Sunday 17 August 2014

இசைவிரும்பிகள் XX - எழுபதுகள்: வாடாத வசந்தம்.

மரங்கள் கடுமையான குளிருக்கு தங்களை தயார் செய்துகொள்ளும் முன் எத்தனை அபிரிமிதமான வண்ணங்கள் கொண்ட  மலர்களால் தங்களை அலங்கரித்துக்  கொண்டு அழகின் எல்லையை விரிவுபடுத்துகின்றன! அவ்வழகை ஆனந்தமாக ஆராதிக்கும் அதேவேளையில் அதன்  பின்னாலிருக்கும் செய்தியை வெகு சிலராலே கணிக்க முடிகிறது. அது  அடுத்து வரப் போகும் மலர்களற்ற காலம் என்ற அழகின் வறட்சி.  இந்த வண்ணங்களும் வசீகரங்களும் வசந்தமும் நம்மை வசப்படுத்திவிட்டு எழிலோவியங்களாக  மறைந்து விடுகின்றன. எஞ்சியிருப்பது  அந்த அழகியலின் சுகந்த வாசமே. இதுவே 
     
                                         
                                  
                   வாடாத வசந்தம்: எழுபதுகளின் வாசம் 


      வட மாநிலத்திலிருந்து சென்னை வந்துகொண்டிருந்த ஒரு சமயத்தில் ஆந்திராவை தாண்டியதும்  நம் ஊர் வாசனை இதமாக என்னைத்  தாக்கக் தொடங்கியிருந்த வேளையில், ரயிலில் பாடல்கள் பாடிக்கொண்டு வந்த ஒரு கண்ணிழந்த கையேந்துபவர் (பிச்சைக்காரர் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.) திடுமென ஒரு பழைய தமிழ்ப்  பாடல் ஒன்றைப்  பாட ஆரம்பித்தார். அது நான் மிகச் சிறிய வயதில் கேட்ட ஒரு துயரத்தின் இசை. பாடலை அவர் பாடி முடிக்கும் வரை பல நினைவலைகள் என்னை ஆட்கொள்ள ஒருவித சோகமான இன்பத்துடன் அதைக்  கேட்டுக்கொண்டிருந்தேன். சிறு வயதில் அந்தப் படம் பார்த்ததும் அந்தப் பாடலை ஒருவித மன நெருக்கத்துடன் கேட்டதும் உடனே என் நினைவுக்கு வந்து என்னை இடையூறு செய்தது. குறிப்பாக  அந்தப் பாடலை எங்கள்  வீட்டில் யாரும் விரும்பியதேயில்லை. அப்பாடல் ஒலிக்க ஆரம்பித்தாலே "திருப்பு. திருப்பு" என்ற அலறல் குரல்தான் கேட்கும். அந்தப் பாடலின்  அடர்த்தியான  சோகத்தை எதிர் கொள்ளமுடியாத வலிமையின்மையே  என் சகோதரிகளை அவ்வாறு அப்பாடலை விட்டு வெகு தூரம் ஓட வைத்திருக்கிறது என்பதை பின்னர் புரிந்துகொண்டேன். 1973 ஆம் ஆண்டில் வந்த அன்புச் சகோதர்கள் என்ற படத்தின் கே வி மகாதேவன் இசையில்  உன்னதப் பாடகர்  கண்டசாலாவின்  "முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி இணைத்திருந்தோம் ஒன்றுக்கு ஒன்றாக" பாடலே அது. இதுவே கண்டசாலாவின் கடைசிப் பாடல் என்று நினைக்கிறேன்.  இது இரண்டு வடிவங்களில் படத்தில் உண்டு. மகிழ்ச்சியானதாகவும் பிறகு படத்தின் இறுதியில் மிக சோகமாகவும் ஒலிக்கும். கேட்கும்போதே நம் மனதை எதோ ஒன்று வலி ஏற்படுத்தும் வகையில் பிசைவதைப் போல ஒரு உணர்வு தோன்றும். என்ன ஒரு  மேதமை பீறிடும் துயரத்தின் கண்ணீர் இசை இது! சில பாடல்கள்தான் நமக்குள் என்னென்ன விதமான நினைவலைகளை உருவாக்கி விடுகின்றன! சற்று ஆழமாக சிந்தித்தால் சில கானங்களுக்கு வயதே ஆவதில்லை என்பது மட்டும் புரிகிறது.

      எழுபதுகள் ராகங்களின் ராஜ்ஜியமாக இருந்ததை நாம் இங்கே நினைவு கொள்வது மிக அவசியப்படுகிறது.  கே வி மகாதேவன், ஷங்கர்-கணேஷ், வி. குமார், ஜி கே வெங்கடேஷ், ஷ்யாம், விஜய பாஸ்கர், திவாகர், போன்ற பலர் சிறப்பான இசையின் படிவங்களை தொடர்ச்சியாக வழங்கியபடியே இருந்தார்கள். 70கள் முழுவதும் நம் தமிழிசை மெல்லிசையின் கூறுகளையும் கூர்மையையும் தனது இன்னிசையின் மூலம் மெருகேற்றிக்கொண்டே வந்தது.  மேற்குறிப்பிடவர்களுடன்  70களை தன் ராகத்தின் மந்திர சக்தியினால் செழுமையாக செதுக்கிய   இன்னொரு மிக தவிர்க்க முடியாத  மகத்தான இசைஞர் என நான் கருதுவது எம் எஸ் விஸ்வநாதன்.  டி.கே ராமமூர்த்தியை விட்டுப் பிரிந்த எம் எஸ் வி. பலர் அவரைப் பற்றி கணித்து வைத்திருந்த யூகங்களை அடித்து நொறுக்கி சாதனைச் சாலையில் சென்றுகொண்டிருந்தார். இந்தப் பதிவு  பெரும்பாலும் எம் எஸ் வி எழுபதுகள் மற்றும் எண்பதுகளின் ஆரம்பம் வரை இசை அமைத்திருந்த  பாடல்களைப் பற்றியது. தமிழ்த்திரையிசையை விவாதிப்பவர்கள் பெரும்பாலும்  70களைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்வது கிடையாது. அப்படியே விவாதித்தாலும் 76 என்று ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை கையில் எடுத்துகொண்டு ஒரு சார்பான கருத்துக்களை வடிவமைப்பார்கள். ஆனால் ஒரு நேர்கோட்டில் இந்த விவாதத்தை வைத்தால் பல உண்மைகள் முடக்கப்பட்டிருப்பதைக்  காணலாம்.அதில் ஒன்று எம் எஸ் வியின் பெயரை இன்றளவும் இசைக்கும் ஏராளமான பாடல்கள் எழுபதுகளில் வந்தன என்பது. அவைகளில் சிலவற்றை ஒரு சிறிய முயற்சியாக பதிவிடுவதின் வழியே அந்த காலகட்டத்தைப் பற்றிய ஒரு மாற்று சிந்தனை உருவாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தோன்றுகிறது. ஏனென்றால் எம் எஸ் வி யின் தேனிசை குளுமையான மழையாகக் கொட்டிய எழுபதுகள் சற்று அதிகமான ஆய்வுக்குட்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.

        சிலர் எம் எஸ் வியின் இசை 70களில் தன் பொலிவை இழந்திருந்தது என்று மேம்போக்காக ஒரு அர்த்தமற்ற கருத்தை வீசிவிட்டு அதனால்தான் அப்போது புதிதாக வந்த இளையராஜாவின் இசை  மக்களை ஒரு காந்தம் போல ஈர்த்தது  என்று சொல்கிறார்கள். 76இல் இளையராஜாவின் வருகையுடன் எம் எஸ் வியின் காலம் முடிந்துவிட்டது என்றொரு மிகையான  கருத்தும் பரவலாகப் பேசப்படுகிறது. இதிலிருக்கும் உண்மைத்தன்மை ஒவ்வொருவரின் இசை சார்பைப் பொறுத்தது. நீங்கள் இளையராஜாவின் ரசிகராக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு சுலபமாக அகப்படும் காரணம் இதுவாக இருக்கலாம். ஆனால் இளையராஜாவின் இசையை நாடாதவர்களுக்கும் அவர் இசையின் பால் ஈர்கப்படாதவர்களுக்கும் இது ஒரு உண்மையற்ற உளறல். 80களின் துவக்கம் வரை எம் எஸ் வி நலிந்துவிடவில்லை என்று நாம் தாராளமாக எந்தவித தயக்கங்களின்றி  அழுத்தமாகவே சொல்லலாம். மேற்கூறிய எம் எஸ் வி-இளையராஜா விவாதத்தைப் பற்றி என்னைக் கேட்டால் இதில் ஒரு பாதியே உண்மை என்பேன்.  மறுபாதி ஒரு புனைவு. உண்மை- இளையராஜாவின் இசை நிஜத்தில் நம் தமிழ்த் திரையிசைக்கு ஒரு புதிய வெளிச்சம் கொடுத்தது. புனைவு- எம் எஸ் வி யின் நலிந்த  இசையின் எதிர்வினையே இது என்பது. ஏனென்றால் எம் எஸ் வி யின் இசை இறுதிவரை தன்  நறுமணத்தையும், இனிமையையும், பொலிவையும் சற்றும்  இழக்கவே இல்லை. அவர் பாடல்களை அப்போதைய இளைய தலைமுறையினர் நாடவில்லை என்பது உண்மையே. இருந்தாலும் அது பாடலின் தரத்தை குறித்த ரசனையின் வெளிப்பாடல்ல. அது  மாறி விட்ட இசை பாணியின் மீது ஏற்பட்ட மோகத்தின் தாக்கம். இருந்தும் எல்லோரும்  எம் எஸ் வியை விட்டு வேறுபக்கம் வந்துவிட்டதாகச் சொல்லமுடியாது. 70களின் பிற்பகுதியில் தோன்றிய ஒரு தலைமுறை 25 ஆண்டுகளாக இசை அமைத்துக்கொண்டிருக்கும் ஒருவரின் இசையின் பால் சலிப்பு கொள்வது ஒரு இயல்பான கால மாற்றம். மேலும்  53 இலிருந்து தன் இசை மூலம் இரண்டு தலைமுறைகளை  அரவணைத்துத் தாலாட்டி  வந்த ஒருவர் 25 ஆண்டுகளுக்குப் பிறகு உருவான ஒரு  புதிய  இளைஞர் கூட்டத்தின் நாடித் துடிப்பை துல்லியமாக கணிக்கக் கூடிய சாத்தியம் வெகு தூரமானது. இந்த தேக்க நிலை எல்லா இசை அமைப்பாளர்களுக்கும் நிகழக்கூடிய அபாயம். (90களில் இதே வட்டத்தில்தான் இளையராஜாவும் மாட்டிக்கொண்டார்.) இருந்தும் இளையராஜா உச்சாணிக் கொம்பில் இருந்த சமயத்திலும் எம் எஸ் வி உண்டாக்கிய இனிமையான இசையலைகள்  இசை அற்புதங்களாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதைப்  பற்றி பின்னர் விரிவாக விவாதிக்க இருப்பதால் 70களின் இசை பாணியை எவ்வாறு எம் எஸ் வி நேர்த்தியாக கட்டமைத்து வந்தார் என்பதை குறித்து பேசலாம்.

    இப்பொழுது எப்படி நம் எழுபதுகளின் இசை தரமானதாக இசை விரும்பிகளின் ரசிப்பிற்குரியதாக இருந்தது என்பதை உணர்த்த  ஒரு பாடலைக் குறிப்பிட விரும்புகிறேன். இது அன்னக்கிளி படம் வந்த அதே  76இல் வந்த பாடல்.  படம் மிக சாதாரணமானதுதான். ஆனால் இப்பாடல் ஒரு அசாதரணப் பாடல்  என்று கண்டிப்பாகச் சொல்வேன். படத்தைக் கொண்டு பாடலின் தரத்தையும் சிறப்பையும் தீர்மானிக்கும் பொதுபுத்தியின் முதிர்ச்சியற்ற போக்கில் காணமல் போன மிக நல்ல பாடல்களில் இதுவும் ஒன்று.  கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம்  என்ற பாடலே அது. மேயர் மீனாட்சி என்ற படத்தில் இடம் பெற்றது இப்பாடல். இதைக் கேட்கும்போது இதில் நடித்த ஜெய் சங்கரோ கே ஆர் விஜயாவோ நம் சிந்தனையில் தோன்றாமல் வெறும் இசை மட்டுமே பலவித வண்ணங்களில் நம் மனக்கண்களில் ஒரு கலைடாஸ்கோப் காண்பிக்கும் காட்சிகள் போன்று வித விதமாக உருமாறுகிறது. இசையின் ஆளுமைதான் எத்தனை ஆழமானது என்ற வியப்பும் கூடவே பின்தொடர்ந்து வருகிறது. சந்தேகமே இல்லாமல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் கானம். இதைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் அதே அடர்த்தியான ரசனை சற்றும் குறையாமல் இருக்கிறது.

        எழுபதுகளில் அதிகம் விரும்பப்பட்ட மற்றொரு பாடலைப் பற்றி விவாதிக்கலாம். இந்தப் பாடல் மல்லிகையின் நறுமணத்தை இசையோடு வானொலி அலைகளில் வீசச் செய்தது.  போதைகொள்ளச் செய்யும் திரவ இசை போல இது கேட்பவர்களை மதிமயங்க வைத்தது. வாணிஜெயராம் என்ற பாடகிக்கு ஒரு முகவரி கொடுத்து, ரசிகர்களின் மனதில் ஒரு ஒய்யாரமான இடத்தில் அவருக்கு ஒரு அரியாசனம் அமைத்துக்கொடுத்தது இந்தப் பாடல். அது தீர்க்க சுமங்கலி என்ற படத்தின் உயிர் ரேகையான மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ என்ற தெய்வீக கானம். ஒரு பாடலை என்னும்போதே அது நம் காதுகளில் ஒலிக்கும் அற்புதம் சிலவற்றிக்கே சாத்தியம். இது சந்தேகமேயில்லாமல் அவ்வகையைச் சார்ந்தது. பாடலின் முதல் வரியை நினைக்கும்போதே அப்பாடல் முழுவதும் நம் காதுகளுக்குள் ரீங்காரமிட்டு ஒலிப்பது போல ஒரு உணர்வு வருகிறது.  இப்பாடல் அது பாடும் மல்லிகையின் சுகந்த நறுமணம் போல நம் நெஞ்சத்தை நிரப்புகிறது. வாணி ஜெயராமை ஒரே பாடலில் புகழின் எல்லைக்கு கொண்டுசென்ற சுகந்த மனம் வீசும் சுகமான சங்கீதம்.  இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் எனக்குத் தோன்றுவது இதுதான்: சில பாடல்களை நம்மால் வெறுக்கவே முடியாது. Absolutely an epic song.

        அடுத்து கொஞ்சம் வேகமான தாளத்துடன் விறுவிறுப்பாக ஓடும் ஒரு பாடல் ஒன்றைப் பற்றி குறிப்பிடவேண்டும். இதை ஒரு கவனிக்கப்படாத கற்பூர கானம் என்று சொல்லலாம்.  அப்பாடல் அத்தையா மாமியா படத்தின் மறந்தே போச்சு ரொம்பநாள் ஆச்சு மடிமேல் விளையாடி நாம் மனம் போல் உறவாடி . இதை மறுபடி கேட்டபோது காணாமல் போயிருந்த ஒரு பழைய புகைப்படத்தை எதிர்பாராமல் காண நேரிடும் சந்தோஷம் கிடைத்தது. சிறு வயதில்  மறந்தே போச்சு ரொம்ப நாள் ஆச்சு என்று அடிக்கடி பாடிக்கொண்டிருந்தது அப்போது நினைவுக்கு வந்தது. இதே பாடலின் சாயலை அன்னை ஓர் ஆலயம் படத்தின்  அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே பாடலில் கேட்க நேர்ந்தது ஒருவேளை எனக்கு மட்டுமே தோன்றிய எண்ணமாக இருக்குமா என்று தெரியவில்லை. (இதே போல வி குமாரின் உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது பாடலின் நிழல் இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் என்ற இளையராஜாவின்  பாடலில் இருப்பதும் என் கற்பனையோ?)

      மற்றொரு இனிமையான கீதம்  செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று என்ற வைர நெஞ்சம் படத்தில் வரும் பாடல். இந்தப் பாடல் தரும் சுகமும் ஒரு ஏகாந்தமே. மிகுந்த ரசனைக்குரிய மிக நல்ல பாடல் இது. வரிவரியாக பாடல்களை வர்ணிக்க ஆசை இருந்தாலும் அது எனது பாணியில்லை என்பதால் ஒரு அறிமுகத்துடன் நான் நிறுத்திக்கொள்கிறேன். எழுபதுகளில் நம்மை குதூகலப்படுத்திய மற்ற சில கானங்களை கீழே பட்டியலிட்டுள்ளேன்.  என்ன ஒரு நளினமான நல்லிசையாக நம் தமிழிசை அப்போது இருந்தது என்ற ஏக்கப் பெருமூச்சு இதனுடன் வரும் இலவச இணைப்பு.

வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ, முள்ளில்லா ரோஜா முத்தாட பொன்னூஞ்சல் கண்டேன். (மூன்று தெய்வங்கள்.)

வேலாலே விழிகள் இன்று ஆறோரம்(!) இசைக்கும், தங்கங்களே நாளைத் தலைவர்களே நம் தாயும் மொழியும் கண்கள், மௌனம் கலைகிறது மயக்கம் வருகிறது, ( என்னைப் போல் ஒருவன்.)

கண்ணனை நினைக்காத நாளில்லையே (சீர்வரிசை.) -இது ஒரு அருமையான பாடல் என்பதைவிட மனதினுள் விழும் இசை என்று சொல்லலாம்.

அடுத்து வருவது மயிலிறகினால் வருடும் சுகமான பாடல். எஸ் பி பி மற்றும் ஜெயலலிதாவின் குரலில் வந்த  நானென்றால் அது அவளும் நானும். இதே படத்தின் இன்னொரு அபாரமான கானம் பலரால் மறக்க முடியாதது. வாழ்கையின் ஆழமான தத்துவதை இத்தனை எளிமையாக சொல்வது கண்ணதாசனுக்கு எத்தனை சுலபமாக வருகிறது என்று பாருங்கள்.இதை இசை உடுத்தி ராக மரியாதை செய்த எம் எஸ் வியை நம்மால் சட்டென மறந்துவிட முடியுமா?  பரமசிவன் கழுத்திலிருந்து  பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா (சூரியகாந்தி.)

தென்றலுக்கு என்றும் வயது பதினாறு, பயணம் பத்து மாத சித்திரமொன்று ஜனனம் - (பயணம்.) அதிகம் பேசப்படாத படங்களில் இருக்கும் சில நல்ல பாடல்களில் இவைகள் அடக்கம். எம் எஸ் வி யின் கரகரப்பான குரலில் பயணம் பயணம் என்று ஒலிக்கும் இப்பாடலை நாங்கள் அப்போது வீட்டில் பகடி செய்வதுண்டு. ரயில் பாடல்கள் என்றால் எம் எஸ் வி ஒரு தனி அக்கறை எடுத்துக்கொள்வார் போல. பச்சை விளக்கின் கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று, ராமன் எத்தனை ராமனடி யின் சித்திரை மாதம் பவுர்ணமி நேரம் பாடல்கள் போன்ற இதுவும் ஒரு ரயில் குதூகலத்தை அள்ளி வீசும் பாடல்.

இக்கரைக்கு அக்கரைப் பச்சை, அரசன பாத்த கண்ணுக்கு புருஷன பாத்தா புடிக்காது-  (அக்கரைப் பச்சை.) அர்த்தம் தெரியாமல் என் பால்ய தினங்களில் இந்தப் பாடலின் பல்லவியை அடிக்கடி முணுமுணுத்துக்கொண்டிருந்ததை எண்ணும்போது வேடிக்கையாக இருக்கிறது.

என் காதல் மகாராணி, யானையின் பலமெதிலே தும்பிக்கையிலே-(இதயம் பார்க்கிறது.) நடிகர் ஜெய் ஷங்கரின் நூறாவது படம். மிக அரிதான பாடல். முத்துக் குளித்து எடுத்த ஒரு பொக்கிஷம் போல உணர்கிறேன் இதை மீண்டும் கேட்கும் போது.

வாய்மையே வெல்லுமடா- நேர்வழி.(இசை பி எஸ் திவாகர்) 50களின் எம் ஜி ஆர் பாணி பாடல். கவ்பாய் என்ற நம் பண்பில் இல்லாத ஒரு கதைக்களத்தின் பின்னணியை வெகு சிறப்பாக வெளிக்கொணர்ந்த பாடல்.

முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி இணைந்திருந்தோம்- அன்புச் சகோதரர்கள். கே வி எம்.பதிவின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வேதனையை உணர்த்தும் கானம்.

        76இல்  ஜெய் ஷங்கர் நடிப்பில் மசாலா இயக்குனர் எஸ் பி முத்துராமனின் இயக்கதில் வந்த  படம் துணிவே துணை. இது  திகில் படம் என்று அப்போது விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் அப்படி சொல்ல முடியாதபடி ஒரு மாதிரியான தமிழ் களத்திற்கு தொடர்பில்லாத  கதையமைப்பைக் கொண்ட மர்மப் படமாக இது இருந்தது .  இதில் துவக்கத்தில் வரும் திகில் பாடலொன்று வெகு பிரசித்திப் பெற்றது.   ஆகாயத்தில் தொட்டில் கட்டும்  என்று துவங்கும் அந்தப் பாடலில் இசைக்கப்பட்டிருக்கும் பல ஓசைகள் பிரமிப்பானவை. மிக நவீனமான இசையமைப்பு கொண்ட பாடல். இப்போது கேட்டால் கூட 76இல் இருந்த  வெகு சில வாத்தியங்களைக் கொண்டு ஒரு  பிரமாண்ட திகில் இசையைப் படைத்திருக்கும் எம் எஸ் வியை எண்ணி வியக்காமலிருக்க முடியாது. இது ஒரு அமானுஷயப் பாடல்.  வாணி ஜெயராமின் தெளிவான கணீர்க் குரல், காற்றடிக்கும் ஓசை, அமானுஷ்ய சூழலை இயல்பாக கொண்டுவரும் அசாதரணமான இசை என்ற விசேஷங்கள் நேர்த்தியாகப்  பிணைய விளைவு திகிலும் தித்திப்பும் கலந்த இந்த கானம்.  பாடலின் காட்சியமைப்பு இப்படிச் செல்லும். சி ஐ டி (இப்போது இந்த வார்த்தை கோமாளித்தனமாக இருக்கிறது.) விஜயகுமார் ரகசியமாக  துப்பு துலக்க ஒரு புதிரான ஊருக்கு பயணிப்பார். பல மர்மமான நிகழ்வுகளுக்குப் பிறகு ஒரு மாட்டுவண்டியில் அவர் செல்கையில் ஆகாயத்தில் தொட்டில் கட்டும்  மங்கை உன்னை கண்டாள்  என்று பாடிக்கொண்டே ஒரு பெண் பேய்(!) அந்த மாட்டு வண்டியின்  முன்னும் பின்னும் ஆடி ஆடி செல்வதைக் கண்டு பயத்தில் திடுக்கிடுவார். அவர் அந்தப் பேயைக் கண்டு அச்சத்தில் உறைந்துபோய் இறந்தே விடுவார். (வேடிக்கை என்னவென்றால் அவர் மட்டுமே பயப்படுவார். படம் பார்க்கும் நமக்கோ வெள்ளை  சேலை கட்டி  தலை மீது மல்லிகைப்பூ வைத்துகொண்டு மிக அருமையான பாடல் ஒன்றை பாடிக்கொண்டு நடந்து செல்லும் அந்தப் பேயைக் பார்க்கும் போது பயத்தைத் தவிர மற்ற எல்லா உணர்சிகளும் வரும்.)

     இதே அமானுஷ்ய பின்னணியில் எம் எஸ் வி அமைத்த இன்னொரு பாடல் வெண்மேகமே வெண்மேகமே கேளடி என் கதையை என்ற ஆயிரம் ஜென்மங்கள் படப் பாடல். இதிலும் அதே வெள்ளைச் சேலை, தனியாக நடந்து செல்லும் ஒரு பெண், (தலையில் மல்லிகைப்பூ சற்று சந்தேகமாகயிருக்கிறது.)  என ஒரு பேய்ப்  பாடலுக்குரிய எல்லா அம்சங்களும் உண்டு.  இதுவும் மிக அருமையான பாடல்தான். இரண்டு கானங்களிலும் பயங்கரமின்றி ஒரு வித மென்மையான சோகம் இழையோடுவதை இனம் காணலாம். இதே படத்தில் உள்ள மற்றொரு சிறப்பான பாடல்  கண்ணன் முகம் காண காத்திருந்தாள் ஒரு மாது. எம் எஸ் வி 70களில் அதிகமாக வாணி ஜெயராமை பயன்படுத்தி இருப்பது கண்கூடு.

     எம் எஸ் வி பாடிய சில பாடல்கள் இசைச் சிற்பங்கள் என்பது என் எண்ணம். எழுத்தாளர் ஜெயகாந்தனின் (பூகம்ப நாவல் என்றழைக்கப்படும்) சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில் எம் எஸ் வியின் கரகரப்பான கணீர்க் குரலில் வந்த கண்டதைச் சொல்லுகின்றேன் எந்தன்  கதையை சொல்லுகின்றேன் என்ற பாடல் இதற்கு ஒரு உதாரணம்.  எம் எஸ் வி பாடிய பாடல்களை ஒரு நூலிழை போல தொடர்ந்தால் அவர் குரல் நடித்த நடிகர்களைவிட அந்த சூழலுக்கு மிகப் பொருத்தமானதாக இருப்பதை உணரலாம். பொதுவாக  சில இசை அமைப்பாளர்கள் அவர்கள் படைத்த சில நல்ல பாடல்களை தங்கள் ராகமில்லாத தவளைக் குரல் கொண்டு பாடுவதாக நினைத்துக்கொண்டு குதறி எடுத்து அலங்கோலம் செய்திருப்பதைப் போலன்றி எம் எஸ் வி அசரீரி வகையான பாடல்களையே பெரிதும் பாடியிருப்பது அவரது இசை முதிர்ச்சியை காட்டுகிறது. மேலும் பெரிய நடிகர்களுக்கு பாடும் பாணியும்  அவரிடமில்லை. விதிவிலக்காக நினைத்தாலே இனிக்கும் படத்தில் ரஜினிகாந்த்துக்கு சம்போ சிவசம்போ பாடலை அவர் பாடியிருக்கிறார். அவர் குரல் பகடி செய்யப்படுவதற்கான பல அம்சங்களை கொண்டிருந்தாலும் தன் பாடல் அந்த நிலைக்கு வரும் அபாயத்தை அவர் சாதுர்யமாக  தாண்டியே சென்றிருக்கிறார். உதாரணத்திற்கு அவள் ஒரு தொடர்கதை படத்தின் அபாரம் என்று பலர் எண்ணும் தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு பாடலை எம் எஸ் வி பாடவே இயக்குனர் விரும்பியதாக தெரிகிறது. ஆனால் அவர் அதை தவிர்த்தது நமக்கு கே ஜேசுதாஸ் என்ற ஒரு காவியப் பாடகனை வெளிச்சம் காட்டியது. இதற்கு முன்னே ஜேசுதாஸ் பாடல்கள் பாடியிருந்தாலும் தெய்வம் தந்த வீடு பாடலே  அவரை தமிழகத்தின் எல்லா வீதிகளுக்கும் எடுத்துச் சென்று அவருக்கு ஒரு நட்சத்திர தகுதியை அளித்தது. இது ஜேசுதாஸ் இளையராஜாவின் இசையினால் பெரிய புகழ் அடைந்தார் என்ற பலரின் எண்ணத்திற்கு  முற்றிலும் முரணானது. ஏனென்றால் எம் எஸ் வி ஜேசுதாசை ஏற்கனவே புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.

       இப்போது மிக முக்கியமான ஒரு இசைக் கூட்டணியைப் பற்றி எழுத வேண்டியதிருக்கிறது. இந்த இசைக் கூட்டணியை பலர் அறிந்திருந்தாலும் பொதுவெளியில் அதை அங்கீகரிக்கத் தவறுகிறார்கள். 65லிருந்து படங்களை இயக்கி வந்த ஒருவர்  வணிக மற்றும் மாற்று சினிமாவின் கூறுகளை சரியான விகிதத்தில் கலந்து 70களில் தமிழ்த்திரையின் நம்பிக்கையூட்டும் இயக்குனராக பரிணாமம் அடைந்தார். உண்மையில் எழுபதுகளில்  வணிக ரீதியான படங்கள் புற்றீச்சலைப்போல வெளிவந்து நம் கழுத்தை நெரித்த சமயத்தில் இவரது படங்கள் மட்டுமே தமிழில் வர இருந்த ஒரு மாற்று சினிமா என்ற நெருப்பை   அணையாது பாதுகாத்து வந்தது. சொலப்போனால் இவரது தரமான, இயல்பான கதைக் களங்கள் மற்றும் நட்சத்திர நடிகர்களின் நிர்பந்தத்தை தவிர்த்த கதாபாத்திரங்கள் தமிழுக்கு ஒரு நவீன சினிமாவின் வண்ணத்தை அடையாளம் காட்டின. பாரதிராஜா, மகேந்திரன் , ருத்ரையா (அவள் அப்படித்தான் என்ற படத்தை எடுத்தவர்)  போன்றவர்கள் எழுபதுகளின் திரைப்பாணியை மாற்றி  தமிழ் சினிமாவை  அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றதின் மிக முக்கிய காரணம் அதற்கான சாலையை ஒருவர் ஏற்கனவே அமைத்துவிட்டார் என்பதே. அவர் கே. பாலச்சந்தர். ஆரம்பத்தில் எனக்கு கே பி யின் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் அவரை மிகக் கடுமையாக நான் விமர்சித்தாலும்  இன்று கொஞ்சம் எழுபதுகளைத் திரும்பிப் பார்க்கும்போது பாலச்சந்தர் என்ற ஒருவர் அப்போது இல்லாதிருந்தால்  நம் சினிமாவின் முகம் ரசிக்கமுடியாத வகையில் அலங்கோலமாக மாறியிருக்கும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் தமிழ்த்திரையின் புரட்சி இயக்குனர் என்று சொல்லப்படும்   ஸ்ரீதர் கூட எழுபதுகளில் தன் அடையாளத்தை இழக்கும்  வணிக நெரிசலில் சிக்கிக்கொண்டு உரிமைக்குரல், மீனவ நண்பன், வைரநெஞ்சம்  என்று தன் பாதையை மாற்றிக்கொள்ள பாலச்சந்தரோ நாடகத்தனமான தனது பாணியை விட்டு விலகி சற்று யதார்த்தத்தை நோக்கி நகர்ந்தார். இதுவே அவரது வெற்றியின் பின் உள்ள உண்மை என்று நான் கருதுகிறேன். அவரது பாணி தனித்தன்மை பெற்றிருந்தது. இதை யாரும் மறுக்கவே முடியாது. இதைத் தவிர நான் மிகப்  பிரதானமாகக் கருதுவது  அவரது படங்களின் பாடல்களையே. எந்தவித இரண்டாம் சிந்தனையுமின்றி அவரது படப் பாடல்கள்  கேட்பவரை வீழ்த்தும்  தகுதி பெற்றவைகளாக இருந்தன. 

    நீர்க்குமிழியில் வி.குமாரை அறிமுகம் செய்து தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வழங்கிவந்த   கே பாலச்சந்தர் இடையிடையே (பாமா விஜயம், அனுபவி ராஜா அனுபவி, நான்கு சுவர்கள் ) எம் எஸ் வி யையும் சேர்த்துக்கொண்டார். மர்மமான முறையில் அரங்கேற்றம் படத்திற்குப் பின் அவரது படங்களிலிருந்து  வி குமார்  மறைந்துபோக, பாலச்சந்தரின் ஆஸ்தான இசையமைப்பாளரானார் எம் எஸ் வி. இடையில் 70இல் வந்த எதிரொலி படத்தில் கே வி மகாதேவன் பணியாற்றிய (இது ஒரே படத்தில்தான் கே வியும் கே பியும் சேர்ந்தார்கள்) அதிசயமும் நடந்தது. 73இல் வந்த சொல்லத்தான் நினைக்கிறேன் படத்திலிருந்து 83இல் வந்த பொய்க்கால் குதிரை வரை (இடையில் தப்புத் தாளங்கள் படத்திற்கு விஜயபாஸ்கர் இசை அமைத்திருந்தார்) எம் எஸ் வி- கே பி கூட்டணியிலிருந்து அலையலையாக புறப்பட்டு நம்மை இசை வெள்ளத்தில்  மூழ்கடித்த முத்துப் பாடல்கள் ஏராளம். இசைக் கூட்டணியைப் பற்றி விவாதிக்கும்  பலர் அடிக்கடி குறிப்பிடுவது பாரதிராஜா-இளையராஜா (வைரமுத்து) கூட்டணியைத்தான். ஏனிந்த ஒரு சார்பான நிலையை பலர் விரும்புகிறார்கள் என்பது புதிரானது. எனது பார்வையில் இதே போன்ற...ஏன்  இதை விட என்று கூட சொல்லக்கூடிய ஒரு வலுவான சிறப்பான இனிமையான இசைக் கூட்டணி இவர்களுக்கு முன்பே பாலச்சந்தர்- எம் எஸ் விஸ்வநாதன் (கண்ணதாசன்) இணைப்பில் சாத்தியமாகிவிட்டது. ஆனால் பலர் இது பற்றி வாய் திறப்பதில்லை. என்னென்ன இனிமையான மனதை நெகிழச் செய்யும் கானங்கள் இந்தக் கூட்டணியிலிருந்து நம் வசப்பட்டிருக்கின்றன என்பதை  ஒரு விரிவான ஆய்வுக்கு உட்படுத்துவது  அவசியம் என்று தோன்றுகிறது. அறிந்தவர்கள் மவுனியாக இருப்பதும் அறியாதவர்கள் அறியாமலே இருப்பதும் சில அபாரங்கள் எளிதில் அலட்சியப்படுத்தப்படுவதின் முதற்  புள்ளி. இந்த அலங்கோலத்தை  சீர் செய்ய என் எழுத்து கொஞ்சமேனும் உதவினால் அது எனக்கு மகிழ்ச்சியே.

  சொல்லத்தான் நினைக்கிறேன்(73)- சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன் (வாயிருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி  தவிக்கிறேன்) -  படத்தின் முகவரிப் பாடல். எம் எஸ் வி பாடிய பாடல்களில் உச்சாணியில் இருக்கும் பாடல். எந்தப் பாடலை தான் பாடினால் அது தன் படைப்பை பாதிக்காது என்பதை நேர்த்தியுடன்  அறிந்த இசை மேதமை அவரிடம் இருப்பதன் கண்கூடு இந்தப் பாடல். அவர் குரலில் இந்தப் பாடலைக் கேட்பதே ஒரு நல்ல கவிதையை படிக்கும் சுகத்தைக் கொடுக்கிறது.   இதன் வரிகளும், இசையும், இடையிசையும், அந்த ராக நுணுக்கங்களும்  மனதுக்குள் நீர்த்துளி போல ஊடுருவிச்  செல்கின்றன. இந்தச்  சுகத்தை அனுபவிக்க ஒருவருக்கு வெறும் இசை மட்டும் தெரிந்தால் போதும். ஒரே முறை கேட்டுப் பாருங்கள். எம் எஸ் வி என்ற மகத்தான இசைஞனை  வியக்காமலிருக்க மாட்டீர்கள். கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே வேடிக்கை நமக்கு அதில் வேறென்ன இருக்கு-  ஆயிரம் காலத்துப் பயிர் என்று நம் சமூகம் கட்டிக்காத்துவரும் திருமணத்தை டேக் இட் ஈசி என்று பகடி செய்யும் துள்ளல் பாடல். பாடலுக்கு ஆடுபவர் இதைச் சொல்ல  மிகப் பொருத்தமானவர்தான் - கமலஹாசன்.பல்லவி என்று மன்னன் கேட்க பாடுவேனடி- இப்பாடலில் பாடுவேனடி என்றும் பாடுவேனடி என்று ராகம் உருமாறுவது கேட்பதற்கு சுகமானது. ராகங்களை நேர்த்தியாக கையாளும் எம் எஸ் வியின் இசை மேதமைக்கு இது ஒரு சிறிய சான்று  என்று தோன்றுகிறது.

        அவள் ஒரு தொடர்கதை(74)- நடுத்தரவர்கத்து இயலாமையையும், காவியமாகப் புனையப்படாத தியாகங்களையும், மத்தியதர பெண் ஒருவளின் (ஒருத்தி என்பது சற்று மரியாதை குறைவான சொல் என நான் கருதுகிறேன்)கலைந்துபோகும் கனவுகளையும் அப்பட்டமாகச் சொன்ன படம். தமிழின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படும் இப்படம் பெண்களை ஈர்த்ததில் வியப்பொன்றுமில்லை. இது   மாற்று சினிமாவின் பிதாமகன் என்றழைக்கப்படும் வங்கமொழி இயக்குனர் ரித்விக் கட்டக்கின் magne dhaka tara என்ற படத்தின் தழுவல் என்றறிந்து அந்தப் படத்தை தரவிறக்கம் செய்து பார்த்தேன். கதையின் கரு, தளம் தவிர பாலச்சந்தர் இந்தப் படத்தை வேறு எங்கும் தொடவில்லை என்று சொல்லலாம். தழுவல் என்பதை ஏற்றுக்கொண்டாலும் மிக கண்ணியமாக செய்யப்பட்ட மரியாதை என்பது சற்று பொருத்தமானது. எம் எஸ் வி இதில் அசாதாரண இசையை கொடுத்திருப்பார். ஒவ்வொன்றாகப்  பார்க்கலாம். அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம் பந்தம் என்பது சிலந்தி வலை பாசம் என்பது பெருங்கவலை - எல் ஆர் ஈஸ்வரியின் வழக்கமான அனுக்கல்கள் கொண்ட ரம்மியமானப் பாடல். இதில் வரும் படாபட் என்ற அடைமொழி இதில் நடித்த ஜெயலக்ஷ்மிக்கு முகவரியாகிப் போனது. ஆடுமடி தொட்டில் இங்கு ஐந்து திங்கள் போனால் - கலகலப்பான கானம். யதார்த்தம் எத்தனை குதூகலமானது என்பதை உணர்த்தும் பாடல். கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும் கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்  என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்?- உடைந்து போகும் காதலை புன்னகையுடன் எதிர்கொள்ளும் ஒரு பெண்ணின் மன வலியை சொல்லும் கீதம். இதில் வரும் நான் அணைக்கின்ற நெருப்பு என்ற வரியில் ஒரு  புதுக்கவிதையின் தீண்டலைக்  காண்கிறேன். அபாரமான கவிதை. அடுத்தது கே ஜே ஜேசுதாஸின் அற்புதப் பாடல்களில் ஒன்று.   உண்மையில் நான் ஜேசுதாசை அதிகம் விரும்பிக் கேட்பவனல்ல. அவர் குரலில் அடிநாதமாக ஒலிக்கும் சோகம் அவரின் பல பாடல்களை ரசிப்பதற்கு ஒரு இடையூறு  என்பது என் எண்ணம். (ஆனால் காக்கைச் சிறகினிலே நந்தலாலா பாடலை என் மனதிற்கருகே வைத்திருக்கிறேன்.) பலரின் உள்ளங்களிலும் உதடுகளிலும் இருக்கும் பாடலிது. தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே- கவிதை வரிகளை இன்னும் தொடர வேண்டுமென்ற துடிப்பு அடங்கவில்லை. அடடா நம் பாடல்கள்தான் ஒரு காலத்தில் எத்தனை சிறந்த கவிதைகளை உள்ளடக்கிய இசைச் சித்திரங்களாக இருந்தன! கவிஞரின் சிந்தனையை தன்  நேர்த்தியான இசையினால் கேட்டதும் மெய்மறக்கச் செய்யும் விதத்தில் பாடலாக வடித்த எம் எஸ் வி யின் மேதமையை என்னவென்பது!  இறுதியாக எம் எஸ் வி என்ற மகத்தான இசை மேதையின் உச்சம் தொட்ட பாடல்களில் ஒன்றென நான் கருதும் கடவுள் அமைத்து வைத்த  மேடை இணைக்கும் கல்யாண மாலை பாடலைப் பார்ப்போம். படம் வெளிவந்த புதிதில் கல்யாண மண்டபங்களிலும் வானொலிகளிலும் தொடர்ச்சியாக ஒலித்தது இந்த மந்திரப் பாடல். பாடலைக் கேட்கும் போதே நம் கற்பனைச்  சிறகுகள் எப்படி ஓயாரமாக விரிகின்றன! இது ஒரு புதுமண தம்பதியரை வரவேற்கும்  கானமாக இருந்தாலும் குழந்தைகளை குதூகலப்படுத்தும் இசை கொண்டிருந்தாலும் கார்ட்டூன் கதை கவிதையாக சொல்லப்பட்டாலும் இத்தனை கும்மாளத்தின் பின்னே இருக்கும் ஒரு  அதீத துயரத்தைப் புரிந்துகொள்ள கொஞ்சம் முதிர்ச்சியும் வாழ்கையின்  கசப்பை ருசித்த சிலவேதனையான அனுபவங்களும்    அவசியப்படுகின்றன.  பாடலின் சிறப்பு என்னவென்பதை நான் சொல்லவேண்டியதில்லை. சதன் என்ற பலகுரல் கலைஞனுக்கு எம் எஸ் வி தன் இசை மூலம் கவுரவம் செய்த பாடல். இது வெளிவந்த ஆண்டான 1974லை கணக்கில் கொண்டால் என்னென்ன வித்தியாசமான அதுவரை தமிழ்த் திரையிசை கேட்டிராத பிரமிப்பூட்டும் ஓசைகள் கொண்ட பாடல்!  இதைப் போன்ற ஒரு பாடல் இதுவரை தமிழில் வந்ததேயில்லை  என   மிக உறுதியாக என்னால் சொல்ல முடியும். (வேறு எந்த மொழியிலும் ஏன் உலகத்திலேயே இல்லை போன்ற வெற்றுக் கூச்சல்கள் எம் எஸ் விக்கு தேவையில்லை என்று நினைக்கிறேன்.) இதே பாடலை வேறு ஒருவர் அமைத்திருந்தால் (அது முடியாது என்று தோன்றுகிறது. )  ரசிகர்கள் இதைக்  கொண்டாடும் விதமே தனி. சில அற்புதங்கள் கவனிக்கப்படாவிட்டாலும் உண்மைகள் தெளிவானவை. நிலைத்து நிற்கக்கூடியவை. எம் எஸ் வியின் இசை மேதமை ஆர்ப்பாட்டமில்லாத அலங்காரமில்லாத ஒரு ஆச்சர்யம். 

     நான் அவனில்லை(74)-மந்தார மலரே மந்தார மலரே நீராடி முடித்தாயோ. இந்தப் பதிவுக்கென மீண்டும் தேடியெடுத்துக் கேட்டபோது ஒரு காலத்தில் அடிக்கடி வானொலியில் இப்பாடல் ஒலித்தது நினைவுக்கு வந்தது. அடடா இதுதானா அந்தப்பாடல் என்ற எண்ணமும் கூடவே வந்தது.

   அபூர்வ ராகங்கள்(75)- அரங்கேற்றம் படம் உண்டாக்கிய  மகா அதிர்ச்சி அலைக்குப் பின் பாலச்சந்தர் அடுத்த பூகம்பத்தை  தமிழ்த் திரைக் களத்தில் உருவாக்கியது இந்தப் படத்தில்தான். நம் சமூகம் நினைக்கவே  அஞ்சும் ஒரு நெறிமுறையற்ற இனக் கவர்ச்சியை பாலச்சந்தர் நாகரிக கோட்டின் மீது நின்றுகொண்டு சமூக பண்பாட்டின் கூறுகளை வேட்டையாடாமல் வெகு லாவகமாக எல்லோரும் விரும்பும் வகையில் சொல்லியிருப்பது பாராட்டிற்குரியது. இதே களம் வேறு இயக்குனர்களிடம் சிக்கியிருந்தால் கண்டிப்பாக அது ஒரு மன்னிக்கப்பட முடியாத படமாகவே மாறியிருக்கும் . படத்தின் தலைப்புக்கேற்றார் போல இந்தப் படத்தில் எம் எஸ் வி கர்நாடக ராகங்களைக் கொண்டு அசாத்தியமாக விளையாடியிருப்பார். தனிப்பட்ட முறையில் கர்நாடக ராகங்களை கண்டு வெகு தூரம் ஓடிய என்னை அதனுள்ளே இழுத்தது இந்தப் படப் பாடல்கள்தான். (இருந்தும் நான் ராகங்களில் கரை தேர்ந்தவனல்ல என்பதையும் சொல்லியாக வேண்டும்.) நமது மண் சார்ந்த ராகங்களின் பெருமையை பல பாடல்கள் பதிவு செய்திருக்கின்றன. மறுக்கவில்லை. ஒருநாள் போதுமா நான் பாட இன்றொரு நாள் போதுமா என்றொரு பாடலே போதும் நம் ராகங்களின் அழகைச் சொல்ல.



       அபூர்வ ராகங்கள் படப் பாடல்களில் முதலில் எனக்கு பரிச்சயம் ஏற்பட்டது கை கொட்டிச் சிரிப்பார்கள் ஊரார் சிரிப்பார்கள் விளையாட்டுக் கல்யாணமே என்ற ஷேய்க் முகமதுவின் குரலில் வரும் பாடலே.  அதன் காரணம் பாடகரின் பளீர் என்று முகத்தில் அறையும் குரலே. வெகு வித்தியாசமான இந்த குரலுக்காகவே சிறிய வயதில் இந்தப் பாடலை பகடி செய்வதுண்டு. ஆழமான அர்த்தம் பொதிந்த பாடல் இது என்பது அப்போது தெரிந்திருக்கவில்லை. பின்னர்   வாணி ஜெயாராமின் பொன் குரலில் வந்த  ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனைப் பாடல் என்ற பாடல் என்னை மதிமயங்கச் செய்தது. நமது மரபிசையின் ஆழ்ந்த வேர்களை ஓட்டிச் செல்லும் அபாரமான பாடலிது. ராக மாலிகை என்ற வகையில் இப்பாடலை நேர்த்தியான வடிவமாக பிசிறின்றி ராகங்கள் முட்டிக்கொள்ளாது இனிமையாக  அமைத்திருப்பார் எம் எஸ் வி. இதே போலே கேள்வியின் நாயகனே இந்தக்  கேள்விக்கு பதிலேதைய்யா  என்ற பாடலும் ஒரு மிக உயர்ந்த ரசனைக்காக உருவாக்கப்பட்ட கீதம். பாடலின் காட்சியும் சற்று நாடகத்தனம் கொண்ட அழகானது. இந்த ஒரே பாடலில் நெறியற்ற பாலுணர்ச்சிக்கு  நாயகி முற்றுப் புள்ளி வைப்பதும், தன்  கணவனைக் காண்பதும், வெறுத்துச் சென்ற தன் மகளை தன்னோடு சேர்த்துக்கொள்வதும் நாயகன் விலகியிருந்த தன் தந்தையுடன் இணைவதும் காட்சிகளாக விரியும். இத்தனை ஆழமான காட்சியமைப்பை எம் எஸ் வி தன் அற்புதமான இசை மூலம் கேட்பதற்கு பரவசமாக்கியிருப்பார்.   பாடகி சசிரேகாவின் முதல் பாடல் இது என்று நினைக்கிறேன். ஒரு குடும்பத்தின் கதை படத்தின் மலைச் சாரலில் இளம் பூங்குயில் என்ற பாடலும் இதே ஆண்டில் வந்தது என்பதால் இதில் எது அவருக்கு முதல் பாடல் என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. எங்கள் வீட்டில் இந்தப் பாடலுக்கென மிகப் பெரிய அபிமானமே இருந்தது. நான் அப்போதெல்லாம் இந்தப் பாடலை அலட்சியமாக கடந்துபோயிருக்கிறேன். என் இசை  ரசனை என் இசை அனுபவங்களை மேருகேற்றியபின் இந்த அற்புதத்தைக் கேட்ட ஒரே நொடியில் இப்பாடலுக்குள் ஈர்க்கப்பட்டேன். சில அபஸ்வரங்கள் நம் கழுத்தை நெறிக்கும் போதுதான் சில அருமைகளை நாம் புரிந்து கொள்கிறோம். சசிரேகா போன்ற இனிமையான குரல் வளம் கொண்டவர்களை நாம் அதிகம் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது ஒரு மனதைத் தைக்கும் முரண். இறுதியாக ஒரு மகத்தான கானம் ஒன்றைப் பற்றி பேசவேண்டும். அது அபூர்வ ராகங்கள் என்றாலே சட்டென்று  நினைவில் தோன்றும் பாடல். அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம் என்ற கர்நாடக ராகங்களை வைத்து எம் எஸ் வி யும் ஜேசுதாசும் நம்மை பிரமிப்பூட்டிய பாடல்தான்.  இந்தப் பாடலை வியப்பின்றி கேட்பது அவ்வளவாக நடக்காத காரியம். மிக சமீபத்தில் இதை நான் கேட்டபோது அதன் ராக ஆச்சர்யங்கள் என்னைச்  சூழ்ந்தன. என்ன ஒரு இசை மேதமை பொங்கும் கானம் இது! ராக மாலிகையின் உச்சம் தொட்ட வெகு சில பாடல்களில்  ஒன்று.  இறுதி சரணத்தில் வரும் அந்தப்  புதிரான குறிப்பை  எம் எஸ் வி இசைத்த நேர்த்தி கேட்பவர்களை மெய்மறக்கச் செய்துவிடும். அதை ஜேசுதாஸ் பாடும் அழகில் மயங்காத உள்ளங்கள் இருக்கமுடியும் என்று தோன்றவில்லை. கே பாலச்சந்தர்-கண்ணதாசன்-எம் எஸ் வி கூட்டணியில் வந்த காவியப் பாடல்களின் மகுடம்  அதிசய ராகம்.

  மன்மத லீலை(76)- திரை விமர்சகர்களையும் ரசிகர்களையும்   அதிர்ச்சியூட்டிய பாலச்சந்தரின்  அடுத்த ஏவுகணை.  A movie ahead of its time என்று இப்போது வர்ணிக்கப்படும் இந்தப் படத்தின் துணிகர திரைக்கதை  2000த்தில்தான் இங்கே  சாத்தியமானது. பல பெண்களோடு தொடர்பு வைத்துக்கொள்ளும்--அல்லது விரும்பும்--ஆண்களின் இயல்பான குணத்தை பாலச்சந்தர் சமரசங்கள் செய்துகொள்ளாது point blank ஆக சொல்லியிருந்தது அப்போது--ஏன் இப்போதுகூட--ஒரு வியப்பான பிரமிப்பே. மேலும்  ஒற்றைக் கோடு போன்று வரைந்த மீசையுடன் ஒய்யாரமாக வலம் வந்துகொண்டிருந்த தமிழ்க் கதாநாயகர்களின் அடையாளத்தை  உடைத்து கதாநாயகனை அடர்த்தியான மீசையுடன் அறிமுகம் செய்து ஒரு புதிய மரபை உண்டாக்கினார். கமலஹாசனின் அந்த நவீன தோற்றம் அன்றைய இளைஞர்களின் மத்தியில் மிகப் பிரபலமானதும்  விவாதப் பொருளானதும் இப்போது வேடிக்கையாக இருக்கிறது. கதாநாயகனின் மீசையின் அகலம் ஒரு புதிய பாணியை துவக்கியது இதன் பின்னே தொடர்கதையானது.  துணிச்சலான இந்தக் கதைக்குப் பொருத்தமான  ஆழமான பாடல்களை எம் எஸ் வி அனாசயமாக அளித்திருந்தார். ஹலோ மை டியர் ராங் நம்பர் என்ற பாடல் இளைஞர்களிடத்தில் அமோகமாக வரவேற்பைப் பெற்றாலும் அவ்வளாக பெண்களிடத்தில் பாராட்டு பெறாததின் காரணம் அதன் கதையமைப்பே என்று தோன்றுகிறது. (இதில் நடித்த ஒய் விஜயாவை இன்றுவரை என் சகோதரிகள் மன்னிக்கவில்லை.) காமம் இதன் கருப்பொருளாக இருந்தாலும் எம் எஸ் வி தேவையில்லாத விரக தாப  ஓசைகளை அறிமுகம் செய்யாமல் முடிந்தவரை நளினமாகவே இந்தப் பாடலை அமைத்திருந்தார். மன்மத லீலை மயக்குது ஆளை என்ற பாடல் வழக்கமான எம் எஸ் வி- எஸ் பி பி கானம். துடிப்பான இசையுடன் கூடிய ஜாலியான சூழலுக்கானது. ஜேசுதாஸ் பாடிய மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்  காலத்தை கடந்த ஒரு கானம். இப்பாடலில் கண்ணதாசனின் சிறப்பான கவிதையை வியாக்காதவர்கள் வெகு குறைவு.  இதில் வரும் கணவனின் துணையோடுதானே காமனை வென்றாக வேண்டும் என்ற வரியை  என் நண்பரொருவர் வெகுவாக சிலாகித்துப் பேசுவார். கணவனுக்குப் பதில் மனைவி என்று மாற்றிவிட்டால் பெண்ணுக்கு புத்தி சொல்லும் ஆணுக்கும் இது பொருந்தும் என்று நினைக்கிறேன். இன்றைக்கும் ஒரு பல ஆண்கள் இந்தப் பாடலின் பல்லவியை ஒரு பழமொழி போல  குறிப்பிடுவது இதன் ஹிமாலய வெற்றியின் நீட்சி. அவ்வளவாக பேசப்படாத நாதமென்னும் கோவிலிலே ஞான விளக்கேற்றி வைத்தேன் பாடலை தற்போது கேட்டபோது எப்படி இத்தனை நாள் இந்தப் பாடலை விட்டுவைத்திருந்தோம் என்று கேள்வி எனக்குள் எழுந்தது. 70களில் எம் எஸ் வி கர்நாடக ராகங்கள் மெல்லிசையுடன் பலமாகக் கலந்த பல பாடல்களை வாணி ஜெயராமுக்கு கொடுத்திருக்கிறார்.  சுசீலாவின் நீட்சி என்ற சொல்ல முடியாவிட்டாலும் வாணி ஜெயராமின் குரல் ஒரு அற்புதம் என்றே சொல்வேன். அதற்குக் காரணம் அவர் பாடிய பல தேன் சொட்டும் பாடல்களே. எம் எஸ் வி யின் காலத்திற்குப் பிறகு இளையராஜாவினால் அதிகம் பயன்படுத்தப்படாமல் (அழகே உன்னை ஆராதிக்கிறேன் படத்தின் நானே நானா யாரோதானா என் ரசனைக்குட்பட்ட மிக அழகிய பாடல் என்பதையும் இங்கே சொல்லியாகவேண்டும்.)  பின்னர் இவர் ஷங்கர்-கணேஷின் ஆஸ்தான பாடகியானார். வணிக வெற்றிகள் அதிகம் அண்டாததால்  அவரது பாடல்கள் மக்களின் சிந்தனையில் தங்கவில்லை.  இது ஒரு கசக்கும் நிஜம்.

         மூன்று முடிச்சு(76)- அவள்  ஒரு கதாநாயகி என்ற சராசரிப் பாடலை சற்று கடந்து வந்தால்  வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள் நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள் என்ற அந்தாதி வகைப் பாடலை அடையலாம். அட்டகாசமான பாடல். இதன் பாடல் வரிகள் அபாரமானவை. நாடகத்தனம் மேலோங்கிய இந்த காட்சியமைப்புக்கு எம் எஸ் வியின் இசை இன்னொரு பரிமாணம் சேர்த்தது. ஒரு மென்மையான ஹார்மோனிகாவின் இசையுடன் பாடல் துவங்கும் போதே அது நம் மனதை கொள்ளைகொண்டு விடுகிறது. அதன் பின் இசை தவழ்ந்து சென்று வசந்த கால நதிகளிலே என்று ஜெயச்சந்திரன் பாடத் துவங்க எத்தனை ரம்மிய உணர்வு வருகிறது! வரிகள் தொடர்ந்து நதியலைப் போல நழுவ இறுதியில் ரஜினிகாந்த் வெறுப்புடன் "மணவினைகள் யாருடனோ மாயவனின் விதி வகைகள்.விதிவைகையை முடிவு செய்யும் வசந்தகால நதியலைகள்" என்று பாடலின் முதல் வரியோடு பாடலை முடிப்பது இசையும் கவிதையும் ஒரு தாம்பத்யம் போன்று இணைந்திருக்கவேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. இறுதி வரிகளில் துருத்திக்கொண்டு தெரியும்   அத்தனை  வெறுப்பையும்   எம் எஸ் வி தனது குரலில் கொண்டுவந்திருப்பது ஒரு திகைப்பூட்டும் பயங்கரம். இதுபோன்று  கவிதையின் சிறப்பையும் இசையின் ஆளுமையையும் ஒருங்கே கொண்ட பாடல்கள் எம் எஸ் வி இசையில் ஏராளமுண்டு. "இசையறிவு  ஏகத்துக்கும் கொண்ட சில ஞானிகளிடம்" இதுபோன்ற சிறப்பான கவிதைகளை சுமந்த பாடல்களை எங்கே என்று மைக்ராஸ்கோப் வைத்து    நாம் தேடவேண்டியிருப்பது வினோதம்தான்.  நல்ல கவிதையை தூர விரட்டிய இசைக் கோமாளிகளுக்கும் சிவப்புக் கம்பள வரவேற்பு கிடைக்கிறது இங்கே. நான் எழுபதுகளில் எம் எஸ் வியின் இசை பங்களிப்பைப் பற்றி எழுதவேண்டிய எண்ணத்தை என்னிடம் விதைத்த  பல பாடல்களில்  ஆடி வெள்ளி  தேடி உன்னை நான் அடைந்த நேரம் என்ற பாடலும் ஒன்று. சொல்லப்போனால் சமீபத்தில் அந்தப் பாடலைக் கேட்டபோது அந்த மெட்டும் மெலடியும் என்னுள் ஆழமாக வேரூன்றி எழுபதுகளின் இசைப் பாரம்பரியத்தை வேறு கண் கொண்டு ஆய்வு  செய்யவேண்டிய விருப்பத்தை வரவழைத்தன. மழைத் தண்ணீர் அடித்துக்கொண்டு ஓடும் சாலையோரங்களில்  சிறுவர்கள் காகிதக் கப்பல் செய்து மிதக்க விட்டு  அது அந்த மழை நீரின் வேகத்தில் இழுத்துச் செல்லப்படும் அழகை  அதை தொடர்ந்து ஓடி அந்தச்  சிறிய ஆனால் விலையற்ற இன்பத்தை  ரசிப்பதைப் போன்றதொரு அனுபவத்தை  இந்தப் பாடல் எனக்குக் கொடுத்தது. அதிகம் புகழடையாத ஒரு பாடலாக இது இருந்தாலும் ( அதுதானே நமது மேம்பட்ட ரசனை. கேட்டேளா இங்கே அத பார்த்தேளா அங்கே போன்ற பாடல்களுக்கு நாம் அளித்த மரியாதை எத்தனை அழகியல் கொண்ட பாடல்களை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டது!) தரமான பாடல்கள் வரிசையில் இதற்கு இடமுண்டு. வசந்தகால நதிகளிலே போன்றே இந்தப் பாடலும் அந்தாதி வகையைச் சேர்ந்ததே. இசைப் புரட்சி பற்றி பேசும் பல இசை விமர்சகர்கள் தங்களுக்கு தேவையானவரை புகழ்வதில் காட்டும் சிரத்தையை உண்மையிலே புரட்சி செய்திருக்கும் மற்ற  இசை அமைப்பாளர்களிடத்திலும் செலுத்தினால்  ஒரு ஆரோக்கியமான தகவல் பரிமாற்றத்திற்கும் நமது இசை வரலாறின் உண்மைத் தன்மைக்கும் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

     அவர்கள்(77)- ஒரு பெண்ணின் சுதந்திர உணர்வை தமிழில் பல பாடல்கள் சொல்லியிருக்கின்றன. சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு முதல் சின்னச் சின்ன ஆசை வரை நாம் பல கொண்டாட்ட கீதங்களை கேட்டிருக்கிறோம். பலர் சின்னச் சின்ன ஆசை பாடலை இவ்வகையான பாடல்களில் முதலிடத்தில் வைக்கிறார்கள். ஏனெனில் அதன் கவிதை நம்மை பிரம்பிப்பில் ஆழ்த்துவது.  ஆனால் சின்னச் சின்ன ஆசை பாடலையே   கொஞ்சம் தள்ளி நிற்கச் சொல்லும் கானம்  காற்றுக்கென்ன வேலி  கடலுக்கென்ன மூடி (கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே புகுந்து விடாது மங்கை உள்ளம் பொங்கும்போது விலங்குகள் ஏது). நல்தமிழை நல்லிசையுடன்   விருந்து படைக்க  எம் எஸ் வி-கண்ணதாசனை   விட்டால் வேறுயார் இருக்கிறார்கள்? மொத்தப் பாடலும் அபாரமான கவிதை வரிகள் போர்த்திக்கொண்ட குளுகுளுப்பானது. ரம்மியமான கோரஸ் பாடல் முழுதும் ஒரு இணைப்பிசையாக வந்து நம்மை பரசவப்படுத்துகிறது. பலர் இந்தப் பாடலின் சிறப்பே அந்த அற்புதமான கோரஸ்தான் என்று சொல்கிறார்கள். உண்மைதான்.  இந்தப் பாடலின் ஆதார நாடியே அதுதான் என்று எண்ணுகிறேன். ஒருமுறை கேட்டுப்பாருங்கள். இதுபோன்றதொரு அழகியல் மிகுந்த குரலிசை கொண்ட பாடல்கள் நம் தமிழில் வெகு குறைவே. புதிய பறவை படத்தின் பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற பாடலை இதே அலைவரிசையில் வைத்தாலும் இந்தப் பாடலில் உள்ள குரலிசை நம் மண் வாசனை கொண்டது. மயக்கம் தருவது. சரணத்தில் இந்தக் குரலிசை ஒரு இடையிசை போல தொடர்ந்துவந்து  பாடலை இன்னும் கூராக்குகிறது. நான் அடிக்கடி சொல்வதுபோல தமிழில் இதுபோன்ற ஆற்றல் மிக்க குரலிசையை எம் எஸ் வி அளித்த அளவுக்கு வேறு எவரும் செய்யவில்லை. எம் எஸ் விக்குப் பின் வந்த பிற இசையமைப்பாளர்களின்  குரலிசை வேறு வகையானது. மேலும் அவை  இந்த அளவுக்கு தரமானதா என்பதும்   கேள்விக்குரியதே. காற்றுக்கென்ன வேலி பாடலின்  தேர் கொண்டுவா தென்றலே  இன்று நான் என்னை கண்டேன் சீர் கொண்டுவா சொந்தமே இன்றுதான் பெண்மை கொண்டேன் என்ற வரிகள் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுபவை. அதை ஜானகி பாடும் அழகே ஒரு வித சுகமானது. ராகங்களுக்குள் ஒரு ரகசிய குறியீடுபோல புதைந்திருக்கும் புதிரான  வளைவுகளையும் நீட்டல்களையும் மிகச் சரியாக கண்டுபிடித்து  அதன் மூலம் பாடகர்களின் குரலில் இருக்கும் இனிமையை வெளிக்கொண்டு வருவதில் எம் எஸ் வி மேதமை கொண்டவர். (சுசீலாவின் பல பாடல்கள் இவரது இசையினாலே அழகுபெற்றன என்பது என் எண்ணம்.) அடுத்த பாடல் ஒரு நவீனம். இசைப்  புரட்சி என்று தயக்கமில்லாமல்  சொல்லிவிடக்கூடிய இருமனம் கொண்ட திருமண வாழ்வில் இடையினில் நீயேன் மயங்குகிறாய்.  கமலஹாசன் இந்தப் படதிற்கென ventriloquism எனப்படும் தன் குரல் வேறு பக்கத்திலிருந்து வருவது போன்று பேசும்   யுக்தியை கற்றுக்கொண்டார் என்று ஒரு தகவல் இருக்கிறது. காரணம் இந்தப் படத்தில் வரும் ஜூனியர் என்ற கதாபாத்திரம். மேற்குறிப்பிட்ட இருமனம் கொண்ட பாடலில்  இடையிடையே ஜூனியர் சேர்ந்துகொண்டு நாயகிக்கு காதல் பட்டம் விடுவார். இந்த வித்தியாசமான களத்தை எம் எஸ் வி அமர்க்களமாக தன் இசையால் அழகுபடுத்தியிருப்பார். கடவுள் அமைத்துவைத்த மேடை பாடலைப் போன்ற இதுவும் தமிழில் இதுவரை செய்யப்படாத இசை முயற்சி. மெல்லிசை மன்னர் என்ற தன் தகுதியை தரமாக நிரூபித்த பாடல்.  அங்கும் இங்கும் பாதை உண்டு இன்று நீ எந்தப் பக்கம் என்ற பாடல் ஒரு பெண்ணின் ஊசலாடும் மனநிலையை படம்பிடிக்கும் பாடல். இதைப் பற்றி ஒரு சுவையான தகவல் இருக்கிறது. எதோ ஒரு விழாவில் (அல்லது நிகழ்ச்சியில்)  எம் எஸ் வியும் கண்ணதாசனும் கலந்துகொண்டபோது ஒருவர் (கே பாலச்சந்தர்?) திடுமென அவர்கள் இருவரும் மக்கள் முன்னிலையில் ஒரு புதிய பாடலை  கம்போஸ் செய்வார்கள் என்று அறிவிக்க, எந்த வித பகட்டுமின்றி சில நிமிடங்களில் கவிதை உருவாகி இசை அமைக்கப்பட்டு எஸ் பி பி (அவரும் அங்கிருந்ததால்) அங்கேயே  பாடியதாக ஒரு forum ஒன்றில் படித்தேன்.  இதன் முதல் சரணத்தில் வரும் கல்லைக் கண்டாள்  கனியைக் கண்டாள் கல்லும்  இன்று மெல்ல மெல்ல கனியும் மென்மைக் கண்டாள் என்ற வரிகள் மிகச் சிறப்பானவை. என்ன எளிமை ஆனால் எத்தனை ஆழம்! பாமரத்தனமாக சொல்வதென்றால் "தமிழ் விளையாடுது".

      பட்டினப் பிரவேசம்(77)- ஒரு முறை என் இசை நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த சமயத்தில் வழக்கமான இசையுத்தம் வெடித்தது எங்களுக்குள். "இளையராஜா ஒவ்வொரு வாத்தியத்திற்கும் ஒரு பாடலை படைத்திருக்கிறார்" என்றார் அவர்.   "அப்படியா?" என்றேன் சுவாரஸ்யமின்றி. இதுபோன்று எத்தனயோ கேட்டாயிற்று என்ற எண்ணம் இதைப் படிக்கும் உங்களுக்கே இந்நேரம் வந்திருக்கும். " கிடாருக்கு  இளைய நிலா பொழிகிறதே. புல்லாங்குலலுக்கு சின்னக் கண்ணன் அழைக்கிறான். பியானோவுக்கு என் வானிலே ட்ரம்பெட்டுக்கு மன்றம் வந்த தென்றலுக்கு ட்ரம்ஸ்க்கு ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா." என்று தொடர்ந்து அடுக்கினார். இப்படியெல்லாம் கூட புகழுரை பாடமுடியுமா  என்ற வியப்பு எனக்கு ஏற்பட்டது. "அதெல்லாம் சரிதான். வயலினை விட்டுவிட்டீர்களே" என்று நான் அவருக்கு ஞாபகப்படுத்தினேன். "வயலின்..." என்று மூன்று புள்ளி வைத்தவர், "அதுக்குதான் ஏகப்பட்ட பாடல் இருக்கிறதே" என்று முற்றுப்புள்ளி வைத்தார். நான் "நீங்கள் மறந்துவிட்ட ஒரு பாடல் இருக்கிறது." என்றேன். "வான் நிலா அது நிலா அல்ல உன் வாலிபம் நிலா என்ற பாடல். ஆனால் இது உங்களுக்குத்  தோன்றாது. ஏனென்றால் இது எம் எஸ் வி இசை அமைத்தது." என்று அடுத்து சொல்லவும் "அது.." என்று ஆரம்பித்து  வேறு வாத்தியத்தைத்  தேட ஆரம்பித்துவிட்டார்.  வேடிக்கை என்னவென்றால் அந்த இசை நண்பர் ஒரு வயலின் இசைஞர். கிடார் என்றால் இளையராஜாவின் இளைய நிலா பொழிகிறதே மற்றும் என் இனிய பொன் நிலாவே இரண்டும் நமக்கு நினைவுக்கு வருவது உண்மைதான். மறுக்கவில்லை. நான் நினைத்தாலே இனிக்கும் படத்திலுள்ள  காத்திருந்தேன் காத்திருந்தேன்  என்ற பாடலை அதன் அதிரும் கிடார் இசைக்கென ரசிப்பதுண்டு.  ஆனால் பியானோ இசை என்றாலே நம் சிந்தனையில் முதலில் உதிப்பது வெண்ணிற ஆடையின் என்ன என்ன வார்த்தைகளோ பாடல்தானே. சிலரது  இசை ரசனைகள்தான் எப்படி மூளைச்  சலவை செய்யப்பட்டிருக்கின்றன! வான் நிலா பாடலின் சிறப்பே அதன் வயலின் இசையும் அந்த   "லா" ஓசையும்தான்.  ஆச்சர்யப்படுத்தும்  அற்புதக் கவிதை கொண்ட பாடல்.  குறிப்பாக இன்பம்  கட்டிலா அவள் தேகக் கட்டிளா என்ற கண்ணதாசனின் வரிகளை கடக்கும்போது நீங்கள் ஒருமுறை அதிர்வது நிச்சயம். கண்ணதாசன்-எம் எஸ் வி கூட்டணியோடு பாலச்சந்தர் சேர்ந்தால் அதன் தாக்கம் எத்தனை வியக்கத்தக்கது   என்ற உண்மைக்கு இதுபோன்று  பல காவியப் பாடல்களே  சான்று.  இந்தப் பாடலை முதலில் வானொலியில் கேட்டபோது இதன் இசை எம் எஸ் வி என்றறிந்து சற்று வியப்புற்றேன். இதிலுள்ள மற்றொரு பாடல்  தர்மத்தின் கண்ணைக்  கட்டி (நகரத்தில் ஆடவிட்டு இதுதானே நாகரீகம் என்றான்) . அதிகம் கேட்கப்படாத சிறப்பான பாடல் இது.

      நிழல் நிஜமாகிறது(78)- சில பாடல்கள் நமது எண்ண அடுக்குகளில் உட்புகுந்து பல இனிமையான கதவுகளை ஒரே நொடியில் இலகுவாக திறந்துவிடுகின்றன. ஆங்கிலத்தில் நாஸ்டால்ஜியா எனப்படும் இந்த பழையதை மீட்டெடுக்கும் உணர்ச்சிக்கு அடிமைப்படாதவர்கள் இந்த உலகில் இருக்கவே முடியாது. அது எதோ ஒரு பாடல் அல்லது சிறிய இசைத் துணுக்ககக் கூட இருக்கலாம். எனக்கு அப்படிப்பட்ட பல பாடல்கள் இருந்தாலும் இந்தப் படத்தின் பாடல்களை  எப்போது கேட்டாலும் எனது பால்ய தினங்கள் எனக்குள் உயிர் பெறுவதை நான் ஒரு வித துயர சுகத்துடன் அனுபவித்திருக்கிறேன். முதலில் இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ இதுவரை நடித்தது அது என்ன வேடம் இது என்ன பாடம்  என்ற பாடலை ஆராய்வோம். என்ன ஒரு காவியக் காதல் கானம்! இரும்புத் திரை கொண்டு இயல்பான மனித உணர்சிகளில் முதன்மையான காதலை எத்தனை காலம்தான்  மறுக்கமுடியும்! இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ என்ற பல்லவியின் முதல் வரியிலேயே கண்ணதாசன் மூடிய கதவுக்குள் வழியும் மழைத் துளி போன்ற காதலை அழகாக கவிதைத் தமிழில் சொல்லிவிடுகிறார். என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன் உன் நெஞ்சில் எதோ கறை ஒன்று கண்டேன் என்ற வரிகளாகட்டும் அதைத் தொடரும் புரியாததால்தானே திரை போட்டு வைத்தேன் திரை போட்டபோதும் அணை போட்டதில்லை என்ற வரிகளாகட்டும்..வர்ணிக்க என்னிடமிருப்பது  ஒரே வார்த்தைதான்.. அட்டகாசம்... காலத்தை வென்ற கண்ணதாசனின் கவிதை வரிகளை தன் இறவா இசையால் தேன் சுவையான  பாடலாக்கிய    எம் எஸ் வி யின் கற்பனையை என்னவென்று சொல்வது!  ஒரு சிறந்த பாடலுக்கு கவிதைகளே தேவையில்லை என்ற எண்ணம் உங்களுக்கிருந்தால் இந்தப் பாடலை ஒரு முறை கேளுங்கள். ஒரு தரமான கவிதையும் சிறந்த இசையும் ஒன்று சேரும்போது பிறக்கும் கானம் எட்டும் உயரம்  நம்மை பரவசப்படுத்தக்கூடியது. நல்ல கவிதையை விவாகரத்து செய்த எந்தப் பாடலும் என் பார்வையில் இறந்து போனதே.  கம்பன் ஏமாந்தான் இளம் கன்னியரை ஒரு மலரென்றானே கற்பனை செய்தானோ என்ற அடுத்த பாடல் அடுத்த ஒரு ஆனந்தத் தாலாட்டு. இந்தப் பாடல் என்னக்குள் ஏற்படுத்தும் வண்ண அலைகள் ஏராளம். ஆர்ப்பரிப்பில்லாத அமைதியான அற்புதம் இப்பாடல். எம் எஸ் வியின் இசை 76க்குப் பிறகு தன் பொலிவை இழந்தது என்ற கருத்தை சிதைக்கும் பாடல். இதில் மெல்லிசையின் ஆதார  நுணுக்கங்களை எம் எஸ் வி  தன் இசைக்குள்ளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கொண்டுவருவதை கேட்டு ரசிப்பதே ஒரு ஏகாந்தம்தான். அலங்காரமாக மிளிரும் நியான் விளக்குகள் போலில்லாமல்  ஆடம்பரமில்லாத சிறிய அகல் விளக்கின் அழகாய் ஒளிர்ந்த பாடல்.

ஒரு படத்தின் எல்லா பாடல்களும் கேட்கும் எவரையும் ஒரு ஏகாந்த உலகுக்கு அழைத்துச் செல்ல முடியுமா?
25 வருடங்களுக்குப் பிறகும் ஒரு பழைய தலைமுறை இசை அமைப்பாளரால் நவீன பாணியை அச்சு பிறழாமல் பிரதியெடுக்க முடியுமா?
தேனிசை மழை என்ற முத்திரையுடன் பல படங்கள் உள்ளன. உண்மையில் தேனிசை மழை என்றால்..?
இது எல்லாவற்றிக்கும் ஒரே பதில்: நினைத்தாலே இனிக்கும். (79)



     இந்தப்  படம் Old school என்று இகழ்ச்சியாக பேசி  வேறு பக்கம் தாவிய இளைய தலைமுறைக்கு எம் எஸ் வி அளித்த இசை அதிர்ச்சி. தான் இன்னும் மன்னன்தான் என்று தன் மெல்லிசை மூலம் அழுத்தமாகத் தெரிவித்த  இன்னிசைச் செய்தி. தளர்ந்து விட்டார் என்று அலட்சியம் செய்தவர்களுக்கு கொடுத்த கும்மாங்குத்து. வறண்டுபோன இசை என நக்கலடித்தவர்களை கதிகலங்கடித்த அதிரடி. எம் எஸ் விஸ்வநாதன் என்ற பெயருக்குப்  பின் முற்றுப்புள்ளி வைத்தவர்களை கிடுகிடுக்கச் செய்த இசை பூகம்பம். படத்திற்கு மிகப் பொருத்தமான பாடல்கள் மட்டுமல்லாது பின்னணி இசையிலும் பிரமாதமாப்படுத்தியிருப்பார் எம் எஸ் வி. இதன் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமானது. இதுபோன்ற இன்னிசைக் கதம்பம் தமிழில் அபூர்வமே. இதன் பிரம்மிப்பூட்டும் சிறப்பு என்னவென்றால் கொண்டாட்டம், குதூகலம், களிப்பு, வேடிக்கை, காதல், பிரிவு, துயரம், நட்பு என எல்லா மனித உணர்ச்சிக்குமான வடிகால்கள் பாடல்களாக இதில் உண்டு.  நினைத்தாலே இனிக்கும் : அறுசுவை இசைவிருந்து. எல்லா பாடல்களையும் ஆராய்ந்தால் பிடிபடும் பிம்பம் சொல்லும் செய்தி என்னவென்பதை பிறகு பார்க்கலாம். இப்போது தேன் துளிகளாக நம் இதயத்தில் விழுந்த இப்படத்தின் பாடல்கள் பற்றிய சிறு குறிப்பு.

எங்கேயும் எப்போதும்  அடைந்த வெற்றியின் உயரத்தை  79இல் வேறு எந்த பாடலும் அடையவில்லை  என்பதே உண்மை. இளைஞர்களின் எல்லையில்லா உற்சாகத்தின் முகவரியானது  இந்தப் பாடல். கண்ணதாசனின் இன்பத் தத்துவ வரிகளுக்கு எஸ் பி பி உயிர் கொடுக்க எம் எஸ் வி அதன் ஆன்மாவை இசை மூலம் இயக்க விளைவு எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் தானே.

காதல் கவி பாடும் பாரதி கண்ணம்மா கேளடி சின்னம்மா ஒரு தென்றல் கீதம்.முதலில் ஒரு அதிரடி என்றால் அடுத்து என்ன ஒரு அரவணைப்பு! இந்தப் பாடல் ஒரு மோக முத்தம்.

அடுத்து வருவது படத்தின் சிறப்பான பாடலாக இல்லாவிட்டாலும் என்னைக் கவர்ந்த ஒரு பாடல். எம் எஸ் வியின் ஜலதோஷக்  குரலில் உற்சாக வெள்ளமாக பீறிட்ட ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் எந்திரம் சிவசம்போ பாடல் கேட்பவர்களை திக்குமுக்காட வைத்துவிடுகிறது. எம் எஸ் வி ஒரு நிர்பந்தத்தின் பேரிலேயே இதைப் பாட ஒப்புக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் ஆச்சர்யமூட்டும் பாடல். கதைக் களத்திற்கேற்ப மேற்கத்திய பாணியில் எம் எஸ் வி வாத்தியங்களை வைத்துக்கொண்டு அதகளம் செய்த பாடல். இரண்டாம் சரணத்தில் அவர் குரலின் டெம்போ ஏறிக்கொண்டு போக, கல்லைத் தின்றாலும் செரிக்கின்ற நாளின்று காலங்கள் போகாதே பின்னாலே என்பார்கள் என்று உச்சம் சென்று பின் இன்றைய ராப் இசைக் கூறுகள் கொண்ட மணமுண்டு பெண்ணுண்டு சோறுண்டு சுகமுண்டு மனமுண்டு என்றாலே  சொர்க்கத்தில் இடமுண்டு என்ற வரிகளை அபாரமாக பாடுவார். இதன் தொடர்ச்சியாக டியிங்க் டியிங்க் என்று   வினோத ஒலிகள் எழுப்பி, பரவசமான ஓசைகளைக் கொண்டு ஒரு நவீன ஆலாபனை செய்துவிட்டு பின்னர் சட்டென ஒரு யு டர்ன் அடித்து  ஜகமே தந்திரம்  என பல்லவிக்குத்   தாவும் போது தியேட்டர்களில் விசில்கள் ஏவுகணைகள் போலப் பறந்தன. இப்போதும் சிலிர்ப்பைக் கொடுக்கும் சரணம் அது.

அடுத்து நம்ம ஊரு சிங்காரி சிங்கப்பூரு வந்தாளாம் பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம் என்று துவங்கி சடசடவென இசை ஊர்வலமாக நகரும் இனிமையான பாடல். மனதை அள்ளும் மந்திர இசைகோர்ப்பு. டக் டக் என்ற தாளம் பாடல் முழுதும் நடைபயில இசைக் கருவிகளின் இனிமை தெறிக்கும் மிக நேர்த்தியான இசையமைப்பு. இதில்  வரும் எஸ் பி பியின் இயல்பான வார்த்தை அனுக்கல்கள்  (மன்மதன் வந்தானா என்று அவர் பாடும் விதம் ) மிகவும் புகழ் பெற்றது.

படத்தின் மிகச் சிறப்பான பாடல் எனது பார்வையில் யாதும் ஊரே யாவரும் கேளிர்(அன்பே எங்கள் உலக தத்துவம்) என்ற கானமே. டடன் டடன் என்று துவங்கும் முன்னிசையே  ஒரு இசை நீர்வீழ்ச்சிக்கு நம்மை ஆயதப்படுத்திவிடுகிறது. ட்ரம்பெட்டின் இனிமையான இசை அடுத்த பரிமாணத்தை அளிக்க பின்னர் நிதானமாக ஆரம்பிக்கும் தாளம் நம் இதயத் துடிப்பை எகிற வைக்கிறது. பள்ளிப் புத்தகத்தில் படித்த யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உலகளாவிய தத்துவ வார்த்தைகள்  ஒரு அழகான பாடலாக நம் காதுகளில் ஒலிக்கும் போது அப்போது ஒரு பள்ளிச் சிறுவனாக இருந்த என் போன்றவனுக்கு அது எந்த விதமான கற்பனைக்கு உயிர் கொடுத்திருக்கும் என்பது அனுபவித்திருக்கவேண்டிய ஒன்று. நம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலான நீராறும் கடலுத்த என்ற கவிதைக்கு அழகு சேர்த்த எம் எஸ் வி இதற்கு மட்டும் என்ன வஞ்சகமா செய்வார்? (இங்கே  ஒரு செய்தி: எம் எஸ் வி கேரளாவில் பிறந்தவர். ஆனால் அவரை கேரளர்கள் தமிழன் என்றே சொல்கிறார்கள். நினைக்கிறார்கள். அடையாளப்படுத்துகிறார்கள்.) யாதும் ஊரே  பாடலின் அடுத்த அபாரமான அம்சம் சரணத்தில் சரமாரியாக மின்னல் போல சரசரவென்று ஏறி இறங்கும் வயலின் கீற்று. இந்த இடத்தில்தான்  எம் எஸ் வி யின் இசை மேதமை எத்தனை அழகாக வெளிப்படுகிறது! சரணத்தின் இறுதியில் ஒவ்வொரு வரிக்கும் இடையில் இசைக்கப்படும் சிங்கப்பூரின் அடையாளமான அந்த மண்ணின் இசை பாடலுக்கு  வேறு பரிமாணம் அளிக்கிறது. தடையின்றி நளினமாக அரவணைக்கும் தாளம் கொஞ்சம் தயங்கி சரணத்தின் முடிவில் பல்லவியை நாடும் சமயத்தில் உயிர் பெறுவது ஒரு அழகு. இதை ரசிப்பதே ஒரு ஆனந்த அனுபவம் என்பேன். It's one of the most soul-stirring songs of the decade. Simply a mesmerising melody.

ஆனந்த தாண்டவமோ போதையேறிய கானம். கதைப்படி நாயகி போதை ஊசி ஏற்றப்பட்டு சிங்கப்பூர் ரோடுகளில் மனம்போன போக்கில் பாடிக்கொண்டே போவதுபோன்ற காட்சியமைப்பு. இது போன்ற பாடல்களை பாட எல் ஆர் ஈஸ்வரியை விட வேறு ஒருவரை கற்பனை செய்ய முடியுமா?

படத்தில் கைத்தட்டல்களை அள்ளிச் சென்ற பாடல் இனிமை நிறைந்த உலகமிருக்கு இதிலே உனக்கு கவலை எதுக்கு. காரணம் அதன் சூழல். புற்றுநோய் பீடித்த நாயகி தன் மரணம் வெகு அருகில் என்று உணர்ந்ததும்   நாயகனிடத்தில் சொல்லும் "சாகும் வரை பாட்டு பாட்டு பாட்டு" என்ற புகழ் பெற்ற வசனத்தை தொடர்ந்து கும் என்று குதிக்கும் பாடல்.

ஹிந்தியில் அப்போது வெளிவந்த ஹம் கிஸிஸே ஹம் நஹி படத்திற்குப்  போட்டியாகவே பாலச்சந்தர் இந்தப் படத்தை எடுத்தார் என்று அப்போது ஒரு பேச்சு எழுந்தது. இதை உறுதி செய்வதுபோல அப்படத்தின் மில்கயா பாடலின் சாயலைக் கொண்டது சோகமான  சயோனரா வேஷம் கலைந்தது என்ற பாடல். இதை எம் எஸ் வி தவிர்த்திருக்கலாம் என்ற எண்ணம் எனக்குண்டு. இதே பாடலின் துடிப்பான வடிவம்தான்   வானிலே மேடை அமைந்தது. கேட்டபோது என்னைத் திடுக்கிட வைத்த  ஒரு வரி இதிலுண்டு. அது ஆகாயத்தில் பூகம்பம் அற்புதங்கள் ஆரம்பம்.

கசெட்டுகளிலும் இசைத் தட்டுகளிலும் இடம் பெறாத பாடல் தட்டிக் கேட்க ஆளில்லைன்னா. இது ஒரு வேடிக்கைப் பாடல். படத்தில் ரஜினிகாந்த் சில ஆசாமிகளை அடித்துக்கொண்டே பாடுவதுபோல வரும். என் நண்பன் ஒருவன் (ரஜினி ரசிகன்) இந்தப் பாடலே அற்புதம் என்று சொல்லி என்னை கலங்கடித்தான்.

இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஒலிக்கும் நானநனாநனனா நன நனனா நன நனனா (நினைத்தாலே இனிக்கும்)  ஒரு சம்பிரதாயமான பாடல் போன்றில்லாமல் வெறும் ராக ஆலாபனைகள் மட்டுமே கொண்டது. இதை ஒரு புதிய முயற்சி என்ற சொல்லலாம். அல்லது இசைப் புரட்சி என்றும் கொள்ளலாம். (நீ பாதி நான் பாதி படத்தின் நிவேதா பாடல் போன்று.) ஒருவேளை எம் எஸ் வி என்பதால் இதை இசைப் புரட்சி என வர்ணிக்க சிலருக்கு தோன்றவில்லை போலும். அருமையான இசை பொங்கும் பாடல்.

What a waiting (காத்திருந்தேன் காத்திருந்தேன் காதல் மனம் நோகும்வரை) கசெட்டில் இல்லாதது. தற்போது இணையத்தில் கண்டெடுத்தேன். என்ன ஒரு மகத்துவமான இசை! இப்பாடலில் ஒலிக்கும் கிடுகிடுவென ஓடும் கிடார் இசை மிகவும் இனிமையாது.  கேட்பதற்கு அலாதியானது.  எம் எஸ் வி கிடார் இசை தனித்துத் தெரியும் பாடல்கள் எதுவும் படைக்கவில்லை  என்று நம்பும் சிலர் இந்தப் பாடலைக்  கேட்டிருக்க வாய்ப்பில்லை போலும். (கேட்டிருந்தாலும் அவர்களின் முடிவுகள் மாறப்போவதில்லை.) நான் மிகவும் ரசிக்கும் பாடல். பாடலை முழுதும் உள்வாங்கும் முன் சட்டென்று முடிந்துவிடுகிறது. அதுவே நம்மை இன்னும் கொஞ்சம் என ஏங்க வைக்கிறது.

You are like a fountain, your life is so uncertain  இசைத் தட்டில் இருந்ததா என்று தெரியவில்லை. இதுவும் இணையத்தில் கிடைகிறது. இசைக் குழு என்பது மேற்கத்திய பாணி என்பதால் சில நிர்ப்பந்தங்கள் இவ்வாறான பாடல்கள்  மீது விழுகின்றன. இப்பாடல்  நம்மீது ஊர்ந்து செல்லும் ஒரு துயரத்தின் தடம்.

     நினைத்தாலே இனிக்கும் படம் அவ்வளவாக வெற்றி பெறவில்லை என்ற கருத்து இருக்கிறது. இந்தப் படமே கமல்-ரஜினி இருவரும் இணைந்து நடித்த கடைசிப் படம். இதன் பின் அவர்கள் வேறு பாதைகளில் பயணித்தது, அவர்கள் பெற்ற வெற்றிகள் எல்லாமே எழுதப்பட்ட வரலாறுகள். நானோ இந்தப் படத்தின் பாடல்களை குறித்தே பேசுகிறவன்.  அடுத்து நான் எழுதப் போவது சிலருக்கு கடுமையான கோபத்தை கொடுக்கலாம். இருந்தாலும் படிப்பது நலம். படிப்பதை தவிர்ப்பது அதைவிட நலம்.   நினைத்தாலே இனிக்கும், பிரியா என்ற இரண்டு படங்களுக்கும்  நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றுணர்கிறேன். நினைத்தாலே இனிக்கும்  படத்தில் எம் எஸ் வி இசைத்த பாடல்கள் பெற்ற இமாலய வெற்றி அப்போது வளர்ந்து கொண்டிருந்த   புதிய இசை அமைப்பாளர் ஒருவருக்கு கடும் சிரமத்தை கொடுத்திருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. இந்தப் படம்  வந்த அடுத்த ஆண்டில் வந்த படம்தான் பிரியா. இதுவும் சிங்கப்பூரிலேயே முழுதும் படமாக்கப்பட்டது. எம் எஸ் வி யின் சிவந்த மண், உலகம் சுற்றும் வாலிபன், நினைத்தாலே இனிக்கும் படங்களின் (இவைகள் எல்லாமே வெளிநாடுகளில் படமாக்கப்பட்டவை.) நெருங்க முடியாத இசை அமைப்பை எதிர் கொள்ள இயலாத  அல்லது  பிரியா படத்தின் பாடல்கள் என்ன தரத்தில்  இருக்கும் என்பதை நன்கு அறிந்தவர்கள் எம் எஸ் வியின் இந்த இசை மேன்மையை பை பாஸ் செய்ய  கண்டுபிடித்த ஒரு புதிய தந்திரம்தான்  ஸ்டீரியோ போனிக் சவுண்ட் என்ற அந்த  அலங்கார வெளிப்பூச்சு.  உண்மையில் ஸ்டீரியோ ரெகார்டிங் நம் தமிழில் ஏன் ப்ரியா என்ற படத்தில் அறிமுகப்படுத்தப்படவேண்டும் என்று எண்ணிப்பார்த்தீர்களேயானால் நான் சொல்லும் அனுமானம் உங்களுக்கு ஒரு புதிராகவே இருக்காது. வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட படங்களின் இசையின் தரத்தை தீர்மானிக்கும் அந்த அளவுகோல்  எழுபதுகளில் ஒருவரிடமே இருந்தது. அது எம் எஸ் வி மட்டுமே .  இவரது இசையில் சிவந்த மண் 69 இல் வந்து அதன்  பாடல்கள் பெருத்த வரவேற்பைப் பெற்றன.  உலகம் சுற்றும் வாலிபன் 73இல் வந்தது. அதன் பாடல்கள் பெற்ற வெற்றி அழிக்க முடியாத வரலாறு.  இதன் தொடர்ச்சியாக  79 இல்  வந்த நினைத்தாலே இனிக்கும் படப்பாடல்கள் எத்தனை ஆழமாக ரசிகர்களைப் பாதித்தன என்பதையும் இங்கே விளக்கத் தேவையில்லை. எம் எஸ் வியின் மகத்தான இசைவீச்சை   கண்கூடாகக் கண்டதன் எதிர்வினையே (அச்சம்?) ப்ரியா படத்தில்    ஸ்டீரியோ போனிக் சவுண்ட் என்ற புதிய தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்ய வேண்டிய நிர்பந்தத்தை பிரியா படக் குழுவினருக்கு ஏற்படுத்தியிருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.  இந்தப்  புதிய தொழில் நுட்பம் அப்போது மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. தவிர அதுவே பாடல்களின் வெற்றிக்கு ஒரு  முக்கிய காரணியாகவும் இருந்தது. இந்த ஸ்டீரியோ என்ற பகட்டுப் பூச்சு ரசிகர்களை அதன் பாடல்களை அதற்கு முன் வந்த made in a foreign land வகைப் படப் பாடல்களோடு ஒப்பீடு செய்வதை ஓரம் கட்ட  உதவியது  என்றே நினைக்கிறேன்.  நீங்கள் எந்தவித முடிவுகளுமின்றி ப்ரியா படப் பாடல்களை ஸ்டீரியோ என்ற ஜோடனை  இல்லாமல் கேட்டீர்களேயானால் அந்தப் பாடல்கள் வெகு சாதாரணமானவை என்பதை உணர்வீர்கள். இந்த ஸ்டீரியோ முத்திரை இல்லாவிட்டால் அவை அனைத்துமே இன்னுமொரு இளையராஜா ஓசைகள்தான். Just mundane as they always are.

         நூல்வேலி(79)-பாலச்சந்தர் படங்களின் மற்றொரு சிறப்பு தன் படங்களில் அவர் சூட்டும் படத்தலைப்புகள். தமிழில் வெகு சில இயக்குனர்களே படத் தலைப்புகளில் சிரத்தை எடுத்துகொள்கிறார்கள் என்பது என் எண்ணம். தமிழ் படத் தலைப்புகள் பற்றி ஒரு தீவிர ஆய்வு செய்யப்படும் பட்சத்தில் நாம் பாலச்சந்தரின் தரத்தை அறியலாம். நூல்வேலி என்ற தலைப்பே வியக்கவைக்கிறது. கர்நாடக இசையின்  மிகப் பெரிய ஆளுமையான  பாலமுரளி கிருஷ்ணா பாடிய மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே மனதைத்  தீண்டும் அற்புதப் பாடல்.  முன்பு நான் தவிர்த்து இப்போது விரும்பும் பாடல்.அடுத்தது  நான் மிகவும் ரசிக்கும் நானா பாடுவது நானா நானும் இளவயது மானா என்ற மெல்லிசையின் முத்தாய்ப்பு. இதில் இசைக்கப்படும் தாளம் நமக்குள் ஒரு கொண்டாட்ட உணர்வைத்  தரும்.  பாடலின் பல்லவியே ஒரு தென்றலின் தீண்டல். பாடல் நகர்ந்து  சரணத்தை அடையும்போது  ஒரு இசைச் சோலைக்குள் நுழைந்த  அனுபவம் கிடைக்கிறது. இதன் சுவையே அலாதியானது. அழகை அழகாய் பாடுவதில்தான் எத்தனை அழகு இருக்கிறது.

   வறுமையின் நிறம் சிவப்பு(80)- சிலோன் வானொலியின் இசைச் சித்திரம் நிகழ்ச்சியில் பல வாரங்கள் முதலிடத்தில் இருந்த நிழல்களின் இது ஒரு பொன் பொழுது பாடலை வீழ்த்தியது  சிப்பி இருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி பாடல். (நான் இதை முதன் முதலில் கேட்டது இந்த சந்தர்ப்பத்தில்தான் என்பதால் இதைச் சொல்கிறேனே தவிர இந்த இரண்டு அருமையான கானங்களையும் ஒப்பீடு செய்வதற்காக அல்ல.) அதற்காகவே அப்போது நான் இந்தப் பாடலை வெறுத்தேன். இசையே இல்லாத பாடலிது என்று பகடி செய்வேன். ஆனால் கல்லூரி காலத்தில் இதைக் கேட்டபோது இதன் பரிமாணம் என்னவென்று புரிந்தது.  எம் எஸ் வி தன் விரல்களில் பாதுகாத்து வைத்திருக்கும் ராக ரகசியங்கள் மற்றும் இசை தேர்ச்சி இந்தப் பாடலில் சட்டென்று ஒரு பறவை போல சிறகை விரித்து உயரே பறக்கிறது.  எத்தனை நளினமான பாடல் இது. வழக்கம்போலவே இசைக்கும் கவிதைக்கும் இடையே நடக்கும் ராக யுத்தம் இது என்று சொல்லலாம். பாடலின் இறுதியில்  சிப்பியிருக்கு முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரம் வந்தது இப்போது என்று இந்த இசையுத்தம் காதல் முத்தத்தில் முடியும்போது ஒரு முழு நாவலைப்  படித்த திருப்தி உண்டாகும்.  இப்படி ஒரு சூழலை கற்பனை செய்த பாலச்சந்தரை ஒரு வரியாவது பாராட்டவேண்டும் என்று தோன்றுகிறது. ஆர்ப்பாட்டமில்லாத மென்மையான இசையும் கொஞ்சும் கவிதையும் வசீகரமான குரல்களும் இதை புதிய உச்சங்களுக்கு எடுத்துச் செல்கின்றன.இன்றைக்கு இந்தப் பாடலை கேட்க நேரும் ஒவ்வொரு சமயத்திலும் இதை முழுவதும் கேட்கத் தவறுவதில்லை.  பாட்டு ஒன்னு பாடு தம்பி பசிய கொஞ்சம் மறந்திருப்போம் ஒரு அடாவடிப் பாடல். ஆனாலும் கன்னாபின்னாவென்று பாடலைக் கடித்துக் குதறும் கடுமையான கவிதை இதில் இல்லை.  நல்லதோர்  வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ  பாடல் தமிழ்த் திரையில் இசைக்கப்பட்ட பாரதியார் பாடல்களில்  முக்கியமானது. மிகத் தரமாக உருவாக்கப்பட்ட பாடல். பலரின் ரசிப்புக்கு உணவானது. ஆனாலும்  நாம் சில நல்ல பாடல்களை சாலையோரத்தில் வீசிவிட்டோம் என்ற உணர்வு இதைக் கேட்கும்போது எனக்கு வருவதுண்டு.

    தில்லு முல்லு(81)- இளையராஜா உச்சத்தை நோக்கி சரசரவென்று நகர்ந்துகொண்டிருந்த வேளையில் வந்ததால் எனக்கு அப்போது இப் படத்தின் பாடல்கள் மீது பிடிப்பு அவ்வளவாக இல்லாமல் இருந்தது. எல்லோரையும் போல என் சமகாலத்து இசையை ரசித்துக்கொண்டிருந்த நான் அதன் மோகம் வடிந்த பின்  ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும் போது அறிவாயம்மா  என்ற பாடலைக் கேட்டதும் என் இசை ரசனை என்னை பரிகாசம் செய்தது. கும் கும் என்று டப்பாங்குத்து தாளத்தை வைத்துக்கொண்டு பாடல் என்ற பெயரில் பேயாட்டம் போட்டு வக்கிரமான இசை பாணியை உருவாக்கிய  சில நாலாந்தர இசை அமைப்பாளர்கள் மத்தியில்  நம் மரபிசையின் வேர்களான சாஸ்திரிய ராகங்களை அதன் அழகு குலையாமல் அதன் வேருடன் மெல்லிசை கலந்து பாடல்கள் படைத்த ஒரு மகா இசைஞனின் மேதமையை நாம் எவ்வளவு எளிதாக "அறுவை" என்று நினைத்திருந்தோம் என்று வருந்தினேன். ஆஹா! ராகங்கள் பதினாறு என்று எஸ் பி பி துவங்கும்போதே நமக்கு  மேகத்தை முத்தமிடும் உணர்வு வருகிறது. கேட்டதும் பாடத் தோன்றும் இசையையே நான் கானம் என்பேன். இது அதுபோன்றொரு கானம்தான். எத்தனை அழகாக இந்தப் பாடல் ராகத்தின் மீது நழுவிச் செல்கிறது! தில்லுமுல்லு தில்லுமுல்லு உள்ளமெல்லாம் கல்லுமுள்ளு என்ற பாடல் ஒரு சுகவாசியின் துள்ளல் பாடல். ஒரு இளைஞனின் கட்டுப்பாடில்லாத மனநிலையை பாடலாக்கும்போது அதில்  இருக்கும் சில இச்சைகளை நீக்கிவிட்டால் நமக்குக் கிடைப்பது ஒரு தரமான பாடல் இது போன்று. இல்லாவிட்டால் வாடி என் கப்பக் கிழங்கே போன்ற விடலைகளின்  அடாவடி அபத்தங்களும் காது கொடுத்து கேட்கமுடியாத கருமாந்திரங்களும்தான் அகப்படும்.

    47 நாட்கள்(81)- சில சமயங்களில் வீதிகளில் ஆர்ப்பாட்டமாக வரும் ஊர்வலங்களை பிரம்பிப்புடன் பார்க்கும் நாம்  அருகேயிருக்கும் வண்ண மலர்களை கவனிக்கத் தவறிவிடுகிறோம். அது போன்றதொரு மறக்கப்பட்ட கவிதை போல  அதிகம் பேரை சென்றடையாத அருமையான பாடல் இந்தப் படத்தில் இருக்கிறது அது மான் கண்ட சொர்கங்கள் காலம் போகப் போக  யாவும் வெட்கங்களே என்ற  பாடல். எட்டு நிமிடங்கள் நீடிக்கும் இந்தப் பாடல் படத்தில் இடையிடையே ஒலிக்கும். வானொலிகளில் எப்போதாவது ஒலிபரப்புவார்கள். அந்நிய சூழலில் சிக்கிக்கொண்ட ஒரு தமிழ்ப் பெண்ணின் சூறாவளி மன உணர்வுகளை ஒரு ஆணின் குரல் கொண்டு பாடும் அற்புதப் பாடல் இது.  எம் எஸ்  வி யின் மாறுபட்ட இசை வர்ணத்தை இதில் நாம் கேட்கலாம். இதன் இடையிசையும் வாத்தியங்களின் இனிமையான பவனியும், பொருள் புதைந்த கவிதை வரிகளும், எஸ் பி பியின் பால் நிலவுக் குரலும் கேட்பவரை மெய்மறக்கச் செய்துவிடுகின்றன. 81இல் இளையராஜாவின் காட்டாற்று வேகத்தில்  அடித்துச் செல்லப்பட்ட  பல வைர கீதங்களில் இதுவும் ஒன்று.

    அக்னி சாட்சி(82)- மனநோய் பீடித்த மனைவியை குழந்தை போல பாவிக்கும்  கணவனின் துயரத்  தாலாட்டு  கனா காணும் கண்கள் மெல்ல உறங்காதோ பாடல் சொல்ல என்ற பாடல். எம் எஸ் வியின் இசை சோகத்தின் சாறை பிழிந்து பாடலுக்குள் ஊற்ற  மனதுக்குள் அந்தத் துயரத்தின் துளிகள்  சொட்டு சொட்டாக இறங்குவதையும்  கண்ணீரின் ஓசை எதிரொலிப்பதையும்   கேட்கலாம். பாடலின் இடையே நடிகை சரிதாவும் கவிதை வரிகளை பாடி(!) இருப்பது இந்தப் பாடலின் இருக்கும் வித்தியாசம். ஆழமான கானம். எம் எஸ் வி என்ற அற்புதக் கலைஞனின் இசை  நமக்கு கொடுத்த கணக்கற்ற காவியப் பாடல்களில் இதுவும் ஒன்று.

      இந்த இசைக் கூட்டணியில் விடுபட்ட சில படங்கள் இருக்கின்றன. மேலும் இந்த காலகட்டத்தில் எம் எஸ் வி மற்ற பல படங்களுக்கும் தன் சிறப்பான இசையை கொடுக்கத் தவறவில்லை. இதன் அடர்த்தி கருதி தொடரும் பதிவில் அவற்றை ஆராயலாம் என நினைக்கிறேன்.  ஒரு சார்பாக கட்டமைக்கப்பட்ட புனைவை  உடைப்பதோ  அல்லது மூளைச் சலவை செய்யப்பட்ட சிலரின்  கருத்துக்களை மாற்றி அமைப்பதோ என் எண்ணமில்லை. அது சாத்தியமுமில்லை.  நான் சில தேன் கூடுகளை மட்டுமே உங்களுக்கு அடையாளம் காட்டுகிறேன்.  அதன் தேன் துளிகளை ருசிப்பது உங்களின்  விருப்பம். ஆனாலும் இறுதியாக எழும் ஒரு   கேள்வி இதுதான் : இசையை சுவைக்க நமக்கு என்ன தடை இருக்கிறது?
 


அடுத்து: இசை விரும்பிகள் XXI -- எழுபதுகள்: அலங்காரம் கலையாத அழகு.