Wednesday, 8 May 2013

 இசை விரும்பிகள் VI - நிற்காத மழை 


       பதினைந்து ஆண்டுகளாக தமிழ்த் திரையில் பல சிலிர்ப்பான இசை அலைகளை உருவாக்கிய விஸ்வநாதன்-ராமமூர்த்தி கூட்டணி 65 இல் வந்த ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்துடன் பிரிந்தது. காதலிக்க நேரமில்லை படத்தில் ஸ்ரீதர்  கூறிய பல மாறுதல்களுக்கு  டி கே ராமமூர்த்தி மறுத்ததால் அவருக்கும் ஸ்ரீதருக்கும் இடையில் மனக் கசப்பு ஏற்பட்டு அது விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பிரிவுக்கு வித்திட்டது என்று ஒரு கருத்து உண்டு.  இதற்கு கண்ணதாசனின் ஆதரவும் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால்  அவர்கள் பிரிவுக்கு இதுவரை என்ன காரணம் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. இந்தப் பிரிவுக்குப் பின் விஸ்வநாதன் தனியாக தன் இசைப் பயணத்தை தொடர்ந்த போது பலர் விஸ்வநாதனால் வெற்றி பெற முடியாது என்றும் அவர் அதிக நாட்கள் இசைத் துறையில் தாக்குப் பிடிக்க மாட்டார் என்றும் கணித்தார்கள்.மெல்லிசை ஒய்ந்து விட்டது மீண்டும் வராது என்று சிலர் ஜாடையாகப் பேசினார்கள். ஆனால் நடந்ததோ வேறுகதை. எம் எஸ் வி  அந்த ஆருடங்களையெல்லாம்  துகள் துகள்களாக உடைத்தது மட்டுமல்லாது மேலும்  ஒரு இருபது ஆண்டுகள் தமிழ்த் திரையில் வெற்றிகரமாக வலம் வந்தார். சிலர் சொல்வதைப் போல 76 இல் இளையராஜா  வந்ததும் எம் எஸ் வியின் காலம் முடிந்து போய்விடவில்லை. உண்மையில் அவர் 76 முதல் 83 வரை இசை அமைத்த படங்களின் எண்ணிக்கை ; 26(76), 24(77), 30(78), 24(79), 18(80), 23(81), 25(82), 18(83). இந்த எண்ணிக்கை சற்று தவறாக இருக்கலாம்.அதாவது படங்களின் எண்ணிக்கை  அதிகமாக  இருக்க வாய்ப்புள்ளது.

     பொதுவாக பழைய பாடல்கள் என்றாலே சில முன்தீர்மானித்தல்கள் நம்மிடையே உண்டு. உதாரணத்திற்கு பாடல் என்றால் எம் எஸ் வி, கவிதை என்றால் கண்ணதாசன்.நல்ல படம் என்றால் பீம்சிங். இது அறியாமையினால் உண்டான கருத்து, இது உண்மை இல்லை என்றாலும் இப்படிப்பட்டஆயத்த   எண்ணங்கள் ஒருவருக்கு ஏற்பட என்ன காரணம்? காரணம் வெகு சுலபமானது. இவர்கள் தமிழ் கிளாசிக் யுகத்தின் பிரதான முகமாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டார்கள் என்பதே அது. எம் எஸ் வி யோ,கண்ணதாசனோ, சிவாஜியோ, டி எம் எஸ்ஸோ, சுசீலாவோ அந்த இனிமையான யுகத்தின் குறியீடுகளாகவே மக்களுக்கு தோன்றுகிறார்கள். சிலர் தவறாக குறிப்பிடும்போது நான் திருத்த நேர்ந்த சமயங்களில் அவர்கள் சொல்வது இதுதான்:"எம் எஸ் வி ன்னா எம் எஸ் வி கிடையாது. கே வீ யாகக் கூட இருக்கலாம்.  அது  அந்த காலம் என்று  அர்த்தம் ". இதுதான் நிதர்சனம். நான்கூட என் சிறு வயதில் கேட்ட பல பாடல்கள் விஸ்வநாதன்- ராமமூர்த்தி யின் படைப்பாக இருந்தாலும் இலகுவாக எம் எஸ் வி பாடல் என்றே தீர்மானிப்பேன். இதை நான் மட்டும் செய்யவில்லை என்பதை பின்னர் தெரிந்து கொண்டேன்.

         விஸ்வநாதன்- ராமமூர்த்தியின் பிரிவு தமிழ்த் திரையிசையில் ஒரு வெற்றிடத்தை உண்டாக்கியது. அதை இருவராலுமே பின்னாட்களில் நிரப்ப முடியவில்லை என்பது கண்கூடாக நாம் கண்ட உண்மை .விஸ்வநாதன் தனியாக இசை அமைத்து  வணிக ரீதியாக ராமமூர்த்தியை விட பல படிகள் மேலே இருந்தாலும் இந்த இரட்டையர்களின் இசையில் இருந்த விவரிக்கமுடியாத அந்த மந்திரச் சுவை அவர்கள்  தனிப்பாதைகளில் பயணம் செய்த போது காணப்படவில்லை. 65க்கு முன் மக்களை மயக்கிய அந்த மெல்லிசையின் ஒரு இழை 65க்குப் பிறகு அறுந்து தொலைந்து போனது.  (இந்த அறுந்த  நூலை அவர்களாலே மீட்டெடுக்க முடியாத போது அவர்களின் இடத்தை இன்னொருவர் அடைந்துவிட்டார் அதையும் தாண்டி விட்டார் என்று சொல்வதெல்லாம் ஒரு அலங்காரமான பேச்சு. அவ்வளவே.)
 
          விஸ்வநாதன்-ராமமூர்த்தி சேர்ந்து அமைத்த பாடல்களில் இருந்த இனிமை அவர்கள் தனித்தனியாக இசை அமைத்தபோது இருந்ததா என்றால் கண்டிப்பாக இல்லை.இரண்டிற்கும் வித்தியாசம் இருந்தது. அதுவே நியாயமும் கூட. அப்படி இல்லையென்றால்  இத்தனை சிறப்புகளும் ஒருவருக்கே உரியதாகிவிடும் அபாயம் இருக்கிறது. இந்த வித்தியாசமே அவர்களின் இசையை சிறப்புச்  செய்கிறது.  ஆனால் இந்த வேறுபாடு  எளிதில் உணரப்படாத அளவில் ஒரு மிக மெல்லிய சப்தம் குறைந்த ஸ்வரம் போலவே இருந்தது. தீவிர இசை விரும்பிகள் மட்டுமே இதை அடையாளம் கண்டுகொண்டனர்.

                65இல் எம் எஸ் வி  கலங்கரை விளக்கம் என்ற படத்திற்கு முதல் முறையாக தனியாக இசை அமைத்தார்.( இந்தச் செய்தி தவறாக இருப்பின் இதைத் திருத்தலாம்) இந்தப் படத்தில் எம் எஸ் வி யின் பாடல்களை சற்று பாருங்கள்; சங்கே  முழங்கு,காற்று வாங்க போனேன்,பல்லவன் பல்லவி,பொன்எழில் பூத்தது, என்னை மறந்ததேன். எல்லா பாடல்களுமே வெகு பிரசித்தி பெற்றவை.  மெல்லிசை என்றால் எம் எஸ் வி என்பதை  மீண்டும் ஒருமுறை நிறுவிய பாடல்கள் இவை. அதன் பின் எம் எஸ் வி அந்த ஆண்டில் இசை அமைத்த படங்கள் :

குழந்தையும் தெய்வமும் (நான் நன்றி சொல்வேன், அன்புள்ள மான்விழியே,குழந்தையும் தெய்வமும், என்ன கோபம் சொல்லு பாமா, பழமுதிர்ச் சோலையிலே, கோழி ஒரு கூட்டிலே)
நீலவானம் (ஒ லிட்டில் பிளவர்,ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே,)
பஞ்சவர்ணக்கிளி (தமிழுக்கும் அமுதென்று,கண்ணன் வருவான்,அழகன் முருகனிடம்,)
பழனி ( ஆறோடும் ,உலகத்திற்குள்ளே)
பூஜைக்கு வந்த மலர்(பளிங்கு மேடையிட்டு , கால்கள் நின்றது)

       குறிப்பாக அன்புள்ள மான்விழியே, ஓடும் எண்ணங்களே, கண்ணன்  வருவான், தமிழுக்கும் அமுதென்று போன்ற பாடல்களைக் கேட்கும் பொழுது, விஸ்வநாதன்-ராமமூர்த்தி  பிரிவின் சுவட்டை நாம் காணவே  முடியாது. அவர்களின் இணைந்திருந்த காலத்தின்  இனிமையான   இறுதி வாசம் இந்தப் பாடல்களில் மிச்சமிருப்பதை நாம் நுகரலாம். அவர்கள் சேர்ந்திருந்த காலத்தில் அமைத்த பல மெட்டுக்களை எம் எஸ் வி 65 க்குப் பிறகு சில படங்களில் பயன்படுத்திக்கொண்டதாக சிலர் சொல்கிறார்கள். இது உண்மையா என்று ஆராய நான் முற்படவில்லை. இருக்கலாம்... ஒரு வேளை.

         66 இல் எம் எஸ் வி இசையில் வந்த  சில முக்கியமான படங்கள்:
அன்பே வா,( நான் பார்த்ததிலே,அன்பே வா, லவ் பேர்ட்ஸ்,ராஜாவின் பார்வை,ஏய் நாடோடி, புதிய வானம்)
ராமு,(நிலவே என்னிடம்,பச்சை மரம் ஒன்று,)
பறக்கும் பாவை,(கல்யாண நாள் பார்க்க,முத்தமோ மோகமோ,யாரைத்தான் நம்புவதோ,உன்னைத்தானே,நிலவெனும் ஆடை)
சந்திரோதயம்,(புத்தன் ஏசு காந்தி,சந்திரோதயம்,எங்கிருந்தோ ஆசைகள்,)
சித்தி,(சந்திப்போமா,காலமிது காலமிது)
கொடி மலர்,(மௌனமே பார்வையால்,)
மோட்டார் சுந்தரம் பிள்ளை,(காத்திருந்த கண்களே, காதல் என்றால் என்ன)
பெற்றால்தான் பிள்ளையா?( நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி,செல்லக்கிளியே, கண்ணன் பிறந்தான்)

            

      அன்பே வா படத்தின் பாடல்கள் மிக இனிமையாக உருவாக்கப்பட்டு பெருத்த வரவேற்பைப் பெற்றன.எம் எஸ் வி வணிக ரீதியில் முன்னேறத் துவங்கினார். இதே சமயம் ராமமூர்த்தியும் சாதுமிரண்டால்,குமரிப் பெண், மெட்ராஸ் டு பாண்டிச்சேரி,தேன் மழை,ஆலயம்,நான்,பட்டத்து ராணி போன்ற படங்களுக்கு இசை அமைத்தார். அவர் தொடர்ந்து இசைஅமைத்த படங்களின் எண்ணிக்கை சொற்பமாகவே இருந்தது.தங்கச் சுரங்கம், கண்மலர் போன்ற படங்களிலும் அவரின் பங்களிப்பு இருந்தது. இருப்பினும் விஸ்வநாதனின் இமாலய பாய்ச்சலுக்கு முன் அவரால் ஈடு கொடுக்க முடியவில்லை. ஒரு பண்பட்டகலைஞனாகிய  ராமமூர்த்தி தானாகவே இசைத் துறையை விட்டு அகன்று சென்று விட்டார். இரட்டையர்கள் இருவரும் பிரிவுக்குப் பின் மற்றொருவரை எந்த சந்தர்ப்பத்திலும் குறைத்தோ அல்லது இழிவாகவோ விமர்சனம் செய்ததே கிடையாது.

           60 களின் இறுதியில்  கே வீ மகாதேவன்,விஸ்வநாதன்,வீ குமார், சங்கர்-கணேஷ்,ஜி கே வெங்கடேஷ்,வேதா போன்ற இசைஞர்கள் தமிழ்த் திரையில் இருந்தார்கள்.இதில் எம் எஸ் வி க்கும்  கே வீ எம்முக்குகே போட்டி நிலவியது.எம் எஸ் வி அன்பே வா கொடுத்தால் கே வீ எம் தில்லானா மோகனாம்பாள் கொடுத்தார். முன்னவர் அபூர்வ ராகங்கள்   பாடினால் பின்னவர் சங்கராபரணம் பாடினார்.எழுபதுகள் வரை தமிழிசையின் தரம் நிமிர்ந்தே இருந்தது.
           
       ஹிந்தியில் ஷம்மிகபூர் நடித்து பெரிய வெற்றியைப் பெற்ற பிரம்மச்சாரி தமிழில் எங்க மாமா என்று மாறியது. இதன் பாடல்கள் எம் எஸ் வி யின் மெல்லிசைக்கு மற்றொரு மகுடமாயின. "செல்லக் கிளிகளாம் பள்ளியிலே"  பாடலின் இசைக்கோர்ப்பு, டி எம் எஸ் சின் அடக்கி வாசிக்கும் தாலாட்டும் குரல், பாடலின் ஏற்ற இறக்கங்கள் இந்தப் பாடலை  நம் ஞாபக அடுக்குகளில் சேமித்து வைத்து விடுகிறது. "எல்லோரும் நலம் வாழ" என்ற பாடல் இப்போது அரிதாகி விட்ட நேர்த்தியான மேற்கத்திய இசையின் தமிழ்ப் பதிப்பு என்றே சொல்லலாம். பாடலில் வரும் கோரஸ், அந்த பியானோ இசை எல்லலாமே ஒன்றைவிட்டு மற்றொன்று மீறிச் செல்லாமல் ஒருங்கே அழகாக ஒலிப்பது நம் காதுகளுக்கு  ஆனந்தமாக இருக்கும்.தமிழ்த்திரையிசையில் பியானோவை எம் எஸ் வி போல் அழகாகவும் இனிமையாகவும் பயன்படுத்தியது வேறு யாரும் இல்லை என்பது தெளிவு. இதை விட மேற்கத்திய இசையை தமிழுக்கு ஏற்றாற்போல் வடிவமைத்து கொடுத்ததில் எம் எஸ் விக்கு  இணையாக வேறு ஒருவரை நாம் குறிப்பிடமுடியாது என்பதையும் இங்கே நான் பதிவு செய்கிறேன். மேலும் இந்த கோரஸ் எம்    எஸ் வி காலத்தோடு முடிவு பெற்று விட்டது. இதன் பிறகு வந்ததெல்லாம் வேறு மாதிரியான ஓசைகள்.

    பாமா விஜயம் படத்தில் வரும் பிரசித்தி பெற்ற வரவு எட்டணா பாடல் மேற்கத்திய ராக் அண்ட் ரோல் பாணியில் அமைக்கப்பட்ட ஆனால் நம் தமிழ் இசையின் அடிப்படைக் கூறுகள்  எந்த விதத்திலும் பாதிக்கப்படாத  வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு இனிமையான பாடல். ஆங்கில  ராக் அண்ட் ரோல் இசையில் பரிச்சயம் உள்ளவர்களுக்கு இது நான்றாகத்  தெரியும்.  எம் எஸ் வி யின் மெல்லிசையில் இது போன்று பெரிதாக அலட்டிக்கொள்ளாத மேற்கத்திய இசையின் இழைகள் ஊடுருவிச் செல்வதை கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் புரிந்துகொள்ளலாம்.அடிப்படையில் இவை தமிழிசையாக இருந்தாலும் மேற்கத்திய இசை ஒரு அடிநாதமாக பாடல் முழுவதும் இருப்பதை உணரலாம்.

      மேலும் சில மேற்கத்திய பாணிப் பாடல்கள் இதோ:

எங்கிருந்தோ ஆசைகள், - சந்திரோதயம்
என்னைத் தெரியுமா- குடியிருந்த கோவில்
நான் பார்த்ததிலே, -அன்பே வா
பாடுவோர் பாடினால்,-கண்ணன் என் காதலன்
நான் நன்றி சொல்வேன்,-குழந்தையும் தெய்வமும்
காத்திருந்த கண்களே,-மோட்டார் சுந்தரம் பிள்ளை
உழைக்கும் கைகளே,-தனிப்பிறவி
உலகமெங்கும் ஒரே மொழி,-நாடோடி
தங்கங்களே நாளைத் தலைவர்களே -அவன் ஒரு சரித்திரம்
தேடினேன் வந்தது-ஊட்டி வரை உறவு
காதல் காதல் என்று பேச-உத்தரவின்றி உள்ளே வா (மிக அருமையாக இசைக்கப்பட்ட பாடல்)
நல்ல இடம்-கலாட்டா கல்யாணம்
பொட்டு வைத்த  முகமோ-சுமதி என் சுந்தரி

     அரேபிய சூபி இசை ஹிந்தியில் வெகுவாக பிரசத்தி பெற்ற ஒரு வகை இசை.கவ்வாலி என்று இதை அழைப்பார்கள். தமிழில் இது ஏற்கனவே இடம் பெற்றிருந்தாலும் (பாரடி கண்ணே கொஞ்சம்- வல்லவனுக்கு வல்லவன் இசை-வேதா) குடியிருந்த கோவிலில் வரும் "ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதில்தான்" பாடல் பெரு வெற்றியைப் பெற்றது. எம் எஸ் வி யின் இசை இந்தப் பாடலுக்கு ஒரு புதிய ஒளியைப்  பாய்ச்சியது. இந்தப் பாடலின் இன்னொரு சிறப்பு என்னவென்றால் இதை கேட்கும் போது நமக்கே ஆடத் தோன்றும்.

          எம் எஸ் வி யின் தொடர்  வெற்றி அவரை தமிழ்த் திரையின் அசைக்கமுடியாத இசைஞராக்கியது. 60 களின் இறுதியிலும் 70 களின் துவக்கத்திலும் அவர் பாடல்கள் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இருந்தது. அவர் இல்லாத படங்கள்  வெகு சொற்பமாகவே இருந்தன. எப்படி ஐம்பதுகள் ஜி ராமனாதனின் கைகளிலும் அறுபதுகள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, மற்றும் கே வி மகாதேவன் கைகளிலும் இருந்தனவோ அதே போல எழுபதுகள் விஸ்வநாதனின் கையசைவில் இயங்கின. அவரின் பாடல்கள் 65 க்கு முன் இருந்த உச்சத்தை எட்ட முடியாவிட்டாலும் தரத்திலோ இனிமையிலோ சற்றும் கீழிறங்கவில்லை. சற்று இந்தப் பட்டியலைப் பார்ப்போம்: பாமா விஜயம் (67),ஒளி விளக்கு (68),உயர்ந்த மனிதன் (68),தெய்வ மகன் (69),சிவந்த மண் (69), சாந்தி நிலையம்(69),எங்க மாமா (70).அவளுகென்று ஒரு மனம்(71),ஞான ஒளி(72), கெளரவம்(73),

      மேற்கண்ட பத்தியில் உள்ள இரண்டு படங்களைப் பற்றி இப்போது பேசலாம். முதலாவது ஒரு பெங்காலி படத்தின் தமிழ்த் தழுவலான "உயர்ந்த மனிதன்". படத்தின் பெயரே காலத்தால் கரைக்க முடியாத ஒரு பசுமையான பாடலை நமக்கு "ஞாபகப்"படுத்திவிடுகிறது. "அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே" என்ற இந்தப் பாடல் வெறும் சாதாரணமாக, சம்பிரதாயமாக ஒலிக்காமல் இயல்பான  பேச்சு வார்த்தைகளைக் கொண்டே மிகவும் ரசிக்கத்தக்க வகையில் இசைக்கப்பட்ட ஒரு அபாரமான பாடல். அதே படத்தில் வரும் மற்றொரு சிறப்பான பாடல்  "என் கேள்விக்கென்ன பதில்". இதை சிவாஜிக்கு இல்லாமல் சிவகுமாருக்கு கொடுத்ததில் பல சிவாஜி ரசிகர்கள் அப்போது கொதித்தார்கள் .(அதுவும் சரியே. சிவாஜி இந்தப் பாடலை கண்டிப்பாக வேறு  பரிமானத்திற்கு கொண்டு சென்றிருந்திருப்பார்).நாளை இந்த நேரம் பார்த்து பாடல் இன்னொரு இனிமையான விருந்து என்றால் வெள்ளிக் கின்னந்தான் அடுத்த அதிரடி. உண்மையில் எம் எஸ் வி இந்தப் படத்தில் உயர்ந்துதான் நின்றார். இன்றுவரை பலரை தூங்கச் செய்வதும், தூங்கவிடாமல் அடிப்பதும் இதே தாலாட்டுகள்தான்.

          அடுத்த படம் ஹாலிவுட்டின் பிரபலமான சவுண்ட் ஆப் மியூசிக் படத்தின் தமிழ்ப் பதிப்பான சாந்தி நிலையம். அந்த ஆங்கிலப் படத்தின் இசையின் நிழல் கொஞ்சமும் படியாமல்  அதே சமயம் மேற்கத்திய இசையையும் மெல்லிசையையும் பிசிறின்றி இணைத்து ஒன்றாக வடிகட்டி  எம் எஸ் வி இந்தப் படத்தில் அமைத்த பாடல்கள் ..சுருங்கச் சொல்லவேண்டுமென்றால் ..வெகு அற்புதம். இதோ நீங்களே பாருங்கள்.   சுசீலாவின்  இனிமையான "கடவுள் ஒருநாள் உலகைக் காண", கலாட்டா கானமான " பூமியில் இருப்பதும்", இன்னொரு மென்மையான "செல்வங்களே", எல்லோரையும் முணுமுணுக்க வைத்த  எஸ் பி பி யின் முதல் பாடலான மிகப் புகழ் பெற்ற "இயற்கை என்னும்" (எஸ் பி பிக்கு ஆயிரம் நிலவே வா பாடல் முதலில் பதிவு செய்யப் பட்டது. ஆனால் முதலில் வெளி வந்தது இந்தப் பாடல்தான்).

            சிவந்த மண் படத்தில் வரும் "ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை" பாடலுக்குள்ளே நீங்கள் பலவித மெட்டுக்கள் இருப்பதை உணர்ந்திருக்கிறீர்களா? ஒவ்வொரு சரணத்திற்கு முன்னும் இசைகோர்ப்பு வித்தியாசமாக அமைக்கப்பட்ட சிறப்பான பாடல் இது.

       இதை நான் எழுதும் காரணம் பல இளையராஜா ரசிகர்கள் அவர்கள் அறிந்ததே உண்மை என திடமாக நம்புகிறார்கள். மேலும் உண்மைகள் வெளிப்படும் போது அதை ஏற்றுக்கொள்ளாமல்  சண்டித்தனம் செய்கிறார்கள். உதாரணமாக தமிழில் இளையராஜாதான் முதன் முதலாக இடையிசையை (interlude) உருவாக்கினார் என்று ஆதாரமில்லாமல் கூறுகிறார்கள். 50களிலேயே இடையிசை நமது தமிழிசையில்  பாடலின் ஒரு அங்கமாக ஆக்கப்பட்டு, அவ்வகை இசை மெல்லிசையின் உச்ச காலங்களில் எல்லா ரசிகரின் மனதிலும் கிணற்றில் விழுந்த கல் போல படிந்துபோய் விட்டது.  இரண்டாவது இளையராஜாதான் மூன்று  சரணங்களுக்கும் வெவ்வேறு மாதிரியான இசைக்கோர்ப்பை செய்தார் என்று அவர்கள் சொல்கிறார்கள். இது ஒரு தவறான கருத்து.

       அன்றைய காலகட்டத்தில் ஒரு பாடல் இரண்டுக்கு மேற்பட்ட சரணம் கொண்டிருந்தால் முதல் சரணத்துக்கு  அமைத்த இசைக் கோர்ப்பையே மூன்றாவது சரணத்திற்கும்  வாசிப்பது ஒரு சம்பிரதாயமாகவே கடைபிடிக்கப்பட்டுவந்தது. ஆனாலும் மூன்று சரணங்களுக்கும் வெவ்வேறான இசைக்கோர்ப்பு  இளையராஜாவுக்கு முன்பே செய்யப்பட்டுவிட்டது. இதோ:

காலமகள் கண்திறப்பாள் - ஆனந்த ஜோதி, எம் எஸ் வி -டி கே ஆர்
நான் ஆணையிட்டால்-  எங்கவீட்டுப் பிள்ளை,எம் எஸ் வி -டி கே ஆர்
நினைத்தேன் வந்தாய்- காவல்காரன், எம் எஸ் வி
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து- நினைத்தை முடிப்பவன் , எம் எஸ் வி
பாடுவோர் பாடினால்-  ஒரு தாய் மக்கள் , எம் எஸ் வி
அழகே வா- ஆண்டவன் கட்டளை,எம் எஸ் வி -டி கே ஆர்
பல்லவன் பல்லவி- கலங்கரை விளக்கம் , எம் எஸ் வி
 ராஜாவின் பார்வை- அன்பே வா   , எம் எஸ் வி
நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா  , எம் எஸ் வி -டி கே ஆர்
   
    இது ஒருபிடிச்  சோறுதான். பெரும்பான்மையான எம் எஸ் வி  பாடல்கள் இப்படி அமைந்தவைதான். இது போன்ற முட்டாள்தனமான ஆதாரமில்லாத கருத்துக்களை வெளியிடுவதில் சம்பந்தப்பட்டவருக்கு என்ன நன்மை விளையப் போகிறது  என்பது தெரியவில்லை.  இசைஞானம் கொண்ட சில இளையராஜா பதிவர்களே இப்படிப்பட்டத்  தவறுகளை காணாதது போல அமைதியாக இருந்து விடுகிறார்கள். அவர்கள் நடுநிலை கொண்டு எல்லா இசைஞர்களையும் பாராட்டினாலும் இவ்வாறான பிழைகளை தங்கள் தனி மனித ஆராதனையினால் சரி செய்ய முன் வருவதில்லை. இதுவே என்னை கவலை கொள்ளச் செய்கிறது. இளையராஜா செய்த பல "இசைப் புரட்சிகள்"அவருக்கு முன்பே செய்யப்பட்டுவிட்டதை அவர்களால் உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதே உண்மை. என்னுடைய அடுத்த பதிவுகளில் இளையராஜாவைப் பற்றி நிறைய எழுத இருப்பதால் இத்துடன் இதற்கு  முற்றுப்புள்ளி வைக்கிறேன்.

         சம காலத்து இசையை எல்லோரையும் போல கேட்டுக்கொண்டிருந்த நான்  திடீரென எனக்கு  பின்னே இருந்த இசையை நோக்கி சென்றது எப்படி என்ற கேள்வி எனக்குள் எழுவதுண்டு.இதற்கான பதிலை ஒரே வரியில் இங்கே சொல்லிவிட இயலாது. இது நடந்தது படிப்படியாக. நான் என் சிறுவயது முதலே சில "பழைய" பாடல்களை கேட்டிருந்தாலும் அவை என்னிடம் பெரிய தாக்கத்தை உண்டாக்கவில்லை. உண்மை இப்படி இருக்க சில பாடல்கள் அதன் காலத்தைத் தாண்டி என் மனதை ஊடுருவிச் சென்று ஒரு புதிய எண்ணத்தை  என்னிடம் உருவாக்கின.அதன் படி இருவகையான இசைவகைகளே இங்கு நமக்கு முன் இருக்கின்றன என்பதை நான் தெரிந்துகொண்டேன்.முதலாவது நல்ல இசை. அது நம்மை மகிழ்ச்சியூட்டக்கூடியது.நம் கற்பனைக்கு இந்த இசை உந்துதலாக இருக்கிறது.  இது எந்தக் காலத்தை சேர்ந்ததாகவும் இருக்கலாம்.ஆனால் அது முக்கியமல்ல.
   
        இரண்டாவது மோசமான இசை. இது நமக்குள் எதிரான,விகாரமான  எண்ணங்களை ஏற்படுத்தி ஒரு கோட்டிற்கு மேல் அவ்விதமான இசையை கேட்கமுடியாமல் செய்துவிடுகிறது. மேலும் ஒரு நிலைக்குப் பிறகு இவ்வகைப் பாடல்களின் இசையையோ கவிதையையோ நாம் கேட்பதில்லை மாறாக இது ஒரு ஒசையாகவே நமக்கு ஒலிக்கிறது.  இந்தத் தீர்மானித்தலின் படி நான் அதுவரை கேட்டுக்கொண்டிருந்த இசை எனக்கு அலுப்பைத் தந்தது. அந்த இசையில் நான் எதையும் புதுமையாக உணரவில்லை. என்னைச் சுற்றி இருந்த என் நண்பர்கள்  அதை புகழ்ந்த போதும் எனக்கு அந்த இசை தரமில்லாததாகவே தோன்றியது. அதன் இசைக்கோர்ப்பா அல்லது பாடல் வரிகளா என்று பிரித்துச் சொல்லமுடியாதபடி எங்கோ என் சம காலத்து இசை என்னை முட்டாளாக்கியது.அதை  தெரிந்து கொள்ளும் முன்பே அதைத் தாண்டி ஆங்கில இசைக்கு நான் வந்துவிட்டேன்.மேற்கத்திய இசையின் பலவித பரிமாணங்களை தேடிப்பிடித்துக்  கொண்டிருந்த அதே சமயத்தில் இங்கே தமிழ் இசையில் எந்தவிதமான முன்னேற்றமும் இனங்காணப்படவில்லை என்பதையும் அறிந்துகொண்டேன். அப்போதே கீழ்க்கண்ட  இந்தப் பாடல்களை வேறு நிலையில் கேட்டிருந்தால் ஒருவேளை என் எண்ணங்கள் மாறியிருக்கலாம்.

   சொன்னது நீதானா?-நெஞ்சில் ஓர் ஆலயம்,எம் எஸ் வி-டி கே ஆர். இந்தப் பாடல் ஒரு அதிசயம் என்றே சொல்வேன். பாடல் முழுவதும் நாம் கேட்பது சுசீலாவின் துயரக் குரலைத்தான். இருந்தும் அந்தக் குரலில்தான் எத்தனை உணர்சிகள்,எத்தனை தாம்பத்ய ரகசியங்கள், எத்தனை வேதனைகள், எத்தனை கண்ணீர்த்  துளிகள்? சுசீலாவின் குரலுக்குப் போட்டியாக ஒலிக்கும் அந்த அபாரமான மிருதங்க இசை கேட்பவரை வேறு எதையும் சிந்திக்கமுடியாதபடி  உறையச் செய்துவிடுகிறது. சட்டென ஒரு அழுகையுடன்  முடியும் இந்தப் பாடல் இன்றுவரை உடைக்கப்படாத வரலாறாகவே இருக்கிறது எந்த விதத்திலும்.
.
      அனுபவம் புதுமை- காதலிக்க நேரமில்லை, எம் எஸ் வி-டி கே ஆர். நான் மேற்கத்திய இசையில் கவனம் செலுத்திக்  கொண்டிருந்தபோது கேட்ட இந்தப் பாடல் என் கன்னத்தில் அறைந்து சென்றது. என் சம காலத்து இசையில் கூட இல்லாத இந்தப் புதிய  இசைமுறை  பல கேள்விகளை எனக்குள் விதைத்தது.முதல்  முறையாக எம் எஸ் வி  என்னும் ஒரு மகா ஆளுமையைப்  பற்றி சிந்திக்கத் துவங்கினேன்.

      மலர்ந்தும் மலராத-பாசமலர் , எம் எஸ் வி-டி கே ஆர். முதன் முதலாக டேப் ரெகார்டர் வாங்கியபோது என் தந்தையின்  நண்பரொருவர் இந்தப் பாடலைப்  பாடி தன் குரலை பதிவு செய்தார். அந்த டேப் என்னிடம் இல்லை ஆனால் அந்த அனுபவம் அப்படியே என்னுள் தங்கிவிட்டது. பாடல் முடியும் போது அவர் அழுதது என்னைத்  திகைக்க வைத்தது. பல வருடங்கள் கழித்து இந்தப் பாடலை தனிமையில் கேட்டபோது எனக்குப் புரிந்தது ஒன்று. அவர் அழுகாமல்  இருந்திருக்க வாய்ப்பில்லை.

       யார் அந்த நிலவு?-சாந்தி, எம் எஸ் வி-டி கே ஆர்.  இந்தப் பாடலுக்கு சிவாஜியே வழக்கத்துக்கு மாறாக நீண்ட அவகாசம்  எடுத்துக்கொண்டதாக ஒரு செய்தி உண்டு.. இது மேற்கத்திய இசையா அல்லது மெல்லிசையா என்று கேட்பவர் வியப்படையும் பாடல். டி எம் எஸ் தன் குரலினாலேயே நடித்துவிடுவதாக ஒரு பேச்சு இருக்கிறது . "தெய்வமே" என்று அவர் பாடுவதும் அதை தொடரும் ஹம்மிங்கை கேட்கும்போது அது உண்மைதான் என்று தெரிகிறது. I would rather say that this song is far ahead of its time.

         கண்ணன் என்னும் மன்னன் பேரை - வெண்ணிற ஆடை,,     எம்    எஸ் வி-   டி கே ஆர். ஒரு பாடல் இன்னொரு உலகத்திற்கான பயணச் சீட்டாக இருப்பதை நீங்கள் நம்புகிறீர்களா? இந்தப் பாடல் அதற்கு ஒரு உதாரணம். வழக்கம் போல எந்தக் குரலும் செய்யாத மாயத்தை செய்யும் சுசீலாவின் இனிமையான சாரீரத்தில் ஒரு ரசிகன் மேற்கொள்ளும் ஒரு  ஆனந்த பயணம் இந்தப் பாடல்.

          மாலைப்பொழுதின் மயக்கத்திலே- பாக்கியலஷ்மி, எம் எஸ் வி-டி கே ஆர். உலகத்தின் மிகச் சிறந்தப் பாடல்கள் துயர இசையே என்ற ஒரு கருத்து இருக்கிறது. அதை நிரூபிக்கும்  இந்தப் பாடல் கேட்கும் எவருக்கும்  துயர இசையின் விவரிக்க முடியாத அழகை  உணர்த்திவிடுகிறது.

             நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்-நெஞ்சில் ஓர் ஆலயம்,எம் எஸ் வி-டி கே ஆர். இந்தப்பாடலை  ரசிக்கும் எல்லோருக்கும் வரும் ஒரு பொதுவான குழப்பம் யாரால் இதை ரசிக்கிறோம் என்பதே. இசை அமைத்த எம் எஸ் வி டி கே ஆரா, கவிதை எழுதிய கண்ணதாசனா, பாடிய பி பி ஸ்ரீனிவாசா என்று தெளிவாகச் சொல்ல முடியாத எல்லாம் ஒன்றாக  நேர்த்தியாக பின்னப்பட்ட ஒரு அற்புதமான பாடல்.

            அன்புள்ள மான்விழியே-குழந்தையும் தெய்வமும், எம் எஸ் வி.  காதலை இப்படிக்கூட நளினமாக வரம்புகள் மீறாமல் வெளிப்படுத்த முடியுமா என்ற எண்ணம் எனக்கு தோன்றுவதுண்டு.
       
      இதைத்தாண்டி பல அருமையான பாடல்கள் என் இசை ரசனையின் திசையைத் திருப்பின.இந்தப் பதிவில் நான் எம் எஸ் வி பற்றி மட்டும் எழுதுவதால் மற்ற இசைமேதைகளின் பாடல்களை இங்கே குறிப்பிடவில்லை.

           70 களில் எம் எஸ் வி மிக அதிகப் படங்களுக்கு இசை அமைத்தார். 73ஆம் வருடம் எம் எஸ் வியின் இசையில் "உலகம் சுற்றும் வாலிபன்" படம் வெளிவந்தது. இந்தப் படத்தின் பின்னணியில் ஒரு அநாகரீக அரசியல் மறைந்திருந்து காய்களை நகர்த்தியது அப்போது எல்லோருக்குமே நன்றாகத் தெரியும். பலவித தடைகளுக்குப் பிறகு எம் ஜி ஆர் இந்தப் படத்தை வெளியிட்டார். அப்போது அவர் இந்தப் படத்தைப் பற்றி கூறிய ஒரு கருத்து இது: "இந்தப் படத்தில் இரண்டு கதாநாயகர்கள். ஒன்று நான். இன்னொன்று இசைஅமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதன் ". எம் ஜி ஆரின் கூற்றை  உண்மையாக்கும் விதத்தில்  படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பட்டாசு போல வெடித்தன. இசையைக் கேட்டவர்கள் எம் எஸ் வி யிடம் இந்தப் படத்துக்காகவே சில அருமையான மெட்டுக்களை சேமித்து வைத்திருந்தீரோ என்று  அவரை வினவியதாகவும் சொல்லப்படுகிறது.இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாமே மிகப் பிரபலமானவை.
உலகம் உலகம்  ,
பச்சைக்கிளி முத்துச்சரம்,
அவளொரு நவரச நாடகம்,
நிலவு ஒரு பெண்ணாகி,
பன்சாயி ,
சிரித்து வாழ வேண்டும்,
தங்கதோணியிலே,
சிக்குமங்கு,
லில்லி மலருக்கு கொண்டாட்டம்,

   படத்தின் பாடல்கள் மட்டுமல்ல பிண்ணனி இசையிலும் இந்தப் படம் ஒரு மைல்கல் என்றே சொல்லவேண்டும்.ஒரு அயல் நாட்டை சுற்றிய கதைக்கேற்றாற்போல்  படத்தின் பிண்ணனி இசையும் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தது. இதைத்தான் எம் ஜி ஆர் ஊடகமாக எம் எஸ் வியும்   இந்தப் படத்தின் ஒரு கதாநாயகன் என்று சொல்லியிருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.  பொதுவாக 70களுக்கு முன் திரை ரசிகர்களிடம் பாடலைப் பற்றிய சிந்தனையே அதிகமாக இருந்தது.எனவே படத்தின் பிண்ணனி இசையோ அல்லது ஒளிப்பதிவையோ அவர்கள் விமர்சனம் செய்ததாகத் தெரியவில்லை. இதனால் பல படங்களின் சிறப்பான பிண்ணனி இசை வெளியே பேசப்படவில்லை என்பதே உண்மை.   இப்போது பார்க்கும்போது பல கருப்பு வெள்ளை படங்களில்கூட மிகச் சிறப்பான பிண்ணனி அமைக்கப்பட்டிருப்பதை நாம் உணரலாம். உதாரணமாக ஞானஒளி என்ற படத்தின் பிண்ணனி இசையே அந்தப் படத்தை துடிப்பாகக் காட்டியது. இந்தப் படத்தில்தான் மிகப் பிரபலமான "தேவனே என்னைப் பாருங்கள்" பாடல் உள்ளது. (தற்போது எம் எஸ் வி அதிகமாக முனுமுனுக்கும் பாடல் இது என்பது அவரே சொன்ன தகவல்.)

கீழ்க்கண்டவை  70 களில் எம் எஸ் வி கொடுத்த சில இனிமையான பாடல்கள்.

தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன், காதல்  கூட்டம், கேட்டதும் கொடுப்பவனே,(தெய்வ மகன் 69)
 உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்(அவளுக்கென்று ஓர் மனம்),
குயிலாக நான் இருந்ததென்ன(செல்வ மகள்),
ஒ மைனா இது உன் கண்ணா(நான்கு சுவர்கள்),
யமுனை  நதி(கெளரவம்)
நான் என்றால் அது,பரமசிவன் கழுத்திலிருந்து (சூரியகாந்தி)
சொல்லத்தான் நினைக்கிறேன்(சொல்லத்தான் நினைக்கிறேன்),
மல்லிகை என் மன்னன் (தீர்க்கசுமங்கலி)
என் ராஜாவின் ரோஜா முகம், இனியவளே, உள்ளம் ரெண்டும் (சிவகாமியின் செல்வன்),
கல்யாண வளையோசை, விழியே கதை எழுது(உரிமைக் குரல்),
செந்தமிழ் பாடும்(வைர நெஞ்சம்),
இன்பமே (இதயக்கனி),
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்(சிரித்து வாழ வேண்டும்)
 
      இவை  எம் எஸ் வி யின் ராஜாங்கத்தை பறைசாற்றினாலும் 70களில் அவர் பாடல்களில் கண்டிப்பாக எதோ ஒன்று குறைந்திருந்தது.

          எம் எஸ் வியின் இசையில்   கர்நாடக ராகங்களின் ஆதிக்கம் வலுப்பெற்ற காலம் இது.  75இல் இவரது இசையில் வந்த படம்தான் "அபூர்வ ராகங்கள்". அந்தப் படத்தின் பாடல்கள்  கர்நாடக சங்கீதத்தின் திரைக்குரலாகவே ஒலித்தன. கே ஜே ஜேசுதாசின் "அதிசய ராகம்", வாணி ஜெயராமின் "கேள்வியின் நாயகனே","ஏழு ஸ்வரங்களுக்குள்" போன்ற பாடல்கள் எம் எஸ் வி  கர்நாடக சங்கீதத்தில் கொண்டுள்ள புலமையின் சான்றுகளாக இருக்கின்றன. இதில் அதிசய ராகம் பாடல் ஒரு அதிசயமானதுதான். மிகவும் அருமையாக உருவாக்கப்பட்ட இந்தப்  பாடலின் இறுதிச்  சரணம் வெகு புகழ்பெற்றது. எம் எஸ் வி எட்டாவது ஸ்வரத்தையே தொட்டுவிட்டாரோ என்று கூட சிலர் வேடிக்கையாக சொல்வதுண்டு. அதே சமயத்தில் இன்னொன்றையும் இங்கே குறிப்பிடவேண்டும் .இந்தப் படத்தின் இயக்குனர் பனிரெண்டு ஆண்டுகள் கழித்து எடுத்த மற்றொரு சங்கீதப் படைப்பான "சிந்து பைரவி" படத்தின் பாடல்கள் இவ்வளவு தரமானதாக இல்லை என்று ஒரு கருத்து இருக்கிறது.

           அதன் பின் வந்த மூன்று முடிச்சு படத்தின் "வசந்தகால நதிகளிலே",ஆடி வெள்ளி"போன்ற பாடல்கள் வானொலியில் இடைவிடாது ஒலித்தன. வசந்தகால நதிகளிலே பாடலில்  ஒரு வரியின் கடைசி வார்த்தையைக் கொண்டு அடுத்த வரி துவங்கும் அவ்வளவாக கையாளப்படாத ஒரு வித்தையை  எம் எஸ் வி செய்திருப்பார்.(இதற்கு ஒரு பெயர் இருக்கிறது. எனக்கு இப்போது அது நினைவில்லை).

          76 இல் தமிழ்த்திரையிசையில் பெரிய அலை உருவானது. இது பின்னர் வரப்போகும் மிகப் பெரிய மாற்றத்திற்கான அவசியத்தை உணர்த்தியது. இந்த இசை அலையிலும் எம் எஸ் வி அடித்துக்கொண்டு போகப்படவில்லை. 79 ஆம் ஆண்டு "நினைத்தாலே இனிக்கும்"படத்தின் மூலம் எம் எஸ் வி மேற்கத்தியஇசையையும்  மெல்லிசையையும் தன் கை அசைப்பின் வழியே மீண்டும் ஒரே புள்ளியில் இணைத்தார். "எங்கேயும் எப்போதும்' பாடல் ஆயிரம் மலர்களே என்று நாசியால் பாடிய ஒரு பாடலுக்கு  மேலே சத்தமாக ஒலித்தது. சம்போ சிவசம்போ,பாரதி கண்ணம்மா,யாதும் ஊரே, நினைத்தாலே இனிக்கும், நம்ம ஊரு சிங்காரி, சயோனாரா, இனிமை நிறைந்த உலகம் போன்ற பாடல்கள் வீதி எங்கும் கேட்டன.பள்ளிக்கூடங்களில் பையன்கள் இதைப் பற்றியே பேசினார்கள். "எங்கேயும் எப்போதும்" பாடலை முணுமுணுக்காத உதடுகளே அப்போது பெரும்பாலும் இல்லை.இளைய தலைமுறையினர் எல்லோருக்குமே  அப்போது அந்தப் பாடலை பாடும்  ஆசை இருந்தது.

     இவ்வளவு ஆர்ப்பாட்டமாக வெற்றிபெற்ற நினைத்தாலே இனிக்கும் படத்திற்கு இசை அமைத்த எம் எஸ் வி க்கு தமிழக அரசின் அந்த ஆண்டின் சிறந்த இசை  விருது வழங்கப்படவில்லை என்பது ஒரு முரண். மாறாக நிறம் மாறாத பூக்கள் என்ற படத்திற்கு அது வழங்கப்பட்டு (இளையராஜா அப்போது புதிய இசைமைப்பாளராக இருந்ததால் ஒருவேளை அப்படி நடந்திருக்கலாம்)அப்போதைய எம் ஜி ஆர் அரசு அதற்காக விமர்சனம் செய்யப்பட்டது.

         இதன் பின் பட்டினப் பிரவேசம் என்ற படத்தில் எம் எஸ் வி அமைத்த வான் நிலா அது நிலா அல்ல என்கிற பாடல் இசை ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது.இதில் வரும் வயலின் இசை மிகவும் புகழ் பெற்றது. இது ஒரு ரம்மியமான பாடல். இதற்கிடையில் பல சிவாஜி கணேசன் படங்களுக்கு எம் எஸ் வி இசை அமைத்திருந்தாலும் இளைய தலைமுறையினரிடம் சிவாஜிக்கு வரவேற்பு இல்லாததால் எம் எஸ் வி யின் பல நல்ல பாடல்கள் அடைய வேண்டிய உச்சத்தை தொடாமலே போய்விட்டன. அவரின் சில பாடல்களே பரபரப்பாகப்  பேசப்பட்டன.

அந்தமானைப் பாருங்கள் ,நினைவாலே சிலை செய்து -அந்தமான் காதலி
அண்ணன் ஒரு கோவில் என்றால்-அண்ணன் ஒரு கோவில்
மை நேம் ஈஸ் பில்லா, -பில்லா
நான் பொல்லாதவன்,நானே என்றும் ராஜா,-பொல்லாதவன்
விடிய விடிய, -போக்கிரி ராஜா
ராகங்கள் பதினாறு, தில்லுமுல்லு,-தில்லுமுல்லு
கடவுள் நினைத்தான் மணநாள் கொடுத்தான் -கீழ்வானம் சிவக்கும்


      வறுமையின் நிறம் சிகப்பு படத்தின் சிறப்பு என்று இப்போது வர்ணிக்கப்படும் சிப்பியிருக்குது என்ற அபாரமான பாடல் எம் எஸ் வி யின் மெட்டமைக்கும் திறமைக்கு  சவாலாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.  ஆனால் அவர் வெகு எளிதாக அந்தக்  காவியப் பாடலைப் படைத்திருந்தார். சிம்லா ஸ்பெஷல் படத்தில் வரும் உனக்கென்ன மேலே நின்றாய் என்ற பாடல் கேட்பவரை சட்டென்று  முணுமுணுக்க வைத்து விடுகிறது.  இது ஒரு அருமையான பாடல் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. 47 நாட்கள் என்ற படத்தில் வரும் மிக நீண்ட பாடலான "மான் கண்ட சொர்கங்கள்" மிகவும் அருமையானது. இதன் இசை அப்போதைய கலப்பிசைக்கு சவாலாக அமைந்திருக்கும். ஆனால் இந்தப் பாடல் பெரிய அளவில் பேசப்படவில்லை என்பது ஒரு வருத்தமான நிகழ்வு.

          இதன் பின் எம் எஸ் வி இளையராஜாவுடன் இணைந்து இசை அமைத்த "மெல்லத் திறந்தது கதவு" படப் பாடல்கள் இன்றுவரை இளையராஜாவின் இசை என்றே சொல்லப்பட்டுவருகிறது. அவர் இதில் ஒரே பாடலுக்குத்தான் இசை அமைத்ததாகவும், எல்லா பாடல்களும் எம் எஸ் வி யாலே மெட்டு போடப்பட்டு, மற்றவரால் இசைக்கோர்ப்பு செய்யப்பட்டதாகவும் அதில் பணியாற்றிய ஒரு அன்பர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்தப் படத்தின் மிகப் பிரசித்தி பெற்ற ஊருசனம் பாடல் உண்மையில் எம் எஸ் வி யின் பாடல் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதை உறுதி செய்யும் விதத்தில்  ஊரு சனம் பாட்டில் இளையராஜாவின் நிழலை நாம் காண முடியாது.அவர்கள் எவ்வாறு இசை பங்களிப்பை செய்திருந்தார்கள் என்பதை திரையில் தெளிவாக குறிப்பிடாததால் இன்றுவரை உண்மை அறிந்துகொள்ளப்படவில்லை.

           70 களின் இறுதியில் தமிழக அரசியலில் ஏற்பட்ட  ஒரு மாபெரும் மாற்றம்  தமிழ்த் திரையில் பல புதியவர்களுக்கு கதவைத்  திறந்தது. எம் ஜி ஆர் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும்  நடிப்பதை நிறுத்திக்கொண்டார். தமிழ்த் திரையின் மற்றொரு தூணான சிவாஜியின் "இளமைத்"துள்ளல்  அப்போதைய இளைஞர்களால் அவ்வளவாக ரசிக்கப்படவில்லை. இந்தத் தலைமுறை மாற்றத்தில் சிக்கிக்கொண்ட  எம் எஸ் வி யின் இசை- அது எவ்வளவு நல்லிசையாக இருந்தாலும்- கொஞ்சம் கொஞ்சமாக "பழைய" இசை என்ற  ஒரு சார்பு நிலைக்கு வந்து சேர்ந்தது. இளைய தலைமுறை நடிகர்களாக புதிய அரிதாரம் பூசிக் கொண்ட கமலஹாசன், ரஜினிகாந்த் இருவரும் வேகமாக  புதிய இசையை நோக்கி நகரத் துவங்கினர். (இதைப் பற்றி விரிவாக அடுத்த பதிவில் பார்க்கலாம்). இந்த இடத்தில் எதற்காக இந்தப் பதிவுக்கு நிற்காத மழை என்ற தலைப்பு என்று நீங்கள் கேட்கலாம்.நிற்காத மழை என்பது எதிர்பார்த்ததை விட அதிக நேரம்  நீடிக்கும் மழையைக் குறிக்கும் சொல். எனவேதான் இந்தப் பதிவுக்கு அப்படி தலைப்பிட்டேன்.

      எம் எஸ் வி யின் இசைவரலாறு தெரியாத ஒரு தலைமுறை 70 களின்  இறுதியில் தமிழகத்தில் உருவானது. இது எங்கும் நடக்கக்கூடியதே. தான் முதலில் பார்க்கும்  எதையும் பின்தொடர்ந்து செல்லக்கூடிய சிலவகை பறவை இனங்களைப் போல் .இவர்கள் வேறு ஒரு இசையால் வழிநடத்தப்பட்டவர்கள். இவர்களுக்கான தீனி எம் எஸ் வி யின் இசையில் கண்டிப்பாக இல்லை.இவர்கள் எம் எஸ் வி யை புறக்கணித்ததில் வியப்பொன்றும் இல்லை. மேலும் தமிழ்த் திரையில் எம் எஸ் வி போல நீண்ட நாட்கள் ஆட்சி செய்தவர் வேறு யாருமில்லை. ஏறக்குறைய 35 ஆண்டுகள்  இவரின் இசைமழை ரசிகர்களை நனைத்தது. மாறிவிட்ட  காலச் சூழலோ  எம் எஸ் வி இடமிருந்து விலகிச் சென்று இன்னொரு  இசைஞரை அடைந்துவிட்டிருந்தது.

         அடுத்து: இசை விரும்பிகள் VII - அந்நியக் காற்று.

       
   

    

Thursday, 2 May 2013


     இசை விரும்பிகள் V- வென்ற இசை 

        24 காரட் சுத்தத்  தங்கத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம்? அதை தூரத்திலோ அருகிலோ  வைத்துக்கொண்டு உட்கார்ந்து வேடிக்கை பார்க்கலாம். ஆனால் அது கழுத்திலோ,காதிலோ, மூக்கிலோ பளபளப்பாக வந்து அமர  சில நகாசு வேலைகள் அவசியப்படுகின்றன. தங்கத்தோடு கொஞ்சம் செம்பு வெள்ளி என்று கலந்தால்தான் அதன் நோக்கம் பூர்த்தி அடைகிறது. இப்படி உருமாறிய 22 காரட் தங்கமே நமது மெல்லிசை. இந்த மெல்லிசை இங்கே வந்த  பிறகுதான் ராகங்கள் மாறின. தமிழிசையின் எல்லைகள் விரிவடைய ஆரம்பித்தன. பலர் இதைப்  பற்றிய புரிதல் எதுவுமின்றி தனக்குப் பிடித்த இசைஞரின் பாடல்களை முன்னிறுத்தி தமிழ்த் திரையிசை இவரிடமிருந்துதான் புறப்பட்டது என்று முரட்டுத்தனமாக நம்புவதோடல்லாமல் மற்றவர்களையும் அப்படி நம்பத் தூண்டுவதால்தான் இங்கே  மெல்லிசையைப் பற்றி அதிகம் பேச வேண்டியதாக இருக்கிறது.

     தமிழ்த் திரையில்  மெல்லிசையை கொண்டுவந்தவர்கள் பொதுவாக எல்லோரும்  நினைப்பதைப் போல விஸ்வநாதன்-ராமமூர்த்தி அல்ல. பல இசைஞர்கள் ஆண்டுகாலமாக புதிய மெட்டுக்களையும் புதிய இசை அமைப்பையும் கொஞ்சம் கொஞ்சமாக இங்கே நிறுவினார்கள் என்பதே உண்மை.இழை இழையாக நெய்யப்பட்ட ஒரு தரமான துணியைப் போல மேற்கத்திய இசை, மேற்கத்திய செவ்வியல் இசை மற்றும் நம் நாட்டுப்புற இசை போன்ற புதிய இழைகளைக் கொண்டு ஒரு நவீன இசைவடிவமாக இந்தப் புதிய இசை அமைப்பு உருவாக்கப்பட்டது.   இதில் பலரின் பங்களிப்பு இருந்தாலும்  மெல்லிசையை தமிழ்த் திரையின் மிகப் பிரபலமான இசையாக உருமாற்றியதன் பெருமை தமிழ்த்  திரையின் உன்னதமான இரட்டை இசைஞர்களான விஸ்வநாதன்- ராமமூர்த்தி அவர்களுக்கே உரியது.

  

    ஆங்கில இலக்கியத்தில் ஷேக்ஸ்பியருக்கு அடுத்து அதிகம் பேசப்படுபவர் அல்லது ஒரு சாதாரணனுக்கு உடனடியாக  நினைவுக்கு வருபவர் வில்லியம் வோர்ட்ஸ்வொர்த். அதற்கு காரணம் இருக்கிறது.  அவரும் அவரது நண்பர் சாம்வெல் கோல்ரிட்ஜ்ஜும் இணைந்து ஆங்கில இலக்கியத்தில் ரொமாண்டிக் மூவ்மெண்ட் என்று சொல்லப்படும் ஆங்கில கவிதை உலகை வேறு வட்டத்தில் சுழற்றிய  ஒரு இயக்கத்தை தோற்றுவித்தார்கள். அதற்கு முன் ஆங்கிலக்  கவிதைகள்  கடவுளையும்,  மகான்களையும் சரித்திர நாயகர்களையும், ஐரோப்பிய புராண மாந்தர்களையும் தன் கருப்பொருளாகக் கொண்டு  படித்த மேல்தட்டு "நாகரிக" அடையாளம் கொண்டிருந்த அரச, மற்றும் பிரபு குலத்துக்கே எழுதப்பட்டு வந்தன.கவிதை ஒரு அறிவாளியின் தேர்வு என்றும் அதை புரிந்து கொள்ள ஒரு பாமரன் தன் அறிவை  வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் குறியீடாக உணர்த்தப்பட்டு அவனைத் தொடாமல் செல்லும் ஒரு மாயக் காற்று போலவே  அது  செயல்பட்டது.
    
     இந்நிலையில்தான் வோர்ட்ஸ்வொர்த் ஒரு வெற்றுக் காகிதத்தில் தான் உணர்ந்த சில ரம்மியமான உணர்வுகளை கவிதையாகப்  புனைய  தன் பேனாவில் இயற்கையை நிரப்பிக் கொண்டு உட்காருகிறார். அவர் கவிதையின் கரு ஒரு சிறிய மலரை, சுழன்று வீசும் காற்றை, பனி படர்ந்த மலைகளை, ஒய்யாரமாகப் பாடும்  பறவைகளைச்   சுற்றியே இருந்தது. இந்த எளிமையான கவிதைப்போக்கு அவருக்கு முன் யாருக்கும் பொறி தட்டவில்லை. எளிமையும் ரம்மியமும் எல்லோரும் புரிந்துக் கொள்ளக்கூடிய வார்த்தைகளும் கொண்ட அவரது  கவிதைகள்  அவரை ஆங்கில இலக்கியத்தில் அதுவரை இல்லாத ஒரு புதிய சிம்மாசனத்தில் அமர்த்தியது. அவரைப் பின்பற்றியே அதன் பின் வந்த மற்ற கவிஞர்கள் இயற்கையை முன் நிறுத்தி தங்கள் கவிதைகளைப் புனைந்தனர்.வோர்ட்ஸ்வொர்த் மற்றும் கோல்ரிஜ் இருவரின் இந்த சம்பிராதய உடைப்பு எனக்கு விஸ்வநாதன்  ராமமூர்த்தி  இரட்டையர்களை ஞாபகப்படுத்துகிறது. இவர்கள் வேறு வேறு காலங்களில், வேறு வேறு மக்களிடையே, வேறு வேறு படைப்புக்களில்  செயல்பட்டாலும் அவர்களின் கலைகள் வேறுபட்டாலும்  அவர்கள் செய்தது ஒன்றேதான்.  ஒரு கசப்பான மாத்திரையை உடைத்து தேனில் கரைத்துக் கொடுக்கும் யுக்தியையே அவர்கள் செய்தார்கள்.

     முன்பு வானொலியில் முக்கியமான நிகழ்சிகளுக்கு இடைப்பட்ட ஒரு குறுகிய நேரத்தை " இப்போது மெல்லிசை கேட்கலாம்" என்று சொல்லி நிரப்புவார்கள்.இது பொதுவாக ஐந்து முதல் பத்து நிமிடங்கள் நீடிக்கும்.இரண்டு மூன்று இசைக் கருவிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட அவ்விதமான இசை  என் மனதில் மெல்லிசை என்பது சினிமா இசைக்கு முரணானது என்ற எண்ணத்தை விதைத்தது. இந்த எண்ணமே  மெல்லிசை மன்னர்கள் என்று அழைக்கப்படும் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பாடல்களில் ஈடுபாடு காட்டமுடியாமல் செய்து அவற்றை புறக்கணிக்கவும் தூண்டியது.சினிமா இசை, மெல்லிசை என்று எனக்கு நானே இரண்டு கோடுகளைப் போட்டுக் கொண்டு முன்னதையே விரும்பினேன். ஒரு தவறான புரிதல் எப்படி வேறு முடிவுகளுக்கு நம்மை இட்டுச் செல்கிறது என்ற வருத்தம் பின்னர் எனக்கு ஏற்பட்டது.

     ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளாக தமிழ்த் திரையிசையை வெற்றிகரமாக முன் நடத்திச் சென்ற  விஸ்வநாதன்-ராமமூர்த்தியின்  (வி-ரா)இசைத் துவக்கம் ஒரு விபத்து போலவே நிகழ்ந்தது. சி ஆர் சுப்புராமன் 52இல் மரணித்த போது அவருடைய உதவியாளர்களாக இருந்த  இவர்கள்  இருவரும் தடைபட்ட அவரது  இசைப் பணிகளை  தொடர்ந்து செய்து  முழுமையாக்கினார்கள். இந்தப் புதிய உறவு இருவரிடமும் நீடிக்க என் எஸ் கிருஷ்ணன் முக்கிய காரணமாக இருந்தார். அவரே இந்த இரட்டையர்களை சேர்ந்து பணியாற்றும்படி வற்புறுத்தி தன் படத்திலேயே அவர்களை முதன் முதலாக இசைஞர்களாக அறிமுகப்படுத்தினார். 52 இல் பணம் என்ற படத்தில் இவர்கள்  தங்களது திரையிசையை  துவங்கினார்கள் .(எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்? என்ற என் எஸ் கிருஷ்ணனின்  பாட்டு இதில்தான் உள்ளது.)

        50 களில் ஜி ராமனாதனின் ஆளுமை உச்சத்தில்  இருந்தது. இதே சமயத்தில்தான் திரையிசைத் திலகம் என்று அழைக்கப்படும்   கே வீ மகாதேவனும் இங்கே இசைப் பிரவாகம்  செய்து கொண்டிருந்தார். இவற்றுக்கிடையில் ஹிந்துஸ்தானி இசையின் பாதிப்பும் தமிழ்த் திரையிசையை    கட்டிப்போட்டிருந்தது. இந்தச் சூழ்நிலையில் வி-ரா  தங்கள் இசையை நிரூபிக்க முயன்றார்கள். சொல்லப்போனால் ஹிந்தி இசையின் பாதிப்பை மீறி அப்போது பாடல்கள் அமைப்பது ஒரு சவாலான காரியம். ஏனென்றால் படத் தயாரிப்பாளர்களும் ஏற்கனவே பிரபலமாக இருந்த ஹிந்தி இசையையே தமிழில் கொண்டுவர பெரிதும் விரும்பினார்கள். அந்தக் காலத்தின் புகழ் பெற்ற பல ஹிந்திப் பாடல்களை தமிழில் உருமாற்றி ஹிந்துஸ்தானி மெட்டில் தமிழ் வார்த்தைகளைப்  பிணைத்து  பாடல்கள் அமைப்பது அப்போது ஒரு சம்பிரதாயமாகவே இருந்து வந்தது. இந்தக் கட்டுகள் தளர  பல புதிய முயற்சிகள் தேவைப்பட்டன.

   கர்நாடக சங்கீதத்தில்  புலமை பெற்ற டி கே ராமமூர்த்தி அடிப்படையில் ஒரு வயலின் வித்வானாக இருந்தாலும், அவருக்கு மேற்கத்திய செவ்வியல் இசையில் மிகுந்த ஈடுபாடு இருந்தது.  விளைவு கர்நாடக ராகங்களும் மேற்கத்திய செவ்வியல் இசையும் பாலும் தேனும் போல கலந்தன. தமிழில் முன்னரே மேற்கத்திய செவ்வியல் இசையின் பாதிப்பும் நவீன மேற்கத்திய இசையின் தொடுதலும் இருந்தாலும் விஸ்வநாதன்-ராமமூர்த்தி அவற்றை தங்கள்  பாடலில் சரியான அளவில்  கலந்து  அதேசமயம் நம் nativity அதனால் சற்றும் திரிந்து விடாமல் இந்தப் புதிய  கலப்பிசையை  (fusion)அவர்களின் முத்திரை இசையாக மாற்றிக்காட்டினார்கள். கர்நாடக ராகங்கள் என்னும் சுவற்றின் மீது தங்கள்  மெல்லிசையை மேற்கத்திய இசையின் தீற்றலோடும்  எளிமையும் புதுமையுமான மெட்டுக்களோடும் இழைத்துத்   தங்கள் இசை வண்ணத்தைத்  தீட்டினார்கள். இந்த இசையோவியங்கள்  அறுபதுகள் முழுவதும் அனாசயமாக ஆட்சி செய்தன. இப்படிப்பட்ட இசைப் பரிசோதனைகள் அப்போதே செய்யப்பட்டதாலேயேதான்  அதன் பின் வந்த பல இளம் இசைஞர்களுக்கு பின்னர்  விசாலமான  பாதை கிடைத்தது. அவர்களால்  பெரிய சிரமங்களின்றி பாடல்களும்  அமைக்க முடிந்தது.  இந்த உண்மை தெரியாத பலர் இணையத்தில் உளறிக்கொட்டுவதை படிக்க நேரிடும் போது அசதியாகவும் வெறுப்பாகவும் இருக்கிறது..உண்மை   இதுதான் என்று அவர்களுக்கு எழுதினாலும் அவர்கள் அதை வசதியாக தவிர்த்துவிடுகிறார்கள்.

       இதன் தொடர்ச்சியாக  இணையத்தில் உலாவரும் சில தவறான புரிதல்களை நான் நினைத்துப் பார்க்கிறேன்.  அவற்றில் ஒன்று  தமிழில் முன்னிசை(prelude), இடையிசை(interlude) இரண்டும் இளையராஜாவுக்குப்  பிறகே ஏற்பட்டது என்பது.இது ஒரு மகா அபத்தமான சிந்தனை என்பதைத் தாண்டி   எப்படி ஒரு தீவிர இசை ரசனை சில உண்மைகளை மறுக்கிறது என்ற கருத்தை  படிப்பவர்களுக்கு உணர்த்தவே  இதை எழுதுகிறேன். இது போன்ற இன்னும் பல போதையேறிய  கருத்துக்கள் உண்மையான இசைத் தேடலை என்னுள் வலிமையாக்கின.அதன்  விளைவாகவே இந்த இசை விரும்பிகள் என்னும் நீண்ட பதிவை ஆரம்பித்தேன்.

          52 இல் துவங்கி 50 களின் இறுதியில் அதி  வேகம் பிடித்து,  புதிய சாலைகளில் 65 ஆம் ஆண்டு வரை பயணித்த  இந்த இரட்டையர்களின் இசைப் பாய்ச்சல் படத்திற்கு படம் மெருகேறி புதிய   எல்லைகளை தமிழ்த்திரையிசைக்கு அறிமுகம் செய்தது.  மெல்லிசையை ஒரு இனிய இசை அனுபவமாக இவர்களின் பாடல்கள் மாற்றின. இசையின் ரசனையை இந்த இரட்டையர்கள் அடுத்தடுத்த  கட்டத்திற்கு எடுத்துச் சென்றார்கள். 

    குறிப்பாக அறுபதுகளில் வந்த அவர்களின் ஒவ்வொரு பாடலும் வீரத்தை வீரியமாகச் சொல்லும் தன்னம்பிக்கை தரும் தாளங்களாக,  தாய் மொழியைப் போற்றும் தமிழின் தங்கக்குரலாக, பண்பாட்டை வீண் பெருமைகளின்றி பாடும் பண்பட்ட பாட்டாக,குழந்தைகளுக்கு இசையோடும்  தாலாட்டாக, உறவைப் போற்றும் மக்களின் உன்னத  உணர்ச்சியாக ,காதலை அதன் எல்லைகள் தாண்டாது நளினமாகச் சொல்லும் காதலர்களின் கீதமாக, வாழ்க்கையை வாழ்ந்துவிட்ட மனிதர்களின்  தத்துவ கானமாக, வீழ்ந்த  நெஞ்சங்களின் வேதனையை வெளிப்படுத்தும் துயர இசையாக,  தம்பதிகளின் ஆத்மார்த்தமான அன்பை விரசங்களிலாமல்  பண்பாகப் பாடும் பாடல்களாக, எதிர்பாலினரை விகாரங்களின்றி பகடி செய்யும் துள்ளல் இசையாக,இளைஞர்களின் குதூகலத்தை குறைவின்றி கொடுக்கும் கும்மாளப் பாடல்களாக,  பிரிவைச் சொல்லும் மனைதை பிழியும் சோக ராகங்களாக, காதல் தோல்வியை போதையின்றி நாகரீகமாக உணர்த்தும் நல்லிசையாக, காதல் கைக்கூடிய காதலர்களின் உணர்ச்சியை காமமில்லாமல் காட்சிப்படுத்தும்  களிப்பான கானமாக ஒலித்தன.

     மேற்குறிப்பிட்ட பத்தியோடு கீழே உள்ள பாடல்களை பொருத்திப்பாருங்கள்.இது உங்களுக்கே புரியும்.
    
    அச்சம் என்பது மடமையடா- மன்னாதி மன்னன்,60
தமிழுக்கும் அமுதென்று பேர்- பஞ்சவர்ணக்கிளி,65(இது எம் எஸ் வி தனியாக இசை அமைத்தது)
கண் போன போக்கிலே கால் போகலாமா?- பணம் படைத்தவன்,65
   அத்தையடி மெத்தையடி- கற்பகம்,63
   மலர்ந்தும் மலராத- பாசமலர்,61
   அனுபவம் புதுமை- காதலிக்க நேரமில்லை,64
   சட்டி சுட்டதடா- ஆலயமணி,62
   மயக்கமா கலக்கமா - சுமை தாங்கி,62
   வளர்ந்த கலை மறந்துவிட்டாள்-காத்திருந்த கண்கள், 62
 ஆஹா மெல்ல நட- புதிய பறவை,64, நாடோடி- அன்பே வா,66     (இசை-எம் எஸ் வி)
   ஆண்டவன் படச்சான்- நிச்சய தாம்பூலம்,61
   நினைக்கத் தெரிந்த மனமே- ஆனந்த ஜோதி, 63
   எங்கிருந்தாலும்  வாழ்க- நெஞ்சில் ஓர் ஆலயம், 62
   கொடியசைந்ததும் காற்று வந்ததா- பாரத்தால் பசி தீரும்,62

   இதே போல ஒரு பட்டியலை இவர்களுக்கு பின் வந்த இசைஞர்களின் பெயருக்கு கீழேயும் தயாரிக்கலாம். ஆனால் அவற்றில் எத்தனை கண்ணியமான, தரமான பாடல்கள் என்பது கேள்விக்குரியது. மேலும் அது போன்ற ஒரு ஒப்புமை இவர்களுக்கு நாம் செய்யும் அநீதி என்று நான் கருதுகிறேன்.

      அறுபதுகளில் எப்படி நமது மக்கள் இசையை ரசித்தார்கள் என்பது ஆய்வுக்குரியது. அப்போது ரெகார்ட் பிளேயர் என்று சொல்லப்படும் இசைத் தட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன. ஆனால் வெகு சிலரே அதை தங்கள் வீடுகளில் வைத்திருந்தார்கள். வானொலியே பெரிதும் எல்லோரிடமும் இருந்தது. இந்த வானொலியே இசையை எல்லோரிடத்தும் கொண்டு சேர்த்தது. வானொலியில் சினிமாப் பாடல்கள் தற்போதைய எப் எம்  போலில்லாமல் குறிப்பிட்ட கால அளவிலேயே ஒலிபரப்பு செய்யப்பட்டன. கதைப் புத்தகம், வானொலி இசை இது  இரண்டும்தான்  அப்போது பெரும்பான்மையான மக்களிடம் இருந்த பொழுதுபோக்குகள்.பாடல்களை பாக்கெட்டுக்குள் வசதியாக வைத்துக்கொள்ளும் தொழில்நுட்பம் எவரின் கற்பனையிலும் கூட உதிக்காத அந்தச் சூழலில் ஒரு ரசிகனின் ஆவலை சற்று எண்ணிப்பாருங்கள். பலநாட்கள் காத்திருந்து பின் திடீரென வானொலியில் தனக்கு பிடித்த பாடல் ஒலிக்கும் போது அந்த ரசிகன் அடைந்த ஆனந்தம் அளவில்லாதது. திரையிசைப் பாடல்கள் வெறும் மூன்று நான்கு நிமிட கால நகர்ப்பாக (time pass) இல்லாமல் அவை வாழ்க்கையின் ஒரு கூறாகவே   இருந்தன. அவ்விசை அவர்களின் மூச்சில் சுவாசமாக கைகளில் உணவாக  இருந்து அவர்களை வழிநடத்தியது.அவர்கள் அந்தப் பாடல்களில் தங்கள் வாழ்கையின் ருசியையும், வலியையும் ஒரு சேர அனுபவித்தார்கள்.வெறும் விடலைப் பையன்கள் மட்டும் கேட்கும் இசையாக இல்லாமல் ஒரு பொது ரசனைக்கான அழகியலாக எல்லோரும் காதலிக்கும் கலையாக  அவை  ஆட்சி செலுத்தின.  எனவேதான் அப்பாடல்கள் கண்ணியமாகவும்,தரமாகவும், பண்பாகவும் இருந்தன.

    மேலும்  காமத்துக்கான சூழல் இருந்தாலும் விரக தாப முனங்கல்கள் இல்லாமல் மிகவும் கவித்துவமாக பாடல்களை அவர்கள் அமைத்தார்கள். உதாரணத்திற்க்கு " அத்தான் என்னத்தான்"(பாவமன்னிப்பு,61) என்ற பாடலை ஆராய்வோம். ஒரு முறை என் நண்பன் ஒருவன் அந்த காலத்துப் பாடல்களிலேயே விரசம் இருப்பதாக் கூறி இந்தப் பாடலை குறிப்பிட்டான்.அப்போதைக்கு நானும் அதை வழி மொழிந்தேன். ஆனால் உண்மையில் இது காமத்தை விரசமின்றி உணர்த்தும் ஒரு எழில் கொண்ட பாடல். சுசீலாவின் குரலில் ததும்பும் மிச்சமிருக்கும் இச்சை இங்கே கேட்பவரை எவ்விதத்திலும் முகம்  சுளிக்க வைப்பதில்லை. "அவர் என்னைத்தான்".. என்று குரலை நீட்டிப்பதிலும் பின் வரும் ஒரு நொடி நிசப்ததிலும் அதன் பின் தொடரும் "எப்படிச் சொல்வேனடி" என்ற வெட்க மறுத்தலிலும்  தெரிவது ஒரு பெண்ணின்  இனிமையான உணர்ச்சியே அன்றி காமம் இல்லை. இந்தத் தரம் இவர்களின் அடுத்த தலைமுறை இசையில் கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்கிப் போனதையும் இங்கே நான் நினைவூட்ட விரும்புகிறேன்.காமத்தை வைத்து இதயத்தை வருடும் இசையாக இல்லாமல் இச்சையை தூண்டும் இசையாகவே பின் வந்தவர்களின் பாடல்கள் அமைந்தன.இளையராஜாவின் பிரபலமான "நிலா காயுது"(சகலகலாவல்லவன்,82) இதற்கு மிகச் சரியான உதாரணம்.

       எந்த நதியும் ஒரு இடத்தில் மிக அகலமாக விரிவடைந்து செல்வதைப் போல, எந்த மழையும் ஒரு இடத்தில் அதிகமாகப் பொழிவதைப்போல, எந்த மலையும் ஓரிடத்தில் உயரமாக இருப்பது போல,எந்த விளக்கும் ஒரு சமயத்தில் மிகப் பிரகாசமாக எரிவதைப் போல, எந்தக் கலைஞனுக்கும் ஒரு உயர்ந்த காவியம்   அமைவதைப்போல தமிழ்த் திரையிசையும்  அதன் உச்சத்தைத் எட்டியது.அந்த உச்சம்  நிகழ்ந்தது இந்த அறுபதுகளில்தான்.இசை விமர்சகர்கள் முதல் ஒரு சாதாரன   ரசிகன் வரை இன்றைக்கும் தமிழ்த் திரையிசையின் பொற்காலம் என்று  வர்ணிப்பதும் சுட்டிக்காட்டுவதும்  கே வி மகாதேவன்,விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கண்ணதாசன்,டி எம் எஸ், சுசீலா,எம் ஜி ஆர், சிவாஜி கணேசன் போன்ற கூட்டணி திரையில் ஆட்சி செய்த இந்த அறுபதுகளைத்தான். It's a very profound statement of truth. இதை மறுப்பதற்கு மனசாட்சியை சற்று மறந்துவிட வேண்டும்.

        வி-ரா தமிழில் கூட்டிசையை(chorus) வெற்றிகரமாக பயன்படுத்தியவர்கள் என்பதை நாம் இங்கே நினைவில் கொள்ளவேண்டும். இதுவும் மேற்கத்திய பாணி இசைதான். பொதுவாக இவர்கள் பாடலின் இடையே வரும் இடையிசையில் (interlude) இவ்விதமான கூட்டிசையை அறிமுகப்படுத்தினர். இதற்கு உதாரணமாகப் பல பாடல்களை சுட்டிக்காட்ட முடிந்தாலும் இரண்டு பாடல்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். முதலாவது  பணம் படைத்தவன்(65) என்ற படத்தில் வரும் "கண் போன போக்கிலே" என்ற பாடல். மேற்கத்திய இசையின் நிழல் அந்தப் பாடல் முழுவதும் படிந்திருந்தாலும், மெல்லிசையை விட்டு அது கொஞ்சமும் மீறிச் செல்லாமல், இரண்டும்  ஒன்றோடொன்று சுகமாக கை கோர்த்துச்  செல்வதை உணரலாம்.இரண்டாவது புதிய பறவை படத்தில் வரும்  "பார்த்த ஞாபகம் இல்லையோ?" பாடல்.இந்தப் பாடலின் மிகப் பெரிய பலமே ஆரம்பத்திலும் இடையிலும்  வரும் கூட்டிசைதான்.

   










இதைத்  தாண்டி இடையிசையை பிரபலமாகிய பெருமையும் இவர்களுக்குண்டு.  இடையிசை  இவர்களின் பாடல்களில் அன்னியமாக ஒலிக்காமல் பாடலின் வேகத்தையும்  நளினத்தையும் குலைத்து விடாமல் பாடலின் போக்குடனே சென்று சரணத்தோடு இணையும்.இந்த இடையிசை இளையராஜாவின் காலத்தில் உச்சத்திற்கு சென்று தற்போது காணாமலே போய்விட்டது.

           இதைத் தவிர இவர்களின் பாடல்களில் வரும் ஹம்மிங் சிறப்பு பெற்றது.நெஞ்சம்  மறப்பதில்லை பாடலின் துவக்கத்தில் ஒலிக்கும் அந்த பிரபலமான  ஹம்மிங் கேட்பவரை ஒரு இசை அனுபவத்திற்கு தயார் செய்துவிடுகிறது. இந்த கோரஸ் மற்றும் ஹம்மிங் ஒரு மேற்கத்திய இசை அமைப்பாக இருந்தாலும் அவற்றை இவர்கள் மெல்லிசையோடு துல்லியமாகக் கலந்து நம் இசைக்கு  இன்னொரு  பரிமாணம் சேர்த்தார்கள்.

    மேலும் விஸ்வநாதன் பாடல்களுக்குள்ளே இனிமையாக மெட்டுக்களை  மாற்றுவதில் கை தேர்ந்தவராக இருந்தார். புதிய பறவை(64) யின் மிகச் சிறப்பான பாடலான "சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து" என்ற பாடலில் சுசீலாவின் குரல் தொட்டுச் செல்லும் பல  ஏற்றங்களும் இறக்கங்களும் கேட்பவரின் மனதில் அந்தப் பாடலை உறையச் செய்துவிடுகிறது. பாடியவர் இதைச்  செய்தாரா அல்லது இசை அமைத்தவர் அப்படிச் செய்யப் பணித்தாரா என்பதை நான் எப்போதும் எனக்குள்ளே கேட்டுக்கொள்வதுண்டு.

       61 ஆம் ஆண்டு இவர்களின் இசைக்கு ஒரு மிக முக்கியமான வருடம். அந்த வருடத்தில் வந்த இவர்களின்  படங்களைப் பாருங்கள்.
பாக்கியலக்ஷ்மி- மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நிச்சய தாம்பூலம்- பாவாடை தாவணியில் பார்த்த உருவமா, படைத்தானே
பாலும் பழமும்,-ஆலய மணியின் ஓசையை,என்னை யார் என்று,நான் பேச நினைப்பதெல்லாம்,காதல் சிறகை,போனால் போகட்டும் போடா
பாசமலர்,- எங்களுக்கும் காலம் வரும், மலர்களைப் போல் தங்கை, மலர்ந்தும் மலராத,யார் யார் யார் அவர் யாரோ, வாராயென் தோழி
பாவமன்னிப்பு- எல்லோரும் கொண்டாடுவோம், வந்த நாள் முதல்,அத்தான் என்னத்தான்,பாலிருக்கும் பழமிருக்கும், காலங்களில் அவள் வசந்தம்

   மேற்குறிப்பிட்ட  பாடல்களுக்கு அறிமுகமோ அல்லது விளம்பரமோ தேவையில்லை.பாடலின் முதல் வரியே பலருக்கு அந்தப் பாடல்களின் வழியே அவர்கள் உணர்ந்த பல்வகை உணர்சிகளை ஒரே நொடியில் மீட்டுவிடும்.

         62 ஆம் வருடம் இவர்களின் இசை இன்னும் பல இலக்குகளை எட்டியது.
   
ஆலயமணி,-கண்ணான கண்ணனுக்கு,பொன்னை விரும்பும் பூமியிலே,கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா,
பலே  பாண்டியா, -அத்திக்காய், வாழ நினைத்தால்
பந்த பாசம், - இதழ் மொட்டு,
காத்திருந்த கண்கள்,-வளர்ந்த கலை,காற்று வந்தால் தலை சாய்க்கும்,
நெஞ்சில் ஓர் ஆலயம்,-நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், சொன்னது நீதானா,முத்தான முத்தல்லவோ
பாதகாணிக்கை,- வீடு வரை உறவு உனது மலர் கொடியிலே
பாசம்,-பால் வண்ணம் பருவம், உலகம் பிறந்தது,என்னருகில் நீ இருந்தால்
படித்தால் மட்டும் போதுமா,-பெண் ஒன்று கண்டேன்,நான் கவிஞனுமில்லை
பார்த்தால் பசி தீரும்,-யாருக்கு மாப்பிள்ளை யாரோ, கொடி அசைந்ததும்
போலீஸ்காரன் மகள்,-நிலவுக்கு என் மேல்,இந்த மன்றத்தில் ஓடி வரும்
சுமைதாங்கி,-மயக்கமா கலக்கமா, மனிதன் என்வபன் தெய்வமாகலாம்
வீரத்திருமகன்-ரோஜா மலரே, பாடாத பாட்டெல்லாம்

        63 ஆம்  வருடம் வந்த படங்களைப் பார்ப்போம்.

ஆனந்த ஜோதி,நினைக்க தெரிந்த மனமே,ஒரு தாய் மக்கள், பனி இல்லாத மார்கழியா
இதயத்தில் நீ,-பூ வரையும் பூங்கொடி ,சித்திரப் பூவிழி,
கற்பகம், -மன்னவனே அழலாமா,அத்தைமடி,ஆயிரம் இரவுகள்
மணியோசை,தேவன் கோவில் மணியோசை,
நெஞ்சம் மறப்பதில்லை,-நெஞ்சம் மறப்பதில்லை, அழகுக்கும் மலருக்கும்
பார் மகளே பார், -நீரோடும் வைகையிலே, அவள் பறந்து போனாளே, மதுரா நகரில்
பணத்தோட்டம்,-பேசுவது கிளியா,ஒருவர் ஒருவராய்
பெரிய இடத்துப் பெண்-கட்டோடு குழலாட,அன்று வந்ததும், பாரப்பா பழனியப்பா

      64 இல் வந்த படங்கள்.

ஆண்டவன் கட்டளை,-அமைதியான நதியினிலே,உள்ளம் என்பது ஆமை, அழகே வா,ஆறு மனமே ஆறு
தெய்வத்தாய்,-வண்ணக்கிளி,ஒரு பெண்ணைப் பார்த்து, இந்தப் புன்னகை
என் கடமை,-ஹலோ மிஸ்,இரவினில் என்ன
கை கொடுத்த தெய்வம்,-சிந்து நதியின் மிசை, ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ,
கர்ணன், -  உள்ளத்தில் நல்ல உள்ளம், கண்கள் எங்கே,என்னுயிர் தோழி
கறுப்புப் பணம்,-எல்லோரும் எல்லாமும்,ஆடவரலாம்
காதலிக்க நேரமில்லை,-நாளாம் நாளாம்,மலரென்ற முகமொன்று, அனுபவம் புதுமை,நெஞ்சத்தை அள்ளிக்கொஞ்சம் தா,எண்ணப் பார்வை, உங்கள் பொன்னான கைகள்,
பச்சை விளக்கு,-ஒளிமயமான எதிர்காலம்,கேள்வி பிறந்து அன்று
படகோட்டி,-தரைமேல்,தொட்டால் பூ,பாட்டுக்கு பாட்டெடுத்து, என்னை எடுத்து
பணக்கார குடும்பம்,-அத்தை மகள் ரத்தினத்தை,ஒன்றுஎங்கள் ஜாதியே,பறக்கும் பந்து,பல்லாக்கு வாங்க
புதிய பறவை,- உன்னை ஒன்று கேட்பேன், எங்கே நிம்மதி,பார்த்த ஞாபகம், சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து
சர்வர் சுந்தரம்,-அவளுக்கென்ன,போகப் போக தெரியும்,சிலை எடுத்தான் ஒரு

       65 இல் வந்த படங்கள்.

எங்க வீட்டுப் பிள்ளை,-நான் ஆணையிட்டால், நான் மாந்தோப்பில்,குமரிப்பெண்ணின், மலருக்குத் தென்றல் பகையானால்
பணம் படைத்தவன்,-கண் போன போக்கிலே,மாணிக்கத் தொட்டில்
சாந்தி,-யார் அந்த நிலவு, வாழ்ந்து பார்க்கவேண்டும்
வெண்ணிற ஆடை,-அம்மம்மா காற்று வந்து,  கண்ணன் என்னும் மன்னன்,  என்ன என்ன வார்த்தைகளோ,சித்திரமே சொல்லடி
ஆயிரத்தில் ஒருவன்.-உன்னை நான் சந்தித்தேன்,அதோ அந்த பறவை,ஓடும் மேகங்களே,ஏன் என்ற கேள்வி,நாணமோ,பருவம் எனது பாடல்,ஆடாமல் ஆடுகிறேன்.

                   ஒரு படத்தில் ஒன்றிரண்டு பாடல்கள் சிறப்பாக இருப்பது இயல்பானதே.மாறாக அனைத்துப் பாடல்களையும் அபாரமாக அமைப்பதென்பது ஒரு வரம் என்றே சொல்ல வேண்டும். எந்தப் பாடலை எடுப்பது எதை வைப்பது என்ற குழப்பம் இதை எழுதும் போது எனக்கு ஏற்பட்டது. மேலும் இவர்களின் பல படங்களை இங்கே நான் குறிப்பிடவில்லை. இருந்தும் மேற்குறிப்பிட்ட பாடல்களை வாசிக்கும் போதே அவற்றின் இனிமை நம்மை ஒரு சுகமான வாசம் போல குதூகலிக்கச் செய்கிறது.இந்தப் பாடல்களின் சுகம் தமிழ்த் திரையிசை இருக்கும் வரை இறவாமல் இங்கே தங்கி இருக்கும் என்பது உறுதி. ஒரு பாடல் எத்தனைப் பேரால் கேட்கப்படுகிறது என்ற பொருந்தாத வரைமுறையை வைத்துக் கொண்டு அந்தப் பாடலின் சிறப்பை தீர்மானிக்கும் முட்டாள்தனமான மனப்போக்கு நம்மிடம் வெகு அதிகமாக் காணப்படும் பொது புத்தி. உண்மையில் ஒரு பாடல் எத்தனை காலம் இங்கே கேட்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதைக் கொண்டே நாம் அதன் சிறப்பை வரைய முடியும். அப்படிப் பார்த்தால் 50 களிலும் 60 களிலும் வந்த பல பாடல்களே அந்தச் சிறப்புக்குரியவை என்பது தெளிவு.

      புதிய பறவை, வெண்ணிற ஆடை, காதலிக்க நேரமில்லை, ஆயிரத்தில் ஒருவன், படகோட்டி,ஆனந்த ஜோதி, கர்ணன் போன்ற படங்களை எடுத்துக் கொண்டால் அவற்றின் அத்தனைப் பாடல்களுமே தங்கச் சுவை கொண்டவை. குறிப்பாக (என்னுடைய தனிப்பட்ட விருப்பமான)வெண்ணிற ஆடை படத்தின் எல்லா பாடல்களும் வெகு நேர்த்தியானவை. கேட்பவரை ஒரு கணம் உறைய வைக்கும் குரலும், வியப்பூட்டும் மெட்டும்,தாலாட்டும் இசைக் கோர்ப்பும், பண்பட்ட கவிதை வரிகளும் "கண்ணன் என்னும் மன்னன் பேரை", "அம்மம்மா காற்று வந்து ஆடை", "என்ன என்ன வார்த்தைகளோ", "சித்திரமே சொல்லடி" போன்ற பாடல்களை நோக்கி மீண்டும் மீண்டும் செல்லத் தூண்டுகின்றன. ஒரு ரசிகனின் மனதில் பற்பல வண்ணக் கோடுகளைத் தீட்டி ஒரு வானவில்லின் அனுபவத்தை அவனுக்கு கொடுக்கின்றன.படகோட்டி, ஆயிரத்தில் ஒருவன் படப் பாடல்களை கேட்கும் எவருமே ஒரு மவுனமான தலை அசைப்பின் மூலம் அவற்றின் பெருமையையும் சிறப்பையும் தெரிவித்து விடுகிறார்கள். இங்கே குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு சிறப்பு என்னவென்றால் இத்தனை ஆயிரம் பாடல்களில் எந்த இரண்டு பாடலும்  ஒரே மாதிரி ஒலிப்பதில்லை. ஒவ்வொரு பாடலும் வெவ்வேறான மெட்டில் அமைக்கப்பட்டு ஒரு  புதிய இசை  அனுபவத்தை கேட்பவருக்கு அளிக்கிறது.

   தமிழ்த் திரையிசையின் பொற்காலம் என்று வர்ணிக்கப்படும் 60களை விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் இசையாக மட்டும் பார்ப்பது முரணானது.மேலும் இது அப்போது தமிழ்த் திரையிசையில் இருந்த பல இசை மேதைகளுக்கு நாம் செய்யும் அநீதி. கே வி மகாதேவன், ஜி ராமநாதன்,எ எம் ராஜா, சுதர்சனம், சுப்பையா நாயுடு இன்னும் பல இசைஞர்களும் இதே பொற்காலத்தைச்  சேர்ந்தவர்கள்தான். வசதியாக அவர்களை நாம் மறந்துவிடலாகாது.

    பணத்தில் துவங்கி ஆயிரத்தில் ஒருவனில் தமிழ்த் திரையிசையின் ஒரு மாபெரும் இசைப் புரட்சி முடிவு பெறுகிறது.விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் பிரிகிறார்கள். இதற்கு பல காரணங்கள் யூகமாக இன்றுவரை சொல்லப்பட்டு வருகின்றன. ஸ்ரீதர் மற்றும் கண்ணதாசன் இருவருமே இந்தப் பிரிவுக்கு காரணம் என்று கூட ஒரு கருத்து உண்டு.  ஆனால் அந்தப்  பதினைந்து ஆண்டுகள் தமிழ்த் திரையிசையில் அவர்கள் எடுத்தவைத்தச் சுவடுகள் எல்லாம் ஒரு தங்க  இசையாக காற்றில் தவழ்கின்றன. இந்தச் சாதனை முறியடிக்கப்பட தமிழ்த் திரையிசை இரண்டாவது பொற்காலத்தை அடையவேண்டும். Good things might recur. But the best things never.

  மற்றொரு கவனிக்கத்தக்க அம்சத்தைப் பற்றி நாம் இங்கே பேசவேண்டும்.அது இவர்கள் தங்கள் இசையை மட்டும் முன்னிலைப் படுத்தாமல் பாடலைப் பாடியவர்களையும், அதை எழுதிய கவிஞனையும் மக்களிடம் கொண்டு சேர்த்தார்கள். ஒரு பாடலை  உருவாக்குவதில் தன் பங்களிப்பைச் செய்யும் எல்லோருக்கும் உரிய  இடம் கொடுத்து அவரவர் தன் பாதையில் பயணிக்கும் உரிமையை பறித்துக் கொள்ளாமல் ஒரு பண்பட்ட நாகரீகத்தை காப்பாற்றினார்கள்.இதனாலேயே இன்று பலர் அவர்களின் பாடல்களில்  டி எம் எஸ், சுசீலா, பி பி ஸ்ரீனிவாஸ்,டி ஆர் மகாலிங்கம், எல் ஆர் ஈஸ்வரி, எஸ் பி பி,  பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்,மருதகாசி,கண்ணதாசன்,வாலி,எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினி,நாகேஷ்,சந்திரபாபு போன்றவர்களை அடையாளம்  காண முடிகிறது.அவரவர்க்கு செல்ல வேண்டிய சிறப்பை உரியவர்களுக்கு கொடுத்துவிடுவது ஒரு உன்னதமான இசையின் நற்குணம். அது அவர்களிடம் இருந்தது. இந்த மேன்மையான பண்பாடு அவர்களுக்கு அடுத்து வந்த இசைஞர்களிடமிருந்து விடை பெற்றுச் சென்றுவிட்டது. "இது என் இசை" என்று கர்வம் மிளிர மேடையில் சுயபுராணம் செய்துகொள்ளும் ஒரு புதிய சீர்கெட்ட, தரங்கெட்ட கலாச்சாரம் அதன்பின்  தோன்றியது.

     " பாசம்"(62)படத்தில் வரும் "உலகம்  பிறந்தது எனக்காக"என்னும் ஒரு அற்புதமான பாடலை குறித்து இப்போது பேசலாம். இந்தப் பாடலின் வரிகள் ஒரு சுயநலவாதியின் குரல் போல இருந்தாலும் பாடலை கேட்கும் போது இது சுயநலமில்லை, மாறாக தன்னம்பிக்கை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இந்தப் பாடலில் விஸ்வநாதன் ராமமூர்த்தி மட்டும் நமக்குத் தெரிவதில்லை . கண்ணதாசன் துடிப்பாகத்  தெரிகிறார். டி எம் எஸ் குதூகலமாகத் தெரிகிறார்.எம் ஜி ஆர் பரவசமாகத் தெரிகிறார்.இதுவே ஒரு உண்மையான இசையின் முகம்.

        இன்றோ நாம் எதோ ஒரு இசை அமைப்பாளரின் பெயரை மட்டும் குறிப்பிட்டு இது அவர் பாடல் என்று அழைப்பதோடு நின்றுவிடுகிறோம்.வேறு  சிலரோ  ஒரு பாடலை ஒரு குறிப்பிட்ட இசைஞரின் பாடலாக மட்டுமே பார்க்கவேண்டும் என்று சொல்வதுண்டு.அது உண்மையில்லை.மேலை நாட்டு இசைவிரும்பிகளிடம் இது போன்ற அபத்தமான இசைப் பார்வை கிடையாது. Pink Floyd, Led Zeppelin, The Who, Rolling Stones, Deep Purple, The Beatles, The Cars, Alan Parsons Project,   போன்ற  குழுக்களின்  பாடல்களை  அவர்கள் அந்தக் குழுவினரின் ஒருங்கிணைந்த இசையாகவே  எடுத்துக் கொள்கிறார்கள்.அவர்கள் எப்போதும் ஒரே ஒருவரை மையப் படுத்தி மற்றவர்களை பின்னுக்குத் தள்ளுவதில்லை. இதுதான் நாம் இசையை அணுக வேண்டிய முறை.இசையின் இந்தப் பன்முகத் தன்மையை மறுக்கும் எந்த இசைஞரும் தான் சுவாசிக்கும் இசைக்கு நியாயமாக இருக்கவில்லை என்பதே உண்மை.

    அடுத்து : இசை விரும்பிகள் VI - நிற்காத மழை.