வெளியிலிருந்து நேரலையாக நாசாவினால் ஒளிபரப்பானது என்பது சந்தேகர்களின் நம்பிக்கை. இவர்களில் பலர் ஒட்டுமொத்த அப்போலோ மிஷன் எல்லாமே ஒரு பெரிய கண் துடைப்பு என்று அதிரடியாக அறிவிக்கிறார்கள். இப்போது சில சாத்தியங்களை ஆராயலாம்.

  சாத்தியம் 1. பூமியின் சுற்றுவட்டப் பாதையத்தாண்டி மனிதனால் விண்வெளியில் பயணம் செய்ய முடியாது. அடையாளம் தெரியாத பலவிதமான அபாயங்கள் அண்டவெளியில் அடைந்துகிடக்கின்றன. இதில் அமெரிக்கா நிலவுக்கு மனிதனை அனுப்பியதாக சொல்வது வெறும் கட்டுக்கதை.

     சாத்தியம் 2. அப்போலோ 11 நிலவுக்குச் செல்லவில்லை. அது பூமியின் சுற்று வட்டப் பாதையிலேயே பாதுகாப்பாக வலம் வரும்படி ப்ரோக்ராம் செய்யப்பட்டு, குப்ரிக்கின் நிலவுக் காட்சி நாசாவினால் நேரலையாக ஒளிபரப்பானது.

      சாத்தியம் 3. நிலவுக்கு மனிதர்கள் சென்றார்கள். ஆனால் அது நாசா நமக்குக் காண்பித்த மாதிரி அல்ல. உண்மையில் நிலவில் மனிதன் என்ன செய்தான் என்பதையே நாசா வெளியிடவில்லை.

   சாத்தியம் 4. நிலவுக்கு மனிதன் செல்லும் அந்த தொழில் நுட்பம் நாசாவிடம் அப்போது கிடையாது.

   பெரும்பாலானவர்கள் நிலவுக்கு மனிதன் சென்றதை மறுப்பதில்லை. அப்படி மறுப்பவர்களை கேலி செய்வதுண்டு. இப்போது ஒரு விவாதத்திற்காக நாசா முழு உலகையும் ஏமாற்றி இருக்கிறது என்று வைத்துக்கொண்டால், ஏன் என்ற கேள்விக்கு விடை தேடுவது அவசியமாகிறது. அமெரிக்கா வணிக வகையில் இதனால் எத்தனை டாலர் அடைந்திருக்கும்? சொல்லப்போனால் அமெரிக்க மக்களின் வரிப்பணத்தில் ஏகப்பட்ட பில்லியன் டாலர் செலவில் இந்த நிலவுத்  திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அமெரிக்கா பணத்திற்காக இதை செய்தது என்பது அபத்தம்.

பின் ஏனிந்த நிலவு மோசடி?

காரணம்  ரஷ்ய- அமெரிக்க நிழல் யுத்தம். இரண்டாம் உலகப் போருக்குப் பின் உருவான  ரஷ்ய- அமெரிக்க நாடுகளுக்கிடையேயான நிழல் யுத்தத்தில்  (பனிப் போர் என்பார்கள்) அமெரிக்கா வெற்றிபெற்று விட்டதாக மக்களை நம்ப வைக்க இந்த நிலவு சாகசம் தேவைப்பட்டது. உண்மையில் ரஷ்யா அமெரிக்காவைவிட ஒரு டெகட் (decade) விண்வெளி யுகத்தில் முன்னேறி இருந்தது.  சொல்லப்போனால் அமெரிக்காவை காட்டிலும் ரஷ்யாவே முதலில் மனிதனை நிலவுக்கு அனுப்பியிருக்கவேண்டும். ஆனால் அது நடை பெறவில்லை. அது ஏன்? விடை வெகு சுலபம். நிலவுக்கு மனிதன் செல்லவே முடியாது என்பது ரஷ்யர்களுக்குத் தெரிந்திருந்தது.  கீழே இருப்பது விண்வெளி யுகத்தில் ரஷ்யர்கள் வெற்றி கண்ட முதல் முயற்சிகள்.

1. முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை. (நாட்சி ஜெர்மனியின் இந்த ராக்கெட் தொழில் நுட்பமே ஐம்பதுகளில் ரஷ்யாவுக்கு விண்வெளிக்குள் பயணிக்க காரணமாக  இருந்தது.)
2. முதல் சேட்டிலைட் - ஸ்புட்னிக் 1.
3. பூமியின் சுற்றுவட்டப் பாதையில் முதல் உயிரினம் (நாய்) லைகா (- ஸ்புட்னிக் 2)
4. விண்வெளியில் முதல் மனிதன் யூரி ககாரின் (வாஸ்டாக் 1)
5. விண்வெளியில் முதல் பெண் வேலன்டீனா டெரெஷ்கோவா (வாஸ்டாக் 6)
6. முதல் விண்வெளி நடை (space walk) அலெக்சி லியோனொவன்.
7. முதல் நிலவு தொடுகை (impact) -லூனா 2.
8. நிலவின் இருண்ட பக்கம் முதல் முறையாக படம் பிடிக்கப்பட்டது - லூனா 3.
9. முதல் ஆளில்லா நிலவு தரையிறக்கம்- லூனா 9.
10. முதல் விண்வெளி ரோவர் - லுநோகொட் 1
11. முதல் நிலவு மண் - லூனா 16.
12.முதல் விண்வெளி நிலையம்- சல்யுட் 1.

     இத்தனை முதல்களை படைத்த ரஷ்யாவினால் நிலவுக்கு  ஒரு மனிதனை அனுப்ப முடியவில்லை என்பது ஒரு முரண். ரஷ்யாவுக்கு முன்னே அமெரிக்கா அந்த அறிவை எட்டிவிட்டது என்றால் அந்த  சாதனைக்குப்  பின் ஏன் வேறு எந்த நாடும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பவில்லை?அமெரிக்காவுக்கு மட்டுமே கிடைத்த கடவுளின் அழைப்பா இந்த அறிவு?

    1969 லிருந்து 1972 வரை ஆறு முறை அமெரிக்க விண்கலங்கள் நிலவில் இறங்கியுள்ளன. மொத்தம் பனிரெண்டு அமெரிக்கர்கள் நிலவில் நடந்து சென்றிருக்கிறார்கள்.  எதோ திருப்பத்தில் இருக்கும் பெட்டிக்கடையில் பால், சர்க்கரை வாங்கிக்கொண்டு வருவதுபோல நான்கு வருட காலத்தில் நினைத்த மாத்திரத்தில் அமெரிக்காவினால் நிலவுக்கு சுலபமாக ஆறு விண்கலங்களையும் 12 மனிதர்களையும் அனுப்பமுடிந்திருப்பது ஒரு விந்தையான "உண்மை".   பிறகு 1972 டிசம்பரில்  அப்போலோ 17 மிஷனுடன் நாசா திடீரென இந்த நிலவுக்குச் செல்லும் அதிசயத்தை இனி அங்கு  தேட ஒன்றுமில்லை என்று ஒரு கருத்தை முன் வைத்து தனது நிலவுத் திட்டங்களை சட்டென்று  முடித்துக்கொண்டது.

 நிலவில் அமெரிக்கக் கொடிகள் பறக்கின்றன. அமெரிக்க விண்வெளியாளர்கள் விட்டுச் சென்ற விண்வெளி மிச்சங்கள் , லூனார் மாட்யூல்கள் என  இந்த சம்பவங்களின் உண்மைத்தன்மையை உணர்த்தும் சான்றுகள் நிரம்பியிருக்கின்றன. பின்னர் எதற்காக இந்த சந்தேகம்? என்ற கேள்வி உண்டாவது இயற்கையே.

 நிலவில் பறக்கும் அமெரிக்கக் கொடிகள் இன்றைய எந்த அதி நவீன டெலஸ்கோப்பினாலும் காண முடியாதவை. மேலும் ஏறக்குறைய 40 வருடங்கள் கடந்துவிட்ட இன்றைய நாளில் அந்தக் கொடிகள் அங்கிருப்பதே சந்தேகம்தான். அப்படியிருந்தாலும் அவை நிலவுத் தூசி படிந்து வெறும் வெண்மையாகவே காட்சியளிக்கும் என்று நாசா தெரிவித்துவிட்டது. மேலும் அமெரிக்கர்கள் விட்டுச் சென்ற விண்வெளி மிச்சங்களுக்கும் இதே கதிதான். இதைத்  துப்பறிய எந்த விண்கலனையும் எந்த நாடும் அனுப்பப் போவதில்லை  என்பதே உண்மை.

     நிலவு சாகசமே ஒரு மிகப் பெரிய பொய் என்றால் அதை அமெரிக்காவின்  பரம வைரியான ரஷ்யா எப்படி கண்டுகொள்ளாமல் விட்டிருக்க முடியும் என்று சிலர் கேட்கிறார்கள். இதை வைத்தே ரஷ்யா அமெரிக்காவை அவமானப்படுத்தியிருக்கலாம் என்பது அவர்களின் கூற்று. உண்மையே. ரஷ்யா நிலவுக்கு மனிதன் சென்றான் என்பதை ஆரம்பம் முதலே நம்பவில்லை. பூமியின் சுற்றுவட்டப் பாதையைத் தாண்டி எந்த மனிதனும் செல்ல முடியாது என்ற விஞ்ஞான உண்மையை ரஷ்யர்கள் அறிந்திருந்தார்கள். இருந்தும் 1969இல் நாசா தனது சாகசத்தை நிகழ்த்தியபோது ரஷ்யர்கள் பெரிய அளவில் எதிர்ப்பில் ஈடுபடவில்லை. காரணம் பல உண்டு.

 முதலாவது ரஷ்யர்களுக்கு அந்த டீப் மூன் டெக்னாலஜி 74இல்தான் சாத்தியப்பட்டது. அதற்குள் நாசா (72இலேயே) தனது நிலவு திட்டத்தை முடித்துக்கொண்டுவிட்டது.

    இரண்டாவது என்னதான் அமெரிக்காவும் ரஷ்யாவும் பரம வைரிகளாக இருந்தாலும் இரண்டு நாடுகளுக்கிடையில் ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் இருந்தது. இரண்டாம் உலகப் போரில் இந்த இரண்டு நாடுகளும் ஜெர்மனியை இரண்டு துண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்ததும், அதனால் கிடைத்த பண பலத்தையும் தொழில் நுட்ப அறிவையும் கொண்டு தங்களை வளர்த்துக்கொள்வதில் அதீத ஈடுபாடு காட்டியதும், இருவரும் ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சொல்லி அதனால் தங்களது வணிக முன்னேற்றம் பாதிப்படைவதையும்  இருவருமே விரும்பவில்லை. ஒரு விதத்தில் ரஷ்யாவின் காம்யுநிஸ்ட் புரட்சிக்கு அமெரிக்கா பண உதவி செய்திருக்கிறது என்ற தகவலே ஒரு அதிர்ச்சியானதுதான். அமெரிக்காவை அவமானப் படுத்தும் எண்ணத்தில் ரஷ்யா தன்னையும் அந்த அவமானதிற்குள் இழுத்து வந்திருக்கும். எனவேதான் அவர்கள் அமைதி காத்தார்கள். இப்படிப் போகிறது சந்தேகர்களின் கருத்து. மறுக்க முடியாத அரசியல் காய் நகர்த்தல். உண்மையாக இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

     நிலவில் இறங்கிய இரண்டு அமெரிக்க விண்வெளியாளர்களும் பூமிக்குத் திரும்பிய பின் எந்தவிதமான பத்திரிகை, டெலிவிஷன், ரேடியோ பேட்டிகளுக்கும் அனுமதிக்கப்படவில்லை என்பது சற்று திகைக்க வைக்கும் தகவல். நீல் ஆர்ம்ஸ்ட்ராங் அதன் பின் எந்த பொது நிகழ்சிகளிலும் கலந்து கொள்ளாமல் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட குற்றவாளி போல இருந்தது குறித்து சந்தேகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இறுதியில் அவர் மன நோய்க்கு ஆளாகி இறந்ததாக தெரிகிறது. நாற்பது ஆண்டுகளாக உலகை ஏமாற்றிய ஒரு புனைவின் நாயகனாக இருப்பதில் அவருக்கு பெரும் மன சிக்கல்கள் இருந்திருக்கலாம்.

  இதற்கிடையில் சில விஷமிகள் அமெரிக்க விண்வெளியாளர்கள் நிலவில் முஸ்லிம்களின் பாங்கு ஓசையை கேட்டதாகவும், பூமி திரும்பிய பின் ஆர்ம்ஸ்ட்ராங் ஒரு நாள் எங்கோ நடந்து சென்று கொண்டிருந்த போது அதே பாங்கு ஒலியை கேட்டு உடனே தானும் முஸ்லிமாக மாறிவிட்டதாகவும் புரளி பரப்ப, இது ஏகத்து தொடர்ந்து எரிய, இறுதியில் ஆர்ம்ஸ்ட்ராங் ஒரு தன்னிலை விளக்கம் அளித்து தான் ஒரு கிருஸ்துவனாகவே இன்னும் இருப்பதாக தெரிவித்து இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். சந்தேகர்களுக்கு இதுவெல்லாம் ஒரு விஷயமே அல்ல. ஏனென்றால் அவர்களைப் பொருத்தவரை அவர் நிலவுக்கு செல்லவேயில்லை. பின் எங்கே முஸ்லிம்களின் பாங்கு ஒலி கேட்பது? இதெல்லாம் நாசா திட்டமிட்டு செய்த நாடகம் என்று  அறிவிக்கிறார்கள். இதன் மூலம் தனது நாடகத்தை நாசா ஒரு உண்மையான நிகழ்வாக திரிக்க முயல்கிறது என்பது அவர்களின் குற்றச்சாட்டு.

      ஏறக்குறைய இந்தப் பதிவின் முடிவுக்கு வந்தாகிவிட்டது. இன்னும் பல அதிர்ச்சியான தகவல்கள் இருப்பதால் அதனை அடுத்த பதிவில் எழுத இருக்கிறேன். இறுதியாக ஒரு தகவல்.

     இப்போது நம்மிடமிருக்கும் அந்த   1969 ஆம்  ஆண்டின்  நிலவில் மனிதன் கால் பதித்த நிகழ்வின் காணொளி ஒரு  ரீ மாஸ்டர்ட் டிஜிடல் பதிப்பு. அப்படியானால் அந்த உண்மையான நேரடிப் பதிவின் காணொளி என்னவாயிற்று?

      இதற்கு நாசாவின்  பதில்:  1980 இல் எதேச்சையாக அந்த 1969 ஆம் ஆண்டு நிலவு சாகசத்தின் காணொளி அழிக்கப்பட்டுவிட்டது. அது ஒரு விபத்து போல நிகழ்ந்துவிட்டது.


    நாசாவிடம் எப்போதுமே ஒரு பதில் உண்டு.

   ஆனால் அதை நம்புவதில்தான் இருக்கிறது பிரச்சினை.








அடுத்து : நிலவு நிஜமா?